Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘இரத்தசோகை’ Category

கரந்துறையும் கள்வன்போல இரத்தசோகை; இரத்தசோகை கண்டறிவது எப்படி?

உங்களுக்கு களைப்பாக இருக்கிறதா? சோம்பலாகவும் தலைச்சுற்றும் இருக்கிறதா?

அடிப்படைக் காரணங்கள் பல இருக்கக் கூடும். ஆனால் அது இரத்தசோகையாகவும் இருக்கலாம்.

இரத்தசோகை என்பது உங்கள் குருதியில் போதியளவு செங்குருதிக் கலங்கள் red blood cells  இல்லாமையே ஆகும். ஒரு சிலருக்கு வழமைக்கு மாறான செங்குருதிக் கலங்கள் இருப்பதும் காரணமாகலாம். இன்னும் சிலருக்கு அவற்றில் உள்ள ஹீமோகுளோபின் வழமைக்கு மாறாக இருப்பது காரணமாவதுண்டு.

கண்கள் நாக்கு, உடல் போன்றவை வெளிறியிருப்பதிலிருந்து இது இருப்பதை மருத்துவர்கள் ஊகிப்பார்கள். பலரது இரத்தசோகையை அதிலும் முக்கியமாக கடுமையானவற்றை, நோயாளியைப் பரிசோதிப்பதன் மூலம் கண்டறியலாம். ஆயினும் குறைந்தளவான இரத்தசோகையானது கரந்துறையும் கள்வன் போல மறைந்திருப்பான். கண்டறிய குருதிப் பரிசோதனை தேவைப்படும்.

இதை உறுதிப்படுத்துவதற்கு Hb% என்ற சுலபமான குருதிப் பரிசோதனை இருக்கிறது.

Hb% ஆனது ஆண்களில் 13 ற்கு குறையாமலும் பெண்களில் 11ற்கு ற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

அறிகுறிகள் என்ன?

கீழ்காணும் அறிகுறிகள் இரத்தசோகை இருப்பதை உணர்த்தலாம். அவ்வாறு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் நீங்கள் இரத்தப் பரிசோதனை செய்து அது இருக்கிறதா இல்லையா என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும்.

  • களைப்பு. வழமைபோல நடக்கவோ வேலை செய்யவோ முடியாது விரைவில் களைப்படைதல் முக்கிய அறிகுறியாகும்.
  • மூச்சிளைப்பு, குருதியில் போதிய செங்குருதிக் கலங்கள் இல்லாததால் உடல் இயக்கத்திற்கு தேவையான ஒட்சிசன் கிடைக்காது போகிறது. அதை ஈடு செய்ய வேகமாகச் சுவாசித்து ஒட்சிசனைப் பெற முயல்கையில் மூச்சிளைப்பு தோன்றுகிறது.
  • தலைப்பாரமாக இருத்தல், தலை அம்மல் – மனச்சோர்வு, சிந்திக்க முடியாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். மூளைக்கு போதிய இரத்தம் இல்லாததால் ஏற்படும் அறிகுறிகள் இவை.
  • கை கால்கள் வழமையான சூடு இன்றிக் குளிர்ந்திருத்தல்
  • சருமம் வழமையைவிட வெளிறியிருத்தல். கண் நாக்கு நகங்கள் போன்றவையும் வெளிறியிருக்கும்
  • நெஞ்சு வலி, நெஞ்சுப் படபடப்பு – உடற்திசுக்களுக்கு வேண்டிய ஒட்சிசனை இரத்தசோகை உள்ளவரின் குருதியால் கொடுக்க முடியாததால் இருதயம் வேகமாகத் துடிப்பதால் படபடப்பும், இருதயத்திற்கு போதிய ஒட்சிசன் கிடைக்காததால் நெஞசுவலியும் வரலாம்.

போசாக்கற்ற உணவு

இரத்தசோகை உள்ளவர்களை அடிக்கடி காண முடிகிறது. வேறு காரணங்களாக வரும்போது இரத்தப் பரிசோதனை செய்யும்போது பலருக்கு இரத்தசோகை இருப்பதை தற்செயலாகக் கண்டறிய முடிகிறது.

இருந்தபோதும் பலரது இரத்தசோகைகள் கடுமையானவை அல்ல.

முன்பு இரத்தசோகையை வசதியற்ற, போசாக்குள்ள உணவு உண்ண முடியாதவர்களிடம் மட்டுமே கண்டோம். ஆனால் இப்பொழுது நல்ல வசதியுள்ளவர்களிடமும் காண்கிறோம். இதற்குக் காரணம் போசாக்கான உணவுகளை உண்பதற்கு பதிலாக குப்பை உணவுகளை உண்பதுதான். அதனால்தான் மிக வசதியான நாடு எனக் கருதப்படும் அமெரிக்காவில் கூட 3.5 மில்லியன் மக்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம்.

வேறு காரணங்கள்

ஆனால் ஒருவரது குருதியின் ஹீமோகிளோபின் செறிவு குறைவதற்கு உணவில் போசணைகளும் இரும்புச் சத்தும் குறைவதுமட்டுமே காரணமல்ல.

குருதி இழப்பினால் ஏற்படும் இரத்தசோகை

வெட்டுக் காயம், விபத்துகளால் ஏற்படும் காயங்கள், சில சத்திரசிகிச்சையின்போது குருதி வெளியேறுவதால் இரத்தசோகை ஏற்படும். இது தற்காலிகமானது. இரும்பு சத்து மாத்திரைகளைக் கொடுப்பதன் மூலம் அல்லது மிகக் கடுமையான குருதி இழப்பு எனின் குருதி மாற்றீடு செய்ய நேரலாம்.

வேறு சில குருதி இழப்புகள் குறைந்த அளவில் நீண்டகாலம் தொடரச்சியாக நடப்பதால் எமது கவனத்திற்கு வராது. ஆயினும் அவையும் படிப்படியாக குருதிச்சோகையை ஏற்படுத்தும்.

உதாரணமாக

அல்சர் எனச் சாதாரண மொழியில் சொல்லும் குடற்புண்களால் மிகக் குறைந்தளவு குருதி தொடர்ந்து செல்வதால் எமக்குப் புலப்படாது ஆனால் கால ஓட்டத்தில் குருதிச்சோகை ஏற்படும்.

சிலர் வலி நிவாரணி மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகிக்க நேருகிறது. மூட்டு வலிகள், நாரிப்பிடிப்பு, தசைப்பிடிப்புகள் எனப் பலவிதமான வலிகளுக்கும் உபயோகிப்பார்கள். சிலர் சாதாரண தலையிடிக்குக் கூட கடுமையான மருந்துகளை உபயோகிப்பதுண்டு. இவை இரைப்பையில் புண்களை ஏற்படுத்தி குருதி இழப்பை ஏற்படுத்தும்.

வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவ ஆலொசனையுடன் அவர்களின் கண்காணிப்பில் உபயோகித்தால் பாதிப்பு ஏற்படாது அவதானிப்பார்.

அதேபோல மூலநோயினால் நாளாந்தம் சிறிதளவு இரத்தமே செல்வதால் நோயாளிகளுக்கு உடனடியாகத் தெரிய வராது. ஆயினும் திடீரென அதிகமாகப் போனால் மாத்திரமே நோயாளிகள் பயந்தடித்து ஓடிவருவார்கள்.

உணவுக் கால்வாயில் ஏற்படும் புற்றுநோய்களாலும் சிறிதுசிறிதாக குருதி இழப்பு ஏற்படும்.

பெண்களில் மாதவிடாய் அதிகமாக இருந்தாலும் குருதிச்சோகை ஏற்படும்.

அதேபோல மகப்பேற்றின் போதான குருதி இழப்பு அதிகமாக இருந்தாலும் குருதிச்சோகை ஏற்படும்.

