Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘உயர் இரத்த அழுத்தம்’ Category

‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்றான் பாரதி. காலை எழுந்தவுடன் குளிசை என்று பல முதியவர்கள் மருந்துப் போத்தல்களைத் திறக்கிறார்கள். மிகுதிப் பேர் ‘மாலையில் படுக்கையில் சரியும் முன்னர் மாத்திரை’ என முணுமுணுக்கிறார்கள்.

நீரிழிவு கொலஸ்டரோல், தைரெயிட் நோய்களைப் போன்ற பல நோய்கள் போலவே பிரஸர் நோய் உள்ளவர்களும் தொடர்ந்து மருந்து சாப்பிடுவது அவசியம். மருத்துவர் சிபார்சு செய்யத குறிப்பிட்ட மருந்தைக் குறிப்பட்ட அளவில் குறிப்பட்ட நேரத்தில் உட்கொள்ள வேண்டும். அலுக்காமல் சலிக்காமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

பிரஸர் மருந்துகளை உட்கொள்வதற்கான சிறந்த நேரம் எது. காலையா, இரவா, மதியமா?

பிரசரால் ஆபத்துகள் எவ்வேளையில்

இதற்கான விடையைத் தேடு முன்னர் பிரஸர் பிரச்சனையால் ஏற்படுகின்றன ஆபத்தான பின் விளைவுகள் எவை அவை எந்த நேரத்தில் ஏற்படகின்றன என்பதை அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.

இருதய நோய்களால் ஏற்படும் மரணங்களை ஆராய்ந்த போது அவற்றில் 70 சதவிகிதமானவை காலை 7 மணி முதல் 9 மணிக்குள் நிகழ்வதாக மிகப் பிரபலமான குசயஅiபொயஅ ஆய்வு கூறியது. மற்றொரு ஆய்வானது மாரடைப்புகளில் 40 சதவிகிதமானவை காலை 6 மணியிலிருந்து 12 மணிக்கிடையில் நிகழ்வதாக எடுத்துக் காட்டியிருந்தது. அதே போல பக்கவாதம் மற்றும் இருதயத் துடிப்பு  ஒழுங்கீனங்கள் ஆகியவையும் காலையிலேயே நிகழ்வதாக தரவுகள் கூறுகின்றன.

இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் என்ன? எமது உயிரியல் கடிகாரத்தில் ஏற்படும் சில மாற்றங்களால் பிரஸரானது காலையில் விழித்து எழும் போதும், அதைத் தொடரும் காலை நேரத்திலும் சற்று அதிகரிக்கிறது. அத்துடன் காலை விழித்தெழும் நேரத்தில் இரத்தக் குழாய்கள் இறுக்கமடைகின்றன குருதியின் அளவிலும் சற்று ஏற்றம் தென்படுகிறது.

மருந்துகளைப் பயன்படுத்தல்

அதே நேரம் இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பிரஷர் மருந்துகளை ஒரு தடவை உட்கொண்டாலே போதுமாக இருக்கிறது. அதற்கு ஏற்றவாறே அவை தயாரிக்கப்படுகின்றன. அதாவது அவற்றை ஒரு தடவை உட்கொண்டால் அடுத்த 24 மணிநேரத்திற்கு பிரஷரைக் குறைக்கக் கூடியவையாக இருக்கின்றன.

உட்கொண்ட ஒரு மணி நேரத்தின் பின் அவை செயற்படத் தொடங்கும், 4 முதல் 15 மணிநேரத்தில் அவற்றின் செயற்பாடு உச்சநிலையில் இருக்கும். அதன் பின் அதன் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கும்போது அடுத்த நேர மருந்தை எடுக்கின்ற வேளை வந்துவிடும்.

எந்த வேளை நல்ல வேளை

எனவே இரவில் பிரஸர் குளிசைகளைப் உட்கொண்டால் பிரஷர் அதிகரிக்கும் தருணமான அதிகாலையில் மருந்தின் செயற்பாடு உச்ச கட்டத்தில் இருக்கும் அதனால் மேலும் பிரஷர் அதிகரிக்காமல் தடுத்துவிடும்.

எனவேதான் இரவில் பிரஸர் குளிசைகளைப் போடுவது சிறந்தது எனச் சிலர் கருதுகிறார்கள்.

ஆனால் இரவு நேரத்தில் எடுப்பதைவிட காலையில் எடுத்தபோது மாரடைப்பு பக்கவாதம் போன்றவற்றை குறைத்தன என சில ஆய்வுகள்; கூறின. இவை பிரஷருக்கான சிகிச்சை பற்றிய பொதுவான ஆய்வுகள் ஆகும். காலையா மாலையா மருந்தப் போடப் பொருத்தமானது என்பதை இலக்காகக் கொண்டு செய்யப்பட்டவை அல்ல.

இருந்தபோதும் quinapril என்ற மருந்தை கொடுத்து செய்யப்பட்ட ஆய்வானது இரவில் கொடுப்பது நல்லது என்ற முடிவைத் தந்தது. அதே நேரம் atenolol, nifedipine , amlodipine.போன்ற மருந்துகளைக் கொடுத்து செய்யப்பட்ட ஆய்வுகள் காலையா இரவா என்பது பற்றி எந்தத் தெளிவான முடிவையும் தரவில்லை.

எனவே மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளின் படி எந்த முடிவையும் இப்பொழுது எடுக்க முடியாதிருக்கிறது.

வேறு காரணங்கள்

பிரஷர் மருந்துகளைத் தினந்தோறும் தவறாது எடுப்பது முக்கியமானது. காலையில் மாலையில் அல்லது எந்த ஒரு குறிப்பட்ட நேரத்தில்தான் தப்பாமல் எடுக்க வேண்டும் என்று எண்ணி வேளை தப்பினால் போடாமல் விட்டு விடக்கூடாது.

தவற விடுவதைவிட அவருக்கு உசிதமான நேரத்தில் போடுவதால் ஓரளவேனும் பலன் அளிக்கும். சிலருக்கு காலையில் தேநீருடன் போடுவது மறக்காத தருணமாக இருக்கும். வேறு சிலருக்கு வேலை எல்லாம் முடித்து இரவில் படுக்கப் போகும் நேரமே தவறாமல் எடுக்கக் கூடியதாக இருக்கும்.

எனவே ஒருவரது வாழ்க்கை முறை மற்றும் விருப்புகளுக்கு ஏற்றபடி எடுப்பதே உசிதமாகப் படுகிறது.

இருந்தபோதும் அவ்வாறு எடுப்பதையிட்டு மருத்துவருடன் பேசி முடிவெடுத்துச் செய்வதே நல்லது.

உதாரணமாக புரசசீன் போன்ற அல்பா புளக்கர் வகை மருந்துகள் கிடை நிலையிலிருந்து எழுந்திருக்கும்போது திடீரெனப் பிரசரைக் குறைத்து தலைசுற்றை ஏற்படுத்தலாம். முக்கியமாக வயதானவர்கள் இரவில் சிறுநீர் கழிக்க அல்லது வேறு காரணங்களுக்காக படுக்கையை விட்டு எழ நேர்ந்தால் தலைச்சுற்று ஏற்பட்டு விழுந்துவிடவும் கூடும்.  எனவே அவர்கள் அத்தகைய மருந்துகளை இரவில் போடுவதைவிட காலையில் போடுவது நல்லது.

பிரஷருக்கான சில மருந்துகள் சிறுநீரை அதிகம் கழியச் செய்யும். அத்தகைய மருந்துகளை இரவில் உட்கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேருவதுடன் தூக்கத்தையும் குழப்பும். அத்தகைய மருந்துகளை இரவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.. hydrochlorothiazide, amiloride, furosemide  போன்றவை சில உதாரணங்களாகும். மருத்துவர்கள் அவற்றை காலையில் உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள்.

குருதிச் சீனியின் அளவை அதிகமாகக் கூட்டவோ கடுமையாகக் குறைக்கவோ செய்யக் கூடிய சாத்தியம் இருப்பதால் அற்றனலோல், போன்ற டீ டிடழஉமநச வகை பிரஷர் மருந்துகளை இரவில் போடாது தவிர்ப்பது நல்லது.

இறுதியாக 

ஆனால் எல்லா பிரஷர் மருந்துகளும் ஒரு வேளை மட்டும் உட்கொளள்ளப்படுபவை அல்ல. இரண்டு நேரம் அல்லது மூன்று தடவைகள் போடப்படுபவையும் உண்டு.

பலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வகை பிரஷர் மருந்துகளை உபயோகிக்க வேண்டி நேரலாம். பிரஷரைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மூன்று அல்லது நான்கு வேறு வகையான மருந்துகளை உட்கொள்வது அவசியமாகலாம்.

அவ்வாறு போடப்படும்போது அவற்றை பொதுவாக ஒரே நேரத்தில் சேர்த்துப் போடுவதில்லை. பிரித்துப் உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள்.

அத்தகைய தருணத்தில் எதை எதை எந்த நேரத்தில் போட வேண்டும் என்பதையிட்டு மருத்துவர் தெளிவான அறிவுறுத்தல்களைத் தருவார்கள். அதன்படி செய்யுங்கள்

ஒரு மருந்தை மட்டும் தரும்போது பொதுவாக பிரஷர் மருந்துகளை இரவில் மட்டும் உட்கொள்ளக் கொடுப்பதையே அதிகம் காண்கிறோம்.

எனவே நீங்களாக முடிலெடுக்காமல் மருத்துவ ஆலொசனையுடன் பிரஷர் மருந்துகள் போட வேண்டிய நேரங்களைத் தேர்ந்தெடுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0

 

Read Full Post »

“சொன்ன சொல் மாறிவிட்டீர்கள்” என முகத்தில் அறையுமாப் போல அவர் குற்றம் சாட்டவில்லைத்தான். “நீங்கள் முந்திச் சொன்னது ஒன்று இன்று சொல்வது மற்றொன்று. படிச்ச நீங்களே இப்படி மாற்றிப் பேசலாமா” என்றும் கேட்கவில்லைத்தான்.

ஆனால் இது நீதி அநீதி, சரி பிழை போன்றவை சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அறிவியல். அதிலும் முக்கியமாக வளர்ந்து வரும் மருத்துவ அறிவியல், அது சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, துறை சார்ந்த நிபுணர் குழவினர் எட்டிய முடிவுகளை ஒட்டிய விடயம்.

வீட்டில் எலக்ரோனிக் கருவியில் பார்த்தபோது பிரஷர் சற்று அதிகம் என்பதால் பதற்றத்துடன் என்னிடம் வந்திருந்தார் நான் பார்த்தபோதும் கிட்டத்தட்ட அதே அளவுதான். 148/90 இருந்தது.

hypertension

“பரவாயில்லை உங்கடை வயதிற்கு அவ்வளவு இருக்கலாம்” என்று சொன்னதின் பிரதிபரிப்பு இது. அவரது வயது 63 ஆகும்.

அவர் பயப்பட்டதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. நாம் மருத்துவத் தொழில் ஆரம்பித்த காலங்களில் வயதுடன் 100 க் கூட்டினால் வரும் எண்ணிக்கையின் அளவிற்கு இரத்த அழுத்தம் இருக்கலாம் என்றோம்.

பின்னர் எந்த வயதானாலும் 130/90 யைத் தாண்டக் கூடாது என்ற வரையறை வந்தது. இதையே அவர் ஞாபகத்தில் வைத்திருந்தார்.

jnc-8-dr-mansij-biswas-34-638

இப்பொழுது புதிதான வழிகாட்டல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 150/90 இருக்கலாம் என்கிறது.

உண்மைதான் மருத்துவ அறிவியல் கருத்துக்கள் கால ஓட்டத்தில் மாறுகின்றன. புதிய ஆய்வு முடிவுகளுக்கு ஏற்ப நோயாளிகளுக்கு அதிக நன்மை அளிக்குமாறு சிகிச்சை முறைகள் மாறவேண்டியது அவசியமாகிறது.

பிரஸர் பற்றிய Eighth Joint National Committee (JNC 8) யின் புதிய வழிகாட்டல்கள் என்ன கூறுகின்றன?

அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களில்

அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களது பிரஷர் ஆனது 150/90 மேல் இருந்தால் மட்டுமே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். அதாவது மேலே உள்ள சுருக்கழுத்தம் (Systolic blood pressure – SBP )150ற்கு மேல் இருந்தால் அல்லது கீழே உள்ள விரிவழுத்தம் (Diastolic blood pressure – DBP ) 90 ற்குக் மேல் இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கபட வேண்டும்.

jnc-8-dr-mansij-biswas-29-638

சரி புதிதாகச் சிகிச்சை அளிக்கும்போது பிரஷர் குறைந்தால் அல்லது ஏற்கனவே அவர்களது பிரசரானது சிகிச்சை காரணமாக 140/90 ற்கு கீழ் குறைந்திருந்தால் மருந்தின் அளவைக் குறைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

இல்லை உட்கொள்ளும் மருந்தின் அளவானது அவர்களுக்கு எந்தவிதமான பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது ஒத்துக்கொள்ளும் விதமாக இருந்தால் மருந்தின் அளவைக் குறைக்க வேண்டியதில்லை.

அறுபது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களில்

அதேநேரம் அறுபது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது விரிவழுத்தம் ஆனது 90 ற்கு மேல் இருந்தால் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். சிகிச்சை மூலம் இதை 90 அல்லது 90ற்குக் கீழ் கொண்டு வருவது அவசியமாகும்.

அதே போல அறுபது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களின் சுருக்கழுத்தமானது 140 ற்கு மேல் இருந்தால் சிகிச்சையை ஆரம்பித்து அதனை 140 அல்லது அதற்குக் கீழ் குறைக்க வேண்டும்.

நீரிழிவு மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயாளர்களில்

18 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு நோயுள்ளவர்களுக்கும் நாட்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கும் இதே 140/90 ற்கு மேல் இருந்தால் பிரஷருக்கான சிகிச்சை அவசியமாகும்.

new-hypertension-guidelines-40-638

நீரிழிவு நோய் உள்ளவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் 18 வயதிற்கு மேல் எந்த வயதானவராக இருந்தாலும் அவர்களது இரத்த அழுத்தமானது 140/90 ற்கு மேல் இருந்தால் சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

சுருக்கழுத்தமானது 140 அல்லது அதற்குக் கீழும் விரிவழுத்தமானது 90 அல்லது அதற்குக் கீழ் குறையுமாறு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

நாட்பட்ட சிறுநீரக நோயுள்ளவர்களுக்கும் (Chronic kidney disease) நீரிழிவு உள்ளவர்களது அளவுகளே பரிந்துரைக்கப்படுகிறது.

இது வரை காலமும் நீரிழிவு உள்ளவர்களது பிரஷரை 130/80 ற்கு குறைக்க வேண்டும் என்றே பெரும்பாலும் சிபார்சு செய்யப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு குறைப்பதால, பக்கவாதம், இருதய நோய்கள், மாரடைப்பு, சிறுநீரக நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவும் கிடைத்ததாக ஆய்வுகள் உறுதிப்படுத்தாத காரணத்தால்தான் நீரிழிவு உள்ளவர்களுக்கும் அதே 140/90 ல் கட்டுப்படுத்துவது போதுமானது என்று சொல்கிறார்கள்.

சிகிச்சை முறை

நான்கு வகையான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன ((thiazide-type diuretic, CCB, ACEI, or ARB)  இவற்றில் கறுப்பு இன மக்களுக்கு முதல் இரண்டில் ஒன்றை ஆரம்ப நிலையில் உபயோகிக்கச் சிபார்சு செய்திருக்கிறார்கள்.

முதல் முதலாக ஒருவருக்கு பிரஷர் உள்ளது என கண்டறியப்பட்டதும் மருத்துவர் மேற் கூறியவற்றில் ஏதாவது ஒரு பொருத்தமான மருந்தைத் சிபார்சு செய்வார். அதை உபயோகித்து வருகையில் ஒரு மாதத்தின் பின்னர் பிரசரை மீண்டும் அளவிட்டு மருத்தின் அளவை மறு பரிசீலனை செய்வார்கள். பிரஷரானது சொல்லப்பட்ட அளவிற்கு அல்லது அதனிலும் சற்று அதிகமாகக் குறைந்திருந்தால் அதே அளவில் தொடர வேண்டும். மருந்தின் அளவைக் குறைக்கக் கூடாது.

ஆனால் பிரசரின் அளவானது விரும்பப்பட்ட அளவிற்கு ஒரு மாதத்தில் குறையவில்லை எனில் மருத்துவர் ஏற்கனவே கொடுத்த மருந்தின் அளவை அதிகரிப்பார் அல்லது இரண்டாவதாக மற்றொரு மருந்தைச் சேர்த்தும் தரக் கூடும்.

பிரஷரானது விரும்பிய அளவை எட்டும் வரை மருத்துவர் தொடர்ச்சியான கண்காணிப்பை வைத்திருப்பார். இரண்டு வகையான மருந்துகளைக் கொடுத்தும் பிரஷர் குறையவில்லை எனில் மூன்றாவது மருந்தையும் சேர்த்து உபயோகிக்கவும் நேரலாம்.

இவ்வளவையும் உங்கள் அருகில் உள்ள அரச மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவர் கண்காணித்து மருத்துவம் செய்வார். மூன்று மருந்துகளாலும் பிரஷரைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது போனால் மாத்திரம் ஒரு விசேட மருத்துவரை அணுகுவது உசிதமானது என சிபார்சு செய்கிறார்கள்.

சாதாரண இரத்த அழுத்தத்தை 120/80 என்பார்கள். இது 140/90 ற்கு மேலே சென்றால்தான் அதை உயர் இரத்த அழுத்தம் என்கிறோம். இதில் எந்த மாற்றத்தையும் புதிய வழிகாட்டல் செய்யவில்லை. வயதானவர்கள் மற்றும் நீரிழிவு உள்ளவர்களில் இதை எந்த அளவிற்குக் குறைக்க வேண்டும் என்பதையே புதிய வழிகாட்டல் சொல்கிறது.

மருந்துகளைப் பற்றிச் சொன்னபோதும் பிரஷரைக் குறைப்பதில் வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவும் என்பதை மநுப்பதற்கில்லை. ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற் பயிற்சி, எடையைச் சரியான அளவில் பேணுதல் போன்றவற்றை கடைப்பிடிப்பது அவசியம் என்பதை புதிய வழிகாட்டல்கள் உறுதிப்படுத்தவே செய்கிறது.

எனவே மருந்தைப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற மனநிலையை மாற்ற வேண்டும்.

bp-home-remedies

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது எப்போதும் அவசியமானதே. இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் பொதுவான உடல்நலம் மேம்படுவது மாத்திரமின்றி மருந்துகளின் அளiவுகளையும் குறைக்க முடியும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

“மீண்டும் சொன்ன சொல் இன்னும் சில வருடங்களில் மாறலாம். புதிய புதிய கண்டுபிடிப்புகளின் பயனாக நோயாளிகளுக்கு நன்மை அதிகம் கிடைக்கும் பட்சத்தில்” என விடைபெறு அவர் எழுந்தபோது நான் கூறியதை ஆமோதிப்பது போலத் தலையை ஆட்டி மனத் தெளிவோடு அவர் புன்னகைத்தார்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

 

Read Full Post »

“இதென்ன புது நோயாக இருக்கு”

வந்தவர் தனது கையில் இருந்த ரிப்போட்டை என்னிடம் நீட்டினார். இருதய நோய் மருத்துவ நிபுணருக்கு கொடுத்த கடிதத்திற்கு பதிலாக அவர் கொடுத்திருந்த சிட்டை அது.

வழமையாக உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்துகள் சாப்பிட்டு வருகிறார். அண்மையில் செய்த ஈசிஜி பரிசோதனையில் சில மாற்றங்கள் தெரிந்ததால் இருதய நோய் மருத்துவ நிபுணரிடம் அனுப்ப நேர்ந்தது. ECHO Cardiogram உட்பட பரிசோதனைகள் செய்த பின்னர் அவர் கொடுத்த குறிப்பில் Hypertensive heart disease என எழுதியிருந்தது. உயர் இரத்த அழுத்த இருதய நோய் என நாம் தமிழில் சொல்லலாம்.

பிரசரால் வரும் ஹாட் வருத்தம் என்று பேச்சுத் தமிழிலும் சொல்லலாம்.
Black tonometer and heart isolated on white

உயர் இரத்த அழுத்த இருதய நோய்

பிரஷர் எனப்படும் உயர் இரத்த அழுத்தம் பற்றி எல்லோரும் அறிவார்கள். ஆனால் உயர் இரத்த அழுத்த இருதய நோய் பற்றி தெரிந்திருக்குதோ தெரியாது.

உண்மையில் இது ஒரு தனியான நோய் அல்ல. உயர் இரத்த அழுத்தத்தினால் இருதயத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்குகிறது. அவற்றில் முக்கியமானவை மூன்று ஆகும்.

இருதயத்திற்கான இரத்த ஓட்டத்தில் பாதிப்பும் அதனால் நெஞ்சு வலி மாரடைப்பு போன்றவை ஏற்படுவது, இருதயத் தசைநார்கள் தடிப்படைவது, இருதயத்தின் செயற்திறன் பாதிப்படைவது ஆகியவையே அவை.

உயர் இரத்த அழுத்த இருதய நோய் பற்றி மருத்துவர்கள் இப்பொழுது அதிகம் கவனம் எடுப்பதற்குக் காரணம் என்ன? உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மரணத்தத்தைத் தழுவுவற்குக் காரணமாக இருப்பது இந்த உயர் இரத்த அழுத்த இருதய நோய் என்பதாலேயே ஆகும்.

வயதானவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 68% மானவர்களுக்கு இருதய வழுவல் ஏற்படுவதற்கு உயர் இரத்த அழுத்த இருதய நோய்தான் காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் என்பது அறிகுறிகளற்ற நோய். வெளிப்படையாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. அதனால் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும்போதுதான் நோயாளிக்கு தெரிய வரும்.  ஆனால் அது உயர் இரத்த அழுத்த இருதய நோயை மட்டும் கொண்டுவருவதில்லை. கண் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம் போன்ற வேறு பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது.

எனவே ஒவ்வொருவரும் தங்கள் பிரசரை அறிந்து வைத்திருப்பது அவசியம். சாதாரண பிரஷர் என்பது 120/80 mmHg ஆகும். இவ்வாறு சாதாரண அளவில் பிரஷர் உள்ளவர்களும் தங்கள் பிரஷரை குறைந்தது 2 வருடங்களுக்கு ஒரு முறையாவது அளந்து பார்ப்பது அவசியமாகும். சற்று அதிகம் உள்ளவர்கள் (120/80 – 139/89) தங்கள் பிரஷரை வருடத்திற்கு ஒரு முறையாவது அளந்து பார்க்க வேண்டும்.

அதைவிட அதிகம் எனில் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை தேவைப்படும். பிரஷருக்காக மருத்துவர்கள் சிபாரச்சு செய்யும் மருந்துகளை ஒழுங்காக உபயோகிப்பது அவசியம். தாங்களாவே அளவைக் கூட்டவோ குறைக்கவோ கூடாது. தலையிடி எனச் சொல்லி மருந்துகளின் அளவைக் கூட்டுபவர்களும், தலை உலாஞ்சுகிறது எனக் குறைப்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு செய்வது தவறு.

மருத்துவர்கள் பிரசரை அளந்து பார்த்து அதற்கு ஏற்பவே மாற்றங்கள் செய்வார்கள்.

நீரழிவு, கொலஸ்டரோல் பிரச்சனைகளும் சேர்ந்திருப்பவர்கள் மேலும் அக்கறையோடு தங்கள் பிரஷரைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியமாகும்.

இருதயத்திலும் இரத்தக் குழாய்களிலும் ஏற்படும் பாதிப்புகள்

பிரஷரால் இருதயத்தில் பாதிப்புகள் ஏற்படுவது எவ்வாறு?
பிரஷர் அதிகரிக்கும் போது இருதயத்திற்கான வேலைப் பளு அதிகரிக்கிறது. அதிக அழுத்தத்தில் இரத்தத்தை பம் பண்ணுவதற்காக இருதயத்தின் தசைகள் அதிக பிரயாசை எடுக்க நேர்கிறது. இதனால் அதன் தசைகள் விரிவடைந்து தடிக்கின்றன. இதனால் முதலில் பருமனடைவது இடது கீழ் அறையான வென்ரிக்கில் (Ventricle) ஆகும். இதை LVH என மருத்துவத்தில் சொல்வோம். இருதயத்தின் ஏனைய பகுதிகளிலும் காலகதியில் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.

ans7_lvh

இவ்வாறு இருதயத்தின் தசைநார்கள் தடிப்படையும்போது பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமானது இருதயத்தின் தசைகளுக்கு இரத்தத்தை வழங்கும் குருதிக் குழாய்களில் தடிப்பு ஏற்படுவதாகும்.

அதனால் இருதயத்தின் தசைகளுக்கு போதிய இரத்தம் கிடைக்காது. இது நெஞ்சில் வலி, அழுத்தம், களைப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டு வரலாம். இவை அஞ்சைனா மற்றும் மாரடைப்பை ஒத்த அறிகுறிகளாகும்.

இதைத் தவிர இருதயத்தின் தசைகள் தடிப்படையும்போது இருதயத்தின் நரம்புகளும் பாதிப்படையும். இதனால் இருதயத்தின் துடிப்பு லயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இருதய  அறைகளின் வால்வுகளிலும் பாதிப்பு ஏற்படலாம்
உயர் அழுத்த நோயானது எவ்வாறு வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டுவதில்லையோ அதே போல உயர் இரத்த அழுத்த இருதய நோயும் ஆரம்ப நிலையில் துல்லியமான அறிகுறிகளை காட்டுவதில்லை.

ஆனால் காலம் செல்லச் செல்ல கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படும்.

இருதய செயலிழப்பு

இந்நோயால் இருதயத்தின் தசைகள் தடிப்படையும் என்பதைப் பார்த்தோம். இது தீவிரமாகி இருதயத்தின் செயற்பாடு பாதிப்புறும் வரை வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டுவதில்லை.

CVS_heart_failure

இருதயத்தின் செயற்பாடு குறைவதை இருதய செயலிழப்பு எனவும் சொல்வார்கள். பெதுவாக ‘ஹார்ட் பெயிலியர்’ (heart failure)  என்பார்கள்.

இதன் முக்கிய அறிகுறியானது மூச்சு விடுவதில் சிரமம் ஆகும். இத்தகைய இளைப்பு அல்லது மூச்சுத் திணறல் ஆனது பொதுவாக ஏதாவது வேலை செய்யும்போது ஏற்படும். நடக்கும்போது, படியேறும்போது, பாரம் தூக்குவது போன்ற உடலுக்கான முயற்சிகளின் போது ஏற்படும். ஆனால் நோய் தீவிரமடையும்போது எதுவித உடல் முயற்சிகள் இல்லாது படுத்திருக்கும்போது கூட இளைப்பு ஏற்படும்.

ஆரம்ப நிலையில் நோயாளிகள் இதனை இளைப்பு என்று நினைக்கமாட்டார்கள். சாதாரண களைப்பு என்றுதான் நினைப்பார்கள். போசாக்கு இல்லாததால் ஏற்பட்ட களைப்பு என்றும் எண்ணுவார்கள். ஆனால் களைப்பு என்பது உடல் நோய்களால் மட்டும் வரும் என்றில்லை. மனம் சோர்ந்திருந்தாலும் களைப்பு ஆகவே உணர்வார்கள். நோயாளிகள் களைப்பு என்று சொன்னால் அது எதனால் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து கண்டறிய நேரும்.

சாய்ந்து படுத்திருக்க முடியாது எழுந்து படுக்கையில் உட்கார வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இதனால் தலையணைகளை வைத்து தலையையும் நெஞ்சுப் பகுதியையும் உயர்த்திப் படுப்பார்கள்.

Elderly Woman in Hospital Bed

ஆனால் ஆஸ்த்மா நோயிலும் இத்தகைய நிலை ஏற்படலாம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஆயினும் காலம் செல்லச் செல்ல கால் வீக்கம், உடல் எடை அதிகரித்தல், ஈரல் வீக்கம் அதன் காரணமாக வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் இருதய செயலிழப்பினால் தோன்றும்.

இருதய வலிகள்

அஞ்சைனாவை ஒத்த நெஞ்சு வலியானது உயர் இரத்த அழுத்த இருதய நோயாலும் ஏற்படும். நெஞ்சில் பாரம், அழுத்துவது அல்லது இறுக்குவது போன்றவை அத்தகையவையாகும். இந்த வலியானது கழுத்திற்கு, தாடைக்கு, இடது புஜத்திற்கு அல்லது முதுகின் மேற்புறத்திற்கு பரவுவது போல இருக்கலாம். மாரடைப்பு போல் அல்லாமல் அஞ்சைனா வலியானது 10-15 நிமிடங்களுக்குள் தணிந்துவிடும்.

Angina

ஆனால் வலி இல்லாமல் நடக்கும்போது இளைப்பு, கடுமையான களைப்பு போன்ற அறிகுறிகளுடனும் அஞ்சைனா வலி வரக் கூடும். பெண்களிலும், நீரிழிவு உள்ளவர்களிலும் வலி இல்லாது இத்தகைய அறிகுறிகளுடன் வருவது அதிகம்.
மாரடைப்பும் வரக் கூடும்.

இருதயத் துடிப்பின் ஒழுங்கின்மை.

இருதயமானது ஒரு லயத்தில் தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும். ஆனால் அவற்றின் லய ஒழுங்கு மாறுவதும், தாறுமாறாக அடிப்பதும் நிகழக் கூடும். மருத்துவத்தில் Cardiac arrhythmias    என்பார்கள். இது நெஞ்சுப் படபடப்பு, திடீர் மயக்கம், நெஞ்சு வலி போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் வெளிப்படக் கூடும். திடீர் மரணம் ஏற்படுவதும் உண்டு.

cardiac-arrhythmiasfig1_large

உயர் இரத்த அழுத்த இருதய நோயால் இவ்வாறான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

205257

தடுக்கும் வழிகள் எவை?

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த இருதய நோய் ஏற்படுவதற்குக் காரணம் அவர் தனது பிரஸரை கட்டுப்பாட்டில் வைத்திருக்காமையே. எனவே ஒவ்வொருவரும் உயர் இரத்த அழுத்த நோய் (பிரஷர்) என்றால் என்ன? அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் யாவை என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இந் நோயால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்ற காரணத்தால் அடுத்த வருடத்தை உயர் இரத்தம் தொடர்பான ஆண்டாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்து இருக்கிறது.

ஒழுங்கான போசாக்கான உணவு முறைகள் மூலமும் தினமும் உடற் பயிற்சி செய்வதன் மூலமும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க முயல வேண்டும்.

jch497725.tab3
உயர் இரத்த அழுத்த நோய் ஏற்கனவே இருப்பவர்கள் பின்வரும் நடைமுறைகள் மூலம் தங்கள் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்

  • கொழுப்பு, உப்பு போன்றவற்றை தங்கள் உணவில் குறைத்து, பழவகைகளையும் நார்ப்பொருள் உள்ள உணவுகளையும் அதிகம் உண்ண வேண்டும்.
  • தினமும் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும். அல்லது தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற் பயிற்சி செய்ய வேண்டும்.
  • தங்கள் எடையைச் சரியான அளவில் பேண வேண்டும்.
  • தங்களுக்கு சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளை தவறாது ஒழுங்கான முறையில் உட்கொள்ள வேண்டும்.
  • புகைத்தலைத் தவிர்க்க வேண்டும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0

Read Full Post »