Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2008

>கொடுத்த மருந்தைப் பார்த்ததும் அவரின் முகம் ஏமாற்றத்தால் நீண்டது. “இண்டைக்கும் இதே மருந்துதானா” . “எல்லோரும் ஏதேதோ புதுப் புது மருந்துகளாகப் பாவிக்கிறம் எண்டு சொல்லுகினம். நீங்கள் இந்த மெட்போமினையே தாறீங்கள்” என்றார்

நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளரா? அப்படியாயின் நீங்கள் மெட்போமின் என்ற சொல்லை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் இதுவும் பெரும்பாலும் சேர்ந்திருக்கும். நீண்டகாலமாகப் பாவிக்கின்றோமே, இது ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா? மலிஞ்ச மருந்துதானே நல்லதா? சிறுநீரகத்திற்கு கூடாதாமே? வயிறு ஊதலாக இருக்கிறதே எனப் பல சந்தேகங்களும் அதிருப்திகளும் ஏற்பட்டிருக்கலாம்.

அத்துடன் தொடர்ந்து ஒரே மருந்தை உபயோகிப்பதால் `புதுமை விரும்பிகளுக்கு’ அலுத்துப் போயிருக்கலாம். ஆனாலும் இது மிகவும் பயனுள்ளது மட்டுமன்றி பன்முகப் பயன்பாடும் உள்ளது என்பதால் அதனுடைய முக்கியத்துவம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.

மனிதர்களின் சாதாரண இரத்த குளுக்கோஸ் அளவானது 60 – 110 ற்கும் இடையில் இருக்கவேண்டும். 60 இற்குக் கீழே குறைவது ஆபத்தானது. அவ்வாறு குறைந்தால் மயக்கத்திற்கும் இட்டுச்செல்லக்கூடும். இந்நிலையை Hypoglycemia என மருத்துவத்தில் குறிப்பிடுவார்கள். இம்மருந்தின் மிக முக்கியமான பண்பு என்னவென்றால், உபயோகிக்கும் நோயாளியின் இரத்த குளுக்கோஸ் அளவை ஆபத்து ஏற்படும் அளவிற்கு அதீதமாகக் குறைப்பதில்லை. எனவே பாதுகாப்பானது. ஆனால் ஏனைய பல நீரிழிவு மாத்திரைகள் இரத்த குளுக்கோஸ் அளவை அதீதமாகக் குறைத்து Hypoglycemia க்கு இட்டுச் சென்றுவிடுகின்றன.

மெட்போமின் மருந்தின் இன்னொரு முக்கியமான பண்பு அல்லது `பக்கவிளைவு’ நோயாளியின் எடையைக் குறைப்பதாகும். பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளின் எடை அதீதமாக இருப்பதுண்டு. இதனால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த எடையைக் குறைக்க வேண்டியிருக்கும். மெட்போமின் மாத்திரையானது எடையைக் குறைக்கவும் உதவி செய்வதால் உங்களுக்கு ஒரு போனஸ் பலனும் கிட்டுகிறது.

மெட்போமின் உங்கள் இரத்த கொலஸ்ட்ரோல் அளவையும் சற்றுக் குறைக்கிறது. மொத்த கொலஸ்ட்ரோல் அளவை மாத்திரமன்றி கூடாத கொலஸ்ரோல்களான ரைகிளிசரைட் LDL ஆகியவற்றையும் ஓரளவு குறைக்கிறது. இதனால் குருதிக் குழாய்களில் கொழுப்புப் படிவதும் கட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன், இரத்தக் குழாய்களினது உட்சுவரக் கலங்களின் செயற்பாட்டை (Endothelial Function) ஊக்குவிக்கிறது. இவற்றின் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் ஆகியன ஏற்படும் வாய்ப்புகளும் குறையும் என்பதும் ஆய்வு ரீதியாக அறியப்பட்டுள்ளது.

உயர் இரத்த அழுத்தத்தை அதாவது பிரஸரைக் குறைப்பதிலும் மெட்போமின் மாத்திரைக்கு பங்குண்டு எனச் சில ஆய்வுகள் கூறுகிறபோதும் இது இன்னமும் உறுதியாக நிச்சயப்படுத்தப்படவில்லை.

மாதவிடாய்க் குழப்பம், மலட்டுத்தன்மை, அதீத எடை, இன்சுலின் எதிர்த்தன்மை (Insulin Resistance) போன்ற உள்ளடங்கிய `பொலி சிஸ்டிக் ஓவரி சின்றோம்’ பிரச்சினை இப்பொழுது பல இளம் பெண்களிடையே காணப்படுகிறது. இந்நோயுள்ள பெண்களின் ஆண்மை ஹோர்மோன் அளவைக் குறைத்து கருமுட்டை உற்பத்தியை ஊக்குவிப்பதையும் மெட்போமின் மாத்திரை செய்கிறது.

பெண்களைப் பற்றிப் பேசும்போது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு பொதுவாக இன்சுலின் ஊசியே போடுவார்கள். ஆனால், அண்மைய ஆய்வுகள் கர்ப்பகால நீரிழிவு (Gestational Diabetes) கர்ப்ப காலத்திலும் நீடிக்கும் நீரிழிவு வகை 2 (Type 2 Diabetes) ஆகிய இரண்டிற்கும் மெட்போமின் மாத்திரை உபயோகிப்பது பாதுகாப்பானது என்கிறது.

இன்சுலின் ஊசி போடும் ஒரு சில நீரிழிவு நோயாளருக்கு அத்துடன் நீரிழிவு மாத்திரைகளையும் சேர்த்துப் பாவிக்க வேண்டிய தேவை ஏற்படும். இன்சுலின் ஊசியால் மாத்திரம் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கும் இன்சுலின் ஊசி மருந்தின் அளவைக் குறைக்க வேண்டியவர்களுக்கும் மெட்போமின் மருந்தை ஊசியோடு இணைத்து பாவிக்க முடியும். ஏனைய பெரும்பாலான நீரிழிவு மாத்திரைகள் அவ்வாறு இன்சுலினுடன் சேர்த்து உபயோகிக்க ஏற்றவையல்ல. இன்சுலின் ஊசியுடன் மெட்போமின் மாத்திரையைச் சேர்த்து உபயோகிக்கும்போது இன்சுலின் மருந்தின் அளவை 15 முதல் 25 சதவிகிதம் வரை குறைக்க முடிகிறது என்பது நீரிழிவு நோயாளருக்கு இனிப்பான செய்தியாகும்.

இன்சுலின் ஊசியுடன் மாத்திரமல்லாது ஏனைய பல வகையான நீரிழிவு மாத்திரைகளுடனும் சேர்த்தும் பாவிக்க உகந்தது. உதாரணமான Glibenclamide, Glipizide, Gliclazide, Pioglitazone, Acarbose போன்ற அனைத்து வகை மருந்துகளுடன் இணைந்து பாவித்தாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்த மாட்டாது.

மெட்போமின் மருந்தைத் தினமும் மூன்று தடவை போடவேண்டிய தொல்லை இப்பொழுது இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு முறைகளே உபயோகிக்க வேண்டிய Retard மாத்திரைகளாகவும் தினமும் ஒரு தடவை மட்டுமே போடக்கூடிய SR – Slow Release மாத்திரைகளாகவும் இப்பொழுது கிடைக்கிறது.

அப்படியாயின் மெட்போமின் எந்தவித பக்கவிளைவுகளோ, தொல்லைகளோ அற்ற அதிஅற்புத மருந்து என்று கூறலாமா? நிச்சயமாக இல்லை. வயிற்று ஊதுதல், பொருமல், பசியின்மை, வயிற்றோட்டம், வாயில் உலோகச்சுவை போன்ற சாதாரண பக்கவிளைவுகள் இருக்கலாம். அவை பெரும்பாலும் மருந்துகளை உபயோகிக்க ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் இருக்கும். பிறகு படிப்படியாக மறைந்துவிடும். சிறுநீரக நோய்கள், ஈரல் நோய்கள், அதீத மதுபாவனை போன்றவை இருந்தால் வைத்தியர்கள் இம்மருந்தை அவதானத்துடனேயே உபயோகிப்பார்கள்.

மேலே எழுதியவற்றை அவருக்கு விளக்கியதும் ஏற்றுக்கொண்டு “சந்தோசமாக மெட்போமினுடன் சென்றார்”.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல்

Read Full Post »

>ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு புத்தம் புது முயற்சிதான் உங்கள் கையில் ஒரு நூலாகத் தவழ்கிறது. கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக முற்போக்கு இலக்கியத்தோடும், இடதுசாரி அரசியலோடும் உறுதியாக நின்ற ஒருவரான நீர்வை பொன்னையனின் இலக்கியப் பங்களிப்பு முழுவதையும் கூறுகூறாக பரிசீலிக்க முயல்கின்ற முதல் முயற்சியின் பலனாக இது கைகூடுகிறது. புனைவின் மூலம் வாசகன் மனத்திற்குள் பயணித்து சமூகத்தை நேர்ப்படுத்த முடியும் என நம்பிய ஒருவரின் படைப்பாளுமையை விமர்சிக்கிற முயல்கிறது இந்நூல்.

இலக்கியமும் ஒரு நுகர்ச்சிப் பொருள்தான். ஆயினும் நாடகம், சினிமா, இசை போன்ற கலைப் படைப்புகள் அளவிற்கு இது ஜனரஞ்சனமானது அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமே. ஆயினும் ஒரு சமூகம் எழுச்சியுறும் காலங்களில் இலக்கியங்கள் மக்கள் மயப்பட வேண்டியது அவசியமாகிறது. காரணம் எந்த இலக்கியமும் ஒரு குறுகிய நுகர் வட்டத்திற்குள் நிற்கும்போது அதன் ஆற்றல் மட்டுப்படுகிறது.

ஒரு சமூகம் புதிய எல்லைகளை எட்ட முயலும்போதும், உரிமைகளுக்காக குரல் எழுப்பும்போதும், அல்லது அடிமைத்தளங்களை அறுத்து சுதந்திரத்தை வேண்டி நிற்கும்போதும், சமூக மேம்பாட்டில் அக்கறை உள்ள இலக்கியங்களை பொதுமக்கள் பரப்பிற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகிறது. அதற்கான முயற்சிகளும் என்றும் இருந்து கொண்டே இருக்கிறன.

முற்போக்கு இலக்கியமானது இலக்கியத்தை மக்கள் மயப்படுத்துவதற்கும், மக்களை இலக்கிய மயப்படுத்துவதற்கும் என்றுமே முன்னுரிமை கொடுத்து வருவதை அறிவோம். அவ்வாறு பொதுமைப்படுத்துவதற்கு மொழி சார்ந்த, இனம் சார்ந்த, பிரதேசம் சார்ந்த, தேசியம் சார்ந்த இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

உலகளாவிய ரீதியில் மாக்ஸிம் கார்க்கி அத்தகைய ஆளுமை எனவும், பாரதியை தமிழ் நாட்டின் ஒரு முக்கிய ஆளுமை எனவும் உதாரணம் காட்டலாம். இவர்கள் ஒவ்வொரு உதாரணங்கள் மட்டுமே. இவர்கள் போன்ற பலரின் பங்களிப்புடனேயே இலக்கியங்கள் செழுமையுற்றன. இதேபோல ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் பல இலக்கிய ஆளுமைகள் தமது ஆழமான பங்களிப்பை வழங்கவே செய்துள்ளனர். இவ்வாறு ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்த ஆளுமைகள் எவை, அவை ஆற்றிய பங்களிப்பின் பெறுமதி எத்தகையது போன்ற விடயங்களில் விழிப்புணர்வு எம்மிடையே இருக்கிறதா? அவை பற்றிய ஆய்வு ரீதியான, கனதியான புலமை சார் கண்ணோட்டங்கள் காணவும் கிடைப்பதில்லை என்பதே நிஜமாகிறது.

வேறொரு கோணத்தில் நோக்குவோம். தமிழ் விமர்சனத் துறையை எடுத்துக் கொண்டால் நயத்தலிலும் உவத்தலிலும் மட்டுமே திளைத்துக் கிடந்த காலத்தில் அதனை மார்க்கஸியக் கண்ணோட்டத்தில் விஞ்ஞான ப+ர்வமாக அணுகுவதற்கு வழிகாட்டியவர்கள் நாம் பெருமை அடித்துக் கொண்டது உண்மையான போதும், அதற்கு பின்னர் ஒரு அடி கூட முன் எடுத்து நகர்வதற்கு நாம் முயலவில்லை என்பதும் மற்றொரு கசப்பான உண்மைதான். நீண்ட தேக்கத்தின் பின்னரும் கூட புதிய பார்வைகள், புதிய வீச்சுக்கள் அந்தி வானில் கூட தென்படவில்லை என்பது கவலைக்குரியது. எம்மிடம் விமர்சனம் இருக்கிறது. அவை பெரும்பாலும் ஒவ்வொரு தனித்தனிப் படைப்புகள் பற்றிய பதிவுகளாகவும் உரையாடல்களாகவுமே உள்ளன. படைப்பிலக்கியம், சினிமா, நாடகம், கவிதை போன்றவை பற்றியே பெருமளவு கண்ணோட்டங்கள் வெளியாகின்றன. வாசகர் நுகர்விலும், வெளியீட்டுப் பரப்பிலும் பெரும் இடத்தை அடக்கிக் கொள்ளும் கட்டுரை இலக்கியங்கள் பற்றிய மதிப்பீடுகள் கூட மிக அரிதாகவே வெளியாகின்றன.

இவற்றிற்கு மேலாக இலக்கிய ஆளுமைகள் பற்றிய பூரண ஆய்வுகள் இல்லை என்றே சொல்லலாம். தனித் தனி மரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே ஒழிய முழுமையாகத் தோப்பைப் பார்க்கவோ ரசிக்கவோ எமக்குத் தெரியவில்லை. யானை பார்த்த குருடர்களாகத் திருப்தியடைந்து விடுகிறோம். அதாவது ஒரு படைப்பாளியின் ஒட்டுதொத்த படைப்புகளையும் ஒருங்கு சேர்த்துப் பார்த்து, அவரின் படைப்பாற்றலையும் சமூக அரசியல் பங்களிப்புகளையும் விமர்சிக்கும் கலை எங்களுக்கு இன்னமும் கை கூடவே இல்லை. ஒருவரின் கதையையோ, கவிதையையோ, நாவலையோ விமர்சிப்பதுடன் அல்லது பாராட்டுவதுடன் நாம் நின்றுவிடுகிறோம், ஒப்பீட்டு விமர்சனம் கூட இங்கு வளர்ச்சியுறவில்லை. மணிவிழா மலர்களின் வெற்று வார்த்தைப் புகழ்ச்சிகளும், பொன்னாடை போர்த்தும் நிகழ்வின் புகழாரங்களுமே எஞ்சி நிற்கின்றன.

ஆனால் தமிழ் நாட்டில் இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளும் விமர்சனங்களும் நம்பிக்கை ஊட்டுவதுடன் முன்நகர்ந்து செல்வதாகவும் உள்ளது. 1975 லிலேயே பொதிகைவெற்பன் புதுமைப்பித்தன் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இலக்கியச் சிந்தனை அமைப்பு 1987 முதல் வருடப் பிறப்பிற்கு முதல் நாளில் இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வு நூல்களை வெளியிட்டு வந்திருக்கிறது. கு.அழகிரிசாமி, சிதப்பரசுப்பிரமணியன், ஜெகசிற்பியன், கு.பா.ரா, கரிச்சான் குஞ்சு, பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி, மௌனி, திலீப்குமார் ஆகியோர் பற்றிய நூல்கள் வெளியாகியுள்ளன. காவ்யா 90களில் வெளியிட்ட ‘கநாசு வழித்தடங்கள்’ என்ற நூலில் அவர் பற்றி தமிழவன், ஞானி, பிரமிள் முதலான ஐவரின் விமர்சனப் பார்வைகள் அடங்கியிருந்ததாக ஞாபகம். இதேபோல புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மௌனி, நகுலன், போன்ற பலரது படைப்புலகங்களும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தனித்தனி நூல்களாக காவ்யாவால் வெளியிடப்பட்டிருந்தன. இவை ஒருவர் பற்றிய பலரது பார்வைகளின் திரட்டுக்களாகும். இதற்கு மாறாக ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியை ஆழ்ந்து நோக்கும் நூல்களும் வெளியாகியுள்ளன. உதாரணமாக சுந்தர ராமசாமி, ஜீவா மற்றும் சி.சு.செல்லப்பா பற்றியும், அதேபோல ஜெயமோகன் சுந்தர ராமசாமி மற்றும் ஜெயகாந்தன் பற்றியும் எழுதிய நூல்களை உதாரணங்களாகக் கூறலாம்.

ஆனால் இங்கு அத்தகைய முயற்சிகள் எழுந்ததாகத் தெரியவில்லை. இந் நிலையில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியாக விபவி கலாசார மையம் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகள் பற்றி தொடர்ச்சியான ஒரு ஆய்வை நடாத்தியமை முக்கியமான திருப்பம் எனலாம். இது பற்றி “ஒரு குறித்த படைப்பாளியின் படைப்பு ஆளுமையைப் பல நிலைகளில், பல கோணங்களில் ஆய்வு செய்யும் நோக்குடன் இலங்கை முற்போக்கு கதை இலக்கியப் பேரவையும், விபவி கலாசார மையமும் இணைந்து ஒரு தொடர் கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடாத்தி வந்துள்ளது” என நீர்வை பொன்னையன் ‘முற்போக்கு இலக்கியத்தில் புனைகதைச் சுவடுகள்’ என்ற நூலின் தொகுப்புரையில் கூறுகிறார். அக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘முற்போக்கு இலக்கியத்தில் புனைகதைச் சுவடுகள்’, ‘முற்போக்கு இலக்கியத்தில் கவிதைச் சுவடுகள்’ என இரு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

நீர்வை பொன்னையன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். அதன் வளர்ச்சிக்கு ஆரம்ப காலம் முதலே உரம் ஊட்டியவர்களில் முக்கியமானவர். ஆயினும் தனது படைப்புகளுடாக அன்றி சில்லறைச் சலசப்புகளுடாக தன்னை முன்னிலைப்படுத்த முனையாத பண்பாளர். இவரது ஜந்து சிறுகதைத் தொகுப்புகளும், கட்டுரைத் தொகுதி ஒன்றும், இவரால் மீள மொழியப்பட்ட உலகத்து நாட்டார் கதைத் தொகுதி ஒன்றும் வெளியாகியுள்ளன. விபவி கலாசார மையத்தின் தமிழ் மொழி இணைப்பாளராக அண்மைக் காலம் வரை கடமையாற்றியதுடன், இலங்கை முற்போக்கு கலை இலக்கிய பேரவையின் முக்கிய அங்கத்தவராகவும் செயற்படுகிறார்.

“பொன்னையன் நீண்டகாலமாக, காலமாற்றங்களுக்கும், கருத்து காலமாற்றங்களுக்கும் முகம் கொடுத்து அவ்அவ் காலப்போக்குகள் யாவற்றையும் அவதானித்து அவை பற்றி எழுதி வந்துள்ளார் என்பதும், எழுதுவதை இடைநிறுத்தவில்லை (அல்லது வற்றவில்லை என்பதும்) என்றும் மேலாகத் தான் வரித்துக் கொண்ட நிலை மாறாது அல்லது சமரசம் செய்யாது கடந்த நாலரை தசாப்தங்களாக இயங்கி வந்துள்ளார் என்பதும் புலனாகிறது” என அவரைப் பற்றி கலாநிதி வ.மகேஸ்வரன் பதிவு செய்துள்ளதையும் குறிப்பிடலாம்.

இலக்கியம் என்பது மொழியால் ஆனது. ஆனால் மொழியப்படுவாது அனைத்தும் இலக்கியம் ஆவது இல்லையே. மொழி என்பது வெறும் வெளிப்பாட்டுச் சாதனம். ஒருவரின் கருத்தை மற்றவருக்கு கொண்டு செல்லும் சாதாரண ஊடகம். ஆனால் கருத்தைக் கனதியாகவும், இனிமையான சங்கீதம் போல நளினமாகவும், மற்றவர் மனத்தை ஊடுருவித் திளைக்க வைப்பதாகவும் வார்க்கும்போது அது இலக்கியமாக வியாபகம் பெறுகிறது. நீர்வையின் கருத்துக்கள் பலமானவை. இலட்சிய வேகம் கொண்டவை. அவற்றை மற்றவர்களுக்குக் கடத்தும் அவரது மொழி வளம் தீர்க்கமானது, சொற்செட்டுக் கொண்டது. நளினமும் வசீகரமும் இணைந்து வருவன. இதனால் அவரால் வாசகன் மனத்தைச் சொற்களால் திறக்க முடிகிறது.

நீர்வையின் படைப்புலகை பல்வேறு கோணங்களில், பல்வேறு நிலைப்பட்டவர்கள் கணித்த கருத்துக்கள் இந்நூலை அலங்கரிக்கின்றன. பத்துக் கட்டுரைகள் இதில் அடங்குகிறன. அவரது பரந்த படைப்புலகை முழவதையும் கலாநிதி வ.மகேஸ்வரன், பூரணமாக ஆய்வுக்கு உள்ளாக்கியுள்ளனர். இது முற்கூறிய கருத்தரங்கில் ஆற்றப்பட்ட உரையின் விரிவாகும்.

அமரர் வ.ராசையாவின் ‘நீர்வையின் படைப்புத் திறன் எட்டியுள்ள புதிய திறன்’ என்ற ஆய்வுக் கட்டுரையானது நீர்வையின் ‘வேட்கை’ என்ற சிறுதைத் தொகுப்பை முன்நிறுத்தி எழுதப்பட்டது. மிகுந்த ரசனை உணர்வுள்ள ராசையா மாஸ்டர் நீர்வையின் படைப்புகளின் உருவம் உள்ளடக்கம், பாத்திர வார்ப்பு, மொழித்திறன், பெண் பாத்திர இயல்புகள், போர்க் காலப் படைப்புகள், அவரது படைப்புகள் சொல்லும் அரசியல் என பல திசைகளிலும் தனது கூர்ந்த அவதானிப்பை முன் வைக்கிறார்.

நீர்வையின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘மேடும் பள்ளமும்’ பற்றி, சுமார் நாற்பத்து மூன்று ஆண்டுகள் கழித்து இரண்டாம் தொகுப்பு வெளிவந்த நேரத்தில் மொழியப்பட்ட கட்டுரை எம்.கே.முருகானந்தன் அவர்களது ஆகும். சிறுகதை இலக்கியம் இலங்கையில் வளர்ச்சியுற ஆரம்பித்த காலங்களிலேயே, சிறுகதை என்ற இலக்கியத்தின் வடிவம் பற்றிய பிரக்ஞையும் அதன் பல்வேறு படைப்பு முறைமைகள் பற்றியும் தெளிவான சிந்தனையும் உள்ளவராக நீர்வை இருந்தார் என்பதை அவரது படைப்புகளிலிருந்தே உதாரணங்களோடு எடுத்துக் காட்டும் கட்டுரை இது. அவர் எடுத்தாண்ட பல்வேறு சிறுகதை உத்திகள், வடிவங்கள், பரீட்சார்த்த ரீதியான படைப்புகள் ஆகியவை பற்றியும் சுருக்கமாகக் கூறுகிறது.