குறைந்தளவு அல்லது தவாறான செங்குருதிக் கலங்கள் உற்பத்தியால்

உடலில் உள்ள கோளாறுகளால் அல்லது குருதி உற்பத்திக் தேவையான கனிமங்களும் விற்றமின்களும் போதாக்குறையாக இருப்பதாலும் உற்பத்தி குறையும். இவற்றிற்கான காரணங்கள் வெளிப்படையாகத்  தெரிய வராது. பரிசோதனைகள் தேவைப்படும்.

  • இரும்புச் சத்துக் குறைபாடு. குருதி உற்பத்திக்கு மிகவும் அவசியமான கனிமம் இரும்புதான். அது இல்லாவிட்டால் செங்குருதிக் கலங்களின் உறபத்தியில் வீழ்ச்சி ஏற்படும்
  • விற்றமின் B12  ,மற்றும் போலிக் அமிலம் ஆகியவை செங்குருதி கல உற்பத்தி மிகவும் அவசியமாகும்.
  • எலும்பு மச்சை அல்லது ஸ்டெம் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் செங்குருதி கல உற்பத்தி பாதிப்புறும்.

செங்குருதிக்கலங்களின் அகாலச் சிதைவு

செங்குருதிக்கலங்கள் பலவீனமாக இருப்பின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியின் வழமையான செயற்பாட்டில் ஏற்படும் அழுத்தத்தைத் தாங்க முடியாது விரைவில் வெடித்துச் சிதைந்துவிடும். இந்தவகை இரத்தசோகையை மருத்துவத்தில் Hemolytic anemia என்பார்கள். வழமைக்கு மாறான ஹீமோகுளோபினைக் கொண்டsickle cell anemia,  thalassemia ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை பரம்பரை அலகுகளின் காரணத்தால் ஏற்படுபவை.

இவற்றைத் தவிர பாம்பு சிலந்தி போன்றவை கடிப்பதால் ஏற்படும் விசம், சிறுநீரகம் ஈரல் ஆகியவற்றில் எற்படும் சிதைவுகள், குருதி உறைதல் பிரச்சனைகள், விரிந்த மண்ணீரல் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.

தடுப்பதற்கு உங்களால் செய்யக் கூடியவை

நெருங்கிய உறவில் திருமணம் செய்வதைத் தவிர்பதைத் தவிர பரம்பரையில் ஏற்படுபவற்றை தடுக்க உங்களால் பெரும்பாலும் எதுவும் செய்ய முடியாது.

நாம் பெருமளவில் காண்பது இரும்புச் சத்துக் குறைபாட்டால் அல்லது விற்றமின் குறைபாட்hல் ஏற்படும் இரத்தசோகைகள்தாம். இவற்றை நாம் எமது உணவுமுறையை சீர்செய்வதின் மூலம் திருத்தலாம். அல்லது தடுக்கலாம்.

பாலகர்களிலும் குழந்தைகளிலும் இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். தாவர போசனம் மட்டும் உண்பவர்களிலும் இது ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல பாலூட்டும் தாய்மார்களிலும் இரத்தப் போக்கு அதிகமுள்ள பெண்களிலும் ஏற்படலாம்

அத்தகையவர்கள் இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். 

இறைச்சி வகைகள், முட்டை மஞ்சள் கரு, ஈரல், சிப்பி மட்டி நத்தை போன்ற ஜந்துகள், கீரை, அகத்தி, போன்ற எல்லா கரும் பச்சை இலை வகைகள், கூனைப் பூக்கள் (Antichokes)  மற்றும் முந்திரிகை வத்தல், ரெசின்ஸ், பருப்;பு, சோயா, அவரை, உழுந்து போன்ற அவரையினங்கள் போன்றவை சில உதாரணங்களாகும்.

குறைந்தளவு காய்கறிவகை உண்பதும், சமைக்கும்போது கூடுதலாக அவிய வைப்பதும் போலிக் அமிலக் குறைபாட்டை ஏற்படுத்தலாம்.

மது மற்றும் கோப்பி போன்ற பானங்களை அதிகம் உட்கொள்வதும் இத்தகைய இரத்தசோகையை ஏற்படுத்தலாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.000.0

Read Full Post »