Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2008

>
தூங்குவது போலும் சாக்காடு என்றான் வள்ளுவன்.

இதன் அர்த்தம் என்ன? தூக்கம் என்பது மரணத்தைப் போன்றது என்பதுதானே. அதாவது உடல் மனம் யாவும் செயலிழந்து மரக்கட்டை போலக் கிடப்பதாகும்.

 

இது சரியான கருத்துத்தானா?

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் ஞானியான வள்ளுவன் மட்டுமின்றி மிக அண்மைக் காலம் வரையான விஞ்ஞானிகளும் இதையே சரியான கருத்தெனக் கொண்டனர். அதாவது சுமார் 1950 வரை முழு உலகமுமே தூக்கம் என்பது, உயிரினங்கள் செயலற்று அடங்கிக் கிடக்கும் காலம் என்றே எண்ணி வந்துள்ளனர். ஆனால் பல ஆய்வுகளின் பலனாக அது மறுதலிக்கப்படுகிறது.

இப்பொழுது அது தவறான கருத்து என்பதை விஞ்ஞான உலகம் மட்டுமின்றி, சாதாரண மக்கள் கூட அறிந்துள்ளனர். தூக்கத்தின போது கூட எமது மூளையானது முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருப்பதை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. அத்துடன் தூக்கமின்மையானது நாளாந்த வாழ்வின் இயக்கத்தை பாதிக்கிறது. தூக்கமானது எமது உடல், மன ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதல்ல.

எமது தூக்கத்தை எவை கட்டுப்படுத்துகின்றன?

நரம்புக் கலங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் இரசாயன நரம்புத்; தூண்டிகள்தாம் (neurotransmitters). இவை நாங்கள் விழித்திருக்கும் போதும் தூங்கும் போதும் நரம்புக் கலங்களைத் தூண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வௌ;வேறு நேரங்களில் வௌ;வேறு நரம்புத் தொகுதிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.

எமது மூளையையும் முண்நாணையும் இணைக்கும் நரம்புத்தண்டானது சிரோடொனின் (serotonin)மற்றும் நோஎவிநெவ்ரின் (norepinephrine) போன்ற இரசாயன நரம்புத்; தூண்டிகளைச் சுரக்கிறது. இவை நாம் முழிப்பாக இருக்கும் போது எமது மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன.

இதேபோல நாம் தூங்கும் போது எமது மூளையின் அடிப்பாகத்திலிருக்கும் வேறு நரம்புக் கலங்கள் இயங்கத் தொடங்குகின்றன. இதன் காரணமாக நாம் தூங்கும் போதும் மூளை இயங்குகிறது, ஆனால் பலத்த சத்தம் கேட்டால் விழித்தெழச் செய்கிறது. இருதயம் சீராகத் துடிக்கிறது. சுவாசம் ஒழுங்காக நடக்கிறது. இவ்வாறு நாம் தூங்கும் போதும் உடலும், முளையும் எமது நினைவறியாமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

நாம் நீண்ட நேரம் விழித்திருக்கும் போது தூக்கக் கலக்கம் வருவதற்குக் காரணம் என்ன?

நாம் விழித்திருக்கும் போது எமது குருதியில் அடினோசின் (adenosine) என்ற இராசாயனப் பொருளின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விழித்திருக்கும் நேரம் கூடக் கூட குருதியில் அடினோசினின் செறிவு அதிகரித்து எமக்கு தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. பிற்பாடு நாம் தூங்கும் போது இவ் இரசாயனமானது படிப்படியாக சிதைந்து மறைந்து போகிறது.

இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இதன் மூலம் புரிவது என்னவென்றால் நாம் விழித்திருக்கும் போது எமது குருதியில் சேரும் ‘கழிவுப்பொருளா’ன அடினோசின் சிதைந்து அழிய வேண்டும். அதற்குப் போதிய நித்திரை தேவை என்பதுதானே. நாம் தூங்கும் நேரத்திலும் மூளையானது செயற்பட்டே இந்த இரசாயனத்தை அழிக்கிறது. அதனாலேயே மூளை மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

எவ்வளவு நேர தூக்கம் தேவை?

ஒரு வயதிற்கு உட்பட்ட பாலகர்களுக்கு தினசரி 16 மணிநேர தூக்கம் தேவையாகும். ஆனால் பதின்ம வயதினருக்கு 9 மணிநேர தூக்கம் தேவை என வல்லுனர்கள் கருதுகிறார்கள். ஏ.எல் படிக்கும் உங்கள் பிள்ளை எத்தனை மணிநேரம் தூங்கிறது என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பாருங்கள். ‘இவன் படியாமல் தூங்குகிறான்’ என நீங்கள் குற்றம்சாட்டுவது உண்டாயின் அது சரிதானா என மறுபரிசீலனை செய்யுங்கள்.

வளர்ந்த மனிதனுக்கு எவ்வளவு நேரத் தூக்கம் தேவை? எட்டு மணிநேரம் என வாய்ப்பாடு போல பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது சரிதானா? அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டு Daniel F. Kripke.MD ஆனு தலைமையிலான குழுவினரால் ஆறு வருடங்கள் செய்யப்பட்ட ஆய்வு மனிதர்களுக்கு 8 மணித்தியால் தூக்கம் தேவையற்றது என உறுதியாகக் கூறுகிறது. தினமும் ஏழு மணி நேரம் தூங்குவதே திருப்தியானது, அதுவே ஆரோக்கியமானது என அதே ஆய்வு மேலும் தெளிவுறுத்துகிறது.

இருந்தபோதும் வளர்ந்தவர்களுக்கு தினசரி 7 முதல் 8 மணி தேவை என்பதே பொதுவான கருத்தாகும். ஆனால் 5 மணிநேரம் மட்டும் தூங்கிவிட்டு தினமும் உற்சாகமாக உலவும் மனிதர்களும் இருக்கிறார்கள்.. மறுபுறம் 10மணிநேரம் தூங்கினால்தான் திருப்தி அடைபவர்களும் இருக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிலும் முக்கியமாக கர்ப்ப காலத்தின் முதல் மூன்றுமாத காலத்தில் சாதாரணமானவர்களை விட பல மணிநேர தூக்கம் மேலதிகமாகத் தேவைப்படுகிறது.

வயதாகும்போது மனிதர்களின் தூக்கம் ஆழமற்றதாகவும், குறுகிய காலத்திற்கே நீடிப்பதாகவும், அடிக்கடி வரும் குறும் தூக்கமாகவும் இருக்கும். ஆனால் மொத்தமாகக் கணக்கெடுத்தால் இளமைப் பருவத்தில் பெற்ற தூக்கத்திற்கு ஏறக்குறையச் சமனாகவே இருக்கும். ஆயினும் 65ற்கு மேற்பட்ட பலருக்கும் தூக்கக் குறைபாட்டுப் பிரச்சனைகள் இருபதுண்டு. இது வயதாவதாலும் ஏற்படலாம், அவர்களுக்கு இருக்கும் மூட்டுவலி, ஆஸ்த்மா, இருதய நோய் போன்ற பல்வேறு நோய்களால் ஏற்படலாம். அல்லது அதற்கு அவர்கள் உட்கொள்ளும் மருந்துகளும் காரணமாகலாம்.

ஒரு நாளுக்கு ஒழி என்றால் ஒழியாய், இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் என ஓளவை வயிறு பற்றிப் பாடினார்.

வயிறானது ஒரு நாளுக்கு உண்ணாமல் இருக்கவும் மாட்டாது. உணவை ஒழித்த ஒரு நாளுக்காக மறுநாள் இரு மடங்கு சாப்பிடவும் மாட்டாது.

ஆனால் தூக்கம் அப்படியல்ல.

தூக்கத்தை முற்கடனாகக் கொடுக்குமோ தெரியாது.

ஆனால் பாக்கியை வசூல் பண்ணத் தயங்காது. ஒரு நாள் உங்களுக்கு தூக்கம் போதாது இருந்தால் மறுநாள் சற்று அதிகம் தூங்கி உங்கள் உடல் அதனை ஈடு செய்யும் ஆற்றல் கொண்டது. ஆனால் கடன் அதிகமானால் கவனஈர்ப்புத் திறன், முடிவு எடுக்கும் திறன், செயற்படும் திறன் போன்ற பல உடற் செயற்பாடுகள் பாதிப்புறும்.

உங்கள் தூக்கம் போதுமானதா என்பதை எவ்வாறு அறிவது?

  • பகல் நேரத்தில் நீங்கள் தூங்கி வழிந்தால் நீங்கள் முதல் இரவு கொண்ட தூக்கம் குறைவானது என்றே அர்த்தமாகும்.
  • முக்கிய வேலையின் போது தூங்கி வழிந்தால் மட்டுமின்றி, சலிப்படையச் செய்யும் வேலையின் போது தூங்கி வழிந்தால் கூட போதாது என்றே கொள்ள வேண்டும்.
  • ஒருவர் படுக்கையில் சாய்ந்த 5 நிமிடங்களுக்குள் வழமையாகத் தூங்கிவிடுகிறார் எனில் அவருக்கு பாரதூரமான தூக்கப் போதாமை இருக்கக் கூடும் அல்லது தூக்கக் குறைபாட்டு நோய்கள் இருக்கக் கூடும் என இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.

கோழித் தூக்கம் என்பதும் இதன் மற்றொரு வெளிப்பாடு ஆகும்.

கோழித் தூக்கம் என்றால் என்ன?

