Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘எடைக்குறைப்பு’ Category

>

உணவு வேண்டாமெனும் நோய்- Anorexia Nervosa

அம்மாவுக்குத்தான் சரியான கவலை. பார்க்கும் எல்லோருமே “உன்ரை மகளுக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி இருக்கிறாள்.” என அக்கறையோடு விசாரிக்கிறார்கள்.

மருத்துவனான எனக்கும் இது அக்கறை எடுக்க வேண்டிய விடயம் எனப் புரிகிறது.

ஆனால் மகள் அதை சட்டை பண்ணுவதாகத் தெரியவில்லை.

வேறோன்றும் இல்லை. அவள் சாப்பிடுகிறாள் இல்லையாம். எல்லா அம்மாக்களும் தனது மகள்மாரைப் பற்றிச் சொல்வது போன்ற வெற்றுப் பேச்சல்ல இது. தாய் சொல்வது உண்மை என்பதற்கு ஒல்லிக்குச்சான அவளது உடல் மறுக்க முடியாத சாட்சியாக நிற்கிறது.

வெளிறிய முகம், குச்சியான உடம்பு, வளர்ச்சி குன்றிய தசைகள், மென்மையான நோஞ்சி முடி, வரண்டு மஞ்சள் பூசியது போன்ற சருமத்துடன் சோர்ந்திருந்தாள். வயதிற்கேற்ற துடியாட்டம் இல்லை. எப்பொழுதும் குளிராக இருப்பதாகவும், சாதாரண குளிரைக் கூடத் தாங்க முடியாதிருப்பதாகவும், மலச்சிக்கல் தொல்லை கொடுப்பதாகவும் சொன்னாள். ஓரளவு இரத்தசோகையையும் அவதானிக்க முடிந்தது.

இவை அவளில் மட்டுமல்ல, Anorexia Nervosa எனப்படும் உணவு உட்கொள்ளல் குளறுபடியில் உள்ள பலருக்கும் ஏற்படுகிறது. குளறுபடி என நான் பொதுப்படையாகச் சொன்னாலும் மருத்துவம் செய்ய வேண்டிய ஒரு நோய்தான் இது.

இதற்கு அடிப்படைக் காரணம் தமது உடல் சம்பந்தமான தவறான கருதுகோள்தான். இது பொதுவாக இளம் பெண்களிடையே காணப்படும் பிரச்சனையாகும். இளைஞர்களிடையே காணப்படலாம் என்ற போதிலும் பெரும்பாலும் பெண்களே பாதிப்படைவது அதிகம்.

தனது உடல் பற்றிய தவறான கருதுகோள் – தான் கொழுத்துவிட்டதான மனப் பிராந்தி

‘மெல்லிய உடலாக இருப்பதுதான் ஆரோக்கியமானது, அதுதான் அழகையும் கொடுக்கும். தான் கொழுக்கக் கூடாது. தனது உடை அதிகரிப்பது கூடாது. அதற்காகக் குறைவாக உண்ண வேண்டும். கண்ட சாப்பாடுகளையும் சாப்பிடக்கூடாது.’ என எண்ணுவதே அடிப்படைப் பிரச்சனையாகும்.

சிலர் உணவுக் கட்டுப்பாடுடன் எடையைப் பேணுவதாக எண்ணி கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்வர். உண்ட உணவை வெளியேற்ற தாமாக முனைந்து வாந்தி எடுப்பதும், மலங்கழிய மாத்திரைகள் உண்பதும், சிறுநீர் அதிகமாக அடிக்க மருந்துகள் சாப்பிடுவதும் என பல காரியங்களைச் செய்யவும் கூடும்.

தம்மை அடிக்கடி நிறுத்துப் பார்ப்பதும், தான் உண்ணும் உணவுகளின் நிறையை அளந்து பார்ப்பதும், எடையை அதிகரிக்காது எனத் தாம் கருதும் சில குறிப்பிட்ட வகை உணவுகளை மட்டுமே உண்பதும் மற்றவர்களுக்கு நகைப்பை ஊட்டினாலும் அவர்கள் கடமையுணர்வோடு செய்வர்.

இது நகைப்பிற்கு உரிய நோய் அல்ல. அலட்சியப்படுத்தக் கூடியதும் அல்ல. ஏனெனில் இவர்கள் இறப்பதற்கான சாத்தியம் சாதாரணமானவர்களைவிட 10 மடங்கு அதிகமாகும். இருதயம் திடீரென நிற்றல், உடலிலுள்ள நீர் மற்றும் கனிய உப்புகளின் அளவுகளில் ஏற்படும் கடுமையான மாற்றங்கள் காரணமாகின்றன. சிலர் தற்கொலை செய்து இறப்பதும் உண்டு.

மனச்சோர்வு, மனப்பதகளிப்பு நோய், மாற்ற இயலா எண்ணங்கள் போன்ற உளநோய்கள் இவர்களிடையே இருப்பது அதிகம். பெண்களிடையே மாதவிடாய் கோளாறுகளும் அதிகமாக காணப்படும். சிலர் போதைப்பொருள் பாவனையாளர்களாகவும் இருக்கக் கூடும். நரம்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள் போன்றவை இருக்கிறதா என்பதையும் மருத்துவர்கள் சோதித்துப் பார்ப்பர்.

மருத்துவத்தைப் பொறுத்தவரையில் அது மூன்று படிகளைக் கொண்டதாகும்

  1. நோயாளின் எடையை சாதாரண அளவிற்கு கொண்டுவருதல் முக்கியமானது.
  2. நோயாளியின் உணவு உண்ணல் குளறுபடி நிலைக்கு அடிப்படையான உளவியல் காரணத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சையளித்தல்
  3. தவறான உணவுமுறைகளுக்கான பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை மாற்றுதலும், மீள வராமல் தடுத்தலுமாகும்.

மருந்துகள் மட்டும் இவற்றிற்கு உதவப் போவதில்லை. தனிப்பட்ட ரீதியிலும் குடும்பத்தினருடனும் கலந்துரையாடுவது, உளவளத் துணை ஆகியன நல்ல பலனைக் கொடுக்கும்.

உணவு உண்ணல் சம்பந்தமான வேறு நோய்கள்

உணவு உட்கொள்ளல் முறையோடு சம்பந்தமான வேறு இரு நோய்களைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.

அதீதமாக உண்ண வேண்டும் என்ற அடக்க முடியாத அவா, இதனால் எடை அதிகரிப்பது, அது பற்றி குற்ற உணர்வுக்கு ஆளாவது. குற்ற உணர்விலிருந்து மீள மேலும் உண்பது என்பது (Binge eating) நோயாகும்


கட்டுப்படுத்த முடியாது அதீதமாக உண்பதும் பின் அதன் பாதிப்பை நீக்க தானாக வாந்தியெடுத்தல், பேதிபோக வைத்தல் (Bulimina nervosa) மற்றொரு நோயாகும்.

இவை யாவும் மருத்துவ ஆலோசனையுடன் குணப்படுத்தக் கூடியவையே.

உடையைக் குறைக்கும் அற்புத வழிகளுக்கு கீழே சொடுக்குங்கள்

வயதிற்கும் எடைக்கும் இடையிலான தொடர்பு பற்றி சிரித்துக்கொண்டு அறிய கீழே சொடுக்குங்கள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா’ பத்தியில் வெளியான கட்டுரை

0.0.0.0.0.0.0

Read Full Post »

>அதீத எடை என்பது ஒரு உலகளாவிய பிரச்சனையாகிவிட்டது. மேற்கத்தைய நாடுகளில் மட்டும் பேசப்பட்ட இவ்விடயம் இப்பொழுது ஆசிய நாடுகளிலும் தனது அழுக்கு முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.

அதீத எடையின் விளைவுகளும் குறைக்கும் வழிகளும்

எடை அதிகரிப்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதயநோய்கள், எலும்பு மூட்டுத் தேய்வுகள், போன்ற பல நோய்கள் வரும் என்பதை இப்பொழுது பலரும் உணர்கிறார்கள்.

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம் என்ற உணர்வு மேலாங்கி வருகிறது.

காலையில் வீதிகளிலும் கடற்கரை ஓரங்களிலும் நடைப் பயிற்சி செய்பவர் எண்ணிக்கை அதிகரிப்பிலிருந்து இதனை அறிய முடிகிறது.
இளவயதினர் பெரும்பாலும் உடற்பயிற்சி நிலையங்களை நாடுகிறார்கள்.

ஆனால் மிகப் பெரும்பாலானவர்கள் இது பற்றிய எவ்வித உணர்வும் இன்றி சதா காலமும் வாய்க்குள் எதையாவது போட்டு மென்று கொண்டே இருக்கிறார்கள்.

இதனால் அவர்களது எடை அதிகரிக்கிறது. மேற் கூறிய நோய்கள் வந்து சேர்வதை தடுக்க முடியாது போய்விடுகிறது. நோயினால் ஏற்படும் உபாதைகள் தாக்கத் தொடங்கிய பின்னரே அதைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

ஆயினும் இத்தனை காலமும் சோம்பிக் கிடந்த உடலும், மென்று கொண்டெ இருந்த வாயும் சொல்வழி கேட்கின்றனவா?

எடையைக் குறைக்க வேறுவழிகள்

எடையைக் குறைக்க வேறு ஏதாவது வழி இருக்கிறதா என அப்படிப்பட்டவர்கள் கேட்கிறார்கள்.

நிச்சயம் மருந்துகள் இருக்கவே செய்கின்றன.

மிகத் தீவிரமாகக் குறைக்க வேண்டியவர்களுக்கு சத்திரசிகிச்சையும் உண்டு.

சத்திரசிகிச்சை

Gastroplasty என்ற சிகிச்சை முறை உண்டு. இரைபையை வெட்டிச் சிறியதாக்குவதால் கொஞ்சமாக உணவை உட்கொண்டதுமே வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.

ஆயினும் இது முற்றிலும் பாதுகாப்பான சத்திரசிகிச்சை என்று சொல்ல முடியாது. இச் சத்திரசிகிச்சைக்குப் பின் இலங்கையில் ஒரு பெண் இறந்த செய்தி பத்திரிகைகளில் பரவலாக அடிபட்டது ஞாபகம் இருக்கலாம்.

மருந்துகள்

தமது எடையைக் குறைக்க, சுய முயற்சி இன்றி, மருந்துகளின் உதவியை நாடுகிறார்கள்.

எடை குறைப்பு மருந்துகளை உபயோகிக்கும் வரைதான் எடை குறையும். அத்துடன் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் சேர்ந்தால்தான் அம் மருந்துகள் பலன் கொடுக்கும்.
எடை குறைப்பு மருந்துகள் விலை அதிகமானவை.

வெறுமனே மருந்தை மட்டும் போட்டுக் கொண்டிருந்தால் எடை குறையாமல் போவது மாத்திரமின்றி அம் மருந்துகளின் பக்கவிளைவுகளையும் எதிர் நோக்க நேரிடும்.

சிபியுட்ரமின் (Sibutramine) 

எடை குறைப்பு மருந்துகளில் பிரபலமானது சிபியுட்ரமின் (Sibutramine) என்பதாகும். அதனால் வரக் கூடிய பக்கவிளைவுகளைப் பட்டியலிட்டால் மருந்தை உட்கொள்ள வேண்டாம் என நோயாளி வேகமாக விட்டு ஓடுவார். அவ்வாறு ஓடினால் நிறை குறையும் என்பதை மட்டும் நல்ல விளைவாகக் கொள்ளலாம்.

மருந்தின் பக்க விளைவுகள்

மலச்சிக்கல், வாய் உலருதல். ஓங்காளம்,
உணவுகளின் சுவை கெடுதல், வயிற்றோட்டம்,
மூலநோய் தீவிரமடைதல்,
இருதயத் துடிப்பு வேகமாதல்,
இருதயத் துடிப்பின் ஒழுங்கு லயம் மாற்றமுறல்,
உயர்இரத்த அழுத்தம்,
தலைப்பாரம், தூக்கக் குறைபாடு,
தலையிடி,
மனப்பதற்றம், மனச்சோர்வு நோய்,
வலிப்பு, திடீரென வந்துபோகும் மறதி,
பாலியல் செயற்பாட்டில் குறைபாடு,
ஒழுங்கற்ற மாதவிடாய்,
சிறுநீர் வெளியேறுவதில் சிரமம்,
பார்வை குறைவடைதல் ஏற்படலாம்.

அத்துடன் குருதியில் வெண்துளி சிறுதுணிக்கைகளின் (Platelet) எண்ணிக்கை குறைவடைதல்,
இவ்வாறு குறைந்தால் குருதியின் உறையும் தன்மை குறையும்,
அவ்வாறு குருதியின் உறையும்தன்மை குறைந்தால் சிறிய காயங்களிலிருந்து கூட அதிக இரத்தம் பெருக்கெடுக்கலாம்,
தானாகவே சருமத்தின் கீழ் இரத்தம் கசியலாம்.

மேலும் மருந்தின் ஒவ்வாமை விளைவு காரணமாக
தோல் அரிப்பு, தோற்தடிப்பு,
சரும அழற்சி போன்றவையும் ஏற்படலாம்.

அமெரிக்காவில் இருதய நோயாளர் உபயோகிக்கத் தடை

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் (FDA) இம் மருந்து பாவனை பற்றி இருதய நோயாளருக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இதுவரை காலமும் இருதய நோயாளர்கள் இம் மருந்தை அவதானத்துடன் உபயோகிக்கலாம் எனக் கூறினார்கள்.

ஆனால் தற்போதைய அறிக்கைப்படி இம் மருந்தை இருதய நோயாளர்கள் பாவிக்கக் கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி நோயாளருக்கு வழங்கும் மருந்துப் பெட்டியில் இந்த எச்சரிக்கையை தெளிவாக அச்சிடவும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எத்தகைய நோயாளிகளுக்கு எச்சரிக்கை

  1.  மாரடைப்பு, அஞ்சைனா போன்ற இருதய நோய்கள்
  2. இருதய வழுவல் (Heart failure) 
  3. இருதய துடிப்பின் லயக்குறைபாடுகள் (Arrhythmia )
  4. பக்கவாதம் மற்றும் திடீரென வந்து மறையும் பக்கவாதம்
  5. கடுமையான உயர் இரத்த அழுத்தம்
  6. கால் கை போன்ற பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய் நோய்கள் (Peripheral arterial disease) 

வேறு மருந்துகள்

எடையைக் குறைக்க வேறு மருந்துகளும் உள்ளன. ஓலிஸ்டட் (Orlistat) என்பது மற்றொரு பிரபல மருந்தாகும்.

இது உணவுக்கால்வாயில் செயற்பட்டு கொழுப்புகள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் மருந்தாகும்.

கொழுப்புப் பொருட்கள் உறிஞ்சப்படாததால் இவை மலவாயிலால் தானே ஒழுகக் கூடியது மிக முக்கிய பிரச்சனையாகும்.
அவசரமாக மலம் கழிக்க நேருதல்,
கட்டுப்படுத்த முடியாமல் திடீரென மலம் வெளியேறுதல்,
வயிற்றுப் பொருமல்,
வயிற்று வலி போன்றவை இம் மருந்தின் பக்க விளைவுகளாகும்.

இவற்றைத் தவிர 

அடிக்கடி சளி பிடித்தல்,
முரசு கரைதல்,
களைப்பு,
தலையிடி, மனப்பதற்றம்,
மாதவிடாய்க் குளப்படிகள்,
சிறுநீரகத் தொற்று நோய்கள்,
குருதியில் சீனியின் அளவு திடீரெனக் குறைதல்,
மூலத்தால் இரத்தம் வடிதல், ஈரல் பாதிப்பு

போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.

பக்க விளைவுகள் அனைத்தும் அனைவருக்கும் வருமா என்றால் நிச்சயமாக இல்லை.

சில பக்க விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம்.
சிலருக்குப் பல பக்கவிளைவுகள் சேர்ந்தே தோன்றலாம்.
வேறு சிலருக்கு எதுவுமே ஏற்படாமலும் போகலாம்.

அது அவரவர் அதிர்ஷ்டம்.

இருந்தபோதும் அத்தனை பக்கவிளைவுகள் வரக் கூடிய சாத்தியத்துடன் மருந்தைப் பாவித்துத்தான் எடையைக் குறைக்க வேண்டுமா உங்கள் முன் உள்ள தேர்வாகும்.

மருந்துகளை உபயோகித்து எடையைக் குறைத்தாலும்

  • உணவுக் கட்டுப்பாடு, 
  • உடற் பயிற்சி
  • வாழ்க்கை முறை மாற்றங்கள் 
  • இல்லையேல் மருந்தை நிறுத்தியதும் மீண்டும் எடை அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

உங்கள் எடைக் குறைப்பு முயற்சியை எங்கு ஆரம்பிக்கப் போகிறீர்கள்?

தொடர்ந்து நிலைக்கப் போகிற வாழ்க்கை முறை மாற்றங்களிலா
அல்லது
கடுமையான பக்கவிளைவுகளுடன் குறுகிய காலம் மட்டும் நிற்கப் போகும் மருந்துகளிலா?

நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

நன்றி:- இருக்கிறம்

Read Full Post »

> எடையைக் குறைப்பதற்கான மருந்துகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி.

கடுகு எண்ணெயைக் கப்சியூல் ஆக்கி, எடை குறைக்கும் மருந்து என தொலைக்காட்சியில் நிறைய விளம்பரம் கொடுத்து விற்றதால் ஒருவர் பெரும் பணக்காரர் ஆனாராம்.

இதைக் கேள்விப்பட்ட டாக்டர் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என உளங் கொண்டார்.

தனது கிளினிக் வாசலில் ஒரு விளம்பரம் போட்டார்.

உள்ளே நுழைந்தால் இப்படி ஒரு மருந்து கிடைக்கிறது.


எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களால்

மேலும் படிக்க
இங்கே கிளிக் செய்யவும்

Read Full Post »