Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கவிதை நூல்’ Category

மனதோடு பேசுதல் மனதிற்கு இனியது. மன நிறைவைத் தருவது. நினைவுகளை மீட்பது. மற்றவர் மனம் நோக வைக்காதது. அதே நேரம் மற்றவர்களால் இடையூறு செய்ய முடியாததும் கூட. அத்தோடு வாழ்வின் கடந்த அலைகளில் மீண்டும் நீந்திச் செல்வது போன்ற இனிய சுகம் வேறு எதிலுமே கிட்டாது.

20140919_122517-001

நடா சுப்பிரமணியம் தன் மனதோடு தான் பேசியவற்றை முதலில் முகப் புத்தகத்திலும் இப்பொழுது நூல் ஊடாக சமூகப் பரந்த வெளியில் சஞ்சரிக்க விட்டிருக்கிறார்.

இவரது கவிதைகளின் முக்கிய அம்சம் அவை மென்மையானவையாக இருப்பதுதான். ஆரவாரம், வீர முழக்கங்கள், தூற்றல்கள், நச்சரிப்பு எச்சரிப்பு போன்ற தீவிரங்கள் ஏதுமின்றி அமைதியான நீரோட்டம் போல தனது உணர்வுகளையும், இழந்த வாழ்வின் நினைவுகளைச் சுமப்பவையாகவும் அவை இருக்கின்றன.

‘.. வானில் வட்டமிட்டு பின்

கரணமடிக்கும் பட்டம் என் மனம்

நூலின் நுனியோ..

உன் நினைவுகளின் பிடியில் ….’

இவரது கவிதைகள் சிறிய சம்பவங்களின் கோவை போல பல தருணங்களில் அமைந்திருக்கும். இதனால் இதை வாசிக்கும் பலருக்கு அவை தமது வாழ்வின் பிரதிபலிப்புகள் போலவும் தோன்றலாம்.

“கவிதைகளில் சொல்லப்பட்ட சில நிகழ்வுகளும், நிகழ்ந்த இடங்களும் என் பள்ளிக் காலத்தை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. சென்ரல் தியேட்டர், வல்லிபுர ஆழ்வார் தீர்த்தத் திருவிழா போன்றவை நாம் வாழ்ந்த மண்ணின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வுகள். படிப்பவர்களுக்கும் இதே உணர்வு உள்ளோங்கும்” என்கிறார் மனோ தத்துவ நிபுணரான டாக்டர் வாசுகி மதிவாணன் இந்த நூலுக்கான தனது அணிந்துரையில்.

‘.. வெளிச்சத்தைத்

தொலைத்துவிட்ட

எங்கள் வெளிச்ச வீட்டின் மீது

விண்மீன்களின்

வெளிச்சம்

விழ ஆரம்பித்திருந்தது …..’

பருத்தித்துறை வெளிச்ச வீடு எவ்வாறு அவர் வாழ்வில் கலந்ததுவோ, அதுபோலவே அங்கு வாழ்ந்த எங்கள் ஒவ்வொருவருடனும் நினைவில் பயணிக்கவே செய்கிறது. இது போல ஏராளம் …

“நடாவின் மனதோடு பேசுதல் தொகுதியின் கவிதைகள் எதைப் பற்றிப் பேசினாலும் நட்பினையே முதன்மைப்படுத்துகிறது..” என்கிறார் ரவி கந்தையா தனது வாழ்த்துரையில்.

‘..பள்ளிப் புத்தகத்திற்குள்

மயிலிறகை வைத்துவிட்டு

நிமிடத்திற்கு நூறு தடவை

குட்டி போட்டிருக்கிறதா

என்று எட்டி எட்டி பார்த்திருக்கிறோம்.’

உண்மைதான் நட்புகளின் நிழல் கவிதைத் தொகுப்பு எங்கும் தொடர்வதைக் காண்கிறோம்.

நட்பு முதன்மைப்பட்டிருந்தாலும் அன்பு, காதல், நட்பு, பிரிவு, ஏக்கம், போன்ற உணர்வுகளையும் கூடவே பேசுகின்றன.

‘இந்தக் கவிதைத் தெர்கப்பு நெடுகிலும் வலிகளும், குதூகலமும், மகிழ்வும், துயரமும் காதலாகவும், நட்பாகவும் விடுதலைக்கு ஏங்கும் மனத்தோடு சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறது என்கிறார் ஈஸ்வர சந்தானமூர்த்தி தனது பதிப்புரையில்.

அதே கருத்தை இத் தொகுதிக்கு முன்னுரை வழங்கிய கவிஞர் மேத்தா ‘பிறந்த மண்ணையும் பிரியத்திற்குரிய மனிதர்களையும் பிரிந்து வாழும் ஏக்கம் – உணவில் கலந்த உப்பைப் போல உணர்வில் கலந்து நிற்கிறது.’ எனத் தன் மொழியில் சொல்லுகிறார்.

“எத்தனை

இனிமையான

நாட்கள் அவை ..!

இன்றும்

செவிகளில்

எதிரொலித்து வரும்…”

ஒவ்வொருவரும் தம் வாழ்வின் கடந்து வந்த இனிய காலங்களில் உவகையுறவே செய்வர்.

‘காற்றின்

சீண்டல்களில்

சிணுங்கும் தென்னைகள்..’

ஆம் நிச்சமாக  தென்னையோடும் பனையோடும் கூடவே வாழ்ந்த வாழ்வு இனிமையானதுதான்.

ஆனால் வாழ்க்கையானது இறந்த காலத்துடன் நிறைவுறும் படைப்பாக முற்றுப் புள்ளியிடப்படுவது அல்ல. அது நிகழ்காலத்திலும் தொடர்கிறது. எதிர் காலத்திலும் புதிய காட்சிகளுடன் திரை விலகக் காத்திருக்கிறது.

‘செல்வம்’ என்ற புனை பெயரிற்குள் மறைந்திருக்கும் நடா சுப்பிரமணியம் தனது இனிய கவி மொழியில் அவற்றையெல்லாம் சொல்ல வேண்டும். வாழ்ந்த நாடு மட்டுமல்லாது இப்பொழுது வாழும் மண்ணும் அவரது சொந்தத் தேசம்தான்.

அந்தப் புதிய சூழலில் அவர் இணைவதில் ஏற்பட்ட சவால்களும், அங்கு பெற்ற வெற்றிகளும், கிட்டிய புதிய உறவுகளும், அவற்றுடனான ஒட்டும் ஒட்டாத் தன்மைகளும் படைப்புகளில் வெளிவர வேண்டும். அவை வாசகர்களுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்.

அதேபோல அவரது படைப்பு வெளியையும் பட்டை தீட்டி புதுப் புதுப் மெருகுகளுடன் வரக் கைகொடுக்கும் என நம்புகிறேன்.

‘.. கற்பாறையினை

பிளந்தவாறு..

பசும் புற்களே துளிர்வ்pடும்போது

எமது மனங்களில்

நட்பு துளிர் விட்டது

ஆச்சரியமானதல்ல…..’

என்ற அவரது வரிகளே, சொர்க்கங்கள் எங்கும் திறக்கலாம் எமது மனது மட்டும் பரந்த வெளிகளில் சிறைவிரிக்கத் தயாராக இருந்தால் என்பதற்கு சான்றாக அமைகிறது.

வாழ்த்துக்கள் நடா.

20140919_122621-001

நூல் :- மனதோடு பேசுதல்

நூலாசிரியர் :- செல்வன்- நடா சுப்பரமணியம்

நூலாசிரியர் தொர்பு :- 0044 7722589359. நுஅயடை :- யெனய2202ளூலயாழழ.உழஅ

பக்கங்கள் :- 152

விலை :- இந்திய ரூபா 100.00

வெளியீடு :- மகிழினி பதிப்பகம்

0.0.0.0.0

 

Read Full Post »

இந்த வாழ்விற்குள் எத்தனை இரகசியங்கள் மறைந்து கிடக்கின்றன. எத்தனை நினைவுகள் தாளிடப்பட்டு மறைக்க வைக்கப்பட்டுள்ளன. வாழ்வே ஒரு வகையில் பூடகமானதுதான். இருந்தபோதும் நினைவின் வலிகளை ஆற்றுவதற்கு பகிர்தல் ஒரு வழிவகையாகும்.

IMG_0001_NEW

நெற்கொழுதாசன் 2006ல் இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தவர். வாழ்வின் வசந்தங்களையும் கார்காலங்களையும் தாய் மண்ணில் மற்றெல்லோரையும் போலவே அனுபவித்துத் திளைத்தவர். இப்பொழுது பாதுகாப்பான கூட்டைத் தேடிக் கண்டடைந்து அதில் நிம்மதியாக வாழக் கிடைத்தபோதும் உணர்வுபூர்வமாக அல்லாடுகிறார்.

தனது பிறந்த வீட்டை, துள்ளித்திரிந்த தனது ஊரை, தான் நேசித்த பிறந்த தேசத்தை மறக்க முடியாது உள்ளார ஏங்குகிறார். அவை பற்றிய நினைவுகளுடனேயே வாழ்ந்து அவை பற்றிப் பேசி நினைவாற்றுகிறார்.

அவரது தாயக அனுபவங்களில் அவரால் வெளிப்படையாகப் பேசக் கூடியவை உள்ளன.

“…. கரிய மேகங்கள் திரண்டு கலையும் அந்த
நிழல் படிந்து மறையும்
வெயில் பட்டு தேகம் சிலிர்க்கும்
மெல்லிய கூதல் காற்றில் பரவும்
மாலை சரிகையில் அந்தரத்தில்
மழைப் பூச்சிகள் உலாவும்.
பின்னான இரவுகள் இருண்டு கிடக்கும்..”

பேச முடியாத அவலங்களைச் சுமப்பவையும் உள்ளன.

“….உப்புக் கரிக்கும் அதன் ஓரங்களில்
உறங்கிக் கிடக்கும் விசும்பல்களை
ஆதங்கப் பெருமூச்சுகளை
ஓரந்தள்ளி
வக்கிர நிழல்களைப் பூசினார்கள்….”

அத்தகைய தனது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு அவருக்குக் கைகொடுப்பது கவிதை ஊடகம்தான். அதன் ஊடாக தனது வலிகளை மற்றவர்களுடன் பகிர்கிறார். பகிர்தலில் தேறுதல் பெற முனைகிறார்.

“இது எனக்கான பாடல்
எனக்கான இந்தப் பாடல்
உங்களுக்கான அடையாளங்களைச் சுமந்திருக்கலாம்.
ஆனாலும் இது
எனக்கான பாடல்தான்..”

என்று கவிதையில் சொல்வதிலிருந்து அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தாயக நினைவுகளில் மிதக்கும் இவர் புலம் பெயர் வாழ்வை தனது துர்ப்பாக்கியம் போலக் கருதவதாகப் படைப்புகள் பேசுகின்றன. அதைத் தனது நிரந்தர வீடாகக் கருவதாகவும் தெரியவில்லை. அங்குள்ளவர்களின் மனோபாவம் அவரது மனத்தை அலைக்கழிக்கவும் செய்கிறது

“..புகழ் கேட்டு வரவுமில்லை – இங்கு”
நிலைகொள்ளும் நினைப்பதுமில்லை
புன்னகை தாருங்கள் – கொஞ்சம்
பூவிதழ் திறந்திந்த பாவிதழ்…”

என்ற வரிகள் அந்த மண்ணின் மீதான ஒட்டுறவற்ற வாழ்வைச் சொல்கின்றன.

மற்றொரு புறத்தில் இவரது பல கவிதைகள் மறைந்து போகும் வாழ்வு, நிலையாமை போன்றவற்றையும் பேசுவதைக் காணலாம். அவை ஒரு வித விரக்தியின் வெளிப்பாடா அல்லது நிர்க்கதியைப் பகிரங்கப்படுத்தி ஆறுதலை அவாவும் முகமூடி வரிகளா தெரியவில்லை.

“..நாளை
காலமும் சொற்களும் ஒன்று கூடும்
நான்
பேசுபொருளாவேன்.'”
மற்றொரு இடத்தில்

“.. எப்படி அழைக்கப்படும்
நான் இல்லாத எனது வீடு
யாருமில்லாத இன்றில்..”

இன்னொன்று

‘..யாருக்கும் தெரியாது
நூனில்லாத அந்த அறையில்
என் கனவுகளும்
நிராகரிக்கப்பட்ட பிரியங்களும்
கண்ணீரின் உவரப்பு வீச்சும்
பெருமூச்சுக்களும்
ஒரு காலடிக்காக் காத்திருப்பது..’

மற்றொன்று

‘….மறந்துமென்
கல்லறை மீதில்பூக்களையே
உங்கள் கண்ணீர்த் துளிகளையோ
தூவாதீர்கள் …’

இப்படியாக பல கவிதைகள் மனத்துயர் சிந்துகின்றன.

சரி அவரது படைப்புகள் பற்றி மற்றவர்கள் சொல்வது என்ன?

“…’அவரது உண்மையும் தன்னுணற்சி வெளிப்பாடும் அவரது அனுபவச் செழுமையும், விட்டு வந்த மீதான ஏக்கமும் அவரை எனக்கு நெருக்கமாகியது… ” இவ்வாறு சொல்வது கவிஞர் வ.அய்.ச.ஜெயபாலன பின் அட்டையில்.

IMG_0002_NEW

“..இணையப் பரப்பில் அண்மைக் காலங்களில் துருத்திக் கொண்டு மேலெழும் இளம் படைப்பாளிகளில் அவரும் ஒருவர்….. ஒரு இளம் புலம்பெயர் படைப்பாளி என்பதால் அவர் அவருக்கேயான ‘போகாத நினைவுகளை’ கடந்து வரக் காலம் எடுக்கும்.” என்று நிலாந்தன் தனது கணிப்பை நூலுக்கான முன்னுரையில் சொல்கிறார்;.

ஆம் இது ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு. பெரும்பாலான கவிதைகள் அவரது பழைய நினைவுகளையே பேசுகின்றன.

தனது தாய் நாட்டுப் பிரிவின் துயரிலிருந்து மேலெழுந்து, புலம் பெயர் வாழ்வின் சிக்கல்களையும் சவால்களையும் அங்கு நிகழும் கலாசார கலப்பின் பண்பாட்டுத் தளும்பல்களையும் பேச முயலும்போது அவரது படைப்புகள் மற்றொரு தளத்திற்கு நகரும். அதையே தாய் நாட்டில் வாழும் நாம் எதிர்பார்க்கிறோம்.

நூல் :- இரகசியத்தின் நாக்குகள்
நூலசிரியர் :- நெற்கொழுதாசன்
வெளியீடு :- கறுப்பு பதிப்பகம்
விலை :- இந்திய ரூபா 60.00
Mobile :- 94442 72500

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0

Read Full Post »

>

‘அக்குரோணி’
மன்னார் அமுதனின் கவிதை நூல்

மன்னார் அமுதனின் அக்குரோணி என்ற கவிதை நூல் இது. இனிமையான குணங்கள் நிறைந்த ஒரு அழகிய இளைஞனின் மிக அழகான நூல் இது. அட்டை கண்ணைக் ஈர்க்கும் கவர்ச்சியுடையதாக இருக்கிறது.

இது அவரது இரண்டாவது கவிதைத் தொகுதி. முதலாவது கவிதைத் தொகுதியான ‘விட்டு விடுதலை காண்’ சில காலங்களுக்கு முன் 2009ல் வெளிவந்தபோது நிறையப் பேசப்பட்டது.  பலராலும் பாராட்டப்பட்டது. விமர்சனங்களுக்கும் ஆளானது.

இன்றைய இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மன்னார் அமுதன்  இருக்கிறார். மிகுந்த வீச்சுடன் படைப்புலகில் இயங்குபவராக இருக்கிறார். இவரது ஆக்கங்கள் வராத பத்திரிகை இருக்க முடியாது என்று சொல்லுமளவு அதிகம் எழுதுகிறார். ஜீவநதி, ஞானம், இருக்கிறம், படிகள், கலைமுகம், பூங்காவனம், நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகளைப் படிக்க முடிகிறது.

தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைளிலும் இவரது படைப்புகளைத் தரிசிக்க முடிகிறது. இலக்கியத்திற்காகவே வாழ்பவர் போல, அதுவே தனது உயிர் மூச்சுப்போல கவிதைகளைப் படைக்கிறார். இவ்வளவு வேகமாக எழுதும் வேறொருவரைக் காண்பது அரிது.

‘மன்னார் அமுதனின் பக்கங்கள்’ http://amuthan.wordpress.com/home என்பது இவரது வலைத் தளமாகும். அதற்குள் நுளைந்து பார்க்கும்போது இவரது படைப்பாளுமையின் பரந்த வெளியில் பயணிக்க முடிகிறது. கவிதை மட்டும் இவரது படைப்பு உலகு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், நூல் விமர்சனம், சமூக விமர்சனம் எனப் பல படைத்துள்ளார். அண்மையில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ‘பண்டைய இலக்கியமும் ஈழத் தமிழரின் சமகால வாழ்வியலும்’ என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று நான் கூகுளில் சென்று கவிதைகள் பற்றி அறிய ஒரு தேடுதல் நடத்தியபோது எனது வலையில் சிக்கியவை பெரும்பாலும் இவரது கவிதைகள்தான். பல இலக்கியக் கட்டுரைகளிலும், இணையக் கருத்தாடல்களிலும் கூட இவரது பெயர் அதிகமாகச் சிக்கியது. இணைய இதழ்களிலும் இவரது பெயர் மிக அதிகமாக இடம் பெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

யாழ்தேவி, தமிழ்மணம், திரட்டி, சிறந்த தமிழ் பூக்கள், இலங்கை வலைப் பதிவாளர் திரட்டி, தமிழ்க் கணிமை, இன்ட்லி, தமிழ்வெளி, மென்தமிழ் போன்ற பல இணையத் திரட்டிகளில் இவரது படைப்புகள் வெளியாகின்றன. இவ்வாறாக இன்றைய இலக்கிய உலகில் அதிலும் முக்கியமாக இளம் எழுத்தாளர்களிடையே மிகவும் பிரபலமானவராகவும் வசீகரம் மிக்கவராகவும் திகழ்கிறார்.

இலக்கிய நிகழ்வுகளிலும் இவரது பெயர் அதிகமாக அடிபடுவதை பத்திரிகை, சஞ்சிகைகள் ஊடாகக் காண முடிகிறது. முக்கியமாக திருமறைக் கலாமன்ற பௌர்ணமி நிகழ்வுகளில் இவரது பங்களிப்பை அதிகம் காண்கிறோம். மன்னார் எழுத்தாளர் பேரவையின் முக்கிய அங்கத்தவராகவும் இருக்கிறார். அதன் தலைமைப் பொறுப்பையும் வகித்துள்ளதாக அறிகிறேன்.

மன்னார் அமுதன் எனது நண்பன். மேடைக்காகப் பேசிய அலங்கார வார்த்தைகள் அல்ல. இந்த முதியவருக்கும் இளைஞனுக்கும் இடையில் நட்பு இருக்க முடியாது என்பீர்கள். ஆனாலும் நாம் நண்பர்கள்தான். முகப்புத்தக (Facebook) நண்பர்கள். எண்ணெட்டுத் திசையில் இருப்பவர்களை இணைக்கும் பாலமாக இன்று முகப்புத்தகம் இருக்கிறது. வயது வேறுபாடின்றி, பால் வேறுபாடின்னிறி பலரும் அதன் ஊடாக நட்புப் பேண முடிகிறது. ஈடுபாடுகளில் ஒற்றுமை உள்ள பலரும் அதனூடாக தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் மட்டுமின்றி நேரடியாக இலக்கியக் கூட்டங்கள் பலவற்றிலும் இவருடன் கலந்துரையாடியிருக்கிறேன்.

கவிதை என்பது ஒரு இனிய அனுபவம். எல்லாப் படைப்பிலக்கியங்கள் போலவே கவிதையும் படைப்பாளியின் கருத்தை அல்லது உணர்வை கற்பனை கலந்து வாசகனுக்குத் தருகிறது. அவனது மெல்லுணர்வுகளை மீட்டி உள்ளத்தில் இசைபோலத் தழுவச் செய்கிறது.

ஆனால் இவற்றிடையே வேறுபாடுகள் உண்டு. கவிதையில் சொல்லப்படுபவை வசன நடையில் அமையாது என்பது தெரிந்ததே. கவிதையில் கருத்துச் செறிவு இருக்கும். சுருக்கமாகவும் ஓசை அமைதியுடனும் இருக்கும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட கவிதையில் கவித்துவம் இருக்க வேண்டும்.

ஒரு படைப்பில் கவித்துவம் இருக்கிறதா என எப்படி அறிவது.  அது கட்டுக்குள் அகப்படாத, வார்த்தைகளுள் சிக்காத, அதியுயர் அனுபவம் என்றே சொல்லலாம். பூவின் நறுமணம் போலக் கண்களால் காண முடியாதது. நுகர மட்டுமே முடிவது. பூவின் மணம் எவ்வாறு மனத்தைப் புளங்காகிதப் படுத்துகிறதோ அவ்வாறே கவிதை, வார்த்தைகளின் சேர்க்கை நேர்த்தியால் அதியுயர் அக நிறைவைத் தருவதாகும்.

உணர்வாலும் அனுபவத்தாலும் கவிஞனையும் வாசகனையும் இணைப்பது கவிதையின் சொற்களாலான பாலமாகும். இருவரும் இணையும் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க கவித்துவம் உச்சங்களை எட்டும். அவ்வாறு இணையச் செய்யும் ஆற்றல் படைப்பாளியின் சொற்களுக்கு வேண்டும்.

இதனால்தான் படைப்பனுக்கு மட்டுமல்ல படிப்பவனுக்கும் கூட அது மனநிறைவைத் தரும்.

சிறுகதை போல கவிதை தமிழுக்கு புதிதாக அறிமுகமான இலக்கிய வடிவம் அல்ல என்பதை நாம் அறிவோம். கவிதையே எமது பாரம்பரியம். ஐம்பெரும் காப்பியங்களைக் கொண்டது தமிழ். அதற்கு மேலாக கம்பனும் வள்ளுவனும் அண்மையில் பாரதியும் அதற்கு உரம் ஊட்டினார்கள்.

பாரதி தமிழ்க் கவிதையின் போக்கையே மாற்றினான்.

“சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது   
சொற்புதிது சோதிமிக்க நவகவிதை.”

என இலகு தமிழில் எழுதினான். அதில் வசன கவிதையும் அடங்கும்.

அவனது வசன கவிதை பின் யாப்பில்லாக் கவிதை, இலகு கவிதை, நவீன கவிதை, புதுக் கவிதை எனப் பல பெயர்களைத் தாங்கி பரிணாமமடைந்து இன்றைய கவிதை ஆகிவிட்டது.

மஹாகவி, முருகையன், நீலாவண்ணன் போன்ற மூத்த ஆளுமைகளுக்குப் பிறகு, 80 களின் பின் ஈழத் தமிழ்க் கவிஞர்கள் வேறொரு பரிமாணத்தில் புதிய வீச்சைப் பாய்ச்சினார்கள். தமிழ் கூறு உலகெங்கும் எமது கவிதைகள் பேசப்பட்டன. போரும் அகதி வாழ்வும் எமது கவிதைகளின் பாடு பொருளாயிற்று.

இப்பொழுது போருக்குப் பின்னான வாழ்வு. வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு அமைதியாக ஓடுகிறது. நிறைய நூல்கள் வெளிவருகின்றன. பல இளைஞர்கள் கவிதைத்துறையில் இறங்கியுள்ளார்கள். எமது வாழ்வின் இன்றைய கோலங்கள் பலவும் எமது கவிதையில் பேசப்படுகின்றன.

மன்னார் அமுதனின் கவிதைகளும் அவ்வாறே நிகழ் வாழ்வைப் பேசுகின்றன. வெறும் கற்பனை வழி வந்த படைப்புகள் அல்ல. தன்னைச் சுற்றியுள்ளவற்றை அவதானிக்கிறார். உள்ளார்ந்த மனித நேயத்துடன் பார்க்கிறார். அவற்றினால் உணர்வூக்கம் பெறுகிறார். கவலையும், ஆனந்தமும், கோபமும், போன்ற பல்வேறு உணர்வுகள் அவரது மனதை அலைக்களிக்கக் கவிதை படைக்கிறார்.

இதனால்தான் இவரது படைப்புவெளி சமூக அக்கறை மிகுந்ததாக இருக்கிறது. அவரது கவிதைகள் எமது வாழ்வைப் பிரதிபலிக்கினறன. கடுமையா சொல் அலங்காரம் கிடையாது. இலகுவான தமிழில் எழுதுகிறார். புதிரான உவமைகளும், விளங்காத படிமங்களும் அவரிடம் இல்லை. இதனால் எனக்குப் புரிகிறது. சாதாரண மக்களுக்கும் புரிகிறது. எல்லோருக்குமே புரியும்படி எழுகிறார். புரியாமல் எழுதினால்தான் கவிதை என்ற சிறைக்குள் அவர் அகப்படாது இருப்பது மகிழ்வைத் தருகிறது.

புரியும்படி எழுதினால்தான் மக்களுக்குப் புரியும். சமூகஅக்கறையுள்ள படைப்பாளியால் அவ்வாறுதான் எழுத முடியும்.

உதாரணத்திற்குப் பாருங்கள். சாதீயத்திற்கு எதிரான குரல் கொடுக்கிறார்.

“..குளிப்பதற்கும் கும்பிடவும்
தனியிடங்களா? நீரைக்
குவளையிலே குடிப்பதற்கு
இருமுறைகளா?..”

விழிம்பு நிலை மனிதர்களின் துயர் செறிந்த வாழ்வை ‘அவளும் அவர்களும் என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார். பிச்சைக்காரியைக் கூட விட்டுவிடாத கயவர்களின் கயமை வெளிப்படுகிறது.

“..குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிளிந்த உடைகளுக்குள்
எதையோ தின்று கொண்டிருப்பான்…”

அவரது கவிதையில் அரசியலும் இருக்கிறது. அரசியல் என்பது கட்சி அரசியல் அல்ல. மொழி சார்ந்த, இனம் சார்ந்த அரசியல். ‘நாம் தமிழர், எமது மொழி நீண்ட பாரம்பரியம் கொண்டது. நாம் தலை நிமிர்ந்து வாழவேண்டும். என நாம் எல்லோரும் நாடுவதையே அவரும் நாடுகிறார்.

அதிகாரத்துக்கு எதிரான அவரது கவிதைக் குரல் இவ்வாறு ஒலிக்கிறது.

“..ஆட்சியாளனுக்கு அரிப்பெடுக்கையில்
அங்கம் தடவாது…”

புதுக் கவிதை, மரபுக் கவிதை என்ற இரண்டு வகைக் கவிதைகளையும் அவரது படைப்புகளில் காண முடிகிறது. பொதுவாக தமிழ் மொழியின் பெருமை, தமிழர் வாழ்வு, தமிழ்த் தேசியம் போன்ற கருவுடைய படைப்புகள் மரபு வழிக் கவிதைகளாக அமைந்திருப்பதை காண முடிகிறது.

‘வரம் தா தேவி’ என்பது நூலின் முகப்புக் கவிதையாக அமைத்திருப்பதிலிருந்தே அவரது தாய்மொழிப் பற்றை நாம் விளங்கிக் கொள்ளலாம். இவற்றைத் தவிர ‘தமிழாய் தமிழுக்காய்’, தமிழே எம் உடலே’, எனப் பல கவிதைகள் தமிழின் புகழ் பாடுகின்றன.

தமிழின் மீதுள்ள பற்றுப் போலவே தனது தாய் மண்ணிலும் பற்றுக் கொண்டவர். தான் பிறந்த பிரதேசத்திலும் பெருமை கொள்பவர்.

அதனால்தான் மன்னாரை தனது பெயருடன் இணைத்துளாளர். தெளிவத்தை ஜோசப், திக்கவல்லை கமால், நீர்வை பொன்னையன், புலோலியூர் சதாசிவம், புலோலியூர் இரத்தினவேலோன், நாச்சியாதீவு பர்வீன், வல்வை அனந்தராஜ், திருமலை நவம், மருதமூரான், நீர்கொழும்பு முத்துலிங்கம், எனப் பலர் முன்னுதாரங்களாக இருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஊடகவியலாளர்கள் பற்றி எழுத்தாணி ஏந்தும் இயேசுக்கள்’கவிதையில் சொல்லும் வரிகள் இவ்வாறு அவர்களின் வாழ்வுக்கும் சாவுக்குமான சத்தியப் போரின் இருண்ட பக்கங்களின் வரிகளாக…

“..யுகம் யுகமாய்த்
தொடரும் காட்டிக் கொடுப்புகளும்
சிலுவை மரணங்களும்
உனக்கும் அவர்க்குமான
எழுதப்படாத ஒப்பந்தானே
காட்டிக் கொடுத்துவிடு..”
..
..மரணம் நிகழும்
வழிகள் தான் வேறு
சேருமிடம்மென்னவோ
கல்வாரி தானே,,’

காதல், ஊடல், பிரிவு, பிரிவின் துயர், கழிவிரக்கம் போன்ற மென் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் கவிதைகள் ஏராளம் இருக்கின்றன. இவை பெரும்பாலும் புதுக் கவிதைகளாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
உணர்வுகளை வாசகனின் மனதுக்கு நெருக்கமான வகையில் பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் மன்னார் அமுதனிடம் உண்டு. தேர்ந்தெடுத்த சொற்களைப் பயன்படுத்துகிறார்.

பிரிவு

“..உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை
சிலந்தி வலைகள்
நிரப்புகின்றன…”

மற்றொரு கவிதையில்

“..கோவப்படுகையில்
நீ அடிப்பாய்
வலிப்பதில்லை – இன்றோ
மௌனம் காக்கிறாய்
வலிக்கிறதே…”

இன்னொன்று இவ்வாறு

“…நெடுநாள் பிரிவை உடனே போக்க
விடுமுறை நாடுகிறேன்
விடுப்புகள் முடிந்து
வேலைக்கு மீள்கையில்
நோய்நொடி தேடுகிறேன்…”

எவ்வளவு யதார்த்தமான வரிகள். போலி மருத்துவ சேர்டிபிக்கட்டுகளைத் தேடும் போலி நோயாளிகள் இவர்கள். ஆனால் காதலில் ஆரோக்கியமானவர்கள்.

நூலைப் பற்றி இன்னும் நிறையப் பேசலாம். ஆயினும் நேரமாகிவிட்டது. இன்றைய நூல் வெளியீட்டு அரங்கில் தலைமை தாங்க அழைத்தமைக்கு நன்றி. பெருமளவு மருத்துவத் துறை சார்ந்த என்னை கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள அழைத்த அவரது அன்பு நெகிழ வைக்கிறது.

இது மன்னார் அமுதனின் இரண்டாவது கவிதை நூல். இலக்கியப் பரப்பில் அவர் பயணப்பட இன்னும் நீண்ட வெளியும் காலமும் காத்திருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தக் கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறது. இன்னும் பல நூல்கள் வெளியிடுவதுடன், பல சாதனைகள் செய்ய வாழ்த்துகிறேன். சொந்த வாழ்விலும் இலக்கிய உலகிலும் உச்சங்களை எட்டி சமூகத்திற்குத் தொண்டாற்ற மீண்டும் வாழ்த்தி அமர்கிறேன்.

எம்.கே.முருகானந்தன்.

நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய தலைமை உரையின் கட்டுரை வடிவம்.
0.0.0.0.0.0

Read Full Post »