Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2007

>அந்த இளம் தாய்க்கு ஆரோக்கியம், போஷாக்கு உணவு போன்ற விடயங்களில் அக்கறை இருந்தது. அவை பற்றிய சில திடமான, கேள்விக்கு உட்படுத்த முடியாத கருத்துக்களும் இருந்தன. இளம் வயதிலேயே மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட கருத்துக்கள் அவை. “கரட் கண்ணுக்கு நல்லது, போஞ்சியில் நிறையப் புரதச் சத்து இருக்கிறது, எண்ணெய் கூடாது, குத்தரிச் சோறு போஷாக்குள்ளது” இப்படிப் பல.

“அவர் சொல்லுவது சரிதானே அதில் என்ன பிழை” என்று கேட்கிறீர்களா?

சரிதான். ஆனால் தினமும் குத்தரிசிச் சோறு, கரட் சம்பல், சோயா மற்றும் போஞ்சிக் கறி, எண்ணெய் சேர்க்காத சமையல் என ஒரே மெனு என்றால் எந்தக் குழந்தை சாப்பிடும். பெரியவர்களுக்கு என்றால் கூட அலுத்து அருவருப்பு வந்துவிடுமே! இதனால் தினமும் உணவு வேளைகளில் தாய்க்கும் குழந்தைக்கும் போராட்டம்தான்.

குழந்தைகளின் உணவு முறைகள் வித்தியாசமானவை. அவர்கள் எதை விரும்புவார்கள் எதை வெறுப்பார்கள் என உறுதியாகக் கூறமுடியாது. ஒரு சில வேளைகளில் சாப்பிடவே அடியோடு மறுப்பார்கள். சில உணவுகளைத் தொடவும் மாட்டார்கள். மாறாக ஒரே உணவைச் சில நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருப்பார்கள். இவை யாவும் இயல்பானவைதான். அவர்களின் எடையும், வளர்ச்சியும் சரியான அளவில் இருந்தால் இவை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

உணவுகள் கண்களுக்குக் கவர்ச்சியாகவும், விதம் விதமாகவும் இருந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். மரக்கறிகள், பழங்கள், இலை வகைகள், தானியங்கள், விதைகள், கடலுணவுகள், மாமிசம் என இறைவன் எம் முன் பரந்த உணவுப் பரப்பை விரித்துள்ளான். அவற்றில் ஆரோக்கியமானவற்றை, போஷாக்குள்ளவற்றை உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்துங்கள். குழந்தையின் விருப்பத்திற்கும், தேர்விற்கும் மதிப்பளியுங்கள், திணித்தல் வேண்டாம்.

புதிய உணவு வகைகளை சில வேளைகளில் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். பத்துத் தடவையேனும் கொடுத்த பின்தான் சில உணவுகளின் சுவை பிடிபட்டு உண்ண ஆரம்பிப்பார்கள். எனவே சலிக்காமல் முயற்சி செய்யுங்கள். தயாரிப்பு முறைகளிலும், பரிமாறும் தோற்றத்திலும் மாற்றங்கள் செய்யுங்கள். குழந்தைகள் தானாகவே உண்ணத் தொடங்குவர்.

நன்றி:- தினக்குரல்

Read Full Post »

“அப்பா இப்ப முந்தி மாதிரி இல்லை. ஒதுங்கி ஒதுங்கிப் போறார். முந்தி மாதிரி எங்களோடை அதிகம் கதைக்கிறதில்லை. தனக்கு ஒண்டும் இல்லை எண்டுட்டார். உங்களிட்டை வர மாட்டன் எண்டும் சொல்லிப் போட்டார். நான் தான் நட்டுப் பிடிச்சுக் கூட்டிக் கொண்டு வந்தனான்” என்றாள் மகள் மிகுந்த மன வேதனையுடன்.

அப்பா முகத்தில் சலனமில்லை. விட்டேத்தியாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு வயது 70 இருக்கும். மன விரக்தியாக இருக்குமோ என எண்ணிய நான் ‘ஜயாவுக்கு என்ன பிரச்சனை’ என்றேன். ஜயா மறுமொழி கூறவில்லை ஆனால் எனது முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

“ஜயாக்கு காது கேக்கிறது கொஞ்சம் குறைவோ” என்று கேட்டபோது, “அப்படித் தெரியல்லை எங்களோடை வடிவாக் கதைக்கிறார்தானே” என்றாள்.

ஏதோ பொருளை எடுப்பது போல மறு பக்கம் திரும்பினேன். “‘ஜயா உங்களுக்கு எத்தனை வயசு” என்று கேட்டேன்.

மறுமொழி வரவில்லை. சந்தேகம் நிருபணம் ஆகியது.

காது மந்தமாவது என்பது வயதானவர்களைப் பாதிக்கும் ஒரு முக்கியமானதும் பரவலானதும் ஆன பிரச்சனையாகும்.

  • 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15- 40 சதவிகிதத்தினரும்,
  • 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவிகிதத்தினரும்,
  • 85 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 சதவிகிதத்தினரும் செவிப் புலன் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே வயதாகும் போது காது மந்தமாவது என்பது நியதி போலவே இருக்கிறதே அன்றி விதிவிலக்காக அல்ல என்று சொல்லலாம் போலிருக்கிறது.

இது மிக மெது மெதுவாகவே ஏற்படுகின்ற பாதிப்பு என்பதால் பலரும் ஆரம்ப கட்டங்களில் தமக்கு இக்குறைபாடு உள்ளதை தாமாகவே உணர்ந்து கொள்வதில்லை.

முகத்துக்கு நேர் முகம் பார்த்துப் பேசும்போது அவர்கள் புரிந்து கொள்வதால் உறவினர்களும் உணர்ந்து கொள்ளத் தாமதமாகலாம்.

செவிப்புலன் என்பது நாம் எமது சூழலுடன் தொடர்பாடுவதற்கு மிக முக்கியமான உணர் திறனாகும். இதன் இழப்பானது மனித வாழ்வின் முழுமையை, அந்த வாழ்பனுபவத்தின் பூரணத்துவத்தையே சிதைத்துவிடும்.

  • செவிப்புலன் இழப்பானது மூளையின் செயல் வீச்சைக் குறைக்கறது,
  • ஆரோக்கியமான உணர்வுகளை மரக்க வைக்கிறது,
  • மனநலத்தைப் பாதிக்கிறது,
  • கற்றலை முடக்குகிறது,
  • தொழில் வாய்ப்பைச் சிதைக்கிறது

எனப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

வயதானவர்களின் காது மந்தமாகும் போது

  • மற்றவர்களுடன் வழமை போலப் புரிந்து பேசி உறவாட முடியாமல் தடுமாறுகிறார்கள்.
  • தனிமைப்படுகிறார்கள்.
  • வழமையான நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

இதனால் ஏக்கத்திற்கும் மனவிரக்திக்கும் ஆளாகிறார்கள். இவர்கள் உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தாமாகவே ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இது தான் அப் பெண்மணியின் அப்பாவுக்கு நடந்தது.காது மந்தமாதல் இரண்டு வகையானது.

  1. முதலாவது ஒலியானது சூழலிருந்து காதுத் துவாரம் வழியாக செவிப்பறைக் குருத்தெலும்புகள் எனக் கடத்தப்படுதலில் உள்ள கோளாறாகும். செவிப்பறை பாதிப்படைதல், துவாரமடைதல், குருத்தெலும்புகள்; இறுகுதல் போன்றவற்றால் இது நேரலாம்.
  2. இரண்டாவது வகை நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்டது. ஒலியை உணர்தல், அதனைப் பாகுபடுத்தி விளங்கிக் கொள்ளல் ஆகியவவை பாதிப்புறுவதால் ஏற்படுவது.

இது மூப்படைவதின் ஒரு கட்டமேயாகும். ஒருவர் முகத்திற்கு நேரே பேசும் போது விளங்கிக் கொள்ளும் வயேதிபர், பலர் கலகல எனப் பேசும் போது புரிந்து கொள்ளச் சிரமப்படுவது ஒலியை பாகுபடுத்தி விளங்க முடியாதிருப்பதாலேயே.

புறச் சத்தங்கள் அதிகமாக உள்ள இடங்களிலும் ஒலி எதிரொலிக்கும் இடங்களிலும் அவர்களால் கேட்க முடிவதில்லை.

அதே போல விரைவாகப் பேசுவோரின் உரையாடல்களையும், புதியவர்களின் பேச்சுக்களையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

வயதானவர்களின் காது கேளாமையைக் முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய சிகிச்சைகள் எதுவும் கிடையாது என்பது உண்மைதான்.

ஆயினும் அவர்களின் குறைபாட்டைத் தணிப்பதற்கு பல வழி முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த உதவுவது உறவினர்களின் கடமையாகும்.

காது கேட்கும் கருவிகள் பலன் தரக் கூடும். ஆயினும் 10-15 சத விகிதமானவர்களே அக் கருவிகளைத் தொடர்ந்து உபயோகிக்கிறார்கள். காரணம் அது இயற்கையான காதுக்கு மாற்றீடு அல்ல. அத்துடன் கூட்டமான இடங்களில் புறச் சத்தங்களும் குழப்பக் கூடும். அத் தருணங்களில் இரண்டு காதுக்குமே கருவியை உபயோகிப்பது பிரயோசனமாயிருக்கும்.

ஸ்பீக்கர் போன், ஒலி அதிகரித்த தொலைக் காட்சிப் பெட்டி, ஒலியுடன் ஒளியையும் உமிழும் அழைப்பு மணி போன்ற பாவனைப் பொருட்கள் அவர்களைச் சூழலுக்குள் திருப்தியோடு அணைந்து இயங்க உதவக் கூடும்.

காது மந்தமானவர்களுடன் பேசும் போது நீங்கள் அவதானிக்க வேண்டியவை.

  • முகத்தை வேறு பக்கம் பார்த்துக் கொண்டு பேசாதீர்கள். அவர்களுக்கு உங்கள் முகம் தெளிவாகத் தெரியும் படியான இடத்தில் இருந்து பேசுங்கள்.
  • குரலை உயர்த்திப் பேசாதீர்கள். சாதாரண குரலில் பேசுங்கள்.
  • விரைவாகப் பேசாதீர்கள். ஆறுதலாகவும் தெளிவாகவும் பேசுங்கள்.
  • உங்கள் உதடுகள் வாசிக்கப்படக் கூடியவாறு பேசுங்கள்.
  • நீங்கள் பேசுவது அவருக்குப் புரியாவிட்டால் குரலை உயர்த்தி மீண்டும் மீண்டும் அதையே சொல்வதை விடுத்து வேறு சொற்களால் சொல்லுங்கள்.
  • கூட்டமான இடங்களில் வைத்துப் பேசாதீர்கள். ஒதுக்குப் புறமாக சத்தம் சந்தடி குறைந்த இடத்திற்கு கூட்டிச் சென்று உரையாடுங்கள.
  • காது கேட்கும் கருவி உபயோகிப்பவராயின் அது சரியாக வேலை செய்கிறதா என்பதையும், உரிய இடத்தில் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • முகம், கண்கள், கைகள் ஆகியவற்றை பயன்படுத்தி சைகை மொழிகளுடன் பேசுங்கள்.
  • உங்கள் பேச்சைப் புரிந்து கொள்ள முயற்சித்து அது முடியாததால் அவர் சோர்ந்து விட்டதை அவதானித்தால் உங்கள் உரையாடலை வேறு ஒரு தருணத்திற்கு ஒத்தி வையுங்கள்.

வேறு காரணங்கள்

ஆயினும் மூப்படைதல் மட்டுமே காது கேளாமைக்கு ஒரே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது.

  • தொழில் ரீதியாகவோ(உதா- இயந்திர ஓசைகள்), பொது வாழ்வின் போதோ கடுமையான ஒலிகளுக்கு நீண்ட காலம் முகங் கொடுக்க நேர்வது, செவிடாவதைத் துரிதப்படுத்தக் கூடும்.
  • பல வகை மருந்துகள், காதுக் குடுமி, பரம்பரையாக விரைவில் காது மந்தமாதல், நடுக் காது நோய்கள் போன்றவையும் காரணமாகலாம் என்பதால் நீங்களாக முடிவெடுக்காமல் வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது.

Read Full Post »

>போரின் உக்கிரத்தால் தீவிற்குள் தனித் தீவாக பாதை மூடுண்டு ஜீவ ஓட்டம் துண்டிக்கப்பட்டு தனித்து நிற்கும் யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்து ஒரு இலக்கிய இதழ் புதிதாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியப்படாதீர்கள். வரண்ட பூமியான போதும் ஒரு துளி நீரில் துளிர்த்தெழும் ஆற்றல் மிகு ஜீவ சக்தி கொண்டது. அங்கிருந்து ‘ஜீவநதி’ என்று ஒரு கலை இலக்கிய இரு திங்கள் சஞ்சிகை தனது கன்னி இதழை விரித்துள்ளது.

ஆடி ஆவணி மாதங்களுக்கான இதழ் கிடைத்தது. படித்து மகிழ்ந்தேன். சாதகமற்ற சூழலுக்கள் இருந்து கொண்டு, தரமான ஒரு சஞ்சிகையின் வரவைச் சாத்தியமாக்கியுள்ள சஞ்சிகையின் ஆசிரியர்களான சின்னராஜா விமலன், கலாமணி பரணீதரன் ஆகிய இருவருக்கும் எனது பாராட்டுகள். பிரபல எழுத்தாளர்களான தெணியான், குப்பிளான் சண்முகலிங்கம் ஆகியோருடன் பிரபல தமிழ் ஆசிரியரான நடராஜா ஆகியோர் ஆலோசகர் குழுவில் அடங்குகின்றனர் என்பதால் பரந்த அனுபவம் பெற்றவர்களின் ஆற்றுப் படுத்தல் பெறும் வாய்ப்பையும் இச் சஞசிகை பெறுகிறது.

படைப்புகள் மிகவும் தரமாக இருந்தன. பேராசிரியர்.செ.கிருஸ்ணராசாவின் வடமராட்சி சோழர்கால குடியிருப்புகள், கிராமங்கள், மற்றும் பண்பாடு பற்றிய கட்டுரையானது என்னை மிகவும் கவர்ந்தது. தமது பாரம்பரிய வாழ்வின் தடங்களைத் தேடியலைந்து, சான்றாதாரங்களுடன் நிறுவ வேண்டிய கட்டாய நிலையிலுள்ள உள்ளங்களுக்கு இதம் அளிப்பதுடன் காலத்தின் தேவையையும் பூர்த்தி செய்வதாக அமைகிறது. சஞ்சிகையின் சிகரப் படைப்பு எனலாம்.

சஞ்சிகையின் முதற் கட்டுரையான ‘இலக்கியக் கல்வி எதற்காக?’ என்பது கலாநிதி மனோன்மணி சண்முகதாசின் ஆக்கமாகும். ‘வில்லோன் காலன கழலே..’ என ஆரம்பிக்கும் குறுந்தொகைப் பாடல் ஊடாக இலக்கியத்தை சுவைக்கவும் நயக்கவும் இன்றைய தலைமுறையினரை ஆற்றுப்படுத்த முயல்கிறது. ‘நெறியாள்கையும் நெறியாளரும்’ என்ற விரிவுரையாளர் க.திலகநாதனின் நாடகத் துறை சார்ந்த கட்டுரை மிகவும் பயனுள்ளது.

குப்பிளான் சண்முகத்தினது ‘மழை தூறிய ஒரு மாலைப் பொழுது’, தெணியானினது ‘பாதுகாப்பு’ ஆகிய சிறுகதைகள் நிகழ்கால வாழ்வின் தரிசனங்களாக அமைகின்றன. மிக நுட்பமாக கருத்துக்களைப் பரிமாறும் கலைத்துவப் படைப்புகளாகக் கொள்ளலாம்.

ஆழியாளின் துவிதம் கவிதைத் தொகுப்பு பற்றிய நூல் மதிப்புரை செய்த குணேஸ்வரனின் ரசனையையும் அதனை எடுத்தியம்பிய விதமும் அவரை தேர்ந்த விமர்சகனாக அடையாளம் காட்டுகின்றன.

வட அல்வை சின்னராஜன் எழுதிய கவிதையான ‘வல்லைவெளி’ எமது கடந்த கால நினைவுகளுடன் நெருங்கி வந்து அவற்றிற்கு மெருகூட்டி வெளிப்படுத்தும் முயற்சி. சிறப்பாக அமைந்துள்ளது. சோ.பா வின் ‘தனி நடிப்பு’ மனிதனுள் மறைந்திருக்கும் திறமைகளை ரசித்து மகிழ்வதுடன் மனித விழுமியங்கள் பற்றிய மறுமதிப்பீடாகவும் அமைகிறது. மேமன் கவியின் இரு கவிதைகளும் இதழை அலங்கரிக்கின்றன.

ஏனைய கட்டுரைகள், கவிதைகள், செங்கை ஆழியானுடனான நேர்காணல் யாவுமே சொல்லும்படியாக அமைந்துள்ளமை ஜீவநதியின் இலட்சியத்தையும், தெளிந்த நேரிய பாதையையும் சுட்டி நிற்கின்றன.

அவர்களது முயற்சிகள் மேலும் சிறப்புற்று சமூகத்திற்கு உதவிட வாழ்த்தி உதவுவது எம் கடமை.

தொடர்புகளுக்கு jeevanathy.yahoo.com
கலை அகம், சாமணந்துறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய். சிறீ லங்கா.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

அந்த முதியவர் வீட்டுக் காவலில் இருந்தார். அவரை வீட்டில் மடக்கி வைத்திருந்தது அரசாங்கமோ, கவல்துறையோ அல்ல! அவரது மகள்தான் வெளியே செல்லவிடாது வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டாள்.

“வயது 75 ஆகிவிட்டது. ரோட்டில் செல்லும்போது கல்லுத் தடக்கி விட்டாலோ, ஆட்டோ அல்லது வேற வாகனம் தட்டிவிட்டாலோ அவ்வளவுதான். எலும்பு முறிந்துவிடும். படுக்கையில் வைத்துத்தான் பார்க்க வேண்டும்” என்பது அவளது கவலை.

எவ்வளவு கவனம் எடுத்தும் அவர் விழுந்து இடுப்பு எலும்பை உடைக்கவே செய்தார். விழுந்தது வீதியில் அல்ல வீட்டிற்குள்தான். கால்மிதி தடக்கி விழுந்து ஒடிந்தது.

பேராசிரியர் நந்தி ஒரு முறை என்னோடு நேரிற் பேசும்போது சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. `முதுமை என்பது ஒருவர் தானே நடமாடித் திரியும் வரை பிரச்சினைக்குரியது அல்ல’ உண்மைதான். படுக்கையில் கிடக்க நேரும்போதுதான் முதுமையானது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் வயதானவர்களை மோசமாகப் பாதிக்கிறது.

வயதானவர்கள் ஏன் விழுகிறார்கள்? வயதாகும் போது பார்வைத்திறன் குறைகின்றது. கேட்கும் திறன் மந்தமடைகிறது, பாதங்களின் உணர்திறன் குறைவடைகிறது. இதனால் சமநிலை தழும்புகிறது. அத்துடன் உடற் தசைகள் பலவீனம் அடைகின்றன. இவை யாவும், சிறிது தடக்கினாலோ, சறுக்கினாலோ, சமநிலை தழும்பினாலோ இலகுவாக அவர்களை விழச் செய்துவிடுகின்றன.

விழுந்தால் எலும்புகள் முறிவடையக் கூடும். முக்கியமாக இடுப்பு எலும்புகள் முறிவடைவது வயதானவர்களை மிகவும் பாதிக்கும் விடயமாகும். அமெரிக்காவில் வருடாந்தம் 13,000 வயோதிபர்கள் வரை விழுவதால் ஏற்படும் மருத்துவப் பிரச்சினைகளால் மரணிக்கிறார்கள். விழுவது தொடர்பான மருத்துவச் செலவாக அமெரிக்க சுகாதார சேவைகளுக்கு வருடாந்தம் 20 பில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன. இத் தரவுகள் மூலம் வயோதிபர்களின் விழுகையால் தனிநபர்களுக்கும், சமூகத்திற்கும்,அரசாங்கத்திற்கும் ஏற்படும் பளு தெளிவாகிறது அல்லவா?

ஆயினும் விழுதல் என்பது வயோதிபத்தில் தவிர்க்க முடியாதது என்று கருதுவது தவறு. விழுந்து விடுவார்கள் என்ற பயத்தில் அவர்களது நாளாந்த செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது அதை விடத் தவறு. சுறுசுறுப்பாக இயங்கும் வயோதிபர்கள் விழுவது குறைவு என்றே மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

வருடாந்தம் 65 வயதிற்கு மேற்பட்ட 1.8 மில்லியன் வயோதிபர்கள் விழுதல் தொடர்பான காயங்களுக்காக அவசர சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறுவதாக வயதானவர்களின் முறிவுகளுக்கு சிகிச்சை அளிக்கும் எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகிறார். “வீட்டில் உள்ள மாடிப் படி, குளியலறை, நில விரிப்புகள் போன்ற வீட்டுப் பாவனைப் பொருட்களால்தான் இவை ஏற்படுகிறதே ஒழிய வீதியில் இல்லை” என்கிறார் அவர்.

எனவே நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

வீட்டை நன்றாக ஒளியூட்டி வையுங்கள். அதிக வெளிச்சமுள்ள, மேலிருந்து கீழே ஒளி விழக் கூடிய மின் விளக்குகளைப் பயன்படுத்துங்கள். இரவிலும் இரவு பல்புகளை ஒளிர விடுங்கள்.

வழுக்காத கால் மிதிகளைப் பயன்படுத்துங்கள். கார்பற், கம்பளம், நில விரிப்புகள் போன்றவை மடிந்து தடுக்கி விழாதவாறு அவற்றை தரையுடன் ஒட்டி வைத்திருங்கள்.

கொம்பியூட்டர், டெலிபோன் மற்றும் மின்சார வயர்களை, நடக்கும் பாதைகளில் தடக்கவிடாது ஒதுக்கி வைத்திருங்கள்.

மாடிப்படிகளில் கை பிடித்து ஏறி இறங்குவதற்கு ஏதுவாக கைபிடிக் கம்பிகளைப் பதித்து வையுங்கள். அதே போல மலசல கூடம், குளியலறை ஆகியவற்றிலும் வழுக்காமல் நடப்பதற்கும், பிடித்து எழும்புவதற்கு ஏதுவாகவும் கைபிடிக் கம்பிகளைப் பதிக்க வேண்டும்.

வயதானவர் படிக்கும் புத்தகங்களையும், சமையலறைப் பொருட்களையும் அவருக்கு இலகுவாக எட்டும் உயரத்தில் வைத்திருங்கள். உயரத்தில் ஏறிப் பொருட்களை எடுக்க முனைந்தால் அவர் தவறி விழுந்துவிடக் கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

எம்.கே. முருகானந்தன்

நன்றி்- தினக்குரல் 20.09.2007

Read Full Post »

>கனவுகளுடனும் கற்பனைகளுடனும்
காற்றோடு கரைந்த படைப்பாளி!

புலோலியூர் க. சதாசிவம்!

(பிறப்பு: 20.3.1942ல் மறைவு:14.09.2004)

14.09.2007 அவரது மூன்றாவது நினைவு தினமாகும். அவர் மறைந்த 31ம் நாள் நினைவு தினத்தன்று வெளியான கட்டுரை இப்பொழுது மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

கனவுகளும் கற்பனைகளும் நிறைந்தவன் மனிதன். அதிலும் படைப்பாளியாகவும் இலக்கிய ஆர்வலனாகவும் இருப்பவர்களின் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வானம் கூட எல்லையிட முடியாது தளரும். அந்த கனவுகளும் கற்பனைகளும்தான் அவர்களின் ஆத்மார்த்த பலமும் கூட. புலோலியூர் க.சதாசிவமும் அத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு எழுத்தாளன்தான். தொழில் ரீதியாக அவர் ஒரு வைத்தியர் என்ற போதும் இலக்கியம், வைத்தியம் ஆகிய இரு துறைகளிலும் உறுதியாகவும் சமனாகவும் கால் ஊன்றி நின்றவர் ஆவார்.

அவரது இலட்சியம் சமூக மேம்பாடு ஒன்றையே குறியாகக் கொண்டது. சரியாகச் சொல்லப்போனால் இலங்கையின் வெவ்வேறு திசைகளில் வாழ்ந்த, பயணித்த இரு சமூகங்களின் மேம்பாடு அவரது இலட்சியமாக இருந்தது. தான் பிறந்து வளர்ந்து மணம் முடித்த வடமராட்சி மண் ஒரு கண் என்றால், தொழில் ரீதியாக இணைந்து அவரது வாழ்க்கைப் பயணத்தின் பெரும் பகுதியை ஆட்கொண்டுவிட்ட மலையகம் மறு கண் எனலாம்.

‘நாணயம்’ என்ற அவரது நாவல் “ வடமராட்சிப் பிரதேசத்தின் நாடித் துடிப்பு, மனித உறவுகளைப் பிணைக்கும் பந்தமாகிய சடங்குகள், நம்பிக்கைகள், பண்பாட்டம்சங்கள், எண்ணக் கருத்துகளின் உயிர்த்துடிப்பான பேச்சு வழக்கு..” ஆகியவற்றை அற்புதமாகப் பதிவு செய்த படைப்பாகும். அதே போல சிறுகதைப் போட்டி ஒன்றில் முதற் பரிசைத் தட்டிக் கொண்ட அவரது முதற் சிறுகதையான ~புதுவாழ்வு 1961 களில் இருந்த யாழ் மண்ணின் வாழ்வை கண்முன் கொண்டு வருகிறது.

அதே நேரத்தில் ‘மூட்டத்தினுள்ளே’ என்ற நாவலும் ‘ஒரு நாட் பேர்’ என்ற சிறுகதைத் தொகுதியும் மலையக மக்களின் துன்பங்களும் வேதனைகளும் நிறைந்த வாழ்வை பரிவோடும் பாசத்தோடும் பார்த்தது மாத்திரமின்றி அவர்களது வாழ்வில் ஒளியூட்ட வேண்டும் என்ற வேட்கையோடும் படைக்கப் பட்டவையாகும். கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக மலையகத்தோடு ஒன்றியவர் அவர். அதிலும் முக்கியமாக டயபராத் தோட்டத்தின் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றிய போது அந்த மக்களின் இன்பங்களிலும் துன்பங்களிலும் பங்காளியாக கலந்து வாழ்ந்தவர். அடிப்படை வசதிகள் கனவிலும் கூடக் கிடைக்காத அவர்களின் ஏழ்மையை நேரிடையாகக் கண்டு கண் கலங்கியவர். அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களின் முதுகில் சவாரி செய்ய முற்படும் அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் கபடத்தன்மைகளையும் புரிந்தவர். இதனால் அவர்களது வாழ்வின் உள்ளும் புறத்தையும் மாத்திரமின்றி, அச் சமூகத்தின் பலத்தையும் பலவீனத்தையும், பன்முக விஸ்தாரணத்தையும் தன் கலையுள்ளத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்டவர்.

இதனால்தான் வடமராட்சியைச் சேர்ந்தவரான அவர் வீரகேசரி நடாத்திய நாவல் போட்டியில் மலையகப் பிரதேசத்திற்கான பரிசை ‘மூட்டத்தினுள்ளே’ என்ற நாவலுக்குச் சுலபமாகத் தட்டிக் கொள்ள முடிந்தது.

அவர் பிறந்தது 20.3.1942ல் மறைந்தது 14.09.2004 அன்று.

மறைந்த அன்று கூட புதிய திட்டங்களோடும், சிறகடிக்கும் கற்பனைகளோடும் பண்டாரவளையிலிருந்து கொழும்பு வரும் பஸ்ஸில் பயணிக்க ஏறியிருந்தார். கொழும்பில் நிற்கும்போது தான் இணையாசிரியராகக் கடமையாற்றும் ஞானம் இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஞானசேகரனைச் சந்தித்து ஞானத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி உரையாடுவதும், நான் உட்பட சில இலக்கிய நண்பர்களைச் சந்தித்து இலக்கியக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதும், சில தனிப்பட்ட வேலைகளைக் கவனிப்பதும் அவரது திட்டமாயிருந்தது.

ஆனால் அவரது பயணத்தின் திசை மாறிவிட்டது. அவரதும், எவரதும் கற்பனைக்கும் எட்டாத பயணம் அது. கொழும்பு வரவேண்டியவர் விண்ணுலகுக்குப் பயணமானார். நோய் நொடி என்றும் துன்பப்படாத அவருக்கு, மற்றவர் பிணி தீர்ப்பதில் மனநிறைவு கண்ட அவருக்கு தன்கூட மாயக் கூற்றுவனான நோயொன்றும் பயணித்தது தெரிந்திருக்கவில்லை. திடீரெனத் தோன்றிய இரத்தக் கட்டியொன்று (Clot) சுவாசக் குழாய்க்கான இரத்த நாடியை அடைக்க, பண்டாரவளையில் இருந்து புறப்பட்ட பஸ் ஹப்புத்தளையை அடைய முன்னரே திடீரென மரணத்தைத் தழுவிக் கொண்டார். ஆம் மரணம் மகத்தானது. அதன் முன் மனிதர்களாகிய நாம் அற்பப் புழுக்கள்.

சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், விமர்சகர்; எனப் பன்முகப் படைப்பாற்றல் கைவரப் பெற்ற அவர் ஒரு பல மருத்துவக் கட்டுரைகளையும் தினக்குரலில் எழுதியுள்ளார். யுகப்பிரவேசம் (1973), ஒரு அடிமையின் விலங்கு அறுகிறது (1982), ஒரு நாட் பேர் (1995), புதிய பரிமாணம் (1998), அக்கா ஏன் அழுகிறாய் (2003) ஆகிய ஜந்து சிறுகதைத் தொகுதிகளும், நாணயம் (1980), மூட்டத்தின்னுள்ளே (1983) ஆகிய இரு நாவல்களும் நூல் உருவாகியுள்ளன. இவற்றில் அவரது இரண்டு நாவல்களுமே தேசிய சாஹித்திய விருதுகளைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பரிமாணம் யாழ் இலக்கிய வட்டத்தின் பரிசை வென்று கொண்டது. சென்ற மாதம் யாழில் நடந்த பரிசளிப்பு விழாவில் இதற்கான பரிசைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. லண்டனில் உள்ள கொம்மாந்துறை இலக்கிய வட்டமும் தினக்குரலும் இணைந்து நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இதற்கான பரிசை இன்னமும் நேரிடையாகப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் அச் சிறுகதை தினக்குரலில் வெளியாவதை அவருக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை என்பதும் மனத்தை அழுத்துகிறது.

ஞானம் சஞ்சிகை நடாத்திய சிறுகதை நூல் கைப்பிரதிப் போட்டியை நடாத்துவதிலும் அதில் முதற் பரிசு பெற்ற சாரங்காவின் ‘ஏன் பெண்ணென்று’ என்ற பிரதியை புத்தகமாக வெளியிடுவதிலும் அவரே பெரு முயற்சி எடுத்ததை நான் அறிவேன். அது போன்ற முயற்சிகளை எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செய்யவும் எண்ணியிருந்தார். அதன் அறிமுகவிழா சென்ற மாதம் விபவி ஆதரவில் பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு மையத்தில் நடந்தபோது அவரே அறிமுகவுரை நடாத்தினார்.

அன்று கூட்டம் முடிந்தபின் அங்கிருந்து வெள்ளவத்தை பஸல்ஸ் ஒழுங்கை வரை அவருடன் கே.ஆர்.டேவிட் ம் நானும் இலக்கியம் பேசியபடியே நடந்து நேற்று நடந்தது போல் மனத்தில் பசுமையாக இருக்கிறது. அதன் பின் அவரை நேரில் சந்திக்க முடியவில்லையே என்பது சுமையாக உள்ளத்தை அழுத்துகிறது. ஆயினும் தொலைபேசியில் இடையிடையே பேசுவோம். சுமார் 25 வருடங்கள் நெருங்கிய நண்பனாக இருந்த உற்ற நண்பனின் பிரிவுத்துயர் ஆற்றவொண்ணாதது. அதுவும் அன்று 15ம் திகதி நடுநிசி 1.30 அளவில் ஹப்புத்தளை மாவட்ட வைத்திய அதிகாரி அவரது டயறியைப் பார்த்து எனது டெலிபோன் நம்பரை கண்டுபிடித்து ‘உங்களுக்கு டாக்டர் சதாசிவத்தைத் தெரியுமா’ என்று கேட்டு அந்த அதிர்ச்சி மிக்க செய்தியைக் கூறினார். என்றென்றும் என்னால் அதிலிருந்து மீளவே முடியாது.

தென்புலோலியூர் கணபதிப்பிள்ளைக்குப் பின்னர் புலோலியூருக்கு இலக்கிய உலகில் தனிப் பெருமை சேர்த்தவர் புலோலியூர் க.சதாசிவம் ஆவர். அவர் முன்மொழிந்த வழியிலேயே புலோலியூர் தம்பையா, கந்தசாமி, இரத்தினவேலோன் போன்ற பலரும் பின்தொடர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது பூதவுடல் பொரளை கனத்தையிலுள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில் 16ம் திகதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, கம்பவாருதி இ.ஜெயராஜ், ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன், தினக்குரல் ஞாயிறு இதழ் பொறுப்பாசிரியர் தேவகொளரி, மு.பொ, சிதம்பரப்பிள்ளை சிவகுமார், வதிரி இரவீந்திரன், நீர்வை பொன்னையன், வ.இராசையா, புலோலியூர் இரத்தினவேலோன் உட்பட பல எழுத்தாளர்களும், நண்பர்களும் உறவினர்களும் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். டொமினிக் ஜீவா, தி.ஞானசேகரன், எம்.கே.முருகானந்தன் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர். மாலை 5.30 அளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கனவுகளுடனும் கற்பனைகளுடனும் வாழ்ந்த அந்தப் படைப்பாளியான புலோலியூர் க. சதாசிவம் காற்றோடு கலக்கும் போதும் அவற்றையே தனது வழித் துணையாக்கிக் கொண்டார் என்பதில் மனம் ஆறுவோம்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- பதிவுகள்-pathivukal.com

Read Full Post »

>இஞ்சிச் சம்பல், இஞ்சி தேநீர் போன்றவை நாக்கைச் சப்புக் கொட்டிச் சாப்பிடுபவர்கள் பலரின் தேர்வாக இருக்கிறது. பிட்ஸா ஹட்டின் ஹார்லிக் பிரட்டின் (GARLIC BREAD) சுவை பிரசித்தம் அல்லவா? இஞ்சி போடாத இறைச்சிக் கறி சுவைக்கு உதவாது என்பார்கள் பலர்.

சமிபாடின்மை என்றால் “இஞ்சிச் சோடா கொண்டுவா” என்பார்கள். எமது நாளாந்த பாவனைகள் இவ்வாறிருக்க, சித்த ஆயுர்வேத வைத்திய முறைகளில் இஞ்சியின் பயன்பாடு அதிகம். தடிமன், காய்ச்சல், பசியின்மை, சமிபாட்டுப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு இஞ்சி தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது.

உண்மையில் இஞ்சிக்கு மருத்துவக் குணங்கள் உள்ளனவா? இருப்பின் அவை விஞ்ஞான பூர்வமாக ஏற்கப்பட்ட கருத்துகளா? அமெரிக்கன் AMERICAN FAMILY PHYSICIAN 2007; 75: 1689-91 இதழில் இஞ்சியின் மருத்துவப் பயன்பாடு பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்ப்ப கால மசக்கையின் போது சத்தி, ஓங்காளம் போன்றவை பெருந்தொல்லை கொடுப்பதுண்டு. இந் நேரத்தில் கருவில் வளரும் குழந்தைக்கு மருந்துகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தேவையற்ற மருந்துகள் கொடுப்பதற்கு மருத்துவர்கள் தயங்குவதுண்டு. இத்தகையவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்காமல் இருப்பதை விட இஞ்சி கொடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என 675 பேரைக் கொண்டு செய்யப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளில் நான்கு ஆய்வுகள் தெளிவாகக் கூறுகின்றன. அவர்களுக்கு விற்றமின் ஆ6 கொடுக்கும் அதே அளவு பலனை இஞ்சியும் கொடுக்கும் என வேறு ஓர் ஆய்வு கூறுகின்றது.

சத்திர சிகிச்சைகளுக்குப் பின்னர் பலருக்கும் ஓங்காளமும் வாந்தியும் ஏற்படுவதுண்டு. மருந்தற்ற மாத்திரைகளை ( placbo)விட இஞ்சியானது அவர்களது அறிகுறிகளைக் குறைக்கும் என மற்றுமொரு ஆய்வு கூறுகிறது.

யாழ்.- திருமலை கப்பல் பிரயாணிகள் பலர் கப்பலில் வாந்தி வருவதை நினைத்துப் பயந்தே பிரயாணம் வேண்டாம் என அலறி ஓடுகிறார்கள். பிரயாணங்களின் போது கப்பல் அடங்கலாக வாந்தி வருவதை ஆங்கிலத்தில் motion sickness என்பார்கள். அத்தகைய வாந்திக்கு dimenhydrinate என்ற மருந்தும் பாவனையில் உள்ளது. இஞ்சியானது அந்த மருந்தை விட மேலான ஆற்றல் உள்ளது என மற்றொரு ஆய்வு கூறுகிறது.

ரூமற்வொயிட் மூட்டு வாதம் (Rheumatoid arthiritis) மற்றும் முழங்கால் எலும்புத் தேய்வு வாதம் (Osteoarthiritis of knee) ஆகியவற்றுக்கு இஞ்சி நல்ல பலன் கொடுக்கும் எனத் தெரிகிறது.

சரி எவ்வளவு இஞ்சி சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? பெரும்பாலான ஆய்வுகள் 250 மி.கி. முதல் 1 கிராம் அளவிலான காய வைத்து தூள் செய்யப்பட்ட இஞ்சியை கூட்டுக் குளிசையையாக தினமும் ஒன்று முதல் நான்கு தடவைகள் கொடுத்தே செய்யப்பட்டன. ஆழ் கடலில் கப்பலில் செல்லும் மாலுமிகளுக்கு வாந்தியைத் தடுக்க 1 கிராம் தினமும் நான்கு தடவைகள் கொடுக்கப்பட்டன.

