Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2014

முகத்தில் முகம் பார்க்கலாம்,  விழியில் உணர்வறியலாம், வால் அசைவில் மனதுணரலாம்.

பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். பாடசாலை. சிறு பிள்ளைகள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் ஏதோ கேள்வி கேட்கிறார். எழுந்து நின்ற மாணவன் அவரது முகத்தைப் பார்த்தபடி திக்கித் திணறி விடை அளிக்கிறான். ஆசிரியர் எதுவும் சொல்லவில்லை. மாணவனுக்கு தன்னை அறியாது மூத்திரம் கழிந்து விட்டது.

இத்தனைக்கும் ஆசிரியர் ஏசவில்லை. பிரம்பை எடுக்கவில்லை. கை உயர்த்தக் கூட இல்லை. ஆனால் அவனுக்கு சிறுநீர் தன்னையறியாது பிரிந்து விட்டது. அவ்வளவு பயப்பீதி.

பயப்படுத்தியது எது? அவரது முகம் கடுகடுப்பாகியிருக்கலாம், கண்களில் கோபம் தெறித்திருக்கலாம். அந்தச் சிறுவயதிலேயே அவனுக்கு ஆசியரின் உடல் மொழி புரிந்திருக்கிறது.

சிவாஜி கணேசனை சிம்மக் குரலோன் என்பார்கள். கருணாநிதின் நீண்ட அடுக்கு வசனங்களை அட்சரம் தவறாமல், அழகு தமிழில் பேசுவதில் சிவாஜிக்கு இணை கிடையாது. ஆனால் அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது அதுவல்ல. அவரது முகபாவ வெளிபாட்டு முறைகள்தான். அது அவருக்கு கிட்டிய பெரும் கொடையாகும். இதுவும் உடல் மொழிதான்.

உடல் மொழியை ஆங்கிலத்தில்Body language  என்பார்கள். Non Verbal communication  என்று சொல்வதும் உண்டு. கலைச் சொல்லில்; Kinesis என்பார்கள்.

Body-Language

எங்கள் மனதில் உறைந்திருக்கும் உணர்வுகளை எம்மையறியாது அவ்வாறே பெரும்பாலும் வெளிப்படுத்துகிறோம். கோபத்தை, தாபத்தை, பணிவை, அன்பை, ஆதரவை, வெறுப்பை இவற்றையெல்லாம் பெரும்பாலும் எமது முகத்தாலும் ஏனைய அங்க அசைவுகளின் மூலம்தானே வெளிப்படுத்துகிறோம்.

இவற்றில் பெரும்பாலானவை எம்மை அறியாமலே எம்மை மீறி பட்டவர்த்தனமாகி விடுகிறன. பல தருணங்களில் வாயைத் திறந்தால் எம் உணர்வை வெளிப்படுத்திவிடுவோம் என்ற பயத்தில் நாவடக்கிய போதும் முகம் காட்டிக் கொடுத்துவிடும்.

Body Language 1

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என முன்னோர்கள் அற்புதமாக உளவியல் பேசினார்கள். அகத்தின் அழகை மாத்திரமல்ல அதன் அழுக்கையும் முகம் வெளிப்படுத்திவிடுகிறது.

“தாபம் பொறுக்க முடியாது இருக்கிறது. புணர்வோம் வருகிறாயா?” என்று யாராவது கேட்டிருப்பார்களா.

கண்அசைவு அதன் சிமிட்டல், அல்லது அது வெளிப்படுத்தும் வேட்கை உணர்வு ஒன்றே போதும் அவளை அல்லது அவனை படுக்கைக்கு வரச் செய்வதற்கு. வெறுமனே இசைவது மட்டுமல்லாமல் மற்றவரிடம் தாப உணர்வைக் கிளர்தெழச் செய்யும் வல்லமையும் அதில் உள்ளது.

ஒரு ஆய்வைப் பெண்களில் செய்தார்கள். அவர்களின் தாப உணர்வைக் கண்டறிவதற்காக. ஆனால் கேள்விகள் கேட்டு இந்த ஆய்வைச் செய்யவில்லை. அவர்கள் பேசுவதை வைத்துக் கண்டறியவில்லை.

கண்களை வைத்துச் செய்தார்கள். அதுவும் முழுமையான கண்களை வைத்து அல்ல. கண் மணியின் விட்டத்தை வைத்து. அது விரியும் அளவை வைத்து மட்டும் செய்யப்பட்டது. நோர்வேயில் உள்ள University of Tromsø ,y;Laeng B, Falkenberg L ஆகியோரால்  செய்யப்பட்டது

ஆனால் அந்த ஆய்வு உடல்மொழி பற்றியது அல்ல. ஹோர்மோன் சுழற்சி மாற்றங்களுக்கு ஏற்ப பாலியல் விருப்பங்கள் எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதைக் கண்டறிவதற்கானது. அது பற்றி பின்னர் பேசுவோம்.

மிருகங்களில் உடல்மொழி

ஆனால் இந்த உடல் மொழிகள் மனிதர்களுக்கு மாத்திரமானவையா அல்லது மிருகங்களிலும் உள்ளனவா.

மிருகங்களுக்கு மொழி இருக்கிறதோ இல்லையோ நாம் அறியோம். ஆனால் அவை சத்தம் எழுப்புகின்றன. அதனை அவற்றின் சகாக்கள் புரிந்து கொள்கின்றன. காகங்கள் கரைந்து தம் கூட்டத்தை அழைக்கிறது. குயில் தாபத்துடன் இசைக்கிறது, பூனையின் மியாவ் எங்களுக்கு புரிவதில்லை. ஆனால் அதன் சோடிகளுக்கு புரியும். நாய்கள் குலைக்கின்றன.

ஆனால் குலைக்காமல் கத்தாமல், இரையாமலும் இருந்தபோதும் அவை தங்கள் சகபாடிகளின் உடல் மொழிகளைப் புரிந்து எதிர்வினையாற்றுகினறன என்பதை ஒரு ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.

மனிதர்களில் கண்களில் ஆய்வு செய்தார்கள். இப்பொழுது நாய்களின் வாலில் ஆய்வு. வால் என்றால் அதன் நீளம் அகலம், பற்றியது அல்ல. அவை அசையும் விதம் பற்றியது.

நாய்கள் வால் அசைப்பதை நாம் எல்லோருமே கண்டிருக்கிறோம். எசமானைக் கண்டால் மகிழ்ச்சியில் வாலாட்டுவது தெரியும்.

Body Language 2

எங்களுக்குத் தெரிந்தது அவ்வளவு மட்டுமே. ஆனால் ஒரு நாயானது மற்ற நாயின் வால் ஆட்டும்; விதத்தை வைத்து அதனது உணர்வுகளை மட்டுக்கட்டுகின்றன என்கிறார்கள் இத்தாலியைச் சார்ந்த ஆய்வாளர்கள்.

ஒரு நாயானது தனது வாலை இடது பக்கமாக அசைக்கும்போது அதைப் பார்த்திருக்கும் ஏனைய நாய்களின் மனங்கள் பதற்றமடைகின்றனவாகும். நாய்கள் பதற்றமடைவதை அவற்றின் இருதயத் துடிப்பு வேகமாவதைக் கொண்டு கண்டறிந்தார்கள். ஆனால் வலது பக்கமாக ஆட்டினால் ஏனைய நாய்கள் பதற்றமடையவில்லையாம்.

வலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ தமது வாலை ஆட்டவேண்டும் என அவை திட்டமிட்டுச் செய்வதில்லை. அது இயல்பாக நடக்கிறது. தன்னிச்சையின்றி நடைபெறுவதாகும். இயற்கையின் கொடை எனலாம். அல்லது கூர்ப்பில் எட்டப்பட்டது எனவும் கொள்ளலாம்.

இதை முன்பு செய்த மற்றொரு ஆய்வு எடுத்துக் காட்டியிருந்தது. தனது எசமானைக் கண்டது போன்ற மகிழ்ச்சியான நிகழ்வு நடைபெறும்போது அதன் மூளையின் இடது பக்கத்தில் செயற்பாடு அதிகரித்ததாம். அந்த நேரத்தில் வால் வலது பக்கமாக ஆடினவாம். மாறாக மற்றொரு நாய் அக்கிரோசமாக இதைக் கடிக்க நெருங்கும்போது இதன் மூளையின் வலது பக்கத்தில் செயற்பாடு அதிகரித்து, வால் இடதுபுறமாக ஆடுமாம்.

ஆனால் நாய்கள் தங்கள் வால்களை ஒரு பக்கமாக மட்டும் ஆட்டுவதை நாம் கண்டதில்லை. இதற்குக் காரணம் அது வேகமாக ஆட்டுகிறது. அதனால் அது எமக்குப் புரிவதில்லை. வீடியோவில் எடுத்து சிலோ மோசனில் பார்க்கும்போது இது தெரிந்தது என்கிறார்கள்.

இப்பொழுது செய்த ஆய்வின் போது வாலை ஆட்டும் வேறு நாய்களின் வீடியோக்களை ஆய்வுக்கு உட்பட்ட நாய்களுக்குக் காட்டினார்கள். வீடியோ பட நாய்கள் எந்தப்பக்கமாக வாலை ஆட்டுகின்றன என்பதைப் பொறுத்து இந்த நாய்களின் இருதயத் துடிப்பில் மாற்றம் ஏற்பட்டது.

சில நாய்கள் பெரிதளவு எதிர்வினை காட்டாதபோது மீண்டும் மீண்டும் வீPடீயொ போட்டுக் காட்டிய போது அவை எதிர்வினை காட்டின. எதிர்வினையை அவற்றின் நாடித் துடிப்பின் மூலமாகக் கண்டறிந்ததற்கு மேலாக வேறு அறிகுறிகள் மூலமும் கண்டறிய முடிந்தது.

