Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2011

>வயதான பலர் மூட்டு வலிக்கிறது எனப் பூச்சு மருந்துகளை முழங்கால், கணுக்கால் என அடிக்கடி பூசிக்கொண்டிருப்பார்கள். “பொழுது போகாதற்கு அதை இதைப் தேச்சுக் கொண்டிருக்கிறதுதான் வேலை” என இளவட்டங்கள் அலட்சியமாகப் பேசும். அல்லது “கண்டதையும் பூசி உடுப்புகளையும் பாழாக்கிறதுதான் மிச்சம்” என நக்கல் அடிக்கும்.

நோ எண்ணெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணய் பூசுவதால் பலன் ஏதும் கிடைக்கிறதா இல்லையா என கருத்துச் சொல்ல எனக்கு அருகதையில்லை. அவை எனது படிப்பு, அனுபவம் ஆகியவற்றிற்கு அப்பாலானவை.

பலன்

ஆனால் வலி நிவாரணி ஜெல் மருந்துகளைப் பூசுவதால் பலன் கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் பலருக்கும் இவ்வாறு பூசுவதால் பலன் கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. பல மருத்துவர்களுக்கே அவ்வாறு பூசுவதன் பயன் பற்றி நம்பிக்கை கிடையாது. எனவே இது பற்றி சில ஆய்வுகள் செய்யப்பட்டன.

நாட்பட்ட முழங்கால் வலி, மற்றும் வயதானவர்களில் ஏற்படும் ஒஸ்ரியோ ஆர்திரைடிஸ் (osteoarthritis) நோயாளார்களில் டைகுளோபெனிக் சோடியம் (Diclofenac sodium) மருந்தை மாத்திரைகளாக கொடுக்கும்போது ஏற்படும் வலிநிவாரணத்திற்கு ஒத்ததாக ஜெல் மருந்தாகப் பூசுவதாலும் நன்மை கிடைத்தது. உட்கொள்ளும் மாத்திரைகளைப் போலவே வலியுள்ள இடத்தில் பூசப்படும் மருந்தும் வலியைத் தணிப்பதில் உதவுகிறது என்பது இதனால் தெளிவாகிறது.


பக்கவிளைவுகள்

வலிநிவாரணிகளை மாத்திரைகளைப் பாவிக்கும்போது ஏற்படும் முக்கிய பக்கவிளைவு குடல் சம்பந்தமானாதாகும். பல நோயாளர்களும் வயிற்று எரிவு, புகைச்சல், இரைப்பைப் புண் ஆகியன ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். அது உண்மையே. அத்துடன் இவை இரத்த அழுதத்தை அதிகரிக்கவும் செய்கின்றன. இருதய நோய்களைக் கொண்டு வருவதும் அதிகம் என்பதும் அனுபவத்திலும், ஆய்வுகளிலும் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் அவற்றை பூச்சு மருந்தாகப் பாவிக்கும்போது அத்தகைய பக்கவிளைவுகள் மிகக் குறைவாகவே ஏற்பட்டன. இதற்குக் காரணம் பூச்சு மருந்தாக பாவிக்கும்போத ஒரு சதவிகிதம் மட்டுமே உறிஞ்சப்பட்டு குருதிவழியாக உடலெங்கும் பரவுகிறது. இருந்தபோதும் வலியுள்ள இடத்தில் உறிஞ்சப்படும் மருந்தினால் நோய் தணிகிறது

பக்கவிளைவுகள்

அப்படியானால் பூச்சு மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏதும் கிடையாதா என்ற கேள்வி எழுகிறது.

  • நீண்ட காலத்திற்கு அதாவது 6 மாதம் ஒரு வருடம் எனத் தொடர்ந்து பூசி வரும்போது தோல் வரட்சி ஏற்படலாம். 
  • அத்துடன் தோலில் அரிப்பு, எரிவு, சிவத்தல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். 
  • சிலரில் கொப்பளங்கள் போடுவதும், எக்ஸ்சிமா போன்றவை வருவதும் உண்டு.

இத்தகைய பக்கவிளைவுகள் பெரும்பாலும் தொடர்ந்து பூசும் இடத்தில் மட்டுமே வரும். தோல் வரட்சியடைந்தால் சாதாரணமான இதப்படுத்தும் கிறீம் வகைகளை (அழளைவரசளைiபெ ஊசநயஅ) உபயோகிப்பதன் மூலம் தடுத்துவிடலாம்.

எத்தகைய பூச்சு மருந்துகள் உதவும்?

எல்லா வெளிப் பூச்சு மருந்துகளும் உதவுமா?

மருந்தகங்களில் வலிக்காகப் பலவகையான வெளிப் பூச்சு மருந்துகள் விற்பனையாகின்றன. இவை யாவுமே பயனுள்ளவையா எனக் கேட்டால் இல்லையென்றே கூற வேண்டும். Diclofenac, Ibuprofen, Ketoprofen, Piroxicam போன்ற பல வலிநிவாரணி மருந்துகள் ஜெல் மருந்துகளாக பூசுவதற்கு ஏற்ப வருகின்றன. இவை பயனளிக்கும்.
 
அதே நேரம் Methyl salicylate போன்ற சாதாரண வலிநிவாரணி மருந்துகள் Menthol, Camphor, Eucalyptus Oil போன்றவற்றுடன் கலந்து கிடைக்கின்றன. இவை வாசனையையும், பூசுமிடத்தில் சற்று எரிவையும் ஏற்படுத்துவதுடன் நோயாளிக்கு மனதுக்கு இதமான உணர்வையும் கொடுக்கும். 

ஆயினும் அவை வலிநிவாரணிகளாகப் பயன்படுமா என்பது பற்றி நிச்சமாகக் கூறமுடியாது.

காசைக் கரியாக்காதீர்கள்.

எனவே வலிநிவாரணி மருந்துகளாகக் கிடைத்தால் அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். அதில் எது உங்களுக்கு ஏற்றது என்பதை உங்கள் மருத்துவருடன் கேட்டுப் பயன்படுத்துங்கள்.

கடையில் கிடைப்பதையெல்லாம் பூசி காசை வீணாக்காதீர்கள்.

மூட்டு வலிகள் சம்பந்தமான எனது ஏனைய பதிவுகள்

  1. மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்
  2. மூட்டுத் தேய்வு நோயை இனங் காட்டும் ஹெர்படன்ஸ் நோட் (Heberden’s Node)
  3. முதுகு வலிக்கு எக்ஸ் ரே- உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
  4. நாரிப்பிடிப்பு (முதுகு வலி) வராது தடுத்தல்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் தினசரியின் ஹாய்நலமா ? பத்தியில் 15.12.2010 ல் நான் எழுதிய கட்டுரை

Read Full Post »

>

இலங்கை இலக்கிய, விமர்சன, முற்போக்கு அணி ஆகியவற்றில் என்றும் மறக்க முடியாத தடங்களை விட்டுச் சென்றவர்  பேராசிரியர் கைலாசபதி ஆகும். அவரது நினைவாக, நினைவுப் பேருரைகளை வருடா வருடம் கைலாசபதி நினைவுக் குழு மற்றும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்  நடாத்தி வருகின்றனர்..

இவ்வருட கைலாசபதி நினைவுப் பேருரையைச் செய்தவர், கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் அவரது மகளான கலாநிதி பவித்ரா கைலாசபதி ஆகும்.

பேராசிரியர் சபா ஜெயராசா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் பேராசிரியர் க.கைலாசபதி யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், துணைவேந்தராகவும் கடமையாற்றிய காலத்தில் ஆற்றிய பெரும் பணிகளை நினைவு கூர்ந்தார்.

இன்று பல்கலைக்கழகங்களின் தர மேம்பாடு பற்றிப் பேசப்படுகிறது. ஆயினும் பேராசிரியர் கைலாசபதிபணியாற்றிய காலங்களில் யாழ் பல்கலைக்கழகம் உயர்தரத்தில் இருந்தது என்றார். அத்துடன் ராமநாதன் நுண்கலைக் கல்லூரியாக இருந்ததை யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைத்தது மிகப் பெரிய சேவையாகும். இன்று பலர் B Fine arts பட்டம் பெற்று இருக்கிறார்கள் எனில் அதற்கு அத்திவாரம் இட்டவர் அவரே ஆவர் என்றார்.

தான் அதன் தலமைப் பொறுப்பை ஏற்றிருந்த காலங்களில் இவை தொடர்பான பல்கலைக் கழக ஆவணங்களைப் பார்த்த போது ராமநாதன் நுண்கலைக் கல்லூரியை தரம் உயர்த்துவதற்கு அவர் எடுத்த முயற்சிகள் தெரிய வந்தது என்றார்.

இன்று யாழ்பல்கலைக்கழக நூலகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த நூலகம் எனப் போற்றப்படுகிறது. இதற்கும் முக்கிய பங்கு வழி வகுத்தவர் அவர்தான்.

முக்கியமாக மாற்றுவழிச் சிந்தனையுள்ள நூல்களை அதற்குக் கொண்டு வந்தார். உளவியல் என்பது தனிமனிதம் பற்றிய விடயமாக இருந்த போது அதற்கு சமூக வலுக் கொடுக்கும் சகத்தியாக மார்க்சிய  உளவியல் வந்தது. மார்க்சிய  உளவியல் தொடர்பான நூல்களை யாழ்பல்கலைக்கழக நூலகத்திற்கு கொண்டுவர வழி வகுத்தார்.

தனிப்பட்ட ரீதியில் தான் பணம் கொடுத்து வாங்கிய நூல்கள் பலவற்றைத் தான் படித்து முடித்த பின்னர் யாழ்பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்பு செய்வது அவரது வழக்கமாக இருந்தது என்றார். மிக வித்தியாசமான முறையில் இயங்கி தமிழில் ஆழ்ந்த பற்றும் அதன் வளர்ச்சியில் பங்காளியாகவும் இருந்து அழியாத சுவடுகளைப் பதித்தவர் பேராசிரியர் கைலாசபதி என விதந்து போற்றினார்.

நினைவுப் பேருரை ஆற்ற வந்த செல்வி பவித்ரா கைலாசபதி பற்றிக் குறிப்பிடும் போது மனித வள அபிவிருத்தி (Human resource development – HRD)துறையில் புலமையாளர் எம் மத்தயில் மிகக் குறைவு. இவர் அத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவராவார்.கொழும்பு பல்கலைக் கழகத்தில் செல்வாக்குப் பெற்ற விரிவுரையாளராக இருக்கிறார்.

கலாநிதி பவித்ரா கைலாசபதி ‘இலங்கையின் மனித வள அபிவிருத்தி :- இரு உழைப்பாளி குடும்பம் பற்றிய கண்ணோட்டம்’ என்ற பொருளில் நினைவுப் பேருரையை ஆற்றினார்.

இலாப நோக்குள்ள நிறுவனங்கள் மட்டுமின்றி சேவை நிறுவனங்கள், அரச நிறுவனம் போன்ற அனைத்திற்கும் அவற்றின் செயற்பாட்டிற்கு மனித வளம் அவசியம்.

தொழிலில் வெற்றி பெற்றோருக்கு மனிதவளத்தின் முக்கியத்துவம் புரியும். அதனால்தான் முன்னாள் தொழிலதிபரான கென் பாலேந்திராவிடம் உங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் யார் என்று கேட்டபோது “மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம் மக்கள், இரண்டாவது காரணம் மக்கள், மூன்றாவது காரணம் மக்கள்” என்றார். மக்கள் என அவர் குறிப்பிட்டது தனது நிறுவனங்களில் பணிபுரியும் மனித வளத்தையே ஆகும்.

அதே போல மைக்கிரோ சொப்ட் நிறுவன பில் கேட்சிடம் கேட்ட போது அவர் கூறினார் “Greatest asset is the people who out of the building daily after their work” அவர் குறிப்பிட்டது தனது நிறுவன ஊழியர்களான மனித வளத்தையே.

மனிதனானவன் தன் மீது கவனிப்பு இருக்கும் போது அவனது செயலூக்கமும் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது. Hawthorne Effect ஆளணி முகாமைத்துவத்தில் கவனிப்புப் பெறுகிறது. மனிதனை இயந்திரமாகக் கணியாது உணர்வுள்ள மனிதனாக மதிக்கும்போது தொழில் திறன் அதிகரிக்கிறது. 


அரசுகளும் வேலை நேரக் கட்டுப்பாடு, ஓய்வு நேரம், மகப் பேற்று லீவு, போன்ற பலவற்றையும் சட்டங்கள் மூலம் அங்கீகரித்துள்ளன. இவை யாவும் மனித வளத்தை சரியான முறையில் முகாமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே என்றார்.


தொடர்ந்து பேருரையின் முக்கிய பகுதியான இரு உழைப்பாளி குடும்பம் பற்றிய பகுதி சுவார்சமானது. இன்று குடும்பங்களில் கணவன், மனைவி என இருவர் உழைப்பாளிகளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருவர் தொழில் செய்ய வேண்டிய நிலைக்கான காரணங்கள் என்ன?

