Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2015

“நாங்கள் கடைச் சாப்பாடே சாப்பிடுறதில்லை. வீட்டுச் சாப்பாடுதான். எப்படி இது வந்தது என்று தெரியவில்லை” என்றார் ஐயா. அம்மாவும் ஒத்துப் பாடினா.

fast_ramadan_400

அவர்கள் வீட்டிலிருந்து மூன்று பேருக்கு ஒரே நாளில் வயிற்றோட்டமும் வாந்தியும் வந்திருந்தது.

“உணவில் கிருமி தொற்றியதால்தான் வந்திருக்கு. கடையில் வாங்கிச் சாப்பிட்டீர்களா” என்று கேள்வி கேட்டதற்குத்தான் அந்த மறுமொழி வந்தது.

பொதுவாக வீட்டில் தயாரிக்கும்போது உணவில் கிருமி தொற்றுவதற்கான சாத்தியம் குறைவு.

காரணம் என்ன?

அம்மா, அக்கா சில தருணங்களில் அப்பா உணவு தயாரித்திருப்பார். தங்கள் வீட்டு விடயம் என்பதால் அக்கறையோடு மிகவும் சுத்தமாகத் தயாரித்திருப்பார்கள். ஆனால் கடைச் சாப்பாடு அப்படியல்ல. தயாரிப்பதே பலராக இருந்திருக்கும். அது சாப்பாட்டு மேசைக்கு வருவதற்கிடையில் பல கைகள் மாறியிருக்கும். பல கரண்டிகள் உணவினுள் தவண்டிருக்கும்.

அதே நேரம் வீட்டில் சமைத்தால் கிருமி தொற்றாது என்றும் சொல்ல முடியாது. வீட்டிலும் பல வழிகளில் கிருமிகள் உணவில் தொற்றலாம். சமைக்கும்போது, சமைத்ததைப் பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும்போது, கரண்டியிலிருந்து, குளிர்சாதனப் வைப்பதற்கு முன்பு எனப் பல வழிகளில் கிருமிகள் பரவ வாய்ப்புகள் உண்டு.

நீண்ட நேரம் பேசியும் இவர்களது உணவில் கிருமி தொற்றியத்தற்கான காரணம் பிடிபடவில்லை.

கடைசியில்தான் ஒரு பலகைதான் காரணம் என்பது புரிந்தது. அதுவும் ஒரே ஒரு பலகையாக இருந்ததுதான் காரணமாகும். இரண்டாக இருந்திருந்தால் சிலவேளை தப்பியிருக்க வாய்ப்புண்டு.

சமையலறையில் சுத்தம்

சமையலறையும் பாத்திரங்களும் சுத்தமாக இருந்தால்தான் உணவு மாசடையாது இருக்கும். சமைப்பவர், பரிமாறுபவர்களும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Chopping_Board

சமையலறைத் தூய்மையில் வெட்டும் பலகையின் (Cutting board)  சுத்தத்திற்கு முக்கிய இடம் உண்டு. அவற்றை உரிய முறையில் கழுவி கிருமி நீக்கம் செய்து உபயோகிப்பதை வழமையாகச் செய்ய வேண்டும். இல்லையேல் நோய்களை உண்டாக்கக் கூடிய E. Coli and Salmonella  போன்ற கிருமிகள் அதில் தங்கியிருந்து நோய்களைப் பரப்பக் கூடும்.

வெட்டும் பலகையைச் சுத்தம் செய்வது

அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டிய முறைகள் அவை எவற்றால் ஆனவை என்பதைப் பொறுத்தது.

கிளாஸ் அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றாலான வெட்டும் பலகைகளை சுத்தம் செய்வது இலகு. சோப் போட்டுக் கழுவலாம். அல்லது கிருமி நாசினி (detergent)  கலந்தவற்றால் சுத்தம் செய்யலாம். வசதி உள்ளவர்கள் பாத்திரங்கழவி (dishwasher)  மெசினில் இட்டுக் கழுவலாம்.

ஆனால் மரப்பலகையினாலான வெட்டும் பலகைகளை பாத்திரங்கழவி மெசினில் போட்டுக் கழுவுவது நல்லதல்ல. அவ்வாறு செய்தால் பலகையில் வெடிப்புகள் அல்லது பொருக்குகள் ஏற்படலாம்.

இதனால் வெட்டிய உணவின் துகள்கள் அவற்றினைடையே ஒழிந்து கிடந்து கிருமிகள் பெருகி வளரச் செய்யும். அதேபோல தண்ணீரில் ஊறவிட்டுக் கழுவினாலும் பலகை வீங்கி வெடித்து அதற்குள் கிருமிகள் பெருகி வளர இடம் அளிக்கும்.

குறைந்தது இரண்டு வெட்டும் பலகைகளைகளையாவது சமையலறையில் வைத்திருக்க வேண்டும்.

  • இறைச்சி மீன் போன்றவற்றை வெட்டுவதற்கு ஒன்று.
  • காய்கறி பழவகைகள் போன்றவற்றை வெட்டுவதற்கு மற்றொன்று.

ஒன்றிலுள்ள மாசு மற்றதற்கு பரவாது தடுப்பதை இதனால் தடுக்க முடியும். மாமிச உணவுகளில் கிருமி தொற்றுவதற்கும் பெருகுவதற்குமான சாத்;தியம் மிகமிக அதிகம். மாமிச உணவிற்குப் பயன்படுத்திய அதே வெட்டும் பலகையில் காய்கறி பழங்களை வைத்து வெட்டினால் அந்த விசக் கிருமிகள் இவற்றிற்குப் பரவிவிடும்.

பாண், கேக் அல்லது ஏனைய சமைத்த உணவுகளை வைத்து வெட்டுவதற்கு மற்றொரு பலகை வைத்திருப்பது மேலும் உசிதமானது.

எப்படியாயினும் ஒரு வகை உணவை வெட்டுவதற்கு பயன்படுத்தும் வெட்டும் பலகையை மற்ற வகை உணவை வெட்டுவதற்கு பயன்படுத்துவது நல்லதல்ல.

வெட்டும் வேலை முடிந்ததும் பலகையை காலம் தாழ்த்தாது உடனடியாகவே சுத்தம் செய்வது அவசியமாகும். சோப் போட்டுக் கழுவுவது நல்லது. சுடு தண்ணிரால் மீண்டும் கழுவது சிறந்ததாகும்.

கத்தி வெட்டு வடுக்கள், வெடிப்பு சிராய்ப்பு போன்ற காயம்பட்ட பழைய பலகைகளை வைத்திருக்க வேண்டாம். உடனடியாகவே கழித்து அகற்றிவிடுங்கள்.

நீரினால் கழுவுவதால் பலகையிலான வெட்டும் பலகையில் நீர் ஊறிப் பழுதடையச் செய்துவிடும். எனவே நீண்ட நேரம் நீரில் ஊறவிடாது கழுவ வேண்டும்.

நீருக்குப் பதிலாக வினிகர் (vinegar)  கொண்டு சுத்தம் செய்யலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் பலகையை வினிகரால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். பயன்படுத்திய பின்னர் அதிலுள்ள ஈரலிப்புத்தன்மை காய்ந்த பின்னர் வினிகரை மேற்புறத்தில் ஸ்ப்ரே செய்யுங்கள். 10-30 நிமிடங்கள் கழிந்த பின்னர் சுத்தமாகத் துடைத்து எடுங்கள். வினிகரில் உள்ள அசெட்டிக் அமிலமானது E. coli, Salmonella, and Staphylococcus  போன்ற கிருமிகளைச் செயலிழக்கச் செய்துவிடும்.

மரத்திலான வெட்டும் பலகையில் துர்மணம் தோன்றாதிருக்க முதலில் சற்று பேக்கிங் பவுடரை தூவிய பின்னர் வினிகர் போட்டு 5 நிமிடங்களின் துடைத்து எடுக்கலாம். அதன் பின்னர் கழுவலாம்.

வினிகருக்குப் பதிலாக ஹைரஜன் பெரோஒட்சைடினாலும் (hydrogen peroxide) சுத்தம் செய்யலாம்.

வினிகரால் அல்லது ஹைரஜன் பெரோஒட்சைடினால் சுத்தம் செய்வதைவிட இரண்டையும் கொண்டு சுத்தம் செய்வது அதிக பயனுள்ளதாக இருக்கும் எனச் சில ஆய்வுகள் சொல்கின்றன. இரண்டில் ஒன்றை முதலில் ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் சுத்தமாகத் துடைத்து எடுங்கள். பின்னர் மற்றதையும் அவ்வாறே ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்களில்; சுத்தமாகத் துடைக்க வேண்டும்.

வினிகர் மற்றும் ஹைரஜன் பெரோஒட்சைடைப் பயன்படுத்துவது ஓரளவு இயற்கை முறையாகும். பெரும்பான கிருமி அகற்றிகளில் உள்ள பாதகமான இராசயனங்கள் இவற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று அவர்களது வீட்டில் மீன் கறி சமைத்திருந்தார்கள். உணவில் காய்றிகளும் சேர வேண்டும் என்பதால் சலட் செய்;தார்கள். மீன் வெட்டிய பலகையை சரியாகச் சுத்தம் செய்யவில்லை என நினைக்கிறேன். அதே வெட்டும் பலகையில் வைத்தே காய்கறிகளை வெட்டி சலட் தயாரித்ததால் வந்த வினை குடும்பமாகப் பாதித்திருந்தது.  உணவு கிருமிகளால் மாசடைந்து நோயை ஏற்படுத்தியிருந்தது.

உணவு மாசடைதல்

உணவு கிருமிகளால் மாசடைந்து நோயை ஏற்படுத்துவதை உணவு நஞ்சாதல் (Food poisoning)  எனச் சொல்வார்கள். இதனால் உலகளாவிய ரீதியில் நாளாந்தம் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.

சாதாரண வயிற்று வலி முதல் கடுமையான வயிற்றோட்டம் அல்லது மலத்துடன் இரத்தம் சீதம் கலந்து வெளியேறுவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். வாந்தி, வயிற்றுப் பிரட்டு, வயிற்று வலி, வயிற்று முறுக்கு, காய்ச்சல், உடல் உளைவு போன்ற பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம்.

வாந்தி வயிற்றோட்டத்தால் கடுமையான நீரிழப்பு நிலை ஏற்பட்டு நோயாளியை மருத்துமனையில் அனுமதித்து நாளம் ஊடாக நீர் ஏற்றவும் நேரலாம்.

சுமார் 250 வகையான கிருமிகள் இவ்வாறு மாசடைந்த உணவுகள் மூலம் பரவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எனது ஹாய் நலமா புளக்கில் (14.11.2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0

 

Read Full Post »

“இவள் சரியான வேலைக் கள்ளி. கோப்பைகள் கழுவுகிற வேலை தன்ரை தலையிலை விழுந்துவிடும் என்று மெல்ல மெல்லச் சாப்பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்புவாள்” என அம்மா மகளைப் பற்றிப் புறுபுறுத்தாள்.

“இவவோடை டினர் சாப்பிடப் போனால் கடைக்காரன் பூட்டப் போறன் என்று அவசரப்படுத்தி எழுப்பினால்தான் எழும்புவாள்” என்று நக்கல் அடித்தவர் “வாய் நோகாமல் சாப்பிட்டு ஸ்டைல்; காட்டுவா” என நீட்டி முடித்தார்.

மற்றவர்கள் தவறெனக் காரணம் காட்டிப் பேசினாலும் நக்கல் அடித்தாலும் சிலரால் தமது பழக்கத்தை மாற்ற முடியாது. இருந்தபோதும், சில பழக்கங்கள் நன்மையும் தரலாம். மெதுவாக உண்பவர்களில் பலர் மெல்லிய உடல் வாகினராக இருக்கிறார்கள்.

மாறாக இன்றைய உலகமானது அவசரமும் நேரநெருக்கடி மிக்கதாகவும் மாறிவிட்டது. பல்வேறு பாராக்குகளுக்கு குறிப்பிட்ட குறுகிய நேரத்திற்குள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இதன் தாக்கம் மிக அதிகம். உணவின் சுவையை இரசிப்பதற்கோ, நன்கு மென்று தின்பதற்கோ நேரமின்றி வாயில் போடுவதும் விழுங்குவதுமாக அடித்துப் பிடித்து ஓடுகிறார்கள். இதனால்தானோ என்னவோ அவர்கள் பெரும்பாலும் குண்டுப் பீப்பாக்கள் போலத் தோற்றமளிக்கிறார்கள்.

மெதுவாக உண்ணல் ஆய்வுகள்

அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது, ஆறுதலாகச் சாப்பிடுவதானது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் எனச் சொல்கிறது. 35 அதிக எடையுள்ளவர்களையும் 35 சாதாரண எடை உள்ளவர்களையும் கொண்டு 2 நாட்களுக்கு மட்டும் செய்யப்பட்ட ஆய்வு பற்றிய தகவல் Journal of the Academy of Nutrition and Dietetics  சஞ்சிகையின் ஜனவரி 2ம் திகதி இதழில் வெளியாகியுள்ளது.

அதன் பிரகாரம் சாதாரண எடை உள்ளவர்கள் ஆறுதலாகச் சாப்பிடும்போது வழமையை விட 88 கலோரிகள் குறைவாகவே உள்ளெடுத்திருந்தனர். ஆனால் அதிக எடையுள்ளவர்கள் 58 கலோரிகள் குறைவாக உள்ளெடுத்திருந்தனர். வேறுபாடுகள் இருந்தபோதும் உட்கொண்ட கலோரி வலுவில் குறைவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உணவின் அளவு கட்டுப்படுத்தப்படவில்லை. தங்கள் தேவைக்கு ஏற்ப உண்ட போதும் இது நடந்தது.

ஆறுதலாக சாப்பிடுவது என்பது சுமார் 22 நிமிடங்களை எடுத்தது. விரைவாகச் சாப்பிடுவது சுமார் 8 நிமிடங்களை எடுத்தது.

ஆறுதலாகச் சாப்பிடும்போது அதீத எடையுள்ளவர்கள் வழமையை விட 33 சதவிகிதம் அதிகமாக நீர் அருந்தினார்களாம் எனவும் அந்த ஆய்வு கூறியது. அதே வேளை சாதாரண எடையுள்ளவர்களும் சற்றுக் குறைவாக அதாவது 27 சதவிகிதம் அதிகமாக நீர் இருந்தினார்களாம்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இடையில் நீர் அருந்தக் கூடாது என்ற நம்பிக்கை எங்களில் பலரிடையே இருக்கிறது. உணவு சமிபாட்டு நொதியங்களை (enzymes நீர்த்துப் போகச் செய்து சமிபாடடைவதைப் பாதிக்கும் என்பது தவறான கருத்தாகும். மாறாக உதவக் கூடும். உணவுத் துகள்களை சிறியதாக்கி கரையச் செய்வதால் சமிபாடு துரிதமாக்கி விரைவில் உறிஞ்சச் செய்யும் என்பதே உண்மையாகும்.

இந்த இடத்தில் மற்றொரு விடயத்தையும் ஞாபகப்படுத்தலாம். ஒருவர் உணவு உட்கொள்கையில் வயிறு நிறைந்த உணர்வை அவர் பெறுவதற்கு உட்கொள்ள ஆரம்பித்த நேரத்திலிருந்து சுமார் இருபது நிமிடங்கள் மூளைக்குத் தேவைப்படுகிறது என்பதாகும்.

இதைத் தவிர ஜப்பானில் 1700 இளம் பெண்களிடையே செய்யப்பட்ட மற்றொரு ஆய்வும் ஆறுதலாகச் சாப்பிடுவதால் விரைவிலேயே வயிறு நிறைந்த உணவு ஏற்படுகிறது என்றும் அதனால் அவர்கள் உள்ளெடுக்கும் உணவின் கலோரி வலு குறைவாகவே இருக்கிறது எனவும் கூறியது.

University of Rhode Island செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது ஆறுதலாக உண்பவர்கள் நிமிடத்திற்கு 28.4 கிராமை உட்கொள்வதாகவும், இடைநடுவான வேகத்தில் உண்பவர்கள் நிமிடத்திற்கு 56.7 கிராமை உட்கொள்வதாகவும், வேகமாக உண்பவர்கள் நிமிடத்திற்கு 88 கிராமை உட்கொள்வதாகவும் கண்டறிந்தது.

நன்மைகள்

இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆறுதலாக உண்பதின் நன்மைகளை நாம் சுலபமாக ஊகித்து அறியலாம். ஆறுதலாகச் சாப்பிடும்போது குறைந்த அளவு கலோரிகளே உள்;ளெடுக்கப்படுகிறது. இது ஏன்?

விரைவாகச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது. எனவே அதீதமாக உணவை உட்கொண்டுவிடுவார்கள். மாறாக ஆறுதலாகச் சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே உணவு உட்கொள்ளப்படுவதால் ஓரளவு உண்ணும்போதே 20 நிமிடங்கள் கடந்துவிடும். அப்பொழுது வயிறு முட்டிப்போச்சு என்பது தெரியவரும். மேலதிகமாக உட்கொள்ள நேராது.

ஆறுதலாகச் சாப்பிடும்போது நீர் அருந்துவதற்கான வாய்ப்பு அதிகம் கிடைப்பதால் உணவின் இடையே அருந்துவார்கள். இதுவும் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உணவின் அளவைக் குறைக்கச் செய்யும்.

நிதானமாகச் சாப்படும்போது நன்கு மென்று உண்ணக் கூடியதாக இருக்கும். மென்று உண்ணுவதால் உணவு சற்று அதிக நேரம் வாயிற்குள் இருக்கும். உணவுச் செரிமானம் எச்சிலில் ஆரம்பித்துவிடுகிறது. எனவே ஆறுதலாகச் சாப்படும்போது உணவு நன்கு சீராணமாகும்.

உணவை ஆறுதலாகச் சாப்பிடும்போது நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும் என்பது உண்மையே.

ஆறுதலாக உண்ணும்போது சுவைகளை சப்புக்கொட்டி ரசிக்க முடிகிறது.

வாசனையை நன்கு நுகர முடிகிறது. உணவு தயாரிக்கப்பட்ட விதத்தையும் அதன் பதத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் மனத் திருப்தி ஏற்படுகிறது.  இதனால் உணவு உண்ணும் செயற்பாடானது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.

உணவு வேளையை மேலும் மகிழ்ச்சியாக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

இரசனையோடு உண்ணுங்கள்

மென்மையான இசையை பின்னணியில் இசைக்க வையுங்கள். பளீரெனத் தெறிக்கும் ஒளிகளை அணைத்து மெல்லிய இதமான ஒளியை வையுங்கள். மெழுகு திரி ஒளியில் இரவு உணவு உண்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். வேறு சுவார்ஸமான விடயங்களில் மனத்தைச் செலுத்தாதீர்கள். தொலைக்காட்சி பார்ப்பது, விவாதங்களில் ஈடுபடுவது போன்றவற்றைத் தவிருங்கள்.

உணவில் மட்டுமே மனத்தைச் செலுத்துங்கள். நாக்கும் மூக்கும் உங்கள் சுiயுணர்வை மிகைப்படுத்தி அரிய அனுபவத்தைக் கொடுக்கும். உணவின் சுவையும் பதமும் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தும். திருப்தி கிட்டும்.

மற்றவர்களுடன் சேர்ந்து உண்ணும்போது, இடையில் ஒரு சில நிமிடங்களுக்கு உண்பதைத் நிறுத்தி அவர்களுடன் சில வார்த்தைகள் பேசுங்கள். நேரம் கழியும். விரைவில் வயிறு நிறைந்த உணவு கிட்டிவிடும். ஆயினும் சுவார்ஸமான விடயங்களை ஆரம்பித்து அதில் மூழ்கி உண்ணும் அளவை மீறிவிடாதீர்கள்.

நன்கு சாப்பிட்டு வயிறு நிறைந்திருக்கும் தருணத்தில்தானே பொதுவாக ஈற்றுணவு (னநளளநசவ) வருகிறது. இருந்தபோதும் ஈற்றுணவின் இனிப்பும் நறுமணமும் நிறைந்த வயிறு நிறைந்ததை மறக்க வைக்கும். மீண்டும் அவற்றைச் சாப்பிடத் தூண்டும். எனவே உணவு முறையில் ஒரு தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

முதலில் ஈற்றுணவை சுவையுங்கள். கேக் அல்லது புடிங் போன்ற எது கிடைத்தாலும் சிறுகக் கடியுங்கள. அதன் சுவையில் நனைந்த பின்னர் முக்கிய உணவிற்கு செல்லுங்கள். தேவையற்ற கலோரிகளை உள்ளெடுப்பதை இதனால் தடுக்க முடியும்.

பழங்களும் காய்கறிகளும் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். இவற்றைச் சப்பிச் சாப்பிட கூடிய நேரம் தேவைப்படுவதால் நீங்கள் ஆறுதலாகவே சாப்பிட முடியும். அது முற்கூறிய நன்மைகளைத் தரும்.

உணவு உட்கொள்ளும் பாத்திரத்தை சிறிதாகத் தேர்ந்தெடுங்கள். இதனால் நீங்கள் உங்கள் கோப்பையில் பகிரும் உணவு மட்டுப்பட்டிருக்கும். அதனால் உண்ணும் அளவு குறையும்.

மெதுவாகச் சாப்பிடுங்கள் என்பது சொல்வதற்கு சுலபம் ஆனால் மும்மரமான வேலையில் இருக்கும் போது ஆற அமர இருந்து சாப்படுவது கஷ்டம்தான். ஆனால் உணவு நேரங்களை ஒழுங்குமுறையில் கடைப்பிடித்து நேரம் தவறாது உண்ணுங்கள். ஒழுங்கு முறையைக் கடைப்பித்தால் நேரம் ஒதுக்குவதில் சிரமமிருக்காது. ஒவ்வொரு உணவு வேளைக்கும் குறைந்தது 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஒதுக்குங்கள்.

அத்துடன் ஒரு நேர உணவிற்கும் அடுத்த உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மெதுவாகச் சாப்பிடுங்கள். நலம் மிக்க மெல்லிய உடலினராய் மாறி மகிழுங்கள்.

எனது ஹாய் நலமா புளக்கில்(7th October 2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0..0.0

 

Read Full Post »