வாலை இடது பக்கமாக அசைப்பதைப் பார்த்த நாய்ககளில் மனஅழுத்தமும் எச்சரிக்கை உணர்வும் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. நாய்கள் டென்சானாகும் என்ன செய்கின்றன என்பதை நீங்களும் நானும் அறிவோம். அவற்றைத்தான் அவர்களும் அவதானித்தார்கள். அவற்றின் காதுகள் நிமிர்ந்தெழுந்தன, மூச்சிரைத்தன, தாக்குதலுக்கு தயாராவது போல உடலைச் சுருக்கின. கண்கள் விரிந்தன.

கண்மணி விரிதலும் பாலியல் உணர்வும்

இந்தக கண்கள் விரிவடையும் தன்மையானது ஏனைய விலங்குகளில் இருப்பது போவே மனிதர்களிடமும் காணப்படுகிறது. இது தாங்களாகச் செய்வது அல்ல. தன்னை அறியாமல் நடக்கும் செயலாகும். 1975 ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வு சுவார்ஸமானது.

Body Language 5

தங்களுக்கு சோடியாக வரப்போகின்றவரது புகைப்படத்தைப் பெண்கள் கண்டதும் அவர்களது கண்மணி விரிந்ததாகக் கண்டார்கள். அது பயத்தினால் ஏற்பட்ட விரிவு அல்ல. ஆனந்தக் கிளர்ச்சியால் ஏற்பட்டதாகும்.

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்பீர்கள். பாலியல் ஆர்வம் பெண்களுக்கு எக்காலத்தில் இயல்பாகவே எழுகிறது என்பதை இந்த ஆய்வு கோடி காட்டுகிறது.

ஆரம்பத்தில் பெண்களின் கண்களைப் பற்றிய ஆய்வின் மீதிக் கதைதான் இனி வருகிறது.

பெண்களின் கண்களை அவர்களது மாதவிடாய் சுற்றின் பல்வேறு கட்டங்களில் பரிசோதித்திருந்தார்கள். மாதவிடாயில் இரத்தப் பெருக்கு இருக்கும்போது (menstrual phase)>  சூலகத்திலிருந்து முட்டை வெளியேறி கருவாவதற்கு உடலானது தயாராயிருக்கும் ‘கருவள காலத்தில்’ (ovulatory  phase),  அதற்கு பின்னான ஓய்வு(luteal phase), காலத்திலாகும்.

அவரது பாலியல் துணைவரின் படங்களைக் காட்டிய போது சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் கருவள காலத்தில் அவர்களது பாலியல் உணர்வு தூண்டப்பட்டது. கண்மணி விரிவதைக் கொண்டு அதனைக் கண்டறிந்தார்கள்.

மனைவியின் மாதவிடாய் வட்டத்தை சரியாகக் கணித்து வைத்திருங்கள். அந்நேரத்தில் (கருவள காலம்) சுலபமாகக் கைகூடும்.

ஆனால் கருத்தடை மாத்திரை உண்ட பெண்களில் இந்த மாற்றம் தென்படவில்லை. இதற்குக் காரணம் அவர்களில் ஹோர்மோன் மாற்றங்களால் கருவள காலம் என்பது அடக்கப்பட்டு விடும் என்பதாலாகும்.

இதன் அர்த்தம் கருத்தடை மாத்திரை உண்ணும் பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறைந்துவிடும் என்றல்ல. கருத் தங்கிவிடும் பிரச்சனை இல்லை என்ற உணர்வு அவர்களில் ஆர்வத்தைத் தூண்டிவிடும் எனவும் சொல்கிறார்கள்.

நாளாந்த வாழ்வில் உடல் மொழி

உடல் மொழியை இன்று பல கற்கை நெறிகளில் ஒரு பாடமாக எடுக்கிறார்கள். முக்கியமாக தொழில் முறையில் மேலாண்மை நிலையில் இருப்பவர்களுக்கு அவசியமாகிறது. மருத்துவத் துறையில் உடல் மொழி என்ற சொல்லைப் பயன்படுத்தாமலே மருத்துவர்கள் அவற்றைத் தங்கள் நோயாளிகளில் அறிகுறிகளாகத் தேடுகிறார்கள்.

ஆனால் தினசரி வாழ்வில் இதன் முக்கியத்துவம் அபரிதமானது. முகபாவங்கள் மட்டுமின்றி ஒருவர் எவ்வாறு உட்கார்ந்திருக்கிறார், அவரது கைகள் ஓய்ந்திருக்கிறதா பரபரக்கிறதா, கண்களில் ஒளிர்வது எது போன்றவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மன உணர்வுகளை உடல் மொழி மூலம் புரிந்து கொண்டவர்களால் எல்லோரையும் அணைத்து நல்லுறவைப் பேண முடியும். மாறாக அதை அசட்டை செய்பவர்கள் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாகவே நேரும்.

மற்றவர்களது உடல் மொழிகள் எமக்கு என்ன சொல்கிறது என்பதற்கு அப்பால் நாம் எமது உடல்மொழியால் மற்றவர்களுக்கு என்ன செய்தியை கடத்தியிருக்கிறோம் என்பதும் முக்கியமானதாகும்.

அது சரி நாயின் வாலாட்டல் உடல் மொழியைப் புரிந்து கொள்வதால் என்ன நன்மை?

Body Language 3

யாரவது ஓருவரின் வீட்டிற்கு போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். தூரத்தில் ஒரு நாய் நிற்கிறது. அதன் வாலைப் பாருங்கள். அது வலது புறமாக வாலாட்டினால் பிரச்சனை இல்லை. உங்கள் வருகை அதற்கு அச்சுறுத்தாலாக இல்லை. பேசாமல் இருந்துவிடும். 

மாறாக இடது புறமாக வாலாட்டினால் மருத்துவ மனைக்குச் சென்று ஊசி போடுவதற்கு தயாராகுங்கள்.

எனது ஹாய் நலமா புளக்கில் 05 March 2014 ல் வெளியான கட்டுரை

டொக்டர் எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »

பரணீதரனின் சிறுகதைத் தொகுதியை அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

மீண்டும் துளிர்ப்போம். இது பதின்மூன்று சிறுகதைகளை உள்ளடக்கிய அழகான நூல். இதழ் விரித்து நிற்கும் மலரொன்று அழகிய அட்டைப்படமாக சிலிர்த்து நிற்கியது. வடிவமைத்த மேமன் கவியின் கவிநயம் துலங்குகிறது.

தொகுப்பிலுள்ள ‘யதார்த்தம’; என்ற சிறுகதை என்னை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. இதற்குக் காரணம் அதிலுள்ள சமூகப் பெறுமானம்தான். எமது சமூகத்தில் முதுமை வாழ்வு பற்றி இன்னும் தளாராமல் இருக்கும் ஒரு கருத்தை இக்கதை மறுபரிசீலனை செய்கிறது. நோகாமல் தவறெனச் சுட்டிக் காட்டுகிறது. இது என்னுள் பல சிந்தனை ஊற்றுக்களை திறந்து விட்டது. அதனைப் பகிர்ந்து கொள்வதுடன் நூலில் உங்களையும் அழைத்துச் செல்லலாம் என எண்ணுகிறேன்.

தனது சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கும் வரை முதுமை வாழ்வு என்பது துன்பமானது அல்ல. சொந்தக் கால் என்பது பொருளாதார ரீதியானதைக் குறிக்கவில்லை. நடமாடித் திரிந்து தனது சொந்த அலுவல்களை தானே செய்யக் கூடியதாக இருக்கும் வரை அது தொல்லை கொடுப்பதாக இருக்கமாட்டாது.

வயதிற்கு மதிப்பிருக்கிறது இங்கு. வயது முதிர்ந்தவர்களைக் கௌரவிக்கும், அவர்களது அனுபவபூர்வமான ஆலோசனைககளுக்கு காது கொடுக்கும் சமூகப் பாரம்பரியமும் எம்முடையது. அத்தகைய பண்பாட்டுச் சூழல் இன்னமும் ஒழிந்து விடவில்லை. அதன் காரணமாகவே முதுமை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது எனக் கூறினேன்.

ஆனால் படுக்கையில் வீழ்ந்துவிட்டால்….? அறளை பெயர்ந்து விட்டால் என்ன நடக்கும்?

வயது முதிர்ந்த நேரத்தில் அதிலும் முக்கியமாக நோயும் இயலாமையும் துன்புறுத்தும்போது தமது தாய் தகப்பனை அல்லது பாட்டன் பாட்டியை தமது வீட்டில் வைத்துப் பராமரிக்க வேண்டியது தமது கடமை என்பதாகவே இன்னமும் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முற்றிலும் தொலைந்து விடாத சமூகமாக இருப்பதன் பலன் அது.
ஆனால் படுக்கையில் வீழ்ந்து விட்டபின் ஒரு புதிய பிரச்சனை தலை தூக்குகிறது. ஆழமான அன்பு, பொருளாதார வசதி ஆகியன இருந்தாலும் இப்பிரச்சனையை எதிர்கொள்வது சிரமம்.

மலையகத்தைக் களமாகக் கொண்ட கதை. மண்வாசனைக் கதையல்ல.
கைக் குழந்தையாக இவன் இருந்தபோதே மலைச்சரிவு இவனது தந்தையைக் காவு கொண்டுவிட்டது. அதன் பின்னர் இவனைப் பிள்ளை மடுவத்தில் விட்டு விட்டு, கொழுந்து பறித்து அவனை வளர்தெடுத்தது அந்த அன்னைதான். பல்கலைக்கழகம் வரை படிக்க வைத்து ஆசிரியன் ஆக்குகிறாள். தான் உழைக்கத் தொடங்கியதும் தாயை வேலை செய்வதை நிறுத்தி வீட்டில் ஆறுதலாக இருக்கச் செய்கிறான். தாய் பேரக் குழந்தைகளைப் பராமரிப்பதில் மகிழ்ச்சியடைகிறாள். பாசம் நிறைந்த குடும்பம்.

