Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கண்’ Category

சுண்ணாம்பு வெற்றிலை பாக்கு பற்றியே பலரும் பேசுகிறார்கள். ஆனால் இது சுண்ணாம்பும் கண்களும் பற்றிய பதிவு

இந்த பெண்ணின் கண்களில் எதனைக் காண்கிறீர்கள்?

அவளது கண்ணின் கரு விழியின் பெரும் பகுதி ஆடை படர்ந்தது போல வெண்மையாக கிடக்கிறது.

கருவிழியானது வெண் விழியோ என மயங்க வைக்கிறது.

20160331_112534

இது கற்றரக்ட் (cattaract) எனப்படும் நோயல்ல. வெண்புரை எனத் தமிழில் பேசப்படும் அது வில்லையை பாதிப்பதாகும்.

இவளது  கருவிழி பாதிப்படைந்திருக்கிறது. நல்ல வேளை நடுப்பகுதி பாதிப்பு அடையவில்லை. அவ்வாறாயின் அவளது பார்வை முழுமையாக மறைந்திருக்கும்.

இதற்குக் காரணம் சுண்ணாம்பு ஆகு‌ம்.

இன்று இளம் தாயாக இருக்கும் இவள் சிறு பெண்ணாக இருந்த போது சுண்ணாம்பு பைக்கற்றை வைத்து விளையாடி இருக்கிறாள். அதை அழுத்திய போது பைக்கற் வெடித்து சுண்ணாம்பு கண்ணிற்குள் பீச்சிட்டு அடித்திருக்கிறது.

கண்ணைக் கழுவினாலும் சுண்ணாம்பின் துகள்கள் மறைந்திருந்து படிப்படியாக பார்வையை பறித்து விடும். இவளுக்கும் அவ்வாறே ஆனது

நல்ல காலம் நடுப்பகுதி பாதிப்படையாததால் பார்வை தப்பிவிட்டது.

இருந்த போதும் விழியானது மடலுடன் ஒட்டி கண் சிறிசாகி திறப்பதில் சிரமம் இருந்தது. அந் நேரம் சத்திர சிகிச்சை மூலம் கண்களை திறக்க வைத்தவர் யாழ் கண் டொக்டர் குகதாசன் ஆவார்.

80 களில் இது பாரிய பிரச்சனையாக இருந்தது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக
“சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்” என்ற நூலை அந்நேரம் எழுதினேன்.

கண்டி கண் மருத்துவர் Dr.Seiman அவர்களது ஆலோசனையுடன் எழுதினேன்.  ஊற்று நிறுவனம் அந்த கை நூலை வெளியிட்டது.

சுண்ணாம்பு படுவதால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தடுக்கும் முறைகள் பற்றியும் அந்த நூலில் எடுத்துச் சொல்லியுள்ளேன்

17935

இன்று அந்த நூலின் படத்தை போடுவதற்காக தேடினேன். நூலைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஆயினும் நூலகம் இணையத் தளத்தில் அந்த நூல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நூலகத்திற்கு என நன்றிகள்
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D

Read Full Post »

கவலை இல்லாமலும் கண்ணீர் வரும்
கண்கடியுடன் கண்கள் சிவந்து கண்களால் நீர் வடிதல்

கண்ணைக் கசக்கிக் கொண்டுவந்த பையனைக் கூட்டிக் கொண்டு வந்த அம்மாவின் முகத்தில் சலிப்பு. பையனின் முகத்திலும் சோர்வு தட்டியிருந்தது.

Allergic conjuntivits 1

“எவ்வளவு சொன்னாலும் கேக்கிறானே? எந்த நேரம் பார்த்தாலும் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கிறான். கண் வீங்கிப் போச்சு. போதாக்குறைக்கு மூக்கையும் குடையிறான். வெளியிலை கூட்டிக் கொண்டு போகவே வெக்கமாகக் கிடக்கு”

உண்மைதான் அந்த அழகான பையனின் கண்மடல்கள் வீங்கிக் கிடந்தன. கண்களின் கீழே கருவளையம் தெரிந்தது. முகமும் கண்களும் செம்மை பூத்துக் கிடந்தன. மூக்கு வீங்கி அதன் துவாரங்கள் மேல்நோக்கிப் பார்த்தன. மூக்கை உள்ளங்கையால் தேய்த்துத்தான் அவ்வாறாகியிருந்தது.

Allergic conjuntivits

பாவம்! அவனைத் தூற்றுவதில் பிரயோசனம் இல்லை. அவனுக்கான பாரிகாரங்களைத் தாய் செய்து கொடுக்கத் தவறிவிட்டாள் என்றே எனக்குத் தோன்றியது.

ஓவ்வாமைக் கண்நோய்

இது பலருக்கும் ஏற்படுகிற பிரச்சனைதான். குழந்தைகளில் அதிகம். கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல், கண்ணைக் கசக்குதல், கண்மடல் வீங்குதல், வெளிச்சத்தைப் பார்க்கக் கூச்சம் என அவர்களுக்கு தங்கள் கண்களே தொல்லையாகி விடுவதுண்டு.

இவை எல்லாம் கண்ணில் ஏற்படும் ஒவ்வாமையின் நுலந யுடடநசபல பல அறிகுறிகளாகும்.

Allergic conjuntivits 3

மாறாக, கிருமித் தொற்றால் ஏற்படும் கண்நோய்கள் முதலில் ஒரு கண்ணில் தோன்றும் பின் மற்றக் கண்ணிற்கும் பரவலாம். ஆனால் ஒவ்வாமைக் கண்நோய் பொதுவாக இரு கண்களிலும் ஒரே நேரத்தில் தோன்றும். அத்துடன் கண் அரிப்பு நிச்சயம் இருக்கும். மடலைத் தாண்டி கண்களும் பாதிப்புறும்போது கண்ணிலிருந்து சற்றுத் தடிப்பான திரவம் சுரந்து கண் ஓரங்களில் ‘பீளையாக’ ஒட்டிக் கிடந்து பார்ப்பவர்களை அருவருக்கவும் வைக்கலாம்.

Allergic conjuntivits 4

ஓவ்வாமைகள்

இவை பொதுவாகத் தனியாக வருவதில்லை. தும்மல், மூக்கால் வடிதல், மூக்கடைப்பு போன்ற வேறு ஒவ்வாமை அறிகுறிகளுடன் கைகோர்த்து வருவதுண்டு. சிலருக்குக் காதில் அரிப்பும் ஏற்படுவதுண்டு. இவை யாவுமே ஒவ்வாமைகளின் (Allergy) அறிகுறிதான்.

இவை முகத்தில் தோன்றுபவை. ஆனால் ஓவ்வாமைகள் உடல் முழவதும் தோன்றலாம், அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம்.

Allergic conjuntivits 5

ஒவ்வாமைகளுக்குக் காரணம் என்ன? உணவு முதற்கொண்டு தூசி புழதி, வாசனைத் திரவியங்கள் போன்ற பலவும் ஒவ்வாமையைத் தோற்றுவிக்கலாம்.

ஒவ்வாமையால்

  • சருமத்தில் தடிப்புகள் வீக்கங்கள், அரிப்பு போன்றவை தோன்றுவது போலவே
  • கண்களிலும் மேற்சொன்ன அறிகுறிகள் ஏற்படுகின்றன.
  • சிலரது வயிற்றுவலிக்கும் ஒவ்வாமை காரணமாவதுண்டு.

தூசி, புழுதி, போன்றவை காரணமாகலாம்

வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், கடுமையான மணங்கள் காரணமாகலாம்.

சிலருக்கு சீதோசன காலநிலைகளும் காரணமாகலாம். பூக்கள் மகரந்தங்கள் போன்றவையும் காரணமாகலாம். பருவகாலங்கள் துல்லியமாக மாறுபடும் மேலை நாடுகளில் இது பொதுவாக வசந்த காலத்தில் பெரும்பாலானவர்களைப் பாதிப்பதுண்டு.

தூசிப் பூச்சி, ஒட்டடை, பூனை நாய் போன்ற வளர்ப்பு மிருகங்களின் ரோமம் போன்றவையும் சொல்லப்படுகிறது.

ஓவ்வாமைக் கண்நோயானது நோயாளியை அரியண்ணடப்படுத்தி எரிச்சலுற வைக்கும் என்றபோதும் ஆபத்தான நோயல்ல. மீண்டும் மீண்டும் தோன்றக் கூடியதாயினும் கண்ணின் பார்வைத் திறனைப் பாதிக்காது. வேறு எந்த ஆபத்தான பின் விளைவுகளும் ஏற்படாது.

நீங்கள் செய்யக் கூடியவை

ஓவ்வாமைக் கண்நோய் ஏற்படாமல் தடுக்கவும், அது தோன்றினால் அதிலிருந்து நிவாரணம் பெறவும் நீங்கள் செய்யக் கூடியவை எவை?
கீழ்கண்ட ஆலோசனைகளை The American Academy of Allergy Asthma and Immunology   வழங்குகிறது.

lotion woman

  • வீட்டைவிட்டு வெளியே போகும் போது தூசி, மகரந்தம் போன்றவை கண்ணில் விழாமலிருக்க பரந்த விளிம்புள்ள தொப்பிகளை அணியுங்கள். தொப்பி தலையில் வெயில் மழை படாமலிருக்க மட்டுமின்றி இந்த வகையிலும் உதவுகிறது என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.
  • அதே போல கண்ணாடி, கருப்புக் கண்ணாடி அணிவதாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் கண்ணில் நேரடியாகதத் தாக்காது காப்பாற்றலாம்.
  • வெளியில் போய் வந்ததும் கண்களை நீரினால் கழுவுங்கள். நன்கு அலசிக் கழுவினால் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற முடியும். சோப் போட வேண்டியதில்லை.
  • கொன்டக்ட் லென்ஸ் contact lenses போடுவராயின் அதனை அகற்றுவதும் உதவும்.
  • எவ்வளவு அரித்தாலும் கண்களைக் கசக்குவதைத் தவிருங்கள். கசக்குவதால் கண்களில் நுண்ணிய உரசல்களும் கிருமித் தொற்றும் ஏற்பட்டு பிரச்சனையை மோசமாக்கும்.

மருந்துகள்

மேற்கூறிய முறைகளில் குணமாகாவிடில் உங்கள் மருத்துவரைக் காணுங்கள்.

ஒவ்வாமையைத் தணிக்கும் மாத்திரைகளை அல்லது, அதற்கான கண் துளி மருந்துகளையும் அவர் தருவார். சில தருணங்களில் இரண்டையும் சேர்த்தும் தரக் கூடும்.

Allergic conjuntivits 6

ஒவ்வாமைக்கு எதிரான மருந்துகளை anti-histamines என்பார்கள். இலங்கையில் பிரிட்டோன் என்ற மாத்திரை பலருக்கும் பரிச்சயமானது. அது அம் மருந்தின் வர்த்தகப் பெயராகும். chlorpheniramineஎன்பதே அதன் பொதுவான பெயராகும். தும்மல், தடிமன், அரிப்பு என்றவுடன் பலரும் தாங்களாகவே இதை வாங்கிப் போடுவதை நாம் காண்கிறோம். இது சற்று சோர்வையும், தூக்கத்தையும் ஏற்படுத்துவதுண்டு. எனவே பாடசாலைப் பிள்ளைகள் வேலைக்குச் செல்வோர் ஆகியோருக்கு ஏற்றதல்ல.

சிலர் தூக்கம் வரவில்லை என்றாலும் தாங்களாகவே இம் மருந்தை உட்கொள்கிறார்கள். அது தூக்க மாத்திரை அல்ல. இவ்வாறு மருந்துகளைத் துஷ்பிரயோகம் செய்வது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் மருத்துவ ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது.

loratadine, cetirizine, fexofenadine, desloratadine  போன்ற பல புதிய மருந்துகள் அந்தளவு தூக்க மயக்கத்தை ஏற்படுத்தாது. இவை யாவும் மருத்துவ ஆலொசனையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டியவையாகும்.

கண்ணிற்குள் விடும் துளி மருந்துகளிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில தொடர்ந்து உபயோகிக்க உகந்தவை. ஏனைய பல சில நாட்களுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டியவை. எனவே அவை பற்றி இங்கு எழுதவில்லை. மருத்துவ ஆலோசனையுடன் அவர் சிபார்ச்சு செய்யும் மருந்துகளை அவர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல் தடுப்பது எப்படி?
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0.0

Read Full Post »

>

“எனக்கு அடிக்கடி கண்ணிலை மெல்லிய அராத்தல் இருக்குது.அதோடை சில நேரம் கண்ணால் பூளையும் வருவதுண்டு’என்றார் அந்த மத்திய வயது மனிதர்.

இது கண்நோயா?

இருக்காது கண்நோய் (Conjuntivitis) என்பது தொற்றுநோய்.ஆனால் அடிக்கடி வருவதில்லை.அத்துடன் இவரது கண்ணானது,கண்நோயில் இருப்பது போல அதிக சிவப்பாகவும் இருக்கவில்லை.

ஒவ்வாமையால் வரும் (Allergic Conjuntivitis) நோய் எனில் கண்ணில் அரிப்பு இருக்கும். தூசி போன்ற அந்நியப் பொருட்கள் விழுவதாலும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

காரணம் என்னவாக இருக்கும் என யோசிக்க வைத்தது.

“வேறை கண் வருத்தம் ஏதாவது இருக்கோ? அதற்கு கண் மருந்து வழமையாக விடுகிறீர்களா’ என விசாரித்தேன்.

“குளுக்கோமா இருக்கு. தினமும் துளி மருந்து விடுகிறேன்’ என்றார்.

கண்ணுக்கு மருந்து விடும் செயலானது சரியான முறையில் செய்யப்பட வேண்டும்.இல்லையேல் அந்த மருந்தின் பலன் முழுமையாகக் கிட்டாது என்பதுடன் வேறு நோய்களுக்கும் கராணமாகிவிடும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

எனவே சரியான முறையில் கண் மருந்து விடும் முறையை அறிந்திருப்பது அவசியம்.

முதலில் கண் மருந்துள்ள குப்பியின் மூடியைக் கழற்றுவீர்கள் அல்லவா? அழுக்குகள் பட்டு மாசடையும் வண்ணம் அந்த மூடியின் வாய் புறத்தை மேசையிலோ தரையிலோ வைக்க வேண்டாம். மூடி மாசடைந்தால் குப்பியை மூடும்போது அதிலுள்ள மருந்திலும் கிருமி பரவி அடுத்த முறை உபயோகிக்கும்போது கண்ணுக்கு பரவலாம்.எனவே மூடியை மறுகையில் வைத்திருங்கள். அல்லது அதன் வாய்ப்புறம் கீழே படாதவாறு வையுங்கள்.

மிக முக்கியமாக, கண்ணுள் மருந்துத் துளியை விடும்போது குப்பியின் முனை கண்ணில் தொடாதவாறு கவனம் எடுக்க வேண்டும். கண்ணில் முட்டினால் இரண்டு வெவ்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.

அவ்வாறு முட்டும்போது அதன் முனை கண்ணினுடைய மென்மையான திசுகளில் பட்டு நுண்ணிய உராசல் காயங்களை ஏற்படுத்திவிடும். மீண்டும் மீண்டும் இவ்வாறு நடந்தால் கண் புண்படும் அபாயம் உண்டு.

இராண்டாவது ஆபத்து என்னவென்றால் குப்பியின் முனை கண்ணில் தொட்டால் ஏற்கனவே கண்ணில் இருக்கக்கூடிய மாசுகள் அல்லது கிருமிகள் முனைவழியாக உட்சென்று கண்மருந்தையே மாசடையச் செய்துவிடும். அங்கு அவை பெருகி மீண்டும் இடும்போது ஊறுவிளைக்கும்.

துளி மருந்தை கண்ணில் இடுவது எப்படி?

மூடியைக் கழற்றிய பின் மருந்துக் குப்பியை வலது கையின் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் பற்றி எடுத்து கண்ணருகே கொண்டு சென்று குப்புற பிடியுங்கள். மறுகையால் கண்ணின் கீழ் மடலை சற்று இழுங்கள். அப்போது இங்கு சிறு குழிபோல் தோன்றிய இடத்தில் துளி மருந்தை இடுங்கள். முன்பு கூறியதுபோல குப்பியின் முனை கண்ணில் படாதிருக்கவேண்டும் என்பது முக்கியமாகும்.

ஒரே கையால் மருந்து விடக் கூடிய முறையும் உள்ளது. முன்பு கூறியதுபோல வலது கையால் குப்பியை எடுத்து பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் பற்றியபடி சின்ன விரலால் கண்ணின் கீழ் மடலை இழுத்தபடியே குப்பியைக் சரித்து கண்ணில் துளி மருந்தை விட வேண்டும். மேற்கூறிய இரண்டு முறைகளிலும் மருந்து விடும்போது குப்பியின் நுனியானது கண்ணிலிருந்து இரண்டு அல்லது மூன்று சென்ரிமீற்றர் மட்டும் மேலே நிற்பதால் மருந்து குறி தவறி வெளியே விழுந்து கன்னம் வழியே வழிந்தோடி வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.

கண் மருந்து விடுவதற்கு முன் உங்கள் கைகளைக் கழுவி சுத்தம் செய்வது முக்கியமானதாகும். அத்துடன் ஒட்டுக் கண்வில்லை (Contact Lens) அணிந்திருந்தால் அதை எடுத்துவிடவும் மறக்கவேண்டாம்.

கண் மருந்து விட்டவுடன் கண்களை மூடுவது அவசியம். உங்கள் சுட்டுவிரலால் கீழ் கண் மடலின் உட்புற மூலையை மூக்கோடு சேர்த்து சிறிதுநேரம் அழுத்திப் பிடிப்பது நல்லது. அவ்வாறு செய்வதன் மூலம் கண்ணுள் விழும் மருந்தின் பெரும் பகுதியானது கண்ணுக்கும் மூக்கிற்கும் இடையேயுள்ள சிறு குழாய் (Nasolacrimal duct) வழியாக தொண்டைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் கண்மருந்து வீணாகாமல் இருப்பதுடன், அது உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமலும் தடுக்கிறது. இரண்டு வெவ்வேறு வகையான மருந்துகளை கண்ணுக்கு இடவேண்டியிருந்தால் குறைந்தது ஜந்து நிமிட இடைவெளியாவது இருப்பது அவசியம்.

முன்பு குறிப்பிட்டவர் மருந்து விடும்போது அடிக்கடி குப்பியின் முனை கண்ணில் முட்டியதாலேயே கண்ணில் வேதனை ஏற்பட்டது. சரியான முறையில் மருந்து இடுவது பற்றி அறிந்ததும் அப் பிரச்சினை தீர்ந்தது.

ஆதாரம்-: Australian Prescriber February 2008

நன்றி
தினக்குரல்:- 30.06.2008

Read Full Post »