முழித்திருக்கும் வேளைகளில் தன்னை அறியாமல் கண்ணயர்வதைத்தான் நாம் கோழித் தூக்கம் என்கிறோம். ஆங்கிலத்தில் Microsleep என்கிறார்கள்.

அண்மையில் ஒரு ஆய்வு. ஜெர்மனி நாட்டில் உள்ள டுச்செல்டர்ப் பல்கலைக்கழகத்தில் டொக்டர் ஒலாப் லஹ்ல் தலைமையில் செய்யப்பட்டது..

தூக்கம் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது என அவரது ஆய்வின் முடிவு கூறுகிறது.

பள்ளி மாணவர்களிடையே அவர் இந்த ஆய்வினை நடத்தினார். முதலில் மாணவர்களுக்கு சில வார்த்தைகளை மனப்பாடம் செய்யக் கொடுத்தார். அவர்களில் ஒரு பகுதியினரை 5 நிமிடங்கள் தூங்கச் சொன்னார். மற்றவர்களை தூங்காது விழித்திருக்கச் சொன்னார். ஒரு மணி நேரம் கழித்து அவர்களின் நினைவாற்றலை அவர் பரிசோதித்த போது, விழித்திருந்த மாணவர்களை விட, தூங்கிய மாணவர்களால் மனப்பாடம் செய்த வார்த்தைகளை எளிதில் நினைவு படுத்தி சொல்ல முடிந்தது.

கற்றவற்றை மனத்தில நிறுத்துவதற்கு தூக்கம் அவசியம் என்பது இதனால் தெரிகிறது அல்லவா? உங்கள் பிள்ளைகள் திறமாகக் கற்க வேண்டுமாயின் போதிய தூக்கம் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

மிட்சிகன் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது குண்டுக் குழந்தைகள் பற்றியது. போதிய அளவு தூக்கம் அற்ற குழந்தைகள் அதீத எடையுள்ளவரகளாக வளரக் கூடும் என்கிறது அவ் ஆய்வு.

உண்மையில் தூக்கம் என்பது ஒரு மர்ம மாளிகையாகும். அதன் வாசல்களைத்; திறந்து அதனுள் மறைந்திருக்கும் இரகசியங்களை விஞ்ஞானிகள் துருவிக் கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் ஆங்காங்கே சில கீற்றுக்கள்தான் தென்படுகின்றனவே ஒழிய தூக்கத்தை இன்னும் ஒருவரும் முழுமையாகப் புரிந்து கொள்ளவே இல்லை. அது வரை போதிய தூக்கம் கொண்டு மூளையைச் சுறுசுறுப்புடன் காப்பாற்றிக் காத்திருப்போம்.

எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- ஜீவநதி (முதலாவது ஆண்டு மலர்- வைகாசி, ஆனி 2008)

Read Full Post »

>

வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்துவிட்டு
போரின் சகதிக்குள் சிக்கி
உயிர் மூச்சுக்காய்த் திணறிக் கொண்டிருக்கும் பேதைகளானோம்.

எத்தனை கனவுகள் எங்கள் இளமைக் காலத்திலே.
மொட்டுக்களாக அரும்பி விரியாமலே கருகிவிட்டன.
கனவுகளையும் தொலைத்த அபாக்கியவான்கள் நாம்.

சாதி சமய பேதமற்ற, ஆண்டான் அடிமை நிலை மறைந்த,
அடக்குமுறை ஒழிந்த,
சமத்துவம் எங்கெணும் நிலைத்த தேசம் எமக்குக் கிட்டுமென….

எமது சொந்தக் குரலில்
சுந்தரத் தாய் மொழியில்
தீவு எங்கெணும் கூவித் திரியும் சுதந்திரம் கைகூடுமென …

இப்படி இப்படி எத்தனையோ கனவுகள் கற்பனைகள்.

சுதந்திர மனிதர்களாய் பிறந்து வாழ்வின் வசந்தங்களை ஓரளவு அனுபவித்த பின் மேலும் கற்பனைக் கோட்டைகளைக் கட்டி வளர்த்தோம்.
அவை கானல் நீர்தானோ என இன்று மயங்கி நிற்கும் மூத்த தலைமுறையினர் நாம்.

போருக்குள் பிறந்து அவற்றின் அவலங்ளை அனுபவித்து, இவற்றிலிருந்து மீண்டே தீரவேண்டுமெனத் திடமும், அவாவும் உறுதியும் கொண்டவர்கள் அடுத்த தலைமுறையினர். அது முடியாதபோது தப்பினால் போதுமெனப் பறந்து சென்று, அங்கும் சுதந்திரக் கனவுகளை விதைத்து கீதம் இசைப்பவர்கள் அவர்கள்.
வாழ்ந்தாலும் மாண்டாலும் சொந்த மண்ணில்தான் என உறுதியாக இருப்பவர்கள் மீதி.

அடிமைத்தனத்துள் பிறந்து, அதனூடே வளர்ந்து அதுவே நிசமான வாழ்வென மயங்கி அதற்குள்ளும் சின்னச்சின்ன சந்தோஷங்களை நாடும் இன்னுமொரு தலைமுறையும் உருவாகிறதா?

நினைப்பதற்கே சங்கடமாக இருந்தபோதும் அதுதான் உண்மையா?

சிறுதெய்வ வழிபாடுகளுடனும், வீரசைவ உணர்வுகளுடனும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் தமிழ் இனம் பிராமண ஆதிக்கம் கொண்ட வைதீக சமூகமாக சிறிது சிறிதாக மாறி, இன்று அதுவே நிஜம்போலாகி சமஸ்கிருத மந்திரங்களுக்குள் கிறங்கி நிற்கவில்லையா?
அது போல…

போரின் இழப்புகளும், பொருளாதார சுமைகளும் அழுத்தும்போது மட்டைப் பந்தாட்டத்தின் போதையில் தனது மக்களை மூழ்க வைத்தாள் ஒரு தேசத்தின் தலைவி. இன்று எமது இளசுகளும் பந்தாட்டங்களிலும், களியாட்டங்களிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் தம் நிலை மறக்கும் மாற்றம் ஏற்படுகிறதா?

இது சரியானதா பிழையானதா என்பதல்ல கேள்வி. தன் மகிழ்வை, நிறைவை நாட எவனுக்கும் உரிமை உள்ளதுதானே? மாறாக அது தவறான பாதை என எண்ணுபவர்களின் ஏக்கமும் தவறில்லையே?

‘இன்னொரு புதிய கோணம்’ என்ற தெணியானின் புதிய நூலைப் படித்தபோது எனது மனம் நிலை கொள்ளவில்லை. சிறகுகள் ஒடிந்து கூட்டுக்குள் அடங்கிவிட்ட பறவையின் துயரக் கனவுகள் போலான சிந்தனைகளில் மூழ்கியது. அதிலும் முக்கியமாக ‘பாதுகாப்பு’ என்ற சிறுகதை என் கவனத்தை ஈர்த்தது. ஜீவநதி ஆடி ஆவணி 2007ல் வெளியானது. நூலிலுள்ள மிக அண்மையில் எழுதப்பட்ட இளமையான படைப்பு இது எனலாம்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரும் இன்றைக்குமான வாழ்வின் கோலங்களை மிக அழகாகச் சொல்கிறது. அன்றைய வாழ்வு இனிமையானது. அவசரங்கள் அற்றது. இயற்கையோடு ஒன்றியது. தகப்பனானவர் கண்டிப்பானவர். அவர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. ஆனால் பாசம் மிக்கவர். தனது குழந்தைகளின் பாதுகாப்பு தன்னிடமே என்பதைக் கேள்விக்கு உட்படுத்தாதவர். படம் பார்க்க வேண்டும் என்றால் கூட நண்பர்களுடன் செல்ல அனுமதிக்காது தானே கூட்டிச் செல்பவர்.

‘ஐயா தனது சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு படம் பார்க்க தியேட்டருக்கு அழைத்துப் போகிறார்’ என்ற வசனத்தோடு இச் சிறுகதையின் முதற்பகுதி நிறைவுறுகிறது.

இரண்டாம் பகுதியில் தகப்பன் யாழ்ப்பாணம் செல்லப் புறப்பட்டு ஆயத்தமாக நிற்கிறார். யாழ் பயணம் முன்பெல்லாம் இரண்டு மணித்தியாலயத்தில் போய்வர கூடியது. இப்பொழுது இரண்டு மணித்தியாலம் போதாது என்ற தகவலானது பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த காலம் இது என்பதைக் கோடி காட்டுகிறது.

மகனைத் தேடினால் அவன் விளையாடப் போய்விட்டான். இன்று லீவு என்பதால் வழமை போல விடியற்காலை எழும்பாது, ஆறுதலாக எழுந்தவனுக்கு இன்று சுதந்திரமாக இருக்கக் கிடைத்த மகிழ்ச்சி. தாய் கூட்டி வருகிறார். வாசலில் மோட்டர் சைக்கிள் நின்றதைக் கண்டு, தன்னையும் தகப்பன் கூட்டிக் கொண்டு போகப் போறார் என்பதைப் புரிந்து, மாட்டன் மாட்டன் என அடம் பிடிக்கிறான்.

‘அப்பா போற இடமெல்லாம் என்னை கூட்டிக் கொண்டு திரியிறார். என்னை விளையாட விடுங்கோ’ என்பது அவனது கோரிக்கையாக இருக்கிறது.

அத்துடன் கதை முடிந்து விட்டதாகவே எனக்குப்பட்டது. ‘நான் மோட்டார் சைக்கிளில் மகனோடு புறப்பட்டுப் போகிறேன்.’ என்ற இறுதி வசனம் அதை உறுதிப்படுத்தியது.

ஆம் இன்றைய யாழ் நிலவரம் அப்படி! முன்பு பிள்ளைக்கு தகப்பன் பாதுகாப்பு கொடுப்பான். இன்று இளவயதுள்ளவன் வெளியே செல்லும் போது அதுவும் முக்கியமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் போது குழந்தை கூட வருவதுதான் தகப்பனுக்கு பாதுகாப்பு. இச் செய்தியை இச்சிறுகதை மிக நாசூக்காகச் சொல்கிறது.

சிறுகதை என்பது யாவற்றையும் வெளிப்படையாகச் சொல்வது அல்ல. பூடகமும் வேண்டும். இதை தெணியான் மிக நேர்த்தியாக கலை நயத்துடன் சொல்லியிருந்தார். இன்றைய கால கட்டத்தில் இதைவிட வெளிப்படையாகப் பேசுவது ஆபத்து என்பதையும் உணர்ந்தேன்.
ஆனால் இதற்கு மேலும் ஏதோ ஒன்றை நான் தப்பவிட்டுவிட்டேன் என்ற உணர்வு என்னைத் தொல்லைப் படுத்தவே அதனை மீண்டும் வாசித்தேன்.

மாட்டன் மாட்டன் என அடம் பிடித்தவனை எதைக் கொடுத்து தகப்பன் தாஜா பண்ணினான். கேக் வேண்டாமாம், கஜீ வேண்டாமாம், முந்திரி அப்பிளும் வேண்டாமாம்.
அப்ப என்ன வேணுமாம்?

முன்பு புலோலியூர் இரத்தினவேலோன் தொண்ணூறுகளில் எழுதிய ‘புதிய பயணம்’ சிறுகதை ஞாபகத்திற்கு வருகிறது. கொழும்பில் இருந்து வந்த மாமன், குழந்தையான மருமகனுக்கு விளையாட என்ன வாங்கித் தர என்று கேட்ட போது, தனக்கு ஏ கே 47 வாங்கித் தாங்கோ என்றான் சிறுவன். அவன் சொன்னதைக் கேட்ட போது மாமன் திடுக்கிட்டான். ஆனால் நாம் திடுக்கிடவில்லை. காலம் அப்படி, சூழல் அப்படி. அவ்வாறுதான் அந்தக் குழந்தையால் கேட்க முடியும். அக்காலகட்டத்தில் சிறுவர்களின் உணர்வை இரத்தினவேலோன் அற்புதமாக பதிவு செய்திருந்தார்.

ஆனால் இந்தக் குழந்தை கிரிக்கட் போளும் பற்றும் வாங்கித் தாறன் என்ற போது, இணக்கத்துடன் மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டது.

‘ரிவீ யில் அவன் கிரிக்கட் விரும்பிப் பார்ப்பதும் ….. நான்தான் ஜெயசூரியா, நான்தான் ஜெயவர்த்தனா ..’ எனவும் சொல்வது மீள் வாசிப்பில் மனத்தில் பட்டது. ஆம் இந்த விடயம்தான் என்னை உலுப்பியது. இக் குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டார்களா? இவர்கள் எண்ணங்கள் அபிலாசைகள் எதிர்பாரப்புகள் எல்லாம் புதிய திசைகள் நோக்கிப் பயணப்படப் போகின்றதா.

உண்மையில் தெணியான் இதைத்தான் சொல்லவந்தாரா? அல்லது இது எனது கற்பனையா? புரியவில்லை. எப்படியிருந்தபோதும் புதிய கற்பனைகளையும் சிந்தனைகளையும் தூண்டிவிடுவதுதானே நல்ல சிறுகதையின் சிறப்பம்சம். நீங்களும் படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தை எனக்கும் சொல்லுங்கள்.

இந்த நூலின் கடைசிக் கதையாக அமைவது ‘பிஞ்சுப்பழம்’. இதுவே இத்தொகுதியின் மூத்த கதையும் ஆகும். அதாவது 1971 பெப்ரவரி மல்லிகை இதழில் வெளியாகியுள்ளது. தெணியானின் ஆரம்ப காலப் படைப்பாக இருந்தபோதும் கவனத்தில் கொள்ள வேண்டிய படைப்பாக உள்ளது.

படிப்பில் கெட்டித்தனம் உள்ள ஒருவன் குடும்பச் சூழ்நிலை காரணமாக நெல்லியடிச் சந்தைக்கு வானில் ஏற்றிக் கொண்டு வரப்படும் வாலைக் குலைகளை இறக்கிச் சந்தைக்குக் கொண்டு போகும் கூலித் தொழிலுக்கு போவதும், அங்குள்ள சூழலுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் இயைபடைவதும், அதிலிருந்து வெளியேறி மீண்டும் படிப்பதற்கான புறச் சூழல் கிட்டியபோதும், அதில் மனம் ஒன்றாமல் மீண்டும் தொழிலுக்கு திரும்புவதுமான கதை.

நெல்லியடிச் சந்தைச் சூழல், அவ்விடத்து நாளாந்த நடப்புகள், வறுமையும் அறியாமையும் குடிகொண்டிருந்த குடும்பத்தில் படிப்பை விட கூலித்தொழிலில் சொற்ப பணம் உழைத்தபோது கிடைக்கும் மதிப்பு, விடலைப் பயல்களின் பேச்சுவழக்கு, நடைமுறை போன்றவை மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோஷங்களை முன்வைக்கும் வரட்டுத்தனமான படைப்புகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தெணியான் இத்தகைய கலைத்துவமான சிறுகதையைப் படைத்தமை மகிழ்வழிக்கிறது. பாடசாலை ஆசிரியராக வருபவரின் சிந்தனையாக எழும் சில கருத்துக்களைத் தவிர நேரடியாகப் போதனை செய்யாமல் படைப்பின் ஊடாக சிந்தனையைத் தூண்டிவிடும் நல்ல கதை.

பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கிய 162 பக்கங்களைக் கொண்ட தொகுப்பு இது. அவரின் ஆரம்ப காலப் படைப்புகள் முதல் அண்மைக் காலப் படைப்புகள் வரையான சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. இதனால் அவரின் சிறுகதை இலக்கியப் பயணத்தில் நாமும் இணைந்து செல்லும் வாய்ப்புக் கிட்டுகிறது. வெளிநாட்டு மோகம், அது கொட்டும் பணத்தில் வீண் டாம்பீகம், அதனால் விளையும் கலாசார சீர்கேடு ஆகியன பல கதைகளின் கருவாகின்றன. அடக்குமுறை எதிர்ப்பு, விழிம்பு மனிதர்களின் வாழ்க்கை, உயரதட்டு மனிதர்களின் போலி வாழ்க்கை, வேஷதாரிகள் மீதான கோபம், மூடநம்பிக்கைகள் மீதான வெறுப்பு போன்ற பல விடயங்களையும் பேசுகிறது.

ஆயினும் இது தெணியானின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே பேசப்பட்ட ‘பாதுகாப்பு’இ ‘பிஞ்சுப்பழம்’, ஆகியவற்றைத் தவிர ‘தீண்டத்தகாதவன்’ போன்ற படைப்புகள் என்னைக் கவர்ந்தன. ‘தீராவிலை’ என்ற பெண்ணியக் கருத்தை வெளிப்படுத்தும் சிறுகதையும் கவனிப்புக்குரியது.

வேறு சில படைப்புகளை தொகுப்பில் சேர்க்காமல் தவிர்ந்திருந்தால் நூலின் தரம் பேணப்பட்டிருக்கும் என எண்ணிய போதும், தனது படைப்புகள் அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆசிரியரின் ஆதங்கத்தை அவரது முன்னுரையில் உணரக் கூடியதாக இருந்தது.

எட்டு சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிடப் போதுமான படைப்புகள் இருந்தபோதும், இதையும் உள்ளடக்கி மூன்று சிறுகதைத் தொகுதிகளே வந்துள்ளன என்ற செய்தி கவலையளிப்பதாக இருக்கிறது. ஆயினும் விடிவை நோக்கி, கழுகுகள், பொற்சிறையில் வாழும் புனிதர்கள், மரக்கொக்கு, காத்திருப்பு, கானவில் மான் ஆகிய நால்களும் சிதைவுகள் குறுநாவல் தொகுதியும் ஏற்கனவே வெளிவந்து சாஹித்திய பரிசு உட்பட பல பரிசுகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அவரது மேலும் சில நூல்கள் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

வெளியீட்டுரையை இந்நூலை வெளியிட்ட பூமகள் சனசமூக நிலையத்தின தலைவர் இ.செல்வராசா தந்திருக்கிறார். அணிந்துரை தவிர்க்கப்பட்டுள்ளமையானது தெணியானுக்கு தனது படைப்புகள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. பிரபலங்களுக்கு பின் ஓடாத அவரின் தன்னம்பிக்கை பாராட்டவும் மதிக்கப்பட வேண்டியதாகும்.

அட்டைப்படம் ரமணியுடையது. ‘இன்னொரு புதிய கோணம்’ என்ற சிறுகதையின் சில கோணங்கள் பின்புலமாக அமைய தெணியானுடைய முகம் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. ரமணியின் கைவண்ணத்தை காண்பதென்பது எப்பொழுதுமே மகிழ்வூட்டுவதே

ஒவ்வொரு சிறுகதையின் ஆரம்பத்தையும் சிறு ஓவியங்கள் அலங்கரிக்கன்றன. கதையின் கருவை வெளிப்படுத்தும் எளிமையான ஓவியங்களை வரைந்த க.மகேஸ்வரன் பாராட்டுக்குரியவர்.

இத்தொகுப்பின் முக்கியத்துவம் என்ன? தெணியானின் படைப்புலகின் தடத்தை 70, 80, 90, 2000 ஆண்டுகளில் என ஒரே நூலில் ஒரே மூச்சில் படிக்க முடிகிறது என்பதுதான். ஆனால் ஆண்டு வரிசைக் கிரமத்தில் சிறுகதைகள் நிரைப்படுத்தாமை என்னைப் பொறுத்த வரையில் குறையாகப்பட்டது. இருந்தபோதும் நான்கு தசாப்த காலகட்டத்தின் வாழ்க்கைக் கோலங்களை தரிசிக்க முடிவது மகிழ்ச்சியே.

இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் தான் தெணியான். கடந்த நான்கு தசாப்தங்களாக ஈழத்து படைப்புலகில் தனது ஆழமான தடங்களைப் பதித்த அவர் மேலும் படைப்புலகில் முன்நகர்ந்த படியே இருக்கிறார். இப்பொழுதும் தன் அவதானிப்பைக் கூர்மைப்படுத்தி, மொழியாற்றலை செழுமைப்படுத்தி, படைப்பாற்றல் உத்திகளை நவீனப்படுத்திக் கொண்டிருப்பதால்தான் அவரது எழுத்து முதுமை தட்டாது இளமையுடன் பவனிவருகிறது. இதனால் வாசகர்களின் உள்ளுணர்வுடன் பேச முடிகிறது.

இவற்றிற்கெல்லாம் மூல காரணம் அவருடன் உள்ளுறையும் மனிதநேயமும், முற்போக்குக் கருத்துகளும்தான் என்றே நம்புகிறேன்.

தொடர்புகள்:-
தெணியான்(கந்தையா நடேசு)
கலையருவி
கருணவாய் வடக்கு
வல்வெட்டித்துறை

விலை:- ரூபா 250.00

எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- மல்லிகை ஜீலை 2008..

Read Full Post »

>
உங்கள் வயது என்ன? உங்களது இரத்த அழுத்தம் எவ்வளவு? அது எவ்வளவாக இருக்க வேண்டும்?

இரத்த அழுத்தத்தில் இரண்டு அலகுகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். சாதாரண இரத்த அழுத்தம் 120/80 எனக் குறிக்கப்படுகிறது. மேலுள்ளது சுருக்கழுத்தம் Systolic blood pressure (SBP), கீழுள்ளது விரிவழுத்தம் Diastolic blood pressure (DBP) என அவை இருவகைப்படும். இதில் எதைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது?

ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களில் சுருக்கழுத்தத்தை (SBP) கட்டுப்பாட்டில் கொண்டு வருவதையே மருத்துவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் என The Lancet என்ற சஞ்சிகையில் ஜீன் 18ல் இணையத்தில் வெளியான கட்டுரை ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

இதற்குக் காரணம் என்ன? இப்பொழுது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் 50 வயதிற்கு பின்னர் பெரும்பாலானவர்களின் இரத்த அழுத்தம் அதிகரித்து வருவதும் தெரிந்ததே. அவர்களில் விரிவழுத்தத்தை (DBP) விட சுருக்கழுத்தமே (SBP) பெரும்பாலும் அதிகரிக்கின்றது. வயது கூடக் கூட சுருக்கழுத்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் விரிவழுத்தம் பொதுவாக 50 வயது வரையே அதிகரிக்கிறது. அதற்கு மேல் அதிகரிப்பது குறைவு. அது மட்டுமல்ல பல தருணங்களில் அது குறையவும் செய்கிறது.

இன்னொரு விதமாகப் பார்த்தால் இரத்த அழுத்த நோயுள்ளவர்களில் 75% சதவிகிதத்திற்கு மேலானவர்கள் 50வயது அல்லது அதற்கு மேலான வயதுள்ளவர்களே. இவர்களுக்குதான் மாரடைப்பு, பக்கவாதம், போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதன் காரணமாக இத்தகையவர்களது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே மிக முக்கியமானதாகும்.

முன்னைய காலங்களில் விரிவழுத்தம் (DBP) தான் முக்கியமானது என மருத்துவ உலகில் ஒரு கருத்து நிலவியது. அதைக் கட்டுப்படுத்துவதே சிகிச்சையின் இலக்காக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் மேற் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் பாரக்கும் போது இக்கருத்து தவறானது, சுருக்கழுத்தமே முக்கியம் என்பது வெளிப்படை. மேற் கூறிய கட்டுரையாளர்கள் ஒரு படி மேலே போய் 50வயதிற்கு மேலானவர்களுக்கு சுருக்கழுத்தத்தை மட்டுமே அளவிட்டால் போதுமானது என்று கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் நான்கு காரணங்களைக் கூறுகிறார்கள்.

முதலாவது காரணம். சுருக்கழுத்தமானது மிகவும் சுலபமாகவும் தெளிவாகவும் அதிக தவறின்றியும் அளவிடக் கூடியது. அத்துடன் அதுவே மாரடைப்பு, பக்கவாதம், போன்ற நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமும் ஆகிறது.

பிரஸர் மானியுடன், ஸ்டெதஸ்கோப் கிடைக்காத நிலையில் நாடித்துடிப்பை தொட்டுப் பார்பதன் மூலம் கூட சுருக்கழுத்தத்தை அண்ணளவாக அளவிட முடியும். அதனால் மருத்துவர்கள் இல்லாதபோது, மருத்தவ தாதி அல்லது மருத்துவ உதவியாளர் கூட இவ்வாறு சுலபமாக அளவிட முடியும். நோயாளிகளுக்கு கூட சிறு பயிற்சி மூலம் சுருக்கழுத்தத்தை அளவிடுவதற்கு பழக்கிவிடலாம். எனவே அளவிடுவதும், கட்டுப்படுத்துவதும் இலேசானது.

ஆனால் இப்பொழுது சுலபமாக வாங்கக் கூடிய இலக்ரோனிக் பிரஸர் மானிகளை எந்த
மருத்துவ அறிவு இல்லாதவரும் பட்டன்களை அழுத்துவதன் மூலம் இயக்கி, பிரஸரை உடனடியாக அறிய முடியும் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இரண்டாவது காரணமாவது, தனது பிரஸர் என்ன, அது எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு அலகுகளை வைத்துக் கொண்டு நோயாளிகள் குழம்ப வேண்டியதில்லை. மேலும் அந்த இரண்டில் எது முக்கியம் என்ற கேள்வியும் அவர்களுக்கு எழாது.

மருத்துவர்களும் கூட அதுவா இதுவா முக்கியம் என அல்லாட வேண்டியதில்லை என்பது மூன்றாவது காரணமாகும். நான்காவதாக, பிரஸர் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரைகளை சுகாதார இலாகாவினர் பொது மக்களிடையே எடுத்துச் செல்வதற்கும் திட்டமிடுவதற்கும் கூட ஒரு இலக்கமென்பது சுலபமாயிருக்கும்.

சரி இப்பொழுது உங்களது பிரஸருக்கு வருவோம். ஐம்பது வயதிற்கு மேற்பட்ட உங்கள் பிரஸர் எவ்வளவாக இருக்க வேண்டும். 140/90 க்கு மேற்படாது இருக்க வேண்டும். நீரிழிவும் சேர்ந்திருந்தால் 130/80 க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்றே இதுவரை சொல்லப்பட்டது. ஆனால் மேற் குறிப்பிட்ட புதிய முறையில் கூறுவதாயின் இவற்றை முறையே 140, 130 என்று நீங்கள் குறிப்பிட்டால் போதுமல்லவா?

ஆம் எவ்வளவு சுலபம் நினைவில் வைத்திருக்க?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

Read Full Post »

>
மற்றவர் எமது மருத்துவ வளங்களைத் திருடிச் செல்வதா?

தமிழ் மருத்துவம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றி மூத்த தமிழர்’ என நாம் பீற்றிக் கொள்வதுண்டு. இது அதீத கற்பனையாகவே இருக்கிறது. ஏனெனில் கல்லும் மண்ணும் தோன்றும் முன்னர் தமிழன் என்றில்லை அமீபா, பங்கஸ், கரப்பொத்தான் பூச்சி போன்ற எந்த உயிரினமும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.

தொன்மையானது தமிழ் மருத்துவம்

ஆயினும் தமிழ் மருத்துவம் தொன்மையானது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சிந்துவெளி நாகரீக காலத்திலேயே சத்திரசிகிச்சை செய்யும் அளவிற்கு அது பெருவளர்ச்சி அடைந்திருந்தது. ஆயினும் கால ஓட்டத்துடன் நகர்ந்து செல்லாது சற்று பின்தங்கிவிட்டது. விஞ்ஞானத்துறை போல இத்துறையை வளர்க்காமல் ஆன்மீகத் துறைபோல ஆற்றுப்படுத்தப்பட்டதே இந்நிலைக்கு இதற்கு முக்கிய காரணம் எனத் தோன்றுகிறது. நேற்றைய கம்பன் விழாப் பட்டி மன்றத்தில் (18.5.2008) சொல் வேந்தர் சுகி செல்வம் கூறியது போல ‘கேள்வி கேட்பதே அறிவியலின் திறவுகோலாகும்’ என்பதை இத்தருணத்தில் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதாகிறது.

