Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2012

மணிக்கட்டில் இப் பெண்ணுக்கு அரிப்பெடுத்தது. அவ்விடத்தில் சருமம் சற்றுக் கருமை படர்ந்து சொர சொரப்பாகவும் இருந்தது. இதுவும் ஒரு சரும நோய்தான்.

கோயில் நூல் கட்டியவருக்கு மணிக்கட்டில் ஒவ்வாமை அழற்சி

கையில் நூல் கட்டியிருப்பதால் இப் பெண்ணுக்கு ஏற்பட்டிருப்பது (Allergic Contact Dermatitis) தொடர்பு ஒவ்வாமை தோலழட்சி என விஞ்ஞானத் தமிழில் சொல்லலாம். ஒட்டுக் கிரந்தி எனச் சொல்லலாமா தெரியவில்லை.

இது ஏன் ஏற்பட்டது?

  • நூலில் உள்ள இரசாயனங்கள் காரணமாக இருக்கலாம்.
  • அல்லது வீட்டு வேலைகள் செய்யும் போது கைகளை அடிக்கடி நனைப்பதால் நூலில் ஊறியிருக்கும் ஈரலிப்பு,
  • அல்லது அதில் ஒட்டியிருக்கக் கூடிய சோப் காரணமாக இருக்கலாம்.

காரணம் எதுவானாலும் முதற் செய்ய வேண்டியது அந் நூலைக் கழற்ற வேண்டியதுதான்.

தோடு, மூக்குத்தி, காப்பு, மாலை, அரைஞாண் போன்ற ஆபரணங்களுக்கும் அணிகலங்களுக்கும் இவ்வாறு நேரலாம்.

காற்சலங்கையில் உள்ள எலோகத்திற்கு ஒவ்வாமையால்
விரல்களில் செரும்பிலுள்ள ரப்பர் ஒவ்வாமை.

சிமெந்து, தோற் பொருட்கள், ரப்பர் காலணிகள், ரப்பர் கையுறைகள், மருத்துவத்திலும், அழகு சாதனங்களாகவும் பயன்படுத்தும் கிறீம் வகைகள் போன்றவையும் தொடர்பு ஒவ்வாமை தோலழட்சிக்குக் காரணமாவதை அவதானிக்க முடிகிறது.

தோலழற்சி, ஒவ்வாமைத் தோலழற்சி

ஊறு விளைவிக்கக் கூடிய எந்த பொருளுக்கும் எதிரான சருமத்தின் பிரதிபலிப்பாக அழற்சி ஏற்படுகிறது. பெரும்பாலும் அப்பொருள் சருமத்துடன் தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்படும்.

பொக்கற்றிற்குள் திறப்புக் கோர்வை கொண்டு திரிந்தவருக்கு தொடைகளில் அரிப்பு

உதாரணமாக உள்ளாடையின் இலாஸ்டிக் தொடர்புறும் வயிறு மற்றும் பின்புறத்தில் சுற்றிவர ஏற்படலாம். கைக்கடிகாரத்தின் உலோகப் பகுதிகள் தொடர்புறும் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படுகிறது.

சருமத்தில் ஏற்படும் அழற்சியை Irritant Dermatitis அந்நியப் பொருற் தொடர்பு தோல் அழற்சி என்பார்கள்.

அதுவே சருமத்திற்கு ஒவ்வாத பொருளால் ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி Allergic contact Dermatitis என்பார்கள்.

இரப்பர் சிலிப்பர் அணிந்தவருக்கு அதன் வார் படும் இடங்களில் ஒவ்வாமை அழற்சி

ஒவ்வாத பொருள் சருமத்தில் பட்டவுடன் இது ஏற்படுவதில்லை. பலதடவைகள் தொடர்பு ஏற்படும்போது படிப்படியாக ஒவ்வாமை தோலழற்சி ஏற்படுகிறது.

வழமையாகப் பொட்டும் பெண்ணுக்கு பொட்டிட்டது போலவே நெற்றியில் ஒவ்வாமை அழற்சி

ஆனால் இவ்வாறு எல்லாமே தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்பட வேண்டும் என்பது நியதியல்ல. உதாரணமாக முகத்திற்கு ஒரு லோசனைப் பூசும் போது அல்லது தலை முடிக்கு முடிச்சாயம் (Hair Dye) பூசும்போது முகம் முழுவதும் அல்லது தலை முழுவதும் அவ்வாறு பாதிக்கப்படுவதில்லை. சில இடங்களில் மட்டும் திட்டுத் திட்டாக தோல் அழற்சி ஏற்படுவதையே காண்கிறோம்.

ஒரு முறை இவ்வாறு அழற்சி ஏற்பட்டிருந்து அது குணமாகிவிட்டது என வைத்துக் கொள்வோம். இவ்வாறு தொடர்பினால் நோயை ஏற்படுத்திய பொருள் மீண்டும் தொடர்பு கொள்ளப்பட்டால் அல்லது அதே பொருள் வாயினால் உட்கொள்ளப்பட்டிருந்தால்

  • மீண்டும் அதே இடத்தில் சரும அழற்சி ஏற்படலாம்.
  • அல்லது இன்னும் அதிகமாகவும் பெரிதாகவும் ஏற்படவும் வாய்ப்புண்டு.

ஹெயர் டை இட்ட பெண்ணிற்கு கழுத்தின் பின்பக்கத்திலும் தலையிலும் அழற்சி

அறிகுறிகள்

சருமத்தில் பல விதமான மாற்றங்கள் அவ்விடத்தில் ஏற்படும்

  • செந்நிறமான சருமத் தடிப்புகள்
  • சருமத்தில் வீக்கங்கள்
  • அவ்விடத்தில் அரிப்பு கடுமையாக இருக்கும்
  • சருமம் வரண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு, சிவந்து தீக் காயங்கள் போலவும் தோற்றமளிக்கலாம்.
  • கொப்பளங்கள் எற்பட்டு அதிலிருந்து நீராகக் கசியக் கூடும், அது உலரந்து அயறு போலப் படையாக படியவும் கூடும்.
  • பெரும்பாலும் ஒவ்வாத பொருள் தொர்புற்ற அதே அடத்தில் தோன்றுவதால் நோயை நிர்ணயிக்க சுலபமாக இருக்கும். இல்லையேல் வேறு எக்ஸிமா போல மயங்க வைக்கும்.
  • சில தருணங்களில் வலியும் ஏற்படும்.

யாருக்கு எப்பொழுது

  • தொழில் உதாரணமாக சலவைத் தொழிலாளர், பெயின்ட் அடிப்பவர்கள்
  • பொழுதுபோக்குகள்
  • பயணங்கள்
  • அழகுசாதனப் பொருட்கள்
  • ஆபரணங்கள்

பெல்ட்டிலுள்ள உலோகத்தினால் அது படக் கூடிய வயிற்றில் அழற்சி

போன்றவையே முக்கிய காரணங்களாகின்றன.

செயற்கை ஆபரணங்கள், மார்புக் கச்சை போன்றவற்றில் உள்ள கொழுக்கிகள், கைக்கடிகாரச் சங்கிலி, இடுப்பு பெல்ட்டில் உள்ள பக்கிள் போன்ற பலவற்றிற்கும் ஏற்படுவதற்குக் காரணம் அவற்றில் உள்ள உலோகமான ஆன நிக்கல் (Nickel) ஆகும்.

சப்பாத்துத் தோலைப் பதனிடப் பயன்படுத்தும் இரசாயனமான Potassium dichromate பலருக்கு இத்தகைய ஒவ்வாமை தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

முடிச்சாயத்தில் உள்ள இரசாயனமான Paraphenylenediamine தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

சப்பாத்து பொலிஸ், அழுக்கு அகற்றும் பொருட்கள் ஆகியவற்றில் கலந்திருக்கும் Turpentine பலருக்கு தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
சோப்பில் உள்ள இரசாயனப் பொருட்களும் தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

தோலில் பூசும் சில களிம்பு மருந்துகள்.

தோலில் ஏற்படும் கிருமித் தொற்றுகளுக்கு எதிராக உபயோகிக்கப்படும் Neomycin என்ற மருந்து பலருக்கு அவ்விடத்தில் தோல் அழற்சியை ஏற்படுத்தலாம்.

ஹெயர் டையால் அதே பெண்ணிற்கு நெற்றியிலும் அழற்சி

சிகிச்சை
  1. ஓவ்வாத பொருள் என்ன என்பதை இனங் கண்டு அதை தொடர்பு படாமல் ஒதுக்குவதே முறையான சிகிச்சையாகும். உதாரணமாக ஒட்டுப் பொட்டுக் காரணம் என நீங்கள் கண்டறிந்து அதை அணியாது விட்டாலும் தோல்அழற்சி குணமாகி சருமம் தனது வழமையான நிறத்தையும் குணத்தையும் அடைய 2-4 வாரங்கள் எடுக்கலாம். ஆனால் சுகம்தானே என மீண்டும் அணிந்தால் பழையபடி தோலழற்சி ஆரம்பித்துவிடும்.
  2. சிலவகை மருந்திட்ட கிறீம் வகைகளை மருத்துவ ஆலோசனையுடன் பூசிவரக் குணமாகும். பெரும்பாலும் ஸ்டிரோயிட் வகை மருந்துகளே (Steroid) உபயோகிக்கப்படுகின்றன.
  3. கடுமையான நோயெனில் அலஜியைத் தணிக்கும் மருந்துகளை உட்கொள்ள கொடுக்கக் கூடும்.
  4. எவ்வாறாயினும் நோயை ஏற்படுத்தும் கள்ளனைக் கண்டறிந்து தவிர்ப்பதே நிரந்தரத் தீர்வாகும்.

இப் புகைப்படங்களை எடுக்கவும் வெளியிடவும் அனுமதியளித்த எனது நோயாளர்களுக்கு நன்றிகள்

சருமநோய் பற்றிய சில முக்கிய பதிவுகள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »

உங்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

வேறொன்றும் இல்லை. சின்ன விடயம்தான். ‘அப்பா உங்களுக்கு கலர் சென்சே கிடையாது. என்ன கலர் ஜீன்ஸ்க்கு என்ன கலர் சேட் போட்டிருக்கிறியள்.’ அவள் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை.

கோபம் பொத்துக் கொண்டு வருகிறது

அவ்வாறு சொன்னது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனமாகப் படுகிறது. “எனது மகள் எனக்கு இப்படிச் செல்வதா?” என கிளர்ந்தெழுகிறிர்கள்.

எழுத்தாளர்களும் விமர்சனங்களும்

விமர்சனங்களைப் பற்றி பேச்சு எழுந்தால் முதலில் எழுத்தாளர்கள்தான் நினைவில் வருவார்கள்.

மனிதர்கள் தம்மைப் படைத்ததாகக் தாம் கருதும் இறைவனையே ‘நீ இப்படிச் செய்து போட்டியே’ எனக் கோபமாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.

அவ்வாறிருக்கும்போது எழுத்தாளர்களை விட்டு வைப்பார்களா? அதிலும் ஒரு எழுத்தாளன் மற்றவனைப் பற்றி ஆவேசமாகவோ அன்றி நாசூக்காக கிணடலடித்து விமர்சனம் எழுப்புவதற்குக் காத்திருப்பான். ஆனால் தன்னைப் பற்றி விமர்சனம் எழும்போது…..

மல்லுக்கட்டல்தான்

பொதுவான எழுத்தாளர்கள் படைப்பு எப்படியாக இருந்தாலும் ஆகா ஓகோ எனப் பாராட்டுக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பாராட்டுக் கிடைத்தால் உச்சி குளிரப் புன்னகை வீசி தனது ஆற்றலையிட்டுப் பெருமிதம் அடைவார்கள். மற்ற எந்த நல்ல எழுத்தையும் வாசிப்பதைக் கைவிட்டுத் தன்னைத்தானே படித்துக் கொலரை உயர்திக் கொள்கிறார்கள்.

மாறாக மறையாக விமர்சனம் செய்யதவருடன் மல்லுக்கட்டல்தான். காரசாரமாக விமர்சிக்க வேண்டும் என்றில்லை. சற்று நாசூக்காக ‘இவ்வாறு எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்’ என்று சொல்வபரையும் தனது எதிராளியாகவே கணிக்கத் தொடங்கிவிடுவார்.

ஆனால் இந்தக் கட்டுரையானது எழுத்துலக விமர்சனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல.

மனதை நோகச் செய்யும் என்பது உண்மை

விமர்சனங்கள் மிகவும் மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவை என்பது உண்மைதான்.

மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவையானாலும் …..

ஆனால் அதே நேரம் மிகவும் அவசியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது. விமர்சனமானது ஒருவர் தன்னை சீர்தூக்கிப் பார்க்கவும், தன்னைத் திருத்திக் கொள்ளவும் அல்லது தன்னை மேன்மைப்படுத்த உதவும் சாதனமாகும்.

சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கடினம் என்பதே உண்மை. யாருக்குத்தான் தன்னைப் பற்றி குறைவாகச் சொல்வது திருப்தியைக் கொடுக்கும். ஏனெனில் நாம் சாதாரண மனிதர்கள் தானே. எதையும் உணர்வுபூர்வமாக அணுகப் பழகியவர்கள்.

எம்மை மேன்மைப்படுத்தாத எதுவும் எம்மை மகிழ்சிப்படுத்தாது. எம்மை மேன்மைப்டுத்தாதவன் பற்றி நல்ல அபிப்பிராயம் எழுவதில்லை.

இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் என்ன? நீங்கள் ஒரு

  • படைப்பாளியாக இருக்கலாம்,
  • ஒவியனாகவோ,
  • பாடகனாகவோ அல்லது
  • வேறெந்தக் கலைஞனாக இருக்கலாம்.

படைப்புலகம் சாராது

  • ஆசிரியனாகவோ,
  • தொழிலதிபராகவோ, அல்லது
  • சாதாரண உழைப்பாளியகவோ இருக்கலாம்.

விமர்சனமானது உங்கள் செயற்பாடு சம்பந்தமானதாகவே இருக்கும். வீணாக அதற்குள் உங்கள் பெயரைப் புகுத்தி, அது தனிப்பட்ட உங்களுக்கு எதிரானது எனக் கருதுவதைத் தவிர்க்க வேண்டும்.

நீpங்கள் விமர்சனங்களைத் தனிப்பட்ட ரீதியானவை எனக் கருதும்போது பல சிக்கல்கள் உருவாகின்றன.

  • அவ்வாறு கருதும்போது உங்களை அறியாமலே, அக்கருத்திலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள முனைகிறீர்கள்.
  • அதற்கு எதிரான வாதங்கள் அமோக மனதிற்குள் விளைகின்றன.
  • அவை சொல்லப்பட்ட கருத்திற்கு எதிரானவையாக பெரும்பாலும் இருப்பதில்லை.
  • கருத்தைச் சொன்னவர் பற்றியும் அவர் அவ்வாறு சொன்னதற்கான காரணங்களையும் கண்மூடித்தனமாக கற்பிதம் செய்ய முனைகிறீர்கள்.

இழப்பும் கிடைப்பும்

இதனால் இழப்பு உங்களுக்குத்தான். கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல் தனிப்பட்ட ரீதியானதாக விமர்சனங்களை எடுக்கும்போது அதில் உள்ள ஆரோக்கியமான, உங்கள் எழுத்தை அல்லது செயற்பாட்டைச் செம்மைப்படுத்தக் கூடிய வழிகாட்டக் கூடிய தகவலையும் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.

மாறாக பொதுமையானதாகக் கருதும்போது

  • மிகத் தீவிரமான விமர்சனத்திலிருந்தும் உங்களால் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தேவையற்றவையை அசட்டை பண்ண முடியும்.
  • அரிசி மணியிலிருந்து பதரை நீக்குவதுபோல காரமான விமர்சனங்களுக்குள் ஒளிந்திருக்கும் பயன்படக் கூடிய கருத்துக்களைப் பொறுகியெடுக்கப் பழகவேண்டும்.
  • அவற்றை விட மோசமான, கடுமையான, நேரடியாக உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என வீசப்படும் தனிமனிதக் காழ்ப்புணர்வு விமர்சனங்களையும் பொதுமைப்படுத்தும்போது அது ஒரு பாதுகாப்புக் கவசமாகி உதவும்.
விமர்சங்கள் எழும்போது தன்னிச்சையான எதிர்ப்புணர்வுடன் செயற்படுவதற்குக் காரணம் என்ன?

விமர்சனமானது எமது தன்னங்காரத்துடன் நேரிடையாக மோதுகிறது.

  • ஒருவர் எமது செயற்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்கு உண்மையாகவே ஆலோசனை கூற வரும்போது அதற்குள் ஒரு கசப்பான உண்மை மறைந்திருக்கிறது.
  • அதாவது நீ செய்வது அல்லது எழுதியது திருப்தியானது அல்ல. திருந்த மேலும் இடம் உண்டு என்பதுதான்.
  • அதை சற்றுக் கசப்பான வார்த்தைகளில் சொன்னால் நீ செய்தது பிரமானதானதல்ல. அதாவது நீ ஒரு ஒரு சிறப்பான மனிதன் அல்ல. மாற்றத்தை வேண்டி நிற்கும் ஒரு சாதாரணன் என்பதல்லவா?

இத்தகைய எண்ணம் உங்களைப் புண்படுத்தி விடுகிறது. அதனால்தான் விமர்சனங்களை ஒருவன் எதிர்புணர்வுடன் அணுக நேர்கிறது.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?

உங்களுக்கு எதிரானதாக நீங்கள் கருதும் விமர்சனத்தை நேரிடையான வார்த்தைகளாகவோ அன்றி எழுத்திலோ எதிர் கொள்ள நேரும்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

  1. அவசரப்பட்டு எதையும் செய்ய முனையாதீர்கள். எதிர்வினைகளாக அந்நேரத்தில் எழும் உணர்வலைகளை வெளிப்படுத்த வேண்டாம்.
  • இணையப் பதிவுலகில் சிறிதும் சிந்தனையற்று எழுந்தமாரியாகப் போடப்படும் விமர்சனங்களை உதாரணமாகக் கொள்ளலாம். உடனடியாக முறைக்கவோ ஏசவோ, காரமான வார்த்தைகளைச் சிந்தவோ, எழுத்தில் வடிக்கவோ வேண்டாம். சற்று ஆறப்போடுங்கள்.
  • உங்களைப் பற்றியதான அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு அடங்கும் வரை பொறுத்திருங்கள்.

2. அந்த விமர்சனமானது வேறொருவரைப் பற்றியது எனக் கற்பனை செய்ய முயலுங்கள்.

  • தற்செயலாக உங்களது பெயரைக் கொண்ட வேறொருவர் பற்றியது என நினையுங்கள்.
  • அதுவும் உங்களைப் போன்ற செயற்பாடுடைய வேறெருவரைப் பற்றியது என எண்ண முயலுங்கள்.
  • இன்னொருவரைப் பற்றியது என எண்ணும்போது, தர்க்க ரீதியாக அதிலுள்ள சாதகமான அம்சங்களை இனங்காண முடியலாம்.
வாயை இறுக மூடிக் கொள்ளுங்கள்
  •  வாயை இறுக மூடிக் கொள்ளுங்கள். எதுவும் பேச வேண்டாம். விமர்சனமாகச் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருங்கள். நேரம் கிடைத்தால் குடிகாரக் கணவனின் கோபத்தை அடக்க மனைவியை வாயில் கிறீன் ரீயை வாயிலிட்டு அலசிக் கொண்டிருப்பது பற்றி நான் எழுதிய நகைச் சுவைக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

நிறம் மாறும் போஸ்டர்களாக அவள் முகம்  

  • ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக அது பற்றி மேலும் விளக்கங்களைக் கேளுங்கள். ஆனால் அந்தக் கேள்விகள் தனிப்பட்ட ரீதியானவையாக அமையாமல் விடயம் பற்றிப் பொதுமையாக இருக்கும் வண்ணம் இருப்பது அவசியம்.

இதனால் இரண்டு விதமான நன்மைகள் கிட்டலாம்.

  1. முதலாவதாக அதிலுள்ள சாதகமான அம்சங்களை நீங்கள் இனங்கண்டு பயன்பெற உதவும்.
  2. இரண்டாவதாக விமர்சிப்பவரும் தனது கருத்துக்களை கண்மூடித்தனமாக உங்களைப் பற்றி நேரிடையாகத் தூற்றாது கருத்து ரீதியாக முன்னெடுக்க உதவும்.

இதனால் சூடு தணிந்த பின் நீங்களும் அதனை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ள முடியும்.

ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக ………

இவ்வாறு எதிர்கொள்வதற்கு உங்கள் அடிப்படை நம்பிக்கை முக்கியமானதாகும். இது இரண்டு விடயங்களில் அவசியம் இருந்தே ஆகவேண்டும்.

1.    நீங்கள் என்ன செய்கிறீர்கள், அல்லது சொல்வது என்ன? இது பற்றி தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். எத்தகைய கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் உங்கள் செயற்பாட்டில் பற்றுதி வேண்டும். கைவிடக் கூடாது. தடுமாறக் கூடாது.

2.    எதற்காகச் செய்கிறீர்கள்? அதாவது உங்கள் நோக்கம் அல்லது இலக்கு என்ன என்பது பற்றியும் அவ்வாறே தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் செயற்பாடு பற்றிய கருத்தறியலை வேண்டும்போது அக் கருத்துக்களில் உள்ள நல்ல அம்சங்களை உள்வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையேல் அக் கருத்துகள் அதிகார ஆணையாகி மாறி உங்களைத் திசை திருப்பிவிடும் அபாயம் உண்டு.

தெளிந்து சொல்லுங்கள். உறுதியாக நில்லுங்கள். பதரை நீக்கி மணிகளைப் பொறுக்குங்கள். பயன் பெறுவீர்கள். வீண்பகை தவிருங்கள்.

எம்.கே.முருகானந்தன்

ஜீவநதி சஞசிகையில் வெளியான எனது கட்டுரை

Read Full Post »

‘..யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் நிறுத்தப்படவில்லை..’ என்பதைத் தமிழ்தரப்பு எப்பொழுதும் கூறிக்கொண்டே வருகிறது.

ஆனால் இங்கே இதைச் சொல்லியது  ஒரு சிங்கள அறிவுஜீவியான திரு.எஸ்.ஜீ.புஞ்சிஹேவா ஆகும்.


‘மொழியும் மனிதநேயமும்’ என்ற நூலில் மேற் கூறிய வாசகங்களைக் கண்டேன். அதில் மேலும்

‘தமிழ்மொழிக்கு உரித்தான கௌரவத்தை வழங்காத எமது பழக்கதோஷம் காரணமாகவே நாம் முப்பது ஆண்டுகால துன்பியல் போரை எதிர்கொண்டோம்’ என்கிறார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் வெளியிடான இது, சிங்கள மொழியில் வெளியிட்டதின் மொழிபெயர்ப்பு நூலாகும். வாசிப்பு சுவார்ஸம் கெடாமலிருக்கும் வண்ணம் தெளிவாகவும் அழகுறவும் மொழிபெயர்த்தவர் திரு.எஸ்.சிவகுருநாதன் ஆகும்.

‘..எமது மொழி எமது தாயைப் போன்றது. நாம் பெற்ற அனைத்தும் மொழியை முதன்மைப்படுத்தியவையே…நாம் மொழியுடன் பிறந்து வளர்நதோம்….எமது மனிதத்துவத்தை நாம் மொழியின் மூலமே வெளிப்படுத்துகிறோம். எமது மனிதத்துவத்தின் பொதுத்தன்மை மொழி மூலம் வேறுபடுவதாகப்பட்டால் மற்றையவரின் மொழியை நாம் கௌரவிக்க வேண்டும்.

…. மேற்கண்டவாறு கௌரவிக்கப்படும் உரிமையை இழக்கும்போது குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர் எவ்வாறு உணர்வார். தனது தாயை, தனது ஆத்மாவை, தான் மனிதன் என்பதை புறக்கணிப்பதாகவே உணர்வார்…’ என்கிறார். ஏனைய மொழிகளை மதிக்கத்தக்க மனிதாபமுள்ள ஒருவரால்தான் அவ்வாறு கூறமுடியும்.

மொழி அதன் பண்பு, மனிதத்தன்மை, அதற்கான உரிமைகள் என மிக சுவார்சமாக மனதைத் தொடும் வண்ணம் நூல் ஆரம்பிக்கிறது. மொழி தொடர்பான சட்டங்கள் சுற்றறிக்கைகள் பற்றி நூல் விபரமாகச் சொல்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தனது கருமங்களை சிரமமின்றி ஆற்றுவதற்கு அவனது மொழியே வசதியானது.

  • ஆனால் எம்மொழி மூலம் ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி  1815 கண்டி ஒப்பந்தத்தில் குறிப்படப்படவில்லை.
  • ஆயினும் ஆங்கிலமே நடைமுறையில் இருந்தது.
  • நிர்வாகத்தில் சுயமொழிப்பாவனை பற்றி 1939ல் திரு.பிலிப் குணவர்தன முதலில் குரல் எழுப்பினார்.
  • தமிழும் சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கவேண்டும் என்ற பிரேரணை 1945ல் கொண்டுவரப்பட்டது.
  • ஆனால் 1956ல் சிங்களம் மட்டும் அரசகரும மொழியானது.
  • 58ல் தமிழ் மொழி உபயோகச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதும், 1972ல் பௌத்தம் அரச மதமாகவும், சிங்களம் அரசகரும மொழியாகவும் ஆனது. பின்னர் தமிழும் நிர்வாக மொழியாக ஏற்கப்பட்டது.

சட்டங்கள் எவ்வாறு இருந்தபோதும் அவை என்றுமே சரியான முறையில் அமுல் செய்யப்டவில்லை என்பதை நூலசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

அரசமைப்பு ரீதியாக ஏற்கப்பட்டவை அமுல் நடத்தப்படாவிட்டால் அதற்கு நீதி மன்றத்திலிருந்து நிவாரணம் கோருவுவதற்கு உதவியான சட்டங்கள் பற்றியும், ஒம்புட்ஸ்மன் இடமிருந்து நிவாரணம் பெறுவது பற்றிய விடயங்களும் இணைக்கப்பட்டுள்ன.

இறுதி அத்தியாயம் ‘மனித உரிமைப் பிரகடனமும், மொழியும்’ ஆகும். இனம், மொழி, மதம் சார்ந்த சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய ஐநா சாசனம் பற்றியும், அதில் இலங்கை கையெழுத்திட்டது பற்றியும் குறிப்பிடுகிறது.

“இன்று யுத்தம் இல்லை என்பது உண்மை. ஆனால் எவரும் அதில் வெற்றியடையவில்லை. மொழியை அடிப்படையாகக் கொண்டே நாம் வெற்றியை அடைய வேண்டும். தொடர்ந்தும் நிர்வாக நிறைவேற்று நடவடிக்கைகள் காரணமாக தமிழ் அல்லது சிங்கள மொழிக்கு பாகுபாடு காட்டப்படால், அது மேலும் வெடி மருந்து சேகரிப்பதற்கு ஒப்பாகும்..”

என்ற நூலாசிரியரின் கருத்து உரியவர்களின் காதில் விழ வேண்டும்.

பக்கம் சாராமல், ஒருவர் மீது குற்றம் சுமத்தாமல் ஆனால் மொழியின் பயன்பாட்டில் சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் செய்யப்பட்ட தவறுகளை நூல் சுட்டிக் காட்டுகிறது. மொழி தொடர்பான விடயத்தை உணர்ச்சிகரமாக அல்லாமல் அறிவுபூர்வமாக அணுகுவது நூலின் சிறப்பாகும்.

இருந்தபோதும் சுவார்ஸமாக ஆரம்பித்த நூல் மொட்டையாக முடிவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்குக் காரணம் முடிவுரையாக ஒரு அத்தியாயம் இல்லாததேயாகும்.

எதையும் உணர்ச்சிவயமாக அணுகப் பழக்கிவிட்ட நாம் (சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள்) பிரச்சனையை அறிவு பூர்வமாக அணுக உதவக் கூடியது இந்நூலாகும். கட்டாயம் படிக்க வேண்டியதும், பாதுகாத்து வைக்க வேண்டியதுமாகும்.

வெளியீடு:-
மாற்றுக் கொள்கைளுக்கான நிலையம்
24/2, 28  வது ஒழுங்கை
ப்ளவர் வீதி
கொழும்பு 07.
தொலைபேசி- 94(11)12565304

இணைய தளம்-  www.cpalanka.org

மின் அஞ்சல்-  info@cpalanka.org
விலை குறிப்பிடப்படவில்லை.

எம்.கே.முருகானந்தன்.

மறந்துபோகாத சில புளக்கிலும், தினக்குரல் ஞாயிறு பத்திரிகையிலும் வெளியான எனது கட்டுரை

0.0.0.0.0.0.0.0

Read Full Post »