பக்கவிளைவுகள் கிடையாதா என்பது சிலரது சந்தேகமாக இருக்கும். நெஞ்செரிவு, வாய் எரிவு, வயிற்றோட்டம் போன்ற பக்க விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம். ஆயினும் குருதி உறைதல் தொடர்பான பக்க விளைவு வோபெரின் ( Warfarin) உபயோகிக்கும் நோயாளர்களுக்கு பிரச்சினை ஆகலாம். அத்தகையவர்கள் அதிகமாக இஞ்சி உட்கொண்டால் INR இரத்தப் பரிசோதனை செய்து பார்ப்பது உசிதமானது.

ஒரு பிற்குறிப்பு; இஞ்சிக் கிழங்கு என்று சொல்கிறோம் . உண்மையில் இது சரிந்த பாட்டில் கிடக்கும் தண்டாகும். இதிலிருந்து வேர் கீழ் நோக்கி வளர்கிறது. இது ஆசியா போன்ற உலர் வலய நாடுகளில் வளரும் தாவரமாகும். மருத்துவக் குணங்கள் உள்ள போதும் அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துகளுக்கான திணைக்களம் இஞ்சியை உணவுத் தயாரிப்பில் உபயோகப்படுத்தும் பொருளாகவே வகைப்படுத்துகிறதே அன்றி மருந்தாக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

– டாக்டர் எம்.கே. முருகானந்தன்-

நன்றி:- தினக்குரல் 17.09.2007

Read Full Post »

>பதற்றத்துடன் வந்தார் அவர். “எனக்கு ஹார்ட் அட்டக்(Heart Attack) ஆக இருக்குமோ?” என்று கேட்டார். ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் என வினவினேன். `இடது கை உளைஞ்சால் ஹார்ட் அட்டக் என நண்பன் சொன்னான். எனக்கு கொஞ்ச நாளா இடது கை உளையுது’ என்று சொன்னார்.

உண்மைதான்! மாரடைப்பிற்கான வலி பெரும்பாலும் நடு நெஞ்சில்தான் வந்தாலும் இடது கைக்கும் பரவுவதுண்டு. ஆயினும் இவரது வலி நீண்ட காலமாக நீடிப்பதாலும் வியர்வை, களைப்பு போன்ற ஏனைய அறிகுறிகள் இல்லாததாலும் மாரடைப்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்தது.

மேலும் விபரமாகக் கேட்ட போது, வலி இரவில் மோசமாக இருப்பதும் வலிப்புள்ள கையில் விறைப்பு ஏற்படுவதும் தெரிய வந்தது. கழுத்தின் முண்நாண் எலும்புகள் தேய்ந்து நரம்புகளை அழுத்துவதால் ஏற்படக் கூடிய Cervical Spondylosis ஆக இருக்கலாம் என எண்ணினேன். உங்கள் கழுத்து எலும்பை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும் என்றேன். கை உளையிறதுக்கு ஏன் கழுத்தை படம் எடுக்க வேண்டும் என அப்பாவியாகக் கேட்டார்.

கழுத்து எலும்புகள் தேய்ந்ததால், அதனூடாக வரும் நரம்புகளை அழுத்துகிறது. இதனால், அந்த நரம்பு பரவுகிற இடங்களான கையில் உளைவு, விறைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால், நோயுள்ள இடமான கழுத்தில் அறிகுறிகள் ஏதும் இல்லாமலிருக்கலாம்.

இன்னொருவருக்கு நீண்ட நாட்களாக காதுவலி. காதுக்கு துளி மருந்துகள் விட்டுப் பார்த்தார். வலி நிவாரணிகள் சாப்பிட்டுப்பார்த்தார். எதுவும் பலனளிக்காமல் வலி மோசமான போதுதான் வைத்தியரை நாடும் எண்ணம் வந்தது. பரிசோதித்துப் பார்த்ததில் தொண்டையில் புற்றுநோய் தெரிய வந்தது.

மற்றொருவருக்கு சிறுநீரகக் குழாயில் கல் (Ureteric Calculai) ஆனால் விதையில் வலிக்கு மருந்தெடுக்க வந்தார். பற்சொத்தைக்கு காது வலிப்பது, நாரி முண்நாண் எலும்பு நோய்க்கு காலில் வலிப்பது இப்படி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். நோய் ஓரிடம் இருக்க வலி இன்னொரு இடத்தில் தோன்றுவதை Reffered pain என மருத்துவத்தில் சொல்வார்கள். இதனைத் `தொலைவிட வலி’ என சொல்லலாம் அல்லவா?

`சூத்தில் அடிக்க பல்லுக் கொட்டுப்படுவது, எய்தவன் இருக்க அம்பை நோவது, பழி ஓரிடம் பாவம் வேறிடம், எனப் பலவாறு சொல்வது அதை ஒத்த கருத்துகள் தானே? எனவே அறிகுறிகள் எங்கிருந்தாலும் அடிப்படை நோய் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்து செய்வதே சிறந்த வைத்தியமாகும்.

டாக்டர். எம்.கே. முருகானந்தன்
நன்றி:- தினக்குரல் 12.09.2007

Read Full Post »

>மூளை களைப்படைந்து சோர்வுற்றுவிட்டது. ஆயினும் நிறைவேற்றி முடிக்க வேண்டிய பணிகள் பல காத்திருக்கின்றன. ஒரு சிகரட் அடித்தால் சுறுசுறுப்பாகிவிடுவோம் என நினைக்கிறீர்கள். சுறுசுறுப்பு ஏற்படக் கூடும் என்பது உண்மைதான். ஆனால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பாரதூரமானவை.

சுவாசப்பை, குரள்வளை, தொண்டைக்குழி, உணவுக் குழாய், சிறுநீரகம், சிறுநீரகப்பை, மற்றும் கணையம் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியமானது புகைப்பதினால் மிகவும் அதிகரிக்கிறது.

ஆனால் மிகவும் சாதாரணமான, விலை மலிவுள்ள வல்லரை “மூளையானது களைப்படைந்து திறமையாகக் கவனிக் குவிப்புச் செய்ய முடியாது போகும் வேளைகளில் அதனைத் தளர்த்தி சுமுகமாக்கக் கூடியது” எனக் கூறுகிறார் டொக்டர் வசந்தி தேவராஜா சிறீஸ்கந்தராஜா.

இன்னும் பல மூலிகைகள் பற்றியும் மிக விபரமாகக் கூறியுள்ளார் ‘ஒட்சிடனெதிரிகள் மூலமாகப் புற்றுநோய்த் தடுப்பு’ என்ற தனது புதிய நூலில். நாம் வழமையாக உணவில் உபயோகிக்கும் மஞ்சள், திராட்சை, கோவா, உள்ளி, வெண்காயம், அதிமதுரம், இஞ்சி, உள்ளி, வெண்காயம் போன்ற பல மூலிகைகள் பற்றியும், மருந்தாக மட்டும் அல்லது மருத்துவத்தில் பயன்படுத்தும் பட்டிப்பூ, பருத்தி, கற்றாளை, குங்கிலியம், போன்ற பல மூலிகைகள் பற்றியும் இங் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நூற்பரப்பில் அதுவும் முக்கியமாக மருத்துவம் மற்றும் நலவியல் சார்ந்த துறைகளைப் பொறுத்த வரையில் இந் நூலின் வரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஏனெனில் இந் நூலானது மருத்துவத்தின் ஒரு புதிய அலகை இலங்கையின் தழிழ் மருத்துவ நூல் வெளியீட்டுத் துறையில் அறிமுகப்படுத்துகிறது. இதனால் மருத்துவத் துறை சார்ந்த மாணவர்களுக்கும் (மருத்துவ, தாதிய, சுகாதார சேவைப் போதனாசிரியர்கள், ஆய்வு கூட பணியாளர்கள்), அத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஊசாத் துணை நூலாகும்.

ஈழத்து தமிழ் மருத்துவ நூல் வெளியீடு என்பது நீண்ட பாரம்பரியம் கொண்டது. அதில் மேலைத் தேய மருத்துவத் துறை சார்ந்த நூல்கள் டொக்டர் கிறீனின் காலத்திலிருந்து ஆரம்பிக்கின்றன. இந் நூல்கள் இரண்டு வகையானவை. மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்குமான பாடப் புத்தகங்களை டாக்டர் கிறீனும் பின்னர் பேராசிரியர் சின்னத்தம்பியும் எழுதி வெளியிட்டார்கள். இது முதல் வகை.

இரண்டாவது வகை பொதுமக்களை பயனாளர்களாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். இதற்கும் முன்னோடி டொக்டர் கிறீன் அவர்கள்தான். அவர்களைத் தொடர்ந்து டொக்டர் இராசரத்தினம், பேராசிரியர் நந்தி, பேராசிரியர் சிவராஜா, டொக்டர்களான நாகநாதன். எம்.கே.முருகானந்தன், சுகுமார், பத்மலோஜினி, சீர்மாறன், சிவயோகன் போன்ற பலரும் நலவியல் துறை சார்ந்த நூல்களை எழுதியுள்ளார்கள். இன்னும் பல பெயர்கள் எழுதும் அவசரத்தில் விடுபட்டிருக்கும் என்பது உண்மையே. திரு.கா.வைத்தீஸ்வரன், கோபாலமூர்த்தி, திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்ற சுகாதார ஆலோசகர்களும் நலவியல் இலக்கியத்திற்கு நிறையப் பங்களித்துள்ளார்கள் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.

இலங்கையைப் பொறுத்த வரையில் அறிவியல் துறை சார்ந்த நூல்களின் வெளியிடப்படுவது மிகவும் குறைவாக இருந்த சூழலில் நலவியல் துறை மட்டும் விதிவிலக்கு எனலாம். ஆயினும் அத்துறையில் நூல் எழுதுவதும், வெளியிடப்படுவதும் போதுமானதாக இல்லை என்பதும் உண்மையே.

திருமதி திலகவதி தர்மராசாவின் இரண்டாம் ஆண்டு நினைவாக அன்னாரின் பெறாமகள் டாக்டர் வசந்தி தேவராஜா ஸ்ரீகாந்தராஜாவினால் ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்ட “ஒட்சிசனெதிரிகள் மூலமாகப் புற்றுநோய்த் தடுப்பு’ என்ற நூல் இன்று (11.08.2007) கொழும்பில் வெளியாகிறது. அந்த நூல் பற்றிய ஆய்வே இது.

இத்தகைய சூழலில் டாக்டர் வசந்தியின் நூல்கள் சற்று வித்தியாசமானவை. இவை மருத்துவத்தின் விசேட துறைகள் சார்ந்த ஆழமான நூல்களாகும். முன்னைய வெளியீடான முதுமை பற்றிய “முதியோரைப் பராமரிக்கும் அறிவியல்” என்பது முதுமை பற்றிய ஒரு பூரணமான நூலாகும்.

இப்பொழுது வெளியாகும் “ஒட்சிசனெதிரிகள் மூலமாகப் புற்று நோய்த் தடுப்பு” என்பது புற்றுநோய் பற்றியது. அதிலும் விசேடமாக ஒட்சிசனெதிரிகள் (Antioxidents) மூலமாக புற்றுநோயை எதிர் கொள்வது பற்றியது.
இது ஆய்வு நூல் அல்ல. ஆனால் அண்மைக்காலத்தில் செய்யப்பட்ட பல ஆய்வுகளின் விஞ்ஞான பூர்வமான தகவல்களை ஒன்று திரட்டி, அவற்றை வகைப்படுத்தி இயலுமானவரை இலகுவாக வாசிப்பதற்கு ஏற்ற முறையில் எழுதியுள்ளார்.

புற்று நோயானது மனிதர்களின் உடலையும் உள்ளத்தையும் மிகவும் பாதிக்கும் ஒரு நோயாகும். நோயாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி முழுச் சமூகத்திற்குமே பாதிப்பை ஏற்படுகிறது. எனவே நோய் வந்த பின் அதன் சிகிச்சைக்காக அலைவதை விட அது வராமல் தடுப்பது மிகவும் பொருத்தமானதாகும். அதனைப் பற்றியே இந் நூல் பேசுகிறது என்பதால் எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டியது அவசியமாகும்.

இத்தகைய நூல்கள் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு மருத்துவர்கள் , தாதியர்கள், சுகாதாரப் போதனையாளர்கள் ஆகியோருக்கு மிகவும் உபயோகமானவை. அவர்கள் துறை சார்ந்த நவீன தகவல்களுடன் தங்களை இற்றைப்படுத்த இவை உதவுகின்றன.

அதே நேரத்தில் ஓரளவு விஞ்ஞானக் கல்வியறிவுள்ள எந்தப் பொதுமகனும் வாசிப்பதற்கு ஏற்ற முறையில் எழுதப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ள எவரும் படித்துப் பயன்படக் கூடிய நூலாகும்.

இந்நூல் ஆறு முக்கிய அத்தியாயங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.
(1) புற்றுநோயின் நிகழ்வு விகிதம்
(2) கலம் ஒன்றின் அடிப்படைக் கட்டமைப்பு
(3) புற்றுநோய்
(4) தாராள மூலவேர்களும் ஒட்சினெதிரிகளும்
(5) பொதுவான வகைப்பற்று நோய்கள்
(6) புற்றுநோய்க்கு எதிரான மற்றும் ஒட்சினெதிரிக் கீரைவகைகள்.

முதல் அத்தியாயத்தில் புற்றுநோயானது சமூகத்தில் எந்தளவு காணப்படுகின்றது? அவை எப்படியான புற்றுநோய்கள், பால் ரீதியாக எப்படிப் பாதிக்கிறது, அவற்றிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் போன்ற பல பயனுள்ள தகவல்களை, மஹரகம,கண்டி, காலி ஆகிய புற்றுநோய் சிகிச்சை நிலையங்களின் பதிவுகளின் அடிப்படையில் தருகிறது.

அத்துடன் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் புற்றுநோயின் பரம்பல் எவ்வாறு உள்ளது என்பதையும் சொல்கிறது.

இரண்டாவது அத்தியாயம் ஒரு கலத்தின் அடிப்படைக் கட்டமைப்புப் பற்றியது. எந்த ஒரு உயிரினதும் அடிப்படைக் கூறான கலம் என்பது என்ன? அதன் கூறுகள் யாவை? அவை எப்படிப் பிரிகை அடைகின்றன போன்ற அடிப்படைத் தகவல்களை விவரிக்கிறது. தொடர்ந்து டி.என்.ஏ யிலுள்ள தனியொரு மரபணுவில் (Gene) ஏற்படுகின்ற குறைபாடே புற்றுநோய் வருவதற்கான முதற்படி என விளக்குகிறார்.
ஆயினும் இம்மாற்றங்கள் புற்றுநோயாக உருவெடுக்க 1 முதல் 30 வருடங்கள் எடுக்கலாம். இதன் நீட்சியாக வயது ஏறும்போது புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதும் விளக்கப்படுகிறது.

மூன்றாவது அத்தியாயத்தில் புற்றுநோய் என்றால் என்ன? அதன் வகைகள் எவை? அவற்றின் ஆரம்ப அறிகுறிகளும், எச்சரிக்கை அடையாளங்களும் எவை? சிகிச்சை முறைகள் போன்றவற்றைப் பேசுகின்றது.
அத்துடன், பிழையான உணவு முறைகளும், உடற்பயிற்சியின்மை, மித மிஞ்சிய மதுபாவனை, பரம்பரை அம்சங்கள் போன்றவை எவ்வாறு புற்றுநோய்க்கு காரணமாகின்றன போன்ற முக்கிய விவரங்களும் சொல்லப்படுகின்றன.

நான்காவது அத்தியாயம், தாராள மூலவேர்களும் (Free Radicals)ஒட்சினெதிரிகளும் (Antioxidents) என பொதுமக்களுக்கு பரிச்சயமில்லாத விஞ்ஞானச் சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் அவர்களது நாளாந்த உணவு முறைக்கு உதவக் கூடிய பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. பல்வேறு தாவர உணவுகளில் உள்ள புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட ஒட்சிசனெதிரிகள் பற்றி விவரமாகக் கூறுகிறது.

ஐந்தாவது அத்தியாயம், பொதுவாக எமது சமூகம் எதிர் நோக்கும் பல்வேறு புற்றுநோய்களைப் பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு புற்றுநோயும் ஏற்படுவதற்கான காரணிகள் எவை? அறிகுறிகள் எவை? நோயை எவ்வாறு நிர்ணயம் செய்வது போன்ற விடயங்களை விளக்குகிறது.

ஆறாவது அத்தியாயம்தான் இந்நூலின் தலைப்புச் சுட்டும் கருத்தின் விரிவாகும். கார்சினோஜின் எனப்படும் புற்றுநோய்களைத் தூண்டும் பொருட்களுக்கு எதிராக மூலிகை மற்றும் உணவு வகைகள் பற்றிப் பேசுகிறது.

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் கீரைவகைகள், இலைகள், பழங்கள், காய்கறிகள், ஆகியவற்றில் உள்ள மருத்துவ குணாம்சங்கள் பற்றியும் அவை புற்றுநோய்த் தடுப்பிலும், சிகிச்சை முறைகளிலும் எவ்வாறு உதவுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன போன்றவற்றை எடுத்துக் காட்டுகிறது. உதாரணமாக தேநீரில் உள்ள பொலிபெனோலிக் சேர்வை புற்றுநோயைத் தடுக்கும்.
இதேபோல வல்லாரை, மஞ்சள், பட்டிப்பூ, அதிமதுரம், கற்றாளை, நெல்லி, நிலவேம்பு, குங்கிலியம், கீழ்காய்நெல்லி, புளித்தோடை, பருத்தி, சோயா, உள்ளி, திராட்சை, பூக்கோவா போன்ற இன்னும் பல மூலிகைகளின் பயன்பாடுகள் பற்றியும் எடுத்தியம்புகின்றது.

திருமதி திலகவதி தர்மராசா நினைவாக வெளியிடப்படும். இந்நூலை வெளியிடுவதற்கு, நூலாசிரியரின் சிறிய தந்தையாராகிய க.மு. தர்மராசா உற்சாகமும் ஊக்கமும் அளித்துள்ளார். மறைந்த ஒருவரின் நினைவாக இத்தகைய ஒரு பயனுள்ள நூலை மிகுந்த பொருட்செலவில் வெளியிட்டு அதன் வருவாயை கொழும்பு தமிழ்ச்சங்கம் போன்ற நிறுவனங்களுக்கு அளிப்பது மிகவும் சமூக அக்கறை கொண்ட செயலாகும் என்பதில் ஐயமில்லை.

இதேபோல தர்மராசா தனது மனைவியின் நினைவாக சென்ற வருடம் வெளியிட்ட “மூத்தோரைப் பராமரித்தல்’ பற்றிய நூலின் வெளியீட்டு விழா நிகழ்வுகள், நினைவுரைகள், பத்திரிகைக் கட்டுரைகள் யாவற்றையும் வண்ணப்படங்களுடனும் தனி நூலாக வெளியீட்டு பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு ஊக்கம் அளித்தமையையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

‘முதியோரைப் பராமரித்தல்’ என்ற முன்னைய நூலும், இந்நூலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை செம்மையான தமிழாக்கம் ஆகும். அரிய கலைச் சொற்களைத் தேடி எடுத்து தமிழாக்கம் செய்த பணி பாராட்டத்தக்கது.

ஆங்கிலத்தில் நூலாக்கம் செய்யப்பட்ட போது எடுத்த அதே கவனிப்பும், ஆழமும் கருத்தூன்றிய செயற்பாடும் தமிழாக்கத்திலும் பேணப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியதாகும். இந்நூலை மொழிபெயர்த்தவரான எட்வேட் பீரிஸின் திறமையும் பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும்.

மூப்பியல் சான்றிதழ் பெற்ற வைத்திய கலாநிதி வசந்தி, இத்தகைய ஆழமும் விரிவும் கொண்ட நூலைத் தமிழில் தந்துள்ளமை தமிழ் நலவியல் எழுத்துத் துறைக்கும், நூல் வெளியீட்டுத்துறைக்கும் புதிய வீச்சையும், வேகத்தையும் கொடுத்துள்ளன. அவரது பணி தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு கிட்டவேண்டும் என அன்புடன் வேண்டுகின்றேன்.

நூலின் பெயர்:- ஒட்சிடனெதிரிகள் மூலமாகப் புற்று நோய்த் தடுப்பு

நூலாசிரியர்:- டொக்டர். வசந்தி தேவராசா சிறீஸ்கந்தராஜா (மூப்பியல் சான்றிதழ்)

நூலின் ஆய்வுரை:
டொக்டர் எம்.கே. முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல், வீரகேசரி, சுடரொளிஉங்கள்

Read Full Post »

>

குன்றில் ஏற்றிய தீபம் குடத்தில் இட்ட விளக்குப் போல வாழ்ந்த கதை.

கைதடி சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு அவரில் மிகுந்த பிரியம். காரணம் அவர்களுடன் அத்துணை பிரியமாக பிழங்குபவர். அவர்கள் தங்களுக்கு ஒரு ரிவி வாங்கித் தரும்படி அவரிடம் கேட்டார்கள். ரிவி பாவனைக்கு வந்த 80 களின் முற்பகுதி. அவர் அவர்களுக்கு ஒரு கலர் ரிவி வாங்கிக் கொடுத்தார். அப்பொழுது அவர் வீட்டில் இருந்ததோ ஒரு கருப்பு வெள்ளை வெள்ளை ரிவீ தான். அவர் வீட்டிலும் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கும் கலர் ரிவியில் பார்பதற்கு விருப்பம்தான். ஆயினும் அவர் கருப்பு வெள்ளை வெள்ளை ரிவீ யை தங்களுக்கு வைத்துக் கொண்டு கலர் ரிவி யை அன்பளிப்பாகக் கொடுத்தார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவில்லை. நண்பர்களுக்குக் கூடத் தெரியவில்லை. யாருக்கும் தெரிவிக்காமல் விளம்பரப் படுத்தாமல் கொடுத்தார். இதைத்தான் இடது கை அறியாமல் வலது கை கொடுப்பது என்பதா?
இதைச் செய்தவர் யார்?
குன்றில் ஏற்றிய தீபமாக ஒளிர்ந்த ஒருவர், குடத்தில் இட்ட விளக்குப் போல தன்னை மறைத்து வாழ விரும்பினார். தன்னை எத்தனை தூரம் மறைக்க முயன்ற போதும் அந்த ஒளிப் பிரவாகத்தின் பிரகாசத்தை, காருண்யத்தை அனைவரும் புரிந்து போற்றவே செய்தனர். ஆம் புகழுக்கும் பெயருக்கும் ஆலாயப் பறக்கும் இந்த உலகில் தனக்கு நியாயமாகவே கிடைக்க வேண்டிய புகழைக் கூட வெளிக் காட்டாது மறைத்து வாழும் மனிதர்கள் ஒரு சிலர் இருக்கவே செய்வர். நான் அறிந்த அத்தகைய ஒரே ஒரு மனிதர் எங்கள் சோமா ஒருவர் தான்.
சோமா, சோமர், சோமா அங்கிள், எக்கவுண்டன் அய்யா, எக்கவுண்டன் சோமா, இப்படி எத்தனையோ விதமாக பாசத்தோடு அழைத்து நேசத்தோடு நெகிழ்ந்த அன்புள்ளங்களை தவிக்க விட்டுவிட்டு நிரந்தர விடை பெற்றுவிட்டார்.
பருத்தித்துறை சிவன் கோவிலடியில் பிறந்த அவர் தனது கல்விச் சிறப்பாலும், கடின உழைப்பாலும் ஹாட்லிக் கல்லூரி ஆசிரியராக, பட்டயக் கணக்காளராக, பல்கலைக் கழக விரிவுரையாளராக, மேர்சன்ட் பினான்ஸ் நிதி நிறுவன அதிபராக, பல்கலைக் கழக செனட் உறுப்பினராக தன் தொழிற் தகமையை வளர்த்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் அவரது பெருமைக்கும், புகழுக்கும், காரணம் அவரது கல்வித் தகமைகளோ உயர் பதவிகளோ அல்ல. மக்களை மதித்தவராக, துன்பப்பட்டவர்களின் துயர் தீர்க்க உதவிக்கரம் நீட்டியவராக, உயர் விழுமியங்களைக் கடைப் பிடித்தவராக வாழ்ந்த மனித நேயம் மிக்க இயல்புதான் காரணம்.
கடந்த 27 ஆண்டுகளாக அவரோடு ஓரளவு நெருங்கிப் பிழங்கிய காரணத்தால் தான் அவரை நன்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. நான் பருத்தித்துறையில் குடும்ப வைத்தியனாக தொழில் புரிய ஆரம்பித்த 1980 களிலேயே அவரது நட்பு கிடைத்தது எனது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் என் நண்பர் என்று சொல்வது வெறும் பேச்சுக்குத்தான். உண்மையில் அவரை எனது வழிகாட்டி எனலாம். அல்லது குரு என்று கூட மகுடம் சூட்டலாம். காரணம் நான் உண்டு எனது தொழில் உண்டு என்று வாழ்ந்த என் முன் ஒரு புதிய உலகைத் திறந்து வைத்தவர் அவர். மற்றவர்களுக்கு உதவுவதும், துன்பப்பட்டவர் துயர் தீர்ப்பதும் எமது கடமை. அதில் மனம் நிறைய வேண்டும் என்பதை தனது வாழ்வின் திறந்த அத்தியாயங்கள் ஊடாக எங்களுக்கு சொல்லாமல் சொல்லித் தந்தவர் அவர். தன்னை ஒறுத்தாவது மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியதற்கு முன்பு கூறிய ரீ.வி சம்பவம் ஒரு நல்ல உதாரணமாகும்.
அவரோடு இணைந்து செயற்பட்ட காலங்களை நினைவுத் தட்டுகளில் இருந்து இறக்கி வைத்து நினைந்து பார்ப்பதில் ஆனந்தம் கொள்ளும் பல நண்பர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். அரிமா கழகத்தின் ஊடாக ஆரம்பத்தில் செயற்பட்ட போது டொக்டர் பாலகிருஸ்ணன், பேராசிரியர் கணேசலிங்கம், வெற்றினரி டொக்டர் கதிரவேற்பிள்ளை, நடனசபாபதி, ஞானசம்பந்தர் கலை மன்ற அங்கத்தவர்கள், சிவராஜசிங்கம், சிவயோகன், போன்ற பலரும் சேர்ந்து இயங்கினோம்.
மதுபானம் பாவிக்காத, ஆடம்பர உணவுகளில் செலவழிக்காத, கேளிக்கைகளில் ஈடுபடாத, சேவைப்பணிகளில் மட்டும் ஈடுபட்ட வித்தியாசமான கழமாக அன்றைய பருத்தித்துறை அரிமா கழகம் இயங்கியதை பலரும் இன்றும் நினைவு கூர்கிறார்கள். அகதிகளுக்கு உதவி, மருத்துவ முகாம்கள், பரமானந்த ஆஸ்சிரம மாணவர்களுக்கு வருடா வருடம் பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. இதற்கு வழிகாட்டியாக, இயக்கு சக்தியாக விழங்கியது எமது சோமாதான் என்பதை கூறித்தான் தெரிய வேண்டுமா?
பரமானந்த ஆஸ்சிரம மாணவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உணவு வழங்குவது ஒரு இனிய அனுபவம் ஆகும். குறிப்பிட நாளுக்கு ஒரிரு நாட்களுக்கு முன்னரே பொருட்களை வாங்கிச் சேர்ப்பது சோமாதான். அரிசி பருப்பு, மரக்கறி வகைகள், தேநீர் தயாரிப்பதற்கான பொருட்கள், சிற்றுண்டி வகைகள் மட்டுமின்றி, சமையலுக்குத் தேவையான உப்பு புளி விறகு என எதுவும் தப்பாது சேர்த்து விடுவார். காலையில் அவரது காரில் முதல் கோஸ்டி போய்விடும். மற்றவர்கள் ஏனைய சிலரின் கார்களில் போவோம். எல்லோரும் கூடி நாங்களே சமைத்து நாங்களே அவர்களுக்கு வயிறாற உணவு பரிமாறுவோம். இறுதியில் அவர்களில் சிலர் பரிமாற நாம் உண்போம். எத்துணை இன்பமான நாட்கள். மற்றவர் திருப்தியில் மகிழ்வுறக் காட்டி வைத்தார்.
ஆஸ்சிரம மாணவர்கள் திருமண வயதடையும் போது அப் பெண்களுக்கு தாலி கூறை போன்றவற்றை நண்பர்கள் உதவியுடன் வழங்குவதற்கு திட்டமிட்டு நிதி சேகரித்து அளிப்பார். அவரது பங்களிப்பு எப்பொழுதுமே கணிசமான அளவு இருக்கும். நாட்டு நிலமைகளால் பருத்தித்துறை அரிமா கழகம் செயலிழந்த போதும் எல்லாம் பணிகளுமே தொடர்ந்தன. சில நண்பர்கள் ஆதரவுடன் இவற்றை சோமா கொண்டு நடத்தினார்.
பருத்தித்துறை சாரதா ஆஸ்சிரம சுவாமி சித்ரூபானந்தாவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து அதனூடாக இலவச மருத்துவ முகாம்களை நடாத்தியதும் கூட அவரது முயற்சியால்தான். இலக்கியம், சமூகம், ஆன்மீகம் என பல தளங்களில் நான் கால் ஊன்றிய போது எனது வாழ்வின் அடித்தளமே குடும்ப வைத்தியன் என்ற எனது தொழில்தான் என்பதை நினைவூட்டி அதில்தான் முதற் கவனம் இருக்க வேண்டும் எனப் போதித்தவர். இன்று வரை அக் கூற்றை வேத வாக்காக ஏற்று நடக்க முயன்று கொண்டிருக்கிறேன்.
இலக்கியவாதிகளிடமும் அவருக்கு மிகுந்த பாசம் உண்டு. மல்லிகை ஜீவா அவரது அன்பிற்கு பாத்திரமானவர். ஜீவாவை அழைத்து ஞானசம்பந்தர் கலை மன்றத்தில் விழா எடுத்ததற்கு அவரது ஆர்வமும் ஒரு முக்கிய காரணமாகும். மல்லிகையின் வளர்ச்சிக்கு அவர் பல வழிகளில் உதவி செய்துள்ளார். மல்லிகைப் பந்தலின் கொடிக்கால்களில் ஒருவராகக் கணித்த ஜீவா அவரைப் பற்றி மல்லிகையில் பதிவு செய்தது நினைவிருக்கலாம்.
ஆன்மீக வாழ்வைப் பொறுத்த வரையில் சடங்கு சம்பிரதாய பூசை புனஸ்காரங்களில் ஈடுபாடற்றவராக இருந்தபோதும் ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் அவர். எனது வாழ்விலும் கூட பகவான் சத்திய சாயி பாபாவின் ஒளிவெள்ளத்தில் திளைத்து நல்வாழ்வு வாழ வழி காட்டியதில் அவரே முதல் காரணியாவார்.
தாய் மண்ணை நேசித்தவர் அவர். வெறும் வாய்ப் பேச்சு வீரர் அல்ல . அதன் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபாடு காட்டியவர் அவர். கடல் வளத்தைப் பெருக்கி பொருளாதார அபிவிருத்தி காண்பது அவரது கனவுகளில் ஒன்று. இது தொடர்பாக அவர் செய்த ஆய்வுகளும் சிபார்சுகளும் நூலாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான ஒரு நிறுவனத்தையும்(கடல் வளம்) ஆரம்பித்த போதும் நாட்டு நிலைமைகளால் தொடர முடியவில்லை என்பது வருந்தத்தக்கது. தாய் மண் மீதான அவரது நேசம் வாய்ச் சொல்லால் பேச முடியாதது. சூழ்நிலைகளின் தாக்கத்தால் முழுக் குடும்பமுமே புலம் பெயர்ந்து சென்ற போதும் மண்ணை விட்டு வெளியேறாதவர் சோமா. அவரது ஆசைப்படி பிறந்த மண்ணிலேயே இறுதி மூச்சையும் தனது மண்ணில், தனது வீட்டிலேயே விட்ட சோமா அங்கேயே தகனமாகி யாழ் மண் பூராவும் காற்றோடு கலந்து சங்கமமாகி விட்டார்.
அவரது வாழ்ந்து காட்டியதை நாம் கடைப்பிடிப்பதே நாம் அவருக்கு செய்யக் கூடிய கைமாறாகும். அவர் ஆன்மா சாந்தியடைய பரம்பொருளை வேண்டுகிறேன்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- மல்லிகை செப்டம்பர் 2007.

Read Full Post »

உடல் தளர்ந்து, கண்களும் சோர்ந்திருந்த அவரது முக்கிய பிரச்சனை ‘நித்திரை வருகுதில்லை’ என்பதுதான்.உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்த்மா போன்ற நோய்களும் அவருக்குத் தொல்லை கொடுக்கின்றன.

“பகல் முழுதும் கதிரையில் இருந்து தூங்குவார். இரவும் எட்டு மணிக்கே படுத்திடுவார். ஆனால் எப்பவும் நித்திரை இல்லை எண்டுதான் சொல்லூர்” என்று அலட்சியமாகக் கூறினாள் கூட்டிக் கொண்டு வந்த மகள்.

இது அவருடைய பிரச்சனை மட்டுமல்ல. பெரும்பாலான வயதானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைதான். பகலெல்லாம் தூங்கி விழுவது, நேர காலத்துடன் இரவு 7-8 மணிக்கே படுத்துத் தூங்குவதும், அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்து எழுந்து சிரமப்படுவதும் பல வயதானவர்ளைப் பாதிக்கும் பிரச்சனை தான்.

இதற்குக் காரணம் வயதாகும் போது எமது உடலியக்கத்தின் ஒழுங்கு லயத்தில் ஏற்படும் குழப்பங்களே ஆகும். இதனை முன்நகர்ந்த நித்திரை (Advanced Sleep Phace) என்பார்கள். அதாவது தூக்க நேரம் முன்னகர்கிறது.

உண்மையில் இது தூக்கக் குழப்பமே அன்றித் தூக்கக் குறைபாடு அல்ல. அத்தோடு தூக்கக் குறைபாடும் இருக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.

பொதுவாக மனிதர்களுக்கு 6 முதல் 7 மணிநேர நித்திரை தினசரி தேவை.அவ்வாறு தூங்கினால்தான் உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். தூக்கம் குறைந்தால் அல்லது குழப்பமான தூக்கமாக இருந்தால் உடல் சோர்வடையும், மனத்தை ஒருமுகப்படுத்த முடியாது. சிந்தனைத் திறனும் குறையும்.

மேற் கூறிய முன்நகர்ந்த நித்திரையைத் தவிர வேறு பல காரணங்களாலும் வயதானவர்களின் தூக்கம் குறையலாம்.

மூட்டு வாதம், பார்க்கின்சன் நோய், ஆஸ்த்மா, இருதய நோய்கள், உணவுக் கால்வாய் நோய்கள், பக்கவாதம், மனச் சோர்வு போன்ற பல்வேறு மூப்புக் கால நோய்களும் அவர்களது தூக்கததைக் குறைக்கும்.

வயதாகும் போது பல்வேறு நோய்கள் உடலைத் தாக்கக் கூடும் அல்லவா? ஆஸ்தமா, பிரஜர், தைரொயிட் சுரப்பி நோய்கள், மனச் சஞசலம் போன்ற பல்வேறு நோய்களுக்கு தினசரி உபயோகிக்கும் மருந்துகளும் தூக்கக் குழப்பத்திற்குக் காரணமாகிறது.

எனவே தூக்கக் குழப்பம் உங்களைத் துன்பப்படுத்துகிறதாயின் உங்கள் வைத்தியருடன் வெளிப்படையாகக் கதையுங்கள். அவரது ஆலோசனைகள் உங்கள் பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டு பிடிக்கவும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் உதவும்.

வேறு நோய்களுக்கு எடுக்கும் மருந்துகள்தான் காரணம் என அவர் கருதினால் அம் மருந்துகள் உட்கொள்ளும் நேரத்தை மாற்றக் கூடும் அல்லது மருந்தையே மாற்றவும் கூடும்.

உங்கள் தூக்கக் குழப்பத்தை தீர்க்க நீங்களும் சில முயற்சிகள் செய்யலாம்.

  • உங்களுக்கு உற்சாகத்தை ஊட்டும், உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் அல்லது பரபரப்பை ஏற்படுத்தும் எந்தச் செய்கையிலும் படுக்கைக்குப் போவதற்கு முன்னரான ஒரு மணி நேரத்திற்குள் ஈடுபட வேண்டாம்.
  • உதாரணமாக விறுவிறுப்பான தொடர் நாடகங்களை ரீவியில் பார்ப்பது, ஆர்வமூட்டும் நூல்களைப் படிப்பது, சுவார்ஸமான விவாதங்களில் ஈடுபடுவது, உணர்ச்சி மயப்படுவது போன்ற செய்கைகளை படுக்கைக்குச் செல்லும் தருணங்களில் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
  • கடுமையான வெளிச்சமும், இரைச்சலான சூழலும் உங்களைத் தூங்கவிடாது. எனவே ஆரவரமற்ற, ஒளி குறைந்த சூழலில் படுக்கைக்குப் போவதற்கு முந்திய சில நிமிடங்களைக் கழியுங்கள். படுக்குமிடமும் அத்தகையதாக இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே தெரியும்தானே.
  • நரம்புகளைத் தூண்டும் பானங்களான கோப்பி, மது, கோக் போன்றவற்றை மதியத்திற்குப் பின் அருந்த வேண்டாம். மதியத்திற்குப் பின் அதிக நீராகாரம் அருந்த வேண்டாம்.
  • அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ நேர்ந்தால் தூக்கம் குழம்பும் அல்லவா? தூங்கப் போவதற்கான நேரத்தை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள். உதாரணமாக இரவு 10 மணிக்குப் படுத்து காலை 5 மணிக்கு எழுவது போன்ற உங்களுக்கு உகந்த ஏதாவது ஒரு ஒழுங்கான நேர அட்டவணையை தினசரி தவறாமல் கடைப்பிடியுங்கள்.
  • மதிய உணவிற்குப் பின் தினசரி தூங்குபவராயின் அதனை 15 முதல் 30 நிமிடங்களாக மட்டுப்படுத்துங்கள்.
  • மாலை நேரத்தில் சற்று உலாவச் செல்லுங்கள்.
  • தினசரி கை கால்களைச சற்று நீட்டி மடக்கி சிறிது உடற் பயிற்சி செய்யுங்கள்.

இவற்கைக் கடைப்பிடித்துப் பாருங்கள் உங்கள் தூக்கத் தொல்லை தீரும்.

0.0.0

Read Full Post »

Older Posts »