Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஆஸ்த்மா’ Category

கேள்வி- எனக்கு வயது 30.  ஆஸ்துமா நோய் உள்ளது. மழை, பனி காலங்களைவிட , வெயில் காலங்களிலேயே  ஆஸ்துமா அதிகமாக உள்ளது. இது எதனால் ?
ஆர். குமார் கொழும்பு

பதில்:- ஆஸ்த்மா என்பது சுவாசத் தொகுதியோடு சம்பந்தமான நோய். வுழமையாக நாங்கள் தொடர்ச்சியாக மூச்சை உள்ளெடுப்பதும் வெளிவிடுவதுமான செயற்பாட்டை எந்நேரமும் செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் அதை உணர்வதில்லை. தன்னிச்சையாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஆஸ்த்மா நோயின் போது நாம் மூச்சை உள்ளெடுப்பதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் வெளிவிடுவது மிகவும் கடினமாக பிரயாசையுடன் கூடியதாக இருக்கும்.

ஆஸ்த்மா பொதுவாக பரம்பரையாக வருவதுண்டு. அப்பா அம்மா சகோதரங்களுக்கு இருந்தால் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும். ஆத்துடன் ஒவ்வாமை, எக்ஸிமா போன்ற நோயுள்ளவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும் சிகரட் புகை, விறகெரிக்கும் புகை, நுளம்புத்திரிப் புகை போன்ற எல்லாப் புகைகளும் ஆஸ்த்மாவைத் தூண்டக் கூடும்.

தூசு, கடுமையான மணங்கள், சுவாத்திய மாற்றங்கள், சுவாசத் தொற்றுநோய்கள் போன்றவற்றால் தூண்டப்படுவதுண்டு.

உங்களுக்கு வெயில் காலத்திலேயே அதிகம் வருவதுண்டு எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களைப் போலவே குளிர் அதிகமாயுள்ள மேலைநாட்டவர்கள் பலருக்கு வசந்த காலத்திலேயே ஆஸ்த்தா அதிகம் வருவதுண்டு. அதற்குக் காரணம் அங்கு வசந்த காலத்தில் ஏராளமான பூக்கள் மலரும். அவற்றின் மகரந்தம் உதிர்ந்து காற்றோடு கலந்து சுவாசத்தோடு உட்செல்வதால் சுவாசக் குழாய்கள் தூண்டப்பபட்டு ஆஸ்த்மா வருகிறது.

எமது நாட்டில் அவ்வாறில்லை. சகல காலங்களிலும் பூக்கள் மலர்கின்றன. மகரந்தம் காற்றோடு கலந்துநோயை ஏற்படுத்துவதானால் அது எப்பொழுமே நிகழும். வெயில் காலத்தில் மட்டுமல்ல.

இங்கு குளிர் காலத்தி;லேயே ஆஸ்த்மா அதிகம் காணப்படுகிறது. அதற்குக் காரணம் குளிர் காற்றானது உடலில் ஹிஸ்டமின் என்ற இரசாயனத்தை எமது உடலில் அதிகம் சுரக்கச் செய்கிறது. இதுவே எல்லாவித ஒவ்வாமைகளின் போதும் அதிகம் சுரக்கிறது. அது ஆஸ்த்மாவை தூண்டுகிறது.

ஆனால் உங்களுக்கு ஆஸ்த்மா வெயில் காலங்களிலேயே அதிகம் வருகிறது. உங்களுக்கு மட்டுமல்ல வேறு பலருக்கும் இங்கு அவ்வாறு வருவதை அவதானிக்க முடிகிறது. அதற்குக் காரணம் வெக்கையான காலத்தில் தூசி, புழுதி, பூஞ்சணம், மகரந்தம் மணங்கள் யாவும் வெக்கையில் காய்ந்து உலர்ந்து காற்றோடு கலந்து விரைவில் எங்கும் பரவுகின்றன.

உங்களுக்கு ஒவ்வாத ஏதோ ஒரு பொருள் வெயில் காலத்தில் உங்களைத் தாக்குவதாலேயே அக்காலத்தில் ஆஸ்த்மா வருகிறது என நம்புகிறேன்.

ஆஸ்த்மா என்பது நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது. அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.

ஒரு சிலருக்கு முற்றாக மறைந்துவிடுவதுண்டு. ஆனால் அது சூழல்கள் மாறுவது, புகைத்தலை நிறுத்துவது போன்ற நோயைத் தூண்டும் காரணிகள் அற்றுப் போவதால்தான் இருக்கும்.

ஆனால் இப்பொழுது நல்ல மருத்துவம் இருக்கிறது. இன்ஹேலர்களை உபயோகிக்கிறீர்கள் என நம்புகிறேன் அவற்றை சரியாகப் பயன்படுத்தி, நோயை நன்கு கட்டுப்படுத்தி, ஏனையவவர்கள் போல மகிழ்ச்சியோடு சுகமாக வாழலாம்.

டொக்டர். எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது
0.00.0

Read Full Post »

சென்ற வாரம் ஒரே நாளில் சளி இருமல் என்று வந்தவர்கள் பலர். அதிலும் பலருக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது.

சிறு குழந்தை, பாடசாலைச் சிறுமி, பல்கலைக் கழக மாணவன் எனப் பல தரப்பட்டவர்கள் இருந்தார்கள்

இவர்களில் பலருக்கு nebulizing செய்ய நேர்ந்தது.

nebulizer_mask

சிலர் ஏற்கனவே சளித் தொல்லைக்கு ஆளானவர்கள்.

வழமையாகவே சளி இழுப்புத் தொல்லை இருப்பவர்கள் ஒரு சிலர்.

தந்தைக்கு ஆஸ்த்மா சிறுவயதில் வந்த ஒரு பிள்ளைக்கு அன்றுதான் முதன் முதல் வந்திருந்து.

கடுமையான அல்ர்ஜி தொல்லையால் சரும நோய் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவ மற்றொருவர் இன்று மூச்செடுக்க முடியாது ஓடிவந்திருந்தார்.

முழங்கை கழுத்து அக்குள் என பல இடங்களில் எக்சிமா இருந்த பெண் ஒருத்தியும் இதில் உள்ளடங்கும்.

அடிக்கடி கண்கடி தும்மல் வரும் கட்டிளம் பருவத்தது பையனும் இருந்தான்.

இவர்கள் எல்லோருக்குமே இன்று திடீரென இழுப்பு wheezing வந்திருந்தது. வெளிப்படையான இழுப்பு தெரியாமல் மூச்சு அடைத்தவர்களும் உண்டு.

இன்று திடீரென ஏன் இவ்வாறு பலருக்கு ஆயிற்று.

‘இண்டைக்கு தயிரும் வாழைப்பழமும் சாப்பிட்டவ’ என ஒரு கணவன் தன் மனைவியில் குற்றம் கண்டார்.

“இன்ரவெலுக்கு விளையாடினியோ” என்று தகப்பன் கேட்க பிள்ளை தயக்கத்துடன் “ஒம்” எனத் தலையாட்டியது. “சொன்னால் கேக்கிறியோ. விளையாடித் தேடிப் போட்டாய்” என அது விளையாடியதில் குற்றம் கண்டு திட்டினார்.

“ஏ.சி யுக்குள்ளை வேலை செய்யதாலைதான் பிரச்சனை” என்று தினமும் ஏ.சி யுக்குள் வேலை செய்யும் இளம் பெண் தனது இன்றைய இழுப்பிற்கு காரணம் கண்டாள்.

“முழுகிப் போட்டன் அதுதான் பிரச்சனையாப் போச்சு”

இப்படி தங்கள் ஆஸ்த்மா பிரச்சனைக்குப் பல காரணங்களை அவர்கள் சொன்னார்கள்.

அவை உண்மையா.

இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

சீதோஸ்ண நிலை காரணமாயிருக்கலாம். வெப்ப நிலை குறைவாக இருந்தது. காற்று வீச்சு அதிகமில்லை. ஈரப்பதம் அதிகமாயிருந்து. கடுமையான கால நிலைகளும் திடீரென மாறும் இவ்வாறான காலவெட்ப நிலைகளும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

  • இந்த மாற்றங்கள் எல்லோருக்கும் இழுப்பைக் கொண்டுவருவதில்லை.
  • அதற்கான வாய்புள்ளவர்களில் இத்தகை திடீர் மாற்றங்கள் கொண்டு வந்திருக்கலாம்.
  • தயிர், மோர், வாழைப்பழம், முழுக்கு, ஏ.சி,  விளையாடுவது போன்றவை மட்டும் ஒருவருக்கு கொண்டு வந்துவிடாது.

எனவே பாவம் நோயில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களை

“நீ செய்தது தான் காரணம்” எனத் திட்டி அவர்கள் வேதனையை அதிகரிக்காதீர்கள்.

0.00.0

Read Full Post »

தைப் பனி இன்னமும் முழுமையாகக் குறைந்தபாடில்லை. ஆஸ்த்மாவின் தொல்லை இன்னமும் பலரைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.

ஆஸ்மா என்பது என்னெவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இழுப்பு, தொய்வு, முட்டிழுப்பு எனப் பலவாறாக அழைப்பார்கள். இது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு நோயாகும்.

inflammed-airways-complex

  • எந்த வயதினரையும் தாக்கக் கூடியது என்பதுடன்
  • நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும்.
  • தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது.
  • அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.

அறிகுறிகள்

The-Asthma-Symptom

  • இருமல்
  • இழுப்பு
  • மூச்சு எடுப்பதில் சிரமம்
  • நெஞ்சு இறுக்கமாக இருப்பதாக உணர்தல்

போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

அடியோடு அறுத்தல்

நோய் அறிகுறிகள் இருப்பவருக்கு, ‘உங்களுக்கு ஆஸ்த்மா இருக்கு’ என மருத்துவர் சொன்னவுடன் நோயாளியின் உடனடிப் பிரதிபலிப்பு ‘இதை அடியோடு அறுக்க என்ன செய்யலாம்?’ என்பதுதான்.

ஆனால் அடியோடு அறுக்க முடியாது என்பது கசப்பாக செய்தியான போதும் தவிர்க்க முடியாத உண்மையாகும்.

  • இப்பொழுது நல்ல மருத்துவம் இருக்கிறது.
  • அவற்றைக் கொண்டு நோயை நன்கு கட்டுப்படுத்தலாம்.
  • ஏனையவவர்கள் போல மகிழ்ச்சியோடு சுகமாக வாழலாம்.
  • ஆனால் மீண்டும் வராது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

ஒரு சிலருக்கு முற்றாக மறைந்துவிடுவதுண்டு. ஆனால் அது சூழல்கள் மாறுவது, புகைத்தலை நிறுத்துவது போன்ற நோயைத் தூண்டும் காரணிகள் அற்றுப் போவதால்தான் இருக்கும். அன்றி மருந்துவத்தின் செயற்பாட்டால் அல்ல.

‘ஆங்கில மருத்துவம் செய்து வேலையில்லை’ என்று எண்ணி சித்த, ஆயர்வேத, யுனானி, அக்யூபங்கசர் என நாடுபவர்கள் இருக்கிறார்கள்.

  • அவை எவற்றினாலும் நோயை முற்றாக அறுக்க முடியாது.
  • அது மட்டுமல்ல, கடுமையான பத்தியங்கள் இருந்தாலும் அவற்றால் கிட்டும் பயன் மிகக் குறைவே.
  • அவற்றால் பெருமளவு பலனில்லை என்பதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகளுக்கான அதிகார சபையும் (FDA) கூறுதிப்படுத்துகிறது.

மாற்று மருத்துவ முறைகளும் ஆஸ்த்மாவும்

அக்யூபங்கசர்

Treatment by acupuncture. The doctor uses needles for treatment of the patient.

அக்யூபங்கசர் ஆஸ்தாவுக்கு ஏற்ற சிகிச்சை என்று சொல்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது என்கிறது அந்த ஸ்தாபனம்.

  • அக்யூபங்கசரால் ஒரு சிலரில் மருந்துகளின் அளவை குறைக்க முடிந்திருக்கிறது,
  • அறிகுறிகள் குறைந்திருந்தன, சுகமாக இருப்பதாக உணர்ந்தனர் என ஓரிரு ஆய்வுகள் கூறிய போதும்,
  • பெரும்பாலான ஆய்வுகள் அக்யூபங்கசரால் எந்தவித பிரயோசனமும் இல்லை என்கின்றன.

சுவாசப் பயிற்சிகள்

asthma-breathing-exercises-yoga-meditation

பலவிதமான சுவாசப் பயிற்சிகள் உள்ளன. எமது பாரம்பரிய யோகசனம் முதலாக சீன, மேலைநாட்டு முறைகள் (Papworth Method and Buteyko Breathing Technique) எனப் பல.

  • இவை நோயின் தீவிரத்தை குறைப்பதாகத் தெரிகின்றபோதும்,
  • நல்ல பலன் அளிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை.

ஆயினும் இது உடலுக்கு எந்தப் பாதகாமான விளைவுகளையும் ஏற்படுத்தமாட்டாது என்பதால் வழமையான மருந்துகளுடன் இணைத்துச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

மூலிகைகள் சார்ந்த மருந்துகள்

சுதேச மருத்துவ முறைகளான சித்த, ஆயள்வேத, யுனானி, சீன மருத்து முறைகளில் பல மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உள்ள சில வேதியல் பொருட்கள் ஆஸ்மாவின் அறிகுறிகளைக் குறைக்கக் கூடும்.

Asthma and Complementary Health Practices: What the Science Says

உதாரணமாக Ma huang என்ற சீன மூலிகையில் ephedrine என்ற வேதியல் பொருள் இருக்கிறது. இது ஒரு காலத்தில் ஆஸ்த்மாவிற்கு சிகிச்சையாக மாத்திரைகளாக உபயோகிக்கப்பட்டபோதும் அதன் இருதயம் சார்ந்த பக்கவிளைவுகள் காரணமாக பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

தேயிலையில் தியோபிலின் (theophylline) எனும் வேதியில் பொருள் சிறிதளவு உண்டு. இது இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ள ஒரு மருந்து ஆகும். மருந்து இதில் இருக்கிறது என எண்ணி தேநீரை அண்டாக் கணக்கில் குடித்தால் என்னவாகும்? சுகம் கிடைக்காது! வேறு நோய்கள்தான் தேடி வரும்.

இதேபோல வேறு பல மூலிகைகளில் ஸ்டிரொயிட் (Steroid) வகை மருந்துகள் உள்ளன. எதில் எந்த மருந்து எந்தளவு இருக்கிறது என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. எனவே மூலிகை மருந்துகளைத் தனியாகவோ அல்லது வழமையான மருந்துகளுடன் சேர்த்தோ பயன்படுத்தும்போது ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

இவற்றைத் தவிர boswellia, tylophora indica, magnesium supplements, omega-3 fatty acids, Radix glycyrrhizae, vitamin C, and butterbur போன்ற மூலிகைகள், தாதுப்பொருட்கள், விற்றமின்கள் பலன் கொடுக்கும் எனப் பலர் நம்புகிறபோதும் அவற்றால் எந்தப் பயனுமில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

Complementary remedies for asthma

எனவே மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக உங்களுக்காக மருத்துவர் கொடுக்கும் மருந்துகளைக் கைவிட்டு, மூலிகைகளையும் ஏனைய முறைகளையும் உபயோகிப்பது ஆபத்தில் முடியலாம்.

உங்களுக்கான மருத்துவம்

இன்றைய நிலையில் ஆஸ்த்மாவுக்கான சிறந்த மருத்துவம் உள்ளுறுஞ்சும் (Inhaler) மருந்துகள்தான். இவற்றில் பல வகைகள் உள்ளன. எது ஒருவருக்குப் பொருத்தமானது என்பதை மருத்துவர்தான் சிபார்சு செய்ய முடியும்.

asthma_2312065b

ஒழுங்காக மருந்துகளை உபயோகித்தபோதும் சில வேளைகளில் ஆஸ்த்மாவின் தீவிரம் அதிகரிக்கலாம். இதைத் தடுக்க தூண்டும் காரணிகளை அறிந்து அவற்றைத் தவிர்பபது அவசியம். அதன் மூலமே நலமாக வாழலாம்.

ஆஸ்த்மா தூண்டிகள் எவை?

அமெரிக்க குடும்ப மருத்துவ சங்கம் கீழ்கண்டவற்றைக் குறிப்பிடுகிறது. ஆனால் ஒருவருக்கு தூண்டியாக இருப்பது மற்றவருக்கும் தூண்டியாக அமையும் எனச் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் தமது அனுபவத்தின் மூலமே கண்டறிய வேண்டும்.

  • ஓவ்வாமையை ஏற்படுத்தும் பூ மகரந்தங்கள், புற்கள், பூஞ்சணங்கள்
  • தடிமன் போன்ற வைரஸ் நோய்கள் தொற்றாமல் தம்மைப் பாதுகாத்தல்
  • சூழலில் உள்ள வளியை மாசுபடுத்தும் சிகரட் புகை, இரசாயனப் புகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை தவிர்த்தல்.
  • விறகு எரித்தல். விறகு எரிக்கும்போது பல நச்சு வாயுக்களும், நுண்துகள்களும் வெளியேறுகின்றன. இவை சிலருக்கு தூண்டியாக அமையலாம்.
  • கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும்.
  • சைனஸ் தொற்று நோய்களுக்கு ஆளாகாதிருத்தல்.
  • நெஞ்செரிப்பு, வயிற்றெரிவு சாப்பாடு புளித்து மேலெழுதல் போன்ற அறிகுறிகள் குடலில் உள்ள அமிலம் மேலெழுவதைக் குறிக்கலாம். இதுவும் ஆஸ்த்மாவைத் தூண்டுவதுண்டு. இதைத் தடுக்க மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
  • கடும் குளிர் காற்றுகளும் நோயைத் தூண்டிவிடுவதுண்டு
  • கடுமையான உடற் பயிற்சிகள் தூண்டக் கூடும். ஆயினும் அதன் அர்த்தம் உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது என்பதல்ல. மருத்துவ ஆலோசனையுடன் இன்ஹேலர்களை உபயோகித்துக் கொண்டு செய்ய வேண்டும்.
  • கடுமையான மனஅழுத்தங்களும் உணர்ச்சிவயப்படலும் தீவிரமாக்கும்.

இவை ஒருவருக்குத் தூண்டியாக அமைந்து நோயை தீவிரப்படுத்தலாம் என்பதால் அவற்றில் இருந்து விலகியிருங்கள். ஆனால் மற்றவருக்கு தூண்டியாக இருப்பது உங்களுக்கும் இருக்க வேண்டும் என்றல்ல.

எனவே மற்றவர்கள் சொல்லதைக் கேட்டு தேவையற்ற பலவற்றையும் தவிர்த்து உங்கள் வாழ்வைச் சப்பென்று ஆக்கிவிடாதீர்கள். உங்களுக்கானதைத் அனுபவத்தில் தேடிக் கண்டுபிடியுங்கள்.

உங்களால் உங்களால் மட்டுமே உங்கள் ஆஸ்த்மாவைக் கட்டுப்பாடினுள் வைத்திருக்க முடியும் என்பதை மறவாதீர்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>தடிமன், சளி, தொடர்ச்சியான இருமல் என பலர் இந்த மார்கழி, தை மாதத்தில் மருந்திற்கு வந்திருந்தனர். பனிக்குளிர் நேரத்தில் இது வழமையானதுதான். ஆயினும் ஒரு காலமும் ஆஸ்த்மா நோய் வராத சிலருக்கு ஆஸ்த்மா இருப்பதாகக் கூறியவுடன், நான் சொல்வது சரிதானா என்ற சந்தேகம் அவர்களிடம் எழுந்ததை உணர முடிந்தது.

ஒவ்வாமை நோய்கள்

ஆஸ்த்மா மாத்திரமின்றி அதனுடன் தொடர்புடைய பிரச்சனையான அலர்ஜி (Allergy) எனப்படும் ஒவ்வாமையும் உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நூற்றுக்கு 50 பேர் ஒவ்வாமை ஏற்படுவதற்கு பதமாக இருக்கிறார்கள் எனச் சில ஆய்வுகள் கூகின்றன. இவை காரணமாக பலரும் ஏடொபிக் (Atopic) நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

சளி, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுகடி, ஆஸ்த்மா, எக்ஸிமா போன்ற பலவும் இத்தகைய ஏடொபிக் மனிதர்களுக்கே வருகிறது.

அதாவது அவர்கள் அத்தகைய நோய்கள் வருவதற்கு பதமாக இருக்கிறார்கள். இதைத்தான் எமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் ‘கிரந்தி உடம்பு’ என்று குறிப்பிடுகிறார்கள் என எண்ணுகிறேன்.

சுகாதாரமான சூழல் கோட்பாடு

அது சரி, இத்தகைய நோய்கள் இப்பொழுது அதிகரிப்பதற்குக் காரணம் என்ன?

(விளக்கப் படத்தை தெளிவாகப் பார்க்க அதன் மேல் கிளிக் பண்ணுங்கள்)

கிருமிகள் அற்ற  சுகாதாரமான சூழல்தான் (hygiene Hypothesis) காரணம் என்ற கோட்பாட்டை பல மருத்துவ ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள்.

முன்னைய காலங்கள் போல இப்பொழுது மனித இனம் தொற்று நோய்களுக்கு ஆளாவதில்லை.
மண்ணிலும் புழுதியிலும், அழுக்கிலும் இன்றைய குழந்தைகள் உழல்வதில்லை.

அவர்களது உணவு, சுற்றாடல் யாவும் சுத்தமாக சுகாதாரமாக இருப்பதால் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன.

இது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா?

இல்லை!

கிருமித் தொற்று ஏற்படும்போது எமது உடல் அதற்கு எதிராகப் போராடுகிறது. அதனால் உடலின் நோயெதிர்புச் சக்தி வளர்கிறது.

ஆனால் தொற்றுநோய்கள் குறைந்த தற்காலச் சூழலில் குறைந்தளவு நோயெதிர்புச் சக்தியே (Reduced Immune Stimulation) அவர்களில் ஏற்படுகிறது.

நோயெதிர்புச் சக்தி குறைந்ததாலேயே ஏடொபிக் (Atopic)  நோய்கள் அதிகமாகிவிட்டது என்கிறார்கள்.

ஆனால் மேற்கூறிய கோட்பாட்டை மட்டுமே அதிகரிக்கும் ஆஸ்த்மாவிற்குக் காரணமாகக் கூறமுடியாது. வேறு விடயங்களும் இருக்க வேண்டும்.

வைரஸ் தொற்று நோய் (Human Immunovirus Infections)

தற்காலத்தில் உலகெங்கும் அதிகமாகத் தொற்றும் கிருமியாக ஹியுமன் ரைனோ வைரசைக் (Human Immunovirus Infections) கூறுகிறார்கள்.
இதுவே தடிமனுக்குக் காரணமான வைரஸ் ஆகும். இதனை அழிக்கும் வைரஸ் கொல்லி மருந்துகள் கிடையாது.

தணிந்திருக்கும் ஆஸ்த்மா நோய் திடீரெனத் தீவிரமடைவதற்கு வைரஸ் தொற்று நோய்கள் காரணம் என்பது தெரிந்த விடயமே.

அத்துடன் சிறுவயதில் ரைனோ வைரஸ் தொற்றினால் மூச்சிழுப்பதில் சிரமம் ஏற்படும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பும் அதிகம் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.

இந்த ரைனோ வைரஸ் தொற்றானது சாதாரணமானவர்களிலும் ஏடொபிக் மனிதர்களிலும் வெவ்வேறு விதங்களில் செயற்படுகிறது.

ஏடொபிக் மனிதர்களில் ரைனோ வைரஸ் தொற்றினால் சுவாசத் தொகுதியின் கலங்கள் அழற்சியடைந்து, சேதமாவதுடன் சுவாசக் குழாய்களும் இறுக்கமடைகின்றன.

இதனால் அவர்களுக்கு வரும் ஆஸ்த்மா சற்று தீவிரமாக இருப்பதுடன் சிகிச்சைகள் பலனளிப்பதும் தாமதமாகிறது.

மார்கழி, தை ஆகியன குளிர் அதிகமான மாதங்கள். அத்துடன் சுற்றுச் சுழல் பாதிப்படைந்து பூமி வெப்பம் அடைவதால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகுவதால் இவ்வருடம் வழமையை விடக் குளிர் அதிகம் என்கிறார்கள்.

ஹியுமன் ரைனோ வைரசையால் தடிமன் தொற்றும் அதிகமாயிருந்தது. இதுதான் இவ்வருடம் சளிசம்பந்தமான நோய்கள் அதிகரித்ததற்கும் பலருக்கும் ஆஸ்த்மா இழுப்பு வந்ததற்கும் காரணமாக இருக்கலாம். அதைத் தடுக்க இன்ஹேலர்களை உபயோகிக்கவும் நேர்ந்திருக்கலாம்.

இத்தகவல்கள் நோயாளிகளான உங்களை நீங்களே பாதுகாக்க எந்தவிதத்தில் உதவும் என்று புரியவில்லை.

ஆயினும் எதிர்கால மருத்துவ ஆய்வுகள் அத்தகைய வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்தவும், அதை மீறித் தொற்றினால் அதைக் குணப்படுத்தவும் புதிய சிகிச்சைகளைக் கொண்டு ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்கவும் ஆவன செய்யும் என நம்பலாம்.

ஒவ்வாமை,அலர்ஜி, ஆஸ்த்மா சம்பந்தமான எனது ஏனைய பதிவுகள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்.

Read Full Post »

>

“எக்ஸிமாவைக் குணப்படுத்தினால் ஆஸ்மா வருமாம். என்றபடியால் கடும் மருந்து தாராதையுங்கோ.’ என்றாள் எக்ஸிமாவுடன் அல்லாடும் அந்தப் பெண்மணி.

அவள் மட்டுமல்ல பெரும்பாலான மக்கள் அவ்வாறுதான் நம்புகிறார்கள்.

அது உண்மைதானா?

இல்லை. தவறான கருத்தென்றே நான் கருதுகிறேன்.

ஆனால் பெரும்பாலானவர்கள் ஏன் அவ்வாறு கருதுகிறார்கள்? காரணம் உண்டு.

ஆஸ்மா, எக்ஸிமா, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுக்கடி போன்ற பல நோய்களுக்கான அடிப்படைக் காரணம் ஒவ்வாமைதான். அதாவது அலர்ஜி (Alle rgy).

எனவே மேலே கூறிய அறிகுறிகள் யாவும் ஒருவருக்கே ஒருங்கே வரக்கூடும்.

அல்லது ஒன்று மட்டும் தொடர்ந்து தொல்லை கொடுக்கக் கூடும்.

அல்லது மாறி மாறி வரவும் கூடும்.

உதாரணமாக ஒருவருக்கு ஆஸ்மா தொல்லை தொடர்ந்து இருக்கக் கூடும். அல்லது ஆஸ்மாவும் எக்ஸிமாவும் சேர்ந்து வரக் கூடும். அல்லது ஒன்று மாற மற்றது வரவும் கூடும். எனவே ஒன்றைக் குணப்படுத்தினால்தான் மற்றது வரும் என்பது தவறான கருத்தாகும்.

அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட் களை ஒவ்வாமைப் பொருட்கள் (Allergans) என்பார்கள்.

அது உடலில் எங்கு தொடர்புறுகிறதோ அவ்விடத்தில் அழற்சியை ஏற்படுத்தும் அங்கு நோய் வரும். எந்தப் பொருளுக்கு உடலின் எந்தப் பாகத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதைப் பொறுத்ததே நோய்.

உதாரணமாக ஒருவருக்கு பூக்களின் மகரந்தத்திற்கு ஒவ்வாமை எனில் அவர் சுவாசிக்கும் போது நாசிவழியாக உட்செல்லும் போது நாசி அரிப்பு, தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

அதே நேரம் சுவாசத் தொகுதியின் உட்பகுதியை அடையும்போது இருமல், இழுப்பு, நெஞ்சடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதேபோல தூசிப்பபூச்சி, கரப்பொத்தான் எச்சம், நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களின் முடி ஆகியவையும் ஏற்படுத்தலாம். இவை சுவாசத் தொகுதியில் ஏற்படும் ஒவ்வாமையாகும்.

இறப்பர் செருப்பு, ஒட்டுப் பொட்டு போன்றவை ஒவ்வாமை காரணமாக சருமத்தில் அழற்சியை ஏற்படுத்தும். இது எக்ஸிமாவாக வெளிப்படும். முடி நிறமூட்டிகள் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

சிலவேளைகளில் அது மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம். அதாவது ஒரே பொருள் வெவ்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

அவ்வாறெனில் அலர்ஜிக்கான மருந்து எடுப்பதன் மூலம் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்த முடியுமா?

அலர்ஜிக்கான சில சிகிச்சைகள் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்தக் கூடும். எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை என அறிந்து அதற்கு உடலை பழக்கப்படுத்தும் ஊசி மருந்துகள் (immunotherapy)அத்தகையன. ஆயினும் மிகவும் பயனுள்ள சிகிச்சை எனச் சொல்ல முடியாது.

ஆயினும் ஒருவர் தனக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் பொருளைக் கண்டறிய முடிந்தால், அதனை தவிர்ப்பதன் மூலம் ஆஸ்மாவைத் தடுக்க முடியும்.

ஆஸ்மா, எக்ஸிமா, அலர்ஜி ஆகியவை ஒன் றோடொன்று தொடர்புடைய நோய்கள் எனில் ஒரே மருந்து இவை யாவற்றிற்கும் பயன்படுமா? சில மருந்துகள் அவ்வாறு பயன்படும்.

உதாரணமாக கோர்ட்டிகோ ஸ்ட்ரொயிட் (corticosteroids) வகை மருந்துகளைக் குறிப்பிடலாம்.

ஆயினும் அவை ஒரே விதமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. தும்மல், மூக்கால் ஓடுதல், மூக்கடைப்பு ஆகியவற்றிற்கு அவை Nasal spray ஆகப் பயன்படுத்தப்படும்.

ஆஸ்மாவிற்கு இன்ஹேலர் (Inhaler) ஆகவும்,

எக்ஸிமாவிற்கு ஓயின்மென்ட் (Ointment) ஆகப் பயன்படுத்தப்படும்.

மோன்டிலியுகாஸ்ட் (Montelukast) போன்ற மருந்துகள் ஆஸ்மா அலர்ஜி ஆகிய இரண்டிற்கும் பயன்படும். இருந்தபோதும் வென்டோலின், பிரிக்கானில் போன்ற சுவாசக் குழாய்களை விரிவிக்கும் மருந்துகள் (Bronchodilator)ஆஸ்மாவிற்கு மட்டுமே பயன்படும்.

யாருக்கு ஆஸ்மா வருவதற்கான வாய்ப்பு அதிகம்? பரம்பரையில் அலர்ஜி நோயுள்ளவர்களுக்கு அதிகமாகும். அதே போல தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள்கள் அதிகமாக உள்ளவர்களுக்கும் அதிகமாகும்.

ஆயினும் பெரும்பாலான ஆஸ்மாவுக்கு காரணம் அலர்ஜி ஆயினும், எல்லா ஆஸ்மாவும் ஒவ்வாமையால் ஏற்படுவதல்ல.

உடற்பயிற்சியின் போது தோன்றும் ஆஸ்மா(exercise – induced asthma),

தடிமன், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களின் போது தோன்றும் ஆஸ்மா,

இரப்பையில் உள்ள அசிட் மேலெழுந்து வருவதால் (GERD) ஏற்படுவது,

தானாகவே ஏற்படும் (intrinsic)வகைகளும் உண்டென்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

– டாக்டர் எம்.கே. முருகானந்தன்-

Read Full Post »

>
நீண்ட நாட்களுக்கு பின்னர் அந்தப் பையன் வைத்தியசாலைக்கு வந்திருந்தான். சந்தோஷமாக இருந்தது. மீண்டும் என்னிடம் வைத்தியத்திற்கு வந்துள்ளான் என்பதால் அல்ல. கடந்த ஆறு மாதங்களாக அவன் என்னைப் பார்க்க வேண்டிய தேவை ஏற்படாதிருந்ததே என்ற மன ஆறுதல்.

ஆறு மாதங்களாகத் தான் அவன் வருத்தம் என்று என்னிடம் வரவில்லை. ஆனால், அதற்கு முந்தைய பத்து மாதங்களில் முப்பது தடவைகள் பார்க்க நேர்ந்தது. கணினியில் உள்ள அவனது கோப்பைப் பார்த்தபோது இது தெரிய வந்தது. எவ்வளவு துன்பம் அவனுக்கு அந்த வேளைகளில்.

ஒரே சளி வருத்தம் ! தும்மல், மூக்கடைப்பு, அரிப்பு, மூக்கால் ஓடுதல், கண்கடி, தலையிடி, தலைப்பாரம், சோம்பல், தூக்கக் குணம், இருமல், இளைப்பு, ஆஸ்மா சொல்லி மாளாது. பாடசாலை செல்லத் தொடங்கி சில மாதங்கள்தான். ஆனால், ஒழுங்காகப் பாடசாலை செல்ல முடியாது, படிக்க முடியாது. இதனால் பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் தூற்றலுக்கு ஆளாக நேர்ந்தது.

அத்தோடு குளிக்காதே, தண்ணி அளையாதே, குளிர்பானம் அருந்தாதே, பழங்கள் சாப்பிடாதே என்ற பெற்றோர்களின் கட்டுப்பாடுகள். மருந்துக்கு மேல் மருந்துகளும் சேர்ந்து கொள்ளவே மகிழ்ச்சியைத் தொலைத்து மந்தமானவனாக மாறியிருந்தான்.

விழுந்ததால் காலில் ஏற்பட்ட உரசல் காயத்திற்காக வந்திருந்தான். சளித்தொல்லைக்காக அல்ல. காயம் பட்டபோதும் இளமையின் உற்சாகம் முகத்தில் பளிச்சிட்டது.

“எப்படி மறைந்தது சளித் தொல்லை’ பெற்றோர்களிடம் வினவினேன்.

“வீடு மாறினோம்.அதிலிருந்து இவனுக்கு சளிபிடிப்பதில்லை’ என்றார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறதா? வீடு மாறினால் சளி பிடிக்காதா!

காரணம் இதுதான். முன்பு அவர்கள் குடியிருந்த வீட்டிற்குப் பின் புறமாக தெருவோரக் கழிவுக் கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. இரவானதும் இவர்கள் வீடெங்கும் அங்கிருந்து படையெடுந்து வரும் கரப்பொத்தான் பூச்சியின் இராச்சியம் தான். இப்பொழுது குடியிருப்பது தொடர்மாடி வீட்டில். அதுவும் 5 ஆம் மாடியில் அங்கு கரப்பொத்தான் அதிகமில்லை. அதனால் இங்கு கரப்பொத்தான் அதிகமில்லை. அதனால் இங்கு அப் பூச்சியின் எச்சங்கள் இருப்பதில்லை. எனவே சளித்தொல்லை நீங்கிவிட்டது.

சரி! சளிக்கும் கரப்பொத்தானுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

சளி, ஆஸ்மா ஆகியவற்றைத் தூண்டுபவையாக பல பொருட்கள் ஆய்வு ரீதியாக இனங்காணப்பட்டுள்ளன. பூக்களின் மகரந்தம், நாய், பூனை போன்ற வளர்புப் பிராணிகளின் ரோமம், தூசி, தூசிப்பூச்சி, கரப்பொத்தான் எச்சம் எனப் பலவாகும்.

இது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இலங்கையைப் பொறுத்தவரையில் வீட்டுத் தூசிப்பூச்சி, களஞ்சியத் தூசிப்பூச்சி, கரப்பொத்தன் ஆகிய மூன்றுமே ஆஸ்மாவைத் தூண்டுவதற்கு முக்கிய காரணமாகும். இதனை பேராசிரியர் அனுரா வீரசிங்க (Prof.Anura Weerasinghe)தலைமையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு தெளிவாகக் குறிப்பிடுகிறது. எமது சூழலில் ஆஸ்மாவுக்கு பூக்களின் மகரதம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் ஆகியவை முக்கியமான காரணிகள் அல்லவாம்.

எமது படுக்கை விரிப்பு, தலையணை,மெத்தை போன்றவற்றில் மிக நுண்ணிய கிருமி (Dust mite) சேர்ந்து விடுவதுண்டு. அவற்றை நீரில் துவைத்து சுத்தப்படுத்துவதால் அக்கிருமியை ஒழித்து விடமுடியாது. அவற்றை வெயிலில் காயவைக்க வேண்டும் அல்லது இஸ்திரிக்கை போட வேண்டும்.

எமது உடைகள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றைக் களஞ்சியப்படுத்தும் இடத்தில் களஞ்சியப்பூச்சி (Storage Mite)உற்பத்தியாகும். இவை இரண்டுமே ஆஸ்மாவைத் தூண்டும் ஏனைய காரணிகளாகும். நீங்கள் சளி, ஆஸ்மா போன்றவை உள்ளவராயின், வீட்டுத் தூசிப்பூச்சி, களஞ்சியதூசிப்பூச்சி, கரப்பொத்தான் ஆகியவற்றோடு தொடர்புறுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆயினும் கரப்பொத்தான் பூச்சியிலிருந்து தப்புவது சற்று சிரமமான காரியம்தான். இறைவனைப் போல எங்கும் நிறைந்தவனாக எல்லாம் வல்லவராக இருக்கிறார். டைனோசியர் போன்ற பாரிய உயிரினங்கள் பலவும் சூழல் மாற்றங்களுக்கு இசைவடைய முடியாது மறைதொழிந்து போக கரப்பொத்தான் பூச்சியோ இன்றும் தாக்குப் பிடித்து நிற்கிறது.

உலகத்திலிருந்து ஒழிக்க முடியாவிட்டால் போகிறது. உங்கள் வீட்டிலிருந்தாவது ஒழியுங்களேன். வீடு மாறினாலும் நீங்கள் கவலையீனமாக இருந்தால் புதிய இடத்திலும் வந்து சேரக் கூடிய தீரன் அது.

டாக்டர் எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>’குழந்தைக்கு சளியா? என்ன செய்வீர்கள்’? ‘கவனியாமல் விட்டுவிட்டால் சளி கூடி பிள்ளைக்கு முட்டுப் பிடித்து மோசமாகிவிடும்’ என்று வைத்தியரிடம் உடனடியாகக் தூக்கிக் கொண்டு ஓடுவீர்கள்.

வைத்தியர் சளிக்கான ஏனைய மருந்துகளுடன் பெரும்பாலும் நுண்ணுயிர் கொல்லி மருந்தையும் (Antibiotic) தரக்கூடும். அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தையாயின் தூசி, புழுதி போன்றவற்றில் விளையாடுவதைத் தவிர்க்கும் படி கூறுவார். படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி துவைப்பதுடன் நல்ல வெயிலில் காயவைக்கும்படியும் கூறுவார். வெயிலில் காயவைக்க முடியாவிடின் அவற்றை மின்அழுத்தியால் அழுத்தும்படியும் கூறக்கூடும். படுக்கையில் சேரக் கூடிய தூசிப்பூச்சி போன்ற நுண்ணுயிர்களை அழிப்பதற்காகவே இந்த ஆலோசனை.

அத்துடன் நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை குழந்தையின் படுக்கை அறையில் நுளைய விடக் கூடாது எனவும் ஆலோசனை கூறக் கூடும். அவற்றின் ரோமம் ஒவ்வாமையைத் தூண்டி ஆஸ்த்மாவை வரவழைக்கக் கூடும் என்பதற்காகவே வைத்தியர்கள் இவ்வாறு கூறுவதுண்டு.

அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றானது ஆஸ்த்மா, நாய், நுண்ணுயிர் கொல்லி மருந்து ஆகியன தொடர்பாக புதிய பார்வையை முன்வைக்கிறது. University of Manibota மற்றும் MacGill University in Montreal ஆகியவற்றில் செய்யப்பட்ட ஆய்வு அது. ஒரு வயது ஆவதற்கு முன்னரே நுண்ணுயிர் கொல்லி மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்கள் ஏழு வயதாவதற்கு முன்னரே ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். அதிலும் நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் தொடர்புறாத குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும்.

நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைப் பொறுத்த வரையில் கெபலோஸ்போரின் (Cephalosporins)என்ற வகை மருந்தைப் பாவித்த குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகமாகும்.

நாய் பற்றிய ஆய்வுதான் மிகவும் சுவார்சிமானது. நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் குழந்தைகளை அதிலும் முக்கியமாக சளி, ஆஸ்த்மா உள்ள குழந்தைகளை அதிகம் அளையவிடக்கூடாது என்பதே இதுவரை நம்பப்பட்ட கருத்தாகும். ஆனால் இந்த ஆய்வின் முடிவு இக் கருத்திற்கு முற்றிலும் மாறானதாகும். அதாவது நாயுடன் தொடர்புறாத குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும் என்கிறது.

காரணம் என்ன? நாயின் உரோமத்தில் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. குழந்தை நாயுடன் தொடர்புறும் போது, அந்த நுண்ணுயிர்கள் குழந்தையின் நோயெதிர்ப்புச் சக்தியை இயல்பாக வளர்ச்சியுறுவதற்கு தூண்டி விடுகின்றன. இளவயதிலேயே இவ்வாறு நாயிலிருந்து வரும் நுண்ணுயிர்களுடன் தொடர்புறுவதால் குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தி, வலுவடைந்து ஆஸ்த்மா தோன்றுவதைத் தடுக்கிறது என அந்த ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மாறாக நாயுடன் தொடர்புறாத குழந்தைகள் குறைந்தளவு நுண்ணுயிர்களுடனேயே தொடர்புறுவதால் நோயெதிர்ப்புச் சக்தி் வலுவடையாது ஆஸ்த்மாவுக்கு கூடியளவு ஆட்படுகிறார்கள்.

எனவே நீங்கள் செய்யக் கூடியது என்ன? குழந்தையுள்ள உங்கள் வீட்டில் ஒரு நாய் வளருங்கள். நாய்க்கு தடுப்பூசிகள் போட்டு குளிப்பாட்டி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள். நாயை குழந்தை வளரும் இடங்களுக்கு வந்து செல்ல அனுமதியுங்கள். ஆயினும் குழந்தை நாயைச் சீண்டிக் கடிபடாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு, அதிலும் முக்கியமாக ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நோய் வந்தால் அவசரப்பட்டு நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைக் கொடுக்க வேண்டாம். முக்கியமாக வைத்திய ஆலோசனை இன்றிக் கொடுக்க வேண்டாம். ஆயினும் சில தருணங்களில் மருந்து கொடுத்தே ஆகவேண்டும் என்ற அவசியம் இருந்தால் அது கெபலோஸ்போரின் வகை மருந்தாக இல்லாதிருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

ஏற்கனவே ஆஸ்த்மா உள்ள குழந்தைகளுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு நாயின் ரோமங்களில் உள்ள ஒவ்வாமை தூண்டிகள் ஆஸ்த்மாவை மோசமாக்கலாம்.

Source: Chest, 131:1753-1759
நன்றி: இருக்கிறம் 15.08.2007

Read Full Post »

>பசுப்பால் சளியை தடுக்கும்

“இவனுக்கு சளி அடிக்கடி பிடிக்கிறபடியால் நான் பசுப்பால் கொடுக்கிறதில்லை” என்றாள் தாய்.
வளரும் குழந்தை முன்பள்ளிக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறான்.

“நீங்கள் செய்வது தவறு. அவனது வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பால் அவசியம் அல்லவா?” எனக் கேட்டேன்.

மாப் பால் கரைத்துக் கொடுப்பதாக சொன்னாள்.
பசும் பாலுக்கு சளிபிடிக்கும் என்பது அவளது நம்பிக்கை.

அவள் மட்டுமல்ல எல்லாப் பெற்றோர்களது நம்பிக்கையும் கூட,
ஒட்டு மொத்த தமிழ் மக்களது நம்பிக்கை என்று கூட சொல்லலாம்.

அந்த நம்பிக்கை முற்று முழுதாக தவறானது என அண்மையில் ஆய்வு சொல்கிறது.

பசும்பாலுக்கு சளிபிடிக்காது என்று மட்டுமல்ல, அது சளிக்குக் காரணமான ஆஸ்மா, அலர்ஜி(ஒவ்வாமை) ஆகிய நோய்கள் வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என ஆய்வு செய்த டொக்டர் மக்ரோவாசர் ( Dr. Macro waser) கூறுகிறார். இவர் சுவிட் சர்லாந்து நாட்டு பஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

பதனிடப் படாத பாலைக் குடித்த பிள்ளைகளுக்கு அல்லது அதிலிருந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பாற் பொருட்களை உண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்மா அலர்ஜி ஆகியன ஏற்படுவது குறைவாம்.

5 முதல் 13 வயது வரையான 14893 பேரை உள்ளடக்கிய ஆய்வு இது.

இக் குழந்தைகள் பாற்பண்ணை, கிராமம், நகரம் எனப் பல்வேறு சூழல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அவர்கள் எந்தச் சூழலிருந்து வந்தாலும் பசும்பால் சளியிலிருந்து பாதுகாப்பு கொடுத்தது. பசும்பாலை ஒரு வயது முதல் குடித்து வந்த குழந்தைகளுக்கு கூடியளவு நன்மை கிடைத்ததாம்.

பசும்பாலை பச்சையாகக் கொடுக்கக் கூடாது. காய்ச்சித்தான் கொடுக்க வேண்டும்.

இல்லையேல் சில நோய்கள் தொற்றக்கூடும்.
இத்தகைய காய்ச்சிய பால் தான் பாதுகாப்பை கொடுத்தது.

பதனிடப்பட்டு பைக்கற்றில் அடைக்கப்பட்ட பாலோ, மாப்பாலோ அத்தகைய பாதுகாப்பை கொடுப்பதாக அறியப்படவில்லை.

இதிலிருந்து சளிபிடிப்பவர்களுக்கு பசும்பால் கொடுக்காது மாப்பால் கொடுப்பது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

அத்துடன் சிறு வயதிலிருந்தே, அதாவது ஒரு வயது முதற் கொண்டு தினசரி பசும்பால் கொடுத்துவந்தால் ஆஸ்மா, அலர்ஜி போன்ற சளித்தொல்லைகளும் அதிகம் வராது என்பதும் தெளிவாகிறது.

எனவே உங்கள் குழந்தைக்கு சளித்தொல்லை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பசும்பால் கொடுத்து வாருங்கள். அதனால் சளித்தொல்லை குறைவதுடன் ஆரோக்கியமும் கிட்டும்.

பசும்பாலில் உள்ள என்ன பொருள் அல்லது என்ன குணாதிசயம், அலர்ஜிக்கும் ஆஸ்மாவிற்கும் எதிரான பாதுகாப்பைக் கொடுக்கின்றது என்று அறிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

தினக்குரல் தினசரியின் ஹாய் நலமா பத்தியில் நான்  எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

Read Full Post »

>இன்ஹேலர்களை உபயோகிக்கலாமா?”

உது பழகிப்போகும். பாவிச்சால் விட ஏலாது. எனக்கு பம் வேண்டாம். குளிசை தாங்கோ.” “போற இடமெல்லாம் தூக்கிக் கொண்டு திரிய வேணும். அரியண்டம். எனக்கு இன்ஹேலர் (Inhaler) வேண்டாம்.”

“உது கடும் ஆஸ்மாகாரர்களுக்கு இல்லோ. எனக்கெதுக்கு.”

“எனக்கு வெறும் இருமல்தானே! இழுப்பு இல்லை; எனக்கேன் பம்.”

உட்சுவாசிக்கும் மருந்துகளை (Inhaler) உபயோகிக்கும்படி எழுதிக்கொடுத்தால் பலரும் சொல்லும் மறுமொழிகள்தான் அவை. ஆனால் இவை யாவும் தவறான தகவல்களாகும்.
ஆஸ்மா என்பது இழுப்பாக இருக்கவேண்டும் என்பதில்லை. வெறும் இருமலாகக் கூட இருக்கலாம் என்பதை முன்பும் ஒருமுறை சொல்லியிருக்கிறேன். ஆஸ்மா இழுப்பாக இருந்தாலும் சரி, இருமலாக இருந்தாலும் சரி அதற்கான மிகச் சிறந்த மருந்து பம் என்று பொதுவாக சொல்லப்படும் Inhaler தான். அதில் கூட பல்வேறு வகையான மருந்துகள் உள்ளன. ஆயினும், அவை பற்றிய நுணுக்கங்களைத் தவிர்த்து அவற்றின் நன்மை தீமைகள் பற்றியும் பார்ப்போம். உலகின் பல்வேறு பகுதிகளிலும் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி இவற்றின் நன்மை தீர்க்கமாக நிறுவப்பட்டுள்ளது.

பலரும் நம்புவதற்கு மாறாக உட்சுவாசிக்கும் மருந்து (Inhaler) மிகவும் ஆபத்தற்றது. காரணம் இதில் பாவிக்கப்படும் மருந்தின் அளவு மிகக்குறைவாகும். மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் அளவு மில்லிகிராமிலிருக்க, பம்மில் உள்ளது மைக்ரோகிராமிலுள்ளதே இதற்கு சான்றாகும். மருந்தின் அளவு குறைவாக இருப்பதால் மாத்திரைகளை உபயோகிக்கும் போது ஏற்படும் பதற்றம், கைகால் நடுக்கம் போன்றவை பம் பாவிக்கும்போது ஏற்படுவதில்லை. அத்துடன், ஆபத்தான பக்கவிளைவுகளும் இல்லை.

அத்துடன், பம் உபயோகித்ததும் ஒரு சில நிமிடங்களில் சுகம் தெரியும். ஆயினும், மாத்திரைகளை எடுக்கும்போது குடலில் செரிந்து இரத்தத்தில் கசிந்து சுவாசத்தில் வேலைசெய்ய ஆரம்பிக்க 2-3 மணி நேரம் எடுக்கும். மாத்திரைகளானது ஆஸ்மா வந்தால் அதை தணிக்க மட்டுமே உதவும். ஆயினும், பம் மருந்துகள் ஆஸ்மாவை விரைவாக தடுப்பது மாத்திரமின்றி, அடிக்கடி வராமல் தடுக்கவும் உதவுகின்றன. தடுப்பு ஆற்றல் இருப்பதால் பெரும் இருமலாகவோ, சிறிய இழுப்பாகவோ இருப்பது எதிர்காலத்தில் கடும் ஆஸ்மாவாக மாறுவதையும் தடுக்கும்.

பழக்கப்படுவதற்கு இது போதை மருந்து அல்ல. பாவித்தால் தொடர்ந்து பாவிக்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும். ஒவ்வொரு நோயாளியினதும் நோயின் தீவிரத்திற்கு ஏற்ப குறுகிய காலமோ, நீண்ட காலமோ உபயோகிக்க நேரிடும். விலை, மாத்திரைகளை விட சற்று அதிகமாயினும் ஆபத்திற்கு விரைவாகவும் நன்றாகவும் குணமாக்கும் இன்ஹேலர்களை உபயோகிக்க தயங்க வேண்டியதில்லை.

Read Full Post »