Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2018

முதுமையில் நொய்ம்மை (பலவீனம் இயலாமை)

‘பொறு பொறு. நான் எழும்பிறன். நீ பிடியாதை. என்னை சும்மா விடு’

என்னுடனான மருத்துவ ஆலோசனையை முடித்துக் கொண்டு வெளியே செல்வதற்காக கதிரையில் இருந்து எழ முற்பட்ட போது அவரது பேரன் உதவ முன் வந்தார். அப்போதுதான் அவர் அவ்வாறு சொன்னார்.

அவரது வயது 85 தான்.

இந்த வயதிலும் அவரால் மற்றவர் உதவியின்றி கதிரையிலிருந்து எழுந்திருக்கவும் நடக்கவும் முடிகிறது.

மாறாக அதே நாளிலில் என்னிடம் வந்திருந்த மற்றொரு பெண்மணியை அவளது மகன் கைபிடித்து அணைத்து நடத்திக் கொண்டு வந்திருந்தார். உட்காருவதற்கும் எழுந்திருப்பதற்கும் அவளால் முடியவில்லை. முழுக்க முழுக்க மகனிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. இத்தனைக்கும் அவளது வயது 62 மட்டுமே.

முதுமையில் இயலாமை ஏற்படுவது நாம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றுதான். அதே நேரம் முதுமை என்பதை வருடங்களால் மட்டும் கணிக்க முடியாது. அதனால்தான் 85 வயதில் அவரால் சுயமாக இயங்கவும், 65 வயதில் அவள் மற்றவர்களில் தங்கியிருக்கவும் நேர்கிறது.

இருந்த போதும் இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது. 85 வயதில் பெண் திடகாத்திரமாகவும் 65 வயதில் ஆண் சோர்ந்து கிடக்கவும் நேரலாம்.

அதே நேரம் வயது காரணமில்லை என்பதையும் முற் கூறிய உதாரணத்திலிருந்து புரிந்து கொள்ள முடியும்

வயது என்பது வாழ்கின்ற காலத்தை வருடங்களில் கணிக்கிற ஒரு முறை மட்டுமே. ஆனால் முதுமையும் நொய்மைமையும் வயதினால் மட்டும் ஏற்படுகின்றவை அல்ல.

முதுமையில் ஏற்படும் அத்தகைய தளர்சியை, ஒரு நோய்க் குறியாக இப்பொழுது மருத்துவத்தில் அடையாளம் காண்கிறார்கள். முதுமையில் ஏற்படும் இத் தளர்ச்சியை பலவீனம், இயலாமை, நொய்ம்மை என பல்வேறு பதங்களால் அழைக்க முடியும் ஆங்கிலத்தில் குசயடைவல என்கிறார்கள்.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நொய்ம்மை அடைந்துள்ளார் என்பதை எவராலும் சொல்ல முடியும். ஒருவர் எவ்வாறு நடந்து வருகிறார். திடமாக நடக்கிறாரா. மெதுவாக அடியெடுத்து வருகிறாரா, தள்ளாட்டம் இருக்கறதா. மிக மெதுவாக நடக்கிறாரா, கத்pரையில் எவ்வாறு இருக்கிறார், இருக்கவும் எழுந்திருக்கவும் சிரமம் படுகிறாரா. பேச்சு எவ்வாறு இருக்கிறது போன்ற பலவற்றை வைத்து எம்தை அறியாமலே ஒருவரது நிலமையை கணித்துக் கொள்கிறோம்.

ஆயினும் மருத்துவத்தில் அவ்வாறு எழுந்தமாட்டில் சொல்ல முடியாது. சில சுட்டிகளை வைத்தே கணித்தறிந்து தெளிவாகச் சொல்ல முடியும்.

கைகளால் ஒன்றைப் பற்றும் போது உள்ள உறுதித்தன்மை தளர்தல், எல்லா விதச் செயற்பாடுகளிலும் ஆற்றல் குறைதல், நடையின் வேகம் குறைந்து போதல், உடற் செயற்பாடுகள் குறைந்து போதல், காரணமின்றி எடை குறைதல் ஆகியவற்றை நொய்மைக்கான சுட்டிகளாகக் குறிப்பிடலாம்.

நொய்ம்மையால் பாதிக்கபட்டவர்களது கை கால் அசைவியக்கம் விரைவானதாக இருக்காது. மிக மெதுவாகவே கை கால்களை அசைக்கவும் செயற்படுத்தவும் முடியும். அனிச்சையான செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே இயங்கும்.

உதாரணமாக ஒரு சிறு கல் தடக்கினால் கூட அவரால் தன்னைச் சமநிலைப்படுத்த முடியாது போகலாம். ஏதிர்பாராமல விழுந்து தலையையோ இடுப்பு எலும்பையோ உடைத்து விடக் கூடும். முழங்கால் வலி அல்லது கணுக்கால் வலி போன்ற மூட்டு நோய்கள் இல்லாமலே இந்த நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு உடல் உறுதி குறைவது மட்டுமின்றி அவர்களால் துன்பத்தை பொறுக்க முடியாத மனநிலையும் ஏற்படுகிறது.

இவை காரணமாக அவர்களால் தன்னிச்சையாக இயங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை விரைவில் ஏற்படுகிறது. இதன் காரணமாக குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சுமையாக மாறிவிடுகிறார்கள்.

மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவெனில் அவர்களது ஆயுற் காலத்தையும் நொய்ம்மை குறைவடையச் செய்வதாகும்.

நொய்ம்மைக்கு வயது காரணமல்ல என ஏற்கனவே பார்த்தோம். அவ்வாறெனில் இந்த நொய்ம்மை ஏற்படுவதற்கு காரணங்கள் எவை. அவற்றை தடுப்பது அல்லது எதிர்கொள்ளக் கூடிய வழி வகைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

மரபியல் காரணங்கள், உடல் உழைப்பற்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை நடைமுறைகள், நீரிழிவு மூட்டுவாதம் போன்ற வேறு நோய்களின் தாக்கம் இருப்பது, சூழல் போன்றவை இவ்வாறு தளர்ச்சி அடைவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எங்கள் உடலில் நோய்களுக்கு எதிராகப் போராடும் அமைப்பு (Immune system) இருக்கிறது. எந்நேரமும் செயற்பட்டுக் கொண்டே இருந்து எமது உடலில் கிருமிகள் தொற்றுவதைத் தடுக்க முயல்கிறது. அவ்வாறு செயற்படும் போது இருதயம், தசைகள், எலும்பு போன்ற பல்வேறு உடற்தொகுதிகளிலும் அழற்சியும் வீக்கமும் ஏற்பட்டு அவை நாளடைவில் நொய்ம்மையாக மாறக் கூடும்.

மற்றொரு காரணம் வயசாகும் போது எமது தசைத் தொகுதியானது நலிவடைவதாகும். 18 வயதில் இருந்ததுபோல வயசாகும் போது தோள் மூட்டு, புஜங்கள், தொடை போன்றவற்றில் உள்ள தசைகள் உறுதியாக இருப்பதில்லை. நலிவடைந்து அளவில் குறைந்து தொய்ந்து விடுகின்றன. இதனால்தான் பல முதியவர்கள் மிகவும் மெலிவடைந்த தோற்றத்தைக் கொண்டு இருக்கிறார்கள். தசைகளின் அளவு குறைவடைவதால் அங்கங்களின் செயற்பாடுகள் தளர்ந்துவிடுகின்றன.

மற்றொரு முக்கிய காரணம் முதுமையடையும்போது பாலியல் ஹோர்மோன்களின் அளவு உடலில் குறைந்து போவதாகும். பெண்களில் ஈஸ்ரோஜனின் அளவும் ஆண்களில் டெஸ்டஸ்டரோனின் அளவும் வயதாகும் போகும் போது திடீரெனக் குறைகின்றன. இதுவும் உடல் நலிவடைவதற்கு மற்றொரு காரணமாகும்.

நொய்ம்மைக்கு மருத்துவ ரீதியாக செய்யக் கூடியவை எவை.

நொய்ம்மை ஏற்படுவதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து அது மோசமடையாமல் தடுக்கலாம்.

உதாரணமாக தசைத் தொகுதியானது நலிவடையத் தொடங்கியிருந்தால் அதைத் தடுப்பதற்கான சுலபமான சில பயிற்சிகளை செய்வது நன்மை பயக்கும். தசைகளை நீட்டி மடக்கும் சிறிய சிறிய பயிற்சிகளைச் செய்வதன் மூலம் தசைகளை வலுப்படுத்தலாம்.

எலும்புகள் பலவீனம் அடைந்திருந்தால் அவற்றைத் தடுப்பதற்கான விற்றமின் டி, கல்சியம் போன்ற மருந்துகள் உதவக் கூடும். அத்துடன் மேற் கூறியவாறு பயிற்சிகள் செய்வதும் அவசியமாகும். ரூமட்ரொயிட் ஆத்திரைடிஸ் போன்ற மூட்டு வாத நோய்கள் இருந்தால் அவற்றிக்கான சிகிச்சைகளை சரியான முறையில் தொடர வேண்டும்.

இவற்றைத் தவிர நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இரத்த சோகை, இருதய நோய்கள், சுவாச நோய்கள் போன்றவையும் நொய்ம்மைக்கு காரணமாகலாம். சில சாதாரண பரிசோதனைகள் மூலம் அவற்றைக் கண்டறிய முடியும். அவற்றிற்கான சிகிச்சைகளை உரிய மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் ஒழுங்காக செய்ய வேண்டும்.

இருந்த போதும் பல நோயாளிகளை அவர்கள் தீவிரமான நொய்ம்மை நிலைக்கு சென்ற பின்னரே காண முடிகிறது. அந்த நிலைக்கு சென்றவர்களுக்கு சடுதியான ஆபத்துகள் ஏற்படாமல் காப்பதே முக்கியமானது. முக்கியமாக அவர்கள் விழுந்து விடுவதைத் தடுக்க வேண்டும்.

‘முடியாமல் கிடக்கிற இவர் பேசாமல் கிடவாமல் அங்கினை இங்கினை தட்டுத் தடுமாறி நடந்து திரிஞ்சு விழுகிறார். சும்மா கிடவுங்கோ என்றால் கேக்கிறாரே’ என்பதுதான் பல பிள்ளைகளின் குற்றச் சாட்டாக இருக்கிறது.

பேசாமல் கிடந்தால் நொய்ம்மை இன்னும் தீவிரமடையவே செய்யும். செயற்பட்டுக் கொண்டே இருப்பதுதான் உடலை நலிவடையாமல் காப்பாற்றும். நடமாடுவதும் மற்றவர்களுடன் ஊடாடுவதும் அவர்களது மன மற்றும் உடல் நிலைகள் மேலும் மோசமடையமல் தடுத்து உற்சாகமாக இயங்க வைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே அவர்கள் விழாமல் நடப்பதற்கு உதவியான உபகரணங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். கைத் தடிகள், வோக்கேர்ஸ் போன்றவை நிறையவே உதவும்.

இவை எல்லாவற்றையும் விட வருமுன் காப்பதே சிறப்பாகதாகும். நொட்டு நொறுக்கு உணவுகளைத் தவிர்த்து போசாக்கான உணவுகளை உண்பதும், நாளாந்தம் உடற் பயிற்சிகளில் ஈடுபடுவதும் பெரும்பாலான நோய்களிலிருந்து எம்மைக் காப்பதுடன் முதுமையில் நொய்ம்மை ஆட்படாமல் ஆரோக்கியமாக இயங்கவும் வழி செய்யும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

M.B.B.S (Cey); D.F.M (Col), F.C.G.P (Col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

கவிதா, பளை

பதில்: மார்பகப் புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று ஒன்றைச் சுட்டிக் காட்டுவது என்பது இயலாத காரியம். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டுமல்ல ஏனைய புற்று நோய்களுக்கும் அவ்வாறுதான்.

ஆனால் அந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் எனப் பலவற்றை சொல்லலாம். இத்தகைய ஆபத்தான காரணிகள் உள்ள எல்லோருக்கும் புற்றுநோய் எதிர்காலத்தில் நிச்சயம் புற்றுநோய் வரும் என அர்த்தப்படுத்தக் கூடாது. வுரக் கூடிய ஆபத்து அல்லது சாத்தியம் அதிகம் என்றே கொள்ள வேண்டும்.

முக்கிய காரணியாக பரம்பரை அம்சத்தைக் கூறலாம். பரம்பரையில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால் அவர்களது வழித்தோன்றல்களுக்கு வரக் கூடிய சாத்தியம் அதிகம்.

அத்தகையவர்களுக்கு பரம்பரை அலகு பரிசோதனை மூலம் இது வரக் கூடிய ஆபத்து இருக்கிறதா என்பதை இப்பொழுது கண்டறிய முடியும்.

மார்பகத்தில் புற்றுநோயல்லாத வேறு சில வகை கட்டிகள் ஏற்கனவே வந்தவர்களுக்கும் எதிர்கலத்தில் மார்பகப் புற்றுநோய்க்கான சாத்தியம் அதிகம்.

மிகக் குறைந்த வயதில் (12க்கு முதல்) பெரியவளானவர்களுக்கும், 55 வயதாகியும் மாதவிடாய் முற்றாக நிற்காதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

குழந்தைகள் பெறாத பெண்களுக்கும் முதற் குழந்தையை 30 வயதிற்கு பின்னரே பெற்றவர்களுக்கும் இதற்கான ஆபத்து அதிகமாகும்.

அதீத எடை உள்ள பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரக் கூடிய ஆபத்து அதிகம்.

அதேபோல வேறு நோய்களுக்காக மார்பில் ரேடியம் கதிர்சிகிச்சை செய்தவர்களுக்கும் ஆபத்து ஆதிகம் எனப்படுகிறது.

கடந்த பத்து வருட காலத்திற்குள் குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உபயோகித்தவர்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் சற்று அதிகமாகும்.

மாறாக குழந்தைக்கு ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள் வரை பாலூட்டிய தாய்மாருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் குறைவாகும். தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் அவ்வாறே குறைவாகும்.

மமோகிராம் பரிசோதனையின் போது மார்பக திசுக்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதாக காணப்பட்டவர்களுக்கும் ஆபத்து ஆதிகம் எனப்படுகிறது.

எனவே இத்தகைய சாத்தியக் கூறுகள் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன? ஒழுங்கான முறையில் சுய மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டும்.

சிறிய சந்தேகம் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

நூலும் இலக்கிய ஆளுமையும் – ‘நிழல்கள்’ அ.யேசுராசா
எம்.கே.முருகானந்தன்

41385865_2337750349573977_4098471305257418752_n

ஈழத்தின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான யேசுராசாவின் புதிய நூலான நிழல்கள் வெளியாகியுள்ளது.
அது அவரின் தற்போதைய முழு ஆர்வத்தையும் வேண்டி நிற்கும் துறையான சினிமா பற்றிய நூல் என்பது கவனத்திற்கு உரியது. சினிமாவுடன் நீண்டகாலம் ஈடுபாடுடையவர் யேசுராசா. எனவே அனுபவத்துடன் கூடிய நூல் என்பதால் நல்ல சினிமாவை நாடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

யேசுராசா திரைப்படங்கள் பார்க்கும் வேகமும் அவை பற்றிய நுணுக்கங்களை நினைவில் நிறைத்து வைத்திருப்பதும் அதிசயப்பட வைக்கும். அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அற்புதமானவை. தினமும் 2-3 திரைப்படங்களை அவரால் பாரக்க முடிகிறது, அவை பற்றிய தேடல்களையும் தொடர்கிறார். இணைய வசதியையும் Youtube பையும் உச்ச அளவில் பயன்படுத்தல்.
எமது வயதொத்த பலருக்கு அந்நியமாக இருக்கும் நேரத்தில் இவர் அதை பயனுறுமுறையில் பயன்படுத்துவது மட்டுமின்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் மகிழ்ச்சியானது.

யாழ் நூலக வாசகர் வட்டம் ஒழுங்கு செய்யும் மாதாந்த திரைப்படங்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ தெரியாது. மிக அற்புதமான திரைப்படங்கள் மாதாந்தம் திரையிடப்படுகின்றன. தமிழ் ஆங்கில படங்கள் மட்டுமின்றி
ரஸ்ய இத்தாலிய பிரெசூ;சு சீன போன்ற பல்வேறு மொழிப்படங்களையும் பார்க்கக் கூடிய வாய்ப்பைப் பெறுகிறோம். அவற்றை தேர்ந்தெடுப்பதுடன் அவை பற்றி அவர் கொடுக்கும் சிறிய அறிமுகமும் எங்களுக்கு அந்த
திரைப்படம் பற்றிய புதிய தரிசனங்களைக் கொடுககிறது. ஆர்வத்தோடு அணுவணுவாக இரசித்து பார்க்க வைக்கிறது. நானும் நிறையவே பயன்பெற்றிருக்கிறேன்.

பல பழைய திரைப்படங்கள் பற்றிய தகவல்கள்,  காட்சிப்படுத்தல் நுணுக்கங்கள்,  கூர்மையான வசன அமைப்பு, நெறியாளர்கள்,  அவர்களது ஏனைய படங்கள் போன்ற நிறைய தகவல்களை இந்த திரைப்பட வட்ட படங்கள் மூலமும் யேசுராசாவின் உரைகள் மூலம் பெற்றிருக்கிறேன்.

அங்கு காட்டப்பட்ட சில படங்கள் மற்றும் அவர் பார்த்த ஏனைய திரைப்படங்கள் பற்றிய 10 கட்டுரைகள் இந்த நூலை அலங்கரிக்கின்றன. இவற்றில் பல கட்டுரைகள் ஜீவநதியில் வெளிவந்த போது நான் ஏற்கனவே படித்ததும் உண்டு.

யாழ் மண்ணில் கலை இலக்கிய சினிமா ஈடுபாடுள்ள இளைஞர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை அந்த இலவச திரைக் காட்சிகளில் காணவும் கிடைப்பதில்லை. குறும்பட தயாரிப்பில் ஈடுபடும் பலருக்கும் கூட இத்திரைப்படங்கள் நிச்சயம் உதவும். ஆனால் அவர்கள் எவரும் இதனைப் பயன்படுத்துவதில்லை என்பது கவலையே..

திரைப்படம் பார்க்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தேர்ந்தெடுத்த படங்களை தேடிப் பார்ப்பவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். ஆனால் தாம் பார்ப்பது மாத்திரமின்றி மற்றவர்களையும் இரசனையோடு பார்க்க வைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ஓரிருவர்தான். அவர்களில் முக்கியமானவர் யேசுராசா. அவற்றை அவருடனான தனிப்படஉரையாடல்கள் மூலம்
பெறமுடிகிறது. பரந்த மட்டத்தில் திரைப்படவட்டங்கள் ஊடான இலவச திரைப்பட காட்சிகள்.மூலமும்,  அவரது கட்டுரைகள் ஊடாகவும்
பயன்பெற முடிகிறது.

எனக்கும் எல்லோரையும் போலவே திரைப்பட ஆவல் இருக்கிறது. சாதாரண பொழுதுபோக்கு திரைப்படங்கள் முதல் – சிவாஜி. கமல். மம்முட்டி எனத் தொடர்கிறது. கலைப்படங்கள்,  ஆங்கில,  சிங்கள மலையாளப் படங்கள் செம்மீன்,  சுயம்வரம், எலிப்பத்தாயம் என ஆரம்பித்தது. ஈழத்து தமிழ் திரைப்படங்களையும் தேடிப் பார்ப்பதுண்டு.

நல்ல திரைப்படங்கள் பற்றிய உணர்வுகளை என்னில் எழுப்பியவர்களில் நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் மற்றும் யேசுராசா,  கேதாரநாதன் ஆகியோரும் அடங்குவர். கொழுப்பில் பல சர்வதேச படக் காட்சிகளை காணும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் திரைப்பட கூட்டுத்தாபன திரையில்,  BMICH ல் பார்த்திருக்கிறேன். BMICH ல் படம் பார்த்துவிட்டு ஜேசுராசா கேதாரநாதன் போன்றவர்களுடன் அவை பற்றிப் பேசியபடி நடந்து வந்த ஞாபகங்கள் பசுமையாக இருக்கின்றன.

அ. யேசுராசா (1946ரூபவ் டிசம்பர் 30ரூபவ் குருநகர்ரூபவ் யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை ஆவார். பல்துறை ஆற்றல் மிக்கவர். கவிஞர்ரூபவ் சிறுகதையாசிரியர்ரூபவ் விமர்சகர்,  மொழிபெயர்ப்பு,  பத்தி எழுத்து இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் திரைப்பட ஆர்வலர் என பல தளங்களில் இயங்கிவருகிறார்.

1968 முதல் இலக்கிய ஈடுபாடு கொண்டு இயங்கத் தொடங்கிய அவர் கடந்த 50 வருடங்களாக தீவிரமாக இயங்கிவருகின்றமை குறிப்படத்தக்கது. வருகிறார். ஆனால் 80களின் நடுக் கூறுகளிலிருந்தான் அவருடனான அறிமுகமும் நட்பும் எனக்கு ஏற்பட்டது.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இவர் இலக்கிய ஈடுபாடு கொண்டு இயங்கத் தொடங்கிய அந்தக் காலத்திலேயே எனக்கும் நல்ல புத்தகங்கங்கள் சஞ்சிகைகள் நல்ல சினிமா போன்றவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தன. ஆயினும் அந்நேரத்தில் கொழும்பில் இருந்த யேசுராசா,  குப்பிளான் போன்றவர்கள் இணைந்து இயங்கிய கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம் பற்றி அறிந்திருக்கவோ அவர்கள் எவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. காரணம் மருத்துவ மாணவன் என்ற கூண்டுக்குள் அகப்பட்டிருந்ததால் வாசிப்புக்கு அப்பால் இலக்கிய சந்திப்புகள் கூட்டங்கள் எனக்கு எட்டாதவையாகவே இருந்தன.
80 யாழ் வந்த பின்னர்தான் இலக்கிய அறிமுகங்கள் ஏற்பட்டன. அலை வாசகன் ஆனேன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒரு புதிய வாசல் திறந்திருப்பதாக உணர்ந்தேன். அலையையும் யேசுராசாவையும் அறிமுகப்படுத்தி வைத்தது நண்பர் குலசிங்கம் ஆவார். எனது முதல் நூல்களில் ஒன்றான ‘தாயாகப் போகும் உங்களுக்கு’ பதிப்பிக்கப்பட்டது நியூ ஈரா அச்சகத்தில். அதன் வடிவமைப்பு பற்றிய பல ஆலோசனைகள் எனக்கு யேசுராசா தான் வழங்கினார்.அந்த நேரத்தில் திசை அங்கிருந்துதான் வெளியாகியது. அதன் துணை ஆசிரியராக யேசுராசா பணியாற்றிக் கொண்டிருந்தமை நினைவுக்கு
வருகிறது.

41517400_2337764502905895_2716414759992819712_n

தொழில் ரீதியாக ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரியான இவர் காலத்திற்கு முன்பே ஓய்வு பெற்றிருக்கிருந்தார். ஆதன் சூட்சுமம் இப்பொழுதுதான் புரிகிறது. முழுநேர இலக்கியச் செயற்பாட்டளராக வாழ்கிறார். இவ்வாறு தனக்கு பிடித்த வாழ்வைத் தொடரும் வாய்ப்பு பலருக்கும் இருந்தாலும் வேலை வேலை என ஓடித் திரிகிறார்கள். நானும் அவர்களில் ஒருவன். எழுபது வயதாகியும் எனது தொழிலைக் கைவிட முடியவில்லை. எனக்கு ஈடுபாடுள்ள
கலைத் துறைகளில் ஈடுபட முடியவில்லையே என்ற ஏக்கம் நிறைவேறாத கனவாக மாயாஜாலம் காட்டுகிறது.
யாழ் மண் ஏராளமான இலக்கியவாதிகளின் களமாக இருந்து வருகிறது. இவர்களிடேயே யேசுராசா தனித்தன்மை கொண்டவராக
மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவராக இருப்பதாக நான் உணர்கிறேன். பொதுவாக இலக்கிய உலகில் நிலவும் கருத்தும் அதுதான். இலக்கியத்தில் செழுமையும் தரமும் பேணப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர். படைப்புகள் அனுபவ வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் முகத்திற்காக பாராட்டுபவர் அல்ல. நல்லனவற்றை நல்லன எனவும் தரமற்றவற்றை தரமற்றவை எனவும் முகத்துக்கு நேரே
சொல்லக் கூடியவர்.

இலக்கியத்துறையில் அவரது முழுமையான பங்களிப்புடன் பல சஞ்சிகைகள் வெளியாகியுள்ளன. ‘அலை’ ஆசிரியராக அவரது பங்களிப்பு  ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இலக்கியத்தில் தரம் பேணப்படுவதற்கு அலை முக்கிய முன்னுதாரணமாகும். புpன்பு ‘கவிதை’ இதழ், தெரிதல் சஞ்சிகை ஆகியனவும் அவரால் வெளியிடப்பட்டன. ‘திசை’ யின்
துணை ஆசிரியராக பணியாற்றியமையும் முக்கிய பங்களிப்பாகும்.

இதுவரை நிழல்கள் உட்பட 8 நூல்களை வெளியிடுள்ளார்.
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் சிறுகதைத் தொகுதி – 1975ம் ஆண்டு இலங்கை சாஹித்திய மண்டலத்தின் சிறுகதைக்கான
பரிசினைப் பெற்றது.
அறியப்படாதவர்கள் நினைவாக கவிதைத் தொகுப்பு.
பனிமழை மொழியாக்க கவிதை நூல்.
தூவானம் பத்தி எழுத்து தொகுப்பு 2001
பதிவுகள் பத்தி எழுத்து தொகுப்பு 2003
குறிப்பேட்டிலிருந்து இலக்கிய கட்டுரைகள் 2007
நினைவுக் குறிப்புகள் கட்டுரைகள் 2016
திரையும் அரங்கும் கலைவெளயில் ஒரு பயணம் 2013

இதைத் தவிர பல முக்கிய தொகுப்பு நூல்கள் இவரது இலக்கிய பங்களிப்புக்கு சான்றாக அமைந்திருக்கின்றன. இவற்றின் தொகுப்பாசிரியர்களில் முக்கிய பங்காளியாக இருந்திருக்கிறார்.

‘பதினொரு ரூடவ்ழத்துக் கவிஞர்கள்’, ‘மரணத்துள் வாழ்வோம’, ‘காலம் எழுதிய வரிகள்’ அகிய கவிதைத் தொகுப்புகள்
தேடலும் படைப்புலகமும் ஓவியர் மார்க்கு பற்றிய நூல்

இவ்வாறு பல்வேறு அறுவடைகளையும் பங்களிப்புகளையும் சினிமா கலை இலக்கிய துறையில் ஆற்றிய யேசுராசாவின் புதிய நூல்தான் நிழல்கள் 104 பக்கங்கள் நீளும் இந்த நூலில் 10 சினிமா கட்டுரைகள் உள்ளங்கியுள்ளன.

முதலாவது கட்டுரையாக அமைவது 2015 ம் ஆண்டு கொழும்பில் நடந்த சிங்கள் தமிழ் குறுப்படவிழா விழா பற்றியும் அங்கு காட்டப்பட்ட முக்கிய குறுப்படங்கள் பற்றியதுமான கட்டுரை.

எல்டர் றியஸனோவ் இயக்கிய ரஸ்ய திரைப்படமான ‘இரக்கமற்ற ஒரு காதல் கதை’,

ஜிறி வொயிஸ் இயக்கிய ‘ரோமியோ ஜீலியற் மற்றும் இருள்’, என்ற செக்கோஸ்லோவாக்கிய திரைப்படம்,

‘சொராயவுக்குக் கல்லெறிதல்’ சைரஸ் நொவ்ரஸ்தெஹ் கின் ஈரானியப்படம்,

லூசினோ விஸ்கொன்ரியின் ‘நிலம் நடுங்குகவிறது’ இத்தாலியப்படம்.

கோவிந் நிஹாலினியின் ‘விருந்து’ ஹிந்தி திரைப்படம்,

அந்த்ரேஜ் வாஜ்தா வின் ‘ஒரு தலைமுறை’ போலந்து திரைப்படம்,

எரான் ரிக்லிஸ் சின் ‘எலுமிச்சை மரம்’ இஸ்ரேலிய திரைப்படம்,

பேர்ன்ஹாட் விக்கியின் ‘பாலம்’ ஜேர்மனிய திரைப்படம்,

அம்ஷன்குமாரின் ‘ஒருத்தி’ தமிழ் திரைப்படம் ஆகியன அடங்குகின்றன.

ஒவ்வொரு கட்டுரையும் நல்ல சினிமா பார்த்த உணர்வைக் கொடுக்கிறது. மேலோட்டமான கதையோட்டம் முக்கிய உரையாடல்கள், காட்சி அமைப்பு, கமரா கோணங்கள்ரூபவ் இசை என யாவற்றையும் தொட்டுச் செல்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் திரைப்படத்தை பார்த்தது போன்ற உணர்வைக் கொடுப்பதுடன், நாங்களும் நேரடியாகப் பார்த்து இரசிக்க வேண்டும் என்ற ஆசையையும் தூண்டுகின்றன. பல படங்களை நானும் பார்க்க முடிந்ததல் இரசித்து வாசிக்க முடிந்தது.

இதில் பல கட்ரைகளை நூல் உருப்பெறு முன்னரே சஞ்சிகைகளில் படித்ததை ஏற்கனவே குறிபிட்டிருந்தேன். படிக்கப்படிக்க தெவிடாத கட்டுகைள், ஊறித் திளைக்க வைக்கின்றன. திரைப்பட ரசனையும் ஆர்வமும் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

அவரது தேடல்களும் படைப்பு மற்றும் பதிப்பாக்க முயற்சிகளும் தொடர வாழ்த்துகிறேன்

நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்

0.00.0

Read Full Post »

நீண்ட தூர பஸ் பயணங்களின்போது கால்கள் வீங்கிவிடுகின்றன? இது எதனால்?
 வைஷ்ணவி கிளிநொச்சி
 
பதில்:- நீண்ட தூர பஸ் பிரயாணங்களின் போது கால்கள் வீங்கிவிடுகின்றன என்று சொன்னீர்கள். எனவே இரண்டு கால்களும் வீங்குகின்றன என்று அர்த்தமாகிறது. ஏனெனில் ஒரு கால் மட்டும் வீங்கினால் அதற்கான காரணங்களும் சிகிச்சையும் வேறுபடும்.
 
பொதுவாக பிரயாணங்களின் பின்னரான கால்வீக்கம் ஆபத்தானதல்ல. பஸ்சில் பிரயாணம் செல்லும் உங்களை விட அதிக நேரம் விமானப் பயணம் செய்து வருபவர்களின் கால்கள் மேலும் அதிகமாக வீங்குவதுண்டு.
 
பிரயாணத்தின் போதான இத்தகைய கால் வீக்கங்களுக்கு முக்கிய காரணம் கால்களை தரையில் வைத்தபடி நீண்ட நேரம் ஒரே இடத்தில் செயலற்று உட்கார்ந்து இருப்பதுதான். இவ்வாறு இருக்கும்போது கால்களுக்கு செல்லும் குருதியில் ஒரு பகுதி மேலே செல்லாமல் நாளங்களில் தேங்கி நிற்கும். இதனால் குருதியில் உள்ள நீரின் ஒரு பகுதி நாளத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள திசுக்களுக்குள் ஊடுருவும். இதுவே  கால் வீக்கத்தைக் கொண்டு வருவதற்கான காரணமாகும். 
 
பொதுவாக கணுக்காலை அண்டிய பகுதிகளில் இது வெளிப்படையகத் தெரியும். ஆனால் இது நீண்ட பிரயாணம் செய்யும் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை என்பதும் உண்மையே.
 
இரு கால்களும் வீங்குவதற்கு ஒருவர் உட்கொள்ளும் சில மாத்திரைகளும் காரணமாகலாம்.
 
நீங்கள் குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரை உபயோகிக்கிறீர்களா. அவ்வாறு உபயோகிக்கவர்களுக்கு கால் வீக்கம் வருவதற்கான சாத்தியங்கள். உண்டு. அதே போல உயர் இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் நிபிடிப்பின், அமைலோடிபின் (Nifedepine, Amlodepine)  போன்ற மாத்திரைகளுக்கும் கால் வீக்கம் வருவதுண்டு. 
 
புருபன் டைகுளோபெனிக் சோடியம், பைரொக்சிகாம் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளும் கால் வீக்கத்தைக் கொண்டுவரலாம். நீரிழிவு நோய்க்கு உபயோகிக்கும் பையோகிளிட்டசோன் மாத்திரைகளும் அவ்வாறு வீக்கத்திற்கு காரணமாகலாம். அதேபோல பிரட்டிசலோன் மாத்திரையும் காரணமாகலாம்.
 
மாத்திரைகளால் ஏற்படும் கால் வீக்கம் பிரயாணம் பண்ணினால்தான் வரும் என்றில்லை. சாதாரண நேரத்திலும் வரலாம். இருந்தபோதும் சிலருக்கு நீண்ட நேரம் பிரயாணம் செய்யும் போதுதூன் முதலில் வெளிப்படுவதுண்டு. 
 
மருந்துகள்தான் உங்கள் கால் வீக்கத்திற்கு காரணமாயின் மருத்துவருடன் கலந்தாலோசித்து வேறு மருந்துகளை மாற்ற முடியுமா என்பதை தீர்மானியுங்கள். நீங்காளாக நிறுத்த வேண்டாம்.
 
சரி பிரயாணம் போதான இந்து கால் வீக்கம் ஏற்படாமல் தடுக்க நீங்கள் என்ன பாதுகாப்பு எடுக்க முடியும்.
 
ஒரேயடியாக உட்கார்ந்திருப்பதை தவிர்த்து ஓரிரு மணித்தியாலயங்களுக்கு ஒரு தடவை எழுந்து சிறிது தூரம் நடந்துவிட்டு மீண்டும் உட்காருங்கள். இது ஆகாய விமானத்தில் சாத்தியம் ஆனால் சனம் நிறைந்த பஸ்சில் முடியாத காரியம் என்பதை அறிவேன்.. 
 
அவ்வாறெனில் நீங்கள் உட்கார்ந்தபடியே உங்கள் முழங்கால்களையும் கணுக்கால்களையும் சற்று மடித்து நீட்டி பயிற்சி கொடுத்தால் இரத்தம் தேங்கி நிற்காது.
கால்களுக்கான குருதி சுற்றோட்டம் சீரடையும்.
 
சாக்கைத் தூக்கிப் போட்டது போல ஆசனத்தில் ஒரே மாதிரி உட்கார்ந்திருக்காது உங்கள் உடல் நிலையை இடையிடையே மாற்றி உட்காருங்கள்.
 
காலுக்குமேல் கால் போட்டுக் கொண்டிருப்பதை பிரயாணத்தின் போது தவிருங்கள்.
 
இறுக்கமான ஆடைகளை அணிவதையும் நீண்ட பிரயாணத்தின் போது தவிருங்கள்.
 
கால் வீக்கத்துடன் வலி இருந்தால் அல்லது ஒரு கால் மட்டும் வீங்குகிறது எனில் மருத்துவ ஆலோசனை கட்டாயம் பெற வேண்டும்.
 
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
0.00.0

Read Full Post »

நீரிழிவு நோயாளர்கள்  sugar free  பானங்களை, உணவுகளை  உபயோகிக்கலா
அவை ஆபத்தற்றவையா?
பி.கண்ணன், ஹட்டன்
பதில்:-  sugar free  பானங்கள் என எதை குறிப்பிடுகிறீர்கள். போத்தலில் அடைத்து வரும் பானங்களைத்தானே.
மாம்பழம், விளாம்பழம், பப்பாசி, தோடம்பழம் எனப் பலவிதமான பழங்கள் பழச்சாற்று பானங்களாக போத்தலில் அடைத்து விற்பனைக்கு வருகின்றன. இவற்றில் பல சீனி சேர்ந்தவை. ஆனால் பல சீனி சேர்க்காதவை.
அவ்வாறான சீனி சேர்க்காத பழச்சாற்று பானங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானதா என்று கேட்டால் அதற்கு விரிவாக பதில் சொல்ல வேண்டும்.
சீனி என்பது சுக்ரோஸ்  (Sucrose)  என்ற வகை இனிப்பாகும். இது உடலில் சேர்ந்தவுடன் குளுக்கோசாக மாறி நீரிழிவு நோயாளிகளின் குருதி சீனி அளவை அதிகரிக்கும். ஆனால் பழங்களிலும் பழச்சாற்றிலும் உள்ளது புரக்டோஸ் (Fructose)  என்ற இனிப்பாகும். இது உடனடியாக குருதி சீனியின் அளவை அதிகரிக்காது. ஆனால் அதில் இனிப்பு சத்து இருக்கிற காரணத்தால் அது ஈரலில் சேமிக்கப்பட்டு கொழுப்பாக மாறும்.
அந்த கொழுப்பு இரண்டு வகைகளில் உடலுக்கு பாதிப்பை கொண்டு வரலாம். முக்கியமானது எடை அதிகரிப்பாகும். அளவுக்கு மீறிய எடையானது நீரிழிவை அதிகரிப்பது பிரசரை அதிகரிப்பது முழங்கால் போன்ற மூட்டுகளில்; தேய்வுகளை ஏற்படுத்துவது உட்பட பல்வேறு பாதிப்புகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம்.
இரண்டாவது பாதிப்பு குருதி கொலஸ்டரோலின் அளவை அதிகரிக்கும். முக்கியமாக ரைகிளிசரைட் என்ற வகை கொலஸ்டரோலை அதிகரிக்கும். கொலஸ்ரோல் அதிகரித்தால் இரத்த நாடிகள் அடைபடுவதால் மாரடைப்பு பக்கவாதம் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
பொதுவாக ஓரளவு பழங்களையும் அதிக செறிவில்லாத பழச்சாற்று பானங்களையும் நீரிழிவாளர்கள் உட்கொள்ளலாம். புழங்களில் பல விதமன விற்றமின்களும் கனியங்களும் நார்ப்பொருளும் இருப்பதால் அவற்றை உட்கொள்வது நல்லது. ஆனால் அளவோடு .
ஆனால் போத்தலில் அடைத்து வரும் பெரும்பாலான பழச்சாற்று பானங்களில் உள்ள நார்ச்சத்து அகற்றப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இது விரைவில் செரிமானமடைந்து விரைவில் அகத்துறிஞ்சப்படும. அத்துடன் அவற்றில் பழச்சத்து சாற்றின் செறிவு அதிகமாகும். அதாவது நீங்கள் ஒரு முறை அருந்துவது ஒரு பழத்தின் சாறாக இருக்காது. இரண்டு மூன்று பழங்களின் செறிவு அதில் இருக்கும். அவ்வாறு இருந்தால் அதில் சீனி இல்லாவிட்டால் கூட அதிக புரக்டோஸ் காரணமாக எடை அதிகரிப்புடன் கூடிய  பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே பழச்செறிவு அதிகமான பானமானால் போதியளவு நீர் சேர்த்து செறிவைக் குறைத்துக் குடிக்க வேண்டும்.
சீனி, புரக்டோஸ் போன்ற இயற்கை இனிப்புக்களை சேர்க்காமல் செயற்கை இனிப்புகளை சேர்த்து தயாரிக்கப்படும் பானங்களும் உணவுகளும்  உள்ளன.
saccharin, acesulfame, aspartame, neotame, and sucralose  போன்றவற்றை போன்ற செயற்கை இனிப்புகள் மனித பாவனைக்கு உகந்தன என அமெரிக்காவின் FDA அங்கீகரித்துள்ளது. ஆயினும் அவற்றிற்கு சில பக்கவிளைவுகள் இருப்பதாக ஆரம்ப ஆய்வுகள் சுட்டிக் காட்டின. இருந்தபோதும் அவை பாரதூரமான பாதிப்புக்கள் இல்லை. எனவே அவை சேர்ந்துள்ள உணவு களைபானங்களை அருந்துவதால் பெரிய பாதிப்புக்கள் ஏதும் ஏற்படாது.
இயற்கையாக தாவரத்திலிருந்து பெறப்படும்  stevia     என்று மற்றொரு இனிப்பு இருக்கிறது. இனிப்புக்காக இதை பானத்தில் சேர்ந்திருந்தால் பாதிப்பு ஏதும் இல்லை.
சோடா என நாம் பொதுவாகச் சொல்லும் மென்பானங்களில் சீனியின் அளவு அதிகம். இப்பொழுது எந்தளவு இனிப்பு என்பதை லேபளில் சொல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆயினும் மென்பானங்களிலும் Sugar Free இப்பொழுது இலங்கையிலும் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் stevia   என்ற இனிப்பையை சேர்த்துள்ளார்கள்.
இவ்வாறு பல விடயங்கள் இருப்பதால்  sugar free உணவுகளை, பானங்களை வாங்கும்போது அதன் லேபிளை கவனமாகப் படியுங்கள். அதில் என்ன இனிப்பு எந்தளவு கலந்திருக்கிறார்கள் என்பதை அவதானித்து வாங்குங்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
0.00.0

Read Full Post »

கேள்வி:- நான்  45 வயதான பெண். எனக்குத் தொடர்ச்சியாக வெள்ளை படுகிறது. இதனால் மிகவும் அசௌகரியமாக உள்ளது. இதற்குத் தீர்வு என்ன?
ஜெ.ஜெயலட்சுமி
மல்லாகம்

பதில்:- வெள்ளை படுவது என்பது ஒரு இயற்கையான உடலியல் செயற்பாடு. உண்மையில் அது ஒரு சுகாதாரப் பணியையும் செய்கிறது. பாலுறுப்பான யோனியின் உட்புறம் மற்றும் கருப்பை கழுத்தில் உள்ள சுரப்பிகளிலிருந்து வரும் திரவமானது அங்கிருக்கும் இறந்த கலங்களையும் கிருமிகளையும் கழுவிச் செல்லும் பணியைச் செய்கிறது.

உடலுறவு நேரத்தில் உராய்வு வலி போன்றவை ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

மாதவிடாய் சக்கரத்தின் எந்த நேரம் என்பதைப் பொறுத்து வெள்ளைபடுதலின் அளவு நிறம் மணம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதோபோல பாலூட்டும் காலங்களிலும் கர்ப்ப காலத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

மாறாக கடுமையான துர்நாற்றம், கடும் மஞ்சள் பச்சை சிகப்பு போன்ற நிறமாற்றங்கள் இருந்தால் அல்லது அங்கு எரிவு அரிப்பு போன்ற உபாதைகள் இருந்தால் அது நோய் காரணமாக இருக்கலாம். பாலியல் தொற்று நோய்களான  Chlamydia, gonorrhea  போன்றவை. அதேபோல  Tricomonas   கிருமியாலும் அவ்வாறு ஏற்படலாம்.

சிலர் தமது பாலுறுப்பை சுத்தம் செய்வதாக நினைத்து சோப், டெட்டோல், ஸ்பிரிட் போன்றவற்றால் அடிக்கடி கழுவுகின்றனர். இவை பாலுறுப்பின் கலங்களை உறுத்தி அதிக வெள்ளைபடச் செய்யலாம். நீங்கள் அவ்வாறு செய்தால் அவற்றைத் தவிர்க்கவும்.

குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உபயோகிப்பவர்களுக்கும் அதிகமாக வெள்ளைபடலாம். ஆனால் அதற்கான சாத்தியம் உங்கள் வயதில் இருக்கும் எனத் தோன்றவில்லை.

நீரிழிவு நோயும் மற்றொரு காரணமாகும். நீரிழிவு நோயாளருக்கு பங்கஸ் தொற்று காரணமாக அரிப்பும் தடிப்பான ஆடை போன்ற வெள்ளைபடுதல் ஏற்படுவதுண்டு. பங்கஸ் தொற்று இல்லாவிட்டால் கூட நீரிழிவு நோயாளரின் பாலுறுப்பில் உள்ள இயல்பான கிருமிகளில் மாற்றங்களினாலும் வெள்ளை கூடுதலாகப் படுவதுண்டு.
அன்ரிபயோடிக் மருந்துகள் மற்றும் ஸ்டிரொயிட் மருந்துகள் எதாவது உபயோகிக்கிறீர்களா. அவையும் வெள்ளைபடுதலை அதிகரிப்பதுண்டு. இதைக் கவனத்தில் எடுங்கள்.

கருப்பை கழுத்துப் புற்றுநோய் வெள்ளைபடுதலுக்கு ஒரு பாரதூரமான காரணமாகும். மருத்துவர்கள் பாலுறுப்பின் ஊடாக உபகரணங்களை செலுத்திப் பரிசோதிப்பதன் மூலமே இதைக் கண்டறிய முடியும்.

இதற்கான தீர்வு என்ன என்பதுதான் உங்கள் கேள்வியின் முக்கிய பகுதியாகும். வெள்ளை படுதலுக்கு பல காரணங்கள் இருப்பதால் மருத்துவரின் ஆலோசனையை நேரில் சென்று பெறுவதே சரியான முறையாகும்.

அதே வேளை உங்கள் பங்களிப்பாக உங்கள் பாலுறுப்பை சுத்தமாக வைத்திருங்கள். இளம் சுட்டு வெந்நீரால் கழுவலாம். கடுமையான சோப் வகைளை உபயோகிக்க வேண்டாம். வாசனை ஊட்டப்பட்ட சோப் வகைகளை தவிர்க்கவும். கீருமிநாசிகள் கலந்த சோப் வகைகளும் நல்லதல்ல.

கழுவிய பின்னர் சுத்தமான துணியினல் ஈரத்தைத் துடைத்து விடுங்கள். ஈரலிப்பாக இருப்பது பல கிருமித் தொற்றுகளைக் கொண்டுவரும்.
சுத்தப்படுத்தும்போதும் ஈரலிப்பை அகற்றும்போது முன்னிருந்து பின்புறம் நோக்கி செய்யவும். அதாவது கழுவுவது துடைப்பது போன்றவற்றை பாலுறுப்பு பக்கமிருந்து மலவாயில் பக்கம் நோக்கி செய்ய வேண்டும். மாறிச் செய்தால் மலவாயிலில் உள்ள கிருமிகள் பாலுறுப்பினுள் புகுந்து நோய்களை ஏற்படுத்தலாம்.
பருத்தித் துணிகளிலான உள்ளடைகளையே உபயோகியுங்கள். அது ஈரத்தை உறிஞ்சி ஈரலிப்பை அகற்றிவிடும். அத்துடன் மிக இறுக்கமான உள்ளாடைகளையும் தவிருங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »