>நண்டின் காலை ஒடிக்காதே
நாயைக் கல்லா லடிக்காதே
வண்டைப் பிடித்து வருத்தாதே
வாயில் பிராணியை வதைக்காதே
எத்துணை இனிமையான பாடல்! எளிய நடையும், ஓசை நயமும் கொண்ட அற்புதமான குழந்தைப் பாடல். அப் பாடலைப் படிக்கும் போது வாய்விட்டுப் பாட வேண்டும் என உங்கள் நா குறுகுறுக்கவில்லையா? கவிஞர் யாழ்ப்பாணன் எழுதிய இப் பாடல் நாம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களாக இருந்த காலத்தில் எமது தமிழ்ப் பாட நூலாகிய பாலபாடத்தில் இடம் பெற்றிருந்தது.
கால ஓட்டத்தால் மறக்கடிக்கப்பட்ட இந்தப் பாடலைப் படிக்கும் வாய்ப்புப் கிட்டியபோது எனது மனம் களியுவகை கொண்டு சிறகடித்துப் பறந்தது. மாணவப் பருவ நினைவுகளில் கால் பதித்து தோகை விரித்தாடியது. செ.சுதர்ஸன் அவர்களால் தொகுப்பும் பதிப்பும் செய்யப்பட்ட ‘மறுமலர்ச்சிக் கவிதைகள்’ என்ற நூலிலேயே இப்பொழுது இக் கவிதையைப் படிக்கக் கூடியது.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்துடன் பரிச்சியம் உள்ள எவருக்கும் நிச்சயம் மறுமலர்ச்சிக் காலம் பற்றித் தெரிந்திருக்கும். கற்பனை உலகிலும், கடுமையான தமிழ் நடையிலும் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஈழத்து இலக்கியத்தை மயக்கம் தெளிவித்து யதார்த்தத்திற்கு கொண்டுவரச் செய்யப்பட்ட முதல் கூட்டு முயற்சிதான் மறுமலர்ச்சி இயக்கமாகும். எமது மக்களின் மலர்ச்சிக்காக, அவர்களது வாழ்வையும், அவர்களது பிரச்சனைகளையும் சிக்கல்களையும் அவர்களது மொழியிலேயே சொல்வதற்கு எடுத்த முயற்சி அதுவாகும்
மறுமலர்ச்சி இயக்கம்.பற்றியும், சஞ்சிகை பற்றியும், அதில் வந்த சிறுகதைகள் பற்றியும் பரவலாகத் தெரிந்திருந்த போதும், அதில் வந்த கவிதைகள் இதுவரை கவனத்தில் எடுக்கப்படவில்லை. அவை கைக்கு எட்டுவாற்கு அரியனவாக இருந்ததே முக்கிய காரணமாகும். செங்கைஆழியான் ஏலவே மறுமலர்ச்சிச் சிறுகதைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்ந்த செல்லத்துரை சுதர்ஸனின் இந் நூல் வெளியீட்டு முயற்சி மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். பெறுதற்கு அரிதான (1946-48 ல் வெளியான) மறுமலர்ச்சி இதழ்களை யாழ் சென்று தேடிக்கண்டு பிடித்து, காலத்தால் சிதைவுறும் தறுவாயிலிருந்த தாள்களைப் பொறுமையுடனும், மிகுந்த அவதானத்துடனும் ஆராய்ந்து, அவற்றில் வெளியான கவிதைகளைத் தன் கையாலேயே படி எடுத்து நூல் ஆக்கிய அவரது முயற்சியானது மிகுந்து பொறுமையும், விடாமுயற்சியும், கால அவகாசமும் வேண்டி நிற்கதாகும். தனது நாளாந்தப் பணிகளிடையே இந்த ஆக்க பூர்வமான பணியைச் செய்த அவருக்கு ஈழத் தமிழ் உலகம் கடமைக்கட்டுள்ளது.
மறுமலர்ச்சி சஞ்சிகை 1946 பங்குனி முதல் 1948 ஜப்பசி வரையாக 23 இதழ்கள் வெளியானதாக அறிகிறோம். ‘மறுமலர்ச்சி இதழில் 51 கவிதைகளும் ஒரு மொழிபெயர்ப்புக் காவியமும் வெளியாகின’ என நூலாசிரியர் தனது அறிமுக உரையில் குறிப்பிடுகிறார். ‘க.சோமசுந்தரப் புலவர், சுவாமி விபுலானந்த அடிகள், மஹாகவி (து.உருத்தரமூர்த்தி), யாழ்ப்பாணன (வே.சிவக்கொழுந்து), சோ.நடராஜன், நாவற்குழியூர் நடராஜன், சாரதா (க.இ.சரவணமுத்து), வரதர் (தி;.ச.வரதராஜன்), கலைவாணன், கதிரேசன், வ.இ., சோ.தியாகராஜன், காவலூர்க் கைலாசன், கோட்டாறு.எஸ்.ஆதிமூலப் பெருமாள், பரமேஸ், கவிஞன், கோட்டாறு தே.ப.பெருமாள், கு.பெரியதம்பி, தில்லைச்சிவன், வித்துவான் வேந்தனார், நடனம் ஆகிய கவிஞர்களின் கவிதைகளே மறுமலர்ச்சி இதழ்களில் வெளியாகின’ என மேலும் விபரமாகக் கூறுகிறார்.
இன்னும் சற்று கூர்மையாகப் பார்க்கும் போது நாவற்குழியூர் நடராஜன் 10 கவிதைகளையும், சாரதா 9 கவிதைகளையும், யாழ்ப்பாணன் 7 கவிதைகளையும், மஹாகவி 4 கவிதைகளையும் எழுதியுள்ளார்கள். ஏனையோர் தலா ஒன்று அல்லது இரண்டு கவிதைகளையே எழுதியுள்ளனர்.
மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் பொழுது போக்கிற்காகவோ, புகழுக்காகவோ எழுதியவர்கள் அல்ல. இலட்சியத்தோடு களம் இறங்கியவர்கள். ‘இனி கற்பனைகள், ஆழமான தத்துவந்கள்- இவை எல்லாம் எளிய நடையிலே, புதிய வசன இலக்கியங்களிலே சிருஷ்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்…. பழமையைப் புதுப்பித்தலாலும், பிறநாட்டு நல்ல இலக்கியங்களைத் தமிழுக்கு கொண்டு வருவதாலும், புதிதாக இலக்கியங்களைச் சிருஷ்டிப்பதாலும், தமிழ் மொழிக்கு புத்துயிர் அளிக்க விரும்புகிறோம்’ என்ற கொள்கைப் பிரகடனத்தோடு படைப்பில் இறங்கியவர்களாகக் காண்கிறோம்.
இக் கூற்றின் அடிப்படையில் அவர்களது கவிதைகளைப் படிக்கும்போது, ஈழத்துக் கவிதை மரபில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் எனப் பிரஞ்ஞை பூர்வமாக முயன்றிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. பாரதியை தமது லட்சியக் கவிஞனாகக் கொண்ட இவர்கள் தமது கவிதைகளையும் இலகுவான தமிழ் நடையில் ஆக்க முயன்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஆயினும் இதற்கு மேலாகச் சில கவிதைகள் பாரதியின் புகழ் பெற்ற கவிதைகளை ஞாபகப்படுத்துமாறு புனையப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கவே செய்கிறது. உதாரணமாக காவலூர்க் கைலாசனின் புது யுகத்தில்… என்ற கவிதையையும், வேந்தனாரின் ஆட்டை வெட்டும்… என்ற கவிதையையும் குறிப்படலாம்.
பேச்சுத் தமிழை சிறுகதை இலக்கியத்தில் கொண்டு வந்தது போலவே கவிதைகளிலும் இவர்களில் சிலர் கொண்டு வந்திருப்பது இவர்களது மற்றுமொரு சிறப்பம்சம் எனலாம்.
‘கூச்சலிடும் ரேடியோக் கூக்குரல்கள்…’
‘பட்டணத்திலேயுள்ள பளபளப்பெல்லாம் …’,
கனபேராய் திரண்டெழுந்தால்…’,
‘மோட்டுப் பயலொருவன்…’,
‘சோச்சி அம்மா பாச்சி…’,
‘சும்மா சும்மா என்ரை மனசு சுத்தித் திரியுது…’,
‘குருவிக் கூண்டைச் சருவாதே…’
போன்ற சில வரிகளை மட்டும் இங்கு சுட்டிக் காட்டுவது போதுமாயிருக்கும்.
கவிதையின் உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையில் சமூக மறுமலர்ச்சி நோக்கிய சீர்திருத்தக் கருத்துக்கள் பெருமளவு எடுத்தாளப்படாமை முக்கிய குறைபாடாகத் தெரிகிறது. மறுமலர்ச்சிக் கால சிறுகதைகள் சமூக மாற்றங்களையும், சீரிதிருத்தங்களையும் அவாவி நின்ற நிலையில் கவிதைகளில் ஏன் அவை முனைப்புறவில்லை என்பது சிந்தனைக்குரியது.
ஆயினும் கோயில்களில் மிருக பலிக்கு எதிரான இரண்டு கவிதைகளும், உழைக்கும் தொழிலாளர்கள் கட்டுக்களை உடைத்தெறியத் திரண்டெழ வேண்டும் என வலியுறுத்தும் கவிதை ஒன்றும் இடம் பெற்றிருப்பதானது அவர்களில் சிலராயினும் புதிய உலகைக் காணும் வேட்கை கொண்டவராய் இருந்தமைக்குச் சான்றாகிறது.
இந்நூலின் முக்கிய அம்சமாகக் கூறக் கூடியது தொகுப்பாசிரியரின் அறிமுக உரையாகும். மறுமலர்ச்சிக் காலம் பற்றியும், அது உருவானதற்கான காலத்திக் தேவை பற்றியும், அதன் அங்கத்தவர்கள், அவர்களின் ஒன்று கூடல், கையெழுத்துச் சஞ்சிகை முதலாக மறுமலர்ச்சிக் காலம் பற்றிய ஒரு பூரண பதிவைத் தர முயன்றுள்ளார். மிகுந்த தேடலுடனும், நுணுகிய ஆய்வுக் கண்ணோட்டத்திலும் இது எழுதப்பட்டுள்ளது. இவ்வுரை நூலின் சிகரம் போல அமைந்துள்ளது என்று கூறினால் மிகையாகாது.
‘… இது ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகும். அக் காலகட்டத்துக் கவிதைப் போக்கை மதிப்பிடுவதற்கும், ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் மறுமலர்ச்சியின் பங்கை நிர்ணயிப்பதற்கும் இந்நூல் நமக்கு வாய்ப்பாக அமைகிறது’ என பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் கூறியது மிகவும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் என்பதில் சந்தேகம் இல்லை.
எமது நவீன கவிதை இலக்கியத்தின் ஆரம்பத் தடங்களை தேடும் ஒரு முயற்சி என இந் நூலின் வரவைக் கூறலாம். பதிப்பாசிரியரான சுதர்ஸன் தனது சொந்தச் செலவில் இதை வெளியிட்டுள்ளார். ஒரு பல்கலைக்கழகம் அல்லது விநியோன வளம் உள்ள நூல் வெளியீட்டாளர்கள் ஆற்ற முயற்சியை தனியொருவனாக செய்த சுதர்ஸனுக்கு இலக்கிய ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் கை கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
தொடர்புகளுக்கு:-
செல்லத்துரை சுதர்ஸன்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
email:Suda3379@yahoo.com”
எம்.கே.முருகானந்தன்.
நன்றி:-
மல்லிகை
>வணக்கம் டொக்ரர், சிறு தகவலொன்று:நண்டின் காலே ஒடியாதே, ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி போன்ற அருமையான பாடல்கள் அடங்கிய யாழ்ப்பாணனின் கவிதைத் தொகுப்பு (1948 இல் வெளியானது) நூலகத் திட்டத்தில் உள்ளது.பார்க்க: http://www.noolaham.net/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88http://noolaham.net/project/10/926/926.pdf
>தகவலுக்கு நன்றி கோபி. நான் பிறந்த ஆண்டில் பிறந்த ஆண்டில் வெளியான நூலை நூலகத் திட்டத்தில் வெளியிட்டமை நிச்சயம் அரும்பெரும் முயற்சிதான். பாராட்டுக்கள்.
>நல்ல இடுகை..Download Bharathiar songs Mp3http://chinathambi.blogspot.com
>வருகைக்கு நன்றி சின்னத்தம்பி. பாரதியார் பாடல்களை தரவிறக்கம் செய்ய வழி காட்டியதற்கு நன்றி