இந்நிலையில் திடீரெனப் பக்கவாதம் வந்து படுக்கையில் தாயை விழுத்திவிடுகிறது. எவ்வளவுதான் தான் பாசம் இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டியிருப்பதால் தாயைப் பராமரிப்பது பெரும் சுமையாகிறது. இந்த நிலையில் அவர்கள் என்ன செய்ய முடியும். முதியோர் இல்லத்தில் விடுவதுதான் வழி. ஆனால் தாய் மீதான பாசம், பாரமரிப்பு நிலையில் விடுவது பற்றிய குற்ற உணர்வு, ஊர்ப்பழி, போன்ற குடும்ப ரீதியானதும் சமூக ரீதியானதும் காரணங்கள் தடையாக இருக்கின்றன.

இவை பற்றி அலசும் சமூக விழிப்புணர்வுக் கதையாக இருக்கிறது. மகன் சரியாக முடிவெடுக்கிறான். பாராட்டத்தக்கது. ஆனாலும் கதையின் முடிவோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. தாயின் இயற்கை மரணத்தில் முடிப்பதைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஆனால் பரணீதரன் ஏனைய படைப்புகள் பலவும் இதற்கு மாறாக தீர்க்கமாக கருத்துக்களைத் முன் வைக்கிறன. சமூக முன்னேற்றதில் அக்கறையுள்ள படைப்பாளியால்தான் தெளிவான கருத்துக்களை முன்வைக்க முடியும். அழகியலுக்குள் தன்னை மறைத்துக் கொண்டு பேடித்தனமான படைப்புகளை வழங்கும் சிறுமை இவரிடம் காணப்படவில்லை.

கருத்து ரீதியாக ‘யதார்த்தம்’ என்னைக் கவர்ந்த கதையாக இருந்தபோதும் நூலின் முகப்புச் சிறுகதையான ‘உயிரினும் மேலானது’ நல்லதொரு படைப்பு எனலாம். இக்கதையில் படைப்பாளியின் ஆளுமை சிறப்பாக வெளிப்படுகிறது. காதல், போரின் அவலம், விடுதலைப் போராட்டதின் மறுபக்கம், அதிகாரிகளின் சுயநலம் என எமது நிகழ்கால வாழ்வின் பல பக்கங்களைத் தொட்டு சுவார்ஸயமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதிர்வு தருவதாக இருப்பது சதீயத்திற்கும் குடும்ப கௌரத்திற்கு எதிராக மனிதாபிமானத்தின பக்கம் நிற்கும் இளைஞனின் உறுதிதான்.

பாலியல் பிறழ்வுகளும் வக்கிரங்களும் கொண்ட ஒருவனின் மனைவியாக வாழ்வதின் துன்பத்தை ‘விடுதலையாகி நிற்பாய்’ பேசுகிறது. பெண்ணியம் இழையோடுகிறது. அவனது செயற்பாடுகள் உளவியல் பிரச்சனையின் வெளிப்பாடு என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், உள ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து மீள உதவும் என்கிறது.

‘எனக்கு விசர் எண்டு சொல்லுறியோ’

இது தனது தன்மானம் பாதிக்கப்பட்ட அந்த ஒற்றைக் கணவனின் எதிர்வினைத் தனிக்குரல் என்று மட்டும் என்னால் கொள்ள முடியவில்லை. மனநோய்கள், உள ஆற்றுப்படுத்தல் போன்றவை பற்றி இன்னும் தவறானக் எண்ணக் கருக் கொண்ட எமது சமூக பண்பாட்டுத் தளத்தின் குரலாகவே ஒலிக்கிறது.
உளவியில் கல்வியறிவு கொண்ட இவரையொத்த இளம் படைப்பாளிகள் தமது எழுத்தாண்மையால் அதை மாற்ற வேண்டிய கடமை உள்ளது.

இத்தொகுதியில் உளவியிலை நேரடியாகப் பேசும் குறைந்து மூன்று கதைகளாவது இருப்பதானது பரணீதரன் செய்வார் என்பதை உறுதிப்படுத்துகிறது. ‘மாறுதல்;, ‘பகிடி வதை’, ‘விடுதலையாகி நிற்பாய்’ என்பன அவை.

இன்றைய இளைய சமூதாயத்தின் போக்கில் விரக்தியுற்றவர்களாக பல பழைய தலைமுறையினர் இருக்கிறார்கள். சிந்தனைகளிலுள்ள வேறுபாடுகளுக்கு தலைமுறை இடைவெளிதான் காரணம். இதனால் மனதில் தாக்கம் ஏற்பட்டு விரக்தியடையும் ஓரு முதியவரை ‘மாறுதல்’ சிறுகதையில் காண்கிறோம். தனது வீட்டிலேயே தமிழ் பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் அவரை நிலை குலைய வைக்கிறது. உள ஆற்றுப்படுத்தலை (கவுன்சிலிங் ) நாடி வருகிறார்.

‘உங்கடை நண்பர்கள் ஆறு ஏழு பேர் வீட்டைபோய் அவர்களோடை, பிள்ளைகளோடை கதைச்சுப் போட்டு நாளைக்கு வாங்கோ… தொடர்ந்து கதைப்போம்.’

பிரச்சனையை விளக்கி ஆறுதல் கொடுக்கும் கவுன்சிலிங் செய்வதற்குப் பதிலாக இந்த விடை கிடைக்கிறது. ஆனால் உண்மையான கவுன்சிலிங் இதுதான். தானே மற்றவர் அனுபவங்களுடன்  கலந்துணர்ந்து சமூகத்திலிருந்தே கற்றுக் கொள்ள வழிசெய்கிறது. கதையோடு கதையாக உள ஆற்றுப்படுத்தல் பற்றிய பல விபரங்கள் வாசகனுக்குச் சொல்லப்படுவது இக்கதையை மேலும் முக்கியப்படுத்துகிறது.

‘விடுதலையாகி நிற்பாய்’ சிறுகதையில் பிறழ்வு நடத்தையின் அறிகுறிகள் பட்டியலிடுவது போலச் சொல்லப்பட்டதற்குப் பதிலாக சம்பவங்களின் ஊடாக நகர்த்தியிருந்தால் வாசகனிடத்தில் கூடியளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. நூலாசிரியரின் வேறு பல படைப்புகளையும் சேர்த்து நோக்கும்போது, ஆசிரியர் கூற்றாக நேரடியாக கதையைச் சொல்லிச் செல்லும் பண்பு இவரிடத்தில் அதிகம் இருப்பதாக என் மனதில் பட்டது. இது தன் கருத்தை ஆணித்தரமாகப் பதிப்பதற்கு அவசியமான போதும் ரசனையான வாசிப்பிற்கு துணைபுரியும் எனத் தோன்றவில்லை.

ஆயினும் கட்டுடைத்துப் புதிய இலக்கிய வடிவங்களை தேடிப் பயணிக்கும் இன்றைய இலக்கியச் சூழலில் கதை, கட்டுரை, கவிதை, நாடகம் போன்ற வழமையான வடிவங்களை மீறியும், ஒன்றுக்குள் ஒன்று சங்கமிப்பதுமான மாறுபட்ட வடிவங்கள் ஏற்புடையனவே.

இவரது படைப்புகளில் காணும் மற்றொரு பண்பு வாழ்வில் பற்றுதலை ஊட்டுவதாகும்.

  • சலிப்பு, எதிர்காலம் மீதான நம்பிக்கை வரட்சி ஆகியவற்றை விடுத்து
  • நல்மனத்தோடு விடாமுயற்சி செய்து முன்னேறும் பாத்திரங்களைப் பல படைப்புகளில் காண்கிறோம்.
  • தகப்பனை அல்லது தாயை இழந்த மகன், மகள் குடும்பத்திற்காக உழைத்து, முன்னேற்றுவதான குறிக்கோளுடன் இயங்குகிறார்கள்.
  • குடி, புகைத்தல், பகிடிவதை போன்றவற்றிலிருந்து தப்பித்த
  • இலட்சிய வாழ்வுப் பாத்திரங்கள் சமூக விடிவிற்கான உதாரணங்களாக நிற்கிறார்கள்.

பொதுவாக இலட்சிய இளைய சமூதாயம் நோக்கிய இளைஞனின் புனைவுகளாக இருக்கின்றன.

  • தெணியானின் ‘உளவியல் பார்வை இழையோடும் படைப்புகள்’ என்ற விரிவான அணிந்துரையும்,
  • பேராசிரியர். சபா.ஜெயராசாவின் நுணுக்கமான ‘முன்வாயில்’ ம் நூலுக்கு அணி செய்கின்றன.
  • பின் அட்டையில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா பரணீதரனை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

சஞ்சிகை வெளியீட்டில் தனது தனித்துவத்தைப் பதித்த ஜீவநதி சஞ்சிகையின் மற்றொரு வளர்ச்சியான ஜீவநதி வெளியீடு வந்துள்ளது. இரண்டிலும் தனது தகமையை வெளிக் கொணர்ந்த பரணீதரனைப் பாராட்டுகிறேன்.

ஞானம் சஞ்சிகையில் வெளியான எனது விமர்சனக் கட்டுரை.

எனது மறந்து போகாத சில புளக்கில் 2011 ல் வெளியான கட்டுரை

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

கேட்ட மாத்திரத்தில் நான் அதிசயித்துப் போனேன். எனது 37வருட மருத்துவத்தில் இப்படி ஒரு பிரச்சனையை நான் கேள்விப்பட்டதே இல்லை.

ஆனால் அடுத்த கணமே இது உண்மையானது அல்ல என்பது புரிந்தது.

செய்தியைப் பகுந்தறிந்த எனது மூளை தெளிவாகக் கூறிவிட்டது.

இருந்தபோதும் அவள் வேண்டும் என்று பொய் சொல்கிறாள் என்று நான் கருதவேயில்லை.

“மலம் போகும் போது அட்டை அட்டையாகப் போகுது…சின்னஞ் சின்னனா கணக்கு வழக்கின்றிப் போய்க்கொண்டே இருக்கு… வருடக் கணக்கில்..”

அட்டை என அவள் கூறியது சாதாரண அட்டைப் பூச்சியை அல்ல.

இரத்தம் குடிக்கும் அட்டையை.

கூறியது உண்மையாக இருந்தால் அவளது உடலிலுள்ள கடைசித் துளிவரை அட்டைகள் உறிஞ்சிக் குடித்திருக்கும். இரத்த சோகையால் உடல் வெளிறிப்போய் நடக்க முடியாது மூச்சிரைக்க வந்திருப்பாள். இவள் உசாராகத்தான் வந்திருந்தாள்.

அவள் ஒரு மலையகப் பெண். பல வருடங்களாக கொழும்பில்தான் வசிக்கிறாள். வயது சரியாக 56 இன்னும் ஒரு மாதத்தில். வசதியானவள் அல்ல. நடுத்தரத்திலும் சற்றுக் குறைவான சமூகத் தராதரம் கொண்டவள்.

நைந்து போன பழைய ஸ்கேட்டும் பிளவுசும் அணிந்திருந்தாள். சற்று அழுக்கான ஆடைகள். குளித்து வரவில்லை. வியர்வை மணம் நாசியை உறுத்தியது. உடை அலங்காரத்தில் அசண்டையீனமும், சுகாதாரம் பேணுவதில் அக்கறையின்மையும் வெளிப்படையாகத் தெரிந்தன.

இந்த அவதானிப்புகள் அவளது நோய் பற்றிய முடிவுக்கு வருவதற்கு எனக்கு அவசியமானவை.

“..எத்தனையோ தரம் அரசாங்க ஆஸ்பத்திரில் மருந்து எடுத்து விட்டேன். அவங்கள் பூச்சிக் குளிசையைத்தான் அள்ளி அள்ளித் தாராங்கள். ஒரு சுகமும் இல்லை”.

அவளைப் போல நானும் அரசாங்க ஆஸ்பத்திரி மருத்துவர்களை குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு இவள் தமிழில் சொல்லியது புரிந்திருக்காது. இவளுக்கு அவர்களுக்கு புரியும்படி விளக்க முடியாது. நீண்ட கியூ காத்து நிற்கையில் இவள் புழு என்றால் என்ன பூச்சி என்றால் என்ன றழசஅள என்றுதான் அவர்கள் மனத்தில் பதிந்திருக்கும்.

நல்ல காலம் புளுக் காச்சல் என நினைத்து காய்ச்சல். சளிக் குளிசைகளைக் கொடுக்கவில்லையே என்பதை நினைத்து ஆறுதல் கொள்ளலாம்.

‘மலத்தை எடுத்துக் கொடுங்களேன். என்ன பூச்சி என்று பரிசோதித்துப் பார்க்கலாம்.’

இது அவசியமற்ற போதும் அவளது நம்பிக்கையை தவறென்று எடுத்துக் காட்ட உதவும் என்பதால் கேட்டேன்.

அவளுக்கு அதில் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. ‘அதைப் பிறகு பாப்பம். இப்ப ஏதாவது மருந்து தந்து இந்தப் பிரச்சனையை உடனை தீருங்கோ’ தீர்க்கமாகச் சொல்லிவிட்டாள்.

“மலத்தோடு போனது இப்ப தலையிலையும் வந்திடுத்து. ஊந்து ஊந்து தலையெல்லாம் திரியுது”.

தலையை மூடியிருந்த மொட்டாக்குத் துணியை விலக்கி உச்சந் தலையைச் சுட்டிக் காட்டினா.

மொட்டையாக வெட்டியிருந்த தலையில் கறுப்பும் பளுப்புமாக முளைத்திருக்கும் நரைத்த முடிகளைத் தவிர வேறொன்றும் என் கண்களுக்குப் படவில்லை.

“இஞ்சை இஞ்சை..” அவள் என் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயன்றாள்.

தனது வலதுகைப் பெருவிரலையும் சுட்டு விரலையும் சேர்த்து தனது முன்னங்கைகளில் எதையோ பிடிக்க முயன்றாள்.

எனக்கு எதுவும் புலப்படவில்லை!

“அறுபது தாண்டிய பூஞ்சைக் கண்ணுக்கு என்ன தெரியப் போகுது” என நக்கல் அடிக்காதீர்கள்.

அண்மையிலும் கண் மருத்துவரைப் பார்திருந்தேன். தடித்த கண்ணாடிதான். ஆயினும் ‘கற்றரக்ட் இன்னமும் இல்லை. பார்வை நன்றாக இருக்கிறது’ என்று சேர்டிபிகற் கொடுத்துள்ளார்.

இப்படியாக உடலில் பூச்சி ஊர்வதாக சொல்லிக் கொண்டு வருபவர்கள் பலரை எனது கிளினிக்கில் பாரத்திருக்கிறேன். பொதுவாக அவர்கள் அனைவரும் வயதானவர்கள். வயதினால் மூளை நரம்புகள் பாதிப்புற்று ஒரு கலங்கலான மனநிலையில் இருப்பவர்கள்.

மாயத்தோற்றங்கள் (Delusions) ஏற்படுவது அவர்களில் ஏற்படுவது அதிசயமானது அல்ல. புழுக்கள் நெளிவதாகவும், பூச்சிகள் ஊர்வதாகவும், சிலந்திகள் அசைவதாகவும், அட்டைகள் தவழ்வதாகவும், பக்றீரியாக்கள் குடைவதாகவும் அவர்கள் சொல்வதுண்டு.

Man-Bug

ஆனால் இது வயதானவர்களின் நோய் மட்டுமல்ல. ஏனைய வயதினரிடையேயும் தோன்றலாம். தமது உடல் நலத்தைப்பற்றிய தப்பான எண்ணங்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் அவர்கள்.

மனப் பிறழ்வு நோயுள்ளவர்கள் போல இவர்களுக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பான மாயத் தோற்றங்கள் எழுவதில்லை. பூச்சி, புளு, வண்டு போன்ற ஏதாவது ஒன்று பற்றிய மாயத் தோற்றமே (Monosymptomatic hypochondrial psychosis) இவர்களுக்கு உண்டாகிறது.

இந்த ஒரு விடயத்தைத் தவிர அவர்கள் சாதாரணமானவர்கள் போலவே இருப்பார்கள். வேறெந்த மன நோய்கள் இருப்பதில்லை. இதனை மருத்துவத்தில் delusions of Parasitosis என அழைப்பார்கள். ஒட்டுண்ணி மருட்சி எனலாமா

இவர்களுள் ஒருத்தி ஒரு சிறிய போத்தலில் தன் மீது ஊரும் பூச்சியைக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள். தோல் நிறத்தில் ஒரு சிறிய வஸ்து இருந்தது. அது என்னவென்று புரியாததால் நுணுக்குக் காட்டியில் வைத்துப் பரிசோதித்தபோது அது ஒரு சருமத்துகள் என்பது தெரியவந்தது.

சிலர் இவ்வாறு பூச்சிகளைப் பிடிப்பதாகச் சொல்லி சருமத்ததைக் கிள்ளி கிள்ளி புண்ணாக்கிக் கொண்டு வருவதும் உண்டு.

பல மருத்துவர்களிடம் ஒருவர் மாறி மற்றவர் என சென்று கொண்டிருப்பது இவர்கள் வழக்கம். திருப்பதியின்மையே காரணம்.  மருத்துவர்களால் அவர்களது எண்ணத்தை மாற்றுவது சிரமமாக இருப்பதால் அவர்களது பிரச்சனை தீருவதே இல்லை. இதனால் மருத்துவர்களைக் குறை கூறுவதும் புதிய மருத்துவரை நாடுவதுமாக அலைந்து கொண்டிருப்பார்கள்.

இவரை வீட்டில் வைத்துப் பராமரிப்பவர்களுக்கு இவர்களோடு அலைவதும் இவர்கள் பிரச்சனையை தினமும் கேட்டுக் கொண்டிருப்பதும் சலிப்பையும் சினத்தையும் ஏற்படுத்திவிடுவதும் உண்டு.

மருந்துகள் கிடையாதா எனக் கேட்கிறீர்களா? சில psychotic drugs இருக்கவே செய்கின்றன.

வீரகேசரி ஞாயிறு வாரவெளியீட்டில் நான் எழுதிய அனுபவக் கட்டுரை.

0.00.0

Read Full Post »

கரந்துறையும் கள்வன்போல இரத்தசோகை; இரத்தசோகை கண்டறிவது எப்படி?

உங்களுக்கு களைப்பாக இருக்கிறதா? சோம்பலாகவும் தலைச்சுற்றும் இருக்கிறதா?

அடிப்படைக் காரணங்கள் பல இருக்கக் கூடும். ஆனால் அது இரத்தசோகையாகவும் இருக்கலாம்.

இரத்தசோகை என்பது உங்கள் குருதியில் போதியளவு செங்குருதிக் கலங்கள் red blood cells  இல்லாமையே ஆகும். ஒரு சிலருக்கு வழமைக்கு மாறான செங்குருதிக் கலங்கள் இருப்பதும் காரணமாகலாம். இன்னும் சிலருக்கு அவற்றில் உள்ள ஹீமோகுளோபின் வழமைக்கு மாறாக இருப்பது காரணமாவதுண்டு.

கண்கள் நாக்கு, உடல் போன்றவை வெளிறியிருப்பதிலிருந்து இது இருப்பதை மருத்துவர்கள் ஊகிப்பார்கள். பலரது இரத்தசோகையை அதிலும் முக்கியமாக கடுமையானவற்றை, நோயாளியைப் பரிசோதிப்பதன் மூலம் கண்டறியலாம். ஆயினும் குறைந்தளவான இரத்தசோகையானது கரந்துறையும் கள்வன் போல மறைந்திருப்பான். கண்டறிய குருதிப் பரிசோதனை தேவைப்படும்.

இதை உறுதிப்படுத்துவதற்கு Hb% என்ற சுலபமான குருதிப் பரிசோதனை இருக்கிறது.

Hb% ஆனது ஆண்களில் 13 ற்கு குறையாமலும் பெண்களில் 11ற்கு ற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

அறிகுறிகள் என்ன?

கீழ்காணும் அறிகுறிகள் இரத்தசோகை இருப்பதை உணர்த்தலாம். அவ்வாறு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் நீங்கள் இரத்தப் பரிசோதனை செய்து அது இருக்கிறதா இல்லையா என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும்.

  • களைப்பு. வழமைபோல நடக்கவோ வேலை செய்யவோ முடியாது விரைவில் களைப்படைதல் முக்கிய அறிகுறியாகும்.
  • மூச்சிளைப்பு, குருதியில் போதிய செங்குருதிக் கலங்கள் இல்லாததால் உடல் இயக்கத்திற்கு தேவையான ஒட்சிசன் கிடைக்காது போகிறது. அதை ஈடு செய்ய வேகமாகச் சுவாசித்து ஒட்சிசனைப் பெற முயல்கையில் மூச்சிளைப்பு தோன்றுகிறது.
  • தலைப்பாரமாக இருத்தல், தலை அம்மல் – மனச்சோர்வு, சிந்திக்க முடியாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். மூளைக்கு போதிய இரத்தம் இல்லாததால் ஏற்படும் அறிகுறிகள் இவை.
  • கை கால்கள் வழமையான சூடு இன்றிக் குளிர்ந்திருத்தல்
  • சருமம் வழமையைவிட வெளிறியிருத்தல். கண் நாக்கு நகங்கள் போன்றவையும் வெளிறியிருக்கும்
  • நெஞ்சு வலி, நெஞ்சுப் படபடப்பு – உடற்திசுக்களுக்கு வேண்டிய ஒட்சிசனை இரத்தசோகை உள்ளவரின் குருதியால் கொடுக்க முடியாததால் இருதயம் வேகமாகத் துடிப்பதால் படபடப்பும், இருதயத்திற்கு போதிய ஒட்சிசன் கிடைக்காததால் நெஞசுவலியும் வரலாம்.

போசாக்கற்ற உணவு

இரத்தசோகை உள்ளவர்களை அடிக்கடி காண முடிகிறது. வேறு காரணங்களாக வரும்போது இரத்தப் பரிசோதனை செய்யும்போது பலருக்கு இரத்தசோகை இருப்பதை தற்செயலாகக் கண்டறிய முடிகிறது.

இருந்தபோதும் பலரது இரத்தசோகைகள் கடுமையானவை அல்ல.

முன்பு இரத்தசோகையை வசதியற்ற, போசாக்குள்ள உணவு உண்ண முடியாதவர்களிடம் மட்டுமே கண்டோம். ஆனால் இப்பொழுது நல்ல வசதியுள்ளவர்களிடமும் காண்கிறோம். இதற்குக் காரணம் போசாக்கான உணவுகளை உண்பதற்கு பதிலாக குப்பை உணவுகளை உண்பதுதான். அதனால்தான் மிக வசதியான நாடு எனக் கருதப்படும் அமெரிக்காவில் கூட 3.5 மில்லியன் மக்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம்.

வேறு காரணங்கள்

ஆனால் ஒருவரது குருதியின் ஹீமோகிளோபின் செறிவு குறைவதற்கு உணவில் போசணைகளும் இரும்புச் சத்தும் குறைவதுமட்டுமே காரணமல்ல.

குருதி இழப்பினால் ஏற்படும் இரத்தசோகை

வெட்டுக் காயம், விபத்துகளால் ஏற்படும் காயங்கள், சில சத்திரசிகிச்சையின்போது குருதி வெளியேறுவதால் இரத்தசோகை ஏற்படும். இது தற்காலிகமானது. இரும்பு சத்து மாத்திரைகளைக் கொடுப்பதன் மூலம் அல்லது மிகக் கடுமையான குருதி இழப்பு எனின் குருதி மாற்றீடு செய்ய நேரலாம்.

வேறு சில குருதி இழப்புகள் குறைந்த அளவில் நீண்டகாலம் தொடரச்சியாக நடப்பதால் எமது கவனத்திற்கு வராது. ஆயினும் அவையும் படிப்படியாக குருதிச்சோகையை ஏற்படுத்தும்.

உதாரணமாக

அல்சர் எனச் சாதாரண மொழியில் சொல்லும் குடற்புண்களால் மிகக் குறைந்தளவு குருதி தொடர்ந்து செல்வதால் எமக்குப் புலப்படாது ஆனால் கால ஓட்டத்தில் குருதிச்சோகை ஏற்படும்.

சிலர் வலி நிவாரணி மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகிக்க நேருகிறது. மூட்டு வலிகள், நாரிப்பிடிப்பு, தசைப்பிடிப்புகள் எனப் பலவிதமான வலிகளுக்கும் உபயோகிப்பார்கள். சிலர் சாதாரண தலையிடிக்குக் கூட கடுமையான மருந்துகளை உபயோகிப்பதுண்டு. இவை இரைப்பையில் புண்களை ஏற்படுத்தி குருதி இழப்பை ஏற்படுத்தும்.

வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவ ஆலொசனையுடன் அவர்களின் கண்காணிப்பில் உபயோகித்தால் பாதிப்பு ஏற்படாது அவதானிப்பார்.

அதேபோல மூலநோயினால் நாளாந்தம் சிறிதளவு இரத்தமே செல்வதால் நோயாளிகளுக்கு உடனடியாகத் தெரிய வராது. ஆயினும் திடீரென அதிகமாகப் போனால் மாத்திரமே நோயாளிகள் பயந்தடித்து ஓடிவருவார்கள்.

உணவுக் கால்வாயில் ஏற்படும் புற்றுநோய்களாலும் சிறிதுசிறிதாக குருதி இழப்பு ஏற்படும்.

பெண்களில் மாதவிடாய் அதிகமாக இருந்தாலும் குருதிச்சோகை ஏற்படும்.

அதேபோல மகப்பேற்றின் போதான குருதி இழப்பு அதிகமாக இருந்தாலும் குருதிச்சோகை ஏற்படும்.

குறைந்தளவு அல்லது தவாறான செங்குருதிக் கலங்கள் உற்பத்தியால்

உடலில் உள்ள கோளாறுகளால் அல்லது குருதி உற்பத்திக் தேவையான கனிமங்களும் விற்றமின்களும் போதாக்குறையாக இருப்பதாலும் உற்பத்தி குறையும். இவற்றிற்கான காரணங்கள் வெளிப்படையாகத்  தெரிய வராது. பரிசோதனைகள் தேவைப்படும்.

  • இரும்புச் சத்துக் குறைபாடு. குருதி உற்பத்திக்கு மிகவும் அவசியமான கனிமம் இரும்புதான். அது இல்லாவிட்டால் செங்குருதிக் கலங்களின் உறபத்தியில் வீழ்ச்சி ஏற்படும்
  • விற்றமின் B12  ,மற்றும் போலிக் அமிலம் ஆகியவை செங்குருதி கல உற்பத்தி மிகவும் அவசியமாகும்.
  • எலும்பு மச்சை அல்லது ஸ்டெம் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் செங்குருதி கல உற்பத்தி பாதிப்புறும்.

செங்குருதிக்கலங்களின் அகாலச் சிதைவு

செங்குருதிக்கலங்கள் பலவீனமாக இருப்பின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியின் வழமையான செயற்பாட்டில் ஏற்படும் அழுத்தத்தைத் தாங்க முடியாது விரைவில் வெடித்துச் சிதைந்துவிடும். இந்தவகை இரத்தசோகையை மருத்துவத்தில் Hemolytic anemia என்பார்கள். வழமைக்கு மாறான ஹீமோகுளோபினைக் கொண்டsickle cell anemia,  thalassemia ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை பரம்பரை அலகுகளின் காரணத்தால் ஏற்படுபவை.

இவற்றைத் தவிர பாம்பு சிலந்தி போன்றவை கடிப்பதால் ஏற்படும் விசம், சிறுநீரகம் ஈரல் ஆகியவற்றில் எற்படும் சிதைவுகள், குருதி உறைதல் பிரச்சனைகள், விரிந்த மண்ணீரல் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.

தடுப்பதற்கு உங்களால் செய்யக் கூடியவை

நெருங்கிய உறவில் திருமணம் செய்வதைத் தவிர்பதைத் தவிர பரம்பரையில் ஏற்படுபவற்றை தடுக்க உங்களால் பெரும்பாலும் எதுவும் செய்ய முடியாது.

நாம் பெருமளவில் காண்பது இரும்புச் சத்துக் குறைபாட்டால் அல்லது விற்றமின் குறைபாட்hல் ஏற்படும் இரத்தசோகைகள்தாம். இவற்றை நாம் எமது உணவுமுறையை சீர்செய்வதின் மூலம் திருத்தலாம். அல்லது தடுக்கலாம்.

பாலகர்களிலும் குழந்தைகளிலும் இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். தாவர போசனம் மட்டும் உண்பவர்களிலும் இது ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல பாலூட்டும் தாய்மார்களிலும் இரத்தப் போக்கு அதிகமுள்ள பெண்களிலும் ஏற்படலாம்

அத்தகையவர்கள் இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். 

இறைச்சி வகைகள், முட்டை மஞ்சள் கரு, ஈரல், சிப்பி மட்டி நத்தை போன்ற ஜந்துகள், கீரை, அகத்தி, போன்ற எல்லா கரும் பச்சை இலை வகைகள், கூனைப் பூக்கள் (Antichokes)  மற்றும் முந்திரிகை வத்தல், ரெசின்ஸ், பருப்;பு, சோயா, அவரை, உழுந்து போன்ற அவரையினங்கள் போன்றவை சில உதாரணங்களாகும்.

குறைந்தளவு காய்கறிவகை உண்பதும், சமைக்கும்போது கூடுதலாக அவிய வைப்பதும் போலிக் அமிலக் குறைபாட்டை ஏற்படுத்தலாம்.

மது மற்றும் கோப்பி போன்ற பானங்களை அதிகம் உட்கொள்வதும் இத்தகைய இரத்தசோகையை ஏற்படுத்தலாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.000.0

Read Full Post »

எமது பண்பாட்டில் உப்பு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதனால் தாய்மொழியில் பழமொழிகளும் வாய் மொழிகளும் உப்பைப் பற்றிப் பரவலாகப் பேசுகின்றன.

“உப்பிட்டவரை உள்ளவும் நினை..”, “உப்பிலாப் பண்டம் குப்பையிலே..”, “உப்புச் சப்பில்லாத விடயம்..” இவ்வாறு பல. 

istock_photo_of_salt_shaker

“பச்சை மிளகாய் சம்பல் நல்ல ரேஸ்டாக இருக்கு” சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டார் அவர். கடுகு போட்டு தாளித்த பச்சை மிளகாய்த் தேங்காய் சம்பலை வெள்ளைமா இடியப்பத்துடன் சேர்த்து அள்ளி வாயில் போட்டு சுவைத்தார்.

இவருடன் சேர்ந்து இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவியும் மகளும் அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்துடன் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தார்கள்.

“இந்த மனுசனுக்கு நாக்கு கெட்டுப் போச்சு” என்றாள் மனைவி. 

“கடைக்காரன் உப்பை அள்ளிப் போட்டிட்டான் போல கிடக்கு” என மகள் மனம் நோகாமல் கொமன்ட் பண்ணினாள்.

எமது உணவில் உப்பு

மொழி மத வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்களான நாம் அனைவருமே உப்புப் பிரியர்களாக இருக்கிறோம். தினசரி உட்கொள்ளக் கூடிய உப்பின் அளவானது 3.75 முதல் 5 கிராம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தபோதும் நாங்கள் 12.5 கிராம் வரை உட்கொள்கிறோம்.

AP-DIETARY-SALT-061510

இலங்கையில் ஆண்கள் பெண்களைவிட அதிகமாக உப்பை உட்கொள்கிறார்கள் என இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம்.

அதிலும் முக்கியமாக 20 முதல் 60 வயதுவரையான ஆண்கள், அவர்கள் நகர்புறத்தைச் சார்ந்தவர்களானாலும் சரி கிராமங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அதிகமாக உப்பை உள்ளெடுக்கிறார்களாம்.

சோற்றுக்கு உப்புப் போட்டுச் சமைப்பதும், கறிகளுக்கு உப்பும் உறைப்பும் செழிக்கப் போடுவதும் எமது தேசத்தின் பழக்கம். அதற்கு மேல் கடையில் வாங்கும் துரித உணவுகள் உப்பைத் தாரளமாகக் கொட்டித் தயாரிக்கப்படுகின்றன.

the-relationship-between-salt-and-heart-disease

கிழக்கு ஆசிய நாட்டவர்களான நாம் மேலைத் தேசத்தவர்களை விட அதிகம் உப்பை உண்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உப்பு என்பது யேஊட. அதிலுள்ள சோடியம் (Na) எனும் கனிமம்தான் பாதகங்களுக்கு முக்கிய பங்களிக்கிறது

அதிக உப்பின் பாதக விளைவுகள்

உப்பை அதிகம் உட்கொண்டால் பிரஷர் வரும், ஏற்கனவே பிரஷர் உள்ளவர்களுக்கு மேலும் அதிகரிக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்த செய்திதான். அதே நேரம் தினசரி 12 கிராம் உப்பை உட்கொண்டவர் அதனை 3 கிராம் ஆகக் குறைத்தால் பிரசரானது 3.6 முதல் 5.6 ஆல் குறையும் என ஆய்வுகள் சொல்லுகின்றன.

ஆனால் அதிக உப்பானது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியத்தையும் அதிகரிக்கும் என்பது பலரும் அறியாத செய்தியாக இருக்கலாம்.

உப்பு அதிகரிப்பதால் பிரஷர் அதிகரிக்கும். அதனாலதான்; மாரடைப்பு பக்கவாதம் ஆகியன வரும் என நீங்கள் எண்ணலாம். ஆனால் பிரஸர் அதிகரிப்பதால் மட்டும் இவ் ஆபத்துக்ள் வருவதில்லை. அதீத உப்பு நேரடியாகவே இரத்தக் குழாய்களிலும், இருதயத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பையும் பக்கவாதத்தையும் கொண்டு வரும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

ஆனால் உட்கொள்ளும் உப்பின் அளவை 12 கிராமிலிருந்து 3 கிராம் ஆகக் குறைத்தால் பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் நாலில் ஒரு பங்காலும், இருதய நோய்கள் வருவதற்கான சாத்தியம் மூன்றில் ஒரு பங்காலும் குறையும் என்ற நல்ல செய்தியையும் ஆய்வுகள் கூறுகின்றன.

அதீத உடல் எடைக்கு தவறான உணவு முறைதான் காரணம் என்ற போதும் கூடுதலாக உப்பு உட்கொள்வதும் ஒரு காரணமாகும்;. எண்ணெய். கொழும்பு, இனிப்பு மற்றும் மாப் பொருட்களை அதிகம் உட்கொள்வதே தவறான உணவு முறை என நாம் பொதுவாகக் கருதினாலும் அதிகமாக உப்பை உட்கொள்வதும் அதில் சேர்த்தியே.

உப்பை அதிகம் சேர்த்தால் தாகம் அதிகமாகும். தாகம் அதிகமாதால் இனிப்புள்ள பானங்களை அடிக்கடி அருந்துவம் எடை அதிகரிப்பிற்கு ஒரு காரணமாகிறது. முக்கியமாக குழந்தைகள் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி சாப்பிடுகிறார்கள். இவற்றில் உப்பு அதிகம். இதனால் ஏற்படும்தாகத்தைத் தணிக்க மென் பானங்களையும் இனிப்புள்ள ஜீஸ் வகைகளையம் குடிக்கிறார்கள். இதானால் எடை அதிகரித்து குழந்தைகள் குண்டாகிறார்கள்.

‘இவன் சாப்பிடுறதே இல்லை ஆனால் குண்டாகிறான்’ என அம்மாமார் சொல்வதுண்டு. அதற்கான காரணம் இப்பொழுது புரிகிறது அல்லவா?

இரைப்பை புற்றுநோய்

ஓஸ்டியோபொரோசிஸ்

சிறுநீரகக் கற்கள்

ஆஸ்த்மா பாதிப்பு தீவிரமடைதல்

போன்ற பல பிரச்சனைகளுக்கும் உப்பு காரணமாக இருக்கிறது என்பதை மறக்காதீர்கள்.

மறைந்திருக்கும் உப்பு உணவுகள்

‘இவருக்கு பிரஷர் என்றபடியால் நான் உப்போ போட்டு சமைப்பதில்லை’ என்றார் ஒரு இல்லத்தரசி. அவ்வாறு சமைப்பது நல்லதா கூடாதா என்பதையிட்டு பிறகு பார்க்கலாம். ஆனால் அவள் உப்பு போடாவிட்டாலும் கூட வேறு பல வழிகளில் அதீத உப்பு வேறு உணவுகள் வழியாக அவரையும் எங்களையும் சென்றடையும் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இன்று உணவு என்பது முற்று முழுதாக வீட்டு உணவு அல்ல. உணவகங்களில் கிடைக்கும் உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நேர்கிறது. அவற்றில் உப்பு அதிகமாகவே இருக்கிறது.

அதற்கு மேலாக பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்ண நேர்கிறது. அவற்றில் பெரும்பாலும் உப்பின் செறிவு அதிகமாகவே இருக்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், ஹம்பேர்கர் போன்ற இறைச்சி வகைகள், சோஸ் வகைகள், ஊறுகாய், அச்சாறு போன்றவை அதீத உப்பிற்கு நல்ல உதாரணங்களாகும்.

ஆனால் இவற்றில் மட்டுமின்றி நாம் சந்தேகிக்காத பல உணவுகளிலும் உப்பு அதிகமாக இருக்கிறது. பாண், கேக், பிஸ்கற் போன்றவற்றைச் சொல்லலாம்.

பிள்ளைகளும் பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடும் பொட்டேட்டோ சிப்பஸ் போன்ற பெரியல் வகைகளில் நிறைய உப்பு இருக்கிறது. பக்கற்றில் கிடைக்கும் உருளைக் கிழங்கு பொரியல் மாத்திரமின்றி, மரவெள்ளி, பாகற்காய் பொரியல்கள் யாவுமே உப்புப் பாண்டங்கள்தான்.

highsaltdietsf_600x450

ஓவ்வொரு ரோல்ஸ்சிலும் 230 மிகி வரையும், பிட்ஷா ஒரு துண்டில் 760 மிகி சோடியும் இருக்கிறதாம். பற்றிஸ், சமோசா, மிக்ஸர் போன்றவை சற்றும் குறைந்தவை அல்ல.

போத்தலில் அடைக்கப்பட்ட மினரல் வோட்டர்களின் சோடியச் செறிவு அதிகம் இருக்கலாம்.

சில வகை மருந்துகளிலும் Na அதிகமாக உண்டு. அஸ்பிரின், பரசிற்றமோல் போன்ற மருந்துகள் கரையக் கூடிய மருந்துகளாகக் கிடைக்கின்றன. சோடியம் பை கார்பனேட் சேர்ப்பதாலேயே அவை கரையக் கூடிய தன்மையைப் பெறுகின்றன. இவற்றில் சிலதில் உள்ள சோடியமானது ¼ தேக்கரண்டி உப்பின் அளவிற்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரின் தினசரி உப்பு உட்கொள்வு ஒரு தேக்கரண்டியளவே இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வலிக்கு பொதுவாக உட்கொள்ளபப்டும் டைகுளோபெனிக் மருந்தில் சோடியும் (Diclofenac Na) உள்ளது. இதனால்தான் வலி மாத்திரைகளை அளவு கணக்கின்றி உபயோகிக்கும் நோயாளிகளுக்கு பிரஷர் நோய் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்கள் பொதுவாக பழவகைகளையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்க்கச் சொல்வார்கள். இதற்குக் காரணம் அவற்றில் உள்ள நார்ப்பொருளாகும். அவை உணவு உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துவதால் நீரிழிவு அதிகரிக்காதிருக்க உதவுவதுடன் எடை அதிகரிப்பையும் குறைக்கும் என்பதாலாகும்.

ஆனால் பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்களிகளிலுள்ள கனிமமான பொட்டாசியமானது, உப்பில் உள்ள சோடியத்தின் பாதிப்பை குறைக்கும் என்பதையும் வலியுறுத்தலாம். எனவே உணவில் பழவகைகளை அதிகம் சேருங்கள்.

குருதியில் உப்பு குறைதல்

குருதியில் உப்பு குறைதலை மருத்துவத்தில்  (Hyponatremia)   என்பார்கள். ஆனால் இது உணவில் உப்பைக் குறைப்பதால் ஏற்படுவதல்ல.  இருதய வழுவல், சிறுநீரக வழுவல், ஈரல் சிதைவு, தைரோயிட் குறைபாடு போன்ற நோய்களால் ஏற்படும். கடுமையான வயிற்றோட்டம் வாந்தி போன்றவற்றால் நீரிழப்பு நிலை ஏற்படுவதாலும் இது ஏற்படலாம். இவை மருத்துவர்களால் உடனடியாக அணுக வேண்டிய பிரச்சனைகள் ஆகும்.

இருந்தபோதும் உணவில் உப்பின் தினசரி அளவை 1.5 கிராம் அளவிற்கு கீழ் குறைப்பது நீரிழிவு இருதய வழுவல் சிறுநீரக வழுவல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லதல்ல என அண்மைய மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.

இறுதியாக

உணவில் உப்பைக் குறையுங்கள். ஒருவரது தினசரி உப்புத் தேவை ஒரு தேக்கரண்டிக்கு மேற்படக் கூடாது. உப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட மற்றும் கடை உணவுகளை ஒதுக்குங்கள். உப்பைக் குறைப்பது நல்லது. 

ஆனால் முற்று முழுதாக உப்பில்லாத உணவு அவசியமல்ல.

பழவகைளை உணவுகள் அதிகம் சேருங்கள்.

பொதுவாக பலதரப்பட்ட போசாக்குகளும் அடங்கிய சமச்சீரான உணவுகள் (Balanced food)  ஆக உட்கொள்வது நல்வாழ்வற்கு உகந்தது.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளிவந்த கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

Read Full Post »

தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி
2014

0.0.0

நீங்களும் கலந்து கொண்டு
உங்கள் திறமைகள்
உலகெலாம் ஒளிர வழி செய்யுங்கள்

0.0.0

மேலும் விபரங்களுக்கு
கீழே கிளிக் பண்ணுங்கள்

*0.0.0*


Read Full Post »

மனித வாழ்வில் ஓற்றைத் துணை வாழ்வு

‘அன்றிலும் பேடும் போல’ இணையாக வாழ்ந்தார்கள் என்கிறோம். சீதைக்கு இராமன், நளனும் தமயந்தியும், சிவனும் உமையும் எனக் கொண்டாடுகின்றோம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மனித இனத்தின் மாண்பு என எண்ணுகிறோம்.

TN_154755000000

ஆனால் கோவலனுக்கு கண்ணகியும் மாதவியும் இருக்கவே செய்தார்கள். பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள். குந்தவி சூரியனுடன் இணங்கிய பின் பாண்டுவிற்கும் குழந்தைகள் பெற்றெடுத்தாள். அங்காங்கே பிறழ்வுகள் இருந்தபோதும் மனித இனத்தில் ஒருவனுக்கு ஒருத்தி அவர்களது பிள்ளைகள் எனக் குடும்பமாக வாழ்வது வழக்கமாகிவிட்டது.

ஒருதார மணம், ஒருதாரக் குடும்பம், ஒற்றை மணவாழ்வு, ஒற்றைத் துணை வாழ்வு என்றெல்லாம் பலவாறு சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் Monogamy என்கிறார்கள். இது எவ்வாறு வழக்கமாயிற்று. மனித வாழ்வின் கூர்ப்பில் வளர்ச்சியில் எப்பொழுது இது ஆரம்பித்தது என்பது பற்றி தெளிவான தரவுகள் கிடையாது.

monogamy-myth

ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் பறவைகள் பெருமளவு சோடிகளாகவே வாழ்கின்றன. 90% பறவைகள் சோடிகளாக வாழ்கின்றன எனச் சொல்கிறார்கள். ஆனால் மிருகங்களில் குறைவே பாலூட்டிகளைப் பொறுத்தவரையில் மிகக் குறைவான 3% வீதம் மட்டுமே சோடிகளாக வாழ்கின்றன.

மனித இனம் தோன்றிய காலம் முதல் ஒற்றை மண வாழ்வு இருந்திருப்பதற்கான சாத்தியமில்லை. மனித இனத்தின் பரிணாம வளரச்சியின் போது ஒரு சில காரணங்களினால் இது வந்திருக்கும் என நம்பலாம். அவை என்ன காரணங்களாக இருக்கலாம் என்பதையிட்டு விஞ்ஞானிகள் சில விளக்கங்களை சொல்லுகிறார்கள்.

introslide_7

  1. மனிதக் குழந்தைகள், சில மிருகக் குட்டிகளின் ஆரம்ப காலங்களில் அவற்றின் தேவைகள் அதிகம். அவற்றால் நடக்க முடியாது. தாமாக உணவு தேட முடியாது. தம்மைத்தாமே பாதுகாத்துக்;கொள்ள முடியாது. இவற்றின் காரணமாக ஒற்றைப் பெற்றோரால் அதன் தேவைகள் முழுவதையும் பூர்த்தி செய்ய வளர்த்தெடுப்பது முடியாத காரியம். ஆதனால் சோடியாக வாழ்வது அவசியமாயிற்று.
  2. இரண்டாவதாக அவர்கள் கூறும் காரணம் துணையைப் பாதுகாத்தல் (mate guarding) என்பதாகும். வேறு ஆண்கள் ஆண் மிருகங்கள் வந்து தனது துணையை கவர்ந்து செல்லாமல் இருப்பதைத் தடுப்பதற்காக சேர்ந்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
  3. தனது வாரிசைப் பாதுகாப்பதற்காகவும் துணையாக வாழ நேர்ந்தது என்கிறார்கள். ஒரு பெண்ணின் குழந்தையைக் கொன்றுவிட்டால் அவளது உடல் மற்றொரு குழந்தையைச் சுமப்பதற்கு தயாராகிவிடும் என்பதால் வேறு ஆண்கள் குழந்தையைக் கொன்று விடுமாம். கடுவன் பூனையிடமிருந்து தனது குட்டியைப் பாதுகாப்பதற்காக தனது குட்டிகளை தூக்கிக் கொண்டு ஓடும் தாய்ப் பூனைகள் ஞாபகத்திற்கு வரவில்லையா?

தங்கள் கருத்துகள் சரியானவையா என ஆராய்வதற்காக Christopher Opie தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் 230 வகையான மிருகங்களின் குடும்ப வாழ்வு சம்பந்தமான தரவுகளைத் தேடிப் பெற்று ஆய்வு செய்தனர். அவர்களது ஆய்வானது bushbabies, monkeys, apes and modern humans முதலான மிருகங்களின் புணர்வுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை, குட்டிகளின் இறப்பு விகிதம், பெற்றோரின் துணை போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

தங்களது ஆய்வுகளை 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த காலம் முதல் இற்றைவரை simulated evolution பண்ணினர். பல மிருகங்களில் பரிணாம வளர்ச்சியில் ஒற்றைத் துணை வாழ்வானது சில காலங்களி;ல் ஏற்றமும் தாழ்வும் கண்டதை அவ் ஆய்வுகள் ஊடாக உணர முடிந்ததாம்.

சிசுக்கொலையும் வாரிசுகளைப் பாதுகாத்தலும்

பல்லாயிரம் தடவைகள் தமது ஆய்வை மீள ஆய்ந்தபோது மிருகங்களின் ஒற்றைத் துணை வாழ்க்கைக்கு காரணம் ஒன்றே ஒன்றாத்தான் இருந்ததாம். ஆண்கள் தமது குட்டிகளைக் கொல்லும் பழக்கமான சிசுக்கொலையே அது எனத் தெரிய வந்தது.

‘சிசுக் கொலை ஏற்கனவே இல்லாமல் ஒற்றைத் துணை வாழ்வு வர வாய்ப்பு இல்லை. அதேபோல ஒற்றைத் துணை வாழ்வு இல்லாமல் பெற்றோரின் பாதுகாப்பு சிசுவிற்கு கிடைக்காது’ என்ற முடிவிற்கு தலைமை ஆய்வாளரான Christopher Opie வந்தார்

பரிணாம வளர்ச்சியில் மிருகங்களின் மூளையின் அளவு பருமனடைந்தமை, கூட்டங்களாக வாழத் தலைப்பட்டமை போன்றவை தனது கருத்திற்கு வலுச் சேர்ப்பதாக அவர் கருதுகிறார். மூளை பருமனடையும்போது குழந்தைகள் தங்குவதற்கான இடைவெளி நீண்டு செல்கிறது. குட்டிக்குப் பாலூட்டும் காலத்தில் தாயின் சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதில்லை. இதனால் அக்காலத்தில் அவளது கருப்பையானது மற்றொரு கருவைச் சுமக்க ஆயத்தமாவதில்லை. எனவே அவளை மீண்டும் கருவலுவுள்ளவளாக வேண்டுமாயின் சிசுக்கொலை ஆண்மிருகங்களுக்கு அவசியமாக இருந்தது என்கிறார். ஆனால் சோடியாக வாழும்போது சிசுக்கொலை நடப்பதில்லை.

சிசுக்கொலையைத் தடுப்பதற்கு சோடியாக வாழ்வதை விட வேறு வழிகள் ஏதும் கிடையாதா என நீங்கள் கேட்கக் கூடும்.

சிம்பன்சிக் குரங்குகள் இதற்கு ஒரு அற்புதமான வழியைக் கண்டன. புணரும் காலத்தில் பெண் சிம்பன்சிகள் தமது குழுவில் உள்ள அனைத்து ஆண்களுடனும் புணருமாம். இதனால் ஆண் சிம்பன்சிகளுக்கு இதன் தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு அவை சிசுக்கொலை செய்வதில்லையாம்.

001688-SB1

பறவைகளில் அது அதிகம் காணப்படுவதும் தேவையின் நிமித்தமே. பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு கூடு கட்ட வேண்டும். குஞ்சு பொரித்த பின் அவற்றிக்கு இரை தேடவும், காவலிருக்கவும் தாயும் தகப்பனுமாக இருவரும் அவசியம். அதனால் பறவைகளுக்கு ஒற்றைத் துணை வாழ்வு அதிதியாவசியமானது எனக் கொள்ளலாம்.

ஓற்றைத் துணை விடயமானது மனித இனத்தின் மூதாதையரில் பழக்கத்திற்கு வந்து  ஒரு லட்சம் வரைதான் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மாற்றுக் கருத்துக்கள்

owls-2_1903597i

வேறு சில விஞ்ஞானிகள் இந்த ஆய்வு முடிவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ‘ஒற்றைத் துணை எனச் சொல்லி ஆய்விற்கு எடுக்கப்பட்ட சில மிருகங்கள் வனங்களில் வாழ்பவையாக இல்லை. ஆந்தைக் குரங்குகள் வருடத்திற்கு ஒரு முறையே குட்டி போடுபவை. எனவே அவை தனது குட்டியை இழந்தாலும் அடுத்து புணர்வுக் காலத்திற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். ஏனைய பல இனக் குரங்குகள் ஆய்வில் சொல்லப்பட்ட அளவிற்கு ஒற்றைத் துணை மிருகங்கள் அல்ல’ என பல்வேறு காரணங்களைச் சொல்கிறார் Dr Maren Huck. இவர் டேர்பி பல்கலைக்க கழத்தில் மிருகங்களின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்பவராவார்.

மற்றொரு கட்டுரையாளரான Meg Barker மனிதர்களின் ஒற்றைத் துணை வாழ்க்கை முறைக்கு மிருகங்களில் ஆதாரம் தேடுவது அபத்தமானது எனக் கருதுகிறார். முழுமையாகத் தெளிவில்லாத நரம்பியல் விஞ்ஞானத்திலும் (neuroscience) பரிணாம வளர்ச்சி உயிரியலிலும் (evolutionary biology) ஆதாரங்களைத் தேடுவதை விடுத்து மனிதனது சமூக விஞ்ஞானத்திலும் மெய்யியலிலும் தேடுவதே பொருத்தமானது என வாதாடுகிறார்.

பரிணாம வளரச்சியின் போது மனித மூளையானது துரித வளரச்சி அடைவதும் அதனால் கருத் தங்குவதற்கான கால இடைவெளி அதிகரிப்பதும் காரணமாகலாம், அதேபோல உடலில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களுக்கும் பங்கு இருக்கலாம். ஆனால் அவற்றைவிட மனிதக் குழுக்களின் வாழ்க்கை முறைகள், சமூக ஊடாட்டங்கள், உளவியல் தாக்கங்கள் போன்ற அனைத்துமே ஒற்றைத் துணையா, பல துணையா, தேவைக்கு ஏற்ப துணையா என்பதைத் தீர்மானிக்கினறன எனலாம். biopsychosocial approach தேவை என்கிறார்கள்.

நாளாந்த வாழ்வில் துணையுடனான உறவுகளில் எத்தனை வித பிரச்சனைகளும் சஞ்சலங்களும் ஏற்படுகின்றன என்பதை ஒவ்வொருவரும் தனது உள் மன வேட்கைகளை திறந்த மனத்தோடு ஆராய்தால் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கக் கூடும். அதுவும் ஆண்களும் பெண்களும் வேலைக்குச் செல்லும் காலகட்டதில் நிரந்தரத் துணைகளுக்கு அப்பால் தற்காலிகத் துணைகளும் யதேச்சமான துணைகளுக்குமான சாத்தியங்களுக்கு குறைவில்லை.

ஒருவருடன் உறவில் இருக்கும் அதே நேரத்தில் தனது பாலியல் சுதந்திரத்தை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதையிட்டு பலர் சஞ்சலப்படுகிறார்கள். மேலை நாடுகளில் இது பற்றிய ஆலோசனைகளுக்காக மருத்துவர்களை நாடுவதையும் அறிய முடிகிறது. வெளி உறவுகள் சுகத்தைக் கொடுக்கும் அதே நேரம் அது ஏற்படுத்தும் உள்ளார்ந்த வலி பலரைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது.

உறவுக்கு நாட்டமிருக்கிறது. ஆனால் ஆண் குறி விறைப்படைவதில்லை என்ற சிக்கலோடு பல ஆண்கள் வருகிறார்கள்.

erectile-dysfunction-faucet

உறவு கொள்ளும் போது தாங்க முடியாத வலி பெண் உறுப்பில் ஏற்படுகிறது என்கிறார்கள் சில பெண்கள். நிதானமாக ஆராயும் போது திருமண உறவுக்கு அப்பாலான பால் உறவுகளால் ஏற்படும் குற்ற உணர்வு நோயாகப் பரிணமிப்பது தெரிய வருகிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுச் சூழலிலும், சமூக ரீதியான நிரப்பந்தங்களிலும் வாழும் எமது சமூகத்தில் இது ஆழமான மனத் தாக்கதை ஏற்படுத்துவது ஆச்சரியமல்ல.

ஆனால் எல்லாச் சமூகங்களும் ஒற்றைத் துணை வாழ்வை தமது பண்பாடாகக் கொள்வதில்லை. பலதார மணங்கள் உலகின் பல்வேறு சமூகங்களில் வழமையானதாக இருக்கின்றன. வெளிப்படையாக ஒருதார மண வழக்கமுள்ள சமூகங்களிலும் மறைமுகமாகவும் இரகசியமாகவும் பல துணைகள் இருக்கவே செய்கின்றன. கணவனை அல்லது மனைவியை தள்ளி வைத்துவிட்டு புது ஒற்றைத் துணையைத் தேடுவதை எதில் அடக்குவது?.

தசரதனுக்கு ஆயிரம் மனைவி என்றனர். எல்லோருடனும் அவன் உறவு கொள்பவனாக இருக்கிறான் என்றாலும், ஒரு நாளில் அவன் மூன்று பெண்களுக்கு மேல் உறவு கொள்வது சாத்தியமில்லை. இன்று ஒருத்தியுடன் உறவு கொண்டால் அடுத்த தடவை அவளுடன் சேர குறைந்தது ஒரு வருடமாகும் எனக் கணக்கிடலாம்.

 

இதைப் பெண்ணின் இடத்தில் வைத்துச் சிந்தித்துப் பாருங்கள். அவளுக்கு வருடம் ஒரு முறைதான் பாலியில் இன்பம் கிட்டும். எவ்வளவு பரிதாபம்! தசரதனின் வாள் துடித்து எழாவிட்டால், வாயில் காவலர்களுடனும் மந்திரிகளுடனும் அவர்கள் சுகித்திருப்பார்கள் என்பது நிச்சயம். இங்கு வெளிப்படையாக அவளுக்கு ஒற்றைத் துணை, அவனுக்கோ பல துணைகள். மணவாழ்வு பற்றிய மாற்றுக் கோணங்கள் இவை.

உண்மையில் மனித வாழ்வைப் பொறுத்த வரையில் ஆரம்ப காலங்களில் ஒற்றைத் துணை என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக இருந்திருக்கலாம். கால ஓட்டத்தில் அது பண்பாட்டு அம்சமாகவும் பொருளாதார தேவைகளின் நிமித்தமும் இருந்தது. ‘சொத்து வெளியே போகக் கூடாது என்பதற்காக நெருங்கிய உறவினரைத் திருமணம் செய்வது எமது சமூகத்தில் வழக்கமாக இருக்கவில்லையா?

ஆனால் இன்று பாதுகாப்பு பெருமளவு பிரச்சனையாக இல்லை. ஆண்களும் பெண்களும் சரிசமமாக உழைப்பதால் பொருளாதார ரீதியாக மற்றவரில் தங்கியிருக்க வேண்டிய அவசியமும் நீர்த்துப் போகின்றது. இதனால் இன்று துணை என்பது பெரும்பாலனவர்களுக்கு, காதலுக்கும் பாலியல் கிளர்ச்சிக்கும் மட்டுமே ஆனதாக மாறி வருகிறது. இவற்றின் காரணமாக பலர் இன்று துணையின்றி தனியாக வாழவும் நேர்கிறது. ஒற்றைப் பெற்றோராக குழந்தையுடன் வாழ்வதும் தொடர்கிறது.

மூத்த தலைமுறையினருக்கு அதிர்ச்சி அளிப்பது போல, ஒருபால் திருமணமும், சேர்ந்து வாழ்வதும் மறைவாக நிகழ்ந்த காலம் போய் சட்ட ரீதியான அங்கீகாரத்தை பல நாடுகள் வழங்க முன் வந்திருக்கினறன.

ஒரு சில நூற்றாண்டுகளுக்கிடையே மனித வாழ்வின் திருமண உறவிலும், பண்பாட்டு முறைகளிலும், பாலியல் சிந்தனைகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவை யாவுமே பெரும்பாலும் சமூக பொருளாதார காரணிகளாலும், தனிமனித சுதந்திரம் வலுப் பெற்றுள்ளதாலும் வந்தவை எனப் புரிந்து கொள்வது சிரமமானது அல்ல.

எனவே இத்தகைய ஆய்வுகளை ஆய்வு கூட பரிசோதனைக் குழாய்கள், நுணுக்குக் காட்டி, கணனி ஆகியவற்றிற்குள் மட்டும் முடக்கிவிடாது, சமூதாய மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது முக்கியமானதாகப்படுகிறது.

எனது ஹாய் நலமா (30 Nov 2013) புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »