பெயர் சொல்லக் கூடிய ஈழத்துத் தமிழ் சஞ்சிகைகளில் இளையதாக இருந்தபோதும் தரமானதாக வெளிவருவது ஜீவநதி என்றே சொல்லலாம். வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிற சூழ்நிலையிலும் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.
சித்திரை 2014 அதன் 64 வது இதழாகும். வாசிப்பனுபவம் பயனுள்ளதாகவும் இதமளிப்பதாகவும் இருந்தது.
சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் நூல் விமர்சனம் எனப் பலவும் இந்த இதழை அலங்கரித்தாலும் காத்திரமானதாகவும் பயனுள்ளதாகவும் பல புதிய தகவல்களை அறியத்தருவதாகவும் அமைத்திருப்பவை கட்டுரைகள் எனத் துணிந்து சொல்லலாம்.
சிக்மண்ட் பிராய்ட் பற்றிய ஈழத்துக் கவியின் கட்டுரை மிக அருமையாக இருந்தது. ‘உளவியல் பகுப்பாய்வின் தந்தை’ எனப் போற்றப்பட்டவர் அவர். உணர்வு மனம் ஆழ்மனம் என மனித மனத்தைப் பிரித்த அவர் உளவியல் நோய்களுக்கு அடிப்படை பாலியலே என்று நம்பினார். அக் கருத்துக்களில் பல மாற்றங்கள் வந்துவிட்டபோதும் மனத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய முனைந்த அவரது பங்களிப்பு மிக முக்கியமானது.
ஆனால் இக்கட்டுரையில் ஈழத்துக் கவி அவரது பாலியல் கருத்துகளுக்கு அப்பால் போர் பற்றிய அவதானிப்புகளுக்கே முனைப்பு கொடுத்து எழுதியிருகக்கிறார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக போர்ச்சூழலில் அழுந்திய எங்களுக்கு போர் ஏன் என்பது முதல் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி வரையாக பல புதிய தரிசனங்களைத் தந்திருக்க்pறார்.
கெகிறாவ ஸீலைஹா வின் நெல்சன் மண்டேலா பற்றிய கட்டுரை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மண்டேலா பற்றிய பல கட்டுரைகள் அவரது மறைவை ஒட்டி அண்மையில் வெளிவந்திருந்தபோதும் இவரது கட்டுரை தனித்துவமானது. அவரது சொந்த வாழ்வு. பொதுவாழ்விற்கான அவரது தியாகங்கள், அத்தகைய வாழ்வு காரணமாக இழக்க நேர்ந்த உணர்வுபூர்வமான விடங்கள், மன வைராக்கியம், அவரது சாதனைகள் எனப் பலதரப்படப் பேசுகிறது. இருந்தபோதும் அவருள் மறைந்திருந்த அன்பு நெஞ்சம் பற்றிய குறிப்புகள் நெகிழவைப்பனவையாக இருந்தது.
மஹாத்மா காந்தியின் பின்னர் அன்பு அஹிம்சை சுயநலம் பேணாமை, மன்னித்தல், தன் தவறுகளையும் பகிரங்கமாக ஏற்கவும் மன்னிப்பு கேட்கவும் தயங்காத ஒரே ஒரு தலைவராக இருந்திருக்கிறார்.
இதே கட்டுரையில் ‘விடுதலையை நோக்கிய நீண்ட நடை’ என்ற அவரது சுயசரிதை நூலிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டிருந்த சில பகுதிகள் தனிமைச் சிறையில் வாடிய அவரது அக உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக இருந்தது.
இருந்தபோதும் இந்தக் கட்டுரையை அவர் பற்றிய பகுதியை ஒரு இதழிலும், அவரது எழுத்தை மற்றொரு இதழிலுமாக இரு வௌ;வேறு தனித்தனிக் கட்டுரைகளாக வெளியிட்டிருந்தால் கூடிய அவதானிப்பைப் பெற்றிருக்கும் என எண்ணத் தோன்றியது.
ஒரு மருத்துவன் என்ற ரீதியிலும் முதுமையின் வாசற்படியில் நிற்பவன் என்ற ரீதியிலும் முருகபூபதியின் நடைப்பயிற்சிக் கட்டுரையை இரசித்துப்படித்தேன். அவரைப்போலவே சின்னஞ்சிறு வயதில் ரயிலில் சென்று, பெயர் தெரியா ஊரில் இறங்கி இருள் கவ்வும் நேரம் யானை லத்திகளைக் கண்டு பயந்து கொண்டே நீண்டதூரம் நடந்து கதிர்காமத்தை அடைந்தது ஞாபகத்திற்கு வந்தது. செல்லக் கதிர்காமம், கதிரமலை யாவும் அக்காலத்தில் பொடிநடையில்தான் முடிந்தது.
சுவார்ஸமான கட்டுரை. எழுத்தாளனாக மட்டுமின்றி பத்திகையாளாகவும் இருந்தததால் மூன்று பக்கக் கட்டுரையை ஒரே மூச்சில் படிக்க வைக்கும்படியான நடை. ‘மனைவியையும் பேச்சுத் துணைக்கு அழைத்துச் சென்றால் என்ன நடக்கும்’ என்பதை ஒரு வரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
நீங்களே மீண்டும் படித்துப் பாருங்கள்.
இருந்தபோதும் இன்று மனிதர்களின் ஆயுள் குறைந்துவிட்டது என்ற அவரது கூற்றோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. அன்றைய சராசரி ஆயுள் 50, 60தைத் தாண்ட முடியாதிருந்தது. ஆனால் இன்று சராசரி ஆயுள் 75 தாண்டிவிட்டது. 80, 90 வயதான பலரைச் நித்தமும் காண்கிறோம். சதம் அடித்தவர்களைக் காண்பதென்பது அரிதானது அல்ல என்றாகிவிட்டது.
அ.யேசுராசாவின் கட்டுரை தமிழக புத்தக்திருவிழா பற்றிய அவரது நேரடி அனுபவத்தை புகைப்படங்களுடன் சிறப்பாகச் சொல்கிறது. புத்தகத் திருவிழாவில் ரவி தமிழ்வாணனின் திருவிளையாடலையும் நாசூக்காகச் சொல்லியிருந்தார்.
‘1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை’ என்ற அம்மன்கிளி முருகதாஸ் அவர்களின் தொடர் பாரதியின் பங்களிப்பு பற்றிச் சொல்கிறது. அருமையான உதாரணங்களுடன் கூடிய உபயோகமான படைப்பாக இருந்தது.
‘கம்பனை நகலெடுத்த திரையிசைப் பாடலாசிரியர்கள்’ என்ற இ.சு.முரளீதரனின் கட்டுரை மிகுந்த தேடலுடன் எழுதப்பட்டது. நாங்கள் இரசித்த பல திரைப்பாடல் வரிகளுக்கு, கம்பனின் கற்பனை வளம் மூலமாக இருந்த செய்தி என்னை ஆச்சரியப்பட வைத்தது.
சிறுகதைகள் இரண்டு. மலையகம் சார்ந்தது ஒன்று. யாழ்மண்ணும் வெளிநாடும் கலந்தது மற்றொன்று. மல்லிகை சி.குமாரின் ‘பாலங்கள்’ கதையானது நல்லவர் போல கதையளந்து மலையக தொழிலாளர்களை கொள்ளையடிக்கும் யாழ்ப்பாணத்து முதலாளியின் சாதித் திமிர் பற்றிப் பேசுகிறது. முதாலாளிக்கு எதிராகவும் சாதீயத்திற்கு எதிராகவும் தொழிலாள வர்க்கம் இணைந்து குரல் எழுப்புகிறது.
வி.ஜீவகுமாரனின் ‘நான் அவன் இல்லை’ எதையும் அழுத்தித் தெளிவித்து போதனை செய்யும் கதையல்ல. காதலி இவனை ஏமாற்றி பணக்காரனுக்கு தலைநீட்ட அதைத் தாங்க முடியாது வெளிநாடு சென்று உழைத்த போதும் அவளில் குற்றம் காண முடியாதளவு அவளில் உண்மை அன்பு வைத்தவனின் கதை. மிக அழகாக நெய்யப்பட்டிருக்கிறது. அவனின் உணர்வுகளை மட்டும் சிறு சிறு சம்பவங்களின் நினைவலைகளாகப் பேசுகிறது. நேர்த்தியான படைப்பு.
“..:செத்தவன் பெண்டிலைக் கட்டினாலும் விட்டவன் பெண்டிலைக் கட்டக்கூடாது..” என்ற வசனமானது பெண் வாயிலிருந்து வந்தபோதும் ஆணாதிக்க சிந்தனையின் மறைமுக வெளிப்பாடாக உறுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.
கவிதைகள் பல இருந்தபோதும் பெரும்பாலானவை மனதில் சலனத்தை எழுப்பவில்லை. பிணங்களையும், புதைகுழிகளையும், குண்டு வீச்சுகளையும் இன்னும் எவ்வளவு நாட்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. இருந்தபோதும் சித்ரா சின்னராஜாவின் கவிதையின் கடைசி வரிகள் என்னைப் பல கோணங்களில் சிந்திக் வைத்தன என்பது என்னவோ உண்மைதான். ‘எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் யாருக்காக இரத்தம் சிந்தினார்கள்’
அரிதாவின் ‘பிரிவு’ கவிதையின் சொல்லாடல் சற்று வித்தியாசமாக பிரிவின் இயல்புத்தன்மை பற்றிப் பேசுகிறது.
கருணாகரனின் கவிதைகள் மூன்று பிரசுரமாகியுள்ளன. அற்புதமாக எழுதப்பட்ட கவிதைகள். அவை எதையும் எமக்குப் போதிக்க முற்படவில்லை. யாரையும் நோகவில்லை. அறம் பாடவில்லை. ஆனால் அற்புதமான சொற்கோர்வைகள், சிறப்பான குறியீடுகள்.
நான் இரசித்த வரிகளில் ஒன்று ‘.. நிழலைப் பெய்யும் மரம் ஒருபோதும் உறங்குவதில்லை நிழலில்’.
மற்றொரு கவிதையில் ‘ .. அவள் உறங்கிக் கொண்டிருந்தாள் மாத்திரையினுள்ளே…’ அருமை.
நான் ஏற்கனவே படித்திருந்த நல்ல நாவலான ‘குடிமைகள்’ பற்றி நூல் விமர்சனப் பகுதியில் ஜனப்பிரியன் எழுதியுள்ளார். முற்போக்கு சிந்தனைகள், சாதீயத்திற்கு எதிரான தீர்க்கமான குரல், பெண்களின் மன உலகின் வௌ;வேறு கோலங்கள் போன்றவற்றை தெணியான் எவ்வாறு தனது நாவலில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை கட்டுரை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். தெணியானின் பாத்திரச் சித்தரிப்புகளையும், மொழிநடையையும் சிலாகித்துள்ளார்.
மொத்தத்தில் ஜீவநதியின் இந்த இதழ் சிறப்பாக அமைந்திருக்கிறது.
எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0