Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for நவம்பர், 2010

>வண்டினம் ரீங்காரிக்கவில்லை
வாகனங்கள் இரையவில்லை
வீதியில் மனிதரில்லை
சந்தடி ஏதும் இன்றி
எங்கணும் அமைதி ஓச்சல்.

புலர்ந்ததெனச் சேவல் கூவவில்லை
பேடுகள் கதகதக்கும் கூட்டினுள்ளே
அடையெனப் பொய்யாய் சிறகு மூடி
அடங்கியே கிடந்தன.

காகங்கள் கரையவில்லை
குருவிகள் கத்தவில்லை
குயில்களும் இசைக்க மறந்து
துயில் நீங்க மறுத்துப் படுத்தன.

நாய்கள் குரைக்கவில்லை
நாரைகள் ஒளிந்த இடம்
எங்கெனப் புரியவில்லை.
சோவெனும் காற்றின் ஓசை
கேட்பதற்கு யாருமில்லை.

புள்ளினம் விழிக்கவில்லை
புலரும் வேளை வந்த போதும்
பள்ளி செல்லும் சிறுவர் கூட்டம்

பாதையில் இல்லவேயில்லை,

ஆதவன்முடங்கிக் கிடந்தான்
மஞ்சினைப் போர்வையாக்கி
முகிலினுள் வெக்கை உண்டா?

மலையகக் குளிரில் மரத்து
‘எங்கணும் கண்டதில்லை இத்தனை குளிரை’
என்றனன் நெருப்புக் குழம்பை
வயிற்றினில் நிறைத்து வைத்தவன்.

அன்டாடிக்கா பனிப் பாறைகள்
சைபீரியா குளிரையும் கண்டதில்லையோ
டொரன்டோவும் பீற்றர்ஸ்பேர்க்கும்
போய் வருவது மறந்து போயிற்றோ?

நித்தமும் சுற்றுலா போவோன்
இவ்விடம் முடங்கியடங்கி விழித்த வேளை…

அலைகளை மேவிஎழுந்தான்.
அடிவானம் சிலிர்த்து மகிழ்ந்தது
மீனவர் வாடி திரும்ப வழியும் கணடனர்
கடற்கரை ஓரம்
மெல்லென எட்டிப் பார்த்தான்
அறுகம்பே என பெயர் காதில் விழுந்தது.

ஆறுமுகம் குடா. எமது கடலோரம்
அறுகம் பே ஆன செய்தி தெரிந்தபோது
களிகொண்டெழுந்த சூரியன்
துயர் மூழ்கி ஒளிந்து கொண்டான்
மேனி அடங்க.

புகைப்படங்களும் வரிகளும்:-
எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »

>”சீனி வருத்தம் வந்தாப் பிறகு நான் பழங்கள் சாப்பிடுறதை விட்டிட்டன்’ என்று யாராவது சொன்னால் அதைவிட மோட்டுத்தனமான கருத்து வேறு எதுவும் இருக்கமாட்டாது.

“அதேபோல பழங்கள் இனிப்பு அல்லவா, எனவே நீரிழிவு நோய்க்கு கூடாதுதானே?” என யாராவது கேட்டால் அதைத் தவறு என்று சொல்லவும் முடியாது.
 
ஏனெனில் பழங்களில் பிரக்கோஸ் (Fructose) என்ற இனிப்பு இருக்கிறது. (சீனியில் இருப்பது சுக்கிறோஸ்- Sucrose). இனிப்புள்ள உணவு என்றால் அதில் கலோரிச் சத்து இருக்கும்தானே. அத்துடன் உணவில் சீனிச்சத்து அதிகரித்தால் நீரிழிவாளர்களின் இரத்தத்திலும் அதிகரிக்கும் என்பதும் உண்மைதான்.

ஆனால் அதே நேரம் பழங்களில் எமது ஆரோக்கியத்திற்கு உகந்த நல்ல போசனைப் பொருட்கள் பலவும் உண்டு. நிறைய விட்டமின் சி, விட்டமின் ஏ, அன்ரி ஒக்ஸசிடனட், நார்ப்பொருள் எனப் பல. 

தோடையினத்தைச் சேர்ந்த புளிப்புச் சுவையுள்ள பழங்களில் இருப்பது கரையக் கூடிய நார்ப் பொருள் (Digestible fiber)ஆகும். இந்தக் கரையக் கூடிய நார்ச் சத்துகள் எமது குருதியில் உள்ள கொலஸ்டரோலைக் குறைக்க உதவும். பெரும்பாலான நீரிழிவு நோயாளர்களுக்கு கொலஸ்டரோல் அதிகமாகவே இருக்கிறது. எனவே உணவுக் கட்டுப்பாடுகள், உடற் பயிற்சி ஆகியவற்றுடன் பழங்களை உண்பதும் அவர்களது கொலஸ்டரோல் அளவைக் குறைக்க உதவும்.

பழங்களைத் தவிர அரிசி, ஓட்ஸ், போன்ற தானியங்களில் உள்ள தவிட்டிலும், பயறு, பருப்பு, சோயா, கடலை போன்ற அவரையின உணவுகளிலும் கரையக் கூடிய நார்ப்பொருள் இருக்கிறது. எனவே அவையும் நீரிழிவு நோயாளருக்கு நல்லது.

ஏனைய பல பழங்களில் கரையாத நார்ப்பொருள் (non digestible fiber)உண்டு. இவை நாம் உண்ணும் உணவுகள் சமிபாடடையும் வேகத்தைக் குறைக்கின்றன. அதனால் ஊட்டச் சத்துகள் குடற் தொகுதியால் உறிஞ்சப்படுவதையும் தாமதப்படுத்துகின்றன. இதனால் நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்தில் உணவின் பின் சீனியின் அளவு தீடீரென ஏறுவதையும் தடுக்கிறது.

“பழங்களில் நார்ப் பொருள் அதிகமாக இருப்பதால் அதை நான் நிறையச் சாப்பிடலாமா” எனக் கேட்டால் அதுவும் தவறுதான்.

நல்லது என்பதற்காக எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக உண்பது தவறு.

தினமும் இரண்டு பரிமாறல் அளவிற்குப் பழங்களை உண்பது நல்லது. ஒரு பாரிமாறல் என்பது சராசரியாக 15 கிறாம் மாப்பொருள் (Carbohydrate) கொண்டதாக இருக்கும். இதில் கிட்டத்தட்ட 60 கலோரிச் சத்து இருக்கும்;.

ஒரு பரிமாறலிலுள்ள பழங்கள் சிலவற்றின் அளவானது

ஆப்பிள் நடுத்தர சைஸ் ½
கதலி நடுத்தர சைஸ் 1 பழம்
ஆனைவாழை, கப்பல் ½ பழம்
பப்பாளி 3 துண்டுகள்
மாம்பழம் 1 ½  துண்டு
பேரிச்சம்பழம் 3
திராட்சை 15
ஆரஞ்சு 1
மாதுளை ½
பிளம்ஸ் 3
அன்னாசி 1 ½ துண்டுகள்
வோட்டர் மெலன் 1 ¼ கப்
கொய்யா நடுத்தரம் 1
அன்னாசி ¾ அங்குல தடிப்பான துண்டுகள் 1 ½

மேற் கூறியவற்றில் ஏதாவது ஒரு கூற்றை தினமும் இரண்டு தடவைகள் சாப்பிடலாம். ஏனைய பழங்களையும் அவற்றின் கலோரிப் பெறுமானத்தை அறிந்து அதற்கு ஏற்ப உண்ண வேண்டும்.

எனவே நீரிழிவு நேயாளர்கள் பழங்கள் சாப்பிடுவது அவசியம். மேற் கூறிய வழிகாட்டி உங்களுக்கு உதவும்.

தினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா?’ பத்தியில் 
நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>இன்றைய (21.11.2010) வீரகேசரிகேசரி வாரவெளியீடு பத்திரிகையில் என்னுடனான நேர்காணல் வெளியாகியுள்ளது. நேர்கண்டவர் திரு.வி.எஸ்.நவமணி ஆகும்.

“தமிழ்ப் பேசும் மக்களுக்கு முழு உரிமை இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இருக்கவில்லை” என்ற தலையங்கத்தில் வெளியாகியுள்ளது.

நேர்கண்ட திரு.வி.எஸ்.நவமணிஅவர்களுக்கும், அதன் பிரதம ஆசிரியர் வ.தேவராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

வீரகேசரிகேசரி வாரவெளியீடு பத்திரிகையின் ஏனைய நண்பர்களுக்கும் நன்றி.

இன்று 7ம் பக்கத்தில் இது வெளியாகியுள்ளது.

ஒரு இலக்கியவாதியான எனது கருத்துக்கள் இங்கு வெளியாகியுள்ளது.

நண்பர்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

Read Full Post »

>

இந்தப் பெண்ணின் கையின் விரலின் நகத்திற்கு அண்டிய மொளியில் கட்டி போன்ற இறுக்கமான ஒரு வீக்கம் தென்படுகிறது. இதனை மருத்துவத்தில் ஹெர்படன்ஸ் நோட் Herbedens Node என்பர்.

எமது பெரு விரல் தவிர்ந்த கை விரல்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு மூட்டுக்கள் (மொளிகள்) உள்ளன. இவை அசைவதின் மூலமே எமது விரல்களை மடக்கவும் விரிக்கவும் முடிகிறது. பொருட்களைப் பற்றிப் பிடிக்க இவை அவசியமானவையாகும்.

இவற்றை Inter Phalangeal Joints என்பர். 

இதில் கடைசியாக உள்ள Distal Phalangeal Joints(DIP) மூட்டு எனப்படும். 
இந்த மூட்டில் ஏற்படும் வீக்கம் காரணமாகவே ஹெர்படன்ஸ் நோட் தோன்றுகிறது.

ஹெர்படன்ஸ் நோட் ஒருவருக்கு இருந்தால் அவரது பிள்ளைகளிலும் வரக் கூடிய சாத்தியம் உண்டு.

பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. அதிலும் ஆண்களை விட பெண்களில் அதிகம்.

ஹெர்படன்ஸ் நோட் என்பது ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் (Osteoarthritis) என்ற ஒரு வகை மூட்டு நோயின் அறிகுறியாகும்.

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ்  வயதாகும்போது மூட்டுகளின் தேய்மானத்தால் ஏற்படும் நோய் இதுவெனப் பல காலம் கருதப்பட்டது.

அது உண்மைதான். ஆயினும் அதற்கு மேலாக எலும்பை மாத்திரமின்றி, அதைச் சுற்றியிருக்கும் குருத்தெலும்பு, சைனோவியம் எனப்படும் சவ்வு, சுற்றியிருக்கும் தசைநார்கள் என பலவற்றையும் தாக்கும் ஒரு நோயாக இருக்கிறது.

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் சில அறிகுறிகள்

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் உள்ளவர்களில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும், அது முக்கியமாக இடுப்பு எலும்பு, முழங்கால், பெருவில் ஆகியவற்றையே அதிகம் தாக்குகிறது.

  • மூட்டுகளில் வலி, வீக்கம், இறுக்கம் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் தோன்றும். 
  • அவற்றின் உள்ளே நீர் சுரக்கக் கூடும். நாட் செல்ல, 
  • அவற்றை ஆட்டும்போது மூட்டுகளினுள்ளே கொ கொர எனச் சத்தம் எழுவதுண்டு.

எடை அதிகரிக்கும்போது முக்கியமாக முழங்கால், இடுப்பு மூட்டுகளில் நோயின் தாக்கம் அதிகரிக்கும்.
மாறாக நோயுள்ளவர்கள் தமது எடையைக் குறைத்தால் நோயின் தாக்கம் குறையும்.

நடப்பதற்கு சிரமம் உள்ளவர்கள் நோயுள்ள பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் கைத்தடி பிடித்து நடப்பது நோய் மேலும் தீவிரம் அடைவதைக் குறைக்கும்.

முழங்காலில் ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் இருப்பவர்கள் நடப்பதும், இடுப்பெலும்பு, அடி முதுகு ஆகியவற்றில் இருப்பவர்கள் நீந்துவதும் நல்ல பயிற்சியாகும்.

ஆயினும் கழுத்தெலும்பு வலி உள்ளவர்களுக்கு நீச்சல் நோயை அதிகரிக்கலாம்.

மருத்துவம்

  • நோயினால் மூட்டுகளில் ஏற்படும் வலியைத் தணிக்க சாதாரண பரசிட்டமோல் மாத்திரைகள் போதுமானதாகும். 
  • கடுமையான வலிநிவாரணிகள் தேவைப்படாது. 
  • வலிநிவாரணி ஜெல் மருந்துகளை நோயுள்ள மூட்டுகளின் மேல் பூசுவது வலியைத் தணிக்க உதவும். பூச்சு மருந்தாக வெளியே பூசுவதால் வயிற்று எரிவு, பிரஸர் அதிகரித்தல் போன்ற பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.
நான் எழுதி வார வீரகேசரியில் 17.10.2010 வெளிவந்த கட்டுரையின் மீள் பிரசுரம். 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>

எழுத்தளாரும், உளவியல் ஆலோசகரும், நடிகரும், இளைப்பாறிய கல்வி அதிகாரியும் இன்னும் ஆற்றல்கள் பல நிறைந்தவருமான திருமதி.கோகிலா மகேந்திரன் அவர்கள் இன்று அகவை 60 இல் கால் பதிக்கிறார். 

எழுத்துலக நண்பர்கள் சார்பிலும், எனதும் எனது குடும்பத்தினரதும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீடுழி நிறைவாக வாழ்ந்து கலை இலக்கிய உளவியல் பணிகள் செய்ய வாழ்த்துகிறேன்.

இன்றைய தினக்குரல் பத்திரிகையில் எனது மற்றொரு நண்பரான புலோலியூர் இரத்தினவேலோன் கோகிலா பற்றி எழுதிய கட்டுரையை நன்றியறிதலுடன் இங்கு பிரசுரிக்கிறேன்.

 அகவை அறுபதில் கோகிலா மகேந்திரன்

artical-02எழுபதுகளின் நடுக்கூற்றில் எழுத ஆரம்பித்த ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கு”ஈழநாடு’ பத்திரிகையும் “சுதந்திரன்’ பத்திரிகைக் காரியாலயத்திலிருந்து வெளியான “சுடர்’ சஞ்சிகையும் “மல்லிகை’ மாசிகையும் களம் அமைத்துக் கொடுத்ததில் கணிசமான பங்காற்றியிருந்தன. அக்களங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி இலக்கிய உலகில் இனங்காணப்பட்டவர்களுள் ஒருவராகக் கொள்ளத்தக்க கோகிலோ மகேந்திரன் இன்று தனது அறுபதாவது அகவையைப் பூர்த்தி செய்கின்றார்.
எண்பதுகளின் ஆரம்பத்தில், கணக்கியல் துறை மாணவனாகக் கொழும்பில் நான் பயின்றுகொண்டிருந்த காலகட்டங்களில் சுடரில் வெளியான “குரூர ரசனைகள்’ என்ற அவரது சிறுகதையினைப் படித்ததன் பின்னரே அவரது அறிமுகம் எனக்குக் கிட்டியதாக ஞாபகம். கடித மூலம் அக்கதைக்கு நானெழுதிய விமர்சனமே எம்தோழமையின் முதற்பாலமாக விளங்கிற்று எனலாம். தொடர்ந்து என்கதைக்கு அவரும், அவரது கதைகளுக்கு நானுமாக எழுதிய கடிதங்களே எம் நட்பினை இடைவெளியின்றி நீடித்து வளர்த்தது. ஓர் ஆசிரியையாக நின்று அவர் வழங்கிய அறிவுரைகளும் கருத்துகளும் மாணவனான எனக்கு நம்பிக்கையினை ஏற்படுத்தி நின்றன. தெண்மையைத் தந்தன.
தவறுகளைத் தவறாது சுட்டிக்காட்டி தட்டிக்கொடுக்கும் அவரது தனிப்பட்ட இயல்பு தரமான இலக்கியவாதியாக மிளிர எனை இட்டுச்சென்றதற்கும் அப்பால், இற்றைவரை சுமார் மூன்று தசாப்தகாலங்களாக எம்நட்பு தொடர்வதற்கும் வித்திட்டது என்றால் அது மிகையாகாது.
எங்கள் இலக்கிய நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொள்ள இன்றும் பரஸ்பரம் ஆக்கங்களை மதிப்பிட்டுக்கொள்ளும் வழக்கம் சுருதி பேதங்களின்றித் தொடர்வதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
நான், கோகிலா மகேந்திரனைச் சந்தித்த காலங்களில் எதையுமே சாதித்தவனல்லன். ஆயினும் “முரண்பாடுகளின் அறுவடை’ எனும் தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவிற்கு விமர்சகனாக என்னையும் அழைத்திருந்தமை “ஊக்குவித்து நிற்கும்’ அவரது பண்பிற்கு சான்று பகர்வது. தனியாளாக நின்று எனது சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளிக்கொணர முடியாது தத்தளித்து நின்ற அந்த நாட்களில், தனது சிறுகதைகளையும் சேர்த்து “அறிமுக விழா’ எனும் நூலினை அறுவடைசெய்த அவரது துணிச்சல் என்றும் இலக்கிய உலகில் பதிவு செய்யப்படத்தக்கது.
இத்தகு தனிப்பட்ட இயல்புகளைத் தன்னகத்தே கொண்ட கோகிலா மகேந்திரன் தான் எத்தனித்த துறைகளிலெல்லாம் உச்சம் பெற்றமையே அவரை வெளிச்சம் போட்டுக் காட்டுவது எனலாம்.
பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலை, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி ஆகியவற்றில் தன் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்துகொண்டு 1974 இல் பொலிகண்டி இ.த.க.பாடசாலையில் முதன் நியமனம் பெற்றது முதல் 2007 ஆனி மாதத்தில் வலிகாமம் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக ஓய்வுபெறும் வரையில் அவரது ஒவ்வொரு அடைவானதும் அவரது திட்டமிடுதலையும் கடின உழைப்பையும் விடா முயற்சியினையும் பறைசாற்ற வல்லது.
பணிநிலை வழியாக எய்யப்படும் உச்சமானது பொதுவாக எவருமே விரும்பும் இலக்கெனக் கொண்டால், இலக்கியத்தில் கோகிலா மகேந்திரன் பதித்த தடங்களே மிக முக்கியமானவை.
கவிதை, அறிவியல் கட்டுரை, உருவகம், நடைச்சித்திரம், நூல் திறனாய்வு, உளவியல் கட்டுரை, நாடகம், நாவல், சிறுகதை என இலக்கியத்தின் மூலை முடுக்கெங்கிலும் கோகிலா மகேந்திரனின் எத்தனிப்புகள் மிக விரிவானது. ஆழமானது. வாதங்களும் விளக்கங்களும் கொண்டது. ஈழத்து தமிழ் வாசகர்களின் தரத்தை நீங்காது நினைவில் கொண்டு தன் கருத்துகளை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற சிரத்தையுடன் முழுமனதுடன் அவர் இயங்கி உள்ளார்.
எத்துறையிலும் முதல் எத்தனிப்பிலேயே வெகு அனாயாசமாக அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு விடுவதைக் காணலாம். இதுவே அவரது வெற்றியும் எனலாம்.
1972 இல் “குயில்’ சஞ்சிகையில் வெளியான “அன்பிற்கு முன்னால்’ எனும் சிறுகதையினை இவரது முதலாவது சிறுகதையாகக் கொள்வோமாயின் அண்மையில் தகவத்தின் சிறப்புப் பாராட்டினைப் பெற்ற “தாயகம்’ சஞ்சிகையில் வெளியான “கால் ஒப்பம்’ சிறுகதை வரையில் மொத்தம் 76 சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இக்கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இவரது ஆறு சிறுகதைத் தொகுதிகளாக அறுவடையாகியுள்ளன. இவற்றுள் “பிரசவங்கள்’, “வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்’ ஆகிய இரு தொகுதிகளும் தேசிய சாகித்ய விருது பெற்றமை குறிப்பிடற்பாலது. பின்னைய நூல் வடகிழக்கு மாகாண இலக்கிய விருதினையும் வென்றிருந்தது.
ஈழநாடு பத்திரிகையிலும் சுடர் சஞ்சிகையிலுமாக இவர் பல குறுநாவல்கள், நாவல்களை எழுதியிருப்பினும் “துயிலும் ஒருநாள் கலையும்’, “தூவானம் கவனம்’ ஆகிய இரு நாவல்களுமே நூலுருப் பெற்றுள்ளன. நாடகங்களில் குயில்கள், கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு, அரங்கக் கலையின் ஐம்பதாண்டு ஆகிய மூன்றும் பனுவல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. “விஞ்ஞானக் கதைகள்’ எனும் புத்தகமானது இவரது விஞ்ஞானப் புனைகதை ஆற்றலுக்கே சாட்சியாக வல்லது.
தனது தந்தை,தாயாரை நினைவிற்கொண்டு முறையே “விழிசைச் சிவம்’, “விழி முத்து’ ஆகிய இரு நூல்களையும் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி நினைவாக “தங்கத்தலைவி’ எனும் நூலினையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
இன்றைய பெண் பிரமாக்களுள் அதிகளவில் கோகிலா மகேந்திரன் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறுமளவிற்கு இவரின் எழுத்துகளில் மேவி நிற்கும் அம்சங்களுள் முதன்மையானதாகச் சீர்மியத்தினைக் கொள்ளலாம். தனது சிறுகதைகள், நாவல்களில் எல்லாம் இத்தகு அம்சங்களினூடாகக் கதையினை நகர்த்துவதற்கும் அப்பால் கட்டுரைகளாகவும் சிறுவர்களுக்குப் போதனையாகவும் கேள்வி பதில் உருவிலும் உளவியலை இவர் வாசகரிடையே அடையச்செய்யும் பாங்கு அவருக்கே உரியது. இவ்வகையிலும் இவரது பத்து நூல்கள் அறுவடை செய்யப்பட்டிருப்பினும் எங்கே நிம்மதி (2000), மனமெனும் தோணி (2008), உள்ளப்பெருங்கோயில் (2009) போன்ற பனுவல்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.
பூவும் பொட்டும், இசையும் கதையும், நவசக்தி, கலைக்கோலம், இளவேணில் போன்ற வானொலி சார் நிகழ்வுகள் பலவற்றில் இவர் பங்கு பற்றியிருப்பினும் “சைவநற்சிந்தனையில்’ ஒலித்த இவரது குரலே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. விருந்து, பண்புடையாளர் தொடர்பு, அன்பு, இசை, விதி, இறைவன் எங்கே போன்ற தலைப்புகளில் இவர் ஆற்றிய உரைகள் இன்றும் நினைவுகொள்ளத்தக்கவை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தன் முத்திரையினைப் பதிக்க இவர் தவறவில்லை.
கோகிலா மகேந்திரன் தனது ஆளுமையினை நிரூபித்த மற்றுமோர் பரிமாணமாக அவர் நடித்த நாடகங்களைக் கொள்ளலாம். தனது 1652 வயதிற்குட்பட்ட காலப்பகுதிகளில் மொத்தமாகப் பத்து நாடகங்களில் இவர் நடித்துள்ளார். இதில் “கேள்விகளின் முழக்கம்’ எனும் நாடகம் , வட இலங்கைச் சங்கீத சபையின் “நாடக கலாவித்தகர்’ என்ற பட்டத்தினை இவருக்கு ஈட்டிக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. 
இது தவிர மேலும் 23 நாடகங்களை இவர் எழுதி இயக்கியுள்ளமையினையும் இவ்விடத்தே மனங்கொள்ளல் தகும்.
கோகிலா மகேந்திரனின் இலக்கிய வெற்றிக்கு அவரது மரபணுவும் முக்கிய காரணமாகின்றது. இவரது தந்தையார் சிவசுப்பிரமணியம் நீண்டகாலம் அதிபராகக் கடமையாற்றியவர். பண்ணிசைப் புராண படனத்தில் தேர்ந்தவர். சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற நகுலகிரிப் புராண உரையை ஆக்கியவர். இவரும் சிறிய தந்தையாராகிய உமாமகேஸ்வரனுமே சிறுவயது முதல் கோகிலாவுக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தியதுடன் நெறிப்படுத்தியவர்களுமாவார்கள். 1982 முதல் இந்த நிமிடம் வரை ஏறத்தாழ 275 உரைகளை கோகிலா மகேந்திரன் ஆற்றிட வித்திட்டவர்களாகவும் இவர்களைக் கொள்ளலாம். மேலும் புலவர் பார்வதி நாதசிவம், சைப்புலவர் செல்லத்துரை, அதிபர் அப்புத்துரை போன்ற பலரின் அருகாமையும் இவரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின என்றால் அது மிகையாகாது.
சிறுகதை,குறுநாவல்களில் பரீட்சார்த்த முயற்சியாகச் சிறுகதையின் முதற்பகுதியை அல்லது குறுநாவலொன்றின் முதல் அத்தியாயத்தை ஒருவர் ஆரம்பிக்க, மற்றொருவர் மிகுதியினை எழுதிமுடிக்கும் இணைப்புனைக்கதை முயற்சியில் எண்பதுகளில் தேசியபத்திரிகைகள், மாசிகைகள் ஈடுபட்ட காலகட்டத்தில் கோகிலா மகேந்திரன் அம்முயற்சிகளில் நிறையவே பங்களிப்புச் செய்துள்ளார். அந்த வகையில் “அந்தரங்கம் நினைவுகளில்’, “யுகோதயம்’ போன்ற இவரது முயற்சிகள் கால்நூற்றாண்டு கடந்திருந்தும் நினைவில் கொள்ளத்தக்கவை.
தெல்லிப்பழை கலை இலக்கிய களம் அதன் சொந்த இடத்தில் இயங்கிவந்த காலத்திலும் தற்போது தலைநகரில் தனது நிகழ்வுகளை விரிவுபடுத்தியிருக்கும் வேளையிலும், அது முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளுக்கெல்லாம் மூலவிசையாக நின்று கோகிலா மகேந்திரன் ஆற்றிவரும் பணியும் பங்கும் குறிப்பிடத்தக்கது.
தனது மணிவிழாவை முன்னிட்டு “சோலைக் குயில்’ எனும் மலரை தெல்லிப்பழை கலை இலக்கியக் களத்தினூடு கோகிலா மகேந்திரன் வெளிக்கொணர்ந்துள்ளார். இலக்கியம் முதல் சீர்மியம் வரை, அறுபது வருட காலவாழ்வில் தான் நிகழ்த்திய சாதனைகளை அம்மலரில் தினம் தவறாது அச்சொட்டாக அவர் பதிவு செய்துள்ளார். இவரைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்நூல் உ சாத்துணையாக விளங்கும் என்பதற்கும் அப்பால் தனது ஆளுமை மிக்க வாழ்வியலைப் பிறர் கற்றுக்கொள்ளத்தக்க ஒரு பாடநூல் போலவும் வடிவமைத்திருப்பது வாசகரை வியக்க வைக்கிறது.
இந்நாட்களில் பெரும்பாலும் ஒரு சீர்மியராகவே கோகிலா மகேந்திரன் அறியப்படும் சூட்சுமமானது,பரிபூரண மனிதரை இந்நாட்டில் உருவாக்க வேண்டும் எனும் கோகிலா மகேந்திரனின் பெரிய கனவின் வெளிப்பாடகவே அமைகின்றது.
தனது வெற்றி பெற்ற வாழ்வின் உற்ற துணையான, ஓய்வுபெற்ற அதிபர் கி.மகேந்திரராசாவுடனும் புதல்வன் கலாநிதி ம.பீரவீணனுடனும் அவுஸ்திரேலியாவிற்கு அவர் மிகவிரைவில் குடியகலவுள்ளார் எனும் செய்தியினை நிர்ப்பந்தம் கருதி ஏற்றுக்கொள்ள வேண்டியே உள்ளது.
புகலிடம் மாறினும்,மாறாத புகழுடன் அவர் நீடுவாழ வேண்டி “தினக்குரல்’ வாயிலாக நாமும் வாழ்த்துவோமாக!
நன்றி தினக்குரல் :- 
இணைப்பிற்கு

Read Full Post »

>சந்ததிகளை இழக்கும் அழிவுப் பாதையில் மனித இனம்.
ஆண்ணினம் மலடாகிக் கொண்டு போகிறதா?

ஆண்மை என்பது என்ன?

பரந்து விரிந்த தோள்கள், வலுவான புஜங்கள், தடித்த அடர்த்தியான மீசை. உறுதியான உடல். இவ்வாறு பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட உறவின் போது துணையைத் திருப்பதிப்படுத்துவது ஒன்றேதான் ஆண்மை என ஒவ்வொரு ஆணும் எண்ணுகிறான்.

முடியாதபோது இவன் ஆண்மையற்றவன் எனத் துணையும் தூற்றுகிறாள்.  
ஆனால் ஒரு ஆணின் ஆண்மைத் தன்மைக்கு அத்தாட்சியாக இருப்பது அவனது விந்திலுள்ள (Sperm Count) விந்தணுக்களின் எண்ணிக்கையும் ((Seminal fluid) அதன் தரமும்தான்.

விந்திலுள்ள கோடிக்கான விந்தணுக்களில் ஒன்று மட்டுமே ஏனையவைகளுடன் நீச்சல் போட்டியிட்டு முந்திச் சென்று பெண்ணின் சூலகத்திலிருந்து வெளிவரும் முட்டையுடன் இணைந்து கருவை உண்டாக்கும்.

விந்தணுக்கள் தரமானதாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தால்தான் அவனால் தகப்பன் ஆகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. மலடன் ஆகாது தப்பி ஆண்மையுள்ளவன் என நிரூபிக்க முடியும்.

‘மலடி மலடி என வையகத்தார் ஏசாமல்..’ என்றொரு திரைப் பாடல் முன்பு பிரபலமாக இருந்தது.

ஆனால் இன்றைய நிலையில் ‘மலடன் மலடன் என வையகத்தார் ஏசாமல்..’ என தங்களது ஆரோக்கியத்தையும் ஆண்மையையும் காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் ஆண்கள் இருக்கிறார்கள்.

விந்தணுக்களின் வீழ்ச்சி

ஆரோக்கியமான ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கையானது ஒரு மில்லிலீட்டர் விந்தில் 40 மில்லியன் இருக்க வேண்டும். பொதுவாக ஆண் உறவின்போது வெளிப்படுத்தும் விந்து 2-6 மில்லிலீட்டர் அளவாக இருக்கும். 1940 களில் இந்த எண்ணிக்கை 100 மில்லியனுக்கு மேல் இருந்தது. ஆயினும் இன்று சராசரியாக 60 மில்லியனாகக் குறைந்து விட்டது.

ஆனால் மிகவும் கவலைப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இன்றைய இளம் வயது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் குறைந்து வருவதுதான்.

இன்றுள்ள வாலிபர்களில் 15 முதல் 20 சதவிகிதமானவர்களின்  விந்தணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியனுக்கு குறைவாக இருப்பது நல்ல செய்தியல்ல.

அத்துடன் அவர்கள் உற்பத்தி செய்யும் விந்தணுக்களில் தரமும் தாழ்ந்துவிட்டது.

5 முதல் 15 சதவிகிதமானவை மட்டுமே சாதாரண (Normal) நிலையில் இருக்க மிகுதி யாவும் அசாதாரண (Abnormal) விந்தணுக்களாக இருக்கின்றன.

இது இனவிருத்திக்குப் போதாது.

ஏனைய பாலூட்டிகள்

ஏனைய பாலூட்டி மிருங்கங்களுடன் ஒப்பிடும்போது இயற்கையாகவே மனிதனின் விந்தணு எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

உதாரணமாக எருதுகளின் விந்தணுக்களின் எண்ணிக்கை மில்லியன்களாக அன்றி பில்லியன் கணக்கில் இருக்கின்றன.

அத்துடன் மனிதரில் சாதாரண விந்தணு எண்ணிக்கை 5 முதல் 15 சதவிகிதமாக இருக்க எருதுகளிலோ அது 90 சதவிகிதத்திற்கு மேல் இருக்கிறது.

மலட்டுத்தன்மையை நோக்கி

இத்தகைய காரணங்களால் மனிதர்களில் இனவிருத்தி குறைந்து கொண்டு போகிறது. ஏழு தம்பதிகளில் ஒரு தம்பதியினருக்கு குழந்தைப் பேறு கிட்டாது போய்விடுகிறது.

இதில் பெரும்பாலான தம்பதியினரக்கு ஆண்களின் குறைபாடே காரணமாக இருக்கிறது. போதியதும் தரமானதுமான விந்தணுக்குள் இல்லாமைக்கு பல காரணங்கள் சொல்லலாம்.

  • விதைப்பையிலுள்ள நாளங்கள் புடைத்திருப்பது (Varococele) முக்கிய காரணமாகும். இது கால்களில் ஏற்படும் நாளப்புடைப்பு (Varicose Veins) நோயை ஒத்தது.
  • பாலியல் தொகுதியில் உள்ள பிறவிக் குறைபாடுகள்,
  • பாலியல் நோய்த் தொற்றுகள். குpளாமிடியா, கொனரியா, சிபிலிஸ் போன்றவற்றால் விந்தணு பயணம் பண்ணும் குழாயில் தடிப்புகள் ஏற்பட்டு பாதை தடைப்படலாம்.
  • கூகைக்கட்டு (பொன்னுக்கு வீங்கி), புரஸ்ரேட் சுரப்பியில் கிருமித் தொற்று, சலக்குழாயில் தொற்று போன்றவையும் காரணமாகலாம்.
  • ஆண்மைக் குறைபாடு மற்றொரு காரணமாகும். ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்டரோன் குறைபாடு (testosterone Deficiency) முக்கியமானது.
  • வாழ்க்கை முறைகள் காரணமாகின்றன. உதாரணமாக மனஅழுத்தம், போசணைக் குறைபாடு, அதீத எடை, மதுவும் ஏனைய போதைப் பொருட்களும் ஆண் மலட்டுத்தன்மைக்கு இட்டுச் செல்கின்றன.

விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறையக் காரணங்கள்

  1. இறுக்கமான உள்ளாடைகளை தொடர்ந்து அணிதல், நீண்ட நேரம் தொடைகளை நெருக்கியபடி உற்கார்ந்திருத்தல் போன்றவற்றால் விதைப்பையின் வெப்பம் அதிகமாகி விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைகிறது. விதைகள் விதைப்பையுக்குள் இறங்காமை.
  2. தினமும் 4 மணித்தியாலயங்களுக்கு மேல் செல் போனில் பேசுபவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்நன.
  3. வேலை நெருக்கடி, மன உளைச்சல் போன்ற பல்வேறு காரணங்களால் வாரத்திற்கு 2 -3 தடவைகளாவது உடலறவு வைக்க முடியாது போவது கூட குழந்தையின்மைக்கு ஒரு காரணம்தான்.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக மற்றொரு காரணம் இப்பொழுது முன்வைக்கப்படுகிறது.
மனிதனின் தவறான வாழ்க்கை முறை என்பதற்கு மேலாக

  • அவனது தாயின் அல்லது 
  • பெற்றோரின் தவறான வாழ்க்கைமுறைதான் காரணமாகலாம் என்கிறார்கள் சில வல்லுணர்கள்.

கருவில் வளரும்போதே மலடாவதற்கான விதை விதைக்கப்படுகிறது என்பதுதான்.

விந்தணு உற்பத்தி

விந்தணுக்ளின் உற்பத்தி Spermatogenesis பதின்ம வயதில்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்கான அத்திவாரம் அவன் கருவில் இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது.

அதாவது விதைகளின் விருத்தியானது கருவாக இருக்கும்போதே ஆரம்பித்து 6 மாதக் குழந்தையாக இருக்கும் போதே முற்றுப் பெறுகிறது.

எனவே இந்தக் காலகட்டத்தில் அதன் விருத்திக்கு ஏதாவது இடையூறு நேர்ந்தால் பின்பு வாழ்நாள் முழுவதும்  அவனது குழந்தை பெறும் ஆற்றல் பாதிப்படையும்.

புகைத்தல்

விந்தணுக்கள் குறைவதற்கு வேறு காரணங்களும் உண்டா? புகைத்தல் ஒரு முக்கிய காரணமாகும். அண்மைய ஆய்வுகளில் புகைப்பவர்களது விந்தணு எண்ணிக்கை 15 சதவிகிதத்தால் குறைவடையும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆயினும் புகைத்தலை நிறுத்தினால் அது மீண்டும் வழமை நிலையை அடையும். ஆயினும் அவனது தாயானவள் கருவுற்றிருக்கம் நேரத்தில் புகைத்திருந்தால் அது 40 சதவிகிதம் குறையும்.

இது முக்கிய கண்டுபிடிப்பு. ஆயினும் விந்தணு குறைந்த எல்லோரது தாய்மார்களும் புகைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. தந்தை புகைப்பதால் அதன் பாதிப்பு தாயின் ஊடாக கருவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமா என்பது பற்றி அந்த ஆய்வு எதுவும் கூறவில்லை. ஆயினும் அதற்கான சாத்தியத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

வேறு காரணங்கள் இருக்கலாமா?

  • உணவு முறை மாற்றங்கள், 
  • உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை,
  • இயற்கையோடு இசையாத வாழ்வு,
  • சூழல் மாசடைதல்,
  • காலநிலை மாற்றங்கள்

என எத்தனையோ விரும்பத்தகாத பல மாற்றங்கள் இன்று மனித குலத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றின் தாக்கங்கள் யாவை? இவை போன்றவற்றாலும் ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டிருக்கலாமா என்பதையிட்டும் ஆய்வுகள் அவசியம்.

பெண்களில்

அதே நேரம் பல பெண்களும் மாதவிடாய்க் கோளாறுகளாலும் அதன் பலனாக கருத்தங்கலில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதீத எடை, இன்சுயிலின் செயற்பாடு பாதிப்பு, சூலக நோய்கள் போன்றவை இவற்றிக்கு காலாக உள்ளன. இவற்றில் பலவும் தவறான வாழ்க்கை முறைகளின் பயனே.

எது எப்படி இருந்த போதும் மனித குலம் தொடர்ந்து வாழ இனப்பெருக்கம் அவசியம். அதற்கு ஆண்மைக் குறைபாடு அல்லது பெண்களின் நோய்கள் காரணமாக வந்துவிடக் கூடாது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதே அதற்கு வழிபோலத் தெரிகிறது.

ஞாயிறு வீரகேசரியில் வெளிவந்த எனது கட்டுரையின் மீள் பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »

>நுவரெலியா நகருக்கு சென்ற போது மொபைல் போன் கமராவில் எடுத்த சில படங்கள் இவை.

மஞ்சு மூடி மலைகள் ஒழிந்து கொண்ட நேரமல்ல.
சூரிய ஒளியில் பிரகாசிக்கிறது மலை அடிவாரம்.
தேயிலைச் செடிகள் நிரை நிரையாக..

பாதை ஓரத் தேயிலைத் தோட்டம்

டிவோன் நீர் வீழ்ச்சிக்கு அருகில்
சென்ட் கிளயர் தேயிலைத் தோட்ட வாயில்.
அதன் வாயிலில் வாய் ஒடுங்கிய பெரிய பொயிலர்.
முன்னைய நாள் தேயிலை பக்டரிகளில்
பயன்படுத்தியதாம்.

பழைய காலங்களில் தேயிலையைப் பதப்படுத்த…

நேர் எதிரே ஒரு பாலம்.
அங்கிருந்து மறுபக்கம் பார்த்தால்
பாய்நதோடும் நீரும் சலசலப்பு ஓசையும்.
சென்ட் கிளயர் நீர் வீழ்ச்சி.

டிவோன் நீர் வீழ்ச்சி

மேகம் மூடிய மலைகள்.
மலையோரம் வளைந்தோடும் பாதைகள்.
கிடு கிடு பள்ளத்தாக்கில் துள்ளிக் குதித்து
சரிந்தோடி சாகசம் காட்டும் நீர்வீழ்ச்சி.
எத்தனை இன்பம் வைத்தாய் என்நாட்டில்.

சென்ட் கிளயர் நீர் வீழச்சி.

பாய்ந்து குதிக்கவில்லை.
பரந்து அகலக் கால் பரப்பி
பவ்வியமாய் தலை குனிந்து
பரவசமாய் சாய்ந்து இறங்குகிறாள்
சென்ட் கிளயர் நீர் வீழச்சி.

காதலர் சறுக்கு வீழ்ச்சி

நெடுந்தொலை தூரத்தில் அப்பாவியாக
வான் முட்டக் கை நீட்டி நிற்குமிவள்
செய்த கொடும் செயல் அறிவீரோ?

கைகோத்து கனிமொழி பேசி மலையேகி
இவளருகில் வந்தபோது
கன்னியவள் கால் சறுக்கித் தடுமாற
தன்மடியில் வீழ்த்தி தலைசிதறடித்தாள்.
கண்ணே உன்னோடு இணைவன் நானும் என
தானே தன் கால் சறுக வைத்து வீழ்ந்தானாம்.
வீழ்ந்தவள் கை பிடித்தானோ?
மறு உலகில் மணம் முடித்தனரோ?

மலையேறப் படிகளில்லை
குறும்பாறை வழி செல்லக்
கால்களு்க்கு வலுவில்லை.
காதலர் கதை கேட்டு மனம்சோர
எதுவுமே முடியவில்லை…

சறுக்கி விழுந்தனரோ
கை கோத்துப் பாய்ந்தனரோ
இல்லையேல் Lover’s Leap பெயரெதற்கு
என்றெல்லாம் இடக்காகக்
கேள்வி எழுப்பினால்
விடையளிக்க நான் ஆளில்லை.

இனியொரு இனிய காட்சி.
நுவரெலியா நகரினை
பறவையின்  பார்வையாக
சாந்திபுர குன்றின் உச்சியிலிருந்து
காணும் காட்சி.

பறவையின் பார்வையில் நுவரெலியா

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>ராணி சீதரனின் ‘நிலவும் சுடும்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா (07.11.2010 ஞாயிறு) மாலை 4.30 மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

திருமதி பத்மா சோமகாந்தன் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

திறந்த பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சீ.து.இராசேந்திரம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்

வழமையான நிகழ்ச்சிகளான மங்கல விளக்கேற்றல், தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்புரை(செல்வி.ஷாமிலா ஷெரீப்) ஆகியவற்றின் தொடர்ச்சியாக
வாழ்த்துரை வழங்கினார்கள்

  • டொக்டர்.திஞானகேரன் (ஞானம் சஞ்சிகை)
  • திரு.மு.கதிர்காமநாதன்(தலைவர் கொழும்பு தமிழ் சங்கம்)
  • திரு.அன்ரனி ஜீவா(எழுத்தாளர்)

ஆகிய மூவரும்.

அன்ரனி ஜீவா தனது உரையின்போது,  தமிழ் நாட்டில் திருகோணமலைச் சார்ந்த எமது எழுத்தாளரான தர்மு சிவராம் அவர்களுக்கு தமிழ் நாட்டில் அளிக்கப்படும் உயர்ந்த இடம் பற்றிக் குறிப்பிட்டார். பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோருக்குப் பின்னான இலக்கிய ஆளுமையாக அங்கெல்லாம் மதிக்கப்படுவதாகவும் சொன்னார். நான் கூட்டத்திற்குச் சென்ற போது அன்ரனி ஜீவாதான் பேசிக் கொண்டிருந்தார்.

தனது தலைமையுரையில் திருமதி பத்மா சோமகாந்தன் மனையாள் என்று கெளரவமாக மதிப்பது போல பெண்களை வீட்டிற்குள் அடைத்து வைத்த காலம் மாறிவிட்டது. இப்பொழுது பெண்கள் இலக்கியத் துறையில் மட்டுமின்றி நிர்வாகம், பொலீஸ், ராணுவம் என பல நிலைகளிலும் உயர் நிலைக்கு வந்துள்ளதை நினைவூட்டினார்.

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட திரு.சீ.து.இராசேந்திரம்தான் விக்டோரியா கல்லூரியில் ராணி, சீதரன் ஆகியோருக்கு கல்வி கற்பித்த நிகழ்வுகளை சுவைபடக் கூறினார்.

வெளியீட்டு உரையை வழங்கியவர் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்துறைத் தலைவர் கலாநிதி.துரை மனோகரன் ஆவார். ராணி சீதரன் தன்னிடம் M.A. பட்ட ஆய்விற்காக வருமுன்னரே அவரது சிறுகதை பற்றி ஞானம் சஞ்சிகையில் எழுதியது பற்றி நினைவு கூர்ந்தார்.

தொகுதியில் உள்ள படைப்புகள் அனைத்தும் தனக்கு பிடித்திருந்த போதும் 5- அல்லது 6 கதைகளைக் குறிப்பிட்டு அவை தனக்கு மிகவும் பிடித்ததாகச் சொன்னார். அவை எவை என்பதை என்னால் இப்பொழுது நினைவுக்குக் கெர்ணடு வர முடியவில்லை.

நீண்டு சென்ற நூல் வெளியீட்டுவில் சிறப்புப் பிரதிகள் வழங்கல் நிகழ்வைத் தொடர்ந்து மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் நூல் அறிமுகம் செய்தார். ‘மீண்டும் வருமா’ என்ற சிறுகதையில் திருகோணமலையில் திடீரென முளைத்த புத்தர் சிலையைப் பற்றி மிக அழகாகவும் நாசூக்காகவும் எழுதியிருப்பதைச் சுட்டிக் காட்டினார். பெரிய சாமி என ஒரு சாதாரணன் புத்தர் சிலை வந்ததைக் குறிப்பட்டதை மிகவும் ரசித்துக் கூறினார்.

மீண்டும் சிறப்புப் பிரதிகள் பிரதிகள் வழங்க ஆரம்பித்தனர். வேறு ஒரு முக்கிய பணியிருந்ததால் மெளலானா M.N.M.மர்ஷீம் அவர்களின் நூல் நயவுரையைக் கேட்க முடியாத மனக் குறையுடன் மண்டபத்திலிருந்து வெளியே வந்தேன்.

இந்த நூலை பிரான்ஸ் சில் வசித்து மறைந்த தனது சகோதரி ரசிந்தாவின் ஞாபகமாக அவர் மறைந்த தினமான நவம்பர் 7ம் திகதியில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

தனது சித்தியின் நினைவாக ராணி சீதரனின் மகள் கீர்த்தனி சீதரன் கவிதாஞ்சலி நிகழ்வு நூல் வெளியீட்டிற்கு முதல் நடைபெற்றமை மனதை நெகிழ்வித்தது.

நூலை இன்னமும் வாசிக்கவில்லை.ஆனால் பேராசிரியர் சபா.ஜெயராசாமிக சிறப்பான அணிந்தரையை வழங்கியுள்ளார். சிறிய உரையாயினும் மிகவும் கூர்மையான வார்த்தைகளைக் கொண்ட நல்ல அணிந்துரை. அதன் முக்கியத்துவம் கருதி அதன் ஸ்கான் பிரதியை இணைக்கிறேன்.

அடுத்த பக்கம்
‘வலிகளின் வெளிப்பாடு’..என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழியல் துறை புலமுதன்மையர், பேராசிரியர் பழமுத்து வீரப்பன் முன்னுரை வழங்கியுள்ளார்.
நூலின் விலை:- ரூபா 250.00
தொடர்புகளுக்கு:- 077243619
முகவரி:- 136, மத்திய வீதி
                    திருகோணமலை.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>அவருக்கு மூக்கை அரித்தது போலும். தனது வலது கையால் மூக்கை அழுதித் தேய்த்தார். பின் அதை ரவுசரில் தேய்த்துத் துடைத்தார்.

கதிரையில் உட்கார்ந்ததும் இடது கையில் தூக்கி வைத்திருந்த குழந்தையின் கன்னத்தை வலது கையால் தடவியபடியே,

“குஞ்சு சரியாச் சாப்பிடுதில்லை. மெலிஞ்சு போகுது” என்றார்.

சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு இவரது கையிலுள்ள சளியின் மிச்சங்களில் உள்ள கிருமி தொற்றிக் காய்ச்சலும் வந்தால் இன்னும் பல நாட்களுக்குச் பசியின்மை தொடரப் போகிறது என்பதை நினைவில் கொண்டேன்..

எமது கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது உடல் நலத்தைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானதாகும்.

  • தனக்கு நோய் வராது தடுப்பதற்காக மாத்திரமின்றி, 
  • தனது நோய் மற்றவர்களுக்குப் பரவாது தடுப்பதற்கும் இதைக் கடைப்பிடிப்பது அவசியம். 

பக்றீரியா, பங்கசு, வைரஸ், புரடசோவா என எத்தனையோ வகையான கிருமிகள் எமது சூழல் எங்கும் பரந்து கிடக்கின்றன. எமக்கு கிட்டாத சுதந்திரத்துடன் கை கால் மேல் என கேட்டுக் கேள்வியின்றி நீக்கமற உலவித் திரிகின்றன.

ஆயினும் கிருமித் தொற்றுள்ள போது அவற்றின் செறிவானது
எமது உடற்திரவங்களான

  • எச்சில், 
  • சளி, 
  • மூக்கிலிருந்து சிந்தும் நீர், 
  • சிறுநீர், 
  • மலம்

போன்றவற்றில் மிக அதிகம்.

கிருமியால் மாசடைந்த எமது கைகள் வாய், மூக்கு, கண், சருமம் போன்ற உறுப்புகளில் படும்போது அவற்றில் கிருமி பரவிவிடும்.

சாதகமான சூழல் அங்கிருந்தால் அவை பல்கிப் பெருகி நோய்களை ஏற்படுத்தும். இவ்வாறு பரவுவதைத் தடுக்கவே கை கழுவுவது அவசியமாகும்

எவ்வாறு கழுவுதல் வேண்டும்?

குழாய் நீர் போன்ற ஓடும் நீரில் கழுவுதல் நல்லது. இளம் சூட்டு நீரில் கழுவுவது மேலும் சிறந்தது.

முதலில் கைகளை நீரில் நனையுங்கள். பின் சோப் போடுங்கள். கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து நுரை வரச் செய்வதுடன் விரல் இடுக்குகள், நகங்கள் உட்பட கைமுழுவதையும் சுத்தம் செய்யுங்கள். குறைந்தது 20 செகண்டுகளுக்காவது அவ்வாறு தேய்த்துச் சுத்தப்படுத்துவது நல்லது.

ஓடும் தண்ணீரில் சோப் இட்ட கைகளை நன்கு கழுவுங்கள்.

ஓடும் தண்ணீரில் கழுவுங்கள்

கழுவிச் சுத்தப்படுத்திய கைகளை புதிய பேப்பர் டவலினால் துடைத்து உலர வைப்பது நல்லது. முடிந்தால் அந்த டவலினாலேயே குழாயை மூடுவது சிறந்தது.

ஏனெனில் ஏற்கனவே குழாயைத் திறந்தபோது உங்கள் கையிலிருந்த அழுக்கு அதில் பட்டிருக்கும். கழுவிச் சுத்தம் செய்த கைகளால் மீண்டும் அதை மூடும்போது மீண்டும் கிருமி கையில் தொற்றிவிடும். அல்லது குழாய் மூடியை நீரினால் கழுவிய பின் கைகளால் மூடலாம்.

அழுக்கான டவல், கைலேஞ்சி போன்றவற்றில் துடைக்க வேண்டாம்.
காற்றினால் உலர வைக்கும் உபகரணங்கள் (Air Dryer) இப்பொழுது இங்கும் கிடைக்கின்றன. அவையும் நல்லது.

எப்பொழுது கைகளைக் கழுவ வேண்டும் ?

எப்பொழுதும் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது விரும்பத்தக்கது. இருந்தபோதும் கீழ் வரும் செயற்பாடுகளின்போது கழுவுவது மிக அவசியமாகும்.

  • உணவு தயாரிக்க முன்னரும் உணவு உட்கொள்ள முன்னரும் மிக மிக அவசியமாகும்.
  • மலசல கூடத்திற்குச் சென்று வரும்போது
  • நோயுள்ளவர்களைப் பராமரித்த பின்னர்.
  •  மலசலம் கழித்த குழந்தைகளைச் சுத்தம் செய்த பின், அவர்களின் னiயிநசள யை மாற்றிய பின்
  • தும்மல் இருமல் மூக்குச் சீறல் போன்ற செயல்களுக்குப் பின்னர்.
  • வீட்டுக் கழிவுப் பொருட்களைத் தொட்டழைதல், அகற்றல் போன்ற செயல்களின் பின்னர்.
  • வெட்டுக் காயங்கள் புண் போன்றவற்றை தொட்டு, மருந்து கட்டல் போன்ற செயற்பாடுகளின் பின்னர்.
  • வளர்ப்புப் பிராணிகளை தொட்ட பின்னர்.
  • கைகளில் கிருமி தொற்றக் கூடிய எந்தச் செயற்பாட்டின் பின்னரும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு ஒக்டோபர் 15ம் திகதி உலக கை கழுவும் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது.

 

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா’ பத்தியில் 24.09.2010 வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

மங்களம் நிறைய, மகிழ்வொடு வாழ்த்துவம்!
எங்கெணும் பசியினில் துடியா வாழ்வும்
மானிடத்தை பேதங்கள் கூறிடாப் பிணைவும்
கருத்தினில் மோதலை கைலாகுடன் மதித்தலும்
ஒன்றிணைந்து ஒரு கரமாய்ப் பிணையும் நேசமும்
என்றென்றும் இனிது வாழ வழி காட்டும்.
எங்கள் இடரினை மறக்க
எதிரியென எண்ணித் தூற்றுவதும்
தூற்றுவதில் களிகொள்ளவதும்
இத்தனைக்கும் இவர்தாம் காலென இகழ் ஒலிப்பதும்
வேண்டாம் ஒரு போதும்.
சாபமிட்டுச் சாந்தியடைய ஒண்ணாது ஒருபோதும்
எங்களை அழிக்கும் நீசன்
வெளியிடத்தில் இல்லை.
எம்மனத்துள் உறைகிறான்.
உள்ளுறையும் நரகாசுரனை ஒழிக்க
எள்ளளவும் வேண்டாம் கத்தி, குண்டு,
துப்பாக்கியெதுவும் .
கபடமற்ற கனிவான உள்ளம்
காந்தமாய் ஒளி பரப்பும் வதனம்
கனிவான மொழி.
இவைதவிர வேறென்ன ஆயுதம் வேண்டும்?
எரித்துப் சினத்து அழிக்காது
சிரித்து கூட வழி வகுக்கும்
நல்லாயுதம் தன்னைக் கைப்பிடித்தால்
நிதமும் தீபாவளி எம் வாழ்வில்.
எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0

Read Full Post »

Older Posts »