Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச், 2015

மகிழ்ச்சி பொங்கிவழிந்தது. நீண்ட காலத்தின் பின்னர் கிட்டிய ஆனந்தத்தில் திளைத்தார்.

புதுப் பிறவி எடுத்தது போன்ற புத்துணர்ச்சி உடலெங்கும் பரவியது.

எதுவித உபத்திரமும் தராமல் பேரமைதி குடிகொள்ள கம்மென்று அடங்கிக் கிடந்தது வயிறு. எத்தனை துன்பங்களை அனுபவித்துவிட்டார். அவமானங்கள் சொல்லியடங்காது.

Passing_Gas

கடாமுடா என்ற சத்தம் அவரது வயிற்றில் திடீரென எழும்பும். பல தருணங்களில் அருகில் இருப்பவர் இவரை புதினமாகப் பார்க்கும் அளவிற்கு அது பலமாக ஒலிக்கும். வேளை கெட்ட தருணங்களில் பறபற வென மலவாயிலால் வாய்வு ஆரவாரமாக வெளியேறும்.

வயிறு முட்டுமாப்போல அந்தரம் கொடுக்க சற்றே பிட்டத்தை ஒரு புறம் உயர்த்தி வாய்வைத் தானாகவே வெளியேற்ற நேர்வதும் உண்டு. தலைகுனிந்து சத்தம் எழுப்பாது சிரிப்பார்கள் அருகில் இருப்பவர்கள்.

farting-man

“விருந்தினர்கள் வந்திருக்கும் போது டொயிலற்றுக்குப் பேகக் கூடாது” இது மனைவியின் கண்டிப்பான உத்தரவு. புறபற சத்தம் அருகில் உள்ள வரவேற்பரை சத்தம் கேட்குமே என்ற வெக்கையீனம் அவளுக்கு.

இவை எல்லாம் பயிற்றங்காய், உருளைக் கிழங்கு, பருப்பு போன்ற வாய்வு பண்டங்களைச் சாப்பிட்டதால் என எண்ணியிருந்தார். அவை காரணமல்ல என்பது இப்பொழுதுதான் புரிகிறது.

ஆபீசில் கூட வேலை செய்பவர்கள் கணக்கு வைப்பார்கள் இவர் எத்தனை தடவைகள் மலம் கழிக்கச் செல்கிறார் என்று. காலையில் வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் கட்டாயம் ஒரு தடவை. முதிய உணவிற்கு சற்று முன்னர் மற்றொரு தடவை தப்பாது.

இந்த ஒரு வாரமாக இவை எதுவுமே அவருக்கு இல்லை.

டொக்டரின் அறிவுரைப்படி பால் குடிப்பதை நிறுத்திய பின்னர்தான் அவருக்கு இந்த நிம்மதி கிடைத்தது. வழமையாகப் பால் குடிப்பது நல்லது என்று சொல்கிற மருத்துவர்தான் இவரை மட்டும் பால் குடியாதே என அறிவுறுத்தி இருந்தார். காரணம் அவரது உணவுத் தொகுதியால் பாலை சமிபாடடையச் செய்ய முடிவதில்லை.

lactose-intolerance-breakfast-lactose-intolerant-620x476-620x476

பால்வெல்லம் இணங்காமை  Lactose intolerance

பால் சமிபாடடைவதில் சிக்கல் இருப்பதை மருத்துவத்தில் லக்டோஸ் இன்ரொலரன்ஸ் என்பார்கள். லக்டோஸ் lactose என்பது பாலில் உள்ள சீனிப் பதார்த்தமாகும்.  லக்டோசில் இரண்டு வகையான இனிப்புகள் இணைந்துள்ளன. glucose and galactose  என்பனவே அவை. அவற்றை ஒன்றிருந்து மற்றதைப் பிரித்து உணவுக் குழாயால் உறிஞ்சப்படுவதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கு லக்டேஸ் (Lactase)  என்ற நொதியம் தேவை.

இந்த நொதியம் ஒருவரது உணவுக் கால்வாயால் முற்று முழுதாகச் சுரக்கப்படாமல் இருந்தாலோ அல்லது போதியளவு சுரக்காமல் இருப்பதால்தான் இக் குறைபாடு ஏற்படுகிறது.

lactose-intolerance1-624x468

இதன் காரணமாக சிலரால் பால் கலந்த எந்த உணவை உண்டாலும் பிரச்சனை ஏற்படலாம். உதாரணமாக சிறிதளவே பால் கலந்த கேக் பிஸ்கட் போன்றவற்றை உண்டால் கூட ஒரு சிலரில் செமிபாடடையாது. மாறாக பலருக்கு பால் அருந்தினால் மட்டுமே பிரச்சனையாக இருக்கும். எதை உண்பது எதைத் தவிர்ப்பது என்பதைக் கண்டறிந்து நலமாக வாழ்வதே இவர்கள் முன் இருக்கும் முக்கிய சவாலாகும்.

பலருக்கு இப் பிரச்சனை இருந்த போதும் அது பாலினால்தான் என்பதை பலர் உணர்ந்து கொள்வதில்லை. இனங்களைப் பொறுத்த வரையில் ஆசியா ஆபிரிக்கா தென் அமெரிக்கா போன்ற பகுதி மக்களுக்கு அதிகமாகவும் ஐரோப்பியர்களிடையே குறைவாகவும் இருக்கிறது.

சில குடும்பங்களின் வளர்ந்தவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. பெரும்பாலும் கட்டிளம் பருவத்தில் அல்லது வளர்;ந்த பின்னரே அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. ஒரு சிலரில் வாழ்நாள் முழவதும் பாலினால் எந்தவித பிரச்சனையும் இருக்காது. இருந்தாலும் திடீரென ஆரம்பிக்கலாம். இதற்குக் காரணம் முதுமையடைவதால் ஆக இருக்கலாம்.

இருந்தபோதும் பிறவியிலேயே சில குழந்தைகளுக்கு இப் பிரச்சனை இருப்பதுண்டு. இவர்கள் பால் அருந்தினால் வயிற்றோட்டம் ஏற்படும். இது அவர்களது குழந்தைப் பருவ உணவூட்டலில் பெரும் பிரச்சனையாக இருக்கும். இதனால் சோயாப் பாலை கொடுக்க நேர்கிறது. ஆயினும் இது ஒரு சில குழந்தைகளையே தாக்குகிறது.

இதைத் தவிர குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இதேபோல பால்வெல்லம் இணங்காமைக் குறைபாடு இருப்பதற்கான சாத்தியம் அதிகம். இது தற்காலிகமானதே, குறைமாதமாகப் பிறக்கும் அக் குழந்தையின் உணவுத் தொகுதியானது லக்டேஸ் நொதியத்தை உற்பத்தி செய்வதற்கு தயாராகாததே காரணம் ஆகும். சிறிது காலத்தில் அந்நொதியம் உற்பத்தியாக ஆரம்பித்ததும் தானாகவே குணமாகிவிடும்.

அறிகுறிகள்

பால் அல்லது பாற் பொருட்களை உட்கொண்ட 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரத்திற்குள் அறிகுறிகள் தோன்றும். ஆரம்பத்தில் சொன்ன நோயாளிக்கு ஏற்பட்டவை போலவே அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக,

  • வயிற்றுப் பொருமல்
  • வயிற்று வலி அல்லது வயிற்று முறுக்கு
  • வயிற்றறையில் வாய்வு கடா முடா என ஓடுவது போன்ற சப்தங்கள்
  • மலவாயிலால் வாய்வு வெளியேறுதல்
  • வயிற்றோட்டம் அல்லது மலம் இளக்கமாக வெளியேறல்
  • ஒரு சிலரில் ஓங்காளம், வாந்தி ஏற்படலாம்

இருந்தபோதும் வயிற்றில் வாய்வுத் தொல்லை உள்ள அனைவரும் தமக்கு பால் வெல்ல இணங்காமை பிரச்சனைதான் உள்ளது என்ற முடிவிற்கு வரக் கூடாது. வேறு பல உணவுகளாலும் வயிற்றில் வாய்வுத் தொல்லை ஏற்படலாம்.

மறுதலையாக, பால் குடித்த பின்னர் ஒரு தடவை உங்களுக்கு பிரச்சனைகள் தோன்றினால் பால் வெல்லம் இணங்காமைதான் என முடிவு கட்ட வேண்டாம். ஒவ்வொரு முறை பால் குடித்த பின்னரும் அல்லது ஒவ்வொரு முறையும் பாற் பொருட்களை உட்கொண்ட பின்னரும் வயிற்றில் பிரச்சனை தோன்றுகிறது எனில் அது பாலால் ஏற்பட்டதாக இருக்கலாம்.

எவ்வாறு கண்டறிவது

சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவருடன் பேசுங்கள்.

பாலையும் பாற் பொருட்களையும் சில தினங்களுக்கு முற்றாகத் தவிர்ப்பதன் மூலம் ஒரு இப் பிரச்சனை இருக்கிறதா இல்லையா என தீர்மானிக்க முடியும். ஆனால் இதில் ஒரு பிரச்சனை உண்டு. பாலை ஒருவர் பாலாகக் குடிக்காவிட்டால் கூட வேறு உணவுப் பண்டங்களில் அவை மறைவாகக் கலந்திருப்பதால் அறிகுறிகள் தோன்றலாம்.

உதாரணமாக கேக், பிஸ்கற், பான்கேக், குக்கீஸ் போன்றவற்றில் கலந்திருக்கலாம். காலையில் பலர் உட்கொள்ளும் Cereal உணவுகளில் கலந்திருக்கும்.

Lactose5

சொக்ளட், சலட் (salad dressings)  போன்றவற்றிலும் இருக்கக் கூடும். இவ்வாறு பல உணவுகளிலும் பால் அல்லது பாற்பொருட்கள் கலந்திருப்பதால் பாலைத் தவிர்க்கும் உணவுமுறை (elimination diet) சில வேளைகளில் தவறான முடிவைக் கொடுக்கக் கூடும்.

milk challenge   என்ற முறையிலும் பரிசோதித்து அறியலாம். இரவுணவிற்குப் பின்னர் வேறெதுவும் உட்கொளள்ளாது காலையில் ஒரு கப் பாலை மட்டும் அருந்த வேண்டும். வேறு எதுவும் உண்ணக் கூடாது. பால் வெல்லம் இணங்காமை உள்ளவராயின் 3 முதல் 5 மணிநேரத்திற்குள் வயிற்றுப் பொருமல் வயிற்று வலி வயிற்றோட்டம் போன்ற வழமையான அறிகுறிகள் தோன்றும்.

இவற்றைத் தவிர சுவாசக் காற்றில் ஹைதரஜன் வாய்வின் அளவை கண்டறிவதன் மூலம் நோயை இனங்காணும் பரிசோதனை breath test    மேலை நாடுகளில் செய்யப்படுகிறது. ஆயினும் இலங்கையில் கிடைப்பதாகத் தெரியவில்லை.

மலப் பரிசோதனை, பால் அருந்திய பின்னர் குருதி குளுக்கோஸ் பரிசோதனை, சிறுகுடலில் இருந்து திசுக்களை வெட்டி எடுத்து பரிசோதிக்கும் முறை ஆகியனவும் சொல்லப்படுகின்றன. ஆயினும் பெருமளவு உதவுவதில்லை.

சிகிச்சை என்ன?

இப் பிரச்சனைக்கான முக்கிய தீர்வு ஒருவர் தனது உணவில் சேரக்கும் பால் மற்றும் பாற் பொருட்களைக் குறைத்துக் கொள்வதாகும். இதற்குக் காரணம் லக்டோஸ் இன்ரொலரன்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஓரளவு பாலுணவை உட்கொள்ளும் போது பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. சிலருக்கு பாலை அருந்துவதை மட்டும் தவிர்த்தாலே போதும். சுகம் கிடைக்கும்.

ஐஸ்கிறீம், சீஸ், தயிர், யோகட் போன்றவையும் அதிகளவு பாற்பொருளை கொண்ட உணவுகளாகும். இவற்றையும் சிலர் தவிர்க்க வேண்டியிருக்கும்.

இருந்தபோதும் தயிர், யோகட் ஆகியவை பெரும்பாலன லக்டோஸ் இன்ரொலரன்ஸ் உள்ளவர்களுக்கு எந்தவித பிரச்சனையையும் கொடுப்பதில்லை.

இதற்குக் காரணம் என்ன. யோகட் தயிர் போன்றவற்றில் ஒரு பக்றீரியாக் கிருமியில் இயல்பாக உள்ள லக்டேஸ்  (lactase)  நொதியம் நீங்கள் உட்கொண்ட பாலிலுள்ள வெல்லமான (lactose)  யை ஓரளவு சமிபாடடையச் செய்துவிடுவதாகும்.

அத்துடன் யோகட் ஆனது இரைப்பையிலிருந்து பால் போல வேகமாக வெளியேறுவதில்லை. சற்று வேகங் குறைவாக உணவுக் குழாயின் ஊடாக யோகட் செல்லும்போது எமது உணவுக் குழாயில் இயல்பாக உள்ள பக்றீரியா கிருமிகள் அவற்றை உடைத்து சமிபாடடையச் செய்துவிடுகின்றன.

வேறு உணவுகளுடன் சேர்த்து பாற்பொருட்களை உட்கொள்வதாலும் பலருக்கு இணங்காமை அறிகுறிகள் ஏற்படுவதில்லை. முக்கியமாக கொழுப்பும் கலந்த உணவுகளை உட்கொள்ளும் போது பாற்பொருள் இரைப்பையிலிருந்து வெளியேறுவது அதிக நேரம் எடுக்கிறது. இதன் காரணமாக அவை ஆறுதலாக சிறுகுடலின் ஊடாகப் பயணிக்கும்போது அதிலுள்ள பக்றீரியா கிருமிகளிலுள்ள லக்டேஸ் நொதியம் பாலை சம்பாடடையச் செய்துவிடுகிறது.

பாலைச் சமிபாடடையச் செய்யும் லக்டேஸ் நொதியம் சில நாடுகளில் மாத்திரைகளாகக் கிடைக்கிறது. பாலுணவு உண்ணும் இதையும் சேர்த்து உண்டால் வயிற்றுப் பிரச்சனை ஏற்படாது. ஆயினும் இலங்கையில் கிடைப்பதாகத் தெரியவில்லை.

பாலில் அதிகளவு கல்சியம் கிடைக்கிறது. அது நல்ல தரத்தினாலான கல்சியம் ஆகும். எனவே பாலலுணவு இணங்காதவர்களுக்கு கல்சியம் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். விற்றமின் டி கலந்த கல்சியம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.

ஒரு புதிய தகவல். மரபணுப் பரிசோதனைகள் மூலம் பால்வெல்லம் இணங்காமைப் பிரச்சனையை இப்பொழுது இனங்காண முடியும். இத்தகைய நவீன விலையுர்ந்த பரிசோதனை முறைகள் நடைமுறைச் சாத்தியமற்றவை. அதே போல லக்டேஸ் இல்லாத எலிகளில் அதை உற்பத்தி செய்ய உதவும் மரமணுவை மாற்றீடு செய்யும் மரபணு சிகிச்சை முறையும் பரீட்சார்த்தமாக வெற்றி ஈட்டியது. ஆனாலும் இது மனிதர்களில் செய்து பார்க்கப்படவில்லை. எதிர்காலத்தில் கூட வழமையான சிகச்சையாக இது வருவதற்கான சாத்தியம் மிகக் குறைவே.

பால் வெல்லம் இணங்காமை, பால் ஒவ்வாமை அல்ல (Milk allergy) என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். முற்றிலும் வேறானவை. பால் ஒவ்வாமை பெரும்பாலும் குழந்தைகளிலேயே ஏற்படும். அது பற்றி வேறு ஒரு பதிவு பின்னர் போடலாம்.

“ஏன் ஐயா நீங்கள் கட்டுரையில் குறிப்பட்ட நபர் குறைந்தது இரண்டு தரமாவது ஆபிசில் மலங் கழிக்கச் செல்கிறார்” என அடுத்த வாரம் ஓரிருவராவது என்னிடம் கேட்காமல் விடமாட்டார்கள்.

அவர் காலையில் சாப்பிடுவதில்லை. தடித்த பால் கோப்பி அல்லது தேநீர் அருந்துவார். ஆபீஸ் சென்ற சிறிது நேரத்தில் அது அவரது வயிற்றைக் கலக்கியடிக்கும். முற்பகல் 10 மணியளவில் ஆபிசியில் ஒரு பால் தேநீர் அருந்துவார். அதுவும் சற்று நேரத்தில் மலசல கூடத்திற்கு விரட்டும்.

பாலில்லாத தேநீர் அருந்துவதால் இப்பொழுது கூட வேலை செய்பவர்கள் கணக்கெடுக்கும் வேலை நின்று போயிற்று.

எனது ஹாய்நலமா புளக்கில் (12.12.2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

 

Read Full Post »

இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன். தொடர்கதை போல நடந்து கொண்டிருந்தது. அது மிகவும் வியப்பூட்டும் கனவாக இருந்தது. நான் கனவுதான் காண்கிறேன் என்பதை உணரக் கூடியதாக இருந்தது.

Pino-daydream

அதைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என அக்கணத்தில் நினைத்தேன்.

இப்பொழுது இந்தக் கட்டுரையை சமகாலத்திற்காக எழுத ஆரம்பித்தபோது அது பற்றி எழுதவும் எண்ணினேன். ஆனால் எத்தனை முயன்றும் அது என்ன கனவு என்பது ஞாபகத்தில் வரவேயில்லை.

கனவுகள் அற்புதமானவை. அதில்தான் எத்தனை வகைகள்

விழித்திருக்கும் போது கனவுகனில் மிதப்போம். பகற்கனவு என்று அதனை எள்ளலும் செய்வோம். ஆழ் தூக்கத்தில் கனவுகள் காண்போம். அவற்றைக் கண்டது பற்றிய நினைவு கூட நித்திரைவிட்டு எழும்பியதும் இருக்காது. ஆனால் பல கனவுகள் எங்கள் துக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும்.

உண்மையில் நாங்கள் ஆழ் தூக்கத்தில் மூழ்கியிருக்கும்போது நினைவுடன் இருப்பதில்லை. நடப்பது எதுவும் தெரியாது. மயக்கத்திற்கு அண்மிய நிலை அது. ஆனால் அதிலிருந்து மீண்டு நினைவுலகிற்கு வந்ததும் வாழ்வின் நாளாந்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை ஒன்று இருக்கிறது. நினைவு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஆழ்ந்த தூக்கமுமற்ற முழு நினைவுமற்ற நிலை இருக்கிறது. அவ்வேளையில்தான் கனவுகள் காண்கிறோம். அவ்வாறு காணும் கனவுகளின் போதுதான் கனவு காண்பதாக உணர்கிறோம். அதுதான் எனக்கும் நடந்தது.

உண்மையில் இதுதான் எமது நினைவுலகின் மிகவும் மர்மமானதும் வியப்பிற்குரியதும், தெளிவற்றதுமான தருணமாக இருக்கிறது.

உளவியலாளர்களுக்கு இத்தகைய நேரம் ஆய்விற்குரிய முக்கிய கணமாக இருக்கிறது. எமது வாழ்வின் சாயல் அதில் படுவது எவ்வாறு என ஆராய விரும்புகிறார்கள். ஆனால் நினைவிருந்து மறைந்துவிட்ட அவற்றை கனவு காண்டவர்களில் கேட்டு அறிவதும் முடியாதிருக்கிறது. மூளையின் அந்நேர செயற்பாடுகளை கருவிகளின் மூலம் அறிவதன் மூலம் விடை காண முயல்வது மட்டுமே இற்றைவரை சாத்தியமாக இருந்தது.

ஆனால் கனவுலகில் ஆழ்ந்திருக்கும் அவ்வேளையிலேயே அவருடன் தொடர்பு கொள்ளும் ஒரு முற்றிலும் புதுமையான செயன்முறை கண்டறியப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளுக்கு ஆர்வம் ஊட்டுவதாக இருக்கிறது.

ஆனால் கனவில் இருப்பருடன் தொடர்ப்பு கொள்ளவது எவ்வாறு? தட்டி எழுப்பிக் கேள்விகள் கேட்டால் அவரது கனவு கலைந்துவிடும் அல்லவா?

இந்த நிலையில் தெளிவான கனவுகள் (lucid dream)  ஆய்வுகளுக்கு உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அது என்ன தெளிவான கனவு என்கிறீர்களா?

lucid-dream-flying

இத்தகைய கனவின் போது ஒருவர் கனவு காண்கிறார். தான் கனவு காண்பதாகவும் உணர்கிறார். அது மாத்திரமல்ல தாங்கள் ஆழ்ந்திருக்கும் அந்த உலகில் தாம் அடுத்து செய்ய வேண்டியது எது என்பதையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.

பெரும்பாலானவர்கள் தமது வாழ்வில் ஒரிரு தடவைகளாவது அத்தகைய தெளிவான கனவுகளைக் கண்டிருப்பார்கள். ஆனால் அத்தகைய அனுபவங்கள் பரவலானவை அல்ல என்பதையும் சொல்ல வேண்டும்.

இருந்தபோதும் ஒரு சிலரால் அத்தகைய தெளிவான கனவுகளை தாமாகவே வரவழைக்க முடிகிறது என்று சொல்கிறார்கள். அத்தகைய ஆற்றல் உள்ள நபர்களே கனவுகளின் உள்ளே புகுந்து விளையாடும் ஆய்வுகளுக்கு கை கொடுக்கிறார்கள்.

ஒருவரது நடத்தை அல்லது அனுபவம் பற்றி ஆராய முற்படும் அறிவாற்றல் சார்பான விஞ்ஞானிகள் ஒருவர் ஏற்கனவே விபரித்த அனுபவங்களை சொல்லளவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். செயற்பாட்டு பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தி விளங்க முற்படுபர். குறிப்பிட்ட விடயத்தில் அவர்களது செயற்பாடு எவ்வாறானது, எதை எதை நினைவில் கொள்கிறார்கள், எவ்வாறு காரணப்படுத்துகிறார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கனவுகள் பற்றிய ஆய்வுகளில் இது மிகவும் கடினமானதாகும்.

ஏனெனில் கண் விழித்து நினைவு திரும்பும் வரை அவர்களால் பெரிதளவில் எதையும் சொல்ல முடியாது. கனவுலகில் அவர்கள் செயற்படும் விதத்தை அவர்களது பங்களிப்புடன் பரிசோதனையாகச் செய்து பார்க்கவும் முடியாது.; பக்கவாத்தின் போது அங்கங்கள் செயலற்றுப் போவது போல தூக்கத்தில் உறுப்புகள் தற்காலிகமாக இயங்க முடியாதிருப்பதே (sleep-induced paralysis) இதற்குக் காரணமாகும்.

அங்கங்களை இயங்க வைப்பதற்கான தகவல்கள் மூளையிலிருந்து வரவேண்டும். மூளையின் கலங்களிலிருந்து முண்நாண் வழியாக தசைத் தொகுதிகளுக்கு தவகல்கள் அனுப்பப்படுகிறது. ஆனால் தூக்கத்தின் போது அவ்வாறு அனுப்பப்படும் சமிக்கைகள் மூளையின் குறிப்பிட்ட பகுதி நரம்புக் கலங்களால் தடுக்கப்படுகின்றன. இதனால்தான் கனவுகளின் போது நாம் எமது அங்கங்களை அசைத்து நாம் செயப்பட முடியாது போகிறது

இவ்வாறு தடுக்கப்படுவது தூக்கத்தின் துரித கண் இயக்க நிலையின் போது ஆகும்.

இந்த இடத்தில் தூக்கம் பற்றி சற்று அறிந்து கொள்வது நல்லது. தூக்கதில் பல நிலைகள் உண்டு. அதில் துரித கண் இயக்க நிலை(Rapid Eye Movement or REM)  என்பதும் ஒன்று. இந்ந நிலையில் முளையின் செயற்பாடானது உச்ச நிலையில் இருக்கும். அதாவது நினைவு நிலையின்போது மூளையின் செயற்பாடு எவ்வாறு இருக்குமோ அதை ஒத்ததாக இயங்கிக் கொண்டு இருக்கும். அந்நேரம் தூக்கம் காரணமாக அவர் செயற்படாது கிடப்பார். ஆனால் அவரது கண்கள் மட்டும் தொடர்ச்சியாக அப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும்.

ஆனால் மேலே கூறிப்பட்டது போல அங்கங்கள் இயக்கமின்றிக் கிடக்கும். அந்த நேரத்தில் தோன்றும் தெளிவான கனவானது ஓடுவது துள்ளுவது அடிப்பது போன்ற கடுமையான உடல் அசைவுகளுடன் கூடியதாக இருந்தாலும் நிசத்தில் உடலால் அசைய முடியாது. ஆக மிஞ்சியது சிறு நடுக்கம் போல இருக்கலாம். இது ஏன் என்பது பற்றிய காரணம் பின்னர் தெளிவாகும்.

அது அவ்வாறிருக்க, இப்பொழுது கனவின் காரிருள் குகைகளுக்குள் வெளிச்சம் பாய்ச்சும் ஆய்வுகள் பற்றி சற்று பாரப்போம்.

முன்னரே பரஸ்பரம் ஏற்றுக்கொளள்ளப்பட்ட கண்அசைவுககளை சமிக்கைகளாக தெரிவிப்பதன் மூலம் தாங்கள் தெளிவான கனவு காணத் தொடங்குவதை கனவு காண்பவர்கள் ஆய்வாளர்களுக்கு தெரிவிக்க முடியும். அதாவது தனது கண்களை இயல்பான ஒரு குறிப்பிட்ட விதத்தில் கனவு காண்பவர் அசைப்பார். அதனைக் கொண்டு அவர் கனவுலக்கில் இறங்குவதை ஆய்வாளர் புரிந்துகொள்வார். மூளையின் செயற்பாடுகளை கனவின் போது பதிவு செய்யும் கருவிகளை உடனடியாகவே ஆய்வாளர் இயக்குவார்

கண் குழியைச் சுற்றி வைக்கப்பட்ட மின்வாய்கள்(electrodes)  மூலம் அவற்றை பதிவு செய்யவும் உறுதி செய்ய அக் கருவிகளால் முடியும். இந்தச் செயன் முறையானது Stephen LaBerge  என்ற தூக்கம் பற்றிய ஆய்வுகளைச் செய்பவரால் முதன் முதலில் கண்டறிந்து பயன்படுத்தி சரியானது என உறுதிப்படு;த்தப்படதாகும்.

கனவுலகின் இயல்புகளையும் அவை எவ்வாறு மூளையின் செயற்பாடாக பிரதிபலிக்கிறது என்பதையும் எளிமையானதும் தனித்துவம் வாய்ந்ததுமான இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பரிசோதிக்க முடிந்தது.

pic78

ஆனால், தெளிவான கனவுகள் காண்பவர்களாக சொல்லப்பட்டு இத்தகைய ஆய்வுகளில் உட்படுத்தப்பட்டவர்கள்; உண்மையில் தூங்கவில்லை கனவு காணவில்லை, வெறுமனே தளர்ந்திருந்தார்கள் என அல்லது அவர்கள் கனவு காண்பதாக ஏமாற்றினார்கள் என ஆரம்ப கட்டங்களில், வேறு அறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள்.  மின்வாய்கள் மூலம் மூளையின் செயற்பாட்டை துல்லியமாகக் கண்டறிய முடிந்ததில் இதன் உண்மைத் தன்மை நிரூபணமானது.

அது எத்தகைய உண்மை.

தெளிவான கனவு காணும் தருணத்தின் மூளையின் செயற்பாடானது துரித கண் இயக்க நிலையின் அம்சங்களையே கொண்டிருந்தது என்பது நரம்பியல் உளவியல் நிபுணர்களான Ursula Voss,  Martin Dresler   செய்த ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டது.

அது மாத்திரமல்ல தெளிவான கனவுகளின் போதான மூளையின் செயற்பாடானது தனித்துவமானது. அது சாதாரண தூக்கம், ஏனைய கனவுகள், மற்றும் நனவு நிலை ஆகியவற்றின் போதான மூளையின் செயற்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை கண்டறிய முடிந்தது. தமது விருப்பங்களுக்கு ஏற்றவாறு முடிவுகளை விளங்கிக் கொள்ளும் wishful thinking  அல்ல இது.

கனவுகள் பற்றிய வேறு சில ஆய்வுகள் சுவாரஸ்சமானவை. முன் ஏற்பாடு செய்யப்பட்ட சில செயல்களை துரித கனவுகள் காணும் வேளையில் செய்வித்து, அதே செயற்பாட்டை விழிப்பு நிலையில் செய்ய வைத்து ஒப்பீடு செய்து பார்த்தனர். உதாரணமாக ஒன்று இரண்டு மூன்று என எண்களை எண்ணும் செயற்பாடானது கனவு நிலையிலும் நினைவு நிலையிலும் ஒரே வேகத்தில் நடைபெறுவதை அறிய முடிந்தது. எண்ணுவது என்பது மனத்தின் செயற்பாடு மட்டுமே அதில் உடலின் செயற்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் படி ஏறுவது, நடப்பது, எளிமையான உடற் பயிற்சிகளைச் செய்வது போன்ற உடலின் செயற்பாடுகள் கனவு நிலையின் போது நீண்ட நேரம் எடுத்தன.

இதற்குக் காரணம் என்ன? உணர்திறன் சார்ந்த பின்னூட்டு (sensory feedback) வழமைபோல் இல்லாததே என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

demonstrator

உணர்திறன்  சார்ந்த பின்னூட்டு என்றால் என்ன’.

உதாரணம் சொல்லலாம். நாம் நடக்கும்போது அது பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் நாம் கால் வைக்கும் தரையானது வழமையானதா வழுவழுப்பானதா ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததா, பாதங்களைக் குத்தக் கூடிய கல் முள் போன்றவை உள்ளதா போன்ற பல விடயங்களை எமது பாதங்களின் சருமம் பகுத்துணர்ந்து அதை மூளைக்கு செய்தியாக அனுப்புகிறது. நடக்கும் தரை ஆபத்தனது அல்ல என்ற செய்தி கிடைத்ததும் கால்கள் வேகமாக நடக்கும்.

நினைவு நிலையில் உணர்திறன் சீர்மையுடன் செயற்படுகிறது. ஆனால் கனவு நிலையில் இத்தகைய உணர்திறன் வழமைபோல இல்லாததாலேயே கனவு நிலையில் உடற் செயற்பாடுகள் வேகங் குறைகின்றன. இதனால்தான் தெளிவான கனவு நிலையின் போதும் மனிதர்களால் நினைவு நிலை போல இயங்;க முடிவதில்லை.

அது சரி கனவுகள் பற்றிய ஆய்வுகளால் பயன் என்ன? நினைவுலகின் ஏனைய தளங்களில் சஞ்சரிப்பதற்கு கனவுகள் பற்றிய ஆய்வின் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதில் New Age movement  போன்ற இயக்கத்தினர் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆன்மீக உலகில் நவீன விஞ்ஞான அறிவின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியதே.

தெளிவான கனவுலகில் நீந்துவதை ஊக்குவிபப்பதற்கு மருந்துகளை உபயோகிக்கும் ஆபத்தான செயலில் இறங்குபவர்களும் இருக்கிறார்கள். பார்க்கின்சன் நோய்க்கு பயன்படுத்தும் சில மருந்துகள் பகற் கனவுகளில் ஆழ்த்தும் பக்கவிளைவு கொண்டதால் அதனை பயன்படுத்த முனைகிறார்கள்.

தூக்கத்தில் உளறுபவர்கள் விடயத்தில் என்ன நடக்கிறது?

sleeptalking21

அதுவும் பெரும்பாலும் கனவுலகின் செயற்பாடுதான். மேற் கூறிய தெளிவான கனவுகளின் போது வரலாம். ஆனால் மன அழுத்தம், மனச்சோர்வு, நித்திரைக் குறைபாடு போன்ற பிரச்சனைகளிலும்; ஏற்படலாம். கடுமையான காய்ச்சல் மதுப் பாவனையின் பின்னரும் தூக்கத்தில் சிலர் உளறுவார்கள்.

காலைக் கனவு பலிக்கும் என்று நம்புவோர் இன்னமும் பலர் எம்மிடையே இருக்கிறார்கள்.

787630-bigthumbnail

காலைக் கனவுகள் முற்கூறிய தெளிவான தூக்கத்தில் தோன்றுவதாலாயே நினைவில் நிற்கிறது. ஆனால் அது பலிக்கும் என நம்புவது அர்த்தமற்ற நம்பிக்கையே.

எனது ஹாய் நலமா புளக்கில் (27.09.2014) வெளியான கட்டுரை

எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »

எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான்.
 Palaya Vethak kovil_0001_NEW
ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம். எமது மூதாதையர்கள் பதித்த தடங்கள். எமது பிரதேச முன்னோடிக் குடிகளின் வாழ்கையை அவர்களது பிரச்சனைகளை பேசுகிறது. இதனால் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது.
மிகக் குறைந்தளவு சரித்திரத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பத்தன்மை வாய்ந்த புனைவைப் படைத்துத் தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் அச்சுவேலி தோப்பு அருள்நந்தி பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகிறார் என்பது குறிப்படத்தக்கது.
நாவல் நம்பகத்தன்மையாக இருப்பதற்குக் காரணம் அந்த பகுதி பற்றிய புவியியல், பண்பாட்டு அம்சங்கள் பற்றிய கதாசிரியரின் நேரடி அனுபவங்களாகும் அத்துடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஊடாகப் பெற்ற வாய்மொழித் தகவல்களும் கைகொடுத்துள்தைக் காண முடிகிறது.
அரசமரத்துக் கோயில், மரத்தின் கீழ் கற்சிலை, உரைகல், குடுவையில் திருநீறு, அரசமிலையால் தீர்த்தம் வழங்கல் போன்ற தகவல்கள் அந்த வாழ்வைப் படம் பிடிக்கிறன. அதே போல பனம் மரத்திலிருந்து கள் இறக்கல், பாளைக் கத்தி, சுரக் குடவையில் கள்ளு, அதை அருந்துவதற்கு வடலி ஓலையில் பிளா போன்ற சித்திரிப்புகள் சிறப்பாக மண்ணின் மறைந்த வாழ்வை நாவலில் அழகாக காட்டுகின்றன.
இருந்தபோதும் 1600 ஆண்டுகளின் போது அல்வாய் வடக்கு வியாபாரிமூலை வீரபத்திரர் ஆலயத்தில் பிராமண ஐயர்கள் இருந்தார்கள் என்ற தகவலில் ஐயம் இருக்கிறது.
நாவலை படித்துச் செல்லும்போது, அது நிகழ் சரித்திரத்தின் வாழ்வியல் பிரதி பிம்பம் என்றதான உணர்வை ஏற்படுத்துகிறது. அந்நியர் ஆட்சி, வேற்றுப் படைகளின் அட்டகாசம், இடப் பெயர்வு போன்றவை நாம் அனுபவித்து உணர்ந்தவை. எமது மூதாதையருக்கும் அதே விதமான அனுபவங்கள் கிட்டின என்பது கவலையைத் தந்தாலும் அவர்களது அடிபணியாத தன்மை பெருமிதம் ஊட்டுகிறது.
 Palaya Vethak kovil_0002_NEW-001
பல சமூகங்களின் பிரதிநிதிகள் அந்நிய நாட்டு மனிதர் போன்ற பல்வேறுபட்ட பாத்திரங்கள் இருந்தபோதும் இன மத சாதி ரீதியான காழ்ப்புணர்வை ஆசிரியர் எந்த இடத்திலும் காட்டவில்லை. இது அவரது பக்கம் சாராத நடுநிலைப் போக்கிற்கு உதாரணமாக இருக்கிறது. மிகவும் நடுநிலையோடும் சமூகங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தாதவாறும் நல்லியக்கம் மற்றும் சௌயன்யத்தை மேம்படுத்தும் வகையான சித்திரிப்பு நாவலின் பலமாக இருக்கிறது.
பள்ளர் சுடுகாடு, கூத்தாடும் பற்றை, கற்கோட்டை(சக்கோட்டை) போன்ற இடப் பெயர்கள் வந்ததற்கான காரணங்களை கதையோடு கதையாக நகர்த்திச் செல்கிறார்.
நானும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் சம்பவங்கள் நடக்கும் இடங்களான சக்கோட்டை, நாவலடி. போன்றவை நடமாடித் திரிந்த இடங்கள். அவற்றினை மையமாக வைத்து கதை நடக்கும் ஏனைய இடங்களையும் தெளிவாக இனங்காண முடிந்தது. பிரதேச வரைபடத்தைத் தந்தமை பாராட்டத்தக்கது.
பல்லி சொல்லுதல் ஆந்தை அலறுதல் போன்றவற்றை துர்க்குறியாகக் கொள்ளும் நம்பிக்கை அன்று இருந்ததை கதையில் அறிகிறோம். இன்றும் அந் நம்பிக்கைகள் இருப்பதால் அது பற்றி சொல்வதில் தவறில்லை. இருந்தபோதும் பல்லி சொல்லுதல் என்பதை மூடநம்பிக்கையாகக் கொள்ளாது அதற்கு வலு சேர்ப்பது போல கதையை நகர்த்துவது எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.
மாவீரர் என்ற சொல் நாவலின் சொல்லோட்டத்துடன் இசைந்து வரவில்லை.  400 வருடங்களுக்கு முன்னான சரித்திரத்தை பேசும் நாவலில் இச்சொல்லைப் பயன்படுத்தியமை நிகழ் கால வரலாற்றை ஞாபகப்படுத்துவதற்காக வலிந்து புகுத்தியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
மிக தெளிவானதும் வெளிப்படையும் ஆனது ஆசிரியரின் முன்னுரை. கதையைப் படித்து முடித்த பின்னரே வாசியுங்கள். பல சந்தேகங்களுக்கும் முடிச்சுகளும் திறவுகோல் போல அமைந்திருக்கிறது.
அட்டைப்படம் சிதைந்து கிடக்கும் பழைய வேதக்கோயிலின் புகைப்படமாகும்.
புதிய எழுத்தளார் என்ற உணர்வு ஏற்படாதவாறு தங்குதடையின்றி ஓடும் நீரோட்டம் போன்ற நடை. குழப்பத்தை ஏற்படுத்தாத சம்பவக் கோர்வைகள். ஆயினும் நடை சற்று மெருகேற இடம் உண்டு. இரண்டாம் மூன்றாம் பாகங்கள் வர இருப்பதாகத் தெரிகிறது. அவற்றில் மேலும் செப்பனிடப்படும் என நம்பலாம்.
இடம் பெயர்ந்து பின் சமாதானம் என்ற நம்பிக்கையில் பலதடவைகள் மீண்டும் ஊர் வந்தவன் என்ற ரீதியில் நாவலின் இறுதியில் முருகவாணர் சொல்லும் சுதந்திரம் பற்றிய வார்த்தைகள் மரத்தில் ஆணியாகப் பதிந்து நிற்கின்றன.
Palaya Vethak kovil_0002_NEW
மொத்தத்தில் நமது சரித்திரத்திலும் பழைய பண்பாட்டுக் கோலங்களிலும் அக்கறையுள்ளவர்கள் தப்ப விடக் கூடாத நாவல் இது. ஆசிரியர் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) அவர்களது சிறப்பான முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
எனது மறந்துபோகாத சில புளக்கில் (14.08.2014) வெளியான கட்டுரை
நூல் :- பழைய வேதக்கோயில்
நூலாசிரியர் :- கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்)
முகவரி :- ஆனந்தகானம், ஆவரங்கால், புத்தூர்
விலை :- ரூபா 300
எம்.கே.முருகானந்தன்.
0.00.0

 

Read Full Post »

மருத்துவ குறுந் தகவல்

தூக்கம் அனைவருக்கும் அவசியமானது. பச்சிளம் பாலகர் முதல் பல் விழுந்த தாத்தாக்கள் வரை எல்லோருக்குமே போதுமான தூக்கம் இல்லாவிடத்து பிரச்சனைகள் எழும் அதே போல பள்ளிக்கூடம், விளையாட்டு, ரியூசன், நண்பர்கள் கூட்டு என பொழுது பூராவும் ஓடித் திரியும் பதின்ம வயதினருக்கும் மிக மிக அவசியமாகும்.

130425_NS_SleepingInClass.jpg.CROP.rectangle3-large

போதிய தூக்கம் இல்லாதவிடத்து அவர்களுக்கு ஏற்றடக் கூடிய பாதகங்கள் எவை?

teens-sleep-pattern

 

  • மனதை ஒரு முகப்படுத்துவது சிரமமாகலாம். இதனால் பாடங்களை செவிமடுப்பது, கற்பது, முக்கிய விடயங்களையும் பாடங்களையும் நினைவில் நிறுத்துவது, சிக்கல்களைத் தீர்ப்பது போன்றவை சிரமமாகலாம்.
  • முறையற்றதும் அடாத்தாததுமான செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடலாம்.
  • ஆரோக்கியமற்ற உணவு முறைகளை கடைப்பிடிப்பதும் அதனால் எடை அதிகரித்து உடல் குண்டாகலாம்.
  • அடிக்கடி கோப்பி குடிப்பதில் ஆரம்பித்து புகைத்தல், மதுபானம் போதைப் பழக்கங்கள் என தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்கள் அதிகம்.
  • தூக்கத் தியக்கத்தால் உபகரணங்களை தவறாகக் கையாள்வது, வாகனம் ஓட்டுவதில் பிரச்சனை போன்றவை ஏற்படலாம்.
  • முகப்பருக்கள் தோன்றுவது அதிகமாகலாம்.

5097724_f520

 

பதின்ம வயதினருக்கு பொதுவாக 9 மணிநேரத் தூக்கம் வேண்டும் என தூக்கம் தொடர்பான அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆகக் குறைந்தது 8 ½ நேரத் தூக்கமாவது வேண்டும். ஆயினும் பல பிள்ளைகளுக்கு இது கிடைப்பதில்லை.

sleep_dream_REM_circadian_pie_chart

எமது உடலின் உள்க் கடிகாரம் எனப்படும் circadian rhythms யின்படி குழந்தைகள் பொதுவாக இரவு 8-9 மணிக்கு தூங்கச் செல்வார்கள். ஆயினும் பதின்ம வயதில் தூக்கம் வருவதற்கு இரவு 11 மணி செல்லலாம் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். அதன் பின் 8-9 மணி நேர நிம்மதியான தூக்கம் அவர்களுக்குக் கிடைக்கச் வழி செய்யுங்கள்.

11 -12 மணி படி படி என நச்சரித்து மீண்டும் 4 மணிக்கு எழுப்பி ‘காலையில் படித்தால்தான் நினைவிருக்கும’; என்று சொல்லாதீர்கள். மண்டை ஓட்டிற்குள் எதுவும் மிஞ்சாது. பூச்சியம்தான் பரீட்சையில் கிட்டும்.

போதுமான தூக்கத்தைக் கொடுங்கள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

 

0.0.0.0.0.0

 

Read Full Post »