Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘எனது ஊர்’ Category

>யாழ் மண் கல்விக்கு மட்டுமல்ல விவசாயத்திற்குப் பேர் போனது. அண்மைய யாழ் பயண கிளிக்குகளில் சில

நான் ஹாட்லிக் கல்லூரியில் கற்கச் சென்ற ஆரம்ப காலங்களில் ஒரு வருடமளவிற்கு பொடி நடையில் கல்லூரிக்குப் போவது வழக்கம். திருநாவலூர்ச் சந்தி தாண்டி மணல் வீடு அண்டியதும் பாதையை விட்டுவிலகி தோட்டக் காணிகளில் கால் பதிப்போம்.

தரிசாகக் கிடக்கும் பழைய தோட்டப் பூமி

சீசனுக்கு ஏற்ப மரவெள்ளி, வெங்காயம், மிளகாய், எள்ளு எனப் பலவகையான பயிர்கள் நிறைந்திருக்கும். கத்தரியும், பயிற்றங் கொடியும் ஆங்காங்கே பயிரடப்பட்டிருக்கும்.

ஆனால் இன்று பல நிலங்கள் கட்டாந்தரைகளாகக் கிடப்பதைக் காண வயிறு பற்றி எரிகிறது.

இருந்தபோதும் இன்றும் எமது விவசாயிகள் தோட்டச் செய்கையை முற்றாகக் கைவிடவில்லை என்பதையும் உணர முடிந்தது.

வியாபாரிமூலை பிள்ளையார் கோவிலருகே

தோட்டங்கள் வெங்காயம்,  மிளகாய், பீட்ரூட், வாழை  எனப் பசுமை நிறைந்து கிடக்கின்றன. புகையிலைச் செய்கைக்கும் குறைவில்லை. முந்திரிகைக் கொடியும் பயிரடப்படுகிறது.

எனது ஊர் பிள்ளையார் கோவிலை அண்டிய தோட்டங்களில் வெங்காயச் செய்கை அமோகமாக நடக்கிறது.

எனது ஊரை விட்டுப் பயணித்து, அச்சுவேலி தாண்டி கீரிமலை நோக்கிப் பயணித்த போது கிளிக் செய்த படங்கள் தொடர்ந்து வருகின்றன.

வாழைத்தோட்டம்

வலிகாமச் செம்மண்ணில் பயிர்கள் செழித்து வளரும் காட்சிகளை படங்களில் காணலாம்.

யாழ் மண்ணில் பீற்ரூட்

விவசாயத்தின் அடிப்படை தேவை நிலம் என்றால் அடுத்து முக்கியமானது நன்னீர்க் கிணறுகள்.

பழைய விவாசயக் கிணறு ஒன்று பாழடைந்து கிடக்கிறது. தூலாக் கட்டி நீர் இறைத்துப் பாய்ந்த கல்வாய்க்கால் இடிந்து கிடக்கிறது.

தூலாவைத் தொடரந்து சக்கர யந்திர இறைப்பு பல இடங்களில் இருந்தது. இப்பொழுது அவற்றைக் காணவும் கிடைக்கவில்லை.

இடிந்த வாய்க்காலும் கைவிடப்பட்ட கிணறும்

ஆயினும் வாட்டர் பம் வைத்து நீர் இறைக்கிறார்கள்.  யாழ் மண் தோட்டக் காணிகள் பல செழித்துக் கிடக்கின்றன. நீர் உவர் நீராகிறது என்ற கவலை அறிஞர்கள் மத்தியில் கலங்க வைக்கிறது.

வெங்காயம், வாழை, மிளகாய் எனச் செழித்த மண்

 மாடு இன்றேல் விவசாயம் இல்லாத காலம் ஒன்றிருந்தது.
உழவு மெசின்கள் வந்து விட்ட இன்றைய காலத்தில் காளை மாடுகளின் பயன் வண்டில் இழுப்பதுடன் நின்றுவிட்டது.

ஆயினும் பசுக்களின் தேவைக்கு என்றுமே மவுசு குன்றாது . நாற்புறமும் மரத்தூண் நாட்டி, பனயோலையால் கூரை வேய்ந்த மாடுகளின் வீடு.
அதற்குள் பனை மட்டைகளால் தொட்டி கட்டி மாடுகளுக்கு தீவனம் போடுவார்கள்.

மாடுகள் அருகே வெள்ளாடு ஒன்றும் படத்திருந்து அசை போடுகிறார்

மாடுகள் இல்லாத விவசாயமா?

 மாடு என்றிருந்தால் அவற்றின் உணவுக்கு வைக்கோல் அவசியம்தானே.

வைக்கல் போர்

வைக்கல் போர்கள் ஆங்காங்கே தலை நிமிர்ந்து நிற்கின.றன.

Read Full Post »

>நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் பிரயாணம் போகும் சந்தர்ப்பம் வாய்த்தது.

எனது ஊர் வியாபாரிமூலை என்ற ஒரு சிறு கிராமமாகும். இது இலங்கையின் வடபுலமான யாழ்ப்பாண தீபகற்பத்தின் வட கிழக்கு மூலையில், பருத்தித்துறை நகருக்கு அண்மையில் இருக்கிறது.

இலங்கையின் பல பகுதிகளிலும், சிலர் மலேசியா போன்று கடல் கடந்தும் வியாபாரம் செய்வதை தொழிலாக, முற்காலத்தில் கொண்டதால் இப் பெயர் காரணப் பெயராக அமைந்திருக்கலாம்.

பல அனுபவங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன.

அதிலொன்று இன்று காரமாக விமர்சிக்கப்படுகின்ற சுவாமிகள் தொடர்புடையது. ஆனால் இது நித்தியானந்தர் பற்றியது அல்ல.

சத்ய சாயிபாபாவை முன்நிறுத்தி நடாத்தப்படுகின்ற சாயிகுடில் பற்றியது.

ஊர் மத்தியில் நாச்சிமார் கோவில் சுற்றாடலில் அழகான சிறு ஆலயமாக அமைந்துள்ளது. சூழ்ந்து நிற்கும் பெரு மரங்களின் ரம்யமான தோற்றமும், குளிர்ச்சியான சீதோசன நிலையும் பக்தர்களுக்கு வரப்பிரதாசமாக அமைந்துள்ளது.

இந்த நிலையத்தின் வாயிற் கதவு மிகுந்த வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு புராதன வாயிற் கதவாகும்.

கைவிடப்பட்டுக் கிடந்த அந்தக் கதவைக் கொண்டு வந்து இந் நிலையத்தில் இணைத்த கலை உள்ளம் நயக்கத்தக்கது.

ஆன்மீகப் பணி

வாராந்திரம் வியாழக் கிழமை தோறும் பஜனையும் பூசையும் நடைபெறுகிறது. அதில் பலர் கலந்து கொள்கிறார்கள் என அறிகிறேன். ஆனால் அதற்கு மேலாக பகல் முழுவதும் திறந்திருக்கும் அங்கு பலர் தமக்கு வசதியான நேரங்களில் மௌன வழிபாடு செய்து வருவதை அறியும் போது, அந்த நிலையம் பலருக்கு மனச் சாந்தியை அளிப்பதை உணர முடிந்தது.

பசியாற்றும் பணி

ஞாயிறு தோறும் மதியம் குறுகிய நேர ஆன்மீக சாதனையுடன் வயிறு நிறைய மதிய போசனம் அளிக்கப்படுகிறது.

நாராயண சேவை என்ற பெயரில் நடை பெறும் இதில், வறுமை காரணமாக நல்ல ஆகாரம் பெற்றுக் கொள்ள முடியாத பலர் வயிறு நிறைவது மட்டுமின்றி,  நல்ல ஆகாரம் உண்ட மகிழ்ச்சியுடன் மனமகிழ்ச்சியுடன் செல்வதைக் காணக் கூடியதாக இருந்தது.

சுமார் 60-70 அவ்வாறு வாராவாரம் பயன் பெறுகிறார்கள். 3-4 மைல் தூரத்திலிருந்து கூட ஒரு சில மாணவர்கள் வந்து வயிறாறுவதைக் காணும் போது இந்தப் பணியின் மகத்துவம் புரிந்தது.

வயது முதிர்ச்சி காரணமாகத் தாமே சமைக்க முடியாத சில வயோதிபர்களுக்கு சமைத்த உணவை வீட்டிற்கே அனுப்பி வைத்து அவர்களையும் மகிழ்விக்கிறார்கள்.

இதற்கு வாராந்திரம் ரூபா 3000 முதல் 4000 வரை செலவாகிறது. உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் வாழும் பலரும் மறைந்த தமது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் ஞாபகமாக கொடுத்து உதவுகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் புதியவர்களும் இணைந்து பங்களிப்பது வரவேற்கத்தக்கது.

1992 தை மாதம் முதலாம் திகதி வியாபாரிமூலையில் சத்யசாயி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் இதற்கென 18.11.2007 புதிதாகக் கட்டடம் அமைத்துத் திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஆலயத்திற்கான காணியை டொக்டர் கனகசபாபதியின் புத்திரர்களான இரத்தினவடிவேல், சண்முகநாதன், சற்குருநான் ஆகியோர் அன்பளிப்பாக வழங்கியதாக அறிவிப்பு வாசலில் தெளிவாகத் தெரிகிறது.

நிர்வாக அலுவல்கள் அனைத்தையும் கற்கண்டுப் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளையின் மகனான ஆசிரியர் சிவநேசன் கவனித்துக் கொள்ள, பூசை, பஜனை போன்ற பணிகளை தணிகாசலம் பாலசுப்பிரமணியம் முன்னின்று செய்கிறார்.

சமையல் போன்ற பணிகளில் பல தொண்டர்கள் ஆர்வத்துடன் செய்கிறார்கள.

உணவு உண்ண வந்த ஒரு பெரியார் நிலையச் சுற்றாடலில் வீழ்ந்து கிடக்கும் இலை குழைகளை குத்தூசியால் குத்தி எடுத்து அகற்றுவதை கண்ட போது மெபைல் போனில் கிளிக் செய்து கொண்டேன்.

படத்தில் காணுங்கள்

எவரது கோரிக்கையும் இன்றி தாமாகவே முன்வந்து இவ்வாறு சமையல், கூட்டித் துப்பரவு செய்தல் போன்ற சமூகப் பணியாற்றும் மனோநிலையை ஆன்மீக நிலையங்கள் ஏற்படுத்த முடியும் என்பதை அனுபவ பூர்வமாக உணர முடிந்தது.

ஏனைய சமூகப் பணிகள்

  • பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் எதிர்காலத்தில் உயர் வகுப்பிற்கு வரும்போது,  உதவும் முகமாக அவர்கள் பெயரில் சிறுதொகையை வைப்பு நிதியாக கொடுத்தல். நண்பர் து.குலசிங்கம் மறைந்த தனது மனைவியின் நினைவாக ரூபா 10000 சென்ற ஆண்டு அளித்தார். இது 5 மாணவர்களிடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருடாந்தம் செய்வதாக உத்தேசித்துள்ளார்.
  • சில வறிய மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 100 படிப்புச் செலவாக அளிக்கப்படுகிறது. இதற்கான நிதியை கி.சிவநேசன் அவர்களே அளித்து வருகின்றனர்.
  • மனித மேம்பாட்டுக் கல்வி. மனித விழுமியங்களை மாணவர்களிடையே வளர்ப்பதற்காக வாராந்தம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. பாலவிகாஸ் என்ற பெயரில் இது நடைபெறுகிறது.
  • நன்னீர் வழங்கல். 

இந்த நிலையத்தின் குழாயக் கிணறு சவரத்தன்மையற்ற நல்ல நீராகும். நீர்த்தாங்கி கட்டி அதிலிருந்து எந்நேரமும் வேண்டியவர்கள் நீர் எடுத்துச் செல்ல வசதி அளிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிமூலையில் உள்ள பெரும்பாலானது கிணற்று நீர் சவர்த்தன்மை உடையது என்பதால் பலரும் இங்கு வந்து நீர் எடுத்துப் பயன் பெறுகின்றனர்.இன்னும் பலர் இச் சமூகப் பணிகளில் கை கொடுக்க முன் வந்தால் மேலும் பலர் பயன் பெறுவது நிச்சயம்.

தொடர்புகளுக்கு

கி.சிவநேசன்
சாயிகுடில்
நாச்சிமார் கோவிலடி
வியாபாரமூலை
பருத்தித்துறை
சிறிலங்கா

செல்பேசி :- 0778849508.

