Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2009

>அவளுக்குப் பயம் பீடித்திருந்தது.

‘இது கான்சராக இருக்குமோ?’

அண்மையில்தான் அவளது நெருங்கிய உறவினர் ஒருவர் மார்புப் புற்றுநோய் எனக் கண்டிறியப்பட்டு சிகிச்சைகளுக்காக அலைந்து கொண்டிருந்தார்.

ஆனால் கட்டிகள் அனைத்தும் புற்றுநோய் அல்ல என்பதும் கட்டிகள் இல்லாமலும் புற்றுநோய்கள் வராலாம் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

இவளுக்கு வலது மணிக்கட்டை அண்டிய இடத்தில் ஒரு கட்டி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. வலிக்காததாலும், வேறு எந்தத் தொல்லை இல்லாததாலும் அலட்சியம் பண்ணிவிட்டாள். இப்பொழுது உறவினருக்கு புற்றுநோய் என்றதும் கிலி பிடித்து ஓடி வந்திருந்தாள்.

எத்தகைய கட்டி

இத்தகைய கட்டிகளை Ganglion என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். பெரும்பாலும் மணிக்கட்டின் பின்புறத்தில் தோன்றுவதுண்டு. சிலவேளைகளில் முன்புறத்திலும் வரலாம்.


சிலருக்கு கால்களின் மேற்புறத்திலும் உண்டாவதுண்டு. மிக அரிதாக முழங்காலுக்கு அருகிலும், கணுக்காலடியிலும் தோன்றலாம்.

இது எவ்வகையிலும் ஆபத்தான கட்டியல்ல. தோலுக்கு கீழே இருக்கும். தோலுடன் ஒட்டிக் கொண்டிராது வழுகிக் கொண்டிருக்கும். நீர்க்கட்டி (Cyst) போன்றது. அதற்குள்ளே நீரைவிட சற்றுத் தடிப்பான ஜெலி போன்ற திரவம் இருக்கும்.

எப்படி ஏற்படுகிறது?

இத்தகைய திரவம்தான் எமது மூட்டுகளையும், தசைநார்களையும் வரட்சியடையாது வழுவழுப்புடன் வைத்திருந்து சுலபமாக இயங்க வைக்கின்றன. எப்பொழுதாவது அடிபடும் போது மூட்டு அல்லது தசைநாரைச் சுற்றியிருக்கும் இத் திரவம் வெளியேறி ஏதாவது காரணத்தால் ஓரிடத்தில் தடைப்பட்டு கட்டிபோலச் சேருவதாலேயே இது ஏற்படுகிறது.


கீழே உள்ள தசைநாருடன் அல்லது எலும்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் இது வேறு இடங்களுக்குப் புற்றுநோய் போலப் பரவாது.

1-2 செ.மி வரை வளரக் கூடும். புற்றுநோய் போன்ற ஆபத்து எதுவும் ஏற்படாது எனச் சொன்ன போதும் சிலர் அதை அகற்ற வேண்டும் என அடம் பிடிப்பதுண்டு. அது அசிங்கமாக தோன்றுவதே காரணம். பொதுவாக வலிப்பதில்லை. ஆயினும் சில தருணங்களில் நரப்புகளுக்கு அருகில் இருந்தால், அது அழுத்தப்பட்டு சிறிது வலி ஏற்படலாம். சிலருக்கு விறைப்பு ஏற்படுவதும் உண்டு.

சிகிச்சை

பொதுவாகச் சிகிச்சை எதுவும் தேவைப்படாது. சிலகாலம் செல்ல எப்படி மறைந்தது என்று தெரியாமலே பலருக்கும் தானாக மறைந்து விடுவதுண்டு.

மருத்துவர்கள் அகன்ற துவாரம் கொண்ட ஊசி மூலம் அத் திரவத்தை அகற்றுவார்கள். ஆயினும் மிகத் தடிப்பான திரவமாதலால் அவ்வாறு ஊசியால் பெரும்பாலும் அகற்ற முடிவதில்லை.

பொதுவாக அவ்வாறு அகற்றிவிட்டு அதனுள் ஸ்டீரொயிட் ஊசி மருந்தை ஏற்றுவார்கள். உடனடியாக மறைந்தாலும் இச் சிகிச்சைகளுக்குப் பின்னரும் மீண்டும் வளர்வதுண்டு.

பைபிள் சிகிச்சை

ஆனால் அதற்கு மேலாக ஒரு பாரம்பரிய சிகிச்சை முறை உண்டு. பேசிக் கொண்டிருக்கும் போதே நோயாளி எதிர்பாராத விதத்தில் மருத்துவர்கள் அருகில் உள்ள தடித்த கனமான புத்தகத்தால் கட்டி மீது ஓங்கி அடிப்பார்களாம். உடனடியாகவே உள்ளே உள்ள கூடு வெடித்து நீர் பரவியதும் கட்டி மறைந்துவிடும்.

அதிர்ச்சி வைத்தியமான போதும் இம்முறையில் ஆபத்து எதுவும் கிடையாது. முன்பு அதற்காக குடும்ப பைபிளைப் பயன்படுத்துவார்களாம். புனிதம் என்பதால் அல்ல. பாரம் கூடியது என்பதால். ஆயினும் வெடித்த மறைந்த கூட்டின் சுவர் சிலவேளைகளில் மீண்டும் வளர்ந்தால் கட்டி மறுபடி தோன்றலாம்.

மேற் கூறியவற்றால் குணமடையாவிட்டால், அல்லது நோயாளிக்கு தொல்லை கொடுத்தால் சிறிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்படுவதும் உண்டு. சத்திரசிகிச்சையானது மேற் கூறியவற்றை விட நல்ல பலனைக் கொடுக்கும். இருந்தாலும் மீண்டும் வராது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.


நோயாளிக்கு வலி, விறைப்பு போன்ற பிரச்சனைகள் எதுவும் கிடையாது எனில் அவதானித்து வந்தால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>
பாடசாலையின் அண்மைக்கால அபிவிருத்திப் பணிகள்

பாடசாலையின் அபிவிருத்தியில் பழைய மாணவர்கள் பலரும் ஈடுபாடு காட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கு வாழ்ந்தாலும் தாம் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பாடசாலையின் அபிவிருத்திக்கும், தற்போதைய மாணவர்களின் முன்னேற்றத்திலும் பலரும் அக்கறை காட்டி வருவது மிகவும் பெறுமதி வாய்ந்த பணியாகும்.

அண்மையில் ஆரம்பிக்கபட்டுள்ள மற்றும் செய்து முடிக்கப்பட்டுள்ள சில பணிகள் பற்றிய தகவல்களை தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முகப்பில் உள்ள புகைப்படம் பாடசாலையின் மேற்குப் புற வாசலுக்கு அருகில் உள்ள மரமொன்றில் மாணவர்களின் பொது அறிவு விருருத்திக்காக அதன் பெயர் எழுதப்பட்டு இருப்பதைக் காணலாம்

சைக்கிள் தரிப்பிடம்

எமது பாடசாலை ஒரு உள்ளுர் சிறிய ஆரம்பப் பாடசாலையாக இருந்த போதும் அதற்கும் ஒரு சைக்கிள் தரிப்பிடம் (பார்க்) அவசியமாக இருந்தது.

இதுவரை இவ்வாறுதான் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

பாடசாலைக்கு சைக்கிளில் வரும் சில மாணவர்களுக்காக மட்டுமின்றி, ஆசிரியர்களது சைக்கிள்கள் மற்றும் வேறு தேவைகளுக்காக வரும் அதிகார்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் போன்றோரது வாகனங்களை விடுவதற்குமாக இது அவசியம் என உணரப்பட்டது.

மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதைக் காணுங்கள்.


இதற்கான நிதியை டென்மார்க்கில் வாழும் இரத்தினசபாபதி. கிருஸ்ணராசா அவர்களும் அவரது நண்பர்களுமாக இணைந்து சேர்த்துக் கொடுத்துள்ளார்கள்.

இதற்காக ரூபா 128,000 கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு 40 அடி நீளமான சைக்கிள் தரிப்பிடத்தை பாடசாலையின் பெரிய கதவிற்கு மேற்குப் புறமாக மதிலை அண்டிய நிலப்பரப்பில் அமைப்பதற்கான பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள்

மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான விஷேட வகுப்புகளை பாடசாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த எட்டு (8) மாணவர்கள் இவ் வகுப்புகள் மூலம் முன்னேற்றமடைந்து வழமையான வகுப்புகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளமை இத்திட்டத்தின் மிகப் பெரிய வெற்றியாகும்.

அண்மையில் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த 17 மாணவர்கள் எமது பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் நான்கு பேர் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அவர்கள் இப்பொழுது இவ் விசேட வகுப்புளில் உள்வாங்கப்பட்டுளனர்.

பிரபல வர்த்தகர்களான அமரர்.சி.திருச்செல்வம் மற்றும் அமரர்.சி.சிவகுலசிங்கம் ஆகியோர் நினைவாக இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவியை அவர்களது புத்திரர்களான தி.செல்வமோகன், திரு.சி.வசந்தன் ஆகியோர் வழங்கி வருகிறார்கள். இரண்டாம் கட்ட நிதியான ரூபா 20,000 இம் மாதம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை நூலகத்திற்கான தளபாடங்கள்

பாடசாலை நூலகத்தின் முகப்புத் தோற்றம்

பாடசாலை நூலகத்திற்கான ஒரு புதிய கட்டடம் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாடசாலையில் தெற்குப் பகுதியில் திறந்த அரங்கத்திற்கு மேற்குப் புறமாக அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இதற்கான நிதியை தன்னார்வத் தொண்டு நிறுவனம் வழங்கியிருந்தது.

ஆயினும் தளபாடங்கள் இல்லாமையால் அது முழுமையாகச் செயற்பட முடியாதிருந்தது.

இப்பொழுது தளபாடங்களுககான நிதியை வியாபாரிமூலை பிரபல வர்த்தகர் அமரர் திரு.நா.ம.பரஞ்சோதி, திருமதி.பரஞ்சோதி அவர்களின் நினைவாக அவரது அருமைப் பிள்ளைகளும் மருமக்களும் தாமாகவே முன்வந்து உதவி உள்ளனர்;.

இந்த முயற்சியில் ஈடுபட்டு உழைத்த அமரரின் மகன் பரஞ்சோதி அருளானந்தம் (லண்டன்) மற்றும், மருமகன் இராசலிங்கம் சுந்தரலிங்கம் (இளைப்பாரிய தபாலதிபர்.கனடா) அவர்கள் பாராட்டுக்குரியவர்.

அவர்கள் அளித்த ரூபா 150,000 நிதியைக் கொண்டு தகுந்து தளபாடங்களை பெறும் முயற்சியில் அதிபர் மு.கனகலிங்கம் ஈடுபட்டுள்ளார்.

பாடசாலை கணனி வசதிகள்

கல்வி அமைச்சின் அனுசரனையுடன் கணனிக் கூடம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு இப்பாடசாலை அடையாளம் காணப்பட்டுள்ளது. பாடசாலை அதிபரின் கணனித் தேர்ச்சியும் ஆர்வமும் அதற்கான ஒரு நேர்நிலையை ஏற்படுத்தியுள்ளமை காரணங்களாக அமைந்தன.

மேலே உள்ளது தற்போது பாடசாலை அலுவலகத்தில் உள்ள ஒரே ஒரு கம்பியூட்டர் ஆகும்.

இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஒரு கணனித் தொகுதியை பாடசாலை அபிவிருத்திச்சங்கம் அல்லது பழைய மாணவர் அமைப்பு ஏற்படுத்திக்கொடுப்பது அத்தியாவசியமாக உள்ளது. பங்களிப்பு செய்ய விரும்புவோர் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். இதற்கு நிதியாக ரூபா 20,000.00 இருபதினாயிரம் தேவைப்படுகிறது.

நன்றி

மேற்படி பணிகளுக்கான நிதியுதவியை அளித்த பழைய மாணவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி பழைய மாணவர் ஒன்றியம் தெரிவித்துக் கொள்கிறது

எமது பாடசாலையின் அபிவிருத்திக்கு உங்கள் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.

நன்றி.

Read Full Post »

> இவ் வருடம் எமது பாடசாலையிலிருந்து 8 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

அதிபர் திரு.மு.கனகலிங்கம் பரீட்சை முடிவுகளை அறியத் தந்துள்ளார்.

(அருகில் உள்ள புகைப்படம் சென்ற ஆண்டு எடுக்கப்பட்டதாகும். ஒரு வகுப்பறையின் செயற்பாட்டைக் காட்டுகிறது)

புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்

  1. நாகேந்திரராசா மதன்ராஜ் – 165 புள்ளிகள்
  2. தங்கவேலாயுதம் வேல்கஜா – 164 புள்ளிகள்
  3. ரவிக்குமார் நர்மிகா – 162 புள்ளிகள்
  4. சிவகுமார் யதூசா – 152 புள்ளிகள்
  5. சிவராசா நிசாலினி – 149 புள்ளிகள்
  6. தேவராசா கோபினங்கா – 147 புள்ளிகள்
  7. சிவநேசன் காயத்திரி – 143 புள்ளிகள்
  8. சிவதாசா னண்சியா – 141 புள்ளிகள்

இவர்களுள் முன்னணியில் உள்ள மாணவர்கள் 165, 164, 162 என மிக நல்ல புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இம் முறை யாழ் மாவட்ட வெட்டுப் புள்ளி 140 புள்ளிகளாகும்.

130 க்கும் 140 இடைப்பட்ட புள்ளிகளை மேலும் 8 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 100 மேற்பட்ட புள்ளிகளை பல மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த வகையில் எமது பாடசாலையின் பெறுபேறுகள் மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர்களது வெற்றிக்கு காரணமாயிருந்த ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் எமது நன்றிகள்.

ஏனைய மாணவர்களும் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

புலமைமைப் பரிசில் பரீட்சையில் செய்தி எய்திய 8 மாணவர்களில் 7 பேர் புலமைப்பரிசில் உதவி நிதியைப் பெறத் தகுதியுள்ளவர்கள் என்பது குறிப்படத்தக்கது.

முழுமையான விபரங்களையும் அறியவும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் புகைப் படங்களைப் பாரக்கவும் கீழ்காணும் கல்லூரி இணையப் பக்கத்திற்கு செல்லுங்கள்.

http://mpsvidyalayam.tk/

Read Full Post »

>

நன்றி:- www.rossbeach.com/abouncingspace/

Read Full Post »

> நீங்கள் ஒரு உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் நேர்கிறது என வைத்துக் கொள்வோம். அதனை எதிரிலிருப்பவர் சந்தேகப்படாதவாறு உங்களால் சொல்ல முடியுமா?

முடியும் என்று எண்ணுகிறோம். நாம் பொய் சொல்லும்போது அதனைக் கேட்பவர் உணரமாட்டார் என்று எண்ணியே சொல்கிறோம்.

ஆனால் எமது உள்ளுணர்வுகளை முகத்திரை போட்டு முழுமையாக மறைப்பது சாத்தியம்தானா?

அல்லது உங்கள் உடல் தனது மொழிகளால் நீங்கள் எதனையோ மறைப்பதை மற்றவர்களுக்குப் புட்டுக் காட்டிவிடுமா?

மறைக்க விரும்பும் உண்மையானது, முகம் முழுவதும் அப்பிக் கிடப்பதை எவராலும் மறைக்க முடியாது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

உண்மை பொய் மாத்திரமல்ல, நீங்கள் மற்றவர்களிடமிருந்து மறைக்க முயல்கிற எல்லா உணர்வுகளையும் உங்கள் விருப்பத்தை மீறி முகம் வெளிப்படுத்திவிடும். சந்தோசம், துக்கம், ஏக்கம், ஏளனம், பொறாமை போன்ற எந்த உணர்வும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

ஒருவனது உணர்வுகளை அவனது உடல் எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை ஆய்வறிஞர்கள் பல வழிகளில் ஆய்வு செய்கின்றனர். நாளாந்த வாழ்க்கை நிகழ்வுகள் முதல் நாடகத் தன்மை வாய்ந்த ரி வீ நேரடி ஒலிபரப்புகள், மேடை நிகழ்ச்சிகள் போன்ற பலவும் அவர்களது ஆய்விற்கு உள்ளாகின்றன.

வார்த்தைகளுக்கு அப்பாலான உடலின் ஒவ்வொரு மொழியையும் அவர்கள் ஆய்வு செய்கிறார்கள். நீங்கள் உரையாடும் போது மட்டுமல்ல எதுவும் பேசாதிருக்கும் போது கூட உங்கள் உடல் பேசும் மொழிகள் கவனத்தில் எடுக்கப்பட்டன.

ஒருவர் ஒரு முக்கிய பொய்யைச் சொல்லும்போது அதுவும் மற்றவர்களுக்கு தான் சொல்லும் பொய் பிடிபடாமலிருக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கும்போது அவரது வாய் மொழிக்கும், உடல்மொழிக்கும் இடையே பாரிய இடைவெளி; இருப்பதை அவதானிக்க முடியும் என்கிறார்கள்.

கலிபோனியா சான் பிரன்சிக்கோ அரச பல்கலைக்கழக உளவியலாளரான டேவிட் மட்சுமொடா (David Matsumoto) மற்ற எல்லா அங்கங்களையும் விட அதிகமான செய்திகளை முகம்தான் வெளிப்படுத்துகிறது என்கிறார்.

உதாரணத்திற்கு அவர் பிரபல விளையாட்டு வீரர் Alex Rodriguez வின் தொலைக்காட்சி நேர்முகத்தை எடுத்துக் காட்டுகிறார்.

‘நீங்கள் எப்பொழுதாவது ஆற்றலை ஊக்கப்படுத்தும் பொருட்களை உபயோகித்திருக்கிறீர்களா’ என்று கேட்டபோது ‘இல்லை’ என அவரது வாயிலிருந்து விடை உறுதியாக வந்தது.

ஆனால் அவ்வாறு கூறும்போது அவரது வாய் ஒருபுறம் கோணியதை அவதானிக்க முடிந்ததாம்.

சில மாதங்களின் பின் தான் ஸ்டிரொயிட் மருந்துகளை உட்கொண்டதை அவர் ஒத்துக்கொள்ள நேர்ந்தது.

ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எததகைய சமூகப் பின்னணியைச் சார்ந்தவராயினும் ஆணாயினும் பெண்ணாயினும் அடிப்படை உணர்வுகளை ஒரே மாதிரித்தான் முகத்தால் வெளிப்படுத்துகிறார்களாம்.



ஏனெனில் அடிப்படை உணர்வுகள் நாம் கற்றுக் கொண்டவையல்ல, அனுபவத்தால் பெற்றும் கொண்டவையும் அல்ல.

அவை எம்மோடு கூடப் பிறந்தவை.

அடிப்படை உணர்வுகள் ஏழு என்கிறார்கள்.

மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம், ஏக்கம், சஞ்சலம், பதற்றம் ஆகியனவே அவை.

உதாரணத்திற்கு மிக சந்தோசமான செய்தியைக் கேட்டவுடன் எமது முகம் விரிந்து மகிழ்ச்சியில் பூரிக்கிறதே. அது தன்னிச்சையாக எமது ஆழ்மனத்திலிருந்து உடனடியாக எழும் உணர்வின் பிரதிபலிப்பாகும் என்கிறார்.

அகத்தின் அழகை முகம் காட்டுவதில் பிரச்சனை ஏதும் இல்லை. ஏனெனில் நீங்கள் ஊடாடுபவரிடம் உங்களைப் பற்றிய நல்லெண்ண விதைகளை அது ஊன்றிவிடும்.



மாறாக அகத்தின் அழுக்கை அதுவும் மற்றவரிடம் இருந்து மறைக்க விரும்பும் அழுக்கை உங்கள் முகம் வெளிப்படுத்துவதானது திருடிய பொருளுடன் அகப்படுவது போலானது.

இதனைத் தடுக்க வழி ஏதும் உள்ளதா?

அகத்தை அழுக்கின்றி புனிதமாக வைத்திருப்பதுதான் ஒரே வழி என்று தோன்றுகிறது.

முடியுமா உங்களால்?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி

ஹாய் நலமா?

தினக்குரல் 28.07.2009

Read Full Post »

>
வியாபாரிமூலையைச் சேரந்தவரும் தற்போது சென்னையில் வசித்து வந்தவரும் ஆன பாலா அசோகன் (பாலசுந்தரம் அசோகன்) நேற்று (06.10.2009) காலமானார்.

எமது ஊரின் முன்னேற்றம், வளரச்சி பற்றி ஆரம்பம் முதல் சிந்தித்த ஒருவர் அவர்.

தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் போது திடீரென ஏற்பட்ட நரம்பு நோய் காரணமாக அவரது கால்கள் இயங்காது விட்ட போதும் மனஉறுதி தளராது செயற்பட்டவர் அவர்.

கலைமணி சனசமூக நிலையத்தோடு சேர்ந்து செயற்பட்டவர். அதன் மாதாந்த கையெழுத்து சஞ்சிகையான கலைமணியின் ஆசிரியராகச் செயற்பட்டவர்.

எமது ஊரில் முதன் முதலாக பாடசாலையில் மூன்று நாள் கண்காட்சி நடப்பதற்கு காரணமாக இருந்தது அவர்தான். பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் (பொம்பிளைப் பள்ளிக் கூடம்) இது நடைபெற்றமை பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

எமது ஊர் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு சுப்பிரமணிய வாத்தியார் உட்பட பல இளைப்பாறிய ஆசிரியர்களை முன்னிலைப்படுத்தி ரியூசன் வகுப்புகளை ஆரம்பித்து வைத்த பெருமையும் இவரையே சாரும்.

ஊரில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஒரு மரத் தளபாட தொழிலகத்தை ஆரம்பித்து வைத்ததும் அவரே. அவர் செய்து தந்த புத்தக அலுமாரி எனது பருத்தித்துறை வீட்டில் என்றும் அவர் ஞாபகமாக இருக்கும்.

அருமை நண்பனே உன்னை இழந்த துயர் என்னையும் நண்பர்கள் வட்டத்தையும் மட்டுமின்றி எமது ஊர் முழுவதையும் கண்ணீர்க் கடலில் ஆழத்தியுள்ளதை உன்னால் காண முடிகிறதா.

அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

பகவான் சத்தியசாயி பாபாவின் தீவிர பக்தர் அவர்.

ஓம் சாந்நி சாந்தி சாந்தி.

Read Full Post »

>

“எக்ஸிமாவைக் குணப்படுத்தினால் ஆஸ்மா வருமாம். என்றபடியால் கடும் மருந்து தாராதையுங்கோ.’ என்றாள் எக்ஸிமாவுடன் அல்லாடும் அந்தப் பெண்மணி.

அவள் மட்டுமல்ல பெரும்பாலான மக்கள் அவ்வாறுதான் நம்புகிறார்கள்.

அது உண்மைதானா?

இல்லை. தவறான கருத்தென்றே நான் கருதுகிறேன்.

ஆனால் பெரும்பாலானவர்கள் ஏன் அவ்வாறு கருதுகிறார்கள்? காரணம் உண்டு.

ஆஸ்மா, எக்ஸிமா, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுக்கடி போன்ற பல நோய்களுக்கான அடிப்படைக் காரணம் ஒவ்வாமைதான். அதாவது அலர்ஜி (Alle rgy).

எனவே மேலே கூறிய அறிகுறிகள் யாவும் ஒருவருக்கே ஒருங்கே வரக்கூடும்.

அல்லது ஒன்று மட்டும் தொடர்ந்து தொல்லை கொடுக்கக் கூடும்.

அல்லது மாறி மாறி வரவும் கூடும்.

உதாரணமாக ஒருவருக்கு ஆஸ்மா தொல்லை தொடர்ந்து இருக்கக் கூடும். அல்லது ஆஸ்மாவும் எக்ஸிமாவும் சேர்ந்து வரக் கூடும். அல்லது ஒன்று மாற மற்றது வரவும் கூடும். எனவே ஒன்றைக் குணப்படுத்தினால்தான் மற்றது வரும் என்பது தவறான கருத்தாகும்.

அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட் களை ஒவ்வாமைப் பொருட்கள் (Allergans) என்பார்கள்.

அது உடலில் எங்கு தொடர்புறுகிறதோ அவ்விடத்தில் அழற்சியை ஏற்படுத்தும் அங்கு நோய் வரும். எந்தப் பொருளுக்கு உடலின் எந்தப் பாகத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதைப் பொறுத்ததே நோய்.

உதாரணமாக ஒருவருக்கு பூக்களின் மகரந்தத்திற்கு ஒவ்வாமை எனில் அவர் சுவாசிக்கும் போது நாசிவழியாக உட்செல்லும் போது நாசி அரிப்பு, தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

அதே நேரம் சுவாசத் தொகுதியின் உட்பகுதியை அடையும்போது இருமல், இழுப்பு, நெஞ்சடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதேபோல தூசிப்பபூச்சி, கரப்பொத்தான் எச்சம், நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களின் முடி ஆகியவையும் ஏற்படுத்தலாம். இவை சுவாசத் தொகுதியில் ஏற்படும் ஒவ்வாமையாகும்.

இறப்பர் செருப்பு, ஒட்டுப் பொட்டு போன்றவை ஒவ்வாமை காரணமாக சருமத்தில் அழற்சியை ஏற்படுத்தும். இது எக்ஸிமாவாக வெளிப்படும். முடி நிறமூட்டிகள் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

சிலவேளைகளில் அது மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம். அதாவது ஒரே பொருள் வெவ்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

அவ்வாறெனில் அலர்ஜிக்கான மருந்து எடுப்பதன் மூலம் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்த முடியுமா?

அலர்ஜிக்கான சில சிகிச்சைகள் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்தக் கூடும். எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை என அறிந்து அதற்கு உடலை பழக்கப்படுத்தும் ஊசி மருந்துகள் (immunotherapy)அத்தகையன. ஆயினும் மிகவும் பயனுள்ள சிகிச்சை எனச் சொல்ல முடியாது.

ஆயினும் ஒருவர் தனக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் பொருளைக் கண்டறிய முடிந்தால், அதனை தவிர்ப்பதன் மூலம் ஆஸ்மாவைத் தடுக்க முடியும்.

ஆஸ்மா, எக்ஸிமா, அலர்ஜி ஆகியவை ஒன் றோடொன்று தொடர்புடைய நோய்கள் எனில் ஒரே மருந்து இவை யாவற்றிற்கும் பயன்படுமா? சில மருந்துகள் அவ்வாறு பயன்படும்.

உதாரணமாக கோர்ட்டிகோ ஸ்ட்ரொயிட் (corticosteroids) வகை மருந்துகளைக் குறிப்பிடலாம்.

ஆயினும் அவை ஒரே விதமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. தும்மல், மூக்கால் ஓடுதல், மூக்கடைப்பு ஆகியவற்றிற்கு அவை Nasal spray ஆகப் பயன்படுத்தப்படும்.

ஆஸ்மாவிற்கு இன்ஹேலர் (Inhaler) ஆகவும்,

எக்ஸிமாவிற்கு ஓயின்மென்ட் (Ointment) ஆகப் பயன்படுத்தப்படும்.

மோன்டிலியுகாஸ்ட் (Montelukast) போன்ற மருந்துகள் ஆஸ்மா அலர்ஜி ஆகிய இரண்டிற்கும் பயன்படும். இருந்தபோதும் வென்டோலின், பிரிக்கானில் போன்ற சுவாசக் குழாய்களை விரிவிக்கும் மருந்துகள் (Bronchodilator)ஆஸ்மாவிற்கு மட்டுமே பயன்படும்.

யாருக்கு ஆஸ்மா வருவதற்கான வாய்ப்பு அதிகம்? பரம்பரையில் அலர்ஜி நோயுள்ளவர்களுக்கு அதிகமாகும். அதே போல தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள்கள் அதிகமாக உள்ளவர்களுக்கும் அதிகமாகும்.

ஆயினும் பெரும்பாலான ஆஸ்மாவுக்கு காரணம் அலர்ஜி ஆயினும், எல்லா ஆஸ்மாவும் ஒவ்வாமையால் ஏற்படுவதல்ல.

உடற்பயிற்சியின் போது தோன்றும் ஆஸ்மா(exercise – induced asthma),

தடிமன், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களின் போது தோன்றும் ஆஸ்மா,

இரப்பையில் உள்ள அசிட் மேலெழுந்து வருவதால் (GERD) ஏற்படுவது,

தானாகவே ஏற்படும் (intrinsic)வகைகளும் உண்டென்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

– டாக்டர் எம்.கே. முருகானந்தன்-

Read Full Post »

>நண்பர் கே. எஸ். சிவகுமாரன் அவர்களது பிறந்த தினம் இன்றாகும். அவருக்கு எனது மனம் நிறைந்த பிறந்த தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன். தொடர்ந்து நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து தனது கலை இலக்கியப் பணிகளைத் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1936ம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி பிறந்தார். .

கலை இலக்கிய ஊடகத் துறையில் முன்னணியில் நிற்கும் இவர்
ஒரு பத்தி எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், அத்துடன் ஆங்கிய ஆசிரியராகவும் கடமை ஆற்றியுள்ளார்.

இலங்கை வானொலியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.

ஈழத்தின் குறிப்பிடத்தக்க திறனாய்வு எழுத்தாளர்களில் ஒருவர்.

ஆங்கிலத்திலும் எழுதும் ஈழத்து எழுத்தாளர். தன்னைப் பத்திஎழுத்தாளர் என்று கூறிக் கொள்வார். ஆயினும் அவருள் புதைத்திருக்கும் ஆற்றல்கள் அனேகம்.

இவர் கவிதைகள், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.


திரைப்படங்கள், திரைக்கலை தொடர்பான அவரது எழுத்துக்கள் காரணமாக இலங்கையில் திரைப்படம் பற்றிய தெளிவு பலருக்கும் ஏற்படக் காரணமாக இருந்துள்ளார். திரைப்படங்களில் உள்ள ஈடுபாடு காரணமாக வருடாவருடம் இந்தியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளச் செல்வதுண்டு.

ஆங்கிலத்தில் நான்கு நூல்களையும், தமிழில் 17 நூல்களும் எழுதியிருக்கிறார்.

மிக அமைதியாகவும் மென்மையாகவும் பேசும் இவர் மற்றவர் மனங்களைப் புண்படுத்தி அறியாதவர். தனது எழுத்துக்கள் ஊடாக பலரது படைப்புகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அரும் பணி ஆற்றுகிறார்.

பதிவுலக நண்பர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்விக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Read Full Post »