Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கூத்துக்கலை’ Category

நண்பர் பா.இரகுவரன் அவர்கள் தான் செய்ய ஆய்வுகளின் பலனாகவும் தான் தாயாரித்து மேடை ஏற்றிய செட்டிய வர்தகன் என்ற நாட்டுக் கூத்த அனுவங்களாலும் வடமராட்சிய நாட்டுக் கூத்துக்கள் என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

Scan_20160319
அந் நூலுக்கு நான் எழுதிய வாழ்த்துரை இது.

வாழ்த்துரை

நாளந்தம் மனதார வாழ்த்திக் கொண்டிருக்கும் நண்பனது நூலுக்கு வாழ்த்துரை வழங்குவது எத்துணை சிரமமானது என்பதை எழுத்தில் வடிக்க முனையும் போதுதான் புரிந்தது. எதை எழுதுவது எதை விடுவது எனத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.

பல்துறை ஆற்றல் மிகு ஆசிரியனாக இன்று கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் இரகுவரன் முதன் முதலாக அறிமுகமானது எத்தனையாம் வருடத்தில் என்பது நினைவில் இல்லை. ஆயினும் உயர் வகுப்பு மாணவனாக என்பது மட்டும் நிச்சயம். அறிமுகப்படுத்தி வைத்தது நண்பர் குலசிங்கம் அவர்கள். தீவிர இலக்கிய ஈடுபாடுபாடு கொண்ட மாணவன் என்ற அறிமுகத்தோடு.

முதல் அறிமுகத்திலேயே அவரது அமைதியும் துருவி அறிய முனையும் விஞ்ஞான நோக்கும், பரந்த ஆர்வங்களும், நிறைந்த இலட்சியங்களும் அவர் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தின. ஆசிரிய கலாசாலை மாணவனாக, நாடகத்துறை பட்டதாரியாக, ஆசிரியராக, பலராலும் மதிக்கப்படும் சமூகத் தலைவனாக அவரது வளர்ச்சிக்கு மூன்று தசாப்தங்களாக சாட்சியாக இருக்க முடிந்திருக்கிறது.

‘வடமராட்சியில் கூத்துக் கலை’ எனும் இந்த நூலை எழுதும் இரகுவரன் தனது வாழ்வில் எத்தனை வேறுபட்ட பாத்திரங்களை வகித்திருகிறார், தொடர்ந்தும் வகித்து வருகிறார் என்பதை யோசித்துப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.

ஆற்றல் மிகு விஞ்ஞான ஆசிரியனாக, நூலகப் பொறுப்பாளராக, சிறுகதை ஆசிரியனாக, தேர்ந்தெடுத்து படிக்கும் நல்ல வாசகனாக, கவிஞனாக, நாடக பிரதி எழுத்தாளராக, நாடக நெறியாள்கையாராக, நடிகனாக, சமூக ஆய்வாளனாக, புகைப்படக் கலைஞராக இன்னும் இன்னும் …

Scan_20160319 (3)

எமது சமூகத்தின் பண்பாட்டு பாரம்பரியங்களையும், வரலாற்றையும், வரலாற்று சின்னங்களையும் தேடி அலைந்து கண்டறிவதிலும், ஆராய்வதிலும், அவற்றை ஆவணப்படுத்துவதிலும் இவருக்குள்ள ஈடுபாடு அளப்பரியது.

இதன் பயனாக பல நூல்களையும் கட்டுரைகளையும் ஏற்கனவே எழுதியுள்ளார். ‘பருத்தித்துதறை ஊராம்’, ‘கல்லூரி நாடகங்கள்’, ‘ஊரும் வாழ்வும்’ பண்டைத் தமிழர் நாடகங்கள், சீன யப்பானிய பாரம்பரிய நாடகங்கள் ஆகியன இதுவரை வெளிவந்த நூல்களாகும்.

தனது தாயாரின் அந்தியட்டி மலரை- கல்வெட்டை- ‘பிராமண வீதி சரித்திரம்’ என்ற ஒரு ஆய்வு ஆவணமாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் சில அந்தியேட்டி மலர்களில் பல விடயங்களை ஆவணப்படுத்தியும் வருகிறார்.

உற்றார் உறவினரது புலம்பல்களினாலும், தேவார திருவாசகங்களாலும், வலிந்து நிரப்பப்பட்டு, அந்தியட்டி மண்டப கதிரைகளிலேயே அநாதரவாகக் கைவிடப்படும் கல்வெட்டுகள் நிறைந்த கால கட்டத்தில் இவரது தயாரின் கல்வெட்டானது எதிர்காலச் சந்ததியினரும் தேடிப் பாதுகாக்க வேண்டிய ஆவணமாக அமைந்தமை இவரது ஆழ்ந்த சமூக பற்றின் வெளிப்பாடாகும்.

பேஸ்புக் என்பது ஒரு சமூக வலைத்தளம். பெரும்பாலனவர்கள் அதனை வெறும் பொழுதுபோக்கிற்காகவே பயன்படுத்துகிறார்கள். ஆயினும் இரகுவரன் தனது சமூக உணர்வையும், வரலாற்றை ஆவணப்படுத்தும் ஊடாகக் கருவியாகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறார். இது பெருமைக்குரியது.

‘சூரியனும் கறுத்துப் போச்சு’ என்று சிரித்திரனில் இவர் எழுதிய சிறுகதை இரு தசாப்தங்கள் கடந்துவிட்டபோதும் ஞாபகத்தில் நிற்கிறது.
போர் சூழ்ந்து வாழ்வில் இருள் முடிக் கிடந்த 90களில் பருத்தித்துறை நண்பர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதில் இரகுவரனின் அர்ப்பணிப்பு அளப்பரியது. அறிவோர் கூடல் என்ற மாதந்த இலக்கிய செயற்பாடுகளுக்கு நண்பர் குலசிங்கத்துடன் இணைந்து பங்களிப்பு வழங்கியதுடன் நிற்காது தனது கூத்து முயற்சிகள் ஊடாகவும் ஒளியூட்டினார்.

நண்பர் குலசிங்கத்து வீட்டு முற்றதில் கூத்துக் களரி அமைத்து இரவில் விழா நடத்தியதும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் தேடி வந்து கலந்து கொண்டு பாராட்டியதும் நேற்று நடந்தது போல பசுமையாக இருக்கிறது.

இரகுவரனது இந்த ஆவணப்படுத்தும் நூலாக்க முயற்சிக்கும் என்றென்றும் போல எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>தொலைக்காட்சி எனது தேர்வுக்குரிய பொழுது போக்காக என்றுமே இருந்ததில்லை.
ஆயினும் முன்னொரு காலத்தில் பாலு மகேந்திராவின் கதைநேரம் ஆர்வத்திற்குரியதாக இருந்தது.

இப்பொழுது ஜெயா ரி.வீயில் ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியை இயன்றவரை தப்பவிடுவதில்லை.
படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்க முடியும் என்பதற்கு மேலாக படம், அதன் பின்னணி பற்றிய சுவார்ஸமான தகவல்களை சுஹாசினி தருவார்.

வேலையை இயன்றவரை நேரத்திற்கு முடித்துக்கொண்டு வந்து மதிய உணவுடன் நிகழ்ச்சியைப் பார்ப்பது பிடிக்கும். வழமையாக தமிழ்ப் படங்களையே பேசி வந்த சுஹாசினி இப்பொழுது இந்திப் படங்கள், உலக சினிமா என்று வலம் வர ஆரம்பித்ததும் இன்னும் அதிகமாகப் பிடிக்கிறது.

அண்மையில் அவர் ஒரு குறும் படத்தையும் அறிமுகப் படுத்தியிருந்தார். அதிலிருந்து சில காட்சிகளையும் காண்பித்தார். மிகுந்த கலைநேர்த்தி உள்ள படம். அதற்கு மேலாக அதன் சமூகப் பார்வை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அது என்னைக் கவர்ந்ததற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்திருக்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு
நண்பர் பா.இரகுவரன் முயற்சியால்
‘செட்டி வர்த்தகன்’ என்ற
வட்டக்களரிக் கூத்து
பருத்தித்துறை து.குலசிங்கத்தின்
வீட்டின் பெரிய முற்றத்தில் அரங்கேற்றப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக சமூகம் உட்பட பல அறிஞர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டனர். அதனைச் செயற்படுத்திய அறிவோர் கூடலில் நானும் முக்கிய அங்கத்தவராக இருந்தேன்.

சுஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில் சில காட்சிகளை மட்டுமே பார்க்க முடிந்தது. முழுக் குறும்படத்தையும் பார்க்க முடியாத நிலை. இங்கு எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கவலை ஏற்பட்டது.

நேற்று இரவு திடீரென அதிர்ஸ்டக் காற்று என் பக்கம் விசியது. இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த நான் YouTube ல் சென்று தமிழ்க்குறும் படங்கள் எனத் தட்டியதும் கர்ண மோட்சம் முதல் தெரிவாக வந்தது.

இந்திய அரசின் தேசிய விருது முதல், தமிழக அரசின் சிறந்த குறும்பட விருது, கனடாவின் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது என 60க்கு மேற்பட்ட விருதுகள் பெற்ற குறும் படம் இதுவாகும்.

கேரளா சர்வதேச திரைப்பட விழா, ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிலும் பரிசுகளைப் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை இரண்டு பாகங்களாக ஓடுகிறது. லுழரவுரடிந ல்.  பரிசுகள் பெற்ற காரணத்திற்காக  மட்டும் பார்க்க வேண்டிய படம் அல்ல இது .

கோவிந்தன் என்ற ஒரு கூத்துக் கலைஞனினதும் அவனினது 10 வயது மகன் கதிரின் வாழ்வின் ஒரு நாள் நிகழ்வையும் அற்புத காட்சியாகப் படமாக்கியுள்ளார்கள்.

பட்டணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கூத்து நடத்துவதற்காக வருகிறார் மகனுடன். மகனுக்கு கிரிக்கட் பட் வாங்கும் ஆசை. கூத்து ஆடிப் பெறும் பணத்தில் வாங்கித் தருவதாகச் சொல்லி மகனையும் அழைத்து வந்துள்ளார்.
வந்த இடத்தில் பாடசாலை பூட்டிக் கிடக்கிறது. பாடசாலை இயக்குனர் இறந்துவிட்டதால் பூட்டிக் கிடக்கிறதாம்.

கையில் காசில்லை. பசியில் இருக்கும் மகனுக்கு சாப்பிடக் கொடுக்க முடியவில்லை. ‘ஒன்னரை ரூபாவிற்கு’ ஒரே ஒரு இட்லி வாங்கிக் கொடுத்து விட்டு குடிக்கத் தண்ணீர் கேட்கப் போக கடைக்காரனும் அவமதித்துவிடுகிறான்.

கிட்டத்தட்ட மறைந்தொழிந்து போகும் நிலையில் இருக்கிறது இந்த கூத்துக் கலை. எமது பாரம்பரிய கலை வடிவை இன்று மட்டும் காப்பாற்றி வருகிற அந்தக் கலைஞர்கள் வறுமையில் வாடுகிறார்கள்.

வீதியில் வீசி எறிந்து கிடக்கும் காலி பெப்ஸி டின்னை எடுத்து அதில் மீந்திருக்கும் திரவத்தைக் குடிக்க முயல்வதைக் காட்டுவதன் மூலம் அவர்களின் வறுமையின் தீவிரத்தை சிறப்பாக உணர்த்திவிடுகிறார்.

ஆனால் கூத்துக் கலைஞரோ கொடை வள்ளலாகிய கர்ணன் வேடம் போடுபவர்.

அந்த வேடத்திலேயே படம் முழுவதும் வருகிறார்.

“அஞ்சை பஞ்சைகள்
பஞ்சம் பறந்தோட
தானம் செய்தேன்.
தானம் செய்தேன்…”

பாரெங்கும் கீர்த்தி படைத்தேன்…’ எனப் பாடிக் கொண்டு அறிமுகமாகிறார். அதாவது கர்ணன் பாடுவதாக.

எஸ்.முரளி மனோகர் கதை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்த இவர் தற்போது லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பண்யாற்றுவதாக இணையத்தில் படித்தேன்.

கதை, வசனங்களை எழுதியவர் பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.
நெடுங்குருதி, கதா விலாசம் விரும்பிப் படித்த கட்டுரைத் தொடர்.
உப பாண்டவம் இது பாரதத்தின் இந்திய மனத்தின் தொன்மை நினைவுகளை அந்த மகா காவியத்தின் இடைவெளிகளை நிரப்புவதாக செய்யப்பட்ட நாவல் என சிலாகிக்கப்பட்டது.

முக்கிய பாத்திரமான கூத்துக் கலைஞர் பாத்திரத்தில் நடிப்பவர் கூத்துப் பட்டறையில் பயற்சி பெற்ற ஜார்ஜ் ஆகும். கனமான ஆடைகள்;, முகத்தை மூடி மறைக்கும் வர்ணங்கள். இவை யாவற்றையும் தாண்டி அவரது நடிப்பு அற்புதமாக வெளிப்படுகிறது. நல்ல நடிப்பு.

மனதைத் தொடும் கதை. முடிவு ஒரு விதத்தில் மனதை அலைக்கழிக்கிறது. மற்றொரு விதத்தில் புதிய தலைமுறையில் சிலராவது இதில் ஆர்வம் கொள்வார்கள் என்ற நம்பிக்கையைத் தருகிறது. அருமையான படப்பிடிப்பு. ஒளிப்பதிவு ஜி.சிவராமன். ஒலிப்பதிவு ஜி.தமுத்துராமன்.

படத்தின் இசை அமைப்பாளரால் இரா.பிரபாகர். தமிழ்துறைப் பேராசிரியர்.

“அப்பெல்லாம் ரா ராவா ஜனங்க முழிச்சிருந்து பாப்பாங்க.
இப்பெல்லாம் யார் கூத்து பார்க்கிறாங்க. எல்லாத்தையும் ரீவி பெட்டி முழுங்கிச்சிடு.”

“18 வருடங்களாக குருவிடம் கூத்துக் கற்றது”

“எத்தனையோ பேரு உசுரைக் குடுத்து வளர்த்த கலை”

போன்ற செய்திகளைப் பேச்சொடு பேச்சாக சொல்லிச் செல்வதன் ஊடாக அந்தக் கலையின் கடந்த காலப் பெருமைகளை வெளிப்படுத்துகிறது

கொடுத்துக் கொடுத்தே கை சிவந்த ‘கர்ணன்’. கடையில் வேலை செய்யும் குட்டிப் பெண் இவனின் பரிதாபத்தைப் பார்த்துக் கொடுத்த இட்லியை பிச்சைபோல வாங்கிச் சாப்பிடும்போது மனதைப் பிசைகிறது.

கொடி கட்டிப் பறந்த ஒரு கலை அழிந்து போகவிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள் என்பதை எண்ணும்போது குற்ற உணர்வு தீயாக எரிக்கிறது.

இன்னும் எத்தனை அரிய பெரிய பொக்கிசங்களை எல்லாம் எதிர்காலத்தில் தொலைத்துவிட்டு கையைப் பிசைந்து நிற்கப் போகிறோம்.

தப்பவிடக் கூடாத குறும் படம்.

குறும்படத்தின் முதல் பாகத்தைப் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள்.

குறும்படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள்.

எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- வீரகேசரி 04.04.2010.

Read Full Post »