Read Full Post »

>

நான் பிறந்து வளர்ந்த ஊர் வியாபாரிமூலை ஆகும். அந்தக் கிராமம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் மரத்தடி.கொம் இல் விஜயாலயன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பல தகவல்கள் அடங்கிய அக்கட்டுரையை நன்றியறிதலுடன் இங்கு மீளப் பதிவிடுகிறேன்.

வியாபாரிமூலை (சில தசாப்தங்களுக்கு முன்) விஜயாலயன்

இலங்கைத்தீவின் வடமுனையாக விளங்கும் பருத்தித்துறையிலிருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வருவது வியாபாரிமூலையெனும் அமைதியான கிராமம்.

கடற்கரையிலிருந்து வீரபத்திரர் கோவில் வளைவு வரை வீதியின் இருமருங்கும் கிளைவிடும் சிறு சிறு ஒழுங்கைகளும் வீதிகளும், அங்கு வசிக்கும் அனைவருக்குமிடையிலான உறவுமுறைகளும், வியாபாரிமூலையெனும் கிராமத்தினை ஒருங்கிணைக்கும். ஆலய மணியோசைகள் துயிலெழுப்பும், உப்புக்காற்று இதமாய் வீசும்.

கிராமத்தின் ஒவ்வொரு குறிச்சியும் (சிறு பகுதிகளும்) தனித்துவமான பெயர்களைக்கொண்டது. வெள்ளையற்றணி, சிப்பிமணலடி, பெயர்ந்த ஆலடி, விராவளை, சின்னக்கிளானை, பெரியகிளானை, வாரியார்வளவு, கம்பளியப்பான், பலாப்பத்தை என்று பல்வேறுபட்ட காரணப்பெயர்களுடன் நீளும் குறிச்சிகளின் பட்டியல். அநேகமாக குடும்பப்பெயர்களுடன் குறிச்சிகளின் பெயர்களும் சேர்ந்தே பலரையும் இனங்காண உதவும்.

சில பத்தாண்டுகளிற்கு முன்னர் ஒரே பெயரை பலருக்கும் வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் இவ்வாறே தீர்க்கப்பட்டன. இதேபோல ஒருவருக்கு இரண்டு (அதற்குமேலும் கூட) பெயர்களுமிருக்கும். தந்தைவழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் தாய்வழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் என்று பெயர்களை வைத்து எல்லாரையும் திருப்திப்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களிற்காக சத்தியக்கடதாசிகளிற்காக பலரும் அலைந்தது வேறு கதை.

குறிச்சிப்பெயர்களை விட அடைமொழிகளும், பட்டப்பெயர்களும் கூட பலரை குறிப்பிட உதவின. ஜப்பான் (குறுகிய காலத்தில் வியாபாரத்தில் முன்னேறியவர்), சக்கடத்தார், மனேச்சர், சவுடால், ஹொல்டோன் (hold-on), முயல், அதாவது (எப்பொழுதும் ‘அதாவது’ என்று கதைக்கத்தொடங்கும்) போன்ற அடைமொழிகளும் கருமுனி, குறுமுனி, சருகுமுனி போன்ற பட்டப்பெயர்களும் பிரபலமாக இருந்தன.

பதினைந்து அடி உயரமான கோட்டைச்சுவர் போன்ற கற்சுவர்களுடனும் மிகப்பெரிய வாயிற்கதவுகளுடனும் பளிங்குக்கல் பதித்த தரைகளுடனும் எஞ்சியிருக்கும் சில சுண்ணாம்புக் கட்டடங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த கிராமத்தின் பணக்கார குடும்பங்களின் கதைகள் சொல்லும். இலங்கைத்தீவின் வடமுனையிலிருந்து தென்முனைவரை வியாபாரத்தில் முத்திரை பதித்த அந்தக் குடும்பங்கள் தேடிய செல்வத்தின் அளவு அந்த வீடுகளில் காணப்படும் தரையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட பெரிய இரும்புப்பெட்டகங்களில் தெரியும். இப்படியாக வியாபரிகளின் கையோங்கியிருந்த கிராமத்திற்கு வியாபரிமூலையென்ற பெயர் வைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இன்றைக்கு 50 ஆண்டுகளிற்கு முன்னர், பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளை சிறுவயதில் வியாபாரம் செய்யும் உறவினர்களுடன் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் வியாபார நுணுக்கங்கள் பழகும்வரை நீண்டகாலம் ஊதியமில்லாது வேலைசெய்வார்கள். பின்னர் அந்த முதலாளி (உறவினர்) மற்றும் பெற்றோரின் உதவியுடன் சொந்தமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இப்படி அநுபவத்துடன் வியாபாரம் தொடங்குவதால் அநேகம் பேர் தங்கள் தொழிலில் நட்டமடைவதில்லை. இன்றுகூட சில குடும்பங்களில் இந்தவழக்கம் தொடர்கிறது.

வியாபாரம் செய்பவர்கள் தவிர்ந்த ஏனையோர் விவசாயம் செய்பவர்களாக இருந்தார்கள். ஊரின் வடக்காக கடற்கரையோரமாக இருந்த வளங்குறைந்த தோட்டநிலங்களில் உழைப்பை உரமாகவும் வியர்வையை நீராகவும் பாய்ச்சி குரக்கன், தினை, மரவள்ளி, காய்கறிகள் என்று பயிர்செய்தார்கள். துலா ஓடி நீரிறைத்த அந்த நாட்களின் எச்சங்களாக ஆடுகால்களிற்கு நடப்பட்ட சில பூவரச மரங்கள் இன்றும் அந்த தோட்டக்கிணறுகளிற்கருகில் தனித்து நிற்கின்றன. விஞ்ஞானத்தைப் பாடமாகப் படிக்காத அந்தக்காலத்திலும் மழைநீரை சேமிக்கக் குளங்கள் இருந்தன. கடலிற்கருகில் இருப்பதால் கடல்நீர் உட்புகுவதைத்தடுக்க (நிலத்தடி நன்னீருடன் கலப்பதைத் தடுக்க) ஒற்றுமையாக சரியான நேர இடைவெளியில் நீரிறைத்தார்கள். மழைபெய்த அளவிற்கேற்ப பயிர்நட்டார்கள்.

வீதிகளில் ஆவுரோஞ்சிக்கற்களும் (ஆடு, மாடுகள் தங்கள் உடம்புகளை உரசிக்கொள்ள), சுமைதாங்கிகற்களும் (தலையில் சுமையுடன் செல்பவர்கள் அவற்றை இறக்கிவைத்து இளைப்பாற), குடிநீர்ப்பானைகளும் இருந்தன.

ஆன்மிகம் வளர்க்க ஊரின் நான்கு திசைகளிலும் கோயில்களும் அவற்றுடன் ஒன்றிவாழும் பண்புமிருந்தன. கோயில்களில் சைவக்குருக்கள் பூசைகள் செய்தனர். வேற்றூர்களில் வியாபாரம் செய்பவர்கள் கோவில் திருவிழாக்காலங்களில் ஊர்திரும்புவர். இயற்கை கற்பூரம் விளைந்த சித்தி விநாயகர் ஆலயமும், விரபத்திரர் ஆலயமும், சித்திராபௌர்ணமியில் இராப்பொங்கல் நடக்கும் நாச்சிமார் கோவிலும், அருளம்பல சுவாமிகளின் (மகாகவி பாரதியாரின் குரு) சமாதியும், காலனித்துவ ஆட்சியில் கல்விக்காக மதம்மாறுவதைத் தடுக்க ஆரம்பித்த சைவப்பிரகாச வித்தியாசாலையும் ஊர்மக்களின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு சான்றுகளாயுள்ளன.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த பாம்புப் பரியாரியாரும் (விசக்கடிக்கு சிறந்த மருத்துவம் செய்ததால் ஏற்பட்ட பெயர்), எலும்பு முறிவுற்றவர்களை ஒட்டகப்புலத்திற்கு ஏற்றிச்செல்ல மாட்டுவண்டிக்காரரும் இருந்தார்கள்.

இப்படி சுயநிறைவுடனும் வளமாகவும் மக்கள் வாழ்ந்த கிராமம் வியாபாரிமூலை. இன்றும்கூட வியாபாரிமூலையான் என்று பெருமையாக என்று எங்களூரார் தங்களைச் சொல்லிக்கொள்வார்கள்.

http://www.maraththadi.com/article.asp?id=317

Read Full Post »