Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘குழந்தை வளர்ப்பு’ Category

‘இந்தப் பிள்ளையாலை தூக்கமில்லை எனக்கு. கண் சோருது’ என்றாள் தாய்.

‘அடி போட்டுத்தான் இதைத் தூங்க வைக்க வேணும் போலிருக்கிறது’ எனச் சினந்தார் தகப்பனார்

அடிபோட்டு தூங்க வைப்பது முடியிற காரியமா?

தூக்கமின்மை அல்லது தூக்கக் குழப்பம் என்பது வயதானவர்களின் பிரச்சனை மட்டுமல்ல, எந்த வயதினரையும் தாக்கலாம். இரா இராவாக அழுது அடம் பிடித்துவிட்டு பகல் முழவதும் தூங்கும் குஞ்சுப் பாலகர்களைக் காண்பது அதிசயமல்ல

சில பள்ளிக் குழந்தைகளும் அவ்வாறு இரவில் தூங்காமல் பிரச்சனை கொடுப்பதுண்டு.

காரணங்கள் என்ன?

  • உங்களது குழந்தை இருளுக்குப் பயப்படுகிறதாக இருக்கலாம்.  ஏசாமல் பேசாமல் இதமாக கண்டறிய முயலுங்கள். இரவு லைட் ஒன்றை ஒளிரவிடுவது பிரச்சனையைத் தீர்க்கும்.
  • பயங்கரக் கனவுகள் காரணமாகலாம். நல்லாகத் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென அலறி விழித்து எழுந்தால் அதுதான் காரணம் எனக் கொள்ளலாம். விழித்த பின் பெரும்பாலான கனவுகள் மறந்து போகின்ற காரணத்தால் குழந்தையால் விளக்க முடியாதிருக்கும். படுக்கப் போகும் முன்னர் பயங்கரமான கதைகள், திடுக்கிட வைக்கும் ரீவீ நிகழ்ச்சிகளை படிப்பதை, பார்ப்பதை, கேட்பதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளை படுக்கப் போகும் முன்னர் அரவணைத்து குட் நைட் சொல்லி நல்ல சிந்தனைகளுடன் மகிழ்ச்சியாகப் படுக்க விடுங்கள்.
  • பல பிள்ளைகளுக்கு பாடசாலைப் படிப்பு, ரியூசன், மியூசிக் கிளாஸ், டான்ஸ், விளையாட்டு பேச்சுப் போட்டிகள் என வேலை அதிகம். களைத்துவிடுவார்கள். அதற்கு மேலாக அடுத்த நாள் முகம் கொடுக்க வேண்டிய விடயங்கள் பற்றிய மனப்பதற்றமும் காரணமாகலாம்.
  • வாழ்க்கை முறையில் ஏற்படுகிற தாக்கங்கள் குழந்தைகள் மனத்தில் ஆழமான பதற்றத்தை விதைத்துவிடலாம். நெருங்கிய உறவினரின் இறப்பு, தகப்பன் அல்லது தாயைப் பிரிந்திருக்க நேருதல், வீடு மாறுதல், புதிய பாடசாலைக்கு செல்ல நேருதல், நோய் வாய்ப்படுதல் போன்ற பலவாகலாம். காரணத்தைக் கண்டறிந்து அமைதிப்படுத்துங்கள்.
  • உடல் ரீதியான அசௌகரியங்களும் காரணமாகலாம். கடுமையான வெக்கையும் வியர்வையும், கடும் குளிர், பசியோடு தூங்கச் சென்றமை, படுக்கையை இரண்டு மூன்றுபோர் பகிர்வதால் ஏற்படும் இட நெருக்கடி போல எதுவாகவும் இருக்கலாம்.

பெற்றோர்களே குழந்தைகள் தூங்கவில்லை எனில் சினப்படாதீர்கள்.

நிதானமாகக் காரணத்தைக் கண்டறிய முயலுங்கள்

அதை நிவர்த்தியுங்கள்

அமைதியான தூக்கம் குழந்தையை மட்டுமின்றி உங்களையும் அரவணைக்கும்.

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

0.0.0.0.0

Read Full Post »

உங்கள் குழந்தை குறுநடை போடுகிறது என்ற ஆனந்தத்தில் இருக்கிறீர்களா? விழுந்துவிடுவானா எதையாவது போட்டு உடைப்பானா எனப் பெற்றோர்கள் திகிலில் இருக்கும் காலமும் அதுதான்.

குறுநடைபோடும் காலம் என்பது பொதுவாக ஒன்று முதல் மூன்று வயது வரை எனக் குறிப்பிடுகிறார்கள்.

குறுநடைபோடும் காலமானது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மட்டும் முக்கியமானதல்ல.

அது குழந்தைகளின்

  • அறிவாற்றல்,
  • உணர்ச்சிகளின் வெளிப்பாடு
  • சமூக உறவுகளின் விரிவு

போன்றவவை வளர்வதற்குமான மிகவும் முக்கிய காலப்பகுதியாகும்.

இக்காலத்தில் வாசிப்பதானது அவர்களது கற்கை ஆற்றலையும், அறிவு வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

இக்காலத்தில் அவர்களை வாசிக்க தூண்டுவதானது அவர்களை வாழ்நாள் முழுவதும் வாசிப்பில் ஆர்வம் கொள்ள ஊக்குவிப்பதாக அமையும் என American Academy of Pediatrics சொல்கிறார்கள்.

  • குழந்தையைக் கட்டித் தழுவி அமைதியும் செளகர்யமும் நிறைந்த இடத்தில்  குழந்தையுடன் கூடியிருந்து வாசியுங்கள்.
  • உங்கள் குழந்தை தவறாக உச்சரிக்கும் வார்த்தைகளைக் கவனத்தில் எடுத்து அவற்றை சரியான முறையில் நீங்கள் உச்சரித்து குழந்தையை அவதானித்து முயற்சி செய்து முன்னேற உதவுங்கள்.
  • வாசிப்பதை தெளிவாக மட்டுமின்றி மிகவும் ஆறுதலாகவும் செய்வதன் மூலம் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குழந்தை புரிந்து கொள்ள உதவ முடியும்.
  • குழந்தை உற்சாகமற்று சோர்வாக இருக்கும் நேரங்களில்  குழந்தையை அமைதிப்படுத்தி ஆற்றுப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்த வாசிப்பு நேரங்களைப் பயன்படுத்தலாம்.
  • ஒருபோதும் அது தண்டனையாக மாறக்கூடாது. அவ்வாறானால் அது உங்கள் நோக்கத்தையே கெடுத்துவிடும்.

எதிர்காலத்தில் வாசிப்பில் அக்கறை காட்டி அதில் மகிழச்சியுறும் பெரியவராக அந்தக குழந்தை வளரும்.

ஏற்கனவே எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

இது புகைப்படக் குழந்தை – குறுநடை போடும் மற்றொரு செல்லக் குழந்தை

0.0.0.0.0

Read Full Post »

முன்பள்ளிச் சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. ஒரு பாடலை அபிநயத்துடன் பாடிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு சில பிள்ளைகள் மிக உற்சாகமாக உடலசைத்து  முகத்தில் உணர்வுகள் தெறிக்கப் பாடினார்கள். சிலர் ஏனோதானோ எனப் பாடினார்கள். கண்ணைக் கசக்கிக் கொண்டு பாடியவர்ளும் இருந்தார்கள்.

2349077637

நிகழ்வு முடிந்து குழந்தைகள் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களைத் தூக்கச் சென்ற பெற்றோர்களது முகங்களிலிருந்து உணர்வுகளும் மாறுபட்டிருந்தன.

ஆவலோடு சென்று அணைந்துத் தூக்கியவர்கள் சிலர். முத்தமிட்டுக் கொஞ்சி வாழ்த்தினார்கள் மற்றவர்கள். ஏனாதானோ என அழைத்துச் சென்றவர்களும் இருந்தார்கள். முகத்தில் கோபம் கொப்பளிக்க ஆவேசத்தோடு அடிக்காத குறையாக இழுத்துச் சென்றவர்களும் இருக்கவே செய்தார்கள்.

Son Hugging Father

பெற்றோர்களது உணர்வுகளும் செயற்பாடுகளும் பிள்ளைகளை எவ்வாறு உள்ளுரப் பாதித்திருக்கும் என்பது எனது யோசனையாக இருந்தது.

  • அவை பெற்றோர்களினதாக மட்டும் இருக்க வேண்டியதில்லை.
  • ஆசிரியர்களின்,
  • குடும்பத்தில் உள்ள மூத்தவர்களது,
  • பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுனரது என யாராவது ஒரு சிலரின் செயற்பாடுகள் அவர்களை வெருட்டுவதாக அல்லது கொடுமைப்படுத்துவதாக இருக்கலாம்.

வெருட்டப்படுவதால் வரும் நோய் அறிகுறிகள்

கொடுமைப்படுத்தல் அச்சுறுத்துதல், வெருட்டுதல் போன்றவை அந்தப் பிஞ்சு உள்ளங்களை எவ்வாறு பாதிக்கும்.

article-0-09D64E52000005DC-323_468x350

பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அதைப்பற்றி முறையிடத் தெரியாது. யாரிடம் முறையிடுவது எவ்வாறு முறையிடுவது போன்றவை அவர்களுக்கு சிக்கலாக இருக்கும். தங்களுக்கு நெருக்கமான தாய் தகப்பன், சகோதரங்கள், சகமாணவர்கள், ஆசிரியர் போன்றோர்களிலிருந்து வரும் அச்சுறுத்தலை இட்டு எங்கு முறையிடுவது என்பது புரியாது திகைப்பார்கள்.

இதனால் அவை உடல் நோயாக வெளிப்படலாம்.

அமெரிக்காவின் உயர்வகுப்பு மாணவர்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 20 சதவிகிதமானவர்கள் வெருட்டப்படுவதாக தெரிகிறது. ஓட்டிசம், உணவு ஒவ்வாமை, அங்கக் குறைபாடு பொன்ற பிரச்சனை உள்ள பிள்ளைகள் இதை எதிர்கொள்ள நேர்வது அதிகம் என்ற போதும் சாதாரண குழந்தைகளும் தப்ப முடிவதில்லை.

8626786_600x338

அடிக்கடியும், காரணம் விளங்காமலும் குழந்தைகளில் ஏற்படும் உடல் சார்ந்த அறிகுறிகள் பலவற்றிற்கும் அத்தகைய கொடுமைப்படுத்தல அல்லது வெருட்டல்கள் காரணமாக இருக்கலாம் என்கிறது அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று. இத்தாலியிலுள்ள University of Padua ல் பேராசிரியர் Gianluca Gini தலைமையில் செய்யப்பட்ட ஆய்வானது Pediatrics  Sept. 16 இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டு;ளது.

பாடசாலைப் பிள்ளைகளில்

14 நாடுகளிலுள்ள 220,000 பாடசாலை செல்லும் பிள்ளைகளிடையே செய்யப்பட்ட 30 ஆய்வுகளின் தரவுகளை இது உள்ளடக்குகிறது. அச்சுறுத்தலுக்கு அல்லது கொடுமைக்கு ஆளாகும் பிள்ளைகள் ஏனைய குழந்தைகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக தங்களுக்கு சுகமில்லை எனச் சொல்லுவார்கள். அதாவது உண்மையில் எந்தவொரு நலக்குறைவும் இல்லாத போதும் வருத்தம் சொல்வார்கள் என்கிறது இந்த ஆய்வு.

bullying-kids

பொதுவாக அத்தகைய பிள்ளைகள் சொல்லும் அறிகுறிகள் என்ன?

  • தலையிடி,
  • வயிற்றுவலி,
  • முதுகுவலி,
  • கழுத்து வலி,
  • தோள் மூட்டு உளைவு,
  • சுவாசிப்பதில் சிரமம்,
  • தசைப்பிடிப்புகள்,
  • ஓங்காளம்,
  • வாந்தி,
  • வயிற்றோட்டம்

போன்றவையே பொதுவான அறிகுறிகளாகும்.

இது மேலை நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வு என்றபோதும் இது போன்ற அறிகுறிகளுடன் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவர்களிடம் அழைத்து வருகிறார்கள்.

தலையிடி என்றால் மூளைக்குள் கட்டி என்றும், தலைப்பாரம் என்றால் சைனஸ் பிரச்சனையா என்றும் வயிற்று வலி என்றால் அப்பென்டிசைடிஸா அல்லது வேறு ஏதாவது ஆபத்தான நோயாக இருக்குமா எனப் பயந்தடித்து பிள்ளைகளை இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.

எப்பொழுதாவது ஒரு தடவை அத்தகைய அறிகுறிகள் வந்தால் அது உண்மையான நோயாக இருக்கலாம். ஆனால் அடிக்கடியும், காரணம் புலப்படாதபோது வந்தால் அது பிள்ளையின் மனதில் மறைந்துள்ள ஏதாவது ஒரு அச்சம் காரணமாக இருக்கலாம் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

‘காலையிலை வயித்துக் குத்தெண்டு வயித்தைப் பிடிச்சுக் கொண்டு படுத்துக் கிடந்தான். இப்ப இஞ்சை வரக்குள்ளை சுகமாக் கிடக்காம்’ என்று சில அம்மாக்கள் சொல்லுவார்கள்.

ஆம்! சில பெற்றோர்கள் இது நோயல்ல என ஓரளவு ஊகித்துக் கொண்டாலும் அதை தெளிவு படுத்துவதற்காக மருத்துவரிடம் வருவது உண்டு.

‘கள்ளம் செய்யிறான்’ என்று சொல்லி அவர்களை நக்கல் அடிக்கக் கூடாது. இவை பெரும்பாலும் தாங்களாகவே வேண்டுமெனத் திட்டமிட்டுச் செய்வதில்லை. மனதில் உறைந்திருக்கும் கிலேசம் நோயாக வெளிப்பட்டிருக்கும். அதை விளக்க அவர்களுக்கு தெரிவதில்லை.

‘பள்ளிக் கூடத்திலை ஆராலை உங்களுக்கு கரைச்சல்’ எனப் பேச்சோடு பேச்சாகக் கேட்டுப் பார்த்தால் அச்சுறுத்தல் எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாகக் கூடும்.

அச்சுறுதலும் கொடுமைப்படுத்தலும் பல வகைப்படலாம்

அச்சுறுதல் வேறு கிண்டல் பண்ணுதல் வேறாகும். பிள்ளைகள் விளையாடும்போது சகோதரங்களாலோ நண்பர்களாலோ கிண்டல் பண்ணப்படுவது சகசமானது.

bullying

விளையாட்டுதனமாகவும் நட்புறவுடனும் ஒருவருக்கொருவர் கிண்டல் அடிப்பதை பிள்ளைகள் வேடிக்கையாகவே எடுப்பார்கள். ஆனால் அது கேலி என்ற அளவைத் தாண்டி மனதைப் புண்படுத்துவதாக, இரக்கமற்றதாக கொடுமையானதாக மாறும்போது அது அச்சுறுத்தலாக மாறுகிறது.

கொடுமைப்படுத்தல் என்பது உடல் ரீதியானதாக மட்டும் இருக்கும் என்றில்லை.

  • அது கடும் வார்த்தைகளாகவோ உளரீதியாகவும் இருக்கலாம்.
  • அடித்தல்,
  • இழுத்தல்,
  • பட்டப் பெயர் வைத்து இழித்தல,
  • அச்சுறுதல்,
  • வெருட்டிப் பணம் கறத்தல்
  • அல்லது பொருட்களைப் பறித்தல் போன்ற பலவாகலாம்.
  • குறிப்பிட்ட பிள்ளையைப் புறக்கணிப்பதும், தவறான வதந்திகளைப் பரப்புவதும் ஆகலாம்.
  • இன்றைய காலத்தில்  குறும் தகவல்களாலும், பேஸ்புக் போன்ற சமூகதளங்கள் ஊடாகவும் மன உளைவையும் அச்சுறுத்தலையும் கொடுக்கலாம்.

200181253-001

‘பள்ளிப் பிள்ளைகள்தானே! இவற்றிக்கு முகம் கொடுத்து தாண்ட வேண்டியவர்கள்தானே’ என அலட்சியப்படுத்தக் கூடாது.

ஏனெனில் அது பிள்ளையின் சுயமதிப்பைப் பாதிப்பதுடன், அதனது பாதுகாப்பு உணர்வையும் பலவீனப்படுதும் அளவு தீவிரமானதாகும். சற்று வளர்ந்த பிள்ளைகளில் இது தற்கொலைக்கு கூட இட்டுச் செல்லலாம் என்பதை மனதில் இருத்தி எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெற்றோரின் கடமை

கொடுமை தாங்காத நிலை ஏற்பட்டு குழந்தை தானாகச் சொல்லுமளவு காத்திருக்கக் கூடாது. அல்லது கண்டல்கள் காயங்கள் என நிலமை மோசமாகும் வரை பொறுத்;திருக்கக் கூடாது.

அக்கறையுள்ள பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களே உசார்ப்படுத்திவிடும். பிள்ளை பதற்றமாக இருக்கக் கூடும்,

வழமைபோல உணவு எடுகாதிருக்கலாம், எரிச்சல்படலாம், எளிதில் கோபமுறலாம் தூக்கக் குழப்பம் ஏற்படலாம். இவற்றை எல்லாம் அவதானிக்க வேண்டும்.

Bullying_main_0425

வெட்கம் காரணமாகவோ, பிரச்சனை வெளிப்படுவதால் தான் மேலும் கொடுமைப்படுத்தப்படலாம் என்பதாலும் தனது பிரச்சனையை வெளிப்படுத்த பிள்ளை தயங்கக் கூடும். பெற்றோர்களில் தன்னில் குற்றம் கண்டு தன்னையே ஏசவோ அடிக்கவோ கூடும் எனவும் தயங்கலாம்.

எனவே ஆதரவோடும் அனுதாபத்துடனும் பெற்றோர்கள் அதை அணுக வேண்டும். தாங்கள் இவ்விடயத்தில் உறுதுணையாக இருப்போம். உதவுவோம் என்பதை தங்கள் பிள்ளைக்கு உணர்த்த வேண்டும்.

‘பலர் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். நீ தனியாக இல்லை. அச்சுறுத்தியவனே இழி செயலைச் செய்கிறான். நீ அல்ல’ என தெளிவுபடுத்த வேண்டும்.

இவ் விடயத்தில் ‘கவனம் எடுத்து சிக்கலைத் தீர்க்க வேண்டிய நடவடிக்கை எடுப்பேன்’ என நம்பிக்கை அளியுங்கள். பாடசாலை ஆசிரியர், அதிபர் அல்லது பொறுப்பானவருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தி மேலும் அவ்வாறு நிகழாதிருப்பற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுங்கள்.

சில தருணங்களில் அச்சுறுத்துபவனின் பெற்றோரை அணுகுவதும் உதவலாம். ஆயினும் நீங்கள் தனியாகச் செய்வதை விட பாடசாலை சார்ந்தவர்களின் உதவியோடு அணுகுவது நல்ல பலன் தரலாம்.

இவை எல்லாவற்றிகும் மேலாக தங்கள் பிரச்சனையை உங்களிடம் சொன்னால் நீங்கள் கோபிக்க மாட்டீர்கள். தட்டிக் கழிக்கமாட்டீர்கள். அனுதாபத்துடன் அணுகுவீர்கள். ஆதரவு தருவீர்கள் என்ற நம்பி;கையை உங்கள் பிள்ளையிடம் ஏற்படுத்துங்கள்.

இவ்வாறு செய்து குழந்தையிடமிருந்த அச்சத்தை விரட்டினால் அடிக்கடி தலையிடியும் வயிற்று வலியும் அணுகாது உங்கள் குழந்தைக்கு.

பாடசாலைக்கு கட் அடித்தல் இனி அதற்கு இல்லை. இல்லவே இல்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.00.0.0

Read Full Post »

 பிள்ளைகள் சாப்பிடுகிறார்கள் இல்லை என்பதே பல பெற்றோர்களின் ஆதங்கம்.

பெற்றோர்கள் இருவரும் வேலைக்குசெல்வதால் ஆன முறையில் சமைத்துக் கொடுக்க முடிவதில்லை என்பது மற்றொரு பிரச்சனை.

fruit smoothie

சிரமம்பட்டுச் சமைத்தாலும் பிள்ளைகளுக்கு அந்தச் சாப்பாடுகள் பிடிப்பதில்லை என்பதும் ஒரு சிக்கல்.

அதிகாலையில் பாடசாலை, திரும்பி வந்ததும் அவசரமாக எதையாவது வயிற்றில் திணித்துவிட்டு ரியூசனுக்கு ஓட வேண்டும்.

நின்று நிதானித்து ரசித்துச் சுவைத்துச் சாப்பிட நேரமும் இல்லை. அவர்களுக்குப் பிடித்த சாப்பாடும் வீட்டில் கிடையாது.

என்ன செய்யலாம்?

சமையலறையில்  காலத்தை வீணடிக்காமலே அவசரமாக அதே நேரம் சுவையாகவும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் தயாரித்துக் கொடுப்பதற்கான குறிப்புகளை அமெரிக்காவின் Academy of Nutrition and Dietetics தந்திருக்கிறது

  • உரித்த முழு வாழைப்பழத்தை யோகொட்டினுள் (yogurt) அமுக்கி எடுங்கள். அதை ஏதாவது crushed cereal அரிசிமாக் குருணல், அல்லது ரவை போன்ற ஒன்றில் போட்டு உருட்டி எடுங்கள். பிரிட்ஜில் வைத்து உறையவிட்டு பின் உண்ணக் கொடுங்கள். குளிரக் குளிர போஸாக்கான உணவு என்பதால் மறுக்காமல் விரும்பி உண்பார்கள்.

  •  பப்பாசி, மாம்பழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றின் குளிரவைத்த பழச்சாறை அரைக் கப் அளவு எடுங்கள், மீதி அரைக் கப்பிற்கு யோகட்டை எடுத்து நன்கு அடித்ரதுக் கலவுங்கள். சுவையான இந்த fruit smoothie குழந்தைகளுக்கு விருப்பமானதாக இருக்கும் அதே நேரம் போஜனை நிறைந்தது.

  • அலங்கார சான்விட்ச் . பிள்ளைகளுக்கு விருப்புடையதாக இருக்கும் வண்ணாத்துப் பூச்சி, டைனோசயர், இருதயம், நட்சத்திர வடிவிலான குக்கி கட்டரை உபயோகித்தால் விதவிதமாக அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம். பதனிடப்பட்ட இறைச்சி, கொழுப்புக் குறைந்த சீஸ், பாண் ஆகியவை கொண்டு செய்யலாம்.

  • பீநட் பட்டர், கோர்ன் பிளேக், பிறான்(Bran flake)  பிளேக் போன்ற யாவற்றையும் ஒரு கோப்பையில் இட்டு நன்கு கலவுங்கள். உருண்டையாக உருட்டி எடுத்த பின்னர் அவற்றை வறுத்த கச்சான், கடலை, அல்லது கஜீ குருணலில் உருட்டி எடுத்துச் சாப்பிடக் கொடுங்கள்.

நம்ம நாட்டிற்கு

இவை யாவும் பிரிட்ஜ் வசதியுள்ளவர்களுக்குத்தானே. இன்னமும் மின்சாரமும் பிரிட்ஜ்சும் கிடைக்காத குக்கிராமங்களில் உள்ளவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

பொரிச்ச அரிசிமா, உழுந்துமா புளுக்கொடியல்மா என எமது அம்மாக்கள், அம்மம்மாக்கள் தயாரித்து போத்தலி்ல் போட்டு வைத்திருந்துதான் பிள்ளைகளுக்கு அவசர உணவுகளைக் கொடுத்தார்கள்.

இன்றைக்கும் கூட இவற்றைத் தயாரித்து வைக்கலாம்.

நன்றி http://sinnutasty.blogspot.com/2008/07/blog-post.html

அவல் மற்றொரு சுலப உணவு. தேங்காயப்பூ சீனி போட்டுத் தயாரிக்கலாம். சற்றுப் போசனை அதிகம் வேண்டுமெனின் தயிர் அவலில் பழத்துண்டுகளைக் கலந்து கொடுக்கலாம்.

அவசரத்திற்கு புருட் சலட்டிற்கு ஐஸ்கிறீம் சேர்த்துக் கொடுக்கலாம். பழச்சத்துடன் பால் சீனி கலந்திருப்பதால் புரதம், இனிப்பு விற்றமின் அனைத்தும் அதில் கிடைக்கும்

ஹாய் நலமா புளக்கில் வெள்யான பதிவு மாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்

0.0.0.0.0.0.0

Read Full Post »

அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்

உங்களது குழுந்தை தலைவலி என அடிக்கடி சொல்கிறதா. அல்லது தலைவலியால் அவதிப்படுகிறதாக நீங்கள் உணர்கிறீர்களா?

57158970_kids_377x171

பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் தலைவலி பற்றிய அதீத கற்பனைகளுடன் பயந்தடித்து ஓடி வருவது வழக்கம். அதேபோல வயிற்று வலி, கால் வலி என வருவதும் உண்டு. இவை பெரும்பாலும் ஆபத்தான நோய்களால் வருவதில்லை.

சின்ன சின்னப் பிரச்சனைகளே பிள்ளைகளுக்கு இத்தகைய அறிகுறிகளை ஏற்படுத்துவதுண்டு. ‘சாப்பிடு சாப்பிடு’ என நச்சரிப்பதாலேயே பல பிள்ளைகள் வயிற்று வலி என்று சொல்லித் தப்பிக்க முயல்கின்றன. ‘படி படி’ என விடாப்பிடியாக மேசையில் உட்கார வைப்பதாலும் பிள்ளைகளுக்கு தலைவலி ஏற்பட்டுவிடலாம்.

தலைவலியைப் பொறுத்த வரையில், பொதுவாக  பெரியவர்களை விட குறைவாகவே குழந்தைகளுக்கு வருகிறது. அடிக்கடி வருவதும் இல்லை. வந்தாலும் கடுமையாக இருப்பதில்லை.

தலைவலி வந்தாலும் பெரும்பாலும் மந்தமானதாகவே இருக்கும். இருந்தபோதும் சில குழந்தைகளுக்கு கடுமையான துடிக்க வைக்கும் தலைவலி வரவும் கூடும்.

தலைவலி இருக்கிறதா என அடிக்கடி பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாலும் காரணமின்றியும் வந்துவிடும். கேட்டு அறிவதைவிட குழந்தைகளின் நடத்தையை அவதானித்து அவர்களுக்கு நோயிருக்கிறதா என்பதை அறிபவர்களே சிறந்த பெற்றோராக இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?
Nemoursஅறக்கட்டளையானது குழந்தைகளுக்கு தலைவலி தூண்டப்படுவதற்கு பின் வரும் பொதுவான காரணிகளைக் குறிப்பிடுகிறது.

  • போதுமான தூக்கம் இல்லாமை, அல்லது வழமையான தூங்கும் வழக்கங்களில் திடீரென மாற்றம் ஏற்படுவது ஒரு காரணமாகும். நேரங்கடந்து தூங்கச் செல்வது அல்லது இடையில் முழித்து எழ நேரல், வழமையான நேரத்திற்கு முன்னரே எழ நேருதல்.
  • சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமை, பசியோடு இருத்தல், போதிய நீராகாரம் இன்றி உடல் நா உலர்தல் போன்றவையும் தலைவலியைத் தூண்டலாம்.
  • ஏதாவது மன அழுத்தங்களும் காரணமாகலாம்.
  • நீண்ட நேரமாக கணனியாடு இருத்தல் அல்லது தொலைக்காட்சி பார்ப்பதும் வேறு காரணங்களாகும்.
  • தலையில் லேசாக அடிபடுதல், காயம் ஏற்படுதல் ஆகியவையும் தலைவலியைக் கொண்டு வரலாம்.
  • தடிமன், காய்ச்சல், டொன்சிலைடிஸ், சீழ்ப்பிடித்த புண் போன்ற சாதாரண தொற்று நோய்கள்.
  • கடுமையான மணங்களை நுகர நேர்ந்தாலும் ஏற்படலாம். வாசனைத் திரவியங்கள் (Pநசகரஅநள), பெயின்ட் மணம், சாம்பராணி மணம் போன்றவை சில உதாரணங்களாகும்.
  • குழந்தைகள் வளருகின்றன. இதன்போது அவர்கள் உடலில் பலவிதமான ஹோர்மோன் மாற்றங்கள் நேர்கின்றன. இவையும் தலைவலியைத் தோற்றலாம்.
  • காரில் நீண்ட நேரம் செல்ல நேரும்போதும் சில குழந்தைகளுக்கு தலைவலி ஏற்படுகிறது.
  • புகைத்தல். வீட்டில் தகப்பன், உறவினர்கள் புகைக்கக் கூடும். அல்லது பொது இடங்களில் யாராவது புகைக்கக் கூடும். இது தன்செயலின்றிப் புகைத்தலாகும். இதுவும் இன்னொரு காரணமாகும்.
  • கோப்பி, கொக்கோ போன்ற கபேன் கலந்த பானங்களை அருந்துவதும் தலைவலியை அவர்களில் ஏற்படுத்தவதாகச் சொல்லப்படுகிறது.
  • சில மருந்துகள் எடுப்பதும்

மூளைக்குள் கட்டி வளர்தல், உயிராபத்தான தொற்று நோய்களால் போன்றவற்றால் குழந்தைகளுக்கு தலையிடி வருவது குறைவு. எனவே எடுத்த எடுப்பில் கடுமையான நோய்களை நினைத்து மனத்தைக் குளப்பிக் கொள்ள வேண்டாம்.

மருத்துவரை நாட வேண்டியது எப்போது?

இருந்தபோதும் எத்தகைய  நிலையில் மருத்துவரை அணுக வேண்டும் எனத் தெரிந்திருப்பது நல்லது.

  • தலையில் கடுமையான அடிபடுதல், காயம் ஆகியவற்றைத் தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால்.
  • தலையிடி மிகக் கடுமையாக இருப்பதுடன் கீழ்க்கண்ட அறிகுறிகள் சேர்ந்திருந்தால்.

1.    வாந்தியெடுத்தல்
2.    பார்வையில் மாற்றம், இரண்டாகத் தெரிதல்
3.    கழுத்து உழைவு, கழுத்து விறைப்பு
4.    குழப்பமான மனநிலை
5.    சமநிலை பாதிப்பு
6.    கடுமையான காய்ச்சல்

  • தலையிடியானது குழந்தையின் தூக்கத்தைக் குழப்பமாக இருந்தால் அல்லது காலையில் கண்விழித்து எழும்போதே தலைவலி இருந்தால்.
  • 3 வயதாகும் முன்னரே அத்தகைய தலைவலி ஏற்பட்டால்

பொதுவான காரணத்தைக் கண்டறிந்து நீக்குவதிலேயே பெரும்பாலும் தவலவலித் தொல்லை குழந்தைக்கு நீங்கிவிடும்.
வைத்தியரை நாடி ஓடும் முன்னர் இவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0.0

Read Full Post »

>கற்கை ஆற்றலையும் பாதிக்கும் குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல்

“தேச்சுத் தேச்சு இவன்ரை மூக்கு வீங்கிப் போச்சு எப்ப பாத்தாலும் தும்மலும் சளியும் தான்’ எனச் சலித்தார் அம்மா.

சினத்து வீங்கிய முகத்துடன் நின்ற சின்னப் பையனின் மூக்கிலிருந்து வழிந்த சளி அசிங்கமாகத் தோற்றமளித்தது. சோர்வு அவனது முகம் முழுவதையும் விழுங்குவது போல அப்பிக் கிடந்தது. உடலின் சக்தி அனைத்தும் உறிஞ்சப்பட்டவன் போல களைப்புடன் இருந்தான்.

ஆம், ஒவ்வாமை மூக்கால் வடிவது (Allergic rhinitis) என்பது வெறுமனே அரிப்பும், தும்மலும் நிறைந்த மூக்கு மட்டுமல்ல. தானே வழிந்து முடியட்டும் என அலட்சியப்படுத்தக்கூடியதும் அல்ல. உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினையாகும்.


எந்த வயதினருக்கும் இப்பிரச்சினை ஏற்படக்கூடும். ஆயினும் குழந்தைகளில் இதன் பாதிப்பு அதிகமாகும். இது விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் குழந்தையின் உடல் நலம் சிறப்பாக இருக்காது.

அதன் கற்கை ஆற்றல், கிரகிக்கும் திறன் ஆகியவற்றைப் பாதிக்கும். சுலபமாக மூச்சு எடுத்து வெளிவிட முடியாததாலும் அரிப்பு, தும்மல் போன்றவை ஏற்படுவதால் தூக்கத்தையும் கெடுக்கும். தூக்கம் கெட்டால் மறுநாள் உற்சாகமாக செயற்பட முடியாது என்பது வெளிப்படை. இவை காரணமாக பிள்ளை தனது முழு ஆற்றலையும் பயன்படுத்த முடியாது. பாடசாலையில் பின்தங்கக்கூடிய நிலையும் ஏற்படலாம்.

மூக்கால் ஒழுகும் பிள்ளை என சக மாணவர்களின் ஏளனத்திற்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாவதால் குழந்தையின் மனம் சோர்வடைந்து பள்ளி செல்லுவதற்கும் கற்பதற்குமான ஆர்வத்தைக் கெடுத்து விடலாம்.

அதற்கு மேலாக அழற்சியடைந்த மூக்கின் மென்சவ்வுகள் காரணமாக யூதெசியன் ரியூப், காற்றறைகள் ஆகியவையும் அழற்சியடைவதால், காது அடைப்பு, காதுக் குத்து, சைனசைரிஸ் போன்ற நோய்களும் அடிக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

ஆஸ்மா ஏற்படுவதற்கான வாய்ப்பும் ஒவ்வாமை மூக்கால் வடியும் நோயாளிகளுக்கு அதிகமாகும்.

எனவே பெற்றோர்களும், பாடசாலை ஆசிரியர்களும் அலட்சியப்படுத்தாது இவர்களது பிரச்சினையை வைத்திய ஆலோசனைக்கு அனுப்புவது நல்லது.

இதைத் தடுக்க என்ன செய்யலாம்?

ஒவ்வாமை உள்ள பொருளுடன் தொடர்பு கொள்ளாதிருப்பதே ஒரே வழியாகும். படுக்கைப் பூச்சி, தூசிப் பூச்சி, மகரந்தம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் போன்ற பலவும் காரணமாகலாம். எனவே அவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

தலையணை, படுக்கை, படுக்கை விரிப்பு போன்றவற்றை அடிக்கடி தோய்ப்பதுடன், வாரத்திற்கு இரண்டு தடவையாவது வெயிலில் காயப்போட வேண்டும். நுளம்பு வலை, துணியாலான கால்மிதி, திரைச்சீலை போன்றவற்றையும் அவ்வாறே சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ரோமம் உள்ள பொம்மைகள், கதிரை விரிப்புகள் ஆகியவற்றை அகற்றுங்கள் அல்லது வக்கியூம் கிளீனரால் (Vacuum Cleaner) சுத்தப்படுத்துங்கள்.

பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை அடிக்கடி குளிக்கவார்த்து சுத்தமாக வைத்திருப்பதுடன், படுக்கை அறைக்குள் நுழைய விடாதீர்கள். பலரும் நினைப்பது போல அவற்றின் ரோமம் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. அவற்றின் உதிர்ந்த சருமத்துகள்களும் எச்சில் மற்றும் காய்ந்த சிறுநீருமே ஒவ்வாமையை ஏற்படுத்தி மூக்கால் வடிவதைத் தூண்டுகிறது.

கரப்பொத்தான் பூச்சியை ஒழியுங்கள். தூசி தட்டுவதற்குப் பதிலாக ஈரத்துணியால் சுத்தப்படுத்துங்கள்.

மருத்துவத்தைப் பொறுத்தவரையில் அலர்ஜிக்கு எதிரான (Antihistamine) மாத்திரைகள் உதவும். லொராடடீன், டெஸ்லொராடடீன் போன்ற புதிய பரம்பரை மாத்திரைகள் அதிக தூக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் பாடசாலை செல்லும் பிள்ளைகள் மற்றும் வேலைக்குச் செல்பவர்களும் உபயோகிக்கக் கூடியதாகும்.

இவற்றுடன் மூக்கிற்கான விசிறி மருந்துகளும் (Steroid Nasal Spray) மிகுந்த பலன் அளிக்கக் கூடியதாகும்.

இவற்றைத் தனித்தனியாகவோ அன்றி இணைத்தும் உபயோகிக்கலாம். இவற்றை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். இவை பாரிய பக்க விளைவுகள் அற்றவை யாதலால் அவ்வாறு மாதக் கணக்கில் உபயோகிப்பது ஆபத்தற்றது.

இத்தகைய நோயுள்ள பலருக்கும் மூக்கின் உள்ளே இருக்கும் குருத்தெலும்பான Inferior Turbinates வீக்கமடைவது உண்டு. இது கடுமையாக வீக்கமடைந்து சுவாசத்தையும் பாதிப்பதாக இருந்தால் ENT Surgeon யை சந்திக்கவேண்டி நேரலாம்.

எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல்.

Read Full Post »

>உங்கள் குழந்தை அழுகிறது.
வீறிட்டுக் கத்துகிறது!
ஏதேதோ செய்து சமாதானப்படுத்த முயல்கிறீர்கள்.

ஆயினும் அது அழுகையை நிறுத்துவதாக இல்லை. ஏன் அழுகிறது என்பது உங்களுக்குப் புரியவில்லை.

எல்லாக் குழந்தைகளும்தான் அழுகின்றன.

ஆனால் இது மற்றொரு குழந்தை அல்ல.

இதன் கண்ணீர் உங்களுக்கு முக்கியமானது. இது உங்கள் உதிரத்தின் உற்பத்தி. அதன் கண்ணீர் துயரளிக்கிறது.

ஏதாவது செய்ய வேண்டும் என மனம் துருதுருக்கிறது. உங்களால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டீர்களே என மூளை அறிவுறுத்துகிறது.

இன்னமும் குழந்தை அழுது கொண்டே இருக்கிறது. எதையாவது தப்பவிட்டுவிட்டேனா என்ற குற்ற உணர்வு மேலெழுகிறது.

பதற்றப்படாதீர்கள்.

சற்று நிதானமாக யோசியுங்கள்.

அடிப்படை விடயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

*குழந்தைக்கு பசி எடுத்திருக்கக் கூடும்.
*அல்லது பாலுடன் புகுந்த காற்று ஏப்பமாக வெளியேறாது வயிற்றில் மந்தமாக இருக்கக் கூடும்.
*நப்பி நனைந்து அசௌகர்யமாக உணரக் கூடும்.
*சற்று அசதியாக இருந்து தூக்கத்தை நாடுவதாகவும் இருக்கலாம்.
*நீண்ட நேரம் படுத்திருந்ததால் அலுத்த குழந்தை மாறுதலுக்காக உங்கள் மடியை அல்லது தள்ளு வண்டியை நாடுவதாக இருக்கலாம்.

*இவை எதுவுமின்றி உங்கள் அன்பை, அருகாமையை, அரவணைப்பை நாடுவதாக உங்கள் கவனத்தை தன் மீது ஈர்ப்பதற்காகவும் இருக்கலாம்.

ஏனெனில் அழுகை அதன் மொழி. இப்பொழுது அது மட்டுமே தொடர்பாடல் ஊடகமாகிறது. அதன் மூலம் உங்களுக்கு தனது விருப்பத்தை உணர்த்த முயல்கிறது.

மேற் கூறிய எதுவுமே இல்லாவிட்டால், உடல் ரீதியான பிரச்சனை ஏதும் இருக்கறதா எனப் பாருங்கள். குழந்தைக்கு சற்றுக் காய்ச்சல், வயிற்றோட்டம், சளி, இருமல் போன்ற ஏதாவது சிறு வருத்தங்கள் இருப்பதாலும் அழக் கூடும் அல்லவா?

அவை யாவுமே சரியாக இருந்தால் அடுத்து என்ன செய்வது என்ற கவலை உங்களை ஆட்கொள்ளும். எதைச் செய்தாவது உங்கள் செல்லத்தின் கண்ணீரை நிறுத்த வேண்டும் என்ற ஆவேசம் எழும்

முக்கியமானது உங்களை நீங்களே நிதானப்படுத்த வேண்டியதுதான்.

*நிதானமாக ஆழ மூச்சு எடுங்கள்.
*ஒன்று இரண்டு எனப் பத்து வரை மெதுவாக எண்ணுங்கள்.
*’ஒன்றுமில்லை கண்ணா’ என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகளை குழந்தைக்கு சொல்லுங்கள்.
*மீண்டும் மீண்டும் தடவிக்கொண்டே சொல்லுங்கள்.

*என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே, அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் ஆற்றல் எனக்கில்லையே எனக் குற்ற உணர்வற்கு ஆட்படுவதைத் தவிருங்கள்.

சில தருணங்களில் காரணம் ஏதும் இன்றிக் கூட குழந்தைகள் அழுவதுண்டு என்பதை மனதில் புரிந்து கொண்டால் மனம் ஆறும்.

அந்தச் சூழலிலிருந்து உங்கள் மனத்தை பிரித்து எடுங்கள்.

மென்மையான இசை பின்னணியில் ஒலித்தால் உங்கள் மனத்தில் உள்ள நிராசை விலகி நம்பிக்கை பிறக்கும். குழந்தையும் இசையில் இணங்கக் கூடும்.

கணவர், அம்மா, அப்பா, சகோதரம், பாட்டி போன்ற ஒருவரின் பாதுகாப்பில் உங்கள் குழந்தையை சற்று நேரம் விட்டுவிட்டு சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

எந்த உதவியும் கிட்டாவிட்டால் குழந்தையை பிராமில் அல்லது தொட்டிலில் பாதுகாப்பாக விட்டுவிட்டு மற்றொரு அறைக்குச் சென்று சற்று ஆறுதல் எடுங்கள். குழந்தை சற்று அழுவதை கவனத்தில் எடுக்காது உங்கள் மனத்தை நிதானப்படுத்துங்கள்.


இவை எதுவும் சரிவராவிட்டால் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அல்லது தள்ளு வண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டு முற்றத்தில் உலாவுங்கள். வெளியே காற்றாற உலாவப் போவதும் உதவக் கூடும்.


ஷொப்பிங் கொம்பிளக்ஸ் அருகில் இருந்தால் குழந்தையுடன் ஒரு நடை போய் வாருங்கள். புதிய சூழல் உங்கள் இருவருக்குமே புத்துணர்ச்சி அளிக்கும்.

சிறுகுழந்தை உள்ளவர்களுக்கு போதிய தூக்கமின்மை பெரும் பிரச்சனையாகும். குறைந்த தூக்கம் உடலையும் மனத்தையும் அலுப்படையச் செய்துவிடும். குழந்தை அழுவது போன்ற சாதாரண பிரச்சனைகளைக் கூட சமாளிக்க முடியாமல் செய்துவிடலாம். எனவே போதிய தூக்கம் உங்களுக்கு முக்கியம்.


குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்கி ஓய்வு எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யக் கூடாதது ஒன்று உண்டு!

குழந்தையை அமைதிப்படுத்துவதாக அல்லது அதற்கு விளையாட்டுக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு வேகமாக ஆட்டவோ, உலுப்பவோ, தூக்கிப் போடவோ முயல வேண்டாம்.

குழந்தைகளின் கழுத்துத் தசைகள் பெலவீனமானவை. தமது தலையை தாம் தூக்கி நிறுத்தவே சிரமப்படுபவை. கடுமையாக தூக்கிப் போட்டு ஆட்டினால் கழுத்து எலும்புகள் விலகலாம். அதனால் வலிப்பு, பார்வையிழப்பு, உறுப்பு செயலிழப்பு போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே குழந்தையை மெதுமையாக பூப்போலக் கையாளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>படுக்கையிலேயே குழந்தை சிறுநீர் கழிக்கிறதா?

“இவளால பெருந்தொல்லை! நாளாந்தம் படுக்கையிலை மூத்திரம் பெய்யிறாள். படுக்கை பாயை ஒவ்வொரு நாளும் கழுவி என்ரை நாரி முறிஞ்சு போட்டுது’ என்றாள் அம்மாக்காரி.

இதைக் கேட்டதும் குழந்தையின் முகம் கறுத்தது.

மேசையிலிருந்த பிரஸர் மீற்றரின் பம்மை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த கை தளர்ந்தது.

டென்சனானது போல உடல் இறுகியது.

7 வயது மதிக்கத்தக்க அக் குழந்தையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்கள் எனது மனதை அரித்தன.

மருத்துவர்களுக்கு சாதாரணமாகவும் வீட்டிலுள்ளவர்களுக்கு அரியண்டம் கொடுப்பதாகவும் தென்படக் கூடிய இப்பிரச்சினை குழந்தையின் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை இச்சம்பவம் மூலம் உணரக் கூடியதாயிற்று.

தாயினதும் மற்றவர்களின் கண்டிப்புகள், கண்டனங்களாலும் ஏளனப்படுத்தலாலும் இத்தகைய குழந்தைகளின் உள்ளம் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவதை அவர்கள் உணர்ந்தாலே பிரச்சினையின் தாக்கத்தில் பெரும்பகுதி நீங்கிவிடும் போலத் தோன்றியது.

இது பற்றிய ஆய்வின் முடிவை பிறகு கூறுகிறேன்.


படுக்கையை நனைத்தல் (Bed Wetting) என்பது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனையாகும். மருத்துவத்தில் இதனை (Nocturnal Enuresis) எனவும் அழைப்பர்.

4 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30 சதவீதமும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதமும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 3 சதவீதமும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஒரு சதவீதமும் இப்பிரச்சினையால் துன்பப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே பாதிக்கப்படுவது அதிகம்.

ஒரே குடும்பத்தில் காணப்படுவது அதிகம்.

குழந்தைகள் முதிர்ச்சியடைவது சற்று காலதாமதமாதல் இது ஏற்படுவதாக நம்பப்படுகிறது. எனவே, கால ஓட்டத்தில் தானாகவே மறைந்துவிடும். மாறாக சிறுநீரக தொற்றுநோய்களாலும் ஏற்படலாம். அரிதாக கட்டிகள், பிறவியிலே உறுப்புகளில் இருந்த அசாதாரண நிலைகள், நீரிழிவு போன்றவையும் காரணமாவதுண்டு.

பொதுவாக 6 வயதாகும் வரையில் எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. தானாகவே குணமாகிவிடும்.

அதன் பின் பலவிதமான முயற்சிகள் மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டு வருகின்றன. படுக்கைக்குப் போகு முன் குழந்தையை சிறுநீர் கழிக்கச் செய்தல், படுக்கப் போவதற்கு முன்னதான 2 – 3 மணி நேரத்திற்குள் நீராகாரம் அருந்துவதைக் கட்டுப்படுத்தல், சிறுநீர் கழித்த, கழியாத தினங்கள் பற்றிய அட்டவணையைப் பேணுவது, படுக்கையை நனைக்காத நாட்களுக்கு பரிசளித்தல் போன்றவை சில.

“உனது தவறினால் இது நிகழவில்லை. வளர வளர இது சரியாகிவிடும்’ என குழந்தைக்கு அடிக்கடி நம்பிக்கையூட்டுவதையும் பல மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.

ஆனால், அண்மையில் செய்யப்பட்ட ஆய்வானது தூங்கிய இரு மணி நேரத்தில் குழந்தையை எழுப்பி, கழிவறைக்குக் கூட்டிச் சென்று சிறுநீர் கழிக்க வைப்பது மட்டுமே போதுமானது என்கிறது. இது பற்றிய விபரம் Journal Watch Pediatrics and Adolescent Medicine May 20, 2009 இதழில் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து நாட்டில் 4-5 வயதான வாரத்தில் இரண்டிற்கு மேற்பட்ட தடவைகளில் படுக்கையை நனைக்கும் 570 பிள்ளைகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது.

குழந்தைகள் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டனர். முன்பு கூறியவாறு தூங்கிய இரு மணி நேரத்தில் குழந்தையை எழுப்பி கழிவறைக்குக் கூட்டிச் சென்று சிறுநீர் கழிக்க வைப்பது, அதேபோல எழுப்பிச் செல்லும் போது குழந்தை உண்மையில் முழித்துவிட்டதா என்பதை அறிய முன்பே சொல்லி வைத்த குறிச்சொல்லை (Password) கேட்பது, படுக்கை நனைத்த, நனைக்காத தினங்கள் பற்றிய அட்டவணையை பேணிப் பரிசளிப்பது ஆகியன அப்பிரிவுகளாகும்.

ஆறு மாதங்களின் பின்பு எதுவுமே கேட்காது சிறுநீர் கழித்த குழந்தைகள் மற்றக் குழந்தைகளை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பது அவதானிக்கப்பட்டது.

இந்த ஆய்விலிருந்து கற்றுக்கொள்ளக் கூடியது என்ன?

படுக்கையை நனைப்பதற்காக பிள்ளைகளைத் தண்டிக்காது, நனைக்காதிருப்பதற்காக பரிசளிக்காது, குறிச்சொல்லைக் கேட்டு அவர்களைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்காது இயல்பாக நடத்தினால் விரைவில் குணம் கிடைக்கும் என்பது தானே.

ஆம். இது இயல்பான பிரச்சினை. அவர்கள் வேண்டுமென்று செய்வதில்லை. அவர்கள் முதிர்ச்சியடையப் பிந்துவதால் ஏற்படுகிறது. தானாகவே மாறும். அவர்களைத் தண்டிக்காதீர்கள். ஆதரவோடு நடத்துங்கள். ஆனால், அன்போடு நடத்துவதாக எண்ணி தாழ்வு மனப்பான்மையையும் குற்ற உணர்வையும் தூண்டாதீர்கள்.

ஆனால், இவற்றுக்கு மேலாக Bed – wetting alarm போன்ற உபகரணங்களும் மற்றும் மருந்து வகைகளும் உண்டு. அவற்றின் பயன்பாடும் பலன்களும் மட்டுப்படுத்தப்பட்டதே.

டாக்டர் எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல் 22.06.2009

Read Full Post »