Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2011

பேராசிரியர்.செ.யோகராசா எழுதிய ஆய்வுக் கட்டுரை ‘புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு’ இங்கு பிடிஎவ் PDF பைலாகத் தரப்படுகிறது. பருத்தித்துறை வேலாயும்மகாவித்தியாலய ஸ்தாபகரான அமரர் உயர்திரு.வை. வேலாயுதம்பிள்ளை அவர்களின் நிறுவுனர் தினப் பேருரையாக நிகழ்த்தப்பட்டதன் நூல் வடிவம். படிப்பதற்கு கீழே கிளிக் பண்ணவும்.

Yogarajah on Vadamarachi writers

இதனை எனது வலைப்பூவில் வெளியிட அனுமதி தந்ததற்காக பேராசிரியர.செ.யோகராசாஅவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

0.0.0.0.0.0

Read Full Post »

புகலிட இலக்கியம் என்றால் என்ன? புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன? இவற்றிற்கிடையே வேறுபாடு இருக்கும் என்பதை பலர் சிந்திப்பதே இல்லை. அவற்றிடையே மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

பேராசிரியர் செ.யோகராசா

“அரசியல் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர் படைப்பதே ‘புகலிட இலக்கியம்’ (Diasporic literature) எனலாம். தொழில் நிமித்தமான ஈழத்தமிழர் புலப்பெயர்வு செய்தோர் எழுதுவது புலம்பெயர் இலக்கியம் (Expatriate literature) இந்த வேறுபாட்டை முதலில் தெளிபடுத்திய பின் “புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு” என்ற தனது நினைவுப் பேருரையின் முக்கிய பகுதிக்குள் நுழைகிறார் செ.யோகராசா.

பருத்தித்துறை வேலாயும்மகாவித்தியாலய ஸ்தாபகரான அமரர் உயர்திரு.வை. வேலாயுதம்பிள்ளை அவர்களின் முன்னோடிப் பணியை கெளரவப்படுத்தப்படும்  நிகழ்வான ‘நிறுவனர் தின நினைவுப் பேருரை’ சென்ற 07.08.2011 ஞாயிறு மாலை கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. அந்த உரை சிறு கைநூல்நூலாக அன்று வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டமில்லாமல் அரிய பணிகளைச் செய்பவர்கள் தமிழ் இலக்கிய உலகில் குறைவு என்றே சொல்ல வேண்டும். வெற்றுத் தகர டப்பாக்களின் காதை செவிடுபட வைக்கும் ஓசைகளின் மத்தியில்  மெளனமாக ஆழமான ஆய்வுப் பணிகளை செய்கிறவர்கள் மிகக் குறைவு என்றே சொல்லலாம்.

இவர்களிடையே வித்தியாசமான ஒருவர்தான் செ.யோகராசா. தப்பு!! பேராசிரியர் செ.யோகராசா என்று சொல்ல வேண்டும். தமிழ்ப் பேராசிரியரான அவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும் பணிபுரிகிறார்.

200 கட்டுரைகள், 50 ஆய்வுக் கட்டுரைகள், 8 நூல்கள், 6 தொகுப்பு நூல்கள் என இவரது தமிழ் இலக்கியப் பணி பலமானது.

புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு என்ற இந்த நூல் நிறையத் தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இந்த நூலின் உள்ளடக்கம் அதனைத் தெளிவுபடுத்தும். முன்னணி எழுத்தாளர்களை மட்டுமின்றி இளம் தலைமுறையினர் பலரையும் தேடிக் கண்டுபிடித்துத் தகவல் தந்த அவரது பணி பாராட்டத்தக்கது.

  • புலம்பெயர் இலக்கியமும் புகலிட இலக்கியமும்
  • சிறுகதைத் துறையில்
  • கவிதைத்துறையில்
  • மொழிபெயர்புத் துறையில்
  • கட்டுரைத் துறையில்
  • நாடகத்துறையில்
  • ஓவியத்துறையில்
  • ஒலபரப்புத் துறையில்
  • சஞ்சிகைத் துறையில்
  • நூல் வெளியீட்டுத்துறையில்
  • மதிப்பீடு

ஆகிய தலைப்புகளில் அவரது ஆய்வுத் தகவல்கள் கட்டுரையாகப் பரிணமிக்கின்றன.

கரவெட்டியைச் சேர்ந்த இவர் இளமைக் காலத்தில் கருணை யோகன் என்ற புனை பெயரில் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

  • ‘ஈழத்து நவீன கவிதை புதிய உள்ளடக்கங்கள்- புதிய தரவுகள்- புதிய போக்குகள்’  என்ற தனது நூலிற்காக தேசிய சாகித்திய விருது 2007ல் பெற்றுள்ளார்.
  • ‘பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை – பிரதேச சாகித்திய விருது 2007
  • ஈழத்து நாவல் வளர்ச்சியும் வளமும்- பிரதேச சாகித்திய விருது 2008

பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது முழமையான ஆய்வு அல்ல என.செ.யோ ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். காரணம் பூரணமான தகவல்களைப் பெற முடியவில்லை என்ற அவரது ஆதங்கமாக இருக்கலாம்.

புகலிட இலக்கியம் மற்றும் புலம்பெயர் இலக்கியம் படைப்போரும், அதில் ஆர்வமுள்ளோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. தவறுப்பட்ட படைப்பாளிகள் பற்றிய தகவலறிந்தோர் செங்கல்லடியில் உள்ள கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்துறையிலுள்ள நூலாசிரியருடன் தொடர்பு கொள்ளலாம் என நம்புகிறேன்.

Read Full Post »

இரு ரவீந்திரன்களின் நூல்களின் அறிமுகம் மற்றும் ஆய்வரங்கங்கள் எதிர் வரும் ஞாயிறுகளில் நடைபெற இருக்கின்றன.

வதிரி.சி.ரவீந்திரன் மற்றும் ந.இரவீந்திரன் ஆகியோரது நூல்கள் தொடர்பான நிகழ்வுகளே அவை.

வதிரி.சி.ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ 

வதிரி.சி.ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதியின் அறிமுக விழா எதிர்வரும் 21.08.02011 ஞாயிறு மாலை 4.15 மணிக்கு நடைபெற உள்ளது.

கொழும்பு தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

தலைமை:- பேராசிரியர் மா.கருணாநிதி (கொழும்பு பல்கலைக் கழகம் கல்வியியல் துறை)

முதற்பிரதி பெறுநர்:- புரவலர் ஹாசிம் உமர்

தமிழ்தாய் வாழ்த்து

வரவேற்புரை :-
திரு.செ.கணேசன்

நூல் அறிமுகம்:-
திருமதி M.S.தேவகெளரி (சிரேஷ்ட விரிவுரையாளர் ஊடகவியல் கல்லூரி)

வாழ்த்துரைகள் :-

பேராசிரியர் சபா.ஜெயராஜா
திரு டொமினிக் ஜீவா(மல்லிகை)
தி.ஞானசேகரன்(ஞானம்)

கருத்துரை:-

பேராசிரியர் செ.யோகராசா (கிழக்கு பல்கலைக் கழகம் தமிழ்துறை)

நயவுரை:- மத்திய கிழக்கு நாட்டிலிருந்து சிறிஸ்கந்தராஜா

ஏற்புரை:- நூலாசிரியர்

தொகுப்புரை:- மேமன்கவி

0.0.0.0.0.0.0
ந.இரவீந்திரனின் ‘முற்போக்கு இலக்கிய எழுச்சி’
ந.இரவீந்திரனின் ‘முற்போக்கு இலக்கிய எழுச்சி’ நூல் ஆய்வரங்கும் கலந்துரையாடலும் எதிர்வரும் 28.08.02011 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
நான்கு முன்னொடி முற்போக்கு எழுத்தாளர்களான
என்.கே.ரகுநாதன்
கே.டானியல்
டொமினிக் ஜீவா
நீர்வை பொன்னையன்
ஆகியோர் படைப்புகள் பற்றி
இடம்:-
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம் (WERC)
58,தர்மாரா வீதி
கொழும்பு 0.6
தலைமை:- கலாநிதி.செல்வி திருச்சந்திரன்
ஆய்வாளர்கள்

திக்குவல்லை கமால்- என்.கே.ரகுநாதன்
லெனின் மதிவாணம்- கே.டானியல்
எம்.தேவகெளரி-  டொமினிக் ஜீவா
வ.மகேஸ்வரன்-  நீர்வை பொன்னையன்

கலந்துரையாடல் நடைபெறும்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

வெள்ளவத்த காலி வீதியை மேவிய நடை பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண் திடீரென கால் தடக்கி விழுந்தாள். எழ முடியாது வேதைனையில் துடித்துக் கொண்டிருந்தாள். பாதையால் சென்று கொண்டிருந்த ஓரிருவர் ஓடி வந்து அவளைத் தூக்கிவிட முயன்ற போதும் அவளால் எழவே முடியவில்லை.

தெரிந்தவர் யாரோ தற்செயலாக வந்ததால் அம்பியுலன்சை அழைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவளது இடுப்பு எலும்பு உடைந்திருப்பது தெரிந்தது. சத்திரசிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று.

ஏன் அவ்வாறு நிகழ்ந்தது

வயதும் ஒஸ்டியோபொரோசசின் தாக்கமும்

  • முக்கியமாக அவளது வயது 70தை நெருங்கியிருந்தது. அத்துடன் அவளது நடுநிலை (Postural imbalance) சற்று தழும்பியிருந்தது. அதனால் சிறிது தடுக்கியதும் விழ நேர்ந்தது.
  • தடக்கியதற்குக் காரணம் மாநகரசபையின் அக்கறையீனம். மின்சார, குடிநீர் குழாய் அல்லது கழிவு நீர் அகற்றும் வேலைகளுக்காக கிண்டிய நடைபாதை சரியாகச் செப்பனிடவில்லை. ஏனோ தானோ எனத் திருத்தியதால் நடைபாதைகள் திட்டியும் பிட்டியுமாக கிடந்ததால் தடக்கியது.
  • தடக்கி விழும் எல்லோருக்கும் எலும்பு உடைவதில்லை. இவளது எலும்புகள் வலுவிழந்து ஒஸ்ரியோபொரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் சிறிய விழுகையே அவளது இடுப்பு எலும்பை எடைத்துவிட்டது.
  • பரிதாபம் என்னவென்றால் தனக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அதற்கான சிகிச்சையை எடுத்ததும் இல்லை. பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியாததால் பாதுகாப்பாக இருக்கவும் இல்லை.

மற்றொரு பெண் குளியறையில் செருப்பு இல்லாமல் சென்றபோது வழுக்கிவிட்டது. விழும்போது அடிபடாது இருப்பதற்காக கையைத் தரையில்  ஊன்றியபோது மணிக்கட்டு எலும்பு முறிந்துவிட்டது. இவருக்கும் ஒஸ்ரியோபொரோசிஸ் நோய்தான்.

ஒஸ்ரியோபொரோசிஸ் என்றால் என்ன?

எமது எலும்பு எஃகு போலக் கடினமானது. ஆனால் அதன் உறுதித்தன்மை மிக உச்சமான கட்டத்தில் இருப்பது 25-30 வயதுகளில்தான். அதன் பின் என்ன நடக்கிறது.

கடினமான இரும்பினுள் நுண்ணிய துவாரங்களை இட்டால் என்ன செய்யும்? அதன் உறுதித்தன்மை குறைந்தவிடும். மேலும் அதிகமாக துவாரம் இட்டால் கையால் முறித்து உடைக்கும் அளவிற்குக் குறைந்துவிடும். அதே போல இளம் வயதில் கடினமாக இருக்கும் எலும்பின் அடர்த்தி வயது ஏற ஏற குறையும். இது இயற்கையின் நியதி.

ஆனால் சிலருக்கு அதிகமாக அதன் உறுதித்தன்மை மிக அதிகமாகக் கெடுவதால் அவை மிகவும் பலவீனம் அடைந்து எளிதில் உடைந்து விடுகின்றன. இந்த நிலைதான் ஒஸ்ரியோபொரோசிஸ் என்பதாகும்.

ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்?
பரம்பரை அம்சம்

இது மிக முக்கியமானதாகும். உங்களது எலும்புத் திணிவைத் தீர்மானிப்பதில் பரம்பரை அம்சமானது 60 முதல் 70 சதவிகிதமளவில் பங்களிக்கிறது.

உங்கள் அப்பா, அம்மா, சகோதரங்கள் அல்லது பாட்டன் பாட்டி. போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் நோய் அல்லது இடுப்பு எலும்பு உடைவு (Hip fracture) இருந்திருந்தால் உங்களுக்கும் எதிர்காலத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

அவ்வாறெனில் இளவயதிலேயே உணவு முறைகளாலும் உடற் பயிற்சிகளாலம் எலும்பகளின் திடத்தை அதிகரிக்க முயல்வது அவசியமாகும்.

இனம்

நீங்கள் ஆசியப் மற்றும் Caucasian பகுதியைச் சார்ந்தவராயின் உங்களுக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். அமெரிக்க ஆபிரிக்கப் பெண்களுக்கு மிகக் குறைவாகும். Hispanic பெண்களுக்கு இடைநடுத்தர வாய்ப்பு உண்டு. எனவே ஆசியப் பெண்களான நீங்கள் உங்களுக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் நோய் வரக் கூடும் என்பதை மனதில் இருத்தி அதற்கேற்ற உணவு முறைகளையும், உடற் பயிற்சிகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

மெலிவான உடல்வாகு

அதீத  எடைக்கும் பல நோய்களுக்கும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் மெலிந்த உடல் வாகை உள்ளவர்களை ஒஸ்ரியோபொரோசிஸ் நோய் தாக்குவது அதிகம். ஒருவரது எடை அவரது உயரத்திற்கு எற்ப சரியானதா, அதிகமா, குறைவா என்பதை உடற் திணிவு (Body mass Index) மூலமே அறிய முடியும். (உங்கள் உடற் திணிவை அறிய ஹாய் நலமா புளக்கின் இடது கொலமின் கீழ்ப் பகுதியில் பார்க்கவும். மெலிந்த உடல்வாகு கொண்டவர்களது எலும்புகள் திடமற்று இருப்பதால் அதிகமாக நோயுறுகிறது.

மாறாக வயிற்றறைக் கொழுப்பும் காரணமாகலாம். இணைப்பில் படியுங்கள்

மாதவிடாயக் குழப்பங்கள்

மாதவிடாய் ஒழுங்காக இல்லாதவர்களுக்கு பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் குறைபாடு இருக்கக் கூடும். இதனால் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

15 வயதிற்கு மேல் பருவமடைதல் தாமதமாகும் பெண்களுக்கு எலும்பின் அடர்த்தி குறைவாக (Osteopenia) இருப்பதுடன் பிற்காலத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதும் அதிகமாகும். அதேபோல காலத்திற்கு முந்தி (45வயது) மாதவிடாய் முற்றாக நின்ற (Menapause) பெண்களுக்கும், கர்ப்பம் தங்காத சாதாரண காலங்களிலும் மாதவிடாய் இடையிடையே நீண்ட நாட்களுக்கு வராது இருப்பவர்களுக்கும் ஒஸ்ரியோபொரோசிஸ் வரும் வாய்ப்பு அதிகமாகும்.

வாழ்க்கை முறைகள்

மனிதனின் உடல் உழைப்பிற்காக வடிவமைக்கப்பட்டது. அதனால் உழைப்பிற்கு ஏற்பவே உடல் திண்ணமமடையும். அதேபோல எலுப்புகளும் உங்கள் உடலைச் சுமப்பதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்ப உறுதியாக மாறும். முக்கியமாக எலும்பு உருவாகும் காலமான இளமைப் பருவத்தல் உடல் உழைப்பு அவசியம்.

முக்கியமாக மாணவர்களுக்கு அவசியம். பாடசாலை ரியூசன். ரீவி, கம்பியூட்டர் என உடலுக்கு பயிற்சியற்ற வாழ்க்கை வாழ்ந்தால் அவர்களது எலும்புகள் திடம் பெறுவது எங்ஙனம். இப்பொழுது பெரும்பாலான பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிக்கு முந்திய ஒரு சில வாரங்களே உடற் பயிற்சி நடைபெறுகிறது. இந்நிலை மாற வேண்டும். தினமும் விளையாட்டிற்கு என அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது அவசியம்.

நோயுற்று படுக்கையில் கிடந்தாலும், சக்கர நாற்காலியில் திரிந்தாலும் எலும்புகள் தேய்ந்து விடுகின்றன. அதைத் தடுக்கவே பிசியோதிரபி கொடுக்கப்படுகிறது.

மொத்தத்தில் அனைவருக்கும் அவர்களது வயதிற்கு ஏற்ற உடற் பயிற்சிகள் கட்டாயம் தேவை.

புகைத்தலும் மதுவும்

இந்த இரண்டு பழக்கங்களும் எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்து ஒஸ்ரியோபொரோசிஸ் நோய்க்கு வழி வகுக்கின்றன.

உணவு முறைகள்

உணவு முறைகளைப் பொறுத்த வரையில் கல்சியம் விற்றமின் டி செறிந்த உணவுகளை நீங்கள் உண்பது அவசியம். முக்கயமாகப் பழவகைகளை தினமும் சேர்க்க வேண்டும். பால், முட்டை, கருவாடு ஆகியனவும் நல்லது.

அதீதமாக கோப்பி இருந்துவதும் நல்லதல்ல. புரதங்களை மிதமிஞ்சி உண்பதும் ஒஸ்ரியோபொரோசிஸ் நோய்க்கு இட்டுச் செல்லும் என நம்பப்படுகிறது.

உணவும் ஒஸ்டியோபொரோசிஸ் தடுப்பும்
நீங்கள் செய்யக் கூடியது என்ன?

உங்கள் இனத்தையோ பரம்பரையையோ உங்களால் மாற்ற முடியாது.

ஆயினும் உங்கள் வம்சத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் இருந்தால் அது உங்களுக்கு எதிர்காலத்தில் வராதிருப்பதற்கான உணவு முறைகளையும், உடற் பயிற்சிகளையும் செய்வது அவசியம்.

சில மருந்துகளும் காரணமாகலாம்

  • கருத்தடைக்கு உபயோகிக்கும் டிப்போ புரொவிரா ஊசி,
  • வயிற்றப் பொருமல் அல்சர் போன்றவற்றிற்கு உபயோகிக்கும் அலுமினியம் கலந்த மருந்துகள் (டைஜீன், பெல்சிட் போன்றவை),
  • தைரொக்சின் (Thyroxine),
  • வலிப்பு நோய் மருந்துகள் (Anticonvulsants) போன்ற பல மருந்துகள் ஒஸ்ரியோபொரோசிஸ் நோயை ஊக்குவிக்கும் என்பதால் மருத்தவருடன் கலந்து ஆலோசியுங்கள்.
  • நீண்டகாலம் அன்ரிபயோடிக் மருந்துகளை உபயோகிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன

ஒஸ்டியோபொரோசிஸ் வர சில காரணங்கள்

புகைத்தல். மதுபானம் அருந்தல் போன்ற பாதகமான பழக்கங்கள் இருந்தால் அவற்றைக் கைவிடுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

மு.பொ அவர்கள் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவர். கவிதை, சிறுகதை, நவீனம், விமர்சனம், எனப் பல துறைகளிலும் தனது திறமைகளைக் காட்டியவர். இதழ் ஆசிரியரும் கூட. சுயசிந்தனை அவரது பெரு முதல்.

இலங்கையில் தமிழ் இலக்கியத் துறை முற்போக்கு நற்போக்கு பிரிந்து நின்று வரிந்து கட்டி முரண்பட்டு நின்ற போது, இலக்கியச் சிந்தனை மரபில் இற்றைவரை இல்லாத புது வீச்சைப் பாச்சிய மு.தளையசிங்கத்தின் மரபில் வந்தவர் மு.பொ. கருத்து முதல்வாதம் பொருள் முதல் வாதம் என இரு முனைப்பட்ட சிந்தனை நிலவியபோது ஆத்மார்த்தம் சார்ந்த புதிய சிந்தனை ஊற்றை பிரவாகிக்க விட்டவர் மு.த. மெய்யுள் என்ற அவரது எண்ணக்கரு இலங்கையை விட தமிழகத்தில் கூடிய வரவேற்பைப் பெற்றது.

மு.பொ படைப்புகளிலும் விமர்சனங்களிலும் இந்தக் கருத்து உள்ளுறைந்து நிற்பதை தீவிர வாசகர்கள் அறிவர்.

‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்பது மு.பொன்னம்பலம் அவர்களின் புதிய நூலாகும். அவர் பல வருடங்களாக எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாக இந் நூல் வெளிவந்துள்ளது.

400 பக்கங்களுக்கு மேல் வரும் இந்த நாலில் உள்ள படைப்புகள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  •  அறிமுக விமர்சனம்
  • விமர்சனம்
  • ஆய்வு நிலை சார்ந்த விமர்சனம்
  • எதிர்வினை விமர்சனம்

இந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 14.08.2011 ஞாயிறு மாலை நடைபெற உள்ளது.

வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள கொழும்பு தமிழ் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

மாலை 4.45 மணிக்கு பேராசிரியர்.சோ.சந்திரசேகரன் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகும்.

தலைமையுரை, வரவேற்புரையைத் தொடர்ந்து புரவலர் ஹாசிம் உமர் சிறப்புப் பிரதியைப் பெறுவார்.

நூல் பற்றிய உரைகள்

திரு.குணரத்தினம் செந்தீபன்.

வைத்திய கலாநிதி. எம்.கே.முருகானந்தன்

திரு.க.சண்முகலிங்கம் (ஆசிரியர்- பிரவாதம்)

ஏற்புரையை நூலாசிரியர் மு.பொன்னம்பலம் வழங்குவார்

நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெறும்.

நண்பர்கள் வட்டம் ஒழுங்கு செய்துள்ள இக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறார்கள்.

இன்றைய தமிழ் இலக்கியத்தின் புதிய சிந்தனைப் பாய்சல்களை அவாவும் நண்பர்களுக்கு இக் கூட்டம் அாருவிருந்தாக அமையும் என நம்புகிறேன்.

 0.0.0.0.0.0.0

Read Full Post »

கூடிக் களிப்பதில்

குழந்தையர்க்கின்பம்

நடன மாடிப் பரவலில்

நர்தனியர்க்கு இன்பம்

பாடிப் பரவசமாதலில்

பாவலர்க்கின்பம்- வெயிலில்

ஆடிக்களிப்பதில்

அணிதுணிகளுக்கு

அளவிலா ஆனந்தம்

கூடவே பசுங்கொடி தழுவலில்

தாண்டவமாடும்

ஆனந்தம் பேரானந்தம்.

ஆட்சியிலிருப்பது அரசியலர்க்கின்பம்

எதோட்சிகாரம் செய்தல்

அதிலும் இன்பம்.

எதிரணியர் சிறையடை படல்

கடையணித் தொண்டனுக்கும்

பரவச இன்பமாகும்.

மறுகுழு எழுத்தனைத்தும்

பழிப்பதில் இன்பம்.

கவைக்குதவாது

காலவதியாகிடுமென

இழித்துரைத்தல்

அதனிலும் இன்பம்.

ஒட்டக் கூத்தன் பரம்பரையின்

இன்பம் இனியொறொன்றிலும்

கிட்டவே கிட்டாது.

படைப்புலகில்

மற்றெல்லாம்

துச்சம் துச்சமே!

0.0.0.0.0.0.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »