Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஏப்ரல், 2009

>ஒரு நெசவுத் தொழிலாளியின் அவல வாழ்க்கை

காஞ்சிவரம்

அந்தப் படத்தின் டிவீடி பிரதியைப் பெறுவதற்கு நான் பட்ட கஸ்டம் கொஞ்சநஞ்சமல்ல. இங்கு வீதிக்கு வீதி தமிழ்த் திரைப்பட வீடியோக்கள் விற்பனைக்கு கிடைக்கும். வீடியோ கடைகளில் மட்டுமல்ல, வீதியோரமாக பேவ்மென்ட்டிலும் பரப்பி வைத்து விற்பார்கள். பல இடங்களில் விசாரித்தும் இல்லை என்று விட்டார்கள். சிலர் அப்படி ஒரு படம் வந்ததா என ஆச்சரியப்பட்டார்கள்.

ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சாதாரண விற்பனைச் சிப்பந்தி ‘இல்லை’ என்ற போது முதலாளி குறிக்கிட்டு ‘கொப்பி முடிந்துவிட்டது. வீட்டில் கம்பியூட்டரில் இருக்கிறது கொப்பி பண்ணித் தாறன். நாளைக்கு வாங்கோ’ என்றார். மறுநாள் அல்ல நாலு நாட்கள் அலைச்சலின் பின் கொப்பி கிடைத்தது. நல்லவேளையாக அது நல்ல பிரதி. கமராப் பிரதி அல்ல. அந்தக் கடைக்காரருக்கு எனது மனமார்ந்த நன்றி.

கில்லி, பில்லா, சுள்ளி படங்கள் என்றால் என்றும் எப்பொழுதும் கிடைக்கும். இது போன்ற காவியப் படங்கள் என்றால் தேடினாலும் கிடைக்காது.

வாழ்க எமது சினிமா ரசனை!

காஞ்சிவரம் அண்மையில் பார்த்த அற்புதப் படம் இது எனலாம். அறுபது வருடங்களுக்கு முன்னான ஒரு நெசவாளியின் வாழ்க்கைத் தரிசனம் அலங்காரப் பூச்சுகளின்றி ஆனால் கலை மெருகோடு கிடைக்கிறது. காந்தி இறந்த மூன்றாம் நாள் பஸ்சில் அழைத்துச் செல்லப்படும் ஒரு கைதியின் நினைவுகளாக படம் மேலும் பின்னோக்கி நகர்கிறது.

வேங்கடம் என்ற ஒரு பட்டுத் துணி நெசவாளியாக பிரகாஸ்ராஜ். மிகவும் திறமை வாய்ந்த நெசவாளி. வெள்ளைக்காரத்துரை முதல், அவருக்கு தொழில் கொடுக்கும் அதிகாரி வரை அனைவராலும் மிகத் திறமையான நெசவாளி எனப் பாராட்டப் பெற்றவர்.

அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தை. குழந்தைக்கு பெயர் சூட்டு வைபவத்தின் போது பிறந்த குழந்தையின் காதில் தகப்பன்; பேசி ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும். மனைவி, உற்றார் உறவினர் ஊரவர் முன்னிலையில் அவர் தெளிவாக ஒரு வாக்குறுதி கொடுக்கிறார்.

அவர் கொடுக்கும் வாக்குறுதி அனைவரையும் அசர வைத்துவிடுகிறது. இது ஒரு பட்டு நெசவாளியால் நிறைவேற்றக் கூடியதா? இது தகுதிக்கு மீறியதல்லவா? எப்படி நிறைவேற்றப் போகிறான் என்ற ஆச்சரியம் எல்லோருக்கும்.

மனைவியோ முடியாததற்கு வாக்குக் கொடுத்து மரியாதை கெடப் போகிறாரே எனக் கவலையில் மூழ்குகிறாள்.

அப்படி என்ன பெரிய வாக்கை அவன் கொடுத்துவிட்டான்? வேறொன்றுமில்லை! தனது மகள் வளர்ந்து கல்யாணமாகும் போது அவளுக்கு பட்டுச்சேலை கொடுப்பேன் என்கிறான். மகளுக்கு ஒரு பட்டுச்சேலை திருமணத்தின் போது கொடுப்பது அப்படி என்ன முடியாத காரியமா என யோசிக்கிறீர்களா. அதுவும் பட்டுப் புடவை நெய்யும் தொழிலாளிக்கு.

ஆம். அந்தத் தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரம் அத்தனை மோசமாக இருந்தது. அன்றும் அப்படி இருந்தது இன்றும் அவர்கள் நிலையில் மாற்றம் இல்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். நாள் முழுக்க பட்டு நூலோடும் தறியோடும் உழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும்.

வாழ்நாள் முழுவதும் பட்டுத் துணியோடு வேலை செய்தாலும் உடுக்கக் கிடைப்பதோ சாதாரண துணிதான். வீட்டில் வைத்து பட்டுத் துணியை நெய்யக் கொடுத்தால் அதில் திருட்டுச் செய்து விடுவார்கள் என்பதால் கோவிலில் வைத்துத்தான் தொழில் செய்ய வேண்டும். வேலையால் வீடு திரும்பும்போது பட்டு நூலைக் களவாக எடுத்துச் செல்கிறார்களா என்று சோதித்துத்தான் வெளியே விடுவார்கள். பற்றாக்குறை, ஏழ்மை, அவமதிப்பு, இவைதான் அவர்கள் அறிந்தது.

இந்தச் சூழ்நிலையில் பிரகாஸ்ராஜ் தனது மகளுக்கு பட்டுச் சேலை கொடுப்பதற்காகப் பட்ட வேதனைகளைத்தான் திரைப்படம் பேசுகிறது. அவனால் தனது வாக்குறதியை நிறைவேற்ற முடிந்ததா?

இந்த நேரத்தில் அவர்களது கிராமத்திற்கு ஒரு எழுத்தாளர் வருகிறார். அவர் மூலம் அவர்களுக்கு பல புதிய விடயங்கள் தெரியவருகின்றன.

தொழிலாளர்களது உரிமை என்றால் என்ன? அதைப் பெறுவதற்கு போராட்டம், பணிப் புறக்கணிப்பு போன்ற வழிமுறைகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் அந்த எழுத்தாளர் ஒரு கம்யூனிஸட் கட்சிக்காரர். தலைமறைவாக இருக்கிறார் என்பது பின்னால் தெரிகிறது.

ஆயினும் இது இடதுசாரி அரசியல் சார்ந்த படமோ அல்லது வெற்று இலட்சியங்களைப் போதிக்கும் படமோ அல்ல. காந்தி இறந்த மூன்றாம் நாள் இந்தக் கதை முடிவுறுவதால் ஆங்கிலேயர் ஆட்சிக்காலக் கதை என்பது வெளிப்படை.

அக்காலத்தில் கம்யூனிசக் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. அரசின் இடுங்குப் பிடி அவர்களை துரத்துகிறது. கோரமாக ஒடுக்குகிறது. அதனால் அவர்கள் தலைமறைவாகவே இயங்குகிறார்கள். உலகப் போரில் ரஷ்யாவும் நேசநாடு என்பதால் தடை நீக்கப்படவே வெளிப்படையாக இயங்க முடிகிறது. இப்பொழுது அவர்களின் கொடியை வெளிப்படையாகப் பறக்க விட முடியும். படம் நகர்கையில் இந்த வரலாற்றை கதையோடு கதையாக உணர்கிறோம்.

அதேபோல மற்றொரு சரித்திரக் காட்சி! முதல் முதலாக மாடு இல்லாமல் ஓடி வரும் வண்டியைக் காண ஊர்ச்சனங்கள் வீதியோரம் கூடியிருப்பதும் அந்த வண்டி எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அவர்கள் பேசி கொள்வதும் சுவார்ஸமான காட்சியாகும். ஆனால் மோட்டார் வண்டியைப் பார்க்க ஓடும் கூட்டத்தில் அவரது மனைவி விழுந்து மிதியுண்டு நோயுறுவது அவலத்தின் ஆரம்பம்.

படத்தின் பிரதான பாத்திரம் பிரகாஸ்ராஜ். ஆனால் வழமையான கதாநாயகன் அல்ல. ஓடிவிளையாடும் காதல் பாட்டோ, பலரை அடித்து விழுத்தும் ஸ்டன்ட் காட்சிகளோ அவருக்குக் கிடையாது. அதிகாரியிடமும், ஏனையவர்களிடமும் அடி வாங்குகிறார். அவமானப் படுகிறார். பொய் சொல்லுகிறார். திருடுகிறார். கம்யூனிச இயக்கத்தில் ஈடுபட்டு கூட்டம் கூட்டுகிறார். அரிவாளும், சுட்டியலும் கொண்ட செங்கொடி தூக்குகிறார், நெசவுத் தொழிலாளர்களின் நலனுக்காக அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கிறார்.

தொழிலாளர்கள் உறுதியாக நின்ற போதும் தனது மகளுக்கு எப்படியாவது பட்டுச்சேலை நெய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக பொய்காரணம் காட்டி வேலைக்குப் போகிறார். சகதொழிலாளர்களின் வெறுப்புக்கு ஆளாகிறார். அங்கு மகளுக்கு சேலை நெய்வதற்காக பட்டு நூல் திருடி வாய்க்குள் அமுக்கிக்கொண்டு வெளியே கொண்டு வருகிறார். அகப்படுகிறார். ஏனைய தொழிலாளிகளின் முன்னும் ஊரவர்கள் முன்னும் அவமானப்படுகிறார். கைதாகிறார். சிறைப்படுகிறார்.

ஆம் வறுமையின் காரணமாகவும், சுயநலத்திற்காகவும் புனிதமான கொள்கைகளைக் கைவிட்டு விடுகிறார். வேங்கடம் முதலான அந்த மக்கள் இலட்சிய புருசர்கள் அல்லர். நிஜமான மனிதர்கள். நிதமும் வாயையும் வயிற்றையும் நிரப்ப அல்லாடுகிறார்கள்.

அழிவைவிட வாழ்வு உன்னதமானது. அதனால்தான் தமது வாழ்வின் இக்கட்டுகளிலிருந்து மீள திருடவும் பொய் சொல்லவும் செய்கிறார்கள். இலட்சியங்களைக் கைவிடுகிறார்கள். அதேநேரம் அவர்கள் கெட்ட மனிதர்களும் அல்ல. அவற்றைச் செய்தும் வறுமையும், இயலாமையும், கையறு நிலையும் அவர்களைத் துரத்துகிறது.

மனைவியை இழக்கிறார். சிறைக்குப் போன தருணத்தில் மகள் கிணற்றில் விழுந்து உயிருள்ள பிணம் போலாகிறாள். அவளைப் பாரக்க வேங்கடம் சிறையிலிருந்து லீவில் வருவதிலேயே படம் ஆரம்பித்தது. எழ முடியாது நினைவின்றிக் கிடக்கும் மகளைப் பாரமரிக்க எவருமில்லை. அவளைப் பெண்ணெடுக்க இருந்த தங்கை குடும்பமும் கைவிரித்து விடுகிறது. தானும் மீளச் சிறை சென்றுவிடும்போது அவளுக்கு ஏற்படம் போகும் அவலத்தை நினைத்து தானே தன் மகளுக்கு உணவோடு நஞ்சைக் கலந்து ஊட்டிக் கொல்கிறார்.

ஒவ்வொரு காட்சியும் ஒடுக்கப்பட்ட வறுமையில் வாடும் அந்த மக்களின் துன்ப துயரங்களையே பேசுகிறது. சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் கிடையாது. காதல் பாட்டும் இல்லை. வேகமான கதைத் திரும்பம் ஆடம்பரக் காட்சிகள் என்று எதுவுமே கிடையாது. ஆயினும் எந்த ஒரு இடத்திலும்; சலிப்பு ஏற்படாத விதத்தில் கதையையும், காட்சி அமைப்புகளையும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஸன். இவர் இங்கு அதிகம் அறியப்படாதவர். மலையாளத் திரைப்படத் துறை சார்ந்தவர்.

துயரம் ஒவ்வொரு பிரேமிலும் நிறைந்து வழிகிறது. அதற்குள் எம்மையும் நனைத்து ஊறித் தெக்க வைத்துவிடுகிறார். ஆழ்துயரத்தை வெளிப்படுத்துவது போல காட்சிகள் மிக மங்கலான வர்ணப் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளன. கண்களைப் படபடக்க வைக்கும் கலர்கலரான காட்சிகளுக்குப் பதில் கருமையும் மண்ணின் நிறமும் கலந்தது போன்ற பின்னணிக் கலர் திரைப்படம் முழுக்க விரவி நிற்கிறது. படம் சொல்ல விரும்பும் செய்திக்கு ஏற்றதாக பார்வையாளர் மனத்தைச் சோகத்துடன் ஒன்றிவிட உதவியாக உள்ளது. மிக நேர்தியான ஒளிப்பதிவு செய்த திரு திரைப்படத்தின் காட்சிபடுத்தலை உச்சத்திற்கு இட்டுச் செல்கிறார்.

ஆயினும் இறுதிக் காட்சியில் பிணமாகக் கிடக்கும் மகளை பட்டுத் துணியால் மூட முயலும்போது, பின்னணிக் காட்சிகள் கருமை சார்ந்திருக்கும்போது அந்தப் பட்டுப் புடவை மட்டும் வர்ணக் கலரில் பளிச்சிடுவது எரிச்சல் ஊட்டுகிறது. மையக் கருவை முனைப்புடன் காட்டுவதற்கான மிகைப்படு;தலாக உறுத்தியது.

நடிப்பைப் பொறுத்தவரையில் பிரகாஸ்ராஜ் தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இத்தகைய ஒரு பாத்திரத்தில் அதுவும் மிக வித்தியாசமான படத்தில் நடிக்க அவர் எடுத்துக் கொண்ட ரிஸ்க் மிகப் பெரியது. அண்மையில் வெளி வந்த அபியும் நானும் போன்ற பல படங்கள் அவரது ஆதரவில் வந்ததைப் பார்க்கும்போது நல்ல திரைப்படத்தில் அவருக்கு உள்ள ஆர்வம் புலப்படுகிறது.

ஆயினும் சில காட்சிகளில், மகள் இறந்து கிடக்கும் போது பாதி மட்டுமே நெய்த பட்டுத் துணியால் அவள் உடலைப் போர்த்தி மூட முயலும்போதும், தன் சுயநலதிற்கான வேலை நிறுத்தத்தை இடை நிறுத்தி வேலைக்கு போவோம் என சக தொழிலாளர்களை கூட்டம் போட்டு மழுப்பலாகப் பேசும் போதும் சற்று மிகை நடிப்பாகத் தெரிகிறது.

மனைவியாக நடித்த ஸ்ரெயா ரெட்டி நன்றாகவே செய்துள்ளார். அவரைத் தமிழ் திரையுலகம் இதுவரை நன்கு பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால் வேங்கடத்தின் மகளாக வரும் புது நடிகையின் பேசும் கண்களும், இயல்பான நடிப்பும் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளதைப் புலப்படுத்துகிறது.

இந்தப் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக எம்மை அந்தக் காலத்தில் சூழலுக்குள் ஆழ்த்துவதற்கான முழு முயற்சியை எடுத்திருப்பதைச் சொல்லலாம். அக்காலத்திற்கு ஏற்ற உடைவகைள், பஸ், விளக்கு, பொலிஸ்காரர் என கவனம் எடுக்கப்பட்டுள்ளது.

இவரை கூட்டி வரும் பொலீஸ்காரனின் தொப்பியில் உள்ள அரச இலட்சனை கழன்று விடுவதும், அது தொப்பியில் இலட்சனை இல்லாமல் நீதிபதி முன் ஆஜராகப் பயந்து அதனைத் தொப்பியில் தைப்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளும், அது பயனளிக்காமல் ஒட்டிக் கொண்டு சென்று, உசாரகக் சலூட் அடிக்கும்போது இலட்சனை கழன்று விழுவதும் மட்டுமே படம் பார்க்கும்போது எமது முகத்தசைகளை சற்று ரிலக்ஸ் பண்ண வைத்து புன்னகைக்க வைக்கும் காட்சியாகும்.

அந்தக் கால ‘தேவதாஸ்’ போல இன்றைக்கு முற்று முழுதாக சோகத்தை விதைத்து, விருட்சமாக மலைக்க வைக்கும் வண்ணம் எழுந்து நிற்கிறது. கலையார்வமுள்ள திரைப்பிரியர்கள் தப்ப விடக் கூடாத திரைப்படம் இது.

நன்றி:- வீரகேசரி 19.04.2009
எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>‘பறபற’வென தலையைச் சொறிந்து கொண்டு வந்தாள் அந்தப் ‘குட்டித் தேவதை’. வயது பத்து இருக்கும்.

கூட்டிக் கொண்டு வந்த தாயின் முகத்தில் கோபமும் எரிச்சலும் பொரிந்தன.

‘இவளின்ரை தலையிலை பேன் மண்டிப் போய்க் கிடக்கு. மருந்து, ஷாம்பு என்று எதுக்கும் ஒழியுதில்லை’ எனச் சினந்தாள்.

உண்மைதான் பள்ளி செல்லும் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் ஒரு பிரச்சனைதான் பேன் தொல்லை. அமெரிக்காவில் மட்டும் வருடாந்தம் 6 முதல் 12 மில்லியன் குழந்தைகள் பேன் தொல்லையால் பாதிப்புக்கு உள்ளாகிறார்களாம்.

இதனை ஒரு நோய் என்று கூற முடியாவிட்டாலும் கூட பிள்ளைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. பெற்றோர்களும் ஆயாசத்திற்கு ஆளாகிறார்கள். மருந்துகளுக்குப் பேன்கள் பழக்கப்பட்டு விடுவதாலும், பாடசாலைச் சூழலில் மீண்டும் மீண்டும் தொற்றுவதாலும் அது என்றுமே தீராத பிரச்சனையாகத்தான் இருக்கிறது.

லின்டேன், மலத்தியோன் போன்ற வழமையான மருந்துகளை அந்த அம்மாவும் உபயோகித்துக் களைத்துவிட்டாள். இவை இரசாயன மருந்துகள் என்பதால் பக்க விளைவுகள் ஏற்படுமே என்ற எண்ணம் அவளை ஒத்த பெற்றோர்களை மேலும் பயமுறுத்துகிறது.

முன்பு நீங்கள் எல்லோரும் பாவித்திருக்கக் கூடிய பேன் சீப்பு பக்கவிளைவு அற்றது மாத்திரமல்ல பேன்களையும் ஈர்களையும் ஒழிப்பதில் வல்லதும் கூட. ஆயினும் ஒவ்வொரு தடவையும் சில மணி நேரமாகப் பல நாட்களுக்குத் தொடர்ந்து நேரம் இதற்கென ஒதுக்க வேண்டும். இன்றைய அவசர சூழலில் அவ்வாறு மினக் கூடியளவு நேரமோ பொறுமையோ பெற்றோர்களுக்குக் கிடையாது.

இப்பொழுது ஒரு நல்ல செய்தி! சுடுகாற்றை அழுத்தத்துடன் பிரயோகிப்பதன் மூலம் பேன்களையும், ஈர்களையும் கொல்ல முடியுமாம். இது ஒரு மருத்துவ ஆய்வின் முடிவு. சுடுகாற்றை அழுத்தத்துடன் பிரயோகிப்பதற்கு முடி உலர்த்திகளைப் (Hair dryer) பயன்படுத்தினார்கள்.

இதற்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட (Louse buster) பேன் ஒழிப்பு உலர்த்தி, மற்றும் வழமையாக உபயோகப்படுத்தும் கைகளில் பிடிக்கும் (hand held blow dryer) உலர்த்தி, பொனட் (Bonnet) வகை உலர்த்தி, பொது இடங்களில் சுவரில் நிறுவப்படும் உலர்த்தி ஆகியவற்றை ஆய்வின் போது பயன்படுத்தினார்கள். உட்டா பல்களைக் கழகத்தின் (University of Utah) உயிரியல் துறையில் செய்யப்பட்ட ஆய்வு இது.

பேன் ஒழிப்புச் சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு சுடுகாற்றை அழுத்தத்துடன் பிரயோகிக்கப்பட்டது.

ஒவ்வொருவரின் தலை முடியையும் பத்து முதல் இருபது பகுதிகளாளகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் அந்த முப்பது நிமிடங்களைச் சமமாகப் பிரித்து சிகிச்சை அளித்தார்கள். எந்த வித உலர்த்தியையும் பயன்படுத்திய போதும் 90 முதல் 98 சதவிகிதமான ஈர்கள் செத்தொழிந்தன. அதாவது ஈர்கள் ஒரு முறை சிகிச்சையிலேயே கிட்டத்தட்ட முற்றாக ஒழிகின்றன. இது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இதுவரை உபயோகிக்கப்பட்டு வந்த எந்த மருந்துமே ஈர்களை ஒழிப்பதில் இத்தகைய சிறப்பான பலனைக் கொடுத்ததில்லை.

பேன்களைப் பொறுத்த வரையில் லவுஸ் பஸ்டர் உலர்த்தி 90 சதவிகிதமானவற்றைக் கொன்றது. ஏனைய உலர்த்திகள் மாறுபட்ட அளவுகளில் குறைவாகவே பேன்களைக் ஒழித்தன.

பொனட் (Bonnet) வகை உலர்த்தி 10 சதவிகிதமான பேன்களை மட்டுமே ஒழித்தன. கைகளில் பிடிக்கும் (hand held blow dryer) உலர்த்திகள் 22 முதல் 30 சதவிகிதமான பேன்களை அழித்தன. சுவரில் நிறுவப்படும் உலர்த்திகள் அதிலிருந்து வரும் அதிகளவு காற்றுக் காரணமாக 62 சதவிகிதமான பேன்களை ஒழித்தன. லவுஸ் பஸ்டரிலும் இரண்டு வகைகள் உபயோகிக்கப்பட்டன.

தலைமுடியைப் பிரிப்பதற்கான அகண்ட பல்லுள்ள சீப்புப் போன்ற பகுதியை உள்ளடக்கிய சிறப்பு லவுஸ் பஸ்டர் 80 சதவிகிதமான பேன்களையும், அது இல்லாத லவுஸ் பஸ்டர் 76 சதவிகிதமான பேன்களையும் ஒழித்தன. லவுஸ் பஸ்டரில் உள்ள பல்லுள்ள சீப்புப் போன்ற பகுதி தலைமுடியின் அடிப்பாகம் வரை காற்றுப் போக வசதியளித்து கூடியளவு பலனைக் கொடுக்கிறது.

மேற் கூறிய விதமாக 80 சதவிகிதமான பேன்கள் ஒழிந்த போது மிகுதிப் பேன்கள் மலடாவதாலோ அன்றி அழுத்தத்தாலோ இனப்பெருக்கம் செய்ய முடியாமல் முற்றாக அழிந்தன. ஆய்வின் போது ஒரு தடவை சிகிச்சை அளித்தபோதே பேன்கள் அழிந்தன. ஆயினும் பூச்சு மருந்துகளையும், ஷப்புகளையும் சிகிச்சை முறையாகப பயன்படுத்தும் போது 1முதல் 2 வார இடைவெளியில் மீண்டும் ஒரு முறை திரும்பவும் செய்ய வேண்டும்.


இரசாயன மருந்துகள் இல்லாததும், ஈர்கள் பெருமளவு ஒழிவதும், ஒரு முறை மட்டுமே சிகிச்சை அளித்தாலும் குணமடைவதும், மருந்துகளுக்குப் பேன்கள் பழக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது விடுவது போலல்லாது எப்பொழும் பலனளிப்பதும் இச்சிகிச்சை முறையின் சிறப்புகள் எனலாம். பக்க விளைவுகள் எதுவும் இல்லாத சிகிச்சை முறை என்பதால் தயக்கமின்றிப் பயன்படுத்தலாம்.

லவுஸ் பஸ்டர் உலர்த்தி கட்டுரை எழுதிய நேரத்தில் விற்பனைக்கு வரவில்லை. இப்பாழுது வந்துவிட்டதோ தெரியவில்லை. வரும்போது அதன் விலை உத்தேசமாக 100 அமெரிக்க டொலருக்கு அதிகமாக இருக்கும். எனவே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு வீட்டுப் பாவனைக்கு என வாங்கக் கட்டுப்படியாகாது. எனவே வைத்தியசாலை, பாடசாலை போன்றவற்றில் நிறுவி பொது மக்கள் பாவனைக்கு விட வேண்டியிருக்கும். எனவே இப்போதைக்கு நீங்கள் வழமையான முடி உலர்த்தியைப் பயன்படுத்தலாம். 90 சதவிகித ஈர்கள் ஒழியும் தானே.

ஆயினும் இந்த ஆய்வைச் செய்த வைத்தியர் வழமையான முடி உலர்த்திகளைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார். அவர் சொல்லும் காரணமானது ‘தலையிலுள்ள பேன்களும் ஈர்களும் முடி உலர்த்தியின் சூட்டினால் இறப்பதில்லை, மாறாக அது வீசும் காற்றினால் உலர்வதினாலேயே இறக்கின்றன. லவுஸ் பஸ்டர் வெளியேற்றும் காற்று வழமையான முடி உலர்த்திகள் வெளியேற்றும் காற்றை விடக் குளிர்மையானது, அத்துடன் இரு மடங்கு காற்றையும் வெளியேற்றுகிறது’. எனவே லவுஸ் பஸ்டர் பாதுகாப்பானதும் கூடிய பயன் அளிக்கக் கூடியதும் எனப் புரிகிறது.

‘வழமையான முடி உலர்த்திகளைப் பயன்படுத்தி கூடிய சூட்டைப் பெறறோர் கொடுத்தால் குழந்தைகளின் முடியும், தலையின் சருமமும் எரிந்து விடக் கூடிய ஆபத்து இருக்கிறது’ எனவும் எச்சரிக்கிறார்.. எனவே அவதானம் தேவை.

‘இது என்ன புதினமே? நாங்கள் முந்தி முழுகினால் சாம்பிராணிப் புகை போடுறனாங்கள் தானே. அதைப் போலதானே உங்கடை புதுப் கண்டு பிடிப்பும்’ என்றார் கூட வந்த அம்மம்மா.

இருக்கலாம்.

ஆயினும் சுடுகாற்றை அழுத்தத்துடன் பிரயோகிப்பதையே மேற் கூறிய ஆய்வு கடைப்பிடித்தது. சாம்பிராணிப் புகையில் சுடுகாற்று இருக்கிறது, புகையும் மணமும் இருக்கிறன. ஆனால் சாம்பிராணிப் புகைக் காற்றில் அழுத்தம் இல்லையே. எனவே இன்னுமொரு ஆய்வைச் செய்தால்தான் அம்மம்மாவின் கூற்று சரியா பிழையா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

பேன் பற்றி சில தகவல்கள்

எள்ளின் அளவே உள்ள பேன் ஒரு ஒட்டுண்ணியாகும். இதில் பழுப்பு நிறப் பேனகளும், கருமையான பேன்களும் அடங்கும். இவை உயிர் வாழ்வதற்காக ஒரு சிறு துளி இரத்தத்தையே மனிதனிலிருந்து உறிஞ்ச வேண்டியிருக்கும். இவை பெரும்பாலும் தலையின் பிடறிப் பகுதி, மற்றும் காதோரங்களிலும் உள்ள முடியில் முட்டை(ஈர்) இடும்.

தலையோடு தலை முட்டும் நெருக்கமான உறவுகளின் போது இலகுவில் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றும்.ஆயினும் சீப்பு, பிரஸ், தொப்பி, ஹெட்போன், தலையணை போன்றவற்றலும் பரவலாம், பேன்கள் பறக்கவோ தத்தவோ முடியாதவை. ஊர்ந்தே செல்பவை. எனவே ஒருவருக்கு அருகில் இருப்பதால் தொற்ற மாட்டாது. ஒரு பேன் தொற்றியவுடன் வெளிப்படையாக எந்த அறிகுறியும் தெரியமாட்டாது. பேன் பெருகிக் கடிக்கும் போது ஏற்படும் அரிப்பு சினமூட்டும். ஈர் அதிகரிக்கும்போது முடி ஓரங்களில் பொடுகு படிந்ததுபோல அருவருப்பூட்டும்.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>அண்மையில் ஒரு வித்தியாசமான திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. ஞாயிறு 22.3.2009ல் கொழும்பு பண்டாரநாயக நினைவு சர்வதேச மண்டபத்தின் தியேட்டரில், பிரன்சுத் திரைப்பட விழாவிற்காகக் காட்டப்பட்ட Sans Maison .. படமே பார்க்கக் கிடைத்தது. இளம் கலைஞரான Maryanne Zehil நெறிப்படுத்திய திரைப்படம். கனடாவில் தயாரிக்கப்பட்ட பிரென்சு மொழித் திடைப்படம் இது. ஆங்கிலத் தலைப்புகள் இடப்பட்டிருந்தது.



போரில் சிக்கியிருந்த நாடான லெபனானைச் சார்ந்த பெண் சனா. இவள் கனடாவின் மொன்றியலுக்கு புலம் பெயர்கிறாள். தான் பிறந்த தாய் நாட்டை விட்டு, தனது சொந்த பந்தங்களைத் துறந்து, தாய் என்ற கடமையையும் புறக்கணித்து, விட்டுச் செல்கிறாள். தனது 4 வயதுக் குழந்தையை தனது தாயுடன் விட்டு விட்டுச் செல்கிறாள்.

சனா ஏன் புலம் பெயர்கிறாள். போரின் அச்சுறதலா? உயிரின் மீதான ஆசையா? இல்லை!

நெருக்கடிகள் நிறைந்த வாழ்விலிருந்து விடுபட வேண்டும் என்பதே அவளது நோக்கம். ஆனால் இது வேறு வகையான விடுபடுதல். குண்டு வீச்சுகள், துப்பாக்கிச் சூடுகள், ஆகாயத் தாக்குதல்கள், கடத்தல், கொலை இவற்றிலிருந்து தப்புவது அல்ல அவளது குறிக்கோள். லெபனானின் நீண்ட பாரம்பரியம் மிக்க இறுக்கமான கலாசாரம், பெண்கள் மீதான ஒடுக்குமுறை, சமூகக் கட்டுப்பாடுகள் இவற்றிலிருந்து தப்ப வேண்டும் என்பதே அவளது ஒரே நோக்கம்.

கனடாவில் அவளுக்கு எந்தவித தடைகளும் கிடையாது. விரும்பிய தொழிலைத் தேர்ந்து கொள்ளலாம்.(புலம்பெயர்தல் விடயம் சார்ந்த புகழ் பெற்ற சட்டத்தரணி ஆகிறாள்.) புதிய பூமியில் தனது நண்பர்களையும் உறவுகளையும் தானே நிர்ணயிக்கும் உரிமை அவளுக்கு இப்பொழுது கிட்டுகிறது. மகிழ்ச்சியோடு திருப்தியாக வாழ்கிறாள். ஆனால் குற்ற உணர்வு, மனதை உறுத்திக் கொண்டிருக்கும் வலி ஆகியவை இடையிடையே தலைதூக்க, அவற்றிலிருந்து விடுபட தனது பழைய வாழ்வின் நினைவுகளை அடியோடு எரித்துவிட முயல்கிறாள்.

ஆனாலும் ஏதோ ஒரு உந்துதலில் 17 வருடங்களுக்குப் பின்னர் தனது மகளை தன்னிடம் கனடாவிற்கு அழைக்கிறாள். இதன் பின்னர்தான் முக்கியமான கதை நகர்கிறது.

கட்டுபாடுகளிலிருந்து விடுபட்டு எல்லையற்ற சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தாய்க்கும், லெபனானில் பிறந்து அங்கேயே வாழ்ந்து, அதன் பாரம்பரிய கலாசார, பழக்கவழக்கங்களை மட்டுமே அறிந்து அதிலேயே முழ்கியிருக்கும் மகளான துனியாவிற்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள், வேறுபாடான உணர்வுகள், மன உரசல்கள் எனக் காட்சிகள் நகர்கின்றன.

தாய் வீட்டிற்கு வந்த தானியா தனது பயணப் பைகளை வைத்துவிட்டு உடை மாற்றுகிறாள். அவளது வாளிப்பான தொடைகளை, நேர்த்தியான உடல் வளைவுகள் என ஒவ்வொன்றாக ரசனையோடு பார்க்கிறாள். மகளின் கழுத்தின் இடது பக்கத்தில் ஒரு தழும்பு இருக்கிறது. அதைப் பற்றி விசாரிக்கிறாள். குண்டு வெடிப்பின் போது பட்ட காயத்தின் தழும்பு என மகள் சொல்கிறாள். “அது கூட ஏதோ ஒரு விதத்தில் உன் உடலுக்கு கவர்ச்சியைக் கொடுக்கிறது” என்கிறாள் சனா.

குண்டு வெடிப்பு, காயம் என்பன போர் நடக்கும் நாட்டிலிருப்பவர்கள் நிதம் காண்பது, அதனால் பயமும் ஊட்டக் கூடியது. சிலருக்கு நாளாந்தம் பார்த்து மனம் மரத்துவிடுவதும் உண்டு. ஆனால் இவற்றிலிருந்து விடுபட்ட சனாவிற்கு அந்தத் தழும்பிலும் அழகுதான் தெரிகிறது. ஆம் அவளது வாழ்வு ரசனையும் இன்பமும் மட்டுமே கொண்டது.

அவள் எவ்வளவு பாக்கியம் செய்தவள். இதனைப் பார்த்தபோது எனக்கு ஏக்கம்தான் வந்தது. போரற்ற அமைதியான வாழ்வு எமக்கு எப்போதாவது கிடைக்குமா. இழப்புகளையும், மரணங்களையும் பார்க்காது, கேட்காது, பேசாதிருக்கும் வாழ்வு என்றாவது சாத்தியமா?

இது என் மன உழைச்சல். படம் அதைப்பற்றிப் பேசவே இல்லை.

இன்னொரு காட்சி. துனியா நீர்த்தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும்போது சோப் நுரைகளுடாத் தெரியும் மகளது குவிந்த மார்புகளையும் பார்த்துப் பூரிக்கிறாள். தனது மகளின் அழகில் பெருமையுறுகிறாள். இவற்றையெல்லாம் தனது தாயே பார்த்துக் கொண்டிருப்பது மகளுக்கு இக்கட்டாக இருக்கிறது. அவள் வளர்ந்த சூழலில் இது கேவலமானது, அசிங்கமானது.

ஆனால் தாயின் வாழ்க்கை முறை வித்தியாசமானது. அழகு, கேளிக்கை. பொழுதுபோக்கு, உல்லாசம், ஆட்டம், பாட்டம் என நகர்வது. சிந்தனைச் சுதந்திரம் கொண்டது. ஒழுக்கம் பற்றிய அளவுகோல்கள் விரிவானது. எனவே தாய் இன்னும் ஒரு படி மேலே சென்று “உனது போய் பிரண்ட் உன் அழகு பற்றி என்ன சொன்னான்” எனச் வெகு சாதரணமாகக் கேட்கிறாள்.

இத்தகைய பேச்சால் திடுக்கிட்ட மகள்

“எனக்கு போய் பிரண்ட் கிடையாது” என சினத்தோடு வெடுக்கெனச் சொல்கிறாள்.

“ஓகோ! அப்படியானால் உனக்கு பெண்கள் மேல்தான் பிடித்தமா” எனக் கேட்கிறாள்.

ஓரினப் புணர்ச்சி பற்றிய நாசூக்கான கேள்வி. தாயைப் பொறுத்தவரையில் அது கூடத் தவறானது அல்ல. இது மகளை மேலும் அதிர்சிக்குள்ளாக்குகிறது. சினமூட்டுகிறது.

வேறொரு சம்பவம். ஒரு பார்ட்டி நடக்கிறது. தாயின் ஆண், பெண் நண்பர்களுடன். மகளும் கலந்து கொள்கிறாள். அவர்களது வெளிப்படையான பாலியல் பேச்சுக்களும் செய்கைகளும் மகளுக்கு பிடிக்கவில்லை. மற்றவர்கள் மனம் புண்படும்படியாக வார்தைகளை உதிர்த்து விடுகிறாள். மற்றவர்களுடன் பண்பாக நடக்கவில்லை எனத் தாய் கண்டித்தபோது

“நாளுக்கு ஒருவனைக் கட்டிப்பிடிப்பதும், குலாவுவதும், கூடப் படுத்து எழும்புவதும்தான் நாகரீகமா”

என வெடுக்கெனக் கேட்கிறாள்.

அம்மா முகமும் கூட இருந்தவர்கள் முகமும் கறுத்துவிடுகிறது. நறுக்கெனத் தெறிக்கும் உரையாடல்கள் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.