மாற்றமும், வளர்ச்சியும் அவசியம்

மாற்றமும், வளர்ச்சியும் காலத்தின் நியதி. கலை, கலாசாரம், ஆன்மீகத்துறை, உணவுமுறை, கல்வி என எதை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் நாளாந்தம் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன் நாம் உண்டதை நாம் இப்பொழுது உண்பதில்லை, உடுத்ததை உடுப்பதில்லை, படித்ததை இப்பொழுது படிப்பதில்லை. காலத்தோடு மாறுகிறோம். மாற்றம் எதிலும் நியதி. அதிலும் முக்கியமாக அறிவியலில் மாற்றமும் வளர்ச்சியும் அத்தியாவசியமானவை. அறிவியலின் அடிப்படையே அதுதான். அறிவியல் எதையும் முற்றுமுழுதாக சரியென ஏற்றுக் கொள்வதில்லை எதையும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் சந்தேகிப்பவன்தான் விஞ்ஞானி.

முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை ஆராய்ச்சி மூலமாக பிழையென நிறுவி புதிய கருத்தை முன்வைப்பவன் அவன். முன்னோர் சொன்னதெல்லாம் சரி, அவற்றை கேள்விக்கு உட்படுத்த முடியாது என்பவன் விஞ்ஞானியாக இருக்க முடியாது. அதற்கு முற்றிலும் மாறானது ஆன்மீகம். அது ஆய்வறிவை விட அனுபவ அறிவை அடிப்படையாகக் கொண்டது. குருவின் சொல்லை வேதவாக்காக ஏற்றுக்கொள்வதுதான் ஆன்மிகத்துறையில் சிஸ்யனுக்கான முதல் கட்டளையாகும்.

ஆனால் விஞ்ஞானம் முற்றிலும் எதிர்மாறானது.
உதாரணமாக மரத்திலிருந்து பழம் கீழே விழுவதை இயற்கையானதாக அல்லது கடவுளின் நியதி என நியூட்டன் ஏற்றுக் கொண்டிருந்தால் புவியீர்ப்புக் கொள்கையே தெரிய வந்திருக்காது.

எதிர்க் கேள்வி கேட்காது ஓலையில் எழுதி வைத்ததையும், குரு சொல்லிய பாடத்தையும் அப்படியே கடைப்பிடித்தமைதான் இதன் வளர்ச்சியை குறைத்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. அத்துடன் தனக்குக் கிட்டிய அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாது பரம்பரைக்குள் மட்டும் ரகசியம் பேணியதும் மற்றொரு காரணம் எனலாம்.

தமிழ் மருத்துவத்தின் தொன்மைக்குச் சான்றாக சிந்துவெளி முத்திரைகளுடன், தொல்காப்பியம், சங்க இலக்கியம், ஐம்பெருங் காப்பியம், திருக்குறள் போன்றவையும் அமைந்துள்ளன. இந் நூல்களில் உடல்நலம் பற்றிய குறிப்புகளும், நோய் பற்றிய செய்திகளும், மருத்துவம் பற்றிய விபரங்களும், மூலிகைகள் பற்றிய செய்திகளும் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

திருமூலரின் திருமந்திரம்


இன்றைய நவீன மருத்துவ உலகில் ஆரோக்கியம் அல்லது சுகநிலை என்பது வெறுமனே உடற்சுகத்தை மட்டும் குறிப்பதில்லை. உடல், உள்ளம், சமூகம், ஆன்மிகம் ஆகிய நான்கு நிலைகளிலும் ஒருவன் பூரண சுகத்துடன் இருப்பதையே குறிக்கிறது. இதனையே உலக சுகாதார ஸ்தாபனமும் வலியுறுத்துகிறது. உடல் ஆரோக்கியத்ததைப் பேணினால் மாத்திரமே ஞானமும் கைகூடும் என்பது தெளிவு. இதனையே திருமூலர் தனது பாடலில் உறுதியோடு சொல்கிறார்.

‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’

மேற் கூறிய பாடலில் மட்டுமின்றி திருமூலரின் திருமந்திரத்தில் உடல் நலம், மருத்துவம், ஆகியன தொடர்பான பல பாடல்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். திருமந்திரம் தமிழுக்கு கிடைத்த மிக அற்புதமான நூல்களில் ஒன்று. அதில் உள்ளடங்கும் சுவார்ஸமான மற்றொரு பாடல் சொல்வதைப் பாருங்கள்.

ஆண்குழந்தையா பெண்குழந்தையா

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.

இந்தப் பாடலிலே ஒரு தம்பதியினர் தமக்கு வேண்டியது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதைத் கணவனே தீர்மானிக்கக் கூடிய ஒரு வழியைச் சொல்லியிருக்கிறார். நவீன மருத்துவத்தின் படி குழந்தையின் பாலை நிர்ணயிப்பது ஆண்கள். தயவு செய்து பெண்ணியம் பேசுபவர்கள் என்னுடன் சண்டைக்கு வரவேண்டாம். இது ஒரு விஞ்ஞானத் தரவு. இதன் படி ஒரு கருவின் பாலை நிர்ணயிக்கும் X, Y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது. குரோமோஸோம்கள் தாமகவே நிர்ணயிக்கின்றனவே ஒழிய ஆணின் தன்னிச்சையான முயற்சியால் அல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஆனால் திருமூலரின் கூற்றுப்படி கலவியின்போது ஆணினுடைய மூச்சு வலது பக்கமாக வெளிப்படுமெனில் குழந்தை ஆணாகப் பிறக்குமென்றும், இடப்பக்கமாக இருக்குமெனில் பெண்ணாக இருக்குமென்றும், இரண்டு மூக்கிலும் வெளிப்பட்டால் பாலியல் குறைபாடுள்ள குழந்தை பிறக்குமென்றும் குறிப்பிடுகிறார். ஆயினும் நாம் வழமையாக இரு நாசித்துவாரங்கள் ஊடாகவுமே ஒரே நேரத்தில் மூச்சை உள்ளெடுக்கவோ வெளிவிடவோ செய்கிறோம். யோகாசனம் போன்ற பயிற்சிகளின்போதே ஒரு மூக்கால் உள்ளெடுத்து மறு மூக்கால் வெளிவிடுவதுண்டு.

எனவே இக் கூற்றின் சாத்தியப்பாடு கேள்விக்குரியதாகவே இருக்கிறது. இருந்தபோதும் ஆணின் விந்தின் மூலமே பிறக்கப் போகும் குழந்தையின் பால் தீர்மானிக்கப்படுகிறது என விஞ்ஞானம் இன்று சொல்வதை அவர் அன்றே சொல்லியிருப்பது வியப்பளிப்பதாக இருக்கிறது. மாறாக இது திருமூலர் என்ற ஆணாதிக்கவாதியின் கற்பனையான ஒரு பக்கக் கருத்து என்று ஒரு சிலர் ஒதுக்கிவிடவும் கூடும்.

திருக்குறளில் நலவியல்


ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவன் திருக்குறளில் உடல் ஆரோக்கியம், மருத்துவம், அளவோடு உண்ணுதல், கள்ளுளான்மை போன்ற பல தலைப்புகளில் நலவியல் பற்றிப் பேசுகிறார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

அதீத உடற்பருமனானது நீரிழிவு, உயர்அரத்த அழுத்தம், இருதயநோய்கள், மூட்டுவாதம் போன்ற பல நோய்களுக்கு அடிப்படையாக இருப்பதை இன்றைய மருத்துவம் அறியும். இதையே வள்ளுவர் அளவோடு உண்டால் அதாவது அற்றது போல உண்டால் உடலுக்கு மருந்தே தேவைப்படாது என்று அன்றே கூறுகிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

அதேபோல மனஅழுத்தமானதும் பிரஸர், நீரிழிவூ, இருதய நோய்கள், பாலுறவுப் பிரச்சனைகள், மனச்சோர்வூ, பதகளிப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு அடிப்படையாகிறது. இதையே அவர் ..

‘காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்’ என்கிறார்.

விருப்பு, வெறுப்பு, தெளிவில்லாமை என்னும் மூன்றினதும் அழுத்தம் (Stress)இல்லையானால் பிரஸர், நீரிழிவு, மாரடைப்பு போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கலாம் என இன்று அதற்குப் பொருள் கொள்ளலாம்.

சங்க காலப் புலவர் ஒருவரால் இயற்றப் பெற்ற ‘ஆற்றுப்படை’ என்னும் மருத்துவ நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் சங்க காலத்திலேயே மருத்துவ நூல்கள் எழுந்துள்ளன என்பதை அறியக் கூடியதாக இருக்கிறது.

சிலப்பதிகாரத்தில்

சிலப்பதிகாரத்தில் அரைப்பு முறையால் செய்யூம் மருந்துகள் பற்றிய சில குறிப்புகள் கிடைத்துள்ளதாக தமிழ் மருத்துவ அறிஞர் முனைவர் இர.வாசுதேவன கூறுகிறார். அவையாவன

சந்தான கரணி – முறிந்த உறுப்புகளை ஒட்டுவது.
சல்லிய கரணி – வேல் தைத்த புண்ணை ஆற்றுவது.
சமனிய கரணி – புண்ணின் தழும்பை மாற்றுவது.
மிருத சஞ்சீவினி – இறந்த உடலை உயிர்க்கச் செய்வது.

இவற்றில் சந்தான கரணி, சல்லிய கரணி ஆகிய இரண்டும் அதாவது, முறிந்த எலும்பு உறுப்புகளை பொருத்துவது, புண்ணை ஆற்றுவது போன்றவை இன்றைய நவீன மருத்துவத்தில் மிகச் சாதாரணமாக செயற்படுத்தக் கூடியதாக இருப்பதை அறிவீர்கள்.
ஆயினும் புண்ணின் தழும்பின் வலியையும், அசிங்கத்தன்மையையும் மாற்றும் சமனிய கரணி இன்றும் நவீன மருத்துவத்திற்கு சவாலாகவே உள்ளது. ஸ்டீரொயிட் போன்ற ஊசி மருந்துகளால் தழும்புகளின் பருமனை ஓரளவு மட்டுமே குறைக்கக் கூடியதாக உள்ளது. அல்லது பிளாஸ்டிக் செர்ஜரி போன்ற மிகத் தேர்ச்சியான செலவு கூடிய மாற்று சிகிச்சை முறைகளே உள்ளது.

ஆயினும் அதில் இறுதியாகச் சொல்லப்பட்டுள்ள மிருத சஞ்சீவினி எனும் இறந்த உடலை உயிர்க்கச் செய்வதானது நவீன மருத்துவத்தில் இப்போதைக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

இத்தகைய மருத்துவ முறைகள் பற்றி சிலப்பதிகாரம் குறிப்பிட்டபோதும் அவற்றை எவ்வாறு செய்வது என்பது பற்றிய விபரமான விளக்கங்கள் எதுவும் சிலப்பதிகாரத்திலோ ஏனைய பழம்தமிழ் இலக்கியங்களிலோ சொல்லப்படவில்லை. சிகிச்சை முறைகள் பற்றி வெளிப்படையாக மற்றோர் அறியக் கூறாமல் இரகசியம் பேணியமை தமிழ் மருத்துவத்தின் சாபக்கேடு என்றே கூறவேண்டும்.

இன்று இறந்தவர் உடலை வெளிநாட்டிலிருந்து அல்லது தூர இடங்களிலிருந்து உறவினர்கள் வரும்வரை பாதுகாத்து வைப்பதை நாம் அறிவோம்.
கோழி இறைச்சியானது தேவைப்படும் காலம் வரை வீட்டிலுள்ள பிரிட்ஜ்க்குள் போய்வந்து கொண்டிருப்பது போல உறவினர்கள் வரும் இறந்தவரது உடலானது மரணச்சடங்கு நடக்க இருக்கும் மலரச்சாலையின் குளிர் அறைக்குள் போய் வந்துகொண்டே இருக்கும். இத்தகைய தேவை அந்தக் காலத்திலும் இருந்திருக்கும் போல.

உயிர் பிரிந்தபின் அந்த உடம்பு சில காலத்திற்குக் கெட்டுவிடாமல் பாதுகாத்து வைப்பதற்காக ஒருவகை எண்ணெயில் அதனை இட்டு வைப்பதை கம்பராமாயணம் (தைலமாட்டு படலம், பாடல் 608) மூலம் அறிய முடிகிறது.

போகர் ஏழாயிரத்தில் மூளைச் சத்திரசிகிச்சை

மண்டை ஓட்டை வெட்டி மூளைக்குள் சத்திரசிகிச்சை செய்வது இன்று நடைமுறையில் இருந்தாலும் சற்று ஆபத்தான தீவிர சிகிச்சை என்பதில் ஐயமில்லை. ஆயினும் சங்க காலத்திலேயே இவ்வாறான சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.
‘போகர் ஏழாயிரம்’ என்றொரு நூலில் இச்செய்தி இருப்பதாக டொக்டர்எஸ்.ஜெயபாரதியின் கட்டுரையில் அறியக்கிடக்கிறது. போகர் என்ற முனிவர் வானத்தில் பறக்கும் வித்தை அறிந்தவர். மெக்கா, சீனா எனப் பறந்து திரிந்தவர். பழனிமலைக் கோவிலின் திருவுருவை அமைத்தவர் அவரே என்றும் சொல்லப்படுகிறது. அவரது நூலில் வரும் பாடல் மூலம் இச்செய்தி தெரியவருகிறது.

திரணாக்கிய முனிவருக்கு 10 ஆண்டுகளாக தாங்க முடியாத தலைவலியாம். பல வைத்தியர்கள் பார்த்தும் குணமாக்க முடியாத நிலையில. அகத்தியரை நினைத்தார்கள். அங்கு கருணையுடன் வந்த அகத்தியர் தனது ஞானக் கண்ணால் நோக்கியபோது முனிவரின் முளைக்குள் தேரை ஒன்று இருப்பதைக் கண்டார். இன்றைய MRI யை நிகர்த்தது அவரது ஞான ஆற்றல் போலும். கபாலத்தை சத்திரசிகிச்சையால் திறந்து, உள்ளிருந்த தேரையை அவர் கொடுக்கியால் எடுக்க முனைந்தபோது அவரது சீடரில் ஒருவராகிய பொன்னரங்கன் என்பவர் தடுத்தாராம்.

அப்படியே தேரையை எடுத்தால் அது மூளையைப் பிய்த்துக்கொண்டு வந்துவிடும். ஆகவே பொன்னரங்கனார் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் செய்தார். அந்தப் பாத்திரத்தைத் தேரையின் அருகே பிடித்தார். தண்ணீரைக் கண்ட தேரை உடனே மூளையை விட்டுவிட்டு தண்ணீருக்குப் பாய்ந்தது. தொல்காப்பியரின் மூளைக்குச் சேதமில்லாமல் கபாலத்தை மூடிவிட்டார்கள். பூரண குணமடைந்தார்.

எமது மூலிகைள் வளங்கள் மாற்றார் கைகளில்

சரி பழம் தமிழ் இலக்கியங்களை விட்டு இன்றைய காலகட்டத்திற்கு வருவோம். வேப்பமிலை, வேப்பங்கொட்டை, இஞ்சி, உள்ளி, அதிமதுரம், கொத்தமல்லி,
கருஞ்சீரகம், வல்லாரை, மஞ்சள், பட்டிப்பூ, கற்றாளை, நெல்லி, நிலவேம்பு, குங்கிலியம், கீழ்காய்நெல்லி, புளித்தோடை, பருத்தி, சோயா, திராட்சை, பூக்கோவா போன்ற பலவும் தமிழ் மருத்துவத்தில் மூலிகைகளாக மட்டுமின்றி நமது நாளாந்த வாழ்விலும் மருத்துக் குணங்களுக்காகப் பாவனையில் உள்ளன. ஆயினும் இவை பற்றி ஆய்வு ரீதியான தரவுகள் தமிழ் மருத்துவத்தில் உள்ளனவா? இல்லை!

ஆனால் இவற்றில் பல பற்றிய நவீன மருத்துவ ஆய்வுகள் உள்ளன. அவற்றிலும் பெரும்பாலானவை மேலைத் தேசங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளாகும்.
நாம் செய்ய வேண்டியவற்றை அவர்கள் செய்கிறார்கள் என்று பெருமிதம் கொள்ள வேண்டாம். அவர்கள் செய்வது தமது சுயநலத்திற்காக, பொருளாதாரப் பேர் இலக்குகளை அடைவதற்காக.

உண்மையில் எமது மருத்துவம் பற்றிய ஆய்வுகளை நாம்தான் செய்ய வேண்டும். அதையும் எமது சூழலில் செய்ய வேண்டும். எமது மக்களின் விமோசனத்திற்காகச் செய்ய வேண்டும். ஆனால் அதைச் செய்வதற்கான வாய்ப்புகளோ பொருளாதார வசிதிகளோ, ஆய்வுகூட வசதிகளோ இங்கு கிடையாது என்பது மிகவும் கவலைக்குரியது. ஆயினும் தஞ்சை, யாழ் மற்றும் மலேசிய பலகலைக் கழகங்களின் சுதேசிய வைத்திய பீடங்களில் பல ஆய்வுகள் நடாத்தப்படுவதாகத் தெரிகிறது. இது போற்றத் தக்க முயற்சி என்றபோதும் போதியதாக இல்லை.

உரிமம் பறிபோதல்

இதன் காரணமாக எமது பாரம்பரிய மூலிகைகளும் அவற்றின் மீதான எமது உரிமைகளும் பறிபோகின்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆனைக்கோட்டையிலிருந்து 1980ல் கடத்திச் செல்லப்பட்ட ஒரு வகை (Streptosporangium fragile) பூஞ்சணம் அதாவது பங்கசிலிருந்து fragilomycin என்ற நுண்ணுயிர் கொல்லி மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் எமது மண்ணிலிருந்து பெறப்பட்ட அம்மருந்துக்கான காப்புரிமை அமெரிக்க பல்தேசிய கம்பனியிமே உள்ளது. நாம் எமது நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதற்கு உரிமை கோர முடியாதுள்ளது. இவ்வாறே தமிழ் மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு பயன்பட்டு வந்த பாகல், நாவல், நெல்லி, சீயக்காய், கடுகு, மிளகு, இஞ்சி, ஆமணக்கு போன்ற பல தாவரங்களின் மருத்துவப் பண்புகளுக்கு அவர்கள் காப்புரிமை பெற்று வைத்திருப்பதை அண்மையில் பொ.ஐங்கரநேசன் பத்திரிகைக் கட்டுரை ஒன்றில் வெளிப்படுத்தியிருப்பதை படிக்க முடிந்தது.

இவ்வாறாக எமது மருத்துவ அறிவை, மூலிகைகளை வெளிநாட்டவர் திருடிச் செல்வதற்கும், அவற்றிற்கு சர்வதேச சட்டங்களின் கீழ் காப்புரிமையூம் பெறுவதற்கு எமது அறியாமையும் அசண்டையீனமும்தான் காரணமாகிறது. எமது விஞ்ஞானிகளில் சிலர் தமது பொருளாதார நன்மைகளுக்காகவும், உயர் பதவிகளுக்காவும் எமது உயிரியல் வளங்களின் விஞ்ஞானத் தகவல்களை சட்டவிரோதமாக கடத்த உதவியதாகவும் சில பத்திரிகைச் செய்திகள் சொல்லுகின்றன. இவற்றைத் தடுக்க வேண்டும். இவற்றுக்கு எதிராக நாம் போராட வேண்டும்.

அத்துடன் எமது பாரம்பரிய அறிவை விஞ்ஞான யூகத்திற்கு ஏற்ப நவீனப்படுத்த வேண்டும். தஞ்சை, யாழ், மலேசிய போன்ற பல பல்கலைக்கத்தின் சுதேசிய வைத்திய பகுதிகள் இத்தகைய ஆய்வுகள் சிலவற்றைச் செய்ய முனைந்துள்ள போதும், வளப் பற்றாக்குறை தடையாக இருக்கிறது. யாழ் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவப் பிரிவு சிக்கன்குனியா நோயுக்கான மருந்தைக் கண்டுபிடித்திருப்பதாக பத்திரிகைச் செய்தி ஒன்று கூறியது. மகிழ்ச்சிக்குரியது. தரமான விஞ்ஞான மருத்துவ சஞ்சிகைகளில் அத்தகைய ஆய்வு பற்றிய விபரங்களை வெளிப்படுத்தி அதற்கான உரிமையைப் பெறவேண்டும்.

எம்.கே.முருகானந்தன்.

18.05.2008 அன்று கம்பன் விழாவில் பேசப்பட்டதின் கட்டுரை வடிவம்.

Read Full Post »

>
முதுகை ஒரு புறம் வளைத்து, கால்களைப் பரப்பி, அடி மேல் அடி வைத்து அவதானமாக நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும், இவரது பிரச்சனை நாரிப் பிடிப்புத்தான் என்று சொல்வதற்கு வைத்தியர்கள் தேவையில்லை. நீங்கள் கூட உடனே சொல்லி விடுவீர்கள். காலையில் குளித்துவிட்டு, குனிந்து உடுப்பு அலம்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிடித்தததாம்.

இன்னொருவன் மாணவன். கால்பந்து விளையாடும் திடீரெனப் பிடித்ததாம். என்னிடம் வந்து ஊசி போட்டு மருந்தும் சாப்பிட்ட பின்தான் அவனது முதுகு நிமிர்ந்தது. மற்றொருவருக்கு ஏன் வந்தது எப்படி நேர்ந்தது ஒன்றும் புரியவில்லை. காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லையாம்.

எப்படி ஆனதோ?

நாரிப்பிடிப்பு ஏன் வருகிறது?

இவ்வாறு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சாதாரண தசைப்பிடிப்புக் காரணமான ஏற்படலாம். சவ்வுகளில் சுளுக்குக் வந்ததன் காரணமாக இது ஏற்படலாம். அல்லது எலும்பு மூட்டுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும் தோன்றலாம். முள்ளந் தண்டின் இடைத்தட்டம் விலகுவதாலும் ஏற்படலாம்.


இதில் கடைசியாகக் கூறிய இடைத்தட்டம் விலகுவது என்பது சற்று பாரதூரமான பிரச்சனையாகும். விளக்கப் படத்தைப் பாருங்கள் முள்ளந்தண்டு எலும்புகளினிடையே (Vertebra) இருப்பது இடைத்தட்டம் (Disc) ஆகும். சிமென்டு கற்களை முள்ளந்தண்டு எலும்புகளாக கற்பனை பண்ணினால் அவற்றை இணைக்கும் சாந்து போன்றது இடைத்தட்டம். இந்த இடைத்தட்டம் ஊடாக முண்நாணிலிருந்து நரம்பு (Nerve) வெளிவருகிறது தெரிகிறது அல்லவா?


நீங்கள் வழமைக்கு மாறாக குனிந்து வேலை செய்யும்போது அல்லது உங்களுக்குப் பழக்கமற்ற பார வேலை செய்யும்போது எலும்புகளிடையே இருக்கும் இடைத்தட்டம் சற்றுப் பிதுங்கி வெளியே வரக் கூடும். அப்பொழுது அது அருகிலிருக்கும் நரம்பை அழுத்தலாம். பொதுவாக முதுகை வளைத்துத் தூக்கும் போதே இது நிகழ்வதுண்டு. இது திடீரென நிகழும். அந்நேரத்தில் சடுதியான கடுமையான வலி ஏற்படும். எந்தக் கணத்தில் இது நிகழ்ந்தது என்பதை பாதிக்கப்பட்ட நபர் துல்லியமாகக் கூறக்.கூடியதாக இருக்கும்.

ஆனால் இது எப்பொழுதுமே இவ்வாறுதான் நிகழும் என்பதில்லை.

பெரும்பாலனவர்களுக்கு என்ன செய்யும் போது அல்லது எந் நேரத்தில் இது நிகழ்ந்தது என்பது தெரிவதில்லை. படிப்படியாகவும் நாரிப்பிடிப்பு வரலாம். ஆயினும் வலியின் கடுமை எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. பரசிட்டமோல் போட்டு சமாளிக்கக் கூடியளவு லேசாக இருக்கலாம். அல்லது வலியின் உபாதை தாங்க முடியாத அளவிற்கு கடுமையாக இருக்கலாம். உங்களது நாளாந்தக் கடமைகளைச் செய்ய முடியாது படுக்கையில் சில நாட்களுக்குக் கிடத்தவும் கூடும்.

இருந்த போதும் சில இலகுவான நடைமுறைப் பயிற்சிகள் செய்தால் அதிலிருந்து நீங்கள் சுலபமாக விடுபட முடியூம்.

நிற்பதுவூம் நடப்பதுவும்

இவ்வாறான பிடிப்பு ஏற்படும்போது நீங்கள் எவ்வாறு நிற்கிறீர்கள், படுக்கிறீர்கள், உட்காருகிறீர்கள் என்பன யாவும் முக்கியமானவைதான். படுக்கும்போது உங்கள் பாரத்தை முள்ளந்தண்டில் சுமக்க விடாது பாதுகாப்பது அவசியமாகும்.

இதனை எவ்வாறு செய்வது?

படுக்கும்போது, நேராக நிமிர்ந்து படுங்கள். இப்பொழுது உங்கள் முழங்கால்களுக்கு கீழே, விளக்கப் படத்தில் காட்டியவாறு, ஒரு தலையணையை வையுங்கள். இவ்வாறு முழங்கால்களைச் சற்று மடித்துப் படுப்பது சுகத்தைக் கொடுக்கும்.


தலையணை கிடைக்காவிட்டால் முழங்கால்களைக் குத்தென நிமித்தியபடி மடித்துப் படுங்களேன்.

அதுவும் முடியாவிட்டால் தரையில் படுத்தபடி உங்கள் கால்மாட்டில் ஒரு நாற்காலியை வையுங்கள். இப்பொழுது உங்கள் தொடைகள் நிமிர்ந்திருக்க கீழ்கால்களை உயர்த்தி நாற்காலயில் வையுங்கள். இடுப்பும் முழங்கால்களும் இப்பொழுது மடிந்திருப்பதால் முள்ளெலும்பின் பழுக் குறைந்து வலி தணியும். ஓரிரு நாட்களுக்கு இவ்வாறு ஆறுதல் எடுக்க குணமாகும்.

ஆனால் நாரிப்பிடிப்பு எனக் கூறி நீண்ட நாட்களுக்கு படுக்கையிலிருந்து ஆறுதல் எடுப்பது அறவே கூடாது. ஏனெனில் நீண்ட ஆறுதல் எடுத்தல் உங்கள் தசைகளைப் பலவீனப்படுத்திவிடும். அதனால் குணமடைவதும் தாமதமாகும். வலியிருந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு சற்று உலாவுவது நல்லது. மணித்தியாலத்திற்கு ஒரு தடவையாவது எழுந்து அவ்வாறு நடப்பது அவசியம்.

சுடுதண்ணி ஒத்தடம் கொடுப்பது அல்லது சிவப்பு லைட் (Infra Red Light) பிடிப்பதும் வலியைத் தணிக்க உதவும். மாறாக ஐஸ் பை வைப்பதுவும் உதவாலாம். வலி கடுமையாக இருந்தால் அஸ்பிரின், பரசிட்டமோல் அல்லது இபூபுறுவன் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை எடுக்க நேரிடலாம்.

நாரிப்பிடிப்புக்கு டொக்டரிடம் செல்ல வேண்டுமா?

நாரிப்பிடிப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது என்ன போன்ற விடயங்களை ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால் நாரிப் பிடிப்புகள் அனைத்துமே இவ்வாறு உங்கள் சுயமுயற்சியால் குணமாக்கக் கூடியவை அல்ல!

வலி தாங்க முடியாததாக இருக்கலாம்.
அல்லது உங்கள் நாரிப்பிடிப்பிற்கு வேறு பாரதூரமான அடிப்படைக் காரணங்கள் இருக்கலாம். அவ்வாறான தருணங்களில் ஹலோ டொக்டர் என அழைத்து உங்கள் வைத்தியரை நாட வேண்டியதுதான். வேறு வழியில்லை.

அவ்வாறு வைத்திய ஆலோசனை பெற வேண்டிய தருணங்கள் எவை?

உங்கள் நாரிப்பிடிப்பின் வலியானது பிடித்த இடத்தில் மட்டும், மட்டுப்பட்டு நிற்காமல் கால்களுக்கு, அதிலும் முக்கியமாக முழங்கால்களுக்கு கீழும் பரவுமானால் நரம்புகள் முள்ளெலும்புகளிடையே அழுத்தபடுவது காரணமாகலாம். அவ்வாறெனில் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

 உங்கள் கால், பாதம், பிறப்புறுப்புப் பகுதி அல்லது மலவாயிலை அண்டிய பகுதிகளில் உணர்வு குறைந்து மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்படுமாயின் அது நரம்புகள் பாதிப்புற்றதால் இருக்கலாம். நீங்கள் நிச்சயம் வைத்தியரை அணுகவேண்டும்.

 அதேபோல உங்களை அறியாது, அதாவது உங்கள் கட்டுப்பாடின்றி மலம் அல்லது சிறுநீர் வெளியேறுவது மிக பாரதூரமான அறிகுறியாகும். அதாவது மலம் அல்லது சிறுநீர் வெளியேறுவது முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதிருப்பது நரம்புகள் பாதிக்கக்பட்டதின் அறிகுறியாகும். கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றே தீரவேண்டும்.

 காய்ச்சல், ஓங்காளம், வாந்தி, வயிற்று வலி, உடற் பலயீனம், கடுமையான வியர்வை போன்ற அறிகுறிகள் நாரிப்பிடிப்புடன் சேர்ந்து வருமாயின் அது தொற்று நோய், சிறுநீரகக் குத்து, சதைய நோய் போன்ற எதாவது ஒன்றின் வெளிப்பாடாக இருக்கலாம் என்பதால் வைத்திய ஆலோசனை அவசியம் தேவை.

 வீட்டிற்குள்ளேயே நடமாடித் திரிய முடியாதபடி வலி மிகக் கடுமையாக இருந்தாலும் நீங்கள் வைத்தியரைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

 பெரும்பாலான முதுகு, நாரி வலிகள் மேற் கூறிய நடைமுறைச் சிகிச்சைகளுடன் ஓரிரு வாரங்களுக்குள் குணமாகிவிடும். அவ்வாறு குணமடையாவிட்டாலும் வைத்தியரைக் காண்பது அவசியம்.

மாத்திரைகள், வெளிப் பூச்சு மருந்துகள், பயிற்சிகள் முதல் சத்திர சிகிச்சை வரை பல விதமான சிகிச்சைகள் உண்டு. உங்கள் நோயின் நிலைக்கு ஏற்ற சிகிச்சையை வைத்தியர் தீர்மானிப்பார்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்தியர்

நன்றி:- வீரகேசரி

Read Full Post »

>

“எனக்கு அடிக்கடி கண்ணிலை மெல்லிய அராத்தல் இருக்குது.அதோடை சில நேரம் கண்ணால் பூளையும் வருவதுண்டு’என்றார் அந்த மத்திய வயது மனிதர்.

இது கண்நோயா?

இருக்காது கண்நோய் (Conjuntivitis) என்பது தொற்றுநோய்.ஆனால் அடிக்கடி வருவதில்லை.அத்துடன் இவரது கண்ணானது,கண்நோயில் இருப்பது போல அதிக சிவப்பாகவும் இருக்கவில்லை.

ஒவ்வாமையால் வரும் (Allergic Conjuntivitis) நோய் எனில் கண்ணில் அரிப்பு இருக்கும். தூசி போன்ற அந்நியப் பொருட்கள் விழுவதாலும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

காரணம் என்னவாக இருக்கும் என யோசிக்க வைத்தது.

“வேறை கண் வருத்தம் ஏதாவது இருக்கோ? அதற்கு கண் மருந்து வழமையாக விடுகிறீர்களா’ என விசாரித்தேன்.

“குளுக்கோமா இருக்கு. தினமும் துளி மருந்து விடுகிறேன்’ என்றார்.

கண்ணுக்கு மருந்து விடும் செயலானது சரியான முறையில் செய்யப்பட வேண்டும்.இல்லையேல் அந்த மருந்தின் பலன் முழுமையாகக் கிட்டாது என்பதுடன் வேறு நோய்களுக்கும் கராணமாகிவிடும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

எனவே சரியான முறையில் கண் மருந்து விடும் முறையை அறிந்திருப்பது அவசியம்.

முதலில் கண் மருந்துள்ள குப்பியின் மூடியைக் கழற்றுவீர்கள் அல்லவா? அழுக்குகள் பட்டு மாசடையும் வண்ணம் அந்த மூடியின் வாய் புறத்தை மேசையிலோ தரையிலோ வைக்க வேண்டாம். மூடி மாசடைந்தால் குப்பியை மூடும்போது அதிலுள்ள மருந்திலும் கிருமி பரவி அடுத்த முறை உபயோகிக்கும்போது கண்ணுக்கு பரவலாம்.எனவே மூடியை மறுகையில் வைத்திருங்கள். அல்லது அதன் வாய்ப்புறம் கீழே படாதவாறு வையுங்கள்.

மிக முக்கியமாக, கண்ணுள் மருந்துத் துளியை விடும்போது குப்பியின் முனை கண்ணில் தொடாதவாறு கவனம் எடுக்க வேண்டும். கண்ணில் முட்டினால் இரண்டு வெவ்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.

அவ்வாறு முட்டும்போது அதன் முனை கண்ணினுடைய மென்மையான திசுகளில் பட்டு நுண்ணிய உராசல் காயங்களை ஏற்படுத்திவிடும். மீண்டும் மீண்டும் இவ்வாறு நடந்தால் கண் புண்படும் அபாயம் உண்டு.

இராண்டாவது ஆபத்து என்னவென்றால் குப்பியின் முனை கண்ணில் தொட்டால் ஏற்கனவே கண்ணில் இருக்கக்கூடிய மாசுகள் அல்லது கிருமிகள் முனைவழியாக உட்சென்று கண்மருந்தையே மாசடையச் செய்துவிடும். அங்கு அவை பெருகி மீண்டும் இடும்போது ஊறுவிளைக்கும்.

துளி மருந்தை கண்ணில் இடுவது எப்படி?

மூடியைக் கழற்றிய பின் மருந்துக் குப்பியை வலது கையின் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் பற்றி எடுத்து கண்ணருகே கொண்டு சென்று குப்புற பிடியுங்கள். மறுகையால் கண்ணின் கீழ் மடலை சற்று இழுங்கள். அப்போது இங்கு சிறு குழிபோல் தோன்றிய இடத்தில் துளி மருந்தை இடுங்கள். முன்பு கூறியதுபோல குப்பியின் முனை கண்ணில் படாதிருக்கவேண்டும் என்பது முக்கியமாகும்.

ஒரே கையால் மருந்து விடக் கூடிய முறையும் உள்ளது. முன்பு கூறியதுபோல வலது கையால் குப்பியை எடுத்து பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் பற்றியபடி சின்ன விரலால் கண்ணின் கீழ் மடலை இழுத்தபடியே குப்பியைக் சரித்து கண்ணில் துளி மருந்தை விட வேண்டும். மேற்கூறிய இரண்டு முறைகளிலும் மருந்து விடும்போது குப்பியின் நுனியானது கண்ணிலிருந்து இரண்டு அல்லது மூன்று சென்ரிமீற்றர் மட்டும் மேலே நிற்பதால் மருந்து குறி தவறி வெளியே விழுந்து கன்னம் வழியே வழிந்தோடி வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.

கண் மருந்து விடுவதற்கு முன் உங்கள் கைகளைக் கழுவி சுத்தம் செய்வது முக்கியமானதாகும். அத்துடன் ஒட்டுக் கண்வில்லை (Contact Lens) அணிந்திருந்தால் அதை எடுத்துவிடவும் மறக்கவேண்டாம்.

கண் மருந்து விட்டவுடன் கண்களை மூடுவது அவசியம். உங்கள் சுட்டுவிரலால் கீழ் கண் மடலின் உட்புற மூலையை மூக்கோடு சேர்த்து சிறிதுநேரம் அழுத்திப் பிடிப்பது நல்லது. அவ்வாறு செய்வதன் மூலம் கண்ணுள் விழும் மருந்தின் பெரும் பகுதியானது கண்ணுக்கும் மூக்கிற்கும் இடையேயுள்ள சிறு குழாய் (Nasolacrimal duct) வழியாக தொண்டைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் கண்மருந்து வீணாகாமல் இருப்பதுடன், அது உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமலும் தடுக்கிறது. இரண்டு வெவ்வேறு வகையான மருந்துகளை கண்ணுக்கு இடவேண்டியிருந்தால் குறைந்தது ஜந்து நிமிட இடைவெளியாவது இருப்பது அவசியம்.

முன்பு குறிப்பிட்டவர் மருந்து விடும்போது அடிக்கடி குப்பியின் முனை கண்ணில் முட்டியதாலேயே கண்ணில் வேதனை ஏற்பட்டது. சரியான முறையில் மருந்து இடுவது பற்றி அறிந்ததும் அப் பிரச்சினை தீர்ந்தது.

ஆதாரம்-: Australian Prescriber February 2008

நன்றி
தினக்குரல்:- 30.06.2008

Read Full Post »