>மிகவும் துன்புறுத்துகிற நோய் எது என்று கேட்டால் உங்கள் விடை எதுவாக இருக்கும். இவர்கள் கதைகளைக் கேளுங்களேன்.
பணத்தையும், நேரத்தையும் வீணாக்க வைக்கும் நோய்
“இது தான் நான் பாவிக்கிற மருந்துகள். மருந்தைப் போடுறதுதான் மிச்சம். ஒரு சுகமும் இல்லை”.
அவள் நீட்டிய மருந்துச் சிட்டையில் பத்து மருந்துகளுக்குக் குறையாமல் இருந்தன. பெரும்பாலானவை விட்டமின் மருந்துகள், மற்றும் கல்சியம், இரும்புச் சத்து மாத்திரைகள், வலி நிவாரணிகள்.
எல்லாமே விலை உயர்ந்த மருந்துகள்.
காசையும் காலத்தையும் செலவழித்ததுதான் மிச்சம். நோய் தீர்ந்தபாடாக இல்லை.
தெளிவற்ற பற்பல அறிகுறிகள்
என்ன வருத்தம் எனக் கேட்டபோது மருந்துச் சிட்டையில் உள்ள லிஸ்டை விட நீண்ட பட்டியல் போன்று அறிகுறிகளைச் சொல்லத் தொடங்கினார்.
கை கால் உழைவு, கழுத்து நோ, நாரிப்பிடிப்பு, சோம்பல், அலுப்பு, வேலை செய்ய முடியாத களை என ஆதியும் அந்தமுமில்லாப் பரம் பொருள் போலப் பட்டியல் தொடர்ந்தது.
“ஆறு மாசமா வருத்தம். தொடர்ந்து மருந்துதான். ஆனால் நோய் தீர்ந்த பாடாகக் காணவில்லை” எனக் கூட வந்த கணவன் சலித்துக் கொண்டார்.
“இவவின்ரை வருத்தத்தாலை பிள்ளையளின்ரை படிப்பு குழம்புது. நானும் ஒழுங்காக வேலைக்குப் போக முடியவில்லை”.
இன்னொரு பெண். வழமையாக கலகலத்துப் பேசி உற்சாகமாக உரையாடுபவள், அன்று வந்த பொழுது, “இவருக்கு எந்த நாளும் வருத்தம். கொண்டு திரிஞ்சு திரிஞ்சு எனக்கு வாழ்க்கையே சலிச்சுப் போட்டுது” என்றாள் மிகுந்த சோர்வுடன்.
இவர்களுக்கு எல்லாம் என்ன வருத்தம்?
ஏன் வைத்தியம் செய்தும் மாறவில்லை?
மிகப் பரவலாகக் காணப்படும் நோய்
மிகவும் பரவலாகக் காணப்படுகின்ற நோய், ஆனால் நோயை நிர்ணயிப்பதற்கும் (Diagnosis) சரியான சிகிச்சையை ஆரம்பிப்பதற்கும் பொதுவாகக் காலதாமதமாகின்றது.
அதே நேரம் நோயாளியையும் உறவினர்களையும் கடுவலாகப் பாதிக்கிற போதும் கவனத்திற்கு ஆளாகாத நோய் இது.
மனச் சோர்வு (Depression)
மனச் சோர்வு (Depression) கறையான் புற்றுப் போல வெளியே தெரியாமல் உள் நின்று அரித்து உடலையையும் மனத்தையும் வெற்றுக் கோதாக்கி விடும் நோய்.
அது மட்டுமல்ல சுற்றி இருக்கும் உறவினர்களையும் சோர்வடையச் செய்து விடும்.
கவனிக்காது விட்டால் தற்கொலைக்கும் இட்டுச் செல்லும் அளவிற்கு ஆபத்தானது.
“ஏன் மனச் சோர்வைக் குணப்படுத்த நல்ல மருந்துகள் கிடையாதா?” எனக் கேட்பீர்கள்.
நல்ல மருந்துகள் இருக்கத்தான் செய்கின்றன.
அத்துடன் உளவளத் துணை வழங்கலும் நல்ல பலனைத் தருகிறது.
ஆனால் இதற்கு முதற் படியாக நோயைக் கண்டு பிடிக்க வேண்டுமே!.
ஆய்வு கூட பரிசோதனைகள் மூலம் கண்டு பிடிக்கக் கூடிய நோய்கள் எனில் பட்டென உடனடியாகவே கண்டுபிடித்து விடுவார்கள் வைத்தியர்கள்.
பேசிக் கண்டு பிடிக்க வேண்டிய நோய்
ஆனால் ஆற அமர இருந்து பேசிக் கண்டு பிடிக்க வேண்டிய நோய் இது.
நோயாளி சொல்லும் அறிகுறிகளுக்கிடையே சொல்லாமல் மறைந்து நிற்கும் செய்திகளை இனங் காணும் அனுபவம் தேவை.
அவர்கள் பேச்சுக்களிடையே அகப்படும் ‘சிறு முடிச்சுகளை’ச் சிக்கெனப் பிடித்து அவர்கள் ஆழ் மனத்தில் ஒளிந்திருக்கும் சோகங்களை வெளிக் கொணரும் ஆற்றல் தேவை.
இவை முடியாததால் மனச் சோர்வு நோய் பல வைத்தியர்களுக்குப் பிடிபடாமல் போவதுண்டு.
நோய் பிடிபடாமல் ஒளிந்து நிற்பதற்கு வைத்தியர்கள் மட்டும்தான் காரணம் அல்ல.
வெளிப்படையாகச் சொல்லத் தயங்கல்
மிக முக்கிய காரணம் நோயாளிகள்தான். தங்கள் மன உணர்வுகளை வைத்தியர்களிடம் சொல்லாமல் இருப்பதே அடிப்படையாகும்.
வெளிப்படையாகச் சொல்லாமல் விடுவது மட்டுமல்ல கோடி காட்டவும் தயங்குகிறார்கள்.
நேரடியாகக் கேள்வி கேட்டு அறிய முயன்றால் கூட மறைப்பவர்கள் பலர்.
நோய் என்றால் எங்கள் சமூகத்தினருக்கு உடல் நோய் மட்டும்தான் என்பதே எண்ணம்.
மனதில் ஏற்படுகிற கவலை, துன்பம், ஏக்கம் போன்ற உணர்வுகளை வைத்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவற்றிற்கும் சிகிச்சை பெறலாம் என நினைப்பதே இல்லை.
ஊழ்வினைப் பயன், முந்திச் செய்த பாவத்திற்கு கடவுள் தண்டிக்கிறார் போன்ற நம்பிக்கைகள் காரணமா?
மனச்சோர்வு என்றால் ‘பித்து’, ‘கேவலமான நோய்’, வெளியே அறிந்தால் வெட்கம்’ போன்ற சமூகம் சார்ந்த தவறான கருத்துக்களும் காரணமாகிறது.
ஆனால் மனச்சோர்வு என்பது சாதாரண வியாதி அல்ல.
மிக அதிகமானவர்களைப் பாதிக்கும் நோய்
உலகளாவிய ரீதியில் 30 சதவிகிதமானவர்களைப் பாதிக்கிறது.
நோயாளியை மாத்திரமின்றி முழுக் குடும்பததையுமே பாதிக்கும் ஒரு நோயாகும்.
நோயாளிக்கும் கூட மிகுந்த துன்பத்தையும் இயலாமையையும் தரும் நோயாகும்.
மனிதர்களை மிகவும் துன்புறுத்துகிற நோய் எது என்றால் பலரும் ஆஸ்த்மா, மூட்டு வாதங்கள், இருதய நோய், அல்லது நீரிழிவு என்று கூறக் கூடும்.
ஆனால் இந்த நான்கு நோய்களையும் விட மோசமாக நோயாளர்களைத் தாக்குவது மனச்சோர்வு தான் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவில் 60 நாடுகளில் எல்லா மதத்தினரையும் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்ட 245,404 பேரை உள்ளடக்கி உலகளாவிய ரீதியில் செய்யப்பட்ட பாரிய ஆய்வு கூறுகிறது.
அதனால் வெளிக்காட்டாத அபகீர்த்தி நோய் ”Silent Scandal’ எனப் பலரும் குறிப்படுவதுண்டு.
போதிய சிகிச்சை கிட்டுவதில்லை
30 சதவிகிதமானவர்களைப் பாதிக்கின்ற போதும் அவர்களில் 30 சதவிகிதமானவர்கள் மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதனால் மிகுதி 60-70 சதவிகிதமானவர்கள் போதிய சிகிச்சை இன்றித் துன்பப்படுகிறார்கள்.
ஆனால் ஆஸ்த்மா நோயினர் 90 சதவிகிதமும், மூட்டு வலி நோயினர் 80 சதவிகிதமும் திருப்பதிகரமான சிகிச்சைளைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரிழிவு நோயைப் பொறுத்த வரையில் 8 சதவிகிதமானவர்கள் மட்டுமே ஒழுங்கான சிகிச்சை இல்லாதிருக்கிறார்கள.
வைத்திய வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்ட வளர் முக நாடுகளில் மனச்சோர்வு போன்ற நோய்களுக்கான சிகிச்சை போதுமானதாக இல்லை.
இலங்கையில் தமிழர்
போரின் பாதிப்பினால் பரவலாக மனோரீதியான நோய்களுக்கு ஆளாகியிருக்கும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒரு கையின் விரல்களின் எண்ணிக்கை அளவு கூட மனநோய் வைத்திய நிபுணர்கள் இல்லை என்பது கவலைக்குரியதே.
ஆயினும் அதை ஒரு தடையாக எடுத்துக் கொள்ள முடியாது. வைத்தியப் பட்டம் பெற்ற எல்லா வைத்தியர்களுக்கும் இத்துறையில் சிகிச்யையளிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.
எம்.கே.முருகானந்தன்