ஆம் தாய்க்கும் மகளுக்கும் இடையே ஒரு இணைக்க முடியாத பாரிய இடைவெளி இருக்கிறது. நிரப்பவே முடியாத இடைவெளி. பொறுக்க முடியாத துனியா தனது ஊருக்கு திரும்பிவிடுகிறாள்.

ஆனாலும் கனடா வாழ்க்கை அவளிலும் சில சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது. அவள் அங்கு பாட்டியுடன் மீண்டும் வாழும்போது ஒரு முரண்பாடு. பாட்டியுடன் காரமான வார்த்தையாடல் வெடிக்கிறது. இவளின் பேச்சைப் பொறுக்க முடியாத பாட்டி சட்டென முகத்தில் அறைந்துவிடுகிறாள். பின் மனம் நொந்து அரவணைக்கிறாள். ஆனால் தான் வாழும் கலாசரத்தின் இறுங்குப் பிடியை துனியாவும் சற்று உணர்ந்து கொள்வதை இக் காட்சி மிக நாசூக்கக் காட்டுகிறது.

இதற்கு முன்பே கனடாவில் இருக்கும் போது தாயிடமிருந்து மனதால் விலகும் நேரத்தில் அங்கு கிட்டும் ஒரு நண்பி. அவள் வீட்டில் ஒரு சந்திப்பில் கலந்து கொள்கிறாள். மதுவும் அருந்துகிறாள். நடனமும் ஆடுகிறாள். சற்று அதிகமாக மது அருந்திய நிலையில் தனது மேல் சட்டையைக் கழற்றி எறிகிறாள். சற்று போதை ஏற தனது மார்புக் கச்சையையும் கழற்ற முற்படுகிறாள். நண்பி தடுத்து விடுகிறாள்.

எத்தகைய கட்டுப்பாடான பண்பாட்டுக் கோலத்திலிருந்து வந்தாலும் மனித மனத்தின் அடி மூலையில் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு சுதந்திரமாக மிருகங்கள் போல வாழும் இச்சை ஒளிந்திருப்பதை இக் காட்சி காட்ட முயல்கிறதா?

பாட்டி இறந்துவிட லெபனானக்கு சனா வருகிறாள். மறந்துபோன தனது பழைய வாழ்வின் பக்கங்களைப் புரட்ட முடிகிறது. அவளது கணவன் பற்றியும் மேலோட்டமாக அறிய முடிகிறது. ஞாபகங்கள் வருகின்றன. அதற்கு மேலாக அங்கு தாய்க்கு தினமும் பழம் கொண்டு வரும் தோட்டக்காரனை சந்திக்க நேர்கிறது.

அத் தேசத்தினது கலாசாரத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காதலால் தனது தாயின் உணர்வுகளும் அடக்கப்பட்டு திணறடிக்கப்பட்டதை இத் தருணத்தில் சனாவினால் உணர முடிகிறது. பெண்களின் உணர்வுகள் எப்பொழுதுமே ஆண் மேலாதிக்க சமுதாயத்தால் அடக்கப்படவே செய்கிறது.

சனா, அவளது தாய், மகளான துனியா ஆகிய மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்வு பற்றிய படமாயினும் இது தலைமுறை இடைவெளி பற்றியது அல்ல. பெண் சாரந்த கலாசார, பண்பாட்டு முரண்பாடுகள் பற்றியது.

இந்தப் பெண்கள் மூவருமே ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். துனியாவும், பாட்டியும் கட்டுப்பாடுகளை ஏற்று வாழ்கிறார்கள். அடங்கிப் போகிறார்கள். அதற்குள்ளேயே நிறைவு காணவும் முணல்கிறார்கள்.

தாய் சனா அடங்க மறுக்கிறாள். அவ்வாழ்வைப் புறக்கணித்து விடுபட ஓடுகிறாள். மற்றவர் பார்வையில் புரட்சி செய்கிறாள. அதனால் துடுக்குத்தனமானவள் எனப் பெயர் பெறுகிறாள். ஆனால் குற்ற உணர்வினால் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முயல்கிறாள். முடியவில்லை. மகளை அவளது போக்கில் விட்டுவிட்டு தான் தேர்ந்தெடுத்த பாதைக்கு மீளுகிறாள்.

அவர்களது உணர்வுகளை விமர்சனம் செய்யாது, நிகழ்வுகளை மட்டும் வெளிப்டையாகக் காட்டி எம்மைச் சிந்திக்க வைக்கிறது திரைப்படம்.

எமது தமிழ்ச் சூழலில், கற்பு, தாய்மை, தெய்வாம்சம் போன்ற துதி வார்த்தைகளால் பெண்கள் நயமாக அடக்கப்படுகிறார்கள். மாசத்துடக்கு, மாதவிலக்கு, பேற்றுத் தீட்டு போன்ற வார்தைகளால் இழிமைப்படுகிறாள். ஒதுக்கி வைக்கப்படுகிறாள். வாழ்வின் இயற்கை அம்சமான மாதக் குருதிப் போக்கு நேரத்தில் கோவிலுக்குள் போகக் கூடாது, சமய மற்றும் புனித நிகழ்வுகளில் பங்கு பற்றக் கூடாது என்பது எவ்வளவு பாரபட்சம். அப்படியானால் ஆணுக்கு லிகிதம் வெளியேறுவதும் துடக்கு அல்லவா?

இன்னும் நாளாந்தம் சில்லறைத் தேவைகளுக்கும் சுதந்திரம் இன்றி கலாசாரச் சிறைக்குள் திணறலுக்கு ஆளாகிறார்கள் என்பதை யோசிக்க வைக்கிறது. பெண்களுக்கான பொருளாதார சுதந்திரமும் ஏட்டில் மட்டுமே உள்ளது. “உங்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் அல்லது ஸ்கான் பண்ண வேண்டும்” என மருத்துவ நிலையத்தில் ஒரு பெண்ணிடம் சொன்னால் அவளிடமிருந்து உடனடியாக மறுமொழி வராது. கணவன் முகத்தைப் பார்ப்பாள். அவளது தேவைக்கும் அவனின் அனுமதி தேவையாக இருக்கிறது. எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. இவ்வளவுதான் அவளுக்கு எமது சமூகத்தில் உள்ள சுதந்திரம். ஆனால் மறுபறத்தில் பத்தினித் தெய்வம் எனப் பூசிப்போம்.

வாய்ப் புணர்தல் (Oral Sex) காட்டப்படுவதால் சிறுவர்களுக்கு ஏற்றது அல்ல.

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள தேசத்திலிருந்து புலம் பெயர்தல் இலங்கைத் தமிழர்களுக்கு புதியதல்ல. கடந்த 2-3 தசாப்தங்களாக இது நிதமும் நடைபெறுகிறது. புலம் பெயர்தலால் கிடைக்கும் உயிர்ப் பாதுகாப்பு, அதனால் கிடைக்கும் நிம்மதி, பொருளாதார நன்மைகள் யாவும் அறிந்ததே. நெருக்கடிகள் நிறைந்த வாழ்விலிருந்து நிம்மதியான சூழலுக்கு நகர்வது எத்தகைய ஆறுதலைத் தரும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆயினும் புலம்பெயர்தலின் மற்றொரு பக்கமும் உண்டென்பதை இப்படம் உணர்த்துகிறது.

உண்மையில் இந்த திரைப்படத்தை நீங்கள் எதற்காகப் பார்க்க வேண்டும்?

அதில் கிடைக்கும் அழகான கட்புலக் காட்சிகளுக்கு மேலாக அது எமது மனத்தில் எழுப்பும் சலனங்களுக்காகப் பார்க்க வேண்டிய படம். கலை, கலாசாரம், பண்பாடு பற்றிய எமது நிலைப்பாடுகளை மீள்பார்வை செய்யத் தூண்டுகிறது. அந்த விதத்தில் மிகவும் நிறைவான படம்.

துனியாவாக நடிக்கும் ரெனி தோமஸின் Renée Thomas கடுப்பான முகமும், சுட்டெரிக்கும், வார்தைகளும் பல இடங்களில் பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கின்றன. அதுவே அவரது வெற்றியாகும்.

தாய் சனாவாக Louise Portal வருகிறார். மிகவும் பண்பட்ட நடிப்பு

ஆழ்துயரம் கொண்ட, சிந்தனைகளை விதைக்கும் கதையை நம்பத்தக்க வகையில் மனத்தைத் தொடும் வண்ணம் படமாக்கிய நெறியாளர் பாராட்டுக்குரியவர். கனடாவில் வாழும் லெபெனிய பெண் என்பதால்தான் இத்தகைய உயிரோட்டம் கொண்ட படைப்பைத் தர முடிந்திருக்கிறது.

இப் படத்தின கதையைப் பற்றிச் சொல்வதாயின் “இப் படத்துடன் நான் முழுமையாக ஒன்றிவிட்டேன். ஏனெனில் அது ஒரு உணர்ச்சிகரமான அற்புதமான கதை. ஒரு கணம் அது என் கதையோ எனவும் எண்ணினேன். ஆயினும் இது என் கதை மட்டுமல்ல ஒவ்வொரு அரபுப் பெண்ணின் கதையும் கூட என்பதை உணர்ந்தேன்.” ‘ (“Then I have realized that this film was not only the story of my life, but as well the story of each and every Arab woman…”) என்கிறார் ஒரு பெண்மணி இணையத்தில் ( http://www.imdb.com/title/tt0810822/usercomments).

அரபுப் பெண்களின் கதை மட்டுமல்ல ஒடுக்கப்படும் ஒவ்வொரு பெண்ணின் கதையும் கூட என்பேன்.

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>பாடசாலை அபிவிருத்திக்கான புதிய வேலைத் திட்டங்கள்.

எமது ஆரம்பப் பாடசாலையான மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் கட்டடங்கள், தளபாடங்கள், விiயாட்டு உபகரணங்கள் உட்பட பொதீக வளத் பற்றாக்குறையில் இருப்பதை அறிவீர்கள். கல்வியிலும் முகாமைத்துவத்திலும் முன்னேற்றம் கண்டு வடமராட்சிப் பகுதியின் சிறந்த ஆரம்பப் பாடசாலையாக கல்வித் திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட போதும் அதன் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

அவற்றை நிவர்த்தி செய்வதற்கு எமது ஒன்றியம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொண்டு ஸ்தாபனங்கள் மூலமாக பெரிய திட்டங்களையும், சிறிய அளவிலான திட்டங்களை பழைய மாணவர்கள் மூலமாகவும் நிறைவேற்ற உத்தேசித்துள்ளோம்.

இப்பொழுது அவசரமாகச் செய்யக் கூடிய சில திட்டங்களை பாடசாலை அதிபர் முன்வைத்துள்ளார். ஆர்வமுள்ள பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும் இத் திட்டங்களை நிறைவேற்ற முன்வருவார்கள் என நம்புகிறேன். தாங்களாக தனியாகச் செய்து கொள்ளலாம். அல்லது ஒரிருவர் சேரந்தும் நிறைவேற்றலாம். தங்கள் தாய் தந்தையர் அல்லது குடும்ப முக்கியஸ்தர் நினைவாக செய்வதும் நல்லதே.

அவ்வாறு அன்பளிப்பு செய்பவர்களது பெயர், அன்பளிப்புத்தொகை, யாரது நினைவாகச் செய்யப்பட்டதோ அவரது பெயர், நிறைவு செய்யப்பட்ட பணி ஆகியவற்றை குறிக்கும் செய்திப் பலகை பாடசாலை உள் மண்டபத்தில் வைக்கப்படும். ஏற்கனவே நினைவுப் பரிசில்கள் சம்பந்தமாக எமது ஒன்றியம் தயாரித்தளித்த அத்தகைய அறிவுப் பலகை பாடசாலை மண்டபத்தை அலங்கரிப்பது குறிப்பிடத்தக்கது.

அ. பாடசாலை சுற்றுமதிலின் உட்புறத்தில் கல்வி சம்பந்தமான ஓவியங்கள் வரைதலும், ஓவியங்களும்

ஓவ்வொன்றும் ரூபா15,000/- (10துண்டுகள் வரை)

ஆ. வருடாந்த விளையாட்டுப் போட்டி

1) பரிசில்கள் – ரூபா 15,000.00 வருடாந்தம்

2) சிற்றுண்டிகள் ரூபா 10,000.00 வருடாந்தம்

3) போட்டிக் கிண்ணங்கள் ரூபா 10,000.00

4)ஏனைய தேவைகள் தொடர்பானவை (மின்சார ஒலிபெருக்கி, புகைப்படங்கள்,போக்குவரத்து) ரூபா 10,000.00 வருடாந்தம்

இ. கீழ் மட்ட வகுப்பு வளாகத்திற்கு சுற்று மதில் அமைத்தல் (பெண் பாடசாலை)

ரூபா 35,000/- (முன்பக்கம் மாத்திரம்)

ஈ. துவிச்சக்கரவண்டி தரிப்பிடம்- ரூபா 50இ000ஃ-

உ. இரண்டு பாடசாலை கிணறுகளையும் மேற்புறம் மூடி அடைத்தல் (துப்பரவாக வைத்திருப்பதற்கு) – ரூபா 35,000

கிணறுகள் மூடி அடைத்தல்

பாடசாலையின் இரு வளாகங்களிலும் தனித்தனியாக கிணறுகள் உள்ளன. அவற்றிலிருந்து நீர் எடுக்க மோட்டார் வசதியும் உண்டு. ஆயினும் அக் கிணறுகள் சுகாதார முறைப்படி மூடி அடைக்கப்படவில்லை. அதனால் வெளிலுள்ள அழுக்குகளால் அது மாசடையவும் அதனால் மாணவர்களின் ஆரோக்கியம் கெடுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

அந்த இரு கிணறுகளையும் மூடி அடைப்பதற்கு ரூபா 30000.00 (முப்பதினாயிரம்) தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப பாடசாலை முற்பக்க மதில் அமைத்தல்

ஆரம்ப பாடசாலை (முன்னைநாள் பெண்கள் பகுதி) தற்பொழுது முற்கம்பி வேலியால் அடைக்க்பட்டுள்ளது. இது ஓடிவிளையாடும் பிள்ளைகளுக்கு ஆபத்தானது. எனவே சுற்றி மதில் கட்ட வேண்டியுள்ளது.

ஆயினும் பாடசாலையின் இவ்வளாகம் சிறியது ஆகையால் முழுமையாக மூடி மதில் கட்டுவது காற்றோற்றத்திற்கு தடையாக இருக்கம் எனக் கருதுகிறார்கள். எனவே முhண்களை சிமேந்தினால் கட்டி இடைவெளிகளை பிளாஸ்டிக் வலைகளால் அடைப்பபதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக பாடசாலையின் முற்பக்கத்தை மட்டும் இவ்வாறு அடைப்பதற்கு ரூபா 30,000 தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுமதிலில் அறிவு மேம்பாட்டுச் சித்திரங்கள் வரைதல்

பாடசாலைச் சூழல் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு உகந்ததாக அமைதியுடனும், வசதிகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது அவர்களின் அறிவு வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் அமைய வேண்டும் எனக் கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

உதாரணமாக பாடசாலை வளவினுள் ஒரு மரம் இருந்தால் அதன் பெயர், தாவரவியல் பெயர். பயன்பாடு போன்றவற்றை அதன் மீது ஒரு பலகையில் எழுதித் தொங்கவிடலாம். அதனைப் பார்க்கும் கீழ்வகுப்பு மாணவனுக்கு தாவரத்திற்கு வழமையான பெயரைவிட தாவரவியல் பெயர் என ஒன்று இருப்பதை அறியமுடியும்.

இதேபோல பாடசாலையின் சுவர்களில் பொன்மொழிகள், அறிவியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதுவதாலும், அறிவு மேம்பாட்டுச் சித்திரங்களை வரைவதாலும் மாணவர்களின் அறிவை விசாலமாக்க முடியும். இது ஏற்கனவே கொழும்பு போன்ற வசதியுள்ள பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எமது பாடசாலையிலும் இதனைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

சுவரின் குறிப்பிட்ட பகுதிக்கு மேற்பூச்சுப் பூசி, வரணம் அடித்து, அதன் மேல் சித்திரம் வரைய ரூபா பதினையாயிரும் தேவை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான 10 சித்திரங்களுக்கு மேல் வரைய முடியும்.

விரும்பியவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிக்கு சித்திரம் வரைய நிதியுதவி அளிக்கலாம்.

துவிச்சக்கரவண்டி தரிப்பிடம்-

எமது பாடசாலைக்கு தினமும் பல மாணவர்களும், ஆசிரியர்களும் துவிச்சக்கரத்தில் வருகிறார்கள். பெரிய இரட்டை வாசல் கதவு அமைத்த பின்னர் சைக்கிள்களை தூக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உருட்டியபடியே உள்ளே கொண்டு செல்லலாம். ஆயினும் அவற்றை ஒழுங்கான முறையில் நிறுத்தி வைக்க தரிப்பிடம் கிடையது. புதிய தரிப்பிடம் அமைக்க ரூபா 50இ000ஃ- தேவைப்படுகிறது.



வருடாந்த விளையாட்டுப் போட்டி

வருடாந்த விளையாட்டுப் போட்டிக்கு பரிசில்கள், சிற்றுண்டிகள், போட்டிக் கிண்ணங்கள், மின்சார ஒலிபெருக்கி, புகைப்படங்கள், போக்குவரத்து போன்ற பல தேவைகள் உள்ளன. அவற்றிற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. இவற்றில் பலவும் வருடாந்தம் செய்யப்பட வேண்டியவையாகும். இதற்கான ஒழுங்கு செய்யப்பட்டால் பாடசாலை வருடாந்தம் எதிர் நோக்கும் செலவிற்கான நிரந்தர ஒழுங்கு செய்யப்பட்டுவிடும்.

இவை பற்றிய தனித் தனி விபரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் ரூபா 45,000 தேவைப்படும். ஆயினும் மொத்தமாக அன்றித் தனித்தனியாகவும் செய்து கொள்ளலாம்.

Read Full Post »

>

நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் நாடறிந்த இலக்கியவாதி. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் தொடர்ந்து எழுதுபவர். படைப்பிலக்கியங்களை மாத்திரமின்றி திரைப்படத்துறை விமர்சனத்துறையிலும் மிக முக்கியமானவர். தினக்குரலில் ‘நமக்கிடையே’ என்ற தலைப்பில் நல்ல பல கட்டுரைகளை எழுதுகிறார்.

திறனாய்வு பற்றி இன்றைய தினக்குரலில் அவர் எழுதிய கட்டுரையை இணைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். திறனாய்வில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை இது.

அந்நாட்களில் இலக்கியம் கற்கும் மாணவர்களுக்கு “நயங்காணல்’ என்ற ஓர் அப்பியாசத்தை ஆசிரியர்கள் கொடுப்பது வழக்கம். அதனை ஆங்கிலத்தில் LITERARY APPRECIATION என்றார்கள்.

அவ்வாறான பயிற்சி கொடுக்கப்படுவதற்கான காரணம் இதுவாகத்தான் இருந்தது:

குற்றம் குறை காணுமுன்னர், சரி பிழை பார்க்கு முன்னர், ஒரு படைப்பை முதலிலே “சுவை’க்கப் பழக வேண்டும்.

ஒரு படைப்பாளி என்ன நோக்கத்திற்காக ஒரு படைப்பைப் படைத்திருக்கிறானோ, அந்த நோக்கில் நின்று நாம் அந்தப் படைப்பை முதலில் அணுக வேண்டும் என்பது ஆசிரியர்களின் நோக்கமாக இருந்தது.

அதற்காகவே முதலில் நயங்கண்டு பின்னர் அப்படைப்பாளியின் திறனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது சொல்லாமற் சொல்லும் கோட்பாடு. ஆசிரியர்கள் இலக்கிய மாணவர்களை அவ்வாறே வழிப்படுத்தினர்.

இலக்கிய அணுகுமுறையின் அடுத்த படியிலேயே திறனாய்வு மேற்கொள்ளப்படுகிறது என்பர். அதாவது, இலக்கியம் கற்றலுடன் திறனாய்வுப் பண்பும், பணியும் இணைந்துள்ளன.

ஒரு நல்ல இலக்கியத்தையோ,”இலக்கியம்’ எனக் கூறிக்கொள்ளப்படும் ஓர் ஆக்கத்தையோ நாம் ஆராயும்போது அந்த இலக்கியத்தை நாம் ஒன்றில் மேலும் சுவைக்கிறோம்; அல்லது அதன் சிறப்பின்மையை அறிந்து கொள்கிறோம். இது இலக்கியம் கற்றலுக்குப் பெரிதும் உதவுகிறது.

***

மேலை நாடுகளில் திறனாய்வு என்ற பெயரில் பற்பல வாதங்கள் கருத்தியல்கள் (‘ISMS’) காலத்துக்குக் காலம் வெளிவந்து ஓய்ந்தும் போயுள்ளன. அது காரணமாகவே, அத்தகைய முறைகளில் திறனாய்வு செய்வதை நான் கூடியவரை தவிர்த்து வந்துள்ளேன்.

என்னைப் பொறுத்தமட்டில் ORGANIC CRITICISM எனப்படும் முறைமை பொருத்தமானதாகவும், வசதியானதாகவும் இருக்கிறது.

ஆயினும், இந்த முறைமை (அலசிப் பார்க்கும் முயற்சி) மாத்திரமே முழுமையானதென்றோ, சரியான தென்றோ நான் கூறவரவில்லை.

மேலை நாடுகளில், பல்கலைக்கழக மட்டங்களில் திறனாய்வு எத்தகைய நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றது என்பதனைப் பார்ப்போம்.

STRUCTURALISM (கட்டமைப்பியல் வாதம்), DECONSTRUCTION அல்லது POST-STRUCTURALISM (கட்டமைப்பு அவிழ்ப்பு வாதம் அல்லது கட்டமைப்பு முறைக்குப் பிற்பட்ட வாதம்) FEMINIST CRITICISM (பெண்ணியத்திறனாய்வு) NEW HISTORICISM (புதிய வரலாற்றியைவு வாதம்) போன்றவை அண்மைக்காலத் திறனாய்வுப் போக்குகளாக இருந்து வந்தன.

காலந்தாழ்த்தி தமிழ்நாட்டுச் சிற்றேடுகளுக்கு அறிமுகமான இந்த “இஸம்’கள், ஈழத்திலும் ஓரிருவரினால் இன்னும் பின்பற்றப்படுகின்றன. இவற்றைவிட MARXIST CRITICISM (மார்க்சிய நோக்குத் திறனாய்வு) பெருமளவு அர்த்தம் நிரம்பியதாக இருக்கிறது எனலாம். இது ஏனெனில் நூற்றுக்கு எழுபத்தைந்து விழுக்காடு மார்க்சியப் பார்வை கொண்ட படைப்புகளாகவே இலங்கையில் இதுகாலவரையும் இருந்து வந்துள்ளன. எனவே, மார்க்சியத் திறனாய்வு இந்நாட்டில் அதிக கவனம் பெற்று வந்துள்ளது.

சமூகப் பார்வை கொண்ட எந்தவொரு திறனாய்வாளனும், மனிதாபிமானத்திற்கு நெருங்கிய மார்க்சிய அணுகுமுறையைத் தன்னையறியாமல் உள்வாங்கிக் கொள்கிறான். ஆயினும், மார்க்சியப் பார்வை மாத்திரமே முழுமையானது என்பதற்கில்லை. இது ஏனெனில்,”மார்க்சியம்’ என்பது கூட இயற்கையின் நியதி என்பதுபோல காலத்துக்குக் காலம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு மாறிவருவது கண்கூடு.

இதனாலேயே அமரர் கனகசபாபதி கைலாசபதி வலியுறுத்திய MULTI-DISCIPLINARY CRITICISM (பல்நெறிசார்ந்த திறனாய்வு அணுகுமுறை) என்னைப் பெரிதும் கவர்ந்து வந்துள்ளது. ஒரு படைப்பின் உள்ளடக்கம் (CONTENT) உருவ அமைப்பு (STRUCTURE) இரண்டையும் அலசிப்பார்க்கும் ORGANIC CRITICISM ன்பதற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளேன்.

“அமைப்பியல் ஆய்வு’ என்பதற்கு விளக்கம் தரும் ஆய்வாளர் திருமதி கலாநிதி செல்வி திருச்சந்திரன் இவ்வாறு விளக்கம் கொடுக்கிறார்.

“ஒரு இலக்கியத்தின் அமைப்பினை அல்லது பூரண உருவத்தை ஆய்வு செய்தலையும், / அதன் கூறுகளையும், அதன் பரிமாணங்களையும்/ ஆய்வு செய்வதைக் குறிக்கும்’. இதனைத்தான்”அமைப்பில் ஆய்வு’ என்பதற்குப் பதிலாக “ORGANIC CRITICISM ன்று நான் கூறுகிறேன்.

***

கட்டமைப்பியல் வாதம் (STRUCTURALISM) கோட்பாட்டின்படி, படைப்பாளியின் பங்களிப்பு முக்கியமானதல்ல. படைப்பாளி ஒரு பொருட்டுக்குரியவன் அல்ல.

அதேவேளையில், TEXT எனப்படும் வாசகம் ஒன்றில் இடம்பெறக்கூடிய இலக்கியத்தன்மையில்லாத எழுத்திலும் ஒருவித இலக்கியத் தன்மையை இனங்காண முடியும் எனக் கூறுபவர்களில் நானும் ஒருவன்.

ஒரு வேடிக்கை என்னவென்றால், கட்டமைப்புவாதிகளின் கண்ணோட்டத்தில் இலக்கியம் என்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பு அல்ல; இலக்கியம் என்பது MIME எனப்படும் . “பாவனை’யுமல்ல. புற உலகின் “யதார்த்தம்’, முக்கியமல்ல.

இவ்வாறு கூறும் கட்டமைப்புவாதிகள் CODE னப்படும் “சங்கேத’த்தில் அடுத்தடுத்து உட்படும் பண்புகளுடன் கொண்ட உறவு அல்லது குறித்துணர்த்தும் முறைமை உறவு மிக முக்கியம் என்கிறார்கள். அதாவது;

மொழியே இலக்கியத்தைப் படைத்து இலக்கியத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இது கட்டமைப்புவாதிகளின் (STRUCTURALISTS) விளக்கம்.

***

இவர்களைத் தொடர்ந்து வந்த POST-STRUCTURALISTS மொழியின் இலக்கியப் பயன்பாடு அல்லது ஏனைய பயன்பாடுகள் சொற்களையே மையமாகக் கொண்டுள்ளன என்றார்கள்.

இலக்கியத்தின் அர்த்தத்தைக் கண்டு பிடிக்கும் பங்கு வாசகனுடையது என்று இந்த கட்டமைப்பு அவிழ்ப்புவாதிகள் (DECONSTRUCTIONISTS) கூறுகின்றனர். இவர்கள் கூறுவது என்னவென்றால், இலக்கிய ரீதியான மொழியின் “ஆக்க கர்த்தா’ இந்த வாசகனே என்கிறார்கள்.

இத்தகைய கருத்தோட்டம் கொண்டவர்கள் கூறுவதை இவ்வாறும் நாம் பொருள் கொள்ளலாம்.

வாசகன் நவில் தொறும் புதுப்புது அர்த்தங்களை இலக்கியத்தில் இனங்காணப்படுவதனாலும், ஒவ்வொரு வாசகனின் பார்வையும் ஆளுக்கு ஆள் வேறுபடுவதனாலும், இலக்கியம் இறுதி ஆய்வில் என்ன கூறுகின்றது என்பதை அறிந்துகொள்ளல் பின் போடப்பட்டே வரவேண்டும். இது கட்டவிழ்ப்புவாதிகளின் தீர்ப்பு.

***

பெண்ணியம் நோக்கிலமைந்த திறனாய்வு என்ன கூறுகிறது என்றால், இலக்கிய மொழிப் பிரயோகத்தில் கூட ஆணாதிக்கம் மேலோங்குகிறது என்ற அவதானிப்பாகும். பெண்ணின் நிலை நின்று அணுகும் முறை வரவேற்கப்படுவதாயில்லை எனப் பெண்ணியத் திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்ணியவாதம், மார்க்சிய வாதம் இரண்டினையும் இணைப்பதை NEO-HISTORISM (நவ வரலாற்றியைவு வாதம்) என்கிறார்கள் எனது ONGANIC CRITICISM ணுகுமுறையில், நவ வரலாற்றியைவு வாதக் கோட்பாடுகளையும் சிலவேளைகளில் இணைத்துக்கொள்ள முயன்றிருக்கிறேன்.

***

இக்கட்டுரையாளரின்”திறனாய்வு நோக்கு’ (விமர்சனம் அல்ல) எவ்வாறு அமைகிறது என்பதை நமது வாசகர்கள், குறிப்பாக இலக்கிய மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமாயின், “ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை’ என்ற நூலின் 189272 பக்கங்களைப் படித்துப் பார்க்கும்படி தயவாய் கேட்டுக் கொள்கிறேன்.

***

இலக்கியம் என்பது படிப்பவருக்கு இன்ப நுகர்ச்சியை மாத்திரம் தருவதல்ல, வாழ்க்கையின் பல்வேறு கோலங்களையும் நாம் தரிசிக்க வைக்கிறது. பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்துகிறது.

களிப்பூட்டச் செய்யும் இலக்கியம் (ENTERTAINING) படிப்பவருக்கு இன்ப நுகர்ச்சியைத் தருகிறது. படிப்பவர் குறிப்பிட்ட படைப்பைத் தொடர்ந்து வாசிக்கிறார். அவ்விதம் செய்யும் பொழுது அவர் மனதும், மெய்ப்பாடுகளும் விரிவடைகின்றன. அவர் புளகாங்கிதம் அடைகிறார். அவருக்குப் புதிய செய்திகள் கிடைக்கின்றன. புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்கிறார். எனவே, அவர் புத்தறிவையும், புத்தனுபவங்களையும் பெற்றுக்கொள்கிறார். அந்தக் கணமே அவர் வியப்பிலாழ்கிறார். சிந்திக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக வாசகரின் கற்பனை விரிகிறது. கற்பனை, விரிவடைய விரிவடைய புதிய இலக்கிய உத்திகளையும், புதிய பரிசோதனைகளையும் அவர் கற்றுக்கொள்வதுடன், அவற்றைத் தமது எழுத்தில் பிரயோகிக்கவும் முற்படுகிறார்.

அவை மாத்திரமல்ல, விழுமியங்கள், உன்னத எண்ணங்கள் போன்றவை எவை என்று அறிந்து தனது அனுபவத்தையும், அறிவையும் நெறிப்படுத்திக் கொள்கிறார்.

இவ்வாறு பல்வேறு பயன்தரும் பாதிப்புகளைப் படிப்பவர் பெற்றுக்கொள்கிறார்.

இலக்கியம் என்பது படிப்பதற்குக் களிப்பூட்டும் அதேவேளையில், பயன்பாடுகளையும் வழங்கி வாசகனின் மனோநிலையைச் செழுமைப்படுத்துகிறது. நல்ல இலக்கியம் என்று சொல்லப்படும் ஒன்றைப் படிப்பதனால் பயனடையும் ஒருவன் அந்த இலக்கியம் ஏன் இலக்கியத் தன்மை கொண்டதாக அமைகிறது என்பதனைத் தானே அறிந்துகொள்கிறான்.

***

உலகப் பொதுமை (UNIVERSALISM), நிலை பேறுடைமை (PERMANENT VALUES), இலக்கிய நயங்கள் (LITERARY TASTE), கற்பனை வீச்சு (IMAGINATIVE RANGE), கனதியான விஷயங்களையும் சுருதி கெடாமல் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் (PRECISION), மனுக்குல மேம்பாட்டுக்கு மேலும் ஒருபடி உதவுதல் (UPLIFTING HUMAN CONDITION) போன்ற பண்புகள் ஓர் இலக்கியப் படைப்பு தரமான அல்லது உயர்தரப் படைப்பு என மதிப்பிடக்கூடியது என்பேன்.

கே.எஸ்.சிவகுமாரன்

நன்றி:- தினக்குரல் – 09.04.2009

Read Full Post »

>யாரைப்பார்த்தாலும் விற்றமின் மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். மருத்துவர்களிடம் போனாலும்”நல்ல விற்றமின் மாத்திரைகள் எழுதித் தாருங்கோ’ என்றே கேட்கிறார்கள். சாதாரணமாக மூன்று ரூபா முதல் முப்பது ரூபா வரை என இவை பலவகைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. தாராளமாக வாங்கிப் போடுகிறார்கள். தாராளமாக செலவு செய்கிறார்கள் ஆனால் செலவழிக்கும் பணத்திற்கு பலன் கிடைக்கிறதா?

இன்னொரு முறையில் சிந்தித்துப் பார்த்தால் இது ஒருவகை நாகரிக மோஸ்தர் போலாகிவிட்டதோ எனவும் தோன்றுகிறது.

ஏனைய பலரையும் விட, மாதவிடாய் நின்ற பின் பெண்கள் விற்றமின்களை நாடுவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் மாரடைப்பு புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு அதிகமென கருதப்படுகிறது. அதைத் தடுக்க மாத்திரைகளை நாடுகிறார்கள்.

இதனால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறதா மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறதா, புற்றுநோய் வராமல் காப்பாற்றுகிறதா?

இல்லை என்கிறது Archives of Internal Medicine என்ற மருத்துவ இதழ். ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான பெண்களை உள்ளடக்கிய ஆய்வின் முடிவு என 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் திகதி இதழ் கூறுகிறது.

ஆனால் இவற்றை உட்கொள்வதால் வேறு நோய்கள் வருகிறதா என்று கேட்டால் அதற்கும் ஆதாரம் இல்லை. அதாவது அத்தகைய மல்ரி விற்றமின் மாத்திரைகளால் நன்மை ஏற்படுவதாகவும் தெரியவில்லை. தீமைகள் ஏற்படுவதாகவும் தெரியவில்லை. எனவே கொடுக்கும் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என அவற்றின் பாவனையாளர்கள் தாங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் மருந்துகளை விட சாதாரணமாகக் கடைப்பிடிக்கக் கூடிய பல ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் இத்தகைய நோய்கள் வராமல் தடுக்கின்றன என்பதை மறக்கக் கூடாது.

உதாரணமாக புற்றுநோய்களையும் அழுத்தங்களையும் தடுக்க கூடிய ஒட்சிசன் (Antioxidents) எதிரிகள் காய்கறிகளிலும் பழங்களிலும் தாராளமாகக் கிடைக்கின்றன. இவை இயற்கையானவை என்பதால் உடலுக்கு தீங்கற்றவை என கருதலாம். இவற்றைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொண்டால் மல்ரி விற்றமின் மாத்திரைகளை நாட வேண்டியதில்லை.

அடுத்ததாக இந் நோய்களைத் தடுக்க ஒருவர் செய்ய வேண்டியது உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியாகும். உடலுக்கு வேலை கொடுக்காது சோம்பேறியாக இருந்தால் என்ன நடக்கும் ?

எடை கூடும், நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல் போன்ற நோய்கள் தேடி வரும்.

காலத்திற்கு முன்பே நோயுற்று “இறைவனடி’ சேர நேரிடும். உடலுளைப்பற்ற வாழ்க்கை முறையானது தசைகளைப் பலவீனப்படுத்தும் எலும்புகளை தேய்வடையச் செய்யும் என்பதையும் மறக்கக் கூடாது.

பெரும்பாலான மல்ரி விற்றமின் மாத்திரைகள், மருந்துகளாக அன்றி மேலதிக உணவு (Supplimentary Food) என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இதனால் மருந்துகள் மீது இருப்பது போல அரசின் இறுக்கமான கட்டுப்பாடுகளோ, கண்காணிப்போ குறைவு. அத்துடன் விலைகளும் அதிகமாக இருக்கின்றன. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளிலும் விளம்பரப்படுத்தக் கூடியன. எனவே கவர்ச்சியான விளம்பரங்களாலும் ஏமாந்து வீணாகச் செலவு செய்யும் நிலைமை நிலவுகிறது.

எனவே அடுத்த தடவை நீங்கள் விற்றமின் மல்ரி விற்றமின் போன்ற மருந்துகளை வாங்க முன் இரண்டு தடவை சிந்தியுங்கள். உங்கள் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். மாத்திரைகளுக்குப் பதிலாக உணவின் மூலம் அவற்றை எடுக்க முடியுமா என மீள் பரீசிலனை செய்யுங்கள்.

மாதவிடாய் நின்ற பெண்கள் ஓஸ்டியோபொரோசிஸ் நோயைத் தடுப்பதற்காக மேலதிக கல்சியம் எடுப்பது வேறு விடயம் அதை நிறுத்த வேண்டாம்.
-டாக்டர் எம்.கே. முருகானந்தன்-

Read Full Post »