Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘இரகசியம் பேணல்’ Category

>

“ஐயா நான் சொன்ன கதையை ஒருதருக்கும் சொல்லிப் போடாதையுங்கோ…”

குரல் கேட்டது ஆளைக் காணவில்லை.

அறைக்குள் நுழைய முன்னரே திரைச் சீலைக்கு வெளியே இருந்தே சொல்லிக் கொண்டே வந்தாள் அந்த மூதாட்டி.

”தனது கதை வெளியில் பரவிடுவதற்கு முன் தடுத்துவிட வேண்டும் என்ற அவசரம்தான்  அவளை அப்படிப் பேச வைத்திருக்க வேண்டும்.

என்ன ஏடா கூடமான கதையை என்னிடம் சொல்லியிருப்பாள் என்பது ஞாபகத்தில் இல்லை.

“என்ன கதை சொன்னியள். ஞாபகமில்லை”

“போன முறை வரக்கை நானிருக்கிற வீட்டுக்காரர் பற்றிச் சொன்னனே …”

நான் புரியாமல் விழிக்க ….. ஞாபகப்படுத்த ஆரம்பித்தாள்

அந்த அம்மாவின் நிலைமை படுகவலைதான். கணவன் காலமாகிவிட்டார்.

மூன்று பிள்ளைகள். யாழ்பாணத்தில் குடியிருந்த அவர் தனது வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் கொழும்பில்தான் கடந்த பத்து வருடங்களாக வாசம் செய்கிறாள்.

தனியே இருக்க முடியாததால் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்திருக்கிறாள்.

அவளைப் பார்க்கவென வீட்டுகாரருக்கு பிள்ளைகள் கணிசமான தொகையை மாதாமாதம் கொடுக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் அம்மாவை அக்கறையோடு பார்ப்பதில்லை. ஏனோதானோ என அலட்சியப்படுத்துகிறார்கள்.

தண்டச் சோறு என்பது போல நக்கல்.

இவளுக்கென தனியாக வரும் வேறு காசிலும் கை வைத்து விடுவார்கள்.

இவ்வாறு பல இடைஞ்சல்கள், மனக் கசப்புகள்.

இவற்றை மருத்துவன் என்ற முறையில் என்னிடம் சொல்லி மனம் ஆறியிருந்தாள். நான் இவற்றை விட்டுக்காரருக்குச் சொல்லிவிட்டால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் வெளிவிட வேண்டாம் எனச் சொல்கிறாள்.

அம்மா சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன அவரது பிரச்சனையை எவருக்கும் நான் சொல்லப் போவதில்லை. அவரது பிரச்சனையை மட்டுமல்ல எந்த நோயாளியின் பிரச்சனையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. நான் மட்டுமல்ல எல்லா மருத்துவர்களும் அவ்வாறே சொல்வதில்லை.

இது அவர்களது தொழில் தார்மீகம்.

நோயாளர்களது தனிப்பட்ட பிரச்சனைகளை மட்டுமல்ல அவர்களது நோய் பற்றிய தகவல்களைக் கூட மற்றவர்களுக்கு வழங்குவதில்லை. அவ்வாறு வழங்குவது தவறு.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.

ஒரு மகன் அருகிலிருந்து பராமரிக்க முடியாத நிலையில் தனது தந்தையின் உடல்நிலை பற்றி அறிவதற்காக எடுத்திருந்தார்.

தந்தையின் மீதுள்ள அவரது பாசமும், தூர தேசத்திலிருந்து அவரது நிலை அறிய முயன்ற அக்கறையும் உண்மையானது. பாராட்டத்தக்கது.

ஆனால்! நான் தகவல் தர மறுத்துவிட்டேன்.

அவருக்கு சற்றுக் கோபமும் எரிச்சலும் ஏற்படவே செய்தன.

ஆனால் எனது நிலை இக்கட்டானது. நான் தகவல் தர மறுத்ததற்கு காரணங்கள் இரண்டு.

அழைத்தவர் உண்மையில் நோயாளியின் மகன் தானா அல்லது வேறு யாராவது துர்நோக்கங்களுக்காகக் கேட்கிறாரா என்பது நிச்சயமாக தெரியவில்லை.

இரண்டாவது மிக முக்கியமான காரணம்.

மகனாகவே இருந்தாலும் தனது உடல்நிலை பற்றி அவருக்கு தெரிவிக்க தகப்பனுக்கு விருப்பம் உள்ளதா என்பது பற்றியும் அவ்வேளையில் எனக்குத் தெரியாது.

ஆயினும் பின்னர், தகப்பன் தனது நோய் பற்றி மகனுக்குக் கூறும்படி கேட்ட பின்னர் தகவல்களை தயக்கமின்றித் தந்தேன்.

நோய் என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம். அதை அவர் மற்றவர்களுக்கு சொல்லவோ மறைக்கவோ செய்யலாம்.

இதனால்தான் எயிட்ஸ் நோயாளியிடம் கூட அவரது சம்மதம் இன்றி இரத்தப் பரிசோதனை செய்ய முடியாது. அவரது நோய் பற்றி மற்றவர்களுக்கு சமூக நலனுக்காகக் கூட வெளிப்படுத்த முடியாது.

மற்றவர்களுக்கு சொல்வதா வேண்டாமா என்பது நோயாளிகளின் விருப்பைப் பொறுத்தது.

மருத்துவர்கள் கூட அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.

சரி! ஒரு நோயாளியின் உடல்நிலை பற்றி மற்றொரு மருத்துவர் கேட்டால் என்ன செய்வது?

அதே விடைதான். சொல்ல முடியாது.

அதாவது தனிப்பட்ட தேவைகளுக்காகக் கேட்டால் சொல்ல முடியாது.

ஆனால் அந்த மருத்துவரும் நோயாளியின் சிகிச்சையில் சம்பந்தப்பட்டிருந்தால் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது மருத்துவர்களின் கடமையாகும்.

“இவ்வளவெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால் பத்திரிகையில் எழுதுகிறீர்களே” என்று கேட்கிறீர்களா?

எழுதுகிறேன்!

எழுதுகிறோம் !!

ஆனால் அவை எதுவும் எந்தத் தனிப்பட்ட நோயாளியை அல்லது நபரைக் குறிப்பவை அல்ல.

விடயத்தை இலகுவாக விளக்குவதற்கான அவர், அவள் என எழுதுவதுண்டு. ஆனால் அவை எவரையும் குறிப்பாகச் சுட்டாது.

சொல்லப்படும் சம்பவங்களும் தேவைக்கு ஏற்ப கற்பனையில் உருவாக்கப்பட்டவையே.

ஆனால் அனுபவத்தால் பெறப்பட்ட விடயங்களுக்கு கொடுக்கப்படும் உருவங்களேயாகும்.

இது ‘ஓவியர் அனுபவம் சார்ந்து கற்பனையில் ஓவியம் தீட்டுவது போன்றது. அன்றி புகைப்படங்கள் போன்றவை அல்ல.’

வீரகேசரி பத்திரிகையின் ஞாயிறு  வெளியீட்டில் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை. சில படங்களுடன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0

Read Full Post »