Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச், 2014

உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான பெண்கள் தமது மாதவிடாய்ச் சக்கரத்தில் பாதுகாப்பான நாட்களில் மாத்திரம் உடலுறவு கொள்வதன் மூலம் கர்ப்பம் தங்காமல் தவிர்க்கிறார்கள்.

சில நாடுகளில் நான்கு பெண்களுக்கு ஒருவர் என்ற சராசரி அளவில் பெண்கள் இம் முறையைப் பயன்படுத்துகிறார்கள்.

சரியான முறையில் இதனைக் கடைப்பிடித்தால் அது 75 முதல் 90% வரையில் வெற்றி அளிக்கக் கூடியது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில் விஞ்ஞான பூர்வமாகச் சரியான நாட்களைத் தேர்ந்தெடுப்பதுதான். அது மிகவும் சிக்கலானது என்பதே பிரச்சனை.

மாதவிடாய்ச் சக்கரம் 

சரியான நாட்களைத் தேர்ந் தெடுப்பதற்கு மாதவிடாய்ச் சக்கரம் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய் சக்கரத்த்தில் பெண்ணின் சூலகத்திலிருந்து (ovary) முட்டை (egg) வெளியாகி பலோப்பியன் குழாய் (fallopian tube) வழியாக பயணம் செய்து கர்ப்பப்பையை அடையும். சூலகம் என்று கூறிய  Ovary யை கருவகம் எனவும் சொல்வதுண்டு.

இம் முட்டையானது 24 மணி நேரம் மட்டுமே உயிர் வாழக் கூடியது. எனவே கர்ப்பம் தரிக்க வேண்டுமானால் அந்த 24 மணிநேர கால அவகாசத்திற்குள் ஆணிலிருந்து வெளியாகும் விந்தணுவைச் சந்தித்தாக வேண்டும்.

இதன் அர்த்தம் அந்த 24 மணிநேர காலத்திற்குள் உறவு கொண்டால் மட்டுமே கரு தங்கும் என்பதல்ல.

ஆணின் விந்தணுவனாது உறவின் போது வெளியேறி பெண்ணின் கர்ப்பப் பையூடாக பலோப்பியன் குழாயைச் சென்றடைந்த பின்னர் பல நாட்களுக்கு உயிரோடு இருக்கக் கூடியதாகும். அது அவ்வாறு காத்திருக்கும் காலத்திற்குள் முட்டை வெளியேறினால் கருக்கூட்டல் நடைபெறும்.


பாதுகாப்பான நாட்களைக் கண்டறிவது எப்படி? 

எனவே பாதுகாப்பான நாட்களைக் கண்டறிவது எப்படி? ஏனெனில் சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் சரியான தினத்தை முற் கூட்டியே அறிவது சிரமம். இருந்தபோதும் பெரும்பாலான பெண்களில் இது அடுத்த மாதவிடாய் வருவதற்கு 14 முதல 16 வரை முன்னராகும்.

பொதுவான மாதவிடாய் சக்கரம் என்பது 28 நாட்களாகும். இதுவே பெரும்பாலான பெண்களுக்குப் பொருந்தும். ஆனால் பலருக்கு இதற்குக் குறைவான அல்லது கூடிய நாள் இடைவெளிகளில் மாதவிடாய் வருவதுண்டு.

உங்களது மாதவிடாய் சக்கரம் 35 நாட்கள் நீண்ட என்றால் உங்கள் சுழற்சியின் 14ம் நாளன்று கருத்தரிக்க வாய்ப்பில்லை நீங்கள் 15 நாட்கள் சுமார் 28 முதல் வரை அவதானமாக இருக்க வேண்டும்.

மாறாக உங்களது மாதவிடாய் சக்கரம் 23 நாட்கள் என்றால் முட்டையானது 7- 9 வது தினத்தில் வெளியேறும். எனவே அத்தகையவர்களுக்கு 15 நாட்களுக்கு பின்னர் பாதுகாப்பான நாட்களாக இருக்கலாம்.

தவறாகக் கணக்கிட வேண்டாம்

உங்களுக்கு மாதவிடாய் வெளியேற ஆரம்பிக்கின்ற நாளை சக்கரத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டும். அடுத்த மாதம் மாதவிடாய் வந்த நாளுக்கு முந்திய நாள் சக்கரத்தின் கடைசி நாளாகும். பொதுவாக இச்சக்கரம் 28 நாட்களாக இருக்க வேண்டும்.

சில பெண்கள் மாதவிடாய் படுவது நின்ற தினத்தைச் சக்கரத்தின் முதல் நாள் என நினைப்பதை நான் கண்டிருக்கிறேன். அதாவது நான்கு நாட்களுக்கு இரத்தப் போக்கு இருந்தால் அது நின்ற ஜந்தாவது நாளையே முதல் நாள் என எண்ணுகிறார்கள். இது தவறானது. மாதவிடாய் வெளியேற ஆரம்பிக்கின்ற ஆரம்ப நாள்தான் சக்கரத்தின் முதல் நாளாகும்.

ஆனால் எல்லாப் பெண்களதும் மாதவிடாயச் சக்கரம் ஒழுங்காக இருப்பதில்லை. கடந்த ஒரு வருட காலத்தில் அது ஒழுங்காக 28 நாள் சக்கரமாக இருந்திருந்தால் இம் முறையை நீங்கள் பயன்படுத்தலாம்.

  • முக்கியமாக கடந்த ஒரு வருட காலத்தில் இச் சக்கரமானது 26 முதல் 32 நாட்கள் என்ற வரையறைக்குள் இருந்தால் இம் முறையைப் பயன்படுத்தலாம். இவர்களுக்கு தமது மாதவிடாயச் சக்கரத்தின் 8 முதல் 19 ம் நாள் வரையான நாட்கள் கருத்தங்கக் கூடிய நாட்களாகும்.
  • இவர்கள் தமது சக்கரத்தின் முதல் 7 நாட்களிலும், பின்னர் 23ம் நாளுக்குப் பின்னரும் பயமின்றி உறவு கொள்ளலாம்.
  • 8 முதல் 23 வரையான நாட்களில் உடலுறவு கொள்வதாயின் ஆணுறையை அணிந்து கொண்டு உறவு கொள்ளலாம்.

எவ்வாறாயினும் இது பூரண பாதுகாப்பான முறை என்று சொல்ல முடியாது. மேலும் அறிய கிளிக் பண்ணுங்கள்…..

ஒழுங்காக மாதவிடாய் வருகின்ற பெண்களில் கூட சிலருக்கு சில அசாதாரண சூழல்களின் போது காலம் முந்தியோ அல்லது பிந்தியோ ஏற்படலாம். எனவே நிச்சமாக கருத் தங்கக் கூடாது எனக் கருதுபவர்கள் வேறு ஒரு முறையை கடைப்பிடிப்பதே பாதுகாப்பானதாகும்.

கருத்தடை பற்றிய ஏயை பதிவுகள்

Read Full Post »

முகமெல்லாம் புன்னகை பூத்துக் கிடந்தது. கைகளை நீட்டி கை லாகு கொடுப்பது போல வந்தார். 

 

“உங்களைக் கண்டது ரெம்ப சந்தோசம்”.
“சின்ன வயதில் கண்ட பின் இப்பத்தான் பார்க்கிறேன்.”
சொல்லியபடி கைகளை அன்புடன் பற்றிக் கொண்டார்.
உள்ளங்கை ஊடே நேசம் எனக்கும் பரவியது.
ஆனாலும் இவர் யார் என்பது சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை.
யாராக இருக்கும் என யோசிப்பதற்கிடையில் கூட வந்த மனைவி பைல் கட்டை எடுத்து வைத்தார்.
“காலையில் அவருக்கு திடீரெனத் தலைச் சுற்று வந்தது. விழப் பார்த்தார்..  ” என மனைவி ஆரம்பித்தார்
அட! எனக்கு ஆச்சரியம் மேலிட்டது.
பொதுவாக நோயாளிகள் நோயால் களைத்துச் சோர்ந்து வருவார்கள்.
அல்லது நோய் பற்றிய பயத்தில் பேயடித்தவன் போல வருவார்கள்.
ஆனால் இவர் சிரித்தபடி சந்தோசமாக வந்திருக்கிறார்.
அதுவும் பழைய நினைவுகளைப் புதிப்பித்த மகிழ்சியில் வருகிறார்.
தனது நோயை மறக்குமளவு எமது நட்பு புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
நிச்சயமாக எனக்கு பழைய காலத்தில் நெருக்கமானவராக இருந்திருக்க வேண்டும்.
ஒருவேளை ஆரம்பப் பள்ளியில் கூடப் படித்தவரா? பள்ளித் தோழனா? கல்லூரி நண்பனா?
ஞாபகப்படுத்த முடியாத எனது மறதியை எண்ணி மனம் சோர்ந்தேன்.
ஆயினும் அதை வெளிப்படுத்தி அவரது மகிழ்ச்சியைக் குலைக்க மனம் வரவில்லை.
விடயத்தை மாற்றினேன்.
அவரது நோயைப் பற்றி விசாரித்தபோது அவருக்கு முன்னர் இரு தடவைகள் மாரடைப்பு வந்திருப்பது தெரிந்தது. அதனால் இந்த தலைச்சுற்றும் மற்றொரு மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ எனப் பயந்த மனைவி அவரை அழைத்து வந்திருக்கிறார்.
பரிசோதித்துப் பார்த்ததில் மாரடைப்பின் அறிகுறிகள் ஏதும் இல்லை.
ஆயினும் அசட்டை செய்ய முடியாது. ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்ட்டவர்.
எனவே ECG, Troponin T போன்றவற்றையும் செய்து மனைவியின் பயத்தை நீக்கினேன்.
அவர் மாரடைப்யோ மரணத்தையோ எண்ணிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
புன்னகை மாறாத முகத்துடன் மனம் பூரித்தபடி இருந்தார்.
“எம்.கே.எம் என உங்களைப் பற்றி பத்திரிகையில் வந்த கட்டுரையை வெட்டி எனது பைலிலேயே வைத்திருக்கிறேன்.”.
என் மீதுள்ள அக்கறையையும் அன்பையும் மற்றொரு தடவை வெளிப்படுத்த எனக்கு குற்ற உணர்வு மேலிட்டது.
தொடர்ந்து நான் எழுதிய புத்தகங்களை வாங்கிப் படித்ததையும் ஞாபகப்படுத்தினார்.
இப்பொழுது மிக தூரத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கிறாராம். நீண்ட காலத்திற்குப் பிறகு கொழும்பு வந்திருக்கிறாராம்.
“வந்த நேரத்தில் எனக்கு வருத்தம் வந்தது நல்லதாகப் போச்சு. நீங்கள் இங்கே தான் இருப்பதாக நான் வந்து நிற்கும் வீட்டுக்காரர் சொன்னார். அதுதான் உடனே உங்களிடமே காட்ட வந்து விட்டேன்”
எவ்வளவு நட்புணர்வு காட்டும் மனிதர். தனது நோய்க்கு மேலாக பழைய உறவை நினைத்து வந்திருக்கிறாரே என எண்ணினேன்.
ஆனால் எதைக் கூறி எமது உறவைப் பகிர்வது எனப் புரியாது தளர்ந்தேன்.
“சின்ன வயதில் பார்த்தது.
அப்ப அம்மா தான் என்னைத் தூக்கிக் கொண்டு உங்கடை டிஸ்பென்சரிக்கு வாறவ. அப்ப பார்ததற்கு இப்பதானே பார்க்கிறேன்.”
தூக்கி வாரிப் போட்டது.
இவர் சின்ன வயதில் இருக்கும்போது எனது டிஸ்பென்சரிக்கு வந்தாரா?
கோவையில் அவரது வயதைப் பார்த்தேன். 65 சொல்லியது.
நான் குடும்ப மருத்துவனாகப் பணி தொடங்கி சுமார் 35 வருடங்கள் ஆகிறது.
65+35 = ?
ஆகா!

நான் சென்சரி அடித்த மனிதனா?

 

ஆச்சரியத்தில் வாய் பிளந்தேன்.

மறதி நோயிற்கு மருத்துவம் செய்ய வேண்டியதாயிற்று.

எனக்கல்ல ! அவருக்கு

0.0.0.0.0.0

Read Full Post »

“நாசிச் சளி எண்டால் மூக்குச் சளிதானே. அது மூக்காலைதானே வடியும். அது என்ன நாசிப் பின்புறச் சளி” என ஆச்சரியப்பட்டார்.
‘இடக்கு முடக்கான பெயராக இருக்கிறதே. புரிவது சிரமம்.

PNDrip

எனவே நாசிப் பின்புறச் சளி என்பதற்கு பதிலாக  தொண்டைக்குள் சளி’ என்று சொல்லலாமா என எனக்குள் யோசித்தேன். Post nasal drip என்பதற்கு அது தவறான வார்த்தைப் பிரயோகம் எனத் தெரிந்தது.

நாசிப் பின்புறச் சளி என்ற பெயர்தான் புதிதாக இருக்கிறதே தவிர அது ஒரு பொதுவான பிரச்சனை. ஆனால் இனங்காணப்படுவது குறைவு. சாதாரண ஏனைய சளிகளுக்கான சிகிச்சையின் போது இதுவும் தணிந்துவிடுவதால் பெயர் சொல்லி சிகிச்சை அளிப்பது குறைவு எனலாம்.

pnd 1

சளிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

மூக்குச் சளி பற்றி எல்லோருக்கும் தெரியும். மூக்கால் ஓடும். தண்ணீர் போலவோ, தடிப்பாகவோ அல்லது கடும் மஞ்சள் நிறத்தில் அல்லது சில தருணங்களில் நாற்றத்துடன் வெளி வரும்.

தொண்டைக்குள் சளி என்பது தொண்டைக்குள் அடைத்துக் கொண்டிருப்பது போல அல்லது கரகரப்பது போல அரியண்ணடப்படுத்தும். ஹா ஹா எனச் செருமி வெளியேற்ற முனைவார்கள். இது தொண்டைப் பகுதிலேயே சுரப்பதாகும். அதாவது சுவாசக் குழாயின் ஆரம்பப் பகுதிகளான தொண்டை குரல்வளை போன்றவற்றில் சுரக்கும்

ஆனால் இந்த நாசிப் பின்புறச் சளி என்பது நாசியிலிருந்து வெளியே சிந்தாது பின்புறமாகத் தொண்டையில் இறங்குவதாகும்.

pnd 2

எங்கள் உடலில் உணவுக் கால்வாய், சுவாசத் தொகுதி மலக் குடல், பெண்களின் பாலுறுப்பு என பல குழாய்கள் இருக்கின்றன. இவற்றின் உட்புறமுள்ள இழைத்திலிருந்து மென்மையான சளி போன்ற திரவம் சுரந்து கொண்டே இருக்கும். சற்றுத் தடிப்பான இந்தத் திரவமானது அவ்வுறுப்புகளை ஈரலிப்பாக வைத்திருப்பது மட்டுமின்றி நோயை ஏற்படுத்தும் கிருமிகள் உட்புகவிடாது தடுக்கவும் செய்கின்றன.

பொதுவாக இவை சுரப்பதை நாம் உணர்வதில்லை. சாதாரண அளவில் சுரந்தால் எமது கவனத்தை ஈர்க்காது எனச் சொல்லலாம். வழமையாக நாசியில் சுரக்கும் சளி போன்ற அத் திரவமானது எச்சிலுடன் கலந்து ஆரவாரமின்றி தொண்டைக்குள் புகுந்து விழுங்கப்பட்டுவிடும்.

மூக்கிலிருந்து மிக அதிகமாகச் சுரந்தால் அல்லது அதன் நீர்த்தன்மை குறைந்து தடிப்பமாக இருந்தால் மட்டுமே எங்களால் உணரப்படுகிறது. அவ்வாறு அதிகமாகச் சுரக்கும் சளியில் பெரும் பகுதி மூக்கால் வடிவதாக இருக்கும். மிகுதி மட்டுமே தொண்டைக்குள் உள்நாசி வழியாக இறங்கும்போது மட்டுமே எம்மால் உணரப்படும்..

காரணங்கள் என்ன?

சளி அதிகமாகச் சுரப்பதற்கும் உள்பக்கமாக வருவதற்கும் காரணங்கள் என்ன

  • சாதாரண தடிமன்
  • சளிக்காய்ச்சல்கள்
  • தூசி, மகரந்தம், கடுமையான மணங்கள் போன்றவற்றிற்கான ஒவ்வாமைகளால் ஏற்படுவது.
  • மண்டை ஓட்டின் காற்றறைகளில் ஏற்படும் அழற்சிகள். இவற்றை பொதுவாக சைனஸ் அழற்சி என்போம்.
  • குழந்தைகள் மூக்கிற்குள் ரம்பர், குண்டுமணி போன்ற ஏதாவது அந்நியப் பொருட்களை வைத்தால் வழமையாக உற்பத்தியாகும் சளி நீரானது இயல்பாக வடிய முடியாது தொண்டைக்குள் இறங்கலாம்.
  • மூக்கிலும் அருகில் உள்ள காற்றறைகளில் இருக்கக் கூடிய இயற்கைக்கு மாறான உருவ மாற்றங்கள் காரணமாகலாம். உதாரணமாக சிலரது மூக்கின் இடைச் சவ்வு ஒரு பக்கமாக வளைந்து இருக்கலாம். இதுவும் வழமையான சளிவடிதலுக்கு தடையாக இருக்கலாம். Deviated septum என்ற இந்தப் பிரச்சனையானது பிறப்பிலும் ஏற்படலாம். அல்லது முகம் குப்புற விழுந்து மூக்கின் சவ்வை உடைத்ததாலும் ஏற்பட்டிருக்கலாம்.
  • சில உணவுவகைளும் காரணமாகலாம்.. காரணமான மணம் கூடிய உணவுவகைகள் நாசிச் சுரப்பை அதிகமாக்கும்.
  • சூழலில் இருந்து வரும் மணங்கள் மற்றொரு காரணமாகும். இரசாயனங்கள், வாசனைத் திரவியங்கள், சலவைப் பவுடரின் துகள்கள், பாத்திரங்கள் மற்றும் கழிப்பறையைச் சுத்தம் செய்ய உபயோகிக்கும் திரவங்கள் போன்றவையும் ஒவ்வாமையால் நாசிச் சுரப்பை அதிகமாக்கலாம்.
  • இவற்றை விட இயற்கையான சுவாத்திய மாற்றங்களும் முக்கிய காரணமாகும். திடீரென ஏற்படும் குளிர் சுவாத்தியம். கடுமையான வரட்சியுடன் கூடிய காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.

சளியோடு சற்றேனும் தொடர்பில்லாத வேறு காரணங்களாலும் ஏற்பலாம்.

அண்மையில் ஒருவரைக் காண நேர்ந்தது. அவருக்கு நீண்ட நாளாக இருமல். தொண்டையை அடிக்கடி செருமிக்கொண்டிருப்பார். உடலும் மெலிந்து வந்து கொண்டிருந்தது. சளி அதிகமாக உற்பதியாவது அதற்குக் காரணமல்ல.

அவரது தொண்டையில் உள்ள விழுங்குவதற்கான தசைநார்களின் இயக்கம் பாதிக்கப்பட்டிருந்தமைதான் காரணமாகும். எச்சிலையும் நாசிச் சுரப்பு நீரையும் இயல்பாக விழுங்க முடியாததால் அது தேங்கி நின்று இருமலை ஏற்படுத்தியது. இது மிக மிக அரிதாகவே தோன்றும் பிரச்சனை.

இதேபோல தொண்டையில் தோன்றக் கூடிய கட்டிகள் நாசியிலிருந்து உட்புறம் வழியும் சளி மற்றும் எச்சலை விழுங்க முடியாத நிலையில் நாசிப் பின்புறச் சளியாக வெளிப்படலாம். இவையும் குறைவே.

அறிகுறிகள்

ஒருவருக்கு எத்தகைய அறிகுறிகள் இருந்தால் அது நாசிப் பின்புறச் சளிதான் என நீங்கள் சந்தேகிக்கலாம்.

ஆரம்பத்தில் சொன்னது போல தொண்டைக்குள் சளி இருப்பது போன்ற உணர்வும் அதை கிளியர் பண்ண தொண்டையச் செரும வேண்டியதாக இருந்தால் நாசிப் பின்புறச் சளிதான எனச் சந்தேகிக்கலாம்.

சிலருக்கு பகலில் அதிகம் இல்லாமல் இரவில் இருமும். ஆஸ்த்மாவும் இரவில் இருமலுக்கு காரணமாகலாம் என்ற போதும் ஆஸ்த்மா இருமலானது நெஞ்சிற்குள் சிறிது இறுக்கமாகவும் உணரப்படலாம்.

ஆனால் இதில் தொண்டைக்குள் சளி இருப்பது போன்ற உணர்வுடன் இருமல் வரும். ஆனால் இவ் இருமலானது இரவில் மட்டும்தான் வரும் என்றில்லை. சளி சுரப்பது அதிகமாக இருந்தால் பகலிலும் ஏற்படக் கூடும். உணவு மற்றும் மணங்கள் காரணமாயின்; பகலிலும் கட்டாயம் இருமும் என்பது புரியும்தானே.

cee6b2833220f54f_cough-night.preview

காரணம் என்னவென்று தெரியாது நீண்ட நாட்களுக்கு தொடரும் இருமல்களுக்கு முக்கிய காரணம் நாசிப் பின்புறச் சளியாகதான் இருக்கிறது.

நாசியின் பின்புறமாக இறங்கும் சளி காரணமாக குரல் கரகரப்பாகும். தொண்டைவலியும் ஏற்படலாம். காது வலி அல்லது காதுக் குத்திற்கும் நாசியின் பின்புறமாக வருட் சளி யூஸ்ரேசியின் ரியூப்பை

Eustachian tube அடைப்பதால் ஏற்படுவதுண்டு.

நீங்கள் செய்யக் கூடியவை எவை?

நீராகாரங்களை சற்று அதிகம் எடுப்பதால் சளியானது தடிப்பாக இல்லாது நீராளமாக மாறும். இதனால் அது தேங்கி நிற்காது சுலபமாக வழிந்து இருமல், காதுக்குத்து, காது அடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

ஆவி பிடித்தல் மூலம் சுவாசக் குழாயிலிருந்து சளி இளகி சுலபமாக வெளியேற வைக்கலாம்.

Woman inhaling steam from a bowl

முதுகிற்கு ஒன்றும் தலைக்கு இரண்டாகவும் தலையணை வைத்து நெஞ்சு மற்றும் தலைப் பகுதியை உயர்த்திப் படுத்தால் சளியானது தொண்டைக்குள் சிக்கி நிற்காமல் கீழே இறங்கிவிடும். படுக்கையில் இருமாமல் கிடக்க இது உதவலாம்.

550px-Relieve-Head-Congestion-Step-8

ஓவ்வாமைத் தொல்லை இருப்பவர்கள் தலையணை உறை, படுக்கை விரிப்பு போன்றவற்றை சுடுநீரில் துவைப்பதின் மூலம் அல்லது அவற்றை நல்ல வெயிலில் காயப்போடுவதன் மூலம் ஒவ்வாமையைக் கொண்டு வரும் தூசிப் பூச்சித் (Dust mite) தொல்லையிலிருந்து தப்பலாம்.

4567470931_8bc3a5f205

அதேபோல தலைக்கு வைக்கும் எண்ணெய், முகக் கிறீம், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் மணம் காரணம் எனச் சந்தேகித்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சை

காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.

பொதுவாக அல்ர்ஜிக்கு ஏதிரான மருந்துகள் தேவைப்படும். முன்னை நாட்களில் பிரபலமாயிருந்த பிரிட்டோன், பெனாட்றில் போன்றவை அசதிதையும் தூக்கத்தையும் கொண்டுவருமாதலால் அவற்றை இப்பொழுது அதிகம் உபயோகிப்பதில்லை. புதிய வகை மருந்துகளான Loratidine, Fexofenadine போன்றவை தற்போது விரும்பப்படுகின்றன.

Saline_nasal_spray

அத்துடன் மூக்கில் விடும் துளி மருந்துகள், ஸ்ப்ரே மருந்துகள் போன்றவையும் தேவைப்படலாம். கிருமித் தொற்று சில தருணங்களில் ஏற்பட்டால் அன்ரிபயோடிக் மருந்தும் தேவைப்படும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.000.0

Read Full Post »

நிசப்தம் எனும் நாத வெள்ளம் ‘சோக்கவுட்’ (The Silence)

கண்கள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகைத் தெரிந்து கொள்ளாத மடையர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காதுகள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகிலிருந்து எழும் உன்னத ஒலிகளின் லயநயத்தை ரசிக்கத் தெரியாத கலைஞானம் அற்றவர்களாக உழன்று கொண்டிருக்கிறோம்.

 இருந்த போதும் காலையில் விழித்து எழும்போது எழுகின்ற பறவைகளின் ஒலியும், தென்றலின் இசையும், பல எழுத்தாளர்களின் மனத்தைத் தொடுவதை படைப்புகளுடாக வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறான். ஒளிந்திருக்கும் அக் கலைஞனை மீட்டெடுத்து சுருதி கூட்ட வேண்டியது அவரவரால்தான் முடியும்.

வீதியில் ஓடும் வாகன இரைச்சலும், தொலைவில் கூவிச்செல்லும் இரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் அராத்தும் ஒலியும் தூக்கத்தைக் கெடுத்து பலரையும் இம்சைப்படுத்துகின்றனவே ஒழிய மனம் உருக வைப்பதில்லை.
அடுத்த வீட்டில் கதவை அடித்து மூடும் ஓசையும், பைப் நீர் விழுந்து வாளி நிறைக்கிற ஒலியையும், அதிலிருந்து நீரை மொண்டு குளிக்கிற ஓசையிலும் ஒரு இனிய லயம் கலந்திருப்பதை எங்களில் யாராவது, எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறோமா?

நித்திரையைக் குழப்புகின்றன, அமைதியைக் குலைக்கினறன என்று எரிச்சல்படத்தான் பலருக்கும் தெரிகிறது. இச் சத்தங்களும் ஒலிகளும் சூழலை மாசடையச் செய்து எமது காதுகளை மந்தமாக்குகின்றன என்ற குற்றச் சாட்டுகளுக்கும் குறைவில்லை. அதில் விஞ்ஞான ஆதாரம் இருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனால் ஓசை இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? எவ்வளவு மந்தமான உயிர்ப்பற்ற சவக்காலையின் வெறுமைக் கலவையாக இருக்கும்.

கண்களால் காணும் காட்சிகளாவன, காதில் விழுபவற்றை விட வேகமாக எமது மூளையில் உறைப்பதால்தான் ஒலியை விட ஒளியில் மறந்து, ரசிக்கத் தெரியாது வாழ்கிறோம்.

Sokout 1
குர்ஸிட் பார்வையற்ற ஒரு சிறுவன். அவன் எங்களைப் போல கலாஞானசூனியனாக இல்லை. அவனைப் பொறுத்த வரையில் அவனைச் சுற்றி எழுகின்ற ஒவ்வொரு ஒலியிலும் ஏதோ ஒரு இசை இருக்கிறது. லயம் இருக்கிறது. மனத்தை ஈர்க்கும் அமானுச சக்தி இருக்கிறது. வாத்திய ஒலிகளும், இன்னிசையும் மட்டும் அவனை ஈரப்பதில்லை. அவனைப் பொறுத்தவரையில் உலகே ரம்யமான ஒலிகளின் கூடம்தான். ஆனால் அதில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து ரசிப்பவன்.

காலையில் இவனது வீட்டுக் கதவை கோபத்தோடு ஓங்கி அறைந்து தட்டும் ஒலியும், தொடர்ந்து அவர்களைத் துயில் எழுப்பி வாடகைப் பணத்தை அறவிடச் சத்தமிடும் வீட்டு சொந்தக்காரனின் கோபக் குரலிலும் கூட ஏதோ ஒரு ஓசை நயத்தை அவனால் ரசித்து மகிழ முடிகிறது.

பும் பும் பூம்… பும் பும் பூம்…

இசைக்கு அப்பாலும் அவனது உணர்திறன் விசாலித்திருக்கிறது. வேலைக்குச் செல்லும் வழியில் தாம் சுட்ட பிரட்டுகளை விற்பதற்காகப் பெண்கள் நிற்பார்கள். தனது விரல்களின் தொடு உணர்வுகள் மூலம் அவர்களது பிரட்டின் தரத்தை இவனால் சொல்லிவிட முடிகிறது.

Sokout 2

ஆனாலும் ஒருவளது பிரட் சற்றுக் காய்ந்ததாக இருந்தபோதும் அவளிடம் வாங்கிச் சாப்பிடுகிறான். காரணம் அவளது குரல் இனிமையானது என்கிறான். அவனைப் பொறுத்தவரை உணவின் சுவையை விட இசை மாண்புடையது.

10-12 வயது மதிக்கத்தக்க சிறு பையன் அவன். ஒலிகளின் நயத்தைக் கூர்த்தறியும் அற்புத ஆற்றல்  இயல்பாகவே அவனுக்கு வாய்த்திருந்தது. தனது தாயுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறான். தகப்பனற்றவன் எனச் சொல்ல முடியாது. ஏதோ தேவைக்காக ரசியாவிற்கு சென்ற தகப்பனிடமிருந்து எந்தத் தகவலோ உதவியோ கிடையாது. இதனால் மிகவும் வறுமையிலிருக்கும் அவனது குடும்பத்தின் வயிற்றுப்பாட்டிற்கு அவனது உழைப்பு அவசியமாக இருக்கிறது.

அவனது ஆற்றல் அவனுக்கு ஒரு தொழிலைத் தேடிக் கொடுத்திருந்தது. இசைக் கருவிகள் விற்பனை செய்யும் ஒரு கடையில் அவன் அவற்றிக்கு சுருதி மீட்டிக் கொடுப்பவனாகத் தொழில் பார்க்கிறான்.

sokout 4

ஆனால் எல்லா முதலாளிகளையும் போலவே இவனது முதலாளியும் காசு ஒன்றே குறியானவன். இவனது திறமையை மதிப்பவனாக இல்லை. யாராவது அவன் விற்ற வாத்தியத்தைக் குறை கூறினால், சுருதி சேர்த்துக் கொடுத்த இவனே குற்றவாளியாக ஏச்சு வாங்க வேண்டியவனாகிறான்.

வேலைக்குச் செல்லும்போது பஸ்சில் பயணிக்க நேருகிறது. போகும் வழியெல்லாம் இவன் சூழலிருந்து எழும் ஒலிகள் கேட்காதவாறு, தனது காதுகளைப் பொத்திக் கொண்டே பயணிக்கிறான். அவனாக விரும்பி இதைச் செய்வதில்லை. நல்ல இசை கேட்டால் இவன் தனது சூழலையும், தன்னைக் காத்திருக்கும் பணிகளையும் மறந்து விடுவான். இவனது கால்கள் தன்னிச்சையாக இசை ஒலியைப் பின் தொடரும். எங்கோ செல்ல வேண்டியவன் அதை மறந்து வேறெங்கோ சென்றுவிடுவான்.

இவனது பயணத்தில் உதவுவது ஒரு குட்டித் தோழி நதீரா. ஆனால் இவனிலும் சற்றுப் பெரியவள். பார்வையற்றவனின் கண்களாக அவள் இயங்குகிறாள். அத்துடன் இவன் வாத்தியங்களைச் சுருதி மீட்டும் போது, அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்ப்பதும் அவள்தான்.

sokout 5

அவன் சுருதி மீட்டும் போது மெல்லியதாக அவளது காது வளையம் ஆட ஆரம்பிக்கும், பின் தலை முடி, முகம், கைகள் எனத் தொடர்ந்து இறுதியில் உடலே தாளலயத்திற்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிடும். அந்த அழகை ரசித்திக் கொண்டே இருக்கலாம். அற்புதமாக நடிக்கிறாள் அந்தப் பெண்.

அவளது உலகம் குர்ஸிட் மட்டுமே. இவனது கவனம் அங்கும் இங்கும் அலையவிடாது கவனமாகக் கூட்டிச் செல்பவள் அவள்தான். அவளால்தான் அது முடியும். தெருப் பாடகனின் இசையில் மயங்கி அவனது ஓசையைப் பின் தொடர்ந்து செல்வதால், வேலைக்குச் செல்லத் தாமதமாகி ஏச்சு வாங்காஙாகாது காப்பாற்றுவது அவள்தான்.

அவன் எல்லா அழகையும் ஆராதிப்பவன். அவளின் புற அழகை அல்ல. அவளின் உள்ளொளியைப் புரிந்து வைத்திருக்கிறான்.

குர்ஸிட் ஒரு வண்டு போன்றவன். அவற்றின் ஓசை இவனுக்குப் பிடித்தமானது. ஆயினும் சாணியில் மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம் அபசுரம் என்பான். ஆனால் மலர்களில் தேன் தேடும் தேனீக்களின் ரீங்காரம் அற்புதமானது என ரசிப்பான். தேனீக்களுடன் பாசம் கொண்டவன். அவற்றோடு பேசுவதும் இவனுக்குப் பிடித்தமானது. அவை பற்றிப் பேசுவதில் மகிழ்வு கொள்பவன்.

ஆனால் அவற்றைப் போலவே இவனும் நெறிப்படுத்தப்படாத தேனீ. பதவி, பணம், அந்தஸ்த்து  போன்றவை இவனது இசை ரசனையைப் பாதிப்பதில்லை. தெருப் பிச்சைக்காரன் எழுப்பும் இசை லயத்துடன் அமைகையில் அதில் ஆழ்ந்துவிடுவான். அந்த கானகக் கானமும் இவனை வாவென அழைக்கும்.

நெரிச்சல் மிகுந்த கடைத் தெருவில் இசையின் வழியே பயணிக்கிறான். இளைஞன் கையிலிருக்கும்; ரேடியோவிலிருந்து அற்புதமான இசை வருகிறது. நெருக்கமான சனங்களிடையே, இசையின் நீக்கல்களின் இடையே நெளிந்து வளைந்து புகுந்து பயணிக்கும் இவன் வழி தவறிவிடுகிறான். கூட வந்த நதீரா இவனைக் காணாது பயந்து தேடுகிறாள். என்னவானானோ என நாமும் கலங்கிவிடுகிறோம்.

ஆனால் அவள் எப்படி இவனைக் கண்டுபிடிக்கிறாள் என்பது அற்புதமான காட்சியாகிறது. அவள் தன் இரு கண்களையும் மூடிக் கொண்டு தேடியலைகிறாள். எங்கோ தொலை தூரத்தில் மங்கலாக இசை ஒலி கேட்கிறது. அதில் தன் மனத்தை ஆழச் செலுத்துகிறாள். கண்களை மூடியபடியே அது வரும் திசையில் தட்டுத் தடுமாறிப் பயணிக்கிறாள். அவள் அடைந்த இடம் ஒரு இசைக் குழு கானம் எழுப்பிக் கொண்டிருக்கும் கடையாகும். அங்கு வெளியே மதிலோரம் இசையில் மயங்கி, சுவரில் சாய்ந்தபடி தன் தனியுலகில் இருக்கிறான் குர்ஸிட்.

படம் முழுவதும் இசை பொங்கி வழிகிறது. காற்றில் பறந்தலையும் கடதாசிச் சுருள் போல நாம் அந்த இசையின் ஓட்டத்தில் அள்ளுண்டு பயணிக்கிறோம். மழை ஓசை இசையாகிறது. நாயின் குரைப்பிலும், குதிரையின் குளம்பொலியிலும், பறவைகளின் சிறகடிப்பிலும், செம்மறி ஆடுகளின் கனைப்பிலும் கூட இசை இருக்கிறது என்பதை உணர்ந்து அதிசயிக்கிறோம்.

sokout 6

ஒருதடவை வாத்தியத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மழை ஆரம்பிக்கிறது. அதில் குதித்து விளையாடி ஆனந்திக்கிறான். மழை விடவில்லை. நனைந்து தெப்பமாக குளிர்பிடிக்கிறது. ஓடும்போது தடக்கி விழுகையில் வாத்தியம் கை நழுவித் தூரப் போய் விழுகிறது. எங்கென பார்வையற்றவன் கண்டு கொள்வது எப்படி? மிகுந்த துயரம் ஆட்கொள்கிறது. ஏற்கனவே முதலாளி இவனை வேலையிலிருந்து கலைக்க முற்பட்டிருக்கிறான். இப்பொழுது வாத்தியமும் தொலைந்து விட்டால்?

ஆச்சரியம் காத்திருக்கிறது. வாத்தியத்தின் மேல் விழும் மழைத்துளிகள் ஓசையை எழுப்புகின்றன. அது ஒரு சீரான ஒலிலயத்தில் அவன் காதில் பாய்கிறது. இசைத்துளி பொழிகிறது. அதுவே அவன் மனத்திற்கு ஒளதடமாகிறது. வாத்தியமும் கிடைத்து விடுகிறது.

எமக்கென்று தனிப்பாதை கிடையாது. வானை எட்டும் முகில்களாகப் பறந்தும், ஆழ்கடல் சிறுமீன்களாக நீந்தியும் இசையுடன் இரண்டறக் கலந்து பயணிக்கிறோம். சுட்டெரிக்கும் தீயும் இல்லாத, குத்தி வலிக்க வைக்கும் முற்களும் இல்லாத ஆனந்தப் பெருவெளி. சண்டை, சச்சரவு, குரோதம் ஏதுவும் எம்மைச் சஞ்சலப்படுத்தாத படம்.

அவன் வாழும் வீடு நதியுடன் இணைந்தது. பாலத்தால் வீதிக்கு வர வேண்டும். அவன் வேலையிலிருந்து வரும்போதும் மரங்களின் நிழல் அமைதியான நீரில் பிம்பமாக விழும் தோற்றம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கிறது. கை தேர்ந்த ஓவியனின் கன்வஸ் ஓவியம் போல கலைநயம் மிக்கது.

Sokout 3

அதேபோல Tajikistan நகரின் கடைத் தெருக்களிலும், வீதிகளிலும் எம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறது கமரா. மிகச் சிறப்பான படப்பிடிப்பு. அலங்காரமான கடைகள், அழகான முகங்கள், இவை யாவும் வித்தியாசமான கோணங்களில். நாம் காண்பது அவ்வாறாக இருந்தபோதும், அவர்களின் மொழியும், கலாசாரமும் அந்நியமாக தோன்றியபோதும், அந்த மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் மற்றெல்லா மனிதர்களுடையது போலவே இருப்பதால், அதில் எங்களையும் அடையாளம் காண முடிகிறது. இதனால் படத்துடன் ஒன்றச் செய்கிறது.

மிகவும் மாறுபட்ட பார்வையில்; மனித வாழ்வின் மறக்கவொண்ணா கணங்களையும், மனத்தில் எழும் கவித்துவ உணர்வுகளையும் இசையில் குழைத்து அள்ளிச் சொரிகிறது இப்படம். உள்ளத்தை அள்ளிப்பிடிக்கும் ஓவியம் போன்றிருக்கிறது. உலகம், மனித வாழ்வு, இசை இவற்றை வெறுமனே சித்தரிப்பதற்கு அப்பாலும் பயணிக்கிறது. கனதியில் எம்மனத்தை ஆழ்த்தியபடியே படம் நிறைவுறுகிறது.

ஈரானின் புகழ்பெற்ற Mohsen Mahmalbaf  ன் படைப்பு இது. அவர் திரைப்படத் துறையில் மிகப் பெரிய ஆளுமையாவார். நெறியாளர் மட்டுமல்ல நல்ல கதாசிரியரும் கூட. ஈரானிய சினிமாவில் புதிய அலை இவருடனேயே ஆரம்பிக்கிறது எனலாம். இவரது மிகப் பிரபலமான முதற் சினிமா கந்தஹர் ஆகும்.

Mohsen_makhmalbaf_FICA2009

இவரது வாழ்க்கை இவருக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் நாயகனான குர்ஸிட் போலவே மிகச் சிறுவயதிலேயே குடும்பச் சுமையைத் தனது தோளில் ஏந்த வேண்டியதாயிற்று. 8 வயதிலேயே தந்தை இழந்து பல சின்னசின்னத் தொழில்களைச் செய்து, 15 வயதளவில் விடுதலைப் போராளியாகி, துப்பாக்கிச்; சூடுபட்டு சிறைப்பட்டவராவார். 4 ½ வருட தண்டனையில் தன்னைப் புடம்போட்டுக் கொள்கிறார். தீவிர அரசியலில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டு படிப்படியாக வளர்ந்தவர் ஆவார். இப்பொழுது பிரான்ஸ்சில் வசிக்கிறார்.

25 சினிமாக்களுக்கு மேல் இயக்கிய இவரது 5 திரைப்படங்கள் அவரது தாய் நாடான ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளன. அதில் நிசப்தம் என்ற இந்தத் திரைப்படமும் அடங்கும்.

ஏன் இது தடைசெய்யப்பட்டது என்பதை படத்தை மனத்துள் மீள்வாசிப்பு செய்தேன்.

குர்ஸிட்டும், நதீராவும் பாதை வழி போகையில் அவள் திடீரென நிற்கிறாள். கையைப் பற்றி அவனையும் நிறுத்துகிறாள். அவள் முகம் பயத்தால் உறைந்திருப்தைக் காண்கிறோம். “அந்த வழியில் துவக்கோடு இளைஞன் நிற்கிறான். பெண்கள் முக்காடின்றி வந்தால் தாறுமாறாக ஏசுவான்” போகிற போக்கில் சொல்லிப் போகும் வசனமாக முதலில் தோன்றியது. அவள் வேறுபாதையால் செல்வோம் என்கிறாள். இது போன்ற வேறு ஓரிரு காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இரை மீட்கையில் மிகவும் முக்கியமான காட்சியாகப்படுகிறது. தீவிரவாதிகளும், மத கலாசார அடிப்படைவாதிகளும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிப்பதில்லை. துப்பாக்கி, பொல், கடும்சொல் போன்ற ஆயுதங்களால் மக்களை பயமுறுத்தி அடிமைப்படுத்துகிறார்கள்.

தங்கள் கருத்தை ஆயதமுனையில் திணிக்கிறார்கள். இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் வேறுபாதையைத் தான் நாடமுடியும். நதீரா தெருப்பாதையை மாற்றுவது ஒரு குறியீடாக ஒலிப்பதாகவே நான் கருதுகிறேன். மிக நாசூக்காக தன் கருத்தைத் தெளிவித்திருக்கிறார். இப்படம் ஈரானில் தடை செய்யப்படுவதற்குக் இதுதான் காரணமாக இருந்ததோ தெரியவில்லை.

படம் முழுவதும் இசை அள்ளி அணைக்கிறது. வருடிக் கொடுத்து இதமளிக்கிறது. கிளுகிளுப்பூட்டிச் சிரிக்கவும் வைக்கிறது. மோனத் துயரில் ஆழவும் வைக்கிறது. இறுதிக் காட்சியில் பீத்தோவனின் 5வது சிம்பனி கம்பீரமாக ஒலிக்கிறது. மேற்கத்தைய உலகின் நாதமும், ஈரானிய கலாசாரத்தின் வாழ்வும், இசையாலும் அற்புதமான கமராக் கண்களாலும் இணையும் உன்னதம் அது.

மங்கிய ஒளி, அமைதியான ஆற்று நீர், அதில் மிருதுவான பூவாக மிதக்கும் ஓடம், தொலைவிலிருந்து அது மெதுவாக நகர்ந்து வருகிறது இவனையும் ஏற்றி வேறிடம் செல்ல. தொலைவில் அவர்கள் வாழ்ந்த வீடு அந்நியமாகி எட்டாத தூரத்தில் மறைந்துகொண்டு வருகிறது.

வேலை போய்விட்டது. வீட்டு வாடகை கட்ட முடியாததால் பொருட்களை தூக்கி எறிந்து அவர்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான் சொந்தக்காரன். நிர்க்கதியாகி நிற்கிறார்கள் அவர்கள். ஆனால் வாழ்வு என்றுமே அஸ்தமித்துப் போய்விடுவதில்லை. ஏனெனில் அஸ்தமனங்ளையும் உதயமாக்க வலு கொடுக்கும் இசை அவனது கைவசம் இருக்கிறது. அவனது கைகள் அசைகின்றன. தலை தாளம் போடுகிறது. லயநயத்துடன் உடல் அசைந்தாடுகின்றது. ஒரு இசை ஞானிக்குரிய நுட்பத்துடன் இசையைப் பிறக்க வைக்கின்றன.

அவனது கையசைவிற்கு ஏற்ப கடைத்தெருவே இசை எழுப்புகிறது. பானை, சட்டி, இசை கருவிகள், வாளால் மரமரிதல் என யாவும் வாத்தியங்களாகின்றன. தொழிலாளிகள் தாள லயத்துடன் தட்டி இசையாக எழுப்புகிறார்கள. சந்தை இசைக் கூடமாகிறது.

M8DSILE EC011

இசையில் மயங்கி மனக்கண் மூடிக் கிடந்த நாம் ஏதோ அருட்டுணர்வில் மடல் திறக்கையில் படம் முடிந்திருக்கிறது.

எம்.கே.முருகானந்தன்.

ஞானம் சஞ்சிகையில் வெளி வந்த எனது கட்டுரை.

இது மீள் பதிவு. எனது மறந்து போகாத சில புளக்கில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதிவிடப்பட்ட கட்டுரை

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

விழுகைகளைத் தவிர்ப்பது எவருக்கும் முக்கியமானது.

ஆனால் சுலபமாக எலும்புகள் உடைந்துவிடக் கூடிய முது வயதில் மிக மிக முக்கியமானதாகும்.

விழுகைகளைத் தடுக்க வேண்டுமெனில் முக்கியாக உங்கள் சமநிலை தழும்பாது பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

  • எங்கு எப்பொழுது நடமாடினாலும் ஒரு கையிலாவது பொருட்கள் எதையும் பற்றியிராது வெற்றாக வைத்திருங்கள். தற்செயலாக நிலை தழும்பினால், விழாமல் இருப்பதற்காக எதையாவது பற்றிப் பிடிக்க வசதியாக இருக்கும்.
  • நடக்கும்போது வேறு எதிலும் கவனத்தைச் செலுத்;தாதீர்கள். பத்திரிகை படிப்பது, மற்றவர்களுடன் பேசி கொண்டு நடப்பது, கடைத்தெருவைப் பிராக்குப் பார்த்து நடப்பது போன்றவற்றால் சமநிலை தவறி விழுந்துவிடக் கூடும்.
  • நடக்கும்போது கைகளை முன் பின்னாக வீசி நடப்பதன் மூலம் உடலின் சமநிலையைப் பேண முடியும்.
  • தரையில் காலை இழுத்து இழுத்து நடக்காதீர்கள். பாதங்களை தரையியிருந்து தூக்கி திடமாக வைத்து நடவுங்கள்
  • போகும் பாதையில் ஒரிடத்தில் திரும்பி நடக்க வேண்டுமாயின் சடீரெனத் திரும்பாதீர்கள். வட்டமடிப்பது போல வளைந்து சென்று திரும்புங்கள்.
  • படுக்கையிலிருந்து அல்லது இருக்கையிருந்து எழுந்து நடக்க வேண்டுமாயின் அவசரப்பட்டு எழுந்து உடனடியாக நடக்காதீர்கள்.
  • படுக்கையிலிருந்து எழுந்து, உட்கார்ந்து, சற்று நின்று பார்த்து நிலை தழும்பவில்லை எனில் பின்பு நிதானமாக நடவுங்கள்.
  • ஓரிடத்தில் சற்று நேரம் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டால் பாதங்களை நெருக்கி வைக்காதீர்கள். உங்கள் தோள் பட்டையின் அகலத்திற்கு பாதங்களைப் பரப்பி வைத்தால் சமநிலை தழும்பாது.
  • செருப்புகள் தேய்ந்திருந்தாலும் வழுக்கக் கூடும்.

IMG_0003_NEW-001

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

Read Full Post »

“படைப்பொன்றின் ஒவ்வொரு எழுத்திலும் அதை எழுதியவனுடைய மரபணு ஊர்ந்து செல்லும்” என்கிறார்கள். முருகானந்தன் அவர்களை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான நூல் வெளிவந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.

2004ம் ஆண்டு வெளியான எனது கலை இலக்கிய விமர்சனக் கட்டுரை நூலான  “மறந்து போகாத சில…” ற்கு வெளியீட்டு விழா அன்று நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் ஆற்றிய விமர்சன உரையின் கட்டுரை வடிவம்.

இந்த நூலின் பெயரில்தான் எனது இலக்கிய விடயங்களுக்கான புளக்கான மறந்து போகாத சில 2007 வாக்கில் ஆரம்பித்தேன்.

Maranthu pogatha sila Front

முன் அட்டைப் படத்தில் உள்ள சிலை சிற்பக் கலைஞர் விஸ்வலிங்கம் செய்த மரச் சிற்பம்
இன்றும் எனது பருத்தித்துறை வீட்டில் இருக்கிறது

“மறந்து போகாத சில…” என்ற நூலின் தலைப்பே, அவரது தெரிவின் வகையைச் சொல்கிறது. அவரளவில் மறந்து போகாத அனுபவங்களைச் சுமக்கும் சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதைவிட வேறும் அதிகமான கட்டுரைகளை, விமர்சனக் குறிப்புகளை அவர் எழுதியிருக்கிறார். நானே வாசித்தும் கேட்டுமிருக்கிறேன்.

எல்லாவற்றினுள்ளுமிருந்து தன் நினைவில் தங்கிய, எழுதப்பட்ட காலத்தின் பின்னான ஒரு பார்வையில், வெளிப்படுத்தத் தகுந்தவை என்று கருதிய கட்டுரைகளைத் தொகுப்பாக்கியிருப்பதும், அவற்றையே வாசகப் பார்வைக்குத் தருவதென்பதும் ஓர் அக்கறை மிகுந்த செயற்பாடே. ஒரு படைப்பாளிக்கு அவசியம் இருந்தாக வேண்டிய சுயமதிப்பீட்டின் அடையாளம் இது.

வாசக நோக்கில், எம்.கே.முருகானந்தன் என்கிற இலக்கியவாதியின் அருமையான பல கருத்துக்கள் சரியானபடி நினைவில் கொள்ளப்படவில்லை என்று சொல்லலாம். வைத்தியராக நினைவில் நிற்குமளவுக்கு இலக்கியவாதியாக நிறுத்தப்படாமல் மறக்கப்படுபவராகவே தெரிகிறார். இன்றைய வாசக உலகுக்கு மிகத் தேவையான, காத்திரமான விமர்சனக் கருத்துக்களை அவ்வப்போது தந்திருக்கும் முருகானந்தன் அவர்களை, இங்கு எழுதப்படும் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் எதிலும் காணமுடிவதில்லை என்பது இந்த மறதியின் விளைவுதான். அல்லது, தன் கட்டுரைகளையோ, கதைகளையோ, கவிதைகளையோ ஒருவர் நூலாகத் தொகுத்துப் போடாவிட்டால் அவர் கண்டு கொள்ளப்பட மாட்டார் என்ற பொதுப் போக்கின் விளைவுதான்!ஈழத்தமிழிலக்கிய வளர்ச்சியில் மற்றும் வாசக ரசனைச் சூழலை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டோரின் அவதானத்தில் இந்நூலின் வருகை, சிறப்பான வரவேற்புக்குரியது.இலக்கிய வாசிப்பு அல்லது கலைகளை ரசிப்பதென்பது மனிதனின் அகவயமான செயற்பாடுதான். ஒரு கலைப் படைப்பு எனக்கு அளிக்கும் அனுபவம் எனக்கு மட்டுமே சொந்தமானது. என் ரசனையை நான் எவரிடமும் பகிர வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் அப்படைப்பு மீது ஒரு ஒட்டுமொத்த மதிப்பீடு உருவாக வேண்டும் என்று எண்ணும் போதும், என் ரசனையையும் மதிப்பீட்டையும் சமூகத்தில் உரைத்துப் பார்த்துக்கொள்ள விரும்பும் போதும் நான் அவற்றைப் பிறருக்குச் சொல்கிறேன். மற்றவர்கள் தங்கள் ரசனையையும் மதிப்பீட்டையும் வெளிப்படுத்துகிறார்கள். அவற்றை அறிந்து கொள்வதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஒரு பொது விவாதத் தளம் உருவாகிறது. அதன் விழைவாக ஒரு படைப்பைப் பற்றிய சமூக வாசிப்பு, ஒட்டுமொத்த மதிப்பீடு உருவாகிறது.இந்த மதிப்பீட்டில் சில படைப்புகள் முக்கியமாவதும், சில முக்கியத்துவமிழப்பதும் நடைபெறுகிறது. இவ்வாறு படைப்புகளின் தரம் உருவாகிறது. முற்றிலும் அகவயமாக, கலை, அவரவருக்கு அளிக்கும் அனுபவம் மட்டுமே போதுமானதாக இருந்திருந்தால் தரம் பற்றிய கேள்விக்கு இடமில்லை. ஒருவருக்கு பிச்சமூர்த்தி பிடிக்கலாம். இன்னொருவருக்கு வைரமுத்து பிடிக்கலாம். அவரவருக்குப் பிடித்ததை அவரவர் கொண்டாடுவதுடன் நின்றுவிடலாம். இவ்வாறெனில், கலையில் ஏற்றத்தாழ்வு இருக்க வாய்ப்பில்லை ஆனால் நடைமுறையில் அப்படியில்லை. பாரதியையும் பழனி பாரதியையும் நாம் ஒரே தரத்தில் பார்ப்பதில்லை. இவ்வாறான சமூகத்தின் கூட்டு ரசனையை வடிவமைப்பதில் விமர்சனங்கள் மிக முக்கிய ஒரு பங்கை ஆற்றுகின்றன.

“மாங்குடி மருதனைத் தலைவனாகப் பெற்ற, உலகம் உள்ளதுவரை நிலைபெற்ற புகழினை உடைய புலவர் அவை|யும் அன்று இப்பணியைத்தான் செய்திருக்க வேண்டும்.

இந்த விமர்சனங்களின் அல்லது ஒரு படைப்பின் மீது வாசக கவனத்தைக் கொண்டு வருபவர்களின் வலிமையையும் அந்தப் படைப்புகள் மீது அவர்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தையும் நாம் அறிவோம்.

தளையசிங்கம் இன்று முக்கியமானவராக வருவதற்கும், ப.சிங்காரம் முப்பது நாற்பது ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்படுவதற்கும் இதுவே காரணம். தமிழ்ச் சமூகத்தைவிட இலக்கிய விழிப்புணர்வு கொண்ட சமூகங்களில் கூட இத்தகைய புறக்கணிப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஒரு படைப்பின் உயர்வு – தாழ்வு என்பதெல்லாம் அதை மதிப்பிடும் மனிதமனம் சார்ந்ததாகவே அமைகிறது. ஒரு விமர்சகர் குறிப்பிட்ட காரணங்களை முன்னிறுத்தி ஒரு படைப்பின் உயர்வைச் சொல்லக்கூடுமானால், இன்னொருவர் வேறு காரணங்களை முன்னிட்டு அதன் தாழ்வை இனங்காட்டக்கூடும். இங்கு உயர்வு அல்லது தாழ்வு என்பதில்லை, படைப்பின் மீதான விவாதம்தான் முக்கியம். இதுதான் வாசக கவனத்தைப் படைப்பிற்குப் பெற்றுத் தருகிறது. இதை உணர்ந்து கொண்டால் விமர்சகன் – படைப்பாளி முரண்பாட்டிற்கு இடமில்லை. ஆனால், வாசக கவனத்தை எதிர்பார்த்திருக்கும் படைப்பாளிகள், விமர்சன அதிகாரத்திற்கு ஓரளவு அஞ்சுபவர்களாகவே இருக்கிறார்கள். விமர்சகனுக்கும் படைப்பாளிக்குமான முரண்பாடும் இங்கு சகஜமாக இருக்கிறது. இந்த முரண்பாட்டை விரும்பாதவர்கள் அல்லது முரணினால் வீண் லாபமிழப்புதான் என்று கருதுபவர்கள், முருகானந்தன் குறிப்பிடுகிற அந்த விமர்சன வகைகளுக்குள் நின்று வட்டாடுகிறார்கள்.

மற்றவர்களுக்கு நோகாமல், விமர்சனம் செய்வதை ஒரு கலையாக அல்லது கட்டாயக் கடமை போலச் செய்து கொண்டிருக்கும் நமக்கு, எந்தப் பெரிய இலக்கிய ஐஊழு§ ஐயும் எடுத்தெறிந்து அபிப்பிராயங்களை உதிர்த்துவரும் ஜெயமோகன் போன்றவர்கள் வியப்பூட்டுகிறார்கள்.

ஒருவேளை, நம் இலக்கிய ஜாம்பவன்கள் எல்லோரும் இப்படி ஒரு குறுகிய அறைக்குள் எதிரெதிரே அடிக்கடி முகம் பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் ஒரேயடியாக எடுத்தெறிந்து முகத்தை முறித்துக்கொள்ள முடியாமலிருக்கிறதோ, என்னவோ! அவர்களுக்கு, சமுத்திரத்தில் மூத்திரம் பெய்கிற சுதந்திரம்!

இங்கேயும் இன்றிருப்போரில் மு.பொ.கறாரான சில விமர்சனங்களைச் செய்திருக்கிறார். கவித்துவத்தில் மஹாகவியை விட நீலவாணனை உயர்வாய் நிறுவியதும், சோலைக்கிளிக்கு வைத்த விமர்சனமும் குறிப்பிட்டுச் சொல்லாத்தக்கன. இருந்தாலும் இளையவர்களின் படைப்புக்கள் என்று வருகிறபோது அவரும் ஊக்குவிப்பு விமர்சனத்தில்தான் இறங்குகிறார். இது எங்கள் இலக்கியச் சூழலின் வறுமை சார்ந்ததும் கூட. சக்கட்டைகளுக்குள் சண்டை வேறென்னத்துக்கு?

இந்த இடத்தில் – முருகானந்தன் வகைப்படுத்திக் காட்டுகிற விமர்சனப் போக்குகளைச் சொல்லிவிடலாம்.

போரும் நெருக்கடியுமிருந்த வெளிநாடுகளில் எல்லாம் ஏற்பட்ட கலாசார விழிப்புணர்ச்சியையும், பிறந்த உயிர் இலக்கியங்களையும் அறிந்த ஆதங்கத்தில் நம்நாட்டு நிலமை அவருக்கும் கவலையளிக்கிறது. சடங்குகளாக நடக்கும் நூல் வெளியீடுகளும், வெற்றுப் பாராட்டுரைகளும், விமர்சனங்கள் பற்றிய அவரது உரத்த சிந்தனையை வெளியிட வைத்திருக்கின்றன.

இன்றைய விமர்சனப் போக்குகளைக் குறிப்பாக ஐந்து வகைகளுக்குள் அடக்கியிருக்கிறார்.

1)தெரிந்தவர்கள், பழக்கமானவர்கள் என்பதற்காக, அவர்களைச் சங்கடப்படுத்தாத விமர்சனம்.

2)பிரபலஸ்தர்கள், செல்வாக்கு மிக்கவர்களுக்காகச் செய்யும் முதுகெலும்பில்லாத அசட்டு விமர்சனம்.

3)எனக்கு நீ செய், உனக்கு நான் செய்கிறேன் என்றவாறான பரஸ்பர முதுகுசொறியும் – நன்றிக்கடன் விமர்சனம்.

4)பிடிக்காதவர்களின் படைப்புக்களைப் பூதக்கண்ணாடி கொண்டு குறை கண்டுபிடித்துக் கொக்கரிக்கும் விமர்சனம்.

5)இளைய சந்ததியைத் தட்டிக் கொடுக்கிறோம் என்ற பாவனையில் அல்லது இன்றைக்கு இதுதான் எடுபடும் என்ற எண்ணத்தில் படைத்தவர் மனம் நோகாமல் தட்டிக் கொடுக்கும் ஊக்குவிப்பு விமர்சனம்.

Maranthu pogatha sila Back

இவையெல்லாம் நமது நலிவுக்குக் காரணமான போக்குகள் என்று குறிக்கிறார் முருகானந்தன். மு.பொ.முன்னுரையில் குறிப்பிடுவது போல இவற்றையெல்லாம் ஒரு பிரகடனமாக நாம் ஏற்றுக்கொள்வதுகூட சிறப்பானதே!

மறுபுறம், புத்தகங்களை வெளியிடுபவர்கள், படைப்பாளிகளின் எதிர்ப்பும் ஒன்றும் சகிப்புத்தன்மையுடையதாக இல்லை. விமர்சனம் என்ற வேண்டுதலின் பின்னாலுள்ள விருப்பம் புகழ்மொழிகள்தான்! விமர்சனம் வேண்டுமென்று கேட்கிறார்கள்@ ஆனால் எல்லோரும் பாராட்டைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்வதில் உண்மை இருக்கிறது.

நம்மை ஒருவருக்குப் பிடிக்காமல் போக ஏராளம் காரணங்கள் இருக்கின்றன. விமர்சனம் செய்வது மிக எளிய வழிகளில் ஒன்று. காலம் முழுக்க ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் அவஸ்தைப்படுவதை விட, ~~இவர் விமர்சனத்தை ஏற்பவர்@ புகழ்மொழிகளை விரும்பாதவர்|| என்று கவிழ்த்து விடுவது மகிழ்ச்சிகரமான உறவுக்கு உத்தரவாதம்.

துறவிகள் தவிர்ந்த – மனிதர்களின் இயல்பான குணமாகவே இதைப்பார்க்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொருவரும் தான் சிறந்தது என்று கருதுவதையே தன்னிலிருந்து படைப்பாக வெளித்தருகிறார்கள். அவரவர்க்கு அவரவர் ரசனைகளும் தெரிவுகளும் உயர்வானவையாகவும் நியாயமானவையாகவுமே தோன்றுகின்றன. இதை மற்றொருவர் சிதறடிக்கும்போது, அது ஒன்றும் முக்கியமானதில்லை என்று புறந்தள்ளி விடும் போது, அல்லது தரமற்றது என்று சொல்லிவிடும்போது பெரும்பாலும் அதைத் தாங்கிக் கொள்ளக்கூடியதாக இருப்பதில்லை.

விமர்சனத்தை வைப்பவரிலும் உள்நோக்கம் காணத்தோன்றுகிறது. தன் படைப்பைப் பாராட்டிய வேறு பலரையும் துணைக்கழைத்து தன் படைப்பின் தரத்தையும், தன் படைப்பின் மீதான விமர்சகர்களின் அடாவடியையும் நிறுவ முற்பட வேண்டியிருக்கிறது. சமீபத்தில் வைரமுத்துவுக்கு சாகித்ய விருது கிடைத்தது பற்றிய விமர்சனங்களையும் அதற்கு வைரமுத்துவின் எதிர்வினைகளையும் நாம் பார்த்துக் கொள்ளலாம்.

வைரமுத்து தம்மை நோபல் பரிசுக்கும் தகுதியானவர் என்றெண்ணுவது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் நாம் ஒவ்வொருவரும் நமது படைப்பின் தரம் குறித்து நம்மளவிலேனும் திருப்தியான எண்ணமே கொண்டிருக்கிறோம்.

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்டிருக்கக்கூடிய சிறுகதை, நாவல் வடிவங்களையே இன்னமும் நாம் பிரசுரித்துக் கொண்டிருப்பதும், அவற்றுக்கு வெளியீட்டு விழாக்கள் நடத்திப் பேசிக் கொண்டிருப்பதும் வேறு எதைக் காட்டுகிறது?

ஒன்றிரண்டு விதிவிலக்கான முயற்சிகளை இங்கு சிலாகிப்பதற்கில்லை. யதார்த்தச் சித்தரிப்பின் சாத்தியங்களையே நாம் இன்னும் முயன்று பார்த்து முடிக்கவில்லை.

இந்த யதார்த்தச் சித்தரிப்பு, வாழ்வின் யதார்த்தத்தைத் துலக்குவதில் சரிவடைவதை உணர்வதும், பின்னர் யதார்த்தமற்ற சித்தரிப்புகளினு}டாக வாழ்வின் யதார்த்தத்தை துலக்கும் முயற்சியில் ஈடுபடுவதும், அது இங்கு பொதுப் போக்காக மாறுவதுமான காலம் ஊழஅ¢ரவநச மாற்றங்கள் இங்கு பரவும் பத்திலொரு பங்கு வேகத்தில் கூட வந்து சேரக்காணோம்.

தெணியானின் ‘காத்திருப்பு’ நாவலுக்கு எழுதிய அணிந்துரையில் “தமிழகத்தின் அண்மைய வளர்ச்சிகளோடு ஒப்பிடுகையில் எமது நாவல்கள் எந்த நிலையில் நிற்கின்றன என்பது யோசிக்கப்பட வேண்டிய விஷயம்” என்கிறார் முருகானந்தன்.

விரிவான பரந்த அனுபவங்களை அலை அலையாக வீசிவரும் நாவல் முயற்சி இன்னமும் இங்கு உதயமாகவில்லை, குறுநாவல்களே இங்கு நாவல்களாக நாமம் சூட்டப்படுகின்றன என்கிறார். இதற்கான பின்னணியை – காரணத்தையும் நேரிடையாகத் தொட்டுச் சொல்லிவிடுகிறார்.

“விமர்சகர்கள் முக்கியத்துவப்படுத்திய சமூக அரசியல் வரலாற்று சூழலுக்கு அமைவாக கற்பனை உலகத்திலிருந்து வரட்டுத்தனமாக எழுதித் தம்மையும் விமர்சகர்களையும் மட்டுமே திருப்திப்படுத்தினார்களே அன்றித் தம்மைச் செழுமைப்படுத்தவோ, வாசகர்களின் உணர்திறனை விருத்தி செய்யவோ முனையவில்லை.”| என்ற தம் விமர்சனத்தை வைக்கிறார். நம் கருத்துக்களுக்கிசைவாக வாழ்வை நிரூபித்துக் காட்டிவிட முற்படும் போக்காகவே நமது எழுத்துக்கள் இன்னமும் வட்டமடித்து நிற்கின்றன. சித்தாந்தச் சட்டகங்களுக்குள் அடைபட மறுக்கும், அத்துடன் இதுவரைக்குமான கதை சொல்லல் முறைகளினால் அள்ள இயலாத வாழ்வின் நட்பங்களை எழுத்தினால் அள்ளுவதற்கு நமது எந்த மரபு இன்னமும் தடையாக நிற்கிறது என்று பார்க்க வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் நமது போதாமைகள் குறித்த பிரக்ஞையுடனாவது இருக்கிறோமோ என்று அறிய வேண்டியுள்ளது. அந்தவகையில், முருகானந்தன் மறந்துபோகாத சிலவற்றைத் தொகுத்திருக்கும் இந்த நூல் நமக்கு முக்கியமானது.

“ஈழத்தைப் பொறுத்தவரையில், நாம் பெரும்பாலும் படைப்பாக்க முறைகளில் பழமை பேணுபவர்களாகவே இருந்துள்ளோம்” என்கிறார். இது நவீனத்துவத்தின் படைப்பாக்க நட்பங்களை நாம் நிறைவாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே. சில படைப்புகள் உள்ளனதான். ஆனால், எமது போக்காக, தேவையாக அது உணரப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தியத் தமிழ்ப்படைப்புலகம் அறுபதுகளின் பிற்பகுதியிலே யதார்த்தப் போக்கின் போதாமைகளை உணர்ந்து, நவீனத்துவத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. நாம் இன்றைக்கும்கூட உதாரணம் சொல்வதற்கு ஓன்றிரண்டு படைப்புகளையே வைத்திருக்கிறோம்.

யதார்த்தச் சித்தரிப்புக்களைப் போலல்லாது நவீனத்துவப் படைப்புகள் வாசகப் பங்களிப்பினைக் கோரிப் பெறுபவை@ வாசகப் பங்களிப்பிலேயே முழுமையடைபவை@ வாசக மனதில் சுயமாக விரியும் பண்பு இவற்றுக்கு இருக்கும். இதனால்த்தான் வெவ்வேறு விதமான வாசிப்புகளுக்கு எப்போதும் நவீனத்துவப் படைப்புகளில் இடமிருந்து கொண்டே இருக்கும்.

வாழ்வின் யதார்த்தத்திற்கும், கதையில் உருக்கொள்ளும் யதார்த்தத்திற்குமிடையிலான இடைவெளியை நமது படைப்பாளிகளில் பெரும்பாலானோர் இன்னும் கண்டுகொள்வதில்லை என்றே தோன்றுகின்றது.

இதனோடு தொடர்பாக முருகானந்தன், படைப்பாற்றல் என்பது குறித்துச் சொல்லும் கருத்துக்கள் முக்கியமானவை.

“வெறும் அனுபவம் மட்டும் படைப்பாகி விடுவதில்லை. அதேசமயம் அனுபவத்தை இனங்காண்பதும் புரிந்து கொள்வதும் கூட இலகுவானதில்லை…. அனுபவம் – அசடுகள், அசமந்துகள் உட்பட எல்லோருக்கும்தான் வருகிறது. ஆனால் அதை அறியப் புரிய, கலையாக்கமாகப் புனைய தனி ஆற்றல் வேண்டும்” என்று இதை விளக்குகிறார்.

அதுமட்டுமில்லை. “தான் வாழ்கின்ற காலத்தில் தானும் உள்ளிட அடங்கியுள்ள சமூகத்தில் ஏற்படுகிற மாற்றங்களை ஏற்கனவே தானும் தனது சமூகமும் வரித்துக்கொண்ட முன் முடிவுகளுக்கு ஆட்படாமல் திறந்த மனதோடு ஏற்கவும் புரியவுமான மனப்பக்குவமும் அவனுக்கு வேண்டும்” என்றும் தெளிவுபடுத்துகிறார்.

தன் சிந்தனைக்கிசைவாக படைப்பைச் சிறுமைப்படுத்தாது வாழ்வின் உண்மைகள் குறித்தான தேடலுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டியதைச் சொல்கிறார்.

இதன்பொருள், கோட்பாட்டின் தளத்தில் நின்று படைப்புகளை ஆக்க முற்படக்கூடாது என்பதில்லை. தான் நம்புகிற தத்துவத்தை நத்தைக்கூடாக முதுகில் சுமந்தபடி இருப்பதுதான் அந்தப்படைப்புக்கு ஊறு ஏற்படுத்துகிறது. மாறாக, அந்தக் கோட்பாடு படைப்பாளியினுள் கரைந்துவிடும்போது, அதனை நியாயப்படுத்துவதற்கான தந்திங்கள் அவனுக்கு அவசியமற்றுப் போய்விடும்.

அப்படியல்லாமல், கோட்பாட்டினை ஒரு முகமூடியாக, ஒரு சுமையாக சுமந்து திரிபவனுக்குச் சதாகாலமும் அதை நியாயப்படுத்தியபடியே இருக்க வேண்டும்.

இதுதவிர தான் பெற்ற அனுபவத்தை படைப்பிலக்கியமாக்கும் செய்நேர்த்தி ஆற்றலையும் வலியுறுத்துகிறார். வெறும் களிமண்ணை கவினுறு மட்பாண்டங்களாக மாற்றும் குயவன் கை நேர்த்தியுடன் ஒப்பிடுகிறார்.

மூன்றாவாதாக, படைப்பு முழுமையடைவது வாசகப் பங்களிப்பில் என்பதைச் சொல்கிறார். மேலும் மேலும் வாசிப்பினால் ரசனைப் பரப்பை விரிவுபடுத்தியிருத்தலும், வாழ்வூடான அனுபவங்களால் செறிவடைந்திருத்தலும் படைப்புடன் உறவுகொள்ள முக்கியம் என்கிறார். இவ்வாறு படைப்பாளி – வாசக அனுபவங்களின் உறவு மூளையின் நரம்புக் கலங்களில் போதையை விட அற்புதமான உணர்வுகளை உற்பவித்துவிடும் சாகசம் நடந்தேறும் என்கிறார்.

முருகானந்தன், மருத்துவப் பணியோடு இலக்கியத் துறையிலும் ஈடுபாடு காட்டி வருவது குறித்து ஆச்சரியம் கொள்பவர்களுக்கு, மேலும் வியப்பூட்டக்கூடியது, கலையின் பல்வேறு வடிவங்களிலும் அவருக்கிருக்கும் ஆளுமையும் ஆற்றலும், அவற்றிலிருக்கும் ரசனைப் பயிற்சியும். சிறுகதை, கவிதை, நாவல் என்று மட்டுமில்லாது சினிமா பற்றி நுண்ணிய விசேடமான பார்வைகளை முன்வைக்கிறார். அப்படியே ஓவியம் பற்றி, சிற்பக்கலை பற்றி, நாடகங்கள் பற்றி, நடிப்புப் பற்றி, வரலாறு பற்றி, விமர்சனங்கள் பற்றி, உளவியல் பற்றி எல்லாம் கறாரானதும், காலத்தோடு முன்னகர்ந்து வந்ததுமான கருத்துக்களைக் கொண்டவராக இருக்கிறார்.

கே.எஸ்.சிவகுமாரனின் நூலுக்கான அறிமுகத்தில் நல்ல சினிமா என்றால் என்ன, அதனுடைய அம்சங்கள் எவை, அவற்றை நாம் எப்படி ரசிக்க வேண்டும் போன்ற விடயங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை சலிக்காமல் தன்னந்தனியாகத் தொடர்ந்து ஆற்றிவந்த முன்னோடி என்று குறிப்பிடுகிறார்.

இது மட்டுமன்றி, பத்தி எழுத்துக்கள்கூட எப்படி இருக்கவேண்டும் என்று சீரியஸாக யோசித்திருக்கிறார்.

முருகானந்தன் அவர்களின் சினிமா ரசனைக் கட்டுரைகளைப் பார்க்கும்போது, உண்மையில் அந்தப் பணியையும் சிறப்பாகவே தொடரக்கூடியவர் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார். தொலைக்காட்சியில் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த ஒரு படத்தைக்கூட மற்றவர்களுக்கு அழகுற அறிமுகப்படுத்துகிறார்.

“உங்களுக்கு ஒரு நடிகையின் கணவனாக வரவேண்டும் என்ற ஆவல் எப்பொழுதாவது இருந்திருக்கிறதா? அதுவும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியான அழகும் கவர்ச்சியும் நளினமும் நிறைந்த நடிகையின் கணவனாக வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? இன்றில்லாவிட்டாலும் விசிலடித்துத் திரிந்த கட்டிளம் பருவத்திலாவது இருந்திருக்கிறதா? அப்படியாயின் ஆல றகைந ளை ய¦ யுஉவசநளள என்ற ·பிரெஞ்சுத் திரைப்படத்தை ஒருதடவை பாருங்கள். அது உங்கள் மனத்தைத் தயார்ப்படுத்த உதவும்”| என்று ஆரம்பிக்கிறது அந்தக் கட்டுரை.

மரத்தைச் செதுக்கிச் சிற்பமாக்கும் கலையிலும் மனம் தோய்கிறார். அதையே அட்டைப்படமாகவும் தந்திருக்கிறார். அரூப பாணியிலான சிற்பங்களைக் குறிப்பிடுகின்ற போது, “ஒரு நிகழ்வின் தோற்றத்தை மாத்திரமன்றி, அக்கணத்தில் கிளர்ந்தெழுகின்ற உணர்வலைகளையும் சித்தரிக்கும் அற்புதம்” என்கிறார். “மனதிற்குப் பிடிபட மறுத்து, புரிந்துகொள்ள முடியாது நிற்கும் ஒரு சிந்தனையோ காட்சியையோ கருத்தையோ ஒரு படைப்பிற்குள் அடக்க முயலும் கலைஞனின் தேடலிலும் முயற்சியிலும்தான் உன்னதமான கலைப்படைப்பு உருவாகிறது” என்கிறார்.

சிறந்த கவிதை, சிறந்த ஓவியம், சிறந்த நாவல் என்று ஒன்றை நிறுவும் திட்டவட்டமான விதிகள் எதுவும் முழுமையாக இன்றுவரை உருவாகவில்லை. இலக்கிய விமர்சனத்தின் பலநூறு வருட வரலாற்றில், இலக்கியம் என்பது தொடர்ந்து மாறிமாறிப் பலரால் பலவிதமாக விளக்கப்பட்டு வருவதைக் கண்டுவருகிறோம். அதேபோல் ஓவியம் என்ற வரையறையைத் தொடர்ந்து மீறிய படியே உள்ளது ஓவியக்கலை. இதேபோலவே ஏனைய கலைகளும். ஆனாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவரோ பலரோ வைக்கும் விளக்கத்தின் மூலமாக, அந்தக் கலைகுறித்த விளக்கத்தை மேலும் நெருக்கிவிட்டதாக உணர்கிறோம்.

உதாரணமாக, விளக்கத்திற்குப் பிடிபடாமல் நழுவும் ‘கவித்துவம்’ என்பதை முருகானந்தன் இப்படி விவரிக்கிறார். “கவித்துவம் என்பது எந்தக் கட்டுகளுக்குள்ளும் சிறைப்படாத அற்புத அனுபவம். அது வார்த்தைகளால் வரையறுத்துச் சொல்ல முடியாத, வார்த்தைகளின் சேர்க்கை நேர்த்தியால் வாசகனை வசப்படுத்தும் உயர் பண்பாகும். நல்ல கவிதையென்பது, வாசகனின் அக மென்னுணர்வில் எதையாவது, எப்படியாவது, எங்கேயாவது தொட்டுவிட வேண்டிய அனுபவப்பகிர்வாக அமைய வேண்டும். மலருக்கு மணம்போல கவிதைக்கு கவித்துவம் இருக்கிறது…” என்று அதை விளக்கப்படுத்துகிறார்.

அதேசமயம், எல்லா இடங்களிலும் நமது போதாமைகளை வெளிப்படுத்த முருகானந்தன் தயங்குவதில்லை.

நாம் சரியாக இருக்கிறோம் என்ற தன்முதுகுத் தட்டல்கள் ஒருபோதும் நம்மைச் சரிவிலிருந்து எழுப்பப் போவதில்லை. பாராட்டாக எழுதும் முன்னுரைகள் அணி;நதுரைகளில் கூட தன் விமர்சனப் பார்வையையும் அதிருப்தியையும் ஆழுத்திச் சொல்லிய பிறகே பாராட்டைத் தொடர்கிறார்.

தகவத்தின் பரிசுக் கதைகள் பற்றி குறிப்பில் – இக்கதைகளைத் தேர்ந்தெடுக்க உபயோகிக்கப்படும் அளவுகோல்கள் என்ன? அவை யாவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகோல்கள் தானா? தேர்வாளர்கள் எல்லாருமே எல்லா இலக்கியக் குழுக்களின் படைப்புகளையும் திறந்த மனதோடு பார்க்கக்கூடிய நடுநிலையாளர்கள் தானா? போன்ற சந்தேகங்களை எழுப்புகிறார்.

தெணியான் பொதுவாக ஏதாவது ஒரு நல்ல கருத்தை வலியுறுத்துவதற்காகவே கதை எழுதுபவர். அவரது வெற்றிக்கும் தோல்விக்கும் இதுவே காரணம் என்கிறார். தோல்வி என்று முருகானந்தன் கருதுவது பற்றி யோசிக்க வேண்டும்.

கே.ஆர்.டேவிட், வாசகர்களுக்கு எதிர்பாராத, அதிர்ச்சியூட்டும் முடிவைக் கொடுக்க வேண்டும் என்ற தவிப்பில் கதைகளின் உண்மைத் தன்மையைச் சிதைத்து விடுவதாகக் குறிப்பிடுகிறார்.

மக்களின் அவல வாழ்க்கையை மட்டுமல்லாமல் அவர்களின் அறியாமையை, அசட்டுத்தனங்களை, அசிங்கங்களையும் கூட கதையாக்கியிருப்பதற்காக ந.சண்முகரத்தினத்தைப் பாராட்டுகிறார்.

மொத்தத்தில் முருகானந்தன் அவர்களின் ஆதங்கங்களும், ஈழத்து இலக்கியம் – நம்மை நாமே ஊதிப் பெருப்பித்துப் பேசிக் கொண்டிருக்குமளவுக்கு உன்னதங்களைத் தொட்டிருக்கிறதா என்னும் கேள்வியும் முக்கியமானவை. எங்கள் போதாமைகள் குறித்து அவர் கவனப்படுத்துகின்ற குறிப்புகள் நம் தீவிர சிந்தனைக்குரியவை.

இன்றைய வாசக மனதின் தேடல்களுக்கு திசைகாட்டி உதவுவதாகவும், கலையின் நுட்பங்களுக்குள் ஊடுருவிச் செல்ல பயிற்சிதரும் அறிமுகமாகவும் இந்தநூல் பயன் கொண்டிருக்கிறது. மிக மென்மையாகவும் மனதைக் கவரும் விதமாகவும் பல விஷயங்களை மனதில் பதிய வைத்துவிட முடிகிறது முருகானந்தன் அவர்களுக்கு.

“நானே அறிந்தவன், பிறருக்கு நிர்ணயிக்கக்கூடியவன், நானே மேலானவன் என்னும் மனப்போக்கு கொண்ட எழுத்தாளர்களோ, அவனது பாத்திரங்களோ சந்தேகத்திற்கு இடமானவர்கள்” என்பார் அமெரிக்க எழுத்தாளரான லெஸ்லி ·பீட்லர். தன்முனைப்புத் தவிர்த்த எழுத்தைக் காண்பது சிரமசாத்தியமான ஒரு சூழலில் னுச. முருகானந்தனின் எழுத்துக்கள், அதிகாரமற்ற நடையாலும், அழகாகச் சொல்லும் முறையாலும் வாசக மனதை மலர்வித்து ஆசுவாசம் தருகின்றன. மென்மை, நுட்பம், இனிமை என்று விரிந்து, உண்மையே கலையின் அழகினை தீர்மானிப்பதென்று வாதிடுகின்றன. இலக்கியம் வெறும் சாய்வுநாற்காலியல்ல, அதேசமயம் நெம்புகோல் ஆவதுமில்லை என்பதை உணர்த்துகின்றன. இலக்கியத்தின் நோக்கம், மானுடவாழ்வு குறித்த உண்மையைச் சென்று தொடுவதாகத்தான் இருக்கும் என்று வலியுறுத்தி நம்பிக்கையளிக்கின்றன. புத்தகமாக்கி அளித்திருக்கும் மீரா பதிப்பகத்தினருக்குப் பாராட்டைச் சொல்ல வேண்டும்.

முன்னட்டை- விஸ்வலிங்கத்தின் “காவடியாட்டம்” மரச்சிற்பத்தின் புகைப்படம். இச்சிற்பம் நூலாசிரியரின் வீட்டை அலங்கரிக்கிறது. பின்னட்டை- தீருவிலில் அமைந்திருந்த போராளிகளின் சிலை. ஓவியரும் சிற்பியுமான ரமணியின் படைப்பு. இது 1996 இலங்கை இராணுவத்தால் நிர்மூலமாக்கப்பட்து.

விமர்சனம்:- சிதம்பரப்பிள்ளை சிவகுமார்.
நூலாசிரியர்:- டொக்டர் எம்.கே.முருகானந்தன்.
0.00.0

Read Full Post »

அண்மையில் ஒரு ஆய்வுக் கட்டுரையைப் படித்தபோது நினைவுகள் என் குழந்தைப் பருவத்தை நோக்கித் துள்ளிச் சென்றது. சின்னப்பையனாக மஹரகஹவில் வாழ்ந்த போது நாங்கள் இருந்த வீட்டின் வளவிற்குள் சிறிய செடிகள் அரும்பி நிற்கும். நானும் எனது தங்கையும் அவற்றின் தளிர்களை முறித்து வாயில் போட்டுச் சப்புவோம். சற்றுக் காரணமும் நறுமணம் சேர்ந்து வரும்.

ஆம் அவை கறுவாக் கன்றுகள்தாம்.

Roscoea purpurea 'Cinnamon Stick'

பொலி சிஸ்டிக் ஓவரிப் பிரச்சனை

Polycystic ovary syndrome நோயால் பாதிக்கப்படும் இளம் பெண்களை இப்பொழுது அதிக அதிகமாகக் காண்கிறோம். மகப்பேற்றுப் பருவத்தில் உள்ள இளம் பெண்களிடையே அதிகமாகக் காணப்படுகின்ற ஒருவகை ஹோர்மோன் குறைபாட்டு நோய் இதுவாகும். இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களின் சூலகத்தின் வெளி ஓரமாக பல சிறிய நீர்க்கட்டிகள் தென்படுவதை ஒட்டியே இந்தப் பெயர் வந்தது.

PCOS-diagnosis

ஸ்கான் பரிசோதனையில் கண்டறியப்படும் நீர்க்கட்டிகளுக்கு இருப்பதற்கு அப்பால் வெளிப்படையான பல்வேறு அறிகுறிகளையும் பிரச்சனைகளையும்; பெண்களிடத்தில் ஏற்படுத்துகிறது. அதற்குக் காரணம் அத்தகையவர்களது உடலில் இன்சுலின் செயற்பாடு சரியாக இல்லாமையே ஆகும்.Insulin Insensitivity  என்பார்கள்.

polycystic-ovary-syndrome-symptomswhat-is-pcos------southern-belle-magazine-tspcpern

அவர்களில் பொதுவாக மாதவிடாய் ஒழுங்காக வருவதில்லை. நீண்ட இடைவெளிகளில் வரும். வந்தாலும் நீண்ட நாட்களுக்கு குருதிப் பெருக்கு தொடரலாம். இவர்கள் அதீத எடையுள்ள பெண்களாக இருப்பர். முகப்பருக்கள் தோன்றுவது அதிகமாக இருக்கும். அத்துடன் ஆண்களைப்போல இவர்களது முகத்திலும் வயிற்றிலும் முடி அரும்புவதையும் காணலாம். மிக முக்கிய பாதிப்பு ஒழுங்கற்ற மாதவிடாயும் குழந்தை தங்குவதில் ஏற்படும் பிரச்சனையும்தான்.

இப் பிரச்சனைகளால் பல பெண்கள் தொல்லைப்படுகிறார்கள். தாங்கள் என்றென்றும் மலடாக வாழ நேருமோ என அஞ்சுகிறார்கள். எதிர்காலத்தில் நீரிழிவையும் இது கொண்டு வருக் கூடும் என்பதால் மேலும் அக்கறை எடுக்க வேண்டியுள்ளது.

upper-body-fat

இதற்கும் கறுவாவிற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

கறுவா ஆய்வு

New York  நகரிலுள்ள Columbia University Medical Center ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி கறுவாவைத் தூள் செய்து குறிப்பிட்ட அளவுகளில் உட்கொள்ளக் கொடுத்தபோது அவர்களுக்கு மாதவிடாய் சற்று ஒழுங்கானது. இதை எடுக்காத பெண்களைவிட இருமடங்கு ஒழுங்காக மாதவிடாய் வந்ததாம்.

இன்றைய காலகட்டத்தில் மகப் பேற்றுப் பருவத்தில் உள்ள பெண்களில் சுமார் 5 முதல் 10 சதவிகிதமானவர்களுக்கு இப் பிரச்சனை இருக்கிறது. அமெரிக்காவில் மாத்திரம் 5 மில்லியன் பெண்களுக்கு இப் பிரச்சனை இருக்கிறது. இலங்கையிலும் பல இளம் பெண்களை இப் பிரச்சனையோடு காண்கிறோம்.

சிகிச்சையைப் பொறுத்த வரையில் இப் பெண்களது எடையைக் குறைத்தல், சூலகத்தில் முட்டை உருவாவதைத் தூண்டும் மருந்தான குளோமிபீன்; கொடுத்தல, இன்சுலின் செயற்பாட்டு தன்மையை அதிகரிப்பதற்காக Metformin ன்ற மருந்தை உபயோகித்தல் போன்றவை பயன்படுகின்றன.

‘டொக்டர் மருந்தை மாறித் தந்து போட்டாரோ’ எனச் சில பெண்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வருவார்கள். காரணம் Metformin என்பது நீரிழிவு நோயாளருக்கும் கொடுக்கப்படும் பிரபல மருந்து என்பதால் ஆகும்.

0

‘கறுவாவின் எந்தச் செயற்பாடானது பொலி சிஸ்டிக ஓவரிப் பிரச்சனை உள்ள பெண்களில் மாதவிடாயை ஒழுங்காக்வதற்கு உதவியது என்பது தெளிவாகப் புரியில்லை’ என்கிறார் ஆய்வின் தலைமை ஆய்வாளரான Dr. Daniel Kort  அவர்கள். ‘அது குளுக்கோஸ் மற்றும் இன்சுலினின் ஆகியவற்றை திறமையாகக் கையாள்வதில் எமது உடலின் செயற்திறனை அதிகரிக்கும் என்கதால் என நம்புகிறேன்’ என மேலும் சொல்லியிருக்கிறார்.

கறுவாவும் நீரிழிவும் மற்றொரு ஆய்வு

இதேபோல முன்பு செய்யப்பட்ட மற்றுமொரு 60 பேரை உள்ளடக்கிய ஆய்வானது கறுவாவிற்கு குருதியில் சீனியின் அளவைக் குறைக்கும் ஆற்றல் இருக்கிறது என்று சொல்லியிருந்தது. அத்துடன் மொத்த கொலஸ்டரோல் அளவைக் குறைப்பதுடன் கெட்ட கொலஸ்டரோலான டுனுடு கொலஸ்டரோல் மற்றும் ரைகிளிசரைட் அளவுகளையும் குறைக்கும் என்றது. ஆனால் வேறு சில ஆய்வுகள் அதை மறுதலித்திருப்பதால் திடமான முடிவு இல்லை எனலாம்.

இப்பொழுது செய்யப்பட்டது மேலும் சிறிய ஆய்வு ஆகும். தெரிவு செய்யப்பட்ட 16 பெண்களில் 11 பேருக்கு தினமும் 1500 மில்லி கிராம் கறுவாத் தூள் மாத்திரை வழங்கப்பட்டது. மிகுதி 5 பேருக்கும் அதே போன்ற தோற்றமுள்ள போலி மாத்திரைகளை கொடுத்தார்கள். தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு கொடுத்தபோது கறுவாத் தூள் கொடுக்ப்பட்ட பெண்களில் மாதவிடாய் பெருமளவு ஒழுங்காகியது.

அது மாத்திரமல்ல அவர்களில் இரண்டு பெண்கள் மேலதிக சிகிச்சைகள் ஏதும் இpன்றிக் கர்ப்பமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மகப் இல்லாத எல்லாப் பெண்களுக்கும் இது உதவுமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் தேர்ந்தெடுத்த பொலி சிஸ்டிக ஓவரிப் பிரச்சனை உள்ள பல பெண்களுக்கு உதவக் கூடும். நிச்சயம் உதவும் என இன்றைய நிலையில் கூறமுடியாது.

இது ஒரு இயற்கையான முறை. அதிக செலவற்றது. சாதாரணமாகக் கிடைக்கும் கறுவாவை அதுவும் அதீதமான அளவில் இல்லாமல் கொடுப்பதால் பாரிய பக்க விளைவுகள் ஏற்படாது என நம்பலாம். ஆனால் அவற்றைத் தான் தோன்றித்தனமாகச் செய்யாது ஒரு மருத்துவரின் கவனிப்பின் கீழ் செய்வதே விரும்பத்தக்கது.

இயற்கை மருத்துவத்தில் கறுவா

சாதாரண வீட்டு வைத்தியத்திலும் இயற்கை மருத்துவத்திலும் கறுவா பயன்படுத்தப்படுகிறது. வயிற்றோட்டம், வயிற்றில் வாய்வு, மாதவிடாய்க் குத்து, தசைப் பிடிப்பு போன்றவற்றிற்கும் உதவும் என நம்புகிறார்கள். பசியைத் தூண்டுவதற்கும் தடிமன், காய்ச்சல் போன்றவற்றிகும் உதவுமாம். கிருமித் தொற்றுக்கு எதிரான ஆற்றலும் இருக்கிறது என சொல்கிறார்கள்.

ஆனால் உற்பத்தியார்கள் இந்த நம்பிக்கைகளையும், முற்றுப் பெறாத ஆய்வு முடிவுகளையம் பாவனைப் பொருள் தயாரிப்புகளில் பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தை அமோகமாகப் பெருக்குகிறார்கள். பற்பசை, சோப், வாய் கொப்பளிக்கும் மருந்துகள், ஓயின்மென்ட், சரும கிறீம்கள், அழகு சாதன பொருட்கள போன்றவற்றில் கறுவா ஏற்கனவே கலந்திருக்கிறார்கள்

கறுவாவை வேறு மருந்துகளுடன் கலந்து கிறீமாகத் தயாரித்து விந்து முந்துதலுக்கு வெளிப் பூச்சு மருந்தாகப் பயன்படுததியதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. விந்து முந்துவது குறைந்ததா அல்லது கறுவாவின் காரத்தால் ஆண்குறியில் எரிவு ஏற்பட்டு சோர்ந்து வீழ்ந்ததா என்பது எனக்குத் தெரியாது.

நீரிழிவு நோய்க்கு உதவும் என்பதால், தங்கள் வழமையான மருந்துகளுடன் கறுவாவை அதிக அளவில் உண்பது ஆபத்திலும் முடியலாம். கறுவாவிற்கு உண்மையில் இரத்த சீனியின் அளவைக் குறைக்கும் ஆற்றல் இருந்தால் அவ்வாறு அதிக அளவில் உண்ணும்போது திடீரென சீனியின் அளவு அதீதமாகக் குறைந்து மயக்கமும் ஏற்படலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்வளவு கறுவா சாப்பிட்டால் எந்தளவிற்கு சீனியின் அளவு குறையும், மருந்துகளுடன் சேர்த்து உண்பதால் பக்கவிளைவுகள் ஏற்படாதா போன்ற விடயங்களில் தெளிவான விடைகள் கிடையாது.

எனவே கறுவாவை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு மருத்துவர்கள் சிபார்சு செய்வது முடியாது.

பக்க விளைவுகள்

சாதாரண அளவில் சமையலில் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் ஏற்படுவதாகத் தெரியவில்லை.

ஆயினும் அதிக அளவில் உபயோகித்தால் வாய் நாக்கு உதடு போன்றவற்றை உறுத்தி சிறு புண்களை ஏற்படுத்தக் கூடும். தோலில் கிறீமாக உபயோகிக்கும்போது தோல் சிவந்து எரிவு ஏற்படலாம்.

கறுவாவை அதிக அளவில் உட்கொண்டால் அது நச்சுத்தன்மையாகலாம். முக்கியமாக ஈரல் நோயுள்ளவர்கள் அதிகம் பாதிப்படைவர்.

நீரிழிவு உள்ளவர்கள் கறுவாவை மருந்துபோல அதிகம் உண்பதால் குருதியில் சீனியின் அளவு குறையலாம் என்பதை ஏற்கனவே கூறினோம்.

ஹோர்மோன அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் மார்பக புற்று நோயுள்ளவர்கள் உட்கொள்வது நல்லதல்ல.

அன்ரிபயோடிக், நீரிழிவு மருந்துகள், இருதய நோய் மருந்துகள், குருதி உறைதலைக் குறைக்கும் மருந்துகள் போன்ற எந்த மருந்துகளையும் தினமும் உட்கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனை இன்றி மேலதிக கறுவா உட்கொளவது நல்லதல்ல.

இறுதியாக

முடிவாகச் சொல்வதானால் கறுவா நல்லது. அதை உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதை மேலதிகமாக ஆக (cinnamon suppliment)  உபயோகிப்பதில் அவதானம் தேவை. மருத்துவரின் ஆலோசனை இன்றி மேலதிகமாக உண்பது நல்லதல்ல. சாதாரண அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதில் தவறல்ல.

பொலி சிஸ்டிக ஓவரிப் பிரச்சனை உள்ள பெண்கள் வேறு நோய்கள் இல்லாதவிடத்து மேலதிக கறுவாவை உட்கொள்வதில் பிரச்சனை இருக்காது. ஆனால் பொலி சிஸ்டிக ஓவரிப் பிரச்சனைக்கும் குழந்தைப் பேறின்மைக்குமான நிச்சயமாகப் பயனளிக்கும் மருந்து என எண்ணி உபயோகிக்க வேண்டாம்.

10260401-christmas-spices-cooking-ingredients-cinnamon-sticks-clove-and-star-anise

மேலும் தெளிவான ஆய்வு முடிவுகள் வரும்வரை உதவக்கூடும் என்று மட்டுமே கூற முடியும். எதற்கும் மருத்துவரின் ஆலோசனையுடன் செயற்படுங்கள்.

மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வெண்டைக் காய் வெள்ளைக் கறியில் இரு கறுவாத் துண்டுகள் தென்பட்டன. சின்ன வயதில் கறுவா சப்பிய அதே மகிழ்ச்சியுடன் அவற்றை வாயில் போட்டுச் சப்பிக் கொண்டேன். அதை உணவில் சேர்க்கும் மனைவியின் கைப் பக்குவத்தை மனதார வாழ்த்தினேன்.

சாப்பாட்டுப் பிரியனாக மட்டுமல்ல. மருத்துவனாகவும் வாழ்த்தியது அதுவாகும்.

எனது ஹாய் நலமா புளக்கில் 20th December 2013 வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0..000

Read Full Post »

சுமதி குகதாசனின் ‘எதனை வேண்டுவோம்’ கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. சென்ற வருடம் தை மாதத்தில் அவரது முதல் நூலான தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா இதே மண்டபத்தில் நடைபெற்றது. இப்பொழுது அவரது இரண்டாவது நூல் வாசகர்களின் கைகளுக்கு வருகிறது.

சுமதி குகதாசன் ஏன் எழுதுகிறார்? ஓன்று அல்லது ஒன்றரை வருட கால இடைவெளிக்குள் ஏன் தனது இரண்டாவது நூலைக் கொண்டு வருகிறார்.

DSC05987-001

காரணங்கள் பலவாக இருக்கக் கூடும். ஆனால் ஒரு வாசகன் என்ற நிலையில் இருந்து நோக்கும்போது அவர் தான் சார்ந்த சமூகத்திற்கு பலவற்றைச் சொல்ல அவாவுகிறார் என்றே எண்ணுகிறேன்.

இவரது முதலாவது நூலை நான் முழமையாக வாசித்திருக்கிறேன். அதைப் பற்றி இம் மேடையில் அப்பொழுது பேசும்போது  அவரது படைப்புகளில் இருந்த 5 முக்கிய விடயங்களைப் பற்றிப் பிரஸ்தாபித்திருந்தேன். அதை ஒட்டிய சில விடயங்களை இப்பொழுது மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

தான் வாழும் சமூகத்தில் அவர்; பல்வேறுவிதமான பாத்திரங்களை வகிக்கிறார். அவ்வப் பாத்திரங்களுக்கு ஏற்ப தனது கருத்துக்களை முன்வைக்கிறார். அவரது பார்வையும் படைப்பாக்கத்தில் சொற் தேர்வுகளும் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு மாறுகின்றன.

  • ஒரிடத்தில் அவர் அன்பும் பாசமும் தெளிவான சிந்தனைகளும் உள்ள தாயாக இருக்கிறார்.
  • மற்றொரு புறம் கடமை உணர்வோடு பணியாற்றிய ஆசிரியையாக இருந்திருக்கிறார்.
  • தனது தந்தையான கார்த்திகேசு மாஸ்டர் ஊடாக முதிசமாகக் கிட்டிய சமத்துவ சமூகம் பற்றிய விரிந்த பார்வையும் முற்போக்கு கொள்கைகளும்; பொதுவுடமைவாதிப் பாத்திரத்தை வகிக்கக் செய்;கின்றன.
  • பெண்களைத் தெய்வமாகச் சொல்லிக் கொண்டே அவர்களை அடக்கி வைக்கும் சமூதாயத்தில் பெண்களின் அடையாளத்திற்காக போராட வேண்டியிருக்கும் பெண்ணியப் என்ற பாத்திரம் மற்றொன்று.
  • இவை எல்லாவற்றிக்கும் மேலாக வாக்கு வாங்கும் நேரம் தவிர்ந்த ஏனைய பொதுகளில் எல்லாம்  வாய் பொத்தப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, கண்கள் தாங்கள் காட்டுபற்றை அல்லாது வேறு எதையும் பார்க்காது மறைக்கப்பட்ட சுதந்திரம் ஒடுக்கட்டட பொதுசனமான வாழ நிர்பந்திக்கபட்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் வகிக்கும் பாத்திரங்களின் குரலை அவரது படைப்பகளுடே பயணிக்கும்போது அவதானிக் முடிந்ததை அந்த நேரத்தில் சொல்லியிருந்தேன்.

தளிர்களின் சுமைகள் என்ற அவரது முதல் நூலில் தாய்மைத்துவ நோக்கு, ஆசிரியத்துவ நோக்கு, பொதுவுடைமை நோக்கு, பெண்ணிய நோக்கு, சாதாரண பொதுமகன் நோக்கு போன்ற போக்குகளை அவதானிக்க முடிந்தது.

இந்த நூலிலும் அவ்வாறு காண முடியலாம். ஆயினும் இந்த நூலுக்குள் நான் முழுமையாக நுழைய போவதில்லை. கவிதை கவிதையாகப் பேசப் போவதில்லை. தலைமையுரைக்கு அது ஏற்றதல்ல. அத்துடன் இந்த நூல் பற்றிப் பேச மேலும் நான்கு பேச்சாளர்கள் இருக்கிறார்கள். நான் படைப்புகள் பற்றி அதிகம் பேசுவது அவர்களது பணிக்கு இடையூறாக இருக்கக் கூடும்.

அத்துடன் கேட்டவற்றை மீண்டும் ஒவ்வொரு பேச்சாளிரிடமும் கேட்க வேண்டிய அலுப்பான நிலையை உங்களுக்கு தர விரும்பவில்லை.
நூலினுடைய பெயர் ‘எதனை வேண்டுவோம்’ என அமைந்திருக்கிறது. அதைப் பற்றியே பேச எண்ணியுள்ளேன். மிக அருமையான தலைப்பு. ஆழமாகச் சிந்திக்கக் கூடியது. நூலின் தலைப்பாக ஏன் இதைத் தேர்ந்தெடுத்தார்.

இவரது ஒரு கவிதை இதே தலைப்பைக் கொண்டுள்ளது. 45 ம் பக்கத்தில் வருகிறது. தனக்குப் பிடித்த ஒரு கவிதையின் தலைப்பையே நூலுக்குக் கொடுத்திருக்கிறார் எனச் சொல்லலாமா? ஆதற்கு அக் கவிதையை நுணுகிப் படிக்க வேண்டும்.

ஆனால் அக் கவிதை என்ன சொல்கிறது என்பது பற்றி இங்கு எதுவும் சொல்லப் போதில்லை.ஆய்வுரை நடாத்த உள்ளவர்கள் தெளிவு படுத்துவார்கள்.

இருந்த போதும் நூல் முழுவதும் அவர் காண விரும்பும் சமூதாயம் பற்றியே நூலின் தலைப்பான எதனை வேண்டுவோம் பேசுகிறது எனக் கொள்ளலாம்.

நூலின் அட்டையில் ‘வேண்டுவோம்’ என்ற சொல்லைக் கண்டதுமே எனது உள்ளம் பாரதியை நோக்கியே ஓடியது. அவனது புகழ் பெற்ற கவி வரிகளில் நனைந்து நின்றது. மகிழ்ந்தது.

‘எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்த நல்லறிவு வேண்டும்; ….’ என்ற பாரதியின் வரிகள் உங்களுக்கும் நினைவில் வந்திருக்கவே செய்யும்.

வேண்டுதல் என்ற சொல் எமது வாழ்வில் நிதமும் பாவனையில் உள்ள ஒரு இனிய தமிழ் சொல்லாகும். அதனை நாம் பல்வேறு சந்தர்பங்களில் பல பொருள்படப் பயன்படுத்துகிறோம். பழம் தமிழ்க் கவிதைகளிலும் இச் சொல் இடம் பெற்றுள்ளது.

வள்ளுவரும் அச்சொல்லைக் குறளில் அதுவும் முதல் அத்தியாத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார்.

‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல’.

என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் வள்ளுவர் சொல்வது மனிதர்களின் வேண்டுதல் பற்றியது அல்ல. கடவுளைப் பற்றியது. கடவுள் என்பவருக்கு வேண்டியது எதுவும் இல்லை. வேண்டாததும் எதுவும் இல்லை என்பது அவரது கருத்து. கடவுள் ஒருவர் இருக்கிறாரா? அவரைப் பின் பற்றினால் துன்பம் வருமா வராதா என்பவை பற்றி அவர் சொன்னவை இவ்விடத்தில் முக்கியமானவை அல்ல.

உண்மையில் வேண்டுதல் என்றால் என்ன?

ஆன்மீக விடயங்களை விடுத்து நாளாந்த வாழ்வை எடுத்துக் கொண்டால் வேண்டுதல் என்பதை இவ்வாறு விளக்கலாம்? எமக்கு ஒரு தேவை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அல்லது பல தேவைகளாகவும் இருக்கலாம். அவற்றில் இலகுவாக பெற முடியாதவையாக இருக்கும். திட்டமிட்டு அவற்றைப் பெறுவுதற்கான உறுதியை நாம் எடுப்பதையே வேண்டுதல் எனக் கொள்ளலாம்.

திட்டமிட்ட திடமான உறுதி என வேண்டுதலைச் சுருங்கச் சொல்லலாமா?

வேண்டுதல்கள் ஆளுக்காள் வேறுபடும்.

ஞானியர்களுக்கு முக்தி பெறுவது வேண்டுதலாக இருக்கலாம், குழந்தையற்ற தம்பதிகளுக்கு மகப் பேறு வேண்டுதலாக இருக்கலாம், வேலையற்றவனுக்கு தொழில் வாய்ப்பு வேண்டுதலாக இருக்கலாம். உங்களுக்கு எனது தலைமையுரை விரைவில் முடிய வேண்டும் என்பது வேண்டுதலாக இருக்கலாம்.

வேண்டுதல்கள் பலவாக இருப்பது போலவே அதை நிறைவேற்றும் வழிகளும் பலவாகலாம்.

தமது தேவைகளைத் தாமே நிறைவேற்ற முடியும் எனத் தம்மில் நம்பிக்கை இல்லாதவர்கள் அர்ச்சனை செய்தும், காவடி, துலாக்காவடி, அங்கப் பிரதட்சனை போன்ற நேர்த்திக் கொண்டும் பெற முயல்வதும் வேண்டுதல்க்ளதாம். எனவே பெரும்பாலானவர்களுக்கு வேண்டுதல் என்பது இறைவனை அல்லது தங்களை மீறிய சக்தியை நாடுவதே வேண்டுவதாகவே இருக்கிறது.

பில்லா 2 வெற்றிக்காக அஜீத் திருப்பதியில் – வேண்டுதல் என்று ஒரு முறை பத்திரிகையில் படித்தேன். ரசிகர்கள் இன்னும் ஏடாகூடமாக பல வேண்டுதல்கள் வைப்பதை தமிழக பத்திரிகைகளில் பார்க்கலாம்.

இத்தகைய வேண்டுதல்கள் தர்க்கபூர்வமானவையா? அறிவியல் சார்ந்தவையா?  இல்லை என்பது பலரதும் நம்பிக்கை.

அறிவியலை ஒரு புறம் தள்ளுங்கள். ஒரு ஆன்மீகவாதியாக இருந்த கொண்டு இறைவனிடம் வேண்டுதல் செய்வது ஏற்புடையதா?

இல்லை என ஆணித்தரமாக விடை சொல்லியவர் பலராலும் மதிக்கப்படும் ஒருவர். இளைஞர்களின் புரட்சிக் கனவாக ஒரு காலத்தில் இருந்தவர். அவர் வேறு யாருமல்ல சுவாமி விவேகானந்தர் ஆகும். அவர் சொல்லியது என்ன?

‘கடவுளிடம் ஒன்றையும் வேண்டாதீர்கள்.
வேண்டுதல் ஒரு பலவீனம்.

இதனால், நாம் பிச்சைக்காரர்களாகி வருகிறோம்.
நாம் அனைவரும் ராஜகுமாரர்கள் என்பதை உணர்ந்து கொள்வோம்’;.

எவ்வளவு அற்புதமான ஆணித்தரமான தெளிவான வார்த்தைகள். மற்றவரிடம் வேண்டும்போது அது இறைவனாக இருந்தால் கூட எமது தன்னம்பிக்கையை இழந்து விடுகிறோம். கெஞ்சுகிறோம், இறைஞ்சுகிறோம், கை நீட்டுகிறோம். பிச்சைக்காரர்கள் ஆகிவிடுகிறோhம் என்கிறார் விவேகானந்தர்.

நவயுகக் கவியான பாரதி என்ன சொல்கிறான்?

பாரதியின் கவிதைகளைப் படித்தால் அவற்றில் பல இடங்களில் வேண்டுதல்கள் அடிநாதமாக இருப்பதை அவதானிக்கலாம். அவன் காலத்தில் அவன் வாழ்ந்த சூழலில் வேண்டுதல் அவனுக்கு பல வேண்டுதல்கள் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் அவனது வேண்டுதல்கள் தனது சுய லாபத்திற்கதனவை அல்ல. பொருளாதராத் தேவைக்களுக்கனவை அல்ல.

‘..மதி
மூடும் பொய்மை இருள் எல்லாம் – எனை
முற்றும் விட்டு அகல வேண்டும். பாரதி

என்கிறான். மதியை மூடும் பொய்மையை வி;ட்டு விலகி அறிவொளி வேண்டிப் பாடுகிறான். அதுவும் தனக்கானதுதானே என்று நாம் எண்ணலாம். ஆனால் பாரதி அதற்கு அப்பாலும் செல்கிறான். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்காக மட்டுமின்றி ஏனைய பூச்சி புளுக்கள், விலங்குகளுக்காகவும் பாடுகிறான். அதற்கும் அப்பால் புல், பூண்டு, மரங்கள் யாவற்றிற்காகவும் வேண்டுகிறான்.

”பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள். புல், பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும்’

என்கிறார் பாரதி.

வேண்டுதல்களில் இருவகை என்பதை ஆரம்பத்தில் சொன்னேன். ஓன்று தனக்கு அப்பால் உள்ள அல்லது தனக்கு மேம்பட் சக்தியை தனது தேவைக்காக வேண்டுவது. இரண்டாவது தானே அதைச் செய்து முடிப்பேன் என உறுதி கொள்வது. ‘என் வினையால் இடும்பை தீர்ந்தே..’ என்ற சொற்பிரயோகத்ததை கவனத்தில் வைத்திருங்கள்.

உண்மையில் இந்த இரண்டு வித வேண்டுதல்கள் யாவுமே ஒரு விதத்தில் நம்பிக்கைகள்தாம். ஓன்று நான் செய்து முடிப்பேன் என்பதாகும் மற்றது இறைவனின் துணையுடன் செய்து முடிப்பேன் எனபதுதானே. இருந்தாலும் நம்பிக்கைகள் மட்டும் எந்தக் காரியத்தையும் வெற்றி பெறச் செய்ய முடியாது. கடவுள் செய்வார் என வாழாதிருந்தால் எதையும் அடைய முடியாது. கடவுள் கைவிட்டார் என கடவுளையும் நோகவே நேரும்.

எனவே நம்பிக்கையால் மட்டும் எய்த முடியாது. எதற்கும் முயற்சி அவசியம். தனது ஆற்றலை நம்பி, தனது முழு முயற்சியையும் பிரயோகித்து வைராக்கியத்துடன் முயற்சி செய்பவனே வேண்டுதலை அடைய முடியும்.

பாரதி இறை நம்பிக்கை கொண்டவன். ஆனாலும் தனது ஆற்றலிலும் சற்றும் குறையாத உறுதி கொண்டவன். அது இந்த வரிகளில் வெளிப்படுகிறது.

‘..தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’
ஆம் பாரதி தெளிவாகவே சொல்லுகிறான். ‘வீழ்ந்து விட மாட்டேன் என உறுதியோடு சொல்கிறான்.

சுமதி குகதாசன் மகாகவி பாரதியில் பற்றுக் கொண்டவர். தனது கவிதையிலேயே பெருங்கவிஞன் என்று பாடுகிறார். அவரது வேண்டுதல் எவ்வாறு இருக்கிறது.

‘அகமது சொல்லின்’ என்ற தலைப்பிட்ட தனது உரையில் இவ்வாறு சொல்கிறார். ‘இங்கு மக்கள் சிந்தனையில் மாற்றம் தோன்றச் செய்யப்பட வேண்டும். இதற்காக கடவுள் விதியை நம்பாதவர்களாக இருப்பவர்கள் வல்லமை விதிப் பிரயோகத்தின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தியே தீர்வுகளைக் கண்டறிய முடியும்’ என்கிறார். அதாவது எமது முயற்சிகளே முக்கியம் என்பது தெளிவாகிறது.

மற்றொரு இடத்தில் கவிதை வரிகளாகவும் எண்ணித் துணிந்த வாழ்வை வலியுறுத்துகிறார்.

எண்ணித்
துணிந்தவன்
வாழ்வு
ஏற்றம் நிறைந்ததாய்
ஆகும்.

சுமதி குகதாசனின் கவிதைகள் மேல் தட்டு கீழ் தட்டு எனும் வர்க்க பேதம் அழிய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். மக்களிடம் சிந்தனை மாற்றத்தை வேண்டி நிற்கிறார். அதை அடைய தன்னம்பிக்கையை வலியுறுத்துகிறார்.

அடக்கப்பட்ட மக்களின் குரலாக எழுகின்றார். அவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும், எல்லோரும் எல்லாமே பெற வேண்டும் என்ற இலட்சியத்துடன் இவரது படைப்புகள் அமைகின்றன. படைப்புலகில் மேலும் பல நூல்களுடன் முன்னோக்கி நகர வேண்டும், வளமான எதிர்காலம் அமைய வேண்டும் என வாழ்த்தி எனது தலைமை உரையை நிறைவு செய்கிறேன்.

DSC05963-001

சுமதி குகதாசனின் ‘எதனை வேண்டுவோம்’ கவிதை நூல் வெளியீட்டு  விழாவில் (06.10.2013) நான் ஆற்றிய தலைமையுரை

0.0.0.0.0

Read Full Post »