Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஏப்ரல், 2014

‘இதிலை இருக்கிற அவ்வளவு வருத்தமும் எனக்கு இருக்கு’ என்றவள் தனது கைப்பையைத் திறந்தாள். நீண்ட தூரம் பயணித்து வந்திருந்த பெண் அவள்.

அவளது கைப் பையிலிருந்து வெளிவந்தது பொக்கிசம் போல பொத்தி வைத்திருந்த ஒரு பொருள்.

வேறொன்றும் இல்லை. சென்ற வார வீரகேசரியின் ஒரு பக்கம். ‘கை கால்களில் விறைப்பு எரிவு வலிகள் வருவது எதனால்;?’ என்ற கட்டுரை அதில் இருந்தது.

‘கைகால்களில் எரிவு, மேல் எரிவு, நெஞ்சு எரிவு, வயிற்றெரிவு எரியாத இடமே இல்லை’ என்றாள். மேலும் விசாரித்தபோது ஏற்கனவே பலரிடம் மருந்து எடுத்திருந்தமை தெரியவந்தது.

தலைக்கான சீரீ ஸ்கான், வயிற்றரை ஸ்கான், இரைப்பையில் குழாய் விட்டுப் பார்க்கும் endoscopy பரிசோதனை தைரொயிட் பரிசோதனை, குருதியில் B12 பரிசோதனை என ஏராளமான பரிசோதனைகள் செய்து பல மருந்துகளும் உட்கொள்கிறாள்.

‘நோய்கள் குறைஞ்சு கூடுகிறதே ஒழிய மாறுகிறபாடாக் காணவில்லை’ எனச் சலித்துக் கொண்டாள் கணவன் இறந்து பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிக்கத் தனியே வாழும் பெண். ஓன்று போக மற்றொரு பிரச்சனை மாறி மாறிப் பிறந்து கொண்டே இருக்கிறது.

மற்றவர் நடு வயதுக்காரன். மிக மெலிந்த உடலும் சோர்ந்த முகமுமான அவரை மனைவி அழைத்து வந்திருந்தாள். ‘எதுவுமே ஏலுதில்லை என்று வீட்டோடு கிடக்கிறார். கடைக்குப் போறதில்லை. நான்தான் கடையையும் பார்த்து வீட்டு வேலைகளையும் பார்க்க வேண்டிக் கிடக்கு. சீனி டயபட்டிஸ், ரீபி (TB) என்று எந்த ஒரு சீரியசான பிரச்சனையும் கிடையாது என்று டொக்டர் சொன்னவர்’

ஏதாவது கான்சராக இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு. ஆனால் நல்ல காலம் அவ்வாறு இருக்கவில்லை. ‘ ஒண்டுமே ஏலாமல் கிடக்கு. படுத்துக் கிடக்க வேணும் போலை கிடக்கு. படுத்தாலும் நித்திரை வருகுதில்லை. ஞாபகம் மறதியும் கூடிப்போச்சு’ என அனுங்கினார்.

‘மகளுக்கு கலியாணம் வருகுது. இந்த மனிசன் இடிச்ச புளி மாதிரி மூஞ்சையை நீட்டிக் கொண்டு இருக்குது’ எனக் கணவனை திட்டினாள் மற்றொரு பெண். பிடிக்காத கலியாணம் அல்ல. இவர்களாக மனம் பிடித்து ஏற்பாடு செய்ததுதான். ஆனால் அதிலையும் இவருக்கு சந்தோசத்தைக் காண முடியாதிருக்கிறது. எதுவுமே இவருக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.

மனச் சோர்வு

மேற் கூறிய இவை எல்லாமே மனச்சோர்வின் அறிகுறிகள்தான். மருத்துவத்தில் depressive disorder என்பார்கள். ஆண் பெண் இருபாலாரிலும் ஏற்படும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை. இருந்தபோதும் பெரும்பாலான நோயாளிகளுக்கு தாம் மனச்சோர்வு நோயினால்தான் பாதிக்கப்பட்டிருக்pறோம் என்பது புரிவதில்லை.

கைகால் உழைவு, மேல் எரிவு, வயிற்று எரிவு, சோர்வு, இயலாமை, தூக்கக் குறைபாடு அல்லது அதிகரித்த தூக்கம், பசியின்மை அல்லது கூடுதலான பசி, முதுகுவலி, உடல் வலிகள், தலைக்கனம், மறதி, என உடலில் பல்வேறு துன்பங்களுடன் மருத்துவர்களிடம் வருவார்கள். தீர விசாரிக்காவிடில் மருத்துவர்களும் ஏமாற நேரிடும்.

முக்கிய அறிகுறிகள் மூன்று

 

பல்வேறு அறிகுறிகள் இருந்தாலும் அடிப்படையான மூன்று முக்கிய விடயங்கள் இருக்கிறதா என மருத்துவர்கள் ஆராய்ந்து பார்ப்பார்கள்.

  1. மனநிலை மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கும். எந்நேரமும் மிகவும் கவலையோடு இருப்பார். உற்சாகம் அறவே இருக்காது. எதிர்காலம் இருண்டு போனதான உணர்வு ஏற்படக் கூடும்.
  2. எதிலும் மகிழ்ச்சி இருக்காது. ஆர்வம் அற்றுவிடும். எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விடயம் நிகழ்ந்தாலும் அதிலும் மகிழாது விடுபட்டவர் போல இருப்பார். வழமையாக நண்பர்கள் உறவினர்களுடன் மகிழ்ந்திருக்கும் வழக்கமுள்ள அவர் இப்பொழுது அவற்றில் சந்தோசம் அடையமாட்டார். தனிமையை நாட வைக்கும். பாலுறவு பாகற்காயாக் கசந்து ஈடுபடுவது அரிதாகும். இயலாமற் போவதும் உண்டு.
  3. மிகுந்த சோர்வாக இருப்பார். அல்லது களைத்தது போல இருப்பார். உடல் தளர்ந்து இயங்க முடியாதது போல உணர்வார்.

இந்த மூன்றில் குறைந்தது இரண்டு அறிகுறிகள், அதுவும் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து இருந்தால்தான் அதை மனச்சோர்வு என மருத்துவர்கள் கணிப்பார்கள்.

ஏனெனில் திடீரென ஏற்படும் நெருங்கியவரது மரணம், பிரிவு, பொருளாதார இழப்பு போன்ற இழப்புகளும் சோகங்களும் இத்தகைய மனநிலையை ஏற்படுத்தவே செய்யும். ஆயினும் அவை நாளோட்டத்தில் மறந்து மறைந்துவிடும். வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

ஆனால் மனச்சோர்வு அவ்வாறு எளிதில் மாறாது. நீண்ட நாட்களுக்குத் தொடரும்

மேலே கூறிய முக்கிய அறிகுறிகளுக்கு அப்பால் வேறு பல சிறிய அறிகுறிகளும் மனச்சோர்வு நோயாளிகளிடம் ஏற்படலாம்.

ஏனைய அறிகுறிகள்

தூக்கக் குழப்பம் முக்கிய அறிகுறியாகும்.

  • பொதுவாகச் சோர்வாக இருப்பதால் படுக்க வேண்டும் போல இருக்கும்.
  • ஆனால் தொழில் மற்றும் குடும்பக் கடமைகள் காரணமாக அந்நேரம் படுக்க முடியாதிருப்பதால் உற்சாகம் குறையும்.
  • படுத்தாலும் ஆழ்ந்த உறக்கம் கிட்டாது. அதிகாலையில் முழிப்பு வந்துவிடும்.
  • ஆனாலும் எழுந்திருக்க முடியாத சோர்வு படுக்கையில் கிடக்கச் சொல்லும்.
  • சிலர் நித்திரை வராவிட்டால் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். அல்லது எழுந்து நடப்பார்கள். வேறு படுக்கையில் கிடந்து பார்ப்பார்கள்.
  • காலையில் எழுந்திருக்க மனம் வராது. மேலும் படுத்திருக்க வேண்டும் போலவும் இருக்கலாம்.
  • ஆனால் ஒரு சிலருக்கு தூக்கம் அதிகமாவதும் உண்டு.

பொதுவாகச் சிந்தனையை ஒருமுகப்படுத்தவோ எதிலும் கருத்தூன்றிச் செயற்படவோ முடியாதிருக்கலாம். இதனால் திடமான முடிவுகள் எடுக்க முடியாது திணறும் நிலை ஏற்படும். வழமைபோலத் தனது தொழிலில் ஈடுபடுவதைப் பாதிக்கும். வேலை இழப்பு, பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். மறதியும் சேர்ந்து வருவதுண்டு.

தன்னம்பிக்கை குறையும். ஆற்றாமை மிகும். எதுவும் தன்னால் செய்ய முடியாது என்பது போன்ற உணர்வு ஏற்படலாம். உதவியற்று நட்டாற்றில் தான் கைவிடப்பட்டதாகத் தோன்றும்.

மாறாக சிலருக்கு குற்றவுணர்வு எற்படுவதுண்டு, தானே தவறிழைத்தவன், செய்ய வேண்டிய கடமையைச் செய்யாத, செய்ய முடியாத பாவி எனத் தன்னைத்தானே பிழை சொல்லி துன்பப்படுவதும் உண்டு..

உணவு விடயத்தில்; 

  • பொதுவாக நாட்டமின்மை ஏற்படும்.
  • பசிக்காது, பசித்தாலும் உண்ண மனம் வராது.
  • இவை காரணமாக உடல் மெலியும் வலு குறையும்.
  • உளச்சோர்வுடன் உடற் சோர்வும் இணையலாம்.
  • மாறாக ஒரு சிலரில் அதீத பசி எற்படுவதுண்டு.
  • தமது இயலாமையை உடற் பலயீனம் எனக் கருதி அதிகம் உண்பவர்களும் உண்டு.
  • தமது மனஉணர்வைப் புரிந்து கொள்ளாமல் எதையாவது வாயில் அடைய வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இதனால் எடை அதிகரிக்கலாம்.

காரணம் புரியாது நீண்ட நாட்களாகத் தொடரும் உடல் உழைவு, கைகால் பிடிப்பு, தசைக் குறண்டல், தலையிடி போன்ற தெளிவற்ற அறிகுறிகளுடனும் மனச்சோர்வு நோயாளர்கள் மருத்துவரை நாடுவதும் உண்டு.

மிக ஆபத்தானது தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருவதாhகும். வாழ்வின் மீதான பற்றின்மையும் குற்றவுணர்வு போன்றவையும் தற்கொலை எண்ணங்களுக்கு வித்திடுவதுண்டு. உடல் எரிவு என்ற பிரச்சனையுடன் வந்த அந்தப் பெண் ‘ நான் ஏன் உயிரோடை இருக்கோணும் என்ற யோசினை வருகுது’ என்று சொன்னவுடன் நான் உசாரானேன். நோயினால் வரும் உணர்வு அது, அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதை அவளுக்கு விளக்கி தீவிரசிகிச்சையை ஆரம்பித்தேன்.

இருந்தபோதும் நேரிடையாகக் கேட்கும்போது தற்கொலை எண்ணங்களை பல நோயாளிகள் மறுத்துவிடுவதுண்டு. அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு இடையேயான உணர்வுகளை வைத்து மருத்துவர்கள் நோயை இனங்காண நேரும்.

தமது உடல் நோய்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது போல தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் மற்றவர்களுடன் பகிரும் வழக்கம் எமது சமூகத்தில் இல்லை என்பதே இதற்குக் காரணம் ஆகும்.

மனதில் ஏற்படுகிற கவலை, துன்பம், ஏக்கம் போன்ற உணர்வுகளை வைத்தியர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமே தங்களது பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்,

இறுதியாக

  • மனச்சோர்வு என்பது தலையிடி பிரஸர் நீரிழிவு போல மற்றொரு நோய்தான்.
  • சீனி, கொலஸ்டரோல் உப்பு போன்ற இரசாயனங்களால் எவ்வாறு நோய்கள் ஏற்படுகிறதோ அதே போல மூளையில் உள்ள சில இரசாயன மாற்றங்களால் தோன்றுவதுதான் மனச் சோர்வு நோய்.
  • தானே தேடிக் கொண்டது என வெட்கப்பட வேண்டிய வியாதி அல்ல.

இதற்கான நல்ல சிகிச்சைகள் இருக்கின்றன. சிறப்பான மருந்துகள் உள்ளன. பூரண குணம் கிடைக்கும். 

ஆயினும் 

  • இதற்கான சிகிச்சையை குணம் கண்டவுடன் நிறுத்தக் கூடாது.
  • பொதுவாக குணம் கணட பின்னரும் மூன்று மாதங்கள் வரை தொடர்ந்தால்தான் மீளவும் வராது தடுக்க முடியும்.
  • எனவே தாங்களாக மருந்தை நிறுத்தக் கூடாது.
  • பொதுவாக மருத்துவர்கள் மனச்சோர்விற்கான மருந்துகளைத் திடீரென நிறுத்துவதில்லை. படிப்படியாகக் குறைத்தே நிறுத்துவார்கள்.
  • எனவே மருத்துவர் சொல்லும் வரை தொடர வேண்டும்.

(இலங்கை குடும்ப மருத்துவர்கள் சங்கத்தின் ஆதரவில் ஹோட்டல் ஜானகியில் நோர்ட்டிஸ் நிறுவனத்தின் அனுசரணையில் நடந்த கருத்தரங்கில் களனி பல்கலைக்க கழக விரிவுரையாளரும் மனநல மருத்துவருமான Dr.Shehan Williams ஆற்றிய உரையின் உந்துதலில் எழுதப்பட்ட கட்டுரை இது)

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

நீங்கள் எவ்வாறு மரணமடைய விரும்புகிறீர்கள்

மரணத்தை நெருங்குபவர்களைப் பராமரித்தல்

‘நீங்கள் எவ்வாறு மரணமடைய விரும்புகிறீர்கள்’

‘சாவா எனக்கா’ என இந்தக் கேள்வியைக் கேட்டதும் பயந்தவிடாதீர்கள். அல்லது ‘எனக்கு வயசு கொஞ்சம்தானே. இதை பற்றி யோசிக்க இன்னமும் கன காலம் கிடக்கு’ என்று சொல்லி விடயத்தை விட்டு நழுவி ஓடப் பார்க்காதீர்கள். எல்லோரும் அறிய வேண்டிய விடயங்கள் பற்றியதுதான் இக்கட்டுரை.

hands-in-prayer

மரணத்தைத் தள்ளிப் போடும் வழி வகைகள் பற்றிய விஞ்ஞான ரீதியான ஆய்வுத் தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. ஆனால் அவை எதிலும் திடமான முடிவுகள் எதுவும் கிட்டவில்லை. மாறாக எந்த ஒரு விஞ்ஞானியும் மரணம் இல்லாத வாழ்வு பற்றிப் பேசவே இல்லை. ஏனெனில் எந்த ஒரு உயிருக்கும் மரணம் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வந்தே தீரும். அதனால்தான் ‘ஐஞ்சிலும் சாவு நூறிலும் சாவு’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

மரணங்களின் வகைகள்

மரணங்கள் எப்படி வரும்? நோயுடனும் வரலாம். நோய்கள் எதுவும் வெளிப்படையாக தெரியாத போதும் வரலாம். நோய் எதுவும் அடியோடு இல்லாதபோதும்; வரலாம். நோயுடன் போராடி அது முற்றிய நிலையிலும் வரலாம்.

எவ்வாறாயினும் மரணங்கள் மூன்று வகையில் வரும் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

  1. எதிர்பாராத திடீர் மரணம்(Sudden death) –  மாரடைப்பு, கடுமையான ஸ்ரோக், விபத்து போன்றவை இதில் அடங்கும். அண்மைக் காலங்களில் ஊடகங்களில் வெளிவரும் விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் மரணங்கள் பெரும்பாலும் சடுதியான இருதய நிறுத்தம் (ஊயசனயைஉ யசசநளவ) காரணமாகவே நிகழ்கின்றன.
  2. ஏற்றமும் இறக்ககுமும் கொண்ட படிப்படியான வீழ்ச்சியைத் தொடர்ந்து திடீர் மரணம்.;.( Slow decline, Periodic Crisis, Sudden death) அல்ஸை}மர் நோய், இருதய வழுவல், சிறுநீரக வழுவல், போன்றவை இரண்டாவதில் அடங்கும். நோய் தீவிரமாகி மருத்துமனை செல்வது, சுகமாகி வீடு திரும்புவது. சிறிது காலம் சுகம். மீண்டும் சுற்று வளையும் ஆரம்பிக்கும். திடீரெனத் தீவிரமாகி மரணம் கிட்டும்.
  3. நிதானமான சரிவின் முடிவில் குறுகிய கடும் நிலையுடனான மரணம் (Steady decline, Short terminal phase).  மூன்றாவதில் பெரும்பாலான சிகிச்சை பலனளிக்காத புற்று நோய்கள் அடங்கும். படிப்படியாக நோய் அதிகமாகி எதுவித நல்ல திருப்பமும் இன்றி மரணமடைவார்கள்.

இந்த மூன்று வகைகளில் உங்கள் தேர்வு எதுவென யாரைக் கேட்டாலும் நிச்சயமாக சடுதியாக ஏற்படும் மரணம் என்ற விடைதான் வரும்.

‘தூங்கும் போது மரணம் வர வேண்டும். பேசிக் கொண்டு இருக்கும்போது வர வேண்டும். விளையாடிக் கொண்டிருக்கும போது, படம் பார்க்கும்போது, பாடிக்கொண்டிருக்கும்போது, தொழில் செய்து கொண்டிருக்கும்போது சைக்கிள் ஓடும்போது’ என நான் வினவிய ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்தமானவற்றைச் சொன்னார்கள்.

ஆனால் அத்தகைய் மரணங்கள் மிகக் குறைவாகவே ஏற்படுகின்றன. நூறு பேரில் பத்துப் பேருக்கு மட்டுமே அவ்வாறு நிகழும் என அறிக்கைகள் சொல்கின்றன. மிகுதி 90 சதவிகிதத்தினருக்கும் அத்தகைய பாக்கியம் கிட்டாது.

மரணத்துடனான போராட்டம் அதிகரிப்பு

இன்று பெரும்பாலானவர்கள் நீண்ட நாட்களுக்கு மரணத்துடன் போராட வேண்டியுள்ளது. 10 சதவிகிதத்தினர் மட்டும் சடுதியாக இறந்துவிட மீதி 90 சதவிகிதத்தினரும் நோய்களுடன் வாழ்ந்து, வலிகளுடனும் இயலாமைகளுடனும் போராடி மற்றவர்கள் உதவிகளில் தங்கியிருந்து படிப்படியாகவே மரணத்தைத் தழுவுகிறார்கள்.

AlcestisHerculesLeighton

இதற்குக் காரணம் என்ன? எமது சராசரி வாழ்வுக் காலம் அதிகரித்துள்ளது. 1900 களில் பெரும்பாலானவர்கள் 40-50 வயதிற்கு முன்னரே மரணத்தைத் தழுவனார்கள். 1960 களில் இது 55 முதல் 58 வரை இருந்தது. ஆனால் இன்று 75 வரை வாழ முடிகிறது. வயது முதிரும்போது நோய்களின் தாக்கம் அதிகரிப்பதாலேயே மரணம் துன்பமாக மாறுகிறது.

மலேரியா, கொலரா, சயரோகம், வயிற்றோட்டம் போன்ற தொற்று நோய்கள் காரணமாகவே எமது முன்னோர்கள் பெரும்பாலும் இளவயதிலேயே மரணத்தைத் தழுவினார்கள். பெண்களுக்கு மகப்பேறு மறுபிறப்பாக அச்சம் தந்தது. மாறாக இன்று அதிகரித்த மருத்து வசதிகளும் அன்ரிபயோடிக் பாவனையும் இளவயது மரணங்களைக் குறைத்துவிட்டன.

மரணம் பற்றிய பலரது அச்சத்திற்குக் காரணம் மரணத்தை நோக்கிய நோய்களுடனும் இயலாமைகளுடனுமான துயரமான நீள் பயணம்தான். உண்மையில் மரணம் துன்பமானது அல்ல. மரணத்தைக் கொண்டு வரும் நோய்களுடன் போராட நேர்வதே துன்பமானது.

அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

மரணத்தை நெருங்கும் நோயாளிகள், மற்றும் நடமாட முடியாமல் படுக்கையிலிருக்கும் நோயாளிகள் எதி;ர் கொள்ளும் பிரச்சனைகள் பல விதமானவை.

Palliative-Care

உடல் ரீதியான பிரச்சனைகளே பலவாகும். கடுமையான வலி, மூச்சு எடுப்பதில் சிரமம், உணவு விழுங்குவதில் சிரமம், பேச முடியாமை, பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீர் சிந்தல், சிறுநீர்க் குழாயுடன் துன்பம், சிலரால் நடக்க முடியாமல் போய்விடுவதுண்டு. இதனால் ஆறாத படுக்கைப் புண்கள் ஏற்படுதல் என அவர்களது பிரச்சனைகளைச் சொல்லி அடங்காது.

spectrum-of-palliative-care

பொருளாதாரப் பிரச்சனை மற்றொரு புறத்தில் தாக்கும். இலங்கையில் மருத்துவம் இலவசமான போதும் பல மருந்துகள் அரச மருத்துவ மனைகளில் கிடைப்பதில்லை. அவற்றை வாங்கப் பணம் வேண்டும். அடிக்கடி மருத்துவ மனை செல்வதற்கான போக்குவரத்து செலவு, விசேட உணவுகளுக்கான பணம், உதவியாளர் தேவை எனில் அதற்கான செலவு. இவற்றால் பொருளாதார பலம் இல்லை எனில் மரணத்தை நோக்கிய வாழ்வு கட்டுபடியாவதில்லை.

இயலாமையில் வாடும்போது தனிமைப்பட்டுப் போதல் மிகவும் துன்பமானது, வெளியார்கள் சந்திப்பது குறைந்துவிடும். வீட்டில் உள்ளவர்களும் அத்தகையவர்களுடன் கதைத்து பொழுது போக்குவது அரிதாகிவிடும். இதனால் தனிமையும் மன உளைச்சலும் வாட்டி வதைக்கும். ‘ஒரு சொல் பேசமாட்டார்களா’ என உளம் ஏங்கும்.

உணர்வு ரீதியான பாதிப்புகளும் அதிகம் ஏற்படுகின்றன. நோயும், தனிமையும் இயலாமையும் தோழமை கொள்ளும்போது கவலை, ஏக்கம், கோபம், மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உணர்வு வெளிப்பாடுகள் அதிகரிக்கும்.

இறை வணக்கம் செய்ய முடியாமை, மதக் கடமைகளை பூர்த்தி செய்ய முடியாத ஏக்கம், மதத் தலைவரைச் சந்திக்க முடியாமை போன்ற மத ரீதியானதும், ஆன்மீக ரீதியிலான குறைபாடுகளும் இருக்கலாம்.

உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவர் உதவுவார்கள். ஆனால் தனிப்பட்ட ரீதியானதும் சமூகரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு அவரது குடும்பத்தவர்களாலும் சுற்றத்தவர்களாலுமே வழங்க முடியும். மருத்துவருடன் மற்ற எல்லோரும் இணைந்த செயற்திட்டமே வேண்டப்படும்.

உபாதைகளையும் துன்பத்தையும் நீக்குவது

மருத்துவர்கள் நோய்க்கு மருத்துவம் செய்பவர்கள். அவற்றைக் குணமாக்குபவர்கள். ஆனால் எல்லா நோய்களையும் முற்றாகக் குணமாக்க முடியாது. பிரஷர். நீரிழிவு, கொலஸ்டரோல் போன்றவற்றை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும் கட்டுப்படுத்தலாம்.

Palliative-Care

குணமாக்க முடியாதவை பல. சிகிச்சை பயளிக்காத புற்றுநோய்கள் அவற்றுள் முக்கியமானது. சிறுநீரகம், ஈரல், சுவாசப்பை, மூளை போன்றைவை இயங்க முடியாமல் போவதும் காரணங்களாகும். சிறுநீரக வழுவல், பக்கவாதத்தால் கடுமையாகப் பாதிக்கபட்டவர்கள், அல்ஸீமர் போன்ற முதுமை நோய்களும் இதில் அடங்கும்.

நோய் தணிப்பு பாராமரிப்பு 

ஆம் அவர்கள் மரணம் நெருங்கிவரும் நோயாளிகள். அவர்களால் வழமைபோல இயங்க முடியாது. இவை முற்றாகக் குணப்படுத்த முடியாத நோய்களாக இருந்த போதும் ‘உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது’ என மருத்துவர்கள் கைவிரித்துவிட முடியாது. ‘சாகப் போகிறவர்தானே நடப்பது நடக்கட்டும்’ என உறவினர்களும் வாழாதிருக்க முடியாது. அது மனிதாபிமானம் அற்றது.

அதனால் அவர்களைப் பராமரிப்பது அவசியம். அவர்களது உடல் உபாதைகளைத் தணித்து, அவர்களது மனக் கவலைகளை அக்கறையோடு அணுகுவதுதான் ‘நோய் தணிப்பு பாராமரிப்பு’ (Palliative care) என்கிறார்கள்

நோய் தணிப்பு பராமரிப்பு பற்றி உலக சுகாதர ஸ்தாபனம் கூறுவது இது

‘உயிராபத்து நிலையில் உள்ளவர்களும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எதிர்கொண்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும். அவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதனை தெளிவாக மதிப்பீடு செய்வதும்;, அதற்கான உடல் உள ஆன்மீக ரீதியான ஆறுதலைத் தருவதாகும்.’

செய்ய வேண்டியவை எவை

நோய் தணிப்பு பராமரிப்பின் போது எவற்றை நாம் வழங்க முடியும்?

  • வலி மற்றும் துன்பம் அளிக்கும் எல்லா அறிகுறிகளுக்கும் நிவாரணம் அளிப்பதே முக்கியமாகும். வாழ்க்கை என்பது நிஜம் என உறுதிப்படுத்தும் அதே நேரம் மரணம் என்பது இயல்பானது தவிர்க்க முடியாதது என்பதை அவருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் உணர்த்த வேண்டும்.
  • இந்தப் பராமரிப்பு முறையானது மரணத்தை விரைவுபடுத்துவது அல்லது ஒத்தி வைப்பதற்கானது அல்ல என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
  • நோயாளிகளின் உளவியல் மற்றும் ஆன்மீக அம்சங்களையும் அக்கறையோடு கவனிக்க வேண்டும்.
  • நோயாளிகள் இறக்கும் வரை, முடிந்த அளவு அவர் இயங்குவதற்கு ஆதரவும் உதவியும் அளிக்க வேண்டும்.
  • நோயாளியின் துன்பத்தையும் அதைக் கண்டும் தீர்க்க முடியாத கையறு நிலையில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு அதைச் சமாளிப்பதற்கான ஆதரவை அளிப்பதும் அடங்கும்.

இவற்றைச் செய்வதற்கு மருத்துவர், மதகுரு, பிசியோதிரபிஸ்ட், தாதியர், உளவளத் துணையாளர், ஏனைய வழிகளில் உதவக் கூடிய தொண்டர்கள் போன்றவர்கள் இணைந்த குழு அணுகுமுறை உதவும்.

இவற்றைச் செய்வதன் மூலம் நோயாளியின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுடன், நோயின் தாக்கத்தில் சாதகமான மாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.

குடும்பத்தில் சுற்றாடலில் உங்களுக்கும்…

இவை யாவும் மரணத்தை எதிர்நோக்கும் மனிதரை மனிதாபத்துடன் அணுகவும் வேதனையின்றி இருக்கும் வகையில் பராமரிக்கவும் அவசியமானவையாகும்.

இதற்கான தேவை உங்கள் சுற்றாடலில் ஏற்படலாம், அல்லது உங்கள் குடும்பத்திலேயே எழலாம்.

இறுதியில் ஒருநாள் உங்களுக்கும் தேவைப்படலாம் என்பதை மறவாதீர்கள். எனவே மற்றவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்பட இன்றே ஆரம்பியுங்கள்.

0.0.0

இலங்கை குடும்ப மருத்துவ கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நோய் தணிப்பு பராமரிப்புக்கான (certificate course in Pallative Care) இரு முழு நாள் சான்றிதழ் கற்கை நெறி சென்ற 18ம் 19ம் திகதி சனி ஞாயிறு தினங்கள்pல் கொழும்பு லங்கா கொஸ்பிட்டலில் (அப்போலோ மருத்துவமனை) நடைபெற்றது.

பிரதம விரிவுரையாளரான டொக்டர் சுரேஸ்குமார், கேரள மாநிலத்தின் கலிகட் நகரில் உள்ள நோய் தணிப்பு பராமரிப்பு நிறுவனத்தின் இயக்குனர். உலக சுகாதர நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெறும் நிறுவனமாகும்.

டொக்டர் சந்தியா புதூர் முத்துமான மற்றும் டொக்டர் மொகமட் சைய்பு ஆகிய இரு விரிவுரையாளர்களும் இந்தப் பயிற்சி நெறியை மிகச் சிறப்பாக நடாத்தினர்.

அக் கற்கை நெறியில் கலந்து பெற்ற அறிவு மற்றும் உணர்வின் உந்தலில் எழுதப்பட்ட கட்டுரை இது.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.00.00.0.0

 

Read Full Post »

முகத்தில் சிரிப்பு… மூளையின் தெறிப்பு…

“சிரிப்பு வருது சிரிப்பு

இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு ..”

நீங்களும் இப் பாடலைக் கேட்டு இரசித்திருக்கக் கூடும். வயிறு குலங்கச் எம்மைச் சிரிக்க வைத்துக் கொண்டே சாகச் சரிப்பென்றும், சங்கீதச் சிரிப்பென்றும், அசட்டுச் சரிப்பென்றும், ஆணவச் சிரிப்பென்றும், சிரிப்பை வகைப்படுத்திக் காட்டியவர் மூத்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் ஆகும். அத்துடன் நின்றுவிடாது சிரிப்பின் சிறப்புகளையும் சிரித்துக் கொண்டே தனது பாட்டூடே எடுத்து காட்டியிருக்கிறார்.

laughter

விஞ்ஞான உலகு இப்பொழுதுதான் விழித்துக் கொண்டு சிரிப்புப் பற்றிப் பல ஆய்வுகளைச் செய்து அதன் சிறப்புகளை கண்டறிய முற்படுகிறது.

சிரிப்பு ஒரு சமூக செயற்பாடு

Business people-showing teamwork

சிரிப்பு என்பது சொற்களின் பங்களிப்பற்ற மனிதத் தொடர்பாடலின் ஒரு வடிவம் எனலாம். மனிதர்கள் தினமும் சராசரியாக 17 தடவைகள் சிரிக்கிறார்களாம். ஆனால் குழந்தைகள் 350 தடவைகளுக்கு மேல் சிரிக்கிறார்களாம்.

‘நீங்கள் எதற்கெல்லாம் சிரிக்கிறீர்கள்’ என்று வினவப்பட்டால் விடை என்னவாக இருக்கும்? நகைச்சுவைகளைக் கேட்டுச் சிரிக்கின்றோம் என்கிறார்கள் பலர். ஆனால் அது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை.

laughter vv

இதற்குக் காரணம் என்ன? தனியேயிருந்து ஒரு ஜோக்கை படித்து அல்லது பார்த்துச் சிரிப்பதைவிட, மற்றவர்களுடன் உரையாடும்போதே மனிதர்கள் அதிகம் சிரிக்கிறார்கள் என்கிறார் நரம்பியல் விஞ்ஞானியான Robert Provine.

அதாவது சிரிப்பானது தன்னளவானது என்பதை விட சமூக ஊடாடலுடன் கூடிய செயற்பாடாகவே பெரும்பாலும் இருக்கிறது. ஒரு விடயத்தையிட்டு நாம் தனியாக இருக்கும்போது சிரிப்பதைவிட மற்றவர்களுடன் கூடியிருக்கும்போது முப்பது மடங்கு அதிகமாகச் சிரிக்கின்றோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்;.

எத்தகையவர்களுடன் நாம் கூட இருக்கின்றோம் என்பதும் சிரிப்பின் அளவைத் தீர்மானிக்கிறது. எமக்கு விரும்பமானவர்களுடன் சேர்ந்திருக்கும்போதும், எம்மை அவர்கள் விரும்ப வேண்டுமென நாம் நினைப்பவர்களுடனும் கூடியிருக்கும்போதும் சிரிப்பு அதிகமாக வருகிறது.

சிரிப்பு ஆய்வு சிரிக்க சிரிக்க ஆய்வு

posed laughter

இவ்வருட Summer Science Exhibition 2012  ல் இது பற்றிய ஆய்வு நடைபெற்றது. எதிரொலி எழும்பாத முiயில் அமைக்கப்பட்ட அறையிலேயே இது நிகழ்த்தப்பட்டது. பல்வேறு விதமான, வித்தியாசமான சிரிப்புகளை இங்கு ஆய்வு செய்தார்கள். தன்னிச்சையாக எழுகின்ற சிரிப்பு, ஒருவர் தான் சிரிக்க விரும்பாத வேளையிலும் சிரித்தல், வலுக்கட்டாயமாகச் சிரித்தல், சிரிப்பதாக வெளிக்காட்டும் தோரணை (posed laughter), போன்ற பல வகையான சிரிப்புகள் இங்கு ஆய்வு செய்யப்பட்டது.

உங்களுக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் செய்து உளமாரச் சிரியுங்கள் என பங்கு பற்றியவர்களுக்குச் சொல்லப்பட்டது. பிற்பாடு தாங்கள் சிரிப்பதாக மற்றவர்களுக்கு வெளிக்காட்டும் வண்ணம் சிரிக்கவும் வேண்டப்பட்டனர்.

உள்ளே என்ன நடக்கிறதெனத் தெரியாமல் வெளியிலிருந்து இச் சிரிப்புகளைப் பார்த்தவர்களால் எது உண்மையான சிரிப்பு, எது போலியான சிரிப்பு என்பதை பெருமளவு சரியாக இனம் காண முடிந்திருக்கிறது. இதற்குக் காரணம் உண்மையான சிரிப்பில் இருக்கக் கூடிய சில தனித்துவமான வெளிப்பாட்டுத் தன்மைகள்தான் என்கிறார்கள்.

“…மனம் கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு..” என எமது கலைவாணர் அன்றே பாடி வைத்தார். இவர்கள் இப்போதுதான் ஆராய்கிறார்கள் என எள்ளுகிறீர்களா?

இப்பொழுது நவீன கருவிகளின் உதவியுடன் விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்த முடிந்திருக்கிறது. ஆனால் ஆதி மனிதனால் கூட உளம் நிறைந்த சிரிப்பையும், வெளிப்பூச்சுச் சிரிப்பையும் தெளிவாக இனம் காண முடிந்திருக்கிறது என்பது உண்மைதான்.

இந்த ஆய்வின் மற்றொரு பகுதியும் சுவார்ஸமானது. இது தரும் செய்தி மேலும் கவனத்திற்குரியது. அச் செய்தி என்ன?

போலிச் சிரிப்பை துருவி ஆராயும் பார்த்திருக்கும் மனம்

‘கவனம்! போலியாகச் சிரியாதீர்கள்.

உங்களுடன் உரையாடிக் கொண்டிருப்பரின் மூளையானது ஏன் இவர் அவ்வாறு போலிச் சிரிப்பில் இறங்கியிருக்கிறார் என்பதை கூர்மையாக ஆராயும். அவரது உள்ளெண்ணம் என்ன என்பதை பகுத்தறிய முனையுமாம்.

இதை எவ்வாறு கண்டறிந்தார்கள். fMRI (Functional magnetic resonance imaging) ஸ்கான் மூலம்தான். இரண்டு விதமான சிரிப்புகளையும் அவதானித்துக் கொண்டிருந்தவர்களின் மூளையின் செயற்பாடுகளை நுணுக்கமாக ஆராயப்பட்டது. வெளிப்படையாகத் தெரியும் மனித நடத்தையின் உள்நோக்கத்தைக் கண்டறியும் மூளையின் குறிப்பிட்ட பகுதியானது போலிச் சிரிப்பை அவதானித்துக் கொண்டு இருந்தவர்களில் அதீதமாகச் செயற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. போலிச் சிரிப்பிற்கான காரணத்தைத் தேடுவதற்காக அந்தப் பகுதி அதிகமாக உழைக்க நேர்ந்திருக்கிறது.

ஆம் மனம்விட்டுச் சிரிப்பது மற்றவர்களை சந்தேகப்பட வைக்காது, உளம் மலர வைக்கும்.

அதே நேரத்தில் போலிச் சிரிப்பானது மற்றவர்களின் மூளையைச் சிந்திக்க வைக்கும்.

போலிச் சிரிப்பு கேடானதா?

நாம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சிரிப்பதானது நாம் மகிழ்ச்சியுடன் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. அவர்களை விரும்புகிறோம் என்பதையும் நாம் அவர்களோடு மனதார இணைந்திருக்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

அதேவேளை வலிந்து சிரிப்பதானது கேடானது என்றும் சொல்ல முடியாது. அது மற்றவர்களுக்குப் போலியாகத் தெரிந்தாலும் அதற்குள் மகிழ்ச்சியளிக்க வேண்டும் என்ற நேர்சிந்தனைச் செயற்பாடு இருப்பதை நினைவு கொள்ள வேண்டும்.

மனித இடைவெளிகளை நிரப்புவது சிரிப்பு

சிரிப்பு என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு என்கிறார்கள் பலர். ‘மனிதனின் முதற் சிரிப்பானது ஆபத்திலிருந்து தப்பி வந்தவன் தன் மன ஆறுதலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆரம்பித்திருக்கலாம் என்கிறார் தத்துவஞானியான John Morreallசிரிக்கும்போது பிறக்கின்ற உளஅமைதியானது உயிரினங்களில் இயல்பாக உள்ளுறைந்திருக்கும் சண்டையிடும் உணர்வைத் தளர வைக்கிறது.

இக் கருத்தின் நீட்சியாகவே சிரிப்பு என்பது மனித அல்லது உயிரினங்களிடையே உறவுகளை ஏற்படுத்துவதையும், வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்கிறார்கள் இன்றைய ஆய்வாளர்கள்.

இதைத்தான் ‘சிரிப்பென்பது இருவர்களுக்கு இடையேயான மிகக் குறைந்த இடைவெளி’ என Victor Borgeசொன்னார் போலும்.

மனித இனத்திற்கே சொந்தமானதா சிரிப்பு

அது சரி. ‘..மனித இனத்திற்கே சொந்தமானது சிரிப்பு..’ என்றும் பாடினாரல்லவா கலைவாணர்.

அது உண்மைதானா?

சில மிருகங்கள் சிரிப்பதுண்டு என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எலிகள், குரங்குகள் மற்றும் நாய்கள் எழுப்புகின்ற சில ஒலிகள் அவை சிரிப்பதை எடுத்துக் காட்டுகின்றன.

3108201125709239210

உதாரணமாக எலிகள் ஒன்றோடு ஒன்று விiயாடும்போது உணர்ச்சிப் பெருக்கில் உச்ச ஸ்தாயில் கீச்செனெச் சத்தமிடுவது சிரிப்பதின் அறிகுறிதான். குரங்குகளும் அவ்வாறே விளையாடும்போது சத்தமிடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

நாய்களின் சிரிப்பை நீங்களே அவதானித்திருகக் கூடும். உங்களோடு விளையாடும்போது அல்லது தன் எஜமானைக் கண்ட மகிழ்ச்சியில் இருக்கும்போது அது வாலைக் குலைத்துக்கொண்டு ஒலி எழும்புகிறது அல்லவா? அதுதான் அதனுடைய சிரிப்பு எனலாம் அல்லவா?

இருந்தபோதும் மிருகங்கள் மனிதனைப்போல போலியாகச் சிரிப்பது அறியப்படவில்லை.

மருந்தாகும் சிரிப்பு

laughter_is_the_best_medicine_poster-r1c23bab37e494f4cbaf6cf1d298573fd_w2q_400

 Laughter is the best medicine என ஆங்கிலத்தில் சொல்வார்களே. அது உண்மையா?

சிரிப்பதானது மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என்பதை பல மருத்துவ ஆய்வுகள் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளன. ஆனால் அதைப் பற்றி இங்கு பேச அவகாசமில்லை.

இருந்தபோதும்…

“.சிரி.. சிரி.. சிரிசிரியெனச் சிரி….” என ஆளவந்தானில் கமல் பாடுகிறாரே.

அதுபோல ‘கலகலவெனச் சிரி கண்ணில் நீர் வரச் சிரி…’;

சிரித்திருப்போம். மகிழ்ந்திருப்போம். நலமடைவோம்.

எனது ஹாய் நலமா புளக்கில் (27.10.2013) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

 

0.0.0.0

Read Full Post »

‘இவ்வளவு நாளும் ஓடி ஓடி உழைச்சாச்சு. போதும் என்று ஆகிவிட்டது. இனி வீட்டோடை கிடக்கப் போறன். இதுவரை பார்க்காத ரீவி சீரியலுகளைப் பார்த்து நெட்டிலும் உலாவுவன். கட்டிலும் கதிரையும் எண்டு சந்தோசமாக இனி இருக்கப் போறன்.’

agia-efimia-old-people (1)

மனைவியும் ஒத்துப் பாடினா ‘ஓம் பாவம் அவர். வேலை வேலை என்று ஓடித் திரிஞ்சார். பிள்ளைகளையும் கரை சேர்த்தாச்சு. இனியாவது பேசாமல் ஓய்வா வீட்டை இருக்கட்டும்’ என்றாள்.

அவர் ஒரு முதியவர். ஆனால் தளர் வயசு அல்ல.  வயசு 65 தான் ஆகிறது.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அவருக்கு இனி முழு ஓய்வு தேவையா? வீட்டோடு பேசாது கிடந்தால் மகிழ்ச்சியும் நலமான வாழ்வும் கிட்டுமா?

“இல்லை” என்கிறார்கள் சுவீடிஸ் தேசத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.

ஆண் பெண் என 3800 பேரை 12 வருடங்களாக அவதானித்த ஆய்வு இது. Swedish School of Sport and Health Sciences ;  the Karolinska Institute, in Stockholm இணைந்து செய்த ஆய்வு இது. அவர்கள் அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். 1937, 1938 ம் ஆண்டுகளில் பிறந்தவர்கள்.

அந்த வயதினருக்கும் உடற் பயிற்சி அவசியம். பக்கவாதம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க வேண்டுமாயின் அவர்கள் வாழாதிருக்கக் கூடாது. வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்வது, தரையை மொப் பண்ணுவது கூட்டுவது போன்ற ஏதாவது உடலுழைப்புடன் கூடிய வீட்டு வேலைகளில் தினமும் கட்டாயம் ஈடுபட வேண்டும்.

Three seniors doing tai chi on the beach

அவ்வாறு உற்சாகமாக சுறுசுறுப்புடன் சிறு சிறு வேலைகள் என்று செயற்பட்டுக் கொண்டே இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு

  • எதுவும் செய்யாது வாழாதிருப்பவர்களை விட பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்பு 27 சதவிகிதம் குறைவாகும்.
  • அத்துடன் அவர்கள் எந்தக் காரணத்திலாவது மரணமடைவதற்கான சாத்தியம் 30 சதவிகிதம் குறைவாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

செயற்பட்டுக் கொண்டே இருப்பதானது சும்மா இருக்கும் நேரத்தைக் குறைக்கிறது. சும்மா இருத்தல் என்று சொல்லும்போது கதிரையில் உட்கார்ந்திருப்பதையே குறிப்பிடுகிறேன். பல வயதானவர்கள் வீட்டோடு முடங்கிவிடுகிறார்கள்.

நகர்ப்புற வாழ்க்கை முறையும் காரணம் என்பது உண்மையே. சிறிய வீடுகள். அதற்குள்ளேயே சமையல் குளியல், சாப்பாடு, பொழுதுபோக்கு என எல்லாமே அடங்கிவிடுகிறது.

டெலிபோனில் ஓடர் கொடுத்தால் பத்திரிகை முதல், மளிகைப் பொருட்கள், தேவையானால் உணவு என எல்லாமே டெலிவரி ஆகிவிடுகிறது. கடைக்குப் போக வேண்டியதும் இல்லை. பத்திரிகை படிக்க வாசிகசாலை செல்ல வேண்டியதில்லை. டெலிபோன் லைட் பில்லுகளை ஒன் லைனிலேயே செட்டில் பண்ணிவிடலாம்.

எனவே பொழுது போக்கு என்பது ரீவி பார்ப்பது, அல்லது கணனியில் மூழ்குவது என்றாகிவிட்டது. அதுவும் இல்லையானால் போனில் அலட்ட வேண்டியது. ரீவி சனலை ரிமோட்டிலேயே மாற்றிவிடலாம். டெலிபோன் பேச எழுந்து செல்ல வேண்டியதில்லை கைபேசிகள் கைவசம் உண்டு.

அவ்வாறு சும்மா இருந்தால் சுகமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் உள்ளுற நோய் பெருகி மரணம் நெருங்கி வரும். அதைத் தடுப்பதற்காகவே தாத்தாக்களும் பாட்டிகளும் சோர்ந்துவிடலாகாது.

caregiver-brusing-teeth

இவ்வாறு சோர்ந்து விடாது செயற்பட்டுக் கொண்டே இருப்பதானல் கிட்டும் நன்மைகளாவன, அவர்களது வயதைப் பொறுத்த வரையில் முறையான உடற் பயிற்சிகள் செய்வதற்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதன் அர்த்தம் உடற் பயிற்சிகள் அவசியமில்லை, சும்மா இருக்காது செயற்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமே போதும் என்பதாக அர்த்தப்படுமா?. இல்லை.

“எமது ஆய்வின் பிரகாரம் தினசரி உடற்பயிற்சிகள் செய்வதுடன், சுறுசுறுப்பாக ஏதாவது செய்து கொண்டிருப்பவர்களுக்கு பக்கவாதம் மாரடைப்பு போன்றவை வரக் கூடிய சாத்தியங்கள் மேலும் குறைவாகும்” என்கிறார் ஆய்வாளரான Ekblom-Bak.

தினசரி உடற் பயிற்சியானது எவருக்கும் அவசியமானதே. வேகநடை, யோகாசனம், சைக்கிள் ஓடுதல், நீச்சல், போன்ற பலவும் நல்லவையே. ஆனால் அவற்றில் நாம் 30 நிமிடங்கள் முதல் 1 மணித்தியாலயம் போன்ற குறுகிய நேரம் மட்டுமே செலவழிக்கிறோம். மிகுதி நேரம் சும்மா இருப்பதை விட ஏதாவது வேலைகளில் ஈடுபட வேண்டும். இதனால் உடல் உறுப்புகள் அனைத்துமே இயங்கிக் கொண்டிருக்கும்.

உண்மையில் மனித உடலானது சும்மா இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல. அது தொடர்ந்து செயற்படுவதற்கவே உருவமைக்கப்பட்டது. எனவே அதை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் முதுகுவலி, முழங்கால் தேய்வு, தசைகள் சுருங்குதல் போன்ற இன்னும் பல இயற்கைத் தேய்மானப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

பொதுவாக வயதாகும்போது உடலின் செயற்பாடுகள் சற்று குறையவே செய்யும். நடையின் வேகம் குறையும். வேறு வேலைகளும் துரிதமாக நடக்காது. ஆனால் அதற்காக சோர்ந்து முடங்கிவிடக் கூடாது.

“இவவுக்கு வேலை ஒன்றும் கிடையாது. சும்மா சமைக்கிறது, வீடு துப்பரவு பண்ணுவதும் உடுப்புத் தோய்ப்பதும்தான்” என ஒரு கணவன் குறை கூறினார். உண்மையில் காரில் ஏறி வேலைக்குப் போய் அங்கை கதிரையில் இருப்பதைவிட இவரது மனைவி கூடுதலாக வேலை செய்கிறாள்.

“கதிரையில் பொதி போல உட்காரந்திருப்பதை விட வீடு துப்பரவு செய்யும் வேலையின் போது ஆறு மடங்கு அதிகமான கலோரி செலவாகிறது” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வுக் கட்டுரையானது British Journal of Sports Medicine  சஞ்சிகையின் அக்டோபர் 28 இதழில் வெளியாகியுள்ளது.

எத்தகைய நாளாந்த செய்ற்பாடுகள் உதவும் என்பதைப் பற்றியும் அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

  • டெலிபோன் பேசுவதற்கு எழுந்து சென்று ரிசீவரை எடுப்பது
  • ரீவி பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் எழுந்து அங்கும் இங்கும் நடப்பது நல்லது. நிகழ்ச்சிகளின் போது இல்லாவிட்டாலும் விளம்பர இடைவேளைகளை இதற்குப் பயன்படுத்தலாம்.
  • மணித்தியாலயத்திற்கு ஒரு தடவையாவது இருக்கையை விட்டு எழுந்து ஐந்து நிமிட நேரத்திற்கு குறையாது, நின்ற நிலையில் துள்ளிக் குதிப்பது, முழங்காலை மடித்து கீழே இருந்து எழும்புவது போன்ற சிறு பயிற்சிகளைச் செய்யலாம்.
  • இரண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒரு தடவையாவது ஒரு மாடிக்கு ஏறி இறங்குவது
  • வீட்டைக் கூட்டுவது, தரையை மொப் பண்ணுவது

போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். இவை இங்குள்ளவர்களுக்கும் பொருந்தும். இவை தவிர ஒவ்வொருவரும் தங்கள் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற ஏதாவது வேலைகளைச் செய்து தங்கள் உடலை உறுதியாக வைத்திருக்க வேண்டும்.

“இவை எல்லாம் எனக்கு எதற்கு வீடு போ போ, காடு வா வா என்கிற வயது” என்று சொல்லாதீர்கள். அவ்வாறு எண்ணவும் கூடாது. எந்த வயதானாலும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அதுவும் மற்றவர் உதவியை எதிர்பாராது தனது காலில் தங்கியிருப்பதைப் போல வருமா? 

சுதந்திரமும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த முதுமை வாழ்வு வேண்டுமானால் சோர்ந்துவிடல் ஆகாது தாத்தா பாட்டிகளே.

பிள்ளைகளுக்கும் ஒரு வார்த்தை.

“சும்மா இருக்கக் கூடாது என்று டொக்டர் சொல்லிப்போட்டார். வீட்டைக் கூட்டுங்கோ. பானையைக் கழுவுங்கோ. மேசையைத் துடையுங்கோ” என்று எல்லா வேலைகளையும் அவர்கள் தலையில் சுமத்தி விடாதீர்கள். 

சும்மா இருப்பது இள வயதினருக்கு நல்லது எந்த ஆய்வும் சொல்லவில்லை. உற்சாகமும் சுறுசுறுப்பும் என இயங்கிக் கொண்டே இருப்பது எந்த வயதினருக்கும் அவசியமானதே.

எனது ஹாய் நலமா புளக்கில் (06.02.204) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

‘எச்சிலே விழுங்க முடியவில்லை வலி தாங்க முடியவில்லை’ என்று தனது தொண்டையின் இடது புறத்தைப் பிடித்துக் கொண்டு வந்தவள் ஒரு இளம் பெண்.

சாப்பிடும்போது ஏதோ சிக்கிவிட்டதாம்.

 

 

‘வாயைத் திறவுங்கள்’ என்றேன். வெளிச்சத்தில் பார்த்தபோது எச்சில்தான் நிறைந்திருந்தது, வேறு எதையும் காண முடியவில்லை.

எச்சிலை விழுங்கு என்ற போது விழுங்க முடியாது சிரமப்பட்டாள். கொஞ்ச எச்சிலையே விழுங்கினாள் மீதி தொண்டையை மறைத்து நின்றது.

பல முறை முயற்சிக்குப் பின்னர் உட்புறம் தெளிவாகத் தெரிந்தது.

இடது புற டொன்சிலின் மீது ஆடை படர்ந்த மாதிரி ஏதோ சற்று ஆடுவது போலத் தெரிந்தது.

தெளிவாகத் தெரியும் மற்றொரு கணத்திற்காகக் காத்திருந்தேன்.

 



வளைந்த நீண்ட forceps தேவைப்பட்டது .. Nasal forceps பயன்படுத்தினேன்.

துரிதமாக தொண்டைப் பகுதிக்குள் forcrps நுழைத்து எடுத்தபோது ஏதோ வந்தது
மீன் முள்ளுப் போல.

ஆனால் மீன் முள் அல்ல.

 சிக்கன் சாப்பிடும்போது ஒரு சிறிய எலும்புத் துண்டு மாட்டியிருந்தது.

ஒரு கணத்தில் அவளது வலி மறைந்தது

எச்சிலை முழுங்க முடிந்தது.

முகம் மலர்ந்தாள். 

தாயின் முக மலர்ச்சியும் இணைந்து கொண்டது.

இத்தகைய தருணங்கள்தான் மருத்துவப் பணியில் மிகவும் திருப்தியான மனநிறைவைத் தரும் கணங்கள்.

உடனடியாக நோயாளியின் துயர் தீர்ப்பதைவிட வேறு என்ன வெகுமதி மருத்துவனுக்கு கிடைக்கக் கூடும்.

தொண்டையில் அந்நியப் பொருள் சிக்குவது ஒரு மருத்துவ அவசர நிலையாகும். ஏனெனில் அது வழுவி சுவாசக் குழாயினுள் விழுந்துவிட்டால் மூச்சுத் திணறல் ஏற்படும் ஆபத்து உண்டு. 

பொதுவாக குழந்தைகள் பிளாஸடிக் துண்டுகள், சட்டைப் பின்கள், ஸ்டப்ளர் பின், விதைகள், போன்றவற்றை விழுங்கி அவஸ்தைப்படுவார்கள்

பெரியவர்களில் மீன் முள்ளு, எலும்புத் துண்டுகள் சிக்குவதுண்டு.

எதுவானாலும் இருமல் மூச்சுத் திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கச் செல்ல வேண்டும்.

0.0.0

சில நாட்களுக்குப் பின்னர் வேறெருவர் வந்திருந்தார்.
இவருக்கும் ஏதோ தொண்டையில் சிக்கிவிட்டது. மாத்திரை சாப்பிடும்போது கவலையீனமாக இருந்ததில் மாத்திரை அடைத்து வந்திருந்து foil packல் சிறு துண்டு சிக்கிவிட்டதாம்
எவ்வளவோ தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.
சாதாரண வெளிநோயார் பிரிவில் வைத்து பார்க்க முடியாது.ENT நிபுணரிடம் அனுப்ப நேர்ந்தது.. சத்திரசிகிச்சை அறையில் வைத்து எடுக்க வேண்டியதாயிற்று

அவதானம் நண்பர்களே.

எதையும் விழுங்கும்போது கவனமான இருங்கள். குத்தக் கூடியவை, ஒட்டக் கூடியவை தொண்டையில் சிக்கினால் சிரமம்தான்.

 0.00.0

 

Read Full Post »

ஒரு கணம் நிலை தளர்ந்துவிட்டேன். இந்த நடு ஜாமத்தில்இ திசை தெரியாக் காட்டிற்குள் என்னவாகுமோ என மனம் திணறியது. நிலை குலைந்தேன்.

Luxury-Bus-FDG6123-
ஆழ்ந்த நித்திரையில் கிடந்த எனது காதில் கொதிக்கும் எண்ணையைக் ஊத்தியது போலிருந்தது அவனது நிர்த்தாட்சண்யமான இறுகிய குரல்

‘பஸ் பிரேக் டவுனாகிப் போட்டுது. எல்லாரும் உங்கடை சாமான்களுடன் இறங்குங்கோ’

‘மற்ற பஸ் கொழும்பு போக ரெடியா நிக்குது’ என்ற அவனது அடுத்த வாசகம் வயிற்றில் பால் கரைத்து ஊற்றிய நிம்மதியைக் கொடுத்தது.

அந்தர அவதிப் பட்டு தாவி இறங்கியபோது ஏற்கனவே பலர் இறங்கியிருந்தார்கள். டிக்கியில் கிடந்த சாமான்கள் பாதை ஓரமாகக் குவிந்து கிடந்தது.

‘உங்கடை உங்கடை சாமான்களை மற்ற பஸ்சில் ஏத்துங்கோ’ என்று அலட்சியமாகச் சொல்லியபடியே அரை மனதுடன் மாற்றி ஏற்றுவதற்கு உதவியும் செய்து கொண்டிருந்தான்.

‘மற்ற ஆக்கள் உங்கடை சாமான்களோடை அங்காலை நிக்கிற பஸ்சிலை ஏறுங்கோ என்றான்’ இன்னொரு உதவியாளன்.

வீதியின் கரையோரமாக இன்னும் கொஞ்சச் சனம் நிற்பது அப்பத்தான் கண்ணில் பட்டது. கனபேர் இல்லை. மிதமிஞ்சினால் 10-12 பேர் இருக்கும்.

அவர்கள் நாங்கள் வந்த ஏசி பஸ்சில் ஏறிக் குசாலாகப் பயணிக்க இருந்தவர்கள்.

‘சீட் நம்பர் போட்டிருப்பாங்களோ. பழைய நம்பர் சீற் கிடைக்குமோ. அல்லது நின்றபடிதான் மிச்சப் பயணமோ’ சொகுசுப் பயணத்திற்கு அல்லாடியது மனம்.

நல்ல வேளை சீட் கிடைத்தது.

உள்ளே போய் உட்கார்ந்து உடல் ஆறிய போது ‘ஏமாத்திப் போட்டாங்கள்’ மனம் சொல்லியது.

இது நாங்கள் வந்தது போன்ற வசதியான பஸ் இல்லை. சாதாரண 600 ரூபா டிக்கற் பஸ். நல்ல சீற்றுகள் இல்லை. அதை அட்ஜஸ்ட் பண்ணி காலைக் கையை நீட்டி நிம்மதியாகத் தூங்க முடியாது. ஏசியும் கிடையாது.

ஜன்னலுக்கால் வீசும் காற்று ஆளை எதிர்ப்பக்க ஜன்னலால் வெளியே தூக்கி எறிந்துவிடும் போலிருந்தது.

‘காலம்பிற வேலைக்குப் போகோணும். வசதியான பஸ் என்றால்தான் கொஞ்சம் கண் அயரலாம். அடுத்த நாள் களைப்பின்றி வேலை செய்யலாம்’ என்று எண்ணி சுளையாக 1300 ரூபா கொடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பே புக் பண்ணி வைச்சதை நினைக்க பற்றி எரிந்தது.

பஸ்சில் உள்ள இளசுகள் காரசாரமாக விமர்சித்தார்கள்.

‘பிரேக் டவுண் எண்டு போட்டு யாழ்ப்பாண ஆக்களை அதே ஏசி பஸ்சிலை அனுப்புறாங்கள். கள்ளப் பயலுகளை விடக் கூடாது. காசை வாங்க வேணும்.’

எங்கை வாங்கிறது? எப்படி வாங்கிறது? வெறும் சுடுகாட்டு ஞானம்தான். விடிந்தால் மறந்துவிடுவார்கள்

சரி காசு கிடக்கட்டும்.

ஏன் பஸ் மாத்தினாங்கள்?

‘இரகசியப் புலன் விசாரணை’யில் தகவல் கசிந்தது.

மறு நாள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு 3 பஸ் அளவிற்கு சனங்கள் இருக்குதாம். ஆனால் அங்கை இரண்டு பஸ்தான் நிற்குதாம்.

பிரேக் டவுண் எண்டு பொய் சொல்லி சனங்களை ஏச்சுப்போட்டு அந்த ஏசி பஸ்சை ஊருக்கு திருப்பி அனுப்பிட்டாங்கள். எப்படியாவது வந்து சேர வேணும் என்ற அவசியத்தில் வாயை மூடிக் கொண்டு இவர்கள் பயணத்தை தொடர வேண்டியதாயிற்று.

நடந்ததற்கு ஒரு ‘சொறி’ அல்லது ‘மன்னிக்கவும்’ என்றாவது சொல்லியிருக்கலாம்.

அது ஒண்டும் கிடையாது. பொய் சொல்லி பையை நிறப்பதான் முன் நிற்கிறாங்கள்

அம்மா தாயே. முத்துமாரி மாதாவே. அன்னையே ஏனம்மா சனங்களைப் பேய்க் காட்டுறாய்.

சனங்கள் பேய்ச் சனங்கள் அல்ல. தெளிவாகவே புரிந்திருக்கிறார்கள்.

0.00.0

Read Full Post »

அவருக்கு இருமல். கடுமையான இருமல் அல்ல. வேலைக்குப்; போகிறார். வேலைத் தளத்தில் ஏசீ உள்ளது. இவரால் அங்கு எவருக்கும் தொல்லை இல்லை. அங்கு இருமலே வருவதில்லை. ஆனால் வீடு திரும்பியதும் இருமல் தொடங்கிவிடும். படுக்கச் சென்றால் மிக அதிகம். இரவு இருமல் என்றால் ஆஸ்த்மாவா?

தீர விசாரித்தபோதுதான் காரணம் தெரிந்தது. அவர்களது வீட்டின் காற்றோட்டம் போதுமானது அல்ல. அத்துடன் அந்தக் காற்று மாசடைந்ததாக இருக்கும் என்பது புரிந்தது. வீட்டின் காற்று மாசடைத்தலுக்கு முக்கிய காரணம் புகைத்தலாகும். ஆனால் இவர் புகைப்பதில்லை. வீட்டில் வேறு யாரும் புகைப்பதும் இல்லை.

indoor-air-pollution-1

வீட்டின் உற்புறக் காற்று மாசடைவது என்பது உலகளாவிய ரீதியில் பாரிய சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளது. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் சுவாச நோய்களால் மரணமடைவது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் பெரும்பாலானவை

  • அடுப்புப் புகைகளால் ஏற்படும் மாசுக்களால் ஆகும்.
  • சுகந்த மணத்தை ஏற்படுத்தும் புகைகளும் அத்தகையவையே.

ஆய்வு

வீட்டிற்குள் சாம்பிராணிக் குச்சி போன்ற வாசனை ஊது பத்திகளைக் கொழுத்துவதானது வீட்டின் உற்புறக் காற்றை மாசுபடுத்தி சுவாசப்பையில் உள்ள கலங்களில் அழற்சியை ஏற்படுத்துகிறது என அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.

அரேபிய நாட்டு வீடுகளில் அதிகம் கொழுத்தப்படும் இருவகை சாப்பிராணிகளைப் புகைக்க வைக்கும்போது வெளிவரும் துகள்ளையும் வாயுக்களையும் ஆய்வாளர்கள் இனங்கண்டார்கள்.

பின்னர் மனித சுவாசப் பையின் கலங்கள் வைக்கப்பட்ட அறையில் அவ் வாசனைப் பொருட்களை புகைக்க வைத்தார்கள். அப்பொழுது அந்தக் கலங்களில் ஏற்பட்ட மாற்றங்களானவை சிகரெட் புகைப்பதால் ஏற்படும் மாற்றங்களை ஒத்ததாக இருந்ததைத் கண்டறிந்தார்கள்.

article-1019115-0136A64800000578-617_233x344

Oudh,  Bahkoor  ஆகிய அந்த வாசனைப் பொருட்களில் அகர்வூட் மரத்திலிருந்து எடுக்கபட்டவையாகும். வாசனையைக் கொடுக்கும் சந்தன மரப்பிசின், சில எண்ணெய் வகைகள் போன்றவையும் கலந்திருந்தனவாம். அவற்றை எரிக்கும்போது carbon monoxide, formaldehyde, nitrogen oxides ஆகிய வாயுக்கள் வெளியேறி அறையின் காற்றை மாசடையச் செய்தன.

‘எனவே இவற்றை எரிக்கும்போது வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைத்து அப்புகையை வெளியேறச் செய்து வீட்டின் காற்றை மாசடையாது காப்பது அவசியம்’ என்கிறார்கள்

University of North Carolina at Chapel Hill சேர்ந்த ஆய்வாளர்கள்.
இவர்கள் முன்பு செய்த மற்றொரு ஆய்வானது இந்த சுகந்த மணப் புகைகளால் கண், காது தொண்டை, சருமம் போன்றவற்றில் எரிச்சல், ஆஸ்த்மா, வேறு சுவாச நோய்கள், தலைவலி, இருதய நோய்கள் போன்றவை ஏற்படலாம் என்றது.

உட்புற வளி மாசடைதல்

உட்புற வளி மாசடைதல் என்பது வீட்டு வளி மாத்திரம் அல்ல. வீடு, தொழில் செய்யும் இடம் அனைத்தையும் உள்ளடக்கும்.

உட்புற வளியின் தரம் குறைவடைவதால் கிருமித் தொற்றுகள் ஏற்படுகின்றன. சுவாசப்பை புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அத்துடன் ஆஸ்த்மா போன்ற நீண்டு தொடரும் சுவாச நோய்கள் வருவதற்கான சாத்தியமும் அதிகரிக்கிறது. மூக்கடைப்பு, கண் வரட்சி, ஓங்காளம், களைப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஏற்கனவே சுவாச நோய்கள் உள்ளவளுக்கு அது மோசமாகும்.

இதைத் தடுப்பதற்கு வழி என்ன?

மிக முக்கியமான விடயம் வளியை மாசடையச் செய்யும் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதுதான். அத்துடன் காற்றோட்டத்தை அதிகரித்து சுத்தமான காற்று உள்ளே வருவதற்கான வழிகளை மேம்படுத்த வேண்டும்.
உட்புறக் வளி மாசடைவதற்கான சில முக்கிய காரணங்களைப் பார்க்கலாம்.

உயிரியல் மாசுகள்

பக்றீரியா, வைரஸ், பூஞ்சணம், விலங்கு எச்சங்கள், தூசிப் பூச்சி மற்றும் கரப்பொத்தானின் எச்சங்கள், போன்றவை உயிரியல் மாசு என்பதில் அடங்கும். இவற்றினால் உடலில் கிருமித் தொற்று ஏற்படுகிறது. ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அத்துடன் ஆஸ்த்மா தூண்டப்படுவதற்கும் காரணமாகிறது. இவை சிறிய பிரச்சனை எனச் சிலர் எண்ணினாலும் இவற்றால் வேலை நாட்களில் இழப்பு ஏற்படுகிறது. அத்துடன் பிள்ளைகளின் கல்வியும் பாதிப்படைகிறது.

நாய் பூனை போன்றவற்றை உள்ளே நுளையாது தடுப்பது முக்கியம். அத்துடன் தூசிப் பூச்சியின் தாக்கத்தைத் தடுப்பதற்கு படுக்கை விரிப்பு, தலையணை உறை, துணியாலான கால் மதிகள், மேசை கதிரை விரிப்புகள் ஆகியவற்றை அடிக்கடி தோய்ப்பதுடன் வெயிலில் உலர வைப்பது அல்லது ஸ்திரி போடுவது அவசியமாகும். குப்பை கூளங்களை அகற்ற வேண்டும்.

மறைமுகப் புகைத்தல்

மறைமுகப் புகைத்தல் (Secondhand Smoke)    என்பது ஒளித்திருந்து புகைப்பது என்பதல்ல. தான் புகைக்காவிட்டாலும் சுற்றாலில் மற்றவர்கள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பையே குறிக்கிறது. கார்பன் மொனோ ஒட்சைட், போர்மல்டிஹைட் உட்பட சுமார் 200 மேற்பட்ட புற்றுநோயைத் தோற்றுவிக்கக் கூடிய நச்சுப் பொருட்கள் மறைமுகப் புகைத்தலால் காற்றில் கலக்கின்றன.

tumblr_m514tdcx0K1rwr4hho1_400

அமெரிக்காவில் மட்டும் இவ்வாறு வீட்டு வளியில் கலக்கும் புகையிலைப் புகையினால் 3000 மேற்பட்டவர்கள் சுவாசப்பை புற்று நோயல் இறக்கின்றனராம். அத்துடன் 50000 பேர் இருதய நோய்களால் இறக்கின்றனர்.

குழந்தைகளிலும் இதனால் பாரிய பாதிப்பு ஏற்படுகிறது. நியூமோனியா, சளிநோய்கள், காதில் கிருமித் தொற்று போன்றவை ஏற்படுகின்றன. சிறியவர்களிலும் பெரியவர்களிலும் ஆஸ்த்மா தோன்றுவதற்கும் ஏற்கனவே இருக்கும் ஆஸ்த்மா மோசமடைவதற்கும் மறைமுகப் புகைத்தல் காரணமாகிறது.

இதைத் தடுக்க ஒரே வழி புகைக்காதிருப்பதுதான். அத்துடன் குழந்தைகளுக்கு அருகிலும், வீடு, தொழிலகம், உணவு சாலைகள் போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் புகைக்காதிருக்க வேண்டும்.

எரிப்பதால் வரும் மாசுபாடுகள்

விறகு, காஸ், எண்ணெய், நிலக்கரி, போன்ற எதை எரிப்பதாலும் வெளியாகும், புகை மற்றும் வாய்வுகள் வளியை மாசடையச் செய்யும். அடுப்பு, விளக்கு, குளிர் காயும் இடம் போன்றவற்றிலிருந்து வெளியாகும் புகைகள் உதாரணங்களாகும்.

வெளிப்படையாகத் தெரியும் புகையை விட நிறமும் மணமும் அற்ற வாய்வான கார்பன் மொனோ ஒட்சைட், நைதரன் டை ஒட்சைட் போன்றவை ஆபத்தானவை. தலையிடி, மாறாட்டம், ஓங்காளம், தலைச்சுற்று, களைப்பு போன்ற அறிகுறிகளை கார்பன் மொனோ ஒட்சைட் கொண்டு வரும்.

அதன் செறிவு அதிகமாயின் ஆர்பாட்டமின்றி மரணத்தையும் கொண்டு வரலாம். நைதரன் டை ஒட்சைட் வாயுவால் கண், காது தொண்டை ஆகியவற்றில் அரிப்பு, மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்படும். அத்துடன் கிருமித் தொற்றுகளுக்கும் வித்திடும்.

ரேடன் (Radon)

ரேடான் என்பது கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வளி வடிவக் கதிரியக்கத் தனிமமாகும். இது வீட்டின் சுவர், நிலம், அத்திவாரம், வடிகால்கள் போன்றவற்றில் ஏற்படும் வெடிப்புகளிலிருந்து வெளியேறுகிறது.

Wall-Cracked

இதனால் அமெரிக்காவில் மாத்திரம் வருடாந்தம் 21,000 பேர் சுவாசப் புற்றுநோயால் நோயால் மரணமடைகிறார்கள் என அறிக்கைகள் கூறுகின்றன. எமது நாடுகளில் இது பற்றிய பிரக்ஞையே கிடையாது

ஆஸ்பரோஸ் அல்லது கல்நார்

கூரைத் தகடுகளாக உபயோகிக்கும் ஆஸ்பரோஸ் ஆனது நுண்ணிய நார்களாலானது. இதன் தூசியிலிருந்து ஆஸ்பரோசிஸ் (asbestosis ) எனப்படும் சுவாசப்பை அழற்சி, சுவாசப் புற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது.

asbestos-sheets

இதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்டலாம் என்பதால் அவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்காகவே காலக்கிரமத்தில் மருத்துவப் பரசோதனைகள் செய்யப்படுகின்றன.

Asbestosis, Cancer Asbestos, Mesothelioma Symptoms, Information damage

இன்னும் ஏராளம்

இவற்றைத் தவிர நாளாந்தம் நாம் உபயோகிக்கும் இன்னும் பல பொருட்கள் காற்றை மாசுபடுத்துகின்றன.

ஓட்டுப் பலகை, தளபாடங்கள், தரைக்கம்பளம் போன்றவற்றை ஒட்டுவதற்கு பயன்படுத்தும் திரவத்திலிருந்து வரும் போர்மல்டிஹைட் ஆனது கண்கடி, இருமல், தொண்டை அரிப்பு, சரும அழற்சி, தலையிடி, தலைப்பாரம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

வீடு, கழிப்பறை, சமையலறை போன்ற இடங்களை சுத்தப்படுத்தும் பொருட்கள் Detergents, disinfectant cleaners) கரப்பொத்தான் எலி போன்றவற்றிற்கான கிருமிநாசினிகள், பெயின்ட் வகைகள் போன்றவையும் சூழலை மாசுபடுத்துகின்றன. அவற்றை உபயோகிக்கும் போது பயன்படுத்தும் முறை பற்றி தயாரிப்பாளர் தந்த குறிப்புகளை சரியாகக் கடைப்பிடிக்க வேணடும்.

இறுதியாக

இன்று ஒவ்வாமை எனப்படும் அல்ர்ஜியுடன் தொடர்புடைய நோய்கள் அதிகரித்துள்ளன. கண் கடி, காதுக் கடி, தும்மல், மூக்கால் ஓடுதல், தொண்டை அரிப்பு, இருமல், ஆஸ்த்மா. சருமநோய்கள் யாவும் அதிகரித்துள்ளன. ‘சூழுல் மாசடைகிறது, கவனிப்பார் இல்லை’ என அரசையும் மற்றவர்களையும் குறை கூறுகிறோம்.

எமது சூழலை, எமது வீட்டை, அதன் காற்றை சுத்தமாக வைத்திருக்க நாம் என்ன செய்திருக்கிறோம் என எம்மை நாமே கேட்பது பயனுள்ளது.

வெடிப்புள;ள சுவர்கள். ஜன்னல் பொருத்திய இடத்துப் பிரிவுகள், அழுக்கான பூஞ்சணம் படிந்த சுவர்கள், புகை அடுப்பு, நுளம்புத் திரி, சாம்பிராணிக் குச்சு, கரைந்து உதிரும் பெயின்ட் எனப் பலவற்றையும் அலட்சியம் செய்துவிடுகிறோம். எமது வீட்டின் உட்புற வளியை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அதற்கு விலையாக நோய்களை வாங்க வேண்டி நேரும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்டவருக்கு அதுதான் நடந்தது. படுக்கை அறையும் சுவாமி அறையும் அவர் வீட்டில் ஒன்றே. அங்கு சாம்பிராணி தினமும் கொழுத்திய புகையால் அலர்ஜியாகி இருமல் வந்தது. ஆஸ்த்மாவாக மாறிவிட்டது.
நீங்களும் அவதானமாக இருங்கள்.

எனது ஹாய் நலமா புளக்கில் Nov 19, 2013 வெளியான கட்டுரை

 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0..0.0.0

Read Full Post »

நடக்கும்போது ஓடும்போது அல்லது சாதாரண வேலைகளின் போது கூட சில தருணங்களில் கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டுவிடுவதுண்டு.

 

சுளுக்கு ஏற்பட்டால் அந்த இடத்தில் வீக்கம் எற்படலாம், வலி ஏற்படும், சில நேரங்களில் செம்மை படர்ந்தது போலவும் இருக்கும். அத்துடன் அந்த இடத்தை ஆட்ட அசைக்க முடியாதபடி பிடித்தது போலவும் இருக்கலாம்.

அவ்வாறு கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

American Academy of Family Physicians வழங்கியுள்ள ஆலோசனைகள் இவை. முக்கியமாக ஐஸ் சிகிச்சை அளிப்பது பற்றி வலியுறுத்தியுள்ளார்கள். சுடுதண்ணீர் ஒத்தடம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்

  • சுளுக்கு ஏற்பட்டதைத் தொடரும் அடுத்த மூன்று நாட்களுக்கு  ஐஸ் தண்ணீரில் நனைத்தல், ஐஸ் பக் (ice pack) வைத்தல் அல்லது ஐஸ் மசாஸ் (ice massage) செய்வது அவசியம். அவற்றை செய்வது எப்படி?
  • ஒரு பிளாஸ்டிக் பையினுள் ஐஸ் துண்டுகளை உடைத்துப் போடுங்கள். எடுத்த எடுப்பில் உடனடியாக வலியுள்ள இடத்தில் வைக்க வேண்டாம். முதலில் மெல்லிய நனைந்த துணியினை சுளுக்குப் பட்ட இடத்தின் மீது விரித்துவைத்துவிட்டு அதன் மேல் ஐஸ் பக்கை வைக்கவும். அது ஆடாமல் அசையாமல் இருப்பதற்கு ஒரு எலாஸ்டிக் பன்டேஜை (elastic bandage ) நீங்கள் பயன்படுத்தலாம்.
  • ஒரு பெரிய வாளியினுள் ஐஸ் கலந்த நீரை ஊற்றுங்கள். அதற்குள் சுளுக்குப்பட்ட காலை வையுங்கள். கால் மரப்பது போன்ற உணர்வு ஏற்படும்வரை அவ்வாறு வைத்திருங்கள்.
  • ஐஸ் மஸ்ஜ் கொடுப்பதற்கு ஸ்டைரோஃபோம் கப்களில் (Styrofoam cups) நீரை விட்டு ஐஸ் ஆக்குங்கள். அதன் நுனியில் படர்ந்திருக்கும் ஐஸ் கட்டிகளை உடைத்துவிட்டு. ஐஸ் உள்ள கப்பை சுளுக்கு பட்ட இடத்தின் மீது மசாஸ் பண்ணுவது போல மெதுவாக நீவி விடுங்கள்.ஒரு இடத்தில் தொடர்ந்து வைத்திருக்காமல் சுற்றுவட்டம் இடுவதுபோல சுற்றிச் சுற்றி வாருங்கள். ஒரே இடத்தில் 30 செகண்டிற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பது முக்கியம்.
  • இவை எவற்றையும் ஒரு தடவையில் 20 நிமிடங்களுக்க மேல் தொடர்ந்து செய்ய வேண்டாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

 0.0.0.0.0

Read Full Post »