Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2014

துருவங்களாகப் பிரிந்து கிடக்கும் சமூகங்களைக் கொண்டதாக இந்தச் சிறு தீவு தனக்குத்தானே கறுப்பு மை பூசிக் கொண்டு வாழ்கிறது. நாகரீகமும் நியாய உணர்வும் கொண்ட சமூகங்களிலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது.
???????????????????????????????
அதே நேரம் தம்மளவில் பூர்வீகப் பெருமையும், கலாசாரப் பாரம்பரியமும் கொண்டதாக இங்கு வாழும் ஒவ்வொரு இனமும் உணர்கின்றன. அதில் தப்பில்லை. ஆனால் அவர்களது சொல்லும் செயலும் மற்றவர்களது உள்ளங்களைப் புண் படுத்தாது இருக்கும் வரையே அது நியாயமானதாக இருக்க முடியும்.

மூர்க்கமான போர். அங்கவீனங்கள். பயங்கரமான அழிவுகள். உயிர் இழப்புகள். இவற்றின் பின்னரும் இங்கிருப்பவர்கள் ஒருவர் மனத்தை மற்றவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரிந்து கொள்ள முயல்வதாகவும் தெரியவில்லை. ஒவ்வொரு சமூகமும் தானே அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கவலை கொள்கிறது. ஏமாற்றம் அடைகிறது.

தேசிய உயர் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தாம் சார்ந்த சமூகம் பற்றிய உணர்வுடன் மட்டுமே வாழ்கிறார்கள். வேறு இனங்கள் வாழ்கின்றன. அவர்களுக்கும் தங்களை ஒத்த நீண்ட மத, மொழி, கலாசார பாரம்பரியம் உள்ளது என்பதைக் கண்டு கொள்வதில்லை. அவற்றை அவர்கள் கடைப்பிடிக்க உரிமை உள்ளவர்கள் என்பதையும் உணர்வதாகத் தெரியவில்லை.

Nallinakam_0003 A

பாதிக்கப்படாததாக தம்மை ஒருவரும் கருதுவதாகத் தெரியவில்லை.
ஆனால் சமூகத்தின் இவை யாவும் தானாக ஏற்பட்ட உணர்வு என்றும் சொல்ல முடியாது.

பத்திரிகை படிக்காத, ரீவி பார்க்காதவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் அவ்வாறு ஒற்றை வழிச் சிந்தனையில் இருக்க மாட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. அந்தளவிற்கு ஊடகங்கள் தம் மொழி சார்ந்த தனித்த ஒரு உலகிற்குள் தம் வாசகர்களை மூழ்கடிப்பவையாக உள்ளன. நடுநிலை பேண வேண்டிய ஆங்கில ஊடகங்கள் கூட ஒரு முனைப்பட்டவையாகவே இருப்பது விசனிக்க வைக்கிறது.

தமது வாக்கு வங்கிகளை பெருக்குவதற்காக இன ரீதியான, மத ரீதியான முரண்பாடுகளை வலுப்படுத்தும கருத்துக்களை அரசியல்வாதிகள் உரைக்கிறார்கள். மேற்குலகில் பிரஜா உரிமை பெற்றவர்களும், தங்களது பிள்ளைகளை அங்கு அனுப்பி தாய் மொழியில் பேசத் தெரியாது ஆங்கிலம் மட்டும் பேச வைத்தவர்களும் கூட இங்கு தத்தமது மொழிக்காகவும் இனத்திற்காகவும் வாய் கிழியப் பேசுகிறார்கள். இதுவும் எல்லா இனத்தவரிலும் இருக்கவே செய்கிறது.

???????????????????????????????

அரசியல்வாதிகளது அடிவருடிகளான குண்டர் கூட்டம் புனித முகமூடிகளைப் போர்த்திய வண்ணம் நஞ்சு உமிழ்கிறார்கள். ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து விற்பனையை அதிகப்படுத்துவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றன.

ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு சமூகமும் மற்றவர்களால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியே நினைக்கிறார்கள். பேசுகிறார்கள் பிரசாரமும் செய்கிறார்கள். தாங்கள் மற்றவர்களுக்கு இழைத்த அநீதிகள், வன்முறைகள், பாகுபாடுகள் பற்றி எந்தச் சிலமனும் காட்டுவதில்லை.

தாம் செய்த குற்றங்களை ஏற்றுக் கொள்வதும் அவற்றை பகிரங்கப்படுத்துவதும் அவசியமானது. ஆனால் அதற்கு மேலாக தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரிடையாகவும் பகிரங்கமாகவும் மன்னிப்புக் கோர வேண்டும். இத்தகைய செயற்பாடுகளே புரிந்துணர்வை வலுப்படுத்தும். நல்லியக்கத்திற்கு அத்திவாரம் இடும்.

அண்மையில் தென்னாபிரிக்காவைச் சார்ந்த Michael Lapsley வந்திருந்த செய்தியை பத்திரிகைகளில் நீங்கள் படித்திருக்கக் கூடும். துரதிஸ்டவசமாக எமது ஊடகங்கள் அதற்கு பெரு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர் Institute for the healing of memories (IHOM) என்ற நிறுவனத்தின் தலைவர். மனக் காயங்களை ஆற்றுப்படுத்தும் நிறுவனம் எனத் தமிழில் சொல்லலாம் என நினைக்கிறேன்.

போர் என்பது உருவேற்றி விடப்பட்டவர்களது பேயாட்டம்.

கொல்வதும் வெல்வதுமே அவர்களது இலக்கு. கொலை, கடத்தல், சித்திரவதை, அச்சுறுத்தல், அடக்குமுறை, சொத்தழிப்பு, சூறையாடல் யாவும் அதில் உள்ளடங்கும். இவற்றைத் தான் அவர்களின் உயர்பீடங்கள் அவர்களுக்கு போதித்தார்கள். இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்த்தார்கள்.

???????????????????????????????

போரில் மரணிப்பது உயிர்கள் மட்டுமல்ல, நீதி நியாயம் மனிதாபிமானம் போன்ற யாவுமே குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றன.

Michael Lapsley ஒரு போராளி. அதே நேரம் போரினால் பாதிக்கப்பட்டவரும் கூட. 1990 ல் ஒரு கடிதக் குண்டினால் தனது இரு கைகளையும் ஒரு கண்ணையும் இழந்தார். ஆனால் சோர்ந்து கிடக்காது இந்த (IHOM) நிறுனத்தை 1998ல் ஆரம்பித்தார். மனக்காயங்களை ஆற்றுவதற்கான ஒரே வழி அவற்றைப் பகிர்ந்து கொள்வதாகும்.

மனக் காயங்கள் உணர்வு ரீதியாதாக இருக்கலாம், உளவியல் தாக்கமாக இருக்கலாம் அல்லது ஆத்மீகம் சம்பந்தமானதாகவும் இருக்கலாம். பகிர்வது தாக்கத்தைக் குறைக்கும்.

ஆனால் உள்ளுறையும் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கு நம்பிக்கையானவர்கள் வேண்டும். புரிந்துணர்வும் அனுதாபமும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளைத்தான் போரினால் பிரிந்து கிடந்த பல நாடுகளில் IHOM வழங்கியது

DSC07532

அதே போல, இனங்கள் பிரிந்து கிடக்கும் நிலையை மாற்றுவதற்கு கலை இலக்கியங்களும் பெரும் பங்கு வகிக்க முடியும்.

அந்த வகையில் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கிய ‘நல்லிணக்கத்திற்கான ஆக்கங்கள்’ தொகுப்பு வெளி வந்திருப்பது இருண்ட வனத்தில் புத்தொளி பாய்ச்சுகிறது

இது சாதாரண நூல் அல்ல. பிளவுபட்டு பிரிந்து நிற்கும் இரண்டு இனங்களையும் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதியவை இவை.

22 சிறுகதைகளையும் இரு கவிதைகளையும் இந்த நூல் உள்ளடக்குகிறது

இவை ஒரு பக்கப் பார்வையான நூல் அல்ல. மூன்று இனங்களையும் சார்ந்த 23 எழுத்தாளர்கள் ஒன்று கூடி ஒருவருடன் ஓருவர் கலந்துரையாடி, கூடியிருந்து, பகிர்ந்து உணவு உண்டு. அருகருகே தூங்கி எழுந்து, தங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் வெளிப்படையாகப் பேசி, மற்றவர் துன்பங்களை தங்கள் துயரங்களாக உணர்ந்ததின் விளைவாகப் பிறந்தது.

தான் தனது என்ற உணர்விலிருந்து விலகி மற்றவர்கள் வாழ்வை அவர்களிடமிருந்து கேட்டறிந்ததிலிருந்து, அதைத் தன்னதாக உருவகித்து, கற்பனையால் கூர்மைப்படுத்தி எழுதப்பட்டவையாகும் இப் படைப்புகள்.

பகிரங்க பத்திரிகை விளம்பரங்கள் மூலம் படைப்புலகிலும், தேசிய ஒருமைப்பாட்டிலும் ஆர்வமுள்ள மூவின மக்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டது. பின் அவர்களிடமிருந்து 30 பேர் நேர் முகத் தேர்வு மூலம் தெரிந்து எடுக்கபட்டிருந்தனர். இவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடாத்தப்பட்டன.

???????????????????????????????

சிறுகதை கவிதை போன்ற படைப்புகளின் எவ்வாறு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனக் கலந்துரையாடப்பட்டது. பலஸ்தீனம், ரூவண்டா, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் மூர்க்கமான யுத்தத்தின் பின்னர் எவ்வாறு நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றிய குறும்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

நம் நாட்டில் பாதிக்கபட்ட இடங்களைச் சென்று பார்வையிடவும் செய்தார்கள். கலாசார பாரம்பரியங்களின் சின்னங்களாக இருக்கும் இடங்களையும் சென்று பார்த்தார்கள்.

இந்தப் பயிற்சிப் பட்டறைகளை பிரபல ஆங்கில எழுத்தாளரான ஷியாம் செல்வத்துரை நெறிப்படுத்தினார். இவர் பிறப்பு ரீதியாக இரு இனங்களைப் பிரதிநிதிப்படுத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது எழுத்துப் பயணத்தில் அனுபவங்கள் ஊடாக அறிந்து கொண்டவற்றை புதியவர்களுக்கு பட்டறிவுடன் கூடிய பயிற்சியாகக் கொடுத் தார்.

இதில் மூவினத்தவர்களது படைப்புகளும் இடம் பெறுகின்றன. ஆனால் அவை தமது இனத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இல்லை. ஒரு இனத்தைச் சார்ந்தவர் மாறுபட்டு நிற்கும் மற்ற இனத்தின் பார்வையில் படைப்புகளைத் தருவது இந்த நூலின் சிறப்பு அம்சமாகும்.

Nallinakam_0003 B

ஷியாம் செல்வத்துரை தொகுத்த ஆங்கில நூலின் தமிழ் வடிவம் இப்பொழுது இந் நூலாக வந்திருக்கிறது. திரு ஜெகான் பெரேரா தலையில் இயங்கும் இலங்கை சமாதானப் பேரவையால் இந்தத் தமிழ் நூல் வெளியிடப்பட்டுள்ளது. வரவேற்றகத்தக்க முயற்சி. இந்த நூலில் உள்ள படைப்புகள் பற்றிய எனது கருத்துக்களை இங்கு முன் வைக்கப் போவதில்லை.

இதைப் போலவே ஏனைய கலை இலக்கியத் துறைகளிலும் நல்லிணக்கத்தை அவாவும் படைப்புகள் சில வெளிவந்திருக்கின்றன.

The Art of Forgetting (2006) என்று ஒரு குறும்படம் இலங்கையில் வெளிவந்ததாக அறிகிறேன். எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை. 2002 முதல் 2005 வரையான காலப் பகுதியில் சாதாரண மக்கள் பட்ட துன்பத்தை லெளிக் கொணர்ந்திருந்தது. சந்திரன் இரட்ணம் அவர்களது The Road from Elephant Pass மற்றொரு முக்கிய சினிமா.

இவை போன்று ஒவ்வொரு துறைகளிலும் நல்லிணகத்தை நோக்கிய ஆக்கங்கள் வர வேண்டும். அதற்கு கலை இலக்கிய படைப்பாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

DSC07539

ஆனால் அதற்கு மாறான சூழல்தான் நிலவுகிறது. ‘தமிழ் இனத்தை வென்றாகிவிட்டது. மற்றவர்களையும் அடக்க வேண்டும். அடக்குவோம்’ என்ற எண்ணம் வேரூன்றி இருப்பதைக் காண்கிறோம். வெளிப்படையான பேச்சுக்கள் கேட்கின்றன. வெறுக்கத்தக்க செயற்பாடுகளும் தொடர்கின்றன.

நல்லிணக்கம் என்பது சகல இனங்களிலுமுள்ள பெரும்பாலனவர்களின் எண்ணமாகவோ பேசுபொருளாகவோ இல்லாதிருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.

அதற்கு இந்த நூலின் வரவும் அது பற்றிய கருத்தரங்கும் தூண்டுகோலக அமையும் என நம்பலாம்.

நல்லிணக்கத்திற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, இந்த நூல் எழுதப்படுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த செய்த தேசிய சமாதானப் பேரவையின் முயற்சிகளுக்கு நாம் நன்றி கூறவேண்டும். அதேபோல இந்த ஆய்வரங்கை ஒழுங்கு செய்த இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினருக்கும் எனது நன்றிகள்

நல்லிணக்கத்தை நோக்கிய நூல் வரவுகளும், கலந்துரையடல்களும் இன்னும் பரவலாக வரவேண்டும். ஆங்கிலம் சிங்களம் பேசுவோரிடையேயும் இவை தொடர வேண்டும்.

அப்பொழுதூன் இலங்கை போரில்லாத நாடு என்ற நிலையிலிருந்து மாறி மனக் காயங்கள் இல்லாத நாடு என்ற உயர் நிலையை அடைய முடியும்.

நூல் :- நல்லிணக்கத்திற்கான ஆக்கங்கள் – ஒரு தொகுப்பு

பதிப்பாசிரியர் :- ஷியாம் செல்வதுரை

பொறுப்பாசிரியர் தமிழாக்கம் :- மா.சே.மூக்கையா

வெளியீடு :- இலங்கை தேசிய சமாதானப் பேரவை
12/14 :- புராண விஹார வீதி
கொழும்பு 06

தொலைபேசி :- 0094 11 2818344
website :- http://www.peace-srilanka.org

e mail :- info@peace-srilanka.org

நல்லிணக்கத்திற்கான ஆக்கங்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் (20.07.2004) நான் ஆற்றிய தலைமையுரை

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.

Read Full Post »

மழையின் பின் மீண்டும் டெங்கு

தேவதைகளின் வழமையான இயல்புக்கு மாறாக சீறிச் சினந்து அடம் பிடித்துக் கொண்டிருந்தது இந்தத் தேவதை. படுக்கச் சொன்னபோது மாட்டன் என்றாள். காய்ச்சல் பார்க்க வாயைத் திற என்றபோது உதடுகளை இறுக மூடிக் கொண்டாள். தொட்டபோதுதான் காரணம் புரிந்தது. அனலாகக் காய்ந்து கொண்டிருந்தது.

 

Scientists_Make4088

காய்ச்சல் இரண்டு நாட்களாக. சாப்பிடுகிறாள் இல்லை. சினந்து கொண்டிருக்கிறாள். ஓங்காளம் இருக்கிறது. இரவு முழவதும் நல்ல தூக்கம் இல்லை. டெங்குக் காய்சலாக இருக்குமோ என்ற பயத்தில் வந்திருந்தார்கள்.

இரத்தப் பரிசோதனை செய்தோம். வைரஸ் காய்ச்சல்தான் என்பது உறுதியாயிற்று. மொத்த வெண்கல எண்ணிக்கை(Full blood count- FBC) குறைவாக இருந்தது. பிளேட்லெட் (Platelet வெண்குருதி சிறுதுணிக்கை) எண்ணிக்கை சரியாக இருந்தாலும் சாதாரண அளவின் கீழ் மட்டத்தில் இருந்தது. இது எல்லா வைரஸ் காய்ச்சலுகளுக்கும் பொதுவானதுதான்.

ஆயினும் அவளது கடுமையான காய்ச்சலும், உடல் மற்றும் கண் வலிகளும் இது டெங்குவாக இருக்கும் என்ற சந்தேகத்தையே எழுப்பியது. எனவே உறுதி செய்வதற்காக இரத்தப் பரிசோதனை செய்வதற்கு மறுநாளும் வரச்சொன்னோம்.

இரண்டாம் நாள் பார்த்தபோது காய்ச்சல் சற்று குறைந்திருந்தது. உடல் வலிகளும் குறைந்து குழந்தை அமைதியாக இருந்தாள். ஆயினும் இரத்தப் பரிசோதனையில் பிளேட்லெட் (Platelet)  எண்ணிக்கை மேலும் குறைந்திருந்தது. ஆயினும் ஆபத்தான எண்ணிக்கை எல்லையை எட்டவில்லை.

இருந்தபோதும் ஆபத்து எல்லையை அவள்  இன்னமும் தாண்டவில்லை.

investigation-in-dengue-3-638

மூன்றாம் நாளும் அந்தச் சின்ன அழகிக்கு இரத்தம் குத்தி எடுத்துப் பரிசோதனை செய்து வேதனைப்படுத்த மனம் விரும்பாத போதும் வேறு தேர்வு இருக்கவில்லை. மூன்றாம் நாள் அவள் வரும்போது அவளுக்கு காய்ச்சல் ஆரம்பித்து 5 நாட்கள் ஆகிவிட்டது. மான்குட்டி போல துள்ளிக் குதித்து வந்தாள். ‘காலையில் வழமைபோலச் சாப்பிட்டாள். விளையாடுகிறாள்’ என்று தகப்பன் கூறினார்.

சாதாரண டெங்கு காய்ச்சல்

இருந்தபோதும் அவள் உள்ளங் கைகளைக் கசக்கிக் கொண்டிருந்தது என் கண்களில் பட்டது. ஒரு சிலரில் டெங்கு குணமாகி வரும்போது இத்தகைய உள்ளங்கை நமைச்சல் எடுப்பது பற்றி அண்மைய மருத்துவ சஞ்சிகைகளில் தகவல் வந்திருந்தமை நினைவில் வந்து மனதை அல்லற்படுத்தியது. மீண்டும் இரத்தப் பரிசோதனையை தவிர்க்க முடியாது செய்தோம். இம்முறை மூன்று பரிசோதனைகள். முன்பு இருதடவைகள் செய்த அதே முழு இரத்த எண்ணிக்கையுடன், ஈரல் செயற்பாட்டிற்கான பரிசோதனைகள் (SGPT,SGOT), மற்றும் டெங்கு அன்ரிபொடி டெஸ்ட்(Dengue Antibody) ஆகியவையும் செய்தோம்.

முதல் இரண்டு பரிசோதனைகளிலும் எந்த வித்தியாசமும் இல்லை. அவள் ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டின. ஆயினும் டெங்கு அன்ரிபொடி டெஸ்ட் பொஸிடிவ் ஆக இருந்தது. அதாவது அவளுக்கு வந்தது டெங்குக் காய்ச்சல்தான் என்பது உறுதியாகிறது. ஆயினும் இது சாதாரண டெங்கு காய்ச்சல்

முடிவைக் கூறியதும் தந்தை பரபரத்தார். விளக்கம் அளித்தேன்.

சாதாரண டெங்குக் காய்ச்சலானது சாதாரண வைரஸ் காய்ச்சல் போல எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறிவிடும். 50 சதவிகிதமானவர்களுக்கு இப்படித்தான் நடக்கும். எந்தவித சிகிச்சைகளும் தேவைப்படாது. மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். இது சாதாரண சிகிச்சைகளுடன் குணமாகும். இந்தப் பிள்ளைக்கும் அவ்வாறே குணமாகிவிட்டது.

டெங்கு குருதி இரத்தப் பெருக்கு காய்ச்சல்

மற்றொருவர் இளம்தாரி. நான்கு நாட்களாக காய்ச்சல். வேறு மருத்துவம் செய்தும் குணமாகாததால் என்னிடம் வந்திருந்தார். தலைச் சுற்று, நிலை குலைவு ஏதும் இல்லை என்றார். ‘எனக்கு ஒன்றும் இல்லை இவர்கள் நட்டுப் பிடித்து கொண்டு வந்தார்கள்’ என்றார். பரிசோதித்ததில் சூடு 100 அளவில் காய்ந்தது. ஈரல் வீங்கியிருக்கவில்லை. இரத்த அழுத்தம் நாடித் துடிப்பு எல்லாம் நன்றாக இருந்தது. பொதுவாக உடல்நிலை நன்றாக இருந்தது. ஆயினும் சரும நிறம் சந்தேகம் அளிப்பதாக இருந்தது. உடனடியாக இரத்தப் பரிசோதனைகள் செய்தபோதும் திடமான முடிவுகளைக் கொடுக்கவில்லை.

மறுநாள் மீண்டும் பரிசோதித்தபோது குருதியில் சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. மூக்கால் சற்று இரத்தம் வந்ததாகவும் சொன்னார். ‘டெங்கு குருதி இரத்தப் பெருக்கு காய்ச்சல்’ என்பது நிரூபணமானது. உடனடியாக அனுமதித்தோம்.

அடுத்த வாரம் வேறு ஒருவரை இதே நபர் கூட்டி வந்திருந்தார். ‘சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு போனதால் எனக்குப் பிரச்சனை ஏற்படவில்லை’ என்றார் தப்பிவிட்ட மகிழ்ச்சியில்.

கண்களில் இரத்தக் கசிவு, மூக்கால் இரத்தம் வடிதல், வாந்தியுடன் இரத்தம் போன்ற பயங்கரமான அறிகுறிகள் இருந்தாலும் இவர்களில் 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள். தப்பிவிடுவார்கள். ஒரு சிலர் மட்டும் அடுத்த நிலைக்குப் போகக் கூடும்.

டெங்கு அதிர்ச்சி நிலை

மிக ஆபத்தானது ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ ஆகும். இவர்கள் மிகக் குறைந்த 2 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இது வரும். இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துமனைகளிலேயே முடியும்.

டெங்கு அதிர்ச்சி நிலைகான நவீன சிகிச்சையில் உடலின் திரவ நிலையை சரியான அளவில் பேணுவதே முக்கியமானது. வெளியேறும் சிறுநீரின் அளவைக் கண்காணித்து அதற்கேற்பவே நீராகாரம் முதல் நாளம் ஊடான திரவம் கொடுப்பது வரை கொடுப்பார்கள்.

இந்த அதிர்ச்சி நிலையானது காய்ச்சல் தணியும் நிலையிலேயே வெளிவரும். எனவே காய்ச்சல் தணிந்த போதும் நோயாளியின் பொதுவான உடல் நிலை திருப்தியாக இல்லாவிடின் மருத்துவரைக் காண வேண்டும்.

கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை, கடுமையான வயிற்று வலி, வாந்தி, கடுமையான சோர்வு, உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல், சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் காய்ச்சல் தணிந்த பின்னரும் இருந்தால் அது ஆபத்தாகலாம்.

மேலே கூறிய உதாரணங்களைக் கொண்டு டெங்கு காய்ச்சலின் மூன்று பிரிவுகளையும் புரிந்து கொள்ள முடியும்.

பீதிக் காய்ச்சல்

‘கைகால் உளையுது மேல் நோகுது. துலையிடிக்குது தும்முது’ என மிகுந்த ஆர்ப்பாட்டத்தோடு வந்தார் மூன்றாமவர் மனைவியுடன். ‘ நான் வேலை செய்யிற இடத்திலை இரண்டு பேருக்கு டெங்கு வந்தது. எனக்கும் டெங்குவோ’ எனப் பயந்தார். கடுமையான காய்ச்சல் இல்லை. உடல் மற்றும் இரத்தப் பரிசோதனைகளும் சரியாக இருந்தது. ‘இரண்டு நாள் பொறுத்து மீண்டும் இரத்தப் பரிசோதனை செய்வோம்’ என்றேன்.

‘இல்லை பயமாக்கிடக்கு. நான் வாட்டிலை நிக்கப் போறன்’ என்று கூறிச் சென்றார். மறுநாள் காலை மீண்டும் வந்தார். ஆஸ்பத்திரியிலை நிப்பாட்ட மாட்டன் என்றிட்டாங்கள். வாட்டிலை சரியான சனமாhம்.’

அடுத்து இரண்டு நாட்கள் பரிசோதித்துப் பார்த்தும் அவருக்கு எதுவும் இல்லை. இவருக்கு டெங்கு வரவேயில்லை. வெறும் பீதிக் காய்ச்சல்.

நீங்கள் செய்யக் கூடியவை எவை?

சாதாரண காய்ச்சல்கள் தடிமன், மூக்கடைப்பு, தும்மல் தலையிடி, தொண்டை வலி, சலக்கடுப்பு, வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகளுடன் வரும். வந்த உடனேயே மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை. ஓரிரு நாட்கள் பரசிற்றமோலை அளவுடன் கொடுத்துப் பாரக்கலாம்.

ஆனால் டெங்கு காய்ச்;சலானது ஆரம்பத்திலேயே மிகக் கடுமையாக இருக்கும். 104 – 105 எனக் கடுமையாக இருக்கும். பொறுக்க முடியாத உடல் மற்றும் மூட்டு வலிகள் இருக்கும். கண்ணுக்குப் பின் குத்துவது போன்ற தலையிடியும் இருக்கும். வயிற்று வலி வாந்தி பின்னர் வரக் கூடும். மேற் கூறிய கடுமையான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைக் காணுங்கள்.

காய்ச்சல் மற்றும் உடல் வலியைத் தணிக்க பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது. அளவிற்கு மீறிய பரசிற்றமோல் ஈரலைப் பாதிக்கும்.

பரசிற்றமோல் மருந்தைச் சரியான அளவில் கொடுத்தும் காய்ச்சல் தணியவில்லை எனில் னுநபெரந யவெபைநn  பரிசோதனை செய்வது உதவக் கூடும். ஆனால் இப் பரிசோதனையானது காய்ச்சல் ஆரம்பித்த முதல் 24 மணிநேரத்திற்குள் மட்டுமே சரியான முடிவைக் கொடுக்கும் என்பதால் பெரும்பாலும் உதவுவதில்லை.

புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.காய்ச்சல் கடுமையாக இருந்தால் இளம் சூட்டு நீரால் ஸ்பொன்ஞ் பண்ணுவது குழந்தைக்கு இதமாக இருக்கும்.

ஓய்வு மிக முக்கியமானது. பரீட்சை வருகிறது, டான்ஸ் பயிற்சி, வெளியூர்ப் பயணம் என்றெல்லாம் சொல்லி கடுமையான மருந்துகளைக் கொடுத்து வேலைக்கோ பாடசாலைக்கோ அனுப்ப முயற்சிக்க வேண்டாம்.

போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.

சிறுநீர் வழமைபோலப் போகிறதா என்பதை அவதானிக்க வேண்டும். மிகக் குறைவாக வெளியேறுவதுடன் கடுமையான தாகம் இருந்தால் அதை மருத்துவருக்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள்.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் FBC இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். முதல் நாளிலிலேயே செய்ய வேண்டியது ஏன், எப்போது என்பது பற்றி ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படுமாயின் தினமும் ஒரு தடவையோ இரு தடவைகளோ செய்ய வேண்டி நேரலாம்.

டெங்கு ஏற்படுத்தும் வைரஸ் கிருமியானது நோயளியின் உடலில் சுமார் 5 நாட்களுக்கு. ஆனால் கடுமையான தாக்கம் 4வது அல்லது 5வது நாளிலேயே உச்ச நிலையில் இருப்பதால் அந்நேரத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். அந்நேரத்தில் நோயாளியின் இரத்தக் குழாய்கள் பாதிப்புற்று இரத்தம் அல்லது இரத்தப் பாயம் (plasma) குழாய்களை விட்டு வெளியேறுவதாலேயே ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ ஏற்படுகிறது.

சிவத்த நிறமுடைய பானங்களையோ உணவுகளையோ கொடுப்பதைத் தவிருங்கள்.

இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் அதாவது இந்த ஜீன் வரை சுமார் 14152 பேர் டெங்கு எனச் சந்தேகிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 59 சதவிகிதமானவர்கள் சனநெருக்கடி மிக்க மேல் மாகாணத்திலேயே இனங் காண்பட்டுள்ளனர்.

எமது வீட்டை, எமது சுற்றுச் சூழலை, எமது பாடசாலைகளை, எமது தொழிலகங்களை நுளம்பு இல்லாத இடங்களாக மாற்றுவதால்தான் டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுக்க முடியும். இதில் ஒவ்வொரு குடிமகனதும் பங்களிப்பு அவசியம் என்பதை மறக்க வேண்டாம். அதில் நீங்களும் நானும் ஒவ்வொருவரும் அடங்குகிறோம்.

அவ்வாறு நுளம்பு பெருகுவதைத் தடுத்தால் டெங்கு தனது கோர முகத்தைக் காட்ட முடியாது முடங்கி அடங்கிவிடும்.

இக் கட்டுரையை ஒக்டோபரில் பிரசுரிக்கிறேன்.

அண்மையில் நவராத்திரியை ஒட்டிப் பெய்த மழையின் பின்னர் மீண்டும் டெங்கு காய்சலை கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் காண முடிகிறது

அவதானமாக இருங்கள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

 

0.0.0.0.0

 

Read Full Post »

அடுத்த நோயாளியைக் காணவில்லை. சரியான வேலை நேரம். எல்லோருக்குமே நேரம் முக்கியம் என்பதால் ஒருவர் பரிசோதனை அறையை விட்டு வெளியேறியதும் அடுத்தவர் நுழைந்து விடுவார். காலத்தை வீணாக்க மாட்டார்கள். இப்ப ஏன் தாமதமாகிறது?

‘மொபைலில் பேசுவதால் காலதாமதம் ஆகிறதோ. அல்லது நடை தளர்ந்த முதிர்ந்த நோயாளியோ’ எனச் சிந்திக்கும்போதே வாசலில் அரவம் கேட்டது. வந்தவர் இளம் நோயாளி. நடக்க முடியாத முதுமை அல்ல. பார்த்த உடனேயே அவரது பிரச்சனை புரிய ‘என்ன நடந்தது’ எனக் கேட்டேன்.

‘காலமை வெள்ளனக் குளிகும்போது காலுக்கு சோப் போடக் குனிஞ்சனான். நிமிரவே பாடாப் போச்சு. பிடிச்சுப் போட்டுது’ என்றார். ஆம் இடுப்பு வலி. நாரிப்பிடிப்பு என்றும் சொல்லுவார்கள். குளிர் நேரம் குனிந்தபோது இசகுபிசகாகப் பிடித்து விட்டது

7b4057be83baea6f1e707bd6c9ea7fda

இடுப்பு வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முண்நாண் எலும்பு தேய்ந்ததால் இருக்கலாம், முண்நாண் எலும்புகளுக்கிடையே நரம்புகள் அழுத்தப்படுவதால் இருக்கலாம். அல்லது தசைப் பிடிப்பாகவும் இருக்கலாம். இங்கு நான் காரணங்களை அலசப் போவதில்லை.

இதைத் தடுப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

வாழ்க்கை நடைமுறைகள்

தினசரி உற்சாகமாக உடல் உழைப்புடன் இயங்குங்கள். அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள்.

மனித வாழ்வானது நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதற்கானது அல்ல. இன்றைய தொழில்கள் பலவும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை அடிப்படையாகக் கொண்டவை. விமானம் கார் பஸ் போன்றவற்றில் பிரயாணம் செய்யும் போதும் நீண்ட நேரம் உட்கார நேர்கிறது. இவற்றால் இடுப்பு வலி ஏற்படும் ஆபத்து அதிகம்.

எனவே வேலை தொழில்கள் செய்யும் போதும் பிரயாணம் பண்ணும் போதும்  மணித்தியாலயத்திற்கு ஒரு தடவையாவது எழுந்து முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின் மீண்டும் உட்காருவது அவசியம்.

உட்காரும் போது முதுகை வளைத்து சொகுசு உட்காரல் வேண்டாம். செங்குத்தாக முதுகை நிமிர்த்தி அதை 90 பாகையில் வைத்தும் உட்காருவதும் கூடாது.

தற்கால நல்ல நாற்காலிகள் செங்குத்தாக இருப்பதில்லை. 15 பாகை பிற்புறமாகச் சரிந்திருப்பதை படத்தில் காணலாம். அதில் முதுகுப் புறமும் குண்டிப் பகுதியிம் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள்

இருக்கையின் உயரமும் முக்கியமானது.

உயரம் குறைந்து கதிரைகள் ஆகாது. உட்கார்ந்திருக்கும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படியானதும், முழங்கால்கள் செங்குத்தாக மடிந்திருக்கவும் கூடிய உயரம் உள்ள கதிரைகளாக தேர்ந்தெடுத்து உட்காருங்கள்

உட்காரும் போது மட்டுமின்றி ஏனைய நேரங்களிலும் உங்கள் முதுகு கழுத்து இடுப்பு போன்ற இடங்களில் உள்ள இயற்கையான உடல் வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது அவசியம்.

நிற்கும் போதும் இது முக்கியமானது. உடலுக்கு அசௌகரியமான நிலைகளில் அதிக நேரம் நிற்க வேண்டாம். அவ்வாறு நிற்க நேர்ந்தால் அடிக்கடி உடலின் நிலையை மாற்றி மாற்றி நிற்பது அவசியம்.

தச்சு வேலை, அச்சக வேலை, உடுப்பு அயன் பண்ணுவது, சமையல் செய்வது போன்ற நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் பாதகத்தை ஏற்படுத்தும்.

படங்களில் காட்டிய முறைகளைப் பாருங்கள்.

அவ்வாறன தருணங்களில் ஒரு காலை 6 அங்குலம் முதல் ஒரு அடி வரையான உயரமுள்ள ஒரு சிறிய ஸ்டுல் அல்லது பலகை மேல் உயர்த்தி வைப்பது அவசியம். இது முள்ளந் தண்டின் வளைவை இயல்பாக்கி, அதன் வேலைப் பளுவைக் குறைத்து இடுப்பு வலி ஏற்படாது தடுக்கும்.

முன்புறம் வளைந்து நின்று செய்யும் வேலைகளும் வலியை ஏற்படுத்தலாம். எனவே அதைத் தவிர்த்து முதுகை சற்றே நிமிர்த்தி நின்று செய்யவும்.

பல தருணங்களில் நாம் எமது முதுகை வளைத்து குனிய வேண்டிய அவசியம் நேர்கிறது. ஆரம்பித்தில் சொன்னவர் குளிககும்;போது காலுக்கு சோப் போட முயன்றபோது பிடித்தது. அதே போல குழந்தையைத் தூக்கும்போது, கீழே விழுந்த பென்னசில் பேனை கத்தி போன்ற பொருட்களை எடுக்க முயலும்போதும் பிடிப்பு ஏற்படலாம். இவ்வாறான பல தருணங்கள் நாளாந்தம் ஏற்படவே செய்யும்.

அதே போல பாரமான பொருட்களைத் தூக்க முயலும் போது இடுப்பு பிடிப்பது மிக மிக அதிகம்.

இவ்வாறான வேலைகளின் போது கால்களை சற்று அகட்டி வையுங்கள். முதுகை வளைக்காது, முழங்கால்களை மடித்து கீழே இருப்பதுபோல உங்கள் உடலைப் பதித்து ஆறுதலாகவும் மெதுவாகவும் படத்தில் காட்டியவாறு பொருட்களைத் தூக்கினால் வலி ஏற்படாது தவிர்த்துக் கொள்ளலாம்.

முடியுமானால் இரண்டு பேர் சேர்ந்து பாரமான பொருட்களைத் தூக்குவது மேலும் உசிதமானது.

தூக்கும்போது பொருளை உங்கள் உடலுக்கு அருகாக வைத்துத் தூக்க வேண்டும். கைகளை நீட்டியபடி உங்கள் உடலுக்கு தூரத்தில் அப் பொருள் இருந்தால் முதுகு எலும்பிற்கு பாதிப்பு ஏற்படும். தூக்கும் பொருளின் அழுத்தம் முதுகு எலும்பில் தாங்காது உங்கள் வயிற்றறைத் தசைநார்களில் பொறுக்குமாறு தூக்குவதும் நல்லது.

அலமாரி, சோபா, போன்ற பாரமான பொருட்களை அசைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை இழுப்பதற்குப் பதிலாகத் தள்ளுவது நல்லது

பயிற்சிகள்

உங்கள் உடலுக்கு பயிற்சிகள் கொடுப்பது அவசியம். தினமும் ஏதாவது பயிற்சி செய்யுங்கள். நீந்துவது நடப்பது ஓடுவது போன்ற எதுவும் உதவும். இடுப்பு வலி ஏற்படாது தடுப்பதற்கு வயிற்றை தசைகளையும், முதுகுப் புறத் தசைகளையும் வலுவாக வைத்திருக்க வேண்டும். தசைகளை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவையும் ஆக்கும்.

படங்களில் காட்டியுள்ள பயிற்சிகள் இதற்கு உதவும். 

முதலாவது பயிற்சி படுத்திருந்தபடி உங்கள் ஒரு முழங்காலை மடித்து நெஞ்சு வரை கொண்டு செல்வதாகும். முதலில் ஒரு காலில் செய்யுங்கள். பிறகு மற்றக் காலில் செய்யுங்கள். இறுதியாக இரண்டு கால்களையும் சேர்த்துச் செய்யுங்கள். 

பத்துத் தடவைகள் செய்யலாம்.

முதுகைப் பிற்புறமாக வளைப்பது மற்றொரு நல்ல பயிற்சியாகும். முகங் குப்புறப் படுங்கள். கைகளை  படத்தில் காட்டியபடி வைத்து உந்தி உங்கள் முதுகுப் புறத்தை பிற்புறமாக வளையுங்கள். 5-10 தடவைகள் செய்யுங்கள்.

கால்களைச் சற்று அகட்டி வையுங்கள்.

படத்தில் காட்டியபடி தோள்பட்டையை வலது புறமாகச் சரியுங்கள். மீண்டும் அதே மாதரி இடது புறம் சரியுங்கள். இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள்.

வேறு ஆலோசனைகள்

இவற்றதை; தவிர உங்கள் எடையைச் சரியான அளவில் பேணுவது அவசியம். உளநெருக்கீடு, மனச் சஞசலம், பதகளிப்பு போன்ற உளவியல் பிரச்சனைகள் தனைகளை இறுகச் செய்யும் ஆதலால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

புகைப்பவராயின் அதைத் தவிருங்கள். புகைத்தல் குருதி ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். புகைப்பவர்களுக்கு மாரடைப்பு அதிகமாக வருவதற்குக் காரணம் அதுதான். அதேபோல தசை நார்களுக்கான குருதி ஓட்டத்தையும் குறைக்கும் என்பதால் அவற்றிலும் பாதிப்பு ஏற்படும்.

படுக்கை கட்டில் மெத்தை போன்றவை வளைந்து தொய்யாததாக இருப்பது அவசியம். தொய்ந்த  ஸ்பிரிங் கட்டில்கள் கூடாது. நிமிர்ந்து படுப்பராயின் முழங்கால்களுக்கு கீழ் தலையணை ஒன்றை வைப்பது உதவலாம். சரிந்து படுப்பராயின் முழங்கால்களுக்கு இடையில் வைக்கலாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் (21.04.2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

குதிக் காலில் வலி என மருத்துவர்களிடம் வருபவர்கள் பலர்

காலையில் படுக்கையிலிருந்து எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது அல்லது ஓய்வாக இருந்துவிட்டு நடக்க ஆரம்பிக்கும்போது வலி என்பார்கள்.

குதிக் கால்வாதம் எனப் பலரும் சொல்வார்கள். வாதம் என்று சொன்னாலும் இது பொதுவாக மூட்டு நோய் அல்ல. பொதுவாக தசைகள் சவ்வுகளில் ஏற்படும் அழற்சிகளால் ஏற்படுகின்றன.

குதிக் காலில் வலி வருவதற்கான முக்கிய காரணங்கள் எவை?

plantar-fasciitis-ADAM

  • மிக முக்கிய காரணம் பாதத்தின் அடிப் பாகத்தில் இருக்கும் சவ்வுகளில் ஏற்படும் அழற்சியாகும்.
  • நடக்கும்போது ஒருவரின் பாதங்கள் சரியாக நிலத்தில் பதியாமல் உட்பக்கமாகவோ வெளிப்புறமாகவோ சற்று சரிந்து நடந்தாபல் அவ்வாறான வலி ஏற்படலாம்.
  • பாதத்தின் குதிப் பகுதியில் உள்ள கல்கேனியம் என்ற பிரதான எலும்பில் வழமைக்குமாறான எலும்புத் துருத்தல் இருந்தால்.
  • கெண்டைக் காலின் பிரதான சவ்வான அக்கிலிஸ் ரென்டனில் ஏற்படும் அழற்சியும் வலியை ஏற்படுத்தலாம்.
  • பாதத்தின் மூட்டுகளில் ஏற்படக் கூடிய காயங்கள், உருக் குலைவுகள், ரூமற்ரொயிட் வாதம் அல்லது வேறு ஏதாவது நாட்பட்ட நோய்கள் காரணமாகவும் வரலாம்.

உங்கள் வலி எங்கு எந்நேரத்தில் எவ்விடத்தில் வருகிறது போன்ற விடயங்களை சரியாக அவதானித்து மருத்துவருடன் கலந்து ஆலோசித்து, நோய்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சுகம் காணலாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் (3rd December 2013) வெளியான கட்டுரை 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

“அம்மா ஒரே தூக்கமா இருக்கிறா. கூப்பிட்டால் எழும்புறா இல்லை. ஒருக்கால் போய்ப் பாருங்கோ” மகன் சொன்னார்.

அவர் பேசியது லண்டனில் இருந்து.

fainted lady

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சென்ற வாரம்தான் அம்மா வீடு திரும்பியிருந்தார். வீட்டில் கூட இருந்த மகள் அவசர அலுவலாக ஊருக்குப் போய்விட்டா.

பராமரிப்பு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தாதிப் பெண்தான் பராமரிக்கிறாள். மற்ற மகள் சற்றுத் தள்ளி வேறு வீட்டில் இருக்கிறா. ஒரு நாளுக்கு இரண்டு தடவைகள் வந்து பார்த்து ஆக வேண்டியவற்றைச் செய்து திரும்புவா.

பார்த்தவுடனேயே அது சாதாரண தூக்கம் அல்ல எனப் புரிந்தது. மயக்கநிலை. இரத்த குளுக்கோசைப் பார்த்தபோது அது 40 ல் நின்றது. Hypoglycemia என்போம். இரத்தத்தில் சீனியின் அளவு சாதாரண அளவிலும் குறைவது என அர்த்தமாகும்.

மற்றொரு ஐயாவின் நிலை முற்றும் மாறானது.

அண்மையில்தான் நீரிழிவு எனக் கணடறிந்திருந்தோம். “நீங்கள் தந்த குளிசைப் போட்டால் எனக்கு களைக்குது. இரத்தத்திலை சீனி குறைஞ்சபடியால்தான் தலைச் சுத்து வரும் என்று நண்பர் சொன்னர். நான் தலைச்சுத்து வந்தவுடன் சீனியைப் வாயிலை போடுறன்.”

அவரது இரத்த சீனி அளவைப் பார்த்போது அது 300 யைத் தாண்டியிருந்தது. குருதியில் சீனியின் அளவு மிக அதிகமாக இருந்தமைக்கு காரணம் அவரது சீனியன் அளவு குறைவது பற்றிய தவறான கருத்துதான்.

Blood sugar

களைப்பு என்றவுடன் சீனியை தேவையின்றி உபயோகித்திருந்தார்.

களைப்பு தலைச்சுத்து சோர்வு என்ற எந்த அறிகுறிகள் ஏற்பட்டாலும் அது சீனி குறைவதால்தான் என சீனி நோயாளர்கள் பலரும் கருதுகிறார்கள். இவை வேலைப்பளு, நித்திரைக் குறைவு, மனச்சோர்வு போன்ற வேறு காரணங்களாலும் ஏற்படலாம். தனக்கு நீரிழிவு என்று அறிந்தவுடன் ஏற்படும் மனச்சோர்வும் களைப்பாக தோன்றுவதுண்டு.

நீரிழிவும் மருந்துகளும்

நவீன மருந்துகள் நீரிழிவு நோயாளிகளுக்கு அபரிதமான நன்மைகளைச் செய்துள்ளன. நீரிழிவு என்பது பயங்கர நோயாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. குறைந்த வயதில் மரணமடைவதற்கு அதுவும் முக்கிய காரணமாக இருந்தது.

மாறாத புண்களுக்காக பலரும் கால்களை இழந்தார்கள். ஆனால் இன்றைய மருந்துகளாலும் நீரிழிவு பராமரிப்பு பற்றிய நவீன அறிவியலாலும் நீரிழிவு நோயாளிகளால் ஏனையவர்களைப் போல மகிழ்ச்சியாக வாழ முடிகிறது. முற்காலம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இன்று அவர்களுக்கு இல்லை.

“இந்த மருந்துகளைச் சாப்பிட்டுத்தான் எனக்கு நோய்” எனப் பலர் சொல்வார்கள் ஆனாலும் மருந்துகள் காரணமாகவே நீரிழிவு நோயாளிகள் நீண்ட காலம் வாழ முடிகிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதால் மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறு நீரகப் பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படாமல் தடுக்க முடிகிறது. மரணங்கள் பின்தள்ளப்பட்டு முழுமையான ஆயுசு கிட்டுகிறது.

குருதியில் சீனியின் அளவு குறைதல்

இருந்தபோதும் ஒரு முக்கியமான ஆபத்து இருக்கவே செய்கிறது. முன்னரே குறிப்பட்ட குருதியில் சீனியன் அளவு குறைவதே அது ஆகும். இது பெரும்பாலானவர்களுக்கு ஒரு முக்கிய பிரச்சனையாக இங்கு காணப்படுவதில்லை. நோயாளிகள் சரியான முறையில் உணவு முறையைக் கடைப்பிடித்து சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளை அளவு மாறாமல், வேளை தவறாமல் உட்கொள்வதன் மூலம் இதைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது.

low blood sugar

இருந்தபோதும் Yale School of Medicine and the University of Chicago வில் செய்யப்பட்ட ஆய்வானது குருதியில் இரத்தம் குறைவதானது எதிர்பாராமல் நடக்கக் கூடியது என்கிறது.

தங்களது நீரிழிவின் அளவை கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கே இது ஏற்படலாம் என்பது பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. சீனியின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு சீனியின் மட்டம் திடீரெனக் குறையும் என யாரும் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால் 10000 Type 2  நீரிழிவாளர்களிடையே செய்யப்பட்ட ஆய்வு எதிர்பாராத முடிவைக் கொடுத்தது. ஒரு வருடம் ஆய்வு செய்யப்பட்ட போது அவர்களில் 10 சதவிகிதமானவர்களுக்கு சீனிமட்டம் குறைந்ததைக் கண்டறிந்தார்கள். அதுமட்டுமின்றி சீனியின் அளவு கட்டுப்பாஎன்றி அதிகமாக இருந்தவர்களுக்கே அவ்வாறு சீனி மட்டம் எதிர்பாராது குறைந்ததாம். .

குறைந்த சீனி மட்டம் என்பது எது?

சாதாரண சீனி மட்டம் என்பது 60 mg/dl  முதல் 118 mg/dl வரையாகும்எது? சீனி மட்டமானது 60 mg/dl (3.3 mmol/L) க்குக் கீழ் குறைந்தால் அது Hypoglycemia எனப்படும் குறைந்த சீனி மட்டம் எனப்படும். இந்த நிலையில் அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். மேலும் குறைந்தால் கோமா என்று சொல்லப்படும் மயக்கத்திற்கும் இட்டுச் செல்லலாம்.

குறைந்த சீனி மட்டத்தின் அறிகுறிகள் எவை?

ஒருவரின் இரத்தத்தில் சீனிமட்டம் குறைந்திருப்பதை எப்படி அறிவது?

நடுக்கம், பயம், வியர்வை, களைப்பு, கடுமையான பசி, தலையிடி, கண்பார்வை மங்கல், தலைச்சுற்று, நெஞ்சுப் படபடப்பு, மாறாட்டம், தடுமாற்றம், பேச்சுத் திணறல், கூடுதலான நித்திரைக் குணம், வயிற்று வலி, ஓங்காளம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

இவ்வறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்ற வேண்டும் என்பதில்லை. ஒரு சில அறிகுறிகள் மட்டும் தெரிந்தாலும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

சில தருணங்களில் நோயாளி; உணர்வதற்கு முன்னரே கூட இருப்பவர்கள் அவரில் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கக் கூடும். நீங்கள் குழப்படைந்திருப்பதையும், கூடுதலாகச் சினமடைவதையும், வெளிறிப் போயிருப்பதையும், வியர்த்திருப்பதையும் அவர்கள் அவதானிக்கலாம்.

இவ்வாறு நேரும்போது குளுக்கோ மீட்டர் இருந்தால் உடனடியாக இரத்தத்தில் சீனி மட்டத்தை அளவிடுவது அவசியம். அதில் சீனி மட்டம் 60 mg/dl (3.3 mmol/L)  க்குக் குறைவாக இருந்தால் உங்கள் இரத்தத்தில் சீனி மட்டம் குறைவிட்ட நிலை(Hypoglycemia)  என நிச்சயமாகச் சொல்லலாம்.

இத்தகைய நிலை ஏன் ஏற்படுகிறது?

உபவாசம், விரதம், அல்லது பட்டினி கிடப்பது, போதிய உணவு எடுக்காதது, காலம் தாழ்த்தி உண்பது, வழமைக்கு மாறான கடும் உடற்பயிற்சி அல்லது கடுமையான உடல் உழைப்பு போன்றவை காரணமாகலாம்.

T2.large

திடீரென வழமைக்கு மாறாக மருந்தின் அளவை அதிகரிப்பதும் காரணமாகலாம். ‘இண்டைக்கு சாப்பாடு கூடிப் போச்சு’ என்று எண்ணி தேவைக்கு அதிகமான இன்சுலின் மருந்தை ஏற்றுவது அல்லது கூடிய அளவு நீரிழிவு மாத்திரைகளை எடுப்பதாலும் இது நிகழலாம்.

நீரிழிவு மருந்துகளில் மெட்போரின் மருந்தை மட்டும் எடுக்கும்போது குருதி குளுக்கோஸ் அளவானது வழமையை விடக் குறைவதி;லை. அதேபோல acarbose, pioglitazone, rosiglitazone போன்றவையும் ஏற்படுத்துவதில்லை. ஏனைய எல்லா மருந்துகளையும் தேவையான அளவிலும் அதிகம் உட்கொண்டால் அந் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

இது ஆபத்தான நிலையாகும். இவ்வாறு நேர்ந்தால் உடனடியாக சிறிது குளுக்கோஸ் (15 கிராம்- -4 தேக்கரண்டி) குடியுங்கள். குளுக்கோஸ் கிடைக்காவிட்டால் ஒரு மேசைக் கரண்டியளவு சீனி கரைத்துக் குடியுங்கள். அல்லது அரைக் கப் பழச்சாறோ இனிப்புச் சேடாவோ குடியுங்கள், அல்லது இரண்டு டொபி உட்கொள்ளவும். 10 நிமிடம் ஓய்வு எடுக்கவும். சுகம் தெரியும். உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுங்கள். ஏனைய இனிப்புகளை விட குளுக்கோஸ் விரைவாக குருதியால் விரைவாக உறிஞ்சப்படும் என்பதாலேயே அது சிறந்தது.

உங்களால் உடனடியாக இரத்த குளுக்கோஸ் நிலையை அளவிட முடியாதிருந்தால், ஆனால் அதே நேரம் அறிகுறிகள் நிச்சயமாக சீனி மட்டம் குறைந்திருப்பதே எனத் தெரிந்தாலும் மேற் கூறிய நடவடிக்கைகளை எடுங்கள்.

முதலில் கூறிய பெண்ணுக்கு நாளம் ஊடாக குளுக்கோஸ் ஏற்றிய பின் மெதுவாக சகச நிலைக்கு வந்தாள். வீட்டில் குளுக்கோமீட்டர் இருந்தது. இருந்தபோதும் தாதிப்பெண் அதை உபயோகித்து சீனியின் அளவை அளவிட்டுப் பார்த்திருக்கவில்லை. விடயம் விளங்கிய மகளும் ஊருக்குப் போயிருந்தாள். மருத்துவ மனையில் கொடுத்த மருந்துகளின் அளவை நீரிழிவின் நிலைக்கு மாற்றவில்லை. அதனால் எற்பட்ட வினை.

நீரிழிவு இல்லாதவர்களிலும் ஏற்படுமா?

நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களில் ஓரு சிலர் குருதியி;ல் சீனியின் அளவு குறைவதற்குரிய அறிகுறிகள் தமக்கு ஏற்படுவதாகக் கூறுவதுண்டு. ஆனால் அவர்களில் உண்மையான சீனி குறைதல் ஏற்படுவது சாத்தியமில்லை.

ஆயினும் நீரிழிவின் முன்நிலையில் (Pre Diabetes) இருப்பவர்களுக்கு அவ்வாறான நிலை ஏற்பட ஓரளவு சாத்தியமுண்டு. அவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து உணவு உட்கொள்ளாதிருந்தால் iளெரடin சநளளைவயnஉந நிலையால் அவர்களது சீனி மட்டம் குறையலாம்.

மிக மிக அரிதாக இன்சுலினை உறபத்தி செய்யும் கட்டிகள் (insulinomas)தோன்றினாலும் அவ்வாறான நிலை தோன்றலாம்.

மேற்கொண்டு செய்ய வேண்டியவை

குருதியில் குளுக்கோஸ் அளவு குறைந்தால் நிச்சயம் உங்கள் மருத்துவரைக் காண வேண்டியது அவசியமாகும். அவர் கீழ் கண்ட விடயங்களில் மேலும் ஆலோசனைகள் வழங்குவார்.

  • மருந்துகளை மாற்றக் கூடும் அல்லது அவற்றின் அளவுகளில் மாற்றம் செய்யவும் கூடும். அவற்றை உணவிற்கு முன்னரா பின்னரா எவ்வளவு நேர இடைவெளியில் எடுக்க வேண்டும் என்பது பற்றி விளக்கக் கூடும்.
  • சரியான உணவு முறைகள் பற்றியும் அவற்றை எவ்வளவு கால இடைவெளிகளில் எடுக்க வேண்டும் என்பதிலும் ஆலோசனைகள் வழங்கக் கூடும். உணவுகளை தவிர்ப்பதும், விரதங்கள் பிடிப்பதும் நீரிழிவு ள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. 
  • உடற் பயிற்சிகளுக்கு முன்னரும் பின்னரும் இரத்த குளுக்கோஸ் அளவைப் பரிசோதிப்பது சிறந்தது. அது 100 ற்கு கீழாக இருந்தால் சிறிய உணவு உட்கொண்ட பின்னர் பயிற்சியைச் செய்யலாம். நீரிழிவு மருந்துகளை உட்கொண்ட சிறிது நேரத்திற்குள் உடற் பயிற்சி செய்வது உகந்ததல்ல. 
  • மதுபானம் நல்லதல்ல. அதுவும் வெறும் வயிற்றில் மதுபானம் அருந்தினால் சீனியின் அளவு குறையலாம். மது அருந்தி ஓரிரு நாட்களுக்குப் பின்னரும் அவ்வாறு ஏற்படலாம் என்பதால் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

 

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.00.0.0

Read Full Post »

தகவம் சிறுகதை பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். பல மாத உழைப்பிக்கிற்கு பின்னர் இன்று தகவம் குழவினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

DSC_0642

தகவம் அமைப்பானது இலங்கையில் சிறுகதை வளர்ச்சியை உக்குவிப்பதை நோக்கமாகக் 1975 களில் உதயமானது. தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, தமிழ்ச் சிறுகதைகளை நூலாக வெளியிடுவது போன்ற நோக்கங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை அதன் பணிகளைத் தொடர்கிறது. நாட்டு நிலமைகள் காரணமாக இடையிடையே தொய்வுகள் எற்பட்டபோதும் தனது பணியினை இயன்றவரை செவ்வனே நிறைவேற்றி வருகின்றது

DSC_0661

இலங்கையில் ஏராளமான தினசரிகள், சஞ்சிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிற்றிதழ்களும் வருகின்றன். இவற்றையெல்லாம் தேடி எடுத்து அவற்றில் கடந்த இரு வருடங்களாக வந்த சிறுகதைகளைப் படித்து, மதிப்பீடு செய்து, தேர்வு செய்வது இலேசான விடயம் அல்ல.

கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு செய்யப்பட்ட மதிப்Pடு இது. வசந்தியும் தயாபரனும் முழு முயற்சி செய்து தேடி எடுத்த சில நூறு சிறுகதைகள் இவை. கண்ணில் படாது தப்பியிருக்கச் சாத்தியங்கள் இல்லை. இருந்தபோதும் எங்காவது தவறு நேர்ந்திருக்கக் கூடும என்பதை மறுக்க முடியாது.

முழுக்கதைகளும் வாசிக்கப்பட்டு அவற்றில் ஓரளவு நல்ல கதைகள் முதல் கட்டத்தில் வடிகட்டி எடுக்கப்பட்டன. இரண்டு வருடத்தில் சுமார் 400 சிறுகதைகள் வெளிவந்திருக்கும். அவற்றில் ஒவ்வொரு காலண்டிற்கும் சுமார் 10 கதைகள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டன. இவை மீண்டும் தீவிர பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன.  கதையின் கரு, சித்தரிப்பு முறைமை, கலைத்துவ வெளிப்பாடு, மொழி நடை, ஒட்டுமொத்த தாக்கம் போன்ற அம்சங்கள் புள்ளிகள் இடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில் பெற்ற புள்ளிகளுக்கு எற்ப படைப்புகள் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்கள் அளிக்கபட்டன.

இருந்தபோதும் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதை தகவம் கவனத்தில் கொள்கிறது. இதன் காரணமாக சாஹித்திய பரிசு பெற்றவர்கள், வேறு பல போட்டிகளில் பரிசுகள் பெற்றவர்கள், தகவத்தில் முன்பு பரிசுகள் பெற்றவர்கள் எனத் தேசிய ரீதியாக அங்கீகாரம் பெற்று, தங்களை எழுத்துலகில் நிலை பெறச் செய்தவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதைத் தவிர்க்கிறது. அவர்கள் சிறப்புப் பராட்டு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை அமரர் இராசையா மாஸ்டர் காலம் முதல் பின்பற்றப்படுகிறது

உதாரணம் சொல்வதானால் இம்முறை ‘மாறுதல்’ என்ற சிறுதைக்காக சிறப்புப் பாராட்டுப் பெறும் தேவமுகுந்தனைச் சொல்லலாம். இளம் எழுத்தாளர் என்றபோதும் தனது எழுத்தாளுமையை சிறுகதை உலகில் பதித்து பரவலான பாராட்டுப் பெற்றவர் தேவமுகுந்தன்.

DSC_0738

ஆரம்பக் காலத்திலேயே தகவம் அவருக்கு பரிசு அளித்து கௌரவித்திருக்கிறது. 2008ம் ஆண்டு இவர் எழுதிய ‘வழிகாட்டிகள’; சிறுகதைக்கு தகவம் பரிசளித்திருக்கிறது. சாஹித்திய பரிசு, வடக்கு மாகாண சபையின் பரிசு, செம்பியன் செல்வன் ஞாபகார்த்த பரிசு, அவுஸ்திரேலிய தமிழ் கலை இலகிய சங்கப் பரிசு எனப் பல. இவ்வாறு அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர் என்பதால் அவருக்கு பரிசு கொடுக்கபப்படாது சிறப்புப் பாராட்டை தகவம் வழங்கியுள்ளது.

இவற்றைத் தவிர மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கவும் செய்கிறது. தெளிவத்தை ஜோசப், எஸ்.எல்.எம் ஹனீபா, இன்று கோகிலா மகேந்திரன் எனப் பலர் இவ்வாறு சிறுகதைத் துறைக்கு அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக கௌரவிக்கப்ட்டுள்ளார்கள்.

DSC_0637

இதைத் தவிர மறைந்த எழுத்தளரான அமரர்.சி.வி.வேலுப்பிள்ளை பற்றிய நினைவுரை நடைபெற்றதும் அத்தகைய அங்கீகாரத்தில் அடங்கும்.

DSC_0617

இருந்தபோதும் புதிய எழுத்தாளர்களை இனங் கண்டு அவர்களுக்கு பரிசு கொடுத்து ஊக்குவிப்பதையே தகவம் தனது முக்கிய பணியாகக் கருத்துகிறது. அதன் மூலமே ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பானவையாக, உலக அங்கீகாரம் பெறத்தக்கவையாக வளர முடியும். சினிமா, சீரியல் நாடகம், கணனி, ஐபோன் என வேறு வழிகளில் மூழ்கிக் கிடப்பவர்களை சிறுகதையின் பக்கம் திருப்ப முடியுமாயின் அதுவே மகத்தான பணியாக இருக்கும்.

திருமதி இந்திராணி புஸ்பராஜா எனக்குப் புதிய படைப்பாளி. இம்முறை தனது படைப்பு ஒன்றிற்காக முதல் முறையாக பரிசு பெறுகிறார். செங்கதிர் சஞ்சிகையில் அவர் எழுதிய ‘கற்பெனப்படுவது’ என்ற சிறுகதை 2012ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கு பரிசு பெறுகிறது. அது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பரவலாக அறியப்படாத அவர் தனக்குப் பரிசு கிடைத்தமை பற்றி அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்து ஊக்கம் பெற்றிருக்கிறார். இதை அவருடன் தொலைபேசியில் கதைத்தபோது தான் உணர்ந்ததாக வசந்தி தயாபரன் கூறினார். தகவம் தனது குறிக்கோளை எட்டிவிட்டது என என்னால் உணர முடிந்தது.

DSC_0674

அதேபோல வல்வை நெற்கொழுதாசன், கிரிஸ்டி முருகுப்பிள்ளை, எஸ்அரசரத்தினம் போன்றவர்களும் அண்மைக் காலத்தியே எமது வாசிப்புப் பரப்பில் வந்திருக்கிறார்கள். இவர்கள் பரிசு பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. ‘ரகசியத்தின் நாக்குகள்’ என்ற தனது கவிதைத் தொகுதி மூலம் அண்மையில் வாசகர்கள் பார்வையை தன் பக்கம் இழுத்தவர் நெற்கொழுதாசன். வேளிநாட்டில் வசிக்கும் வல்வை ஊர் படைப்பாளி அவர்.

அதே நேரம் ஏற்கனவே சிறுகதைப் படைப்புலகில் ஏற்னவே தமது இருப்பை புலப்படுத்தியிருக்கும் சிவனு மனோகரன், ராணி சீதரன், முருகேசு இரவீந்திரன், இராஜேஸ் கண்ணன், சமரபாகு சீனா உதயகுமார், கே;.எஸ்.சுதாகர், கிண்ணியா சபருள்ளா, ஆகியோரும் தலா ஒவ்வொரு பரிசு பெற்றுள்ளார்கள.

DSC_0686

இருந்தபோதும் சிலர் பல பரிசுகள் பெறுவதையும் அவதானிக்க முடிகிறது. உதாரணமாக வி.ஜீவகுமாரன் 4 பரிசுகளையும். தாட்சாயணி 2 பரிசுகளையும். சமரபாகு சீனா உதயகுமார் 2 பரிசுகளையும் பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது.

DSC_0683

இது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அவ் அவ் காலாண்டுகளில் தேர்ந்தெடுக்கக் கூடிய சிறந்த கதைகளை எழுதியிருந்தமையால் அவ்வாறு நேர்ந்தது. இவர்களுள் மேலை நாட்டில் வசிக்கும் நம்மவரான வி.ஜீவகுமாரன் அதிகமாக எழுதுவது மட்டுமின்றி கவனித்து வாசிக்கப்பட வேண்டியவராகவும் இருக்கிறார்

சிறுகதைகளைப் பொறுத்தவரையில் ஜீவகுமாரனின் வித்தியாசமான எமக்கு அந்நியமான புலத்தைச் சேர்ந்தவை. சூழல் வேறு, பிரச்சனைகள் வேறு, அத்துடன் கலாசார முரண்பாடுகளில் சிக்கித்தவிக்கும் மாந்தர்கள் பற்றிவை என்பதால் ரசிக்க முடிகிறது. நிறைய எழுதுகிறார். சிலவேளைகளில் ஒவ்வொரு மாதமும். ஆயினும் சலிப்புத்தட்டாமல் வாசிக்க முடிகிறது.

மாறாக தாட்சணியின் படைப்புகள் எமக்குப் பரிச்சயமான புலத்தில் நடப்பவையாகும். ஆயினும் அவை வெறும் கதைகள் அல்ல பாத்திரங்களின்  உணர்வுகள் ஊடாக நகர்த்தப்படுபவை. கூர்மையான அவதானிப்பும் ஆழமான நடையும் அவரது சிறப்பு.

DSC_0702

சீனா உதயகுமாரும் எமக்குப் பரிச்சமான சூழலில் எழுதினாலும் சற்று வித்தியாசமாக எழுதுகிறார். அடிக்கடி படிக்கக் கிடைத்தாலும் சற்று வித்தியாசமாக எழுதுகிறார்.

DSC_0720

ராஜேஸ் கண்ணனும் அவ்வாறே. மரணவீட்டில் சுன்னப் பாட்டு எமது பாரம்பரிய வழக்கம் எவ்வாறு இன்று மறைந்தழிந்து போகிறது என்பதை உணர்வு பூர்வமான படைப்பாகத் தனது பரிசுக் கதையில் தந்திருந்தார்

DSC_0717

மிகக் குறைவாக எழுதுபவர் சித்தாந்தன். கவிஞனான அவரது ‘நூறாயிரம் நுண்துளைகளால்..’ கதை மிகவும் வித்தியாசமானது. கலைமுகத்தில் வெளியான அப் படைப்பு ஒரு படைப்பாளி பற்றிப் பேசுகிறது. அதன் கருவை விட அது சொல்லப்பட்ட விதம் அற்புதமானது. வழமையான இலங்கைப் சிறுகதை படைப்பாக்க முறையில் இருந்து மாறுபட்டு, கவித்துவமமான நடையில் எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு படைப்பைப் பற்றியும் கூற முடியுமானாலும் கால அவகாசம் இல்லாததால் மற்றைய படைப்புகள் பற்றி பேசவில்லை.

பரிசு பெற்ற 21 கதைகளில் 10 சிறுகதைகள் ஞானம் சஞ்சிகையிலும், நான்கு சிறுகதைகள் ஞாயிறு தினக்குரலிலும்  வெளியாகியுள்ளன. கலைமுகம,; வீரகேசரி ஆகியவற்றில் தலா இரண்டு பரிசு பெற்ற சிறுகதைகள் வெளியாகியுள்ளன. ஜீவநதி, சுடரொளி, செங்கதிர், ஆகியவற்றில் தலா ஒவ்வொரு பரிசு பெற்ற சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

இவற்றையெல்லாம் இங்கு கூறுவதற்குக் காரணம் தகவம் பரிசுகள் படைப்புகளின் தரத்தை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகின்றனவே ஒழிய யார் எழுதினார, எதில் எழுதினார்; ஆகியவற்றை நோக்காகக் கொண்டு அல்ல என்பதை வலியுறுத்தவே.

இதன் காரணமாகவே பொருத்தமான பரிசு பெறக் கூடிய சிறந்த சிறுகதைகள் கிடைக்காத காரணத்தால் 2012 காலாண்டில் இரண்டு பரிசுகளும் 2013ல் ஒரு பரிசும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும் சில காலாண்டுகளில் பரிசு பெறும் கதைகள் சிறப்பாக இருப்பதும் வேறு சில காலாண்டுகளில் பரிசு பெறும் கதைகள் சொல்லும்படியாக இல்லாதிருப்பதையும் உணரக் கூடியதாக இருக்கிறது. சில விமர்சகர்கள் இதைச் சுட்டிக் காட்டவும் செய்கிறார்கள்.

இதற்குக் காரணம் என்ன? பத்திரிகைகளில் வெளியாகும் அனைத்து சிறுகதைகளின் தரமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில காலாண்டுகளில் பரிசு பெறும் கதைகள் அற்புதமாக இருக்க ஏனைய காலாண்டுகளில் அவை சாதாரண தரத்தில் இருந்தால் இது பரிசுத் தேர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். அமரர் இராசையா அவர்கள் தகவம் பரிசளிப்பு சிறுகைத் தொகுப்பிற்கான முன்னுரையில் இதை ‘மதிப்பீட்டு விழு’ எனச் விளக்குவதை அவதானிக்க முடிகிறது.

DSC_0607

தகவத்தின் பரிசு வழங்கும் இந்தச் செயற்பாட்டால் கிடைக்கப் போகும் பெறுபேறுகள் எவை?

வந்த படைப்புகள் பற்றிய பொது மதிப்பீட்டைச் செய்ய முடியும். அவற்றில் இருந்து சில அவதானங்களை மேற்கொள்ள முடியும். அதன் தொடர்ச்சியாக சிறுகதை இலக்கியம் வளரச்சியடைவதை நோக்கமாகக் கொண்டு செய்ய வேண்டியவற்றைச் சிந்திக்க வேண்டும்.

இலங்கைச் சிறுகதைகளின் தோற்றம் 30களில் ஆரம்பிக்கிறது. பல்வேறு ஆளுமைகள் வருகிறார்கள்

60களில் நவீனத்தன்மையுடைய சிறுகதைகள். பன்முக பரிமாணத்துடன் எழுதப்பட்டன.

இப்பொழுது பெரும்பாலும் ஒற்றைப் பரிமாணக்க கதைகள் பெரும்பாலானவை யுத்தத்தைப் பேசுபவை மற்றவை வறுமையைப் பேசுபவை. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை கொண்டு வருவது குறைவு

இன்றைய பல புதிய எழுத்தாளர்களுக்கு கடந்தகாலப் படைப்புகளுடனான பரிச்சயம் குறைவு. தானும் தன்னைச் சுற்றிய 4 பேருடைய படைப்புகள் தவிர்ந்த பரந்த வாசிப்பு அதிகம் இல்லை. எமது இலங்கையர்கோனையும் சம்பந்தனைப் பற்றியும் தெரியாது. தமிழக்கத்தின் புதுமைப்பித்தனையும் மௌனியையும். லாசாராவையும் ஜெயகாந்தனையும் படித்தது கிடையாது.

இதனால் சிறுகதை ஆக்கம் பற்றிய பரந்த அறிவும் பரந்துபட்ட அனுபவமும் குறைவு. அவுஸ்திரேலியாவிலிருந்து ஆ.சி.காந்தராஜாவும் கனடாவிலிருந்து அ.முத்துலிங்கமும் உலகம் சுற்றியதால் தங்களுக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவங்களை தமிழில் சிறுகதைகள் ஊடாகத் தருவதும் நாங்கள் அவர்களது எழுத்துக்களை ஆர்வத்தோடு படிப்பதற்கு காரணமாகின்றன.

ஆ.சி.காந்தராஜா தனது தாவரவியல் அறிவைக் கொண்டு மாம்பழத்தை பற்றி எழுதும் போது அங்கு சீனா ஆபிரிக்கா என பல கண்டங்களைத் தாண்டும் ஆச்சரியமான அனுபவங்களைத் தருகிறார். மிருக வைத்தியரான நடேசன் சிறுகதை நாவல் போன்ற தனது படைப்புகளில் தனது துறை சார்ந்த அனுபவங்களையும் ஆங்காங்கே கலந்து தந்து ஆர்வமாகப் படிக்க வைக்கிறார். இருந்தபோதும் பல புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ஈழத்துடனான தங்கள் பழைய நினைவுகளைவிட்டு விலக முடியாது திணறுகிறார்கள்.

அத்துடன் இலக்கியம், சமூகவியல், உளவியல் என பரந்தும் கூர்ந்தும் பல படைப்பாளிகளால் பார்க்க முடியாதுள்ளது. சிறுகதை என்பது வெறுமனே கதை சொல்வது அல்ல என்பதைப் பலரும் புரிந்து nhகள்வதில்லை. புதிய மொழி புதிய கரு புதிய நடை என தமக்கென ஒன்றை உருவாக்க பலராலும் முடியாதிருக்கிறது

அச்சுப் பதிவிலிருந்து இணையத்தில் வாசிக்கும் பழக்கமாக மாறியதும் மற்றொரு காரணம். நிறையக் கிடைப்பதால் எதை வாசிப்பது எதை விடுவது என்பது புரியாமல் பலரும் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஊடகம் பெறுமதிமிக்கது. அதைச் சரியாகப் பயன்படுத்தினால் உலக இலக்கிய அறிவை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளதை மறக்கக் கூடாது.

எமது சிறுகதை இலக்கியம் வளராதிருப்பதற்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் இல்லாதிருப்பது முக்கிய காரணமாகிறது.

எழுதுவது சிலர். அதைப் பற்றி விமர்சிப்பதும் அந்த ஒரு சிலரே என்ற சூழலில் ஒருவருக்கு ஒருவர் முதுகு சொறியும் விமர்சனமே இங்கு இருக்கிறது. மாறாக ஒருவர் கறாராக விமர்சித்தால் அதைத் தனிப்பட்ட தாக்குதல் என்ற ரீதியிலேயே படைப்பாளிகள் அணுகுகிறார்கள். பேராசிரியர்கள் கைலாசபதியும் சிவத்தம்பியும் விஞ்ஞான ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் படைப்புகளை அலச வழிகாட்டித் தந்தார்கள். ஆனால் அதிலிருந்து மேலெழுந்து கலைத்துவமான படைப்புகளுக்கு வழிகாட்டும் விமர்சகர்கள் எழவில்லை என்றே சொல்ல வேண்டும். மு.பொ., தளையசிங்கம் ஆகியோர் புதிய அணுகுமறையைக் காட்டியபோதும் அது பரவலாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

ஆரோக்கியமான நல்ல விமர்சனங்கள் இல்லாததால் வாசிக்கத் தூண்டும் ஆர்வம் எழுவதில்லை. நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் நல்ல படைப்புகளை கோடி காட்டுகிறார் என்பது உண்மை. பலரும் அவற்றால் பயன்பெறுகிறோம். ஆனால் அக்குவேறு ஆணி வேறு பிரித்து விரிவாக எழுதுவதில்லை என்பதால் அவற்றின் ஆழத்தை பலராலும் கண்டுகொள்ள முடிவதில்லை.

எம்மிடையே தேடல் உள்ள எழுத்தாளர்கள் இல்லை என்பதற்கு இங்கு முழுநேர எழுத்தளார் என எவருமே இல்லை என்பது முக்கிய காரணமாகும். ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் தங்கள் படைப்புகளுக்காக நேரடி அனுபவங்களைப் பெறப் பயணப்படுவதுபோல எம் எழுத்தாளர்களால் முடியாது. குறுகிய வாசக எல்லையைக் கொண்ட எமது எழுத்தாளர்கள் எழுத்தை முழுநேர வேலையாகக் கொள்வது பொருளாராத ரீதியாகச் சாதிதியமற்றது. ஏனெனில் இங்கு பலரும் தங்கள் தொழிற் கடமைகளுக்கு அப்பால் எழுத்தை ஒரு பொழுதுபோக்காகவே கொள்ள முடிகிறது.

தங்கள் படைப்பை செழுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இங்கு எவருக்கும் கிடையாது. நான் ஒரே முறையில் தட்டச்சில் எழுதுவேன் எனப் பீற்றிக்கொள்பவர்கள் தான் இங்கு உண்டு. எழுத வேண்டும். ஆறப் போட்டு திரும்ப வாசித்து மீள எழுத வேண்டும் என்ற உணர்வு வளரவில்லை. நேரமின்மை காரணம் என்று சொல்வார்கள். மற்றவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு திருத்தும் பண்பு இங்கு கிடையாது. புளக்கில் எழுதும்போது கூட பிரசுரிக்க முன்னர் அபிப்பிராயம் கேட்பதற்கான வசதியைத் தருகிறார்கள். அனால் யாரும் அதைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.

DSC_0609

செய்ய வேண்டியவை

வாசிப்புப் பழக்கத்தை அதிலும் முக்கியமாக சிறுகதை வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

வாசிப்பை இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும்

பாடசாலை மட்டத்தில் மாணவர்களிடையே சிறுகதை வாசிப்பு எழுத்து பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்த வேண்டும்.

படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அச்சு ஊடகத்திற்கு அப்பால் கணனி மற்றும் ஊடகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

வித்துவான் வேலன், று.ஆ.ளு சாமுவல் போன்ற எனது ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர்களை  உதாரணமாக கொள்கிறேன்.

இங்கு நான் பேசியவை பொதுவாக தகவத்தின் கருத்தாக இருக்கிறது.

ஆயினும் எழுத்து மற்றும் உரை வடிவம் என்னது. எனவே இதில் சர்ச்சைக்குரிய விடயங்கள் ஏதாவது இருக்குமாயின் அதற்கான தார்மீகப் பொறுப்பு என்னுடையது.

தகவம் பரிசளிப்பு பரிசளிப்பு விழாவில் நான் ஆற்றிய உரை

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0

 

Read Full Post »