>நோய் நொடி அண்டாத,
மருத்துவரும் பத்தியமும்
கசப்பான மருந்துகளும்
கிட்டவும் நெருங்காத
நலமான புத்தாண்டு
அனைவர்க்கும் கிட்டட்டும்
வாழ்த்துகிறேன்.
எம்.கே.முருகானந்தன்.
Posted in நலமான புத்தாண்டு on 31/12/2010| Leave a Comment »
>நோய் நொடி அண்டாத,
மருத்துவரும் பத்தியமும்
கசப்பான மருந்துகளும்
கிட்டவும் நெருங்காத
நலமான புத்தாண்டு
அனைவர்க்கும் கிட்டட்டும்
வாழ்த்துகிறேன்.
எம்.கே.முருகானந்தன்.
Posted in அனுபவம், கவிதை, காவடியாட்டம் on 31/12/2010| 3 Comments »
>காவடி ஆட்டங்கள் அதுவும் துலாக் காவடி போன்றவை மிகவும் ஆபத்தானவை. அண்மையில் காவடியாட்டத்திற்காக, கொக்கிகள் குத்திய இடத்தில் சீழ்ப் பிடித்துத் துன்பப்பட்ட ஒருவருக்கு மருத்துவம் செய்ய நேர்ந்தது.
அது ஏற்பு நோயாக மாறியிருந்தால் என்னவாகியிருக்கும்?
ஆயினும் அவர் அப்பொழுதும் அசுத்தமான ஊசிகளைக் குத்தியதால்தான்
புண் ஏற்பட்டது என நம்பவில்லை.
விளக்கிச் சொல்லியும் புரியவில்லை.
புரிந்து கொள்ள முயலவும் இல்லை.
நம்பி்க்கைகள் பலமானவை. அவை மூடநம்பி்கைகளாக இருந்த போதும்.
பஸ் பிரயாணம் செய்யும் போது அப் பகுதியானது இருக்கையில் அண்டியதால்தான் நோயுற்றதென நம்பினார்.
ஆயினும் தனது நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்ததால் அவரது மனக்குறை தீர்ந்திருந்தால் அவர் ஏதோ ஒரு வழியில் பலன் பெற்றார் என அவருடன் பிணக்குறாது மகிழ வேண்டியதுதான்.
சமயச் சடங்குகள் பலவற்றிற்கும் ஏதோ பலன் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தபோதும் சடங்குகளை நம்புவர்கள் நினைப்பது போல அவை இறைவன் அருளால் கிட்டுபவை அல்ல.
ஆறறிவு மனிதருக்கு மேலான அறிவுடைய கடவுளர் இருக்கக் கூடுமேயானால், மனிதர்களுக்கு அறிவைக் கொடுத்தும் அதனைப் பயன்படுத்தத் தவறியதைக் கண்டு தலை கவிழ்ந்திருப்பார்.
பலன்கள் உளவியல் சார்ந்தவை. தான் விட்ட பிழைக்கு மன்னிப்புப் பெற்று மனச் சாந்தியடைய வைக்கின்றன. அல்லது தனக்குக் கிட்டிய, கிட்டப்போகிற ஆதாயங்களுக்கு நன்றிக் கடனாக லஞ்சமாகவும் இருக்கலாம்.
எதுவாக இருந்தபோதும் தன்நம்பிக்கையுடன், சுயமுயற்சியால் முன்னேறுபவனுக்கும் இதில் ஈடுபாடு இருக்க நியாயமில்லை.
ஆனால் அதனை ஒரு ஆடற் கலையாகக் கொள்வதில் தவறில்லை.
பாரம்பரியம் சார்ந்தவையாக இருந்தபோதும், சடங்குகள் சம்பிரதாயங்கள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை என்றால் தவிர்க்க வேண்டியவையே.
அவற்றில் பல இன்றைய அறிவு விஞ்ஞானப் பின்புலத்தில் மீள் மதிப்பீடு செய்ய வேண்டியவை. அல்லது சுகாதார ரீதியான திருத்தங்களுடன் ஆற்றப்பட வேண்டியவை.
காவடியாடுதல் என்ற சொல்லுக்கு வேறொரு அர்த்தமும் உண்டு.
கவிஞர் மப்றூக் கவிதை அதைப் பேசுகிறது.
காவடியாட்டம் பற்றிய அவரது ‘காற்று’ இணையப் பதிவுக் கவிதை படிக்க கிளிக் பண்ணுங்கள்.
அவர் கவிதை என் மனத்தை அலைத்தது.
சில வார்த்தைகள் சொல்ல வைத்தது.
![]() |
துலாக் காவடி |
தாவாரம் இணைய தளத்தில் ஜெகன் அவர்களது காவடி பற்றிய சிறந்த சமூகவியல் கட்டுரையைத் தந்துள்ளார். படிக்க கீழே சொடுக்குங்கள்.
மேலும் சிந்திப்பதற்கும் உரையாடுவதற்குமான விடயம்.
Posted in இலக்கிய நிகழ்வு, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு on 29/12/2010| Leave a Comment »
>சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 கொழும்புவில் நடைபெற இருக்கிறது.
வெள்ளவத்தை உருத்திரா மாவததையின் 57 ஆம் ஒழுங்கை 7ம் நம்பரில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் எதிர் வரும் 2011 ஜனவரி, 06, 07, 08 திகதிகளில் நடை பெறும்.
ஆய்வரங்குகள் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் பி்.ப 01.00 மணிவரை நடைபெறும்.
ஆய்வரங்கம் பின்வரும் விடயங்களில் நடைபெறு இருக்கின்றன.
கலை நிகழ்வுகள் மாலை 05.00 மணியிலிருந்து இரவு 08.00 மணிவரை நடை பெறும்.
நிறைவு நாள் நிகழ்வு 09.01.2011 ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 08.00 மணிவரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறும்.
Posted in சரஸ்வதி சிலை, பாடசாலை அபிவிருத்தி, புரவலர்கள் on 28/12/2010| 3 Comments »
>
கல்விக்கு உரியவள் சரஸ்வதி என்பது எமது சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கை. தினமும் பாடசாலை தொழுமையுடன் ஆரம்பிக்கிறது. மாணவர்கள் தேவாரம் மற்றும் துதிப் பாடல்கள் பாடி தினமும் நாளை அர்ப்பணிப்புடன் ஆரம்பிக்கும்போது அவர்கள் வணக்கத்திற்கு ஒரு சரஸ்வதி சிலை அவசியம் என சில மாதங்களுக்கு முன்னர் இங்கு குறிப்பிட்டிருந்தோம்.
இப்பொழுது எமது பாடசாலையின் இரு வளாகங்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு சரஸ்வதி சிலை செய்வதற்கான நிதியுதவி கிட்டியுள்ளது.
நிதியுதி அளித்த திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் USA மற்றும் பத்மநாதன் சோதிநாதன்(UK) ஆகியோருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந் நிதியுதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் ஊக்கம் செலுத்திய எமது பழைய மாணவர் ஒன்றிய கண்டிப் பிரிவின் தலைவர் திரு.சி.வாசுதேவன் அவர்களுக்கும் கண்டி பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர் திரு.கந்தையா செல்வமோகன் அவர்களுக்கும் எமது நன்றிகள். அதேபோல நோர்வேயில் வாழும் திரு.இரத்தினசபாபதி கிருஸ்ணராசா அவர்களுக்கும் எமது நன்றிகள்.
இச் சிலைகளை தம்பசட்டியைச் சார்ந்த ஆச்சாரியார் வேலுப்பிள்ளை அவர்கள் செய்து தருவதற்கு இணங்கியுள்ளதாக அறிகிறோம்.
Posted in சருமநோய்கள், தொற்றுநோய், படத்தில் நோய், மருத்துவம், வைரஸ் வோர்ட் on 26/12/2010| Leave a Comment »
>வைரஸ் வோர்ட்ஸ் என்பன சருமத்தில் தோன்றும் சிறிய சொரசொரப்பான கட்டிகளாகும். இவை ஆபத்தற்றவை. புற்று நோயல்லாத கட்டிகளாகும்.
பாலுண்ணி என அழைப்பதும் இதைத்தான். இவை முகம், கழுத்து, முதுகு, நெஞ்சு என உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடியவை.
என்றாலும் பெரும்பாலும் கைளிலும் கால்களிலுமே அதிகம் தோன்றுகின்றன.
இவை ஒரு வைரஸ் நோயாகும். Human Papilloma Virus -HPV என்ற வைரஸ்சால் ஏற்படுகின்றன. இதில் 80க்கு மேற்பட்ட உபவகைகள் உள்ளன. இந் நோயின் போது எமது சருமத்தின் மேற்பகுதியில் உள்ள கெரட்டின் என்ற புரதத்தை அதிகமாக உற்பவிக்கின்றன. இதுவே வைரஸ் வோர்ட்டின் கடினமானதும் சொரப்பான தன்மைக்குக் கராணமாகும்.
எங்கே தோன்றுகின்றன, அவற்றின் தன்மை என்ன போன்றவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர் அமையும். பாலுறுப்பை அண்டிய பகுதியில் தோன்றுபவை பாலியல் வோர்ட் (Genital warts) எனப்படும். பாதத்தில் வருபவை பிளான்டர் வோர்ட் (plantar warts -verrucas) எனப்படும்.
ஆனால் அவை பற்றி இன்று பேசவில்லை.
16 வயதுக் குட்டித் தேவதை இவள். நல்ல நிறம், கவர்ச்சியான கண்கள். ஆனால் முகத்தில் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. காரணம் அவளது சுட்டு விரலில் உள்ள சொரப்பான தோல் நோயாகும். கரடு முரடான பாறைக் கல்லுப் போல வளர்ந்திருந்தது.
இதுவும் வைரஸ் வோர்ட்தான். ஆனால் மொஸக் வோர்ட் (mosaic wart) எனத் தனிப் பெயர் இருக்கிறது. உண்மையில் இது தனி ஒரு வோர்ட் அல்ல. பல சிறிய நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் உள்ளன. மேற் பகுதியை மெதுவாகப் பிரித்துப் பார்த்தால் அதனுள் பல சிறிய தனித்தனி வோர்ட்டுகள் இருப்பது தெரியும்.
அவளது உடலில் அதைப் போன்ற ஆனால் சிறிய பல கட்டிகள் உடல் முழுவதும் புதிதாகத் தோன்றின. உற்றுப் பார்த்தீர்களேயானால் அவளது நடுவிரலில் தனியான ஒரு கட்டி இருக்கிறது. இதுவும் ஒரு வைரஸ் வோர்ட்தான். இதனை கொமன் வோர்ட் (Common wart) என்பார்கள்.
மற்றொரு பையனின் சுட்டு விரலில் உட்பகுதியிலும் அத்தகைய ஒரு கட்டி இருக்கிறது. இதுவும் அத்தகைய கொமன் வோர்ட்தான்.
இதே போல விரல் நுனியில் நகத்திற்கு அண்மையில் தோன்றுபவற்றை பெரிஅங்கல் வோர்ட் (Periungual warts) என்பார்கள்.
பிள்ளைகளிலேயே அதிகம் காணப்படும். ஆயினும் எந்த வயதிலும் தோன்றலாம்.
சிறிய திட்டி போல இருக்கும். சிலரில் சொரப்பான பல முனைகள் இருக்கலாம். பெரும்பாலும் ஒன்றுக்கு மேல் தோன்றும்.
இவற்றின் நிறம் வெண்மையாகவோ, சாம்பல் பூத்ததாகவோ இருக்கலாம். 0.5 செமி முதல் 3 செமி வரை வளரக் கூடியது.
ஒழுங்கின்றிச் சொரசொரப்பாக இருப்பதால் இது புற்று நோயாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பும். ஆனால் புற்று நோயல்ல.
எந்த மருத்துவமும் இன்றித் தானாக 6 மாதங்களில் மாறிவிடும். சிலருக்கு குணமாக இரண்டு வருடங்களுக்கு மேல் எடுக்கலாம்.
ஆயினும் பல வகை மருத்துவ முறைகள் உள்ளன.
சலிசிலிக் அமிலம் மற்றும் லக்றிக் அமிலம் கலந்த களிம்பு மருந்துகள் உதவும்.
மற்றொரு முறை, திரவ நைதரசனைக் கொண்டு அதனை உறைய வைத்து அழிப்பதாகும். இது (Cryotherapy) சொல்லப்படும் மருத்துவமாகும்.
அவ்விடத்தை மரக்கச் செய்து சிறுசத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம்.
வைரஸ் வோர்ட் பற்றிய எனது மற்றொரு பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்
மோகத்தால் வந்ததா? – வைரஸ் வோர்ட் (Virus Wart)
0.0.0.0.0.0
Posted in கவிதை, கிறிஸ்மஸ் வாழ்த்து on 25/12/2010| 5 Comments »
>நண்பர்கள் இனைவருக்கும்
நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்
வாழும் வகை அறிதலின்றி
விழுமியங்கள் புரிதலின்றி
காட்டின விலங்கும் வெட்கும்
நெறியறியா நரக வாழ்வு வாழ்ந்த
மானிடர் தம்மை உய்விக்க
பூமியில் பாலகனாய் அவதரித்தார்.
மற்றவன் வலியில் மகிழ்வு கொள்ளும்
புல்லராய் வாழ ஒண்ணாது
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னம் காட்டும் வண்ணம்
புதுமொழிகள் பகர்ந்த மேலோன்.
“மற்றவனில் குறைகள் தேடி
மரணிக்க தண்டனை வேண்டாம்
நீ செய்த குற்றம் யாது
சிந்திப்பாய் முதலில்
குற்றமெதுவும் செய்யாதவனே
முதற் கல்லைத் தூக்கு” என்றார்.
தன்சுகம் பெரிதெனக் கொண்டு
மானிடம் வாழ்ந்த போது
பேதை மனித வாழ்வின்
மாண்பை உயர்விக்க
அவதரித்த பிரான்
“பசியானால் வாடி, வேதனையில் சோர்ந்து
உயிருக்காய் போராடும் மக்கள்
துன்பத்தை உன் துன்பமாகக் கொண்டு
அன்புக் கரம் நீட்டி வேண்டிய
உதவ செய்ய முன் நிற்பாய்”.
உலகில் மானிடத்திற்கு ஒளியேற்ற
தன்வலி பொறுத்துச் சிலுவை சுமந்து
இன்னுரை தானம் செய்த
யேசு பிரான் வாழ்வு
வழி காட்டல் செய்ய
அன்பு நிறை மனிதராய்
என்றும் வாழ இன்று நாம்
சங்கற்பம் கொள்வோம்.
எம்.கே.முருகானந்தன்
Posted in கவிதை, நூல் அறிமுகம், யாழ்ப்பாணன் on 23/12/2010| 3 Comments »
>
கீழே வருவது ஒரு பழைய பாடல்.
வியாபாரிமூலைக் கவிஞரான யாழ்ப்பாணன் சுமார் 60 வருடங்களுக்கு முன்னரே மிகவும் எளிய மொழியில் யாத்த பாடல்.
சூரியோதயம் பற்றியது.
வண்டினம் இசைகள் பாட
மலரிதழ் முறுவல் பூப்ப
எண்டிசை சேவற் கூட்டம்
எதிர் எதிர் முறையில் கூவ
தெண்டிரை வாரி தன்னில்
செங்கதிர் செல்வன் தோற்றி
மண்டலம் புரக்க வந்தான்
வானத்திற் பவனி போந்தே.
காக்கைகள் கரைய எள்ளி
கருமைசேர் மேனி கொண்ட
போக்கிரி குருவி ஒன்றும்
புதுமைசேர் மொழிகள் செப்ப
நாக்கணப் புட்கள் கூடி
நளினங்கள் செய்யக் கிள்ளை
தூக்கம் விட்டெழவே பட்சி
நாலங்கள் சுருதி கூட்ட …….
அவர் கவிதையின் ஒரு பகுதி மட்டுமே மேலேயுள்ளது. மீதி காண அவரது கவிதை நூல் நாடுங்கள்.
இப்பொழுது கிடைக்குமா எனக் கேடகக் கூடாது. நூலகம்.கொம் மில் இருக்கக் கூடும். இவ் வருட மத்தியில் யாழ் சென்ற போது எனது புத்தகக் குவியல்களுள் இருந்து உருவி எடுத்து வந்தேன்.
வெளியீடு
வடலங்கா புத்தகசாலை
நந்தன சித்திரை 1951
Posted in அதீத எடை, சும்மா இருத்தல், மருத்துவம் on 19/12/2010| Leave a Comment »
>“சும்மா இருக்கச் சுகம் வரும்” என்றார்கள் ஞானிகள்.
“சும்மா இருந்தால் மரணம் விரைந்து வரும்” என்கிறார்கள் இன்றைய ஞானிகளான விஞ்ஞானிகள்.
எது சரி?
அதீத எடையும் கொழுத்த உடலும் இன்று கொள்ளை நோயாக மனித குலத்தை ஆட்டுவிக்கிறது. அதீத எடைக்கு முக்கிய காரணம் போதிய உடலுழைப்பு இல்லாமையாகும்.
சும்மா உட்கார்ந்திருப்பது என்பது உடலுழைப்பற்ற செயலாகும். எனவே அதிக நேரம் சும்மா உட்கார்ந்திருப்பது உடல் உழைப்பின் நேரத்தைக் குறைக்கிறது.
மாறாக குறைந்த நேரம் உட்கார்ந்திருப்பதானது கொழுத்த உடலினால் ஏற்படும் உடற் செயற்பாட்டியல் பாதிப்புகளைக் (metabolic consequences) குறைக்கும் என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.
எடை குறைப்பது பற்றிய எனது முன்னைய கட்டுரை படிக்க
எடை குறைப்பு – மருந்துகள் உதவுமா?
இது அமெரிக்க புற்று நோய் சங்கத்தினால் செய்யப்பட்ட ஆய்வாகும். நோயற்ற ஆரோக்கியமான 53இ440 ஆண்களையும் 69776 பெண்களையும் உள்ளடக்கிய பாரிய ஆய்வு இது. 14 வருடங்கள் தொடரப்பட்டது.
இதன் படி தினமும் 3 மணிநேரத்திற்கு குறைவாக சும்மா இருப்பவர்களை விட தினமும் 6 மணி நேரத்திற்கு அதிகமாகச் சும்மா இருப்பவர்களுக்கு மரணத்திற்கான சாத்தியம் அதிகரிக்கிறதாம். அது ஆண்களில் 1.17 சதவிகிதமும், பெண்கனில் 1.34 சதவிகிதமும் அதிகரிக்கிறதாம்.
அதே நேரம் 6 மணி நேரத்திற்கு அதிகமாகச் சும்மா இருப்பதுடன் மிகுதி நேரங்களில் உடலுழைப்புக் குறைந்திருப்பர்களுக்கு, குறைந்த நேரம் சும்மா இருப்பதுடன் அதிக உடலுழைப்பு செய்பவர்களுடன் ஒப்பிடும்போது மரணத்திற்கான சாத்தியம் ஆண்களில் 1.48 சதவிகிதமும், பெண்களில் 1.94 சதவிகிதமும் அதிகரிக்கிறது.
சும்மா இருப்பவர்களின் மரணத்திற்கான அதிகரிப்பானது அதீத எடை, புகைத்தல் போன்ற மரணத்திற்கான ஏனைய காரணங்களைக் கணக்கில் கொண்டபோதும் அதிகமாகவே இருந்தது.
அத்துடன் ஓரளவு உடலுழைப்பு இருந்தபோதும் சும்மா இருக்கும் நேரம் அதிகமாக இருந்தாலும் ஏனையவர்களை விட மரணம் நெருங்கி வரும்.
அவர்களில் மரணத்திற்கு, பொதுவாக மாரடைப்பு, மூளையில் இரத்த குழாய் வெடிப்புப் போன்றவையே காரணமாக இருந்திருக்கின்றன.
எனவே இந்த ஆய்வு கொடுக்கும் முடிவானது என்ன? குறைந்தளவு நேரமே சும்மா உட்காரந்திருங்கள். கூடியளவு நேரம் உற்சாகமான உடல் உழைப்பில் ஈடுபடுங்கள் என்பதுதானே.
அப்படியானால் ஞானிகள் சொன்னது தவறா?
இல்லை!
ஞானிகளின் இலக்கு விரைவில் வீடு பேறடைந்து இறைவனுடன் இரண்டறக் கலப்பதாகும். எனவே சும்மா இருப்பது அவர்கள் தங்கள் இலக்கை விரைவில் அடைய அது உதவும். அதாவது மரணித்து இறைவனை அடைய.
ஆயினும் இவ்வுலகில் நீண்டு வாழ்வதில் விருப்பமும், மகிழ்ச்சியும் அடையும் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு ஏற்றது
சும்மாயிருத்தல் பற்றிய தாயுமானவர் பாடல்
“இடக்குப் பேச்சுப் பேசாதே, ஞானிகள் உடற் சுகத்தைப் பற்றிப் பேசவில்லை. உள்ளத்தை அமைதியாக சுகமாக தேவையற்ற வீண் சிந்தனையின்றி வைத்திருப்பதைப் பற்றியே சொன்னார்கள்”
என நீங்கள் சொன்னால் அதை மறுதலிக்கும் இலக்கிய ஆன்மிக ஆற்றல் என்னிடம் இல்லை.
அதீத எடை பற்றிச் சற்றுச் சிரிப்போடு சிந்திக்க எனது
“steth இன் குரல்” மற்றும்
“மறந்து போகாத சில..”
பதிவுகளைப் பார்க்கவும்.
பிகு
சும்மா இருக்காதே எனச்
Posted in சஞ்சிகை அறிமுகம் on 18/12/2010| 5 Comments »
>வாசிப்பு மனிதனை அறிவாளியாக்குகிறது, கலை உணர்வு நோக்கிய மனத்தை வார்த்து எடுக்கிறது. சமூக அக்கறையை வளர்க்கிறது. பண்புள்ளவனாக ஆக்குகிறது என்றெல்லாம் கூறுகிறார்கள்.
ஆனால் இன்று பெரும்பாலனவர்களுக்கு வாசிப்பதில் அக்கறையில்லை.
வேறு பலருக்கு நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்து படிக்கத் தெரியவில்லை. நல்லன எவை என்பது புரியவும் இல்லை. அவற்றை அறிமுகப்படுத்துவார் யாரும் இல்லை. இதனால்தான் மரவு வழிச் சிந்தனைகளை மீறும் துணிவு இன்றி குண்டுச் சிரட்டைக்குள் குதித்துக் கெக்கலித்து கும்மாளமிட்டு சுய பாராட்டில் சுகம் காண்கிறோம்.
தேடுதலும் வாசிப்பும் அரிதாகிப் போனதால்தான் புத்தாக்கச் சிந்தனையின்றி உயிர்ப்பற்ற படைப்புகளை உற்பவிக்கும் யந்திரங்களாக எமது படைப்பாளிகள் பலர் இயங்குவதை அவதானிக்க முடிகிறது.
இந்த நிலையில் “தமிழில் காத்திரமான சிந்தனைக்கும் படைப்பாக்க உருவாக்கத்திற்கும் களம் அமைக்கும் வகையில் ‘சேமமடு பொத்தக செய்திமடல்’ வெளிவருகிறது. தொடர்ந்து நல்ல வாசிப்புச் செயற்பாட்டில் புதிய போக்கை உருவாக்க இந்த இதழ் விளைகிறது” என அதன் ஆசிரியர் தலையங்கம் கூறுவதுடன் நானும் கருத்து ரீதியாக ஒன்றுபடுகிறேன்.
மீளவும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் ஆசிரியர் தலையங்கம் மிக ஆழமான கருத்தோட்டமும், மொழி லாவண்யமும் கொண்டதாக இருக்கிறது.
எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் நூல்களை வெளியிட்டால் மட்டும் போதாது அதற்கு அப்பால் நேரடியாகச் சந்திக்கும் தருணங்களும் தேவை. கூட்டம் கலந்துரையாடல் என்ற மரபார்ந்த முறைகளுக்கு அப்பால் இத்தகைய செய்தி மடல்களும் நிச்சயம் உதவும் என எண்ணத் தோன்றுகிறது. செய்தி மடல் எனக் குறிப்பிட்டிருந்த போதும் அதன் உள்ளடக்கக் கனதியானது பல தற்கால சஞ்சிகைகளை விஞ்சி நிற்கிறது.
சிறப்புக் கட்டுரைகள்
காலனித்துவம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அறிவுக் காலனித்துவம் பற்றி?
நுகர்ச்சிவாத முதலாளியத்துடன் தொடர்புடைய கல்விமுறைமையும், நூலாக்கங்களும் உலகெங்கும் பெருக்கெடுக்கும் ஆட்சிநிலை தலைதூக்கியுள்ளது. அறிவை முதலீடாகக் கொண்ட பொருளாதாரம் வளர்கிறது. அறிவு முதலீடாகிறது. இது நல்லதுதான்.
ஆனால் நடப்பது என்ன?
அறிவின் உற்பத்தியும், பங்கீடும், சந்தைப்படுத்தலும் பெரிய முதலாளிய நிறுவனங்களின் கையில். புதிய கண்டுபிடிப்புகள், தனியுரிமைப் பதிவுகளுக்கு உள்ளடங்குகின்றன. இது புதிய காலனித்துவமாக, அறிவுக் காலனித்துவமாக நம்மைச் சுரண்டுகிறது.
இத்தகைய கருத்துகளை சபா.ஜெயராசாவின் கட்டுரையில் காணலாம். ‘அறிவுக் காலனித்துவமும் மாற்று வாசிப்புச் செயற்பாடுகளும்’என்ற தலைப்பில் சிறப்புப் பார்வையாக அமையும் இக் கட்டுரை அவசியம் படிக்க வேண்டியதாகும்.
இதேபோல சிறப்புப் பார்வையாக அமையும் மற்றொரு கட்டுரை பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ‘நானும் வாசிப்பு உலகமும்’ ஆகும். தனது வாசிப்பு அனுபவங்களைச் சுவார்ஸமாகப் பகிர்ந்து கொள்கிறார். “புத்தகம் கண்களால் வாசிக்கப்பட்டாலும், செவியால் நுகரப்படுவதும், நாவால் ருசிக்கப்படுவதும், உணர்ச்சிகளால் தொட்டு உணரப்படுவதுமாக ஒரு மாய விளையாட்டையே நிகழ்த்துகின்றன.” என ஓரிடத்தில் சொல்வது பரவசப்படுத்துகிறது.
மு.பொன்னம்பலம் அவர்களின் ‘வாசிப்பதும் வாசிக்கப்படுவதும்’ வாசிப்பின் முக்கியத்துவத்தை மூன்று முகங்களாகப் பாரக்கிறது. இம் மூன்று கட்டுரைகளும் வாசிப்பு, அறிவு பற்றிய பொதுவான கட்டுரைகளாக இருக்கின்றன.
நூல் அறிமுகக் கட்டுரைகள்
ஆனால் இந்த செய்தி மடலின் முக்கியமாக அடங்கியுள்ளவை பல நல்ல நூல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளாகும்.
போர் சூழலில் பல வருடங்களாக வாழ்ந்த என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை போர்க்கலை பற்றிய ஒரு சீன நூலாகும். கன்ஃபியூஷிஸ் மற்றும் லாவோட்சே ஆகியோருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சன் சூ அவர்களது நூலாகும்.
தேசம் என்றால் போர் இன்றியமையாதது என்ற நிலையிருந்த காலத்தில் இராணுவவீரர்களுக்கு பயிற்சி அளித்தவர் அவ்வப்போது எழுதிய தன் அனுபவக் குறிப்புகளை தொகுத்து பின்னர் நூலாக்கப்பட்டதாகும்;. 1772ல் ப்ரெஞ்சு மொழியில் இது மொழிமாற்றம் செய்யப்பட்டது. இப்பொழுது தமிழாக்கம் செய்யதவர் ஆர்.நடராஜன் ஆகும்.
மேலும் பல நூல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் விபரங்களைப் பாருங்கள்.
கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் – சபா. ஜெயராசா
வார்சாவில் ஒரு கடவுள் தமிழவனின் நாவல் மீதான விமர்சனங்கள்- சிவசு
அரசறிவியல் ஒரு அறிமுகம் – ஏ.சி.ஜோர்ஜ்
யுத்தம் செய்யும் கலை – தமிழில் ஆர்.நடராஜன்
கல்வியும் உளவியலும் – ச.முத்துலிங்கம்
கலைத்திட்ட மாதிரிகைகள் – கி.புண்ணியமூர்த்தி
கதைமொழி – எஸ்.சண்முகம்
வெட்சி – தமிழகத் தலித் ஆக்கங்கள்- தொகுப்பு நூல்
திரைகடலோடியும் துயரம் தேடு – யோ.திருவள்ளுவர்
மௌனத் தூதன் ஜெர்மன் கவிதைகள் ஓர் அறிமுகம்
அபிவிருத்தியின் சமூகவியல் – கந்தையா சண்முகலிங்கம்
உலகக் கல்வி வரலாறு – சபா. ஜெயராசா
இன்னும் பல சிறப்பான நூல்கள் பற்றிய நல்ல கட்டுரைகளால் இதழ் நிறைந்திருக்கிறது. இவை யாவும் அறிமுகம், புதுவரவு, சேமமடு புதுவரவு, பத்மம் புதுவரவு, களஞ்சியம் போன்ற உபதலைப்புகளின் கீழ் வெளியாகியுள்ளன.
இவை தவிர புதுவரவு என்ற தலைப்பில் பல சுருக்கமான நூல் அறிமுகங்களும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன. இது அதன் நாலாவது இதழ். விலை ரூபா 30 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசிப்புப் பயணம் விரியட்டும்
“சமகாலத்தில் விரிவுபடும் சிந்தனைகள் படைப்பாக்க களங்கள் நோக்கி நாம் உறுதியான ஆத்ம பயணத்தை – வாசிப்புப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இதற்கான ஆற்றுப்படுத்தலாகவே இந்தச் செய்திமடல் வெளிவருகிறது” என இதழ் ஆசிரியர் கூறுகிறார். இதைப் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும்.
வாசிப்பு, இலக்கியம், அறிவுத் தேடல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் தப்பவிட முடியாத இதழ் எனலாம். தெரிந்த சிலர் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பலர் இப்படியான இதழ் வருவதை அறிந்திருக்கவில்லை என்பதும் தெரிகிறது. தெரிந்த சிலருக்கு அதனைப் பெற்றுக் கொள்ளும் வழி தெரியாதுள்ளது.
ஆர்வமுள்ள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். விபரங்கள் கீழே.
ஆசிரியர் :- தமிழாகரன்,
நிர்வாக ஆசிரியர்:- சதபூ.பத்மசீலன்
தொ.பே:- 011 2472362
Posted in இலக்கிய நிகழ்வு, கைலாசபதி, நினைவுப் பேருரை on 16/12/2010| Leave a Comment »
>தேசிய கலை இலக்கியப் பேரவையின் 37வது ஆண்டு நிறைவு விழாவும் பேராசிரியர் க.கைலாசபதியின் நினைவுச் சொற்பொழிவும் எதிர்வரும் 19.12.2010 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மேற்படி பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடை பெற இருக்கிறது.
இந்த அரங்கம் 57/1/15, காலி வீதியில் (ரொக்ஸி திரையரங்கிற்கு முன்னால் உள்ள ஒழுங்கையில்) அமைந்துள்ளது.
தலைமை வகிப்பவர் பேராசிரியர்.சி.தில்லைநாதன் அவர்களாகும்
நினைவுப் பேருரையை நிகழ்த்த இருப்பவர் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சார்ந்த பேரசிரியர் பரமு புஸ்பரட்ணம் அவர்களாகும். “இலங்கையில் தமிழ்மொழியின் தொன்மை” என்ற பொருளில் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.
பெதுச் செயலாளர் சோ.தேவராஜா “தேசிய கலை இலக்கியப் பேரவையின் 37வது ஆண்டு நிறைவுரை” ஆற்றுவார்.
அதைத் தொடர்ந்த கவிதை அரங்க ஆற்றுகையில் தலைமைக் கவியாகச் திரு.ச.சுதாகர் அவர்களும் ஏனைய கவிஞர்களும் “புதிதாய் மீள உயிர் கொண்டெழுவோம்” என்ற தலைப்பில் கலந்து கொள்வர்.