Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச், 2010

பெண் குழந்தைகள் வளரும் போது உடல் வாளிப்படைகிறது,
மெருகேறுகிறது.

தட்டையான மார்பில் குரும்பை அரும்புகிறது. எங்கிருந்து வந்ததெனத் தெரியாது கவர்ச்சி ஓடி வந்து அப்பிக் கொள்கிறது.

பருவமடைதல் செய்யும் அற்புதம் இது.

முதல் பீரியட் வந்ததும் அவள் பெரிய பெண்ணாகிறாள்.

ஆனால் பருவமடைதல் பெண்களுக்கு மட்டுமானது அல்ல.

ஆண் குழந்தைகளும் பிள்ளைகளாக வளர்ந்து பருவமடையவே செய்கிறார்கள்.

ஆண் குழந்தை ‘பெரிய பிள்ளை’ ஆவது எப்போது?

இரவு படுக்கையில் தானாகவே விந்து வெளியேறிவிட, அவசர அந்தரமாக காலையிலேயே பாத்ரூம் சென்று குளித்து அல்லது உடலைச் சுத்தம் செய்து சாரத்தையும் கழுவிப் போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாத அம்மஞ்சி போல வந்து அமர்ந்து கொள்கிறானே அப்பொழுதா?

இல்லை!

ஆண்களைப் பொறுத்தவரையில் பருவமடைதல் என்பது ஒரு நாளில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வு அல்ல.

படிப்படியாக ஏற்படும் மாற்றமாகும்.
உடல் வளர்கிறது.
குரல் தடிப்படைகிறது.
மீசை அரும்புகிறது.
ஏனைய இடங்களிலும் முடி வளரச்சி ஏற்படுகிறது.

9 முதல் 14 வயதுவரையான காலத்தில் பொதுவாக ஏற்படுகிறது.

ஒவ்வொரு பையனும் தனது வளர்ச்சிக் கட்டத்தின் ஓரிடத்தில் பருவமடைகிறான்.

ஆயினும் பெரும்பாலும் ஆண்கள் பருவடைதல் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. தகப்பன் கூட மகனுடன் பேசுவதில்லை. ஆசிரியர்கள் மாணவர்களுடன் பேசுவதில்லை.

இதற்குக் காரணம் அவர்கள் மனத்தில் உள்ள தயக்கம் அல்லது வெட்க உணர்வு மட்டும்தான் என்பதில்லை. வளர்ந்த பல பெரியவர்களுக்கும் இவை பற்றிய தெளிவுகள் இல்லை.

பையனின் சில சந்தேகங்கள்
உடல் வளர்ச்சி

பல பையன்கள் தனது வயது ஒத்த பெண் பிள்ளைகள் தன்னை விடத் தோற்றம் உள்ளவர்களாக வளர்வது கண்டு மனம் வெதும்புவதுண்டு. சில வேளைகளில் அவனது தங்கையே அவனைவிட வளர்தியானவளாக இருப்பதுண்டு.

இதற்குக் காரணம் பெண்கள் சற்று முன்னராகவே பருவமடைவதுதான். பெண்கள் 8 முதல் 13 வயதில் பருவமடையும்போது பையன்களுக்கு அது 9 முதல் 14 வயதாகக் காலம் சுணங்குகிறது.

அதற்குப் பின்னர் பொதுவாக பையன்கள் விரைவாக வளர்ந்து பெண்களைவிட உயர்ந்து விடுவது உண்டு. இருந்த போதும் இதில் பரம்பரை அம்சமும் முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக உயரமுள்ள குடும்பத்து பிள்ளைகள் உயரமாக வளர்வர்.

எதிர் பாலினரின் வளரச்சி மட்டுமின்றி தனது நண்பர்களின் உடல் மாற்றங்கள் கூட சில பையன்களைக் கலவரப்படுத்துகின்றன.

தனது நண்பனைப் போல தனக்கு விரிந்த மார்பும், உயர்ந்த தோளும் இல்லையே என சில பையன்கள் கேட்பதுண்டு.

விளையாட்டு மைதானத்தில் நண்பனின் தொப்புளுக்கு கீழும் அரையிலும் முடி அரும்புவது கண்டு,

“எனக்கு அவ்வாறில்லையே எனது வளர்ச்சியில் குறைபாடு உள்ளதா”

என மனதிற்குள் கவலை கொள்ளும் பையன்கள் அதிகம்.

எல்லோரது வளர்ச்சியும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் உடல் இயல்புக்கு ஏற்ற விதத்தில் வளர்கிறார்கள். பருவமடைகிறார்கள்.

 உடற்பயிற்சிகள் உதவுமா?

எடை தூக்குவது போன்ற கடினமான உடற் பயிற்சிகள் செய்தால் விரைவில் மற்றவர்களை போல திடமாக வளரலாமா எனச் சிலர் முயற்சிப்பதுண்டு. உண்மையில் உங்களது உடலானது பருவமடைந்து அத்தகைய பயிற்சிகளுக்குத் தயாராகாத நிலையில் இருந்தால் அது நல்லதல்ல.

சற்றுப் பொறுங்கள். அது வரை சைக்கிள் ஓட்டம், நீச்சல், போன்ற சாதாரண பயிச்சிகளும் போஷாக்குள்ள உணவும் எடுத்து உங்களைத் தயார்ப்படுத்துங்கள்.

பாலுணர்வு

தினமும் பாடசாலையால் வரும்போது அல்லது போகும்போது ஒரு பெண் பிள்ளை உங்கள் கண்களில் படுகிறாள்.
உங்களுக்குள் ஏதோ ஆர்வம். தினமும் கவனிக்கிறீர்கள். ஒரு நாள் அவள் நிமிர்ந்து உங்கள் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்க்கிறாள்.
சற்று துடிப்பான பெண் என்றால் ஹாய் சொல்லிவிட்டுப் போகிறாள் என்று வைப்போம்.

உங்கள் உடல் சிலிர்க்கிறது.
முகத்தில் வியர்வை அரும்புகிறது.
உங்கள் நெஞ்சுக்குள் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கின்றன.
கனவுகளில் அவள் குட்டைப் பாவாடை எகிறிப் பறக்க, மலர்ந்து நடனமாடுகிறாள்.

இரவு படுக்கப் போகும்போதும் அவள் நினைவு அருட்டுகிறது.
அடுத்த சில நாட்களுக்கு அவளது நினைவு அடிக்கடி வருகிறது.

“ஏன் இப்படி நினைவு வருகிறது. இது என்ன உணர்வு”

இது ஒரு ஈர்ப்பு. பாலியல் ரீதியானது.
ஆனால் பாலுணர்வு அல்ல.
தெளிவாகப் புரியச் சற்றுக் காலம் எடுக்கும்.

அதே நேரம் உங்கள் நண்பன் மற்றொரு பெண்ணின் அழகு பற்றி நாள் முழுக்கப் பேசுவான்.
அவளது குணங்களை மெச்சுவான்.
ஆனால் உங்களுக்கு அவை ஆர்வம் ஊட்டுவதாக இருக்காது.

காரணம் என்னவெனில் ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரிய விருப்பு வெறுப்புகள் உள்ளன. கவர்ச்சிகள் உள்ளன.

அதனால் அவனை அருட்டியவள் உங்களுக்கு துச்சமாகப் படலாம்.

விரும்பிய ஒருவரைப் பற்றி மீள மீள நினைப்பது அப் பருவ காலத்திற்கான உணர்வுதான்.

இதற்குக் காரணம் என்ன? உங்கள் உடலிலுள்ள சில ஹோர்மோன்கள் அதிகம் சுரக்க ஆரம்பித்துவிட்டன.

அதனால் உங்கள் உணர்வுகள் வலுப் பெறுகின்றன.
இதனால் குழப்பமடைய வேண்டியதில்லை.

வாழ்க்கையின் ஒரு புது வட்டத்திற்குள் நீங்கள் நுழைகிறீர்கள் எனலாம்.

முடி வளர்தல்

நீங்கள் பருவடைய ஆரம்பிக்கும்போது ஏற்படும் மற்றொரு மாற்றம் உடல் முடியாகும்.
முகத்தில் மீசை தாடி அரும்பும்,
நெஞ்சில் வளரும்.
அக்குளுக்குள் தடிப்பாக வளரும்.
கீழே உங்கள் உறுப்புக்கு மேலும் தோன்றும்.

இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. பயப்பட வேண்டியதும் இல்லை.

ஆனால் இது எவ்வாறு நிகழ்கிறது?

இதுவும் ஹோர்மோன சுரப்பிகளால் ஆவதுதான்.
ஆரம்பத்தில் உங்கள் அடரீனல் சுரபி சுரக்கத் தொடங்கும்.
பின் மூளையில் உள்ள பிற்றியுடரி சுரப்பி அதிகம் சுரக்கும்.

இதனால் உங்கள் விதைகள் வளரும்.
அதிலிருந்து பாலியல் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்டரோன் சுரக்கும்.
முடி வளரும்.
ஏனைய மாற்றங்களும் தொடரும்.
எனவே இவை யாவும் இயற்கை நியதிதான்.

சற்று வளர்ந்து கறுத்தால் ஷேவ் எடுப்பது பற்றி அப்பாவுடன் கதைக்கலாம். அவ்வளவுதான்.

வியர்வை

“இவன்றை வேர்வை மணக்கிறது”

பல அம்மாக்கள் சொல்வார்கள்.
அவனது சேர்ட்டை துவைக்க எடுக்கும்போதுதான் சில அம்மாக்களுக்கு புரிய ஆரம்பிக்கிறது.

எல்லோருக்கும் தான் வியர்க்கிறது. ஆனால் பருவமடையும் காலத்தில் உங்கள் உடல் ஹோர்மோன்கள் முழு அளவில் வேலை செய்கின்றன. எனவே வியர்வை அதிகமாகவே சுரக்கச் செய்யும்.

வியர்வையில் நீர் மட்டுமே உள்ளது.
ஆனால் மிகச் சிறிதளவு அமோனியா, யூரியா, சீனி, உப்பு ஆகியவையும் இருக்கும்.

வியர்வை உண்மையில் மணமற்றது.

ஆயினும் உடலிலுள்ள பக்றீரியா கிருமிகள் சேரும்போது மணம் ஏற்படுகிறது.

இதை நீக்க என்ன செய்யலாம்? அடிக்கடி உடலைக் கழுவுங்கள். குளியுங்கள். முக்கியமாக விளையாடினால் அல்லது வேலை செய்தால் உடனடியாகக் குளியுங்கள்.

இப்பொழுது மணம் நீக்கிகள் (Deodorants) கிடைக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம்.

விறைப்படைதல்

முதன் முதலாக உங்கள் ஆண்குறி விறைப்பது ஆச்சரியமாகவும் புதினமாகவும் இருக்கும்.
சிறுநீர்கழிக்கும் போது ஏற்படுவது அல்ல.
விறைப்பு என்பது உங்கள் ஆண் உறுப்பிற்குள் இரத்தம் நிரம்பி இறுக்குவதாகும்.
அந்நேரத்தில் ஆண்குறி பெருத்து விறைத்து நிமிர்ந்து நிற்கும்.
பருவமடையும் காலத்தில் இது காரணம் இன்றியும் அடிக்கடி நடக்கும். இதுவும் இயற்கையான செயற்பாடுதான்.

இது எந்த நேரத்திலும் நிகழலாம். ஒரு நாளுக்கு ஒரு தடவையோ பல தடவைகளோ நிகழலாம். வயது, பாலியில் ரீதியான உங்கள் வளர்ச்சி, செயற்பாடு, தூக்கத்தின் அளவு போன்ற பல விடயங்கள் இதற்குக் காரணமாகலாம். பகலில் மட்டுமல்ல, தூக்கத்திலும் நிகழலாம்.

தூக்கத்தில் விந்து வெளியேறல்

அந்நேரம் நீங்கள் விழித்து எழுந்து உங்கள் உள்ளாடை நனைந்திருப்பதைக் காணக் கூடும். இதனை ஆங்கிலத்தில் (Nocturnal emisions) என்போம். வெளியேறிய திரவம்தான் விந்து Semen எனப்படுகிறது. இப்பொழுது உங்கள் உடல் அதிகளவு டெஸ்டஸ்டரோன் ஹோர்மோனை உற்பத்தி செய்வதே இதற்குக் காரணம்.

பெண்களுக்கு மாதவிடாய் வருவதோடு இதனை ஒப்பிடலாம். ஆனால் இரண்டுமே வித்தியாசமானவை. ஆண்களின் விந்தில் அவனின் உயிர் அணுக்கள் உள்ளன. இவை பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்தால் கரு உற்பத்தியாகிப் பிள்ளையாக பிறக்கும்.

ஆனால் பெண்களின் மாதவிடாய் இரத்தத்தில் அவளது கரு முட்டை இருப்பதில்லை. கரு முட்டையானது மாதவிடாய் வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னரே சூலகத்திலிருந்து வெளியேறிவிடும்.

அந்நேரத்தில் ஆணின் விந்துடன் இணைந்தால் கரு உற்பத்தியாகும். கரு உண்டாகாத கருப்பையின் உட்புறம் தன்னைப் புத்துயிர்புச் செய்து அடுத்த மாதத்திற்குத் தயாராவதே பீரியட் எனலாம்.

தூக்கத்தில் இவ்வாறு விந்து வெளியேறுவதை ஸ்கலிதமாதல் என்றும் சொல்வதுண்டு.
இவ்வாறு நிகழும்போது பல பையன்கள் இதையிட்டு வெட்கப்படுவதுண்டு. வேறு பலர் குற்ற உணர்வு கொள்வதும் உண்டு.
இதனால் உடல் நலத்தில் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.

ஆற்றலுள்ள ஆண்மையின் வெளிப்பாடு இது எனலாம்.
இது இயற்கையான செயற்பாடு.
பருவமடையும் காலத்தில் மட்டுமல்ல வயதான பின்னரும் பலருக்கு ஏற்படுகிறது.

ஆண் பெரிய பிள்ளையாகும் விடயத்தை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு விளக்குவது அவசியம்.

தாயினால் இவை பற்றி தனது மகனுடன் பேசுவதில் தயக்கம் இருக்கலாம்.

ஆனால் தந்தையர் மறக்காமல் சொல்ல வேண்டியதாகும்.

தாங்கள் பருவமடையும் வயதில் பட்ட மன அவஸ்தைகள் தங்கள் மகனுக்கும் ஏற்படாமலிருக்கச் செய்வது அவர்களது கடமையாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- இருக்கிறம்

0.0.0.0.0.0.

Read Full Post »

>அவன் ஒரு பாடசாலை மாணவன். உயர்தர வகுப்பில் படிக்கிறான்.
அவனுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்து கொண்டிருந்தது.
அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டி மருந்தெடுக்க மாறிவிடும்.

விரைவில் உயர்தர வகுப்புப் பரீட்சை வர இருக்கிறது.
இந்த நேரத்தில் அடிக்கடி காய்ச்சல் வருவதால் படிப்பு கெடுகிறதே எனக் கவலையடைந்த தாயாருடன் வந்திருந்தான்.
விசாரித்த போது முன்பு போல உணவுகளை ஆசையோடு சாப்பிடுவதில்லை என்பது தெரியவந்தது.
சற்று எடையும் குறைந்திருந்தது.

இரத்தம் பரிசோதனை, சளிப் பரிசோதனை எடுத்த போது அவை வித்தியாசம் காட்டவில்லை. சாதாரணமாக இருந்தன.

எக்ஸ்ரே எடுத்த போது நுரையீரல் பாதிப்பின்றி இருந்தது. ஆனால் நுரையீரலுக்கு வெளியே நெஞ்சறையில் நீர் தேங்கியிருந்தது.

காசநோய் காரணமாக சுரந்த நீர்.

காசநோய் என்பது பெரும்பாலும் நுரையீரலைத் தாக்கும் நோய்

(Pulmonary Tuberculosis) ஆகும்.

ஆனால் நுரையீரலில் மட்டும் வருவதில்லை. இவனுக்கு வந்தது

Tuberculus Pleural effusion

இவற்றைத் தவிர சிறுநீரகம், எலும்பு, மூளை எனப் பல உறுப்புகளையும் தாக்க வல்லது.

இப்பொழுது நல்ல சிகிச்சை கிடைக்கிறது. பொதுவாக 6 மாதங்கள் வரை தொடர்ச்சியாக மருந்துகள் சாப்பிட முற்றாகக் குணமடைந்துவிடும்.

காசநோய், சயரோகம், ரீ.பீ எனப் பலவாறு அழைக்கப்படும் இந் நோய் தடிமன் போல காற்றினால் பரவும் நோயாகும். அதாவது ஒருவர் தும்மும் போதும் இருமும் போதும் வெளிப்படும் கிருமிகள் காற்றின் ஊடாக மற்றவருக்கும் பரவுகின்றன.

இன்று உலக காசநோய் தினமாகும்.

இந் நோய் பற்றிப் பூரணமாகத் தெரிந்து கொள்ள இதோ ஒரு இணைப்பைத் தருகிறேன்.
வடமாகாண காசநோய் விழிப்புணர்வுக்கான இணையதளம். வட இலங்கை காசநோய் தடுப்புச் சங்கத்தின் இணையத்தளமாகும்.

டொக்டர்.சி.யமுனானந்தாவின் தலைமைத்துவத்தில் இது இயங்குகிறது.

  • காசநோய் என்றால் என்ன?
  • காசநோயின் அறிகுறிகள்
  • பரவும் விதம்
  • காசநோய் வராதிருக்க
  • காசநோய் வந்தால்
  • காசநோயும் கர்ப்பிணிகளும்
  • காசநோயும் போசாக்கும்
  • டொட் என்றால்

போன்ற தலைப்புகளில் தெளிவான விளக்கங்கள் கிடைக்கின்றன.
வடமாகாண காசநோய் விழிப்புணர்வுக்கான இணையதளம் சென்று விபரமாகப் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்

இலங்கையில் இந்நோய் பற்றிய தரவுகள் உலக சுகாதார இணையத் தளத்தில் கிடைக்கிறது. கிளிக் பண்ணுங்கள்

2007ல்இலங்கை சனத்தொகை 19 மில்லியனாகும். 100,000 பேரில் 79 பேருக்கு என்ற விகிதத்தில் இந்நோய் பரவியிருக்கிறது. இது ஏனைய கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்ததாகும் என்றும் சொல்கிறது.

இந்நோய் பற்றி விளக்கமாக அறிந்து அது பராவாமலிருக்கும் முயற்சிக்குக் கைகொடுப்போம்.

Read Full Post »

>வேப்பமரத்து நிழல் குளிர்மையில் சாய்மனைக் கதிரையில் சாய்ந்து 80-90 வயதுகள் வரை ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எமது மூதாதையர்களை நினைக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியிருக்கிறது.

இயற்கையோடு இசைந்த 
வாழ்வின் சுகங்களை எண்ணும்போது,
தொலைத்த எமது வாழ்வின் வசந்தங்களை
ஏக்கப் பெரு மூச்சுகளாக
வெளியேற்றவே முடிகிறது.

வேம்பு எமது வாழ்வோடு ஒன்றியது.

வேப்பம் இலை கிருமி நீக்கியாக,
வேப்பம் பூ வடகமாக,

வேப்பம் கொட்டை நுளம்புத் திரி இல்லாத காலங்களில் புகை போடுவதற்காக,
வேப்பம் பிசின் ஒட்டும் பசையாக,
வேப்பம் பலகை கதவு, நிலை, தளபாடங்கள் செய்யவென
நினைந்து ஏங்கவே முடிகிறது.

வேப்பெண்ணையை மறந்து விட்டேன் என எண்ணாதீர்கள்.
தொண்டை நோ வந்தால் வீட்டுச் சிகிச்சையாக வெளிப்பக்கமாகப் பூசுவதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சுகம் கிடைக்காவிட்டால் கூட அடுத்த முறையும் அதைப் பூசுவதில் அவர்களுக்குத் தயக்கமில்லை.

‘குடித்துப் பார்க்கவில்லையா?’ என கிண்டல் வெளித் தெரியாமல் கேட்டால் ‘குடிக்கிறது கஷ்டம்’ என அப்பாவித்தனமாச் சொல்லுவார்களே ஒழிய அதன் சாதக பாதகங்களைப் புரிந்த சிலமன் இருக்காது.

இன்றைய நவீன காலத்தில் அதுவும் நான் மருத்துவம் செய்யும் பெருநகரில் குடிப்பவர் எவருமில்லாது இருக்கலாம்.

ஆயினும் கிராமப்புறங்களில் குடிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

தொண்டை நோவுக்காக அல்லாவிடினும் குடற் பூச்சிகளுக்காக வேப்பெண்ணைய் குடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

1982ல் வெளியான மருத்துவ ஏட்டில் (Lancet Feb 1981 28:1 (8218):487-9)

“இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லந்து, மலேசியா, இந்தோனிசியா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதனை வெளிப் பூச்சு மருந்தாகப் பாவிப்பதாகவும், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முதல் சிறு பிள்ளைகளுக்கு குறைந்த அளவில் குடிக்கக் கொடுப்பார்கள்”
என்றும் சொல்கிறது.

தொடர்ந்து அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் விபரித்திருகிறது.

ஆனால் இது பழம் கதையல்ல.
இன்றும் தொடர்கிறது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாத Ceylon Medical Journal சஞ்சிகையில்
இது பற்றிய புதிய விபரம் வெளியாகி இருக்கிறது.

பூச்சி மருந்தாக வீட்டார், 14 மாதக் குழந்தைக்கு
வேப்பெண்ணெயைக் கொடுத்த போது
மூளை மண்டலம் பாதிப்புற்று
வாந்தி,
மயக்கம்,
முழுமையான வலிப்பு (Generalized Seizures)

ஆகிய ஆபத்தான அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கான கொழும்பு லேடி றிட்ஸ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

ஈரல் வீக்கம்,
ஈரல் பாதிப்பு,
Metabolic Acidosis போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டது.

வேகமான மூச்சிளைப்பும் ஏற்படுவதுண்டு.

இது Toxic Encephalopathy எனும் நோயாகும். ஆயினும் தீவிர சிகிச்சையின் பின் காப்பாற்றப்பட்டது.

வேப்பெண்ணெயில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கொழுப்பு அமிலங்களான (Nimbin, Nibinin. Nimbidin,Nimbidilol)  மற்றும் சல்பர் (Sulphur)சார்ந்த வேதியல் பொருட்களே வேப்பெண்ணெயின் ஆபத்தான விளைவுகளுக்குக் காரணமாகும்.

மருத்துவ சஞ்சிகைகளை ஆராய்ந்தால் இவ்வாறான பல சம்பவங்களைக் காண முடிகிறது.

வேப்பெண்ணெய் குடித்து இந்நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் காப்பாற்றப்பட்ட போதும்
பல மரணங்களும் நிகழ்ந்தமை ஆவணப் படுத்தப்படுள்ளன.

ஆயினும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய
ஆனால் மருத்துவ குணமுள்ளதாக நம்பப்படும்
எண்ணெயானது
எத்தகைய கட்டுப்பாடுகளும் இன்றி
எங்கும் கட்டுப்பாடின்றி
விற்பனையாகிறது.

‘வெளிப் பூச்சுக்கு மட்டும் பாவகிக்கவும், குடிக்கக் கூடாது’
என்ற எச்சரிக்கையையாவது லேபளில் ஒட்டியிருக்கலாம்.

ஆனால் அப்படிச் செய்ய வேண்டும் என்ற சட்டவிதிகள் எதுவும் இதுவரை கிடையாது.

பாரம்பரிய மருத்துவ முறைகளில் எமது சமுதாயத்தினர் பலருக்கும் உள்ள நம்பிக்கை அளப்பரியது.

தாய் மண் மீது பற்றுக் கொண்ட எம்மவர்கள் நாம்.

எமது ஏனைய பாரம்பரிய முறைகளையும் பேணிப் பாதுகாத்து ஊக்குவிக்க முயல்வதில் தப்பேதும் இல்லை.

அது அவசியமும் கூட.

ஆயினும் பகுத்தறிந்து பார்க்காது ஆதரவும் ஊக்குவிப்பும் செய்வது அழிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை வரலாறு புகட்டியிருக்கிறது.

வேப்பெண்ணெய் கசத்தாலும்
அதன் மருத்துவ குணங்கள் பற்றி இனிமையான எண்ணங்களைச் சுமக்கும் எம்மவர்கள்
அதன் ஆபத்தான அம்சங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

Read Full Post »

புகைப்படக் கண்காட்சி போன்றதொரு திரைப்படம்

அண்மையில் வந்து அதிகம் பேசப்படாமலே போன ஒரு படம். போர்க்களம். அற்புதமான படம் அல்லாவிட்டாலும் சொல்லப்பட வேண்டிய விடயங்கள் பல உண்டு. சில காரணங்களுக்காகப் பாராட்டப்பட வேண்டியதும் கூட.

இரண்டு விடயங்களை முக்கியமாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. முக்கியமாக அதன் மிக வித்தியாசமான காட்சிப்படுத்தல் எனலாம். எந்தத் திரைப்படத்திலும் மிக முக்கியமான அம்சம் இதுவேயான போதும் மிகப் பெரும்பாலானவை வழமையாக போர்முலா வடிவை மீறுவதே இல்லை. இது மீறியிருக்கிறது.

இரண்டாவது கண்பார்வையற்றவன் பற்றிய மறுபக்கப் பார்வை எனலாம்.

போர்க்களம் இப்படத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் அற்புதமான படப்பிடிப்புத்தான். ஒவ்வொரு பிரேமும் மிகவும் அக்கறையோடு கலையம்சத்தோடு எடுக்கப்பட்டுள்ளன. ஒளிச் சேர்க்கை, வண்ணக்கோலம், வித்தியாசமான கமராக் கோணம் என அசத்தலாக இருக்கின்றன. புகைப்படப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கக் கூடிய படமாகும். புகைப்படக் கண்காட்சிகளில் மட்டுமே காணக் கூடிய கமாராக் கோணங்கள் திரைப்படம் முழுவதும் நிறைந்திருக்கிறது. இது தமிழ் திரைப்பட இரசிகர்களுக்கு முதல் அனுபவமாகவே இருக்கும்.

இரண்டாவது முக்கிய அம்சம் கண் தெரியாத ஒருவன் எவ்வாறு தனக்குள்ள புலக் குறைபாட்டை மேவுவதற்கு செவிப் புலனை எவ்வாறு அதிகபட்சம் பயன்படுத்துகிறான் என்பதாகும். உயிர் பிழைப்பதற்காக தாறுமாறாக ஓடுகிற ஒருவனை துப்பாக்கியால் சுடுமளவிற்கு அவன் தனது செவிப்புலனைத் தீட்டி வைத்திருக்கிறான்.

அந்தப் படத்தின் பிரதான பாத்திரம் கர்ணன். ஆனால் அவன் பார்வையிழந்தவன் என்பது படம் நீண்ட நேரம் பயணித்த பிறகே தெரிகிறது. அதுவரை அவனது பாத்திரம் சற்றுப் புதிராக இருந்தமை எதிர்பார்க்கக் கூடியதே. அவன் பிறவிக் குருடன் அல்ல. பள்ளி செல்லும் காலத்தில் ஒரு விபத்தில் அவனது கண்பார்வை பறிபோய்விடுகிறது. ஆனால் தனக்குள்ள குறையால் சோர்ந்து மனவிரக்திக்கு ஆளாகவில்லை. சவாலாக ஏற்றுக்கொள்கிறான். கேட்கும் திறனை முழுமையாகப் பயனப் படுத்திக் கொள்கிறான். ஓலியை கருவியாக்கி சூழலை தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்கிறான்.

கண்பார்வை அற்ற ஒருவனால் எப்படி இவ்வளவு வல்லமையோடு இருக்க முடிகிறது என்பதும், தனி ஒருவனாகப் பலரை வெட்டி வீழ்த்த முடிகிறது என்பதும் பலருக்கு மிகைப்படுத்தபட்ட காட்சிகளாகத் தோன்றாம். ஆனால் தமிழ்ப்படத்தின் சூப்பர் ஸ்டார் கதாநாயகர்கள் வழமையாக பலருடன் ஒரே நேரத்தில் மோதி வெல்வதை எமது ரசிகர்கள் எவ்வித ஆட்சேபமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். அது அதிமானுடச் செய்கையாகத் தெரியவில்லை. பலருக்கு அதுவே உவப்பானதாகவும் இருக்கிறது.

அப்படிப்பட்டவர்களுக்கு பார்வையற்ற இவனின் சண்டைக் காட்சிகள் ஆச்சரியமானதாக இருக்க வேண்டியதில்லை. இத்தகைய விதண்டா வாதத்திற்கு மேலாக, பார்வையற்ற ஒருவன் தன் முழுச் செவிப் புலனையும் செம்மையாகச் செதுக்கிப் பயன்படுத்தி; பார்வையுள்ளவர்கள் செய்யும் பல செயற்பாடுகளையும் அதே பூரணத்துவத்துடன் செய்ய முடியும் என்பது உண்மை.

மனிதர்கள் தங்கள் கண் பார்வையை, கேட்கும் ஆற்றலைவிட மிக முக்கியமானது என எண்ணுகிறார்கள்.

ஆனால் ஒரு குழந்தை பிறந்ததும் முதலில் ஒலிகளையே முதலில் உணர்கிறது. அத்திசையில் தலையைத் திருப்புகிறது. பார்வையால் சூழலை உணர நீண்ட காலம் அதற்குப் பிடிக்கிறது.

குழந்தையை விடுங்கள் உங்களை எண்ணிப் பாருங்கள். ஐந்து நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டிருந்து பாருங்கள். உண்மை புரியும். எவ்வளவு ஓசைகளை உங்களால் கேட்க முடிகிறது. காற்றின் சலசலப்பு, எங்கோ கூவும் குருவியின் குரல், காலடி ஓசைகள். எத்தனை எத்தனையோ.

இவை யாவும் நீங்கள் கண் திறந்திருக்கும் போதும் நிகழ்திருக்கவே செய்யும். ஆயினும் உங்கள் புலன் பார்வையிலேயே பெருமளவு தங்கி இருப்பதால் இவற்றைக் கேட்க ரசிக்க முடியவில்லை.

ஒரு ஓசை என்ன ஓசை என்பது மட்டுமின்றி அது எத் திசையிலிருந்து வருகிறது. அது நகரும் ஓசையா அல்லது ஒரே இடத்தில் நிலையான நிற்கும்  பொருளிலிருந்து பிறக்கிறதா என்பதையும் எம்மால் அனுமானிக்க முடிகிறது.

மேலே கூறிய காலடி ஓசையை அல்லது ஒரு ஓடும் வாகனத்தின் ஓசையை எண்ணிப் பாருங்கள். அது எந்தத் திசையிலிருந்து எழுகிறது. அது எம்மை நோக்கி வருகிறதா அல்லது எம்மை விட்டு அகல்கிறதா என்பதை எம்மால் கண் மூடியிருக்கும் போது ஒலியை மாத்திரம் கொண்டு அனுமானிக்க முடியும். நகரும் ஒலி எவ்வளவு வேகத்தில் எம்மை நோக்கி வருகிறது அல்லது பிரிந்து செல்கிறது என்பதையும் எம்மால் துல்லியமாகக் கூற முடியும்.

இதற்குக் காரணம் எமக்கு இரண்டு காதுகள் இருப்பதும், அவை சுமார்  அரை அடி தூர வித்தியாசத்தில் இருப்பதும், இரண்டும் வௌ;வேறு திசைகளை நோக்கி இருப்பதும்தான். இதனால் ஒரே ஒலி எமது வலது காதையும் இடது காதையும் வந்தடையும் நேரத்தில் சில செகனட் வித்தியாசம் இருக்கிறது. இந்த நேர வித்தியாசத்தை எமது மூளையானது கம்பியூட்டர் போல அனலைஸ் பண்ணுகிறது. இதனால் ஒலிகளின் திசையை, வேகத்தை, தீவிரத்தை எம்மால் உணர முடிகிறது.

கண் மூடியதும், காது மேலும் கூர்மையாகிவிடுகிறது. இக் கதாநாயகன் கர்ணன் இவ்வாற்றலை தனது முயற்சியால் மேலும் வளர்த்துக் கொண்டான்.

கதையில் எந்தப் புதுமையும் இல்லை. கிஷோர்(கர்ணன்) சத்யன் உதவியுடன் தனியாக வாழ்கிறான். கார் ஓட்டுவதிலிருந்து உணவு தேநீர், வீடு பாராமரிப்பு எல்லாம் சத்யன் எனும் ஒரே உதவியாளன் மட்டுமே. ஆந்திரா லங்காவின் தனிக்காட்டு ராஜாவான தாதா சம்பத் ஸ்மிதாவை கரம் பிடிக்க ஆசைப்படுகிறான்.

அவனிடமிருந்து தப்பித்து ஓடிவரும் அவள் கிஷோரிடம் தஞ்சம் அடைகிறாள். துரத்தி வரும் ஆந்திர தாதாக்களை துவசம் பண்ணிக் கலைக்கிறான். அரை மனத்தோடு தனது இடத்தில் தஞ்சம் கொடுக்கும் அவனில் அவளுக்கு காதல் வந்துவிடுகிறது. கண் பார்வை இல்லாததால் இதனை ஏற்க விரும்பாத கிஷோர் அவளை போலீசில் கொடுத்து வீட்டாரிடம் ஒப்படைக்கச் சொல்கிறான். அவர்களோ சம்பத்திடமே கையளித்து விடுகிறார்கள்.

மீதி படம் முழுவதும் ஆந்திரா தாதாக்களுக்கும் இவனுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான். இறுதியில் போர்க்களத்தில் அவர்களைத் தனியே சந்திக்கிறான். கண் தெரியாத இவன் எப்படி தனது உடல் பலத்தையும், செவிப் புலனையும், பகுத்தறிவையும் பாவித்து அவளைக் காப்பாற்ற முயல்கிறான் என்பதே கதை.

தாதாக்கள், ரோட்டு ரவுடிகள், சந்தர்ப வசமாக கொலையாளிகளாக மாறும் நல்லவர்கள் என தமிழ் திரையுலகு நிறையவே தந்தவிட்டது. ஆயினும் சுப்ரமணியபுரம் நாடோடிகள், ரேனிகுண்டா, வெண்ணிலா கபடிக்குழு என பல நல்ல படங்கள் அதனுள் கிடைத்திருக்கினறன.

அந்த வரிசையில் சேர்க்கத் தக்கது இது. தேவையற்ற காட்சிகள் கிடையாது. எந்த ஒரு பாத்திரமும் அவசியம் இன்றி படத்தில் இல்லை. படத்தின் ஓட்டம் சற்று மெதுவாக இருக்கிறது. வசனங்கள் மிகக் குறைவு. காட்சிகளால் நகர்கிறது. அதுவே அதன் பலம். சில தருணங்களில் பலவீனமும் கூட. ஏனெனில் கதையின் நகர்வை சில இடங்களில் தெளிவாகப் புரிந்த கொள்ள முடியாதிருக்கிறது.

காட்சி அமைப்பு மிக வித்தியாசமாக இருக்கிறது. பளீரென கண்ணைக் குத்துவது போலன்றி சற்றுக் கருமை படர்ந்த ஒளிஅமைப்பு. படப்பிடிப்பு ஒவ்வொரு பிரேமிலும் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொன்றாக பிரித்தெடுத்து அல்பத்தில் சேர்க்கலாம் போலிருக்கிறது. வண்ணங்கள் இயற்கையானவை அல்ல. இரண்டு கலர் டோன் மட்டுமே பயன்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மைதான் போலிருக்கிறது. பல எதிர்பாராத திருப்பங்களும், திகிலும் இருக்கிறது. மனதைச் சூழும் திகிலைத் தீவிரமாக்கத் பின்னணி இசையும் துணையாக இருக்கிறது.

விழிப்புலன் அற்றவர்களை நையாண்டி செய்யாது  உயரத்தில் நிறுத்தி வைத்த பெருமை மேஜர் சுந்தரராஜனுக்கு உண்டு. அக்காலத்தில் இரசித்த படம் அது – மேஜர் சந்திரகாந்.

இப்பொழுது விழிப்புலனற்றவனை மற்றொரு பரிமாணத்திற்கு உயர்த்தி வைத்த பெருமை  போர்க்களம் படத்திற்கு உண்டு.

வெண்ணிலா கபடி குழு சினிமாவில் கபடி கோச் ஆக வந்து மனதில் நின்ற கிஷோர் இத் திரைப்படம் மூலம் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமா உலகில் பெற்றிருக்கிறார். பொல்லாதவன், ஜெயம்கொண்டான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்ததாக அறிகிறேன். ஆனால் எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.

குளொஸ் அப் சொட்கள் இல்லை. இதனால் முகத் தசைகள் பேச வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆயினும் கிஷோரின் உடல் மொழி அற்புதமாகக் இருக்கிறது.

ரகுவரன், பிரகாஷ்ராஜ் வரிசையில் பிரகாசிப்பார் எனத் தோன்றுகிறது. பாத்திரத்திற்கு ஏற்ப அவரது குரலின் அடர்த்தியும் உதவுகிறது.
தன்னைச் சுற்றித் திரியும் காற்றின் மொழியை, அதன் ஒவ்வொரு அசைவையும் மிக நுட்பமாகக் கிரகித்து சூழலை தனது கணனி போன்ற மூளையில் பிரித்தறிந்து எதிர்வினை புரிவது அட்டகாசமாக உள்ளது.

எதிரியைத் தாக்கும்போது அவனது அசைவை நிதானமாக காது கொடுத்துக் கிரகித்து அவன் தன் கைக்கு அகப்படும் எல்லைக்குள் வந்ததும், எதிரி எதிர்பாராப் பிரகாரம் மரண அடி கெடுப்பதும் அசத்தலாக இருக்கின்றன.

ஆயினும் தனிமனிதன் இவ்வாறெல்லாம் செய்ய முடியுமா என்ற ஆராச்சிகளுக்குள் நாம் புகக் கூடாது.
இவை எமக்கு பரிச்சியமான ஒவ்வொரு தமிழ் ஹீரோக்களின் அதிமானுட நாயகர்களின் அடையாளங்களும்தான்.
அதையே புதுமை செய்யப் புகுந்த இயக்குனரும் பின்பற்றுவது ஏமாற்றம் தரவே செய்கிறது.

சண்டைக் காட்சிகளின் போது ஒவ்வொரு மரண அடி கொடுத்த பின் ஒரிரு கணங்கள் அசையாமல் நிற்பது அவனது ஸ்டைலான போஸாக இருக்குமோ என எண்ணினேன்.

ஆனால் மருத்துவனாக நின்று யோசிக்கும்போது கண் பார்வையின்றி ஒலியின் சலசலப்பில் மட்டுமே சூழலை அளக்கும் ஒருவனால் அப்படித்தான் இயங்க முடியும் எனப் புரிகிறது.
திடீரெனப் கொடுத்த அடியினால் பிறந்த ஓசையும், அடி வாங்கியவனது வேதனை ஒலியும் மேலோங்கி நின்று அவனது கவனத்தைத் திருப்பியிருக்கும்.
சற்று நிதானித்தே மீண்டும் சூழலுக்குள் அவனால் வரமுடியும். அதனால்தான் அப்படிச் சித்திரித்துள்ளார்கள்.

இவற்றை நடிகன் மாத்திரம் செய்ய முடியாது. இயக்குபவனின் பங்கு மிக அதிகம். பாண்டி சரோஜ்குமார் தனது முதல்படத்திலேயே பல புதுமைகளைச் செய்துள்ளார். பாங்காக் திரைப்படக் கல்லூரியில் இயக்குனராகப் பயின்றவர். மிக வித்தியாசமான இயக்குனர். திரைக் கதையில் இன்னும் சற்றுக் கவனம் செலுத்தி, படத்தின் வேகத்தையும் – முக்கியமாக பிற்பாதியில் சற்று அதிகப்படுத்தி இருந்தால் அற்புதமான படமாக இருந்திருக்கும்.

சத்யன்தான் கிஷோரின் உதவியாளன். அப்பாவித்தன நடிப்பினால் சிரிக்க வைக்கிறார். சற்று நேரம் மட்டுமே தோன்றினாலும் பிஜு மேனன் தனது நடிப்பாலும் துப்பாக்கி சாகசங்களாலும் மனதில் நிற்கிறார். ஸ்மிதா நாயகி பெரிதாக வேலையில்லை.

ஆனந்தனின் கலை இயக்கம் படத்தின் சிறப்பிற்கு மிகவும் உதவியிருக்கிறது.

பாடல்கள் சாதாரணம். ஆயினும் பின்னணி இசை பல இடங்களில் அருமையாக இருக்கிறது.
சில நேரங்களில் திகிலூட்டவும் செய்கிறது. இந்தி இசை அமைப்பாளரான ரோஹித் குல்கர்னிதான் இசையமைத்திருக்கிறார். நான்கு பாடல்கள். நா. முத்துகுமாரின் ஆக்கங்கள். மனதில் நிற்கிற மாதிரி இல்லை.

ஆயினும் படத்தின் சிறப்பாக மனதில் கடைசிவரை ஒட்டிக் கொண்டிருப்பது ஒளிப்பதிவுதான்.
ஒளியும் இருளும் காட்சிக்குக் அற்புதமான விகிதாசாரத்தில் கலந்து மந்திரஜாலமாக அசத்துகிறது. ஒவ்வொரு ஷாட்டும் கண்ணில் ஒற்றக் கூடியன.

முற்றிலும் எதிர்பார்க்காத, வித்தியாசமான கோணங்களில் அவரது கலையுணர்வை மோகிக்கும் வண்ணம்; பதிந்த மகேந்திரன் பாராட்டப்பட வேண்டியவர்.
ஆயினும் தேவராஜ், மற்றும் தேவா ஆகியோரும் பங்களித்திருப்பதாகத் தெரிகிறது. எழுத்து, காட்சியமைப்பு, இயக்கம் பண்டி சரோஜ்குமார் என்றே போடப்படுகிறது. எனவே இவற்றில் இயக்குனரின் பங்களிப்பும் கணிசமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

கோடரியும் வாளும் இணைந்தது போன்ற வித்தியாசமான ஆயுதங்கள்,
இறந்த மாட்டின் முள்ளந்தண்டு எலும்பு,
மண்டை ஓடு போன்ற பின்னணிகள் பயங்கரமாக இருந்தாலும் பகுத்தறிவுக்கு ஒத்துவரவில்லை.

இறுதியாகச் சொல்வதாயின்
மிகச் சாதாரணமான ஒரு கதையை சொல்லபட்ட விதத்திலும்,
வழமைக்கு மாறான காட்சி அமைப்புகளாலும்,
கமராக் கோணங்களினாலும் பேச வைத்திருக்கிறார்கள்.

வழமையான போர்முலா படம் அல்ல.
மிகுந்த ஆர்வத்தோடு செய்திருக்கிறார்கள்.
கதை ஓட்டம் பிற்பாதியில் தொய்ந்தாலும் கடைசிச் சண்டைக் காட்சி அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டள்ளது.

இறுதி வழமையான சுபம்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- வீரகேசரி

Read Full Post »

உங்களில் எத்தனை பேர் யாழ்தேவி புகைரதத்தில் கொழும்பு முதல் காங்கேசன்துறை வரை பிரயாணம் செய்திருக்கிறீர்களோ தெரியாது.

பயணித்தவர்களுக்கு அது ஒரு இனிய அனுபவம்.

அதுவும் பதின்ம வயதில் பயணித்திருந்தால் அதன் சந்தோசம் சொல்லி மாளாது.

நண்பர்களுடன் கூடி, அரட்டை அடித்து, புட் போட்டில் தொங்கி, பைலாப் பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டு….

இன்னும் இன்னும் எவ்வளவோ!

இன்று அவற்றை நினைத்துப் பெரு மூச்சு விடத்தான் முடியும்.

ஆயினும் நம்பிக்கை தளர வேண்டியதில்லை. தொலைந்த பொற்காலம் மீண்டும் வரும்.

அதற்கிடையில் இந்த வீடியோவைப் பார்த்து நினைவுகளை மீட்கலாமே.

இது மீண்டும் நண்பன் வரதன் கொடுத்த இணைப்பு

Read Full Post »

>அதீத எடை என்பது ஒரு உலகளாவிய பிரச்சனையாகிவிட்டது. மேற்கத்தைய நாடுகளில் மட்டும் பேசப்பட்ட இவ்விடயம் இப்பொழுது ஆசிய நாடுகளிலும் தனது அழுக்கு முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.

அதீத எடையின் விளைவுகளும் குறைக்கும் வழிகளும்

எடை அதிகரிப்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதயநோய்கள், எலும்பு மூட்டுத் தேய்வுகள், போன்ற பல நோய்கள் வரும் என்பதை இப்பொழுது பலரும் உணர்கிறார்கள்.

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம் என்ற உணர்வு மேலாங்கி வருகிறது.

காலையில் வீதிகளிலும் கடற்கரை ஓரங்களிலும் நடைப் பயிற்சி செய்பவர் எண்ணிக்கை அதிகரிப்பிலிருந்து இதனை அறிய முடிகிறது.
இளவயதினர் பெரும்பாலும் உடற்பயிற்சி நிலையங்களை நாடுகிறார்கள்.

ஆனால் மிகப் பெரும்பாலானவர்கள் இது பற்றிய எவ்வித உணர்வும் இன்றி சதா காலமும் வாய்க்குள் எதையாவது போட்டு மென்று கொண்டே இருக்கிறார்கள்.

இதனால் அவர்களது எடை அதிகரிக்கிறது. மேற் கூறிய நோய்கள் வந்து சேர்வதை தடுக்க முடியாது போய்விடுகிறது. நோயினால் ஏற்படும் உபாதைகள் தாக்கத் தொடங்கிய பின்னரே அதைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

ஆயினும் இத்தனை காலமும் சோம்பிக் கிடந்த உடலும், மென்று கொண்டெ இருந்த வாயும் சொல்வழி கேட்கின்றனவா?

எடையைக் குறைக்க வேறுவழிகள்

எடையைக் குறைக்க வேறு ஏதாவது வழி இருக்கிறதா என அப்படிப்பட்டவர்கள் கேட்கிறார்கள்.

நிச்சயம் மருந்துகள் இருக்கவே செய்கின்றன.

மிகத் தீவிரமாகக் குறைக்க வேண்டியவர்களுக்கு சத்திரசிகிச்சையும் உண்டு.

சத்திரசிகிச்சை

Gastroplasty என்ற சிகிச்சை முறை உண்டு. இரைபையை வெட்டிச் சிறியதாக்குவதால் கொஞ்சமாக உணவை உட்கொண்டதுமே வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.

ஆயினும் இது முற்றிலும் பாதுகாப்பான சத்திரசிகிச்சை என்று சொல்ல முடியாது. இச் சத்திரசிகிச்சைக்குப் பின் இலங்கையில் ஒரு பெண் இறந்த செய்தி பத்திரிகைகளில் பரவலாக அடிபட்டது ஞாபகம் இருக்கலாம்.

மருந்துகள்

தமது எடையைக் குறைக்க, சுய முயற்சி இன்றி, மருந்துகளின் உதவியை நாடுகிறார்கள்.

எடை குறைப்பு மருந்துகளை உபயோகிக்கும் வரைதான் எடை குறையும். அத்துடன் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் சேர்ந்தால்தான் அம் மருந்துகள் பலன் கொடுக்கும்.
எடை குறைப்பு மருந்துகள் விலை அதிகமானவை.

வெறுமனே மருந்தை மட்டும் போட்டுக் கொண்டிருந்தால் எடை குறையாமல் போவது மாத்திரமின்றி அம் மருந்துகளின் பக்கவிளைவுகளையும் எதிர் நோக்க நேரிடும்.

சிபியுட்ரமின் (Sibutramine) 

எடை குறைப்பு மருந்துகளில் பிரபலமானது சிபியுட்ரமின் (Sibutramine) என்பதாகும். அதனால் வரக் கூடிய பக்கவிளைவுகளைப் பட்டியலிட்டால் மருந்தை உட்கொள்ள வேண்டாம் என நோயாளி வேகமாக விட்டு ஓடுவார். அவ்வாறு ஓடினால் நிறை குறையும் என்பதை மட்டும் நல்ல விளைவாகக் கொள்ளலாம்.

மருந்தின் பக்க விளைவுகள்

மலச்சிக்கல், வாய் உலருதல். ஓங்காளம்,
உணவுகளின் சுவை கெடுதல், வயிற்றோட்டம்,
மூலநோய் தீவிரமடைதல்,
இருதயத் துடிப்பு வேகமாதல்,
இருதயத் துடிப்பின் ஒழுங்கு லயம் மாற்றமுறல்,
உயர்இரத்த அழுத்தம்,
தலைப்பாரம், தூக்கக் குறைபாடு,
தலையிடி,
மனப்பதற்றம், மனச்சோர்வு நோய்,
வலிப்பு, திடீரென வந்துபோகும் மறதி,
பாலியல் செயற்பாட்டில் குறைபாடு,
ஒழுங்கற்ற மாதவிடாய்,
சிறுநீர் வெளியேறுவதில் சிரமம்,
பார்வை குறைவடைதல் ஏற்படலாம்.

அத்துடன் குருதியில் வெண்துளி சிறுதுணிக்கைகளின் (Platelet) எண்ணிக்கை குறைவடைதல்,
இவ்வாறு குறைந்தால் குருதியின் உறையும் தன்மை குறையும்,
அவ்வாறு குருதியின் உறையும்தன்மை குறைந்தால் சிறிய காயங்களிலிருந்து கூட அதிக இரத்தம் பெருக்கெடுக்கலாம்,
தானாகவே சருமத்தின் கீழ் இரத்தம் கசியலாம்.

மேலும் மருந்தின் ஒவ்வாமை விளைவு காரணமாக
தோல் அரிப்பு, தோற்தடிப்பு,
சரும அழற்சி போன்றவையும் ஏற்படலாம்.

அமெரிக்காவில் இருதய நோயாளர் உபயோகிக்கத் தடை

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் (FDA) இம் மருந்து பாவனை பற்றி இருதய நோயாளருக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இதுவரை காலமும் இருதய நோயாளர்கள் இம் மருந்தை அவதானத்துடன் உபயோகிக்கலாம் எனக் கூறினார்கள்.

ஆனால் தற்போதைய அறிக்கைப்படி இம் மருந்தை இருதய நோயாளர்கள் பாவிக்கக் கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி நோயாளருக்கு வழங்கும் மருந்துப் பெட்டியில் இந்த எச்சரிக்கையை தெளிவாக அச்சிடவும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எத்தகைய நோயாளிகளுக்கு எச்சரிக்கை

  1.  மாரடைப்பு, அஞ்சைனா போன்ற இருதய நோய்கள்
  2. இருதய வழுவல் (Heart failure) 
  3. இருதய துடிப்பின் லயக்குறைபாடுகள் (Arrhythmia )
  4. பக்கவாதம் மற்றும் திடீரென வந்து மறையும் பக்கவாதம்
  5. கடுமையான உயர் இரத்த அழுத்தம்
  6. கால் கை போன்ற பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய் நோய்கள் (Peripheral arterial disease) 

வேறு மருந்துகள்

எடையைக் குறைக்க வேறு மருந்துகளும் உள்ளன. ஓலிஸ்டட் (Orlistat) என்பது மற்றொரு பிரபல மருந்தாகும்.

இது உணவுக்கால்வாயில் செயற்பட்டு கொழுப்புகள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் மருந்தாகும்.

கொழுப்புப் பொருட்கள் உறிஞ்சப்படாததால் இவை மலவாயிலால் தானே ஒழுகக் கூடியது மிக முக்கிய பிரச்சனையாகும்.
அவசரமாக மலம் கழிக்க நேருதல்,
கட்டுப்படுத்த முடியாமல் திடீரென மலம் வெளியேறுதல்,
வயிற்றுப் பொருமல்,
வயிற்று வலி போன்றவை இம் மருந்தின் பக்க விளைவுகளாகும்.

இவற்றைத் தவிர 

அடிக்கடி சளி பிடித்தல்,
முரசு கரைதல்,
களைப்பு,
தலையிடி, மனப்பதற்றம்,
மாதவிடாய்க் குளப்படிகள்,
சிறுநீரகத் தொற்று நோய்கள்,
குருதியில் சீனியின் அளவு திடீரெனக் குறைதல்,
மூலத்தால் இரத்தம் வடிதல், ஈரல் பாதிப்பு

போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.

பக்க விளைவுகள் அனைத்தும் அனைவருக்கும் வருமா என்றால் நிச்சயமாக இல்லை.

சில பக்க விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம்.
சிலருக்குப் பல பக்கவிளைவுகள் சேர்ந்தே தோன்றலாம்.
வேறு சிலருக்கு எதுவுமே ஏற்படாமலும் போகலாம்.

அது அவரவர் அதிர்ஷ்டம்.

இருந்தபோதும் அத்தனை பக்கவிளைவுகள் வரக் கூடிய சாத்தியத்துடன் மருந்தைப் பாவித்துத்தான் எடையைக் குறைக்க வேண்டுமா உங்கள் முன் உள்ள தேர்வாகும்.

மருந்துகளை உபயோகித்து எடையைக் குறைத்தாலும்

  • உணவுக் கட்டுப்பாடு, 
  • உடற் பயிற்சி
  • வாழ்க்கை முறை மாற்றங்கள் 
  • இல்லையேல் மருந்தை நிறுத்தியதும் மீண்டும் எடை அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

உங்கள் எடைக் குறைப்பு முயற்சியை எங்கு ஆரம்பிக்கப் போகிறீர்கள்?

தொடர்ந்து நிலைக்கப் போகிற வாழ்க்கை முறை மாற்றங்களிலா
அல்லது
கடுமையான பக்கவிளைவுகளுடன் குறுகிய காலம் மட்டும் நிற்கப் போகும் மருந்துகளிலா?

நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

நன்றி:- இருக்கிறம்

Read Full Post »

>தலையை அழுத்திப் பொத்திக் கொண்டு வந்திருந்தாள். வெண்மையான அவளது முகம் சாம்பல் பூசினாற் போல சோர்ந்திருந்தது. கண்களின் கீழ் கருமை பூத்திருந்தது. சோர்வும் அயர்ச்சியும் உடலெல்லாம் வியாபித்துப் பிசுபிசுத்தது.

எங்கே எனக்கும் ஒட்டிவிடுமோ என்று பயப்படும் அளவிற்கு எனது கொன்ஸ்சல்டேசன் அறை முழவதும் நீக்கமறப் பரவியது.

“தாங்க முடியவில்லை. தலை சிதறுமாப் போலிருக்கு…” என்றவள்,

“வேலைக்குப் போக வேணும். சோட் லீவிலை வந்தனான். கெதியிலை மாத்திவிடுங்கோ” நேர்த்தியான ஆங்கிலத்தில் அவசரப்பட்டாள்.
அவசரப்படுத்தவும் செய்தது தொனி.

அவளிலிருந்து எத்திப் பறந்த எரிச்சலும் சலிப்பும் என் மூஞ்சியில் ஒட்டிக் கொண்டது.

வழித்து எறிந்து விட்டு புன்னகைக்கும் முகமூடியைப் போர்த்திக் கொண்டேன்.

அதற்கிடையில் அவளது செல்பேசி உருகி உருகி அழைத்தது. விருட்டென ஹான்ட் பாக்கைத் திறந்தாள்.

“உன்னை அழைத்தேன். காதில் விழவில்லையா” என சிங்களத்தில் சிருங்காரமாக அவளுக்கென ரகசியம் போலப் பாட ஆரம்பித்தது,

திடீரென ஊரெல்லாம் எதிரொலிக்குமாறு வீறு கொண்டது.

அந்த ஓலியின் வேகத்தில் கழன்று நழுவி விழ முயன்ற புன்னகை முகமூடியை அழுத்திப் பிடித்து மீண்டும் ஒட்ட வைத்துக் கொண்டேன்.

“சரியான வருத்தம். டொக்ரட்டை மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறன். முடிஞ்சதும் நேரை ஒவீசுக்குத்தான் வருவன்” என்றாள் சலிப்புடன் செல்பேசியில்.

அவளுக்கு சில மாதங்களாகவே
பொறுக்க முடியாத தலைவலி.
தலையை அழுத்துவது போலவும்,
தலை சிதறுமாப் போலவும் இருக்குமாம்.
காலையில் தொடங்கிவிடும்.
வெயில் ஏற ஏற வேகம் கூடிக்கொண்டே போகுமாம்.

மாலையில் சற்றுத் தணிந்துவிடும்.

பகல் முழுவதும் சினமாகவும் கோபமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறதாம்.

பலரிடம் மருந்து எடுத்துவிட்டாள்.

கண் டொக்டரிடம் காட்டியபோது அவர் கண் பார்வையில் பிரச்சனை ஏதும் இல்லை. கடும் வெளிச்சம் காரணமாக இருக்கக் கூடும் என ரின்டட் கண்ணாடி கொடுத்தார்.

காது மூக்கு தொண்டை நிபுணரிடமும் (ENT Surgeon) இவள் செல்லத் தவறவில்லை. அவர் சைனஸ் நோயாக இருக்கலாம் எனக் கூறி இரண்டு வாரங்களுக்கு அன்ரிபயடிக் மற்றும் வலி நிவாரணிகள் கொடுத்தார்.

குணமாகவிட்டால் இரண்டு வாரத்தில் வருமாறு கூறினாராம்.
இவளுக்குத் திருப்தி ஏற்படவில்லை.

மூளைக்குள் கட்டி, கண்டல் ஏதாவது இருக்குமா என்ற எண்ணத்தில் இறுதியாக மூளை நரம்பியல் நிபுணரிடம் சென்ற போது CT Scan உட்பட பல பரிசோதனைகள் செய்தார்களாம்.  எல்லாNk ஒழுங்காக இருக்கிறது என்று சொன்னாராம்.

என்ன செய்வது யாரிடம் போவது என்பது புரியாமல் என்னிடம் ஆலோசனைக்காக வந்திருந்தாள்.

இவள் வந்த கோலமே இவளுக்கு மன அழுத்தம் இருப்பதைப் புலப்படுத்தியது.

மருத்துவரிடம் வந்திருக்கும் சொற்ப இடைவெளிக்கு உள்ளாகவே பணி புரியும் இடத்திலிருந்து அழைப்பு வருகிறது எனில் அங்கு எத்தகைய கடுமையான வேலைப் பளு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

மேலும் ஆறுதலாகவும், விபரமாகவும் கேட்டதில் கணக்காளராக இருப்பதாகவும், வேலை அதிகம் எனவும்,
இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலையைத் தனியே செய்வதாகவும் கூறினாள்.

மன அழுத்தம், வேலைத் தள நெருக்கடி போன்றவை உடல் நோய்களாக வெளிப்படும் என்பதைப் விளக்கினேன். ஆனால் அவளுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

‘தலை வலிக்கிறது, உடல் சோர்கிறது’ இவற்றிற்கு மனம்தான் காரணம் என்பதை அவள் முழுமையாக நம்பத் தயாராக இல்லை.

இருந்த போதும் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்கான எனது ஆலோசனைகளை கேட்கத் தவறவில்லை. சில மருந்துகளையும் பரிந்துரை செய்தேன்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்தாள்.

படுக்கையில் ஏதோ பூச்சி கடித்ததனால் ஏற்பட்ட வீக்கத்திற்கு காட்டுவதற்காக. ஆராய்ந்து பார்ப்பதற்கு ஏதும் இல்லாத சாதாரண பிரச்சனை என்பதால் விரைவில் வேலை முடிந்துவிட்டது.

அவளது தலையிடி பிரச்சனை எப்படி இருக்கிறது என விசாரித்தேன்.

சஹாரா பாலைவனத்தில் நீர் வரட்சியால் நாக்கு உலர்ந்தவள் நீர் விழ்ச்சியைக் கண்டது போல முகம் மலர்ந்தாள்.

“இப்ப மூன்று மாசமாக நல்ல சுகம். தலையிடியே கிடையாது” எனக் கூறினாள்.

நான் கூறியவற்றை ஒழுங்காகச் செய்திருக்கிறாள் என்பதால் வனாந்தரத்து நீர் வீழ்ச்சி என் பக்கம் திரும்பியது போலக் குளிர்சியாக இருந்தது.

“எப்படிக் குணமாகியது?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

அவளது விடையால் மேலும் மகிழ்வடைவதை எதிர்பார்த்து என் ஆழ்மனம் வேண்டியிருக்க வேண்டும்.

முகமூடி இன்றியே முகம் மலர்ந்தேன்.

“என்ரை பிரண்ட் ஈ மெயில் அனுப்பியிருந்தா.
வோட்டர் திரப்பி செய்யச் சொல்லி .
இப்ப தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இரண்டு கிளாஸ் தண்ணி குடிக்கிறன்.
இது தொடங்கிய பிறகு தலையிடியே வாறதில்லை’

சற்றுத் தயக்கத்தின்தான் பின் சொன்னாள்.

நான் ஏதாவது இடக்கு முடக்காச் சொல்லக் கூடும் என்பதால் எற்பட்ட தயக்கமாக இருக்கலாம்.

“வலு சந்தோசமாக இருக்கு. இவ்வளவு சிம்பிளான முறையில் உங்கள் தலையிடியைத் தீர்த்து வைத்த நண்பிக்கு நானும் நன்றி சொல் வேண்டும்”
என  முக மலர்ச்சி மாறாது சொல்லி வைத்தேன்.

ஆயினும் உள்மனத்தில் அவளது தலையிடி மாறியதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் எனத் தோன்றியது.

“அப்ப… வேலை எப்படி?”

“நான் பழைய வேலையை விட்டுவிட்டன்.
இப்ப வேறை இடத்திலை வேலை செய்கிறன்.
வேலை கடுமை இல்லை.
நேரத்திற்கு போய் நேரத்திற்கு வீட்டுக்கு வாறன்.
பொஸ்சும் நல்லவர்.
கூட வேலை செய்யிறவையும் நல்ல பிரண்ட்ஸ்சாக பிழங்குகினம்’

என்றாள் மகிழ்ச்சியுடன்.

‘ஓகோ! வேலைப் பளுவும், மனஅழுத்தமும் புதிய வேலையில் தீர்ந்துவிட்டது. அதனால் தலையிடி தானாகவே மறைந்துவிட்டது’ என்பது புரிந்தது.

ஆயினும் அதனை வெளிப்படையாகச் சொல்லவா முடியும்.

‘நல்லதாகப் போச்சு.
மனதுக்கு நிறைவான அந்த வேலையை இறுகப் பிடிச்சுக் கொள்ளுங்கள்.’ என்று சொல்லி விடை கொடுத்தேன்.

காகம் இருக்கப் பழம் விழுந்தது.

தண்ணீர் குடிக்கத் தலைவலி தீர்ந்தது.

 நன்றி :- வீரகேசரி

0.0.0.0.0

Read Full Post »

>

எனது நண்பன் வரதராஜன் ஒரு இணைப்பை அனுப்பியிருந்தார். அதில் அவர் எழுதியிருந்தது இவ்வளவுதான்.

“கண்டங்கள் தாண்டி நாம் வந்தாலும் என்றுமே எம்மை இணைத்துக்கொண்டிருக்கும் இவர்கள்!!”

அது ஒரு YouTube இணைப்பு.

இசையில், மெல்லிசையில் சங்கீதத்தில், ஆர்வமுள்ளவர்களுக்கு  அற்புதமான அனுபவத்தைத் தரக் கூடியது.

ஒரு இசை அல்பம். தபலாவும் வயலினும் இணைந்து ஒலிக்கிறது. ஷாகீர் ஹீசைனும் குன்னக்குடி வைத்தியநாதனும் இணைந்து இசைக்கிறார்கள்.


மேலைத்தேய, ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசைகளின் சங்கமம்

அதைக் கேட்க முன்னர் கீழே பதிவின் இறுதியில் உள்ள RAGGA வை mute பண்ணுங்கள். இல்லையேல் பாரதியின் நிற்பதுவே நடப்பதுவே குறுக்கிடும்.

Read Full Post »

>அந்த முதியவர் வந்து உட்கார்ந்து தனது நோயைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

நான் எனது சுழலும் கதிரையைச் சற்றுப் பின் நகர்த்திக் கொண்டேன்.

இப்பொழுது என்னால் சலனமின்றி அவர் சொல்வதைக் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

வாய்நாற்றம் என்பது பொதுவாக அப்பிரச்சனை உள்ளவரை விட அவரோடு தொடர்பாடல் செய்ய வேண்டியவர்களையே முதலில் உணரச் செய்கிறது.

அவரைச் சுற்றியுள்ளவர்கள் இவரது வாய்நாற்றத்தை உணர்ந்தும் நாகரீகம் கருதி நேரடியாகச் சொல்வதைத் தவிர்ப்பர்.

அந்த மணம் இவருக்கு பழக்கப்பட்டுப் போவதால் இவரது நாசி அதை உணர்ந்து அச் செய்தியை மூளைக்கக் கடத்தத் தவறிவிடுவதால் இவ்வாறு நேர்கிறது.

அதே நேரம் வாய்நாற்றம் உள்ளவர்களையே அதிக பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதும் உண்மையே.

மற்றவர்கள் இவரோடு உரையாடுவதை விரைவில் வெட்டிவிடவே முயல்வர். இதனால் தொழில் ரீதியாகவும்,
நட்பு உறவு ரீதிகளாகவும் பாதிப்புகள் ஏற்படுவதுடன்,
தாழ்வு மனப்பான்மைக்கும் இட்டுச் செல்லும்.

பொதுவாக எவருக்குமே காலையில் நித்திரைவிட்டு எழும்போது வாய் நாற்றம் சற்று இருக்கவே செய்யும். இது இயற்கையானது. தூக்கத்தின்போது உமிழ் நீர் சுரப்பது குறைவாக இருப்பதால் வாய் வரண்டு கிருமிகள் அதிகரிப்பதால் இது நேர்கிறது.

நாம் பல்விளக்கி, வாய் கொப்பளிக்க அது நீங்கும். அத்தகைய உதயகால வாய்நாற்றமானது வாயைத் திறந்து கொண்டு தூங்குபவர்களில் அதிகமாகும்.

பல்லுகள் மிதப்பாக இருப்பவர்கள், மூக்கடைப்பு உள்ளவர்கள் குறட்டை விடுபவர்களில் அதிகம் இருக்கக் கூடும்.

இதைத் தவிர காய்ச்சல், வயிற்றோட்டம், டொன்சிலைடிஸ், போன்ற பல்வேறு நோய்களின் போதும் ஏற்படலாம். ஆயினும் நோய் குணமாக இவை மாறிவிடும்.

உள்ளி, வெங்காயம், சீஸ் போன்ற உணவுச் சுவையூட்டிகளும், மது, புகைத்தல் போன்ற பழக்கங்களும் காரணமாகின்றன.

இவற்றிற்கு மணத்தைக் கொடுக்கும் இராசாயனப் பதார்த்தங்கள் உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு குருதிச் சுற்றோட்டத்தில் கலந்து மீண்டும் சுவாசக் காற்றில் வெளிப்படுவதாலேயே வாய் மணம் ஏற்படுகின்றது.

ஆயினும் நாட்பட்ட அல்லது நீண்ட காலம் தொடரும் வாய்நாற்றம் மிகவும் பிரச்சனைக்கு உரியது.

வாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாததால் பற்களுக்கிடையே உணவுத் துகள்கள் தங்கி நிற்கும்போது அதில் பக்டீரியா தொற்று ஏற்படுவதாலேயே இது நேர்கிறது. பக்றீரியா தொற்றுள்ள சீழ் நாறுவதை ஒத்தது இது.

பற்களிடையே இடைவெளி இருப்பவர்களும், ஒழுங்கான அமைப்பின்றி பல்வரிசை தாறுமாறக இருப்பவர்களும் கூடிய அவதானம் எடுப்பது அவசியம்.

ஏனெனில் அத்தகையவர்கள் அதிக அக்கறையோடு சுத்தம் செய்தால் மாத்திரமே பற்களுக்கு இடையே சிக்கியுள்ள உணவுத் துகள்களை முற்றாக அகற்ற முடியும்.

பற்சொத்தை உள்ளவர்கள் முரசு கரைதல் போன்ற முரசு நோயுள்ளவர்களிலும் வாய்நாற்றம் அதிகம் ஏற்படுகிறது.

நீரிழிவு கட்டுப்பாடில் இல்லாதவர்களில் முரசு நோய்கள் அதிகம். அதனால் வாய்நாற்றமும் அதிகம்.

மூக்கில் உள்ளபிரச்சனைகளும் வாய் நாற்றத்திற்குக் காரணமாகலாம்.

மூக்கடைப்பு உள்ளவர்கள், மூக்கில் நீர்க்கட்டி (Nasal Polyp) உள்ளவர்களிலும் ஏற்படுகிறது.

சிறு பிள்ளைகளில் இவ்வாறான மணம் இருந்தால் அது ஏதாவது மூக்கினுள் வைக்கப்பட்ட அந்நியப் பொருள் காரணமாகலாம்.

மூக்கினுள் குண்டுமணி, ரப்பர் துண்டுகள், அழிரப்பர் போன்ற பல பொருட்களை பிள்ளைகளின் மூக்கினுள் இருந்து அகற்றி துர்நாற்றத்தை ஒழித்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.

உணவுகளால் வாய் நாற்றம் ஏற்படுவது போலவே உணவு உண்ணமால் பட்டினி கிடப்பதும், விரதம் அனுஷ்டிப்பதும் கூட வாய் நாற்றத்தை ஏற்படுத்தலாம்.

அதற்குக் காரணம் பட்டினியிருக்கும் நேரங்களில் எமது உடலின் சக்தித் தேவைகளுக்காக கொழுப்பு கரைக்கப்படுகிறது. இதன்போது ‘கீட்டோன்’ என்ற இரசாயனப் பொருள் உற்பத்தியாகிறது. இது சுவாசத்தோடு வெளிவரும்போது வாய்நாற்றமாகத் தோன்றும்.

இவ்வாறு பல காரணங்களைச் சொன்னாலும் பெரும்பாலும் வாயிலிருந்தே இது ஏற்படுகிறது.

  • ஏற்கனவே குறிப்பிட்டது போல சரியாகச் சுத்தம் செய்யாததால் பல் இடுக்குகளுக்குள்ளும், முரசுகளிலும ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுத்துகள் முக்கிய காரணமாகும். 
  • ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் பக்டிரீயா கிருமிகள் சேர்ந்து அழுகிச் சேதமடையும். அதன்போது வெளியேறும் வாயுக்கள்தான் துர்நாற்றத்திற்குக் காரணமாகும்.
  • பற்களின் மேல் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் உமிழ் நீரும், பக்டீரியா கிருமிகளும் சேரும்போது பிளாக் (Dental Plaque) எனப்படும் மென் படலமாகப் படியும். இதில் கல்சியமும் சேர்ந்து இறுகிக் காரையாகப் (Tartar)படியும். 
  • அத்தகைய காரையை அகற்றாவிட்டால் பற்கள் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். ஆதலால் பல்மருத்துவரிடம் காட்டி அவற்றைச் சுத்தம் செய்வது அவசியம். காரை இறுக்கமாக பற்களின் மேல் ஒட்டிக்கொள்ளும். பற்களுக்கும் முரசுக்கும் இடையேயும் பரவி முரசு நோய்களுக்கும் இட்டுச் செல்லும். இதனால் முரசுகள் அழற்சியடைந்து வீங்கும். பற்களை துலக்கும் போது இரத்;தம் வடிவதற்குக் காரணம் இத்தகைய (Gingivitis) முரசு நோய்தான். இவை யாவுமே வாய் நாற்றத்தைக் கொண்டுவரும்.
  • சிலருக்கு நாக்கின் பிற்பகுதியில் வெள்ளையாக அழுக்குப் படர்வதுண்டு. இது பொதுவாக மூக்கின் மேற்பாகத்திலிருந்து சளி உட்புறமாகக் கசிவதால் (Post Nasal Drip) ஏற்படலாம். இதுவும் வாய்நாற்றத்திற்குக் காரணமாகலாம்.

இவ்வாறு வாய்நாற்றத்திற்குக் காரணங்கள் பல. அடிப்படைக் காரணத்தைக் கண்டு பிடித்து அதை நிவரத்தி செய்ய வாய்நாற்றம் முற்றாக நீங்கும்.

வாய்நாற்றத்தை நீக்க நீங்கள் அவதானிக்க வேண்டிய விடயங்களை மற்றொரு கட்டுரையில் பார்க்கலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி :- தினக்குரல்

Read Full Post »

>புதிதாக மணமானவன். மாலை சூட்டி மாதம் ஒன்று கூட ஆகவில்லை…
அதற்கிடையில் இந்தச் சிக்கல்.

என்னுடன் தனிமையில் அந்தரங்க விஷயங்களைப் பற்றிக் கதைக்கவெனத் தயங்கியபடி வந்தான்.

ஏமாற்றம் தரும் உறவு!
புது வாழ்க்கை ஒட்டாமலே பிரிந்து விடக்கூடிய நிலை!!
தனிமையில், மங்கிய ஒளியில்,
அவளை அணுகியவுடனேயே அவன் சோர்ந்து விடுகிறான்…
அவனால் முடியவில்லை…

இயலாமை… ஏமாற்றம்… சலிப்பு…

அவள் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறாள்.

ஏமாற்றம்: ஒவ்வொரு முறையும் ஏமாற்றம்தான்.

ஒரு நாளா?… இரண்டு நாளா?… மாதம் ஒன்று கழியப் போகிறது.

இனியும் முடியாது. அவள் பொறுமை இழந்து விட்டாள்.

உறவை முறித்து ஒரேயடியாகப் பிரித்து விடலாமா என்ற தனது எண்ணத்தை அவனுக்குக் கோடி காட்டி விட்டாள்.

“அப்படி நேர்ந்தால் அந்த அவமானத்துடன் உயிர் வாழ முடியுமா? என்ற ஏக்கம் அவனுக்கு. என்னிடம் ஓடி வந்தான்.

பொறுமையுடன், பூரணமாக அவனைப் பரிசோதித்தேன்.
அவனது உறுப்புகளில் எந்தக் குறையும் இல்லை.

நீரிழிவு, பிரஸர், மற்றும் ஆண்மைக் குறைபாட்டைக் கொண்டு வரக் கூடிய நோய்கள் எதுவும் இருக்கவில்லை.

ஏதோ மனோவியல் சிக்கலாகத் தான் இருக்க வேண்டும்.

நிதானமாகப், புரிந்துணர்வுடன் கூடிய அணுகுமுறை தேவைப்பட்டது.
அவனுடன் நீண்ட நேரம் உரையாடினேன்.
அவனது கடந்த கால வாழ்க்கையை பற்றி விசாரித்தேன்.

மூன்று வருடங்களாக, மத்திய கிழக்கு நாடொன்றில் பெரும் முதலாளி ஒருவனின் தனிப்பட்ட டிரைவராக கடமையாற்றினான்.
கைநிறையச் சம்பளம்.
வயிறு நிறையச் சாப்பாடு,
நிம்மதியான வாழ்க்கை.
அப்பொழுதுதான் அந்த பங்காளாவில் கடமையாற்றிய ஒரு வேற்றினப் பணிப்பெண்ணின் நட்புக் கிடைத்தது.

நட்பு நெருங்கியது. மேலும் இறுகியது.
படுக்கையறை வரை சென்று விட்டது.

அப்பொழுது அவனுக்கு எல்லாமே நிறைவாக முடிந்தது! எந்த இயலாமையும் இருக்கவில்லை!

எனக்குத் துரும்பு கிடைத்து விட்டது! அதை வைத்துக் கொண்டு, அவனது ஆழ்மனத்தை நெருங்கி விசாரித்த போது, அந்த உறவு அவனது மனத்தை மிக ஆழமாகப் பாதித்து விட்டமை புரிந்தது.

தான் ஒரு பெரிய குற்றத்தைச் செய்து விட்டதாகத் தன் மனதுக்குள்ளேயே மறுகினான். அது கேவலமாகப்பட்டது.

பழையவளை மறக்க முடியவில்லை.

அதே நேரத்தில் புதியவளுக்குத் துரோகம் இழைத்து விட்டதாகவும் நினைத்துக் கவலை கொண்டான்.

இதனால் இவளை நெருங்கும் போதெல்லாம், குற்ற உணர்விற்கு ஆளாகி மனந்தத்தளித்து இயலாமைக்கு ஆட்பட்டான்.

அவன் முன்பு செய்தது பிழையென்ற போதும், அந்தக் குடும்பம் விவாகரத்து வரை சென்று பிரித்து விடாமல் இருப்பதற்கு, என்னால் ஆகக்கூடியதைச் செய்ய வேண்டும்.

அவனுக்கும் பல விஷயங்களைப் புரிய வைத்தேன்.
பல சம்பவங்களை உதாரணம் காட்டினேன்.

குற்ற உணர்வை இழக்க வைத்து, நம்பிக்கையை அவன் மனதில் வளர வைத்தேன். சில மருந்துகளும் உதவின.

அண்மையில் கை நிறைய சொக்களேற்றுடன்
முகம் நிறைந்த சிரிப்புமாக வந்தான்.

தவறுகள் செய்யாத மனிதர்கள் கிடையாது.

ஆனால் அதையே மீள மீள நினைத்து மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தால்  வாழ்வு நரகமாகிவிடும்.

தனது வாழ்வு மட்டும் இன்றிக் கூட வாழ்பவர்களின் வாழ்வும் கருகிவிடும்.

அதிலிருந்து விடுபட வேண்டும்.

வாழ்வைச் சொர்கமாக்கிக் கொள்ள வேண்டும்

நாம் சிரித்தால் சுற்ற உள்ள மனிதர்களும் மகிழ்வார்கள். நாம் அழுதால் எமது உறவுகளும் நட்புக்களும் கவலை கொள்ளும்.

எனவே மீண்டும் மீண்டும் தவறு செய்யாது புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

அவளைப் போன்ற வேறு சில பெண்கள் வாய்விட்டுப் பேச முடியாது தம் வாழ் நாள் முழுவதும் உள்ளத்திற்குள் அழுந்திக் கொண்டிருப்பது எமது சமூகத்தின் சாபக் கேடாகும்.

ஆனால் புரிந்துணர்வோடு நடந்து மருத்துவ உதவிக்கு வருவது இப்பொழுது அதிகரித்துள்ளதும் உண்மையே.

ஆண்மைக் குறைபாடு பற்றிய எனது மருத்துவக் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்

 கலாசார சீரழிவுகள் என்ற தலைப்பில் முன்பு மல்லிகையில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. சில மாற்றங்களுடன்.

Read Full Post »

Older Posts »