>புதிதாக மணமானவன். மாலை சூட்டி மாதம் ஒன்று கூட ஆகவில்லை…
அதற்கிடையில் இந்தச் சிக்கல்.
என்னுடன் தனிமையில் அந்தரங்க விஷயங்களைப் பற்றிக் கதைக்கவெனத் தயங்கியபடி வந்தான்.
ஏமாற்றம் தரும் உறவு!
புது வாழ்க்கை ஒட்டாமலே பிரிந்து விடக்கூடிய நிலை!!
தனிமையில், மங்கிய ஒளியில்,
அவளை அணுகியவுடனேயே அவன் சோர்ந்து விடுகிறான்…
அவனால் முடியவில்லை…
இயலாமை… ஏமாற்றம்… சலிப்பு…
அவள் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறாள்.
ஏமாற்றம்: ஒவ்வொரு முறையும் ஏமாற்றம்தான்.
ஒரு நாளா?… இரண்டு நாளா?… மாதம் ஒன்று கழியப் போகிறது.
இனியும் முடியாது. அவள் பொறுமை இழந்து விட்டாள்.
உறவை முறித்து ஒரேயடியாகப் பிரித்து விடலாமா என்ற தனது எண்ணத்தை அவனுக்குக் கோடி காட்டி விட்டாள்.
“அப்படி நேர்ந்தால் அந்த அவமானத்துடன் உயிர் வாழ முடியுமா? என்ற ஏக்கம் அவனுக்கு. என்னிடம் ஓடி வந்தான்.
பொறுமையுடன், பூரணமாக அவனைப் பரிசோதித்தேன்.
அவனது உறுப்புகளில் எந்தக் குறையும் இல்லை.
நீரிழிவு, பிரஸர், மற்றும் ஆண்மைக் குறைபாட்டைக் கொண்டு வரக் கூடிய நோய்கள் எதுவும் இருக்கவில்லை.
ஏதோ மனோவியல் சிக்கலாகத் தான் இருக்க வேண்டும்.
நிதானமாகப், புரிந்துணர்வுடன் கூடிய அணுகுமுறை தேவைப்பட்டது.
அவனுடன் நீண்ட நேரம் உரையாடினேன்.
அவனது கடந்த கால வாழ்க்கையை பற்றி விசாரித்தேன்.
மூன்று வருடங்களாக, மத்திய கிழக்கு நாடொன்றில் பெரும் முதலாளி ஒருவனின் தனிப்பட்ட டிரைவராக கடமையாற்றினான்.
கைநிறையச் சம்பளம்.
வயிறு நிறையச் சாப்பாடு,
நிம்மதியான வாழ்க்கை.
அப்பொழுதுதான் அந்த பங்காளாவில் கடமையாற்றிய ஒரு வேற்றினப் பணிப்பெண்ணின் நட்புக் கிடைத்தது.
நட்பு நெருங்கியது. மேலும் இறுகியது.
படுக்கையறை வரை சென்று விட்டது.
அப்பொழுது அவனுக்கு எல்லாமே நிறைவாக முடிந்தது! எந்த இயலாமையும் இருக்கவில்லை!
எனக்குத் துரும்பு கிடைத்து விட்டது! அதை வைத்துக் கொண்டு, அவனது ஆழ்மனத்தை நெருங்கி விசாரித்த போது, அந்த உறவு அவனது மனத்தை மிக ஆழமாகப் பாதித்து விட்டமை புரிந்தது.
தான் ஒரு பெரிய குற்றத்தைச் செய்து விட்டதாகத் தன் மனதுக்குள்ளேயே மறுகினான். அது கேவலமாகப்பட்டது.
பழையவளை மறக்க முடியவில்லை.
அதே நேரத்தில் புதியவளுக்குத் துரோகம் இழைத்து விட்டதாகவும் நினைத்துக் கவலை கொண்டான்.
இதனால் இவளை நெருங்கும் போதெல்லாம், குற்ற உணர்விற்கு ஆளாகி மனந்தத்தளித்து இயலாமைக்கு ஆட்பட்டான்.
அவன் முன்பு செய்தது பிழையென்ற போதும், அந்தக் குடும்பம் விவாகரத்து வரை சென்று பிரித்து விடாமல் இருப்பதற்கு, என்னால் ஆகக்கூடியதைச் செய்ய வேண்டும்.
அவனுக்கும் பல விஷயங்களைப் புரிய வைத்தேன்.
பல சம்பவங்களை உதாரணம் காட்டினேன்.
குற்ற உணர்வை இழக்க வைத்து, நம்பிக்கையை அவன் மனதில் வளர வைத்தேன். சில மருந்துகளும் உதவின.
அண்மையில் கை நிறைய சொக்களேற்றுடன்
முகம் நிறைந்த சிரிப்புமாக வந்தான்.
தவறுகள் செய்யாத மனிதர்கள் கிடையாது.
ஆனால் அதையே மீள மீள நினைத்து மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தால் வாழ்வு நரகமாகிவிடும்.
தனது வாழ்வு மட்டும் இன்றிக் கூட வாழ்பவர்களின் வாழ்வும் கருகிவிடும்.
அதிலிருந்து விடுபட வேண்டும்.
வாழ்வைச் சொர்கமாக்கிக் கொள்ள வேண்டும்
நாம் சிரித்தால் சுற்ற உள்ள மனிதர்களும் மகிழ்வார்கள். நாம் அழுதால் எமது உறவுகளும் நட்புக்களும் கவலை கொள்ளும்.
எனவே மீண்டும் மீண்டும் தவறு செய்யாது புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.
அவளைப் போன்ற வேறு சில பெண்கள் வாய்விட்டுப் பேச முடியாது தம் வாழ் நாள் முழுவதும் உள்ளத்திற்குள் அழுந்திக் கொண்டிருப்பது எமது சமூகத்தின் சாபக் கேடாகும்.
ஆனால் புரிந்துணர்வோடு நடந்து மருத்துவ உதவிக்கு வருவது இப்பொழுது அதிகரித்துள்ளதும் உண்மையே.
ஆண்மைக் குறைபாடு பற்றிய எனது மருத்துவக் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்
>கனிவாக அணுகி இருக்கிறீர்கள்.
>நல் உதவி
>கருத்திற்கு நன்றி சைவகொத்துப்பரோட்டா
>கருத்துரைக்கு நன்றிஅண்ணாமலையான்