Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச், 2011

>

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் – பருத்தித்துறை                      பழைய மாணவர் ஒன்றிய பொதுக்கூட்டம் 2011 – 01 – 14ல்  பம்பலப்பிட்டி இந்துக் கல்லுர்ரியில் நடைபெற்ற போது தெரிவு செய்யப்பட்ட செயற்குழு விபரம்

Office bearers-2011

Patron:                        Mr.S.Balachandran

President                    Dr.  M.K.Ragunathan

Senior Vice President: Dr.M.K.Murugananthan

Vice Presidents:         M/s M.Somasundaram                                                                 
                                        R.Raveendran

                                 Dr.  G.Ketheeswaranathan
                                 M/s S.Vasudevan
                                        A.Sivanathan

Joint Secretaries        M/s K.Prabakaran
                                      S.K.Shanmugasundaram

Treasurer:                  Ms.Valli Prabagar
Asst.Treasurer                 S.Ratnasingam

Committee members:       Dr. S.Mahalingam
                                     M/s    Sritharan
                                           K.Thillainathan
                                           S.Jeevakumar
                                           U.Varatharajan
                                     Ms.Vigna Selvanayagam
                                     M/s A.K.Nadarajah
                                           K.Sithamparanathan
                                            T.Balendran
                                           A.Srinathan
                                     Ms.Neelambikai Gopalakrishnan
                                     Ms.Yogeswari shanmugasundaram

Advisory Committee:      M/s.Raj. Subramaniam
                                          K.Kalakaran
                                          K.Satchithanantham
                                          S.Varnakulasingam
                                    Ms.Rajeswari Parameswaran
                                    M/s.K.Sriskandarajah
                                    Ms.Genga Ramachandran
                                    M/sT.Selvamohan
                                         S.Vasanthan
                                         S.Thayaparan
                                    Ms.Manimadevi Murugananthan
                                    Mr. R.Mohan
Auditor:                         Mr.S.Thayalingam

Read Full Post »

>

ஒரு தொடர் மாடி வீட்டிற்குச் சென்ற போது பல ஆண்கள் தும்புத்தடி, பிரஸ், பூச்சி மருந்து ஸ்பிரேகள் சகிதம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

“என்ன விசயம்?” என விசாரித்தேன்.

“சிரமதானம் செய்கிறோம். கரப்பத்தான் பூச்சிகளை ஒழிப்பதற்கு” என்றனர்.

சமூக அக்கறையுள்ள செயற்பாடு. கேட்பதற்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது.

எங்கும் உள்ளவர் எல்லாம் வல்லவர்.

எங்குமுள்ள எல்லாம் வல்ல ஆண்டவனோ என்று சொல்லுமளவிற்கு உலகெங்கும் பரந்துள்ளனர். அத்துடன் பலவிதமான நோய்களைப் பரப்புவதற்கும் காரணமாக உள்ளனர். எனவே அவர்களை ஒழிக்க எடுக்கும் எந்த முயற்சியும் பாராட்டத்தக்கதே. உலகை ஆட்சி புரிந்து வருவது இவர்களது இனம்தான்.

சாதாரணமாக நாங்கள் கரப்பொத்தான் பூச்சி என்று சொன்னாலும் இவர்களுக்குள் 5000ற்கு மேற்பட்ட உப இனங்கள் உள்ளனவாம்.

இவைகளுள் மிகப் பெரியவரைக் கண்டால் குழந்தைகள் மட்டுமல்ல நீங்களும் பயந்துவிடுவீர்கள். 6 அங்குல நீளமும் சிறகு விரித்தால் ஒரு அடி வரையான அகலமும் உள்ள வகையானவர் தென் அமெரிக்காவில் வசிக்கிறார்களாம்.

கரப்பொத்தான் பூச்சியைக் கண்டாலே பலருக்கு நடுக்கம் ஏற்பட்டுவிடும்.

அவற்றின் அசிங்கமான தோற்றமும், அதன் எச்சங்கள் விட்டுச் செல்லும் துர்நாற்றமும் எல்லோரையும் அருவருப்படையச் செய்துவிடும்.

கழிவறையில் களிநடனம் புரியும் அவர் கால் கை கழுவாமலே சமையலறையிலும், சாப்பாட்டு மேசையிலும் வாய்ப்புக் கிடைத்தால் உணவுகளின் மீதும் ஊர்ந்து செல்வதைக் கண்டால் யாருக்குத்தான் வாந்தி வராது.

திடீரென சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தால் எப்படித் தப்புவது எனப் புரியாது பதுங்கவே மனம் நாடும்.

பரப்பும் நோய்கள்

இவர்களிலிருந்து வரும் மருத்துவப் பிரச்சனைகளில் முக்கியமாக அலர்ஜியையும் ஆஸ்த்மாவையும் சொல்லலாம். இவற்றின் மலம், எச்சில், முட்டை, தோல் போன்ற யாவுமே ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

உங்களுக்கு அல்லது வேறு எவரை எடுத்துக் கொண்டாலும், முன் எப்போதும் ஒவ்வாமை இல்லாதவர்கள் கூட கரப்பொத்தான் பூச்சியின் எச்சங்களுக்கு அடிக்கடி முகம் கொடுக்க நேர்ந்தால் அவர்களுக்கும் ஒவ்வாமை தோன்றிவிட வாய்ப்பு அதிகமிருக்கிறது என மருத்துவ ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன.

அதே நேரம் ஏற்கனவே ஆஸ்த்மா உள்ள குழந்தை கரப்பொத்தான் பூச்சியின் எச்சங்களுக்கு அடிக்கடி முகம் கொடுக்க நேர்ந்தால் கடுமையான ஆஸ்த்மா வருவதற்கும், அதன் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைகளும் அதிகமாக எற்படுமாம்.

இவற்றின் எச்சங்கள் தோலில் அழற்ச்சி, அரிப்பு, எக்ஸிமா போன்ற நோய்களையும் ஏற்படத்துகின்றன.

அழுக்குகளில் உழலும் இவரது உடலிலும், உணவுக் கால்வாயிலும், மலத்திலும் கலந்திருக்கும் சல்மனலா Salmonella கிருமிகளால் உணவு நஞ்சடைதல் ஏற்படலாம். அதேபோல அவற்றிலிருந்து Staphylococcus, Streptococcus போன்ற கிருமிகளும் தொற்றுகிறது.
 

வதிவிடம்

வடதுருவக் குளிரிலும் வாழக் கூடிய வலு உள்ள இவர் எங்கும் இருக்கலாம். இவர்களது வாழ்வுக்கு முக்கியமாக இருக்க வேண்டியவையாவன.

  • ஈரலிப்பு
  • சற்று வெப்பமான சூழல்
  • உணவு
  • ஒளிந்து உறைய சிறு வெடிப்புகள் துவாரங்கள் போன்ற இடங்கள்

உணவு

அவர் சொகுசு உணவுகளைத் தேடி அலைபவர் அல்ல. உங்கள் சமையறையில் சிந்திக் கிடக்கும் உணவுத் துகள்கள் போதுமானது. புத்தகம் கட்டும்போது இடப்பட்ட பசை, சுவரில் ஒட்டப்பட்ட படங்களுக்கு பின் இருக்கும் பசை கூட அவருக்கு உணவாகலாம். இதனால்தான் நீங்கள் எவ்வளவு சுத்தமாக உங்கள் இருப்பிடத்தை வைத்திருந்தாலும் அவருக்கான உணவு கிடைத்துவிடுகிறது.

இனப்பெருக்கம் பரம்பல்

அத்துடன் இனப் பெருக்கத்தில் மிக வேகம் கொண்டவர். நீங்கள் உங்கள் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் மளிகைக் கடையில் வாங்கி வந்த பொருட்களுடன் வந்துவிடுவார்.

அல்லது பக்கத்து வீட்டிலிருந்து கதவின் கீழாகவோ அல்லது கழிவுப் பைப்புகள் ஊடாகவோ ஒரு கரந்துறைப் படைவீரன் போலச் சிமிக்கிடாமல் உள் நுழைந்துவிடுவார். ஒரே ஒரு கர்ப்பணிக் கரப்பொத்தான் பூச்சி நுழைந்துவிடுகிறார் என வைத்துக் கொள்வோம். கவனியாது விட்டால் அவரது பரம்பரையினராக 100,000 பேர் உங்கள் வீட்டில் வாசம் செய்யக் கூடும்.

பெருகுவதைத் தடுப்பதும் நீங்கள் தப்புவதும்.

சுத்தம் மிக முக்கியம். அவருக்கு உண்ண எதுவும் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்தங்கள்.

  • அரிசி, உழுந்து போன்ற தானியங்களையும் விதைகளையும் காற்றுப் புகாத போத்தல்கள் ஜாடிகள் பொன்றவற்றில் சேமித்து வையுங்கள்.
  • உணவு உண்ட கோப்பைகள், பானம் அருந்திய கிளாஸ் போன்ற எதனையும் இரவில் சுத்தம் செய்யாது வெளியே வைக்க வேண்டாம். 
  • உணவு உண்ட மேசை, வோஷ் பேசின், போன்ற யாவற்றையும் சுத்தம் செய்த பின்னரே படுக்கைக்குச் செல்லுங்கள். 
  • குப்பை வாளிகளை மூடி வையுங்கள். 
  • வளர்ப்புப் பிராணிகளுக்கு உணவு வைத்தால் இரவில் அது காலியாக சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

  • சிந்தும் ஒழுகும் குழாய்களை உடனடியாகத் திருத்துங்கள். 
  • சுவரில் உள்ள வெடிப்புகள், குழாய் செல்லும் பாதைகள், வயரிங் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சிறு இடுக்குகள் வழியாக நுழைந்து விடுவார்கள். எனவே அவற்றை அடைத்து அவரது பாதைகளை மூடுங்கள்.

மிகச் சிறிய குஞ்சு 5 மிமி இடைவெளிக்கு ஊடாக புகுந்து வந்துவிடுவார். ஆண்களுக்கு 1.6 மிமி, வயிறு பருத்த கரப்பணிகளுக்கு 4.5 மிமி போதுமாம். சென்ரி மீற்றர் அல்ல மில்லி மீற்றர்.

குளியலறை, சமையலறை ஆகியன அவர்களுக்கான உணவும் ஈரலிப்பும் கிடைக்கக் கூடிய இடங்கள் ஆதலால் அதிக கவனம் எடுக்க வேண்டிய இடங்களாகும். அத்துடன் குழாய்கள் வரும் பாதைகள் அவர்கள் உள் நுழைய மிக வசதியான வழிகளாகும்.

தேவையற்ற பொருட்களை அகற்றி விடுங்கள். பழைய துணிகள் கால்மிதிகள், ஸ்பொன்ஞ் போன்ற எதையும் அகற்றாது விட வேண்டாம்.

சிலிக்கா ஜெல், போரிக் அசிட் பவுடர் ஆகியன அவரை விரட்டக் கூடிய ஆபத்தற்ற பொருட்களாகும். கிருமி கொல்லி மருந்துகள் நஞ்சாதலால் மிகுந்த அவதானத்துடன் உபயோகிக்க வேண்டியவையாகும்.

தொடர் மாடிவீடுகள் அவர்களுக்கு மிக வசதியானவை. இடமாற்றம் பெற்று புது வீட்டிற்கு மாறிவிடுவார்கள்.

எனவே ஒரு வீட்டிலிருந்தோ அல்லது கீழே உள்ள கழிவு நீர்ப் பாதைகள் பொது வழிகள் ஆகியவற்றை ஒழித்துவிடுவது மட்டும் போதுமானதல்ல.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அழிக்கப்பட வேண்டும். அதுவும் ஒரே நேரத்தில்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வீரகேசரி வாரவெளியீட்டில் நான் எழுதிய கட்டுரை.
0.0.0.0.0.0.0

Read Full Post »

>

“விலை போகாத இந்த மருந்தை என்ரை தலையிலை கட்டியிருக்கிறார் அந்த டொக்டர்” ஆத்திரத்தில் அவரது முகம் சிவத்துத் துடித்தது.

கிட்ட இருந்திருந்தால் அந்த டொக்டரின் முகம் பப்படம் போல சுக்கு நூறாகியிருக்கும். அடித்து நொறுக்கியிருப்பார் என்பது நிச்சயம்.

கொழும்பின் மறு எல்லையிலிருந்து வந்திருந்தார் அவர். அந்த டொக்டரும் அங்குதான். நான் மறு எல்லையில்.

நீண்டகாலமாக, பரம்பரை பரம்பரையாக என்னிடம் மருந்து எடுக்கும் குடும்பத்தினர். அவரது குடும்ப வைத்தியார் நான். இப்பொழுது நெடும்தொலைவில் இருக்கிறார். ‘எடுத்ததற்கெல்லாம்’ என்னிடம் ஓடி வருவது முடியாத காரியம். அவசரத்திற்கு பக்கத்தில் உள்ள டொக்டரிடம் காட்டுவார். சற்றுத் தீவிரமான பிரச்சனை என்றால் என்னிடம் வருவார்.

இப்பொழுது வந்தது பெரிய பிரச்சனை அல்ல. நேர நெருக்கடியால் அருகில் மருந்தெடுத்தும் குறையாத பிரச்சனை. சாதாரண சளி இருமல்தான்.

ஆனால் முக்கியமான பல வேலைகள் இருப்பதால் விரைவில் சுகமாக வேண்டும் என்ற அவசரத்தில் என்னைத் தேடி வந்திருந்தார். இப்பொழுதும் வழமையாக அருகில் இருக்கும் டொக்டரிடமே காட்டியிருக்கிறார். அவரும் திறமையான பெயர் பெற்ற மருத்துவர்தான். இவர்; அவசரப்பட்டு என்னிடம் வந்துவிட்டார் என எண்ணிக் கொண்டேன்.

“என்னெண்டாலும் உங்களிட்டை காட்டினால்தான் எனக்கு சுகம் வரும்” என்ற பாராட்டுரை நீரிழிவுக்காரனுக்கு ஐஸ்கிறீம் கிடைத்தது போல இனித்தது.

“என்ன மருந்து தந்தவர்” எனக் கேட்டேன்.

மறுமொழி சொல்லவில்லை!

பட்டென எழுந்தார். எழுந்த வேகம் என்னை அசர வைத்தது.

இவர் கோபப்படும்படி நான் எதுவும் சொல்லவில்லையே, ஏன் இப்படி வீராவேசமாக எழுகிறார்.

அவரது அடுத்த செய்கை என்னைத் திகைக்க வைத்தது.

எழுந்த வேகத்தில் பக்கென ரௌசர் பொக்கற்றில் கையை வைத்து எதையோ சிரமப்பட்டு இழுத்தார். மூச்சடைத்த நான் அவரது கையிலிருந்து வரப்போவதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தேன்.

உள்ளுர ஒரு அச்சம் இருந்ததை மறுப்பதற்கில்லை.

கை நிறைய ஒரு கட்டு என்வலப்புகள் வெளி வந்தன.

நல்லவேளை துப்பாக்கி அல்ல.

அவருக்கு வந்த காதல் கடிதங்களும் அல்ல. மருந்து போட்ட என்வலப்புகள்.
அவ்வளவும் அவருக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள்.

‘ஒரு சாதாரண இருமலுக்கு இவ்வளவு மருந்துகளா’

கேட்பது நாகரீகம் அல்ல என்பதால் வாய் பொத்தியிருந்தேன்.

ஓவ்வொன்றாக எடுத்துப் பார்க்க வேண்டிய துன்பம் எனக்காயிற்று.

தடிமனுக்கு, சளிவெட்ட, அன்ரிபயடிக், விட்டமின்கள் என இன்னும் இன்னும் ….

ஒரு மருந்து மட்டும் வித்தியாசமாக இருந்தது. Fefol விலையுயர்ந்த இரும்புச் சத்து மருந்து. அதுவும் கொஞ்சநஞ்சம் அல்ல. 30 மாத்திரைகள். 

குருதியில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து உள்ளவர்களுக்குக் கொடுப்பார்கள். சாதாரண வார்த்தைகளில் சொன்னால் இரத்தசோகை உள்ளவர்களுக்கு கொடுப்பதாகும்.

இவர் நல்ல ஆரோக்கியமானவர். வயதும் 40-45தைத் தாண்டாது. தனது உடலில் அக்கறையுள்ளவர். கீரை, மீன், பழவகைள், கோழியிறைச்சி எனஆரோக்கியமான உணவுப் பழக்கம் உள்ளவர். தினசரி நடைப் பயிற்ச்சி செய்பவர். இவற்றின் மூலம் தனது எடையையும் மிகவும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர். குடி, புகைத்தல் போன்ற பழக்கங்களும் இல்லாதவர். எனவே இரத்தசோகை வருவதற்கு வாய்ப்பில்லை என்பது புரிந்தது.

ஆயினும் மூலத்தால் இரத்தம் போதல், நடந்தால் இளைப்பு போன்ற ஏதாவது குணங்குறிகள் இருக்றிறதா என விசாரித்தேன்.

“அப்படி ஒன்றும் இல்லை” என்று சொன்னவர் சற்று யோசித்தார். “விலையான மருந்து! இதுக்கு மாத்திரம் 300 சொச்சம் அவற்ரை பார்மஸியிலை எடுத்தவை…”

“..இந்த மருந்துக்கு expiary date இன்னும் ஒரு மாதத்திலை வருகிது…” எனச் சொல்லிப் போட்டுத்தான் அந்த அதிர்ச்சி தரும் வார்த்தைகளை ஆவேசமாக உதிர்த்திருந்தார்.
 
 -விலை போகாத இந்த மருந்தை என்ரை தலையிலை கட்டியிருக்கிறார் அந்த டொக்டர்-.

மருத்துவர்களைக் கடவுள்களாகக் கருதிய காலம் உண்டு. “ஐயா கடவுள் முதல், அடுத்தது நீங்கள்” எனப் பலர் கூறியதைக் கேட்ட அனுபவம் எனக்குண்டு.

இத்தகைய சூழலில் ‘விலையாகாத மருந்தைத் தலையில் கட்டுபவர்;’ என்ற சொல்லு என்னைப் பற்றியல்ல வேறு ஒரு டொக்டரைப் பற்றி என்ற போதும் மனத்தை உறுத்தியது.

மருத்துவம் என்பது கூட சேவை என்பதற்கு அப்பால் உழைப்பிற்கான ஒர் வழியென்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

காசேதான் கடவுள் அப்பா என்ற காலம் இது.

இருந்த போதும் எந்த ஒரு டொக்டரும் ஒரு நோயில்லாத ஒருவருக்கு அல்லது வேறு நோயுள்ள ஒருவருக்கு அதற்கு சம்பந்தம் இல்லாத மருந்தை விற்பனை செய்வதற்காகக் கொடுத்தார் என்பது தவறான குற்றச் சாட்டாகவே எனக்குப் பட்டது.

என்ன நடந்திருக்கலாம். பல கோணங்களில் யோசித்துப் பார்த்தேன்.
நோயாளி அன்று ஏதாவது ஒரு களைப்பு இளைப்பு என்று ஏதாவது சொல்லிவிட்டு இப்பொழுது மறந்திருப்பார்.

அல்லது மருத்துவரின் சிட்டையை, சரியாகப் படிக்காத மருந்து கொடுப்பவர் தவறான மருந்தைக் கொடுத்திருக்கலாம்.

ஆயினும் மனம் திருப்திப்படவில்லை எங்கோ எதோ தவறு நடந்திருக்கிறது என மனம் அழுத்திச் சொல்லியது. அவரது மருந்துப் பைக்கற்றை வாங்கி கவனமாகப் பரிசோதித்தேன்.

எல்லாம் சரியாகத்தான் இருப்பதுபோல் இருந்தது. ஆனால்

பக்கற்றில் மருந்து கொடுக்கப்பட்டவரின் பெயர் திருமதி என ஆரம்பித்திருந்தது….

….அந்தப் பைக்கற்றில் மாத்திரம்….

மனைவி கொடுக்கும் சாப்பாட்டை மட்டுமல்ல மனைவிக்கான மருந்தையும் இவரே சாப்பிட்டுவிட்டார்.

மருத்தவர்களின் சிகிச்சை அறைகளில் நடக்கும் சில சிரிப்பான சம்பவங்களுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

வீரகேசரி பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0

Read Full Post »

>

புலோலியூர் இரத்தினவேலோன் அவர்களது சிறுகதை தொகுப்பான “புதிய பயணம்“  நூல்  அறிமுக விழாவும் கருத்தரங்கும் எதிர் வரும் ஞாயிறு 27.03.2011 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற இருக்கும் இக் கூட்டத்திற்கு எழுத்தாளர் திருமதி. ராணி சீதரன் தலைமை வகிக்க உள்ளார்.

முதற்பிரதியை புரவலர் அல்ஹாஸ் ஹாசிம் உமர் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

நூல்  நயவுரை ஆற்ற இருப்பவர்கள்

  1.  திரு.ஜி.இராஜகுலேந்திரா (சட்டத்தரணி) அவர்கள்
  2. தம்பு சிவா (தம்பு சிவசுப்பிரமணியம் எழுத்தாளர் அவர்கள்)

புதிய பயணம் அவரது மீரா பதிப்பகத்தின் வெளியீடாக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வெளி வந்நதது. இப்பொழுது மீள் பதிப்பாக வெளிவர இருக்கிறது.

நண்பர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் ஏற்கனவே தனது படைப்புகளான 5 சிறுகதைத் தொகுதிகளையும், 3 விமர்சன நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

பதிப்பாளர் என்ற முறையில் அவர்களது சொந்த முயற்சியான மீரா பதிப்பகத்தினது வெளியீடு இது. ஏற்கனவே 91 நூல்களை வெளியிட்டுள்ளார். 

புலோலியூர் இரத்தினவேலோன் எனது இனிய நண்பர். ஒரு எழுத்தாளர். அருமையான சிறுகதை ஆசிரியர். சிறந்த நூல் விமர்சனங்களைத் தருபவர். இவரது எழுத்துப் பணயம் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

Read Full Post »

>

பாடுங்கள் பாடுங்கள் நெஞ்சு நிறையப் பாடுங்கள். சுவாச நோய்கள் பறந்தோடும்.

இசையின் நோய் தீர்க்கும் ஆற்றல் பற்றி நிறையவே பேசப்பட்டிருக்கின்றன. பல திரைப் படங்களில் மயங்கிக் கிட்ககும் நோயாளி மனக்குப் பிடித்தமான பாடலைக் கேட்டவுடன் விழித்தெழுவதைக் கண்டிருக்கிறோம். அது உண்மையாக இருக்க முடியாது என்பதை மூளை சொன்னாலும் மனங் கேட்பதில்லை. இசை எங்கள் உணர்வுகளோடு ஒன்றியது.

பாடுவதானது, மூச்செடுப்பதில் சிரமப்படும் நோயாளிகளது துன்பத்தைக் குறைத்து சுவாசத்தை இலகுவாக்கும் என அண்மையில் ஒரு ஆய்வு கூறுகிறது.

மூச்செடுப்பதில் சிரமம் என்பது நோயாளியின் நாளந்த வாழ்வைப் பாழடிக்கக் கூடிய சிரமமான நோயாகும். நாம் எந்த நேரமும் சுவாசித்துக் கொண்டே இருக்கிறோம். அனால் அதை உணர்வதில்லை. அது இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆஸ்த்மா போன்ற நோய்கள் வரும்போதுதான் சுவாசிப்பது சிரமம் என்பதை உணர்கிறோம். ஆனால் ஆஸ்த்மா தணிந்ததும் சுவாசம் இலகுவாகிறது.

ஆனால் நாட்பட்ட சுவாசத் தடை நோய் Chronic obstructive pulmonary disease (COPD), என்பது வெறுமனே மூச்செடுப்பதில் சிரமம் அல்ல. அது வர வர மோசமாகிக் கொண்டு போகும் ஒரு நோயாகும். அத்துடன் ஆஸ்த்மாவின் வரட்சியான இருமல் போல்லல்லாது இருமம்போது நிறையச் சளி கொட்டும். ஆனால் ஆஸ்த்மா போலவே நெஞ்சை அடைப்பது அல்லது இறுக்குவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.
 
இது பொதுவாக புகைப்பவர்களிடையே தோன்றும் ஒரு நோயாகும்.

புகைத்தலைத் தவிர சுவாசப்பையை உறுத்தக் கூடிய பலவும் இந்நோய் வருவதற்குக் காரணமாகலாம். உதாரணமாக சூழல் மாசடைதல், வேறு புகைகள், இராசாயன மணங்கள், தூசி போன்றவையும் COPD ஏற்படுவதற்குக் காரணமாகலாம்.

இந் நோயுள்ளவர்களுக்கு சுவாசிப்பது என்பது பெரும்பாடாக இருக்கும். நாம் சுவாசிக்கும்போது மூக்கு வழியாக உள்ளே செல்லும் காற்றானது மூச்சுக்குழல் வழியாகச் சென்று அதன் கிளைக்குழாய்கள் ஊடாகப் பயணித்து இறுதியாக மூச்சுச் சிற்றறைகளை அடையும். திராட்சைப் பழக் கொத்துகள் போல சுவாசப்பையை நிறைத்திருக்கும் இந்த மூச்சுச் சிற்றறைகள் ஊடாகவே நாம் சூழலிருந்து பெறும் காற்றில் உள்ள ஒட்சிசன் வாய்வு எமது உடலுடன் இணைகிறது.

இரத்தக் குழாய்களின் மிக நுண்ணிய பகுதியான மயிரிழைக் குழாய்கள் மேற் கூறிய மூச்சுச் சிற்றறைகளின் சுவரில் இணைந்திருக்கின்றன. நாம் சுவாசக்கும் காற்று மூச்சுச் சிற்றறைகளை அடைந்ததும் காற்றில் உள்ள ஒட்சிசானது மயிரிழைக் குழாய்களில் நிறைந்திருக்கும் குருதியால் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. அதே நேரம் கழிவுக் காற்றான காபனீர் ஒட்சைட் குருதியிலிருந்து மூச்சறைச் சிற்றறைகளுக்குள் கடத்தப்பட்டு சுவாசக் குழாய்கள் ஊடாக வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு நடைபெறுவதற்கு எமது மூச்சுச் சிற்றறைகள் நெகிழ்வுத் தன்மையுடையவையாக இருக்க வேண்டும். அதாவது காற்றை ஊதினால் பலூன் விரிவடைவது போல விரிவடைந்து காற்று வெளியேறியதும் சுருங்க வேண்டும்.

ஆனால் மேலே கூறிய நாட்பட்ட சுவாசத் தடை நோயின் போது மிகக் குறைந்தளவு காற்று மாத்திரம் சுவாச தொகுதியூடாக பயணிக்க முடிகிறது. இதனால் குறைந்தளவு ஓட்சிசன் மட்டுமே எமது உடலுக்குக் கிடைக்கிறது. மூச்சுத் திணறலுக்கு இதுவே காரணமாகிறது. படிப்படியாக மோசமாகிக் கொண்டு செல்லும் இந்நோயிலிருந்து மீட்டு எடுப்பது முடியாத காரியமாகவே இருந்தது.

இந்தகைய சூழலில், நாட்பட்ட சுவாசத் தடையுள்வர்கள் மூச்சு எடுப்பதில் சிரமப்படுவதை பாடுவதானது குறைக்கும் என அண்மையில் நடந்த மருத்துவர்கள் American College of Chest Physicians) கூட்டத்தில் எடுத்துரைக்கப் பட்டதானது நம்பிக்கை ஊட்டும் செய்தியாகும்.
பாடுவது எவ்வாறு சுவாசத்தை இலகுவாக்குகிறது?

பாடுவதானது ஒரு நுணுக்கமான கலையாகும். இதனைச் செய்வதற்கு எமது சுவாசத் தொகுதியில் உள்ள தசைகளின் இயக்கத்தை, துல்லியமாக நாம் எமது கட்டுப்பாடிற்குள் கொண்டு வருகிறோம். எம்மையறியாமலே இது நிகழ்கிறது. தன்னிச்சையாக இயங்கும் எமது சுவாசத் தொகுதியானது இதன் மூலம் எமது மனதின் கட்டுப்பாற்றிற்குள் வருகிறது. இயங்க மறுக்கும் அல்லது இறுகிப் போயிருக்கும் எமது சுவாசத் தொகுதித் தசை நார்கள் இப்பொழுது இசைவாக இயங்குகின்றன.

31 பேரைக் கொண்ட சிறிய ஆய்வுதான் இது. 12 வாரப் பாடற் பயிற்சியின் பின் அத்தகைய நோயாளர்களின் சுவாசத்தில் முன்னேற்றம் காணப்பட்டதாம். 84 சதவிகிதமான நோயாளர்கள் இது ஆறதல் அளிப்பதாகக் கூறினர். 64 சதவிகிதமானவர்கள் இது அசௌகரியமான பயிற்சியாக இல்லை என்றனர். மிகவும் முக்கியமான விடயம் 64 சதவிகிதமானவர்கள் தாம் இதனைத் தொடர்ந்து செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.

அவர்களது உடல் நலமும், சிரமமான சுவாசமும் தேறியதற்கு உளவியல் காரணங்களும் இருக்கக் கூடும். இசை கொடுக்கும் இதமான உணர்வுகளுக்கு அப்பால் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ததும் காரணமாக இருக்கலாம்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாடுவது நல்லது. அது மன நிறைவைக் கொடுக்கும், மனச்சிறைகளிலிருந்து விடுபட உதவுகிறது. நோயைத் தணிக்கும் ஆற்றலும் இருக்கிறது.

பிறகென்ன பாடுங்கள். தினசரி பாடுங்கள். இறைவனைத் துதிக்கையில் பாடுங்கள். குளிக்கும்போது குளியலறையிலும் பாடுங்கள். வானொலியில் தொலைக்காட்சியில் பாட்டுகள் வரும்போது சேர்ந்து பாடுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாடிக்கொண்டே இருங்கள்.

வீட்டிலுள்ளோர்களும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் காட்டிலுள்ள நரிகள் எல்லாம் வீட்டிற்குள் வந்திடப்போகுதுகள் என கதவையும் யன்னல்களையும் அடைத்து வைத்தால் நான் பொறுப்பாளி அல்ல.

பாடுவதில் பிரச்சனையில்லை, ஆனால் தான் அறியாப் பாசையில் சொல்லப் போவதின் சிக்கல்கள் பற்றி சற்று சிரிப்போடு படிக்க எனது அனுபவப் பதிவான

கிளிக் பண்ணுங்கள்.

தமி்ழ் நாடெங்கும் எலக்சன் கீதம் ஒலிக்கிறது. கவிதை பாடிக்கொண்டே அரசியல் வாதிகளிடையே பிழைத்து வாழ தேட ஒரு கவிதை

கற்பனைச் சொர்க்கங்களும் கையிருக்கும் வாழ்வும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா’ பத்தியில் வெளியான கட்டுரை

Read Full Post »

>

கார்த்திகாயினி சுபேஸ் அவர்களின் ‘தாய் மடி தேடி..’வெளியீட்டு விழா சென்ற ஞாயிறு (06.03.2011) மாலை 5 மணிக்கு  வெளியீட்டு விழா நடைபெற்றது.

வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற அவ் விழாவில் நான் கலந்துகொண்டு ஆற்றிய தலைமையுரையை இங்கு முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

விழா நிகழ்வில் எடுக்ப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றையும் காணலாம்.

தலைமையுரை :- டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

 திருமதி கார்த்திகாயினி சுபேஸ் எழுதிய தாய்மடி தேடி.. என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டிற்காக இங்கு கூடியிருக்கிறோம்.

தினக்குரல் நிறுவுநர்.திரு.எஸ்.பி.சாமி அவர்களிமிருந்து முதற் பிரதி பெறும் பிரசித்த நொத்தரிஸ், சட்ட உதவியாளர் திரு.எம்.கே.தர்மராஜா

 தாய்மடி மீது அமர்ந்திருப்பதின் சுகத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
நாம் இன்று வளர்ந்த மனிதர்கள். உங்களில் பலரும் சிறிய பிள்ளைகளின் தாய் தகப்பனகவோ அல்லது பேரன் பேத்தியாகவோ இருப்பீர்கள். அவர்களை அணைத்து பாதுகாப்பும், ஆறுதலும் தரும் நிலையில் இருப்பீர்கள். ஆனால் பின்நோக்கிப் பார்க்கும் எமக்கு ஆறதல் தந்த, ஆசுவாசம் காட்டிய, தேறுதல் கூறிய அம்மாவின் மடியில் கிடக்க வேண்டும் என்ற தாபம் எழுவதை மறுக்க முடியாது. தாயின் அன்பு அத்தனை விசாலமானது.

கார்த்திகாயினியின் கதைகள் பல விடயங்கள் பற்றிப் பேசுகின்றன. சாதீயம், பெண்ணியம், மானிட நேயம், ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்கள், குழந்தையின்மை, சுனாமிப் பாதிப்பு. மிருகங்கள் மீதான பிரியம், இவ்வாறு பலவற்றைப் பேசினாலும், அடிப்படையாக இருப்பது போரினால் சிதைந்த எமது வாழ்வுதான்.

விழாத் தலைவர் எம்.கே.முருகானந்தனிடமிருந்து சிறப்புப் பிரதி பெறும் தினக்குரல் நிறுவுநர்.திரு.எஸ்.பி.சாமி அவர்கள்

போர் சார்ந்த இந்தப் படைப்புவெளி கார்த்திகாயினிக்கு மட்டும் பிரத்தியேகமானது அல்ல. எழுபதின் பிற்கூறுகளில் கவிதையில் வெளிப்படத்த தொடங்கிய இந்த அம்சம் பிற்பாடு சிறுகதை, நாவல், கட்டுரைகள் என எமது படைப்பிலக்கியம் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

தாய்மை

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர்

 வெளிப்படையாகப் பார்க்கும்போது கார்த்திகாயினியின் படைப்புகள் போரினால் தமிழ் சமூகம் சந்தித்த துன்ப துயரங்களை, அவர்கள் எதிர் கொண்ட அவமானங்களை, உயிர் இழப்புகளை, அங்கயீனங்களை, சமூக அவலங்களைப் பற்றியே பேசுகின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் இணைத்துக் கோர்க்கும் நார்போல அமைந்திருப்பது அன்புதான். அவற்றின் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருப்பது, அளப்பற்ற அன்பு, அள்ள அள்ள வற்றாமல் சுரந்துகொண்டே இருக்கும் அன்பு, கைமாறு எதிர்பார்க்காது வழங்கிக்கொண்டே இருக்கும் அன்பு.

மூத்த எழுத்தாளர்.திரு.தெளிவத்தை ஜோசப் வெளியீட்டுரை வழங்குகிறார்

அதிலும் சிறப்பாக அவரது படைப்புகளில் வெளிப்படும் அன்பானது, தாயன்பு என்றே எனது மனத்திற்குப் படுகிறது. அத்துடன் போரினால் தாயை மாத்திரமின்றி தனது குடும்பத்தை இழந்து தனிமரமாகிவிட்டதுடன், அங்கங்களையும் இழந்து வேதனைப்படும் ஒரு குழந்தை தாயன்பிற்காக ஏங்குவதும் மற்றொரு படைப்பாக அமைந்துள்ளது.

திரு டொமினிக் ஜீவா (ஆசிரியர் மல்லிகை) வாழ்த்துரை வழங்குகிறார்

எந்த ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாக இருந்தாலும், அது வாசகனது உள்ளத்தில் கள்ளமாகப் புகுந்து கொள்ள வேண்டும், குறுணல்களாக இருக்கும் சீனியைத் தேநீரில் கலந்தால் அது எவ்வாறு தனது உருவத்தை இழந்துவிடுகிறதோ அவ்வாறு தனது வெளிப்படை உருவை முற்றாக மறைந்துவிட வேண்டும். ஆனால் எவ்வாறு தேநீரின் ஒவ்வொரு துளியிலும் அதன் சுவை செறிந்துள்ளதோ அவ்வாறே எழுத்தாளனின் படைப்புகளும் வாசகனின் உள்ளமெங்கும் படர வேண்டும். அதற்கு மேலாக அவனது மூளையின் நரம்புகளை இதமாகச் சுண்டிவிட வேணடும்.

  ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன் வாழ்த்துரை வழங்குகிறார்

தேநீரில் சினி மறைந்து இனிப்புச் சுவை கலந்திருப்பது போல, கார்த்திகாயினியின் படைப்புகளைப் படித்தபோது எனது உள்ளத்தில் கலந்துவிட்ட சுவை அந்த அன்புதான், அதிலும் முக்கியமாக தாயன்பு என்பதாகவே உணருகிறேன்.

வெளியே சென்ற கணவனின் வருகையைக் காத்திருக்கிறாள் மனைவி என்பதை நாம் எமது பழம்தமிழ் இலக்கியங்களில் படித்திருக்கிறோம். “அந்தி சாயும் வேளை அத்தான் வருவான்..” என எமது நாயகிகள் காத்திருந்ததையும் நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். இவை அன்புக்கு ஏங்கி, அரவைணைப்பின் சுகத்திற்கான காத்திருத்தல்கள் ஆகும்.

திருமதி தேவகெளரி சுரேந்திரன், திருமதி கார்த்திகாயினி சுபேஸ், திருமதி ராணி ஸ்ரீதரன்

ஆனால் பயத்தினால் காத்திருப்பு நிகழ்கிறது. இலங்கைவாழ் தமிழ்ச் சமூகம்தான் பீதி கலந்த காத்திருப்பை நன்கு அறிந்திருக்கிறது. வெளியே சென்ற கணவன் திரும்பி வருவானா? பள்ளிக்கும் போன மகன் திரும்பி வருவானா?, ரியூசனுக்குப் போன மகள் திரும்பி வருவாளா என தெருமேல் விழி வைத்துக் காத்திருந்தது எமது சமூகம் பல வருடங்களாக.

வெளியிலிருந்து ஆவேசமாக வந்த வல்லுறுகளும், உள்ளிருந்து நசுக்கிடாமல் ஓசையின்றி நகர்ந்த அரவங்களும் எமது பிள்ளைகளைக் கவர்ந்து சென்ற கதைகளைச் சொல்லி அழுதவர்கள் பல பேர். சொல்லவும் முடியாது, கண்ணீர் சிந்தவும் முடியாது மனதிற்கள் மறுகிப் பித்துப் பிடித்தவர்கள் ஏராளம்.

பிரபல விமர்சகர் திரு.கே.எஸ்.சிவகுமாரன் சிறப்புப் பிரதி பெறுகிறார்.

தன் வீட்டில் இல்லாவிட்டாலும் கூட பக்கத்துவீட்டில், உறவுகளில் இவை நடப்பதைப் பார்த்து கையறு நிலையில் நாம் இருந்திருக்கிறோம்.
இத்தகைய ஒரு சூழலில் தாய் படும் மன உளைச்சலை கார்த்திகாயினி தனது சிறுகதைகளில் அழகாகக் கொண்டு வந்துள்ளார்.

தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம் வாழ்த்துரை வழங்குகிறார்

“போனவளைக்காணேல… வாசலுக்கும், வீட்டுக்குமாக மாறிமாறி நடந்தாள். நெருப்பு மேல் நிற்பது போலத் தவித்தாள். அவள் உள்ளம் பிள்ளையாரையும் பலமுறை வேண்டிக் கொண்டது. இது ஒரு கதையில்.

மற்றொரு கதையில்..

“காலம்பிற எட்டு மணிக்கு பள்ளிக்கூடம் போனவள் ஆறுமணி மட்டும் என்ன செய்கிறாளே, ஊருலகம் கெட்டுக் கிடக்குற கேட்டுக்கு இவளும் யோசனை இல்லாமல் நிக்கிறாளே” என்று சலித்தபடி வீட்டு வாசற்படியில் அமர்ந்து கொண்டாள்.

“தாயில்லாப் பிள்ளை எண்டு பொத்திப் பொத்தி வளர்த்தேனே. எந்தப் பாடையிலை போவாரின் கண்பட்டதோ…” என தாயில்லாப் பிள்ளையைத் தாயைப் போல வளர்க்கும் ஆச்சியின் பாசம் தாய்ப்பாசமாக மற்றொரு இடத்தில் வெளிப்படுகிறது.

திருமதி.புஸ்பராணி நவரட்ணம் (ஆசிரியர்) வாழ்த்துரை வழங்குகிறார்

குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்ல கணவன் முயன்றபோது, “சத்தியமாக நீ இந்தப் பிள்ளைக்கு அப்பன் இல்லை.. உன்னாலை நல்ல அப்பனாக இருக்கவும் முடியாது” என்று முழக்கமிட்டு, தாலி கட்டிய கணவனையே உதறித் தள்ளிவிட்டு கெட்டவள் என்ற அவப் பேரையையும் பொறுக்கத் தயங்காத தாயாக மற்றறொரு கதையில்..

கோழி குஞ்சைப் பாதுகாப்பது போல மற்றொருதாய். வானத்திலிருந்து குண்டு பொழியும் நேரத்தில் பாதுகாப்புக்காக பதுங்கு குழி, மறைவிடம் எதுவும் இல்லாத சூழல். தன் உயிர் போனாலும் பரவாயில்லை, தன் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்,  குழந்தையைக் கீழே கிடத்திவிட்டு அதன் மேல் தனது உடலைப் போர்வை போலப் போர்த்திப் பாதுகாக்கும் தாய் என தாயன்பு நூல் முழவதும் பரவிக்கிடக்கிறது.

தாயன்பு போன்ற உணர்வு ஆண்களிடமும் வெளிப்படலாம் என்பதை தெருநாய்கள் மீது ஒருவர் கொண்ட பாசத்தின் ஊடாக எடுத்துக்காட்டுகிறார்.

மருத்துவன் என்ற ரீதியில்

மருத்துவன் என்ற ரீதியில் இத் தொகுப்பில் சொல்லப்பட்ட கதைகளில் இரு சம்பவங்கள் என்னைக்; கவர்ந்தன.

ஊடகவியல் கல்லூரி விரிவுரையாளர் திருமதி தேவகெளரி சுரேந்திரன் ஆய்வுரை நிகழ்த்துகிறார்

சுட்டெரிக்கும் நெருப்பின் மீது நடப்பது போலிருந்தது என ஒரு கதையை ஆரம்பிக்கிறார். மணல் நிறைந்த  ஒழுங்கையில் அவ்வாறு நடக்கிறார். ராணுவ நடவடிக்கைகளால் மரங்கள் அழிந்து, மரநிழல்கள் இல்லாத ஒழுங்கையில் வெய்யில் தகிக்கும் வேளையில் அவர் நடக்கிறார். 70 வயதான அந்த முதிர்ந்த மனிதன். வெறுங்காலோடு நடக்கிறார்.

ஏன் அவ்வாறு நடக்கிறார். செருப்பு அணிய வசதி அற்றவரா? இல்லை. வசதியுள்ளவர்தான். வழியில் தொலைத்துவிட்டாரா அதுவும் இல்லை. அப்படியாயின் ஏன் அவ்வாறு நடக்கிறார்.
காரணம் அடுத்த வரியில் வருகிறது.

திருமதி கார்த்திகாயினி சுபேஸ் அவர்களது ஏற்புரை

கால்கள் கல்லைப் போல விறைத்திருந்தன. சரி கால் விறைத்தால் ஏன் செருப்பு அணியாமல் இருக்க வேண்டும்? பாதங்களில் விறைப்பு ஏற்பட்டதால் காலிலிருந்து செருப்புக் கழன்றுவிடுவது அவருக்குத் தெரிவதில்லை. காலிலிருந்து விடுபட்டு அவை தெருவில் கிடப்பதற்கு அடம் பிடித்ததால் செருப்பிற்கு பிரியாவிடை கொடுத்துவிட்டார் எனச் நகைச்சுவையாகச் சொல்கிறார்.

நகைச்சுவையாகச் சொன்னாலும் மருத்துவ ரீதியில் உண்மையானது. பாதங்கள் விறைத்து உணர்வு தெரியாமல் இருப்பதை மருத்துவத்தில் Peripheral Neuropathy என்போம். வயதான காலத்தில் பலருக்கும் இது ஏற்படுவதுண்டு. இவ்வாறு விறைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் நீரிழிவு நோய்தான். ஆனால் இவருக்கு நீரிழிவு இருந்ததாக எவ்விடத்திலும் ஆசிரியர் கூறவில்லை.

திரு.மு.தயாபரன் ஆய்வுரை நிகழ்த்துகிறார்

மூட்டு வாதம், மது அதீத பாவனை, போதைப் பொருள் போன்றவையும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. எனவே அவரது கால் விறைப்பிற்குக் காரணம் என்ன என்று மருத்துவனான எனது மூளை ஆராயத் தொடங்கியது.

இராணுவ வடவடிக்கைகளால் அப்பகுதியில் உள்ள தாவரங்கள் அழிந்ததாக ஓரிடத்தில் சொல்லியிருந்தார். எனவே போசாக்கான காய்கறி, கீரை வகைகள் அவருக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அத்துடன் மனைவி இறந்து இரண்ட வருடங்களாகிவிட்டது. எனவே வாய்க்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியதுமான உணவு கிட்டியிருக்காது. எனவே விட்டமின் குறைபாட்டால்தான் அவரது காலில் விறைப்பு ஏற்பட்டது என்ற முடியவுக்கு வந்தேன்.

இரண்டாவது விடயம் கை வைத்தியம், வீட்டு வைத்தியம் பற்றியது. பொதுவாக எல்லோருக்கும் மேலைத் தேய மருத்துவ முறைகளில் பிடிக்காத விடயம் அந்த மருந்துகளின் பக்க விளைவுகள்தான். தாவரங்களிலிருந்து அதாவது மூலிகைகளிலிருந்து பெறப்படும் கை மருத்துவம் மற்றும் சுதேசிய மருந்துகள் ஆபத்தற்றவை, பக்கவிளைவுகள் அற்றவை என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இது உண்மையானதா?

இக் கதையில் இராணுவத்தினாரால் ஒரு பெண் கெடுக்கப்படுகிறாள். அவளுக்கு கர்ப்பம் தங்கிவிடக் கூடாது என்பதற்றகாக மூலிகைகளிலிருந்து காசாயம் செய்து கொடுக்கிறாள் ஆச்சி. ஆனால் அதையும் மீறி கரு தங்கிவிடுகிறது. குழந்தை ஊனமாகப் பிறக்கிறது.

வரவேற்புரையை நிகழ்த்தியதுடன் விழாவிற்கு முழுப்பொறுப்பா க இருந்து நடாத்திய காரத்திகாயினியின் கணவர் திரு.அ.சுபேஸ் ( ஆர்த்திகன்- ஆசிரியர்)

கருத் தங்கியிருக்கும்போது தேவையற்ற மருந்துகளை உபயோகிக்கக் கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும். அவற்றின் பக்கவிளைவுகளால் கரு அழிந்துவிடவோ ஊனமாகப் பிறக்கவோ வாய்ப்பிருக்கிறது என்பதும் தெரியும். இங்கு ஆச்சி அவளுக்குக் கொடுத்திருப்பது மூலிகைகள் மட்டும்தான். ஆனால் குழந்தை ஊனமாகிவிடுகிறது.

மூலிகைகளாலும் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதை இது காட்டுகிறது. மேலைத்தேய மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகளை மருத்துவர்கள் நன்கு அறிவர். இவை பற்றி ஒவ்வொரு மருந்துப் பெட்டியிலும் தெளிவாகப் பிரசுரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவை பற்றிய விழிப்புணர்வு பொது மக்களிடமும் இருக்கிறது. ஆயினும் மூலிகை மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. அவை பற்றிய ஆய்வுகள் கிடையாது.

ஆயினும் கதாசிரியர் இந்த கருத்தை வலியுறத்த கதையை எழுதவில்லை. கருத்தைத் திசை திருப்புவது நான்தான். ஆக்கிரமிப்பு இராணுவத்தால் ஏற்படுகிற தாக்கங்களை சொல்ல வருகிறது அக்கதை. ஆனால் மூலிகை மருந்துகளினாலும் ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என்ற விளக்கம் என்னுடையது.

கார்த்திகாயினி இயற்கை வளம் கொளிக்கும் கிராமத்ததைப் பிறப்படமாகக் கொண்டவர். உசன் என்பது அழகான கிராமம். பண்புள்ள மக்கள். எனது மருத்தவ படிப்புக்கால நண்பன் டொக்டர் செல்வராசா என்பவர் அவ்வூரைச் சேர்ந்தவர். 70களில் அவ்வூருக்குச் சென்றிருக்கிறேன். பின்பு ஒரு கருத்தரங்கில் பங்குகொள்ளவும் சென்றுள்ளேன்.

அந்த ஊர். வயல்கள். ஊரை அண்மத்திருக்கும் சிறு காடு. அங்கு பெண்கள் விறகு பொறுக்கப் போதல் என ஒரு அழகான சித்திரத்தை நூலாசிரியர் தந்திருக்கிறார். சூதுவாதற்ற அந்த மக்களின் வாழ்வு எவ்வாறு ஆக்கிரமிப்பினால் சிதைவுறுகிறது என்பதை அழகாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

கார்த்திகாயினியின் படைப்பாற்றல் பற்றி

சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழில் வந்து சுமார் 150ஆண்டுகள் ஆகின்றன. உலகில் எப்பொழுது தோன்றியது? ஆயிரத்து ஒரு இரவுகள் சிறுகதை வடிவின் முன்னனோடி எனக் கருதலாம். ஆயினும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவில்தான் முதல் முதாலாக சிறுகதை என்று இலக்கிய வடிவம் கொடிகட்ட ஆரம்பித்தது. தமிழில் சுமார் 150 வருடகால சரித்திரம் இருக்கும்.

சிறுகதையின் வடிவமும், சொல்லும் முறைகளிலும் பாரிய மாற்றங்களைக் கண்டுவிட்டோம். ஆரம்பம், மத்திய பகுதி, முடிவு என ஒழுங்கான அமைப்பில் கதை சொல்வதைக் கடந்து பல வருடங்களாகிவிட்டது. ஆயினும் இன்றும் எமது பல எழுத்தாளார்கள் பழைய குட்டைக்குள்ளேயே குடைந்து சேறு பூசிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

திடீரென கதையின் மையப்பகுதியிலிருந்து கதையை ஆரம்பிப்பது, பின்னோக்கிச் சொல்வது, சம்பவங்களை விட உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுத்தல், சிறுகதையை முடிக்கும்போது இன்னமும் ஏதோ மறைந்திருப்பது போல எண்ண வைத்து வாசகனை படைப்பிலிருந்து விடுபட முடியாமல் மேலும் ஆழச் சிந்திக்க வைத்தல் போன்ற சிறந்த அம்சங்களின் கீற்றுகளை கார்த்திகாயினியின் படைப்புகளில் காணக் கடைக்கிறது.

கார்த்திகாயினி தனது படைப்புகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் எழுதுகிறார். வெறும் பொழுதுபோக்கிற்கான அவர் எழுதவில்லை. ஆழ்ந்த சமூக நோக்கோடு எழுதுகிறார். தனது மண்ணைப் பற்றி எழுதுகிறார். அந்த மக்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்துகிறார். அந்த மக்களின் பேச்சு மொழியை அழகாகக் கையாண்டு மண்ணின் மணம் பாரெங்கும் பரவும் வகையில் எழுதுகிறார்.

இவை பற்றி நிறைய உதாரணங்களைக் கூறலாம். நான் கூறுவதை விட நூல் வெளியீட்டுரையை நடாத்த இருக்கும் நண்பர் தெளிவத்தை ஜோசப் அவர்களும், ஆய்வுரை நடாத்த இருக்கும் தேவமனோகரியும், தயாபரனும் தெளிவாகவும் நுணக்கமாகவும் சொல்லுவார்கள்.

ஆயினும் மூத்த எழுத்தாளரான நீர்வை பொன்னையன் இவரது படைப்புலகம் பற்றிக் தனது முன்னுரையில் எழுதியதை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

“பாத்திரப் படைப்பு, கதை நகர்த்தல், மொழிவளம், கதை சொல்லும் எத்திகள், கற்பனை வளம், பிரதேச மண்வாசனை, சித்தரிப்பு, உள்ளடக்கமும் உருவகமும் சங்கமிப்பு, கதை;துவம் போன்ற அம்சங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. மேலும் உவமான உவமேயங்கள், குறியீடுகள் பொருத்தமான முறையில் கையாளப்பட்டுள்ளன” என்கிறார்.

அவரது கருத்தோடு நானு; உடன்படுகிறேன். நூலைப் படித்து முடித்ததும் நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்கிறேன்.

நூலாசிரியர் பற்றி

தனது சொந்தக் கிராமத்து ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர், 9ம் ஆண்டுக்குப் பின்னர் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்று பல்கலைக் கழகத்திற்கும் தேர்வானார். ஆயினும் நாட்டு நிலைமை காரணமாக பொற்Nhறாரைப் பிரிந்து தனியே சென்று படிக்கக் கூடிய சூழல் இல்லததால் பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியாது போயிற்று.

கார்த்திகாயினிக்கு இளவயதிலேயே இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ஏ.எல் படிக்கும் காலத்திலேயே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். ளுடுடீஊ யில் இசையும் கதையும் எனத் தொடர்ந்தது இவரது இலக்கியப் பயணம். இது இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்ற போதும் சிறுவர்களுக்கான இரண்டு கதை நூல்களை ஏற்கனவே வெளியிட்டு உள்ளார்.

மாணவப் பருவத்தில் தனது படைப்பாற்றலை வளர்க்க உதவியாக இருந்தது தனது சித்தப்பா எனப் பெருமை கொள்கிறார். இப்பொழுது எழுத்துப் பணிக்கு உற்சாகம் ஊட்டி உதவி வருவது இவரது கணவன்தான்.

பல இலங்கைத் தமிழ் பெண் எழுத்தாளர்களுக்கு இவ்வாறாக கணவன்மார் ஒத்தாசையாக இருப்பதை எனது நட்பு வட்டத்தில் கண்டிருக்கிறேன். பத்மா சோமகாந்தன், கோகிலா மகேந்திரன், தமிழ்ச்செல்வி, பவானி சிவகுமாரன், ராணி சீதரன், சந்திரகாந்தா முருகானந்தன் எனப் பலருக்கு இலக்கிய உணர்வு உள்ள கணவன்மார் கிடைத்தது அதிஸ்டம் என்றே சொல்லத் தோன்றுகிறது

தினக்குரல் பற்றி

தமிழ் தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இதனால் மக்களின் மனத்தில் இடம் பெற்றுவிட்டது. இக்கட்டான சூழலில் இத்தகைய ஒரு பத்திரிகையை முக்கியமாக தமிழில் ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவதற்கு அசாத்திய துணிச்சல் தேவை. ஆதைனைச் செய்து காட்டிய எஸ்.பி.சாமி சாமி ஐயா அவர்கள் பாராட்டுக்கு உரியவராவார். தினக்குரல் விரைவில் கட்டிளம் பருவமான 15 வயதில் நுழைய இருக்கிறது. அதற்கு எமது வாழ்த்துக்களை இப்பொழுதே சொல்லி வைப்போம்.

தினக்குரல் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தினமும் நான் அதன் வாசகனாக இருக்கிறேன். அதன் ஆரம்பகால ஆசிரியர் மறைந்த ராஜகோபால், பின்பு சிவநேசச்செல்வன், இப்பொழுது தனபாலசிங்கம், ஞாயிறு ஆசிரியர் பாரதி அனைவரும் எனது நண்பர்களாக இருக்கிறார்கள்.

கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து ஹாய் நலமா மருத்துப் பத்தியை தினக்குரலில் எழுதிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. மருத்தவத்தில் பத்தி எழுத்து பற்றிய முதல் அனுபவம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகையுடாகக் கிட்டியது. மருத்துவக் கலசம் என்ற தலைப்பில் 90களில் சுமார் இரண்டு வருடங்கள்  எழுதியுள்ளேன். அது பின்னர் நூலாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக இவ்வளவு நீண்டகாலம் எழுதுவதற்கு நண்பர் தனபாலசிங்கம்தான் காரணம். தலையீடுகளும் இடையூறுகளும் செய்யாத நல்ல மனிதர். கட்டுரைகளை நான் நேரத்திற்குக் கொடுக்கத் தவறும்போதும் கரைச்சல் கொடுக்காதவர்.

மீரா பதிப்பகம் பற்றி

இந்த நூலை மீரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அழகான அட்டைப்படத்துடன் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்ததுடன் மீரா பதிப்பகம் சார்பாக நுர்லை வெளியிட்ட புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்.

மீரா பதிப்பகம் நண்பர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அவர்களது சொந்த முயற்சி. அவரது அயராத முயற்சியின் அறுவடையாகும். தினக்குரலில் விளம்பர உதவியாளாரக இணைந்த அவர் தனது கடும் உழைப்பின் மூலம் இன்று வணிக ஊக்குவிப்பு முகாமையாளராக உயர்ந்துள்ளார். தினக்குரலில் எவ்வாறு உயர்நிலைக்கு வந்தாரோ, அதே போல தனது ஓய்வு நேரத்தையும் உழைப்பு நேரமாக்கி, துயில் தொலைத்து உடல்வலி நோக்காது செய்த முயற்சி காரணமாகவே மீரா பதிப்பகம் இன்று இலங்கைப் பதிப்பத்துறையில் முன்னோடியாக நிற்கிறது.

புலோலியூர் இரத்தினவேலோன் ஒரு எழுத்தாளர். அருமையான சிறுகதை ஆசிரியர். சுpறந்த நூல் விமர்சனங்களைத் தருபவர். இளைஞனாக எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து எனது நண்பராக இருக்கிறார். எழுத்தாளன், பத்திரிகை உயர் அதிகாரி இவற்றிறக்கு மேலான மற்றொரு பர்மாணம்தான் பதிப்பாளர் என்பது ஆகும்.

96ல் புதிய பயணங்களுடன் ஆரம்பித்த இப் பதிப்பகம்  கடந்த 15 வருட காலவெளயில் 9 நூல்களை வெளியிட்டுள்ளது. இது அவர்களின் 91வது வெளியீடு.

பல் துறை சார்ந்த நூல்களை வெளியிட்டு மிகச் சிறப்பாக இயங்கிவருகிறது. திறனாய்வு, சிறுகதை, திரைப்படச் சுவடி, திரைப்படக் கலை, நலவியல், மனோவியல், அழகியல், நாட்டார் இலக்கியம், விஞ்ஞானம், தலவரலாறு, குழந்தைப் பாடல்கள் என பல்துறை நூல்களை வெளியிட்டு, தணியாத தாகத்துடன் ஈழத்துப் பதிப்பகத்துறையில் புதிய எல்லைகளை எட்ட முயல்கிறது. விரைவில் 100வது வெளியீட்டை எட்டிவிடும். இன்னும் பல நூறு நூல்களை வெளியிட்டு எமது எழுத்தாளர்களது திறமைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

எனது பல நூல்களும் மீரா பதிப்பகம் ஏடாகவே வெளிவந்துள்ளன. நீங்கள் நலமாக, உடையைக் காத்து நலத்தைக் காப்போம், மறந்து போகாத சில ஆகியவையே அவை. இதில் நீங்கள் நலமாக 4 பதிப்புகளைக் கண்டதும், சாகித்தியப பரிசையும் பெற்றது. அதற்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

தலைமையுரை நீண்ட உரையாகிவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த விழாவில் தலைமைப் பொறுப்பை எனக்கு அளித்த காரத்திகாயினி, அவரது கணவன் சுபேஸ் மற்றும் விழாக் குழவினருக்கு நன்றிகள்

வணக்கம்.
0.0.0.0.0.0.0

Read Full Post »

>

இவரின் நகக் கண் வீங்கி மஞ்சளாகிச் சினத்து வீங்கியிருப்பதை படத்தில் காண்கிறீர்கள். அவ்விடத்தில் சீழ் பற்றியிருக்கிறது. நகச்சுற்று எனத் தமிழில் சொல்வோம். ஆங்கிலத்தில் Paronychia என்பர். திடீரென ஏற்பட்டதால் Acute Paraonychia எனப்படும்.
 

நகத்தின் வெளி ஓரமாகவோ அன்றி நகத்தைச் பக்கங்களிலும் உள்ள நகமடலின் தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித் தொற்றுத்தான் நகச்சுற்று. அவ்விடம் வீங்கிச் சற்று சிவந்து கடுமையான வலியையும் ஏற்படுத்தும். தொட முடியாதளவு கடும் வலி ஏற்படலாம்.

இது ஒரு வகையில் சிறிய கட்டுப் (Abscess) போன்றதுதான். 

பின்னர் பழுத்து வரும்போது சற்று மஞ்சள் நிறமாக மாறும்.

பக்றிரியா, பங்கஸ், மற்றும் ஈஸ்ட் போன்ற கிருமிகள் தொற்றுவதால் ஏற்படுகிறது.

எவ்வாறு ஏற்படுகிறது?

  • நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடையே ஏற்படுவது மிக அதிகம்.
  • கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளிடமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
  •  நகத்தை வெட்டும்போது சற்று ஆழமாக வெட்டி நகமடலைச் சேதமாக்குவதாலும் ஏற்படலாம். அவ்வாறான செய்கைகளின் போது ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றிச் சீழ் பிடிப்பதால் இது ஏற்படுகிறது.
  • சமையல் வேலை, தோட்ட வேலை, தச்சு வேலை போன்ற காயம் ஏற்படக் கூடிய எந்த வேலைகளின் போதும் தற்செயலாக அவ்விடத்தில் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றி நகச்சுற்றை ஏற்படுத்தும்.
  • சில சருமநோய்களால் ஏற்படலாம். பெம்பிகஸ் (Pemphigus Vulgaris) போன்ற நோய்களால் சருமத்தின் மிருதுத்தன்மை பாதிப்படையும்போது அதில் கிருமித் தொற்று ஏற்பட்டும் வரலாம்.

நகத்தின் ஓரமாகச் சிலருக்கு தோல் வளர்ந்து நீட்டிக் கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் Hang Nail என்பார்கள். இதைப் பிய்த்து எடுக்க முயலும்போது அல்லது கத்தரியால் வெட்டும்போதும் காயம் பட்டுச் சீழ்பிடிக்கலாம்.

பொதுவாகக் காயம் ஏற்பட்டு 2 முதல் 5 நாட்களில் அவ்விடத்தில் வலி தோன்றும் பின்னர் முன் கூறியதுபோல சீழ்ப்பிடித்து வீங்கும்.

மருத்துவம்

வீட்டு மருத்துவமாக ஆரம்ப நிiலையில் வெந்நீரில் 10-15 நிமிடங்களுக்கு அமிழ்த்தி வைப்பதன் மூலம் சுகம் கிட்டலாம். தினமும் 3-4 தடவைகள் அவ்வாறு செய்யலாம்.

மருத்துவரிடம் சென்றால், கிருமியெதிர் மருந்துகளை (antibiotics) உபயோகிப்பதன் மூலம் ஆரம்பத்தில் குணப்படுத்த முடியும். சற்று அதிகமானால் அவ்விடத்தை மரக்கச் செய்வதற்கு ஊசி மருந்து போட்ட பின் கீறி சீழை அகற்றுவதன் மூலம் சுகப்படுத்தலாம்.

ஏற்படாமல் தடுத்தல்

நகத்திற்கு அருகாமையில் உள்ள மென்மையான இடங்கள் காயப்படாது தடுப்பதே இதைத் தவிர்க்க ஒரே வழியாகும்.

  • நகம் கடிப்பதை முற்றாகத் தவிருங்கள்.
  • நகத்தையும் அதைச் சுற்றியுள்ள சருமத்தையும் அக்கறையுடன் பேண வேண்டும்.
  • நகம் வெட்டும் போது அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாதவாறு கவனமாக வெட்டுங்கள்.
  • குளித்த பின் நகங்கள் மென்மையாக இருக்கும்போது வெட்டுவதால் அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாது.
  • நல்ல கூரான கத்தரிக்கை அல்லது நகவெட்டியை மட்டுமே உபயோகியுங்கள்.
  • கை நகங்களின் முனைப்பகுதி சற்று வளைவாகவும் கால் நகங்களினது நேராகவும் இருக்குமாறு வெட்டவும். 
  • நகங்களை ஒட்ட வெட்டுவது கூடாது.

