Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2011

>எமது பாடசாலையின் அதிபராக சென்ற 5 வருடங்களாக பணியாற்றிய திரு.மு.கனகலிங்கம் அவர்கள் சென்ற 20.06.2011 முதல் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்ட செய்தியை அறிவிக்கிறேன்.

புதிய அதிபராக திரு.பொன்னையா பொன்னம்பலம் பதவி ஏற்றுள்ளார்.  புதிய அதிபர் பற்றிய செய்திகளை அடுத்த பதிவில் தருகிறேன்.

நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த காலத்தில் எமது பாடசாலையில் 15.03.2006 பொறுப்பேற்றார் அதிபர். நாட்டின் நிலையைக் கருத்திற் கொள்ளாது பாடசாலையின் வளர்ச்சி ஒன்றையே நோக்காகக் கொண்டு செயற்பட ஆரம்பித்தார்.

உடனடியாக பாடசாலை சூழலில் வாழும் மக்களை அழைத்து நல்லுறவை ஏற்படுத்தியமை ஞாபகத்திற்கு வருகிறது. பழைய மாணவர் சங்கக் கூட்டம் அபிவிருத்திச் சங்கக் கூட்டம் ஆகியவற்றைக் கூட்டியபோது பருத்தித்துறையில் இருந்த என்னையும் கலந்து கொள்ள அழைத்தது நேற்று நடந்தது போலிருக்கிறது. 


திரும்பவும் நான் கொழும்பு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதும் அவரது வேண்டுகோளுக்கு இணங்க இங்கு பழைய மாணவர் ஒன்றியத்தை ஆரம்பித்ததும் அதன் பின்னர் உங்கள் அனைவரது ஒத்துழைப்போடு பாடசாலை வளரச்சிப் பணியை தொடர முடிந்ததும் இனிய நினைவாகும்.

பாடசாலைக்கு பெரிய இரட்டைக் கதவும், அதற்கான வளைவும் அமைத்தல், வருடாந்த ஞாபகார்த்தப் பரிசுகள், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு பரிசுகள் வழங்கல், பரிசளிப்பு விழாவிற்கான பரிசில் நூல்கள் அளித்தல், தொலைபேசி இணைப்பு, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள்,கணனிகொள்பனவு, கோவைகளை கணனி மயப்படுத்தல், சரஸ்வதி சிலைகள் அமைத்தல், பாலர் வளாகத்திற்கான புதிய இரும்பு வேலி, கிணறுகளுக்கு சுகாதாரமான மூடிஅமைத்தல், நூலகம் அமைத்தல், அதற்கான தளபாடங்கள் பெறுதல், சைக்கிள் தரிப்பிடம் அமைத்தல் என எழுதி முடிக்க முடியாத அளவிற்கு  பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்ற வருடம் நான் பாடசாலை சென்றபோது

இவ்வளவு பணிகளைச் செய்த மனநிறைவுடன் அதிபர் இடமாற்றம் பெற்று மணற்காடு பாடசாலைக்குச் சென்றுள்ளார். உயர்தராதரம் பெற்ற அவரை, எமது சுயநலம் கருதி ஆரம்பப் பாடசாலை என்ற சிறையில் அடைத்து வைக்க முடியாது. அவரது பதவி உயர்வுகளுக்கு தடங்கல் ஏற்படாது அவரது தொழில் மேம்பாட்டிற்காக வழிவிட்டு நிற்போம்.  

உன்னதமான இலக்குகள், உறுதியான செயற்பாடு, நிலைதளராமை ஆகியன அவரது இயல்புகளாகும். ஆசிரியர்கள், பெற்றோர் பழைய மாணவர் நலன்விரும்பிகளுடன் சுமுகமான தொடர்பாடல், கல்வித் திணைக்களத்துடனான ஒத்துழைப்பு போன்ற செயற்பாடுகள் அவர் வளர்துக்கொண்ட பண்புகள்.  

இவற்றின் ஊடாக அவர் எமது பாடசாலைக்கு பல நன்மைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இத்தகைய  செயல்பாடானது பாடசாலையை  உயர்நிலைக்குக்  கொண்டு  சென்றுள்ளது . இதையிட்டு பெற்றோரும் நலன்விரும்பிகளும் மிக்க  மகிழ்சியடைகின்றோம். 

அவருக்கு  எமது  பழைய மாணவர் ஒன்றியத்தினதும், பாடசாலை சமூகத்தினதும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

புதிதாக பொறுப்பேற்ற இடத்திலும் அவரது தன்னலமற்ற பணிகள் சிறக்க வாழ்த்துவோம். 

இடமாற்றம் பெற்றுச் செல்லும் அவர் எமக்கு அனுப்பிய நன்றிக் கடிதத்தின் பிரதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இடமாற்றம் பெற்ற அதிபர்.மு.கனகலிங்கம் அவர்களது கடிதம்

அன்புடையீர்,

நன்றி நவிலல்


 தாங்கள் இளவயதில் கல்வி கற்ற   மேற்படி பாடசாலையின் மேம்பாடு கருதி பலவழிகளிலும்  உதவியுள்ளீர்கள். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினூடாக நிதியுதவி வழங்கியும், வேண்டும்போது விரைந்து வந்து ஏனைய உதவிகளையும் செய்துள்ளீர்கள்.
     ‘………………………………………- நின்று
தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்’     

என்ற  ஒளவையாரின் மூதுரைக்கு  ஏற்றாற்போல் இளம் வயதிலே எண்ணும் எழுத்தும் அறிய வைத்த பள்ளித்தாய்க்கு  பிரதியுபகாரமாக தாங்கள் வளர்ந்த பின்பு இயன்றவரை மனமுவந்து உதவியுள்ளீர்கள்.

  தங்களின் பாடசாலை இன்றைய நிலையிலே திருப்தியான அடைவுகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. அரைகுறையிலே நிற்கும் கட்டிடமும் கட்டுவதற்கு ரூபாய் இருபது இலட்சம் நிதியும் கல்வித் திணைக்களத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் கட்டிட வேலைகளும் நிறைவடையலாம் என எதிர்பார்க்கின்றேன்.

    இப்பாடசாலையில் 15.03.2006 இல் அதிபராகப் பொறுப்பெடுத்த நாள் முதல் இன்று வரை பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் உதவிபுரிந்து  ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். 20.06.2011 ஆந் திகதி தொடக்கம் புதிய பாடசாலையொன்றிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதால் இன்று வரை உதவி புரிந்த தங்கள் எல்லோருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு, புதிய அதிபருக்கும் வேண்டிய ஒத்துழைப்பை நல்கி பாடசாலையின் வளர்ச்சியின் தொடர்ச்சியைப் பேணுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
 

நன்றி

TP No –  0213217205

Read Full Post »

>

வெக்கை தாங்க முடியவில்லை. மேலெல்லாம் ஒரே கடியாக இருக்கு எனச் சொல்லிக் கொண்டு வருபவர்கள் அதிகம். கோடை காலம் வந்தாலே புழுக்கம், வியர்வை என ஒரே அரியண்டம்தான்.

கோடை கால நோய்களில் முக்கியமானது இந்த வியர்க்குரு. இதனை Miliaria,  Sweat Rash, prickly என்றெல்லாம் அழைப்பர்.

மெல்லிய இளம் சிவப்பு நிறத்தில் சிறுமணல் போல மேலெல்லாம் பரவிக்கிடக்கும்.

கடுமையான அரிப்பு இருக்கும். சொறிந்து சொறிந்து விரல்கள் வலியெடுக்கும்.

சொறிவதால் கீறல் காயங்கள் ஏற்படாது விட்டால் பெரிய விடயம்தான்.

இருந்தபோதும் இது ஆபத்தான நோயல்ல.

மருத்துவம் எதுவும் தேவைப்படாது. தானாகவே சில நாட்களில் மாறிவிடும். ஆயினும் இந்நோயின் போது அவதானிக்க வேண்டிய சில விடயங்களை இங்கு பார்க்கலாம்.

எவ்வாறு ஏற்படுகிறது?

வழமைக்கு அதிகமாக வியர்வை ஏற்படும்போது தோன்றுகிறது. பொதுவாக கடுமையான வெயிலால் உஷ்ணமும், வளியின் ஈரலிப்புத் தன்மையும் (Humidity) அதிகமாக இருப்பதால் வியர்வை கடுமையாக் கொட்டுவதால் இக்காலத்தில் தோன்றும். அதீதமாக வியர்க்கும்போது வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படும்.

இதனால் வியர்வை நீர் வெளியேற முடியாது சருமத்திற்கு கீழ் தடைப்படும். உதிர்ந்த சருமக் கலங்கள் அதற்குள் சேரும். பக்ரீரியா கிருமிகளும் அதில் தொற்றும். இதனால் அவ்விடத்தில் சிறிய திட்டி போன்று வியர்க்குரு தோன்றும். இது உடையும்போது அடைபட்ட வியர்வையும் ஏனையவையும் வெளியேறும். இவற்றால் தோலில் அழற்;சி ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். சற்று துர்நாற்றத்தையும் கொடுக்கும்.

இது உடலின் எப்பாகத்திலும் தோன்றலாம் பொதுவாக முதுகு, நெஞ்சு, கழுத்து, வயிறு, அக்குள், தொடை இடுக்கு போன்ற இடங்கள் பாதிப்படைவது அதிகம். இவை பெரும்பாலும் உடைகளால் மூடப்பட்ட இடங்களாகும். துணிகள் சருமத்தை உறுத்தி மேலும் வியர்க்கப் பண்ணுவதாலேயே அவ்விடங்களில் அதிகம் தோன்றுகிறது.

பருத்தித் துணிகள் வியர்வையை உறிஞ்சிவிடும் என்பதாலேயே அத்தகைய உடைகளை வியர்வை காலத்தில் அணிகிறோம். அணிய வேண்டும். செயற்கைத் துணிகள் வியர்வையை உறிஞ்சாது என்பதால் தவிர்க்க வேண்டும்.

யாருக்கு ஏற்படும்?

எவருக்குமே ஏற்படலாம். ஆயினும் குழந்தைகளில் ஏற்படுவது அதிகமாகும். இதற்குக் காரணம் அவர்களது வியர்வைச் சுரப்பிகளின் வளர்ச்சி முழுமையடையாததுதான்.

கொழுத்த உடல்வாகு உடையவர்களுக்கும் அதிகம் தோன்றலாம். சிலருக்கு இயல்பாகவே வியர்ப்பது அதிகம். அவர்களுக்கும் அதிகம் தோன்றும்.

வேறு காரணங்கள்

பொதுவாக வெக்கை அதிகமான காலங்களில் ஏற்படுகிறதாயினும் வியர்க்குரு வேறு காரணங்களாலும் ஏற்படலாம்.

  • நீண்டகாலம் படுக்கையில் கிடக்க நேர்ந்தாலும் ஏற்படலாம். நோய்கள் காரணமாகவே அவ்வாறு படுக்கையில் கிடக்க நேரிடும். அத் தருணங்களில் வியர்ப்பது அதிகம். அத்துடன் தடிப்பான படுக்கை விரிப்புகளும் உடைகளும் வியர்க்க வைப்பதுடன் அது வெளியேறாமல் தடுப்பதாலும் ஏற்படும்.
  • குளிர் காலங்களில் குளிரைத் தாங்குவதற்காக அணியும் அதிகமான உடைகள் மற்றொரு காரணமாகும்.
  • அடுப்பு, நெருப்பு போன்றவை இருக்கும் சூடான இடங்களில் வேலை செய்வோருக்கும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

என்ன செய்யலாம்.

  • வெக்கை அதிகமுள்ள இடங்களைத் தவிருங்கள். குளிர்ச்சியான இடங்களை நாடுங்கள். மரநிழல்கள், காற்றோட்டான இடங்கள், குளிருட்டப்பட்ட அறைகள் போன்றவை வெக்கையைக் குறைத்து வியர்வையைத் தடுக்கும்.
  • வெயில் காலத்திற்கு ஏற்றவை பருத்தி ஆடைகளே. நைலோன், பொலியெஸ்டர் போன்றவை வெப்பத்தை உள்வாங்கி தேக்கி வைத்திருப்பதால் வியர்வையை அதிகமாக்கும்.
  • இறுக்கமாக அணிவதைத் தவிர்த்து தளதளப்பாக இருந்தால் காற்றை உள்வாங்கி வெக்கையைத் தணிக்கும்.
  • வெயில் காலத்தில் இரண்டு மூன்று முறைகள் குளிப்பது நல்லது. குளிப்பது சாத்தியமில்லாவிடில் உடலைக் குளிர்நீரால் கழுவுவது அல்லது நனைப்பது நல்லது.

லோஷன்,பவுடர்

  • கலமின் (Calamine lotion) லோஷன் நல்லது. அழற்சியடைந்த சருமத்தைக் குளிர்மையாக்கி சுகமளிக்கும். எண்ணெய் வஸ்லின் கலந்தவை நல்லதல்ல. 
  • வியர்க்குருப் பவுடர்களும் நல்லதல்ல. ஏனெனில் அவை அரிப்பைக் குறைக்கக் கூடுமாயினும், வியர்வைச் சுரப்பியின் துவாரங்களை அடைத்து நோயை மேலும் மோசமாக்கலாம்.

வெயில் கால ஆபத்தான நோய் டெங்கு. அது பற்றி  

டெங்கு நோய் சிகிச்சையில் புதிய அணுகுமுறை பப்பாசி உதவுமா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>

எமது ஆரம்பப் பாடசாலையான மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் தினசரி காலை வழிபாட்டின்போது வணங்குவதற்கான சிலை இல்லாததை உணர்ந்திருந்தார் அதிபர்.திரு.மு.கனகலிங்கம். அவர்களின் முன் முயற்சியால் இப்பொழுது சிலைகள் பாடசாலையின் இரு வளாகங்களிலும் அமைக்கப்பட்ட செய்தியை தந்திருந்தோம்.

பாடசாலையின் பிரதான வளாகத்தின் தெற்குப் புறமாக இரு மண்டபங்களுக்கும் இடையே உள்ள பகுதியில்  சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் காலையில் சிலையைப் பார்த்தபடி காலைத் துதி செய்யும்போது முற்றுக் கொற்றாவத்தை பிள்ளையார் கோவில் ஆலயமும் அத் திசையிலேயே பார்வைக்கு எட்டிய தூரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமரர்களான பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் நினைவாக இச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினர்அதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர்.

அதிபர்.திரு.மு.கனகலிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இச் சிலை திறப்பு விழாவின்போது பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் மகளான திருமதி.மீனலோசனி  மற்றும் மருமகன் திரு. தம்பிராசா ஆகியோர் கலந்து சிறப்பித்து, திரை நீக்கம் செய்து  வைத்தனர்.


இச் சிலையை தம்பசிட்டியைச் சார்ந்த கலாபூசணம்.கோ.வேலுப்பிள்ளை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

மற்றச் சரஸ்வதி சிலையானது பாடசாலையின் சிறிய வளாகத்தின் மேற்குப் புறமாக கிணற்றடிக்கு அருகில் இரு மண்டபங்களுக்கும் இடையே உள்ள பகுதியில்   அமைக்கப்பட்டுள்ளது.

எமது பாடசாலையின் புகழ்பூத்த மாணவர்களில் ஒருவரான அமரர்.வை.கா.சிவப்பிரகாசம் (முன்னாள் அதிபர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) அவர்களது ஞாபகார்த்தமாக அவரது மகன் திரு.வை.கா.சி.முகுந்தன் அவர்களது நிதியுதவில் அமைக்கப்பட்டுள்ளது.  இது பாடசாலை உபஅதிபர் கணநாதன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்டுள்ளது.

இச்சிலையை அமரர் வை.கா.சிவப்பிரகாசம்அவர்களது இளைய சகோதரரான திரு.வை.கா.இராமச்சந்திரன் அவர்கள் தமது குடும்பத்தினர் சார்பாக திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.

பாலர் வளாகத்தில் உள்ள சிலையை தென்னிந்தியாவைச் சார்ந்த சிற்பக் கலைஞர்கள் வடிவமைத்துக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இரு சிலைகளுமே மிக அழகாக கலைஅம்சம் நிறைந்தனவாக அமைந்தமை மிகவும் மகிழ்ச்சி ஊட்டுகிறது. அவற்றில் உள்ள தெய்வீகக் களை மாணவர்கள் தம் மனத்தை ஒருமனப்படுத்தி, கற்கைச் செயற்பாட்டில் ஈடுபட வைக்கும் என நம்பலாம்.

இரண்டு சரஸ்வதி சிலைகளையும் அருகருகே வைத்துப் பார்க்கும்போது பிரதான வளாகத்து சிலையானது எமது பாரம்பரிய சிற்பக் கலையை நினைவூட்டுவதாக அமைந்திருப்பதாக என் மனத்தில் பட்டது.

பாலர் வளாகத்துச் சிலை அழகில் அதற்குச் சற்றும் குறைந்ததல்ல. இது நவீன சிறப்பக்கலையி்ன் நுணுக்கங்களை உள்வாங்கிப் படைக்கப்பட்டதாக மனதில் படுகிறது.


எவ்வாறாயினும் எமது பாடசாலை மாணவர்களின் நீண்ட காலத் தேவை பூர்த்தி செய்யப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது.

இச்சிலை நிறுவுவதற்கான முயற்சிகளை எடுத்த அதிபர்.திரு.மு.கனகலிங்கம், முழு ஒத்துழைப்பு வழங்கிய உப அதிபர் திரு கணநாதன், மற்றும் ஆசிரியர்களுக்கு எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இதற்கான நிதியுதவையை அளித்து, எமது பாடசாலை மாணவர்களின் கனவை நனவாக்கிய அமரர்களான பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் குடும்பத்தினருக்கும், அமரர்.வை.கா.சிவப்பிரகாசம்குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

மற்றும் சிலைகளை வடிவமைத்த சிற்பிகள், விழாவில் கலந்து கொண்ட பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.


0.0.0.0.0.0.0

Read Full Post »

>

எமது பாடசாலையின் இரு பிரிவுகளிலும் சரஸ்வதி சிலை அமைக்கும் பணி நடை பெற்று வந்ததை அறிந்திருப்பீர்கள்.

இச் சிலைகளின் திறப்பு விழா இன்று காலை நடை பெற்றது. அது பற்றிய தகவலை மேற் கண்ட அழைப்பிதழில் காணுங்கள். விழா கல்லூரி அதிபர் திரு.மு.கனகலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை பெரிய வழாகத்தின் சிலையானது அமரர்களான பத்மநாதன் இராசலஸ்மி தம்பதிகளின் நினைவாக அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது.

அதே வேளை சிறிய வளாகத்திற்கான சிலையானது அமரர்  வை.கா.சிவப்பிரகாசம் அவர்களது நினைவாக அமைக்கப்படுவதற்கு அவரது மகன் திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

சிலையை அமைத்த சிற்பக் கலைஞர் கலாபூசணம் கோ.வேலுப்பிள்ளை அவர்கள் விழாவில் கெளரவிக்கப்பட்டார்.

சிலை அமைப்பதற்கு நிதியுதவி வழங்கியவர்களுக்கும், சிலையை அமைத்த கலைஞர்களுக்கும், சிலை அமைப்பதற்கு முன்முயற்சி எடுத்த அதிபர் திரு.மு.கனகலிங்கம, சக ஆசிரியர்கள், விழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் எமது ஒன்றித்தின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Read Full Post »

>

மனதுக்குள் இருந்தது போஸ்டர் அடித்தது போல அவளது முகத்தில் பளிச்சென ஒட்டிக் கிடந்தது.

‘நீ செய்த பிழையான வேலையால் வந்த வினைதான்’ என்று சுட்டு விரலை நீட்டி நேரடியாக குற்றம் சொல்லாததுதான் மிச்சம்.

நல்ல புஸ்டியான உடம்பு. வட்டாரி வைத்துக் கீறிய வட்டம் போல முகம் ஊளைச் சதைகளால் நிரம்பிக் கனத்தது. ஆடு மாடுகள் இரை மீட்டு அசை போடுவது போல வாய் எதனையோ சப்பிச் சுவைத்துக் கொண்டேயிருந்தது.

பாரத்தை இறக்கி வைத்துவிட்டு களை தீர ஆயாசப் பெரு மூச்சு விட்டாள்.
இறக்கி வைத்தது பை நிறைந்த பொருட்களை அல்ல. 80 கிலோ ஆன தனது உடலைத்தான்.

‘டொக்டர் நீங்கள் தந்த மருந்து எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ரா ராவா சலம் அடிக்குது. நான் மருந்தைக் குறைச்சுப் போட்டன்.’

பார்த்துப் பல நாட்களாகிவிட்டதால் கொடுத்த மருந்துகள் சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை.

வழமையாக உச்ச வேகத்தில் சுற்றும் பானை நிறுத்திய பின்னும் குளிர் கலையாத தினத்தில் இவளது சிறுநீர் அதிகம் போவதற்குக் காரணம் என்ன?

‘மருந்துக்காக இருக்காது. குளிராக இருக்குமா? காய்ச்சலாக இருக்கலாம். இந்த பனிக் குளிருக்கு காச்சலும் சேர்ந்தால் சலம் கூடப் போகும்தானே’ என்ற சந்தேகம் எழுந்தது. டெம்பரேச்சரைப் பார்த்தேன். டிஜிட்டல் தேர்மாமீற்றர்  ‘நீ சொல்வது பிழை’ என மறுத்து 98.4 நோர்மல் என்றது.

‘வேறு என்னவாக இருக்கும்? லசிக்ஸ் (Lasix) மருந்து கொடுத்திருப்பேனோ?’

லசிக்ஸ் என்பது உடலில் தேங்கிவிட்ட மிதமிஞ்சிய நீரை வெளியேற்றுவதற்காக் கொடுக்கும் மருந்து. பொதுவாக இருதய வழுவல் ;(Heart Failure)> ஈரல்சிதைவு (Cirrhosis)> சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் சிறுநீர் வெளியேறுவது குறைந்தால் அதைச் சீர்செய்யக் கொடுக்கப்படும் மருந்து.

ஆனால் 40 வயதேயான இவளுக்கு அப்படியான நோய் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேளை அப்படி இருந்தாலும் அத்தகைய தீவிர பிரச்சனையான நோயுள்ளவர்களை நான் மறப்பதில்லை. இவள் அவர்களுள் ஒருத்தியல்ல.

‘சலம் போகைக்கை எரியுதோ’ சிறுநீர்த் தொற்றாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்ததில் கேட்டேன்.

 ‘ஒரு எரிவும் கிடையாது. பைப் திறந்தது போல வீச்சாகப் போகிறது’ என்றாள்.

காலையில் வந்த நோயாளி தான் குளிப்பதற்கு பைப்பைத் திறந்ததும், சிறுநீர் சிந்துவதுபோல முக்கி முனகிக்கொண்டு வந்ததாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் புரஸ்ரேட் நோயாளி. இவர் பெண் என்பதால் புரஸ்ரேட் நோய் அல்ல என்பதும் நிச்சயம்.

சிறுநீர்த் தொற்று இருக்காது எனத் தோன்றினாலும் சிறுநீர்ப் பரிசோதனை அவசியம்.

கணனியைத் தட்டி இவளது பதிவுகளைப் பார்த்தபோது அவளது சல அடிப்பிற்கு நான் கொடுத்த மருந்துகள் எவையும் காரணமல்ல என்பது தெளிவாயிற்று.

 
மருத்துமனையில் கணனியில் குறிப்பு   பற்றிய முன்னைய பதிவு.

இருப்பினும் தெளிவாக அவளுக்கு விளக்குவதற்கு இரத்தப் பரிசோதனையும் அவசியம். மருந்துவமனையிலேயே இருந்த ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைத்தேன்.

ரிப்போட் வந்தபோது இரத்தத்திலும் சிறுநீரிலும் சீனியின் அளவு அமோகமாக விளைச்சல் கண்டிருந்தது தெரிய வந்தது.

சீனி விலை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கையில் இவ்வளவு சீனியை வீணாக்குகிறாளே என கவலைப்படத்தான் முடிந்தது.

கொமோட்டில் கழியும் சீனியை வாயில் அள்ளிப் போடவா முடியும்?

சென்ற முறைதான் நீரிழிவு நோய் என முதன்முறையாக இனங்காணப்பட்டு அதற்கான சிகிச்சை ஆரம்பித்து இருந்தோம். மருந்து வேலை செய்து நோயைக் குணமாக்கு முன்னரே, மருந்தால்தான் தனக்கு நோய் என்று கருதிய இந்த அதிவிவேக பூரண சிந்தாமணி மருந்து எடுப்பதைக் குறைத்துவிட்டாள்.

உண்மையில் குறைத்தாளா அல்லது மருந்தைப் போடாமலே நிறுத்திவிட்டாளா என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாகப் போகும். நோயைக் கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மாத்திரைகள் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும். அவ்வாறு நீரிழிவு கட்டுப்பட்டதும் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது குறைந்து வழமைபோலப் போகும்.

இது புரியாத இவளும் இவளை ஒத்த வேறுபலரும் தங்கள் பிரச்சனைகளுக்கு மருந்துகள் தான் காரணம் என எண்ணுகிறார்கள். நீரிழிவுக்கு மட்டுமல்ல அல்சர், பிரசர், மூட்டுவாதம் என எந்த நோயை எடுத்தாலும் இப்படியாக மருந்தையே குற்றவாளியாகக் கருதுகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு எண்ணுவதற்குக் காரணம் என்ன?

பாரம்பரிய மருந்து முறைகளின் ரகசியம் பேணும் ‘மூடு மருத்துவம்’ போலன்றி இன்றைய நவீன மருத்துத்தில் நோய்கள் பற்றி மட்டுமன்றி மருந்துகளைப் பற்றியும் அவற்றால் ஏற்படக்;கூடிய பக்கவிளைவுகள் பற்றியும் வெளிப்படையாக பேசப்படுகின்றன. பல நோயாளிகளும் இணையம் முதல் தொலைக்காட்சி வரை கேட்டும் படித்தும் கிரகித்துக் கொள்கிறார்கள்.

சிலர் தவறாகப் புரிந்து கொள்வதும் உண்டு. எதிலும் மறைமுகத்தை மட்டும் பார்ப்பவர்கள் இவர்கள்.

இவர்கள்தான் மருந்தே வேண்டாம் என்கிறார்கள். காலனுக்கு விரைவில் விருந்து வைக்க முனைகிறார்கள்.

உண்மையில் நோயாளிகளை விட மருத்துவர்களே பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள். நினைவில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்த மருந்தைக் கொடுக்கும்போதும் அதன் சாதக பாதக விளைவுகளைக் கருத்தில் கொண்டே கொடுப்பார்கள்.

அப் பெண்ணிற்கு ‘சல அடிப்பிற்கான’ காரணத்தை விளக்கினேன்.

சிறுநீர் கழிப்பது பற்றிய மற்றொரு பதிவு… லைட் போஸ்டைக் கண்டதும் நாய்கள் போல …

அவளது முகத்தில் இருந்த போஸ்டர் திடீரென மாறிவிட்டது!

எலக்சன் நேரத்திலை சரத் பொன்சேகா, மற்றும் மஹிந்த ராஜபக்சவின் போஸ்டர்கள் சுவர் முழுக்க ஒன்று கிழிய மற்றது வருமே அதுபோல.

ஆனாலும் குற்றம் சாட்டும் சுட்டு விரலை தன்னை நோக்கித் திருப்பவில்லை.

அரசியல்வாதிகளுக்குச் சற்றும் சளைத்தவள் அல்ல!

வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.

Read Full Post »

>

கவலை வந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலை இல்லாமலும் கண்ணீர் வருகிறது. உண்மையில் எந்த நேரமும் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இது இயல்பானது. ஆனால் சிலருக்கு சிலவேளைகளில் கண்ணிலிருந்து நீர் அதீதமாக வழிகிறது. இது ஏன்?

கண்ணீரின் கடமைகள்

காரணம் என்னவென்றால், கவலையை வெளிக்காட்டுவதை விட கண்களுக்கு மேலும் பல கடமைகள் உள.

  • கண்களை ஈரலிப்பாக வைத்திருப்பது முக்கிய கடமையாகும். கண்கள் ஈரலிப்பாக இருப்பதால்தான் கண்களை நாம் மூடித் திறக்கும்போதும், பார்வையைத் திருப்புதற்காக கண்களை ஆட்டும் பொழுதும் உராய்வு இன்றி வழுவழுப்புடன் அதனால் இயங்க முடிகிறது.
  • கண்களுக்கு தேவையான போசணையில் ஓரளவு அதனூடகவும் கிடைக்கிறது. 
  • தூசி மற்றும் உறுத்தக் கூடிய பொருள்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
  • கண்கள் மாசு மறுவின்றி பளிங்கு போல கண்ணீரினால் பேணப்படுவதால்தான் எமது பார்வை தெளிவாக இருக்கிறது.
  • கண்ணில் தொற்று நோய்கள் ஏற்படாமல் காப்பதும் கண்ணீர்தான்.

எமது கண்களின் மேல் மடலுக்கு கீழே பல சிறிய கண்ணீர் சுரப்பிகள் உள்ளன. அவற்றிலிருந்து நாசிக்கு அருகே கண்களில் இருக்கும் நுண்ணிய துவாரங்கள் ஊடாகவே கண்ணீர் வருகின்றது.

இந்தக் கண்ணீரின் ஒரு பகுதி ஆவியாகி மறைந்துவிட, மீகுதி கண்ணீர்க் குழாய்களுடாக நாசியினுள் வழிந்து விடும். இது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழமையான செயற்பாடு. இக் குழாய் அடைபடுவதாலும் கண்ணீர் அதிகமாக வழியலாம்.

திடீரென அதிகமாக கண்ணீர் வடிதல்

ஆனால் நாம் உணர்ச்சி வசப்படும்போதும், கண்களுக்குள் ஏதாவது விழுந்து உறுத்துப்படும்போதும் அதிகமாகக் கண்ணீர் வடிகிறது. இது வித்தியாசமான செயற்பாடு. இது கண்ணீர்ச் சுரப்பியிலிருந்து வெளியேறுகிறது. இது தற்காலிகமாக நடைபெறுவதாகும்.

தொடர்ந்து ரீ.வீ பார்க்கும்போது அல்லது கணனியில் வேலை செய்யும்போது கண்ணீர் வடிகிறது எனப் பலர் சொல்வதைக் கேட்கிறோம். இதற்குக் காரணம் என்ன?

வழமையாக எமது கண்கள் அடிக்கடி இமைக்கிறது. அதாவது தானாகவே வெட்டி மூடுகிறது. இச் செயற்பாட்டின்போது மேலதிக கண்ணீர் கண்ணீர்குழாய் ஊடாக வெளியேறிவிடுகிறது.

ஆனால் தொடர்ந்து உற்றுப் பார்க்கும்போது கண்களை  வெட்டி மூடும் செயற்பாடு குறைகிறது. இதனால் கண்ணீர் குழாய் ஊடாக வடிவது குறைந்து தேங்குவதாலேயே கண்ணீராக வடிகிறது.

கண்ணில் கிருமித்தொற்று (Conjuntivitis) ஏற்படும்போதும் கண்களிலிருந்து நீர் போல வடிவதுண்டு.

  கண்களின் பாதுகாப்பு சில தவறான நம்பிக்கைகள்    பற்றிப் படிக்க மேலை கிளிக் பண்ணுங்கள் 


தொடர்ச்சியாக கண்களிலிருந்து நீர் வழிதல்

ஆனால் இதைத் தவிர நீண்டகாலத்திற்கு தொடரும் அதிக கண்ணீர் சுரப்பதை chronic epiphora என்பார்கள்.

இவ்வாறான நீண்டகாலம் தொடரும் கண்ணீர் சுரப்பதற்கு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

தொடர்ந்து கண்ணீர் வழிதலின் காரணங்கள்.
  • சூழல் காரணமாகலாம். இரசாயனப் பொருட்கள், புகை, வெங்காய மணம் போன்ற கண்களை உறுத்தக் கூடிய ஏதாவது ஒன்று காரணமாகலாம்.

  • ஓவ்வாமை காரணமாகலாம். சுழலிலுள்ள தூசி, மகரந்தம் போன்றவற்றால் ஏற்படும் ஒல்வாமை (Kernal Conjunctivitis) காரணமாகலாம். குளுக்கோமா போன்ற ஏதாவது கண் நோய்களுக்கு தொடர்ந்து கண்களுக்கு ஊற்றும் துளி மருந்துகள் கூட சிலருக்குக் காரணமாகலாம்.
  • கண்நோய் எனப்படும் கண்களில் ஏற்படும் கிருமித் தொற்று infective conjunctivitis மற்றொரு காரணமாகும். வைரஸ் கிருமித் தொற்று எனில் நீர்போலவும், பக்றீரியா தொற்று எனில் சற்றுத் தடிப்பாக பூளையாகவும் வரும். காலையில் கண் விழிக்கும்போது அதனால் கண்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். அன்ரிபயடிக் கண்துளிகளை மருத்துவர் தருவார்.
  • ஓரிரு இமை முடிகள் உட்பக்கமாக சிலருக்கு வளர்வதுண்டு. Entropion என்பார்கள். இதுவும் மற்றறொரு காரணமாகும். 

  • வரட்சியான கண்கள் முக்கிய காரணமாகும். வயதாகும்போது பொதுவாக ஏற்படும் பிரச்சனை இதுவாகும். அடிக்கடி கண்களை வெட்டி மூடுதல், கடுமையாக காற்று வீசுமிடங்களைத் தவிர்த்தல், புகைத்தலை நிறுத்தல் போன்றவை உதவும். செயற்கைக் (Artificial tears) கண்ணீரை உபயோகிப்பதும் உதவும்.
  • கண்ணீர்க் குழாய் ஏற்படும் அடைப்புகளால் வழமையாக நாசிக்குள் வழிவது தடைப்படுவதால் கண்ணீராக ஓடக் கூடும். இதற்கு சிறிய சத்திரசிகிச்சை உதவும். மாறாக நுண்துவாரங்களில் ஏற்படும் அடைப்பு மருத்துவர் நீரினால் கழுவுவதன் மூலம் அகற்றுவார். சில குழந்தைகள் பிறக்கும்போது அக்குழாய் முழுமையாக வளர்ச்சியடையாததால் கண்ணீர் தொடர்ந்து வரும். சில வாரங்களில் அக் குழாய் முழுமையாக வளர்ந்ததும் கண்ணீர் பெருகுவது குறைந்துவிடும்.

கண் மருந்திடுபவர்கள் அவதானிக்க வேண்டியவை  பற்றிப் படிக்க மேலை கிளிக் பண்ணுங்கள்

தினக்குரல ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதிய கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

விற்றமின் E மாத்திரைகள் உட்கொள்வது பலருக்கு தினசரி காலைத் தேநீர் அருந்துவது போல நித்திய கடமையாகிவிட்டது. விற்றமின் E மாத்திரைகள் மிகவும் பிரபல்யமாக வந்ததற்குக் காரணம், ஒட்சிசன் எதிரியான (Antioxidant) இது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கக் கூடும் என சில ஆரம்பநிலை ஆய்வுகள் தெரிவித்தமையே ஆகும். எனவே மருத்துவர்களும் ஒரு காலத்தில் அமோகமாக சிபார்சு செய்தார்கள்.
 

ஆயினும் இப்பொழுது அதன் பயன் பற்றிய புதிய எண்ணக் கருக்கள் காரணமாக சிபார்சு செய்வது குறைந்துவிட்டது.

இருந்த போதும், பல நோயாளர்கள் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு முறை டொக்டர் மருந்துச் சிட்டையை எழுதினால் எக் காலத்திற்கும் பொருந்தும் உறுதி போன்றதாக பலர் கருதுவதே இதற்குக் காரணம். அமெரிக்காவில் கூட 13 சதவிகிதமானவர்கள் விற்றமின் E மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகிப்பதாகத் தெரிகிறது.

முடி வளரும், தோல் மிருதுவாகும், முகப் பரு நீங்கும், நகம் அழகாகும் என்பது போன்ற விளம்பரங்களை அச்சு மற்றும்  இலக்ரோனிக் மீடியாக்களில் பார்த்து விற்றமின் E மாத்திரைகளை கண்டபடி உபயோகிக்கும் அப்பாவிக் கூட்டங்களுக்கு குறைவில்லை. விளம்பரங்களுக்கு செலவழிக்கும் பணம் இலகுவாக மீளக் கிடைத்துவிடுகிறது.

ஏற்கனவே சொல்லப்பட்டது போல இது ஒரு ஒட்சிசன் எதிரி (Antioxidant) ஆகும். பிறீ றடிக்கலஸ் என்று சொல்லப்படும் நச்சுப் பொருள்களால் உடல் கலங்கள், இழையங்கள், உறுப்புகளுக்கு ஏற்படக் கூடிய தாக்கங்களை இது தடுக்கிறது. இதனால் வயதாவதால் ஏற்படக் கூடிய சில மாற்றங்களை இது தடுக்கலாம் என நம்பப்பட்டது. செங்குருதி உற்பத்திக்கும் இது அவசியமானது. இருதய நலத்திற்கு உதவக் கூடும்.

இருதயநோய்கள், புற்றுநோய்கள், ஈரல்நோய்கள், மூளை மங்குதல், பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கக் கூடிய ஆற்றல் இருக்கிறது எனச் சிலர் சொன்னபோதும் அதற்கான திடமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை.

எதிர்மாறாக அதிகளவில் விற்றமின் E உட்கொள்வது ஆபத்தாக முடியக் கூடும். உதாரணமாக பக்கவாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு வகைகள் உண்டு மூளையினுள் குருதி பெருகுவதால் (Haemorrhagic strokes) ஏற்படுவது ஒரு வகை. 

மற்றது இரத்தக் குழாய் அடைபட்டு மூளையின் சில பகுதிகளுக்கு இரத்தம் தடைப்படுவதால் (Ischaemic strokes) ஏற்படுவதாகும். 

அதில் முதலாவதான குருதிப் பெருக்கு பக்கவாதமானது ஏனையவர்களை விட விற்றமின் E மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு சற்று அதிகமாகும் என ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதே நேரம் இம் மாத்திரைகள் இரத்தக் குழாய் அடைபடுவதால் ஏற்படும் பக்கவாதத்தை மிகக் குறைந்தளவில் தடுக்கும் என்றும் கூறுகிறது.

பக்கவாதத்தைத் தடுப்பதை விட அது வருவதற்குக் காரணமாக இருப்பது அதிகம் என்பதால் தான்தோன்றித்தனமாக விற்றமின் E மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

அத்துடன் கொலஸ்டரோலைக் கட்டுப்படுத்தும் சிம்வஸ்ரரின், நியாசின், குருதி உறைதலைத் தடுக்கும் வோரபரின் போன்றவற்றை உபயோகிப்பவர்கள் விற்றமின் E மாத்திரைகளை உட்கொண்டால் மருந்துகளிடையே தாக்கம் ஏற்பட்டு பாதகவிளைவுகள் ஏற்படுத்தலாம்.

புற்றுநோய்க்கு கதிர்ச்சிகிச்சை, மருந்துச் சிகிச்சை அளிக்கும்போதும் விற்றமின் E மாத்திரைகளை உட்கொண்டால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும் எனத் தெரிகிறது. எனவே விற்றமின் E மாத்திரை பாவனையில் அவதானம் தேவைப்படுகிறது.

கர்ப்பணிகள் அதிக விற்றமின் E யை உட்கொண்டால் கருவில் உள்ள குழந்தைக்கு இருதயததில் குறைபாடுகள் ஏற்படலாம் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.

மேலும் அறிய கீழே கிளிக் பண்ணுங்கள்

Babies at risk from vitamin E?

எமது உடலின் இயக்கத்திற்கு தினசரி மிகக் குறைந்தளவு விற்றமின் E மட்டுமே தேவை. வளர்ந்தவர்களுக்கு 15 மிகி, பாலகர்களுக்கு சுமார் 5மிகி என்ற அளவில் மட்டுமே. ஆயினும் பிரித்தானிய தேசிய சுகாதார சேவை 4மிகி மட்டுமெ போதுமென இப்பொழு அறிவித்துள்ளது.

இதனை எமது நாளாந்த உணவிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். வழமையான சமபல வலுவுள்ள உணவுகள் போதுமானதாகும்.

விற்றமின் E அதிகமுள்ள உணவுகள் என எவற்றைச் சொல்லலாம்?

சோளம், விதைகள், கீரை வகைகள், மற்றும் சோளம், சோயா, சூரியகாந்தி, பருத்தி ஆகிய எண்ணெய் வகைகள், மாம்பழம், தக்காளி, ஸ்பினச் போன்ற பல பழவகைகளிலும் இருக்கிறது.

பொதுவாக ஆசியநாட்டவர்களாகிய நாம் தினசரி காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றை உட்கொள்வது வழக்கம். இதனால் விற்றமின் E குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. எனவே மேலதிக விற்றமின் E மாத்திரைகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஆயினும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பலருக்கு விற்றமின் E குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. இதனால் அவர்கள் உட்கொள்ளும் மல்ரிவிற்றமின் மாத்திரைகளில் சுமார் 30மிகி விற்றமின் E சேர்க்கிறார்கள். அது தாராளமாகப் போதும்.

இங்கு கிடைக்கும் பல மல்ரிவிற்றமின் மாத்திரைகளிலும் கிட்டத்தட்ட அதேபோல குறைந்தளவு விற்றமின் E இருக்கிறது. இது ஆபத்தானது அல்ல.

ஆனால் விற்றமின் E மாத்திரைகளை உட்கொள்ளும் பலர் 400 -600 மிகி அல்லது அதற்கு அதிகமான வலுவிலும் எடுக்கிறார்கள். இது நல்லதல்ல. இது பக்கவிளைவுகளைக் கொண்டு வரலாம்.

எனவே விற்றமின் E மாத்திரைகளை

  • மருத்துவரின் சிபார்சு இன்றி எடுக்க வேண்டாம். 
  • மருத்துவர் ஏதாவது காரணத்திற்காகச் சிபார்சு செய்திருந்தால் அந்த அளவை மட்டுமே உட்கொள்ளுங்கள். 
  • உங்கள் விருப்பத்தின்படி தேவையற்று உட்கொள்ளாதீர்கள்.
  • விளம்பரங்களைக் கண்டு ஏமாறவும் வேண்டாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>

கொழும்பு பல்கலைக் கழக தமிழ் சங்கத்தினர் சிறந்த தமிழ் வலைப் பதிவாளருக்கான விருதை இவ்வருடம் எனக்குக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளார்கள்.

மேற்படி சங்கத்தினரின் முத்தமிழ் விழாவானது ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’  என்ற பாரதியின் குரலைத் தொனிப் பொருளாக கொண்டு நடந்தேறியது.

சென்ற ஆண்டு வெற்றி எவ்எம் பணிப்பாளர் லோஷன் அவர்களுக்கு இவ் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 வருடங்களாக வலைப் பதிவு உலகில் நான் இயங்கிக் கொண்டிருக்கின்றேன்.

மருத்துவத்திற்காக ஹாய் நலமா?

இலக்கியம் சினிமா கலையுலகம் ஆகியவற்றிற்கான மறந்து போகாத சில
மருத்துவத்துறை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள Steth இன் குரல்
என எனது பதிவுலகம் விரிந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு போலும் இந்த விருதை அளித்துள்ளார்கள்.

பதிவுலகில் தடம்பதிக்க கைகொடுத்து ஆதரவு தந்த பதிவுலக நண்பர்கள் அனைவரும் இவ் விருதின் பங்காளிகளே. அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்.

சென்ற ஞாயிறு 5ம் திகதி மாலை கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவின் போது  கொழும்பு பல்கலைக் கழக தமிழ் சங்க பெரும்பொருளாளர் திருமதி சாந்தி செகராஜசிங்கம் (சிரேஸ்ட  விரிவுரையாளர் சட்டபீடம்) அவர்களால், சங்கத் தலைவர் தியாகராஜா சுகந்தன் முன்னிலையில் இவ் விருது வழங்கப்பட்டது.

சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு மருத்துவ பீட மாணவனாக இருந்தபோது (1970-75) நானும் இச் சங்க அங்கத்தவராக இருந்த இனிய நாட்கள் மனதில் நிழலாடுகிறது. அதன் பல செயற்பாடுகளிலும் முன் நிற்கக் கூடியதாக இருந்தது.

இதே மேடையில் அப்பொழுது 1974ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் 17ம் திகதிகள் என இரு நாட்களாக இளம் தென்றல் கலைவிழா நடபெற்றது. அவ் விழாவில்  ‘நெடும் பயணம் நிறையும் வரையில் நெஞ்சேயுனக்கு ஓய்வில்லை’ தலைப்பிலான கவிதை அரங்கிற்கு தலைமை தாங்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த கவிதை அரங்கில் முற்போக்கு கலை இலக்கியப் பேரவைச் சார்ந்த திரு.சோ.தேவராஜா சட்டத்துறை மாணவனாக இருந்த அந் நேரத்தில் கவிதை படித்ததும் சந்தோசமான நிகழ்வாகும்.

அன்று மேடையேறிய மருத்துவபீட மாணவர்களின் ‘தழும்பிய நெஞ்சம்’ என்ற நாடகத்தில் வேலுவாக நடித்துப் பாராட்டுப் பெறக் கூடியதாக இருந்தது.

இத்தகைய நினைவலைகளை மீண்டுக்கொண்டு, கொழும்பு பல்கலைக் கழக தமிழ் சங்கத் தமிழ் விழாவில் இப்பொழுது மேடையேறக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

கொழும்பு பல்கலைக் கழக தமி்ழ் சங்கத்தினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களின் தமிழ்ப் பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.

Read Full Post »

>

அனல் காற்றில் விசவாயு
கலந்தெரித்த பூமி
அதில் விளைந்த இளந்துளிர்கள்
தீய்ந்தழிந்து
கனகாலம் ஆகவில்லை.

முதுமரங்கள் விழிவரளச்
சுரசரக்கும் காவோலையாகும்.
துயர்வாய்வில்
மணல் கூடத்
தீய்ந்தெரிந்து
கரியாகச் சாகும்.

பிணம் தின்னிக் கரும்பறவை
கரைந்தழுது
தேனொழுகப் பேசும்.
பொய்யான உறுதி பலவுதிர்த்து
உள்ளரங்கில்
தலை நுளைக்கப் பார்க்கும்.
தரை தின்ன கறையானாய்
அரித்தரித்துப் பரவும்.
பிறர் மண்ணை ஏப்பமிடும்
வழியனைத்தும் நாடும்.

துயர் சிந்தி வாழ்வொடுங்கி
தலை சாய்க்கும்
சேற்றெருமை அல்ல.
துளிநீரும் கடலாகப்
பரந்தெழுப் படகாகி மிதப்பர்.

பனங்கொட்டை முளைவிட்டு
வடலியென வளரும்.
இவர் வாழ்வு கருகாது
வளவெங்கும் நிமிரும்.

ஜீவநதி இதழ் 33 (ஆனி 2011) இதழில் வெளியான என் கவிதை

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0.0

Read Full Post »