Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2014

வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது வெள்ளைக் கோட் போடும் மருத்துவர்களுக்கு வரும் பிரஸர் வருத்தம் அல்ல. பிரஸர் எல்லோருக்கும்தான் வருகிறது. மருத்துவர்கள் என்ன விதிவிலக்கா? அவர்களுக்கும் வரலாம்தானே!

24well_whitecoat-tmagArticle மருத்துவர்கள் முக்கியமாக மேலைத் தேய மருத்துவர்கள் தங்கள் கடமை நேரத்தின் போது பாரம்பரியமாக வெள்ளைக் கோட் அணிவார்கள். அது அவர்களது தொழில் சார்ந்த அடையாளமாகக் கருதப்பட்டது.

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. குட்டைப் பாவாடையுடனும், கட்டைக் காற்சட்டையுடனும் மருத்துவர்களை காணும் காலமாகிவிட்டது.

வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்

‘நீங்கள் என்ன கூடச் சொல்லுறீங்கள். இப்ப வரக்கு முதல்தான் வீட்டிலை டிஜிஜட்ல் மீ;ற்றரில் பார்த்தநான் 130/80 தான் இருந்தது.’ என்பார்கள்.

இது சந்தையில் பேரம் பேசும் விடயமா? மருத்துதுவர் பார்க்கும்போது 140/90 இருந்திருக்கும். அளவிடும்போது மீற்றரில் காட்டுவதைத்தானே கூற முடியும். யார் பிழையாகச் சொல்கிறார்கள். அவர் சொன்னதும் சரிதான். மருத்துவர் சொன்னதும் சரிதான். ஒருவரது பிரஸர் அல்லது இரத்த அழுத்தம் என்பது எந்த நேரமும் ஒரு அளவில் இருக்கும் என்பதில்லை. வேலை, காலநேரம், சிந்தனை, மனஉழைச்சல், தூக்கம் போன்ற பல்வேறு நிலைகளின் போது அதில் சிறிய சிறிய மாற்றஙகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். வீட்டிலிருந்து நடந்து வந்ததில் சற்று அதிகரித்திருக்கும். White_Coat_Symptom-300x277

ஆனால் சிலருக்கு மருத்துவரிடம் செல்லும் போது அதிகரிப்பதுண்டு வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது மருத்துவர்களிடம் செல்லும் போது சில நோயாளிகளுக்கு பிரஸர் அதிகரிப்பதையே குறிப்பிடுகிறது.

ஆனால் வெள்ளைக் கோட்டு அணிந்த மருத்துவர்களிடம் மட்டுமல்லாது, எந்த மருத்துவரிடம் செல்லும் போதும் இத்தகைய நிலை சிலருக்கு தோன்றுகிறது.

மருத்துவர்கள் மட்டுமின்றி மருத்துவ மாதுக்கள், தாதிகள் போன்றோர் அளவிடும்போதும் இது நிகழலாம். அதாவது தமக்கு இயல்பான, தங்களுக்கு இணக்கமான சூழலாக அல்லாத மருத்துமனைச் சூழலில் அளவிடும்போது இரத்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படுவதையே அவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

பிரஸரை இரண்டு அலகுகளில் குறிப்படுவார்கள் என்பதை அறிவீர்கள். சாதாரண பிரஸர் என்பதை 120ஃ80 என்பார்கள்.

  • இதில் மேலே உள்ளதை சிஸ்டலிக் (systolic) என்றும்
  • கீழே உள்ளதை டயஸ்டலிக் (diastolic) என்றும் சொல்வார்கள்.

Diapositive3 பொதுவாக வீட்டில் அளக்கும்போது மருத்துவரிடம் அளவிடுவதை விட சிஸ்டலிக் 10 குறைவாகவும் டயஸ்டலிக குறைவாகவும் இருப்பதைக் காண முடியும். இன்னும் சிலரில் வித்தியாசம் சற்று அதிகமாகவும் இருக்கலாம். fear of hospital ஆனால் இந்த அளவு வித்தியாசமானது சில தருணங்களில் 30 வரை அதிகரிக்கக் கூடும்.

இதற்குக் காரணம் என்ன?

‘டொக்டர் எனக்கு படபடப்பாகக் கிடக்கு. பிரஸர் கூடக் காட்டப் போகுது’ என்று சொன்னபடியே அமர்ந்தார் ஒருவர். சாதாரண மனிதன் அல்ல. கற்றிந்தவர், மற்றவர்களால் மதிக்கப்படும் ஒருவர். மாணவர்கள் அவர்முன் அடக்க ஒடுக்கமாக நிற்பார்கள். அவருக்கு மருத்துவர் முன் நிற்கும்போது நெஞ்சு படபடக்கிறது. அதனால் தனது பிரஸர் அதிகரிக்கப் போகிறது என்பதும் புரிந்திருக்கிறது.

ஆம் மனப்பதற்றம்தான் படபடப்பிற்கும் மருத்துவர் முன் பிரஸர் அதிகரிக்கப் போவதற்கும் காரணம் என்பதையும் அவர் அறிந்திருக்ககிறார். இருந்தபோதும் அதிலிருந்து மீளும் வழி புரியவில்லை.

ஒருவரது பிரஸரானது எப்பொழுது மருத்துவரிடம் அளவிட்டாலும் அது 140/90mmHg ற்கு மேலிருந்து அதே நேரம் வீட்டில் அளவிடும் போது குறைவாக இருந்தால் மட்டுமே வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது.

இது எவரையும் பாதிக்கக் கூடிய விடயம்தான். இருந்தபோதும் அதிகம் காணப்படும் பிரச்சனை அல்ல. எனவே கட்டுரையைப் படித்தவுடன் எனக்கும் இதே பிரச்சனைதான் என எண்ணி உடனடியாக மருத்துவரிடம் ஓடாதீர்கள். அந்த நோய் பற்றிய எண்ணமும் அதனால் ஏற்படக் கூடிய மனஉளைச்சலும் உங்கள் பிரசரை சற்று அதிகரிக்கச் செய்துவிடலாம்.

பல தருணங்களில் ஒருவது பிரஸரானது உண்மையிலேயே அதிகரித்து இருக்கிறதா அல்லது அது வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்தானா எனத் தீர்மானிப்பது மருத்துவர்களுக்கு சவாலான விடயமான இருப்பதுண்டு.

மருத்துவர்கள் இதை தங்களுக்குரிய பல்வேறு வழிகளைக் கையாண்டு தீர்மானிப்பதுண்டு.

ஒருவரது பிரஸரைப் அளவிடும்போது சற்று அதிகமாக இருந்தால், நோயாளியின் சிந்தனையை திசைதிருப்புவதற்காக வேறு விடயங்கள் பற்றி உரையாடலைத் திருப்புவார். அவர் மனப்பதற்றம் தணிந்திருக்கும் அந்நேரத்தில் கதையோடு கதையாக மீண்டும் பிரஸரை அளந்து சரி பிழையைக் கணிப்பார்கள்.

நிச்சமாகக் கண்டறிய வேறு இரண்டு முறைகளைப் பயன்படுத்தலாம்.

வீட்டில் அளத்தல்

ஒருவர் தனது இரத்த அழுத்தத்தை கிரமமான முறையில் வீட்டில் அளவிட்டு பார்ப்பது ஒரு முறை. காலை மாலை இரவு என வேறு வேறு நேரங்களில் அளவிட்டு அவற்றை திகதி மற்றும் நேரவாரியாக குறித்து வைகக்க வேண்டும்.

பின்னர் மருத்துவரிடம் செல்லும்போது அக்குறிப்பைக் காட்டினால் வெளியிடங்களில் பிரஸர் எவ்வாறு இருந்தது என்பதை மருத்துவர் விளங்கிக் கொள்ள உதவும்.

வீட்டில் பாரக்கும்போதும் பிரஸர் எப்படி இருக்குமோ என்ற பதற்றமின்றி இயல்பாக இருக்க வேண்டும்.

தனது பிரஸர் அளவுகளை ஒரு பதிவேடாகப் personal blood pressure record பேணுவது மிகவும் நல்லது. வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் இருக்குமா என்ற சந்தேகம் உள்ளவர்களுக்கு இது அவசியம்.

1002320i1

ஆனால் பிரஸர் மிக அதிகமாக உள்ளவர்களுக்கும், அதில் அடிக்கடி ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுபவர்களுக்கும் இத்தகைய பதிவேடு உதவும். இருந்தபோதும் அதீத மனப்பதற்றம் உள்ளவர்களுக்கு இத்தகைய செயற்பாடே மனஅழுத்தத்தை அதிகரித்து பிரஸரைக் கூடுதலாகக் காட்டக் கூடிய அபாயம் உள்ளதையும் மறுப்பதற்கில்லை.

24 மணிநேர கண்காணிப்பு (24-hour blood pressure monitoring)

ஒரு சிறிய டிஜிட்டல் முறை கருவியை தொடர்ந்து 24 மணிநேரம் அணிந்து கொள்ள வேண்டும். அது தொடர்ந்து உங்கள் பிரஸர் அளவுகளை தனது மெமரியில் பதிவு செய்து வைத்திருக்கும்.

நீங்கள் செய்யக் கூடியவை எவை?

  • நீங்களாக உங்களுக்கு வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகத் தீர்மானிக்க வேண்டாம். மருத்துவர் தெளிவாகக் கூறினால் அதற்கு அடிப்படைக் காரணம் மனப் பதற்றமே ஆகும். எனவே அதைத் தணிக்க முயல வேண்டும்.
  • பிரஸர் நோய் பற்றிய அர்த்தமற்ற மனக்கலக்கத்தை கைவிட வேண்டும். ‘இன்று பலருக்கும் இந்நோய் உள்ளது. இதற்கான நல்ல மருந்துகள் உள்ளன. அதைத் தவிர எடையை சரியான அளவில் பேணுதல், தினசரி உடற்பயிற்சி செய்தல், உணவில் உப்பைக் குறைதல், அமைதியான வாழ்க்கை முறை போன்றவற்றால் அதைக் குறைக்க உங்களாலும் முடியும்’ என்பதை உணர்ந்து கொள்ளுவதால் பதற்றம் நீங்கும்.
  • யோகசனம், தியானம், உடல் மனத் தளர்ச்சிப் பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள். இவை யாவும் உங்களது மனதைத் திடமாக்க உதவும்.
  • மருத்துவரிடம் செல்லும்போது தெளிந்த அமையான சிந்தையுடன் செல்லுங்கள்.
  • மருத்துவனைக்கு சென்றவுடன் அவசர அவசரமாக மருத்துவரின் அறைக்குள் நுழையாதீர்கள் சற்று ஆறி இருங்கள். காத்திருக்கும் அறையில் ரீவி இருந்தால் அதில் சற்று மனத்தைதச் செலுத்துங்கள்.

இறுதியாக hypertension-fig1_large வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது பிரச்சனை அற்றது எனப் பொதுவாக நம்பப்பட்டாலும், கவனத்தில் கொள்ள வேண்டியதும் கூட எனப் பல மருத்துவர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் உண்மையான உயர் இரத்தம் எதிர்காலத்தில் வருவதற்கான முதல் சமிக்கையாக இது இருக்கலாம் என்பதே ஆகும்.

வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது மறைந்திருக்கும் உயர் இரத்த அழுத்தமாக (masked hypertension) இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அதாவது பிரஸரானது சில தருணங்களில் சரியான அளவிலும் வேறு சில தருணங்களில் அதிகரித்தும் இருக்கலாம். இவ்வாறு இடையிடையே அதிகரித்துக் குறைவதும் காலகதியில் பின்விளைவுகளைக் கொண்டு வரலாம். எனவே எதற்கும் உங்கள் வாழ்க்கை முறைகளை ஆரோக்கியமானதாகக் கடைப்பிடிப்பது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா (16 Aug 2014) புளக்கில் வெளியான கட்டுரை

0.0.0.0.0

Read Full Post »

கால்களில் வளைந்து பருத்து வீங்கிக் கிடக்கும் இரத்தக் குழாய்களான நாளங்களே வரிக்கோஸ் வெயின்ஸ் (நாளப்புடைப்பு நோய்- நாள வீக்கம்) என அழைக்கப்படுகிறது. 

தங்களது கால் உளைவு, கால் வலி போன்றவற்றிகுக் இதுதான் காரணம் எனப் பலர் கருத்தினாலும் அவ்வாறில்லை. 

ஆரம்ப நிலையில் அசிங்கமாகத் தோற்றமளிப்பது மட்டுமே இதன் பாதிப்பு என்பதே உண்மை. 

ஆயினும் நாட்பட்டால் கால்களில் புண், எக்ஸிமா, நிறமாற்றம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

  • பொதுவாக இது வருவதைத் தடுக்க உங்களால் முடியாது.
  • பரம்பரையில் வருவது அதிகம்.
  • இருந்தபோதும் சில நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் அது மோசமடையாது தவிர்க்கலாம். 

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை எவை

  •  நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் நிற்கவோ உட்கார்ந்திருக்கவோ கூடாது. இடையிடையே எழுந்து நடப்பது, கால்களை அசைப்பது நல்லது. 
  • காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருப்பது நாளவீக்கம் உள்ளவர்களுக்கு நல்லது அல்ல.
  • உட்கார்ந்திருக்கும்போது கால்களைத் தொங்க விடாதீர்கள். ஸ்டூல் போன்றவற்றில் உயர்த்தி வையுங்கள். படுக்கும்போதும் தலையணை வைத்து கால்களை உயர்த்தவும். அவ்வேளைகளில் இதயத்தை விட கால்களை உயர்ந்தி வைத்திருப்பது நல்லது.
  • கால்தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் அவசியம். வேறு உடற் பயிற்சிகளும் தேவை.
  • உங்கள் எடை அதிகமாக இருந்தால் அதைக் குறைப்பதற்கான உணவு முறை உடற் பயிற்சி ஆகியவற்றை செய்யுங்கள். எடை குறைந்தால் அவற்றிற்காக குருதி ஓட்டத்தை அதிகரிக்கும்.
  • இறுக்கமான ஆடைகளை அணியாதீர்கள். முக்கியமாக வயிறு, இடுப்பு, தொடை ஆகியவற்றை இறுக்கிப்பிடிப்பவற்றை தவிருங்கள்.
  • மருத்துவர் ஆலோசனை கூறினால் நாளங்களை அழுத்தி குருதி காலில் தேங்குவதைத் தடுக்கும்; பன்டேஸ் அணிவது நல்லது

IMG_NEW

முன்பு ஹாய் நலமா புளக்கில் விரிவாக அழுதிய கட்டுரை:-  நாளப் புடைப்பு நோய்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

கொமோட் அரிப்பு (Commode rash)

‘நான் மாட்டன்’ அந்தக் குட்டிப் பையன் வெட்கத்துடன் சொன்னான். மாட்டன் என்று பிடிவாதம் பிடித்த அவனுக்காக அம்மா செய்ய வேண்டியதாயிற்று. கழற்றியதும் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவன் சிணுங்கிக் கொண்டே நின்றான்.

20131207_083146-001

‘இவன் எப்ப பாத்தாலும் பின் பக்கமாகச் சொறியிறான்.’ என்று தாய் சொன்னபடியால்தான் கால்சட்டையை அகற்றுமாறு சொல்ல நேர்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே அவனது கைகள் முகம் கழுத்து உடல் அக்குள் காதின் பின்புறம் என அவனது உடல் முழவதையும் அக்கறையோடு பார்த்துவிட்டேன். வேறு இடங்களில் எந்த சரும மாற்றத்தையும் காண முடியவில்லை.

அப்பட்டமாகத் தெரிந்தது வேறு எதுவுமல்ல. நோயுற்ற அவனது தொடைச் சருமம்தான். வெண்மையான அவனது சருமம் பாதிப்புற்று ஆங்காங்கே அலங்கோலமாகக் காட்சியளித்தது. அவனது பிட்டம் (குண்டிப் பகுதி) மற்றும் தொடையின் பின்புறமாக மேற்பகுதியிலும் சருமத்தில் சொரசொரப்பாக அரிப்புக் (Rash) கண்டிருந்தது. ஒரு சில இடங்களில் அது சிறு புண்களாகவும் மாறியிருந்தன.

கொமோட் அரிப்பு (Commode rash) என்று இங்கு மருத்துவர்கள் குறிப்படுவார்கள்.

Toilet seat rash என்று பொதுவாகவும்  toilet seat dermatitis என மருத்துவதிலும் சொல்லுவார்கள். ஐந்து புதிய அத்தகைய நோயாளிகளை இனங் கண்டதாக 2010 ல் வெளியான ஒரு மேலைத்தேய மருத்துவ அறிக்கை கூறியதை படித்தபோது ஆச்சரியமாக இருந்து. இங்கு நான் மட்டுமே பல குழந்தைகளைக் கண்டுள்ளேன்.

‘நாங்கள் கேடு கெட்டனாங்கள் ஒன்றையும் சுத்தமாக வைத்திருக்கத் தெரியாது. அதனாலைதான் இஞ்சை அதிகம். அவர்கள் எதிலும் வலு கிளீன்’ என்று சொல்ல வருகிறீர்களா?

அருகே நெருங்கவிடாது பொது மலசல கூடங்கள் நாற்றத்தால் விரட்டியடிப்பதும், ஒதுக்குப் புறமான இடங்களில் மதிலோரம் மூத்திர நாற்றம் மூச்சடக்கச் செய்வதும். காலையில் வீதியோரமாக மலங்கழிக்க வீட்டு நாய்களை அழைத்துச் செல்வதும் தலைநகரத்திலும் சகசமாகக் காணக்கிடைக்கையில் எமது சுகாதரம் பற்றிப் பெருமையாகப் பேச என்ன இருக்கிறது.

இருந்தபோதும் இது சுகாதாரக்கேட்டால் வரும் தொற்று நோயல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். நோயுற்ற ஒருவரிலிருந்து மற்றவருக்கோ அல்லது அழுக்கான பொருள்களிலிருந்து மனிதர்களுக்கோ பரவும் தொற்று நோயல்ல.

சுகாதாரத்தில் அதிக அக்கறை எடுப்பதால் வரும் நேயென்றும் கூறலாம். அது ஏன் என்பதை கட்டுரையைப் படித்துச் செல்லும்போது புரிந்து கொள்ளலாம்.

ஆதிகாலத்தில் இந்த நோய் இருந்ததில்லை. ஏன் எனில் அக்காலத்தில் மனிதர்கள் குந்திருந்தே மல சலம் கழித்தார்கள். பிட்டம் தொடை படுமாறு நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போல உயர்ந்த மலசல இருக்கைகள் அறிமுகமான பின்னரே இந்த நோயும் வர ஆரம்பித்தது.

wood_toilet_seat_s1

இந்த நோய் பற்றிய முதல் மருத்துவக் குறிப்பு 1927ம் ஆண்டுதான் வெளியானது. அக்காலத்தில் மரத்தாலான இருக்கைகளே இருந்தன். ஈரலிப்பான மர இருக்கைகள்,அதற்கு அடிக்கப்பட்ட வார்னிஸ் பெயின்ட் போன்றைவை காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டது.

ஏனெனில் இது ஒருவகை ஒவ்வாமை நோயாகும். வார்னிஸ் போன்றவற்றால் சரும ஒவ்வாவை ஏற்படுவதால் வரும் நோய். ஒட்டுக் கிரந்தி – எக்ஸிமா (Contact Dermatitis) என சொல்லலாம்.

1980 – 1990 வாக்கில் பிளாஸ்டிக்காலான மலசலபீட இருக்கைகள் அறிமுகமாயின. பிளாஸ்டிக்ற்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவு என்பதால் இந்த நோயும் அருகிவிடடிருந்தது.

ஆனால் அண்மைக் காலத்தில் மீண்டும் கொமோட் அரிப்பு நோய் வருவற்குக் காரணம் என்ன?

3505108

அவற்றைச் சுத்தம் செய்யப்பயன்படுத்தும் மாசகற்றும் பொருட்கள்தான் (னநவநசபநவெள). அவற்றில் பல கடுமையான இரசாயம் கலந்தவையாக இருக்கின்றன. இவையே சருமத்திற்கு ஊறு விளைவித்து ஒட்டுக் கிரந்தி நோய்க்கு காரணமாகின்றன.

இது பெரியவர்கள் குழந்தைகள் என்ற பேதம் இன்றி எவருக்கும் வரக் கூடியது. சில பெரியவர்களிலும் பார்த்திருக்கிறேன். ஆயினும் குழந்தைகளிலேயே அதிகம் காணப்படுகிறது.

குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருப்பது இவர்களில் அதிகம் வருவதற்குக் காரணமாக இருக்கலாம். குழந்தைகள் பாடசாலைக்குப் போகிறார்கள். அங்கு கழிப்பறைக்குச் செல்வார்கள். பெரும்தொகையான பிள்ளைகள் பயன்படுத்துவதால் அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நிர்வாகிகளின் கடமை என்பதால் கடுமையான மாசகற்றும் பொருட்களை அதிகளவு உபயோகித்திருப்பார்கள். அதுவே காரணமாயிருக்கலாம்.

அதே போல வீடுகளிலும் எல்லோரும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய மாசகற்றும் பொருட்களை; (detergents) உபயோகிக்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை.

அப்படியானால் தடுப்பது எப்படி?

  1. மரத்தாலான கழிப்பறை இருக்கைகள் இன்னமும் பாவனையில் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். பாதுகாப்பான பிளாஸ்டிக் இருக்கைகளையே உபயோகிக்க வேண்டும்.
  2. கடுமையான மாசகற்றும் இரசாயனங்களை உபயோகிக்கக் கூடாது. எந்த வகையான இரசாயங்களுக்கும் ஒவ்வாவை ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏன் ஒரு சிலருக்கு சோப் போன்றவற்றிகும் ஏற்படுதுண்டு அல்லவா? மேலை நாடுகளில் செய்த ஆய்வுகளில் அவற்றில் கலந்திருந்த Didecyl dimethyl ammonium chloride and Alkyl dimethyl benzyl ammonium chloride போன்ற பொருட்கள்தான் ஒவ்வாமைக்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. உதாரணங்களாக Phenol, Formaldehyde ற்றைச் சொல்லலாம்.
  3. இவற்றிக்குப் பதிலாக Sprit, hydrogen peroxideபோன்றவறைச் சுத்தப்படுத்த உபயோகிக்கலாம்.
  4. மாசகற்றும் இரசாயனங்களால் சுத்தப்படுத்திய பின்னர் அவற்றின் தாக்கம் சிறிதளவும் இல்லாதவாறு இருக்கைகளை அதிக நீரால் கழுவ வேண்டும்.
  5. குழந்தைகள் அதில் உட்காரும் போது அந்த இருக்கைகளின் மேல் சுத்தமான பத்திரிகைத் தாளை அல்லது துணித் துண்டைப் போட்டு உட்காரச் சொல்லலாம். ஒவ்வாமை உள்ள பெரியவர்களும் அவ்வறே செய்கின்றன.

சிகிச்சை

சிகிச்சைப் பொறுத்த வரையில் ஒவ்வாமைக்கு எதிரான ஸ்டீரொயிட் வகை கிறீம் வகைகைளை உபயோகித்தால் சுகமாகும்

ஆனால் மீண்டும் மீண்டும் வராமல் தடுக்க வேண்டுமாயின் அத்தகைய இரசாயனங்கள் சருமத்தில் படாதவாறு தவிர்ப்பது அவசியம்.

பாடசாலைகளிலும் பொதுக் கழிப்றைகளிலும் உபயோகிக்கக் கூடிய toilet seat covers  மேலை நாடுகளில் பரவலாகக் கிடைக்கினறன. இங்கும் கிடைக்கும் என்றே நம்புகிறேன். அவற்றை உபயோகிக்கலாம்.

கக்கூஸ் பற்று என்று நம்மவர்கள் சொல்லும் நோயிற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அதை மருத்துவத்தில் Tinea cruris  என்பார்கள். அது ஒரு பங்கஸ் தொற்றுநோய். அது பொதுவாக தொடை இடுக்குகில் எற்படும் அரிப்பாகும்.

தொடைகளில் வேறு காரணங்களாலும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.00

Read Full Post »

ஜீவநதி சஞ்சிகையில் நேர்காணல்

1)    ஈழத்து இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டுள்ளவர் நீங்கள். உங்களின் குடும்பப் பின்னணி, கல்விப் பின்னணி என்பன பற்றிக் கூறுவீர்களா?

DSC00484-001

ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவன் நான். அப்பா புகையிரத் திணைக்களத்தில் உதவி அட்சகராக இருந்தவர். அம்மா எல்லா அம்மாக்களையும் போலவே அன்பையும் பாசத்தையும் ஒழுக்கத்தையும் விதைத்தவர். பருத்தித்துறையில் உள்ள வியாபாரமூலை நான் பிறந்த கிராமம். அமைதியான கிராமம். சோலி சுரட்டுக்குப் போகாத ஊரவர்கள்;. அரசாங்க உத்தியோகங்களும் வியாபாரமும் எம்மவர்களது முக்கிய தொழில்களாகும். மனைவியும் அதே ஊர். எனது எல்லா முயற்சிகளிலும் உதவியும் ஒத்தாசையாகவும் இருப்பவர். வளர்ந்த இரு பிள்ளைகள்.

MSV view

ஆரம்பக் கல்வி அங்குள்ள மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையில். பின்னர் பருத்தித்துறையில் உள்ள ஹாட்லிக் கல்லூரி.

DSC02792

பட்டப் படிப்பு கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம். கொழும்பு மருத்துவ பட்டமேற்படிப்பு நிலையத்தில் குடும்ப மருத்துவத் துறையில் டிப்ளோமா பெற்றேன்.

Faculty - Copy copy

2)    உங்களுக்கு இலக்கியத்தில் எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது?

வாசிப்பில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள குடும்பப் பின்னணி. பாட்டியின் தகப்பானார் கண்ணாடி அப்பா என்போம். ஐம்பதுகளின் ஆரம்பமான அந்தக் காலத்திலேயே தினமும் வீரகேசரியும் கல்கியும் வாராவாரம் அவர் வீடு தேடி வரும். தொட்டுப் பார்த்து, அழகு பார்த்து, விரித்துப் பார்த்து, எழுத்துக் கூட்டிப் படித்தது எனப் படிமுறை வளர்ச்சியாக எனது வாசிப்புப் பழக்கம் வந்தது.

அப்பா கலைமகள் அமுதசுரபி கொண்டு வருவார். அம்மா தீவிர வாசகி. அப்பா ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பார். பக்கத்து வீடு பண்டிதர் பொன் கிருஷ்ணபிள்ளை. சிறந்த வாசகரும் பேச்சாளரும் ஆவார். அவரது வீடு நிறையப் புத்தகங்களும் சஞ்சிகைகளும் நிறைந்து கிடக்கும். தமிழ் புத்தகங்களுடன் National Geography அறிமுகமானது.

அவருடன் தொத்திக் கொண்டு கூட்டங்களுக்குப் போவதில் கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜா, நா.பா, எமது ஊர் யாழ்ப்பாணன் முதலான பல இலக்கியக்காரர்களை நேரில்; காணவும் பேசவும் அவர்களது சொற்பொழிவுகளைக் கேட்கவும் முடிந்தது.

ஹாட்லியில் அருமையான ஆசிரியர்கள். W.N.S சாமுவெல் Emergengy 1958, Psycholohist போன்ற கனதியான வாசிப்பிற்கான ஆர்வத்தைத் தூண்டிவிட்டார். வித்துவான் கார்த்திகேசு மரபு வழி வாசிப்பிற்கும், வித்துவான் வேலோன் நவீன இலங்கியங்களிலும் ஈடுபாட்டை ஏற்படுத்தினர்.

கனக செந்திநாதனை முதன் முதலில் கேட்க முடிந்தது ஹாட்லியின் இலக்கிய நிகழ்வின்போதுதான். அக்காலத்திலே மல்லிகை, வசந்தம், கலைச்செல்வி போன்றவற்றின் அறிமுகம் ஈழத்து இலக்கியத்திலும் முற்போக்கு இலக்கியத்திலும் ஈடுபாட்டை ஏற்படுத்தின.

மருத்துவ பீடத்தில் மாணவனாக இருந்த காலத்தில் தமிழ்ச்சங்கம் இந்து மன்றம் போன்றவற்றில் நிறைய பங்குபெற முடிந்தது. சஞ்சிகை ஆசிரியராக, தலைவராக, பொருளாளராக எனப் பொறுப்புகளும், கவிதை அரங்கு, மேடைப்பேச்சு, நாடகத்தில் நடிப்பு, நாட்டாரியலில் ஆய்வுக்கட்டுரை, வானொலி சங்கநாதம் நிகழ்ச்சிகளில் பற்கேற்பு என கலை இலக்கியத்தில் பரவலான ஈடுபாடு வளர்ந்தது.

3)    நீங்கள் எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு உந்த சக்தியாக அமைந்த பிரதான காரணியென எதனைக் கருதுகிறீர்கள்?

SDC13998-002

மேற் கூறிய அனைத்துமே அத்திவாரம்தான். 5 வயதில் தினகரன் மாணவர் பகுதியில் கட்டுரை, ஹாட்லிக் கல்லூரி Miscellenyயில் கட்டுரை, பல்கலைக்கழக கால சஞ்சிகைக் கட்டுரைகள் யாவும் மாணவப் பருவத்தின.

பருத்தித்துறையில் தனியார் மருந்துமனையை ஆரம்பித்து ஒரு சில வருடங்கள் கழிந்த பின்னர்தான் தீவிரமாக எழுத ஆரம்பித்தேன்.

DSC07727

மல்லிகை ஜீவா சிரித்திரன் சுந்தர் இருவரது நட்பும் என்னில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய போதும் சிரித்திரனில்தான் எனது முதல் தொடரான ஒரு டொக்டரின் டயறியிலிருந்து தொடங்கியது.

Sirithiran Sunthar

பிறகு மல்லிகையில் விமர்சனங்கள், சிறுகதை என வளர்ந்தது.

‘உந்த சக்தியாக அமைந்த பிரதான காரணி’ எனப் பெரிய வார்த்தைகளைப் போடுகிறீர்கள். ஆனால் எழுதப்புகும் எல்லா எழுத்தார்களையும் போலவே எனது சுயஅடையளத்தை நான் சார்ந்த சமூகத்தில் வைப்பதற்காகவே எனது ஆரம்ப எழுத்துகள் இருந்தன.

ஆனால் மருத்துவன் என்ற முறையில் சமூகம் சார்ந்த கடப்பாடு ஒன்று இருப்பதை படிப்படியாக உணர ஆரம்பித்தேன். மருத்துவர்கள் சொல்வதை நோயாளிகள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. அவர்களுடன் செலவிடும் குறுகிய நேரத்திற்குள் தெளிவாகச் சொல்லப்படாதவற்றை தெளிவாகவும் பரவலாக சென்றடையும் வண்ணம் தெரிவிப்பது முக்கிய தேவையாக இருந்தது.

இதற்காக முற்றிலும் வித்தியாசமான இரண்டு வகையான எழுத்து வடிவங்களை நான் பயன்படுத்த வேண்டியிருந்தது. மருத்துவக் கட்டுரைகள் ஒரு புறமாகவும், அனுபவப் பகிர்வுகள், சிறுகதைகள், புகைப்படங்கள், ஒரு சில கவிதைகள் என்பன மறுவிதமாகவும் அமைந்தன. மருத்துவம் சார்ந்த படைப்புகளை நான் தொடர்ந்து எழுத ஆரம்பகாலத்தில் தூண்டியவர்களில் முக்கியமானவர் டொக்டர் சுகுமார் ஆகும். அதேபோல முரசொலி ஆசிரியரான எஸ்.திருச்செல்வத்தையும் குறிப்பிட வேண்டும்.

4)    அறிவியல்- மருத்துவத்துறை சார்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் யாருடைய படைப்புகள் உங்களை வெகுவாகப் பாதித்துள்ளன?

இதில் இரண்டு தேர்வுகள் கிடையாது. ஒரே ஒருவர் மட்டும்தான். நந்தி எனப் பரவலாக அறியப்பட்ட பேராசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களே. அவர் மிகப் பெரிய ஆளுமை. நான் அவரது மாணாக்கனாக இல்லாதது போனது எனது துரதிஸ்டம். அவரது நலவியல் நூலான அன்புள்ள தங்கைக்கு, மற்றும் அவரது நாவலான மலைக்கொழுந்து ஆகியவை என்னை ஆரம்பகாலத்தில் ஆழமாகப் பாதித்தன. என்னுடைய வழிகாட்டியாகவும் மற்றொரு புறத்தில் குடும்ப நண்பராகவும் இருந்தவர்.

5)    உயர் தொழில் (Profession) பார்க்கும் ஒருவர், இலக்கியத்துறையில் அதீத ஈடுபாடு காட்டுவது, அவரின் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தாதா?

அவ்வாறு பாதிப்பு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு உண்டு என்பதை மறுப்பதில்லை. ஆனால் இந்த விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறேன். என்னுடைய மருத்துப் பணிநேரத்தில் எனது முன் உரிமை எனது நோயாளிகளுக்கே. முன்னுரிமை என்று சொல்லக் கூடாது முழுமையான உரிமை அவர்களுக்கே. எனது பணிநேரத்தில் நான் எந்த முக்கியமான இலக்கியக் கூட்டம் விழா நிகழ்வு எதுவானாலும் விட்டுக் கொடுப்புகள் இல்லை.

எனது ஓய்வு நாட்களான ஞாயிறு மாலை மற்றும் வர்த்தக விடுமுறைதினங்களின் மாலை நேரத்தில் மட்டுமே அவற்றில் கலந்து கொள்கிறேன். வருடத்தில் 365 நாட்களும் வேலை செய்கிறேன். மிக அத்தியாவசமான தேவைகளுக்காக மட்டுமே வருடத்தில் 3-4 நாட்களுக்கு லீவு எடுத்திருப்பேன்.

6)    சமுதாய மருத்துவம் (communitymedicine) என்ற துறையின் பிரதான செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்?

சமுதாய மருத்துவம் என்பது ஒரு கிராமத்தின் பிரதேசத்தின் அல்லது தேசத்தின் நலத்தை ஒட்டுமொத்தமாகக் கவனத்தில் எடுப்பதாகும். ஒரு குறிப்பட்ட சமுதாயத்தில் தோன்றும் நோய்கள் எவை, அவை தோன்றுவதற்கான காரணங்கள் எவை. அவற்றைத் தடுப்பது போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவதாக இருக்கும். தனி நபரை மட்டும் பார்க்காமல் அந்த நபர் சார்ந்த சமூகத்தின் பின்னணியில் பார்ப்பதாகும். பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) அத்துறை சார்ந்தவர். அத்துறைக்கான கல்வியில் பேராசிரியராகப் பணியாற்றி எண்ணற்ற மருத்துவர்களிடம் சமூக நோக்கை விதைத்தவர் எனச் சொல்லாம்.

எனது துறை குடும்ப மருத்துவமாகும் (Family medicine). . நாங்கள் சமூகத்தின் மத்தியில் இருப்போம். அது கிராமமாகவோ நகரமாகவோ இருக்கலாம். நாங்கள் தனி மனிதர்களை அவர்கள் சார்ந்த குடும்பப் பின்னணியில் அணுகுவோம். நான் குடும்ப மருத்துவனாக நீண்டகாலம் பணியாற்றிய பருத்தித்துறையில் டொக்டர்களான தம்பித்துரை, பத்மநாதன், கணபதிப்பிள்ளை, பாலகிருஷ்ணன், கதிர்காமத்தம்பி போன்றோர் எனது முன்னோடிகளாக அரும்பணி ஆற்றியுள்ளனர்.

அம்மம்மா, அம்மா, மகள், பேத்தி எனப் பலதலைமுறையினருக்கு மருத்துவம் செய்தவர்கள் அவர்கள். இதனால் அவர்களுக்கு தனது நோயாளிகளின் பரம்பரை நோய்கள், உணவு முறைகள், பழக்கவழக்கங்கள், உறவுமுறைகள் என யாவுமே அத்துபடியாகத் தெரிந்திருந்தது. இது தங்கள் நோயாளிகளின் பிரச்சனைகளை அவசியமற்ற ஆய்வுகூடப் பரிசோதனைகள் இன்றி பார்த்த மாத்திரத்திலேயே கண்டறிய முடிந்திருக்கிறது. வாழும் சூழலுக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்கி அவர்களை ஆராக்கியமாக வாழ நெறிப்படுத்த முடிந்திருக்கிறது.

இத்துறை மிக அற்புதமாக செயற்படும் நாடாக இங்கிலாந்தைக் கூறலாம். இங்கு இலங்கையில் அரச ஆதரவில்லாத காரணத்தால் இத்துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கிறது. அரச மருத்துவர்களுக்கு நல்ல சம்பளம் மற்றும் வசதிகள் தரப்படுவதால் இத்துறைக்கு புதிதாக வருபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறது.

7)    ஒரு மருத்துவரின் அநுபவங்களைப் படைப்புகளாகத் தரும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் குறிப்பிடுங்கள்?

மருத்துவர் தனது அனுபவங்களை படைப்புகளாகத் தரும்போது அது அவரது நோயாளிகளின் அந்தரங்க விடயங்களை பகிரங்கப்படுத்துவதாக இருக்கக் கூடாது. பெயர், ஊர், உருவ அடையாளங்கள் போன்ற நோயாளியின் தனித்துவமான குறிப்புகள் எதுவும் படைப்பில் இருக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அந்நோயாளியின் மன உணர்வுகளை மட்டுமின்றி சமூக ரீதியான தாக்கத்தையும் அவருக்கு ஏற்படுத்தலாம்.

ஆனால் இது மருத்துவரின் படைப்புகளுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல. எல்லாப் படைப்பாளிகளுக்கும் பொருத்தமானது. எந்த ஒரு படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட நபரை அடையாளம் காணும் விதத்தில் தனது பாத்திரங்களை அமைக்கக் கூடாது. அவ்வாறு எழுதுவது அவர்களின் தனிநபர் சுதந்திரத்தைப் பறிப்பதாகவே இருக்கும். இருந்தபோதும் பல பிரபல எழுத்தாளர்கள் கூட தமது படைப்புகளில் சில தனிநபர்களை குறிவைத்து அடிப்பதாக எழுவதைக் காணும்போது வேதனையாக இருக்கிறது.

எந்தவொரு நோயாளியையும் இனங்காணும் வகையான குறிப்புகள் எதுவும் எனது படைப்புகளில் இருக்காது. மருத்துவக் கட்டுரையாயினும் சரி அனுபவப் பகிர்வாயினும் சரி சிறுகதை கவிதை போன்ற படைப்பிலக்கியங்களானாலும் சரி அவற்றில் யாரையும் குறிப்பாக எழுதக் கூடாது என்பதில் நான் மிக அவதானமாக இருக்கிறேன். அது எனது தொழில் தார்மீகமும் கூட. பல நோயாளிகளில் பெற்ற அனுபவங்களை ஒன்று சேர்த்து அவற்றை நம்பத்தக்க விதமான உயிரோட்டமுள்ள புதிய பாத்திரங்களாகப் புனைந்து எழுதுகிறேன். அதனால் அவை எந்த ஒருவரையும் குறிப்பிட்டுச் சுட்டுவதாக இருக்காது

பொதுவான சில பிரச்சனைகள் பற்றி எழுதும் போது அது எனக்காகவே எழுதப்பட்டது போல இருந்தது என ஒருவர் அல்ல, பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். ‘பரவலான பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறேன் அது அவர்களைச் சென்றடைந்திருக்கிறது அவர்களுக்கு மருந்தாக அமைந்தது’ என திருப்தி கொள்ளுவேன்.

8)    மருத்துவக் கருத்துக்களை இலக்கியப் படைப்புகளில் கருப்பொருளாகக் கொள்ளும்போது, அப்படைப்புகளினூடாகச் சொல்ல வேண்டியவற்றைத் தெளிவாகச் சொல்லலாம் எனக் கருதுகிறீர்களா?

நிச்சமாக இல்லை. குறிப்பிட்ட ஒரு விடயம் பற்றிய அருட்டுணர்வை பரந்த வட்டத்தில் ஏற்படுத்துவதே அதன் நோக்கமாகும். தெளிவான மருத்துவக் கருத்துக்களை சொல்வதற்கு நலவியல் கட்டுரைகளே ஏற்றவை. இலக்கியப் படைப்புகள் இலகு வாசிப்பானவை. எந்த ஒரு நோய் பற்றியாவது தெளிவாக அறிய விரும்புவர்கள் அது பற்றிய மருத்துவக் கட்டுரையை வாசிக்க வேண்டும்.

ஆனால் மருத்துவக் கட்டுரைகளை இன்று யார் வேண்டுமானாலும் பத்திரிகைளில் எழுதலாம் என்றாகிவிட்டது. யார் எழுதுகிறார் எழுதுபவரது மருத்துவக் கல்வித் தகமை என்ன போன்றவற்றை கவனத்தில் கொண்டே அவற்றைத் தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டியது வாசகர் பொறுப்பாகிவிடுகிறது.

எழுதுபவர் பெயர் இல்லாமல் கூட நலவியல் கட்டுரைகளை வெளியிடுமளவிற்கு பல பத்திரைககள் தமது பத்திரிகா தார்மீகத்தை கைநழுவிவிட்டுள்ளன.

9)    இணையத்தள வலைஅமைப்புகளினூடாக இன்று வெளியிடப்படும் படைப்புகள் வெகுசன மட்டத்தில் சென்றடையக்கூடிய வாய்ப்புகளை எவ்வாறு ஏற்படுத்தலாம்?

இணையதள வாசிப்பு பெருகி வருகிறது. இருந்தபோதும் அச்சு ஊடகம் அளவிற்க்கு வெகுசன மட்டத்தை அவை சென்றடைவதில்லை என்பது உண்மையே. இருந்தபோதும் பத்திரிகைகள் கூட வெகுசனமட்டத்தை அடைவதாகத் தெரியவில்லை. இலங்கையில் வெளியாகும் தமிழ்த் தினசரிப் பத்திரிகைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் கூட அவற்றின் தினசரி விற்பனை முப்பதாயிரத்தை தாண்டுவதில்லை என அண்மையில் ஒரு தினசரி ஆசிரியர் குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.

ஒரு படைப்பிற்கான எதிர்வினை அதை வெளியிட்ட அடுத்த கணமே கிடைக்கும் என்ற சுயதிருப்திக்காகவே பல எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவதை விரும்புகிறார்கள். ருவிட்டர், பேஸ்புக், லிங்டென், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத் தளங்கள் ஊடாக பரலாக கிடைக்கச் செய்ய நானும் முயல்கிறேன். ஆனால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் அவற்றை வெறும் திண்ணைப் பேச்சாகவே கொண்டு செல்கின்றனர்.

10)    உங்களின் நலவியல் நூல்கள் பற்றிய சுருக்கமான விபரங்களைக் கூறுங்கள்?

இதுவரை 11 நலவியல் நூல்கள் வெளியாகியுள்ளன.

  1. சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்,
  2. பாலியல் நோய்கள்,
  3. போதையைத் தவிருங்கள்,
  4. தாயாகப் போகும் உங்களுக்கு- இலங்கையில் 1 பதிப்பு, NCBH சென்னை 3 பதிப்புகள்,
  5. எயிட்ஸ்- இலங்கையில் 3 பதிப்புகள், NCBHசென்னை 3 பதிப்புகள்,
  6. வைத்திய கலசம்,
  7. சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு,
  8. நீங்கள் நலமாக- இலங்கையில் 5 பதிப்புகள்,
  9. நீரிழிவுடன் நலமே வாழுங்கள் – 3 பதிப்புகள் ,
  10. கொலஸ்டரோல் கட்டுப்படுத்துவது எப்படி? 2 பதிப்புகள் ,
  11. உயர் இரத்தநோயைப் புரிந்கொள்ளல்.

இவற்றைத் தவிர பத்திரிகைகள் சஞ்சிகைளில் 2007 ஆண்டிற்கு பின்னர் எழுதி வெளியான 400 ற்கு மேற்பட்ட நலவியல் கட்டுரைகள் நூலாக்கப்படாமல் கைவசம் இருக்கின்றன.


11) உங்களது இலக்கியப் படைப்புகளை நூலாக்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்களா?

‘மறந்து போகாத சில’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலை மீரா பதிப்பகம் ஊடாக பல வருடங்களுக்கு முன் வெளியிட்டேன். நூல் விமர்சனம், சினிமா விமர்சனம், புகைப்படம், சிற்பம் ஓவியம் போன்;ற பல்துறை கலை இலக்கியக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது.

ஒரு டொக்டரின் டயறியில் இருந்து மல்லிகைப் பதிப்பக வெளியீடாக வந்தது. இது எனது மருத்துவப் பணியூடாக சுற்றியுள்ள உலகத்தை பார்க்கும் சமூகவிமர்சன அனுபவப் பதிவு நூலாக வந்தது. ஆரம்பத்தில் சிரித்திரனிலும் பின்னர் மல்லிகையிலும் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இவை.

இன்னமும் நிறையக் கட்டுரைகள் உள்ளன. சினிமா விமர்சனங்கள் பல உள்ளன. ஒரு நூலாகப் போடலாம். நிறைய இலக்கியக் கட்டுரைகள் உள்ளன. அண்மைக்காலமாக புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வம் பிறந்திருக்கிறது. பல கவிதைகளும் எழுதியுள்ளேன். புகைப்படங்களும் கவிதையும் சேர்ந்ததாக ஒரு நூல் போடவேண்டும் என்ற விருப்பும் உண்டு.

Stethஇன் குரல் என்ற தலைப்பில் புதிதாக பல எனது அனுபவப் பகிர்வுகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இப்பொழுது அறிவியல் களரி என்ற தொடரில் இலகுவாக தமிழில் அறிவியல் கட்டுரைகளை சமகாலம் சஞ்சிகையில் எழுதிவருகிறேன். மிகுந்த தேடலுடன் எழுதும் கட்டுரைகள் இவை. இவற்றைத் தொகுத்தால் சாதாரண மக்களும் இன்றைய அறிவியல் வளர்ச்சியின் சில கோணங்களை புரிந்து கொள்ளக் கூடிய வித்தியாசமான நூலாக அமையும்.

ஆனால் இவை எவற்றையும் நூலாக்கும் முயற்சியில் நான் இறங்கத் தயங்குகிறேன்.

காரணம், இலங்கையில் ஒரு நூலைப் போட்டால் அதன் விற்பனையையும் எழுத்தாளனே பொறுப்பேற்க வேண்டிய இடரான சூழலே இருக்கிறது. அதற்கான நேரமும், விற்பனை இரகசியங்களும் என்னிடம் கிடையாது. அதனால் யாவற்றையும் இணையத்தில் போட்டு பலதரப்பட்ட வாசகர்களையும் அடைய முயற்சிக்கிறேன். அதில் ஓரளவு நிறைவு காண முடிகிறது.

12)    உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றி..

  • ‘தாயாகப் போகும் உங்களுக்கு’, ‘நீங்கள் நலமாக’ ஆகிய இரண்டும் இலங்கை தேசிய சாஹித்திய விருதுகளைப் பெற்றன.
  • ‘தாயாகப் போகும் உங்களுக்கு’ இலங்கை இலக்கியப் பேரவை விருதையும் பெற்றது.
  • இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் ஊடகத்துறை பங்களிப்பிற்கான விருது.
  • கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச்சங்கத்தின் சிறந்த வலைப் பதிவாளர் விருது 2011

13) நீங்கள் ஒரு சிறந்த வாசகர் என்பதை நீங்கள் அவ்வப்போது எழுதும் கட்டுரைகள் வெளிபடுத்துகின்றன. உங்களுடைய தொழில் ரீதியான கடமைகளுக்கும் அப்பால், வாசிப்புக்கான நேரத்தை எவ்வாறு ஒதுக்குகிறீர்கள்?

எழுத்து வாசிப்பு யாவும் எனது ஓய்வு நேரத்தில்தான். கிடைக்கும் நேரம் முழுவதையும் இத்தகைய கலை இலக்கிய முயற்சிகளில் செலவழிக்க வழிசமைத்துத் தருவது எனது துணைவியார்தான். எனது எழுத்து முயற்சிகளின் முதல் வாசகர், விமர்சகர் படிதிருத்தம் செய்வது யாவும் அவரே.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ஜீவநதி சஞ்சிகையில் வெளியான நேர்காணல்

 0.0.0.0.0

Read Full Post »

கொதிநீர் பட்டு சருமம் கொப்பளமாகிக் கிடந்தது.
அவசரமாகச் சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று.

தாதியிடம் போனைக் கொடுத்து ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னார் மருத்துவர்.

er_pho11

சிகிச்சை முடிந்து சில நிமிடங்களுக்குள் உலகளாவிய ரீதியில் பலர் அந்தப் புகைப்படம் சொல்லிய செய்தியைத் தெரிந்து கொண்டனர்

ஆம் தீக்காயங்களுக்கான முதல் உதவி சிகிச்சை பற்றி புகைப்படத்துடன் சொல்லியிருந்தார்.

இன்று இது இல்லாவிட்டால் உலகமே அஸ்த்தமித்து விட்டதாகப்படும்

பேசவும் செய்தி பெறவும் என்றிருந்த சாதனம் காற்றும் உணவிற்கும் அடுத்தபடியாக அத்தியாவசியமாகிவிட்டது.

ஆனால் கடந்து வந்த பாதையும் அனுபவங்களும் எத்தனை

0.0.0.0.0

(இது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது)

“இதன் பயன்பாடு அதிகம் தான். எங்கிருந்தாலும் முழு உலகத்தை யும் உள்ளங் கைக்குள் கொண்டு வரக்கூடிய சாதனம் அல்லவா? ஆனால் அதற்கு மேலாக அந்தஸ்தின் அடையாளச் சின்னமாகவும் மாறி விட்டதுபோல தெரிகிறது.

MWC-2008-Sony-Ericsson-W910-Awarded-the-Best-Mobile-Phone-For-2007-3

வாங்கும் போது “ஆக எட்டாயிரம்தானே” என எண்ணத் தூண்டும். “வசதி அதிகம். இணைப்பும் உடனடியாகவே கிடைக்கும். தொழிலுக்கும் உதவியாயிருக்கும்” என எண்ணிப் பூரிக்கும்.

பெரும்பாலானவருக்கு இந்த உற்சாகம் பூரிப்பு எல்லாம் சில மாதங்களுக்கு  நீடிக்கும். பில் வர கண்கள் பிதுங்கும். வாற கோல், போற கோல் எல்லாவற்றிற்கும் காசு. நாள் போகப்போக அழைப்பு எடுக்கவும் மனம் வராது, அழைப்பு வந்தாலும் மனம் கலங்கும். வரப்போகும் பில்லை நினைத்து உடல் சோரும்.

ஆனால் கையில் இருக்கும் மட்டும் ஷோ காட்டாமல் விடவும் மனம் விடாது. இதை எங்கு கொண்டு போகலாம். எங்கு கொண்டு போகக் கூடாது எப்போது கதைப்பது என்பவற்றில் எந்தவித சுயகட்டுப்பாடு களும் கட்டுப் போட்டாலும் வராது.

வேகமாக கார் பறக்கும் போது ஒரு கையில் ஸ்டயிரிங் மறுகையில் செல்லுர் போன் பேசும். பாதசாரியின் உயிர்தான் அம்பேலாகும்.

காதலியுடன் தனிமையில் இருக்கும் போது திரைப்படங்களில் வருவது போன்று “இச்” என்ற சப்தத்துடன் முத்தம் வரும் என காதலி ஆசையுடன் அணைப்பாள்.

இச்சுக்குப் பதில் கிணீர்தான் வரும்.

கோவிலில் அமைதியாகத் தியானம் பண்ணும்போது அருகில் இருப்பவரின் செல் போன் இறைவனுக்காக அருள்பாலிக்கும்!

ஒரு நாள் இப்பிடித்தான், ஒரு நோயாளியின் வேதனைகளுக்கு செவிமடுத்துக் கொண்டிருந்தேன். மணியடித்தது. அந்த நோயாளி சொல்வ தைக் கேட்டுக் கொண்டே ரிசீவரை எடுத்து “ஹலோ” என்றேன்.

மறுமொழி போனுக்குள் இருந்து வரவில்லை!
எதிர்ப்புறத்திலிருந்து வந்தது!

“அது எனக்கு வந்த கோல்” நோயாளியுடன் வந்தவர் பெருமையடித் தார்.

போனைக் கீழே வைத்தேன்.
முகத்திலிருந்து வழிந்த அசடை கைக்குட்டை துடைத்தேன்.

எங்கேயிருக்கிறோம்
என்ன செய்கிறோம்
யார் யாருக்கு இடைஞ்சல் கொடுக்கிறோம்
போன்ற எதுவித யோசனைகள் இல்லாமல் போனுக்குள் அலட்டத் தொடங்கினார்.

மற்றொருநாள்.

சளி காய்ச்சலுடன் ஒரு பெண் நோயாளி வந்திருந் தார்.
நோய் பற்றி விசாரித்து முடிந்தபின், நெஞ்சில் சளி எப்படி இருக்கிறது என அறிவதற்காக குனிந்து ஸ்டெதஸ்கோப்பினால் மார்பைப் பரிசோதித்துக் கொண்டிருந்தேன்.

போன் மணி அடித்தது. சூடு கண்ட பூனையல்லவா?

போனை எடுக்கக் கையை நீட்டுமுன் நிதானித்தேன்.
ஒலித்தது எனது போன் அல்ல.

நோயாளியுடன் கூட வந்திருந்த கணவரினது.
இவர் போனில் வளவளா எனக் கதைத்துக் கொண்டிருந்தால் நான் நோயாளியைப் பரிசோதிப்பது எப்படி என்ற கவலை முளைத்தது.

“ஹலோ|”

அவரது உரத்த குரல்
மனைவியில் முட்டி மோதி
அவளையும் ஊடுருவி,
கடூரம் தணிந்து
ஸ்டெதஸ்கோப் ஊடாக இதமாக காதில் விழுந்தது.

மனிசன் மனேர்ஸ் தெரிந்தவர் போலும். கதையைக் கட் பண்ணிவிட்டார் என அமைதியடைந்தேன்.

திடீரென கடாமுடாவென வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தது போன்ற சப்தம் …..
ஸ்டெத் குழாயைக் கிழித்துக் கொண்டு வந்து
செவிப்பறை யை உடைத்தது.

பொறுக்கமுடியாமல் பிடுங்கி மேசையில் எறிந்தேன்.

கணவன் தனது போனை மனைவியின் வாய்க்கு நேரே பிடித்துக் கொண்டு நிற்க அவள் தனது சினேகிதியுடன் அரட்டையை ஆரம்பித்து விட்டாள்.

  0.0.0.0.0.0

இது சுமார் 15 வருடங்களுக்கு முன்னர். இன்னுமொரு தொல்லை இப்படி வந்தது!

cellphone-nokia-8250-(2001)

உள்ளே வந்தவரின் குட்மோர்னிங் முகமன்கள் வழமையான விசாரிப்புகள் யாவும் முடிய ஆரம்பித்தார்.

“டொக்டர் நீங்கள் ஒரு முக்கியமான நபர். உங்களோடு தொடர்பு கொள்ள ஒவ்வொரு நிமிடமும் பலர் ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது…”

‘நான் அவ்வளவு முக்கியமான நபரா?’
கோடை வெயிலில் தலையில் ஐஸ்கட்டியைத் தூக்கி வைத்தது போல இளகினேன்.

ஆனாலும் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதும் எனக்குத் தெரியும். வந்தவரைப் பார்வையால் குடைந்தேன்.

வாலிபர், வயது இருபத்தைந்து இருக்கும்.
விலையுயர்ந்த கவர்ச்சியான நீளக்கை சேட் அணிந்திருந்தார்.
அதற்கேற்ற ஆடம்பர டை,
நேர்த்தியான ட்றவுசர்.
பளபளக்கும் சப்பாத்து.
வசீகரமான பேச்சு.

மெடிக்கல் ரெப்!
மருந்துக் கொம்பனிகள் தமது மருந்துகளை வைத்தியர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை நோயாளிகள் தலையில் கட்டுவதற் காக அனுப்பப்படுபவர்கள்.

எமது வேலை கடுமையாக இருக்கும் நேரங்களில்கூட தமது பிரசாரத்திற்குத் தயங்காதவர்கள்.
பொறுமையைச் சோதிப்பவர்கள்.
ஆனால் பேனை, எழுதும் நோட் புக், சாம்பிள் என ஷலஞ்சம் கொடுத்தாவது வைத்தியர்களை அடக்கிவிடுவதில் வல்லவர்கள்.
“…அவர்களுக்கு உங்கள் தொடர்பு கிடைக்காவிட்டால் மிகுந்த மனக்கஷ்டம். அதே நேரத்தில் உங்களுக்கும் தொழில் ரீதியான இழப்பு. எனவே உங்களுக்கு ஒரு செலுலர் போன் அவசியம்|” விடயத்துக்கு வந்தார் மிக நிதானமாக.

மெடிக்கல் ரெப் அல்ல ரெலிபோன் கொம்பனியிலிருந்து வந்திருக்கிறார்.

தான் பிரதிநிதித்துவம் வகிக்கும் கொம்பனியின் பெருமை,
அவர்களது தொலைபேசிச் சேவையின் சிறப்பம்சங்கள், பாவனையாளர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்,
வைத்தியர்களுக்கான விசேட விலை கழிப்பு
என அடுக்கிக் கொண்டே போனார்.

கொட்டாவிகளைக் கஷ்டப்பட்டு அடக்கவேண்டியதாயிற்று.

“நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனாலும் எனக்கு இப்பொழுது செல்லுலர் போன் தேவையில்லை” என்றேன்.

“நீங்கள் எங்கிருந்தாலும் எவரும் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த வசதியைக் குறைந்த விலையில் தருகிறோம்.
கூட்டத்தில், தியேட்டரில், கோயிலில் எங்கிருந்தாலும் நோயாளர்கள் மாத்திரமன்றி ஏனையவர்களும் உங்களை உடனடியாக நாடலாம் அல்லவா?”

“அதே காரணத்தால்தான் எனக்கு வேண்டாம் என்கிறேன்|”.

வீட்டிலும் வைத்தியசாலையிலும் இருக்கிற போன்களால் வருகின்ற தொல்லைகளே போதும். எனக்கென்று சில நிமிடங்களாவது தனிமை தேவை. அமைதி தேவை. சில கணங்களாவது இசையில் மூழ்க வேண்டும். இலக்கியத்தில் அமிழ வெண்டும். சிரித்து மகிழ்ந்து நண்பர்ளோடு அளவளாவ வேண்டும். வெளியே செல்கின்ற சில தருணங்களில் தான் இது எப்போதாவது கிடைக்கிறது. அதை இழக்க நான் தயாராக இல்லை. சொறி சென்று வாருங்கள்”

என விடையளித்தேன்.

“சரி உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் முயற்சிக்கிறேன்”
நம்பிக்கையைக் கை விடாமல் ஆனால் தொங்கிய முகத்துடன் வெளியேறினார்.

அடுத்த நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் அது பார்வையில் விழுந்தது. தனது சிறுகைப்பையை அருகிலுள்ள மேசையில் மறந்துபோய் விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார்.

பாவம். ஏதாவது முக்கிய ஆவணங்களை கைப்பையில் விட்டுவிட்டு அவசரத்தில் சென்றிருப்பார். இப்பொழுது அவசிய தேவைக்காகத் தேடிக் கொண்டிருக்கக்கூடும் என எண்ணினேன்.

நல்லவேளையாக கைப்பையின் வெளிப்புறத்தே அவரது பெயரும் தொலைபேசி இலக்கமும் கிடைத்தன. தாமதிக்காது அவரது இலக்கத்தை டயல் பண்ணினேன்.

அவரது கைப்பை கிணுகிணுத்தது.

0.0.0.0

Read Full Post »

எமது யாழ் மண்ணின் செழுமைக்கு கை கொடுத்தவர்கள் பலர். கல்வி, வாணிபம், அரசியல் கலை இலக்கியம் என எத் துறையை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் கால் பதித்து அளப்பரிய பணிகள் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக வாழ்ந்தவர்கள் பலர்.

அந்த விதத்தில் எமது மண்ணின் ஆத்ம ஞானிகள் பலரும் மண்ணில் பலமாக ஆழ வேரூன்றி அகலச் சடைபரப்பி எம்மை ஒத்த சாதாரணர்களின் ஆன்மீக மேம்பாட்டிற்கு உள்ளொளி பாய்ச்சியதை மறக்க முடியாது. சித்தர்கள், யோகிகள், ஞானிகள், சுவாமிகள் எனப் பலவாறு எம்மக்களால் அழைக்கப்பட்டு உயர் பீடத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்கள்.

கடையிற் சுவாமிகள், யோக சுவாமி முதற்கொண்டு ஜேர்மன் சுவாமி என அறுகுபோல் வேரூண்டிப் படர்ந்த ஞானப் பரம்பரியம் இம் மண்ணில் இருந்திருக்கிறது. அவர்களின் ஞானத் தேறலில் ஒரு சிறு பங்காவது எம் எல்லோரிலும் இன்றுவரை ஒட்டிக் கொண்டிருப்பது நாம் செய்த பாக்கியம்தான்.

Chemparuthi_0001_NEW

வடமராட்சி வடக்கு பிரதேச கலாசார பேரவை பருத்தித்துறை வெளியிட்ட செம்பருத்தி’ என்ற பிரதேச மலரில் இடம் பெற்ற கட்டுரை இது.

“குவலயத்தின் விழி போன்ற” என மகாகவி பாரதி போற்றிய அற்புத ஞானி ஒருவர் வடமராட்சியில் அதுவும் நான் பிறந்த ஊரான வியாபாரிமூலை மண்ணில் விளைந்திருக்கிறார். அவர்தான் தான் அருளம்பல சுவாமிகள் ஆவார். யாழ்பாணத்துச் சுவாமி என பாரதி அவரை விழித்தபோதும் மௌன சுவாமி எனத் தன்னைத்தான் ஓரிடத்தில் குறிபிட்டிருக்கிறார். ஊரவர்களும் அருளம்பல சுவாமி, மௌன சுவாமி ஆகிய பெயர்களில் அவரைப் போற்றித் துதித்திருக்கினறனர்.

ஆயினும் அவரைக் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை. எனது தந்தையார் பாட்டனார் ஆகியோர் அவரைப் காணும் பாக்கியம் பெற்றிருக்கின்றனர். 1942 மார்கழி மாதம் மகாசமாதியடைந்த அவரை வியாபாரிமூலை பேந்தாள் வளவிலிருந்து நிஷ்டையிலிருந்த அதே நிமிர்ந்த கோலத்தில் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று வியாபாரிமூலை வீரபத்திர கோயிலுக்கு அண்மையாக, ஈசான மூலையில் சமாதி வைக்கபட்டார். தானும் சிறுவனாகக் அதில் கலந்து கொண்டதை எனது தந்தையார் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

வியாபாரிமூலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளைக்கும் வதிரியைச் சேர்ந்த இலட்சிமி அம்மாள் ஆகியோரின் மகனாக 1980 ஆண்டு அருளம்பலம் பிறந்தார். அவர் பிறந்த தினம் 1880 ஆம் ஆண்டு மே மாதம் 7ம் திகதி என அவரைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் நா.ஞானகுமாரன் ‘பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்’ என்ற நூலில் ஆய்வு ரீதியாகக் குறிப்பிடுகிறார்.

எமது ஊரில் பிறந்து, எமது பகுதிப் பாடசாலையான மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தில் கல்வி கற்றபோது அவர் சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் மாணாக்கனாக இருந்தார் என்பதையும் அறிய முடிகிறது. 5ம் வகுப்புவரை அங்கு கல்வி கற்ற அவர் பின்னர் குடும்ப பொருளாதார நிலைகாரணமாக் தொழில் நிமித்தம் கம்பளை சென்றார்.

5ம் வரை மட்டுமே கல்வி கற்ற போதும் இராமாயணம் மகாபாரதம் திருமூலர் திருக்குறள் முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் பட்டினத்தார் பாடல்கள் அருகிரிநாதர் பாடல்கள் வரையானவற்றில் தேர்ச்சி பெற்றிருந்ததை அவரது படைப்புகள் ஊடாக அறிய முடிகிறது என பேராசிரியர் நா.ஞானகுமாரன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

உலக வாழ்வில் நாட்டங் குறைந்து ஆன்மீக ஆர்வம் மீதௌ 1910ம் ஆண்டளவில் இந்தியா சென்ற அவர் நாகை நீலலோசனி அம்மன் ஆலயத்தில் நிஷ்டை நிலை கற்றார் என அவரது படைப்புகள் மூலம் அறிய முடிகிறது. 1910 முதல் 1914 வரை நான்கு ஆண்டுகள் உணவு மறுத்து கடுமையான நிஷ்டையில் ஆழ்ந்தார். அந் நிலையில் புலித்தோலில் அவர் அமர்ந்திருக்கும் உடல் மெலிந்த ஞானத் தோற்றமுடைய புகைப்படம் ஒன்று கிட்டியுள்ளது. அவரது மேலும் இரு புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

நிஷ்டையில் இருந்த நேரத்தில் இவரது உண்மையான ஞானநிலையைப் புரியாத ஆலய நிர்வாகி போலிக் குற்றச்சாட்டு செய்தபோது பொலிசார் இவரை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். சற்று நேரத்தில் பார்த்தபோது அறை பூட்டிய படியே இருக்க இவர் காணாமல் போயிருந்தார். தேடியபோது இவர் கடற்கரையில் நிஷ்டையில் இருப்பதைக் கண்டனர். இதைக் கண்ட நீதிபதி அவரது ஆன்மீக மகிமையை உணர்ந்து, எவரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என ஆணையிட்டதாகத் தெரிகிறது.

சித்து வல்லமை பெற்ற அருளம்பல சுவாமி அவர்கள் வரப்போவதை எதிர்வு கூறல், மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல், ஒரு நேரத்தில் பல இடங்களில் தன் உருவம் காட்டல் போன்ற பலவற்றை செய்யும் ஆற்றல் பெற்றிருந்திருக்கிறார். ஆனாலும் சித்து வேலைகளில் அதிக நாட்டம் கொண்டதில்லை.

அருளம்பல சுவாமிகள் ஞானந் தெளிந்த சித்தர். அதற்கு மேலாக அற்புதமான படைப்பாற்றல் கொண்ட கலைஞனாகவும் காணப்படுகிறார். நுணுக்கமும் நேர்த்த்pயும் கொண்ட அவரது பல கைவினைப் பொருட்களான மண்விளக்கு, சட்டி, செம்பு போன்றவற்றை அவரின் பரம்பரையினர் வதிரியில் பேணி வந்ததை நேரில் கண்டுள்ளேன்.

அத்துடன் அவர் சிறந்த ஓவியராகவும் விளங்கியுள்ளார். எமது ஊரான வியாபாரிமூலை விநாயகர் ஆலய களஞ்சியசாலைக்கு முன்பாகவுள்ள வாகனசாலைச் சுவரில் செங்காவி கோட்டோவியமாக பக்த அடியார் ஒருவரின் சித்திரம் ஒன்றைச் சிறுவயதில் கண்டது மங்கிய கனவாக நினைவில் நிற்கிறது. அதேபோல வசந்த மண்டப சுவரிலும் அவர் வரைந்த தெய்வ ஓவியங்கள் இருந்திருக்கின்றன.

பேணப்பட வேண்டிய பெறுமதி வாய்ந்த பொக்கிஷங்கள் அவை. “..பாவியரைக் கரை சேர்க்கும் ஞானத் தோணியான”  அருளம்பல சுவாமிகளின் உள்ளுணர்வுகளைப் பிரதிபலிக்கும் கைவண்ணமான அவற்றை வெள்ளை அடித்து  மறையச் செய்த எமது பேதமையை எண்ணி மனங் கலங்குவார் எமது மண்ணின் பிற்கால ஓவியரான திரு.ஏ.கே. நடராஜா.

சித்தராக, கலைஞனாக, ஓவியனாக தன்னை வெளிப்படுத்திய அருளம்பல சுவாமிகள் தன்னை கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் வெளிப்படுத்தவும் தவறவில்லை. தான் தெளிந்த ஆன்மீக அறிவையும் உணர்வையும் மக்களுக்கு ஊறச் செய்யும் முயற்சியாக கவிதையாகவும் உரைநடையிலும் அவர் படைத்தவை பல. பதின்னான்கிற்கு மேற்பட்ட இத்தகைய ஆக்கங்கள் உள்ளதாக பேராசிரியர் நா.ஞானகுமாரன் கூறுகிறார். இவை படித்துப் பயன்பெற ஏற்றவை என்பதற்கு மேலாக ஆய்விற்குரிய ஆவணங்களாகவும் திகழ்கின்றன.

அருளம்பலம் சந்தேக நிவிர்த்தி, கற்புநிலை, அருவாச தேவ ஆரம், நாகை நீலலோசனி அம்மன் பேரில் தோத்திரம், நாகை நீலலோசனி அம்மன் ஊஞ்சல், கற்பு நிலைச் சுருக்கம், பழைய வேற்பாட்டுடன் படிக்கை, ஆதிபுராணம், ஆதிநீதி ஆகியவை கிடைக்கப் பெற்றதாக பேராசிரியர் நா.ஞானகுமாரன் குறிப்படுகிறார். ஆநாதி போதம், சங்க வினாவிடை, சைவ வினாவிடை, தர்க்க சாஸ்திரம் ஆகியவை கிடைக்கப் பெறவில்லை.

இருந்தபோதும் எம்மிடையே விளைந்த அந்த ஞான ஒளியை நாம் உணரச் தாமதித்தபோது, தமிழகப் பாரதி எம் கண்ணைத் திறக்கத் தேவைப்பட்டான். நாகையிலிருந்த சுவாமிகள் வேதாரணியம், அகத்தியாம் பள்ளி, மாயாவாரம், சிதம்பரம்,  காரைக்குடி, புதுச்சேரி ஆகிய இடங்களிற்கும் சென்றிருக்கிறார். பாரதி புதுவையில் மறைந்திருந்த காலத்திலேயே சுவாமிகளைச் சந்தித்துள்ளார்.

“..மங்களம் சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்

வானவர்கோன் யாழ்ப்பாணத்தீசன் தன்னைச்

சங்கரனென் றெப்போது முன்னே கொண்டு

சரணடைந்த . . .”

என்று பாரதி அவரைப் பாடுகிறான். வேறு இரு பாடல்களிலும் இவரைத் தனது ஞானகுருவாகச் சுட்டிக் காட்டுகிறான்.

பாரதியின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் இவர்தான் என 1960 களில் இ.மு.எ.ச ஆரவாரமாக விழா எடுத்துக் கொண்டாடியதன்; பின்னர் வெளியுலகில் மறக்கப்பட்டிருந்த அருளம்பல சுவாமிகளை, ஒரு பல்கலைக்கழகத்தின் அறிவாண்மையுடன் ஆய்வு செய்து ‘பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்’ என நூலுருவில்; நிலை நிறுத்தியவர் பேராசிரியர் நா.ஞானகுமாரன்.

அவரின் தொடர்ந்த சலிக்காத தேடலும், தன்னலமற்ற பணியும் காரணமாக அருளம்பல சுவாமிகளின் சில படைப்புகள் இப்பொழுது நூல் வடிவில் ஆவணப்படுத்தப்படுகின்றன.

எம்.கே.முருகானந்தன்.

Chemparuthi_0002_NEW

செம்பருத்தி பிரதேச மலரின் பின் அட்டைப்படம் இது

0.00.0

 

Read Full Post »

ஒரு இலட்சம் வருடங்களுக்குப் பின்னர்

எப்படி இருப்பார்கள் உங்கள் வழித்தோன்றல்கள்?

உங்களுக்கு உங்கள் பாட்டனின் முகம் ஞாபகமிருக்கும், ஆனால் கொள்ளுப் பாட்டனது பாட்டியின் முகம் தெரிந்திருக்க நியாயமில்லை.

1

போட்டோ கலை வந்தே 200 வருடங்கள்தான் ஆகிறதே.

அதேபோல மறக்க முடியாமல் பதிந்திருப்பவை பிள்ளைகள் பேரப் பிள்ளைகளின் முகங்களாக இருக்கலாம். ஆனால் நான்கு தலைமுறைக்குப் பின்னர் உங்களது வழித்தோன்றல்களின் முகம் எப்படியிருக்கும் என்பதை நிச்சயம் சொல்ல முடியாது அல்லவா? கற்பனையில்தான் பார்க்க வேண்டும்.

விஞ்ஞானிகள் மகா கற்பனைவாதிகள். ஒரு இலட்சம் வருடங்களுக்குப் பின்னர் மனித முகம் எப்படி இருக்கும் எனக் கற்பனை பண்ணிப் பார்த்து எங்களுக்கும் சொல்லியிருக்கிறார்கள்.

Nickolay Lamm  என்பவர் ஒரு வழியில் விஞ்ஞானி மற்றொரு வழியில் வடிவமைப்பாளர். சில காலத்திற்கு முன்னர் இவர் வடிவமைத்த மனித முகங்கள் மேலைத்தேய ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பைக் கிளப்பின.

பத்துத் தலை இராவணன், ஆனை முகத்துப் பிள்ளையார், ஆறுமுகத்தான், குதிரை முகத்தாள் கோரமுகக் காளி என எமது முன்னோர்கள் புராதன காலத்திலேயே தங்கள் கைவரிசைகளைத் திறமையாகக் காட்டியிருக்கிறார்கள்.

Australopithecus africanus 2.5 million years ago

நிலவு காயும் இரவில் புற்தரையில் தென்றல் தழுவக் கிடந்தபடி நீலவானில்; விழி மேய்கையிலும், சாய்வு நாற்காலியில் கண் மூடி உடலாறக் கிடந்து கற்பனைக் குதிரையின் வாலை முறுக்கும் செயல்கள் அவை.

ஆனால் Nickolay Lamm  யின் வடிவமைப்புகள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை அல்ல. Washington University  யைச் சார்ந்த கணனி மரபியில் நிபுணரான Dr.Alan Kwan  அவர்களுடன் கலந்துரையாடி இந்த மாதிரிகளை அமைத்துள்ளார். அவ்வாறு வடிவமைப்பதற்கு முன்னர் மூன்று முக்கிய விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டியிருந்தது.

  1. கடந்த காலத்தில் மனிதர்களதும், மனித முன்னோடிகளினதும் உடலும் முகங்களும் தங்கள் சூழலின் சவால்களுக்கு ஏற்ப எவ்வாறு மாற்றமடைந்துள்ளன என்பதை தெளிவாக அறிய வேண்டும். இதற்கு புதைவடிவ மனித எச்சங்களை காலரீதியாக ஆய்வதன் மூலம் கூர்ப்பில் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையன புதைவடிவ மனித எச்சம் ஆர்டி Ardi (Ardipithecus kadabba)  என்ற பெண்ணினது. இவ் மனித மூதாதைகள் 4.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எதியோப்பியாவில் வாழ்ந்தவர்களாகும்.
  2. இன்றும் எதிர்காலத்திலும் எமது வளிமண்ணடலத்திலும் பூமியின் ஒளியமைப்பிலும், கதிர்வீச்சுகளாலும் எற்படக் கூடிய சூழல் மாற்றங்கள் எவை என்பதை விஞ்ஞான ரீதியாக ஊகித்து அறிய வேண்டும். அவற்றிக்கு மனிதன் எவ்வாறு முகம் கொடுத்து மாற்றமடைவான் என்பதை கணிக்க வேண்டும்.
  3. மனிதனின் இற்றைவரையான மாற்றங்கள் சுயமாக கூர்ப்பில் நடந்தன. ஆனால் இப்பொழுது மனித அறிவானது மரபணுக்களில் தம் விருப்பிற்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்யுமளவு வளர்ந்துள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் கூர்மையடைந்து மனித உருக்களில் மாற்றங்களை எற்படுத்தக் கூடியனவாக அமையும். இதையும் அவர்கள் கருத்தில் கொண்டார்கள்.

இவை யாவற்றையும் கவனத்தில் எடுக்கையில் சுமார் 1000 முதல் 60,000 ஆண்டுகளில் மனிதர்களின் தோற்ற மாற்றம் பற்றிய கணிப்பீடுகள் விவாதத்திற்குரியன என்பதில் ஐயமில்லை.

ஆனால் விஞ்ஞானிகள் ஏன் ஒரு இலட்சம் வருடங்கள் முதல் 5 இலட்சம் வருடங்களுக்கு பின்னர் மனித இனத்தின் உருவில் ஏற்படக் கூடிய மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். 1000, 2000, 10000 எனக் குறுகிய கால மாற்றங்கள் பற்றிய எதிர்வுகளைக் கூறிவில்லை.

20,000 வருடங்களில்

“மனிதன் மாறவில்லை” என கண்ணதாசன் வேறு காரியத்திற்காக கூறியது நினைவில் வருகிறது. ஆம் மனிதன் விரைவில் மாறுவதில்லை. உருவ மாற்றங்களுக்கு நீண்ட காலம் பிடிக்கும்.

உயிரினக் கூர்ப்பில் குறைந்த தரத்திலான நத்தை இனங்களின் சோர்வான வளர்ச்சி வேகத்தோடு ஒப்பிடுகையில் மனித மாற்றங்கள் சோடை போகவில்லைத்தான். இருந்தபோதும் பழைய கற்கால மனிதனுக்கும் இன்றைய புதுயுக மனிதனுக்கும் இடையேயான நீண்ட பயணத்தில் மனித உருவில் பெரிய வேறுபாடுகள் தெரிவதில்லை.

யுகயுகமாக மாற்றங்கள்

உயர் விலங்கினத்தில் ஒன்றானவன் மனிதன். அவனில் ஏற்பட்ட முக்கிய மாற்றமானது நாலு காலில் தவண்டு திரிந்தவன்  ‘நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக’  இரட்டைக் காலில் நடக்கத் தொடங்கியதுதான். ஆனால் அதற்கு முன்னரே நாலு கால்களையும் நடப்பதற்காகவே உபயோகிப்பதைக் கைவிட்டு, முன்னங் கால்களால் பற்றிப் பிடிக்கப் பழகிக்கொண்டான். அவை கைகள் ஆகின. பின்னர் நிமிர்ந்து நிற்கவும் நடக்கவும் முடிந்தது.

ஒரு வரியில் நான் இதைச் சொல்லிவிட்டாலும் இது ஒரு பாரிய மாற்றம். அதற்கேற்ப அவனது எலும்புத் தொகுதி மாற நேர்ந்தது. இரண்டு கால்களால் மட்டும் திடமாக நடக்க நேர்ந்ததால் உடலின் முழுப் பாரத்தையும் தாங்குமளவிற்கு அடிவயிற்று எலும்பானது (Pelvis) வலுவுள்ளதாக மாறியது. அதே நேரம் நெஞ்சுப் பகுதியானது முற்புறம் தள்ளியிருப்பதைத் துறந்து தட்டையாக மாறியது. அதற்கும் அப்பால் உள்ளுறுப்புகளான இதயம், சுவாசப்பை, ஈரல், குடல், சிறுநீரகம் போன்றவை கிடை அச்சைக் கைவிட்டு நீள்வச அச்சில் (longitudinal axis)    தொங்குவதற்கு ஏற்றவாறு மாற நேர்ந்தது.

மண்டை ஓடும் மூளையும்

மற்றொரு முக்கிய மாற்றம் மண்டை ஓட்டிலும் மூளையிலும் ஆகும். மனிதன் அறிவாற்றல் வளர்கின்ற வேகத்தைப் பார்க்கும்போது பெரும்பாலனார்கள் இவற்றின் கனஅளவு வேகமாக அதிகரிக்கும் என்றே எண்ணுகிறார்கள். ஆனால் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரொடேசிய மற்றும் நெதண்டதால் மனிதர்களது மண்டை ஓட்டின் அளவானது இன்றைய மனிதனின் மண்டை ஓட்டின் அளவை ஒத்ததாககவே இருப்பதை நோக்கும்போது பாரிய மாற்றம் ஏற்படாது என்றே தோன்றுகிறது.

60,000 வருடங்களில்

ஆனால் சுமார் ஒரு கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த phylogenetic சின் மண்டை ஓட்டின் உட்புறக் கன அளவு 900 cc ஆக இருக்க, இன்றைய மனிதனது சுமார் 1450 cc யாகப் பருமன் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே 500,000 வருடங்களில் இது 1750 cc ஆக உயரலாம் என்பது சாத்தியமே.

அவ்வாறு மாறும்போது மண்டை ஒட்டின் வடிவமானது தற்போதுள்ளது போன்ற நீள்வட்ட வடிவிலிருந்து சற்று மாறி கூடியளவு வட்ட வடிவத்தை நோக்கி நகரக் கூடும் என்கிறார்கள். மண்டை ஒட்டின் நீளத்தைவிட அகலம் அதிகரிக்கும் தன்மையை brachycephaly என்பார்கள். இவ்வாறான மாற்றத்தை தெற்கு ஜேர்மனி, பிரித்தானியாவின் சில பகுதிகளிலும் இப்பொழுதே அவதானிக்க முடிவதாக கூறுகிறார்கள்.

Homo heidelbergensis 50000 Years ago

மண்டை ஓட்டில் ஏற்படக் கூடிய மற்றொரு மாற்றமானது பெண்களை மகிழ்வடைச் செய்யக் கூடியது. ‘உங்களை விட நாங்கள் கூர்ப்பில் 500000 வருடங்கள் முன் நிற்கிறோம்’ என ஆண்களைப் பார்த்து பெருமை பேசக் கூடியது.

ஆதிகாலத்தில் மண்டை ஓடானது சற்றுக் கரடு முரடானதாகவும், வளைவுகளில் கூர் முனைப்பானவையாகவும் இருந்தன. ஆனால் கால ஓட்டத்தில் மென்மை கூடியதாகவும் அதிக வழுவழுப்பைத்தன்மை கொண்டதாகவும் மாறிவருகிறது. சாதாரண கண்களுக்கு வெளிப்படையாகத் தெரிவது கண்களுக்கு மேல் புருவப் பகுதியில் உள்ள எலும்பு முனைவரம்பு ஆகும்.

பெண்களில் இந்தப் புருவ வரம்பானது வழவழப்பாவும் வளைவுகள் குறைந்து செங்குத்துத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. ஆண்களில் புருவ வளைவுகள் முனைப்பு கொண்டதாக இருக்கிறது. இதைச் சுட்ட கூர்ப்பில் தாங்கள் முன்னோடிகள் எனப் பெண்கள் பெருமை கொள்ளலாம்.

ஆண்களுக்கு அவ் வளைவுகள் மறைய மேலும் 500000 ஆண்டுகள் ஆகலாம்.

இவை விஞ்ஞான ஆய்வுகளும் அதன் நீட்சியான ஊகிப்புகளும் ஆகும்.

முகமாற்றம்

இவற்றின் அடிப்படையில் மனித முகம் எவ்வாறு மாறும்?

ஏற்கனவே சொல்லப்பட்டது போலவே நாம் தலை கனத்தவர்களாக இருப்போம். இரு விதங்களில். தலையினதும் மூளையினதும் அளவு 500,000 ஆண்டுகளின் பின் நிச்சயம் அதிகரித்திருக்கும். அதே வேளை அவற்றின் தரத்திலும் செயற்பாட்டு திறனிலும் பெருமளவு முன்னேற்றம் எற்பட்டிருக்கும்

இருந்த போதும் மூளையின் அளவில் அதிகரிப்பு ஏற்படுவதை விட அதன் தரத்திலேயே பெருமளவு மாற்றம் எற்படும் என வேறு பல விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

விழிகள் கார்ட்டுன் படங்களில் வருவதுபோல பெரியதாகவும் முழிப்பாகவும் தெரியும் என்கிறார்கள். சில இலட்ச வருடங்களின் பின் பூமியில் மட்டுமின்றி வேறு கிரகங்களிலும் மனிதன் வாழ நேரிடும். அவற்றில் பலவற்றில் ஒளி குறைவாக இருக்கக் கூடியவை. எனவே குறைந்த ஒளியிலும் கூர்மையாகப் பார்ப்பதற்கு உதவியாக கண்கள் பெரு மாற்றம் அடையும் எனப்படுகிறது.

100,000 வருடங்களில்

பிரபஞ்சத்தில் உலவுவதாலும் வேறு கிரகங்களில் வாழ நேருவதாலும் அதிகளவு UV radiation  னுக்கு எதிர்கால மனிதன் முகம் கொடுக்க நேரிடும் அல்லவா? அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சருமத்தின் நிறம் கூடுதலாக கருமையடைவதற்கான சாத்தியங்கள் உண்டு.

அச்சில் வார்த்த குழந்தைகள் போல

“வாற வருஷம் நாங்கள் பெறப்போற பிள்ளைக்கு என்ரை மூக்கும் உன்ரை பல்வரிசையும்தான் இருக்க வேணும் என்று எங்கடை டொக்டறட்டை சொல்லிப் போடு” என்றான் கணவன். 

பிள்ளைக்கு என்ன பெயர் வைக்க வேணும் என்று இப்ப நாங்கள் விவாதிப்பதில்லையா? அதைப் போல எதிர்கால விவாதங்கள் இருக்கலாம்.

எதிர்காலக் குழந்தைகள் அச்சில் வார்த்ததுபோல நேர்த்தியாக இருப்பார்கள். முகத்தின் இரு பக்கங்களுக்கும் இடையே சிறிய வேறுபாடுகளும் இன்றி சரியான சமச்சீரானதாக இருக்கும். இது கூர்ப்பினால் ஏற்படப் போவதல்ல. தங்கள் குழந்தைகளின் முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக

அவற்றின் DNA  க்களில் மருத்துவ ரீதியாகக் குறுக்கீடு செய்ய அந்நேரத்தில் முடியும் என்பதால் பிறக்கும் குழந்தைகளின் நிறம் மூக்கின் நீளம் உடல் உயரம் போன்ற யாவற்றையும் பெற்றோர்களே தீர்மானித்து விடுவார்கள்.

எல்லாம் சரி! ஒரு இலட்சம் வருடங்களுக்கு பின் உலகம் இருக்குமா? அணுகுண்டு இயற்கையைச் சூறையாடல் போன்றவற்றை எல்லாம் தாண்டும் வல்லமை அதற்கு உண்டா எனக் கேட்காதீர்கள்.

ஒரு வேளை உலகம் தப்பிப் பிழைத்தாலும் மனிதன் அக்காலத்தில் பூமியில் இருப்பானோ என்பதே சந்தேகம். ஒருவேளை இருந்தாலும் அவன் மனிதனாக இருப்பானோ அல்லது வேறு ஒரு உயிரினமாக மாறியிருப்பானோ என்பதும் நிச்சயமில்லை.

இதை எல்லாம் யோசித்து ஏன் கற்பனைச் சுகங்களை இழக்க வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

மன்னார் அமுதனின் அக்குரோணி என்ற கவிதை நூல் இது. இனிமையான குணங்கள் நிறைந்த ஒரு அழகிய இளைஞனின் மிக அழகான நூல் இது. அட்டை கண்ணைக் ஈர்க்கும் கவர்ச்சியுடையதாக இருக்கிறது.

IMG_0001_NEW Akuroni

இது அவரது இரண்டாவது கவிதைத் தொகுதி. முதலாவது கவிதைத் தொகுதியான ‘விட்டு விடுதலை காண்’ சில காலங்களுக்கு முன் 2009ல் வெளிவந்தபோது நிறையப் பேசப்பட்டது.  பலராலும் பாராட்டப்பட்டது. விமர்சனங்களுக்கும் ஆளானது.

இன்றைய இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மன்னார் அமுதன்  இருக்கிறார். மிகுந்த வீச்சுடன் படைப்புலகில் இயங்குபவராக இருக்கிறார். இவரது ஆக்கங்கள் வராத பத்திரிகை இருக்க முடியாது என்று சொல்லுமளவு அதிகம் எழுதுகிறார். ஜீவநதி, ஞானம், இருக்கிறம், படிகள், கலைமுகம், பூங்காவனம், நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகளைப் படிக்க முடிகிறது.

தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைளிலும் இவரது படைப்புகளைத் தரிசிக்க முடிகிறது. இலக்கியத்திற்காகவே வாழ்பவர் போல, அதுவே தனது உயிர் மூச்சுப்போல கவிதைகளைப் படைக்கிறார். இவ்வளவு வேகமாக எழுதும் வேறொருவரைக் காண்பது அரிது.

‘மன்னார் அமுதனின் பக்கங்கள்’ http://amuthan.wordpress.com/homeஎன்பது இவரது வலைத் தளமாகும். அதற்குள் நுளைந்து பார்க்கும்போது இவரது படைப்பாளுமையின் பரந்த வெளியில் பயணிக்க முடிகிறது. கவிதை மட்டும் இவரது படைப்பு உலகு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், நூல் விமர்சனம், சமூக விமர்சனம் எனப் பல படைத்துள்ளார். அண்மையில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ‘பண்டைய இலக்கியமும் ஈழத் தமிழரின் சமகால வாழ்வியலும்’ என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று நான் கூகுளில் சென்று கவிதைகள் பற்றி அறிய ஒரு தேடுதல் நடத்தியபோது எனது வலையில் சிக்கியவை பெரும்பாலும் இவரது கவிதைகள்தான். பல இலக்கியக் கட்டுரைகளிலும், இணையக் கருத்தாடல்களிலும் கூட இவரது பெயர் அதிகமாகச் சிக்கியது. இணைய இதழ்களிலும் இவரது பெயர் மிக அதிகமாக இடம் பெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

யாழ்தேவி, தமிழ்மணம், திரட்டி, சிறந்த தமிழ் பூக்கள், இலங்கை வலைப் பதிவாளர் திரட்டி, தமிழ்க் கணிமை, இன்ட்லி, தமிழ்வெளி, மென்தமிழ் போன்ற பல இணையத் திரட்டிகளில் இவரது படைப்புகள் வெளியாகின்றன. இவ்வாறாக இன்றைய இலக்கிய உலகில் அதிலும் முக்கியமாக இளம் எழுத்தாளர்களிடையே மிகவும் பிரபலமானவராகவும் வசீகரம் மிக்கவராகவும் திகழ்கிறார்.

இலக்கிய நிகழ்வுகளிலும் இவரது பெயர் அதிகமாக அடிபடுவதை பத்திரிகை, சஞ்சிகைகள் ஊடாகக் காண முடிகிறது. முக்கியமாக திருமறைக் கலாமன்ற பௌர்ணமி நிகழ்வுகளில் இவரது பங்களிப்பை அதிகம் காண்கிறோம். மன்னார் எழுத்தாளர் பேரவையின் முக்கிய அங்கத்தவராகவும் இருக்கிறார். அதன் தலைமைப் பொறுப்பையும் வகித்துள்ளதாக அறிகிறேன்.

மன்னார் அமுதன் எனது நண்பன். மேடைக்காகப் பேசிய அலங்கார வார்த்தைகள் அல்ல. இந்த முதியவருக்கும் இளைஞனுக்கும் இடையில் நட்பு இருக்க முடியாது என்பீர்கள். ஆனாலும் நாம் நண்பர்கள்தான். முகப்புத்தக (Facebook) நண்பர்கள். எண்ணெட்டுத் திசையில் இருப்பவர்களை இணைக்கும் பாலமாக இன்று முகப்புத்தகம் இருக்கிறது. வயது வேறுபாடின்றி, பால் வேறுபாடின்னிறி பலரும் அதன் ஊடாக நட்புப் பேண முடிகிறது. ஈடுபாடுகளில் ஒற்றுமை உள்ள பலரும் அதனூடாக தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் மட்டுமின்றி நேரடியாக இலக்கியக் கூட்டங்கள் பலவற்றிலும் இவருடன் கலந்துரையாடியிருக்கிறேன்.

கவிதை என்பது ஒரு இனிய அனுபவம். எல்லாப் படைப்பிலக்கியங்கள் போலவே கவிதையும் படைப்பாளியின் கருத்தை அல்லது உணர்வை கற்பனை கலந்து வாசகனுக்குத் தருகிறது. அவனது மெல்லுணர்வுகளை மீட்டி உள்ளத்தில் இசைபோலத் தழுவச் செய்கிறது.

ஆனால் இவற்றிடையே வேறுபாடுகள் உண்டு. கவிதையில் சொல்லப்படுபவை வசன நடையில் அமையாது என்பது தெரிந்ததே. கவிதையில் கருத்துச் செறிவு இருக்கும். சுருக்கமாகவும் ஓசை அமைதியுடனும் இருக்கும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட கவிதையில் கவித்துவம் இருக்க வேண்டும்.

ஒரு படைப்பில் கவித்துவம் இருக்கிறதா என எப்படி அறிவது.  அது கட்டுக்குள் அகப்படாத, வார்த்தைகளுள் சிக்காத, அதியுயர் அனுபவம் என்றே சொல்லலாம். பூவின் நறுமணம் போலக் கண்களால் காண முடியாதது. நுகர மட்டுமே முடிவது. பூவின் மணம் எவ்வாறு மனத்தைப் புளங்காகிதப் படுத்துகிறதோ அவ்வாறே கவிதை, வார்த்தைகளின் சேர்க்கை நேர்த்தியால் அதியுயர் அக நிறைவைத் தருவதாகும்.

உணர்வாலும் அனுபவத்தாலும் கவிஞனையும் வாசகனையும் இணைப்பது கவிதையின் சொற்களாலான பாலமாகும். இருவரும் இணையும் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க கவித்துவம் உச்சங்களை எட்டும். அவ்வாறு இணையச் செய்யும் ஆற்றல் படைப்பாளியின் சொற்களுக்கு வேண்டும்.

இதனால்தான் படைப்பனுக்கு மட்டுமல்ல படிப்பவனுக்கும் கூட அது மனநிறைவைத் தரும்.

சிறுகதை போல கவிதை தமிழுக்கு புதிதாக அறிமுகமான இலக்கிய வடிவம் அல்ல என்பதை நாம் அறிவோம். கவிதையே எமது பாரம்பரியம். ஐம்பெரும் காப்பியங்களைக் கொண்டது தமிழ். அதற்கு மேலாக கம்பனும் வள்ளுவனும் அண்மையில் பாரதியும் அதற்கு உரம் ஊட்டினார்கள்.

பாரதி தமிழ்க் கவிதையின் போக்கையே மாற்றினான்.

“சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது
சொற்புதிது சோதிமிக்க நவகவிதை.”

என இலகு தமிழில் எழுதினான். அதில் வசன கவிதையும் அடங்கும்.

அவனது வசன கவிதை பின் யாப்பில்லாக் கவிதை, இலகு கவிதை, நவீன கவிதை, புதுக் கவிதை எனப் பல பெயர்களைத் தாங்கி பரிணாமமடைந்து இன்றைய கவிதை ஆகிவிட்டது.

IMG_0002_NEW Akuroni

மஹாகவி, முருகையன், நீலாவண்ணன் போன்ற மூத்த ஆளுமைகளுக்குப் பிறகு, 80 களின் பின் ஈழத் தமிழ்க் கவிஞர்கள் வேறொரு பரிமாணத்தில் புதிய வீச்சைப் பாய்ச்சினார்கள். தமிழ் கூறு உலகெங்கும் எமது கவிதைகள் பேசப்பட்டன. போரும் அகதி வாழ்வும் எமது கவிதைகளின் பாடு பொருளாயிற்று.

இப்பொழுது போருக்குப் பின்னான வாழ்வு. வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு அமைதியாக ஓடுகிறது. நிறைய நூல்கள் வெளிவருகின்றன. பல இளைஞர்கள் கவிதைத்துறையில் இறங்கியுள்ளார்கள். எமது வாழ்வின் இன்றைய கோலங்கள் பலவும் எமது கவிதையில் பேசப்படுகின்றன.

மன்னார் அமுதனின் கவிதைகளும் அவ்வாறே நிகழ் வாழ்வைப் பேசுகின்றன. வெறும் கற்பனை வழி வந்த படைப்புகள் அல்ல. தன்னைச் சுற்றியுள்ளவற்றை அவதானிக்கிறார். உள்ளார்ந்த மனித நேயத்துடன் பார்க்கிறார். அவற்றினால் உணர்வூக்கம் பெறுகிறார். கவலையும், ஆனந்தமும், கோபமும், போன்ற பல்வேறு உணர்வுகள் அவரது மனதை அலைக்களிக்கக் கவிதை படைக்கிறார்.

இதனால்தான் இவரது படைப்புவெளி சமூக அக்கறை மிகுந்ததாக இருக்கிறது. அவரது கவிதைகள் எமது வாழ்வைப் பிரதிபலிக்கினறன. கடுமையா சொல் அலங்காரம் கிடையாது. இலகுவான தமிழில் எழுதுகிறார். புதிரான உவமைகளும், விளங்காத படிமங்களும் அவரிடம் இல்லை. இதனால் எனக்குப் புரிகிறது. சாதாரண மக்களுக்கும் புரிகிறது. எல்லோருக்குமே புரியும்படி எழுகிறார். புரியாமல் எழுதினால்தான் கவிதை என்ற சிறைக்குள் அவர் அகப்படாது இருப்பது மகிழ்வைத் தருகிறது.

புரியும்படி எழுதினால்தான் மக்களுக்குப் புரியும். சமூகஅக்கறையுள்ள படைப்பாளியால் அவ்வாறுதான் எழுத முடியும்.

உதாரணத்திற்குப் பாருங்கள். சாதீயத்திற்கு எதிரான குரல் கொடுக்கிறார்.

“..குளிப்பதற்கும் கும்பிடவும்
தனியிடங்களா? நீரைக்
குவளையிலே குடிப்பதற்கு
இருமுறைகளா?..”

விழிம்பு நிலை மனிதர்களின் துயர் செறிந்த வாழ்வை ‘அவளும் அவர்களும் என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார். பிச்சைக்காரியைக் கூட விட்டுவிடாத கயவர்களின் கயமை வெளிப்படுகிறது.

“..குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிளிந்த உடைகளுக்குள்
எதையோ தின்று கொண்டிருப்பான்…”

அவரது கவிதையில் அரசியலும் இருக்கிறது. அரசியல் என்பது கட்சி அரசியல் அல்ல. மொழி சார்ந்த, இனம் சார்ந்த அரசியல். ‘நாம் தமிழர், எமது மொழி நீண்ட பாரம்பரியம் கொண்டது. நாம் தலை நிமிர்ந்து வாழவேண்டும். என நாம் எல்லோரும் நாடுவதையே அவரும் நாடுகிறார்.

அதிகாரத்துக்கு எதிரான அவரது கவிதைக் குரல் இவ்வாறு ஒலிக்கிறது.

“..ஆட்சியாளனுக்கு அரிப்பெடுக்கையில்
அங்கம் தடவாது…”

புதுக் கவிதை, மரபுக் கவிதை என்ற இரண்டு வகைக் கவிதைகளையும் அவரது படைப்புகளில் காண முடிகிறது. பொதுவாக தமிழ் மொழியின் பெருமை, தமிழர் வாழ்வு, தமிழ்த் தேசியம் போன்ற கருவுடைய படைப்புகள் மரபு வழிக் கவிதைகளாக அமைந்திருப்பதை காண முடிகிறது.

‘வரம் தா தேவி’ என்பது நூலின் முகப்புக் கவிதையாக அமைத்திருப்பதிலிருந்தே அவரது தாய்மொழிப் பற்றை நாம் விளங்கிக் கொள்ளலாம். இவற்றைத் தவிர ‘தமிழாய் தமிழுக்காய்’, தமிழே எம் உடலே’, எனப் பல கவிதைகள் தமிழின் புகழ் பாடுகின்றன.

தமிழின் மீதுள்ள பற்றுப் போலவே தனது தாய் மண்ணிலும் பற்றுக் கொண்டவர். தான் பிறந்த பிரதேசத்திலும் பெருமை கொள்பவர்.

அதனால்தான் மன்னாரை தனது பெயருடன் இணைத்துளாளர். தெளிவத்தை ஜோசப், திக்கவல்லை கமால், நீர்வை பொன்னையன், புலோலியூர் சதாசிவம், புலோலியூர் இரத்தினவேலோன், நாச்சியாதீவு பர்வீன், வல்வை அனந்தராஜ், திருமலை நவம், மருதமூரான், நீர்கொழும்பு முத்துலிங்கம், எனப் பலர் முன்னுதாரங்களாக இருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஊடகவியலாளர்கள் பற்றி எழுத்தாணி ஏந்தும் இயேசுக்கள்’கவிதையில் சொல்லும் வரிகள் இவ்வாறு அவர்களின் வாழ்வுக்கும் சாவுக்குமான சத்தியப் போரின் இருண்ட பக்கங்களின் வரிகளாக…

“..யுகம் யுகமாய்த்
தொடரும் காட்டிக் கொடுப்புகளும்
சிலுவை மரணங்களும்
உனக்கும் அவர்க்குமான
எழுதப்படாத ஒப்பந்தானே
காட்டிக் கொடுத்துவிடு..”
..
..மரணம் நிகழும்
வழிகள் தான் வேறு
சேருமிடம்மென்னவோ
கல்வாரி தானே,,’

காதல், ஊடல், பிரிவு, பிரிவின் துயர், கழிவிரக்கம் போன்ற மென் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் கவிதைகள் ஏராளம் இருக்கின்றன. இவை பெரும்பாலும் புதுக் கவிதைகளாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
உணர்வுகளை வாசகனின் மனதுக்கு நெருக்கமான வகையில் பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் மன்னார் அமுதனிடம் உண்டு. தேர்ந்தெடுத்த சொற்களைப் பயன்படுத்துகிறார்.

பிரிவு

“..உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை
சிலந்தி வலைகள்
நிரப்புகின்றன…”

மற்றொரு கவிதையில்

“..கோவப்படுகையில்
நீ அடிப்பாய்
வலிப்பதில்லை – இன்றோ
மௌனம் காக்கிறாய்
வலிக்கிறதே…”

இன்னொன்று இவ்வாறு

“…நெடுநாள் பிரிவை உடனே போக்க
விடுமுறை நாடுகிறேன்
விடுப்புகள் முடிந்து
வேலைக்கு மீள்கையில்
நோய்நொடி தேடுகிறேன்…”

எவ்வளவு யதார்த்தமான வரிகள். போலி மருத்துவ சேர்டிபிக்கட்டுகளைத் தேடும் போலி நோயாளிகள் இவர்கள். ஆனால் காதலில் ஆரோக்கியமானவர்கள்.

நூலைப் பற்றி இன்னும் நிறையப் பேசலாம். ஆயினும் நேரமாகிவிட்டது. இன்றைய நூல் வெளியீட்டு அரங்கில் தலைமை தாங்க அழைத்தமைக்கு நன்றி. பெருமளவு மருத்துவத் துறை சார்ந்த என்னை கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள அழைத்த அவரது அன்பு நெகிழ வைக்கிறது.

இது மன்னார் அமுதனின் இரண்டாவது கவிதை நூல். இலக்கியப் பரப்பில் அவர் பயணப்பட இன்னும் நீண்ட வெளியும் காலமும் காத்திருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தக் கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறது. இன்னும் பல நூல்கள் வெளியிடுவதுடன், பல சாதனைகள் செய்ய வாழ்த்துகிறேன். சொந்த வாழ்விலும் இலக்கிய உலகிலும் உச்சங்களை எட்டி சமூகத்திற்குத் தொண்டாற்ற மீண்டும் வாழ்த்தி அமர்கிறேன்.

எனது மறந்துபோகாத சில புளக்கில் 20th May 2011 ல் வௌியான கட்டுரையின் மீள் பிரசுரம்

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

“வாயைக் கட்டிக் கிடக்கிறாளே. ரம்புட்டான் ரம்புட்டானாகத் திண்டு தீத்தாள். இப்ப காய்ச்சல் எண்டு அனுங்கிக் கொண்டிருக்கிறாள்.” திட்டித் தீர்த்தார் தந்தை. வேலைக் போகாமல் பிள்ளையை மருத்துவமனைக்குக் கூட்டித் திரிய வேண்டிக் கிடக்கிறதே என்ற சினமாக இருக்கலாம்.

20140704_131950_Richtone(HDR)-001

இவர் மட்டுமல்ல, இன்னமும் பலர் தங்கள் பிள்ளைகள் ரம்புட்டான் பழம் சாப்பிட்டதால்தான் காய்ச்சல் வந்தது என அவர்களில் என்று குற்றம் கண்டார்கள்.

மே, ஜீன் ஜீலை மாதங்கள் பொதுவாக ரம்புட்டான சீசனாக இருக்கும். மல்வான ரம்புட்டான் மிகவும் பிரசித்தமானது. களனிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்திலிலேயே பெருமளவு ரம்புட்டான் உற்பத்தியாகின்றது.

இருந்தாலும் பிபில, மொனராஹல பகுதியிலிருந்து தை மாசி மாசங்களில் குறைந்தளவு ரம்புட்டான் பழங்கள் வருவதுண்டு.

ரம்புட்டானுக்கு காய்ச்சலா?

சீசன் காலத்தில் ரோட் ஓரமெல்லாம் தற்காலிக கடைகள், லொறிகள். இவற்றில் எல்லாம் மதாளித்த சிவத்த கம்பளிப் பூச்சிகள் போலப் பழங்கள் குவிந்து கிடக்கும். வழமையான பழக்கடைகளிலும் கூடை நிறைய வைத்திருப்பார்கள். பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ரம்புட்டான் அமுக்குவதில் பின்நிற்பதில்லை. இவ்வாறு ரம்புட்டான் சாப்பிட்டவர்களில் சிலர் காய்ச்சலுடன் வருகிறார்கள். ‘ரம்புட்டான் காய்ச்சல்’ என்று தாங்களாகவே நாமம் சூட்டிவிடுகிறார்கள்.

 

அதே வேளை ரம்புட்டான் சாப்பிடாத பலரும் இப் பருவ காலத்தில் காய்ச்சலுடன் வருகிறார்கள்.

 

காய்ச்சல் என்பது தனி ஒரு நோயல்ல என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். தடிமன் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல், மலேரியாக் காய்ச்சல், டைபொயிட் காய்ச்சல் எனப் பலவகை இருக்கின்றன. இவை யாவம் கிருமிகள் தொற்றுவதாலேயே வருகிறது.

 

ரம்புட்டான் சாப்பிடுவதால் எவ்வித காய்ச்சலும் வருவதில்லை. ஆனால் இது பரவலாகக் கிடைக்கும் காலங்களான ஜீன் ஜீலை மாதங்களில் பெரும்பாலும் தென்னிலங்கையில் மழை பெய்வதுண்டு. வெயிலுடன் மழையும் மாறி மாறி வரும் இம் மாதங்களில் டெங்கு முதல் சாதாரண காய்ச்சல்கள் எனப் பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன

 

நுளம்பு கடிப்பதால் டெங்குக் காய்ச்சல், மலேரியா போன்றவை வருகிறன. எலிகளின் எச்சங்களால் எலிக்காய்ச்சல் பரவுகிறது. நோயுள்ளவர் தும்முவதாலும் இருமுவதாலும் தொற்றுகிறது பன்றிக் காய்ச்சல். ரம்புட்டான் பழம் சாப்பிடுவதால் எந்தக் காய்ச்சலும் பரவுவதில்லை

 

எப்படி உண்பது

 

நெல்லிக்காய், மங்குஸ்தான், மாம்பழம், கொய்யாப்பழம் போன்ற எந்தப் பழத்தை வாங்கினாலும் அவற்றை உண்ண முன்னர் நன்கு கழுவிய பின்னரே உண்ண வேண்டும் என்பது தெரிந்ததே. பழத்தின் உட்புறம் கிருமிகள் தீண்டாது சுத்தமாக இருக்கும் என்ற போதிலும் அவற்றின் தோலானது பலவித அழுக்குகளாலும் கிருமிகளாலும் மாசடைந்திருக்கக் கூடும்.

 

ஏனெனில் பழங்களை பிடுங்கி நிலத்தில் போட்டிருப்பார்கள். நிலத்தில் நாய் பூனை போன்ற பிராணிகளின் மலம், குருவிகளின் எச்சம், மனிதர்களின் கழிவுகள் போன்ற பலவற்றிலிருந்த கிருமிகள் பழத்தின் தோலை மாசுபடுத்தியிருக்கும். பழங்களை பறித்த இடங்களிலிருந்து விற்பனை செய்யும் இடத்திற்கு கொண்டுவரம் பயன்படுத்தும் பைகள் சாக்கு போன்றவற்றில் இருந்தும் கிருமிகள் பரவியிருக்கும்.

 

அதேபோல தெருவோரம் வைத்து விற்கும்போதும் காற்றிலிருந்தும் பழங்களைக் கையாளும் மனிதர்களின் கரங்களிலிருந்தும் பலவிதமான கிருமிகள் அவற்றின் தோலில் படிந்திருக்க வாய்ப்புண்டு.

 

எனவேதான் ரம்புட்டான் முதல் வேறு எந்தப் பழத்தை வாங்கினாலும் சாப்பிட முன்னர் நன்கு கழுவவேண்டும். இரண்டு தடவைகளாவது கழுவ வேண்டும். அல்லது ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

20140704_132018_Richtone(HDR)-001

கழுவிய பின்னரும் கூட ரப்புட்டான் தோலை வாயினால் கடிக்க வேண்டாம்.

கத்தியினால் தோலை வெட்டி அகற்றிய பின்னர் மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்னரே பழத்தை எடுத்து உண்ணுங்கள். சுத்தப்படுத்திய பழங்களைச் சாப்பிடுவதால் நோய்கள் எதுவும் தொற்றாது. உள்ளிருக்கும் சுளைகள் சுத்தமானவை.

 

மாறாக சுத்தப்படுத்தாமல் உண்டால் வயிற்றோட்டம், வாந்தி, டைபொயிட், செங்கண்மாரி, குடற் பூச்சிகள் போன்ற பல்வேறு நோய்களுக்கும் ஆளாகக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை

 

ரம்புட்டான் பழம் பற்றி

 

ரம்புட்டான் இலங்கையில் பிரபல்யமாக இருந்தாலும் இதன் பூர்வீகம் இந்தோனிசியா என அறியப்படுகிறது.

 

இது அதிக நீர்ச் சத்துக் அதிகம் கொண்ட பழமாகும். ஆயினும் பழத்தின் சாப்பிடக் கூடிய பகுதியின் 100 கிராமிலிருந்து 64 கிலோ கலோரியளவு சக்தி கிடைக்கும். அதேவேளை புரதம் 1 கிராம் உள்ளது. கொழுப்பு மிகக் குறைவாக 0.1 கிராம் மட்டுமே உள்ளது. கல்சியம், பொஸ்பரஸ் போன்ற கனிமங்களும், ரைபோபிளேவின், தயமின், விற்றமின் சீ போன்றவையும் நிறையக் கிடைக்கின்றன.

 

இதன் காரணமாக இந்தோனிசியா. மலேயா போன்ற நாடுகளில் நீரிழிவு, பிரஸர் போன்ற நோய்களுக்கான வீட்டு மருத்துவமாக உபயோகிக்கப்படுகிறது. காய்ச்சலுக்கு மருந்தாக இதன் பட்டைகளை உபயோகிப்பதாகவும் தெரிகிறது.

 

ரம்புட்டானால் காய்ச்சல் வருகிறது என நம்மவர்கள் சொல்ல காய்ச்சலுக்கு மருந்தாக அதே ரம்புட்டானை வேறு நாடுகளில் பயன்படுத்துவது சுவார்ஸமான தகவலாகப்படுகிறது. இருந்தபோதும் இதனால் காய்ச்சல் வருகிறது என்பது தவறான கருத்து என்றே சொல்ல வேண்டும்.

 

வேறு பழங்கள் பற்றிய தவறான எண்ணங்கள்

ரம்புட்டான் பற்றி மட்டுமல்ல வேறு பழங்கள் பற்றியும் எமது சமூகத்தினரிடையே பல தவறான எண்ணங்கள் இருக்கவே செய்கின்றன. அவை பற்றிய விழிப்புணர்வு தேவை.

 

“முழுகிப் போட்டு மாம்பழம் சாப்பிட்டன். தொண்டை கட்டி சளியோடை காய்ச்சல் வந்துவிட்டது” எனத் தன்னைத்தானே நொந்து கொண்டாள் அரச நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றும் ஒரு பெண்மணி.

 

“நானும்தான் முழு மாம்பழம் சாப்பிட்டனான். எனக்கு ஒண்டும் இல்லைதானே” என்றார்; கணவன். மற்றவர் முன்னாலாவது தனது வீரத்தைக் காட்டிய பெருமை முகத்தில் படர்ந்தது.

20140719_142602_Richtone(HDR)-001

“இந்தச் சளித் தொல்லையோடை  நாளாந்தம் அல்லாடுறன். வாழைப்பழத்தை தொடுறதே இல்லை” என்றார் இன்னொரு பெரியவர்.

 

“தயங்காமல் வாழைப்பழம் தினமும் சாப்பீடுங்கோ. இவ்வளவு நாளும் வாழைப்பழத்தை கைவிட்டும் சளித்தொல்லை தீரவில்லை என்றால், உங்கடை சளிக்கு வாழைப்பழம் காரணம் இல்லை என்றுதானே அர்த்தம்” என்றேன் நான்.

 

சிறிது காலத்திற்கு முன்னர் Imperial College of London ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா நோய் வருவதற்கான சாத்தியம் சாப்பிடாதவர்களை விட 34% குறைவு என்கிறது. எனவே சளித்தொல்லைக்குக் காரணம் வாழைப்பழம் அல்ல என்பது தெளிவாகிறது.

 

அதேபோல பிரஷர் வராமல் தடுப்பதற்கும் அதைக் கட்டுப்படுத்துவதற்கும் வாழைப்பழத்தில் உள்ள கனிமமான பொட்டாசியம் உதவும். இதற்கு எதிர்மாறாக கறி உப்பில் உள்ள சோடியம் சத்து பிரஷரை உயர்த்தும் என்பது பரவலாகத் தெரிந்த விடயமே. அத்துடன் குருதியில் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதானது பல்வேறு நோய்களால் ஒருவர் மரணிக்கக் கூடிய சாத்தியத்தை 20% ஆல் குறைக்கிறது என்கிறது மற்றொரு ஆய்வு.

20131115_204742-001

வாழைப்பழம் பற்றிய தவறான கருத்துகளை உதறி ஒதுக்க வேண்டும். அது மிகச் சிறந்த பழங்களில் ஒன்று என்பதால்தான் உலகில் ஆகக் குறைந்தது 107 நாடுகளில் பயிரடப்படுகிறது. பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது.

மாம்பழத்தில் 20ற்கு மேற்பட்ட விட்டமின்களும் தாதுப் பொருட்களும் உண்டு. அதிலுள்ள zeaxanthin என்ற ஒட்சிசனெதிரி ஆனது கண்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய நீல ஒளிக் கதிர்களை வடித்தெடுப்பதன் மூலம் மக்கியுலர் டிஜெனரேசன் (Macular degeneration) என்ற கண்பார்வை இழப்பு நோயைத் தடுக்கும் எனக் கூறுகிறார்கள்.

அத்துடன் மாம்பழத்தில் உள்ள பீற்றா கரோடின் என்ற பொருளாளது சளி ஆஸ்த்தா போன்றவற்றை தடுக்கும் ஆற்றல் கொண்டது. பப்பாளி, பூசணி, புரொகோலி, கரட் போன்றவற்றிலும் இது நிறைய உண்டு. அத்துடன் புரஸ்ரேட் புற்று நோய், பெருங் குடல் புற்று நோய் போன்றவற்றையும் தடுக்கும்.

இவ்வாறு ஒவ்வொரு வகைப் பழங்களிலும் பல போஷணைப் பொருட்கள் உண்டு. அவை பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கள் கொண்டவை. ஆயினும் அவற்றை விபரிக்க கட்டுரையின் நீளம் இடம் தராது.

ஓவ்வொரு வேளை உணவுடனும் ஏதாவது ஒரு பழத்தையாவது உண்ணுங்கள். நோயற்ற வாழ்வு வாழ அது கை கொடுக்கும்.

 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

 

Read Full Post »

“உங்கடை நிறை கூடிக்கொண்டு போகுது. அதைக் குறைக்க வேண்டும்” என்றேன்.

“உங்களுக்குத் தெரியும்தானே டொக்டர். எனக்கு இந்த பீரியட் நிண்டாப் போலைதான் உடம்பு போட்டுட்டுது” என்றார்.

அது ஏற்கனவே எனக்குத் தெரிந்ததுதான். குடும்ப மருத்துவர்களுக்கு இத்தகைய விடயங்களைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது தெரிந்திருந்தும் அவரது எடையக் குறைப்பது அவசியம் என்பதை உணர்ந்ததாலேயே எடை குறைப்பு பற்றிப் பிரஸ்தாபித்தேன்.

அவர் சொன்னதிலும் உண்மை உள்ளதுதான். ஆனால் மாற்ற முடியாதது அல்ல.

weight-gain-after-menopause

பெரும்பாலன பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலங்களிலும் அதைத் தொடர்ந்து மாதவிடாய் முற்றாக நின்ற பின்னரும் எடை அதிகரிக்கவே செய்கிறது. இடை அழகியாக இருந்தவர்கள் சள்ளை தொங்கும் குண்டுப் பீப்பாய்களாக மாறுவார்கள். இடுப்பில் மட்டுமின்றி வயிறும் பெரிதாகும். அன்ன நடை நடந்த பெண்கள் ஆயாச நடையில் அரங்கி அரங்கி நடப்பார்கள்.

இது உங்களுக்கும் வரவேண்டுமா?

மாதவிடாய் பொதுவாக 50ற்கு சற்றுப் முன் பின்னராக நின்று போகிறது. 50 முதல் 59 வயதுவரையான பெண்களில் 30 சதவிகிதமானவர்களின் எடை அதிகரிக்கிறது. சாதாரணமான அதிகரிப்பு உள்ளவர்களாக (Over Wight) மட்டுமின்றி அதீத எடை (Obesity) உள்ளவர்களாகவும் அவ் வயதுப் பெண்கள் மாறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

early-menopause-information

அவ்வாறாயின் மாதவிடாய் நின்ற பெண்களில் எடை அதிகரிப்பது நியதியா என்று கேட்டால். இல்லை என்றே சொல்லலாம். போஷாக்கான உணவு முறைகளையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் அந்நேரத்திலும் எடை அதிகரிப்பைத் தடுக்க முடியும்.

ஏன் அதிகரிக்கிறது

மாதவிடாய் நிற்கும் போது பெண்களில் உடலிலுள்ள பெண் ஹோர்மோனான ஈஸ்ரோஜன் அளவுகளில் வீழ்ச்சி ஏற்படுகிறது. இந்த மாற்றமானது உடலின் இயக்கத்தின் வேகத்தைக் குறைத்து சோம்பலைக் கொண்டு வருவவதுடன் அதிகமாக உண்ணவும் வைக்கிறது என எலிகள்pல செய்யப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. இது பெண்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம்.

hormone-graph

அதேபோல ஈஸ்ரோஜன் அளவு குறையும்போது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் (metabolic rate) தாழ்ச்சியுறுகிறதாம். மாதவிடாய் நின்ற பெண்களின் சில பிரச்சனைகளுக்காக ஈஸ்ரோஜன் மாத்திரைகளை மருந்தாகக் கொடுக்கும்போது அவர்களது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தகைய ஹோர்மோன் மாற்றம் ஏற்படும்போது உடலானது மாப்பொருளையும் குளுக்கோசையும் பயன்படுத்தும் ஆற்றல் குறைகிறது. இதனால் அவை உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட்டு உடை அதிகரிக்கிறது என்கிறார்கள்.

மாதவிடாய் நிற்கும் கால எடை அதிகரிப்பிற்கு ஹோர்மோன் மாற்றங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டபோதும் அது தவிர்ந்த வேறு பல காரணங்களும் இருக்கின்றன. வயதாகும்போது உடல் உழைப்புச் செயற்பாட்டிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமானவை.

உதாரணமாக வயசாகும்போது தசைகளின் திணிவு குறைகிறது. அதே நேரம் அதிலுள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. தசைத் திணிவு குறையும்போது அவற்றால் முன்னரைப் போல கலோரிச் சத்தை பயன்படுத்த முடிவதில்லை. ஆனால் இவை தவிர்க்க முடியாத விடயங்கள் அல்ல. உட்கொள்ளும் உணவைச் சற்றுக் குறைத்து உடற் செயற்பாட்டை அதிகரிப்பதன் மூலம் எடை ஏறுவதை நிச்சயமாக் குறைத்துக் கொள்ள முடியும்.

வேறு வார்த்தைகளில் சொல்லவதானால் இள வயதில் உட்கொண்டது போன்ற அளவுகளில் உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்டபடி உடலுக்கு போதியளவு வேலையைக் கொடுக்கவிட்டால் எடை அதிகரிக்கவே செய்யும்.

பரம்பரை அம்சங்களும் அந்நேர எடை அதிகரிப்பிறகு காரணமாகலாம். உதாரணமாக உங்கள் அம்மா அல்லது அப்பா தொந்தியும் சள்ளையுமான கொண்ட பருத்த உடல்வாகு உள்ளவரானால் நீங்களும் அவ்வாறு ஆவதற்கான சாத்தியம் அதிகமே.

மன உழைச்சல்களும் காரணமாகலாம். அந்த வயதில் பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிய நேரலாம், கணவன் மரணமடையலாம், மணமுறிவு ஏற்படலாம். இத்தகைய சம்பவங்களால் மன உழைச்சல்கள் ஏற்படலாம். அதன் காரணமாக ஒருவர் தனது உணவு முறையில் அக்கறை செலுத்தாது விடுவவார்கள். மனம் தளர்ந்து சுறுசுறுப்பாக இயங்காது சோர்ந்து கிடக்கவும் செய்வர். இவற்றால் எடை அதிகரிக்கும்.

60 சதவிகிதமானவர்கள் தங்கள் முதுமையில் போதுமான உடற்பயிற்சி செய்வதில்லை என அறிக்கைகள் கூறுகின்றன. தொடர்ந்து வயது அதிகரிக்கும்போது உடல் இயக்கத்தில் குறைபாடும் அதிகரிக்கிறது. இதைத் தவிர்த்து உள பூர்வமாக உடற் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும்.

எடை அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் எவை

menopause-pyramid

உடல் எடையானது தேவைக்கு அதிகமாக அதிகரிக்கும் போது உடலில் பல்வேறு சிக்கல்களும் நோய்களும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

  • பிரஸர் அதிகரிக்கும்,
  • நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
  • மாரடைப்பு நோய்க்கான சாத்தியமும் அதிகமாகும்.
  • அதைபோல மூட்டு வருத்தங்களுக்கான சாத்தியம் அதிகரிக்கும்.
  • குண்டான பலர் முழங்கால் மூட்டில் தேய்வு வீக்கம் என அவதிப்படுவதை நீங்களே அவதானித்திருப்பீர்கள்.

எடை அதிகரிப்பானது கொழுப்பு அதிகரிப்பதோடு தொடர்புடையதுதானே. இந்த கொழுப்பானது வயிற்றறைப் பகுதியில் அதிகமாகவே சேரும். அதனால் வயிறு பானைபோலாகும். வயிற்றறைச் சுற்றளவானது 35 அங்குலத்திற்கு அதிகமானால் அது மேலே கூறியது போன்ற பலவித ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.

எடை அதிகரிப்பதைத் தடுப்பது எப்படி?

எடை அதிகரிப்தைத் எடையைக் குறைப்பதற்கு மாயாஜால முறைகள் எதுவும் கிடையாது. மருத்துவர்கள் கிறுக்கித்தரும் மாத்திரைகளோ, ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் மருந்துகளோ, கிறீன் ரீயோ, கொள்ளுச் சாப்பிடுவது போன்றவையோ மட்டும் உதவப் போவதில்லை.

உங்கள் முயற்சிதான் அதிமுக்கிய விடயாகும்.

1.சோர்ந்திருக்காதீர்கள்

கூடியவளவு உடல் உழைப்பில் ஈடபடுங்கள். சோர்ந்து கிடக்காதீர்கள். நடந்தால் கால் உழைவு கை உழைவு என்று சாட்டுச் சொல்லாதீர்கள். முயற்சியில் இறங்குங்கள். அந்த வயதிற்கு ஏற்றது நடைப் பயிற்சி. வுhரத்தின் பெரும்பாலன நாட்களில் 30 நிமிடங்களுக்கு குறையாது கை கால்களை விசுக்கி வீசி நடவுங்கள். துள்ளல் நடை நீச்சல் பயிற்சிகளும் நல்லது.

வீட்டுத் தோட்டம் செய்யுங்கள். மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள்.

இவற்றைத் தவிர நாளாந்த வீட்டு வேலைகளிலும் ஈடுபடுங்கள். கூட்டுங்கள் கழுவுங்கள், தூசு தட்டுங்கள்.

2.உணவில் கவனம் எடுங்கள்.

சாப்பிடுங்கள் பட்டினி கிடக்காதீர்கள். உணவைத் தவிர்க்காதீர்கள்

ஆனால் உணவின் அளவிலும் எத்தகை உணவு உண்பது என்பதிலும் மாற்றங்கள் செய்யுங்கள். எண்ணெய் பொரியில் கொழுப்பு போன்றவ்றறைத் மிகவும் குறையுங்கள். சோறு இடியப்பம் புட்டு பாண் போன்ற மாப்பொருள் உணவுகளை அளவோடு உண்ணுங்கள். அல்லது சற்றுக் குறையும். அதற்கான மொத்த உணவின் அளவைக் குறைக்க வேண்டியதில்லை. காய்கறிகள் பழவகைகளை அதிகம் சேருங்கள்.

3. கலோரி வலு

அதே போல அருந்தும் பானங்களும் அதிக கலோரி வலு அற்றதாக இருக்க வேண்டும். மென்பானங்கள், இனிப்பூட்டிய பழச் சாறுகள், போன்றவற்றைத் தவரிக்க வேண்டும். நாளாந்த அருந்தும் தேநீர் கோப்பி போன்றவற்றிக்கு சேர்க்கும் சீனியின் அளவையும் குறைப்பது அவசியமாகும்.

தண்ணீர், மோர். அதிகம் இனிப்பு சேர்க்காத உடன் பிழிந்த பழச்hசாறுகள், இளநீர் போன்றவற்றை கூடியளவு உபயோகியுங்கள்.

monopause weight gain copy

 

இவற்றைக் கடைப்பிடித்தால் மாதவிடாய் நின்ற பின்னரும் மோகவைக்கும் குமரிபோல உங்கள் உடல் வனப்பைப் பேணிக்கொள்ளலாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் (12 June 2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

 

0.0.0..0.0.0

 

Read Full Post »