Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘காசநோய்’ Category

காசநோய் உலகெங்கும் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது.

கொழும்பு மாவட்டதிலிருந்து மாத்திரம் வருடாவருடம் 2000 புதிய காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். ஏனைய மாவட்டங்களில் இருந்து வருடாவருடம் 10,000 புதிய காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாக அறியப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலும் குறைவில்லை.

போரில் குண்டுத்தாக்குதல்கள் ஏராளமாக நடந்த காரணத்தால் அந்த விசக் காற்றுகளினால் பல விதமான சுவாச நோய்களுக்கு வடக்கு கிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக வன்னி மக்கள் மோசமாக ஆட்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

இந் நிலையில் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் யாழ் சுகாதாரப் பகுதியின் காசநோய் ஒழிப்புப் பிரிவு மருத்துவ அதிகாரியான டொக்டர் சி.யமுனானந்தா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் எழுதிய நூல்தான் மேற் கூறிய ‘காசநோய் சமூக அணுகுதல்’ என்பதாகும். மிகவும் எளிமையான தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் நூலை எழுதியுள்ளார்

உள்ளடக்கம் பின்வருமாறு

  1. காசநோயும் சுவாச ஆரோக்கியமும்
  2. நுரையீரலில் ஏற்படும் காசநோய்
  3. நுரையீரல் அல்லாத பகுதிகளில் ஏற்படும் காசநோய்
  4. சிறுவர்களில் காசநோய்
  5. பெண்களில் காசநோய்
  6. காசநோயும் சலரோகமும்
  7. காசநோயும் புகைத்தலும்
  8. காசநோயும்மதுபானமும்
  9. காசநோயும்போசாக்கும்
  10. காசநோயும்எயிட்ஸ் நோயும்
  11. முதியவர்களில் காசநோய்
  12. மருந்திற்கு எதிர்ப்புத்தன்மை உடைய காசநோய்
  13. காசநோயை ஆய்வுகூடங்களில் கண்டறிதல்
  14. ஆய்வுகூடங்களில்தரம் பேணுதலும் கட்டுப்பாடும்
  15. காசநோயிற்கான சிகிச்சை
  16. தொய்வுநோயினை காசநோயிலிருந்து வேறுபடுத்தி அறிதல்
  17. காசநோய் பற்றிய விழிப்பணர்வு

காசநோய் பற்றிய விழிப்புணர்வுப் பாடல்கள் சிலவும் இணைக்கப்பட்டுள்ளமை சமூகத்திற்குள் செய்தியை இலகுவாகக் கொண்டு செல்ல வழிவகுக்கிறது.

காசநோய் என்றால். அதன் அறிகுறிகள் என்ன? என்பதை சுலபமாக விளங்கக் கூடிய படங்களாகக் கொடுத்துள்ளார்.

இவை தவிர வேறு சில அறிகுறிகளும் அடங்கும். அவை பற்றிய கருத்துப்படங்களைக் கீழே காணலாம்.

இதைவிடத் தெளிவாக காசநோயின் முக்கிய அறிகுறிகள் பற்றி விளக்க முடியாது. எவருக்கும் புரியும் வண்ணம் கருத்துப் படங்கள் அமைந்துள்ளன.

இந்த நூல் ஏற்கனவே இரண்டு பதிப்புகள் வந்து மக்களிடையே பேராதரவைப் பெற்றுள்ளது.

மக்களிடையே சேவை மனப்பாங்குடன் பணியாற்றுவதில் யாழ் மருத்துவர்கள் என்றுமே முன்னணியில் நிற்கிறார்கள்.

போரின் கொடும் தாக்கம் நிறைந்த நாட்களில் டொக்டர்.பொன்னம்பலம், டொக்டர்.திருமதி.நாகேந்திரா, டொக்டர்.சிவகுமார், டொக்டர்.தயா சோமசுந்தரம், டொக்டர்.ஆனந்தராஜா, டொக்டர்.கணேசரட்ணம், டொக்டர்.சிவயோகன், டொக்டர்.குகதாசன், டொக்டர்.ரவிராஜ் போன்ற பலரும் ஆற்றிய பணிகள் அளப்பரியது. அவர்களுக்கு எமது சமூகம் என்றும் மதிப்புக் கொடுத்து வந்திருப்பதையும் அறிவோம்.

இன்று கொழும்பில் பணியாற்றும் நூற்றுக் கணக்கான மருத்துவ நிபுணர்களிடையே மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து பரிவோடு பணியாற்றுபவர்களாக டொக்டர்.ஆனந்தராஜா, டொக்டர்.கணேசரட்ணம், டொக்டர்.சிவகுமார்,  போன்ற ஒரு சிலரையே குறிப்பிடலாம். இவர்கள் யாவரும் முன்பு யாழ் மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் அவ்வாறான பல மருத்துவர்கள் யாழ் மாவட்டத்தில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவர்களது பெயர் விபரங்களை நான் அறியேன். புற்று நோய், காசநோய், பொது மருத்துவம், மனநலம், சத்திர சிகிச்சை, கண், காது மூக்கு தொண்டை, மகப்பேறு போன்ற பல துறைகளிலும் அளப்பரிய பணியாற்றுகிறார்கள். குறைந்த வசதிகளுடன் நிறைான பணியாற்றுகிறார்கள்.

தங்கள் வழமையான பணிகளுக்க மேலாக அவர்கள் காசநோய், புற்றுநோய், நீரிழிவு போன்ற பல நோய்கள் பற்றிய நூல்களையும். சிடி க்களையும் வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.

அவர்களது பணிகளுக்கு ஆதரவும் உதவியும் வழங்க வேண்டியது எமது கடமையாகும். பாராட்டிற்குரிய பெருமனிதர்களாக இன்றும் யாழ் மருத்துவர்களே விளங்குகிறார்கள்.

ஞாயிறு தினக்குரலின் நூலகம் பகுதியில் 29.11.2012 ல் வெளியான எனதுகட்டுரை.

Read Full Post »

>அவன் ஒரு பாடசாலை மாணவன். உயர்தர வகுப்பில் படிக்கிறான்.
அவனுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்து கொண்டிருந்தது.
அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டி மருந்தெடுக்க மாறிவிடும்.

விரைவில் உயர்தர வகுப்புப் பரீட்சை வர இருக்கிறது.
இந்த நேரத்தில் அடிக்கடி காய்ச்சல் வருவதால் படிப்பு கெடுகிறதே எனக் கவலையடைந்த தாயாருடன் வந்திருந்தான்.
விசாரித்த போது முன்பு போல உணவுகளை ஆசையோடு சாப்பிடுவதில்லை என்பது தெரியவந்தது.
சற்று எடையும் குறைந்திருந்தது.

இரத்தம் பரிசோதனை, சளிப் பரிசோதனை எடுத்த போது அவை வித்தியாசம் காட்டவில்லை. சாதாரணமாக இருந்தன.

எக்ஸ்ரே எடுத்த போது நுரையீரல் பாதிப்பின்றி இருந்தது. ஆனால் நுரையீரலுக்கு வெளியே நெஞ்சறையில் நீர் தேங்கியிருந்தது.

காசநோய் காரணமாக சுரந்த நீர்.

காசநோய் என்பது பெரும்பாலும் நுரையீரலைத் தாக்கும் நோய்

(Pulmonary Tuberculosis) ஆகும்.

ஆனால் நுரையீரலில் மட்டும் வருவதில்லை. இவனுக்கு வந்தது

Tuberculus Pleural effusion

இவற்றைத் தவிர சிறுநீரகம், எலும்பு, மூளை எனப் பல உறுப்புகளையும் தாக்க வல்லது.

இப்பொழுது நல்ல சிகிச்சை கிடைக்கிறது. பொதுவாக 6 மாதங்கள் வரை தொடர்ச்சியாக மருந்துகள் சாப்பிட முற்றாகக் குணமடைந்துவிடும்.

காசநோய், சயரோகம், ரீ.பீ எனப் பலவாறு அழைக்கப்படும் இந் நோய் தடிமன் போல காற்றினால் பரவும் நோயாகும். அதாவது ஒருவர் தும்மும் போதும் இருமும் போதும் வெளிப்படும் கிருமிகள் காற்றின் ஊடாக மற்றவருக்கும் பரவுகின்றன.

இன்று உலக காசநோய் தினமாகும்.

இந் நோய் பற்றிப் பூரணமாகத் தெரிந்து கொள்ள இதோ ஒரு இணைப்பைத் தருகிறேன்.
வடமாகாண காசநோய் விழிப்புணர்வுக்கான இணையதளம். வட இலங்கை காசநோய் தடுப்புச் சங்கத்தின் இணையத்தளமாகும்.

டொக்டர்.சி.யமுனானந்தாவின் தலைமைத்துவத்தில் இது இயங்குகிறது.

  • காசநோய் என்றால் என்ன?
  • காசநோயின் அறிகுறிகள்
  • பரவும் விதம்
  • காசநோய் வராதிருக்க
  • காசநோய் வந்தால்
  • காசநோயும் கர்ப்பிணிகளும்
  • காசநோயும் போசாக்கும்
  • டொட் என்றால்

போன்ற தலைப்புகளில் தெளிவான விளக்கங்கள் கிடைக்கின்றன.
வடமாகாண காசநோய் விழிப்புணர்வுக்கான இணையதளம் சென்று விபரமாகப் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்

இலங்கையில் இந்நோய் பற்றிய தரவுகள் உலக சுகாதார இணையத் தளத்தில் கிடைக்கிறது. கிளிக் பண்ணுங்கள்

2007ல்இலங்கை சனத்தொகை 19 மில்லியனாகும். 100,000 பேரில் 79 பேருக்கு என்ற விகிதத்தில் இந்நோய் பரவியிருக்கிறது. இது ஏனைய கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்ததாகும் என்றும் சொல்கிறது.

இந்நோய் பற்றி விளக்கமாக அறிந்து அது பராவாமலிருக்கும் முயற்சிக்குக் கைகொடுப்போம்.

Read Full Post »