Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஆண்மைக் குறைபாடு’ Category

என் நாடித்துடிப்பு 72ல் இருந்து 100ற்கு திடீரென எகிறிப் பாய்ந்தது.

அவர் சொன்ன வார்த்தைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்துவிட்டது. உட்கார்ந்திருந்த சுழல் நாற்காலியை தற்பாதுகாப்புக்காக என்னையறியாமலே சற்றுப் பின்னுக்கு தள்ளிவிட்டதை உணர்ந்ததும் சற்று வெட்கமாக இருந்தது.

வெட்கப்பட்டு காலத்தைக் கடத்தக் கூடிய தருணம் அல்ல. தற்பாதுகாப்பைத் தேடி வேண்டிய நேரம்.

அவசர கணம்.

சொன்னவர் ஒல்லிக் குச்சி மனிதன் அல்ல. ஆஜானுபவானான மனிதர். மல்யுத்த வீரன் போல பரந்த மார்பும், விரிந்து தோள்களுமான நல்ல திடகாத்திரமான உடல். பத்துப்போரை ஒரே நேரத்தில் அடித்து விழுத்திவிடுவார் போலிருந்தது.

நமது தனுஸ் பத்துப்பேரை அல்ல நூறு பேரை தனியாளாக அவ்வாறு அடித்து விழுத்தியதைப் பார்த்ததில்லையா என எனது அறியாமையை கிண்டல் பண்ணாதீர்கள். நீங்கள் அவ்வாறு கேள்வி கேட்பது அவரை அசௌகர்யப்படுத்திவிடும்.

உற்றுப் பார்த்தபோது வெறும் கையுடன்தான் வந்திருந்தார். தப்பித்தேன். கையில் ஆபத்தானவை எவையும் இல்லை. பொக்கற்றுக்குள்ளும் இருப்பதாகத் தெரியவில்லை. படபடப்பு அடங்கி நிம்மதி பரவியது.

திரும்ப யோசித்தபோது அவமானமாக இருந்தது. Gun என்றவுடன் நான் ஏன் இப்படி பயங்கொள்ளியாகி ஒடுங்கிபோகிறேன்?

வாழ்ந்த சூழல்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

துப்பாக்கி தூக்கி எதிரிகளை அழிக்கும் ஆவேசக்காரர்கள் மத்தியில் எனது வாழ்நாளில் சுமார் அரைவாசிக் காலத்தை கழிக்க நேர்ந்திருக்கிறது. அவை களிக்க வைக்கும் நேரங்கள் அல்ல. அவர்கள் விடுதலைக்காகப் போராடுபவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். கனவிலும் நினைவிலும் அவ்விரு தரப்பினருமே கொல்லும் வெறியோடுதான் திரிந்தார்கள். எதிரிகளைக் கொல்லும் வெறி. குத்திக் குதறிக் கொல்லும் வெறி.

இடையில் அகப்பட்டால் நாம் அம்போதான்.

ஒரு எதிரியைக் கொல்வதற்காக எத்தனை பொதுமகன் செத்தாலும் பரவாயில்லை என எண்ணும் அதீத கொள்கைப் பிடிப்பாளர்கள். அதுதான் யுத்த தர்மம் என வாதாடுவார்கள்.

இது விதண்டாவதம் என்று சொன்னவன் துரோகியென பட்டை குத்தப்படுவான். துரோகிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்படுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

இதனால் உண்மைகளை வெளிப்படையாகச் சொல்ல அன்றும் இன்றும் சரி எவருக்கும் விருப்பம் இல்லை. எனக்கும்தான்.

ஆனால் இது எனக்கு மட்டும் நேர்ந்த அவலம் அல்ல. தமிழனத்தின் அவலம். இன்னும் சற்றுப் பரந்த சிந்தனையோடு யோசித்தால் இலங்கைத் தீவின் அனைத்து மக்களினதும் அவலம். இனத்திற்கு இனம் அளவுகளில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கலாம். ஆனால் பாதிப்பும் துப்பாக்கி ஏந்தியவர்கள் பற்றிய பயமும் அனைத்து மக்களிடமும் இருந்ததை மறுக்க முடியாது.

இவர் சொன்ன Gun வேறு விடயம்.

இது வேறு விடயம் என்பது ஆரம்பப் பயம் தணிந்ததும்தான் தெளிவாகியது.

உயிரைப் பறிக்கும்; துப்பாக்கியல்ல. உயிர் கொடுக்கும் துப்பாக்கி இவரது.

அவ்வாறு யோசித்தால் பார்த்தால் நானும் துப்பாக்கிக்காரன்தான். அவருடையதை விட என்னுடையது இன்னமும் நல்ல நிலையிலேயே இருக்கிறது எனப் பெரிமிதம் கொள்ளலாம்.

இருந்தபோதும் அவரது பிரச்சனையைப் புரிந்து கொள்ள மேலும் சில விடயங்களைப் பற்றி விசாரிக்க வேண்டியிருந்தது.

“நீரிழிவு நோய் உங்களுக்கு இருக்கா” எனக் கேட்டேன்.

“இல்லை’ என்றார் திடமாக.

சற்று யோசித்த பின்னர் ‘கொஞ்சமாக இருக்கு ஆனால் மருந்து சாப்பிடுவதில்லை’ என்றார்.

சாப்பிடாமல் எடுத்தால் இரத்தத்தில் சீனியின் அளவு 120, 140 என்று தானிருக்குமாம்.

நீரிழிவு இல்லாதவர்களுக்கு இது 110ற்குள் இருக்க வேண்டும்.

சாதரண அளவை விட 10 முதல் 30 மட்டுமே கூட இருப்பதால்

“இது கடுமையான நோய் அல்ல. குறைவாகத்தானே இருக்கு. சாப்பாட்டால் கட்டுப்படுத்தி விடலாம்” 

என எண்ணி அக்கறை எடுக்காமல் விட்டுவிட்டார்.

நீரிழிவு என்பது அறிகுறிகளற்ற நோய். ஆரம்ப நிலைகளில் எந்தவித இடைஞ்சல்களையும் நோயாளிக்குக் கொடுக்க மாட்டாது. ஆனால் உள்ளிருந்து அரித்துக் கொண்டிருக்கும். அறுந்து விழும் நிலையில்தான் நோயாளிக்குக் தெரிய வரும்.

சிறுநீரகப் பாதிப்பு, அது செயலிழத்தல், மாரடைப்பு போன்ற இருதய நோய்கள், பக்கவாதம், கண்பார்வை மங்கல், மாறாத புண்கள், கால்களை அகற்ற நேருதல் எனப் பல. நீரிழிவினால் நுண்ணிய குருதிக் குழாய்கள் பாதிப்புற்று, உறுப்புகளுக்கு போதிய இரத்தம் பாய முடியாத நிலையில் இவை யாவும் தோன்றுகிறன.

இப்படியான பல பிரச்சனைகள் வந்த பின்னர்தான் பலருக்கு தமக்குள்ள நீரழிவின் பாரதூர நிலை தெளிவாகிறது.

அதற்குப் பின் மார்புக் கவசம் அற்ற வில்வீரன் போலத்தான் இவர்கள் நிலை. ஏற்கனவே வீசிய பாசக்கயிற்றை யமன் எந்ந நேரத்திலும் இறுக்க முடியும்.

இவருக்கும் அவ்வாறுதான். ஏற்கனவே உறுப்பின் இரத்த ஓட்டமும் அதற்கான நரம்புகளும் பாதிக்கப்பட்டுவிட்டன.

இதனால் மனத்தில் எவ்வளவுதான் ஆசை இருந்தபோதும் இவரால் முடியவிதில்லை. பேரழகி ஹெலன் இவர் முன் அம்மணமாக வந்து நின்றால் ஆசை மீறும். ஆனால் காற்றில்லாத பலூன் போல உறுப்பு சோர்ந்து கிடக்கும்.

“My Gun is not firing”  என்று சொன்னது அதனால்தான்.

இவர் கற்றுக் கொள்ளாத பாடம் இவருக்கு உலை வைத்துவிட்டது..

Either you have diabetis or no diabetis. There is nothing in between called mild diabetis.  

எனது steth இன் குரல் புளக்கில் 22nd February 2012 வெளியான கட்டுரைசுடாத துப்பாக்கி

வீரகேசரியில் நான் எழுதிய அனுபவப் பகிர்வு

Read Full Post »

>

ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?
இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும்.
உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இளைஞர்களில் ஏற்படுவது பெரும்பாலும் உளம் சார்ந்ததே.
ஆயினும் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தால் அதனை Erectile Dysfunction எனக் கூறுவர். வயது அதிகரிக்க அதிகரிக்க இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை ஆகும். ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு இது ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிலருக்கு லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் என இது பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும்.
இருந்தபோதும் முக்கியமான அம்சம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளிவிடாமல் மனதில் வைத்துக் கொண்டு துன்புறுகிறார்களே ஒழிய வைத்திய ஆலோசனை பெறுவதில்லை.
காரணம் என்ன?
1) பலருக்கு (80%) இது ஒரு உடல் சார்ந்த நோயாகும். பெரும்பாலும் வேறு நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.
a.முக்கியமாக இது இரத்தக் குழாய்கள் (நாடி) சார்ந்த நோயாகும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவையும் அவ்வாறே இரத்தக் குழாய் நோய்கள்தான்.
b.நீரிழிவு ஒரு முக்கிய காரணியாகும். உண்மையில் 35 சதவிகிதமான நீரிழிவு நோயளர்களை இப் பிரச்சனை பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன.
c.புரஸ்ரேட் நோய் முள்ளந் தண்டு நோய் ஆகியவற்றிற்கான சத்திரசிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.
d.போதைப் பொருள் பாவனை மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மதுபாவனை, ஏனைய போதைப் பொருள் பாவனைகள் இதனைக் கொண்டுவரும்.
e.ஆண் ஹோர்மோனான டெஸ்டஸ்ரரோன் குறைபாடு மற்றொரு காரணமாகும்.
2) சிலரில் இது மன உணர்வுகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். உளநெருக்கீடு, மனச்சோர்வு போன்ற உளநோய்கள் உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். பாலுறவு பற்றிய பதற்றம் (Performance Anxiety), பாலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (realationship Failure), Fear of intimacy போன்றவையும் காரணமாகலாம்.
3) வேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக் குறைபாடு ஏற்படலாம். பிரஸருக்கு உபயோகிக்கும் தயசைட் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் சிமிரிடீன் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.
மருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும்.
உளம் சார்ந்ததா உடல் சார்ந்ததா?
பலருக்கு இது உடல் சார்ந்ததாகவும், சிலருக்கு உளம் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றோம். இதனை வேறுபடுத்தி அறிவது எப்படி?
உளம் சார்ந்ததின் அறிகுறிகள்
a.திடீரெனத் தோன்றுவது,
b.சில நாட்களில் விறைப்பு ஏற்படுவும் வேறு சில நாட்களில் விறைப்பு ஏற்பட மறுப்பதும்,
c.பொதுவாக 60க்கு உட்பட்ட வயதுகளிலும் பொதுவாக உளம் சாரந்த ஆண்மைக் குறைபாடு எனலாம்.
d.காலையில் நித்திரை விட்டெழும்போது எவருக்கும் தானாக உறுப்பு விறைப்படையும். இது இயல்பானது. சிலருக்கு தினமும் இல்லாமல் சில வேளைகளில் மட்டும் அதிகாலை விறைப்பு ஏற்படுகிறதெனில் அது உளம் சார்ந்ததே.
e.வழமை போல உறவில் ஆர்வமற்றுப் போவதும் அத்தகையதே
உடல் சார்ந்ததின் அறிகுறிகள்
a.ஆண்மைக் குறைபாடு படிப்படியாக தோன்றி வரவர மோசமாகும்.
b.எப்பொழுதுமே விறைப்பு ஏற்படாதிருத்தல்.
c.பொதுவாக 60க்கு மேற்பட்ட வயது.
d.அதிகாலையில் தானாக ஆணுறுப்பு விறைப்படைதல் முற்றாக அற்றுப் போதல்.
e.உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு ஒத்துழைக்க மறுத்தல்.
மருத்துவ ஆலோசனை
மேற் கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டஸ்ரரோன் குறைபாடு இருக்கிறதா என அறிய மருத்துவர் அவரின் ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவற்றை கேட்டும் பரிசோதித்தும் அறிவார்.
குருதியில் ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்ரரோன் அளவை பரிசோதிக்கவும் கூடும்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியன இருக்கின்றனவா என சோதித்து அறிவார்.
சிகிச்சை
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம்.
புகைத்தல், மது பாவனை ஆகியவற்றின் பாவனையை நன்றாகக் குறைக்க வேண்டும். அல்லது முற்றாக நிறுத்துவது சாலச் சிறந்தது.
உளவளத் துணை பலருக்கு உதவி செய்யும்.
மருந்துகளைப் பொறுத்த வரையில் phospho diesterase type 5 inhibitors (PDE5 inhibitors) என்ற வகை மருந்துகள் ஆண்குறி விறைப்படைதல் குறைபாட்டிற்கான சிகிச்சையைப் பொறுத்த வரையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.
70சதவிகிதமானவர்களுக்கு இவை நல்ல பலனைக் கொடுக்கின்றன.
ஆயினும் அண்மையில் பக்க வாதம், மாரடைப்பு ஆகியன வந்தவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
அல்லது மாரடைப்பு வருவதற்கான நிலையில் உள்ள இருதய நோயாளர்கள் (Unstable Angina) தவிர்க்க வேண்டும்.
நெஞ்சு வலிக்கு ரைனைற்றேட் (Trinitrate) உபயோகிப்பவர்கள் அதனுடன் சேர்த்து உபயோகிக்கக் கூடாது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் உபயோகிக்கலாம்.
இவற்றில் மூன்று வகையான மாத்திரைகள் இப்பொழுது கிடைக்கின்றன.
அவையாவன
1.Sildenafil
2.Vardenafil
3.Tadalafil
இவை பொதுவாக உடலுறவிற்கு சற்று நேரம் முன்பாக எடுக்க வேண்டிய மாத்திரைகளாகும். வேறுபட்ட நேரத்திற்கு பயன் தரும்.
சில்டெனபில் என்பது வயக்ரா என்ற பெயரில் முதல் முதலாக அறிமுகமாகி மிகவும் பெயர் பெற்றதாகும்.
ஏனையவை அதற்கு பிந்திய மருந்துகள்.
சில்டெனபில்
உடலுறவிற்கு 60 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் நான்கு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.
வார்டெனபில்
இது உடலுறவிற்கு சுமார் 25 முதல் 45 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் ஆறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.
ரடலபில்
இது உடலுறவிற்கு சுமார் 30 நிமிடங்கள் முதல் 12 மணிநேரம் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் முப்பத்தாறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது. எனவே வாரத்திற்கு இரண்டு எடுத்தாலே நாள் முழுவதும் வேலை செய்யும் எனலாம்.
பக்க விளைவுகள்
இம் மருந்துகள் சிலருக்கு நெஞ்செரிப்பு, வயிற்றுப் பிரட்டு, வாந்தி, தலையிடி, தலைப்பாரம், தசைப்பிடிப்பு, மூக்கடைப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
இவை சற்று நேரத்தில் மறைந்துவிடக் கூடியன.
ஏனைய சிகிச்சைகள்
டெஸ்டஸ்ரரோன் குறைபாடு உள்ளவர்களுக்கு அதனை மாத்திரைகளாகவோ, ஊசியாகவோ கொடுப்பதுண்டு.
வேறு சில மாத்திரைகள், உபகரணங்கள் போன்றவையும் உதவக் கூடும்.
இவை எதனையும் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரமே உபயோகிக்க வேண்டும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப வைத்தியர்
நன்றி:- வீரகேசரி 07.12.2008

Read Full Post »