Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2008

>

நீங்கள் வேலைக்குச் செல்லும் பெண்ணா? மாதவிலக்கு உங்கள் பணிக்குத் தொல்லையாக இருக்கிறதா?

அத்தோடு இன்னொரு குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்ற எண்ணத்தில் உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு நற் சேதி.

உங்களைப் போலவே வேலைக்குச் செல்லும் பெண்கள் பலருக்கும் மாதவிடாய் என்பது ஒரு இடைஞ்சல். மாதவிடாய் சம்பந்தப்பட்ட உடல் உள உழைச்சல்களுடன் புன்னகை போர்த்திக் கொண்டு தொழில் செய்வது பெரும் துன்பம். அத்தோடு குழந்தைகள் பெறுவதையும் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம். இல்லையேல் தொழிலையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாதிருக்கிறது.

இத்தகையோருக்கு உதவுவதற்காக புதிய வகை குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் அறிமுகமாயுள்ளன.


தொழில் புரிபவர்களுக்காக மட்டுமல்ல, வேறு காரணங்களுக்காக தமது மாதவிலக்கு குறைவாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கும் இது உதவும்.

வேறு மருத்துவ காரணங்களுக்காக மாதவிடாயின் குருதிப்பெருக்கை குறைக்கவும், மாதவிடாய்களுக்கு இடையேயான கால இடைவெளியை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களும் உதவும்.

இந்த புதிய வகை மாத்திரைகளின் விஷேசம் என்ன? இவை மூன்று வகையானவை.

முதலாவது, வழமையான மாத்திரைகள் போல ஒரு மாதத்திற்கானது. இதனால் மாதாமாதம் மாதவிலக்கு வரும். ஆனால் குருதிப்போக்கு இருக்கும் நாட்களின் எண்ணிக்கை குறையும். அதனால் இரத்த இழப்பும் குறையும். இதை எப்படிச் செய்கிறாரகள்? வழமையான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரை அட்டைகளில் 21 ஹோர்மோன் மாத்திரைகளும், 7 சத்து மாத்திரைகளும் இருக்கும். ஆனால் இதில் ஹோர்மோன் மாத்திரைகள் 24ஆக அதிகரிக்கப்பட்டு, இரும்புச் சத்து மாத்திரைகள் 4 ஆகக் குறைந்திருக்கும்.

இரண்டாவது வகை குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை உபயோகிக்கும்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே மாதவிலக்கு வரும். அதாவது வருடத்திற்கு மூன்று தடவைகள் மட்டுமே வரும். இதற்குக் காரணம் அதிலுள்ள ஹோர்மோன் மாத்திரைகள் 84 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சத்து மாத்திரைகளும் 7 ஆக இருக்கும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்போது குருதிப் போக்கு 7 நாட்கள் வரை இருக்கலாம்.

மூன்றாவது வகை குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை உபயோகிக்கும்போது உங்களுக்கு மாதவிலக்கே வராது. ஏனெனில் அதில் வழமையான ஹோர்மோன் மாத்திரைகள் மட்டுமே இருக்கும்.

இம் மூன்று புதிய வகை மாத்திரைகளும் கரு தங்குவதைத் தடுப்பதைப் பொறுத்தவரையில் வழமையான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் போலவே நல்ல பலனளிப்பவை.

பக்கவிளைவுகள் இருக்காதா?

பாரிய பக்கவிளைவுகள் கிடையாது. வழமையான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உபயோகிப்பவர்களுக்கு உள்ளது போன்றே சில்லறை பக்கவிளைவுகளே இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு மேல் இவற்றை உபயோகிக்கக் கொடுத்து பரிசோதித்தபோது இது தெரியவந்தது. ஆயினும் ஒரு சிலருக்கு கண்ணில் படுவதுபோல சிறிதளவு இரத்தப்போக்கு (Spotting) இருந்தது. மேலும் நீ;ண்ட காலம் பாவிக்கும்போதுதான் புதிய தகவல்கள் தெரியவரும்.

எங்கே கிடைக்கும் என்கிறீர்களா?

இப்பொழுது அமெரிக்காவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. மிக விரைவில் இங்கும் கிடைக்கலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப வைத்தியர்

நன்றி:- வீரகேசரி 28.09.2008

Read Full Post »

>
எனது ஒரு இனிய நண்பரான திரு கந்தையா கணபதிப்பள்ளையினது மறைவானது ஆழ்ந்த துயரமாக மனத்துள் சூழ்கொள்கிறது. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிட்டியிருந்தது. பருத்தித்துறை கடற்கரை வீதியில் துறைமுகத்திற்கும் ரெஸ்ட் கவுசுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலலைகளின் கீதம் தழுவும் விசாலமான காணியில் அமைந்திருந்த மஜிஸ்ரேட் பங்களாவில் வசித்த காலம் முதல் கொழும்பு வெள்ளவததை வேலுவனராம வீதியில் வாழ்ந்து மறைந்த காலம் வரை தொடர்ந்த நட்பிற்கு சடுதியாக காலன் தடையாகிவிட்டான். 


சாயி பணியும், எமது பிள்ளைகள் சேர்ந்து கல்வி கற்றதும் எமது உறவை நெருக்கமாக்கியது.


பின்நோக்கிப் பார்க்கும்போது அவர் எத்தகைய அற்புதமான மனிதர் என்பதை மறக்க முடியாதிருக்கிறது. ஆழ்ந்த சட்டப் புலமை கொண்ட அவர் நீதிபதியாக விளங்குவதற்கான சகல குண இயல்புகளையும், தகமைகளையும் கொண்டிருந்தார். நெடிது உயர்ந்த கம்பீரமான தோற்றம், அமைதி காக்கும் முகம், எளிதில் உணர்ச்சி வசப்படாத பண்பு, தனது உள் உணர்வுகளை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தாது மற்றவர் சொல்வதைக் கருத்தூன்றிக் கேட்டல், ஒவ்வொரு வார்த்தையையும் மிக அவதானமாக நிதானித்து உரைக்கும் பண்பு, நடுநிலை தவறாமை, நெருக்குதல்களுக்கு பணிந்து போகாமை என தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்.

இவற்றிற்கு மேலாக அன்பும், கருணையும், சேவை மனப்பான்மையும் அவரின் உயரிய பண்புகளாக இருந்தன. மனித விழுமியங்கள் நிறைந்திருந்தது. இதன் காரணமாக பணியாற்றிய இடங்கள் எங்கும் மக்களினதும், சக ஊழியர்களதும் பெருமதிப்பு கிட்டியது. இப்பண்புகள் அவரை இயல்பாகவே ஆன்மிகத்துறைக்குள் இட்டுச் சென்றது. பகவான் பாபாவின் பாதம்பற்றும் பாக்கியம் பெற்றார்.

சட்டக் கல்லூரியில் படித்து சட்டத்தரணியான இவர் பிரபல நொத்தாரிசாக ஏழு ஆண்டுகள் தொழில் புரிந்தபின் மூதூரில் கிராமக்கோட்டு நீதிவானாகவும், 1974லிருந்து குடாநாட்டில் மரணசாதன தத்துவ அதிகாரியாகவும், உயர்நீதி மன்றப் பதிவாளராகவும், ஆரம்ப நீதி மன்ற நீதிபதியாகவும், மாவட்ட நீதிபதியாகவும் 1996 வரை பணியாற்றினார். கொழும்பு மாவட்ட நீதிபதியாக ஒரு வருடம் பணியாற்றிய பின் 1997ல் ஓய்வு பெற்றார்.

மாவட்ட நீதிபதியாக பணியபற்றிய காலையில் நீதித்துறைலிருந்து இளைப்பாறிய போதும், தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர், சட்டக் கல்லூரி விரிவுரையாளர், நீதிவிவகார அமைச்நு தமிழ் பிரிவு இணைத் தலைவராக ஆசிரியர் என அவரது பணி இறுதி வரை தொடர்ந்தது. பெருநோய்களுக்கு ஆளானபோதும் அவற்றை மறந்து மறைத்து மலர்ந்த முகத்தோடு தொடர்ந்து செயற்பட்டார். தனது இறுதி மூச்சை விடுவதற்கு சுமார் பத்து நாட்கள் இருக்கும் வரை சட்டக் கல்லூரியில் விரிவுரையாற்றும் பணிக்குச் செல்லாமல் இருக்கவில்லை. தனது கடமைகளை எதுவரினும் புறந்தள்ளாத கர்மயோகி அவர். அவரது இறுதி யாத்திரையின் போது அவரது மாணவர்கள் உதிர்த்த கண்ணீர் இதற்குச் சான்றாகும். பிறப்பு 09.04.1937. மறைவு 18.08.2008

“உங்கள் பொறுப்புக்களைத் தள்ளி விடாதீர்கள். அவற்றை எதிர் கொள்ளுங்கள்” என பகவான் சத்ய சாயிபாபா கூறியதை சிரத்தையோடு பின்பற்றினார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

“எல்லோரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்” என்ற பகவான் திருவாக்கை இறுதிவரை கடைப்பிடித்த அவர் பகவானுடன் முழுமையாக இணைந்திருப்பார் என்ற நம்பிக்கையில் அமைதி கொள்வோமாக.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
 
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

மாத்திரைகளை எவ்வாறு உட்கொள்வது? மருந்து மாத்திரைகள் குடிப்பதென்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்? ஆசையா? வெறுப்பா? மருத்துவனான எனக்குக் கூட வேண்டாம் என்றே சொல்லத்தோன்றுகிறது. யாருக்குத்தான் மருந்து குடிப்பதில் ஆசை இருக்கப்போகிறது. அதுவும் சில மாத்திரைகளை போடும்போது, விழுங்கப்பட்டு உள்ளே செல்லு முன் தற்செயலாக வாயில் கரையும் போது ஏற்படும் கசப்புச் சுவை இருக்கிறதே, அதை நினைத்தாலே மருந்தை வெறுக்க வைக்கும். பரசிட்டமோல் போன்ற சாதாரண மாத்திரைகள் முதல் அன்ரிபயோட்டிக் மருந்துகள் வரை இவ்வாறே. மலேரியவிற்கான குளோரோகுயின் மாத்திரை பற்றிச் சொல்லவே தேவையில்லை.

எனவே பலரும் மருந்துகளை தண்ணீருடன் விழுங்க விரும்புவதில்லை. மருந்தின் சுவை தெரியாதிருக்க பழச்சாறுகள், இனிப்புச்சோடா போன்றவற்றோடு விழுங்குவதுண்டு. இவ்வாறு செய்வது சரியானதுதானா? இது மருந்தின் செயற்பாட்டில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்துமா?

இது பற்றிய ஒரு ஆய்வை லண்டன் ஒன்ராரியோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டாக்டர் டேவிட் பெய்லி (David G. Bailey, ph. D.and researchers at the university of Western Ontario in Londoon, Ontario) தலைமையிலான குழுவினர் செய்தார்கள். ஒவ்வாமைக்கு உபயோகப்படுத்தும் பெக்சோபெனடின் (fexofenadine) என்ற மருந்தை சிலருக்கு வெறும் தண்ணீருடனும்,ஏனையவர்களுக்கு கிரேப் பழச்சாற்றுடனும் கொடுத்தார்கள். பின்பு அவர்களைப் பரிசோதித்தப்போது பழச்சாற்றுடன் மருந்து உட்கொண்டவர்களுக்கு அரைவாசிமருந்தே உணவுக் கால்வாயிலிருந்து உறிஞ்சப்பட்டமை தெரிய வந்தது.

இதே போல அப்பிள்சாறு, தோடம்பழச்சாறு போன்ற வெவ்வேறு பழச்சாறுகளுடன் வேறு சில மருந்துகளைக் கொடுத்தார்கள். நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics-ciprofloxacin, levofloxacin, itraconazole) பிரஸர் மருந்துகள், இருதைய நோய் மருந்துகள், மற்றும் புற்றுநோய் மருந்துகள் இவ்வாறு பழச்சாற்றுடன் கொடுக்கப்பட்டபோது அவை உறிஞ்சப்பட்டு உடலில் சேர்வது குறைவாகவே இருந்தது. உயிர் காக்கும் இத்தகைய மருந்துகளின் செயற்பாட்டுத் திறன் குறைந்தால் நோயாளிக்கு எத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடலாம்.

உதாரணமாக உங்களுக்கு பிரஸருக்கு அட்டனலோன் 100 மி.கி. (Atenolol100 mg )சிபார்சு செய்யப்பட்டது என வைத்துக்கொள்வோம். நீங்கள் தோடம்பழச்சாற்றுடன் அதை உட்கொண்டிருந்தால் அதில் பாதிப்பகுதி அதாவது அட்டனலோல் 50 மி.கி. மட்டுமே உறிஞ்சப்பட்டிருக்கும். பிரஸர் குறையாது. அடுத்த முறை மருத்துவரிடம் செல்லும்போது உங்கள் பிரஸர் குறையாததை அவதானித்த அவர் மருந்தின் அளவைக் கூட்டவோ அல்லது மேலதிகமாக வேறொரு மருந்தையோ சிபார்சு செய்யவோ கூடும். வைத்தியரிடம் செல்லும் முன் பிரஸர் குறையாது மாரடைப்போ, பக்கவாதமோ வராதிருப்பது உங்கள் நல்ல காலத்தைப் பொறுத்தது.

சில மருந்துகளுக்குத்தான் இவ்வாறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் வேறு பல மருந்துகளின் செயற்பாட்டுத் திறனும் அவ்வாறு பழச்சாற்றினால் பாதிக்கப்படுவதை மருத்துவர்கள் கண்டறிக்கூடும்.

அதேபோல கோலா, பன்டா,ஸ்ப்ரைட் போன்ற பல்வேறு மென்பானங்களையும் (இனிப்புச்சோடா) ஆய்வுக்கு உட்படுத்தக் கூடும் . இவை மருந்துகள் உறிஞ்சப்படுவதை அதிகரிக்கவோ பாதிக்கவோ கூடும். இவை பற்றிய ஆய்வுகளுக்காக காத்திருந்து உங்கள் ஆரோக்கியத்தை நீங்களாகவே கெடுத்துக்கொள்ளப் போகிறீர்களா?

வேண்டாம் ! உங்கள் உடல் நலம் உங்களுக்கு முக்கியமானது. சுவை போன்ற தற்காலிக இடைஞ்சல்களைக் கருத்தில் கொள்ளாது மாத்திரைகளை தண்ணீருடன் உட்கொள்ளப் பழகுங்கள்.

Read Full Post »

>
நீண்ட நாட்களுக்கு பின்னர் அந்தப் பையன் வைத்தியசாலைக்கு வந்திருந்தான். சந்தோஷமாக இருந்தது. மீண்டும் என்னிடம் வைத்தியத்திற்கு வந்துள்ளான் என்பதால் அல்ல. கடந்த ஆறு மாதங்களாக அவன் என்னைப் பார்க்க வேண்டிய தேவை ஏற்படாதிருந்ததே என்ற மன ஆறுதல்.

ஆறு மாதங்களாகத் தான் அவன் வருத்தம் என்று என்னிடம் வரவில்லை. ஆனால், அதற்கு முந்தைய பத்து மாதங்களில் முப்பது தடவைகள் பார்க்க நேர்ந்தது. கணினியில் உள்ள அவனது கோப்பைப் பார்த்தபோது இது தெரிய வந்தது. எவ்வளவு துன்பம் அவனுக்கு அந்த வேளைகளில்.

ஒரே சளி வருத்தம் ! தும்மல், மூக்கடைப்பு, அரிப்பு, மூக்கால் ஓடுதல், கண்கடி, தலையிடி, தலைப்பாரம், சோம்பல், தூக்கக் குணம், இருமல், இளைப்பு, ஆஸ்மா சொல்லி மாளாது. பாடசாலை செல்லத் தொடங்கி சில மாதங்கள்தான். ஆனால், ஒழுங்காகப் பாடசாலை செல்ல முடியாது, படிக்க முடியாது. இதனால் பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் தூற்றலுக்கு ஆளாக நேர்ந்தது.

அத்தோடு குளிக்காதே, தண்ணி அளையாதே, குளிர்பானம் அருந்தாதே, பழங்கள் சாப்பிடாதே என்ற பெற்றோர்களின் கட்டுப்பாடுகள். மருந்துக்கு மேல் மருந்துகளும் சேர்ந்து கொள்ளவே மகிழ்ச்சியைத் தொலைத்து மந்தமானவனாக மாறியிருந்தான்.

விழுந்ததால் காலில் ஏற்பட்ட உரசல் காயத்திற்காக வந்திருந்தான். சளித்தொல்லைக்காக அல்ல. காயம் பட்டபோதும் இளமையின் உற்சாகம் முகத்தில் பளிச்சிட்டது.

“எப்படி மறைந்தது சளித் தொல்லை’ பெற்றோர்களிடம் வினவினேன்.

“வீடு மாறினோம்.அதிலிருந்து இவனுக்கு சளிபிடிப்பதில்லை’ என்றார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறதா? வீடு மாறினால் சளி பிடிக்காதா!

காரணம் இதுதான். முன்பு அவர்கள் குடியிருந்த வீட்டிற்குப் பின் புறமாக தெருவோரக் கழிவுக் கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. இரவானதும் இவர்கள் வீடெங்கும் அங்கிருந்து படையெடுந்து வரும் கரப்பொத்தான் பூச்சியின் இராச்சியம் தான். இப்பொழுது குடியிருப்பது தொடர்மாடி வீட்டில். அதுவும் 5 ஆம் மாடியில் அங்கு கரப்பொத்தான் அதிகமில்லை. அதனால் இங்கு கரப்பொத்தான் அதிகமில்லை. அதனால் இங்கு அப் பூச்சியின் எச்சங்கள் இருப்பதில்லை. எனவே சளித்தொல்லை நீங்கிவிட்டது.

சரி! சளிக்கும் கரப்பொத்தானுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

சளி, ஆஸ்மா ஆகியவற்றைத் தூண்டுபவையாக பல பொருட்கள் ஆய்வு ரீதியாக இனங்காணப்பட்டுள்ளன. பூக்களின் மகரந்தம், நாய், பூனை போன்ற வளர்புப் பிராணிகளின் ரோமம், தூசி, தூசிப்பூச்சி, கரப்பொத்தான் எச்சம் எனப் பலவாகும்.

இது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இலங்கையைப் பொறுத்தவரையில் வீட்டுத் தூசிப்பூச்சி, களஞ்சியத் தூசிப்பூச்சி, கரப்பொத்தன் ஆகிய மூன்றுமே ஆஸ்மாவைத் தூண்டுவதற்கு முக்கிய காரணமாகும். இதனை பேராசிரியர் அனுரா வீரசிங்க (Prof.Anura Weerasinghe)தலைமையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு தெளிவாகக் குறிப்பிடுகிறது. எமது சூழலில் ஆஸ்மாவுக்கு பூக்களின் மகரதம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் ஆகியவை முக்கியமான காரணிகள் அல்லவாம்.

எமது படுக்கை விரிப்பு, தலையணை,மெத்தை போன்றவற்றில் மிக நுண்ணிய கிருமி (Dust mite) சேர்ந்து விடுவதுண்டு. அவற்றை நீரில் துவைத்து சுத்தப்படுத்துவதால் அக்கிருமியை ஒழித்து விடமுடியாது. அவற்றை வெயிலில் காயவைக்க வேண்டும் அல்லது இஸ்திரிக்கை போட வேண்டும்.

எமது உடைகள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றைக் களஞ்சியப்படுத்தும் இடத்தில் களஞ்சியப்பூச்சி (Storage Mite)உற்பத்தியாகும். இவை இரண்டுமே ஆஸ்மாவைத் தூண்டும் ஏனைய காரணிகளாகும். நீங்கள் சளி, ஆஸ்மா போன்றவை உள்ளவராயின், வீட்டுத் தூசிப்பூச்சி, களஞ்சியதூசிப்பூச்சி, கரப்பொத்தான் ஆகியவற்றோடு தொடர்புறுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆயினும் கரப்பொத்தான் பூச்சியிலிருந்து தப்புவது சற்று சிரமமான காரியம்தான். இறைவனைப் போல எங்கும் நிறைந்தவனாக எல்லாம் வல்லவராக இருக்கிறார். டைனோசியர் போன்ற பாரிய உயிரினங்கள் பலவும் சூழல் மாற்றங்களுக்கு இசைவடைய முடியாது மறைதொழிந்து போக கரப்பொத்தான் பூச்சியோ இன்றும் தாக்குப் பிடித்து நிற்கிறது.

உலகத்திலிருந்து ஒழிக்க முடியாவிட்டால் போகிறது. உங்கள் வீட்டிலிருந்தாவது ஒழியுங்களேன். வீடு மாறினாலும் நீங்கள் கவலையீனமாக இருந்தால் புதிய இடத்திலும் வந்து சேரக் கூடிய தீரன் அது.

டாக்டர் எம்.கே.முருகானந்தன்

Read Full Post »