  • பெண் கல்வி விருத்தியடைந்ததால் கல்வி கற்ற பெண்கள் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
  • இன்றைய வாழ்வுக்கு அதிக பொருளாதாரம் தேவை. இதனால் ஒருவர் உழைப்பது போதாது. இருவரும் உழைக்க வேணடியது அவசியமாயிற்று.

ஆயினும் இதனால் பல புதிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியது அவசியமாயிற்று.

  • இருவரும் வேலைக்கு செல்வதால் குடும்ப வேலைககளைச் செய்வதற்கு நேரம் குறைந்து விட்டது. 8 மணி நேர வேலை, போக்குவரத்து நேரம், தூக்கம் போக குறைந்தளவு நேரமே வீட்டு வேலைகளுக்கு ஒதுக்க முடிகிறது.
  • அதிலும் குழந்தைகள் உள்ள குடும்பம் எனில் வீட்டு வேலையின் கனம் அதிகரிக்கிறது. பாடசாலைக்கு கூட்டிச் செல்லல், பாடம் சொல்லிக் கொடுத்தல், அவர்களுக்கு துணையாக இருப்பது, அவர்கள் நலனைக் கவனிப்பது எனப் பல
  • இதனால் கணவன் மனைவி ஆகிய இருவரும் வீட்டு வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் நேருகிறது. ஆயினும் பெரும்பாலான வீட்டு வேலைகள் பெண்கள் தலையிலேயே விழுகிறது.
  • சமையல், துணி துவைத்தல், குழந்தை பராமரிப்பு, வீடு கூட்டுதல்  போன்ற பலவும் அவளின் பணியாக இருக்கிறது. இருவரும் வேலையால் வீடு வந்ததும் கணவன் ரீவீ அல்லது கணனி முன் உட்கார அவளே தேநீர் தயாரிப்பு முதல் அனைத்து வேலைகளிலும் ஈடுபட நேர்கிறது. கணவனுக்கு வீட்டில் சில திருத்த வேலைகள், தண்ணீர் கரண்ட் பில் கட்டுதல், வாகனப் பராமரிப்பு என சிலவே இருக்கின்றன.
  • பாலியல் ரீதியான வேறுபாடு ஏற்படுகிறது. அதிக சுமை பெண் தலையிலேயே.
  • அதனால் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
  • கலியாணம், மரணச் சடங்கு போன்ற பல சமூகக் கடன்களை நிறைவேற்றுதில் சிரமம் ஏற்படுகிறது.
  • அதிருப்தி நிலை தேன்றுகிறது. 
  • போதைப் பொருள் பாவனை, மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவற்றிக்கு இட்டுச் செல்கிறது.
  • வேலையில் அதிருப்பதி ஏற்பட்டால் திடீரென வேலைக்குச் செல்லாமை, அடிக்கடி லீவு எடுப்பது போன்ற சிக்கல்கள் தோன்றுகினறன.
  • பாலியல் பாத்திரம் தொடர்பான நம்பிக்கையீனம் ஏற்படலாம்.

கொழும்பு பல்கலைக் கழக Business administration Cource தொடர்பான ஆய்வில் பட்டப் படிப்பிற்கான நிலையில் (under graduate level) பெண்களே அதிகளவில் கற்க வந்தார்கள். ஆனால் பட்ட மேற்படிப்பு (Post Graduate level) என வரும்போது மிகக் குறைந்தளவு பெண்களே தோற்றினார்கள்.

காரணம் வெளிப்படையானது. பெண்கள் வேலைக்குப் போனாலும் தமது தொழிலில் தம்மை மேம்படுத்த கல்வி கற்க முடியாத சூழலே நிலவுகிறது. ஏனெனில் இத்தகைய பட்ட மேற்படிப்புகள் பொதுவாக வார இறுதி நாட்களிலேயே நடைபெறுகின்றன. வீட்டு வேலைகளுக்கு அப்பால் தமது மேற் படிப்பிற்கு பெண்களால் நேரம் ஒதுக்க முடியாது உள்ளது.

பெருந்தோட்ட துறையில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் உள்ள தோட்டங்களில் பெண்கள் வேலைக்கு வராமல் இருப்பது குறைவு என்பது தெரிய வந்தது. ஏனெனில் குழந்தை பராமரிப்பின் ஒரு பகுதியை அத்தகைய நிலையங்கள் பொறுப்பேற்றதால் அவளால் தனது வேலையில் கூடியளவு ஈடுபட முடிந்தது.

எவ்வாறு உதவலாம்

இருவரும் தொழில் செய்ய நேரும்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

  • கணவன் மனைவி இடையே நெருங்கிய உறவின் மூலம் பல பிரச்சனைகளதைத் தீர்க்கலாம். முக்கியமாக வேலையால், கணவன் மனைவிக்கு ஏற்படக் கூடிய பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக அவளிடம் கேட்டறிந்து உதவி செய்யலாம். உதாரணமாக பாத்திரம் கழுவுதல் வீடு கூட்டுதல் போன்று சில பணிகளையாவது தான் செய்து கொடுத்து அவளது வேலைப் பளுவைக் குறைக்க உதவுவது அவசியம்.
  • திருமணப் பொருத்தம் பார்க்கும்போது சாத்திரப் பொருத்தம் தேவையில்லை. கருத்தியல் (Ideology) பொருத்தம் எப்படி என்பதைப் பார்க்க வேண்டும். அவர்களிடம் புரிந்துணர்வு இருக்க வேண்டும். அதாவது குடும்ப வாழ்வில் கணவன் மனைவியின் பங்குகள் பற்றி திறந்த மனப்பான்மை உள்ள கணவன் விரும்பத்தக்கது.
  • பெற்றோரின் உதவி. கணவன் அல்லது மனைவியின் பெற்றோர் கூட இருந்தால் குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலைகள் ஆகியவற்றில் இருவரும் உழைக்கும் குடும்பத்தின் சுமுகமான நடப்பிற்கு உதவும். ஒரு ஆய்வின்போது இத்தகைய குடும்பங்களில் 75% பெற்றோர் கூட இருப்பது நன்மையளித்ததாகத் தெரிகிறது.
  • குழந்தை பராமரிப்பு நிலையங்கள். இது இருந்தால் பெற்றோர்கள் தமது குழந்தைகளின் பொறுப்பை அங்கு விட்டுவிட்டு நிம்மதியாக தொழில் செய்ய முடியும்.
  • நெகிழ்வு நேரம். குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்குப் போய் குறிப்பட்ட நேரத்தில் திரும்ப வேண்டும் என இல்லாமல் நெகிழ்வு நேரம் உதவும். உதாரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகப் போய் மாலையில் ஒரு மணிநேரம் கூடுதலாக வேலை செய்வதின் மூலம் உதவலாம்.
  • கூடுதலான நேரம் வேலை செய்பவர்தான் உண்மையான ஊழியர் என்ற எண்ணம் பல மேலதிகாரிகளுக்கு இருக்கிறது.ஆயினும் குறைந்த நேரத்தில் அவ்வேலையை நிறைவு செய்து விட்டு மிகுதி நேரத்தை குடும்பத்துடன் செலவளிக்க உதவலாம். இதன் மூலம் அவர்களின் பணித் திறனை அதிகரிக்கவும் முடியும்.
  • சாதகமான சட்டங்கள். உதாரணமாக maternity leave, Paternity leave, Family leave போன்றவை உதவும்
  • பகுதி நேர வேலை. பெண்களால் முழு நேர வேலைக்குப் போக முடியாத நிலையில் அவர்களுக்கு பகுதி நேர வேலை கொடுப்பதன் மூலம் வேலைக்குப் போகும் மனநிறைவைக் கொடுப்பதுடன் குடும்பத்தைக் கவனிக்கவும் முடியும்.
  •  அவுஸ்திரேலியாவில் பல இவ்விடயத்தில் பல முற்போக்கான நடைமுறைகள் உள்ளன. பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள் ஆரம்பிப்பதற்கு நிதியுதவியை அரசாங்கம் செய்கிறது. ஊக்கப்படுத்துகிறது. அத்துடன் அவற்றின் செயற்பாடுகள் பற்றி கண்காணிப்பு செய்யப்படுகிறது. இதனால் அங்கு அதிகளவு பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடியதாக இருக்கிறது.

இறுதியாக கலாநிதி பவித்ரா கைலாசபதி இந்த நினைவுப்பேருரை பற்றிக் குறிப்பிடும்போது தான் இதில் பேசுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

” உங்கள் எல்லோருக்கும் கைலாசபதி ஒரு நண்பர், தோழர், அல்லது விமர்சகராக இருக்கிறார். ஆனால் அவர் எனக்கு அப்பா. இந்த வகையில் நான் அவரது நினைவுப் பேருரையை செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் பெருமைக்குரிய, மனநிறைவை அளிக்கும் சம்பவமாகக் கருதுகிறேன்”

உள்ளத்தைத் தொடும் இந்தச் சிறுகுறிப்புடன் அவர் தனது உரையை நிறைவு செய்த போது கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் ஒரு கணம் மன நெகிழ்வுற்றதை உணரக் கூடியதாக இருந்தது.  அவரோடான தம் உறவை மீளநினைந்து உறவின் புத்துயிர்ப்பின் ஈர்ப்பில் இருக்கையிலிருந்து எழ மறந்து நினைவுகளில் ஆழ்ந்தனர்.

Read Full Post »

>
அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்திக் கொண்டு நின்றன. கையை நீட்டியபோது முன்கையில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது.

வேறும் இருக்கிறதா எனக் கேட்டபோது இடது முழங்கையின் உட்புறமாக ஒன்று சாடைமாடையாகத் தெரிந்தது. கண்ணில் தெரிந்ததைவிடத் தடவிப் பார்த்தபோது தெளிவாகப் புரிந்தது.

ஏதாவது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமா எனச் சந்தேகிக்கிறீர்களா? இல்லை. அந்தப் பெண்மணிக்கே புற்றுநோய் என்ற பயம் இருக்கவில்லை. ஏனெனில் பல வருடங்களாக இருக்கின்றன. எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.

கொழுப்புக் கட்டிகள் – லைப்போமா (lipoma) எனப்படும் இவை ஆபத்தற்றவை. புற்று நோய் என்ற கலக்கத்திற்கு இடமே இல்லை. இவை சருமத்திற்குக் கீழாக வளர்கின்றன. தசை, சவ்வு எலும்புகள் போல ஆழத்தில் இருப்பதில்லை. மேற்புறத்தில் மட்டுமே இருக்கும். ஒன்று முதல் பல கொழுப்புக் கட்டிகள் ஒருவரில் தோன்றக் கூடும்.
 
பொதுவாக கட்டிளம் பருவத்திலேயே ஆரம்பித்தாலும், நடுத்தர வயதில் வெளிப்படையாகத் தெரியும். ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் இருபாலாரிலும் தோன்றும்.

காரணம் உண்டா?

இவை தோன்றுவதற்கான காரணம் தெரியாது. பொதுவாக குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்களில் அவதானிக்கப்படுவதால் பரம்பரைக் காரணிகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. வெளிப்டையான காயங்கள் இல்லாத ஊமைக் காயங்கள் அல்லது கண்டல் காரணங்களால் ஏற்படக் கூடும் எனவும் நம்பப்படுகிறது.

அறிகுறிகள்

திடீரெனத் தோன்றும் நோயல்ல. படிப்படியாக பல வருடங்களின் பின்னர் அதுவும், தொட்டால் தெரியுமளவு வளர்ந்த பின்னரே ஒருவர் அவதானிப்பார். வெளிப்படையாகத் தெரிய மேலும் காலம் எடுக்கும்.

பொதுவாக மென்மையானதாக இருக்கும். குழைத்த மாப் போல அல்லது ரப்பர் போல இருக்கும்.

தோலுக்குள் கீழாக நளுநளுவெனத் தோலுடன் ஒட்டாது நழுவிச் செல்வது போலிருப்பது இதன் முக்கிய அறிகுறியாகும்.

இதன் வடிவம் கும்பிபோல அல்லது முட்டைபோல நீள் வட்டமாக இருக்கும். அளவில் பெரு வேறுபாடுகள் இருக்கலாம். 2-10 செமி வரை வளரலாம். ஆனால் அதனிலும் பெரிதாகவும் நாம் காண்கிறோம்.

தோள், கழுத்து முதுகு, வயிற்றுப் புறம், கை போன்ற இடங்களில் காணப்;படுகிறது. ஆனால் சருமத்தில் கொழுப்பு உள்ள இடமெங்கும் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.

கண்ணில் படுவதைத் தவிர இந்தக் கொழுப்புக் கட்டிகள் வேறெந்த அறிகுறிகளையும் காண்பிப்பதில்லை.

தொட்டால் கூட வலிப்பதில்லை. ஆயினும் சில மட்டும் இறுக அழுத்தினால் சற்று வலியை ஏற்படுத்தும். அவ்வாறு வலிப்பவை பொதுவாகச் சற்று குருதியோட்டம் அதிகமான கொழுப்புக் கட்டிகளாகும். இவற்றை அஞ்சியோ லைப்போமா என்பார்கள். அவையும் ஆபத்தானவை அல்ல என்பது குறிப்பி;த்தக்கது.

புற்றுநோயாக மாறுமா?

கொழுப்புக் கட்டிகள் உடனடியாக ஆபத்தானவை அல்ல என்றாலும் இவை எதிர்காலத்தில் புற்றுநோயாக மாறுமா என்ற பயம் ஏற்படுவது இயல்பே. ஆனால் அவ்வாறு மாறுவதில்லை.

ஆயினும் லைப்போ சார்க்கோமா என்ற ஒருவகை கொழுப்புப் புற்றுநோய் இருக்கிறது. தோலில் அல்லாது சற்று ஆழத்தில் கண்ணில் படாதவாறு இருக்கும் சில கொழுப்புக் கட்டிகள் திடீரென பருமனடைந்து வலியையும் கொடுக்குமாயின் மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம். ஊசி மூலம் சிறு துளியை எடுத்து ஆராய்ந்து (biopsy) பார்ப்பார்கள்.
 
சிகிச்சை

பொதுவாக எந்தச் சிகிச்சையும் தேவைப்படாது. ஓரளவு காலத்தின் பின் அது வளர்ச்சியடைவது தானாகவே நின்றுவிடும். ஆயினும் மறையாது. அது இருப்பதால் அருகில் உள்ள தசைகளின் இயக்கத்திற்கு பிரச்சனை இருக்குமாயின் அகற்ற நேரிடும். சத்திர சிகிச்சை மூலம் அன்றி உறிஞ்சி எடுப்பதன் (Liposuction)    மூலம் அகற்றலாம்.

புற்றுநோயல்லாத மற்றொரு கட்டி பற்றிய எனது முன்னைய பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2011

எமது  ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் தைப்பொங்கல் தினமாகிய இன்று 15.01.2011 பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரியில் நடை பெற்ற போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

இறை தியானத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது.

அங்கத்தவர்கள் மெளனமாக  எழுந்து நின்று இறை தியானம் செய்தனர்.

தொடர்ந்து தலைவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் தலைமையில் கூட்டம் நடை பெற்றது.



தலைமையுரையைத் தொடர்ந்து பதில் செயலாளர் திரு.க.பிரபாகரன் தனது அறிக்கைகளை வாசித்தார்.

கலந்துகொண்ட பெண்களில் ஒரு பகுதியினர்.

ஆண்களில் சிலர்.

உபபொருளாளர் திருமதி வள்ளி பிரபாகர் சென்ற ஆண்டிற்கான கணக்கறிக்கையச் சமர்ப்பித்தார். 

ஆற்றிய பணிகள் பற்றியும், பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் பற்றியும் கருத்துரை வழங்கிய எம்.கே.முருகானந்தன்.

சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது.


மீண்டும் தலைவராகத் தெரியப்பட்ட டொக்டர்.எம்.கே.இரகுநாதன் ஏற்புரை வழங்குகிறார்.

கூட்டம் மாலை 6 மணியளவில் நிறைவுற்றது.

புதிய செயற்குழு பற்றிய விபரத்தை விரைவில் இத் தளத்தில் காணலாம்.

Read Full Post »

> “இரண்டு நாளாகக் காய்ச்சல், மூட்டு மூட்டாக வலிக்கிது. சாப்பாட்டைக் கண்டால் ஓங்காளமாகக் கிடக்கு..”

என்று சொல்லிக் கொண்டு வந்தவர் திரும்பி மனைவியைப் பார்த்தார்.

“வேறை என்னப்பா சொல்லுமன்.” என்று மனைவிக்கு ஆணை பிறந்தது.

சொன்ன வார்த்தைகளில் கட்டளை இருக்கவில்லை என்றபோதும் தொனியில் அப்பட்டமாகத் தெறித்து விழுந்தது.

“சத்தியும் இருக்கு. தொண்டை அரிப்பு, கொஞ்சம் இருமலும்” என்றாள் மனைவி.

“வேறை என்ன சொல்லுமன்” மீண்டும் அவர்தான்.

“உடம்புக்கு முடியாமல் படுத்துக்கிடக்கிறார்… சாப்பிடுறாரும் இல்லை….காய்ச்சல் வாய்க்குத் தோதா உப்புக் கஞ்சி காச்சிக் கொடுத்தும் வேண்டாம் என்கிறார்.”

அப்பதான் புரிந்தது!

வருத்தம் அவருக்கல்ல! மனைவிக்கு என்பது.

அவரை அருகில் உள்ள கதிரையில் உட்கார வைத்து மிகுதி விபரங்களையும் கேட்டுக் குறித்துக் கொண்டேன். பெரும்பாலும் மனைவியே மறுமொழிகளை சொன்னாள். விபரமாகவும் தெளிவாகவும் சொன்னாள்.

நோய் கடுமையாக இல்லை. ஆனால் விளம்பரமாகச் சொல்ல முடியாத மங்குளி போலிருக்கிறது. அதனால் மனைவியே ஸ்பீக்கராகச் செயற்படுகிறார் என்றவிதமான புரிதல் எனக்கு ஏற்பட்டது.

காய்ச்சல் இருக்கிறதா எனப் பார்க்க தேர்மாமீற்றரை வாயுக்குள் வைத்தேன். அசமந்தமாக அக்கறையற்று இருந்தார். விழுந்து உடைந்து விடுமே எனப் பயம் வந்தது.

“விழாமல் பிடித்துக் கொள்ளுங்கோ” என்று சொன்னபோதும் அவரது கை மரக்கட்டையாக அசையாது நின்றது. மனைவியே பிடித்துக் கொண்டாள்.

பரிசோதனைக்காகக் கட்டிலில் படுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. கட்டில் சற்று உயரமாதலால் சிறிய ஸ்டுலில் கால் வைத்து ஏற வேண்டும். எழுந்து நின்ற அவர் எதுவுமே பேசாமல் ஸ்டூலைப் பார்த்தார். சின்ன பாரமற்ற ஸ்டூல். சற்று காலால் நகர்தினால் போதும் சரியான இடத்திற்கு வந்து விடும்.

மனைவி பாய்ந்தோடி வந்து ஸ்டூலை நகர்த்தி அவர் ஏறுவதற்கு வசதியாக வைத்தார்.

“கவனமாகப் பார்த்து ஏறுங்கோ” சொன்னதுடன் நிற்கவில்லை. கையைப் பிடித்து ஏறுவதற்கு துணை நின்றாள். சரிந்து படுத்தவுடன் அவரது பட்டன்களைக் கழற்றி சேர்ட்டை ஒரு பக்கமாக ஒதுக்கி பரிசோதனைக்கு தயார்ப்படுத்தினாள்.

காய்ச்சலுடன் வயிற்றுப் பிரட்டலும் அதிகமாக இருந்ததால் மலவாயில் ஊடாக மருந்து வைக்க வேண்டிய தேவை இருந்தது.

விடயத்தைச் சொன்னதுதான் தாமதம் உடனடியாக அவரது உள்ளாடையை சற்று கீழாக விலத்தி, மலவாயில் தெரியும்படி குண்டித் தசைகளைப் பக்கமாக விலத்திப் பிடித்துக் கொண்டாள்.

நான் சப்போசிட்டரியை லாகுவாக வைத்துவிட்டேன்.

மிகுந்த அக்கறையும் ஆதரவும் பரிவுணர்வும் கொண்ட பெண் என்பது புரிந்தது. அத்தகைய புரிந்துணர்வுள்ள பெண்ணை மனைவியாகப் பெறுவதற்கு எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

திரைச்சீலை மூடித் திறக்கிறது. அடுத்த சீன் ஆரம்பமாகியது.

“சுருண்டு சுருண்டு படுக்கிறாள். வேலை ஒண்டும் பறியுதில்லை… என்னெண்டு பாருங்கோ”

உசாராக வந்த இவர் உட்கார்ந்த பல நிமிடங்களுக்குப் பின்னர்தான் அவள் வந்தாள். தள்ளாடியபடி விழுந்துவிடுவது போன்ற களைப்புடன்.

நல்ல காய்ச்சலும் சத்தியும். இவரிலிருந்து தொத்திய வருத்தம்தான். ஆனால் மேலும் சற்றுக் கடுமையாகத் தாக்கிவிட்டது.

காய்ச்சல் பார்க்கும்போது தானே தேர்மாமீட்ரைப் பற்றிக் கொண்டாள்.
கதிரையிலிருந்து கால்களை ஆட்டியபடி கொட்டாவிவிட்டார்.

நானும் நேர்சும் கையைப் பிடித்துத் தூக்கி கட்டிலில் ஏற்ற வேண்டியிருந்தது.

“கொஞ்சம் உசாரா ஏறுறதுதானே. டொக்டருக்கு கரைச்சல் குடுக்கிறாய்” என பின்னாலிருந்து அதட்டல்தான் வந்தது.

 “கட்டின காலம் முதல் இவள் இப்படித்தான் சின்ன நோயெண்டாலும் தூக்கிப்பிடிப்பாள்”

நாக்கு வரண்டு கிடந்தது. காச்சல் நேரத்தில் போதிய நீராகாரம் எடுக்க வேண்டும். இவள் எடுத்ததாகத் தெரியவில்லை.

“என்ன குடிக்கக் கொடுத்தனீங்கள்” விசாரித்தேன்.

“கிறீம்சோடாதான் குடிச்சவள்.”

“ஏன் உடம்புக்கு ஆதாரமாக ஹோர்லிக்ஸ், கஞ்சி ஏதாவது கொடுத்திருக்கலாமே” என விசாரித்தேன்.

 “அவள் எங்கை எழும்பிக் கரைக்கிறாள், சோம்பல்காரி, போர்த்துக் கொண்டு படுத்திட்டாள்”

நோயாளியைப் பராமரிக்கும் அவரின் அக்கறையை என்ன வார்த்தைகளில் பாராட்டுவது.

சேலைன் ரிப் கொடுக்க வேண்டி வந்தபோது அருகில் ஆதரவாக இருக்க அவரில்லை.

“இவளோடை இருந்தால் எனக்குக் கொலைப் பட்டினிதான். நீங்கள் கொஞ்சம் கவனியுங்கோ. நான் பக்கத்துக் கடையிலை ஏதாவது சாப்பிட்டு ரீயும் குடிச்சிட்டு வாறன்”

அசந்து கிடந்த அவள் மெதுவாகக் கண்ணைத் திறந்தாள். “கவனமாகப் பார்த்துப் போங்கோ. ஓட்டோ, மோட்டார் சைக்கிள்கள் கண்மண் தெரியாமல் ஓடி வந்து தட்டிப் போடும்.

பெண்ணே நீ படுக்கையில் கிடந்தால் என்ன பரலோகம் போனால் என்ன எனக்கு என் சொகுசு முக்கியம் என்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

புறப்பட்ட அவர் காதில் விழுந்ததோ தெரியவில்லை. அவர் பறந்து போனார்.
அப்பிராணியான அவள் கிடந்து உழன்றாள்.

எதற்கும் குறை கண்டு, குற்றம் சாட்டி, தொழிலாளியில் அக்கறை எடுக்காத முதலாளிபோல அவர் தன் வயிறு நிறைக்கப் போகிறார்.

நீங்களும் இப்படியான கணவனாகத்தான் இருக்கப் போகிறீர்களா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

வீரகேசரி வாரவெளியீடு 12.12.2010 வெளியான எனது கட்டுரை

முதிய தந்தையின் துயரக் குரல் பற்றிய எனது முன்னைய பதிவுக்கு

‘எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ’ துயரக் குரல் பின் கதவில் கேட்கிறது.

0.0.0.0.0.0

Read Full Post »

>

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2011

 மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தினரின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர் வரும் தைப்பொங்கல் தினத்தன்று (15.01.2011) மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லாரியில் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் தலைமையில் நடைபெற உள்ளது.

தலைமையுரை, செயலாளரின் ஆண்டறிக்கை, பொருளாளர் அறிக்கை, ஆகியவற்றைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழு தெரிவும் இடம்பெறும்.

பெற்றோர், பழைய மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் உட்பட மேலைப் புலோலி சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும் கூட்டத்தில் பங்கு பற்றி பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி ஒத்துழைக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

புதிய அங்கத்தவர்களின் வருகையையும் எதிர்பார்க்கிறோம்.

எம்.கே.இரகுநாதன்                                                  க.பிரபாகரன்
    தலைவர்                                                              பதில் செயலாளர்

Read Full Post »

>வரட்சியான சருமம் ஏன் ஏற்படுகிறது, அது மோசமடைவதற்குக் காரணங்கள் என்ன? அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்ன? இவை போன்ற விடயங்களை ஏற்கனவே பார்த்தோம்.

சருமத்தைப் பராமரிப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை பற்றி இன்று பார்க்கலாம்.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?

ஏற்கனவே கடுமையாக வரட்சியடைந்த சருமத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது சிரமமான போதும் உங்கள் சருமத்தை நலமுடன் பாதுகாக்க நிறையவே நீங்கள் செய்யக் கூடியவை பல.
சருமத்தை ஈரலிப்பாக வைத்திருங்கள்.

சருமத்தின் ஈரலிப்பைப் பேணுவதற்கான பல வகை கிறீம்களும், லோசன்களும் இப்பொழுது கிடைக்கின்றன.

இவை மென்படையாக பரவி சருமத்திலிருந்து நீர் வெளியேறுவதைத் தடுக்கின்றன. இவற்றைக் குளித்த உடன் போடுவது நல்லது.

மிகக் கடுமையான தோல் வரட்சியெனில் பேபி ஓயில் போன்ற எண்ணெய் வகைகள் கூடிய பலனளிக்கும். இது கூடிய நேரத்திற்கு உங்கள் சருமத்தை ஈரலிப்பாக வைத்திருக்க உதவும்.

அளவான குளிப்பு

முன்னரே குறிப்பிட்டது போல அதிக நேரம் நீரில் ஊறுவது சருமத்திற்கு கூடாது. எனவே குளிப்பதற்கு அதிக நேரம் எடுக்க வேண்டாம். சாதாரண நீரில் குளிக்கலாம். சுடுநீர் தேவையெனில் கடுமையான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டாம். நகச் சூடு போதுமானது.

சோப்

  • சருமத்திற்கு ஆதரவளிக்கும் மென்மையான சோப் வகைகளைப் பாவிப்பது நல்லது. 
  • கிருமி நீக்கி (antibacterial) மற்றும் காரமான சோப் வகைகள் அறவே கூடாது. 
  • அதே போல மணம் நீக்கிகளும் (deodorant) நல்லதல்ல. 
  • எண்ணெய் மற்றும் கொழுப்புகளை அதிகம் கொண்ட சோப் வகைகள் நல்லது. Neutrogena, Dove போன்றவை அத்தகையவையாகும்.

ஆனால் அதற்கு மேலாக சோப் அற்ற சுத்தமாக்கிகள் கிடைக்கின்றன. Cetaphil, Dermovive Soap Free wash போன்றவை அத்தகையன.

ஓவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வகை ஒத்து வரலாம். அதைக் கொண்டு சுத்தமாக்கிய பின் உங்களது சருமம் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருப்பதாக உணர்கிறீர்களோ அதுவே நல்லதெனலாம். மூலிகைகள் அடங்கிய சோப் வகைகள் நல்லதெனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் அவற்றிலும் சோப் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

குளித்த அல்லது சுத்தமாக்கிய பின்

  • குளித்து அல்லது சுத்தமாக்கிய பின் உங்கள் சருமத்தை மென்மையான டவலினால் ஒத்தியெடுத்து நீரை அகற்றுங்கள். தடிப்பான டவல்கள் சருமத்திற்கு ஊறு விளைவிக்கலாம். 
  • அதே போல அழுத்தித் தேய்த்து துடைப்பதும் சருமத்திற்கு உவப்பானதல்ல. 
  • துடைத்த பின் உடனடியாகவே ஈரலிப்பூட்டும் கிறீம், ஓயின்மென்ட் அல்லது லோசனைப் பூசுங்கள். இதனால் குளிக்கும் போது உங்கள் சருமத்தின் கலங்கள் பிடித்து வைத்திருக்கும் நிர்த் துளிகள் ஆவியாகி வெளியேறாது தடுக்கலாம்.

‘குளித்த பின் குளிர் பிடிப்பதைத் தடுக்கும்’ என சிலர் ஓடிக்கோலோன் போடுவது வழக்கம். இதில் எதனோலும் மணமூட்டிகளும் உள்ளன. இவையும் சருமத்தை அழற்சியடையச் செய்யக் கூடும். சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. எனவே இவற்றையும் வரட்சியான சருமம் உள்ளவர்களும் அது வருவதற்கான சாத்தியம் உள்ளவர்களும் தவிர்ப்பது நல்லது.

உடைகள்

  • சருமத்திற்கு ஏற்றவை பெரும்பாலும் பருத்தி உடைகளே. அவை உங்கள் சருமத்திற்கான காற்றோட்டத்தைத் தடுப்பதில்லை. நைலோன், கம்பளி போன்றவை சருமத்திற்கு ஏற்றவையல்ல. 
  • உடைகளைக் கழுவும் போது கடுமையான அழுக்கு நீக்கிகள், கடும் வாசனை மற்றும் நிறமூட்டிகள் கொண்ட சோப், சோப் பவுடர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவையும் சருமத்திற்கு எரிச்சலூட்டி வரட்;சியாக்கலாம்.

வரட்சியான சருமத்தடன் அரிப்பும் ஏற்பட்டால் சாதாரண கிறீம் வகைகள் போதுமானதல்ல. ஹைரோகோட்டிசோன் கிறீம் வகைகள் தேவைப்படலாம்.

ஆயினும் மருத்துவ ஆலோசனையுடன் உபயோகிப்பது நல்லது. சருமம் சிவந்திருந்தால், தூக்கத்தையும் கெடுக்கக் கூடிய அரிப்பு இருந்தால், சருமத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தால், அவ்விடங்களில் வலியிருந்தால் அல்லது கடுமையாக தோல் உரிந்து கொண்டிருந்தால் மருத்துவரைக் காண்பது மிகவும் அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>அம்மம்மா தினமும் தனது கால்களுக்கு நல்லெண்ணய் பூசுவது நினைவில் இருக்கிறது.

“ஏன் பூசுகிறீர்கள்” என்று கேட்டபோது ‘பனிக்குக் கால் தோல் வெடிச்சுப் போகும். எண்ணெய் பூசினால் குளிர்மையாக இருக்கும்’ என்பார்.

அன்று அவ்வாறு கூறியது எவ்வளவு அனுபவ பூர்வமானது என்பது இப்பொழுது புரிகிறது.

இருந்தபோதும் எம்மவர் மத்தியில் தமது சருமத்தைப் பேணுவதின் அவசியம் பற்றி அக்கறை இன்றும் கூட பரவலாக இல்லை.

அழகு சாதனங்களை முகத்தில் பூசுவது மட்டுமே போதுமானது என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. அவை உடனடியாக அழகு படுத்துமே அல்லாமல் சருமத்தை பேணுமா என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.

சருமம் என்பது முகத்தில் மட்டுமல்ல உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ளது. அதனைப் பேணுவது அழகுக்காக மட்டுமல்ல எமது உடல் நலத்திற்கும் அவசியமானதாகும்.

எம்மவர்கள் பலர் குளிர் மூடிய மேலைத் தேசங்களில் வாழ்வதால் அவர்களுக்கு Dry Skin பற்றி நிறையவே தெரிந்திருக்கிறது. அவர்கள் தமது உறவுகளுக்கு குளிர்ச்சியூட்டும் களிம்புகளை (moisturizing cream)அனுப்புவதால் இப்பொழுது இங்கும் அவற்றின் பாவனையும் விற்பனையும் சற்று அதிகமாகிறது.

வரட்சியான சருமங்கள் ஒரே விதமானவை அல்ல

சாதாரணமான வரட்சிச் சருமம் என்பது பிரச்சனையான விடயம் அல்ல. தாங்களாகவே சமாளிக்கக் கூடியது.

ஆனால் சற்று மோசமானால் தோல் தடித்து, சுருக்கங்கள் விழுந்து ஓணான் தோல் போல பார்ப்பதற்கு அசிங்கமாகிவிடும். ஆனால் பிறவியிலேயே சுருக்கமான சருமத்துடன் சிலர் இருப்பதுண்டு. இக்தியோசிஸ் (Ichthyosis) என்பார்கள். 

அழகைக் கெடுப்பது மாத்திரமின்றி உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது. மருத்துவரின் ஆலோசனையுடன் இவர்கள் தமது சருமத்தைப் பேண வேண்டியிருக்கும்.

பெரும்பாலானவர்களுக்கு வரட்சியான சருமம் என்பது காலத்திற்குக் காலம் வந்து மறையும் பிரச்சனையாகவே இருப்பதுண்டு.
சிலருக்கு எந்நாளும் தொடர்வதுண்டு.

நீரிழிவு நோயாளர்களும் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதுண்டு. பனிகாலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

கால்கள், முன்னங்கை, வயிற்றின் பக்கங்கள் பொதுவாக வரட்சியாவது அதிகம்.

வரட்சியான சருமம் உள்ளவர்கள் தமது தோல் சற்று இறுக்கமாக இருப்பதாக உணர்வர். இந்த இறுக்கமானது குளித்த பின் அதிகமாகத் தோற்றும்.

வழமையில் அது தனது ஈரலிப்பையும் மிருதுவான தன்மையையும் இழந்து சற்று சொரசொரப்பாக இருக்கும்.

காலகதியில் நுண்ணிய கோடுகள் விழுவதுடன் பின்னர் சருமத்தில் வெடிப்புகளும் வரலாம். மேலும் அதிகரித்தால் சிவத்து ஆழமாக வெடித்து இரத்தம் கசியவும் கூடும். அக்கறை எடுக்காவிடில் வெடித்த சருமத்தில் கிருமி தொற்றி சீழ் பிடிக்கவும் கூடும்.

ஏன் ஏற்படுகிறது

மிக முக்கிய காரணம் சீதோட்சண நிலைதான். குளிர் காலத்தில் சுற்றாடல் உஷ்ண நிலையும், ஈரலிப்புத் தன்மையும் தாழ்ந்திருக்கையில் சருமம் மிகவும் வரட்சியடைகிறது. ஏற்கனவே இப் பிரச்சனை இருந்தால் மேலும் மோசமடையும்.

சிலருக்கு உலகில் உள்ள அழுக்கு முழுவதும் தங்கள் உடலில் பட்டிருப்பதாக நினைப்பு. நீண்ட நேரம் குளிப்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் ‘கிணறு வற்றப் போகுது’ அல்லது ‘வோட்டர் பில் ஏறுது’ எனச் சொன்னாலும் காதில் விழுத்தாது குளிப்பர்.

நீண்ட நேரம் தண்ணீரில் ஊறிக்கொண்டு இருந்தால் தோலுக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கும் கொழுப்பு பாதுகாப்புக் கவசம் அகன்றுவிடும். தோல் வரட்சியடையும். அதே போல நீண்ட நேரம் நீச்சலடித்தாலும் நடக்கும்.

எனவே அழுக்கை அகற்றக் குளியுங்கள். அதற்காக எருமை போல தண்ணிரில் ஊற வேண்டாம்.

சோப் போடுவது அவசியம்தான். ஆனால் காரச் சோப்புகளும் கிருமி நீக்கி சோப்புகளும் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பிடிப்பையும், நீர்த்தன்மையையும் அகற்றிவிடும். வழமையாக நாம் பாவிக்கும் பல பிரபல சோப்புகளும் இதில் அடங்கும்.

எனவே தோல் வரட்சியுள்ளவர்களுக்கு என சோப் அல்லாத அழுக்கு நீக்கிகள் (Soap free Wash) கிடைக்கின்றன. சற்று விலை அதிகமாயினும் மிகுந்த வரட்சியான சருமம் உள்ளவர்களுக்கு நிறையவே உதவும். பெரும்பாலான சம்பூ வகைகளும் சருமத்தை வரட்சியடையச் செய்கின்றன.

கடும் குளிர் கூடாது என்பது போலவே கடுமையான சூரிய ஒளியும் வெப்பமும் சருமத்தை வரட்சியடையச் செய்கின்றன. அதற்கு மேலாக சூரிய ஒளியில் உள்ள அல்ரா வயலட் கதிர்களாவன (UV Radiation)  மேல் தோலைக் கடந்து உட் தோலையும் பாதிக்கிறது. இதனால் ஆழமான சுருக்கங்கள் மட்டுமின்றி தோல் தொய்வடையவும் செய்கிறது.

சொரசிஸ் (Psoriasis) என்ற தோல் நோயும், தைரொயிட் சுரப்பிக் குறைபாட்டு நோய்களும் (Hypothyroidism) இதற்குக் காரணமாகின்றன.

பின்விளைவுகள்

வரட்சியான தோலானது எக்ஸிமா எனப்படும் தோல் அழற்சிக்கு முக்கிய காரணமாகிறது. அதன் போது தோல் அழற்சியுற்று, சிவந்து வெடிப்புகளும் தோன்றலாம். அரிப்புடன், நீர் கசியவும் கூடும்.

சிறிய சிறிய சீழ் கட்டிகள் (Folliculitis) தோன்றுவதற்கும் இதுவே காரணமாகிறது.

கிருமி தொற்றி அது உட்தோலுக்கும் அதற்குக் கீழ் உள்ள திசுக்களுக்கும் பரவுவது மிகவும் ஆபத்தானது. செலுலைட்டிஸ் (Cellulitis) எனப்படும் இதன் விளைவாக கிருமிகள் இரத்தத்திற்கும் நிணநீர்த் தொகுதிக்கும் பரவி முழு உடலையுமே பாதிக்கலாம்.

அடிக்கடி இவ்வாறு செலுலைட்டிஸ் (Cellelitis) வந்தால் தோலும் அதன் உட்புறமும் பாதிப்புற்று யானைக் கால் போல நிரந்தர வீக்கமாகிவிடுவதும் உண்டு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »