Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச், 2020

வாழ்வின் நெருக்கடியான ஒரு தருணத்தின் கதை

இமையத்தின் ‘செல்லாத பணம்’

இரண்டு நாட்களாக அழுது தீர்க்க முடியாத துயரில் மூழ்கித் திணறிக் கொண்டிருந்தேன். ரேவதியின் தகப்பன் நடேசன், தாய் அமராவதி, அண்ணன் முருகன், அண்ணி அருள்மொழி இவர்களுடன் ஜிப்மர் மருத்துவமனையின் எரிகாயப் பிரிவின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு வாசலில் பசியையும் தாகத்தையும் மறந்து நின்று, அவர்கள் துயரில் பங்காளியாக இருக்க நேர்ந்தது. அவர்களது கோபமும் ஆற்றாமையும் கூட என்னையும் ஆட்கொண்டிருந்தது. கணவன் ரவியை அவர்களோடு சேர்ந்து அடித்துத் துவைக்க வேண்டும் போலிருந்தது.

220 பக்கங்களைக் கொண்ட இமையத்தின் நாவல் செல்லாத பணம். பணம் வாழ்க்கைக்கு அவசியமாக இருந்த போதும் கூட அது எல்லாத் தருணங்களிலும் நித்திய வாழ்வில் பயன்படுவதில்லை என்பதையே நாவலின் தலைப்பு சுட்டுவதாக இருந்தபோதும் அந்த நாவல் எங்களுக்கு கடத்தும் வாசிப்பு அனுபவம் பரந்தது. உள்ளத்தை ஊடுருவி அதிலும் முக்கியமாக வாழ்வின் துயர் மிகு தருணங்களில் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் உணர்வுகளையே இலக்கியமாக்கியுள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.

தமிழ் சமூகத்தில் பெண்கள் எவ்வளவு தூரம் அலட்சியப்படுத்தப்பகிறார்கள், குடும்ப வன்முறைக்கு ஆளாகுகிறார்கள். இருந்தபோதும் குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக அவற்றையெல்லாம் மூடி மறைத்து மௌனம் காக்கிறார்கள். மன்னித்து தன்னை அந்நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளையே காப்பாற்றியும் விடுகிறர்கள் என்பதை நித்தம் காணமுடிகிறது. ஆனால் இந்த நாவலானது அதற்கும் அப்பால், தீக்குளிப்பிற்கு ஆளான ஒரு பெண்ணின் கதை ஊடாக துயரத்தின் ஆழத்தை ஆணி அடித்தாற்போல காட்சிப் படுத்துகிறது.

எஜ்ஜினியரிங் படித்த வசதியான ஹெட்மாஸ்டரின் மகளான அவள் பர்மா பஜாரைச் சார்ந்த ஆட்டோ ஓட்டினரை காதலிப்பதும், பெற்றோர்கள் மறுப்பதும் அவள் தன் முடிவில் இறுக்கமாக நிற்பதும், அதனால் வேறு வழியின்றி அவளை அவனுக்கு கட்டிக் கொடுப்பதுமான கதையின் முன்பகுதி 20 பக்கங்களுக்குள் முடிந்துவிடுகிறது. மிச்சம் முழுவதும் அவள் மருத்துவமனையில் கிடக்கும் போது நடக்கும் கதைதான். அதுவும் பெரும்பாலும் உரையாடல் ஊடாக. அதுவும் உணர்வுகள் கொப்பளிக்கும் உரையாடல்கள்.

கதையில் திடீர் திருப்பங்கள் கிடையாது. ஆச்சரியங்கள் காத்திருக்கவி;ல்லை. ஆனால் ஒரு சிறிய கேள்வி கதை முழுவதும் தொக்கிக் கொண்டே நிற்கிறது. தீக்குளிப்பு தற்செயலாக நடந்ததா அல்லது கணவன் மூட்டிவிட்டானா என்பதே அது. இதற்கு எந்த முடிவையும் சுட்டிக்காட்டாமலே நாவல் முடிவடைகிறது. ஆனாலும் கூட ரேவதியினதும் அவளது குடும்பத்தினரதும் கண்ணீரோடு எங்களை கண்ணீரையும் கலக்க வைப்பது நாவலின் இறுதிவரை தொடர்கிறது. இதுவே அப் படைப்பின் வெற்றி எனலாம்.

மருத்துமனையின் தீக்காயப் பிரிவின் வேறு வேறு பகுதிகள், எத்தனை பேர்ச்சன்ட் தீக்காயப் பாதிப்பு, அதன் பாதகங்கள் எவ்வாறானவை போன்ற விபரங்கள். அவசரசிகிச்சை பிரிவு, அதன் செயற்பாடுகள். மருத்துவர்கள் தாதியரின் பணிகள்;, நோயாளிகளின் உறவுவினர்களடானான அவர்களது அணுகுமுறைகள் என அந்த மருத்துமனையின் இயக்கத்தை முழுமையாக அறிந்து கொள்கிறோம். அங்கு மரணங்கள் மலிந்து கிடக்கின்றன. அடிக்கடி தீக்குளிப்புக்கு ஆளானவர்களை அம்புலனஸ் வண்டிகள் ஏற்றி வருவது போலவே, இறந்த உடல்களை எடுத்துச் செல்ல பிரேத காவு வண்டிகள் வருகின்றன.

கண்ணீரும் கவலையும் ஆழ்ந்தகன்ற சமுத்திரம் போல நீக்கமற நிறைந்திருந்த போதும் கன்ரீனுக்கு சென்று வந்தே உறவினர்கள் தங்கள் உயிரைத் தக்கவைப்பதையும் உணர முடிகிறது.

நோயாளிகளைப் பார்ப்பதற்கு காத்திருக்கும் உறவினர்களின் உரையடல்கள் ஊடாக பலவித தகவல்கள் வருகின்றன. நோயால் துடிக்கும் பாத்திரங்களின் வாயிலாக அன்றி பார்த்திருப்பவர்களின் கூற்றாக உயிரின் வதை சொல்லப்படும்போது நெருப்பில் போட்ட நெய்யாக மனம் உருகிக் கரைகிறது. இமையத்தின் சொல்லாட்சியால் அந்தக் களத்தில் நாமும் ஒரு பாத்திரமாகவே மாறிவிடும் மாயவித்தை அரங்கேறுகிறது.

கணவனான ரவி, ரேவதியின் மச்சினியான அருள்மொழியுடன் பேசும் பகுதி முக்கியமானது. எல்லோராலும் திட்டப்பட்டு கெட்டவன் என ஒதுக்கப்படும் ரவியின் மனதில் என்ன இருந்தது என்பதைக் காட்டும் அருமையான பகுதி. கெட்டவன் எனத் தூற்றபடுபவன் மனதிலும் பல ஆதங்கங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இமையத்தின் கதை சொல்லும் ஆற்றல் நாம் அறியதது அல்ல. இருந்தபோதும் அதை இந்த நாவலை மிக அடர்த்தியாக அதே நேரம் உணர்வுகள் தோய்ந்ததாக சொல்லியிருப்பது வியக்க வைக்கிறது. காலப்பாய்ச்சல் ஊடாக ஒரு பெரிய களத்தை அங்கும் இங்கும் நகர்த்தி, உயிர்த்துடிப்புடன் வடித்திருப்பது நயக்க வைக்கிறது.

அண்மையில் பல நாவல்கள் மற்றும் சிறுகதை நூல்களைப் படிக்க முடிந்தது. ஆனால் இதற்கு இணையாக எதையும் சொல்ல முடியவில்லை.

நூல்:- செல்லாத பணம் (நாவல்)

நூலாசிரியர்:- இமையம்

வெளியீடு க்ரியா

CreA, No2,17th East Street, Kamaraj Nagar, Thiruvanmiyur,  Chennai 600 041,

Phone 7299905950

எம்.கே.முருகானந்தன்.

0.00.0

Read Full Post »

சாந்தியின் மறு உருவம் பாலா சேர்

 

வாழ்வின் வசந்தங்கள் சட்டெனக் கருகி விழுந்தது போலாயிற்று. எமது நண்பர்கள் குழுவினரிடையேயான குதூகலங்களும் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியான சந்திப்புகளும், பகிடிகளோடு இணைந்த அனுபவப் பகிர்வுகளும் திடீரென முற்றுப்புள்ளியிடப்பட்டு முற்றாக முடக்கப்பட்டன. ஒரு இனிமையான சகாப்தத்தின் முடிவு மூர்க்கத்தனமாக எம் மீது திணிக்கப்பட்டது. எமது நட்பு வட்டத்தில் மட்டுமின்றி இன்னும் பல பல நட்பு மற்றும் உறவு வட்டங்களும் அக் கணத்தில் அவ்வாறே நிர்க்கதியான நிலையை அடைந்ததாக உணர்ந்தார்கள்.

அதற்குக் காரணமானவரோ இவை எவை பற்றியும் அலட்டிக்கொள்ளாது தனது வழமையான புன்னகை மறையாத சாந்த வதனத்துடன் அமைதியாகக் கிடந்தார். ஆம். பாலா மாஸ்டர்தான்.

ஆம் மறக்க முடியாத துயர் தினம். ஜனவரி 31ம் திகதி மாலை அந்த துயர் செய்தி எங்களை அடைந்தது.

அது அதீத அதிர்ச்சி அளித்த சம்பவம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் அவரை அவரது வீட்டில் சந்தித்து பலதும் பத்தும் கதைத்து நிறைந்த மனதுடன் வந்திருந்தேன். எந்தவித உடல்நலக் கேட்டுக்கான அறிகுறிகளையும் மருத்துவனான என்னால் அவரில் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

‘நேற்று மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததைக் கண்டேன். சிரித்து தலையசைத்து சென்றார். அது இறுதித் தலையசைப்பு ஏன்பதை என்னால் புரிந்துகொள்ளவில்லையே’ எனச் சொல்லி குமுறி அழுதார் நண்பர் ஒருவர்.

‘அன்று கூட வங்கிக்கு வந்திருந்தாரே’ என ஆச்சரியப்பட்டார் வங்கி ஊழியர் ஒருவர்.

மற்றவர்கள் மட்டுமின்றி பாலா சேர் கூட எதிர்பார்த்திருக்காத மரணம் அது. படுக்கை பாயில் கிடக்காமல், நோய் நொடியில் துடிக்காமல், மற்றவர்களுக்கு பாரமாகக் கிடக்காமல் மரணவேவன் அவரை அமைதியாக ஆட்கொண்டான். கள்ளமில்லாத வெள்ளை மனம் கொண்ட அவருக்கு அளிக்கப்பட்ட வெகுமதி என்றே சொல்ல வேண்டும். ஆனால் எங்களால்தான் அவரது பிரிவை ஜீரணிக்க முடியவில்லை.

பாலா சேர் நண்பர்களான எங்களுக்குத்தான் பிரியமானவர் என்றில்லை. மாணவர்களின் பேரன்பிற்கும், அபிமானத்திற்கும் மரியாதைக்கும் என்றுமே உரியவராக இருந்தார். பாலா சேரின் பாடம் எப்ப வரும் என்று மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். தமிழும் சமூகக் கல்வியும் அவரிடம் மண்டியிட்டு சேவகம் செய்யும். அவர் அவற்றை மாணவர்களுக்கு விளக்கும் முறையில் அவர்கள் வாயில் இலையான் புகுவது கூட தெரியாதவாறு லயித்துக் கிடப்பார்கள்.

கடுமையான தமிழில் இருக்கும் இலக்கியப் பாடல்களை அவர் விளக்கும் முறை அலாதியானது. அந்த நேரத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு சினிமாப் பாடலை உவமானம் வைத்து பாடலுக்கான கருத்தை விளக்கும் போது விளங்காதவை விளங்குவது மட்டுமின்றி வாழ்நாளில் மறக்க முடியாதவாறு ஊறிக் கிடக்கும்.

தான் படித்த, படிப்பித்த ஹாட்லிக் கல்லூரில் மிகுந்த பற்றுடையவர். இளைப்பாறிய பின்னரும் கூட அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கு பற்றத் தவறுவதில்லை. அண்மையில் நடந்த சம்பவம் இது. நிகழ்வுகளுக்கு இடையில் உணவு வேளை. ஆனால் உணவு தயாராகவில்லை. ‘சேர் சாப்பாடு தயாராகும் வரை நீங்கள்தான் ஏதாவது பேசி கூட்டத்தை தாக்காட்ட வேண்டும்’ என்ற கோரிக்கை இவரிடம் முன்வைக்கப்பட்டது. ‘தாக்ககாட்ட வந்தவன்’ தான் என்பதையே சொல்லி நகைச்சுவையோடு கூட்டத்தை ஆரம்பித்து கலகலக்க வைத்து பசியை மறக்கடிக்க வைத்துவிட்டார்.

நேரத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு பேசுவதில் வல்லவர் அவர். கூட்டம் வயிறு வெடிக்கச் சிரித்து மகிழ்ந்து நிற்கும். யுத்த காலத்தின் போது நண்பர்கள் நாம் இணைந்து நடத்திய அறிவோர் கூடல் நிகழ்வுகள் அவரில்லாவிட்டால் அவ்வளவு கலகலப்பாக இருந்திருக்காது.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று நான் சொல்லப்போவதில்லை. ஏனெனில் அவரே சாந்தியின் மறுஉருவம் அல்லவா?

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »