Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘உளவியல்’ Category

கேட்ட மாத்திரத்தில் நான் அதிசயித்துப் போனேன். எனது 37வருட மருத்துவத்தில் இப்படி ஒரு பிரச்சனையை நான் கேள்விப்பட்டதே இல்லை.

ஆனால் அடுத்த கணமே இது உண்மையானது அல்ல என்பது புரிந்தது.

செய்தியைப் பகுந்தறிந்த எனது மூளை தெளிவாகக் கூறிவிட்டது.

இருந்தபோதும் அவள் வேண்டும் என்று பொய் சொல்கிறாள் என்று நான் கருதவேயில்லை.

“மலம் போகும் போது அட்டை அட்டையாகப் போகுது…சின்னஞ் சின்னனா கணக்கு வழக்கின்றிப் போய்க்கொண்டே இருக்கு… வருடக் கணக்கில்..”

அட்டை என அவள் கூறியது சாதாரண அட்டைப் பூச்சியை அல்ல.

இரத்தம் குடிக்கும் அட்டையை.

கூறியது உண்மையாக இருந்தால் அவளது உடலிலுள்ள கடைசித் துளிவரை அட்டைகள் உறிஞ்சிக் குடித்திருக்கும். இரத்த சோகையால் உடல் வெளிறிப்போய் நடக்க முடியாது மூச்சிரைக்க வந்திருப்பாள். இவள் உசாராகத்தான் வந்திருந்தாள்.

அவள் ஒரு மலையகப் பெண். பல வருடங்களாக கொழும்பில்தான் வசிக்கிறாள். வயது சரியாக 56 இன்னும் ஒரு மாதத்தில். வசதியானவள் அல்ல. நடுத்தரத்திலும் சற்றுக் குறைவான சமூகத் தராதரம் கொண்டவள்.

நைந்து போன பழைய ஸ்கேட்டும் பிளவுசும் அணிந்திருந்தாள். சற்று அழுக்கான ஆடைகள். குளித்து வரவில்லை. வியர்வை மணம் நாசியை உறுத்தியது. உடை அலங்காரத்தில் அசண்டையீனமும், சுகாதாரம் பேணுவதில் அக்கறையின்மையும் வெளிப்படையாகத் தெரிந்தன.

இந்த அவதானிப்புகள் அவளது நோய் பற்றிய முடிவுக்கு வருவதற்கு எனக்கு அவசியமானவை.

“..எத்தனையோ தரம் அரசாங்க ஆஸ்பத்திரில் மருந்து எடுத்து விட்டேன். அவங்கள் பூச்சிக் குளிசையைத்தான் அள்ளி அள்ளித் தாராங்கள். ஒரு சுகமும் இல்லை”.

அவளைப் போல நானும் அரசாங்க ஆஸ்பத்திரி மருத்துவர்களை குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு இவள் தமிழில் சொல்லியது புரிந்திருக்காது. இவளுக்கு அவர்களுக்கு புரியும்படி விளக்க முடியாது. நீண்ட கியூ காத்து நிற்கையில் இவள் புழு என்றால் என்ன பூச்சி என்றால் என்ன றழசஅள என்றுதான் அவர்கள் மனத்தில் பதிந்திருக்கும்.

நல்ல காலம் புளுக் காச்சல் என நினைத்து காய்ச்சல். சளிக் குளிசைகளைக் கொடுக்கவில்லையே என்பதை நினைத்து ஆறுதல் கொள்ளலாம்.

‘மலத்தை எடுத்துக் கொடுங்களேன். என்ன பூச்சி என்று பரிசோதித்துப் பார்க்கலாம்.’

இது அவசியமற்ற போதும் அவளது நம்பிக்கையை தவறென்று எடுத்துக் காட்ட உதவும் என்பதால் கேட்டேன்.

அவளுக்கு அதில் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. ‘அதைப் பிறகு பாப்பம். இப்ப ஏதாவது மருந்து தந்து இந்தப் பிரச்சனையை உடனை தீருங்கோ’ தீர்க்கமாகச் சொல்லிவிட்டாள்.

“மலத்தோடு போனது இப்ப தலையிலையும் வந்திடுத்து. ஊந்து ஊந்து தலையெல்லாம் திரியுது”.

தலையை மூடியிருந்த மொட்டாக்குத் துணியை விலக்கி உச்சந் தலையைச் சுட்டிக் காட்டினா.

மொட்டையாக வெட்டியிருந்த தலையில் கறுப்பும் பளுப்புமாக முளைத்திருக்கும் நரைத்த முடிகளைத் தவிர வேறொன்றும் என் கண்களுக்குப் படவில்லை.

“இஞ்சை இஞ்சை..” அவள் என் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயன்றாள்.

தனது வலதுகைப் பெருவிரலையும் சுட்டு விரலையும் சேர்த்து தனது முன்னங்கைகளில் எதையோ பிடிக்க முயன்றாள்.

எனக்கு எதுவும் புலப்படவில்லை!

“அறுபது தாண்டிய பூஞ்சைக் கண்ணுக்கு என்ன தெரியப் போகுது” என நக்கல் அடிக்காதீர்கள்.

அண்மையிலும் கண் மருத்துவரைப் பார்திருந்தேன். தடித்த கண்ணாடிதான். ஆயினும் ‘கற்றரக்ட் இன்னமும் இல்லை. பார்வை நன்றாக இருக்கிறது’ என்று சேர்டிபிகற் கொடுத்துள்ளார்.

இப்படியாக உடலில் பூச்சி ஊர்வதாக சொல்லிக் கொண்டு வருபவர்கள் பலரை எனது கிளினிக்கில் பாரத்திருக்கிறேன். பொதுவாக அவர்கள் அனைவரும் வயதானவர்கள். வயதினால் மூளை நரம்புகள் பாதிப்புற்று ஒரு கலங்கலான மனநிலையில் இருப்பவர்கள்.

மாயத்தோற்றங்கள் (Delusions) ஏற்படுவது அவர்களில் ஏற்படுவது அதிசயமானது அல்ல. புழுக்கள் நெளிவதாகவும், பூச்சிகள் ஊர்வதாகவும், சிலந்திகள் அசைவதாகவும், அட்டைகள் தவழ்வதாகவும், பக்றீரியாக்கள் குடைவதாகவும் அவர்கள் சொல்வதுண்டு.

Man-Bug

ஆனால் இது வயதானவர்களின் நோய் மட்டுமல்ல. ஏனைய வயதினரிடையேயும் தோன்றலாம். தமது உடல் நலத்தைப்பற்றிய தப்பான எண்ணங்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் அவர்கள்.

மனப் பிறழ்வு நோயுள்ளவர்கள் போல இவர்களுக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பான மாயத் தோற்றங்கள் எழுவதில்லை. பூச்சி, புளு, வண்டு போன்ற ஏதாவது ஒன்று பற்றிய மாயத் தோற்றமே (Monosymptomatic hypochondrial psychosis) இவர்களுக்கு உண்டாகிறது.

இந்த ஒரு விடயத்தைத் தவிர அவர்கள் சாதாரணமானவர்கள் போலவே இருப்பார்கள். வேறெந்த மன நோய்கள் இருப்பதில்லை. இதனை மருத்துவத்தில் delusions of Parasitosis என அழைப்பார்கள். ஒட்டுண்ணி மருட்சி எனலாமா

இவர்களுள் ஒருத்தி ஒரு சிறிய போத்தலில் தன் மீது ஊரும் பூச்சியைக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள். தோல் நிறத்தில் ஒரு சிறிய வஸ்து இருந்தது. அது என்னவென்று புரியாததால் நுணுக்குக் காட்டியில் வைத்துப் பரிசோதித்தபோது அது ஒரு சருமத்துகள் என்பது தெரியவந்தது.

சிலர் இவ்வாறு பூச்சிகளைப் பிடிப்பதாகச் சொல்லி சருமத்ததைக் கிள்ளி கிள்ளி புண்ணாக்கிக் கொண்டு வருவதும் உண்டு.

பல மருத்துவர்களிடம் ஒருவர் மாறி மற்றவர் என சென்று கொண்டிருப்பது இவர்கள் வழக்கம். திருப்பதியின்மையே காரணம்.  மருத்துவர்களால் அவர்களது எண்ணத்தை மாற்றுவது சிரமமாக இருப்பதால் அவர்களது பிரச்சனை தீருவதே இல்லை. இதனால் மருத்துவர்களைக் குறை கூறுவதும் புதிய மருத்துவரை நாடுவதுமாக அலைந்து கொண்டிருப்பார்கள்.

இவரை வீட்டில் வைத்துப் பராமரிப்பவர்களுக்கு இவர்களோடு அலைவதும் இவர்கள் பிரச்சனையை தினமும் கேட்டுக் கொண்டிருப்பதும் சலிப்பையும் சினத்தையும் ஏற்படுத்திவிடுவதும் உண்டு.

மருந்துகள் கிடையாதா எனக் கேட்கிறீர்களா? சில psychotic drugs இருக்கவே செய்கின்றன.

வீரகேசரி ஞாயிறு வாரவெளியீட்டில் நான் எழுதிய அனுபவக் கட்டுரை.

0.00.0

Read Full Post »

வாழ்க்கை என்பது என்றென்றும் தெளிந்த நீரோடை போல சலசலப்பின்றி ஒடுவதல்ல. சங்கடங்களும் துயரங்களும் ஏமாற்றங்களும் வெறுங்காலில் சுள்ளெனக் குத்தும் நெருமுட்கள் போல திடீரென மனதைத் தைத்து சோர வைக்கும்.

IMG_0005_NEW-001

வாழ்க்கைத் துணையின்; மறைவு, பாசத்தைக் கொட்டி வளர்த்த பிள்ளைகளின் பிரிவு, தொழில் இழப்பு, உயிருக்கு உயிராகக் காதலித்தவரின் கைவிரிப்பு, தொழிலில் பெருநட்டம், பெருநோயின் எதிர்பாராத் தாக்கம், இப்படி எத்தனை எத்தனை ஆழ்துயர்கள் மனித வாழ்வில் சோர்வூட்டுகின்றன?

இவ்வாறு ஆகும்போது உடுக்கை இழந்தவன் கை போல மனம் சோரும், ஆற்றாமை மூழ்கடிக்கும், மனப் பதற்றம் ஏற்படும். எதுவுமே இயலாமற் போனது போன்ற உணர்வு ஏற்படும். இத்தகைய உணர்வுகள் எல்லாமே ஒரே நேரத்தில் ஏற்படும் என்றில்லை. அவற்றில் ஒரு சிலவே மனதைத் துயரில் ஆழ்த்தி வாழ்வில் பற்றின்மையை ஏற்படுத்திவிடலாம்.

S.Bluyer-Deep-sorrow

அதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்? எவை ஆகாது?

  • முக்கியமானது மது, போதைப் பொருள் போன்றவற்றை நாடக் கூடாது. தற்காலிகமாக மறக்க வைத்து உங்கள் வாழ்வையே அழித்துவிடும்.
  • தனிமையை நாடாதீர்கள். தனிமையும் உள்ளுக்குள்  மனங் குமைதலும் கூடாது. நண்பர்களுடனும் நெருங்கிய உறவினர்களுடனும் பொழுதுகளைச் செலவழியுங்கள்.
  • உணவைத் தவிர்க்காதீர்கள். நேரத்திற்கு நேரம் போசாக்கான உணவை உண்ணுங்கள். மனம் வேண்டாம் என்று சொன்னாலும் உணவை மறுக்காதீர்கள்.
  • காலாற நடவுங்கள் அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள். போதியளவு தூங்குங்கள்.
  • யோகாசனம், சாந்தியாசனம் போன்ற பயிற்சிகள் நல்லது. அல்லது உடலைத் தளரச் செய்யும் பயிற்சிகளை அதற்கான வழிகாட்டலுடன் செய்யுங்கள்.
  • வேலைக்குப் போதல், கடைத்தெருவிற்கு செல்லல், வணக்கத் தலங்களில் வழிபடுதல், கூட்டங்களில் பங்கு பற்றல், நண்பர்களைச் சந்தித்தல் போன்ற உங்களது வழமையான செயற்பாடுகள் எதையும் தவிர்க்க வேண்டாம்.
  • வேலை எதுவும் இல்லையென்றால் சமூகசேவைகளில் இறங்குங்கள்.
  • நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் ஆலோசனைகளைப் பெறத் தயங்காதீர்கள். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள்.
  • அவசியமானால் மருத்துவரைக் கலந்து ஆலாசியுங்கள். அல்லது உங்கள் ஆன்மீக வழிகாட்டியுடன் பேசுங்கள்.

நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.
DSC04603
மீண்டும் வசந்தங்கள் வீசும்.

தினக்குரல் பத்திரிகையின் மருத்துவக் குறுந்தகவல் பத்தியில் அக்டோபர் 3, 2013ல் நான் எழுதிய குறிப்பு

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

Read Full Post »

கூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட ஆளில்லாது துன்பப்படும் பலரை இப்பொழுது காணக் கூடியதாக உள்ளது.

lonely

நவீன வாழ்வில் வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டிற்குள் கிட்டும். ஆனால் பேசுவதற்கு ஆள்தான் கிட்டாது. கணவன் மனைவி ஓரிரு பிள்ளைகள். ஓவ்வொருவருக்கும் அவரவரது பாடுகள். கணனி அல்லது தொலைகாட்சிப் பெட்டி முன் உட்காருவதுதான் நாள் முழவதும் வேலை. உலகையை உள்ளங்கையில் அடக்கும் தொலைபேசிகளும் இப்பொழுது வந்துவிட்டன.

kk3

உள் அறையில் உலகத்தைச் சுற்றி வரலாம். ஆனால் உள்ளுறையும் உள்ளத்தைத் தொடுவதற்கு யாருமே இல்லாமல் போய்விட்டது. இதுதான்

தனிமை.

ஆம் தனிமை என்பது கொடுமையானது. அது ஓரிருவருக்கானது மாத்திரமல்ல, ஒரு உலகளாவிய பிரச்சனையாக உருவாகி வருகிறது.

தனிமையென்பது எப்பொழுதுமே ஒரே மாதிரியானது அல்ல. ஆளுக்கு ஆள் மாறுபடும். கணவன் இறந்துவிட குழந்தைகளும் வெளிநாடு சென்றுவிட நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் தனிமை ஒருவிதமானது. அதே நேரம் வகுப்பறை முழுவதும் சகமாணவர்கள் இருந்தாலும் அவர்களுடன் நட்புப் பெற முடியாத நிலையிலுள்ள பாடசாiலை செல்லும் ஒரு பிள்ளையின் தனிமை முற்றிலும் வேறானது.

தனிமையும் தனிமையுணர்வும்

ஆம்! தனிமை வேறு. தனிமையுணர்வு வேறு. தனிமை என்பது வெறுமனே உடல் ரீதியாகத் தனித்திருத்தல் எனலாம். மாறாக தனிமையுணர்வு என்பது ஒரு மனநிலையாகும். சுற்றிவரப் பலர் இருக்கலாம், சுவார்ஸமான பல விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவை எவற்றோடும் உளமார ஒன்றுபடாத நிலை இது. மற்றொரு விதத்தில் சொன்னால் வெறுமை உணர்வு, சூழலிலிருந்து அந்நியப்பட்ட மனநிலை, அல்லது தனிமைப்பட்டதான உணர்வு எனலாம்.

100

“I Feel lonely”  என ஆங்கிலத்தில் சொல்வதை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் ‘நான் தனிமையாக உணர்கிறேன்’ என்று வெளிப்படையாகவோ அல்லது ‘பேச்சுத் துணைக்குக் கூட யாரும் இல்லை’  என மறைமுகமாகவோ சொல்வது எமது மரபில் மிகவும் குறைவு எனலாம். எமது உணர்வுகளுக்கு சொல்வடிவம் கொடுப்பதில் நாம் பின்தங்கி; நிற்கிறோம்.

அண்மையில் இராணுவத்தில் இணைக்கபட்ட பல பெண்கள் விட்டு வந்ததாகவும் அல்லது நோயென ஆஸ்பத்திரில் படுத்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கான காரணங்களை அரசியல் ரீதியாகவே பலரும் அணுகுகிறார்கள். ஆனால் முற்று முழுதாக மொழி கலாசார ரீதியாக அந்நியப்பட்ட சூழலில் ஏற்பட்ட தனிமையுணர்வும் காரணமாக இருந்திருக்கலாம்.

தனிமையுணர்வு ஏற்படக் காரணங்கள் என்ன?

பாரம்பரிய அம்சங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. பல குடும்பங்களில் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுக் கதைப்பதில்லை. மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி வாழும். பழக்கம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள்

சூழலில் ஏற்படும மாற்றங்களும் நிறையவே காரணமாகின்றன. முற்றிலும் புதிய சூழலுக்கு இடம் மாறுதல் முக்கியமானது. சொந்த வீடு, சொந்த மக்கள், சொந்தப் பாசை, சொந்த உறவுகள் என வாழ்ந்தவர்கள் திடீரென புலம் பெயர்ந்து சென்று அந்நிய தேசத்தில் போடப்படும்போது தனிமையுணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. புதிய தொழிலில் இணையும்போதும் இந்த உணர்வு ஏற்படலாம்.

ஒரு சிலருக்கு சுற்றிவர நண்பர்கள், குடும்ப உறவினர் இருந்தும் தனிமையுணர்வு ஏற்படக் கூடும். அவர்களில் ஓரிருவராவது நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாதபோதே தனிமை உணர்வு ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது.

மணமுறிவு, விவாகரத்து, துணைவரின் மரணம் போன்ற குடும்பப் பிரிவுகள் தனிமையை ஏற்படுத்தவே செய்யும். நெருங்கிய நண்பரின், உறவினரின் பிரிவு,மரணம் போன்றவையும் அவ்வாறே தனிமை உணர்விற்குக் காரணமாகலாம்.

ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய சுயமதிப்பு உயர்வாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தனது உடலைப் பற்றி, அழகைப் பற்றி, தொழிலைப் பற்றி அல்லது வேறு ஏதாவது விடயம் பற்றிய தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும் சற்று ஒதுங்கியிருக்க முயல்வார்கள். இதனால் தனிமை உணர்வும் ஏற்படலாம்.

வேறு உள நோய்களும் காரணமாவதுண்டு.

எத்தகைய பாதிப்புகள் எற்படலாம்.

தனிமையாக உணரும் ஒருவருக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரிந்ததே. நாம் உணராத அளவிற்கு பலவிதமானவையாக அவை இருக்கலாம். இவை யாவும் நேரடியாக தனிமையுணர்வுடன் மட்டுமே தொடர்புடையன அல்ல என்றபோதும் ஏனைய காரணங்களுடன் சேர்ந்து இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

100

  • மன அழுத்தம் அதிகரிக்கும். உணர்வுகளை மற்றவர்களுடன் பகிரப் பின்நிற்பதால் தனக்குள்தானே உழன்று இந்நிலை வரக் கூடும்.
  • எரிச்சல், மன அமைதியின்மை, மனவிரக்தி போன்றவை வரலாம். அவை தீவிரமடைந்து தற்கொலை பற்றிய எண்ணங்களுக்கும் அடிப்படையாகலாம். தூக்கக் குறைபாடு ஏற்படலாம். அதன் தொடர்ச்சியாக பகல் நேரச் சோம்பலும் ஏற்படுகிறது.
  • மறதி அதிகரிக்கலாம். இதனால் கற்கைச் செயற்பாடுகள் பாதிப்புறலாம்.
  • சரியான தருணத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பதில் தாமதமும் சிரமங்களும் ஏற்படலாம்.
  • சமூகவிரோத செயற்பாடுகளில் இவர்கள் இறங்குவது அதிகம். இதைக் கள ஆய்வுகள் நிருபித்துள்ளன.
  • மது, போதைப் பொருட்கள், புகைத்தல் போன்றவற்றிற்கு அடிமையாகும் சாத்தியம் அதிகம்.
  • பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
  • அல்ஜிமர் நோய் பிற்காலத்தில் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

தடுப்பது  எப்படி

  • முதலாவதாக ஒருவர் தனக்கு தனிமை உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் தானே புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதை மாற்றுவதற்கு தனது வாழ்வில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமில்லை.
  • தனிமையுணர்வால் தனது வாழ்க்கையில் என்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதையிட்டு சிந்திக்க வேண்டும். பாதிப்புகள் உள நலம் சார்ந்ததாகவோ உடல் ஆரோக்கியம் கெடுவதாகவோ இருக்கலாம்.
  • உங்களோடு ஒத்த சிந்தனைகளும் உணர்வுகளும் உள்ளவர்களோடு உறவுகளை ஏற்படுத்துங்கள். ஏற்கனவே உள்ளவற்றை வலுப்படுத்துங்கள்.
  • make_friendship_day_special_600x450
  • உங்களைப் பற்றிய சிந்தனைகளுக்கு அப்பால் மற்றவர்களது துன்பங்களையும் போதாமைகளையும் கவனத்தில் எடுங்கள். அவர்களுக்கு உதவும் ஏதாவது சமூக சேவையில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மனம் விரிவடையும். சமூக ஊடாட்டம் அதிகரிக்கும்.
  • நல்லது நடக்கும் என நம்புங்கள். தாங்கள் மற்றவர்களால் நிராகரிக்கப்பட்டதான உணர்வு பாதிப்பை ஏற்படுத்தும். மாறாக நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதன் மூலம் சுற்றுச் சூழலில் உள்ளவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ள முடியும்.
  • உடல் ரீதியான தனிமை தவிர்க்க முடியாதிருந்தால் தொலைபேசி, இணையம், ஸ்கைப், பேஸ்புக் போன்ற இன்றைய நவீன வசதிகளைப் பயன்படுத்தி வெறுமையிலிருந்து விடுபடுங்கள்.

தனிமையுணர்வு வாழ்க்கைத் தரத்தையே நரகமாக்கிவிடும். திடமிருந்தால் அதிலிருந்து விடுபடமுடியும். அப்பொழுது நீங்கள் மாத்திரமின்றி சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக நம்பிக்கையோட வாழ வழிபிறக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது ஹாய் நலமா புளக்கில் (Feb 9, 2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (SL)

குடும்ப மருத்துவர்

0.0.0. .0.0.0.

Read Full Post »

வாழ்க்கைத் துணைவரின் அணுகுமுறையால்
நாட்பட்ட வலிகள் பாதிப்புறலாம்
வலிகள் என்றாலே வேதனையும் துன்பமும்தான். அதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அதன் தீவிரம் புரியும். அதிலும் முக்கியமாக நீண்டகாலமாகத் தொடரும் நாட்பட்ட வலிகள் (Chronic Pain) வேதனை அளிப்பது மிக மிக அதிகம். உடல் ரீதியாக மட்டுமின்றி, உளரீதியாகவும் கூட.

chronic-joint-pain11

குடும்பத்தில் ஒருவருக்கு வலி

வலிகளின் தீவிரத்தைப் பற்றி சிந்திப்போமா?

உங்களை ஒரு பெண் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு சில காலமாகவே இடுப்பு வலி தொடர்ந்து வருகிறது. அதனோடு கூட்டவும், துப்பரவு செய்யவும், சமைக்கவும் சிரமமப்படுகிறீர்கள். சிரமப்பட்டேனும் உங்கள் நாளாந்த வேலைகளைச் செய்து வருவதைத் தவிர்க்கவில்லை.

household-chores

இருந்தபோதும் நீங்கள் உங்கள் வலியைப் பற்றி எப்பொழுது பிரஸ்தாபித்தாலும் கணவர் அதை அக்கறையோடு செவிமடுப்பதில்லை என வைத்துக் கொள்வோம்.

images

அவர் அலட்சியமாக பனடோலைப் போட வேண்டியதுதானே என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். அக்கணத்தில் உங்கள் மன நிலை எப்படி இருக்கும். கோபம் வரலாம், எரிச்சல் ஏற்படலாம், கவலையும் அழுகையும் கைகோத்து வரலாம்.

இவை எதுவும் இல்லையேல் ‘இந்த மனிசனுக்குச் சொல்லிப் பிரயோசனம் இல்லை’ என்ற வெறுப்பில் அவரோடு மனம்விட்டுப் பேசும் எண்ணமே விட்டுப் போய்விடலாம்.
இது அனுபவத்தில் நாம் நிதம் காண்பதுதானே! ஆனால் அண்மையில் இதனை ஒரு ஆய்வாகச் செய்திருக்கிறார்கள்.

நாட்பட்ட வலியானது தம்பதிகளிடையே தொடர்பாடலை குறைக்கிறது. கலந்துரையாடுவது விட்டுப் போகிறது. இதனால் அவர்களிடையே புரிந்துணர்வு குறைந்து போகிறது. இவற்றின் பலனாக பாதிக்கப்பட்டவரின் வலியைச் சமாளிக்கும் திறன் குறைந்து போகிறது என்பது இந்த ஆய்வில் தெரிந்தது.

முன்னைய ஆய்வுகள்

குடும்ப உறவில் ஒருவர் மற்றவரது உணர்வுளைப் புரிந்து, அதற்கு மதிப்பளித்து, ஆறுதலிப்பதானது நன்மை பயக்கும் என முன்னைய ஆய்வுகள் உறுதி செய்திருந்தன். இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கிறது. நம்பிக்கை இறுக்கமாகிறது. உணர்வுகள் தம்மை அலைக்களிக்க விடாது அவற்றை அடக்கியாளும் வல்லமையைக் கொடுக்கிறது.

மாறாக துணைவர் மற்றவர்களின் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி, உதாசீனப்படுத்தினால் அல்லது சினங்கொண்டு விரோதமாக நோக்குனால் அவர்களின் குடும்ப உணர்வில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது. விட்டுக் கொடுப்புகள் குறைந்து குடும்ப உறவைப் பாதிக்கும். மன விரக்தியும் ஏற்படலாம் என்பதும் முன்னைய ஆய்வுகளில் தெளிவாகியிருந்தது.

இந்த ஆய்வு

நாரி உழைவு, இடுப்பு வலி, தசைப்பிடிப்புகள் பல்வேறு வலிகளால் பாதிக்கப்பட்டவர்களிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்த விடயம் ஆய்வாளர்களை மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். சிறிய ஆய்வுதான் 58 பெண்களையும் 20ஆண்களையும் கொண்டது.

உணர்வு ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்த ஆய்வின் பிரகாரம் வலியால் துன்பப்படும் ஆண்கள் தங்கள் மனைவிமாரின் எதிர்மiறாயன உணர்வுப் பிரதிலிப்பால் அதிகமான பாதிப்பிற்கு உள்ளானதாக தெரிந்தது. வலி இருந்தால் மட்டுமின்றி ஏனைய பொழுதுகளிலும் மனைவியின் பாராமுகம் கணவர்களின் மனத்தை அதிகமாகச் சஞ்சலப்படுத்தியிருந்தது.

indian-lady

பெண்கள் மென்மையானவர்கள். அவர்கள் மனது பூப்போன்றது. அவர்கள் வலி, வேதனை, இடர் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது அதிகம். எனவே வலிகளை மோசமாக உணர்வர், பாராமுகத்தால் வாடுவர்  என்பன நம்பிக்கை. மாறாக, வலிமையுள்ளவர்கள் என நம்பப்படும் ஆண்கள் தாம் இவ் ஆய்வில் வலிகளால் பாதிப்புற்றது ஏன்?

‘பாரம்பரிய எண்ணங்களின் அடிப்படையில் ஆண்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் என்ற பாத்திரத்தை வகிக்கிறார்கள். ஆனால் வலியானது அதனைச் சரியான முறையில் ஆற்ற முடியாத நிலையைத் தோற்றுவிக்கிறது என ஆண்கள் கருவதால் இந் நிலை ஏற்பட்டிருக்கலாம்’ என இந்த ஆய்வைச் செய்த Wayne State University in Detroit and the Norwegian Center for Addiction Research   குழுவினர் சார்பில் Laura Leong  கருத்து கூறியுள்ளார்.

உங்களுக்கான செய்தி என்ன?

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு எப்படிப் பயன்படும். நீங்களா உங்கள் துணைவரா அதிக அக்கறை காட்டுபவர் எனக் கண்டு பிடித்து மகிழவா, அல்லது யார் உதாசீனப்படுத்துகிறார் எனக் கண்டு பிடித்து குற்றம் சாட்டி வாழ்க்கையை மேலும் நரகமாக்கவா?

நிச்சமாக இல்லை. மற்றவரின் வலியை மதித்து அதனால் அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுதாபத்துடன் நோக்க வேண்டும். பரிவு காட்ட வேண்டும். ஆறுதல் சொல்ல வேண்டும். ஒத்தாசை செய்ய வேண்டும்.

hospicejpg

அது மட்டுமல்ல! தொடர்ச்சியாக வலிப் பிரச்சனைக்காக மருத்துவரிடம் போகும் கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து செல்லுங்கள்.

இது நோயைக் கணிக்க மட்டுமல்ல வேறு விதத்திலும் மருத்துவருக்கு உதவும். மருந்துகளும் ஆலோசனைகளும் ஒருவருக்கு மட்டும் போதுமானதா அல்லது மற்றவருக்கும் ஏதாவது தேவைப்படுமா எனத் தீர்மானிக்கவும் உதவும்.

SOURCE: American Pain Society, news release, December 2011

எனது ‘ஹாய் நலமா’ புளக்கில் சென்ற வருடம் வெளியான கட்டுரையின் மீள் இணையேற்றம்

நாட்பட்ட வலிகள் அணுகுவது எப்படி?

Read Full Post »

உங்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

வேறொன்றும் இல்லை. சின்ன விடயம்தான். ‘அப்பா உங்களுக்கு கலர் சென்சே கிடையாது. என்ன கலர் ஜீன்ஸ்க்கு என்ன கலர் சேட் போட்டிருக்கிறியள்.’ அவள் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை.

கோபம் பொத்துக் கொண்டு வருகிறது

அவ்வாறு சொன்னது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனமாகப் படுகிறது. “எனது மகள் எனக்கு இப்படிச் செல்வதா?” என கிளர்ந்தெழுகிறிர்கள்.

எழுத்தாளர்களும் விமர்சனங்களும்

விமர்சனங்களைப் பற்றி பேச்சு எழுந்தால் முதலில் எழுத்தாளர்கள்தான் நினைவில் வருவார்கள்.

மனிதர்கள் தம்மைப் படைத்ததாகக் தாம் கருதும் இறைவனையே ‘நீ இப்படிச் செய்து போட்டியே’ எனக் கோபமாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.

அவ்வாறிருக்கும்போது எழுத்தாளர்களை விட்டு வைப்பார்களா? அதிலும் ஒரு எழுத்தாளன் மற்றவனைப் பற்றி ஆவேசமாகவோ அன்றி நாசூக்காக கிணடலடித்து விமர்சனம் எழுப்புவதற்குக் காத்திருப்பான். ஆனால் தன்னைப் பற்றி விமர்சனம் எழும்போது…..

மல்லுக்கட்டல்தான்

பொதுவான எழுத்தாளர்கள் படைப்பு எப்படியாக இருந்தாலும் ஆகா ஓகோ எனப் பாராட்டுக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பாராட்டுக் கிடைத்தால் உச்சி குளிரப் புன்னகை வீசி தனது ஆற்றலையிட்டுப் பெருமிதம் அடைவார்கள். மற்ற எந்த நல்ல எழுத்தையும் வாசிப்பதைக் கைவிட்டுத் தன்னைத்தானே படித்துக் கொலரை உயர்திக் கொள்கிறார்கள்.

மாறாக மறையாக விமர்சனம் செய்யதவருடன் மல்லுக்கட்டல்தான். காரசாரமாக விமர்சிக்க வேண்டும் என்றில்லை. சற்று நாசூக்காக ‘இவ்வாறு எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்’ என்று சொல்வபரையும் தனது எதிராளியாகவே கணிக்கத் தொடங்கிவிடுவார்.

ஆனால் இந்தக் கட்டுரையானது எழுத்துலக விமர்சனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல.

மனதை நோகச் செய்யும் என்பது உண்மை

விமர்சனங்கள் மிகவும் மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவை என்பது உண்மைதான்.

மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவையானாலும் …..

ஆனால் அதே நேரம் மிகவும் அவசியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது. விமர்சனமானது ஒருவர் தன்னை சீர்தூக்கிப் பார்க்கவும், தன்னைத் திருத்திக் கொள்ளவும் அல்லது தன்னை மேன்மைப்படுத்த உதவும் சாதனமாகும்.

சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கடினம் என்பதே உண்மை. யாருக்குத்தான் தன்னைப் பற்றி குறைவாகச் சொல்வது திருப்தியைக் கொடுக்கும். ஏனெனில் நாம் சாதாரண மனிதர்கள் தானே. எதையும் உணர்வுபூர்வமாக அணுகப் பழகியவர்கள்.

எம்மை மேன்மைப்படுத்தாத எதுவும் எம்மை மகிழ்சிப்படுத்தாது. எம்மை மேன்மைப்டுத்தாதவன் பற்றி நல்ல அபிப்பிராயம் எழுவதில்லை.

இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் என்ன? நீங்கள் ஒரு

  • படைப்பாளியாக இருக்கலாம்,
  • ஒவியனாகவோ,
  • பாடகனாகவோ அல்லது
  • வேறெந்தக் கலைஞனாக இருக்கலாம்.

படைப்புலகம் சாராது

  • ஆசிரியனாகவோ,
  • தொழிலதிபராகவோ, அல்லது
  • சாதாரண உழைப்பாளியகவோ இருக்கலாம்.

விமர்சனமானது உங்கள் செயற்பாடு சம்பந்தமானதாகவே இருக்கும். வீணாக அதற்குள் உங்கள் பெயரைப் புகுத்தி, அது தனிப்பட்ட உங்களுக்கு எதிரானது எனக் கருதுவதைத் தவிர்க்க வேண்டும்.

நீpங்கள் விமர்சனங்களைத் தனிப்பட்ட ரீதியானவை எனக் கருதும்போது பல சிக்கல்கள் உருவாகின்றன.

  • அவ்வாறு கருதும்போது உங்களை அறியாமலே, அக்கருத்திலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள முனைகிறீர்கள்.
  • அதற்கு எதிரான வாதங்கள் அமோக மனதிற்குள் விளைகின்றன.
  • அவை சொல்லப்பட்ட கருத்திற்கு எதிரானவையாக பெரும்பாலும் இருப்பதில்லை.
  • கருத்தைச் சொன்னவர் பற்றியும் அவர் அவ்வாறு சொன்னதற்கான காரணங்களையும் கண்மூடித்தனமாக கற்பிதம் செய்ய முனைகிறீர்கள்.

இழப்பும் கிடைப்பும்

இதனால் இழப்பு உங்களுக்குத்தான். கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல் தனிப்பட்ட ரீதியானதாக விமர்சனங்களை எடுக்கும்போது அதில் உள்ள ஆரோக்கியமான, உங்கள் எழுத்தை அல்லது செயற்பாட்டைச் செம்மைப்படுத்தக் கூடிய வழிகாட்டக் கூடிய தகவலையும் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.

மாறாக பொதுமையானதாகக் கருதும்போது

  • மிகத் தீவிரமான விமர்சனத்திலிருந்தும் உங்களால் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தேவையற்றவையை அசட்டை பண்ண முடியும்.
  • அரிசி மணியிலிருந்து பதரை நீக்குவதுபோல காரமான விமர்சனங்களுக்குள் ஒளிந்திருக்கும் பயன்படக் கூடிய கருத்துக்களைப் பொறுகியெடுக்கப் பழகவேண்டும்.
  • அவற்றை விட மோசமான, கடுமையான, நேரடியாக உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என வீசப்படும் தனிமனிதக் காழ்ப்புணர்வு விமர்சனங்களையும் பொதுமைப்படுத்தும்போது அது ஒரு பாதுகாப்புக் கவசமாகி உதவும்.
விமர்சங்கள் எழும்போது தன்னிச்சையான எதிர்ப்புணர்வுடன் செயற்படுவதற்குக் காரணம் என்ன?

விமர்சனமானது எமது தன்னங்காரத்துடன் நேரிடையாக மோதுகிறது.

  • ஒருவர் எமது செயற்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்கு உண்மையாகவே ஆலோசனை கூற வரும்போது அதற்குள் ஒரு கசப்பான உண்மை மறைந்திருக்கிறது.
  • அதாவது நீ செய்வது அல்லது எழுதியது திருப்தியானது அல்ல. திருந்த மேலும் இடம் உண்டு என்பதுதான்.
  • அதை சற்றுக் கசப்பான வார்த்தைகளில் சொன்னால் நீ செய்தது பிரமானதானதல்ல. அதாவது நீ ஒரு ஒரு சிறப்பான மனிதன் அல்ல. மாற்றத்தை வேண்டி நிற்கும் ஒரு சாதாரணன் என்பதல்லவா?

இத்தகைய எண்ணம் உங்களைப் புண்படுத்தி விடுகிறது. அதனால்தான் விமர்சனங்களை ஒருவன் எதிர்புணர்வுடன் அணுக நேர்கிறது.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?

உங்களுக்கு எதிரானதாக நீங்கள் கருதும் விமர்சனத்தை நேரிடையான வார்த்தைகளாகவோ அன்றி எழுத்திலோ எதிர் கொள்ள நேரும்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

  1. அவசரப்பட்டு எதையும் செய்ய முனையாதீர்கள். எதிர்வினைகளாக அந்நேரத்தில் எழும் உணர்வலைகளை வெளிப்படுத்த வேண்டாம்.
  • இணையப் பதிவுலகில் சிறிதும் சிந்தனையற்று எழுந்தமாரியாகப் போடப்படும் விமர்சனங்களை உதாரணமாகக் கொள்ளலாம். உடனடியாக முறைக்கவோ ஏசவோ, காரமான வார்த்தைகளைச் சிந்தவோ, எழுத்தில் வடிக்கவோ வேண்டாம். சற்று ஆறப்போடுங்கள்.
  • உங்களைப் பற்றியதான அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு அடங்கும் வரை பொறுத்திருங்கள்.

2. அந்த விமர்சனமானது வேறொருவரைப் பற்றியது எனக் கற்பனை செய்ய முயலுங்கள்.

  • தற்செயலாக உங்களது பெயரைக் கொண்ட வேறொருவர் பற்றியது என நினையுங்கள்.
  • அதுவும் உங்களைப் போன்ற செயற்பாடுடைய வேறெருவரைப் பற்றியது என எண்ண முயலுங்கள்.
  • இன்னொருவரைப் பற்றியது என எண்ணும்போது, தர்க்க ரீதியாக அதிலுள்ள சாதகமான அம்சங்களை இனங்காண முடியலாம்.
வாயை இறுக மூடிக் கொள்ளுங்கள்
  •  வாயை இறுக மூடிக் கொள்ளுங்கள். எதுவும் பேச வேண்டாம். விமர்சனமாகச் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருங்கள். நேரம் கிடைத்தால் குடிகாரக் கணவனின் கோபத்தை அடக்க மனைவியை வாயில் கிறீன் ரீயை வாயிலிட்டு அலசிக் கொண்டிருப்பது பற்றி நான் எழுதிய நகைச் சுவைக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

நிறம் மாறும் போஸ்டர்களாக அவள் முகம்  

  • ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக அது பற்றி மேலும் விளக்கங்களைக் கேளுங்கள். ஆனால் அந்தக் கேள்விகள் தனிப்பட்ட ரீதியானவையாக அமையாமல் விடயம் பற்றிப் பொதுமையாக இருக்கும் வண்ணம் இருப்பது அவசியம்.

இதனால் இரண்டு விதமான நன்மைகள் கிட்டலாம்.

  1. முதலாவதாக அதிலுள்ள சாதகமான அம்சங்களை நீங்கள் இனங்கண்டு பயன்பெற உதவும்.
  2. இரண்டாவதாக விமர்சிப்பவரும் தனது கருத்துக்களை கண்மூடித்தனமாக உங்களைப் பற்றி நேரிடையாகத் தூற்றாது கருத்து ரீதியாக முன்னெடுக்க உதவும்.

இதனால் சூடு தணிந்த பின் நீங்களும் அதனை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ள முடியும்.

ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக ………

இவ்வாறு எதிர்கொள்வதற்கு உங்கள் அடிப்படை நம்பிக்கை முக்கியமானதாகும். இது இரண்டு விடயங்களில் அவசியம் இருந்தே ஆகவேண்டும்.

1.    நீங்கள் என்ன செய்கிறீர்கள், அல்லது சொல்வது என்ன? இது பற்றி தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். எத்தகைய கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் உங்கள் செயற்பாட்டில் பற்றுதி வேண்டும். கைவிடக் கூடாது. தடுமாறக் கூடாது.

2.    எதற்காகச் செய்கிறீர்கள்? அதாவது உங்கள் நோக்கம் அல்லது இலக்கு என்ன என்பது பற்றியும் அவ்வாறே தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் செயற்பாடு பற்றிய கருத்தறியலை வேண்டும்போது அக் கருத்துக்களில் உள்ள நல்ல அம்சங்களை உள்வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையேல் அக் கருத்துகள் அதிகார ஆணையாகி மாறி உங்களைத் திசை திருப்பிவிடும் அபாயம் உண்டு.

தெளிந்து சொல்லுங்கள். உறுதியாக நில்லுங்கள். பதரை நீக்கி மணிகளைப் பொறுக்குங்கள். பயன் பெறுவீர்கள். வீண்பகை தவிருங்கள்.

எம்.கே.முருகானந்தன்

ஜீவநதி சஞசிகையில் வெளியான எனது கட்டுரை

Read Full Post »

சிநேகதி ஏப்ரல் மாத இதழில் எனது இரு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவை இங்கே தரப்படுகின்றன.

சிநேகதியில் வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது

1. மனப்பதற்றம் மாரடைப்பை வரவழைக்கும்.

இது எனது ஹாய் நலமா வலைப்பூவில் நான் முன்பு எழுதிய கட்டுரையாகும். தொடுப்பிற்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

மனப்பதற்றமும் மாரடைப்பும்

2.பொய் சொன்னால் முகம் காட்டிக் கொடுத்துவிடும்- அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும்.

இதுவும் எனது ஹாய் நலமா வலைப்பூவில் நான் முன்பு எழுதிய கட்டுரையாகும். தொடுப்பிற்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும்

எனது கட்டுரைகளை சிநேகிதி இதழில் வெளியிட ஆவன செய்த மஞ்சுளா ரமேஸ் அவர்களுக்கு நன்றி

0.0.0.0.0.0

Read Full Post »

“மகள் என்னைக் கனடாவுக்கு வரச் சொல்லுறா. இந்தச் சளிக்காரி நான் அங்கை போய் என்ன செய்யிறது”

மூக்கால் சளி சிந்தவில்லை.

வார்த்தைகளில் நம்பிக்கையீனம் ஓட ஓடச் சிந்தியது. அழாத குiறாயாகச் சொன்னார் அந்த அம்மணி.

இதே அம்மணி சென்ற மாதம் வந்தபோது,

“வாழ வழியே தெரியவில்லை. தனிய கிடந்து மாயிறன். கூப்பிட்ட குரலுக்கு ஏனென்ன யாருமில்லை. என்ன வாழ்க்கை” எனச் சலித்துக் கொண்டார்.

தனியே வாழ்வது சிரமம் எனக் கவலைப்பட்ட அதே அம்மா இப்பொழுது மகளுடன் வாழச் சந்தர்ப்பம் கிடைத்தபோதும் திருப்பதியடையவில்லை.

போதுமென்ற மனசு

போதுமென்ற மனசு பொன் போன்றது என்பார்கள். மாறாக எதிலும் திருப்பதிப்படாத மனசு நரகமாகத்தான் இருக்கும். கோப்பையும் தண்ணீரும் நல்ல உதாரணம்.

“எனது கோப்பையில் தண்ணீர் அரைவாசி நிறைந்திருக்கிறது” 

எனச் நிறைவோடு சொல்பவர்கள் இருப்பார்கள், அல்லது

“அரைக் கோப்பை காலியாக இருக்கிறது”

எனக் கவலைப்படுபவர்களும் இருப்பார்கள்.

இதற்கான மறுமொழியிலிருந்து ஒருவரது வாழ்க்கை பற்றிய எண்ணத்தை அறிந்து கொள்ளலாம் என்பார்கள்.

இவற்றைத்தான் நேர் சிந்தனை (Positive thinking)> எதிர்மறை சிந்தனை (Negative thinking) என்றெல்லாம் சொல்கிறார்கள். நம்பிக்கையுள்ள மனது, அவநம்பிக்கையுள்ள மனது என்று புரியும்படி சொல்லலாமா?

இது வாழ்க்கை பற்றிய பார்வை மட்டுமல்ல. உங்கள் நலத்தோடும் தொடர்புடையனவாகும்.

மறுவார்த்தையில் சொன்னால்

  • நேர் சிந்தனையுள்ள மனது உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது.
  • எதிர்மறை சிந்தனையுள்ள மனது நலக்கேட்டுடன் தொடர்புடையது எனலாம்.

நேர் சிந்தனையும் உடல் நலமும்

நேர் சிந்தனையாது உடல் நலம் பல வழிகளில் முன்னேற்றமடைய உதவுகிறது.

  • வாழ்நாள் அதிகரிக்கும்.
  • மனச் சோர்வு நோய்க்கான (Depression) சாத்தியம் குறைவாகும்.
  • நாளாந்த வாழ்க்கை நெருக்கீடுகளின் தாக்கம் குறைவாகும்.
  • உடல் உள ஆரோக்கியங்கள் மேம்படும்
  • சாதாரண தடிமன் காய்ச்சல் அணுகுவது குறையும்.
  • மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் இறப்பதற்கான சாத்தியம் குறைவாகும்.

இவற்றுக்கான காரணங்கள் என்ன?

நேர்சிந்தனை உள்ளவர்களது உடல்நலம் நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணங்கள் என்ன?

  • நேர் சிந்தனையானது, வாழ்வின் நெருக்கீடு நிறைந்த தருணங்களில் மனம் தளர விடாது நம்பிக்கையுடன் செயலாற்ற உதவும். இதனால் நெருக்கீட்டின் தீய விளைவுகளால் உடல்நலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது என நம்பப்படுகிறது.
  • நேர் சிந்தனை உள்ளவர்களுக்கு பொதுவாக வாழ்க்கை பற்றிய ஆரோக்கியமான நிலைப்பாடு உள்ளது. இதனால் அவர்கள் பொதுவாக நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.

உதாரணமாக

  1. நல்ல உணவுகளை உண்கிறார்கள்.
  2. உடற் பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
  3. புகைத்தல், மது, போதைப் பொருட்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதில்லை. இதனால் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிட்டுகின்றது.

மனதோடு பேசல்

நாங்கள் சதா காலமும் எமது மனதோடு பேசிக்கொண்டே இருக்கிறோம். இதை நாம் உணர்வதில்லை. ஆற்று நீர்போல எமது மூளையினுள் சதா காலமும் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கினறன.

தன்னிச்சையாகத் தோன்றி வற்றாத நீருற்றுப் போல பாய்ந்தோடுபவை நேர் சிந்தனைகளாக அல்லது எதிர்மறை சிந்தனைகளாக இருக்கலாம்.

இந்தச் சிந்தனைகள் பலவும் தர்க்க ரீதியானதாக உண்மையின் அடிப்படையில் தோன்றி இருக்கலாம். அல்லது எமது தவறான நம்பிக்கைகள் காரணமாகவும், போதிய தகவல்கள் கிட்டாததாலும் ஏற்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு எழுபவை எதிர்மறை சிந்தனைகளாக இருந்தால் வாழ்க்கை அவநம்பிக்கை சூழ்ந்ததாக மாறிவிடும். மாறாக நேர் சிந்தனைகளாக இருந்தால் ஒளிமயமான எதிர் காலம் சித்திக்கும். உங்கள் சிந்தனையின் போக்கு எத்தகையது என்பதை அடையாளம் காண முயலுங்கள்.

உங்கள் எதிர்மறை சிந்தனைகளை அடையாளம் காண்பது எப்படி?
  • நாள் முழுவதும் பல நல்ல காரியங்களைச் செய்கிறீர்கள். சாதனைகளைப் புரிகிறீர்கள். மற்றவர்களது பாராட்டுகளையும் பெறுகிறீர்கள். ஆனால் ஒரு தவறு நடந்து விடுகிறது. அந்த நாளின் முடிவில் நீங்கள் மிகுதி எல்லாவற்றையும் மறந்து விட்டு அந்த ஒரு தவற்றை மட்டும் தூக்கிப் பிடித்துக் கவலை கொள்கிறீர்களேயானால் நீங்கள் எதிர்மறை சிந்தனை கொண்டவர் எனச் சொல்லலாம்.
  • ஏதாவது தவறுகள் நேரும் போது அல்லது நடக்க வேண்டிய கருமம் நிறைவேறாத தருணங்களில் அதற்குக் காரணம் நீங்கள்தான் என மனங்கோணுவதும் எதிர்மறை சிந்தனைதான்.
  • எதிலும் நன்மையை எதிர்பார்க்காது இருத்தல். உதாரணமாக காதலியுடன் ஒரு சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அங்கு போய் ஏதாவது மடைத்தனமாகப் பேசி, நடந்து அவளது உறவையே முறித்துவிடக் கூடும் எனத் தயங்கினால் அதற்கு வாழ்க்கை பற்றிய அவரது நம்பிக்கையீனம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

மாற்ற முடியுமா?

மனதோடு பேசும் உங்கள் உரையாடல்கள் அனைத்தும் எதிர்மறை சிந்தனைகளாக இருந்தால் உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது. இனிச் செய்வதற்கு எதுவும் இல்லை என மனங்கலங்க வேண்டியது இல்லை.

உங்கள் சிந்தனைகளினது பாதையை நீங்கள் முயற்ச்சித்தால் மாற்றிக் கொள்ளலாம்.

  • நாளாந்த செயற்பாடுகளின் இடையே உங்களை நீங்களே சீர்தூக்கிப் பாருங்கள். உங்கள் சிந்தனைகள் சரியான வழியில் செல்கின்றனவா அல்லது கவலைக்குரிய பாதையில் செல்கிறதா? எதிர்மறை சிந்தனை வழி சென்றால் அதனை இடை மறித்துச் சரியான சிந்தனைக்கு இட்டுச் செல்லுங்கள்.
  • புன்னகைக்கும் சிரிப்பிற்கும் இடம் ஒதுக்கி வையுங்கள். நகைச்சுவை உணர்வு வாழ்வை மலர்ச்சிக்கு உள்ளாக்கும். எத்தகைய நிகழ்வுக்கும் நகைச்சுவை, கிண்டல், முசுப்பாத்தி என இனிமையான பக்கம் இருக்கவே செய்யும். அதைக் கண்டு பிடித்து வாழ்வை நம்பிக்கையாக்குவது அவரவர் கைகளில்தான் தங்கியுள்ளது. அதிலும் முக்கியமாக துன்பமான நிகழ்விலும் கூட சிரிப்பை உண்டாக்கக் கூடிய பக்கத்தைத் தேடிக் கொள்ளலாம்.
மனைவியின் இறப்பு

எனது நண்பரின் மனைவி மறைந்தபோது அவரது மறைவிற்கு அனுதாபம் சொல்வதற்காகச் சென்றிருந்தேன்.

“இப்பத்தான் அவளுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. எனது சுடுசொற்களிலிருந்து” என்றார்.

ஆழ்மனத்தில் சோகம் மூடியிருந்தபோதும் அதனை மறைக்க அவரது நகைச்சுவை உணர்வு கை கொடுத்தது.

உங்கள் வாழ்வைப் பார்த்து நீங்களே சிரிக்கக் கற்றுக் கொண்டால் அதைவிட பெரிய பேறு எதுவும் இருக்க முடியாது.

  • வாழ்க்கை முறை:- ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளும் உதவும். தினசரி உடற் பயிற்சி அல்லது நடை உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் முக்கியமானது. அத்துடன் நொறுக்குத் தீனிகளைத் தவரித்த சத்துள்ள உணவு முறையும் நெருக்கீடுகளை துணிவோடு எதிர் கொள்ள உதவும்.
  • நம்பிக்கையூட்டும் சூழல்:- நீங்கள் நேர் சிந்தனையுள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நல்லவர்களாக மட்டுமின்றி வாழ்வில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் உங்களது நேர்சிந்தனைகளை அவர்கள் மாற்றிவிடக் கூடும் என்ற அபாயம் உண்டு. சந்தேகமும், நம்பிக்கையீனமும், செயற்திறனும் அற்றவர்கள் சூழலில் இருந்தால் உங்கள் வாழ்வில் நெருக்கீடுகள் அதிகரிக்கக் காரணமாகிவிடுவார்கள்.
  • மனதோடு மகிழ்ச்சியாகப் பேசுங்கள்:- உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை மென் மனத்தோடு அணுகுங்கள். அதை நோகடிக்கும் வகையில் உங்கள் மனத்தோடு பேசாதீர்கள். மற்றவர்கள் முகத்துக்கு நேரே சொல்ல முடியாத கடுமையான வார்த்தைகளை உங்கள் மனத்திற்குள் பேசி அதைக் காயப்படுத்தாதீர்கள். இவை உங்கள் சிந்தனைகளை நேர்வழியில் செல்ல வழிவகுக்கும்.
மாற்றங்களுக்கு தயாராகுங்கள்
  1. இது முன்பு நான் ஒருபோதும் செய்யாதது. இப்பொழுது எப்படிச் செய்யப் போகிறேன் எனத் தயங்க வேண்டாம். இதைச் செய்து பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இதை என்னால் செய்ய முடியும் எனச் சவாலாக எடுங்கள்.
  2. இது சிக்கலானது என எதையும் செய்யத் தயங்காதீர்கள். மாற்று வழியிலாவது இதைச் செய்ய முடியும் என சிந்தியுங்கள்.
  3. இது தீவிரமான மாற்றம். இதில் ஈடுபடுவது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல என புதிய முயற்சிகளில் இறங்கும்போது சிந்திக்காது, முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை என எண்ண வேண்டும்.

இவற்றைச் செய்தால் ஒரே நாளில் சிந்தனை முறையில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என எதிர்பார்க்க வேண்டாம். தொடர்ந்து முயற்சியுங்கள், தொடர்ந்து பயிற்சி  செய்யுங்கள். படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்படும்.

நேர்சிந்தனை கொண்ட மனது உங்களுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், சுபிட்சங்களையும் உடல் ஆரோக்கியத்தையும் கொண்டு வரும்.

நம்புங்கள்.

ஹாய் நலமா புளக்கில் வெளியான எனது பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

‘இது மற்றப் பக்கத்தைவிடப் பெரிசாக இருக்கிறது’ என்றாள் அவள்.

கலந்தாலோசனையை முடித்துக் கொண்டு  வெளியேற எழுந்தபோதுதான் அப்படிச் சொன்னாள். காய்ச்சல், சளி இருமலுக்காக மருந்தெடுக்க வந்திருந்தாள் அந்தப் பள்ளி மாணவி.

தனது வலது கையைச் சுட்டிக் காட்டுவது கண்ணில் பட்டபோது, அடுத்த நோயாளி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அப்படி இருப்பது இயற்கைதானே. அதிகம் உபயோகிக்கும் கை மற்றதைவிட சற்று மொத்தமாக இருக்கும்” என ஆறுதல் சொல்லி அனுப்பி வைததுவிட்டு அடுத்தவர் பிரச்சனையில் மூழ்கினேன்.

“மூக்கு சற்று வளைவாக இருப்பதாக” அதே பெண் அடுத்த முறை வந்து சொன்ன போது சற்று உசாரானேன். அவளது முகத்தில் சற்று வாட்டம் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

சற்று ஆறுதலாகப் பேசிய போது அவளுக்கு தனது தோற்றம் பற்றிய தற்குறை இருப்பதை உணர்ந்தேன்.

தனது உடற்தோற்றம், அழகு, கவர்ச்சி போன்றவை பற்றிய அக்கறை பதின்ம வயதினரிடையே ஏற்படுவது சகசம்.

  • ஒரு பக்க மார்பு பெரிசாக எனப் பெண்களும்
  • அல்லது ஒரு பக்க விதைப்பை பெரிசாக எனப் பையன்களும் கவலைப்பட்டுக் கொண்டு வருவது அதிகம்.
  • தான் உயரமாக அல்லது குள்ளமாக இருப்பதான உணர்வு,
  • தனது நிறம் குறைவாக இருப்பதாக எண்ணல் இப்படிப் பல.
  • தமது சருமம் மிருதுவாக இல்லை,
  • தனது குரல் கரகரக்கிறது.
  • தனது பல் சற்று பழுப்பு நிறமாக இருக்கிறது.
  • தலைமுடி கொட்டுகிறது.
  • நகம் அசிங்கமாக இருக்கிறது.

இவ்வாறெல்லாம் தமது உடல் பற்றிய மறையான சிந்தனைகள் ஏற்படலாம்.

இப்படியான எண்ணங்கள் உங்களுக்கும் ஏற்பட்டால் அது பற்றி கவலைப்படவோ வெட்கப்படவோ வேண்டாம். நீங்கள் மட்டுமல்ல நிறையப்பேருக்கு இத்தகைய சிந்தனைகள் வருவதுண்டு.

ஆனால் அவ்வெண்ணத்தை மாற்றி மகிச்சியை கைப்பிடிக்க வேண்டும்.


மனத்தாக்கம் ஏற்படலாம்

தனது உடல் பற்றிய எண்ணங்களுக்கும் சுயமதிப்பீடுகளுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. தனது உடல் அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறது என எண்ணுபவருக்கு தன்னைப்பற்றிய தாழ்வுணர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் எனலாம். தாழ்வு மனப்பான்மை என்பதும் இதனோடு தொடர்புடையதே.

  • முதலில் குறிப்பிட்ட பெண்ணுக்கு தனது உடற்தோற்றம் பற்றிய திருப்தியின்மையானது மனச்சோர்வாக மாறியிருந்தது.
  • அதேபோல ஒவ்வொருவரும் தமது தோற்றம் பற்றிய தாழ்வுமனப்பான்மை உளம் சார்ந்த நோய்களாக மாறாது தடுப்பது அவசியம்.

அதற்கான துடுப்பு அவரவர் கைகளிலேயே இருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

அப்படியான மறைஎண்ணம் (Negative Thoughts) வந்தால் நீங்கள் செய்யக் கூடியது என்ன?

உங்களிடம் உள்ள தனிச்சிறப்புகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பியுங்கள்.

  • நிறம் கறுப்பாக இருந்தாலும் உங்கள் கண்கள் கவர்ச்சியுடையனவாக இருக்கலாம்.
  • சிரிக்கும் ஏதோ ஒரு மோகனம் மற்றவர்களை ஈர்க்கலாம்.
  • அல்லது உங்கள் உரையாடல் திறன் மற்றவர்கள் உங்களோடு மனம் திறந்து பேச வைக்கலாம்.
  • விளையாட்டு, சமையல், கையெழுத்து

இப்படி ஏதாவது ஒரு சிறப்பு அல்லது பல சிறப்புகள் உங்களிடத்தில் மறைந்து கிடக்கலாம். அவற்றைக் கண்டு பிடியுங்கள். கண்டு பிடித்ததை மெருகூட்டுங்கள். மனம் மகிழ்ச்சியில் ஆளும்.

சிறப்புகளை மீள நினைத்தல் நன்று

உங்கள் சிறப்புகளை நினைத்துப் பார்ப்பதுடன் நின்றுவிடாது அவை பற்றி குறிப்புகள் எழுதி வைப்பது இன்னும் மேலானது.

எழுதத் தவறிவிட்டாலும், தினமும் உங்களை மகிழ்வுறச் செய்த சம்பவங்களை படுக்கைக்கு சென்று தூங்கு முன்னர் இரை மீட்டிப் பார்ப்பதுவும் சுயபிம்பத்தை உயர்த்தக் கூடியதாகும்.

தினமும் குறைந்தது மூன்று மகிழ்வூட்டிய நிகழ்வுகளையாவது நினைவுபடுத்துங்கள்.

உதாரணத்திற்கு

  • நீங்கள் கூறிய விடைக்கு ஆசிரியர் திருப்தி எனச் சொல்லியிருக்கலாம்.
  • உங்களுக்கு விடை தெரிந்திருந்தும், விடையளிக்க முன் வேறொருவர் சொல்லிப் பாராட்டைப் பெற்றிருந்தாலும்
  • விடை தெரிந்ததை உங்களுக்குக் கிடைத்த வெகுமதியாக எண்ணி மகிழுங்கள்.

“அட நான் சொல்லாமல் விட்டுவிட்டேனே” எனக் கவலைப்படுவது கூடவே கூடாது.

உங்களது உடை, அல்லது நீங்கள் தயாரித்த உணவு, அல்லது நீங்கள் சொன்ன ஜோக் மற்றவர்களைக் கவர்ந்திருக்கும்.

  • உங்கள் வெற்றிகளை நினைவுபடுத்துங்கள்.
  • அவற்றை உங்களுக்குக் கேட்குமாறு வாய்விட்டு உரத்துச் சொல்லுங்கள்.
  • அல்லது உங்கள் பெற்றொர், அண்ணன், அக்கா அல்லது உங்களைப் புரிந்து கொண்ட ஒருவருடன் பகிர்ந்து மகிழுங்கள்.

இவை யாவுமே உங்களைப் பற்றிய உங்கள் சுயபிம்பத்தை உயர்த்த உதவும்.

உங்களுக்குள் ஏதோ ஒரு அழகு ஒளிந்திருக்கிறது. உங்களின் மனது மற்றவர்களைக் கவருகிறது. உங்களுக்கு மட்டுமே தனித்துவமான ஏதோ ஒரு ஆற்றல் அழகு குணம் குடிகொண்டிருக்கிறது.

அதை நினையுங்கள். அதையிட்டுப் பெருமைப்படுங்கள். மேலும் வளருங்கள்.

ஒளிமயமான எதிர்காலம் உங்கள் வரவிற்காகக் காத்திருக்கிறது. பயன்படுத்தாது தப்ப விட்டுவிடாதீர்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ஹாய் நலமா புளக்கில் முன்பு வெளியான எனது கட்டுரை

0.0.0.0.0.0

Read Full Post »

உங்கள் மனைவி சந்தோஷமாக இருக்கிறாரா?
இல்லையென்றால் அவரை மகிழ்வுறுத்துவதற்கு வழி என்ன?
சிந்திப்போம்!

அந்த ஜயா மிகவும் வசதியானவர்.
மனைவியில் மிகுந்த அன்பு கொண்டவர். அவவிற்கு சிறிய வருத்தம் என்றால் கூட அலட்சியம் பண்ண மாட்டார்.
உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துப் போவார்.
தேவையான பரிசோதனைகளையெல்லாம் அலுக்காமல் செய்வார். மருந்துகள், சத்து மருந்துகள் எல்லாம் வாங்கிக் கொடுப்பார்.

ஆயினும், மனைவியின் முகத்தில் சந்தோஷத்தைக் காண முடிவதில்லை.

மற்றவர் அவ்வளவு வசதியானவர் அல்ல.

ஆயினும், தனது மனைவியின் சௌகர்யத்திற்காக தனது தகுதிக்கு மேல் போய் எல்லாம் வாங்கிக் கொடுப்பார். ரி.வி., பிரிட்ச், மைக்ரோ அவன், வோஷிங் மெசின், பிரஸர் குக்கர் என எது தேவையென்றாலும் கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுப்பார். ஆயினும், அவராலும் மனைவியின் மனதைக் கவர முடியவில்லை. வேறு என்ன செய்வது என அங்கலாய்க்கிறார்.

இன்னுமொருவர், மனைவியின் திருப்தியின்மைக்குக் காரணம் அவளது தனிமையும் பொழுதுபோக்கின்மையும்தான் என நம்பி நீண்ட லீவு போட்டுவிட்டு கோயில், குளம், சுற்றுலா, வெளிநாட்டுப் பயணம் என பலதும் முயன்றுவிட்டார். ஆயினும் எதுவித முன்னேற்றமும் இல்லை.

இப்பெண்கள் எல்லாம் எதிலும் திருப்தியடையாத தாழ்ந்த மனம் கொண்டவர்களா? இல்லை!

கணவர்களின் அணுகு முறையில்தான் ஏதோ தவறு இருக்க வேண்டும்.

லெபனானின் பெய்ரூடடில் செய்யப்பட்ட ஆய்வு உங்களுக்கு உதவலாம். 1,650 திருமணமான தம்பதியர்களிடையே செய்யப்பட்ட ஆய்வு அது.

  • வீடு கூட்டுதல்,
  • தூசி தட்டுதல்,
  • உடுப்பு தோய்த்தல்,
  • சமையல், தேனீர் தயாரித்தல்,
  • படுக்கையை சுத்தம் செய்தல்,
  • பாத்திரம் கழுவுதல்

போன்ற இருபத்தைந்து நாளாந்த வீட்டு வேலைகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.

வீட்டு வேலைகளில் கணவன் எந்த அளவுக்கு உதவுகிறான் என்பதையும் மனைவியின் மன நிலை, குடும்ப வாழ்வில் அவளது திருப்தி அல்லது திருப்தியின்மை, அவளது கவலை போன்றவற்றோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்த்தார்கள்.

வீட்டு வேலைகளில் மிகக் குறைந்தளவே பங்களித்த கணவன்மாரின் மனைவிகள் கூடுதலாகப் பங்களித்தவர்களின் மனைவிகளைவிட,

  • 1.6 விகிதம் உள நெருக்கடியில் இருந்தார்கள்.
  • 2.96 விகிதம் கணவனோடுடனான உறவில் அசௌகரியப்படுவதாக உணர்ந்தார்கள்,
  • 2.69 விகிதம் கூடுதலான கவலையோடு இருந்தார்கள்.

“வீட்டு வேலைகளில் கணவன் ஈடுபடுவதற்கும்,
மனைவியின் மன ஆரோக்கியத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை
இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது”

என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தும்புத்தடியில் ஆரம்பியுங்கள்.

வீடு கூட்டுவதில் ஆரம்பித்து
ஏனைய வீட்டு வேலைகளிலும்
பங்கு பற்றுங்களேன்,
மனைவி மகிழ்வார்.

வீட்டில் என்றும் வசந்தம்தான்!

தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்து எனது ஹாய் நலமா வலைப்பூவில் 4 வருடங்களுக்கு முன் பதிவேற்றிய கட்டுரை.

Read Full Post »

>எதிலும் நல்லதை நினைத்தால் மரணமும் எட்டி ஓடும்

‘எப்பொழுதும் நல்லதை எண்ணுங்கள்,

நல்லதைப் பேசுங்கள்,

நல்லதையே செய்யுங்கள்.

வாழ்வில் அவநம்பிக்கை கொள்ளாதீகள்.

எதையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.

மறை எண்ணங்கள் வேண்டாமே.

நல்லதை நினைத்தால்,

வாழ்வை நம்பிக்கையோடு எதிர் கொண்டால்

வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

நீடித்த வாழ்வு கிட்டும்.’

இவ்வாறு சொல்லாத அறிஞர் அல்லது ஞானிகள் இருக்க முடியாது.

ஆனால் எவர் எதைச் சொன்னாலும், எத்தனை தடவைகள் இத்தகைய நல்ல வார்த்தைகளைக் கேட்டாலும் எமது குரங்கு மனம் அடங்குவதில்லை. மறை எண்ணம் கொண்டு கவலையுறவே செய்யும்.

ஆனால் விஞ்ஞான ரீதியாகச் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று இது வெற்று நம்பிக்கையல்ல, நிரூபிக்கப்படக் கூடிய உண்மையும் கூட என்ற நம்பிக்கையைத் தருகிறது.

பெண்களில் செய்யப்பட்ட இந்த ஆய்வானது அனைத்தும் நன்மையிலேயே முடியும் என்ற நம்பிக்கை உணர்வு கொண்ட பெண்களுக்கு (Optimistic women) மாரடைப்பு வருவதற்கான சாத்தியமும், வேறு காரணங்களால் மரணம் வருவதற்குமான வாய்ப்பும் குறைவு என்கிறது.



மாறாக நடப்பவை எதிலும் நம்பிக்கையற்று, மற்றவர்களில் நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொள்ளும் (pessimistic women) பெண்களுக்கு மரணம் விரைவில் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

இருந்தபோதும் அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பில் மாற்றம் இருக்கவில்லை என மேலும் சொல்கிறது அந்த ஆய்வு.



மாதவிடாய் முற்றாக நின்றுவிட்ட 50 வயது முதல் 79 வயதுவரையான 97,253 பெண்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலமே இந்த முடிவுகள் எட்டப்பட்டன.

மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நம்பிக்கையுணர்வுள்ள பெண்களில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 9 சதவிகிதத்தாலும், ஏனைய காரணங்களால் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 14 சதவிகிதத்தாலும் குறைந்திருந்தது.

ஆனால் நம்பிக்கை வரட்சி கொண்ட பெண்களில் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 16 சதவிகிதத்தால் அதிகரித்திருந்தது.

நம்பிக்கை உணர்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான தொடர்பில் இனத்திற்கும் (Race) பங்கு உண்டாம். நம்பிக்கையுணர்வுள்ள ஆப்பிரிக்க அமெரிக்க பெண்கள் அடுத்த 8 வருடங்களில் மரணிப்பதற்கான வாய்ப்பு 33 சதவிகிதம் குறைவாக இருந்ததாம். ஆனால் அதே கால இடைவெளியில் வெள்ளையினப் பெண்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு 13 சதவிகிதம் மட்டுமே குறைவாக இருந்ததது.

பொதுவாக நம்பிக்கை உணர்வு கொண்டவர்களிடம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு, மனச் சோர்வு அறிகுறிகள் போன்றவை குறைவாகவே இருப்பதுண்டு.

அத்துடன் புகைத்தல், மற்றும் உடலுழைப்பின்றி சோம்பேறி வாழ்க்கை வாழ்தல் ஆகியவையும் அதிகம் காணப்படுவதில்லை.

இவற்றைக் கணக்கில் எடுத்த போதும், நம்பிக்கை உணர்வுள்ளவர்களிடையே மாரடைப்பு மற்றும் விரைவில் மரணம் அடைதல் ஆகியன குறைவாகவே இருந்தததாக ஆய்வு செய்தவர்கள் தெளிவுபடுத்தினர்.

இது பெண்களுக்கான ஆய்வுதானே என்று எண்ண வேண்டாம்.

சில வருடங்களுக்கு முன் ஆண்களில் டச் மருத்துவர்களால் செய்யப்பட்ட ஆய்வும் இதே முடிவையே கொண்டிருந்தன என்பது குறிபிடத்தக்கது.

எனவே எல்லோருக்கும் பொருந்தும்.

ஓப்பிட்டு ரீதியாகப் பார்க்கும் போது

வயதில் குறைந்தவர்கள்,

கல்வியறிவு அதிகமுள்ளவர்கள்,

பொருளாதார ரீதியாக வசதியுள்ளவர்கள்,

சமய நிகழ்வுகளில் வாரம் ஒரு முறையாவது கலந்து கொள்பவர்களிடையே நம்பிக்கை உணர்வு அதிகம் இருந்ததையும் இந்த ஆய்வில் கண்டறிந்தார்கள்.



எனவே எமது வாழ்நாளை அதிகரிப்பதற்கு வாழ்விலும் எதிர்காலத்திலும் நம்பிக்கை உணர்வை வளர்ப்பது அவசியமாகிறது.

நீண்ட நாள் வாழ்வதற்காக மட்டுமின்றி மகிழ்ச்சியுள்ள பயனுறு வாழ்வாக அமைவதற்கும் அதே நம்பிக்கை உணர்வுதானே காரணமாகிறது.

அழு மூஞ்சியை கழுவித் துடைத்து எறிந்து விட்டு நம்பிக்கையோடு புன்னகைக்கும் வதனமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

அது சரி. கீழே உள்ளவரின் நம்பிக்கையும் நேர் எண்ணத்தில் (Positive Thinking) அடங்குகிறது அல்லவா?

இவர்களை எந்த இடத்தில் சேர்த்துக் கொள்வது?



தகவல்:- Journal of the American Heart Association யின் ‘Circulation’ என்ற மருத்துவ சஞ்சிகையின் August 10, 2009 இதழ்.



நன்றி:- ஹாய் நலமா?, தினக்குரல் 17.12.2009

Read Full Post »

Older Posts »