Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘இருமல்’ Category

>

“ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்..”
என்பது வாழ்க்கையின் அந்திம ஓரத்தில் இருக்கும் கலைஞர் அரசியல் ஜனன ஆரம்பத்தில் எழுதிய வசனம்…. பராசக்தியில் சிவாஜி பேசியது…

ஆனால் தொடர்வது வேறு கதை. ..

“இருமினாள் இருமினாள். விழி பிதுங்கி மூச்சடக்கும் வரை இருமியவள்..”; கதை இது.

 “என்னாலை ஒன்றுமே செய்ய முடியவில்லை..” அனுங்கிக் கொண்டே வந்த அந்தப் பெண்ணின் முகத்தில் சோர்வும், சோகமும் ஒட்டியிருந்தன.
களைப்போடு வந்தவள் உட்கார்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொள்ள சில நிமிடங்களாயிற்று.

வயதானதால் ஏற்பட்ட களைப்பு அல்ல. இளம் பெண் 20-22 வயது மட்டுமே இருக்கும். சோர்ந்த கண்களைச் சுற்றி மடல்கள் சற்று வீங்கியிருந்தது. கண்களும் சற்றுச் சிவந்திருந்தது.

இரண்டு வாரங்களாக இருமலாம். மிகக் கடுமையான இருமல். இருமி இருமி முடியாமல் சத்தியிலும் முடிவதுண்டாம். இதனால் சாப்பிடுவதும் குறைவு. சற்று மெலிந்தும் விட்டாளாம்.

மருந்தெடுத்தும் குறையவில்லை. இரண்டு வாரங்களுக்கிடையில் மூன்று வைத்தியர்களைக் கண்டும் குறையவில்லை.

சிறிய கட்டாக பரிசோதனை ரிப்போட்டுகளை என் முன் வைத்தாள்.
சரியாகத்தான் அவர்கள் ஆராய்ந்திருந்தார்கள். இரத்தம், சிறுநீர், சீனி, சளி, எக்ஸ் ரே என எதையும் விட்டு வைக்கவில்லை.

நிதானமாக அவற்றை ஆராய்ந்து பார்த்தபோது எந்த பிழைகளும் தெரியவில்லை. நியூமோனியா. சயரோகம், கட்டி, புற்றுநோய் எதற்கான அடையாளங்களும் கிடையாது.

மிகக் கடுமையான அன்ரி பயரிக் மருந்துகள், ஆஸ்த்மாவிற்கான மருந்துகள், ஸ்டீரொயிட் என்று சொல்லப்படும் மருந்துகள், பல வகை இருமல் சிறப் மருந்துகள் கொடுக்கப்பட்டிருப்பதை அவதானித்தேன்.

தொண்டை, சுவாசப்பை, மூக்கு, காது என முக்கிய உறுப்புகளைப் பரிசோதித்துப் பார்த்த போது அவை யாவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது.

“எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டு விட்டேன். ஒண்டும் பிரயோசனமில்லை. வயிறு ஊதி, வாய் கசந்து, சாப்பிட முடியாது போனதுதான் மிச்சம். வயிற்றையும் பிரட்டுகிறது. கொஞ்சமும் சுகமில்லை” என்றாள்.

உண்மைதான் மாறி மாறி மூன்று வகை அன்ரிபயோடிக் மருந்துகளையும் பிரட்னிசலோன் போன்றவற்றையும் உட்கொண்டால் வயிற்றில் குழப்பம் ஏற்படுவதை தடுக்க முடியாதுதான்.

மருந்துகளுக்கு மேலாக ஆஸ்த்மாவுக்கான இன்ஹேலரும் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவும் வேலை செய்யவில்லை.
ஆஸ்த்மா இருந்தால்தானே அது வேலை செய்யும்.

“இது என்ன வருத்தம்” அவள் கேள்வி எழுப்பினாள்.

வீங்கிய மடல்களும், கண்ணின் வெண் பகுதியில் இரத்தம் கசிந்திருந்ததும், இருமல் வாந்தியில் முடிவதும், அது என்ன நோய் என்பதை எனக்கு ஓரளவு புலப்படுத்திவிட்டன. ஆயினும் நிச்சயப்படுத்தாது சொல்ல முடியாது.

நிச்சயப்படுத்துவதாயின் அவளது இருமல் எப்படியானது என்பதை அறிய வேண்டும்.

“எப்படியானது உங்கள் இருமல்? தொடர்ந்து வருமா, திடீரென வருமா, வந்தால்…” 

பீறிட்டு வந்தது இருமல். எனது கேள்வி முடிவதற்கிடையில்.
இருமினாள், இருமினாள், இருமிக் கொண்டேயிருந்தாள். விழி பிதுங்கி மூச்சடக்கும் வரை இருமினாள்.

தொடர்ந்து இருமினாள்.

முகம் சிவந்துவிட்டது. கண்கள் பீறிடுப் பிதுங்கி வெளியே பாய்ந்து விடுமோ எனப் பயமுறுத்தியது.

திடீரென ஒரு கேவல் சத்தம். உயிர் பிரியுமாற் போன்ற அவல ஒலி.

நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து.

பயப்படாதீர்கள்!

எதிர்பார்த்ததுதான்.

இவ்வளவு நேரமும் சுவாசத்தை உள்ளெடுக் முடியாது, இருமி இருமி வெளியே விட்ட காற்றைத் திடீரென ஒரே மூச்சில் உள்ளெடுத்ததால் பீறிட்டு எழுந்த சத்தம்.

Whoop அதுதான் அந்தச் சத்தம். அந்தச் சத்தத்தை வைத்துத்தான் அந்த நோயின் பெயரே வந்திருக்கிறது. அதை கொண்டே நோயை நிச்சயப்படுத்த வேண்டும். இருமல் எப்படியானது என்ற கேள்விக்கு விடை சொற்களாக அன்றி செயற்பாடாகவே வந்துவிட்டது.

எனது வேலை சுருங்கியது. நோய் தெளிவானது.

வீங்கிய மடல்களும், கண்ணின் வெண் பகுதியில் இரத்தம் கசிந்திருந்ததும்…..

Operation success. Patient dead  என்பது போலல்ல.

வூப்பிங் கொவ்  (Whooping Cough) என ஆங்கிலத்தில் சொல்வது, மருத்துவத்தில் Pertussis ஆகும். தமிழில் குக்கல் என்போம்

இப்பொழுது பெருமளவு காணப்படுவதில்லை. காரணம் சிறுவயதில் போடப்படும் முக்கூட்டு ஊசிதான். இந்நோய் குணமடைய நீண்டகாலம் எடுக்கும். சுமார் 6 வாரங்கள் முதல் 2 மாதங்கள் எடுக்கும்.

ஆரம்பகட்டத்தில் மட்டுமே அன்ரிபயோரிக் மருந்துகள் உதவும். அதுவும் ஒரு குறிப்பிட வகை அன்ரிபயோடிக் மட்டுமே. இவள் சாப்பிட்டதில் அது இல்லை. வீணாக ஏனையற்றை உண்டதுதான் மிச்சம்.

நீண்ட நாள் தொடரும் இந் நோயைப் பற்றி விளக்கி, அன்ரிபயோரிக் மருந்துகள் நிறுத்தி, இருமலைத் தணிக்கும் சாதாரண மருந்துகளை கொடுத்தேன்.

தேவையற்ற மருந்துகள் நீக்கப்பட்ட சந்தோசத்திலேயே அவளது வருத்தம் அரைவாசியாகக் குறைந்து விட்டது.

எனது மருந்தால் அல்ல!

இருமலுக்கு மற்றொரு காரணம் பற்றிய எனது முன்னைய பதிவு


நாட்பட்ட இருமலும் காதுக்குடுமியும்

பசுப்பாலுக்கும் சளிக்கும் உள்ள தொடர்பு பற்றிய பதிவுக்கு


பசுப்பால் சளியை தடுக்கும்

வீரகேசரி வாரவெளியீடு “Steth இன் குரல்” இதழ் கீற்றில் 03.04.2011 ல் வெளியான எனது கட்டுரை (மருந்துகளால் மாறாத இருமல்.)
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>“அம்மாக்கு நல்ல இருமல். ரா ராவா இருமிறா.

அவக்கும் தூக்கம் இல்லை. எங்களுக்கும் அவவாலை சிவராத்திதான்.

நல்ல மருந்தா தாங்கோ!”

“நீங்கள் சொன்னபடியால் நல்ல மருந்துதான் தாறன். இல்லாட்டில் கழிவு மருந்துதான் தந்திருப்பன்”.

முகத்தை நான் சீரியஸாக வைத்துக் கொண்டு
சொன்ன போதும் ……….
மேலும் படிக்க கிளிக் பண்ணுங்கள்

Read Full Post »

“அம்மாக்கு நல்ல இருமல். ரா ராவா இருமிறா.

அவக்கும் தூக்கம் இல்லை. எங்களுக்கும் அவவாலை சிவராத்திதான்.

நல்ல மருந்தா தாங்கோ!”

“நீங்கள் சொன்னபடியால் நல்ல மருந்துதான் தாறன். இல்லாட்டில் கழிவு மருந்துதான் தந்திருப்பன்”.

முகத்தை நான் சீரியஸாக வைத்துக் கொண்டு

சொன்ன போதும்

அவருக்கு எனது நக்கல் புரிந்துவிட்டது.

புரிய வேண்டும் என்றுதானே சொன்னேன்.

‘சொரி டொக்டர். சும்மா பேச்சுக்கு சொன்னனான்’ என்றார்.

அவருக்கு வயது 60 இருக்கும்.

அவரின் அம்மா 80தைத் தாண்டியவர்.

எந்த நோயாளியும் மருத்துவரைப் பொறுத்தவரையில் ஒன்றுதான்.

தனிப்பட்ட வேறுபாடுகள் கிடையாது.

தன்னிடம் வந்தவரது நோயைத் தணிப்பதுதானே மருத்துவரின் கடமை.

நோயாளியின் தற்போதைய நோய் மற்றும் உடல் நிலை ஆகியவற்றைக் கவனித்து அதற்கேற்ற மருந்தைக் கொடுப்பார்கள்.

ஒருவருக்கு நல்ல மருந்து மற்றவருக்கு கூடாத மருந்து எனக் கொடுப்பது தொழில் தர்மம் அல்ல.

தொழில் தர்மத்தை கணக்கில் எடுக்கா விட்டால் கூட, நோய்க்கு ஏற்ற மருந்து கொடுக்காவிட்டால் சிகிச்சைக்கு வந்தவரது நோய் குணமாகாது.

‘கைராசியில்லாத டொக்டர்’,

‘அக்கறையில்லாதவர்’,

‘நோய் பிடிபடாதவர்’

போன்ற பல வாய்மொழிப் பட்டங்கள் கிடைப்பதை எந்த மருத்துவர்தான் விரும்புவார்.

‘நல்ல கத்தரிக் காயாப் பொறுக்கிப் போடு மேனை’,

‘அரிசி முதல் தரமாத் தாங்கோ’,

‘பெஸ்ட் கிளாஸ் சீலையாக எடுத்துக் காட்டுங்கோ’

என்று கேட்பது போலத்தான்.

‘நல்ல மருந்தாத் தாங்கோ’ என்பதும்.

வெறும் பழக்க தோசம்.

எனவே நான் கணக்கில் எடுப்பது கிடையாது.

அம்மாவைப் பரிசோதித்து அவவிற்கான மருந்துகளை எழுதிக் கொண்டிருந்தேன். மகனின் திருவாய் மீண்டும் திறந்தருளியது.

‘அம்மாவின்றை இருமலுக்கு arrackகொடுக்கலாமோ’

இருமலுக்கு அரக்கா?

அதைக் கொடுத்தால் போதை உண்டாகும்.

மதுப் போதையில் இருமுவது புரிவதில்லையே ஒழிய நோய் தணியாது.

பழகிவிட்டால் விடவும் முடியாது.

‘கொடேன்’ என்ற மருந்து சற்றுப் போதை கொடுக்கக் கூடியது. இது கலந்த ஒரு இருமல் சிரப் இலங்கையில் நல்ல பிரபலம்.

பலர் தாங்களாகவே அதனை வாங்கி உபயோகித்து. ‘சுகம்’ கண்டனர்.

விற்பனை அமோகமாகியது.

பலர் ‘மருந்துப் போதையில்’ திளைத்தனர்.

மருத்துவத்துறையினர் விழித்துக் கொண்டனர்.

இதனால் மருத்துவரின் சிட்டை இன்றி அம் மருந்து விற்பதை அரசு தடைசெய்ய நேர்ந்தது.

எனது சிந்தனைகளை அவர்களுக்கு புரிய வைப்பதற்கான சொற்களைத் தேடிக்கொண்டிருக்கையில் அவரது அடுத்த கேள்வியும் எழுந்தது.

‘அம்மாக்கு பசியும் இல்லை. பிரண்டி கொடுக்கலாமோ’

அரக், பிரண்டி தவிர இவருக்கு வேறு மருந்துகளே தெரியாதா?

‘கொடுக்கலாம்’ என்றேன்.

எனது விடையைக் கேட்ட புழுகத்தில் மலர்ந்த அவரது முகத்தை உற்றுப் பார்த்தேன்.

கன்னம் அதைத்திருந்தது.

கண்களின் கீழ்மடலில் வீக்கம்.

முகம் பொருமியது போலிருந்தது.

கண்களில் அசட்டுத்தனமான ஒரு கிறங்கல்.

‘நல்ல தண்ணிச்சாமி போலை’ என மனம் கணித்தது.

அவருக்கு சர்வரோக நிவாரணியாகப் பயன்படுவது மது என்பது புரிந்தது.

அதனையே அம்மாவுக்கும் கொடுத்துப் பழக்கிவிட்டால் அவருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அவசரத்திற்குக் கை கொடுக்கும்.

அம்மாவிற்கு என வாங்குவதில் மகனுக்கும் பங்கு இருக்கத்தானே செய்யும். சொத்தில் பங்கு கிடைப்பது போல.

“கொடுக்கலாம்…”

“…..அம்மாவையும் குடிக்கு அடிமையாக்க வேணுமெண்டால்”

என்றேன் சற்று அழுத்தமாக.

மதுவால் சினந்திருந்த

முகம் மேலும்

செம்மை பூத்தது.

மதுப் பாவனையின் தீமைகள் பற்றி ஆழமாக அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்

Read Full Post »

>நாட்பட்ட இருமலும் காதுக்குடுமியும்

அந்த முதியவருக்கு இருமல். கடுமையானது அல்ல. ஆயினும் நீண்ட நாட்களாத் தொல்லை கொடுக்கின்றது. சளி கிடையாது. வெறும் வரட்டு இருமல்.

‘பார்க்காத வைத்தியர் கிடையாது. (என்னையும் சேர்த்துத்தான் சொன்னார்) செய்யாத சிகிச்சையும் கிடையாது. செத்தாப் பிறகுதான் நிற்கும்போலை’ என மிகுந்த மனக் கவலையுடன் கூறினார்.

கேட்டபோது மனவேதனையாக இருந்தது. குற்ற உணர்வும் ஏற்பட்டது.அவரைச் சோதித்துப் பார்த்தபோது எந்த வித்தியாசமான குறிகளும் தெரியவில்லை. பழைய பரிசோதனை அறிக்கையிலும் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. மீண்டும் மிக நிதானமாக ஆராய்ந்து பார்த்ததில் இரண்டு காதிற்குள்ளும் குடுமி அடைந்திருப்பது தெரிந்தது.

காதுக் குடுமி இயற்கையாக உற்பத்தியாவது. நோயல்ல. காதுக்குள் சுரக்கும் எண்ணெய் போன்ற திரவமே அடிப்படையானது. இது காதின் பாதுகாப்பிற்காகவே சுரக்கின்றது. வாயை மென்று உண்ணும்போது தசைகளில் ஏற்படும் அசைவுகள்மூலம் தானாகவே சிறிது சிறிதாக வெளியேறி விடுகின்றது. சிலருக்கு காதின் தோலிலிருந்து உதிரும் கலங்களும் ரோமங்களும் அதனுடன் சேர்ந்து இறுகிக் கட்டியாகி விடுவதுண்டு.

காதுக் குடுமி இயற்கையானது என்பதால் பொதுவாக எந்தத் தொல்லையும் கொடுப்பதில்லை. முன் கூறியது போல இறுகிக் கட்டியாகி விட்டால் கூட பலருக்கும் எவ்வித தொந்தரவும் ஏற்படுவதில்லை. காது கேட்பது மந்தமாக இருக்கலாம். சிலருக்கு மென்மையான வலி ஏற்படலாம். தலைக்கு முழுகும்போது அல்லது நீந்திய பின்னர் காது அடைப்பது போலிருப்பதுடன், வலியும் ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு காதிற்குள் இரைச்சல் ஏற்படக்கூடும். தலைச் சுற்றும் வரக்கூடும். வெகு அரிதாகவே நாட்பட்ட இருமல் காரணமாக காதுக் குடுமி இருப்பதுண்டு. அதனால் வைத்தியர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை. அந்த முதியவருக்கு தொல்லை கொடுத்த நாட்பட்ட இருமலானது காதுக் குடுமியை அகற்ற நின்றுவிட்டது.

இதை வாசித்தவுடன் நாட்பட்ட இருமல் உள்ளவர்கள் காதுக் குடுமியை அகற்றுவதற்கான ஆயுதங்களைத் தேடி ஓடவேண்டாம். என்ன ஆயுதங்கள்? காது கிண்டி, நெருப்புக் குச்சி, சட்டைப்பின், கடதாசிச் சுருள், பஞ்சு முனைக் குச்சி (Ear Buds) இப்படி இன்னும் பல. இவற்றை நீங்கள் உபயோகிப்பது ஆபத்தானது. எடுக்க முயலும்போது குடுமி வழுகி உட்புறமாகத் தள்ளுப்பட்டு செவிப்பறையை சேதமாக்கலாம். இதனால் காது செவிடுபடவும் வாய்ப்புண்டு. அல்லது கிண்டுவதால் உரசல் ஏற்பட்டு புண்படலாம். கிருமித் தொற்று ஏற்பட்டு சீழ் வடியலாம். இப்பொழுது காதில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு பஞ்சு முனைக் குச்சிகள்தான் காரணம் எனக் காது வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்திருந்து அவற்றை உபயோகிப்பதைத் தவிருங்கள்.

காதுக்குடுமி இருந்தால் வைத்திய ஆலோசனை பெறுங்கள். அது கரைந்து வெளியேறுவதற்கான துளி மருந்துகளை அவர் தரக்கூடும். அது தானே கரைந்து வெளியேறும் இல்லையேல் வைத்தியர் காதைக் கழுவி அகற்றுவார். சிலருக்கு கருவிகள் மூலமும் அகற்றக்கூடும்.

காதுக் குடுமியை அகற்ற வேண்டுமா? வேண்டாமா? அகற்றுவது அவசியமாயின் எந்த முறையில் அகற்றுவது என்பன பற்றி வைத்திய ஆலோசனைப்படியே நடவுங்கள்.

Read Full Post »