Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2010

>எமது பாடசாலை அண்மைக் காலத்தில் பெற்ற பல சிறப்பான செயற்பாடுகளுக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் அதிபர்.மு.கனகலிங்கம் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.

தலைமைத்துவப் பண்பும், அர்ப்பணிப்பும், தொலைநோக்கும் கொண்ட ஒரு சிறந்த அதிபர் அவராகும். மாணவர்களின் கல்வித் தரமும், பாடசாலைக்கான வசதிகளும் பொருண்மிய வளமும் அவரது காலத்தில் அளப்பரிய முன்னேற்றம் கண்டன.

ஆயினும் அதிபர் தர 2ம் தரத் தேர்வில் தெரிவானதால் க.பொ.த சாதாரணதர வகுப்புகள் வரையுள்ள பாடசாலைக்கு மாற்றம் செய்ய கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து மணல்காடு பாடசாலைக்கு அவரை இடமாற்றம் செய்தது.

இடிபோன்ற செய்தியாக பாடசாலை சமூகம் கலங்கி நின்றது.
ஆயினும் ஓய்ந்து விடவில்லை.

இதை எதிர்த்து பாடசாலை மாணவர்களும், பொற்றோர் நலன்விரும்பிகளும் பாடசாலை வகுப்பு பகிஸ்பரிப்பு, வீதிப் போராட்டம் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அதே வேளை கொழும்பு பழைய மாணவர் ஒன்றியமும்  மாகாண அமைச்சு அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தைகள் நடாத்தினர்.

ஆனால் இவை எதுவும் பயன் பெறாது போனது.

இறுதி முயற்சியாக எமது ஒன்றியத் தலைவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் G.A.சந்தரசிறி அவர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி விடயங்களை விளக்கினர்.

முக்கியமாக பாடசாலை வளர்ச்சிக்கு அதிபர் ஆற்றிய பணிகளைச் சுட்டிக் காட்டி, அவர் ஆரம்பித்த பணிகளை தொடரந்து நடாத்தி பூர்த்தி செய்வதற்காக அவரது இடைமாற்றத்தை இடைநிறுத்துமாறு வேண்டினார்.

இதனைத் தொடர்ந்து மாகாண ஆளுனர், அதிபரையும் கல்வித் திணைக்கள அதிகாரிகளையும் நேரடியாகத் தனது அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடாத்தினார்.

இதன் பலனாக, தற்போதைய அதிபரின் சேவை எமது பாடசாலைக்கு தொடர்ந்து சில காலத்திற்கு தேவை என்பதை உணர்ந்தார். அவரின் இடமாற்றத்தை ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்குமாறு ஆணையிட்டார்.

அவருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது

இப்பொழுது அதிபர்.மு.கனகலிங்கம் எமது பாடசாலையில் மேலும் ஒரு வருடத்திற்கு பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவருடைய சேவைக் காலத்தில் எமது பாடசாலைக்கு மேலும் சில அபிவிருத்திப் பணிகளையாவது நாம் மேற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதற்கு பழைய மாணவர்கள் உட்பட இப் பாடசாலைச் சமூகத்தைச் சார்ந்த அனைவரது ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் பங்களிப்பும் தேவைப்படுகிறது. பாடசாலைச் சமூகம் எனக் குறிப்பிடும்போது அந்தப் பாடசாலைச் சுற்றாடலைச் சார்ந்த அனைவரையும் குறிக்கிறது.

இன்பருட்டி, நாவல்நகர், தம்பசிட்டி, சாளம்மை, வியாபாரிமூலை, பளவத்தை, அல்வாய் வடக்கு, சுப்பர்மடம் என அதன் சுற்றாடலில் உள்ள அனைத்துக் கிராமங்களில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழ்ந்தவர்களின் வழிதோன்றல்கள் அனைவரும் அடங்குகின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது பாடசாலையை மேலும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல அணிதிரள்வோம்.

Read Full Post »

>


14.01.2010 நடைபெற்ற வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட டொக்டர் வதனி சண்முகதாஸ் அவர்கள் பாடசாலை நூலக்திற்கு நூல்கள் கொள்வனவு செய்வதற்காக ரூபா 2000 தந்து உதவினார்கள்.

பாடசாலை அதிபர் மு.கனகலிங்கம் அப் பணத்திற்கு நெல்லியடி சிதம்பரப்பிள்ளை புத்தகசாலையிலிருந்து புத்தகங்கள் கொள்வனவு செய்து நூலகத்தில் சேர்த்துள்ளார்.

தன்னலமற்ற அவரது பணிக்கு எமது ஒன்றியத்தின் சார்பில் நன்றி சொல்கிறோம்.

சென்ற வருடம் கொழம்பில் பாடசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைத்த செய்தியை அறிந்திருப்பீர்கள்.

Read Full Post »

>திருமதி வைத்திலிங்கம் மாணிக்கம் ஆசிரியை

பழைய மாணவர்கள் பலருக்கும் மாணிக்கம் ஆசிரியை நினைவு இருக்கக் கூடும். பாடசாலைக்கு முதல் முதலில் வரும் குழந்தைகளுக்கு ஒரு தாய்போல மாணிக்கம் ரீச்சர் அன்பு காட்டி அரவணைத்த காரணத்தால்தான் மாணவர்களால் புதிய சூழலுக்கு இசைய முடிந்தது.

எமது பாடசாலையின் ஆண்பிரிவின் முதல் பெண் ஆசிரியை ஆன இவரை இவ்வருட ஆரம்பித்தில் (14.01.2010) நடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க இருந்தோம்.

ஆயினும் உடல்நிலை காரணமாக அன்று அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ளnமுடியவில்லை. இருந்த போதும் தான் கற்பித்த பாடசாலையை மறக்காத அந்த நல்ல உள்ளம் ரூபா 10,000 நன்கொடையாக தந்து உதவினார்.

இதில ரூபா 5000 வருடாந்த பரிசளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பரிசு அளிப்பதற்காக பாடசாலை நிதிக்கு அனுப்பப் பட்டது. மிகுதி இவ் வருடம் தேவைபபடும் வேறு ஏதாவது முக்கிய பணிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தன்னலமற்ற அவரது பணிக்கு எமது ஒன்றியத்தின் சார்பில் நன்றி சொல்கிறோம்.

வருடாந்தப் பொதுக் கூட்டம் நிறைவுற்றதும் எமது ஒன்றியத் தலைவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் ஆசிரியையின் இல்லத்திற்குச் சென்று தனது முன்னாள் ஆசிரியைக்கு தனது வந்தனங்களைத் தெரிவித்தார். எமது ஒன்றியத்தின் முக்கிய உறுபினரான கனகசுந்தரம் சண்முகசுந்தரமும் அவருடன் கூடச் சென்று தனது வந்தனங்களைத் தெரிவித்தார்.

Read Full Post »

>

“”எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ”   எனக் கேட்டார் ஒரு முதியவர். 
ஏன் என நினைகிறீர்கள்? 
பல முதியவர்கள் இவ்வாறு கேட்கும் நிலையில் தான் அவர்களை எமது சமூகம் வைத்திருக்கிறது.

“””””  வயசு போட்டுது, நடப்பு ஒண்டும் விளங்காது சும்மா பழங் கதைகளையே வழவழக்கினம்”


“உங்கடை பழங்கால மோட்டு நம்பிக்கைகளை இந்தக் காலத்திலை ஆர் கேட்டு நடக்கிறது”

“வயசு போனால் பேசாமல் மூலையில் முடங்கிக் கிடக்கிறதுக்கு ஏன் எழும்பித் திரிஞ்சு, விழுந்து முறியிறியள்”   

வயசானவர்களை இவ்வாறெல்லாம் எடுத்தெறிந்து இழக்கமாகப் பேசுவதைக் கேட்கிறோம்.

பெற்றோர்களையும் முதியோர்களையும் தெய்வமாக மதித்த எமது சமூகத்தில் இன்று இவ்வாறு பேசுவதைக் காண்பது சகஜமாகிவிட்டது..

வயதிற்கும் அனுபவத்திற்கும் மதிப்புக் கொடுக்காது  வயதானவர்களை அவமதிப்பமதுடன், உதாசீனப்படுத்தவும் செய்கிறார்கள்.

இதனை நீங்களும் பல் வேறு சந்தர்ப்பங்களில்ம் கண்டிருக்கக் கூடும்.

‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’ என்றும்,
‘தாயிற் சிறந்த ஒரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’

என்றும் பெற்றோர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்த தமிழ் சமுதாயம் இன்று அதே மரியாதையை மூத்தோர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டதா?

வயது முதிர்ந்தவர்களைப் பார்த்துக் காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல நடந்து கொள்கிறார்கள். குருத்தோலைகள் காவோலைகளாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

சில வேளைகளில் நிர்த்தாட்சண்யமாகக், கொடூர மனோபாவத்துடன் நடப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

“வயது போனால் செத்துத் துலையிறதுக்கு ஏன் இன்னும் இருந்து கழுத்தறுக்கிறியள்..”

என்று தமது பெற்றோரைப் பேசுவதைக்கூட என் காதால் கேட்டு மனம் வெதும்பியிருக்கிறேன்.

வயது போனவர்கள் வெறும் மரக்கட்டைகள் அல்ல!

அவர்களுக்கு ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும். உணர்வுகளும் உணர்ச்சிகளும் மரத்துவிடுவதில்லை என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன் ஒரு நாள் என்னிடம் வந்த முதியவரொருவர் சோகம் தோய்ந்த முகத்துடன் இருந்தார்.

“தலைச்சுத்து, எழும்பி நடக்க முடியாமல் விழுத்தப் பாக்குது, கை, கால் உழைவு, நடந்தால்  இளைப்புக் களைப்பு…”

வயோதிபத்தின் காரணமாக ஏற்படும் இயலாமைகள் பற்றி விரிவாகக் கூறிக்கொண்டிருந்தார்.

திடீரெனக் கூட வந்த மகள் பக்கம் திரும்பி,

“பிள்ளை பேர்சை பையோடை வெளியிலை விட்டிட்டின், ஒருக்கால் போய்ப் பார் மேனை” 
என்றார்.

அவளை வெளியில் அனுப்பி என்னுடன் தனிமையில் பேசும் ஆதங்கம்.

மருத்துவனால் செய்ய முடியாததைதக் கோரினார்.

மகள் வெளியேறிய மறுகணமே, – 

“எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ” 

என்று பரிதாபமாகக் கேட்டார். கேட்கவே மனது துடிக்கிறது.
உள்ளத்தில் துயரம்  மூடியிருந்தால் மட்டுமே இத்தகைய வாரத்தைகள் எழுந்திருக்கும்.

“ஏன் அப்பு ?”

“என்னாலை ஒரு வேலையும் செய்ய முடியுதில்லை. 
எல்லாத்துக்கும் மற்றவையளின்ரை உதவி தேவையாக கிடக்கு, 
கிணத்திலை அள்ள ஏலாது… 
மகள் தான் குளிக்க தண்ணி அள்ளித் தாறவா. 
அவவுக்கும் சரியான வேலை…
… நான் குளிச்சுப் பத்து நாளாய்ப் போச்சுதெண்டால் பாருங்களேன்… 
செத்துப் போனால் எனக்கும் கஷ்டம் இல்லை, 
மற்றவையளுக்கும் கரைச்சல் இல்லை”
என்றார்.

தனக்கு குளிக்க உதவுவதுகூட மகளுக்கு அவசியமான, அக்கறைக்குரிய விஷயமாக இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரா?
மகளில் குற்றம் சாட்டாது, அவளது வேலைப் பொறுப்புகளையும் உணர்ந்த அதே நேரம் தன் பிரச்சனையையும் முன் வைத்தார்.

இருந்தபோதும்  இன்னும் பல விடயங்கள் அவர் மனத்தை அழுத்தியிருக்கும். இல்லையேல் இத்தகைய வார்த்தைகள் வந்திராது.
வெளியாரான எனக்குச் சொல்வதில் உள்ள தயக்கம் வாயைக் கட்டிப் போட்டிருக்கும்.

மனதிற்குள் அழுது கொண்டேன்.

வயதானவர்களுக்கும் நேரத்திற்கு நேரம் பசிக்கும்.
தூக்கம் வரும்.
குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.
அவர்களும் ஆசாபாசங்கள் நிறைந்த மனித ஜன்மங்கள் தானே!

எமக்குத் ‘தலைநிறைய வேலை’ இருக்கிறது என்பதற்காக அவர்களைக் கவனியாமல் விடுவது எந்த வகையில் நியாயம்?

முடியாவிட்டால் வயோதிபர் இல்லத்தில் விட்டுவிடுங்கள் எனச் சொல்லலாம்.
ஆனால் அப்படி விட்டால் ஊர் என்ன சொல்லும் என்ற போலிக் கௌரவம் பலருக்கு.

எவ்வாறு உரைப்பது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய இந்தச் சமூகத்தின் பெருமையை?

0.0.0.0.0.

Read Full Post »

>

பழந்தமிழரின் அளவை முறைகள்

Sithi Samira Begam அவர்கள் தனது முகப் புத்தகத்தில் பதிந்த பதிவு. 

முக்கியத்துவம் கருதி இங்கு பகிர்கிறேன். எனது மனமர்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக முக்கியமான பதிவு இது. தொடர்ந்து படித்து வரும்
நண்பர்கள் இந்த பதிவினை அச்செடுத்து வைத்துக் கொள்ளலாம். சித்தர்களின்
பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம்
இருக்கிறது.

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய
அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து
கொண்டிருக்கிறது.

எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும்
இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்…

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

அறுபது விநாடி = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை… எனவே
இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்…

Read Full Post »

>நேற்று  ஆடிப்பிறப்பு. சத்தமின்றி வந்து போய்விட்டது.
“ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே…” என

சின்ன வயதில் சோமசுந்தரப் புலவரின் பாடலைப் பாடி விளையாடி மகிழந்தது ஞாபகத்தில் அகலாது நிற்கிறது.

இப்பொழுதும் ஆடிப்பிறப்பு வருகிறது. ஆனால் என்னைப் போலவே பலருக்கும் ஞாபகத்தில் வருவதில்லை. விடுதலையும் கிடையாது. ஆனந்தமும் கிடையாது.

ஆனால் அதற்காக எமது பாரம்பரிய விழுமியங்களை விட்டுவிட முடியாது.

சென்ற வருடம் ஜனா எழுதிய கட்டுரையின் தொடுப்பு கீழே உள்ளது. படித்துப் பாருங்கள். நிச்சயம் திருப்தியடைவீர்கள்.

யாழ்ப்பாணக் காலாசாரத்தில் நிலைத்து நிற்கும் ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாடலை எழுதிய சோமசுந்தரப் புலவர் பற்றிய விக்கிபீடியா பதிவுக்கு கீழே கிளக் பண்ணுங்கள்.

பாடலுக்கு நன்றி

ஈழத்து முற்றம்

சோமசுந்தரப் புலவரின் சிறுவர் செந்தமிழ் நூல், நூலகத்தில் 276 ஆவது புத்தகமாக பதிவேற்றப்பட்டுள்ளது.  டிப்பதற்கு கீழுள்ள தொடுப்பை கிளிக் ‘நூலகம்’ இணையத்தளத்தில் படிக்க கீழே பண்ணுங்கள்.

Read Full Post »

>நெஞ்சு வலி என்றால் பயப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஏனெனில் எந்த நெஞ்சுவலியானாலும் அதனை மாரடைப்பு என்றே பலரும் கருதுகிறார்கள்.

இதயத்தின் அறைகளுக்குள் எந்த நேரமும் இரத்தம் நிறைந்திருக்கிறது ஆனாலும் அதனை இயக்கும் தசைநார்களுக்கு அந்த இரத்தம் நேரடியாகக் கிடைப்பதில்லை.

இரண்டு சிறிய இரத்தக் குழாய்கள் – கொரனரி நாடிகள் (Coronary arteries) மூலமே கிடைக்கின்றன. இவை முடியுரு நாடிகள் எனப்படுகின்றன.

இவற்றில் ஒன்றில் அல்லது அவற்றின் கிளைகளில் இரத்தம் செல்வது தடைப்பட்டால் அப் பகுதியில் உள்ள இருதயத்தின் தசை நார்களுக்கு இரத்தம் போதிய அளவு கிடைக்காது.

அந்நிலையில் தசை நார்களுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது போய்விடும்.
இது நெஞ்சுவலியாக வெளிப்படும்.

அல்லது தசை நார்களுக்கு இரத்த ஓட்டம் அடியோடு தடைப்படலாம்.

அந் நிலையில் இப்பகுதியிலுள்ள தசைகள் இறந்துவிடவும் கூடும்.

இதுதான் Myocardial Infarction)  எனப்படுகிறது. இதயத் தாக்குகை எனவும் சொல்லலாம். ஆனால் மாரடைப்பைத் தவிர வேறு காரணங்களாலும் நெஞ்சுவலி ஏற்படுகிறது.

மாரடைப்பின் அறிகுறிகள்

  • கடுமையான வலி திடீரென உங்கள் மார்பில் ஏற்பட்டால் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம்.

நெஞ்சை இறுக்குவதுபோல
அமுக்குவது போல,
பிழிவதுபோல,
அல்லது பாரம் ஏற்றியது போல இருந்தால் அது மாரடைப்பாக இருக்கலாம்.

  • வலியானது பொறுக்க முடியாத கடுமையானதாக இருக்கும்.
  • இவ்வலி பெரும்பாலும் 20 நிமிடங்கள் அல்லது அதற்கு அதிகமாக நீடிக்கும்.
  • இவ்வலி பெரும்பாலும் நடுமார்பின் உட்புறத்தே ஏற்படும்.
  • வலி அவ்விடத்தில் மட்டும் மட்டுப்பட்டு நிற்காமல்

இடது தோள்மூட்டு,
இடதுகை, தொண்டை,
கழுத்து,
நாடி,
முதுகு போன்ற இடங்களுக்கும் பரவக் கூடும்.

  • வலி ஏற்பட்டபோது செய்து கொண்டிருந்த கடுமையான வேலையை நிறுத்தினாலோ ஓய்வு எடுத்தாலோ கூட மாரடைப்பின் வலி தணியாது.
  • வலியுடன் கடும் வியர்வை, மயக்கம், களைப்பு, இளைப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றலாம். 
  • வலி இல்லாமல் கூட ஒரு சிலருக்கு மாரடைப்பு வருவதுண்டு.

நெஞ்சுவலிக்கு வேறு காரணங்கள்

  • நெஞ்சு வலி ஏற்படுவதற்கு எமது நெஞ்சறையில் உள்ள இருதயம் மட்டுமின்றி, அதிலிருந்து வரும் நாளங்கள், நுரையீரல், களம் போன்ற உறுப்புகளும் காரணமாகலாம்.
  • அத்துடன் நெஞ்சுச் சுவரில் உள்ள தசைநார்கள், சவ்வுகள், எலும்புகளிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம்.
  • நெஞ்சுக்குக் கீழே உள்ள வயிற்றறையில் உள்ள இரைப்பை, ஈரல் போன்றவற்றிலிருந்தும் நெஞ்சு வலி ஏற்படலாம்.
பரிசோதனைகள்

  • நெஞ்சுவலிக் காரணம் மாரடைப்பா அல்லது வேறு காரணமா என்பதை சில தருணங்களில் மருத்துவர்களால் கூட கண்டறிய முடியாது. நிச்சமாகக் கண்டறிய ஈசீஜி (ECG) பரிசோதனை உதவும். 
  • ஆனால் ஈசீஜியில் தெளிவாகத் தெரிய முன்னரே இருதய நொதியங்களைப் பரிசோதிக்கும் இரத்தப் பரிசோதனைகள் உதவும். 

காரணம் எதுவானாலும் உங்களால் தீர்மானிக்க முடியாது.
மருத்துவ ஆலோசனை பெறுவதே ஒரே வழி.

இதய நோய்களுக்கு வாய்ப்பளிக்கும் காரணிகள்

இருதய நோய்கள் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் சில மனிதர்களால் கட்டுப்படுத்தக் கூடியவை. ஏனையவை கட்டுப்படுத்த முடியாதவை.

1.கட்டுப்படுத்தக் கூடிய காரணிகள்

  • உயர் இரத்தஅழுத்தம், 
  • நீரிழிவு, 
  • புகைத்தல், 
  • இரத்தத்தில் அதிக கொழுப்பு (கொலஸ்டரோல்), 
  • தவறான உணவு முறைகள், 
  • அதீத உடற் பருமன், 
  • மதுபானம், 
  • உடலுழைப்பின்மை 

ஆகியவற்றைக் கூறலாம். இவை யாவும் உங்களால் கட்டுப்படுத்த அல்லது மாற்றக் கூடியவையாகும்.

2. கட்டுப்படுத்த முடியாத காரணிகள்

  • வயது அதிகரிக்க அதிகரிக்க மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். 
  • பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமாகும். 
  • ஆனால் மாதவிடாய் முற்றாக நின்ற பின் அவர்களுக்கும் அதிகரிக்கும்.  
  • பரம்பரை அம்சங்களும் காரணமாகலாம். 

இவை மட்டுமே .

எனவே மாரடைப்பு வராமல் தடுப்பது பெருமளவு உங்கள் கைகளிலேயே தங்கியிருக்கிறது.

மாரடைப்பு தொடர்பான எனது ஏனைய கட்டுரைகளுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா? பத்தியில் 
‘நெஞ்சு வலிகள் எல்லாம் மாரடைப்பல்ல’ 
என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையின் மீள்பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>நீரிழிவின் முன்நிலை என்றால் என்ன?

நீழிழிவு பற்றி எல்லோரும் அறிவர். ஆனால் நீழிழிவின் முன்நிலை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ தெரியாது. நீரிழிவின் முன்நிலை (Prediabetes) என்பது முழுமையான நீரிழிவு தொடங்குவதற்கு முந்திய ஆரம்ப கட்டமாகும்.

குழந்தைகள் பாடசாலைக்குப் போக ஆரம்பிப்பதற்கு முன்னர் ‘முன்நிலைப் பள்ளி’க்குப் (Pre School) போகிறார்களே அது போன்றது. ஆரம்பப் பாடசாலை எனவும் சொல்வர். அதே போல ‘நீரிழிவின் ஆரம்பநிலை’ எனவும் சொல்லலாம்.

இரவு உணவு உட்கொண்டபின் காலை வரை எதுவும் உட்கொள்ளாமல் இரத்தப் பரிசோதனை செய்யும்போது, சீனியின் அளவு (Fasting blood sugar) 110 முதல் 125 வரை இருந்தால் `நீரிழிவின் முன்நிலை’ எனலாம். இது 126க்கு மேல் அதிகரிக்குமாயின் அவருக்கு நீரிழிவு எனத் தெளிவாகக் குறிப்பிடலாம்.

மற்றொரு பரிசோதனையும் செய்யப்படுவதுண்டு, இதனை குளுக்கோஸ் ரொலரன்ஸ் டெஸ்ட் (Oral Glucose Tolerance test -OGTT) என்பர்.

50 முதல் 75 கிராம் வரை அளவுள்ள குளுக்கோஸ் கலந்த நீரைக் குடிக்கக் கொடுத்துவிட்டு 2 மணிநேரத்தின் பின் குருதி குளுக்கோஸ் அளவை கணிப்பர்.

இது 140 ற்குக் கீழ் இருந்தால் அவருக்கு நீரிழிவு இல்லை. 140 முதல் 199 வரை இருந்தால் அது நீரிழிவின் முன்நிலை (Prediabetes) ஆகும். 200க்கு மேல் இருந்தால் அவருக்கு நீரிழிவு இருக்கிறது என நிச்சயம் சொல்லலாம்.


நீரிழிவின் முன்நிலை பற்றி முன்பும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதுவே ஹாய் நலமா? புளக்கின்  முதற்பதிவும் (26.6.2007) கூட. இது மூன்று ஆண்டு நிறைவைக் குறிக்கும் பதிவு. பழைய பதிவு பல மாற்றங்களுடன் உங்கள் பார்வைக்கு.

யாருக்குப் பரிசோதனை அவசியம்

உங்களுக்கு வயது 45ற்கு மேல் என்பதுடன் உங்கள் எடையும் அதீதமானது எனில் (Obese) உடனடியாகச் செய்து பார்ப்பது அவசியம். எடை சரியான அளவில் இருந்தால் கூட அடுத்த முறை மருத்துரிடம் செல்லும்போது இதை எப்பொழுது செய்வது என்பது பற்றிக் கலந்தாலோசியுங்கள்.

இன்று பலரது எடைகளும் அதீதமாக அதிகரித்து வருகிகறது.

இதன் காரணமாக  எடை அதீதமாக உள்ளவர்களுக்கு பிரஸர், குருதியில் அதிகரித்த கொலஸடரோல், அதிகரித்த ரைகிளிசரைட் (Triglyceride) அளவு, நல்ல கொலஸ்டரோல் ஆன HDL குறைந்திருப்பது சேர்ந்திருந்தால் 45 வயது எனக் காத்திருக்காது சந்தேகம் ஏற்படும் போது மருத்துவர்கள் செய்யும்படி ஆலோசனை கூறுவர்.

இதைத் தவிர தமது பரம்பரையில் நீரிழுவு உள்ளோர், கர்ப்பமாயிருக்கும்போது நீரிழிவு வந்த பெண்கள்(Gestational Diabetes)

பழைய பெயர்கள்

முன்பு இதனை Impaired Fasting Glucose என அழைத்தார்கள். அல்லது Impaired Glucose Tolerance என்றும் சொன்னார்கள்.

ஆயினும் மருத்துவப் பின்னணி அல்லது மருத்துவச் சொற்களில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கும் தெளிவாக அதன் கருத்தைப் புலப்படுத்துவதற்காக புதிய பெயர் கொடுக்கப்பட்டது.

நீரிழிவின் முன்நிலையின் பின் விளைவுகள்

நீரிழிவின் முன்நிலையில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் வருவதற்கான சாத்தியம் சாதாரண மனிதர்களை விட1.5 மடங்கு அதிகமாகும். ஆயினும் முழுமையான நீரிழிவு வந்தவர்களுக்கு இது 2 முதல் 4 மடங்குகள் அதிகமாகும்.

இந்த நிலையில் உள்ளவர்கள் பொருத்தமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம். அல்லது அதுவராமல் நீண்டகாலம் தள்ளிப்போடலாம் என்பது இப்பொழுது ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது.

அத்துடன் மேற் கூறிய மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சாத்தியத்தையும் குறைக்கும். எனவே

எப்படித் தடுப்பது

உங்களுக்கு `நீரிழிவின் முன்நிலை’ இருக்குமாயின் அது நீரிழிவு நோயாக மாறாமல் தடுப்பதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.

  1.  வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் குருதியில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்துவது
  2.  மருந்துகள் உட்கொள்வதன் மூலம் செய்வது.

வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பன எவை?

    * உணவு முறையில் மாற்றங்கள் செய்தல்,

    * எடையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல்.

    * அது முடியாது விட்டால் குறைந்தது தமது எடையில் 5முதல் 10 சதவிகிதம் வரை குறைக்க வேண்டும்.

    * தினசரி உடற்பயிற்சி செய்தல். தினசரி முடியாவிட்டால் கிழமையில் 5 நாட்களுக்காவது 30நிமிடம் செய்ய வேண்டும். துரித நடைப்  பயிற்சி நல்லதாகும்.
ஆகியனவே அவை.

இவற்றை ஒழுங்காகக் கைக்கொண்டால் அவருக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு 43 சதவிகிதத்தினால் குறைகிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மேலதிக நலன்கள்

இதில் முக்கியமான விடயம் என்னவெனில், வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடிக்கின்ற காலம் வரைதான் நீரிழிவு வருவதற்கான சாத்தியம் குறையும் என்பதில்லை. அவற்றைக் கைவிட்ட பின்னரும் கூட அது நீடிக்கிறது.

உதாரணமாக இந்த ஆய்வு ஏழு வருடங்களுக்குச் செய்யப்பட்டது. வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடித்த அந்த நான்கு வருடங்களுக்கு மட்டுமல்ல அவற்றைக் கைவிட்ட பின்னரும் கூட மேலும் 3 வருடங்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு குறைந்திருந்தது என்பது நம்பிக்கை அளிக்கும் முடிவாகும்.

வாழ்க்கை முறை மாற்றங்களைச் செயற்படுத்த முடியாதவர்களுக்கும் அவற்றை ஓரளவு கடைப்பிடித்தும் குருதியில் சீனியின் அளவைக் குறைக்க முடியாதவர்களுக்கும் மருந்துகள் உதவக்கூடும்.

மருந்துகள் உதவுமா?

மெட்போமின் (Metformin), அகாபோஸ் (Acarbase), ரொஸிகிளிட்டசோன் (Rosiglitazone) ஆகிய மாத்திரைகள், நீரிழிவு வராமல் தடுப்பதற்கு உதவுகின்றன. இதுவும் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, நீரிழிவு வரவாய்ப்புள்ளவர்கள், மேற்கூறியவற்றில் ஒரு முறையை வைத்திய ஆலோசனையுடன் கடைப்பிடிப்பது உசிதமானது.

வேறு நோய்களுக்கான மருந்துகள்.

அத்துடன், பிரஸர் இருந்தால் அதற்கு உபயோகிக்கும் மருந்துகளையும் அவதானமாகத் தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில், அடனலோல் (Atenolol), எச்சிடி (HCT) ஆகியனவும் அவை சார்ந்த மருந்துகளும் நீரிழிவு வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கக்கூடும்.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் நான் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »