Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2009

>எமது ஆரம்பப் பாடசாலையானது அண்மைக் காலங்களில் துரித முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால் ஒரு பாடசாலையின் சமூகப் பெறுமதியானது அதன் இன்றைய மாணவர் தொகை, அவர்களின் கல்வித் திறன், அதிபர், ஆசிரியர், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புகள், அதன் பௌதீக வளம் போன்ற இன்றைய நிலையை மட்டும் கருத்தில் கொள்வதில்லை.

முன்னாள் அதிபர் திரு.சிவபாதசுந்தரம் அவர்களின் புகைப்படம்.



கீழே உள்ளது சிறந்த கல்விமானாகிய V.துரைச்சாமிப்பிள்ளை அவர்களின் போட்டோ.



அதன் ஆரம்பமும் வளர்ச்சியும் முக்கியமானது. அதன் வளரச்சிக்கு அத்திவாரம் இட்டு வளர்த்த ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். அவர்களை மறக்கக் கூடாது. முன்னோடியாகப் பங்களித்தவர்கள் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியவர்கள்.

இது S.P.M.கனகசபாபதி அவர்களின் போட்டோ.



அதேபோல அங்கு கல்வி கற்று முன்னேறியவர்கள் அனைவருமே நினைவில் வைக்க வேண்டியவர்களே. கல்வி அறிவால் சிறந்து மதிப்பைப் பெற்றவர்களும், தொழிற்துறை, மற்றும் சமூகப் பணிகள் மூலம் சிறந்து விளங்கியவர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.

அத்தகைய விபரங்களைச் சேகரித்து, பழைய மாணவர் பற்றிய விபரக்கொத்து ஒன்றை பேணுவதற்கான ஆர்வத்தை அதிபர் மு.கனகலிங்கம் முன்மொழிந்தார். அது மிக முக்கியமானது என்பதை உணர்ந்து எமது பழைய மாணவர் ஒன்றியம் அதனைத் தயாரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

உதவி வைத்திய அதிகாரியான டொக்டர்.த.பரமகுருநாதன் அவர்களின் போட்டோ.



அதனைத் தயாரிப்பதற்கு பழைய மாணவர்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு முக்கியமானதாகும். எமது பாடசாலை சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவிய உங்கள் உறிவினர்கள் பற்றிய சிறிய குறிப்பைத் தந்து உதவினால் மிகவும் பெறுமதியாக இருக்கும். அவர்களின் புகைப்படப் பிரதியும் இருந்தால் மிகவும் சிறப்பாக அமையும். (உதாரணமாக பெற்றோர் சகோதரங்கள், மூதாதையர்கள் போன்றோர்)

அதற்கான ஒரு மாதிரிப் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதனைப் பூர்த்தி செய்து கிடைக்கச் செய்து இப் பெரும் பணியை சிறப்பாக நிறைவேற்ற உதவுங்கள்.

கீழ்கண்ட ஈ மெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்,

mkmurug@sltnet.lk



அல்லது கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வையுங்கள்

Dr.M.Muruganandan

Mediquick

48/1,Dharmarama Road

Colombo 06

Sri Lanka






மேலைப் புலோலி சைவப் பிரகாச வித்தியாலய பழைய மாணவர் பற்றிய விபரக் கொத்து

1. முழுப் பெயர்:

2. பிறந்த திகதி: ………….ஆண்டு …………….மாதம் ………………………திகதி

3. முகவரி (அ) (மே.பு.சை.பி.வித்தியாலத்தில் கல்வி கற்ற காலத்தில்);:……………….

…………………………………………………………………………………………….

…………………………………………………………………………………………….

(ஆ) (தற்போதையது):………………………………………………………….

……………………………………………………………………………………………

4. ஈ மெயில் முகவரி: …………………………………………………………………….

5. தொலைபேசி இல.: (1)…………………………………………………………….

(2)…………………………………………………………….

6. மே.பு.சை.பி.வித்தியாலயத்தில் கல்வி கற்ற காலம்: ……………………… ஆண்டு

முதல் ………………ஆண்டு வரை

7. தொழில்ஃபதவி: …………………………………………………………………………..

8. தகைமைகள்ஃசிறப்புகள்ஃசமூகப் பணிகள்: ………………………………………………….

…………………………………………………………………………………………

…………………………………………………………………………………………

9. மேலதிக தகவல்கள் குறிப்பிட விரும்பின்: …………………………………………..

…………………………………………………………………………………………

சிறிய அளவிலான புகைப்படம் இணைத்தல் விரும்பத்தக்கது. மே.பு.சை.பி.வித்தியாலத்தில் கல்வி கற்ற நெருங்கிய உறவினர்கள் பற்றிய விபரங்களை வழங்குவதற்கும் இக் கேள்விக்கொத்தைப் பயன்படுத்தலாம்.

Read Full Post »

>
An apple a day keeps the doctor away என மேல்நாட்டவர்கள் சொல்லுவார்கள். இதில் மருத்துவ ரீதியான உண்மை ஓரளவு இருந்தாலும் கூட இதனைக் கடைப்பிடிப்பவர்கள் அங்கும் அரிதுதான்.

ஆனால் தினமும் வைன் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.

உடல் நலத்திற்காக அல்ல!


அது கொடுக்கும் இன்பத்திற்காகக் குடிப்பவர்களே அதிகம். பெண்களும் இதில் அடங்குவர்.

வைனின் நல்ல பயன்கள்

உண்மையில் வைனின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. திராட்சை ரசம் எனப்படும் இது
புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறதாம்.
இருதயத்தைப் பாதுகாக்கிறதாம்,
வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தமாவதைத் தடுக்கிறது,
நீரிழிவு, மூட்டுவாதங்களைத் தடுக்கிறது
என இப்படிப் பல ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

வைன் இவ்வாறு பல உடல்நல நன்மைகளை ஏற்படுத்துவதற்குக் காரணம் என்ன?

அதிலுள்ள எந்தப் பொருள் இவ்வாறான நன்மைகளைச் செய்கின்றன?

அதிலுள்ள மதுவம் எந்தவித நன்மையையும் செய்யவில்லை என்பதை முதலிலேயே தெளிவாகப் புரிந்த கொள்ள வேண்டும். ஆனால் மதுவத்தை தவிர ஏராளமான ரசாயனப் பொருட்கள் இயற்கையாகவே அதில் அடங்கியுள்ளன. அவற்றில் சிலதான் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன.

வைனில் உள்ள மதுவல்ல காரணம்

ரெஸவெடரோல்

(Resveratrol) என்ற இரசாயனப் பொருளே முக்கிய காரணமாம்.

அது குருதியில் நல்ல கொலஸ்டரோல் HDL அளவை அதிகரித்து இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைக் குறைக்கிறது.
அத்தோடு குருதி உறைதலைக் குறைத்து மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கின்றன.
அழற்சிக்கு எதிரான தன்மையும் ரெஸவெடரோலுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

Resveratrol பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்

அல்ஸிமர் நோய், பார்க்கின்சன் நோய் போன்றவை மூளை நரம்புகளை படிப்படியாகச் சேதமடையச் செய்து மூளையை மந்தமாக்கும்.
வைன் அருந்துவது இந் நோய்கள் தீவிரமாகும் வேகத்தை குறைக்கின்றன எனத் தெரிகிறது.


அவ்வாறெனில் தினமும் வைன் குடிப்பது நல்லதா?

வைன் பானத்திற்கு ஆரோக்கிய ரீதியான நல்ல பக்கம் இருப்பது போலவே கெட்ட பக்கங்களும் உண்டு.

வைனின் மறுபக்கம்

உதாரணமாக அது கெட்ட கொலஸ்டரோல் ஆன

triglyceride அளவை அதிகரிப்பதாகத் தெரிகிறது. எனவே ரைகிளிசரைட் அளவு அதிகமுள்ளவர்களுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளவர்களுக்கும் நல்லதல்ல.


உதாரணமாக நீரிழிவு நோயாளருக்கு பெரும்பாலும் ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே அத்தகையவர்களுக்கு வைன் ஏற்றதல்ல.

கபாலக் குத்து எனப்படும்


(Migraine) நோயாளர்கள் பலருக்கும் வைன் தூண்டியாக இருப்பது தெரிகிறது. முக்கியமாக செவ் வைன்

(Red wine) அருந்தியதும் பலருக்கு காபலக் குத்து பட்டென வந்துவிடுகிறது.

வைன் உடலிலுள்ள பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை அதிகரிப்பதால் மார்புப் புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லதல்ல.

வைன் என்பது உண்மையில் ஒரு மது.
மதுவில் உள்ளது வெற்றுக் கலோரிகளே.
உதாரணமாக ஒரு கிராம் மாப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது.
அதேபோல ஒரு கிராம் புரதத்திலும் 4 கலோரிகள் இருக்கிறது.
ஆனால் ஒரு கிராம் மதுவில் 7 கலோரிகள் இருக்கிறது.

இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.

எடை அதிகரித்தால் ஏற்படும் நோய்கள் அனேகம்.

எவ்வாறு அருந்துவது

இந்த ரெஸவெடரோல் உணவுக் கால்வாயினால் உறிஞ்சப்பட்டு ஈரலில் மாற்றங்களுக்கு ஆட்பட்டே எமது இரத்தச் சுற்றோற்டத்தை அடைகிறது.

அதாவது ஒருவர் வைன் குடிக்கும்போது உட்கொள்ளும் ரெஸவெடரோல் முழுமையாக இரத்தத்தை அடையாது. இதனால் அதிலிருந்து கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகள் முழுமையாக குடிப்பவருக்குக் கிடைப்பதில்லை.

ஆனால் குடலை அடையும் முன்னர் வாயிலுள்ள மெனசவ்வுகளால் உறிஞ்சப்படும் ரிசவஸ்டரோல் முழுமையாக இரத்த ஓட்டத்தை அடைகிறதாம்.

அதாவது வைனை பக்கெனக் குடித்து முடிக்காமல் வாயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிப்பதால் சேதாரமின்றி இரத்தத்தை அடைகிறது.

இன்னொரு விடயம் சிவத்த வைன், நிறமற்ற வைனைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்.

காரணம் என்னவெனில் சிவத்த வைன் உற்பத்தியின் போது திராட்சையின் தோல் நீண்ட நேரம் அகற்றப்படாது இருப்பதால் வைனில் ரெஸவெடரோல் செறிவு அதிகமாக இருப்பதே ஆகும்.


ஆனால் நிறமற்ற வைன் உற்பத்தியின் போது புளிக்க விடு முன்னரே திராட்சையின் தோல் அகற்றப்படுகிறது.

வைன் குடிப்பது அவசியமா?

மீண்டும் வைன் குடிப்பது நல்லதா எனக் கேட்கிறீர்களா?

நீங்கள் எற்கனவே தினமும் வைன் அருந்துவராயின் தொடர்ந்து அருந்துவதில் தவறில்லை.

ஆனால் அளவோடு மட்டுமே. ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே வைன் அருந்தலாம்.

ஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லீட்டர் ஆகும். அளவை மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின் அனைத்து தீமைகளும் வந்து சேரும்.

வழமையாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக வைன் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை.

வைன் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது. அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து தாராளமாகப் பெறலாம்.

வைன் அருந்துவது அவசியம்தானா என்று இப்பொழுது நான் உங்களைக் கேட்கிறேன்.

என்ன சொல்லப் போகிறீர்கள்?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி

இருக்கிறம் 01.11.2009

Read Full Post »

>“எங்கடை வீட்டையும் கிருஸ்மஸ் பப்பா வருவாரா”

நர்சரி வகுப்பிலிருந்து ஓடோடி வந்த மகிழன்
மூச்சிழைக்கக் கேட்டான்.

கண்களில் இனந்தெரியாத எதிர்பார்ப்பு. முகத்தில் ஆர்வம் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது.

அவனது ஆசையை நிஜமாக்க வேண்டும் என்று அப்பா நினைத்துக் கொண்டார்.

அவர்கள் இந்துக்கள்.

எங்கடை பிள்ளையார் பரிசுகள் கொண்டு வர மாட்டாரே!

கிருஸ்மஸ் பப்பா பரிசுகள் கொண்டு வருவதை அவன், தனது பாலர் பாடசாலை நண்பர்கள் மூலம் அறிந்திருந்தான்.

இரவானது 8மணி, 9 மணி எனக் காத்திருந்த அவனுக்கு அதற்கு மேலும் முடியவில்லை. தூங்கிவிட்டான்.

காலையில் விழித்தெழுந்ததும் முதல் கேள்வி என்னவாக இருக்கும் என்பது பெற்றோர்களுக்குப் புரிந்திருந்தது.


காலையில் விழித்தெழுந்த அவனது கட்டிலைச் சுற்றி பெரிய பலூன்கள்.

பலூனை விட அவனது கண்கள் பெரிதாகி விரிந்தன. கட்டிலுக்கு அருகில் வேறு ஏதோ ஒரு விளையாட்டுப் பொருள்.

ஆச்சரியம் மிகுந்தது.

மாடிப்படியால் இறங்கும் வழியில் இன்னும் இன்னும் . . . .

குட்டிக் கண்களில் மகிழ்ச்சி முட்டியது.

எவ்வளவு பரிசுகள்! சிறக்கை கட்டி வானத்தில் பறக்காத குறைதான்

ஆனாலும் ‘கிறிஸ்மஸ் பப்பா வரும்போது ஏன் என்னை எழுப்பவில்லை’

இந்தக் கேள்விக்கு பல பொய்களைக் கட்ட நேர்ந்தது.

0.0.0.0.0

சில வருடங்கள் சென்றன. மகிழன் வளர்ந்துவிட்டான். வயது 12 ஆகியிருக்கும்.

உலகம் சற்றுப் பிடிபட ஆரம்பித்துவிட்டது.

இப்பொழுது சன்டாவைத் காணும் கனவு அபிராமிக்குத் தொற்றிவிட்டது.

அவளது கனவுகளுக்கு அண்ணனும் உருவேற்றியிருந்தான்.

‘எப்ப வருவார்? எப்படி இருப்பார். என்ன கொண்டு வருவார்’

எல்லையே இல்லை அவளது கனவுகளுக்கு. தேவதை போல பறந்து கொண்டிருந்தாள் கனவுலகில்.

‘பக்கத்து வீட்டு லக்ஸிக்குக் கிடைக்குமா? எனக்கும் கிடைக்குமா’ என்ற கேள்விகள்.

‘நல்ல பிள்ளையாக இருந்தால் கொண்டு வருவார்’ என்பாள் அம்மா.


‘நான் நல்ல பிள்ளையோ’ சந்தேகம் தலை தூக்கும்.

‘சன்டாவுக்குத்தான் தெரியும்.’ என்று சொன்னால் கொஞ்ச நாட்களுக்கு பிரளி எதுவும் இருக்காது அடங்கிவிடும்.

கிறிஸ்மஸ் இரவு வந்தது. சின்னவள்தானே. தூங்கிவிட்டாள்.

அவளைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு மூன்று பேருக்காகியது.

மகிழனும் பெற்றோர்களுடன் சேர்ந்து தங்கைக்கான கிருஸ்மஸ் பப்பாவின் பரிசுப் பொருட்களை ஆங்காங்கே பரப்பி வைத்தார்கள்.

பக்கத்து வீட்டு பல்கணியிலும் மற்றொரு பரிசுப் பொதியைப் போட்டு வைத்தார்கள்.

அவளது விழித்தெழுதலுக்காகக் காத்திருந்தான். பெற்றோர்களுடன்.
விடிந்தது.

இவளது முன் பல்கனியில் சன்டாவின் பரிசுப் பார்சல் காத்திருந்தது.

‘எனக்கும் சன்டா பரிசு தந்திருக்கிறார்’ லக்ஸியின் குரல் அவளது பின் பல்கனியிலிருந்து ஓங்கி ஒலித்தது.

இரண்டு பேருக்குமே சன்டாவின் பரிசுகள்!

நல்ல பிள்ளைகள் ஆதலால் மறைந்திருந்து வைத்துச் சென்றாராம்.

0.0.0.0.0

பல வருடங்கள் சென்றுவிட்டன.

இப்பொழுது கிருஸ்மஸ் பப்பாவிற்காக் காத்திருப்பவர்கள் குழந்தைகள் அல்ல.


அப்பாவும் அம்மாவும்.

தங்களுடன் கிறிஸ்மசைக் கொண்டாடி மகிழ்ச்சியில் ஆழ்த்த யார் இருக்கிறார்கள்?

வெளி நாட்டிலிருந்து பிள்ளைகளைப் பரிசாகக் கூட்டி வருவாரா சன்டா!
காத்திருக்கிறார்கள்!!

சண்டாவால் SMS வாழ்த்தைத்தான் கொண்டுவர முடிந்தது.

Read Full Post »

>கணவனும் மனைவியுமாக வந்திருந்தனர்.
ஐம்பதுக்கு சற்று மேலாக வயதிருக்கலாம்.
புதியவர்கள்.
இன்றுதான் என்னிடம் மருந்தெடுக்க
முதல் முதலாக வந்திருந்தார்கள்.


அவவிற்கு நிறையச் சொல்ல வேண்டியிருந்தது.

தன்னைப் பற்றிய முழு விபரமும் தனது மருத்துவருக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்ற அவா.

பிறந்த காலத்திலிருந்து ஆரம்பித்தார்.

பத்து நிமிடங்கள் கழிந்துவிட்டதை நான் அவதானித்த போது அவர் தனது கதையில் கன்னிப் பருவத்தில் இருந்தார்.

திடீரெனக் கண் சிமிட்டினார்! நான் சற்றுத் திடுக்கிட்டேன்.


கடைக்கண்ணால் கணவருடன் மௌன மொழி பேசினார்.

கணவனை பார்த்துத்தான் கண்சிமிட்டினார் என்பது புரிவதற்கிடையில் அவர் மற்றொரு உலகில் சஞ்சரிக்கத் தொடங்கினார்.

தாங்கள் காதலித்த போது
கடற்கரையில் தான் தடக்கி விழுந்து
காலில் உரசிய போது
அவர் செய்வதறியாது திகைத்து நின்றதும்,
பின் தன் கால்களைப் பற்றியபடி….

தமது காதல் அனுபவத்தில் சுவார்ஸமாகத் திளைக்க ஆரம்பித்தார்.


இந்த வேகத்தில் போனால் கருக்கட்டி. கர்ப்பமாகி, குழந்தை பெற்று, வளர்த்து, அவர்களுக்கு கலியாணம் பேசி…

ஏனைய நோயாளிகளின் ஏச்சுக்கு ஆளாக நேரிடுமே என்ற எண்ணம் தலை தூக்க ஒரு காதால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே ஏனைய விபரங்களைக் கேட்டுக் குறிக்கலாம் என முடிவு செய்தேன்.

பெண்மணியைப் பேசவிட்டுவிட்டு கணவரிடம் மனைவியின் பெயரைக் கேட்டேன்.

மிஸஸ் …. எனத் தனது பெயரைக் கூறியபோது,
முழுப் பெயரைக் கேட்டேன்.

அதாவது மனைவியின் பிறப்புப் பெயரை.

‘இவன் யார் எனது மனைவியின் பெயரைக் கேட்பதற்கு!’ என எண்ணினாரோ?
தலை நரைத்த அவர் சற்று யோசனையின் பின் மனைவியின் பெயரைத் தயக்கத்துடன் சொன்னார்.


கம்பியூட்டரில் பதிந்து கொண்டேன்.

இருவர் கண்களும் கம்பியூட்டரிலும் என்னிலும் ஆழப் பதிந்து மீண்டன.

அடுத்து வயது, விலாசம் என அடுத்தடுத்துக் கேட்டபோது கணவன் மட்டுமின்றி மனைவியின் முகத்திலும் சிந்தனை ரேகைகள் படர்ந்தன.

ஆச்சரியத்துடன் என் முகத்தைப் பார்த்தனர்.

இருவர் கண்களும் தமக்குள் ஏதோ பேசிக் கொண்டதாக எனக்குப் பட்டது.

பொலீஸ் பதிவு போல நானும்; விபரம் கேட்கிறேன்,
இதுவும் ஏதோ பாதுகாப்பு விவகாரம் என எண்ணுகிறார்கள் போலும்.

ஆயினும் கருத்து எதுவும் சொல்லாமல்
அடுத்த கேள்விக்குத் தாவினேன்.

அடுத்த கேள்வியையும் கேட்டவுடன்
அவர்கள் முகம் ஆச்சரியத்தின் எல்லையை எட்டியது.

சந்திர பிம்பமென வதனத்தில் சற்று மகிழ்ச்சியும் பரவியது.

‘டொக்டர் அப்படித்தான். நான் சொன்னேன் பார்த்தீர்களா’ என்றாள் மனைவி.

ஆமாம் என்று விடையளிப்பது போலத் தலையை ஆட்டினார் கணவன்.

இப்பொழுது ஆச்சரியத்தில் மூழ்குவது எனது முறையாயிற்று.

அவரது பிறந்த திகதியைத் தானே கேட்டுப் பதிந்தேன்!!

‘நான் என்ன புதுமையாகச் செய்தேன் என இவள் கண்டு பிடித்தாள். அவரும் ஆமோதிக்கிறாரே!’ என வியந்தேன்.

இருந்தபோதும் வெளிப்படையாகக் கேட்க வெட்கம் தடுத்தது.

ரகசியம் வெளிப்பட்டது. அவளின் அடுத்த பேச்சில்.

“டொக்டர் நீங்கள் குறிப்பைப் பார்த்து வைத்தியம் செய்யிறது எங்களுக்கு வலு சந்தோசம்.”

நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

நான் நோயாளியின் விபரங்களை அக்கறையாகப் பதிவு செய்வதைக் கவனித்துவிட்டார் அல்லவா?

அக்கறையுள்ள டொக்டர் என நினைக்கிறார்கள்.

பெருமையில் மிதந்தேன்.


பத்து வருடங்களுக்கு மேலாக
ஒவ்வொரு நோயாளியினதும் பெயர் முதற் கொண்டு
அவர்களின் நோய் விபரங்களையும் பதிவு செய்து வருவதால்
நோயாளர் கவனிப்பில்
நானே இலங்கையில் சிறந்தவன்,
முன்னோடி என்றெல்லாம்
நானே என்னை மெச்சிக் கொள்வதுண்டு.

கணனித்துறை நண்பன் கார்த்தியின் உதவி கிட்டியதால் இலங்கையில் அவ்வாறான டேட்டா பேசை முதலில் ஆரம்பித்தவன் நானே.

இன்று கூட கையில் அடங்கக் கூடிய மருத்துவர்களே இங்கு அவ்வாறு செய்கிறார்கள்.

நோயாளிகள் தங்கள் பதிவுகளை தாங்களே பாதுகாக்காத நிலையும் இங்கு உண்டு. ஆனால் ஒரு விரல் சொடுக்கில் அவர்கள் நோய் விபரங்களை எனது கணனியில் கண்டறிய முடியும். பல நோயாளிகள் இதைப் புரிந்து கொள்வதில்லை.

‘முகத்தைப் பார்க்காது மொனிட்டரைப் பார்த்து வைத்தியம் செய்பவர்’
நக்கல் அடிப்பவர்கள் நிறையவே உண்டு.

இவர்களாவது என்னைப் புரிந்து கொண்டார்களே என திருப்தியடைந்தேன்.
அம்மா ஏதோ சொல்ல ஆரம்பித்தார். மேலும் பாராட்ட முனைகிறாரா? அக்கறையுடன் கவனித்தேன்.

“அந்தக் காலத்திலை ஓலை பார்த்துத்தான்
பரியாரிகள் வைத்தியம் செய்வினம்….”


“..இப்ப ஆர் அப்படியிருக்கினம்?
நீங்கள் ஒராள்தான்
காலத்திற்கு ஏற்றாற் போல
கொம்பியூட்டரிலை
சாதகக் குறிப்பு பார்த்துச் செய்யிறியள்.”

என்றாள் மனைவி.

இப்படியும் எனது கொம்பியூட்டர் பதிவுக்கு அர்த்தமா? அதிர்ந்தேன்.

அறிவியலுக்கு ஒவ்வாத சாத்திரம், எண்சோதிடம், ஓலை, காண்டம் வாசிப்பு, போன்ற எதிலும் நம்பிக்கையற்ற ஒருவனுக்கு இப்படியும் ஒரு பாராட்டா?

0.0.0.0.0.

Read Full Post »

>
மார்கழி மாதம். கடும் குளிர். அதிகாலை வந்தவர் ஒரு நடுத்தர வயது மனிதர். நோயாளி, கூட வந்தவர்கள் யாவரும் கடும் பதற்றத்தில் இருந்தனர். அந்தக் குளிரிலும் சிலருக்கு வியர்க்கவும் செய்தது.

‘அப்பாவின் பிரஸரைப் பாருங்கோ’ மகள்’ அந்தரப்பட்டாள்.

‘ஏன் என்ன பிரச்சனை?’ நான்.

‘அப்பாவிற்கு காலையிலை மூக்காலை இரத்தம் கொட்டினது. அதுதான் பிரஸரைப் பாருங்கள்.’

அவர்கள் திருப்திக்காக உடனடியாகவே பிரஸரைப் பார்த்தேன்.


எதிர்பார்த்தது போல அதிகம் இல்லை. அவர்கள் சொல்லாவிட்டாலும் பார்த்தே இருப்பேன். ஏனைய முக்கிய விடயங்களைப் பார்த்த பின்.

மூக்கால் இரத்தம் வடிவது என்பது எல்லோரையும் மிகவும் பயமுறுத்துகிற விடயம்தான். ஆனால் மிகப் பெரும்பாலும் அது பயப்படக் கூடியதோ, மரணத்திற்கு இட்டுச் செல்வது போல ஆபத்தானதோ இல்லை.

மூக்கால் ஏன் இரத்தம் வடிகிறது?

எமது மூக்கானது இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக உள்ள ஒரு உறுப்பாகும். அத்துடன் அது முகத்திலிருந்து வெளியே தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆதலால் மிகவும் பாதுகாப்பற்ற நிலையிலும் இருக்கிறது. எனவே எந்த விபத்தின் போதும் முகம் அடிபடும்படி விழுந்தால் அது காயப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

அத்துடன் மூக்கின் மென்சவ்வுகளில் இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக இருப்பதால் சிறிய காயமானாலும் இரத்தப் போக்கு மிக அதிகமாகவே இருக்கும்.

மூக்கைக் குடையும் பழக்கமுள்ளவர்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.


இருந்தபோதும் மூக்கால் இரத்தம் வடிவதற்கு அது முக்கிய காரணமல்ல.

பொதுவாக குளிர் காலத்தில் மூக்கின் மென்சவ்வுகள் காய்ந்து வரண்டு இருக்கும். இதனால் அவை தாமாகவே வெடித்து குருதி பாய்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். குளிர்காலத்தில் உங்கள் சருமம் வரண்டு சிலநேரங்களில் வெடிப்பதைப் போன்றதே இதுவும்.

குளிர்காலத்தில் வைரஸ் கிருமிகள் பரவுவது அதிகம். எனவே தடிமன் வருவதும் அதிகம் இவை காரணமாக மூக்கால் இரத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

ஏனைய காரணங்கள்

  1. தடிமன், சளி போன்ற கிருமித்தொற்று நோய்கள்
  2. ஒவ்வாமையால் ஏற்படும் மூக்கு ஒழுகல் (Allergic Rhinitis)
  3. மூக்கு அடிபடுதல், காயம், மூக்கு குடைதல்
  4. அதீத மதுப் பாவனை
  5. உயர் இரத்த அழுத்தம்
  6. குருதி உறைதலைக் குறைக்கும் மருந்துகளான அஸ்பிரின, குளபிடோகிரில் போன்றவை
  7. கட்டிகள், சவ்வுகள் போன்றவை

மேலே காட்டிய Cutanneous horn என்பது வரட்சியான ஒரு வகை தோல் வளர்ச்சி. ஆயினும் இதுவும் அதிகம் காணப்படும் நோயல்ல.

நீங்கள் செய்யக் கூடிய முதலுதவி

காரணம் எதுவானாலும் அது மருத்துவர் கண்டுபிடிக்க வேண்டியதாகும்.

ஆனால் மருத்துவரைக் காணு முன்னரே முதலுதவி மூலம் நீங்களே மூக்கிலிருந்து இரத்தம் வடிவதை நிறுத்த முடியும்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். மூக்கு எலும்பிற்கு கீழே இருக்கும் மூக்கின் மென்மையான பாகத்தை உங்கள் பெருவிரலினாலும் சுட்டு விரலினாலும் அழுத்திப் பிடியுங்கள். அவ்வாறு செய்யும்போது மூக்கின் அந்தப் பகுதியை பிற்பறமாக முகத்து எலும்புகளோடு சேர்த்து அழுங்கள்.


இவ்வேளையில் சற்று முன்புறமாகச் சாய்ந்திருப்பது நல்லது. மாறாக பிற்புறமாகச் சாயந்தால் வழியும் இரத்தம் தொண்டை. சைனஸ் போன்றவற்றுக்குள் உள்ளிட்டு மூச்சுத் திணறலை ஏற்படுத்திவிடக் கூடும்.

அவ்வாறு தொடரந்து 5 நிமிடங்களுக்கு அழுத்திப் பிடியுங்கள். கையை எடுத்தபின் தொடர்ந்து இரத்தம் வந்தால் மேலும் 5 நிமிடங்களுக்கு அவ்வாறு செய்யுங்கள்.

அமைதியாக உட்கார்ந்திருங்கள். உடனடியாகப் படுக்க வேண்டாம். குனியவும் வேண்டாம். தலையானது இருதயத்தை விட உயர்ந்திருந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவதற்கான சாத்தியம் குறைவாகும்.

மூக்கிற்கு மேலும் கன்னங்களிலும் ஐஸ் வைப்பதும் இரத்தம் பெருகுவதைக் குறைக்கும்.

மீண்டும் வடிவதைத் தடுப்பது எப்படி?

இப்பொழுது இரத்தம் வருவது நின்றாலும் கவலையீனமாக இருந்தால் திடீரென மீண்டும் ஆரம்பமாகலாம். அதைத் தடுக்க வழி என்ன?

மூக்குச் சீறுவதைத் தவிருங்கள். அதே போல மூக்குக்குள் விரலை வைத்துக் குடைய வேண்டாம். வேறு எந்தப் பொருளையும் கூட மூக்கிற்குள் வைக்க வேண்டாம்.

தும்முவது கூடாது. தும்ம வேண்டிய அவசியம் நேர்ந்தால் வாயைத் திறந்து வாயினால் காற்று வெளியேறுமாறு தும்முங்கள்.

மலங்கழிப்பதற்கு முக்குவது கூடாது. அதேபோல பாரமான பொருட்களை தம்மடக்கித் தூக்குவதும் மீண்டும் இரத்தம் கசிய வைக்கலாம்.

வழமையான உணவை உட்கொள்ளுங்கள். அதிக சூடுள்ள பானங்களை 24 மணி நேரத்திற்காவது தவிருங்கள்.

மூக்கால் வடிவதற்கு அதன் மென்சவ்வுகள் வரட்சியாக இருப்பதுதான் காரணம் என்றால் அதனை ஈரலிப்பாக வைத்திருப்பதற்கு கிறீம் வகைகள் தேவைப்படலாம். மருத்துவ ஆலோசனையுடன் உபயோகியுங்கள்.

புகைத்தல்

புகைப்பவராயின் அதனைத் தவிருங்கள்.

மூக்கினால் இரத்தம் வடிவதை மேற் கூறிய முறைகளில் உங்களால் நிறுத்த முடியாவிட்டால் மருத்துவரை நாடுவது அவசியம்.

மிக அதிகளவு இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தாலும், அல்லது களைப்பு தலைச்சுற்று போன்ற அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவ உதவி அவசியமாகும்.

இரத்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு Nasal packing செய்வார்கள்.

ஆயினும் இதுவும் நீங்களாகச் செய்யக் கூடியது அல்ல. பயிற்சி பெற்றவர்களால் செய்ய வேண்டியது.


மிக அரிதாகவே மூக்கால் இரத்தம் வடிபவரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டி நேரிடும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>
தமிழ்பிரியாவின் ‘காம்பு ஒடிந்த மலர்’ வெளியீட்டு விழா


இன்று 13.12.2009 ஞாயிறு வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிலைய கேட்போர் கூடத்தில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகியது.

மீரா பதிப்பகம் சார்பில் புலோலியோர் இரத்தினவேலோன் வரவேற்புரை நிகழ்த்தினார்.


டொக்டர்.எம்.கே.முருகதனந்தன் தலைமை வகித்தார்.



வெளியீட்டு உரையை மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் நிகழ்த்தினார்.


அதற்கு முன்னர் தெளிவத்தை 75 அகவையை எட்டியதை ஒட்டி மீரா பதிப்பகம் சார்பில் ஞானம் பத்திரிகை ஆசிரியர் ஞானசேகரன் அவருக்கு நினைவுப் பரிசில் வழங்கிக் கெளரவித்தார்.


வெளியீட்டு உரையைத் தொடர்ந்து நூல் வெளியீடு நடைபெற்றது.

முதற் பிரதியை தமிழ்பிரியாவின் உறவினரான திரு.எஸ்.வேல்முருகு பெற்றுக்கொண்டார்


தொடர்ந்து பவானி சிவகுமாரன் நூல் நயவுரை நிகழ்த்தினார்.


அவரைத் தொடர்ந்து ராணி சீதரன் நூல் நயவுரை நிகழ்த்தினார்.


இறுதியாக திரு கந்தசாமி நன்றியுரை நிகழ்த்த கூட்டம் இனிதே நிறைவுற்றது.

Read Full Post »

>தெளிவத்தை ஜோசப் அவர்கள் சென்ற 18.10.2009 ஞாயிறு தகவத்தின் மூத்த எழுத்தாளர் எனக் கௌரவிக்கப்பட்டார்.

இதற்கு மிகவும் பொருத்தமான நபர். எல்லோரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

இலங்கையின் முழுத் தமிழ் எழுத்துலகமும் மகிழ்வுறுகிறது. காரணம் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதால் மட்டுமல்ல
ஒரு அருமையான மனிதர். பண்புள்ளவர்.
பழகுவதற்கு இனியவர்.

எனது இனிய நண்பரான இவருக்கு வாழ்த்துரை வழங்குவதில் மகிழ்கிறேன். இன்று அவர் எனது நண்பர்.

ஆனால் நான் இலங்கைத் தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் இவரது வாசகனாக இருந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

கலைச்செல்வி, மல்லிகை, சிரித்திரன், அஞ்சலி என வாசிக்கத் தொடங்கிய காலம் எமது எழுத்தாளர்கள் மீதான ஈர்ப்பு எனக்கு இருந்திருக்கிறது.


70-75 காலப் பகுதியில் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது ஜஸீமா தியேட்டரில் படம் பார்க்கப் போகும்போது வழியில் உள்ள ஸ்டார் டொபி தொழிலகம் கண்ணில்படும்.

“இங்குதான் தெளிவத்தை கணக்காளராக தொழில் பார்க்கிறார்” எனப் பெருமையோடு நண்பர்களுக்கு சொல்லுவேன். அவர்கள் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். அக்காலத்தில் சிவாஜி எனது அபிமான சினிமா நட்சத்திரமாக இருந்தார். அதுபோலவே இவர் எனது அபிமான எழுத்தாளர்களுள் முக்கியமானவர்.

தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப், பி. பெப்ரவரி 16, 1934) பிறந்தது பதுளை ஹாலி எல்ல விற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். அல்ல என்ற மிக அழகான நீர்வீழ்ச்சி அருகில் இருப்பதாக ஞாபகம். மருத்துவப் பணிக்காக பதுளையில் இருந்தபோது அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அப்பொழுது இவர் அங்கு பிறந்த செய்தி தெரியாது. தெரிந்திருந்தால் அவரில்லம் போயிருப்பேன்.

ஆரம்பக் கல்வி கற்றது தோட்டப் பாடசாலை தகப்பனாரிடம். பாடசாலைக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் மூன்று வருடங்கள் தமிழ் நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் ஹை ஸ்கூல் படித்துவிட்டு மீண்டும் இங்கு வந்து பதுளை சென் பீட்டஸ் கல்வியைத் தொடர்ந்தார்.

தனது ஆதர்ஸ மனிதனாக தனது ஆஞா வைக் குறிப்பிடுகிறார்.

ஆஞா என்றால் இவரது குடும்ப வழக்கப்படி தந்தை. அவர் ஒரு ஆசிரியர். தோட்டப்பள்ளி ஆசிரியர். வித்திசாசமானவர். கடமைக்காக தொழில் செய்யாது அதை ஒரு சமூகப்பணிபோல அர்ப்பணிப்போடு செய்தவராவார்.

அவரிடமிருந்துதான் இவருக்கு நேர்மை, தன்னடக்கம், சமூகநோக்கு போன்ற பல நற்பண்புகள் கிட்டியிருக்கிறது எனத் தெரிகிறது.

ஞானம் சஞ்சிகையில் இவரது நேர்காணல் பல மாதங்களாக வந்து கொண்டிருக்கிறது. மிகவும் சுவார்ஸமான நேர்காணல்.

இவரைப் பற்றி ஏதாவது குறிப்புகள் சொல்ல அதிலிருந்து தகவல்களைப் பெறலாம் என்று பார்த்தால், மிகக் குறைவாகவே அவரது சுயதகவல்கள் வருகிறது. சுயதம்பட்டமன்றி ஒரு நேர்காணல் வருகிறது என்றால் அது இவருடையதாகவே இருக்கும். ஆனால் மலையகச் சமூகம் பற்றி, அதன் துன்ப நிலை பற்றி, அதன் முன்னேற்றங்கள் பற்றி, அதன் படைப்புகள் பற்றி, இலக்கிய சூழல் பற்றி மிக சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

முக்கிய படைப்பாளி

சிறுகதையாளர், நாவலாசிரியர், விமர்சகர், இலக்கிய ஆய்வாளர். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர்.

அறுபதுகளில் இலங்கையில் ஏற்பட்ட கலை இலக்கிய அரசியல் மாற்ற காலத்தில் எழுதத் தொடங்கியவர். ஆனால் முற்போக்கு அணியைச் சார்ந்தவர் என்று சொல்ல முடியாது. எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். தனக்கென ஒரு அடிப்படை இலட்சியத்தைக் கொண்டவர்.

அதுதான் மலையகம் என்ற மண்ணுக்கு, அதன் தனித்துவத்திற்கு, அந்த உணர்வுக்கு உருவம் கொடுத்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளின் வாழ்வை படம் பிடித்துக் காட்டும் வல்லமை கொண்டவை இவரது படைப்புகள். கோகிலம் சுப்பையா முதல் இன்று வரை எழுதிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான படைப்பாளிகளில் தனித்துவம் ஆனவர்.

காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல்.

நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார்.

சிறுகதை, குறுநாவல், நாவல், விமர்சனக் கட்டுரைகள் என இவரது பணி நீள்கிறது

முக்கியமாக சிறுகதை ஆசிரியர்

அண்மையில் தயாபரன் இவ் விழாவில் தெளிவத்தையை கௌரவிக்கும் உரையை செய்யும்படி கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் எதைப்பற்றிப் பேசுவது? தகவல்களை எங்கே தேடுவது என யோசித்துக் கொண்டிருந்தபோது பட்டென இவரது ஒரு கதைதான் ஞாபகத்திற்கு வந்தது.

மிக அருமையான கதை.

அது இவரது வீட்டு பூந்தோட்டம் பற்றியது. எனக்கும் பூந்தோட்டங்களில் விருப்பம் இருக்கிறது. அதற்கு மேலாக அவர் எழுதிய அவரது அந்த வீட்டுப் பூந்தோட்டத்தை நான் பார்த்திருக்கிறேன்.

சகமனிதர்களில் பற்றுக் கொள்வது பண்புள்ள மனிதர்களின் இயல்பு.

ஆனால் அது இல்லாதவர்கள்தான் இன்று பெரிய மனிதர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அரசியலில், எழுத்துலகில், ஆன்மீகத்தில் …..
உதாரணங்களை நீங்களே தேடிக் கண்டுபிடியுங்கள். தேட வேண்டிய அவசியம் இருக்காது எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கிறார்கள்.

ஆனால் இவர் மனிதர்கள் மட்டுமின்றி மிருகங்களிலும், செடி கொடிகளிலும் அன்பு காட்டுகிறார்.

மண்ணைக் கிண்டிவிடுகிறார். செடிகளுக்கு மண் அணைக்கிறார். ஊரமிடுகிறார், நீர் ஊற்றுகிறார். ஆனால் அதற்கு மேல் அவைகளுடன் நிற்றல், பேசுதல், சுற்றிவரல், சுகம் கேட்டல் என பொழுது போவதே தெரியாமல் நெருக்கமாக உறவாடுகிறார்.

அக் கதையில் பூஞ்செடிகளை வர்ணிக்கும் அழகு அபாரமாக இருக்கிறது.
“வெடித்துச் சிரிக்கும் வெள்ளை வெள்ளைப் பூக்களுடன் பந்தல் கொள்ளாமல் படரந்து கிடக்கும் மல்லிகை”, என்கிறார்.

மற்றொரு இடத்தில் “எஸ்.பொ வை நினைவுபடுத்தும் ஆண்மை வெடிக்கும் அந்தூரியம்” இவைபோல நிறையவே சொல்லாம்.

தண்ணீர் ஊற்றும்போது அவர் சிந்தனை கலைந்து நீர் வெறுந்தரையில் ஓடுவது. செடியில் ஏக்கம் தெரிவது. இவர் சொறி சொல்வது, பரவாயில்லை எனச் செடிகள் தலையாட்டி மகிழ்வது…..

மிக அருமையாக ரசித்து, அனுபவித்து எழுதிய படைப்பு. வெறும் கற்பனையில் வருவதில்லை. உண்மையில் மரம் செடிகளுடன் உறவாடுபவர்களுக்குத்தான் அவர் சொல்வதின் யதார்த்தம் புரியும்.

ஆனால் அக்கதை பூச்செடிகள் மட்டும் பேசவில்லை. அதற்கு மேலும் பேசுகிறது.

‘இறுமாப்பு’ என்ற இக்கதை மல்லிகை 2008 ஆண்டு மலரில் வெளியானது.


நாவல்

இலங்கையின் பொருளாதாரத்திற்கு தோட்டத் தொழில் அத்திவாரமாக இருந்தது. அதன் மூலவேர்கள் மலையகத் தொழிலாளர்களே.
ஆயினும் அவர்களின் சோகக் குரல் தேசிய அளவில் பேசப்படவில்லை, கேட்கப்படவில்லை, பதியப்படவில்லை.

முதல் பாராளுமன்றத்தில் அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைத்தபோது பேரினவாதிகள் அச்சம் அடைந்தனர், எரிச்சலுற்றனர். வாக்குரிமையைப் பறித்தனர்.

தொடர்ந்து எழுந்த தேசிய அலை தமிழிலும் தீவிரம் அடைந்தது. முற்போக்கு சிந்தனைகள் எழுச்சியுற்றது. சமூக பொருளாதார புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என்ற எண்ணம் திவிரமடைந்தது. இதன் பெறுபேறாக பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவிய தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சினைகள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்காமை, ஏனைய சுரண்டல்கள், அடக்குமுறை, வீடின்மை, குடியுரிமைச் சிக்கல் போன்றவற்றையும் நாவல்கள் பேசத் தொடங்கின.

இது ஈழத்து தமிழ் நாவல் இலக்கியத்திலும் பிரதிபலித்தது. தெளிவத்தை
ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ இதில் முக்கயமானது. அதேபோல கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப் பச்சைகள்’, பெனடிற்பாலனின் ‘சொந்தக்காரன்’, தி.ஞானசேகரனின் ‘குருதிமலை’, சி.வேலுப்பிள்ளையின் ‘இனிப் பாடமாட்டேன்’, செ.கணேசலிங்கனின் ‘சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை’ போன்ற பல நாவல்கள் மலையகத்தைக் களமாகக் கொண்டு பல இடர்பாடுகளை முன்னிலைப்படுத்தி எழுந்தன.

வெளியான நூல்கள்

1. காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
2. நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
3. பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
4. மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)

வரவிருக்கும் நூல்கள்

1. குடைநிழல் நாவல்
2. நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்
3. மலையக நாவல் வரலாறும் வளரச்சியும்
4. இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இதழியலலும் இலக்கியமும்

படைப்பாளி என்பதற்கு மேலாக

ஆவண சேகரிப்பாளர்

இவரிடம் இல்லாத நூல்கள் சஞ்சிகைகள் இருக்கமாட்டா என்று சொல்லுமளவு நிறையச் சேர்த்து வைத்திருக்கிறார்.
அதை மற்றவர்களுடன்பகிர்வதில் நிறைவு காணுபவர்
தனது சேரிப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்பவர்
தனிப்பட்ட முறையில் பலரும் அவரை அணுகுவர்.
நானும் அவரிடம் எனது சிறுகதை ஒன்றைத் தேடி எடுக்கச் சென்றுள்ளேன்.

நூலகம் திட்டத்திற்கு

ஈழத்து நூல்களை இணையத்தில் வெளியிடும் அளப்பரிய சேவையை நூலகம்
கிளிக் பண்ணவும் செய்து வருகிறது. பலரது நூல்களும் பல சஞ்சிகைகளும் இதில் வெளியிடப்பட்டு எவரும் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மின்பிரதியாக்கற் திட்டத்திற்கு நூல்களையும் நூற்றுக்கணக்கான அரிய சஞ்சிகைகளையும் வழங்கியமை இவர் வழங்கியமை மிகவும் பாராட்டத்தக்க பணியாகும்.

இவரைப் பற்றி

இவரைப் பற்றி ஜெயமோகன் ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.


‘காலையில் முருகபூபதி மீண்டும் விமானநிலையம் சென்று மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பை கூட்டிவந்தார். தெளிவத்தை ஜோசப் சிறிய உற்சாகமான கரிய மனிதர். கொழும்புவில் ஒரு சாக்லேட் நிறுவனத்தின் கணக்கெழுத்தாளர். எழுபது வயது தாண்டிவிட்டது. சமீபத்தில் நான் மானசீகமாக எந்த மூத்த எழுத்தாளரிடமும் இந்த அளவுக்கு நெருங்கவில்லை.

மிகமிக உற்சாகமான சிரிப்பு, உரத்த குரல், அழுத்தம் திருத்தமானபேச்சு. மலையகத்தில் ஆரம்பத்தில் கொஞ்சநாள் ஆரம்பபள்ளி ஆசிரியராக இருந்திருக்கிறார். ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்தவர்களை கூப்பிடு தூரத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள்சாவதில்லை என்னும் நாவலையும் சில சிறுகதைகளையும் நான் வாசித்திருந்தேன்.’

இறுதியாக

தகவம் என்கிற தமிழ்க் கதைஞர் வட்டமானது சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிப்பு வழக்குவதை தொடர்ந்து செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இராசையா மாஸ்டர் முன்னின்று எடுத்த பணியை அவரது மகள் வசந்தி, மருமகன் தயாபரன் மற்றும் மாத்தளை காரத்திகேசு உட்பட்ட தகவம் அமைப்பினர் தொடர்ந்து செய்வது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

பொதுவாக எமது சிறுகதைகளில் உள்ளடக்கம் சிறப்பானதாக, சமூக நோக்குள்ளதாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது.

அது சொல்லப்படும் விதத்தில் இன்னும் வளரவேண்டிய அவசியம் பொதுவாக உள்ளது.

மிகச் சிறப்பான கதைசொல்லிகள் எம்மிடையே சிலர் இருக்கிறார்கள். இருந்தபோதும் பலருக்கு அக்கலை இன்னமும் இங்கு கை கூடவில்லை.

அந்த வகையில் நோக்கும்போது இத்தகைய பரிசளிப்புகள் அவர்களை வளர்த்து ஊக்குவிப்பதாக அமையும் என நம்புகிறேன். இந்த அரிய பணியைச் செய்யும் அவர்களைப் பாராட்டுவதில் மகிழ்கிறேன்.

பொன்விழாக் கண்ட எழுத்தாள நண்பரான தெளிவத்தை இன்னும் பல்லாண்டுகளுக்கு தனது அரிய பணியைத் தொடர வேண்டும் என வாழ்த்தி அமைகிறேன்.

எம்.கே.முருகானந்தன்.

தகவம் பரிசளிப்பு விழாவில் பேசியதன் குறிப்பு

Read Full Post »

>பொடுகு என்பது சாதாரணகக் காணப்படும் ஆபத்தற்ற பிரச்சனையாகும். இருந்த போதும் பலரையும் மிகுந்த துன்பத்திற்கும் மனக் கஷ்டத்திற்கும் ஆளாக்கும் பிரச்சனை இது.

தலையில் அரிப்பைக் கொடுப்பது மாத்திரமின்றி வெள்ளித் துகள்கள் போல சருமத் துண்டுகள் கழன்று வருவதால் அசிங்கமான உணர்வையும் ஏற்படுத்துகிறது.

இது ஒரு தொற்றுநோய் அல்ல.

பாரதூரமான வருத்தமும் அல்ல.

ஆனால் மற்றவர்கள் முன் வெட்கப்பட்டு தலைகுனிய வைக்கிறது.

தனிமனித ஆளுமைக்குச் சவால் விடுகிறது.



சாதாரண நோய் என்ற போதும் மருத்துவத்திற்கு பல வேளைகளில் சவால் விடுகிறது.

சுலபமாகக் கட்டுப்படுத்தலாம்

முற்று முழுதாகக் குணமாக்குவது சிரமம் ஆனபோதும்,

பெரும்பாலும் சுலபமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கூடியதாகும்.

தினமும் தலைக்கு சாதாரண ஷம்பூ போட்டு முழுகுவதால் மட்டுமே இதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடலாம்.

கடுமையான பொடுகுள்ளவர்களும் அவர்களது நிலைக்கு ஏற்ற விசேட மருத்துவ ஷம்பூகளை உபயோகிப்பதன் மூலம் குணம் காணலாம்.

பெரும்பாலான பதின்ம வயதினருக்கும் வளர்ந்தவர்களுக்கும் பொடுகு இருப்பதைக் கண்டு பிடிக்க மருத்துவ அறிவு கூடத்தேவையில்லை. தலையை உற்றுப் பார்த்தால் போதும்.



தேங்காய்த் துருவல் போன்ற உருவமுள்ள, எண்ணைப் பிடிப்பான உதிர்ந்த சருமத் துகள்கள் முடியிலும், தோள் புறத்திலும் விழுந்து கிடக்கும். அத்துடன் தலையில் அரிப்பும் இருக்கும்.

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பலரின் தலையில் வெள்ளை நிறத்தில் சொரசொரப்பான படையாக தொப்பி அணிந்ததுபோல தோன்றுவதும் ஒரு வகை பொடுகுதான்.



பார்ப்பதற்கு அசிங்கமாகவும் பெற்றோர்களைப் பயமுறுத்துவதாகவும் தோன்றும் இது ஆபத்தற்றது. குழந்தை வளர்ந்து ஒரு வயதாகும் நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.

பொடுகுள்ள மற்றவர்களும் தலையை ஷாம்பூ உபயோகித்து சுத்தமாக வைத்திருந்தால் போதுமானது. தலைச் சருமம் சிவந்து வீங்கி துன்பம் அளித்தால் மட்டும் மருத்துவரைக் காண வேண்டிய தேவை ஏற்படும்.

எதனால் ஏற்படுகிறது

வரட்சியான சருமம் உள்ளவர்களுக்கு பொடுகு உண்டாவதற்கான வாய்ப்பு அதிகம். அதிலும் குளிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியம் மேலும் அதிகமாகும். வரட்சியான சருமம் உள்ளவர்களது பொடுகானது பொதுவாக எண்ணெய்ப் பற்றற்றதாகவும் அளவில் சிறியதாகவும் இருக்கும்.

எண்ணைத் தன்மையான சருமம் உள்ளவர்களுக்கு மற்றொரு விதமான பொடுகு ஏற்படுவதுண்டு. இதுவே பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுவதாகும். சற்றுச் சிவந்த வழுவழுப்பான எண்ணைச் சருமத்தில் உண்டாவது மங்கலான நிறம் கொண்ட அல்லது மஞ்சற் தன்மையான பொடுகாகும்.

இதனை மருத்துவத்தில் seborrheic dermatitis என்பார்கள். அதாவது இது எக்ஸிமா போன்ற தோல் அழற்சி நோயாகும். இது தலையில் மட்டுமின்றி அக்குள், தொடையின் மடிப்புப் பகுதி, மார்பின் மத்திய பகுதி, கண் புருவம், மூக்கின் மடிப்புப் பகுதி, காதின் பின்புறம் ஆகியவற்றிலும் தோன்றுவதுண்டு.



சுத்தம்செய்யாத தலைமுடி அடிக்கடி தலைக்கு முழுகிச் சுத்தம் செய்யாதவர்களின் தலையில் அவர்களது தலையிலிருந்து சுரக்கும் எண்ணெய்ப் பொருள்,

உதிரும் சருமத் துகள்கள் ஆகியன சேர்ந்திருந்து

பொடுகு ஏற்படுவதை ஊக்குவிக்கும்.

சரும நோய்கள். இவற்றைத் தவிர எக்ஸீமா (Eczema) , சொறாஸிஸ் (Psoriasis) போன்ற சரும நோய்களும் பொடுகு நோய்க்குக் காரணமாகலாம்.

உங்கள் தலைமுடியைப் பேணுவதற்காகவும் அழகுபடுத்துவதற்காகவும் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள், கிறீம், சாயம் ஊட்டிகள் போன்றவையும் கூட தோலில் அரிப்பு, அழற்சியை ஏற்படுத்தி பொடுக்கிற்கு வழிவகுக்கலாம்.

அடிக்கடி ஷம்பு இடுவதும், அதிக அளவில் முடியை அழகுபடுத்தும் பொருட்களை உபயோகிப்பதும் தலையில் சருமத்தை உறுத்திப் பொடுகிற்குக் காரணமாகலாம்.

மலஸ்சிசா கிருமி ஈஸ்டைப் போன்ற ஒரு கிருமியான மலஸ்சிசா (malassezia) எமது தலையின் சருமத்தில் இயற்கையாக வாழ்கிறது. இது எந்த நோயையும் ஏற்படுத்துவதில்லை. ஆயினும் சிலவேளைகளில் இது அத்துமீறி வளர்ந்து தலையில் சுரக்கும் எண்ணெயை இரையாக்குவதால் சருமம் அழற்சியடைந்து வேகமாக உதிர்கிறது. இது பொடுகாக வெளிப்படும்.

மலஸ்சிசா கிருமி ஏன் சிலரில் சிலநேரங்களில் வேகமாக வளர்கிறது என்பது தெளிவாகத் தெரியாதபோதும், மனஅழுத்தம், வேறு உடல் நோய்கள், ஹோர்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றம், பார்க்கின்ஸன் நோய், நலிவடைந்த உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதும் காரணமாகலாம் என நம்பப்படுகிறது.

யாருக்கு எதனால் ஏற்படுகிறது

பொதுவாக இளைமைக் காலத்தில் தோன்றும் இது நடுத்தர வயது வரை நீளக் கூடும்.

ஆயினும் முதியவர்களுக்கு வராது என்று சொல்ல முடியாது.

சிலருக்கு முதுமை வரை தொடர்ந்து இருக்கக் கூடுமாயினும்

பெரும்பாலும் வயதாகும்போது அதன் வேகம் குறைந்துவிடும்.

பெண்களைவிட ஆண்களுக்கு பொடுகுத் தொல்லை அதிகமாயிருப்பதற்குக் காரணம் அவர்களது தலையில் கூடியளவு எண்ணெய்ச் சுரப்பிகள் இருப்பதாகும். ஆண் ஹோர்மோன்கள் அடிப்படைக் காரணமாயிருக்கலாம் என நம்பப்படுகிறது.

எண்ணெய்த் தன்மையுள்ள சருமம் உள்ளவர்களுக்கு அதிகம் தோன்றலாம்.

போசாக்கு குறைந்த உணவும் காரணமாகலாம் முக்கியமாக சின்க் (Zinc), விற்றமின் பீ போன்ற குறைபாடுகளும் காரணமாகலாம்.

பார்க்கின்ஸன் போன்ற நரம்பு சம்பந்தமான நோயுள்ளவர்கள், மற்றும் மாரடைப்பு பக்கவாதம் போன்ற பாரிய நோய்களின் பாதிப்பால் உளநெருக்கீட்டுக்கு ஆளாபவர்களுக்கும் அதிகம் ஏற்படுகிறது.

மருத்துவம்

பொடுகு கட்டுப்படுத்த முடியாத பிரச்சனை அல்ல. சற்று அதிக காலம் எடுக்கக் கூடியது என்பதால் சற்று பொறுமையாகவும், தொடர்ந்தும் அக்கறை எடுப்பது அவசியமாகும். பொதுவாக மென்மையான ஷம்பூக்களை உபயோகித்து தலையைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமே பலருக்கு அதன் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கும்.



முடியாதபோது மருத்துவ ஷம்பூக்களை நாடவேண்டி நேரிடும். Zinc கலந்தவை, Coal Tar கலந்தவை, சலிசலிக் அமிலம் கலந்தவை, செலீனியம் கலந்தவை, பங்கசுக்கு எதிரான மருந்துகள் (உதா- Ketoconazole)கலந்தவை எனப் பல வகையுண்டு. மருத்துவ ஆலோசனையுடன் தங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஷம்பூ உபயோகிக்கும் போது அவதானிக்க வேண்டியவை

ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று தடவைகளாவது உங்களுக்கு சிபார்சு செய்யப்பட்ட ஷம்பூவை உபயோகிக்க வேண்டும்.

பிறகு வாரத்திற்கு இரண்டு தடவைகளாகக் குறைக்கலாம்.

மிகக் கடுமையான பொடுகு உள்ளவர்கள் தினமும் உபயோகிக்கலாம்.

ஷாம்பு வைத்தவுடன் தலையைக் கழுவக் கூடாது.

3 முதல் 5 நிமிடங்கள் வரை காலம் தாழ்த்திக் கழுவினால்தான் மருந்து செயற்பட போதிய அவகாசம் கிடைக்கும்.

நீண்டகாலம் உபயோகித்து அதன் வீரியம் குறைந்துவிட்டதாகத் தோன்றினால் மருத்துவரின் ஆலோசனையுடன் வேறு வழியில் செயற்படும் மற்றொரு ஷம்பூவை மாற்றலாம்.



வேறு என்ன செய்யலாம்

சமபல வலுவள்ள போஷாக்கு உணவுகளை உண்ணுங்கள். அதிலும் முக்கியமாக சின்க் Zinc விட்டமின் பீ, போன்றவை பொடுகைத் தடுக்கும் என நம்பப்படுகிறது.

உங்கள் தலைச் சருமமானது எண்ணெய்த் தன்மை அதிகமுள்ளதாயின் தினமும் தலைக்கு குளிப்பது நல்லது. ஷம்பு இட்டு சுத்தப்படுத்துவது நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி :- வீரகேசரி

Read Full Post »

>எங்களுடைய பாரம்பரியத்தில் வந்த
இன்னுமொரு அரிய பழக்கத்தையும்
இங்கு ஞாபகப்படுத்தலாம்.
அது இளகிய மனம் பற்றியதும்கூட.

நாங்கள் மனிதர்களில் மாத்திரம் அன்பு கொண்டவர்களல்ல.

விலங்குகளுக்கும், மரஞ்செடி கொடிகளுக்கும் எமது அன்பு வட்டம் விரிகிறது.

தெருவோரம் வேலிகளுக்கு ஊன்று கோலாக நாட்டப்பட்டுள்ள பூவரசு, கிளிசெறியா, கிளுவைக் கதியால்களும் எமது அன்பைப் பெறத் தயங்குவதில்லை.

அதுவும் எமது வீட்டுக் கதியால்களுக்கு என்றில்லை. அக்கம்பக்கத்து வீட்டுக்காரரின் கதியால்களுக்கும், நாம் நடந்து செல்லும் வீதிகளின் முகமறியாதவர்களின் வீட்டுக் கதியால்களுக்கும் அன்பு ஊற்றெடுத்துப் பாய்கிறது.

ஊரான் வீட்டுப் பிள்ளைக்கு ஊட்டி வளர்த்தால் தன் வீட்டுப் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியை அச்சொட்டாகக் கடைப்பிடிப்பவர்களல்லவா நாம்?

கதியால்கள் நீரின்றி வாடியும்
போஷாக்கின்றி வெளிறியும்
கிடப்பதைக் கண்டால்
எம் மனது தாங்கவே தாங்காது.


உடனடியாகவே யூறியா கலந்த நீரூற்றி உதவிடுவோம்.
இதற்காக நாலு பேர் பார்க்கும் வீதியில் நின்று
கோவணத்தைக் கழற்றக்கூட
நாங்கள் தயங்குவதில்லை.

இயற்கை நமக்கு எவ்வளவோ கற்றுக் கொடுத்திருக்கிறது. நாய்களும்தான்.

லைட் போஸ்டைக் கண்டதும் அவை மூன்று காலில் நின்று மோனத் தவம் செய்து தீர்த்தம் தெளிப்பது எம் சிந்தையைக் கவர்ந்ததால்தான் நாமும் கதியால்களைக் குளிர்விக்கிறோம் போலும்.

இரண்டாயிரம் ஆண்டு காலமாயிருந்தாலும் எங்களை நவீன காலத் திற்கும் நாகரீகத்திற்கும் ஏற்ப மாறாத பழமை விரும்பிகள் என எவரும் எம்மைக் குறைகூறவும் நாம் இடமளிப்பதில்லை.

கொழும்பில் கதியாலைக் காணமுடியாது என்பதால் துவண்டுவிடுவ தில்லை.

காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப எம்மை மாற்றிக் கொள்ளும் மனவிரிவு கொண்டவர்கள்.


இதனால் லைட் போஸ்டுகளையும் மதில் களையும் சிறுநீர் கொண்டு அடியோடு பிரட்டி வீழ்த்த முக்கி முயல்வோம்.

இதைப் பார்த்து சகோதர இனத்தவர்கள் மூக்கில் கைவைத்து ஆச்சரியப் படுவதுண்டு.

சிலவேளை அவர்களும் எங்களோடு சேர்ந்து முயற்சிப்பதும் உண்டு.

மரங்களையும் மதில்களையும் குளிர்விக்கும் ஆர்வத்தில் அந்த வீட்டில் வதிபவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வீதியைப் பயன்படுத்து பவர்களுக்கும் நோய்களைப் பரப்புகின்றோமே என்ற கவலை கிஞ்சித்தும் எமக்குக் கிடையாது.


தீர்த்தம் என்றதும் இன்னுமொரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.
அன்று ஒரு குழந்தையை அதன் அம்மம்மா தூக்கிக் கொண்டு வந்திருந்தா.

கூட குழந்தையின் அம்மா. அவள் கைகள் இரண்டும் போதாத அளவிற்கு கூடைகள், பைகள். அவற்றில் குழந்தையின் பொருட்கள் நிறைத்திருந்தன. அவசரத் தேவைக்கானதாம்.

பாவம்! தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்திருந்தாள். போத்தல், பிளாஸ்க், சீனி, கரண்டி, பிரஸ் இத்தியாதி. பாரத்தை அருகிலிருந்த மேசையில் பொத்தென இறக்கினாள்.

நல்ல வேளையாக காஸ் குக்கரைக் காணாதது நிம்மதியளித்தது. அதுவும் இருந்திருந்தால் அதிலேயே அடுப்பை மூட்டி தண்ணியைக் கொதிக்க வைத்துப் புட்டிப்பால் தயாரித்திருப்பாள்!

குழந்தைக்கு இரண்டு நாட்களாக வயிற்றோட்டமாம். குழந்தை அம்மம்மாவின் மடியில் வாடிக்கிடந்தது.

நோயின் விபரத்தை அவர்களிடம் கேட்டுக் கொண்டே குழந்தையைப் பரிசோதிக்க ஆரம்பித்தேன். மேலோட்டமான பரிசோதனையை முடித்துக் கொண்டு வயிற்றுப் பக்கம் மெதுவாகக் கையை வைத்தேன்.

திடீரென முகத்தில் இளஞ்சூட்டு நீரினால் அபிஷேகம். என்ன எது என்று நிதானிப்பதற்கிடையில் அம்மம்மாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“பிள்ளை டொக்டருக்குத் தீர்த்தம் கொடுத்துவிட்டது” என மனம் நிறைந்து முறுவலித்தாள்.


நல்லகாலம் ‘சந்தனமும்’ சேர்த்துத் தரவில்லை.

தீர்த்தத்தால் புனிதம் பெற்ற முகத்தைக் கழுவ நான் வாஷ் பேசினை நோக்கி ஓடினேன்.

இப்பொழுதெல்லாம் யாராவது குழந்தையைக் கொண்டுவந்தால் நான் முதலில் அதன் முகத்தைப் பார்ப்பது கிடையாது.

கண்கள் தன்னையறியாமல் கீழேதான் போகும். ஆணா? பெண்ணா? எனப் பார்க்கிறார் எனத்தான் பெற்றோர்கள் நினைப்பார்கள்.

நப்பின் துணி கட்டிக் கொண்டு வராவிட்டால் ஒரு சிறு முன்னேற்பாடு.

குழந்தையின் தலையை எனது பக்கமும் காலை கூட வந்தவரின் பக்கமும் இருக்குமாறு கிடத்திய பின்னர்தான் எந்தக் கதை காரியமும் நடக்கும்.

தீர்த்தம் வந்தால் கூட கொண்டு வந்தவருக்குக் கிடைக்கட்டுமே!

பல ஆண்டுகளுக்கு முன் சிரித்திரன் சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி

Read Full Post »