 வீரகேசரி வெளியீடுவில் 23.03.2011 வெளிவந்த எனது மருத்துவக் கட்டுரை இது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

மதிலோர சிறுகம்பில்
மாநகர மின்விளக்கு அதன்
ஒளிவெள்ளம்
மறுகம்பம் நீளாது
அரைத் தொலைவில்
வலுவொடுங்கி மங்கிவிடும்.

ஆனாலும்
வானோங்க உயர்ந்திருந்து
வையமெல்லாம் கதிர் சிதறும்
மதியொழியை,
நாணவைக்கும்
தன் அருகிருப்பால்.

நள்ளிரவில் துயில் கலைந்து
நரக்குருதி தீய்ந்தெழ
மூச்சடங்கிப் பறவையினம்
சிறகடித்து விலகி ஓடும்.
நடுவெயில் சுட்டெரிக்க
நிறைவிழிகள் உறைந்திருக்க
சுடுகுழல் பேச்சொடுக்கிப் பெற்ற முதல்
சுளுவாக மடி சேரும்.

பனைமட்டை, பெரும் கொட்டன்
சுடுகம்பி இவையனைத்தும்
பெருந்திமிரில்
உள்வீதி உலாவரும்;.
கடிவாளப் பிடியிறுக்கி
தளராது அரசோச்ச.

அதிகார நடுப்புள்ளி நழுவாது
அழுங்காகப் பிடித்தாள
அருகாக வந்து ஒளிசெறியக் 
கற்றிடுவாய் வான்மதியே.

எம்.கே.முருகானந்தன்.

ஜீவநதி பங்குனி 2011 இதழில் வெளியான எனது கவிதை.

Read Full Post »

>

உடற் பயிற்சி உடல் நலத்திற்கு அவசியமானது என்பது இப்பொழுது பெரும்பாலானவர்களுக்குப் புரிந்திருக்கிறது. இருந்த போதும் அவர்கள் எல்லோரும் அதனைச் செய்வதேயில்லை.

அதற்குக் காரணங்களாக இவற்றைச் சொல்லலாம்.

  •  முக்கியமாகச் சோம்பல். பலருக்கும் தங்களது வழமையான வேலைகளைத் தவிர புதிய விடயங்களில் ஈடுபடுவதற்குத் தயக்கமும் சோம்பலும் இருக்கிறது.
  • புதிய விடயங்களுக்கு நேரம் எவ்வாறு ஒதுக்குவது என்பது தெரிவதில்லை.
  • “எனது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. எனக்கு ஏன் உடற்பயிற்சி என்பது பலரது விதண்டா விவாதம் ஆகும். கண்கெட்டாற் பிறகு சூரிய நமஸ்காரம் ஏன் எனப் பேச்சுக் சொல்வார்கள். நோய் வராமல் தடுப்பதற்கே முக்கியமாக உடற்பயிற்சி தேவை. நோய் வந்து முட்டிய பின் அல்ல.

உடற் பயிற்சிகளில் மிகவும் எளிதானதும், எல்லோராலும் செய்யக் கூடியதும், சுலபமானதும் நடைப் பயிற்சிதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இந்த நடைப் பயிற்சியானது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பதை பல மருத்துவ ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

ஆனால் நடைப்பயிற்சிக்கும் அறிவாற்றல் குறையாது இருப்பதற்கும் தொடர்பு உள்ளது என புதிய மருத்துவ ஆய்வு சொல்கிறது.

65 வயதிற்கு மேற்பட்ட 300 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுதப்படனர். அவர்கள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது.

உடனடியாகவும், 9 வருடங்கள் கடந்த பின்னரும் அவர்களது மூளையை MRI ஸ்கான் செய்து பார்த்தனர். ஒவ்வொரு வாரத்தில் 6 முதல் 9 மைல் தூரம் நடந்தவர்களது மூளையிலுள்ள ஆரோக்கிய பகுதியின் (Gray matter)   கனவளவு அதிகரித்திருக்கக் காணப்பட்டது. 

எனவே இவர்களது அறிவு சார்ந்த செயற்பாடுகள் குறைவதற்கான சாத்தியங்கள் குறைவாகும். அதாவது மூளை மங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு.

ஆயினும் நடக்காதவர்களின் மூளையின் ஆரோக்கியமான பகுதியில் அவ்வாறான நல்ல மாற்றம் அவதானிக்கப்படவில்லை.

ஏற்கனவே செய்யப்பட்ட சில ஆய்வுகளின் மூலம் நல்ல உடற்பயிற்சிகள் செய்வதனால் கலங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரிய வந்தது. இப்பொழுது நடைப் பயிற்சியும் அவ்வாறே நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது தெரிகிறது.

வேறு எதற்காவது அல்லாவிடினும், எதிர்காலத்தில் அறளை பெயர்ந்து, பிள்ளைகளுக்கும் சொந்த பந்தங்களுக்கும் சுமையாகவும் தொல்லை கொடுப்பாது இருப்பதற்காகவாவது தினசரி நடைப் பயிற்சி செய்யுங்கள்.

அறளை பெயர்தலைத் தடுக்க நவீன தொழில் நுட்பங்களில் ஈடுபாடு காட்டுவதும் உதவும்

முது வயதில் மூளை மங்காதிருப்பதற்கு இன்றை வாழ்விலிருந்து விடுபடாமல் நவீன விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது உதவும் என்பது முன்னொரு ஆய்வில் தெரியவந்தததை நினைவுபடுத்தலாம்.

கம்பியூட்டர், இணையம், மொபைல் போன் போன்ற நவீன சாதனங்களை, இவை எனக்கு முடியாதது என ஒதுக்கிவிடாது பயன்படுத்துவது நன்மை பயக்கும். பழவகைகள், நார்ப்பொருள் உணவுகள், இலைவகை உணவுகளை தினசரி உணவில் தாராளமாகச் சேர்ப்பதும் அவசியமாகும்.

தினமும் எவ்வளவு உடற் பயிற்சி, எத்தகைய உடற் பயிற்சி தேவை என்பவை பற்றி அறிய எனது முன்னைய பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்.

எவ்வளவு உடற் பயிற்சி

அதீத எடைக்கும் புற்று நோய்களுக்கும் இடையேயான தொடர்பு பற்றி அறிய எனது முன்னைய பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்.

எடை குறைப்புப் பற்றிய எனது நகைச்சுவைப் பதிவு

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா?’ பத்தியில் 10.11.2010 வெளியான கட்டுரையின் மீள் பதிவு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Read Full Post »

>

அண்மையில் அடிக்கடி படிக்கக் கிடைக்கிற நல்ல எழுத்துக்களைத் தருகின்ற இளைய எழுத்தாளர்களில் ஒருவர்தான் கார்த்திகாயினி சுபேஸ். கடந்த ஒரு தசாப்தமாக எழுத்து உலகில் கவனிப்பைப் பெற்ற எழுத்தாளர். பல நல்ல சிறுகதைகளதைத் தந்துள்ளார்.
அமரர் சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டி, செம்பியன் செல்வன் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி ஆகியவற்றில் முதற் பரிசுகளைத் தட்டிக்கொண்டவர். மேலும் பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.
தினக்குரல் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றும் இவரதுமுதல் சிறுகதைத் தொகுதியான ‘தாய் மடி தேடி..’ வெளிவர இருக்கிறது.
எதிர்வரும் ஞாயிறு (06.03.2011) மாலை 5 மணிக்கு  வெளியீட்டு விழா நடைபெறுகிறது. வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.
தலைமை :- டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
மங்கல விளக்கேற்றல் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரையை திரு.அ.சுபேஸ் ( ஆர்த்திகன்- ஆசிரியர்) நிகழ்த்துவார்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து மூத்த எழுத்தாளர்.திரு.தெளிவத்தை ஜோசப் வெளியீட்டுரையை நிகழ்த்துவார்.
தினக்குரல் நிறுவுநர்.திரு.எஸ்.பி.சாமி அவர்கள் நூலை வெளியிட்டு வைப்பார்
பிரசித்த நொத்தரிஸ், சட்ட உதவியாளர் திரு.எம்.கேதர்மராஜா முதற் பிரதியைப் பெறுவார்
வாழ்துரைகள் 
1. திரு டொமினிக் ஜீவா (ஆசிரியர் மல்லிகை)

2. திரு.வீ.தனபாலசிங்கம் (பிரதம ஆசிரியர் தினக்குரல்)
3. டொம்டர்.தி.ஞானசேகரன் (ஆசிரியர் ஞானம்)
4. திருமதி.புஸ்பராணி நவரட்ணம் (ஆசிரியர்)

ஆய்வுரைகள்

1. திருமதி தேவகெளரி சுரேந்திரன்(விரிவுரையாளர் ஊடகவியல் கல்லூரி)
2. திரு.மு.தயாபரன்

ஏற்புரை:
திருமதி கார்த்திகாயினி சுபேஸ்

நிகழ்ச்சித் தொகுப்பு:- புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்.

அனைவரையும் அன்புடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறார்.

Read Full Post »