Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கொப்பளிப்பான்(Chiken Pox)’ Category

இந்தப் பெண்ணின் முதுகில் கொப்பளங்கள் சிறிய சிறிய கூட்டங்களாக இருக்கின்றன.

மற்றொரு பெண்ணின் முதுகிலும் வயிற்றிலும் தோன்றியவற்றின் படம் இது. அதேபோன்ற கொப்பளங்கள் உள்ளன.

மென்மையான தோலினால் மூடிய கொப்பளங்கள். உள்ளே சிறிதளவு தெளிவான நீர் இருக்கிறது.

கொப்பளிப்பான் நோயில் வரும் கொப்பளங்கள் போலவே இருக்கின்றன. ஆனால் கொப்பளிப்பான் போல உடல் முழுவதும் வீசிப் போடவில்லை.

நடு முதுகில் முள்ளந் தண்டிற்கு அருகில் ஆரம்பித்து வயிறு வரை தொடர்கிறது. வயிற்றின் ஒரு பாதிப் பக்கத்தில் மட்டுமே இருக்கிறது.

நடுவயிற்றைத் தாண்டி மறு பக்கம் போகவே இல்லை. இவருக்கு இடப் பக்கத்தில் மட்டுமே வந்தது.

முகத்தில் இது வந்தால் மிக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் கண்களுக்குள்ளும் கொப்பளங்கள் போடக் கூடும். அப்படியானால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இதுவும் ஒருவகைக் கொப்பளிப்பான்தான். இதனை நரம்புக் கொப்பளிப்பான் என்பர். முந்நாணிலிருந்து (Spinal Cord) வெளிவரும் ஏதாவது ஒரு நரம்பின் பாதையில் மட்டுமே கொப்பளங்கள் தோன்றும்.

பொதுவாக கொப்பளங்கள் தோன்ற முன்னரே அந் நரம்பின் பாதையில் காரணம் சொல்ல முடியாத வலி இருக்கும்.

வலியிலிருந்து மீள்வதற்காக பலரும் தமக்குத் தெரிந்த ஓயின்மென்ட், கிறீம், எண்ணெய் பலவற்றையும் தேய்பதுண்டு.

ஓரிரு நாட்களில் கொப்பளங்கள் தோன்றியதும் மருந்து ஒவ்வாமையால் கொப்பளங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற மயக்கம் அவர்களுக்கு ஏற்படுவதுண்டு.

பொதுவாக முன்பு எப்பொழுதாவது கொப்பளிப்பான் நோய் வந்தவர்களுக்கு மட்டுமே இது வரும். பெரும்பாலும் வயதானவர்களே அதிகம் பீடிக்கப்படுகிறார்கள்.

முன்பு ஏற்பட்ட வெளிப்படையாக நோய் மாறிய பின்னர் நரம்பு மண்டலத்தில் மறைந்திருந்த கிருமிகள் மீளுயிர்ப்பதால் இந்நோய் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் ஒரு நரம்பின் பாதையில் மட்டும் வருகிறது.

ஆங்கிலத்தில் Shingles என்பர். மருத்துவத்தில் Herpes Zoster என வழங்கப்படுகிறது.

தொற்று நோய். எல்லாக் கொப்பளங்களும் காய்ந்து அயறாகும் வரை நோயூற்றவரிலிருந்து ஏனையவர்களுக்குத் தொற்றும். தொற்றினால் கொப்பளிப்பான் நோய் வருமே ஒழிய நரம்புக் கொப்பளிப்பான் அல்ல.

Acyclovir போன்ற வைரஸ் எதிர் மருந்துகள் உள்ளன. ஆயினும் அவற்றை முதல் 48 மணிநேரத்திற்குள் ஆரம்பித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். பொதுவாக 14 நாட்களுக்குள் கொப்பளங்கள் மருந்துகள் இல்லாவிடினும் தானாகவே காய்ந்து உலர்ந்து விடும்.

சிலரில் கொப்பளங்கள் நன்கு மாறிய பின்னரும் நோய் வந்த நரம்பின் பாதையில் கடுமையான வலி நீடிக்கக் கூடும். இதனை Postherpatic Neuralgia என்பர். ஒரிரு மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை அவ் வலி நீடிக்கலாம். அத்தகையவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு சிகிச்சையைத் தொடர நேரிடும்.

 வீரகேசரி வாரவெளியீடு 17.10.2010 ல் வெளியான எனது மருத்துவக் கட்டுரையின் மீள் பதிவு
 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Read Full Post »

>அழகான இளம் பெண் அவள். கைதேர்ந்த சிற்பியால் கடைந்தெடுத்த பொற்சிலை போல இருப்பாள். எவருக்குமே அவளுடன் பேசிக் கொண்டிருப்பதில் மனநிறைவு ஏற்படும். அன்று அவள் வைத்தியசாலைக்கு வந்த போது, ஏற்கனவே காத்திருந்தவர்கள், தங்கள் நம்பரை விட்டுக் கொடுத்து அவளை உடனடியாகவே என்னிடம் உள்ளே அனுப்பி வைத்தனர்!.

அதற்குக் காரணம் அவள் மீதுள்ள அன்பும் அபிமானமும் அல்ல! அருவருப்பினால்! பல நாட்கள் குளிக்காத அழுக்கினாலும், வியர்வை நாற்றத்தினாலும், புண்கள் சீழ்ப் பிடித்திருந்ததாலும் அருகில் வைத்திருக்கப் பிடிக்காமல் உடனடியாகவே அனுப்பினர்.

அவளுக்குக் கொப்பளிப்பான் (Chickenpox)போட்டிருந்தது. மிக அதிகமாகப் போட்டதோடு சீழும் பிடித்து ஆளையே மாற்றியிருந்தது. அழகிய பொற்சிலை அலங்கோலமாக மாறியிருந்தது.

கட்டிளம் பருவத்தினருக்கு கொப்பளிப்பான் வந்தால் பொதுவாக மோசமாகவே தாக்குவதுண்டு. அவள் சிறு வயதாக இருந்த காலத்தில் கொப்பளிப்பான் தடுப்பூசி அறிமுகமாகததால், போடப்படவில்லை. எனவே நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம். சரி அதை விடுங்கள். ஆனால் ஆரம்பத்திலேயே மருந்து சாப்பிட்டிருந்தால் நோயின் தாக்கத்தைக் குறைத்திருக்கலாம்.

“ ஏன் மருந்து எடுக்க வரவில்லை” எனக் கேட்டேன்.

“பக்கத்து வீட்டு அன்ரி மருந்து சாப்பிடக் கூடாது எண்டவ.”

“ஏனாம்?;”

“அம்மன் வருத்தத்திற்கு மருந்து போடக் கூடாதாம்.”

‘என்று தணியும் இந்த மூடநம்பிக்கை மோகம்’ என பாரதி போலப் பாடத் தோன்றியது.

கொப்பளிப்பான் என்பது ஒரு வைரஸ் நோய். அது Varicell Zoster Virus என்ற கிருமி தொற்றுவதால்தான் ஏற்படுகிறதே ஒழிய தெய்வ சாபத்தால் அல்ல!.

தெய்வங்கள் ஏன் மனிதனுக்கு நோயைக் கொடுத்து துன்பத்தை விளைவிக்கப் போகின்றன என நாம் பகுத்தறிவோடு சிந்திக்கப் பழகவில்லை.

சூட்டு நோய் என்று பலரும் சொன்னாலும் கூட குளிர் காலங்களிலேயே அதிகம் பரவுகிறது. கடும் வெப்பத்தை அக் கிருமிகள் தாங்க முடியாததால்தான் வெப்ப காலங்களில் பரவுவது குறைவு.

கொப்பளிப்பான் போட்ட குழந்தைகளை நீண்ட நாட்களுக்குப் பாடசாலை செல்ல அனுமதிக்க மாட்டார்கள். காரணம் மற்றவர்களுக்கும் தொற்றிவிடும் என்பதால். உண்மையில் இது வேகமாகப் பரவும் நோய்தான். ஆயினும் ஆரம்ப கட்டங்களிலேயே வேகமாகப் பரவும். அதாவது காய்ச்சல் வந்து கொப்பளங்கள் போட ஆரம்பிக்கும் நேரத்தில் மற்றவர்கள் எதிர்பாராத விதமாக சுவாசம் மூலம் தொற்றும். பின்பு கொப்பளங்களில் உள்ள நீரின் மூலமும் தொற்றும். கடைசிக் கொப்பளம் போட்ட 5 நாட்களின் பின் தொற்றுவதில்லை.

கிருமி தொற்றினாலும் நோய் வெளிப்பட இரு வாரங்கள் வரை செல்லும். இது புரியாததால்தான் பலரும் கொப்பளங்கள் காயும் நேரத்தில்தான் மற்றவர்களுக்குத் தொற்றுகிறது என எண்ணுகிறார்கள். அதனால்தான் பாடசாலைக்கும் செல்வதை நீண்ட காலம் தவிர்க்கிறார்கள். இது தவறு.

அந்தப் பெண் செய்த இரண்டு தவறுகளால்தான் அவளது நோய் கடுமையாகியது.

கொப்பளிப்பான் போட்ட இரண்டு நாட்களுக்குள் வைத்தியரிடம் சென்று Aciclovir போன்ற வைரஸ் கொல்லி மருந்து சாப்பிட்டிருந்தால் நோயின் தாக்கத்தை மிகவும் குறைத்திருக்கலாம். இந்த மருந்து சாப்பிடுவதால் எந்த வித ஆபத்தோ பக்க விளைவோ ஏற்படாது. நீண்ட காலமாகப் பாவனையில் இருந்து மிகவும் அனுபவப்பட்ட மருந்து.

18 வயதிற்கு மேற்பட்டவர்களும், கர்ப்பணிப் பெண்களும் மருந்து சாப்பிட்டு நோயின் தாக்கத்தைக குறைப்பது மிகவும் முக்கியமாகும்.

இரண்டாவது தவறு குளிக்காதது ஆகும். கொப்பளிப்பான் நோயின் போது குளிப்பது அவசியம். குளிப்பதால் கொப்பளங்களில் பக்டிரியா கிருமி தொற்றி சீழ்ப் பிடிக்காது தடுக்கலாம். கிருமி தொற்றினால் காய்சல் அதிகரிக்கும். புண்கள் பெருத்து மறுக்கள் ஆழமாகப் போடும். நகச் சூட்டு வெந்நீரில் குளிப்பது நல்லது.

“குளிர்மையான சாப்பாடுதான் சாப்பிட வேண்டுமா? மாமிச உணவு சாப்பிடலாமா” என்றெல்லாம் கேட்பார்கள். எந்த வித சாப்பாட்டினாலும் நோய் பெருகாது. விரும்பியதைச் சாப்பிடலாம். ஆயினும் மத உணர்வுகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் முறித்து மாமிச உணவு சாப்பிடுவது அவசிமல்ல.

இந் நோய்க்கெதிரான தடுப்பு ஊசி இலங்கையில் பல வருடங்களாகக் கிடைக்கிறது. ஆயினும் அரச தடுப்பூசித் திட்டத்தில் இது அடங்கவில்லை. தனியார் துறையில்தான் போடப்படுகிறது.

12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு ஊசி மட்டும் போட்டால் போதுமானது.

12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு மாத இடைவெளியில் இரண்டு ஊசிகள் போடப்பட வேண்டும்.

தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என தடுப்பூசித் தயார்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.

எம்.கே.முருகானந்தன்.

குடும்ப வைத்திய நிபுணர்

Read Full Post »