மேற் கூறிய கட்டுரைகள் இரண்டும் ஒவ்வொரு தனி நூல்களில் சஞ்சரித்து கருத்துக் கூற முனையும் போது, முனைவர் பா. மதிவாணன் (தமிழ் இணைப் பேராசிரியர், கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர்) ‘பாதை’, ‘வேட்கை’ ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளின் ஊடாக நீர்வை பொன்னையனின் படைப்புலகத்தைப் பார்க்க முயல்கிறார். இக் கட்டுரை தமிழ்நாடு என்.சீ.பி.எச் வெளியீடான ‘ஆய்வு நோக்கில் அயல்நாட்டுத் தமிழ்ச் சிறுகதைள்’ என்ற நூலில் வெளியானது.

நீர்வையின் ‘பாதை’ தொகுதியில் உள்ளடங்கிய சிறுகதைகள் நீர்வை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகவும் அதன் கட்சி வார இதழ்களான ‘தேசாபிதானி’, ‘தொழிலாளி’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றிய காலத்தில் எழுதப்பட்டவையாகும். இதனால் போலும் 70களில் எழுதப்பட்ட சிறுகதைகளை ‘வாய்ப்பாட்டு’ சிறுகதைகள் என வரையறுக்க முனைவர் முயல்கிறார். தான் பற்றிக் கொண்ட கொள்கை வழி நின்று அதனைப் பரப்ப முயன்ற காலை எழுதப்பட்ட ‘கட்சி இலக்கியம்’ ஆகும் அவை என்பதை தொகுப்பாளர் என்ற ரீதியில் சுட்டிக் காட்ட வேண்டிய நிலையில் உள்ளேன்.

முனைவர் பா. மதிவானனின் கூற்றிற்கு நேர் எதிரான கருத்தை ந.இரவீந்திரன் ‘நீர்வையின் படைப்புகளும் ஏனைய முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளும் ஒப்பீடு’ என்ற தனது கட்டுரையில் சொல்கிறார். நீர்வையின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பான ‘நீர்வை பொன்னையன் கதைகள்’ பற்றிய ஆய்வின் போது ‘… தொகுப்பில் கட்சி இலக்கியச் சிறுகதைகள் எதுவும் இடம் பெறாதது துரதிஸ்டம்… நீர்வையின் தனித்துவப் பங்களிப்பு என்ற வகையில், ஒரு கட்சி இலக்கியப் படைப்பாவது இடம் பெற்றிருந்தால் இத் தொகுப்பு மேலும் செழுமைப்பட்டிருக்கும்’ என்றும், ‘… கட்சி இலக்கியம் என்பது பெரும் கூச்சம் ஒன்றை உணர்துவதாகக் கருதப்படல் கூடாது. அப்படி ஒரு இலக்கியம் அமைந்துள்ளதைக் கவனிப்பது அவசியம், அவ்வளவே.’ என்றும் ந.இரவீந்திரன் கூறுவது ஊன்றிக் கவனிக்கத்தக்கது.

மேற் கூறிய ‘நீர்வை பொன்னையன் கதைகள்’ என்ற நூலில் பொன்னையன் இற்றைவரை எழுதிய 60க் மேற்பட்ட சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கபட்ட 23 படைப்புகள் அடங்குகின்றன. இந் நூலின் வெளியீட்டு விழாவின் போது அத் தொகுப்பில் அடங்கிய சிறுகதைகளை மையப்படுத்தி 5 விமர்சகர்கள் நீர்வையின் படைப்புலகை வௌ;வேறு கோணங்களில் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வுக் கட்டுரைகள் முக்கியமானவை. ஏனெனில் அவை நீர்வையின் படைப்புக்கள் அனைத்தையும் முழுமையாக ஆய்வுக்கு எடுக்காத போதும் அவரின் முக்கிய படைப்புக்களை ஒட்டு மொத்தமாகப் பார்பதால் அவரது படைப்புலகின் பரப்பளவை அளந்து செல்வதாகக் கொள்ளலாம்.

தேவகௌரி நீர்வையின் படைப்புகளில் பெண் பாத்திரங்கள் பற்றி ஆய்வு செய்கிறார். இதனை அவர் இரண்டு வகைகளில் செய்ய முயன்றுள்ளார். முதலாவதாக அவரது பெண் பாத்திரங்களுடாகப் பார்ப்பது. இரண்டாவதாக பெண் பற்றிய எத்தகைய கருத்தாக்கங்கள் அவரால் முன்வைக்கப்படுகின்றன என்பது. ‘பெண் என்றாலே உடலாகப் பார்க்கும், அதிலிருந்து விம்பம் அமைக்கும் தன்மைகள் இல்லாது எல்லோருக்கும் சமூக நீதி, நியாயம், நேர்மை, அன்பு என்பன பொது ஒழுங்கங்களாக்கப்பட்ட கதைகள் அவை’ எனச் சிலாகித்து கூறுகிறார். அதாவது பெண்ணிற்கு மட்டும் கற்பு, கண்ணியம், அடக்கம் போன்ற ‘பெண்ணின் உடல் சார்ந்த ஒழுக்கத்தை மையப்படுத்திய கதைகள் இல்லை என்பது சாஸவதமானது’ எனக் கூறுகிறார். நீர்வையின் தலைமுறை சார்ந்த எழுத்தாளத் தலைமுறையினருடன் ஒப்பிடுகையில் இது மிகவும் முற்போக்கான பெண்நிலை சார்ந்த கருத்தெனக் கொள்ளலாம்.

கலாநிதி வ.மகேஸ்வரனது கட்டுரை நீர்வையின் படைப்புகளில் உருவமும் உள்ளடக்கமும் என்பதாகும். நீர்வைக்கு ‘கரு தொடர்பான சிரமம் அதிகமாகத் தெரியவில்லை’ என்று ஆரம்பித்து இவரது படைப்புகளில் உள்ள அழகியல் அம்சங்களை கதையின் அளவு, கட்டுக்கோப்பு, கதைகளை ஆரம்பிக்கும் அழகு, கலாபூர்வமான முடிவுகள், மொழி ஆற்றல், படிமங்களைக் கையாளும் ஆற்றல், புத்தம் புதிய உவமைகள், பேச்சு வழக்கு என மிகவும் நுணுக்கமாக புலமைசார் அறிவுப் பின்னணியல் ஆய்ந்துள்ளார். ‘படைப்பாற்றலில் அழகியல் எனும்போது அவர் அச்செயன் முறையிலும் அவதானமாகவே இயங்கியுள்ளார்’ எனக் கட்டுரையை நிறைவு செய்வது கவனத்தில் கொள்ளத்தக்கது.

சிவா சுப்பிரமணியம் ‘நீர்வை பொன்னையயின் கதைகளில் சமூகமும் அரசியலும்’ பற்றி ஆய்வுக் கட்டுரை. ‘மார்க்சியவாதியான பொன்னையன் அச் சித்தாத்துக்கூடாகவே சமூகத்தைப் பாரக்கிறார் அந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே சமூக முன்னேற்றத்திற்கான வழியைக் காட்டுகிறார்’ என அடித்துக் கூறுகிறார். ‘இலக்கியம் சமூகத்தைப் பிரதிபலிக்க வேண்டும், அதன் முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டவேண்டும், அதை அகற்றுவதற்கான முயற்சிகளையும் சித்தரிக்க வேண்டும்.’ அதைத்தான் நீர்வையின் படைப்புகள் செய்கின்றன எனத் தெளிவாகக் கூறுகிறார்.

தெ.மதுசூதனின் கட்டுரை நீர்வையின் ‘பாத்திரப் படைப்பு’கள் பற்றி அலசுகிறது. அவரது இலட்சிய நோக்கு படைப்பின் உள்ளியக்கத்தின் ஆற்றுப்படுத்தலாக எவ்வாறு மேவுகிறது என்பதை சில சிறுகதைகளிலிருந்து உதாரணம் காட்டுகிறார். “கதையும் பாத்திரமும் நீர்வை வரித்துக்கொண்ட சிந்தனையின் முறைமைக்கு உட்பட்டவை. இதைத்தான் நீர்வை தனக்கான அடையாளங்களாக மீளக் கட்டமைக்கிறார்.” என்பது அவரது அவதானிப்பாக உள்ளது. மேலும் “நீர்வையின் பாத்திர வாரப்பும் கதைக்களமும் விரிவானது, பன்முகச் சாயல் கொண்டது … ” என சிலாகிப்பதுடன் நின்றுவிடாது, இறுதியில் “சிறுகதையின் இலக்கியப் பண்புகள் தொடர்ந்து மேலும் ஆட்சி செலுத்தியிருந்தால் சிறுகதை இலக்கிய வகைமையின் கூர்மையான அம்சங்கள், பண்புகள் உள்வாங்கப்பட்டிருக்கும்” என விமர்சிக்கிறார்.

பாத்திரப் படைப்புகள் பற்றிய மதுவின் கருத்தாடலைத் தொடர்ந்து திக்குவலைக் கமாலின் அதே தலைப்பிலான கட்டுரையைப் பார்ப்பது சுவாரிஸமானது. திக்குவலைக் கமால் ‘வேட்கை’ சிறுகதைத் தொகுதியை முன் வைத்தே நீர்வையின் பாத்திரப் படைப்பு பற்றிப் பேசுகிறார். “ கதைப் புலங்கள் யாவும் யதார்த்தபூர்வமாக இருப்பது போலவே, எல்லாக் கதா பாத்திரங்களும் உண்மையானவர்களாக இயங்குகின்றனர். ஒரு கணப்போழுது வந்து போகும் பாத்திரம் கூட இதற்கு அப்பாற்பட்டு நிற்கவில்லை” என்கிறார். மேலும்“ கதாசிரியர் காட்டுகின்ற அந்தக் கிராமிய உலகிலே, பல்வேறு வகைமாதிரியான மனித உணர்வுகளையும் கொண்டியங்கும் கதாமாந்தர்களைக் காண முடிகிறது. பல சந்தர்ப்பங்களில் அப்பாத்திரங்கள் வாசகனையும் அரவணைத்துக் கொண்டு இயங்குவது போலவும் தெரிகிறது” என நயந்து கூறுகிறார்.

மேற் கூறிய ஐந்து கட்டுரைகளும் நீர்வை பொன்னையன் கதைகள் என்ற நூல் பற்றிய ஆய்வரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளாக இருக்க, பேராசிரியர்கள் சபா ஜெயராசாவும், அருணாசலமும் அதே நூலை முன்வைத்து நீர்வையின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளைத் தருகிறார்கள்.

பேராசிரியர் சபா ஜெயராசாவின் கட்டுரை ‘நடப்பியலும் நீர்வையின் சிறுகதைகளும்’ என்பதாகும். நடப்பியல் (Realism) என்றால் என்ன?, அதன் கூறுகள் எவை, அது ரொமான்டிசம், கிளாசிசம் ஆகியவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?, நடப்பியலில் அழகியல் போன்ற பல விடயங்களை மிக ஆழமாக, பொருத்தமான கலைச் சொற்களுடன் புலமைப் பின்புலதில் எடுத்தியம்பி நீர்வையின் படைப்புலகு எவ்வாறு அதனுள் பொருந்தி வருகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார். ‘நடப்பியலைச் சிக்கனமான சொற் கட்டுமானங்களுக்கள் கொண்டு வரும் சிறுகதையாளர் வரிசையில் நீர்வை பொன்னையன் தனித்துவமானவர்’ என்பது அவரது கணிப்பில் அடங்குகிறது. இலக்கிய ஆர்வலர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் மட்டுமின்றி இலக்கிய மாணாக்கர்களுக்கும் மிகவும் பயன்படக் கூடிய அரிய கட்டுரை இதுவாகும்.

பேராசிரியர்.க.அருணாசலம் ‘நீர்வை பொன்னையனின் கதைகளில் மனிதநேயம்’ பற்றி எழுதுகிறார். நீர்வை சித்தரிக்கும் பாத்திரங்கள், அவற்றின் பின்புலம், அங்கு மக்கள் படும் துன்பங்கள், அடக்கு முறைகள் பற்றியும் அவற்றை நீர்வை எப்படி மனிதநேயத்துடன் அணுகுகிறார் என்பதை மிகவும் எளிமையான தமிழில் எல்லோரும் சிரமம் இன்றிப் புரியும்படி சொல்லியிருக்கிறார்.

மேற்படி தொகுப்பு நூல் பற்றி கார்த்திகாயினி சுபேஸ், வசந்தி தயாபரன் ஆகியோர் பத்திரிகைகளுக்கு எழுதிய விமர்சனக் கட்டுரைகளும் இந் நூலில் அடங்குகின்றன. “மனித மனங்களின் உணர்வலைகளை எழுத்துக்களாக்கி உணர்ச்சிபூர்வமாகப் படைக்கும் திறனை ஆசிரியரிடத்தே காணமுடிகிறது. இதனால் கதையில் உயிரோட்டம், யதார்த்தம் என்பன ஒன்றிணைந்து கதையோடு ஒன்றச் செய்துவிடுகிறது” என்கிறார் கார்த்திகாயினி சுபேஸ். “கதைகளின் மண் வாசனையும் பண்பாட்டு அம்சங்களும் தாய்மடியில் இருக்குமாற் போன்ற சுகானுபவம் தருவன. நீர்வை மனநெகிழ்ச்சியுடன் எழுதுவார். அதே சமயம் சிறுமைகளைச் சாடி வார்த்தைகளால் சுடுவார். குடும்ப உறவுகளின் பிணைப்பு, தெறிப்பு, சமூகத்தின் பொய்மை, போலகள், மானிடத்தின் அடக்குமறைகள், எழுச்சிகள் இவை நீர்வையின் பாடுபொருட்கள். அங்கு நாம் காண்பவை எமது சொந்த முகங்கள்” என்கிறார் வசந்தி தயாபரன்.

அவரது படைப்புலகு முழுவதையும் ஒட்டுமொத்த ஆய்வுக்கு உள்ளாக்குவதால் நூலின் சிகரக் கட்டுரையாக இடம் பெறுவது கலாநிதி மகேஸ்வரனின் ‘படைப்பு- பதிவு- பிரசாரம் நீர்வை பொன்னையனின் சிறுகதைகளை முன்நிறுத்தி’ என்பதாகும். நீர்வை பொன்னையனின் ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும் ஒன்று சேர்த்து நோக்கி தனது ஆய்வுப் பணியின் கனதியுடன் அவதானிப்புகளாக முன் வைக்கிறார். நீர்வையின் எழுத்துப்பணி;யை பிரவேச காலம், இயங்கு காலம், பின்னைய காலம் என மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்து அவரது படைப்புலகை அளக்க முற்படுகிறார்.

மேலும், அவரது படைப்புகளை தொழிலாளர் பிரச்சனை, விவசாயம் மற்றும் நிலம் சார்ந்த பிரச்சனை, சாதீயம், இனப்பிரச்சினை, ஏனைய பிரச்சனைகள் எனப் பொருள் அடிப்படையிலும் வேறொரு கோணத்திலும் ஆய்வு செய்கிறார். இவற்றிற்கு மேலாக அவரது படைப்புகளின் படைப்பாக்க முறைமைகள், நடை, மொழி ஆற்றல், போன்ற கலை அம்சங்களையும் ஆராயத் தவறவில்லை.

இவை யாவும் நீர்வை பற்றிய அவரின் படைப்புலகம் சார்ந்த அதாவது அவரது சிறுகதைகளை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்ட ஆய்வுகளேயாகும். பொன்னையன் பேனாவை ஆயுதமாகக் கொண்ட ஒரு படைப்பாளி தனது லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக சகல வழிகளையும் வசப்படுத்தி முன்நகர்வார் என்பது தெரிந்ததே.

இந்த வகையில் அவரது ஏனைய இலக்கிய முயற்சியான அவரால் மொழியப்பட்ட உலகத்து நாட்டார் கதைகள் என்ற நூலும் பலரால் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மூதறிஞரும் கவிஞருமான முருகையன் அந் நூலுக்கு எழுதிய முன்னுரையானது விமர்சனம் அல்லவென்ற போதும் ஒரு முக்கியமான பதிவாகும். அதேபோல க.சண்முகலிங்கம் “மக்கள் இலக்கியம் என்னும் இலக்கியக் கோட்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடும் பற்றும் கொண்டிருந்த நீர்வை பொன்னையன் நாட்டார் இலக்கியத்தின்பால் அக்கறை கொண்டவராக இருந்திருக்கிறார் என்பது வியப்புக்குரியது அல்ல” என எழுதுகிறார். எம்.கே.முருகானந்தன் “ .. புத்தாக்கங்களுக்கு ஒதுக்க வேண்டிய அரிய நேரத்தை, இத்தகைய தமிழில் மீள்மொழியும் பணிக்கு அளித்த தன்னலங்கருதா முயற்சிக்கு நாம் கடமைப்பட்டு நிற்கிறோம்” என்கிறார்.

‘நாம் ஏன் எழுதுகிறோம்’ அரசியல், கலை இலக்கியக்; கட்டுரை நூலை தெ.மதுசூதனன் விமர்சிக்கிறார்.

‘முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்’ என்ற, சர்வதேச பிரபல்யம் பெற்ற பத்து முற்போக்கு இலக்கிய கர்த்தாக்களை அறிமுகம் செய்யும் நீர்வையின் தொகுப்பு நூல் பற்றி திரு சிவா சுப்பிரமணியம் ‘முற்போக்கு இலக்கியத்தின் அனுபவத் தடங்கள்’ என்ற தலைப்பில் விமர்சிக்கிறார். “பத்து முற்போக்கு எழுத்தானர்களும் தாங்கள் வாழ்ந்த காலங்களில் எத்தகைய பிர்ச்னைகளுக்கு முகம் கொடுத்தார்கள் அவற்றை எவ்வாறு சமாளித்துச் முன்னேற்றத்திற்கான தங்கள் பங்களிப்பைச் செலுத்தினார்கள்” போன்ற விரிவான தகவல்களை நீர்வை தந்திருப்பதைச் சிலாகிக்கிறார்.

இவற்றிற்கு அப்பால் சிந்திக்கும்போது இலக்கியம் தவிரவும், தனது தொழில் முயற்சி, மேடைப் பேச்சு, மற்றும் ஏனைய செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தே லட்சியப் பாதையில் சென்றிருப்பார் என்பது தெளிவு. இவ்வாறு நோக்கும் போது இவரது கல்விக் காலம், தொழிலற்ற இளைஞனாயிருந்த காலப்பகுதி, கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியம், ‘தேசாபிமானி’, ‘தொழிலாளி’ ஆகிய கட்சிப் பத்திரிகையின் ஆசிரிய குழுப்பணி, திரைப்படக் கூட்டுத்தாபனப் பணி, விபவி மாற்றுக் கலாசார மையம் ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடான பணி, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஊடாகவும் இலங்கை முற்போக்கு கதை இலக்கியப் பேரவை ஊடாகவும் ஆற்றிய பணிகள் போன்ற பலவும் விமர்சனத்திற்கு உட்படாமல் இருப்பது புரிகிறது.

மேலும் இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளில் பல, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட வெவ்வேறு நபர்களால், வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு தேவைகளுக்காச் செய்யப்பட்டுள்ளன என்பது தெரிகிறது. ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமின்றி, நூல் அறிமுகக் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், ரசனைக் கட்டுரைகள், பத்திரிகை விமர்சனம், நூல் முன்னுரை எனப் பல வகைப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகிறது. இதனால் இதனை முழுமையான ஆய்வு நூல் எனக் கொள்ள முடியாது என்பது உண்மையே. தொகுப்பு நூல் என்பதால் பல கருத்துக்களும், விடயங்களும் மீளச் சொல்லப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. ஒரே நபரினால் அல்லது ஒரு குழுவினால் முழுமையான ஆய்வும் செய்யப்பட்டிருந்தால் கருத்தொருமைப்பாடு இருந்திருக்கும். மீள்மொழிவு தவிர்க்கப்பட்டிருக்கும், பல விடயங்கள் ஆய்வுக்கு அகப்படாமல் தப்பித்திருப்பதற்கான வாய்ப்பு குன்றியிருக்கும். தெளிந்த முடிவுகள் சாத்தியப்பட்டிருக்கும் என்பன உண்மையே. இத்தகைய குறைபாடுகள் உள்ள போதும் நூறு பூக்கள் மலர்ந்து கதம்ப மணம் வீசும் மலர் வனம் போன்ற நிறைவை இத் தொகுப்பு கொடுக்க முயல்கிறது என்பதும் உண்மையே.

இது முதல் முயற்சி மட்டுமே. மேலும் பல நிறைவான இத்தகைய நூல்களின் வரவிற்கு இது வழிவகுக்குமே ஆயின் அதுவே போதுமானது. இந் நூலுக்கான தொகுப்புரையை எழுதக் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கான வாய்ப்பைத் தந்த நீர்வைக்கும், இலங்கை முற்போக்கு கதை இலக்கியப் பேரவைக்கும் எனது நன்றிகள்.

எம்.கே.முருகானந்தன்

நீர்வை பொன்னையன் இலக்கியத் தடம் என்ற நூலுக்கு எழுதப்பட்ட தொகுப்புரை இது.

Read Full Post »

>அறுபது வயதைத் தாண்டிய முது இளைஞர் அவர். ‘சலம் போகும் போது எரிகிறது. சலவாயிலிருந்து சற்றுக் கசிவும் இருக்கிறது’ என்று பயந்து கொண்டே கூறினார். கையுறை அணிந்து அவரது உறுப்பைப் பரிசோதித்த போது எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ‘கறந்து’ பார்த்தபோது கசிவு இருந்தது. ஆய்வுகூடப் பரிசோதனையில் அது கொனரியா என்ற பாலியல் நோய் என்பது தெளிவாகியது.

நல்ல காலம் எயிட்ஸ் இல்லை என்று கூறியதும் மலர்ந்தார். நான் கேட்காமலே அவர் நீண்ட வியாக்கியானம் தந்தார். தனது மனைவி சுகவீனமாக இருப்பதாகவும், அதனால் அவருடன் உடலுறவு கொள்ள முடிவதில்லை எனவும் இதனால் தான் வேறு இடங்களில்தான் பாலுறவு வைத்துக் கொள்வதாகவும் … இன்னும் பல பல. தான் அவ்வாறு செய்ததற்கான சாட்டுகள் தாம் அவை. வைத்தியர்களுக்கு அதற்கான காரணம் முக்கியமல்ல. ஆணுறைப் பாதுகாப்பு இல்லாமல் உறவு வைத்த தவறை எடுத்துக் கூறி ஆன சிகிச்சை அளித்தேன்.

இன்னொருவர் வெளிநாட்டவர். எது வித தயக்கமுமின்றித் தான் வெளியிடத்தில் உறவு வைத்த பின் சலவாயிலிருற்து கசிவும் கடுமையாக எரிவும் இருப்பதாகக் கூறினார். பார்த்தபோது கொனரியா என்பது தெரிந்தது. சொன்னனேன். ‘அப்படித்தான் தெரிகிறது. எதற்கும் முழமையாகப் பரிசோதித்து வேறு நோய்கள் இல்லை என்பதையும் நிச்சயப்படுத்துங்கள்’ என்று நீண்ட அனுபவப்பட்டவர் போலக் கேட்டுக் கொண்டார்.

இருவருமே ஆணுறை அணிந்தே உறவு வைத்ததாகக் கூறியபோதும் அவர்களின் கூற்றில் உறுதியிருக்கவில்லை. ‘கண்ட கண்டவர்களுடன் போகவில்லை.’ என்ற அர்த்தம் தொனிக்கப் பேசினார்கள். முதலாமவர் ‘பச்சை நோட்டுக்கள் பல கொடுத்த’ நல்ல இடம் என்றார். இரண்டாமவர் கீழைத்தேய நாடு ஒன்றின் பெயரைக் கூறி அந்நாட்டின் அழகான உயர் ரகப் பெண் என்றார்.அதிக பணம் கொடுத்தாலோ, உயர் ரகப் பெண் என எண்ணிப் போவதோ பாதுகாப்பு என எண்ணுவது தவறானது.

வெளி உறவுகள் எப்பொழுதுமே ஆபத்தானவை என்பதே உண்மை. அத்துடன் பெண்களுக்கு பெரும்பாலும் பாலியல் நோய்களின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் தங்களுக்கு நோய் இருப்பது தெரியாமலே தன்னோடு கூடுபவருக்குப் பரப்பிவிடுவார்கள். சில ஆண்களுக்கும் கூட கடுமையான அறிகுறிகள் இருப்பதில்லை. அவர்களும் பரப்புவார்கள். எனவே பாதுகாப்பற்ற உறவு என்பது ஆண் பெண் என எவருக்குமே ஆபத்தானது என்பதே உண்மை.

சிகிச்சை என்பது நோயுற்றவருக்கு மட்டுமல்ல, உறவு கொண்ட பங்காளிக்கும் சேர்த்தேயாகும். அவ்வாறு அளிக்கும்போதே மீண்டும் தொற்றுவதைத் தடுக்கலாம். அத்துடன் மற்றவர்களுக்கும் பரவக்கூடாது என்ற சமூக நோக்கும் இதில் அடங்குகிறது.

மேலே குறிப்பிட்டவர்களுக்கு வந்த நோயான கொனரியா சுலபமாகக் குணப்படுத்தக் கூடியது. ஆனால் எயிட்ஸ், சிபிலிஸ், கிளமிடியா, ஜெனிடல் வோரட்ஸ் என பலவகையான பாலியல் நோய்கள் உண்டு என்பதை மறக்க வேண்டாம். இவற்றில் சில கட்டுப்படுத்தக் கூடியவையே அன்றி முழுமையாகக் குணப்படுத்த முடியாதவை.

இவை எதுவுமே இன்று உயிர் கொல்லி நோய்கள் அல்ல, எயிட்ஸ் உட்பட. ஏனெனில் எயிட்சை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது என்பது உண்மையான போதும் அதன் தாக்கத்தை இன்று கட்டுப்படுத்த முடியும். கோடிக்கணக்கில் பணம் இருந்தால் எயிட்ஸ் நோயுடன் கூட நீண்ட காலம் வாழ முடிகிறது. இவ்வாறு சொல்வது தகாத உறவுகளுக்கான பாஸ்போட் அல்ல.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>நீர்வை பொன்னையன்: இலக்கியத்தடம் நூல் விமர்சன அரங்கு இன்று 20.01.2008 ஞாயிறு கொழும்பு வெள்ளவத்தை 58, தர்மாராமா வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் செல்வி திருச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தெளிவத்தை ஜோசப், ந.காண்டீபன் ஆகியோர் கருத்துரைகள் வழங்க, எம்.கே.முருகானந்தன் தொகுப்புரை நிகழ்த்தினார்.

உருவமா உள்ளடக்கமா முக்கியமானது என முன்பு நடந்த சர்ச்சையைக் குறிப்பிட்டு பேசிய செல்வி திருச்சந்திரன் “படைப்பு சிந்தனையைத் தூண்ட வேண்டும், மனத்தில் வடுவை ஏற்படுத்த வேண்டும். அது செலூக்கத்திற்கு தூண்டவேண்டும். அதுவே நல்ல இலக்கியத்திற்கான தன்மை” என்றார்.

தெளிவத்தை தனது கருத்துரையில் “நாம் எமது படைப்புகள் பற்றிப் பேசுவதில்லை. ஆய்வுகளும் செய்வதில்லை. ஆனால் தமிழகத்தில் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால்தான் எமது படைப்புகளையும் படைப்பாளிகளையும் வாசக மட்டத்தில் பரவலாகக் கொண்டு செல்ல முடியும். அத்தோடு படைப்புகள் பற்றி ஆய்வுகள், விவாதங்கள், சர்ச்சைகள் நடந்தால்தான் எமது இலக்கியம் மேல்நோக்கி நகர முடியும். தனது படைப்புகள் மூலம் வாசகர்களை அணுகுவதில் நீர்வை பொன்னையனுக்கு எவ்வித தயக்கமும் இருக்கவில்லை.” என்றார்.

காண்டீபன் தனது உரையில் “நீர்வை ஆழமான இறுக்கமான முற்போக்குவாதி. இது அவரது படைப்புகளில் துலக்கமாக வெளிப்பட்டது. ஆயினும் தமிழர் வாழ்வு போராட்ட காலத்தில் கால்பதித்த போது அவர்கள் பட்ட இன்னல்களையும். இனரீதியான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதையும் பதிவு செய்யத் தவறவில்லை. இந்த விதத்தில் ஏனைய பல முற்போக்கு எழுத்தாளர்களிடம் இருந்து இவர் மாறுபட்டார். ஆனால் அப்பொழுதும் கூட தனது முற்போக்கு கொள்கைகளைக் கைகழுவி விடாது பற்றுதியுடன் எழுதினார்” என்றார்.

மேலும் “ நடப்பியலை பொறிமுறையாக மீளாக்கம் செய்தல் சீர்வையால் நிராகரிக்கப்படுகிறது. பொறிமுறையான மீளுருவாக்கம் கலையின் இழப்புக்குப் பெயர்ச்சி கொள்ள வைக்கும்” எனவும், “இந்தப் பன்முகமாகிய தெறிப்பில் பிரசார விசை தாழ்தலும், கலைப்பண்பமைவு எழுதலுமாகிய ஊசல் விசைகளைக் காணக் கூடியதுமாக இருந்தது” எனப் பேராசிரியர் சபா.ஜெயராசா தனது கட்டுரையில் குறிப்பிட்டதைச் சுட்டி, அதற்கு ஆதரவாக நீர்வையின் படைப்புகளை உதாரணம் காட்டி தனது கருத்துரையைக் காண்டீபன் தொடர்ந்தார்.

எம்.கே.முருகானந்தன் தனது தொகுப்புரையில் “எந்த ஒரு படைப்பாளியின் ஒட்டுதொத்த படைப்புகளையும் ஒருங்கு சேர்த்துப் பார்த்து, அவரின் படைப்பாற்றலையும் சமூக அரசியல் பங்களிப்புகளையும் முழுமையாக விமர்சிக்கும் ‘படைப்பாளுமை விமர்சனக் கலை’ ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பில் இன்றுவரை கை கூடத நிலையில் நீர்வை பொன்னையனின் இலக்கிய பங்களிப்பு முழுவதையும் கூறுகூறாக பரிசீலிக்க முயல்கின்ற இந்நூல் முக்கியமான, முன்னோடி வரவாக அமைகிறது” என்றார்.

கே.விஜயன், இக்பால் ஆகியோர் சபையிலிருந்து சில குறிப்புரைகளைச் சொன்னார்கள்.

224 பக்கங்களைக் கொண்ட இந்நூல் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய பேரவையால் வெளியிடப்பட்டுள்ளது. விலை ருபா 300 மட்டுமே.

தொடர்புகளுக்கு:-
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய பேரவை11,
இராஜசிங்க வீதி,
வெள்ளவத்தை. கொழும்பு 06.
இலங்கை.

கட்டுரையாக்கம்:-எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>பீதி நோய் என்றால் என்ன?

இந்த நோயாளிகளில் எந்த ஒரு பிரச்சினையுமற்ற நிலையில் அதீத பய உணர்வுடன் நெஞ்சுப் படபடப்பு, அதிக வியர்வை, உடம்பு நடுக்கம், தலை சுற்றல், நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் போன்ற பல்வேறுபட்ட உடல் குணங்குறிகள் பொதுவாகத் தோன்றுகின்றன. இவை குறுகிய காலம் ( 10 நிமிடம் தொடக்கம் 30 நிமிடம் வரை ) நீடிக்க வல்லன.

பீதி நோய் யாரைப் பாதிக்கின்றது?

ஏறத்தாழ 1.5 -2 வீதமான மாணவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றன். பொதுவாக விடலைப் பருவத்தினரில் இந் நோய் அதிகம். முதன் முதலாக ஏற்படுகின்றபோதும் சிறுபரயத்திலும் முதுமையிலும் கூட இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

பெண்கள் ஆண்களைவிட இருமடங்கு (2:1) பாதிக்கப்படுகின்றனர்.

01. சத்திரசிகிச்சையின் பின்னர்
02. பாரிய விபத்தொன்றின் பின்னர்
03. பாரிய உடல் நோயின் பின்னர்
04. பிரசவத்தின் பின்னர்
05. கோப்;பி அதிகம் அருந்துவதால்.

பீதி நோய்க்கான காரணங்கள் யாவை?
இது எவ்வாறு ஏற்படுகின்றது?

பின்வருவன இந்நோயின் தோற்றத்துக்கு உதவுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

01. பாரம்பரியம்: பீதி நோய் பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்படக் கூடியது.

02. இரசாயன மாற்றங்கள் : மூளையிலுள்ள இரசாயனப் பதார்த்தகங்களில் ஏற்படும் மாறுதல்கள் இந்நோயை ஏற்படுத்துவதாக அறியப்பபட்டள்ளது.

03. எண்ணங்களும் உணர்வுகளும்: அடிப்படை எண்ணங்களும் அது தொடர்பான உணர்வுகளும் பீதித் தாக்கத்தை ஏற்படுத்துவதில் பங்கு வகிக்கின்றன. இதன் அடிப்படையில் சில சிகிச்சை முறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பீதி நோயால் பாதிக்ககப்பட்டவர்களில் காணப்படும் மற்றைய நோய்கள் யாவை?

பீதி நோய் தனித்துக் காணப்படினும் இது பின்வரும் உடல், உள நோய்களுடன் சேர்ந்தும் காணப்படுகின்றது.

01. தனி அச்ச நோய்பீதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களுக்கு முகங்கொடுக்கும் போது பீதித் தாக்கம் ஏற்படலாம் என்ற பயம் காணப்படுகின்றது. (உதாரணம்) பாலத்தைக் கடக்கும்போது, உயரமான இடமொன்றில் இருக்கும்போது.

02. சமூக அச்ச நோய்
இந்த அச்சத்துக்கும் அடிப் அடிப்படையாக பீதித் தாக்கம் பற்றிய பயமே காரணமாகின்றது.

03. மனச்சோர்வு (Depression)
ஏறத்தாழ அரைவாசிக்கும் மேலான பீதி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் அவர்களது வாழ்நாளில் எப்பொழுதாவது மனச்சோர்வு காணப்படுவது அறியப்பட்டுள்ளது.

04. எண்ண சூழல் நிர்ப்பந்த நோய் (Obsessional Compulasive Disorder)

05. போதைவஸ்து பாவனை 01. (Substance Abuse)
ஏறத்தாழ 30 வீதமான பீதி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மதுப்பாவனை காணப்படுகின்றது. ஏறத்தாழ 17 வீதமான நோயாளிகளில் மற்றைய போதை வஸ்துப் பாவனை (கஞ்சா, அபின், சிகரெட்) இருத்தல் அறியப்பட்டுள்ளது.

06. தற்கொலை சுபாவம் 01. (Suicidal Tendency)
அண்மைய ஆராய்ச்சி முடிவுகள் பீதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை முயற்சிகளை அதிகம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். மேற்கூறிய உளத்தாக்கங்களைவிட இடு கூர் வால்வு வெளித்தள்ளுகை (Mitral Value Prolapse) போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் குடல் நோய்களும் ( Irritable Bowel Syndrome) ஒருங்கே காணப்படலாம்.

பீதி நோய்க்கான சிசிச்சை அவசியமா?
ஆம் மீளவும் மீளவும் தோன்றும் பீதி நோய், இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பீதி நோய்க்கான சரியான சிகிச்சை கிடைக்கப் பெறாத விடத்து,

01. இந் நோயாளிகளில் மீளவும் மீளவும் பீதித் தாக்கம் ஏற்பட்டு அவர்களின் குடும்பம், நண்பர்கள், சகபாடிகளுடனான உறவு முறையில் விரிசல் ஏற்படலாம்.

02. வாழ்க்கை மிகவும் வரையறுக்கப்பட்ட ஒன்றாக மாறுகின்றது. பீதித் தாக்கம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் காரணமாக ஒவ்வொரு சந்தர்ப்பங்களாக இவர்கள் தவிர்க்க முற்படுகின்றனர். இந்த சந்தர்ப்பங்கள் அவர்களின் நாளாந்த வாழ்க்கைக்கு அவசியமானதாயுள்ளபோது அவர்கள் பலத்த சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. உதாரணமாய் கடைக்குச் சமான் வாங்க போகக் கூட முடியாது போகின்றது.

03. தங்கள் வேலைகளில் சரியாகக் கவனம் செலுத்த முடியாது போகின்றது. சில வேளைகளில் பதவி உயர்வுகளை மற்றும் புதிய வேலை அனுபவங்களை இவர்கள் தவிர்ப்பதால் இவர்களின் முன்னேற்றம் தடைப்படுகின்றது. ஒரு சிலர் தங்கள் வேலைகளை இராஜினாமா செய்யும் அவலநிலையும் ஏற்படுகின்றது.

04. இந்த பயத்தைத் தவிர்ப்பதற்கு போதைவஸ்துப் பாவனையை சிலர் நாடுகின்றனர். இது அவர்களில் பிரச்சினையைக் கூட்டுகின்றது.

05. ஒரு சிலரில் மனச்சோர்வு ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சிக்கும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றது.

பீதித் தாக்கம் ஏற்படுகையில் அதை எதிர்கொள்வது எவ்வாறு?

01. உங்கள் உணர்வுகளும் எண்ணங்களும் பயமூட்டுபவையாக இருக்கின்றபோதிலும் அவை எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்காதன என்பதை மனதில் ஞாபகப்படுத்துங்கள்.

02. நீங்கள் அனுபவிக்கும் இந்த உணர்வலைகள் நெருக்கீட்டுக்கான சாதாராண உடலியக்கத்தின் அதிகரித்த தன்மை எனப் புரிந்துகொள்ளுங்கள்.

03. இந்த உணர்வுகளுடன் எதிர்த்து நின்று அவற்றை இல்லாதொழிக்க முயற்சிச் செய்யாதீர்கள். நீங்கள் எந்தளவுக்கு இந்த உணர்வுகளுக்கு முகங்கொடுக்கின்றீர்களோ அந்தளவுக்கு அவை பலமிழக்கும்.

04. என்ன எனக்கு ஏற்படப்போகின்றது? என நினைப்பதை தவிருங்கள் இது உங்கள் பீதியை மேலும் அதிகரிக்கும்.

05. நிகழ்காலத்தில் இருப்பதற்கு முயற்சியுங்கள். என்ன நடக்கும் என்று நீங்கள் பயந்ததற்கு மாறாக என்ன நிகழ்கின்றது என அவதானியுங்கள்.

06. உங்கள் பயத்தின் அளவை 0-10 என்ற அளவிடைகளில் குறியுங்கள். பயமானது கூடிக்குறைவதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். மிதமிஞ்சிய பயம் ஒரு சில செக்கன்களுக்கே நீடிக்கின்றது. என்ற உண்மையை உணர்வீர்கள்.

07. என்ன நடக்கப் போகின்றதோ என்ற பயம் உங்களை ஆட்கொள்ளும் சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி நீங்கள் தொடர்ந்து சிந்திப்பதாக உணர்ந்தால் உங்கள் கவனத்தை வேறு விடயங்களில் திருப்புங்கள். உதாரணம் 100 இலிருந்து மூன்றை கழித்தல் 100-97-94-91 …..

08. உங்கள் பயம் பற்றிய சிந்தனை குறையும் போது பயத்தின் அளவு குறைவதை அவதானியுங்கள்.

09. மீளவும் பயம் ஏற்படும்போது அதனை எதிர்பார்த்து எண்ணுவதை விடுத்து பய உணர்வு நீங்குவதற்று அவகாசமளியுங்கள்.

10. உங்கள் முன்னேற்றத்தைக் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். இம் முறை சரியாக பயத்துக்கு முகங்கொடுக்கும்போது ஏற்பட்ட சந்தோஷத்தை நினைவுகூருங்கள்.

இவை சில பொதுவான வழிமுறைகள் எல்லா வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை.

பீதி நோய்க்கான சிகிச்சை முறைகள் யாவை?

பீதி நோய்க்கான சரியான சிகிச்சை கிடைக்கப் பெறுமிடத்து 70-90 வீதமான நோயாளிகள் பூரணமாகக் குணமடைகின்றனர்.
மற்றைய பதற்ற நோய்களைப் போலவே இதற்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.

01. அறிவாற்றல் மற்றும் நடத்தை மாற்று சிகிச்சை 01. ( Cognitive Behaviour Therapy) பீதி நோயால் பாதிக்கப்பட்டவர்களில்ன் எண்ணங்களை மாற்ற உதவுவதன் மூலம் இந்த தொடரும் விஷவட்டத்தை எதிர்கொள்ள உதவி அளிக்கப்படுகின்றது.

02. சாந்த வழிமுறைகள்இவை பதற்ற அறிகுறிகளைக் குறைக்க வல்லன என்று ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கும். பதற்ற அறிகுறிகள் குறைவடையும் போது பயமும் அச்சமும் குறைகின்றது.

03. மருந்துகள் ( Medication)பதற்றத்தின் அல்லது பீதியின் அளவு (Panic) மிதிஞ்சியதாக, பாரியதாக உள்ளபோது மருந்துகளை உட்கொள்ளுவது ஆரம்பத்தில் பயன்மிக்கது. ஆயினும் இதனைத் தொடர்ந்து அறிவாற்றல் நடத்தை மாற்றுச் சிகிச்சைக்கு நோயாளி உட்படும்போதே பெரியளவு பயன் கிடைக்கின்றது.

இக் கட்டுரை மனநோய் வைத்திய நிபுணர் T.கடம்பநாதன் அவர்களால் சனஹனய செய்தி மடல் (Oct/Nov/Dec 2007) இல் எழுதப்பட்டது. நன்றியுடன் பிரசுரிக்கிறேன்.

தொடர்புகளுக்கு:-

Dr. T.Gadambanathan for Sahanaya.
Web: http://www.sahanaya.org/
Mary-Anne ThompsonCommunicator/Coordinator
National Council for Mental Health – Sahanaya
96/20 Kitulwatte RoadBorella
Tel: 011 268 5960

Read Full Post »

>சிங்கராஜவனத்துள் நாம் சிறுபான்மை
எனினும், எமது வளைகள் எமக்கானவை …
இல்லை என்றது ராஜாங்கம்.

இது பிரசாந்தனின் புதிய நூலான ‘அந்தரத்து உலவுகின்ற சேதி’ யின் தலைப்புக் கவிதையின் ஆரம்ப வரிகள். இந்த வரிகள் எங்கள் எல்லோரது உள்ளத்திற்குள் சுடர்விட்டெரிந்து கொண்டிருக்கும் பொது உணர்வின் கலாபூர்வ வெளிப்பாடு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அக் கவிதையானது

‘சிங்கத்தை புணர்க்க
சிங்கத்தைப் பெற,
அன்றேல் நாமே சிங்கமாக மாற
நிர்ப்பந்திக்கப்பட்டோம்
மாட்டோம் ..’

எனத் தொடர்ந்து பேசும்போது நெஞ்சை நிமிர்த்தி பெருமையில் மிதந்து உட்கார்ந்தோம். ஆனால் அதன் இறுதி வரிகள் ஒரு சிறுகதைக்கு உரிய திடீர் வேகத் திருப்பத்தில் நுழையும்போது வாசகர்களான எம் மனம் ஒரு கணம் அதிர்கிறது. இலங்கை வாழ் தமிழர்களின் தன்மான உணர்வை, அவர்தம் இலட்சிய வேட்கையை மறுகேள்விக்கு உள்ளாக்கிச் சிந்திக்க வைக்கும் வரிகள் அவை. நூலைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.

இருந்தபோதும்,
‘ஒரு தோட்டாவில் இறந்தவன் கவிஞன்
கவிதையோ
ஒவ்வொரு தோட்டாவிலும் உயிர்த்தது’

போன்ற வரிகள் அடக்குமுறைக்குள் அமிழ்ந்து அழிந்துவிடாது எதிர்த்து நிற்கும் போராட்டக் குணாம்சத்தின் வெளிப்பாடு எனலாம்.

‘சுத்தியலை எடுத்தார்கள்
அதுகண்டு பயந்து
சுண்டங்காய் அளவான ஆதாரசுருதிச்
சத்தை நசித்தார்கள
சந்ததியை மறித்த
சந்தோசம்தனை நின்ற யாவருமே புசித்தார். ..’

என்று பாடும்போது இனவிருத்தியை கொடூரமாக நசித்தழித்து எமது இனத்தையே பூண்டோடு அழிக்கும் ஆவேசமும் இனவிரோதப் போக்கும் அவர்கள் மனத்தில் விதைக்கப்பட்டிருப்பதை நசித்தல், சந்தோசத்தினை புசித்தல் போன்ற சொற்களை தேர்ந்தெடுத்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்தும் சொல்லாட்சியையும், கவிநயத்தையும் ரசிக்கும்போது ஏக்கப் பெருமூச்சும் சேர்ந்தே வருகிறது.

இன்னொரு கவிதை
மகளை..
சின்ன மகளை
எம் செல்ல மகளை
அலற அலற இழுத்துப் போயினர் சிலர்’
என்று சொல்லும் போது அடாத்துப் பிரித்தலின் துயரிலும்,

மற்றொரு கவிதையில்
‘மூத்தவள் தோசை சுடுவதாயும்
ஏனைய பிஞ்சுகள்
வெறும் தட்டுக்களை ஏந்திக் காத்திருப்பதாயும் ..’
என்ற வரிகளைப் படிக்கும்போது போரில் நசுங்கிய பொருளாதாரத்தால் வயிற்றுப் பசியோடு ஏதிலிகளாக அலையும் சிறார்களின் துயர் தொற்றவும் எம் மனமும் ஆற்றாமையில் ஆழ்ந்து நெகிழ்கிறது.

‘தீராத விளையாட்டு’ என்ற கவிதை காற்பந்துப் போட்டியை முன்னிறுத்தியது. எழுதிய வரிகளிடையே எழுதாத எண்ணங்களாக ஊர்ந்து செல்லும் செய்திகளை உய்த்துணரும்போது ‘நாமும் அப்பாவி ரசிகர்’ களாக ஏய்கப்படும் கையறு நிலையினர் என்பது புரிகிறது. இவ்வாறு இன்னும் பல கவிதைகளின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆயினும் அனைத்துமே போரின் அவலத்தையும், நாம் படும் துயரையும் பாடும் அவலக் குரல்கள் அல்ல.

கணிகையில் மூழ்கி, காத்திருக்கும் மனைவியை புறக்கணிக்கும் ‘வேலைப் போதை’க் கணவர்கள் மீதான கவிஞனின் கோபம் இரண்டு கவிதைகளில் பொத்துக் கொண்டு வருகிறது.

‘நேற்றிரவு சாமம் விட்ட இடத்திலிருந்து
இன்றதிகாலை எழுந்து
மீண்டும் ஸ்பரித்தாய்
கணினிக் கணிகையை…’,
என்ற வரிகளிலும்

‘ஆயினும், ஒருநாள் வருவாய்,
கைபிடித்த கம்பிபியூட்டர் மவுசின்
காதல் சலித்த பின்னர் …’
என மற்றொரு கவிதையின் வரிகளிலும் எரிச்சலுடன் சீறுகிறது.

அலட்சியப்படுத்தல் மட்டுமின்றி குடும்ப வாழ்வில் அடக்கப்பட்டு வாய்மூடி நெஞ்சுக்கள் குமுறும் பெண்கள் மீதும் கவிஞனின் கரிசனை படிகிறது. மேற்கூறிய கவிதைகளிலும் இன்னும் சில கவிதைகளிலும் இப்பண்பைத் தரிசிக்கிறோம்.

எனக்காக
தன் குருதியை, சுக்கிலத்தை, வியர்வையைச் செலவு
செய்த
என் அப்பனிடம் கறந்த
அந்தச் சீதனப் பணத்தைப் புணர்நது நீ சீவிக்க முடியாதோ?’
என்பது பெண்வாயிலான கவிஞனின் சுடுதணல் வரிகள்.

முப்பத்து மூன்று சிர்மிகு கவிதைகளைக் கொண்ட கடுகு போன்ற சுவை செறிந்த குறுநூல் இது. ஆயினும் ஒற்றைச் சுவை அல்ல, கதம்பமான பலசுவை கொண்டவை.

‘நுரைப் பூக்கள் சூட்டி
நெய்தற் பெண்ணின் ஊடல் தணிவிக்க முயல்கிற
கடலோ
என்னைக் கவனியாது.
தலைக் கறுப்பைக் கண்டு ஒழுங்கையுள் மறையும்
நண்பன்’
எனப் பாடும்போது, இலக்கணமும் பழந்தமிழ் இலக்கியமும் அறக்கற்று, இற்றைத் தமிழில் மோகங் கொண்டு கவிபாடும் இந்த நவயுக இளைஞன் தெளிக்கும் வார்த்தைக் கோலங்களை ஆழ்ந்து இரசிக்க முடிகிறது.

உண்மையில் இக்கவிதைகளின் அடி நாதம் எது?

“பிரசாந்தனின் கவிதைகளும் எங்கள் பலரது கவிதைகளைப் போலவே சமகால மனித வாழ்வையும், வீரத்தையும், விட்டு விடுதலையாகும் நாயகிகளையும், காதலையும், மக்கள் எழுச்சியையும், அவர்தம் கனவுகளையும் பற்றிப் படர்ந்து நிமிர்கின்றன” என்று கூறுகிறார் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். மேலும், அவரது அணிந்துரையானது “அவரை ஒரு முக்கிய கவிஞராக இனங்காட்டும் பகுதிகளை …” தொட்டுச் செல்வதுடன் நின்று விடாது, விஞ்ஞானப் பாடங்களில் உச்ச புள்ளிகளைப் பெற்ற மாணவன் அதைத் துறந்து தமிழ் மீது காதல் கொண்டு தமிழ் படித்து தமிழ்க் கல்வியாளனாக, கவிஞனாக, கம்ம இராமாயணத்தை கைக்குள் வளைத்தவனாக வளர்ந்த கதையையும் சுவார்ஸமாகத் தொட்டுச் செல்கிறது. “மனசின் மொழி கவிதையின் ஊற்றுக்கண்ணைத் திறக்கும்” என்ற அவதானத்தையும் தூவிவிட்டே ஜெயபாலன் அப்பால் நகர்கிறார்.

‘விளிம்பு’ வின் செய்நேர்தியுடன் கூடிய சிறப்பான வெளியீடு. பூபாலசிங்கம் புத்தகசாலையில் கிடைக்கும். நேற்று 13ம் திகதி அதன் வெளியீட்டு விழா நடைபெற்றது. கூடவே ‘மஹாகவியியல்’ என்ற நுர்லும் கூட வெளியிடப்பட்டது.

‘மஹாகவியியல்’ என்பது ஒரு தொகுப்பு நூல். எமது தேசத்தின் கவிதையின் மரபிற்கும், அதன் செழிப்பான வளர்ச்சிக்கும் உறுதியான அத்திபாரம் இட்ட ‘பிதாமகர்’ என்று போற்றத்தக்க மஹாகவி உருத்திரமூர்த்தி பற்றிய விமர்சனங்களின் தொகுப்பு நூல். ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ என்ற அரிய நூலைத் தொகுத்துத் தந்த அதே பிரசாந்தன் இந்த நூலையும் தொகுத்துத் தருகிறார்.

மஹாகவி ஒரு அறிமுகம் என்ற எம்.ஏ.நுஃமானின் கட்டுரையைத் தொடர்ந்து சண்முகம் சிவலிங்கம், நா.சுப்பிரமணியன், இ.முருகையன், எஸ்.பொன்னுத்துரை, சாலை இளந்திரையன், மு.பொன்னம்பலம், மயிலங்கூடலூர் பி;.நடராஜன், சிறி.பிரசாந்தன் ஆகியோரது கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன.

தமிழ்க் கவிதைப் பரப்பிலும் உலகக் கவிதைப் பரப்பிலும் மஹாகவிக்கான இடம், குறும்பா, சாதாரண மனிதனின் சரித்திரம் போன்ற நீள்கவிதைகள் பற்றிய பார்வைகள் உள்ளடங்குகின்றன. அத்துடன் ‘கம்பரும் மஹாகவியும்’, ‘மஹாகவி, நீலாவண்ணன், முருகையன்’, ‘கம்பரும் மஹாகவியும்’ போன்ற ஒப்பீட்டு விமர்சனங்களும் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது. ஏனையவை முன் வெளிவந்த ஆக்கங்களாக இருக்க ‘ஈழத்து நவீன கவிஞர் மூவர்- மஹாகவி, நீலாவண்ணன், முருகையன் கவிதைகள் குறித்த ஆய்வு’ பிரசாந்தனின் புத்தாக்கமாக அமைகிறது.

பின் அட்டையில் முதறிஞர் சிற்பி சிவசரவணபவன் அவர்களது சிறுகுறிப்பு இடம்பெறுகிறது. அதில் ‘ நம்நாட்டுக் கவிஞனின் பெருமையை நாமே நமக்குள் பேசிக் கொண்டிருப்பதுடன் அமையாமல், அவனுடைய திறமான புலமையை வெளிநாட்டார் வணக்கம் செய்வதற்கு வாய்ப்பாக ‘மஹாகவியியல்’ நூலைத் தொகுத்துக் காலத்தின் தேவை ஒன்றை நிறைவேற்றியுள்ளார்’ எனப் போற்றுகிறார்.

இந்த நூலின் வரவு இரு வழிகளில் மிக முக்கியதானது. முதலாவதாக “பின்தொடரத்தக்க கவிதைப் புதுமைகள் படைத்துக் காட்டிய ஒரு கவிஞனது வாழ்வு நிறைவடைந்து கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் கழிந்துள்ள” போதும் இன்றுவரை அக்கவிஞன் குறித்து ஒரு ஆய்வு நூலோ, கட்டுரைத் தொகுப்போ வெளிவராத நிலையில் இத் தொகுப்பானது காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறது எனலாம்.

இரண்டாவதாக இத்தொகுப்பு ஈழத்து விமர்சன மரபில் ஒரு புதிய அத்தியாயத்தையும் திறந்து வைக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். அதாவது ஒரு படைப்பாளியின் இலக்கியப் பங்களிப்பு முழுவதையும் ஆராய்ந்து அவரது படைப்பாளுமையை வெளிக் கொணரும் விமர்சன முறை ஈழத்தில் காலூண்டாத நிலையில் இந்நூற் தொகுப்பு வரவேற்கத்தக்க முன்முயற்சியாகிறது. இந் நூல் பூபாலசிங்கம் புத்தகசாலையின் பெறுமதிமிக்க வெளியீடுகளில் ஒன்று.

பிரசாந்தன் அறிமுகம் தேவையற்ற இளம் இலக்கியவாதி. கம்பன் புகழ் பாடி கலைப் பணியாற்றியதால் இலங்கைத் தமிழர்களிடையே மட்டுமின்றி தமிழகத்தின் பட்டி தொட்டியிலும், உலகெங்கும் பிரபலமானவர். பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், ஜெயவர்தனபுரப் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றியதால் அறிவுலகிலும் ஜொலிப்பவர். அகில இலங்கைக் கம்பன் கழக அமைப்பாளரான இவர் இப்பொழுது ஜெயவர்தனபுரப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

மீண்டும் ஒரு முறை கவிதை நூலோடும் தொகுப்பு நூலோடும் வரவு சொல்லி நிற்கிறார்.

எமது இலக்கியப் பராம்பரியத்துள் நாம் கடந்து வந்த சுவடுகளைத் தேடும் தொகுப்பு நூலும், புதிய சுவடுகளைப் பதித்து முன்நகரும் கவிதை நூலும் ஆகிய இவை இரண்டும் நிச்சயம் படித்துச் சுவைக்கவும் பயன் பெறவும் வேண்டியவை.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>”கனநாளா இருமல். அடிக்கடி வந்து வந்து போகும். கன பேரட்டை மருந்து எடுத்தனான். மாறுற பாடாக் காணயில்லை.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சைத் தடவினார் அந்த தொந்தி பருத்த மனிதர்.

“நெஞ்சிலை என்ன?” எனக் கேட்டேன். “ஒனறுமில்லை. நெஞ்சரிப்பு. அடிக்கடி வாறாது. இண்டைக்கு கொஞ்சம் கூடச் சாப்பிட்டிட்டன். அது தான் …” என இழுத்தார். எனக்கு மின்லடித்தது போல அவரது இருமலுக்கான காரணம் வெளித்தது.

நெஞ்சரிப்பு என்பது ஒரு இடைஞ்சல் தரும் உணர்வு. எரிவு போலவோ, வலிப்பது போலவோ, சூடு போன்றது போலவோ ஆனதொரு உணர்வு. பொதுவாக மேல் வயிற்றில் ஆரம்பித்து நடு நெஞ்சுக்கு வருவது போல இருக்கும். தொண்டை வரை பரவுவதும் உண்டு. சில வேளைகளில் வாய்க்குள் புளித்துக் கொண்டு வருவது போலவும் செய்யும். செமியாத்தன்மை, சாப்பாடு மேலெழும்புவது, புளித்துக் கொண்டு வருதல், என்றெல்லாம் நாம் சொல்லுவதை ஆங்கிலத்தில் Heart Burn என்பார்கள்.

எப்படி அழைத்தாலும் இப் பிரச்சனைக்கும் இருதயம், மாரடைப்பு போன்ற பயமுறுத்தும் நோய்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஆயினும் மிக அரிதாக மாரடைப்பானது நெஞ்சில் எரிவது போல வெளிப்படுவதுண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

பெரும்பாலும் நெஞ்செரிப்பானது உணவிற்குப் பின் வருவதை நீங்களும் அனுபவித்திருக்கலாம். உணவின் பின் இரண்டு மணி நேரம்வரை கூட நீடிக்கலாம். குனிவதாலும் படுப்பதாலும் இது திடீரென ஏற்படவும் வாய்ப்புண்டு. அவ்வாறான தருணங்களில் எழுந்திருந்தால், அல்லது எழுந்து நின்றால் அதிலிருந்து நீங்கள் விரைவில் விடுபட முடியும். அடிக்கடி நெஞ்செரிப்பு வருபவர்கள் சாப்பிட்ட உடன் படுக்கைக்குப் போகக் கூடாது. சாப்பிட்டு இரண்டு மணிநேரமாவது கழிந்த பின்னர்தான் படுக்கைக்குப் போக வேண்டும்.

இரைப்பைக்குள் வழமையாக இருக்கும் அமிலம் அல்லது அத்துடன சேர்ந்து குடலில் உள்ள உணவுகளும் மேலெழுந்து நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவுக் குழாயின் இன்னொரு பகுதியான களத்திற்குள் (Oesophagus) ஊடுருவுவதாலேயே நெஞ்சரிப்பு ஏற்படுகிறது. இரைப்பைக்குள் இருப்பவை மேலெழுந்து நெஞ்சுப் பகுதிக்கு வருவதைத் தடுக்கும் ‘வால்வ்’ (Lower oesophageal spincter) சரியாகச் செயற்படாததாலேயே இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதனால்தான் கருப்பையில் உள்ள குழந்தையானது இரைப்பையை அழுத்துவதால் கர்ப்பமாயிருக்கும் காலங்களில் தாய்க்கு அடிக்கடி நெஞ்செரிப்பு வருவதைக் காண்கிறோம்.

பொரித்த ஊணவுகள், கொழுப்புப் பண்டங்கள், சொக்கிளேட், பெப்பர்மின்ட், கோப்பி, மென் பானங்கள், மது போன்றவை நெஞ்செரிவைத் தூண்டும். நெஞ்செரிவு உள்ளவர்களுக்கு புளிக்கும் தன்மை உள்ள தோடம்பழம், தேசி, அன்னாசி போன்ற பழவகைகளும் கூடாது. உள்ளி, வெங்காயம், தக்காளி, மற்றும் காரமான உணவு வகைகளும் நோயைத் தீவிரமாக்கலாம்.

புகைத்தலும், புகையிலையும், அத்துடன் கூடவே வலிநிவாரணி மாத்திரைகள், இரும்புச் சத்து மாத்திரைகள், அலர்ஜிகளுக்கு எதிரான Antihistamine மருந்துகளும் நெஞ்செரிப்பின் தீவிரத்தை அதிகரிக்கும். அதேபோல அதீத எடையுள்ளவர்களின் வயிற்றின் கொழுப்பும், இறுக்கமான ஆடைகளும் இரைப்பையை அழுத்துவதால் அமிலத்தை மேலெழச் செய்து நெஞ்செரிப்பபை ஏற்படுத்தலாம்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் மலத்தை வெளியேற்றுவதற்காக முக்குவதால் மூலநோய் மாத்திரமின்றி நெஞ்செரிவும் ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்றறையில் இருக்கும் இரைப்பையின் பகுதியாவது அங்கிருந்து இடைமென்தட்டு (Diaphragm) வழியாக நெஞ்சறைக்குள் செல்லக் கூடும். ‘ஹையற்றஸ் ஹேர்னியா’ எனும் இது வெளிப்படையாக பார்க்க முடியாத ஒரு நோயாகும். இதுவும் நெஞ்செரிப்பை ஏற்படுத்துகிறது.

உங்களுக்கு மனஅழுத்தமும் இருந்தால் கூட நெஞ்செரிப்பு ஏற்படுத்துகிறது. ஏன் என்று கேட்கிறீர்களா? மனஅழுத்தம் இரைப்பையில் அமிலம் சுரப்பதை அதிகரிக்கிறது. அத்துடன் இரைப்பையின் செயற்பாட்டை ஆறுதல் (Slow)படுத்துகிறது. இவை இரண்டுமே நெஞ்செரிப்பை ஏற்படுத்துகினறன.

நெஞ்செரிவு பொதுவாக ஆபத்தற்ற அறிகுறியாகும். ஆயினும் கடுமையான சத்தி, உடல் மெலிதல், பசிக்குறைவு, வாந்தியோடு இரத்தம் போதல், மலம் தார்போல கருமையாகப் போதல் போன்ற அறிகுறிகளும் கூட இருந்தால் அலட்சியம் பண்ண வேண்டாம். ஏனெனில் அவை குடற்புண், புற்றுநோய் போன்றவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கக் கூடும்.

வியர்வை, கடுமையான களைப்பு, மூச்சிளைப்பு ஆகியவற்றுடன் நெஞ்செரிவு வந்து அந்த வலியானது கழுத்து, தாடை, அல்லது கைகளுக்குப் பரவினால் அது மாரடைப்பாக இருக்கலாம் என்பதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய செய்தியாகும்.

உங்களுக்கு நெஞ்செரிவு இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
அ. அதிக உடையுள்ளவராயின் உணவு முறை மாற்றங்களாலும், உடற்பயிற்சியாலும் உங்கள் எடையைக் கட்டுப்பாற்றிற்குள் கொண்டுவர முயலுங்கள்.
ஆ. வயிற்றை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணிய வேண்டாம்.
இ. சாப்பிட்டு சில மணிநேரங்கள் செல்லும் வரை குனிந்து வேலை செய்ய வேண்டாம். சாப்பிட்டு இரண்டு மணி நேரமாவது கழிந்த பின்னர்தான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
ஈ. நெஞ்செரிப்பை ஏற்படுத்தக் கூடிய உணவு வகைகளைத் தவிருங்கள்.
உ. மது, புகையிலை போடுதல், புகைத்தல் ஆகியவற்றை நிறுத்துங்கள்.
ஊ. மனஅழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.

நீண்டநாள் இருமல் இருந்தவருக்கும் நெஞ்செரிப்பிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? நெஞ்செரிப்பின் போது இரப்பையிலிருந்து மேலெழும் அமிலமானது சுவாசத் தொகுதியினுள் சிந்திப் பாதிப்பதுண்டு. இது அங்கு அரிப்பை உண்டாக்கி ஆஸ்த்மா, இருமல் போன்றவையை ஏற்படுத்தலாம். அத்தகையவர்களுக்கு சளிக்கான மருந்துடன், அமிலம் சுரப்பதையும், அது மேலெழுவதையும் தடுப்பதற்கான மருந்துகளையம் சேர்த்துக் கொடுத்தால்தான் இருமல் குணமடையும். அதைத்தான் செய்தோம்.அவரது எடை அதிகமாததால் அதையும் குறைக்கும் படியும் ஆலோசனை கூறப்பட்து.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்திய நிபுணர்

Read Full Post »

>ஆசைப்பட்ட அனைவருக்கும் அனைத்துமே கிடைத்துவிடுவதில்லையே!. குழந்தை இல்லாதவர்களுக்கும் இது பொருந்தும். அவர்களின் ஆசை பலிக்காததற்குக் காரணங்கள் பலவாகலாம்.

உலகெங்கும் குழந்தை இல்லாதவர்கள தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இங்கிலாந்தில் ஆறு தம்பதிகளில் ஒருவர் என்ற விகிதத்தில் குழந்தையின்மை இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதும் வைத்தியத் துறையின் அளப்பரிய முன்னேற்றம் காரணமாக டெஸ்ட் ரியூப்பில் குழந்தையை உருவாக்கக் கூடிய முறை அறிமுகமானதால் குழந்தை இல்லாதவர்களிடையே பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. டெஸ்ட் ரியூப் குழந்தை என்பது உண்மையில் ஒரு வகை செயற்கைச் சினையூட்டல் முறையாகும்.

அதாவது உடலுக்கு வெளியே ஆய்வு கூடத்தில் பெண்ணின் முட்டையானது சினையூட்டப்படும். அதனால் உண்டாகும் கருவை பின் கருப்பையில் பதித்து, இயற்கையாக வளரச் செய்வர். செயற்கை என்பது முகமறியா வேறொருவரின் விந்தைக் கொண்டு சினையூட்டல் எனப் பொருள்படாது. கணவனின் விந்தைக் கொண்டே பெரும்பாலும் சினைப்படுத்தப்படுகிறது. அவரின் லிகிதத்தில் விந்தணுக்கள் இல்லாவிட்டாலும் கூட அவரின் விதையிலிருந்தே விந்தணுக்களை வெளியே பிரித்து எடுத்து சினையூட்டப்படும் வைத்திய வசதி இப்பொழுது உண்டு. அதுவும் முடியாத கட்டத்தில் மட்டுமே வேறு ஒருவரின் விந்தைத் தானமாகப் பெறவேண்டிய தேவை ஏற்படலாம்.

இருந்தபோதும் In Vitro Fertilisation- IVF எனப்படும் டெஸ்ட் ரியூப் குழந்தையானது வேண்டுவோர் எல்லோருக்கும் சுலபமாகக் கிட்டிவிடுவதில்லை. இதற்கும் காரணங்கள் பல.

முதலாவதாக பெண் போதிய அளவு முட்டையைத் தனது சூலகத்திலிருந்து உற்பத்தி செய்வதைத் தூண்டுவதற்கான மருந்துகள் கொடுக்க வேண்டும். இம் மருந்துகள் மிக விலை உயர்ந்தவை. இங்கிலாந்தில் மருந்துகளுக்கு கிட்டத்தட்ட 1500 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் வரை செலவாகும். அத்துடன் தொடர்ந்து 5 வாரங்கள் வரை மருந்து உட்கொள்ள வேண்டி நேரிடும். எனவே பணத்துடன் காலமும் செலவாகும்.

இச்சிகிச்சை முறையின் போது மருந்து கொடுத்த பின் உற்பத்தியாகும் முட்டைகளை அல்ரா சவுண்ட் துணையுடன் வெளியே எடுத்து கணவரின் அல்லது கொடையாளியின் விந்துவவைக் கொண்டு கருவூட்டுவர்.

இப்பொழுது In Vitro Maturation- IVM என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த முறை விரைவானது மலிவானது. இந்த முறை மூலம் ஆணும் பெண்ணுமான இரட்டைக் குழந்தைகள் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி Radcliffe Infirmary in Oxford ல் பிறந்திருக்கினறன.

இது எப்படியான முறை என்று கேட்கிறீர்களா?

கடுமையான விலை கூடிய மருந்துகள் உபயோகிக்கப்படவில்லை. மருந்துகள் உபயோகித்து பெண்ணின் சூலகத்திலிருந்து முட்டைகள் வெளிவர நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை.

இது எப்படி என்கிறீர்களா?

வளர்ச்சி பூர்த்தியடையாத முட்டைகளை சூலகத்திலிருந்து எடுத்து மருத்துவ ஆய்வுகூடத்தில் செயற்கை ஊடகத்தில் 24 முதல் 48 மணி நேரம் வரை வளர்ச்சியுறச் செய்தபின் ஆணின் விந்துடன் சினையூட்டி இறுதியாக கருப்பையில் இடுவதுதான் இம்முறையாகும். ஆயினும், தற்பொழுது இம்முறை பொலிசிஸ்டிக் ஓவறி (Polycystic ovaries) என்ற பிரச்சனை உள்ள பெண்களுக்கே செய்யப்படுகிறது. காரணம் என்னவென்றால் அத்தகைய பெண்களின் சூலகத்தில் மாதாந்தம் 16 முட்டைகள் வரை உண்டாகின்றன. ஆனால், ஏனைய சாதாரண பெண்களில் மாதாந்தம் 4 முட்டைகள் வரையே உண்டாகின்றன.

ஆயினும், இம்முறையில் கூடிய அனுபவம் பெற்றதும் ஏனைய பெண்களுக்கும் விஸ்தரிக்க உள்ளார்கள். ஏற்கனவே, 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த முறை மூலம் உலகளாவிய ரீதியில் பிறந்துள்ளார்கள் என்பது நம்பிக்கை ஊட்டுகிறது.

செயற்கைச் சினையூட்டல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் ஆண் குழந்தையா பெண் குழந்தையா வேண்டும் என்பதையும் நீங்களே தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். அதுமட்டுமல்ல குழந்தையின் நிறம், அதன் முடி சுருட்டையாக இருக்க வேண்டுமா வேண்டாமா போன்ற தேர்வுகளும் கூட உங்களுக்கே இருக்கும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »