Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2012

பதற்றத்துடன் வந்தார் அவர்.

“எனக்கு ஹார்ட் அட்டக்(Heart Attack) ஆக இருக்குமோ?” என்று கேட்டார்.

‘ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்’ என வினவினேன்.

`இடது கை உளைஞ்சால் ஹார்ட் அட்டக் என நண்பன் சொன்னான். எனக்கு கொஞ்ச நாளா இடது கை உளையுது’ என்றார்.

உண்மைதான்! மாரடைப்பிற்கான வலி பெரும்பாலும் நடு நெஞ்சில்தான் வந்தாலும் இடது தோள்மூட்டிற்கும், முதுகுப் புறத்திற்கும் சிலவேளைகளில்  கைக்கும் பரவுவதுண்டு. கழுத்திற்கும் பரவுவது அதிகம்.

நோய் ஒரிடத்தில் இருக்க வலி மற்றோர் இடத்தில் வெளிப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் வலி எற்படும் இடத்தைப் பகுத்தறிவதில் மூளைக்கு எற்பட்ட குழப்பம்தான்.

மூளைக்குக் குழப்பம் என்றதும் மனநோயாக  இருக்குமோ என நீங்கள் குழம்பிவிடாதிர்கள்.

ஆயினும் இவரது வலி நீண்ட காலமாக நீடிப்பதாலும் வியர்வை, களைப்பு போன்ற ஏனைய அறிகுறிகள் இல்லாததாலும் மாரடைப்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்தது.

மேலும் விபரமாகக் கேட்ட போது, வலி இரவில் மோசமாக இருப்பதும் வலிப்புள்ள கையில் விறைப்பு ஏற்படுவதும் தெரிய வந்தது. கழுத்தின் முண்நாண் எலும்புகள் தேய்ந்து நரம்புகளை அழுத்துவதால் ஏற்படக் கூடிய Cervical Spondylosis ஆக இருக்கலாம் என எண்ணினேன்.

“உங்கள் கழுத்து எலும்பை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும்” என்றேன்.

“கை உளையிறதுக்கு ஏன் கழுத்தை படம் எடுக்க வேண்டும்” என அப்பாவியாகக் கேட்டார். அவர் அப்படிக் கேட்பதில் தவறில்லைத்தான்.

கழுத்து எலும்புகள் தேய்ந்ததால், அதனூடாக வரும் நரம்புகளை அழுத்துகிறது. இதனால், அந்த நரம்பு பரவுகிற இடங்களான கையில் உளைவு, விறைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால், நோயுள்ள இடமான கழுத்தில் அறிகுறிகள் ஏதும் இல்லாமலிருக்கலாம்.

இன்னொருவருக்கு நீண்ட நாட்களாக காதுவலி. காதுக்கு துளி மருந்துகள் விட்டுப் பார்த்தார். வலி நிவாரணிகள் சாப்பிட்டுப்பார்த்தார். எதுவும் பலனளிக்காமல் வலி மோசமான போதுதான் வைத்தியரை நாடும் எண்ணம் வந்தது. பரிசோதித்துப் பார்த்ததில் தொண்டையில் புற்றுநோய் தெரிய வந்தது.

மற்றொருவருக்கு சிறுநீரகக் குழாயில் கல் (Ureteric Calculai) ஆனால் விதையில் வலிக்கிறது என்று சொல்லி மருந்தெடுக்க வந்தார்.

பற்சொத்தைக்கு காது வலிப்பது, நாரி முண்நாண் எலும்பு நோய்க்கு காலில் வலிப்பது இப்படி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நோய் ஓரிடம் இருக்க வலி இன்னொரு இடத்தில் தோன்றுவதை Reffered pain என மருத்துவத்தில் சொல்வார்கள். இதனைத் `தொலைவிட வலி’ என சொல்லலாம் அல்லவா?

“சூத்தில் அடிக்க பல்லுக் கொட்டுப்படுவது”,

“எய்தவன் இருக்க அம்பை நோவது”,

“பழி ஓரிடம் பாவம் வேறிடம்”, எனப் பலவாறு சொல்வது அதை ஒத்த கருத்துகள் தானே?

எனவே அறிகுறிகள் எங்கிருந்தாலும் அடிப்படை நோய் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்து செய்வதே சிறந்த வைத்தியமாகும்.

டாக்டர். எம்.கே. முருகானந்தன்
நன்றி:- தினக்குரல் 12.09.2007

Read Full Post »

விடுபடாத மர்மம் நீரிழிவு நோயாளிகளை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டே இருக்கிறது.

  • ஒவ்வொருவரும் ஒவ்வொன்று நல்லதென்பார்கள்.
  • சிலது ஆகாது என்பார்கள்.
  • எத்தகைய உணவுகள் அவை என்பதே அந்த விடுபடாத மர்மம் ஆகும்.

ஆயினும் அவற்றைத் தெளிவாக்க புதிய ஆய்வு முடிவுகள் உதவுகின்றன.

இக்கட்டுரை மாப்பொருள் உணவுகள் எந்தளவிற்கு அதிகரிக்கின்றன என்பதையிட்டது.

கணிக்க முடியும்.

சில உணவுகள் குருதியில் சீனியின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும். இவை நல்லதல்ல. வேறு சில உணவுகள் படிப்படியாகவே அதிகரிக்கச் செய்யும் அவை நல்லன. இவற்றை விஞ்ஞான ரீதியாக கண்டறியக் கூடிய முறை இருக்கிறதா?

குருதிச் சீனியேற்றக் குறியீடு

ஆம் அதுதான் குருதிச் சீனியேற்றக் குறியீடு (Glycaemic Index).

மாப்பொருள் உணவை உண்ணும்போது அது எந்தளவிற்கு குருதிச் சீனியின் அளவை அதிகரிக்கும் என்பதைக் குறியீடாகக் காட்டுவதே இந்த குருதிச் சீனியேற்றக் குறியீடு என்பதாகும்.

ஒரு குறிப்பிட்ட உணவில் 50கிராம் உணடபின் குருதியில் அதிகரிக்கும் சீனியின் அளவை அதேயளவு குளுக்கோஸ் உண்டபின் அதிகரிப்பதோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே இந்தக் குறியீடாகும். குளுக்கோசுக்குப் பதிலாக அதே அளவு பாண் (Bread) கொடுத்துச் செய்யப்படுவதுண்டு.

பெறப்படும் குறியீடானது 55ற்கு குறைவாக இருந்தால் குறைந்த குருதிச் சீனியேற்றக் குறியீடு என்பார்கள். 56லிருந்து 69 வரை இருந்தால் அது நடுத்தர குருதிச் சீனியேற்றக் குறியீடு ஆகும். 70ற்கு மேலிருந்தால் அது அதிக குருதிச் சீனியேற்றக் குறியீடு எனலாம்.
இவ்வாறு பார்க்கும்போது சோறு, பாண், ரொட்டி, இடியப்பம், அப்பம் போன்ற எமது முக்கிய உணவுகள் யாவும் அதிக குருதிச் சீனியேற்றக் குறியீடு கொண்டவையாகும்.

ஆனால் இது முற்று முழுதாக தெளிவான தரவுகளைக் கொடுப்பதில்லை என இப்பொழுது உணரப்படுகிறது.

குருதிச்சீனிக் கனதி

எவரும் சோறு 50 கிராம், 25 கிராம் வாழைப்பழம் என அளந்து சாப்பிடுவதில்லை.

சோறு என்றால் அதிகம் உண்ண நேரிடும். பழவகைகள் ஓரளவு உண்ணவும், சீனி என்றால் குறைவாகவே உட்கொள்ள நேரும். எனவே சாதாரணமாக ஒரு உணவை எவ்வளவு உண்கிறோமோ அது எவ்வளவு குருதிச் சீனியின் அளவை அதிகரிக்கிறது என்பதை குருதிச்சீனிக் கனதி (glycaemic load) என மற்றொரு வகையில் கணிக்கிறார்கள்.

சாதாரணமாக நாம் ஒரு மாப்பொருள் உணவை எவ்வளவு உண்கிறோமோ அது எவ்வளவு தூரம் சீனியை அதிகரிக்கிறது என்பதை இது காட்டுகிறது.

மேலே உள்ள தரவுகளைப் பார்க்கும்போது கோதுமையை 50கிறாம் மட்டும் உண்ணும்போது குருதிச் சீனியேற்றக் குறியீடு நடுத்தரமாக இருக்கிறது. அதே நேரம் உணவாக உண்ணும்போது குருதிச் சீனிக் கனதி எனக் காணப்படுகிறது.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் எதையும் அளவோடு உண்ண வேண்டும். நீரிழிவுக்கு நல்லது எனச் சொல்லப்படுகிற உணவுகளையும் அளவோடு உண்ண வேண்டுமே ஒழிய அதீதமாக உண்ணக் கூடாது என்பதே.
எதை உண்கிறோம் என்பது மட்டுமல்ல எதனோடு சேர்த்து உண்கிறோம் என்பது முக்கியம் என்பதாகும்.

அரிசியை பாற்சோறாக உண்ணும்போது குருதிச் சீனிக் கனதி அதிகமாக இருக்கிறது. ஆனால் சோற்றை பருப்பு. வல்லாரை சம்பல், சொதி முட்டை ஆகியவற்றோடு உண்ணும் போது குருதிச் சினிக் கனதி நடுத்தரமாகக் குறைந்துவிட்டதைத் பட்டியலில் இருந்து கண்டோம்.

சொதிக்குப் பதிலாக மற்றொரு காய்கறியை உணவில் சேர்த்திருந்தால் மேலும் குறைந்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.
பழங்கள் மிகக் குறைவாகவே குருதிக் சீனி அளவை அதிகரிக்கின்றன.

வாழைப்பழத்தைப் பொறுத்தவரையில் கப்பல், கதலி, சீனி வாழைப்பழம் எனப் பாகுபாடு காட்டித் தேர்ந்தெடுப்பது அவசியமற்றது. எல்லாமே மிகக் குறைவான சீனியேற்றக் குறியீடு கொண்டவையாகும்.

மேற் கூறிய குருதிச் சீனியேற்றக் குறியீடு, குருதிச்சீனிக் கனதி ஆகியவை University of Sri Jayewardenepura tpd; Department of BioChemistry – Faculty of Medical Sciences செய்த ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளாகும்.

வீரகேசரி ஞாயிறு வெளியீட்டில் நான் எழுதிய கட்டுரை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.0.0

Read Full Post »