Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சினிமா’ Category

‘சோக்கவுட்’ நிசப்தம் (The Silence) எனும் நாத வெள்ளம்
கண்கள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகைத் தெரிந்து கொள்ளாத மடையர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காதுகள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகிலிருந்து எழும் உன்னத ஒலிகளின் லயநயத்தை ரசிக்கத் தெரியாத கலைஞானம் அற்றவர்களாக உழன்று கொண்டிருக்கிறோம்.

TheSilence_DVD

இருந்த போதும் காலையில் விழித்து எழும்போது எழுகின்ற பறவைகளின் ஒலியும், தென்றலின் இசையும், பல எழுத்தாளர்களின் மனத்தைத் தொடுவதை படைப்புகளுடாக வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறான். ஒளிந்திருக்கும் அக் கலைஞனை மீட்டெடுத்து சுருதி கூட்ட வேண்டியது அவரவரால்தான் முடியும்.

வீதியில் ஓடும் வாகன இரைச்சலும், தொலைவில் கூவிச்செல்லும் இரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் அராத்தும் ஒலியும் தூக்கத்தைக் கெடுத்து பலரையும் இம்சைப்படுத்துகின்றனவே ஒழிய மனம் உருக வைப்பதில்லை.
அடுத்த வீட்டில் கதவை அடித்து மூடும் ஓசையும், பைப் நீர் விழுந்து வாளி நிறைக்கிற ஒலியையும், அதிலிருந்து நீரை மொண்டு குளிக்கிற ஓசையிலும் ஒரு இனிய லயம் கலந்திருப்பதை எங்களில் யாராவது, எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறோமா?

நித்திரையைக் குழப்புகின்றன, அமைதியைக் குலைக்கினறன என்று எரிச்சல்படத்தான் பலருக்கும் தெரிகிறது. இச் சத்தங்களும் ஒலிகளும் சூழலை மாசடையச் செய்து எமது காதுகளை மந்தமாக்குகின்றன என்ற குற்றச் சாட்டுகளுக்கும் குறைவில்லை. அதில் விஞ்ஞான ஆதாரம் இருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனால் ஓசை இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? எவ்வளவு மந்தமான உயிர்ப்பற்ற சவக்காலையின் வெறுமைக் கலவையாக இருக்கும்.

கண்களால் காணும் காட்சிகளாவன, காதில் விழுபவற்றை விட வேகமாக எமது மூளையில் உறைப்பதால்தான் ஒலியை விட ஒளியில் மறந்து, ரசிக்கத் தெரியாது வாழ்கிறோம்.

குர்ஸிட் பார்வையற்ற ஒரு சிறுவன். அவன் எங்களைப் போல கலாஞானசூனியனாக இல்லை. அவனைப் பொறுத்த வரையில் அவனைச் சுற்றி எழுகின்ற ஒவ்வொரு ஒலியிலும் ஏதோ ஒரு இசை இருக்கிறது. லயம் இருக்கிறது. மனத்தை ஈர்க்கும் அமானுச சக்தி இருக்கிறது. வாத்திய ஒலிகளும், இன்னிசையும் மட்டும் அவனை ஈரப்பதில்லை. அவனைப் பொறுத்தவரையில் உலகே ரம்யமான ஒலிகளின் கூடம்தான். ஆனால் அதில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து ரசிப்பவன்.

காலையில் இவனது வீட்டுக் கதவை கோபத்தோடு ஓங்கி அறைந்து தட்டும் ஒலியும், தொடர்ந்து அவர்களைத் துயில் எழுப்பி வாடகைப் பணத்தை அறவிடச் சத்தமிடும் வீட்டு சொந்தக்காரனின் கோபக் குரலிலும் கூட ஏதோ ஒரு ஓசை நயத்தை அவனால் ரசித்து மகிழ முடிகிறது.

பும் பும் பூம்… பும் பும் பூம்…

TheSilence_003

இசைக்கு அப்பாலும் அவனது உணர்திறன் விசாலித்திருக்கிறது. வேலைக்குச் செல்லும் வழியில் தாம் சுட்ட பிரட்டுகளை விற்பதற்காகப் பெண்கள் நிற்பார்கள். தனது விரல்களின் தொடு உணர்வுகள் மூலம் அவர்களது பிரட்டின் தரத்தை இவனால் சொல்லிவிட முடிகிறது. ஆனாலும் ஒருவளது பிரட் சற்றுக் காய்ந்ததாக இருந்தபோதும் அவளிடம் வாங்கிச் சாப்பிடுகிறான். காரணம் அவளது குரல் இனிமையானது என்கிறான். அவனைப் பொறுத்தவரை உணவின் சுவையை விட இசை மாண்புடையது.

TheSilence_005

10-12 வயது மதிக்கத்தக்க சிறு பையன் அவன். ஒலிகளின் நயத்தைக் கூர்த்தறியும் அற்புத ஆற்றல்  இயல்பாகவே அவனுக்கு வாய்த்திருந்தது. தனது தாயுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறான். தகப்பனற்றவன் எனச் சொல்ல முடியாது. ஏதோ தேவைக்காக ரசியாவிற்கு சென்ற தகப்பனிடமிருந்து எந்தத் தகவலோ உதவியோ கிடையாது. இதனால் மிகவும் வறுமையிலிருக்கும் அவனது குடும்பத்தின் வயிற்றுப்பாட்டிற்கு அவனது உழைப்பு அவசியமாக இருக்கிறது.

அவனது ஆற்றல் அவனுக்கு ஒரு தொழிலைத் தேடிக் கொடுத்திருந்தது. இசைக் கருவிகள் விற்பனை செய்யும் ஒரு கடையில் அவன் அவற்றிக்கு சுருதி மீட்டிக் கொடுப்பவனாகத் தொழில் பார்க்கிறான். ஆனால் எல்லா முதலாளிகளையும் போலவே இவனது முதலாளியும் காசு ஒன்றே குறியானவன். இவனது திறமையை மதிப்பவனாக இல்லை. யாராவது அவன் விற்ற வாத்தியத்தைக் குறை கூறினால், சுருதி சேர்த்துக் கொடுத்த இவனே குற்றவாளியாக ஏச்சு வாங்க வேண்டியவனாகிறான்.

வேலைக்குச் செல்லும்போது பஸ்சில் பயணிக்க நேருகிறது. போகும் வழியெல்லாம் இவன் சூழலிருந்து எழும் ஒலிகள் கேட்காதவாறு, தனது காதுகளைப் பொத்திக் கொண்டே பயணிக்கிறான். அவனாக விரும்பி இதைச் செய்வதில்லை. நல்ல இசை கேட்டால் இவன் தனது சூழலையும், தன்னைக் காத்திருக்கும் பணிகளையும் மறந்து விடுவான். இவனது கால்கள் தன்னிச்சையாக இசை ஒலியைப் பின் தொடரும். எங்கோ செல்ல வேண்டியவன் அதை மறந்து வேறெங்கோ சென்றுவிடுவான்.

இவனது பயணத்தில் உதவுவது ஒரு குட்டித் தோழி நதீரா. ஆனால் இவனிலும் சற்றுப் பெரியவள். பார்வையற்றவனின் கண்களாக அவள் இயங்குகிறாள். அத்துடன் இவன் வாத்தியங்களைச் சுருதி மீட்டும் போது, அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்ப்பதும் அவள்தான். அவன் சுருதி மீட்டும் போது மெல்லியதாக அவளது காது வளையம் ஆட ஆரம்பிக்கும், பின் தலை முடி, முகம், கைகள் எனத் தொடர்ந்து இறுதியில் உடலே தாளலயத்திற்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிடும். அந்த அழகை ரசித்திக் கொண்டே இருக்கலாம். அற்புதமாக நடிக்கிறாள் அந்தப் பெண்.

அவளது உலகம் குர்ஸிட் மட்டுமே. இவனது கவனம் அங்கும் இங்கும் அலையவிடாது கவனமாகக் கூட்டிச் செல்பவள் அவள்தான். அவளால்தான் அது முடியும். தெருப் பாடகனின் இசையில் மயங்கி அவனது ஓசையைப் பின் தொடர்ந்து செல்வதால், வேலைக்குச் செல்லத் தாமதமாகி ஏச்சு வாங்காஙாகாது காப்பாற்றுவது அவள்தான்.

அவன் எல்லா அழகையும் ஆராதிப்பவன். அவளின் புற அழகை அல்ல. அவளின் உள்ளொளியைப் புரிந்து வைத்திருக்கிறான்.

குர்ஸிட் ஒரு வண்டு போன்றவன். அவற்றின் ஓசை இவனுக்குப் பிடித்தமானது. ஆயினும் சாணியில் மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம் அபசுரம் என்பான். ஆனால் மலர்களில் தேன் தேடும் தேனீக்களின் ரீங்காரம் அற்புதமானது என ரசிப்பான். தேனீக்களுடன் பாசம் கொண்டவன். அவற்றோடு பேசுவதும் இவனுக்குப் பிடித்தமானது. அவை பற்றிப் பேசுவதில் மகிழ்வு கொள்பவன்.

ஆனால் அவற்றைப் போலவே இவனும் நெறிப்படுத்தப்படாத தேனீ. பதவி, பணம், அந்தஸ்த்து  போன்றவை இவனது இசை ரசனையைப் பாதிப்பதில்லை. தெருப் பிச்சைக்காரன் எழுப்பும் இசை லயத்துடன் அமைகையில் அதில் ஆழ்ந்துவிடுவான். அந்த கானகக் கானமும் இவனை வாவென அழைக்கும்.

நெரிச்சல் மிகுந்த கடைத் தெருவில் இசையின் வழியே பயணிக்கிறான். இளைஞன் கையிலிருக்கும்; ரேடியோவிலிருந்து அற்புதமான இசை வருகிறது. நெருக்கமான சனங்களிடையே, இசையின் நீக்கல்களின் இடையே நெளிந்து வளைந்து புகுந்து பயணிக்கும் இவன் வழி தவறிவிடுகிறான். கூட வந்த நதீரா இவனைக் காணாது பயந்து தேடுகிறாள். என்னவானானோ என நாமும் கலங்கிவிடுகிறோம்.

ஆனால் அவள் எப்படி இவனைக் கண்டுபிடிக்கிறாள் என்பது அற்புதமான காட்சியாகிறது. அவள் தன் இரு கண்களையும் மூடிக் கொண்டு தேடியலைகிறாள். எங்கோ தொலை தூரத்தில் மங்கலாக இசை ஒலி கேட்கிறது. அதில் தன் மனத்தை ஆழச் செலுத்துகிறாள். கண்களை மூடியபடியே அது வரும் திசையில் தட்டுத் தடுமாறிப் பயணிக்கிறாள். அவள் அடைந்த இடம் ஒரு இசைக் குழு கானம் எழுப்பிக் கொண்டிருக்கும் கடையாகும். அங்கு வெளியே மதிலோரம் இசையில் மயங்கி, சுவரில் சாய்ந்தபடி தன் தனியுலகில் இருக்கிறான் குர்ஸிட்.

படம் முழுவதும் இசை பொங்கி வழிகிறது. காற்றில் பறந்தலையும் கடதாசிச் சுருள் போல நாம் அந்த இசையின் ஓட்டத்தில் அள்ளுண்டு பயணிக்கிறோம். மழை ஓசை இசையாகிறது. நாயின் குரைப்பிலும், குதிரையின் குளம்பொலியிலும், பறவைகளின் சிறகடிப்பிலும், செம்மறி ஆடுகளின் கனைப்பிலும் கூட இசை இருக்கிறது என்பதை உணர்ந்து அதிசயிக்கிறோம். ஒருதடவை வாத்தியத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மழை ஆரம்பிக்கிறது. அதில் குதித்து விளையாடி ஆனந்திக்கிறான். மழை விடவில்லை. நனைந்து தெப்பமாக குளிர்பிடிக்கிறது. ஓடும்போது தடக்கி விழுகையில் வாத்தியம் கை நழுவித் தூரப் போய் விழுகிறது. எங்கென பார்வையற்றவன் கண்டு கொள்வது எப்படி? மிகுந்த துயரம் ஆட்கொள்கிறது. ஏற்கனவே முதலாளி இவனை வேலையிலிருந்து கலைக்க முற்பட்டிருக்கிறான். இப்பொழுது வாத்தியமும் தொலைந்து விட்டால்?

ஆச்சரியம் காத்திருக்கிறது. வாத்தியத்தின் மேல் விழும் மழைத்துளிகள் ஓசையை எழுப்புகின்றன. அது ஒரு சீரான ஒலிலயத்தில் அவன் காதில் பாய்கிறது. இசைத்துளி பொழிகிறது. அதுவே அவன் மனத்திற்கு ஒளதடமாகிறது. வாத்தியமும் கிடைத்து விடுகிறது.

எமக்கென்று தனிப்பாதை கிடையாது. வானை எட்டும் முகில்களாகப் பறந்தும், ஆழ்கடல் சிறுமீன்களாக நீந்தியும் இசையுடன் இரண்டறக் கலந்து பயணிக்கிறோம். சுட்டெரிக்கும் தீயும் இல்லாத, குத்தி வலிக்க வைக்கும் முற்களும் இல்லாத ஆனந்தப் பெருவெளி. சண்டை, சச்சரவு, குரோதம் ஏதுவும் எம்மைச் சஞ்சலப்படுத்தாத படம்.

அவன் வாழும் வீடு நதியுடன் இணைந்தது. பாலத்தால் வீதிக்கு வர வேண்டும். அவன் வேலையிலிருந்து வரும்போதும் மரங்களின் நிழல் அமைதியான நீரில் பிம்பமாக விழும் தோற்றம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கிறது. கை தேர்ந்த ஓவியனின் கன்வஸ் ஓவியம் போல கலைநயம் மிக்கது.

அதேபோல Tajikistan நகரின் கடைத் தெருக்களிலும், வீதிகளிலும் எம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறது கமரா. மிகச் சிறப்பான படப்பிடிப்பு. அலங்காரமான கடைகள், அழகான முகங்கள், இவை யாவும் வித்தியாசமான கோணங்களில். நாம் காண்பது அவ்வாறாக இருந்தபோதும், அவர்களின் மொழியும், கலாசாரமும் அந்நியமாக தோன்றியபோதும், அந்த மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் மற்றெல்லா மனிதர்களுடையது போலவே இருப்பதால், அதில் எங்களையும் அடையாளம் காண முடிகிறது. இதனால் படத்துடன் ஒன்றச் செய்கிறது.

மிகவும் மாறுபட்ட பார்வையில்; மனித வாழ்வின் மறக்கவொண்ணா கணங்களையும், மனத்தில் எழும் கவித்துவ உணர்வுகளையும் இசையில் குழைத்து அள்ளிச் சொரிகிறது இப்படம். உள்ளத்தை அள்ளிப்பிடிக்கும் ஓவியம் போன்றிருக்கிறது. உலகம், மனித வாழ்வு, இசை இவற்றை வெறுமனே சித்தரிப்பதற்கு அப்பாலும் பயணிக்கிறது. கனதியில் எம்மனத்தை ஆழ்த்தியபடியே படம் நிறைவுறுகிறது.

mohsen_makhmalbaf

Mohsen Mahmalbaf

ஈரானின் புகழ்பெற்ற Mohsen Mahmalbaf  ன் படைப்பு இது. அவர் திரைப்படத் துறையில் மிகப் பெரிய ஆளுமையாவார். நெறியாளர் மட்டுமல்ல நல்ல கதாசிரியரும் கூட. ஈரானிய சினிமாவில் புதிய அலை இவருடனேயே ஆரம்பிக்கிறது எனலாம். இவரது மிகப் பிரபலமான முதற் சினிமா கந்தஹர் ஆகும்.

Mohsen Makhmalbaf பற்றிய குறிப்பு

இவரது வாழ்க்கை இவருக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் நாயகனான குர்ஸிட் போலவே மிகச் சிறுவயதிலேயே குடும்பச் சுமையைத் தனது தோளில் ஏந்த வேண்டியதாயிற்று. 8 வயதிலேயே தந்தை இழந்து பல சின்னசின்னத் தொழில்களைச் செய்து, 15 வயதளவில் விடுதலைப் போராளியாகி, துப்பாக்கிச்; சூடுபட்டு சிறைப்பட்டவராவார். 4 ½ வருட தண்டனையில் தன்னைப் புடம்போட்டுக் கொள்கிறார். தீவிர அரசியலில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டு படிப்படியாக வளர்ந்தவர் ஆவார். இப்பொழுது பிரான்ஸ்சில் வசிக்கிறார்.

25 சினிமாக்களுக்கு மேல் இயக்கிய இவரது 5 திரைப்படங்கள் அவரது தாய் நாடான ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளன. அதில் நிசப்தம் என்ற இந்தத் திரைப்படமும் அடங்கும்.

ஏன் இது தடைசெய்யப்பட்டது என்பதை படத்தை மனத்துள் மீள்வாசிப்பு செய்தேன்.

குர்ஸிட்டும், நதீராவும் பாதை வழி போகையில் அவள் திடீரென நிற்கிறாள். கையைப் பற்றி அவனையும் நிறுத்துகிறாள். அவள் முகம் பயத்தால் உறைந்திருப்தைக் காண்கிறோம். “அந்த வழியில் துவக்கோடு இளைஞன் நிற்கிறான். பெண்கள் முக்காடின்றி வந்தால் தாறுமாறாக ஏசுவான்” போகிற போக்கில் சொல்லிப் போகும் வசனமாக முதலில் தோன்றியது. அவள் வேறுபாதையால் செல்வோம் என்கிறாள். இது போன்ற வேறு ஓரிரு காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இரை மீட்கையில் மிகவும் முக்கியமான காட்சியாகப்படுகிறது. தீவிரவாதிகளும், மத கலாசார அடிப்படைவாதிகளும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிப்பதில்லை. துப்பாக்கி, பொல், கடும்சொல் போன்ற ஆயுதங்களால் மக்களை பயமுறுத்தி அடிமைப்படுத்துகிறார்கள். தங்கள் கருத்தை ஆயதமுனையில் திணிக்கிறார்கள். இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் வேறுபாதையைத் தான் நாடமுடியும். நதீரா தெருப்பாதையை மாற்றுவது ஒரு குறியீடாக ஒலிப்பதாகவே நான் கருதுகிறேன். மிக நாசூக்காக தன் கருத்தைத் தெளிவித்திருக்கிறார். இப்படம் ஈரானில் தடை செய்யப்படுவதற்குக் இதுதான் காரணமாக இருந்ததோ தெரியவில்லை.

படம் முழுவதும் இசை அள்ளி அணைக்கிறது. வருடிக் கொடுத்து இதமளிக்கிறது. கிளுகிளுப்பூட்டிச் சிரிக்கவும் வைக்கிறது. மோனத் துயரில் ஆழவும் வைக்கிறது. இறுதிக் காட்சியில் பீத்தோவனின் 5வது சிம்பனி கம்பீரமாக ஒலிக்கிறது. மேற்கத்தைய உலகின் நாதமும், ஈரானிய கலாசாரத்தின் வாழ்வும், இசையாலும் அற்புதமான கமராக் கண்களாலும் இணையும் உன்னதம் அது.

மங்கிய ஒளி, அமைதியான ஆற்று நீர், அதில் மிருதுவான பூவாக மிதக்கும் ஓடம், தொலைவிலிருந்து அது மெதுவாக நகர்ந்து வருகிறது இவனையும் ஏற்றி வேறிடம் செல்ல. தொலைவில் அவர்கள் வாழ்ந்த வீடு அந்நியமாகி எட்டாத தூரத்தில் மறைந்துகொண்டு வருகிறது.

வேலை போய்விட்டது. வீட்டு வாடகை கட்ட முடியாததால் பொருட்களை தூக்கி எறிந்து அவர்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான் சொந்தக்காரன். நிர்க்கதியாகி நிற்கிறார்கள் அவர்கள். ஆனால் வாழ்வு என்றுமே அஸ்தமித்துப் போய்விடுவதில்லை. ஏனெனில் அஸ்தமனங்ளையும் உதயமாக்க வலு கொடுக்கும் இசை அவனது கைவசம் இருக்கிறது. அவனது கைகள் அசைகின்றன. தலை தாளம் போடுகிறது. லயநயத்துடன் உடல் அசைந்தாடுகின்றது. ஒரு இசை ஞானிக்குரிய நுட்பத்துடன் இசையைப் பிறக்க வைக்கின்றன.

அவனது கையசைவிற்கு ஏற்ப கடைத்தெருவே இசை எழுப்புகிறது. பானை, சட்டி, இசை கருவிகள், வாளால் மரமரிதல் என யாவும் வாத்தியங்களாகின்றன. தொழிலாளிகள் தாள லயத்துடன் தட்டி இசையாக எழுப்புகிறார்கள. சந்தை இசைக் கூடமாகிறது.

TheSilence_010

இசையில் மயங்கி மனக்கண் மூடிக் கிடந்த நாம் ஏதோ அருட்டுணர்வில் மடல் திறக்கையில் படம் முடிந்திருக்கிறது.

0.0

நீண்ட நாட்களுக்கு முன் மறந்து போகாத சில புளக்கில் பதிந்த பதிவு.

நிசப்தம் எனும் நாத வெள்ளம்

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கி எறியப்பட்ட மரம் தன் பசிய இலைகள் ஊடாக வியர்வை சிந்திக் கருகுவதைப் போல மனித உயிர்கள் அடாவடித்தனமாக பறிக்கப்படுவதைக் கண்டும் மனம் கலங்காத கல் மனம் கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உயிரைப் பறிப்பது  மட்டுமல்ல தன் மண்ணிலிருந்து தூக்கி எறியப்படுவதும் அத்தகையதே. ஒருவர்; காலாகாலமாக வாழ்ந்த பூமியை மற்றொருவர் அடாவடித்தனமாக பிடித்து அமுக்கித் தமதாக்கி, அதன் பூர்வீக உரிமையாளர்களை அடிக்கி ஒடுக்கி இரண்டாந்தரப் பிரஜைகளாக்குவது அநியாயமான செயல்பாடு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டும் என்றில்லை. தான் மாத்திரமல்ல தனது பெற்றோர், பேரன் பீட்டிகள் எனப் பரப்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை இழப்பதன் சோகத்தை வார்த்தை சிறைகளுக்குள் அடக்க முடியாது.

பாலஸ்தீனர்கள் தமது மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். மிகுதி மண்ணில் அடையாள அட்டை, வேலை செய்வதற்குப் பாஸ், இஸ்ரேலியர்களை எதிர்த்துப் பேசினால் கடும் தண்டனை எனக் கடுமையான அடக்கு முறைகளுக்கு ஆளானார்கள். இந்த நிலையை அவர்கள் எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். பலஸ்தீன விடுதலை இயக்கம் பற்றியும், இனவெறி பிடித்த இஸ்ரேலிய அரசின் வெறித்தனமான செயற்பாடுகளையும், அதற்குத் துணை போகும் மேலைத் தேச அரசுகள் எனப் பலதையும் அறிந்து வைத்திருக்கிறோம்.

ஆயினும் றீமிக்சிங் செய்யும் ஊடக ஒலிகளுக்கு அப்பால், அங்கு வாழும் சாதாரண மக்களின் குரலை இயல்பாகக் கேட்டது அரிது. நான்கு பெண்களின் வாழ்வின் நாதமாக, போரினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் குரல் இத் திரைப்படத்தில் ஒலிக்கிறது. ஆனால் அந்த நான்கு குரல்களும் ஒரே லயமானவை அல்ல. சுரதிபேதம் கொண்டவை. அவர்களது பார்வைகள் ஒரே விதமான பார்வைகள் அல்ல. வௌ;வேறு கோணங்களில் தெறிக்கும் பார்வைகள். ஒரே அடிப்படைப் பிரச்சனையை, வஞ்சிக்கப்பட்ட அந்த ஒரே வாழ்வை நால்வரும் அனுபவித்தாலும் அவர்களது எண்ணம், எதிர்பார்ப்புகள், எல்லாம் பல்வேறு விதங்களாக இருக்கின்றன.

மிரால் என்ற இச் சினிமா அமெரிக்க தயாரிப்பாளரால், அமெரிக்க நெறியாளர் ஊடாக அமெரிக்க சமுதாயத்திற்காக எடுக்கப்பட்டது. இருந்தபோதும் ரூலா ஜெப்ரியல் என்ற பெண்ணினது சுயசரிதை நூலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்பதால் பலாஸ்தீனக் குரல் அடிநாதமாக ஒலித்தபடியிருப்பதைத் தடுக்க முடியவில்லை எனலாம். ஆங்கிலப்படம். ஆயினும் இடையிடையே அரபி மொழி கலந்திருக்கிறது. முக்கியமாக அவர்களின் கலை, பண்பாட்டு அம்சங்கள் காட்சிப்படுத்தப்படும்போது. இதனால் ஆங்கில உபதலைப்பின்றியும் புரிவதில் சிரமமிருக்கவில்லை.

படத்தின் பிரதான பாத்திரம் மிரால் என்ற இன்றையப் பெண். இவள் வாழ்வே படத்தின் முக்கிய பகுதி. இவளது வாழ்க்கைப் பாதையைச் செதுக்குவதில் ஏதொவொரு வழியில் உதவியவர்கள் ஏனைய மூவருமாகும். பிரதான பாத்திரம் திரையில் வருவதற்கு முன்னர் கிட்டத்தட்ட படத்தின் மூன்றில் ஒரு பகுதி ஓடி முடிந்துவிடுகிறது. பாலஸ்தீனியப் பிரச்சனையை ஓரளவு புரிந்து கொள்ள இது அவசியம்தான். ஆனாலும் கருவின் மையத்துள் நுளைவதற்கு இவ்வளவு நேரம் எடுப்பது சற்றுச் சோர்வு அளிக்கிறது. அத்துடன் ஆரம்பக் காட்சிகளைப் புரிந்து கொள்வதில் சற்று சிக்கல் இருந்தது. வேறு விதமாக எடிட் பண்ணியிருக்க முடியாதா என எண்ணத் தோன்றுகிறது.

முதல் பெண் ஹின்ட் ஹீசெனி. இவள் முதலாமவள். பாலஸ்தீனத்திலிருந்து ஒரு பகுதியைப் பிய்த்தெடுத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அறிமுகமாகிறாள். இஸ்ரேல் உருவானபோது ஏற்பட்ட போரில் அனாதைகளான, வாழ வழியில்லாத மக்களின் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி, வளர்த்து, கல்வியூட்டி நல்ல பிரஜைகளாக்குவதற்காக தனது சொந்த வீட்டையே பள்ளியாக்குகிறாள். அது Tifl Al-Arabi Institute என்ற பெயரோடு அரசியல் சாயல் படியாத மனிதாபிமான கல்வி நிறுவனமாகத் தொண்டாற்றுகிறது.

இரண்டாமவள் நடியா. இவள்தான் மிராலின் தாய் ஆகும். பாலியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டவள். ஒரு இஸ்ரேலியப் பெண்ணை பஸ்சில் வைத்து அடித்தற்காகச் சிறை செல்கிறாள். அங்கு மூன்றாமவளான பற்றிமாவைச் சந்திக்க்pறாள். பற்றிமா இஸ்ரேலியரின் அடாவடித்தனமான நடவடிக்கைளில் கோபமும், இன உணர்வும் தாய் நாட்டில் பற்றும், கொண்ட பெண். தீவிரவாதி எனலாம். இஸ்ரேலியர்கள் சினிமா பார்க்கும் அரங்கில் வெடி குண்டு வைத்ததால் அகப்பட்டுச் சிறை செல்கிறாள். சிறையில் இருவரும் அறிமுகமாகிறார்கள்.

நான்கு பெண்களின் கதையாக இருந்தபோதும் ஹின்ட் ஹீசெனி, அவளது பள்ளிக்கூடம், அவளது நம்பிக்கைகள் என்ற அத்திவாரத்தில் எழுப்பப்பட்ட மாளிகையாக சினிமா அமைகிறது. மாளிகையாக இருப்பது முக்கிய கதாபாத்திரமான மிராலின் வாழ்க்கை.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினரின் மூர்க்கத்தனமும், எதேச்சிகார நடவடிக்கைகளும், அடாவடித்தனங்களும் கோபப்பட வைக்கின்றன. தமது வீட்டில் வாழ்ந்தவர்களை ஒரு சிலநிமிட அறிவித்தலுடன் வெளியேற்றி வீதியில் கலைத்துவிட்டு அவர்களது வீட்டை பாரிய இயந்திரங்களால் நிர்மூலமாக்கும் காட்சி மனதைக் குடைகிறது. மனதில் இயலாமையும் கோபமும் கொப்பளிக்க எதுவும் செய்ய முடியாது ஏக்கத்திடன் பார்த்திருக்கும் காட்சி மனதைத் தொடுகிறது. வீதியில் நின்று கல்லெறிந்து தமது எதிர்ப்பைக் காட்டும் சாமானியர்கள் துப்பாக்கி குண்டுகளால் தண்டிக்கப்படுகின்றனர்.

மற்றொரு காட்சியில் பற்றிமாவுக்கு ஆயுற்காலச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. குண்டு வைத்ததற்காக இரண்டு, இஸ்ரேலிய நீதிபதிக்கு முன் எழுந்து நின்று மரியாதை செய்யாததற்காக மூன்றாவது. சட்டமும், நீதியும் கூட எதேச்சிகார ஆட்சிகளுக்கு  முண்டுக் கொடுப்பதற்காக பாகுபாடு காட்டுகின்றன. ஈவிரக்கமின்றியும் தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொள்கின்றன. இவை வெறுக்க வைத்தாலும், நாம் அறியாதது அல்ல.

மிராலின் அன்புக்குரியவன் பாதையால் செல்லும்போது சடுதியாக பாதுகாப்புச் சாவடியுள் இழுத்து ஓசையின்றி கொன்று முடிக்கிறார்கள். அவன் குற்றவாளியாக இருக்கலாம். இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் கைது செய்தல், விசாரணை, நீதிமன்றம், வழக்கு என எதுவும் இல்லாது மறைவாகக் கொன்று தடயமின்றி அழிக்கப்படுகிறான். பல வருடங்களின் பின் புதைகுழியிலிருந்து மீட்கப்படக் கூடிய இனங்காணப்படாத உடலின் எச்சங்களில் இவனதும் அடங்கியிருக்கலாம்.

இனவாத அரசுகள் இவ்வாறுதான் தமது இராணுவங்களுக்கு புனிதக் கடமையெனப் பெயர் சூட்டி அளப்பற்ற அதிகாரங்களை வழங்குகின்றன. தட்டிக்கேட்க யாருமில்லை.

ஆனால் அதே நேரம் விடுதலை இயக்கங்கள் இனவிடுதலை என்ற பெயரில் தமது மக்கள் மனங்களை மூளைச்சலவை செய்கின்றன. பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லுதல் ஆட்கடத்தல் என பயங்கரச் செயல்களில் ஈடுபடுகின்றன. தாம் செய்யும் ஜனநாயக விரோத, தனிமனித சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் சரியானவை என நம்ப வைக்கும் செயற்பாடுகளில் முனைகின்றன.

முரணான இந்த இரு பக்கங்களையும் இத் திரைப்படம் காட்சிப்படுத்த முனைகின்றது. அதனால் இஸ்ரேல் சார்பான அமெரிக்க மற்றும் மேற்குலக மக்கள் இது பலஸ்தீனக் குரலாக மட்டுமே ஒலிக்கிறது. பக்க சார்பானது எனக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் பாலஸ்தீன பக்கம் சார்பானவர்கள் இது தமது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது என கோபப்படுகின்றனர்.

அன்பு, அமைதி, விட்டு;கொடுத்தல், கல்வியால் சமுதாயத்தை முன்னேற்றலாம் என்ற நம்பிக்கைளின் சின்னமாக ஹின்ட் ஹீசெனி இருக்கிறாள். நடியா பாதிக்கப்பட்ட அபலையாக இருக்கிறாள். பற்றீமா விட்டுக் கொடுக்காத முரட்டுப் போராட்டத்தை நாடுகிறாள். இவர்களுக்கிடையே வந்த புதிய பரம்பரையின் சின்னமான மிரால் வருகிறாள். அவள் தேர்ந்தெடுக்கும் பாதை என்ன? அதைத்தான் இப்படம் பேசுகிறது.

பாலஸ்தீனியப் போராளியான ஹனி, மிராலின் மனத்தில் இடம் பிடிக்கிறான். ஹனி மீதான ஈர்ப்பும், பாலஸ்தீனியப் விடுதலை இயக்கம் மீதான பற்று ஒரு புறமும் கல்வி, சச்சரவற்ற எதிர்காலம், தகப்பன் மேலோன அன்பு ஆகியவை மறுபுறமும் அலைக்கழிக்கின்றன. போதாக்குறைக்கு சந்தேகத்தின் மேல் கைது செய்யப்பட்டு கடுமையான விசாரணைக்கு ஆட்படுகிறாள். மிருதுவான அவளது முதுகுப்புறம் புண்படுமாறு அடிவாங்குகிறாள்.

ஒருவாறு விடுபட்டு வெளிவந்தபோது அவளது அன்புக்குரியவனே அவள் மீது சந்தேகப்படகிறான். காட்டிக் கொடுத்தவள் எனக் குற்றம் சாட்டுகிறான். குற்றம் செய்யாத அவள் மனம் துய்ந்து போகிறது. விடுதலை இயக்கம் மீதான முரட்டுப் பற்றுதலால் தமது அன்புக்குரியவர்களையே சந்தேகிக்கும், கொலையும் செய்யத் துணிந்த மனிதர்களைக் கண்ட எமக்கு இது ஆச்சரியமானதல்ல, ஆயினும் மனம் நோகிறது.

மிராலின் தகப்பனாக வரும் ஜமால் அற்புதமான பாத்திரம். Siddig கின் மிகையில்லாத நடிப்பில் சாதாரண அப்பனின் மனநிலையை உணரமுடிகிறது. தீவிரவாத இயக்கங்களிலிருந்து தனது மகளை காப்பாற்றி நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற தந்தையின் பாத்திரத்தை அழகாகச் செய்கிறார். மனத்தில் நிலைக்கிறார்.

படத்தை நெறியாழ்கை செய்திருப்பவர் Julian Schnabel ஆகும். ஏற்கனவே Before Night Falls, The Diving Bell and the Butterfly போன்ற சினிமாக்கள் மூலமாகக் கவனிப்பைப் பெற்றவராவார்.

Slumdog Millonaire Gfo; Fredia Pinto  புகழ் ; Fredia Pinto பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். ஆயினும் அவரது உருவம் அரபுப் பெண்கள் போலாக இல்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். கமெரா Eric Gautier பல காட்சிகள் மனதை அப்பிக் கொள்கின்றன.

இலங்கையில் திரையிடப்படவில்லை. படம் டிவீடியில் கிடைக்கிறது. முடிந்தால் பாருங்கள். எமது வாழ்வுடனான ஒற்றுமை வேற்றுமைகளை அசைபோட்டுப் பார்க்கலாம்.

ஞானம் சஞ்சிகையிலும், பதிவுகள் ( http://www.geotamil.com/pathivukalnew/) இணைய இதழிலும் வெளியான எனது கட்டுரை

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>

பிரபல எழுத்தாளரான நீல.பத்மநாதனின் சிறந்த நாவலான ‘தலைமுறைகள்’ திரைப்படமாக வெளிவந்துள்ளது. வ.கெளதமனின் நெறியாள்கையில் ‘மகிழ்ச்சி’ என்ற பெயரில் இது வெளியாகியுள்ளது. இலங்கையில் திரையிடப்பட்டதாகத் தெரியவில்லை.

இத் திரைப்படத்தை எதிர்வரும் ஞாயிறு 15.05.2011 அன்று இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் காட்சிப்படுத்த இருக்கிறது.

இடம்:- பெண்கள் கல்வி ஆய்வு மையம்
                கேட்போர் கூடம்
                58, தர்மாராம வீதி
                கொழும்பு 06.

நேரம்:- மாலை 4.30 மணி (ஞாயிறு 15.05.2011)

நல்ல திரைப்படங்களை ரசிக்க விரும்புபவர்கள் தப்பவிடக் கூடாத சிறந்த திரைப்படம்.

நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலைப் படிக்காத நல்ல வாசகன் இருக்க முடியாது. கைவிரல்களுக்குள் அடக்க கூடிய மிகச் சிறந்த தமிழ் நாவல்கள் எனப் பட்டியலிட்டால் அதற்குள் நிச்சயம் இது கட்டாயம் இருக்கும்.

கேரளத்தை அண்டிய தமிழ் பரப்பான குமரி மாவட்டத்தின் இரணியல் கிராமத்து செட்டிமார் சமுதாயதினரின் வாழ்வை இயல்பு கெட்டாமல் யதார்தமாகச் சித்தரிக்கும் படைப்பு எனலாம்.

வட்டார வழக்கு, சாதீயத்திற்கு எதிரான குரல், பெண்ணியம் ஆகியவை முக்கியத்துவம் பெறும் இந்நாவல் பிரச்சாரத்தனமான வரண்ட படைப்பு அல்ல.

ஒரு கிராமியச் சூழலில் சுமார் 50-60 வருடங்களுக்கு முன் நடந்ததாக வருகிறது. அக் காலத்தில் நினைத்தும் பார்க்க முடியாத மறுமணம், அதுவும் கணவன் உயிரோடு இருக்கும்போது, அதே கிராமத்தில் நடப்பது முடியாத காரியம். இவற்றை துணிந்து கூறும் மிகச் சிறந்த இலக்கியம் எனலாம்.

அந்தக் கதையைத்தான் இப்பொழுது மகிழ்ச்சி என்ற திரைப்படமாகத் தருகிறார் இயக்குனர் கௌதமன்.

Read Full Post »

>

சுதந்திர வேட்கையுடன் நெடும் பயணம்

The way back  ஆங்கில சினிமா


சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட.

Janusz (Jim Sturgess)  சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள்.

மறுபுறத்தில் விசாரணை செய்யும் இராணுவ அதிகாரியின் இறுகிய முகம்.

“உன் மனைவியே நீ அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினாய் என்கிறாள். இப்பொழுது நீ குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?”

“நீங்கள் அவளுக்கு என்ன செய்தீர்கள்” எனக் கேட்கிறான். விடை கேள்வியாக, இல்லை என மறுப்பது போலத் தலை ஆட்டிக்கொண்டே.

அவளாகச் சொன்ன சாட்சியம் அல்ல. அவனுக்கு எதிராகச் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறாள். ஜனநாயக மரபுகள் குழிதோண்டிப் புதைக்கபட்டு, ராணுவம் நீதி வழங்கும் சூழலில் இதுதான் நடந்திருக்கும் என்பது சொல்லாமலே புரிகிறது. 

படம் இவ்வாறுதான் ஆரம்பித்திருந்தது.

1940ல் சைபீரியன் குலாக்கு (gulag)   சிறைக்கு மனித மந்தைகளாக அனுப்பப்படுபவனில் அவனும் ஒருவனாகிறான். சைபீரியாச் சிறை என்ற பெயர் சொன்னாலே மரணம் வந்துவிடும் அக்காலத்தில். கட்டங்களில் அடைத்து வைக்க வேண்டிய சிறை அல்ல. திறந்தவெளிச் சிறை. 5 மில்லியன் சதுர வெளி கொண்ட பாரிய பிரதேசம். சைபருக்குக் கீழ் பல பாகைகள் என்றதான கடும் குளிரில் விறைத்தே பலர் மரணடைவார்கள். ஜீவிதத்திற்கும் மரணத்திற்குமான போட்டி நிறைந்த சூழலில், அதன் பனி படர்ந்த பெருவெளிகளைத் தாண்டி எவனும் தப்பிச் செல்வதை நினைக்கவே முடியாது.

ஆனால் அவனும் இன்னும் ஆறு பேரும் சேர்ந்து அதிலிருந்து தப்பிச் செல்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சியிலிருக்கும் ரஷ்யாவின் சைபீரியாச் சிறையிலிருந்து தப்பி மொங்கோலியா நாட்டைச் சென்றடைவதுதான் அவர்களது இலக்கு.

தங்களிடையே இரகசிமான தொடர்பாடல்கள், மிகத் துல்லிமான திட்டமிடல், நீண்ட பயணத்திற்கான துரித ஏற்பாடுகள் யாவும் செய்யப்படுகின்றன. ஒளி கொடுக்கும் ஜெனரேட்டரின் செயற்பாடு இவர்களால் நிற்பாட்டப்பட்டு, மாற்று ஒளி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் காவலாளிகளால் செய்யப்படுவதற்கு இடையில் கிடைக்கும் 10 நிமிட இடைவெளியில் இவர்கள் தப்பியாக வேண்டும். நம்ப முடியாததைச் செய்து முடிக்கிறார்கள்.

இதற்குப் பிறகும் கால்நடையான அவர்களது 4000 மைலுக்கு மேலான தப்பிக்கும் முயற்சியில் பல உயிராபத்து மிகுந்ததும், திகிலூட்டக் கூடியதுமான பல சவால்களை எதிர் கொள்கிறார்கள். சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மரண வாயில்களை துச்சமெனத் தாண்டிச் செல்லும் ஞானிகளின் முயற்சி போன்றது. வியக்கவைக்கும் காட்சிகள். ஆனால் அவை யதார்த்தமாகக் காட்சிப்படுத்தப்படுகிறன.

ஆனால் இவர்களை அழிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் காத்திருக்கின்றன. மனிதனால் செய்யப்பட்ட சூழ்ச்சிகள் அல்ல. கொடூரமான சீதோசன நிலை. வடதுருவத்தை அண்டிய பிரதேசத்தின் பரந்த வெளியும், விறைக்க வைத்தே கொல்லும் அடர்ந்த பனியின் ஆவேசமும் இவர்களை எதிர்கொள்கின்றன. அவற்றை எதிர்கொள்கிறார்கள். தாண்டுகிறார்கள்.

இந்த அயரவும் அசரவும் வைக்கும் பயணத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் ஒத்த கருத்துள்ள ஒரே தன்மையானவர்கள் அல்ல. மாற்றுக் கருத்துகளும், கொள்கை முரண்பாடுகளும் அவர்களிடையே இருக்கின்றன. இதனால் ஒருவருடன் ஒருவர் முரண்படவும் செய்கிறார்கள். ஆனால் சுதந்திரம் என்ற ஒரே குறிக்கோளால் ஒன்றுபடுகிறார்கள். இந்தப் பயணம் அவர்களது உடலைப் பாதிப்பது போலவே மனத்தையும் பாதிக்கிறது.

இந்த உடல் உளப் பாதிப்புகளை திரையில் கொண்டுவருவது மிகவும் சிரமமானது. ஆயினும் பொருள் செறிந்த வசனங்களும், சிறந்த நடிப்பும் கைகொடுக்கின்றன. அவர்களது உடல்உள மாற்றங்களை புலன் காட்சிகளாக கொண்டு வருவதில் அற்புதமான ஒப்பனை உதவுகிறது. முக்கியமாக அவளது மரணக் காட்சி. கடும் அனல்காற்றால் துவண்ட அவர்களது முகங்கள் ஆகியவற்றை நம்பவைக்கும் விதமாக காட்சிப்படுத்துவதில் ஒப்பனை கைகொடுத்திருக்கிறது.

இவர்களில் ஒருவனான இரவுப் பார்வையற்றவன் வழியில் குளிரில் விறைத்து இறந்துவிடுகிறான். வழிதவறிய அவன் இவர்களைத் தேடியலையும்போது இது நடக்கிறது. இவர்கள் இருந்த இடத்திற்கு மிக அருகிலேயே அவன் மரணித்துக் கிடப்பதைக் காண்கிறோம். மரணத்திற்கும் வாழ்வுக்குமான இடைவெளி சில அடி தூரமாக அக்கணத்தில் இருந்தது. ஆனாலும் அவனால் இயற்கையை வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் இயற்கையின் ஆவேசங்களுக்கு எதிராகப் பல்லாயிரம் மைல் தூரத்தை தாண்டி சுதந்திரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டிருந்தார்கள்.

வழியில் இன்னொரு பெண்ணும் இவர்களோடு இணைகிறாள். பாலைவனத்து வெம்மை தாங்காது அவளும் வழியில் மரணிக்கிறாள்.

பயணத்திற்கு இடைஞ்சலாக இருந்தவை பனியும் வெயிலும் மட்டுமல்ல. பசியும் பட்டினியும் அவர்களைக் காவுகொள்ளத் துடிக்கின்றன. மீண்டும் அகப்படுவதிலிருந்து தப்புவதற்காக மனித சஞ்சாரமற்ற பிரதேசங்கள் ஊடாகப் பயணிப்பதால் உணவு கிடைப்பது பெரும்பாடாகிறது. ஊர்ந்து செல்லும் பாம்பையும் அவர்களது பசியின் கொடுமை விட்டு வைக்கவில்லை. நஞ்சுள்ள அதன் தலையை வெட்டி எறிந்துவிட்டு நெருப்பில் சுட்டு உண்கிறார்கள்.

மற்றொரு தருணம் சற்று அருவருப்பானது என்றால் கூட அவர்களுக்குச் சாத்தியமானது அந்நேரத்தில் அது ஒன்றுதான். ஓநாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு ஒதோ ஒரு மிருகத்தைப் புசித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் ஒன்று சேர்ந்து அவற்றை விரட்டியடித்துவிட்டு அந்த ஊனைத் தாங்கள் பங்கிட்டு பசி ஆறுகிறார்கள்.

இவ்வாறு நடக்க முடியுமா என நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவற்றை யாதார்த்தமான செயற்பாடுகள் ஊடாகத் திரையில் காட்டி எம்மை மலைக்கவும் திறந்த வாய் மூடாது பார்த்திருக்கவும் செய்த நெறியாளர் Peter Weir  பாராட்டுக்குரியவர். “The Truman Show”, “Dead Poets Society”, ஆகிய சினிமாக்கள் அவரது குறிப்பிடத்தக்க முன்னைய படைப்புகளாகும். சுமார் ஆறு வருடங்களுக்குப் பின்னான இப்படத்திலும் அவரது கைவண்ணம் பளிச்சிடுகிறது. 

சோவியத் யூனியன், ஸ்டாலின், கொம்யூனிசம் ஆகியவற்றிக்கு எதிரான அரசியல் சினிமாதான் இது. அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை அவர்கள் செய்வதாகக் காட்டுகிறது.  கோட்பாட்டு ரீதியாக நாம் அதை ஏற்று கொள்ள வேண்டியதில்லை. இன்றுள்ள உலக நடப்பில் இப்படத்தின் அரசியல் கூடச் செல்லாக் காசாகிவிட்டது. மேற்கு நாடுகளின் குள்ள நரித்தனமான அரசியலும் எமக்குத் தெரிந்ததுதானே.

ஆனால் இந்தச் சினிமா என்னைக் கவர்ந்ததற்குக் காரணம் மிக அற்புதமான இயற்கைக் காட்சிகளைக் கொண்ட படப்பிடிப்பும், யதார்த்தமான சித்தரிப்பும்தான். அதற்கு மேலாக அது கொண்டு வரும் மற்றொரு செய்தி முக்கியமானது. விடாமுயற்சியும் திடசங்கற்பமும் இருந்தால் செய்வற்கு அரியதையும் செய்து முடிக்கலாம் என்பதாகும். மனிதனால் முடியாதது எதுவுமில்லை.

இது ஒரு உண்மைக் கதை என்று சொல்லப்படுகிறது. Slavomir Rawicz முன்பு எழுதி வெளிவந்த சுயசரிதை நூலான “The Long Walk” இருந்துதான் இப்படத்திற்கான கதை எடுக்கப்பட்டது. ஆயினும் வேறு பலரின் அனுபவங்களும் கேட்டறியப்பட்டனவாம்.

பஞ்சு போலச் சொரிந்து கொண்டேயிருக்கும் பனித்துளிகள். மூடி நிற்கும் கனத்த வானம், பனி படர்ந்த வெறும் தரைகள். உறைந்து கிடக்கும் நதிகள். பனியால் ஆடை போர்த்தி இலையுதிர்த்தி உறைந்திருக்கும் நெடு மரங்கள்.

நீண்ட பயணத்தின் பின் சூழல் மாறுகிறது. வனப்புடைய இயற்கையான நிலப்பரப்புகள், மைல் கணக்கான தூரத்திற்கு நீரையே காண முடியாத வரண்ட வனாந்தரங்கள், மனிதனையே விழுங்கி ஏப்பமிடக் கூடிய மலைப் பாம்புகள் போன்ற மணற் புயல்கள். மலைகள், தேயிலைத் தோட்டங்கள். காணக்கிடைக்காத இயற்கையின் அற்புத கோலங்கள் எங்கள் முன் விரிகின்றன.

ஒருவாறு மொங்கோலிய எல்லையை எட்டிய மகிழ்ச்சியில் மூழ்கிய இவர்களுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. பாதையில் உள்ள வரவேற்பு வளைவில் ஸ்டாலினதும், மாவோவினதும் சித்திரங்கள். இனி அங்கு போக முடியாது. அங்கும் கம்யூனிச ஆட்சி. அரசியல் புகலிடம் பெறமுடியாது. எனவே இந்தியாவுக்குப் பயணமாக முடிவெடுக்கிறார்கள். பனியையும், பாவைவனத்தையும் தாண்டி சுதந்திரத்தை நெருங்கி வந்தவர்கள் எதிரே பெரும்தடையாக உயர்ந்து நிற்கிறது இமயமலை.

இறுதிக் காட்சி. அவன் தனது வீட்டிற்குத் திரும்புகிறான். அதே வீடு, அதே விட்டு வாசல். அதே கதவு எல்லாமே அவ்வாறுதான் இருக்கின்றன. உள்ளே செல்கிறான்.

ஆனால் அங்கே! ஒரு முதியவள் சோகம் அடர்ந்த முகத்தோடு அமைதியாக அமர்ந்திருக்கிறாள். யாரோ வரும் அசமந்தம் கேட்டு நிமிர்ந்த அவள் புரியாத முகத்தோடு அவனைப் பார்க்கிறாள். புன்னகைத்த அவன் முதியவனாக அவள் கைகள் மேல் தன் கை வைத்ததும் நேசமானதும் அவளுக்குப் பரிச்சமானதுமான அவனது ஸ்பரிசத்தில் அவள் முகம் மலர்கிறாள். பல தாசப்தங்களாக அவன் நினைவுகளை மட்டும் சுமந்து காத்திருந்த அவளுக்கு பலன் கிட்டிவிட்டது.

பொய் சொல்லியேனும் உயிரோடு இருந்ததால்தான் அது சாத்தியமானது.

உயிருக்காப் பொய் சொல்வது கோழைத்தனமானது அல்ல. அது ஒரு தந்திரோபாய முயற்சிதான். ஏனெனில் உயிரோடு இருந்தால் வெல்வதற்கான வாய்ப்பு மீண்டும் கிடைக்கலாம். மரணித்துவிட்டால் மீண்டும் வெல்வதாற்கான வாய்ப்பே இல்லாத இறுதித் தோல்வியாகும்.

ஞானம் மே 2011 இதழிலும், பதிவுகள் இணையத் தளத்திலும் பிரசுரமான எனது கட்டுரை

எம்.கே.முருகானந்தன்.
0.0.00.0.00.0

Read Full Post »

>

 சோகத்தில் உழலும் வாழ்வுதான் இல்லத் தலைவியெனப் போற்றப்படும் பெண்களுக்கு சபிக்கப்பட்டதா?
இல்லக் கடமைகள் அனைத்தும் அவள் தலையில்தானா?

பிள்ளைகளைப் பெற்றெடுப்பது, அவர்களை வளர்ப்பது, சமைப்பது, துணிகள் துவைப்பது, கூட்டுவது துப்பரவு செய்வது என, என்றுமே மீளமுடியாத சுழல் சக்கரத்தில் மாட்டியிருக்கிறாளா?

கணவனை மகிழ்ச்சிப்படுத்துவதும்
அவன் விரும்பும்போது அவனோடு படுத்தெழும்புவதும் அவளது மற்றொரு கடமை என்று சொல்லலாமா?
இவை யாவற்றையும் அவள் மனம் கோணமால் செய்தபோதும், கர்ப்பமாயிருக்கும் காலத்திலும்
பாலூட்டும் நேரத்திலும் உறவு கொள்வதில் சிரமங்களும் தடங்கல்களும் ஏற்படும்போது என்னவாகிறது?
தனது இச்சைகளைத் தணித்துக் கொள்ள வேறு பெண்ணை அவன் நாடுவது என்ன நியாயம்?

இவற்றை அவள் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதானா?

தனது மனஉணர்வுகளை வெளிப்படுத்தாது, பரத்தையிடம் கணவனைச் சுமந்து சென்ற சங்ககாலப் பெண்போல அடங்கிக் கிடப்பதுதான் குடும்பப் பொறுப்புள்ள பெண்ணின் தலைவிதியா?

இது போன்ற பல கேள்விகள் என் மனத்தில் எழுந்தன. கில்லீசின் மனைவி என்ற பிரஞ்சுத் திரைப்படத்தைப் பார்த்த போது ஏற்பட்டது.

நம்பிக்கைத் துரோகங்களும், துன்பங்களும் அவளைத் துரத்திய போது அவள் பொங்கி எழவில்லை. வார்த்தைகளை அள்ளி வீசவில்லை. கண்ணீர் விட்டுக் கலங்கவும் இல்லை.
மாறாத புன்னகை அவள் முகத்தை எப்பொழுதும் அலங்கரித்தது.
மோனா லிசாவின் புன்னகை போன்றதே எலிசாவின் புன்னகையும். மௌனமாக பொதிந்தும் ஆயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்தியது.

அந்தப் புன்னகை ஒரு புதிராக திரைப்படம் முழுவதும் எம்முடன் பயணித்துக் கொண்டேயிருந்தது.

எலிசாவாக நடிப்பவர் திறமையான நடிகையான Emmanuelle Devos ஆகும். The beat that my heat skipped, Read my Lips  மற்றும் Kings and Queen போன்ற படங்கள் ஊடாகப் பரிச்சமானவர்.

துயரங்களை அடக்கிக் கட்டுப்படுத்தி, புன்னகை முலாம் பூசிய அவளது உளநெருக்கீடும் மனத்துயரும் ஒரு சில தடவைகள் கட்டு மீறி வெடித்துச் சிதறி வெளிப்படவே செய்கிறது. மிக நுட்பமாக அவளது உணர்வை காட்சிப்படுத்த நெறியாளர் எடுத்த யுக்தி மிகவும் வித்தியாசமானது.

அமைதியும் மென்பனியும் பூத்துக்கிடங்கும் ஒரு காலை நேரம். அவள் தனது காய்கறித் தோட்டத்தில் வேலை செய்கிறாள்.
வழமையான அமைதியுள்ளவளாக இன்றி அவசரமாகவும் ஒருவித முரட்டுத்தனத்துடனும் செயற்படுகிறாள்.
களைகளைப் பிடுங்கி அதன் வேர்களில் ஒட்டிக் கிடக்கும் மண்ணை ஆவேசமாகத் தட்டி உதறி வீசுகிறாள்.

காய்கறி செடிகளின் சொந்த மண்ணில் அதற்கே உரித்தான போஷாக்கை கள்ளமாக மறைந்து நின்று வேர்பரப்பி நின்று உறிஞ்சும் களைகளைத்தான் அவ்வாறு ஆவேசமாக பிடுங்கி அகற்றுகிறாள். மற்றொரு தடவை போட்டோ பிறேம், கோப்பை ஆகியவற்றை உடைப்பதின் ஊடாகப் புலனாகிறது.

தனக்கே சொந்தமான தனது கணவன் கில்லியை, தனது சொந்த இரத்தத்தில் பிறந்த தனது சொந்தத் தங்கையே அபகரித்துக் கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாத ஒரு சாதுவான மனைவியால் அதைத்தான் செய்ய முடிந்தது.

கில்லிசின் மனைவி எலிஸா பொறுப்புள்ள மனைவி. அவளது கணவன் சுரங்கத் தொழிலின் கடும் வெப்பத்தில் வேலை பார்த்தபோதும் பொறுப்புள்ளவன். தனது மனைவியில் ஆறாத அன்பு கொண்டவன். வீட்டு பணிகளிலும் அவளுக்கு உதவுபவன்.

கில்லிஸ் Colvis Cornillac தனது வேலைத்தளத்திலிருந்து இரவு திரும்பும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது.
வீடு திரும்பிய அவன் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை அணைத்து, முத்தமிட்டு மெதுவாகத் துயிலெழுப்பி உறவு கொள்கிறான்.
உறவின் பின் ‘நான் உனக்கு வலியைத் தந்துவிட்டேனா?’ என்று கேட்குமளவிற்கு அவளில் அன்பும் அக்கறையும் கொண்டவனாயிருக்கிறான்.

மிகக் குறைவான வசனங்களே பேசப்படுகின்றன. பேசப்படும் ஒவ்வொன்றும் மிகவும் அத்தியாவசியமானதாகவும், கருத்தாளம் மிக்கவையாகவும் இருக்கின்றன.

உடலுறவு இப்படத்தில் குறியீடு போல மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தப்படுகிறது.
ஆனால் அவை கிளர்ச்சி ஊட்டுவதற்காக அங்கங்கள் அனைத்தையும் புட்டுக்காட்டும் காட்சிகள் அல்ல.
பெரும்பாலும் முகங்களும் கைகளுமே வெளியே தெரிகின்றன.
தடித்த போர்வையுள் மூடுண்டு கிடக்கும் உடல்களின் அசைவு அவ்வப்போது தெரிகிறது.

மூன்று தடவைகள் வருகின்றன. அவை ஒவ்வொன்றும் அத் தம்பதிகளிடையே வெவ்வேறு நேரங்களில் நிலவும் உறவின் பரிணாமத்தை தராசுபோல அளந்து உணர்த்துபவையாக இருக்கின்றன. அன்பின் அன்னியோன்யம், நெருடல், விரிசல்  ஆகியன தெளிவாக தெரிகின்றன.

சதா புன்முறுவல் மாறாத முகத்துடன் இருந்தாலும் மனதிற்குள் பொங்கியெழும் மாறுபட்ட உணர்வுகளை டிவோசின் (எலிசா) முகபாவங்கள் அற்புதமாகக் வெளிப்படுத்துகின்றன.

உறவு மிக நெருக்கமாக இருந்தபோது காட்டப்படும் முதலாவது காட்சியின், அக முக நிறைவு இரண்டாவதில் இருக்கவில்லை.
மூன்றாவதில் அவனது சற்று முரட்டுத்தனமான குதப்புணர்ச்சி அவளுக்கு வேதனையளித்தாலும் மாறாத புன்னகையுடன் சகிப்பது புரிகிறது.

உடல் உறவால் மட்டுமின்றி சாதாரணமாகக் கட்டியணைக்கும்போது கைகளின் நிலை, முத்தமிடும் போது உற்சாகமாக முத்தமிடுவது, அன்றி கடமைபோல ஏனோதானோ என முத்தமிடுவது, வீட்டை விட்டு வெளியேறும் போது கதவை மூடுவதில் உள்ள வேறுபாடுகள் ஊடாகவும் அவர்கள் குடும்ப உறவின் அன்னியோன்யமும் விரிசலும் எமக்கு தெளிவாகின்றன.

நாலாவது தடவை படுக்கையில் இருக்கும்போது, எலிசா அவனை அணைத்து உறவுக்கான சமிக்கையை விடுத்தபோது அவன் மறுபக்கம் திரும்பிப் படுத்துவிடுகிறான்.
அவளது வசீகரமும், அணைப்பும் இப்பொழுது அவனது மனத்திலில்லை. அவனது மனத்தில் இப்பொழுது வேறு யாரோ குடிபுகுந்து இருக்கிறாள் அல்லது புதியவள் பற்றிய நினைவுகளால் அலைக்கழிந்து கொண்டிருக்கிறான் என்பதுதானே காரணமாக இருக்க முடியும்.

மன உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளைத் தேடாது, நெகிழ்ச்சியான சம்பவங்கள் ஊடாக மனதில் அப்பிப் பிடிக்கச் செய்யும் வண்ணம், நுட்பமாக படத்தை நெறியாள்கை செய்திருப்பவர் Frederic Fonteyne திறமான நெறியாள்கை. ‘A Poronograpic Affair’  என்ற படத்தை நெறியாள்கை செய்திருக்கிறார் என அறிகிறேன். ஆனால் நான் பார்த்ததில்லை.

அவசியத்திற்கு அப்பால் சிறு உரையாடல்கள் கூட இல்லை.
ஆனால் மௌனம் மொழியாகி எம்மோடு பேசுகிறது.
உணர்வுகளில் ஊடுறுவி அலைக்கழிக்கிறது.
அவளது மௌனம் பேசாப் பொருளெல்லாம் பேசுகின்றன.

உண்மையில் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருப்பது எலிசா என்ற அவளது பாத்திரம்.
ஆனால் அதற்கு அப்பால் அப் பாத்திரம் எம் மனத்தைவிட்டு அகலாதிருப்பதற்குக் காரணம் இம்மானுவல் டிவோஸ் என்ற அந்த நடிகையின் அபாரமான நடிப்பு.
அவளது நடிப்பின் வெற்றிக்கு முக்கிய பலமாக இருப்பது அவளது மர்மம் பொதிந்த புன்னகையும், விழியை மொழியாக்கிய அகன்ற விழிகளும்தான்.

கதை பிரான்சு தேசத்தின் குடியிருப்பு ஒன்றில் 1930 நடப்பதாக இருக்கிறது. 1937ல் பெல்ஜியம் நாட்டின் Madeleine Bourdouxhe எழுதிய நாவலான La Femme de Gilles தழுவியது. உலக மகா யுத்தம் ஆரம்பிப்பதற்கு சற்று முந்திய காலம். திரைப்படத்தின் ஒரு கட்டத்தின் பின்னணியில், பயிற்சிக்காக நகர்ந்து செல்லும் சிறு இராணுவ அணியால் இச் செய்தி புலப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் அவ்வாறு இருக்க முடியாது.

தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் தாரைவார்த்து  மனைவியாக நீடிக்க வேண்டும், தன்னை விட்டு தள்ளிச் செல்லும் அவனை மீட்டெடுக்க வேண்டும் என்றெல்லாம் சிந்தித்து செயற்படுவது, ஏற்க முடியாத பத்தாம் பசலிக் கொள்கையாக தெரியலாம்.

அவனது இன்றைய காதலியும் தனது தங்கையுமான விக்டோரியா வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருக்கிறாளா என்பதை அறிய அவனுக்காக வேவு பார்க்கச் செல்வதும் நம்ப முடியாத கற்பனைச் சம்பவமாக தெரியலாம்.

அவற்றை இன்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். ஆயினும் இக்கதை கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் நடக்கிறது. அத்துடன் அது பிரான்சின் ஒரு கிராமப் பகுதியாகவும் இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய காலகட்டத்தில் ஒரு பெண்ணால் அவ்வாறுதான் வாழ முடிந்தது. அவளுக்கான சுதந்திரம் அந்தளவுதான் இருந்தது.
அது அவர்களின் சின்ன உலகம். அதற்கு அப்பால் அவர்களது பார்வை நீண்டிருக்கவில்லை.
அது பற்றிச் சிந்திக்கவும் தெரியாது.
அவற்றைத் தாண்டி சாகசப் பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய துணிச்சலும் அப் பெண்களுக்கு இருக்கவில்லை.

தனக்காக தனது மகிழ்ச்சிக்காக அவள் வேவு பார்க்க முன்வரும்போது, அவள் எவ்வளவு தூரம் தன்வாழ்வை விட்டுக் கொடுக்கிறாள், தன் வாழ்வையும் உணர்வுகளையும் தியாகம் பண்ணுகிறாள் என்பதைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவனாக அந்த ஆண்மகன் இருக்கிறான்.
சபல புத்தியும் சுயநலமனப்பாங்கும் மேலோங்கும் போது பகுத்தறிவு குழிதோண்டிப் புதையலுறுகிறது.

அவன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்கிறான் என்பதை உணர்ந்தவுடன் அவளுக்கு கலந்தாலோசிக்க யாரும் இருக்கவில்லை. ஆறுதல் சொல்லவும் நாதியில்லை. மற்றவர்களுக்கு பகிரங்கப்படுத்தி தனது குடும்ப கௌரவத்தை இழக்கவும் முடியாது.

இந்த நிலையில் அவளுக்கு ஆலோசனை வழங்க, நெறிப்படுத்த இருந்தது ஒரே ஒரு இடம்தான். அதுதான் தேவாலயம். அங்கு பிரார்தனை செய்து மனமாற நினைக்கிறாள். சந்தடி மிகுந்த சூழலில் அவளால் முடியவில்லை.

பாதிரியாரிடம் செல்கிறாள். பாவமன்னிப்பு கேட்க.

தான் செய்யாத தவறுக்காக பாவமன்னிப்பு கேட்கிறாள். அபத்தமாகத் தெரிகிறதா. ஆனால் அதுதான் அவர்களின் நிஜ வாழ்வு.

தட்டுத் தடுமாறி வார்த்தைகளைக் கோர்த்துப் பேசுகிறாள்.

“எனது கணவன் எனது தங்கையுடன் தொடர்பு வைத்திருக்கிறான். ஆனால்… என்னால் எதிர்த்துப் பேச முடியவில்லை, அப்படிப் பேசினால் அவர் என்னை விட்டுப் போய்விடுவார். எனவே என்னால் எதுவுமே…”

அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை. எதைக் கோருவது என்ற தெளிவும் இல்லை. சற்றுத் தாமதித்து வார்த்தைகளை ஒவ்வொன்றாகச் சேகரித்து “எனக்கு உதவி வேண்டும்… என்ன செய்வதென்று தெரியவில்லை” என்கிறாள்.

பாதிரியாரை நாம் காணவில்லை. அவரது குரல் மட்டுமே கேட்கிறது. ஆனால் அது அவளது துன்பத்தைக் கேட்டு இரங்கும் குரல் அல்ல. ஆதரவு தரும் தொனியும் இல்லை. பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளாத ஒரு ஆணின் உணர்ச்சியற்ற சடக் குரலாக ஒலிக்கிறது.

“இறைவனால் உனக்கு அளிக்கபட்ட சோதனை அது. இறைவனுக்கு எதிராக எதுவும் செய்வதைத் தவிர்த்துக் கொள்.” என்று சொல்லிய அவர் தொடர்ந்து,

“உனக்கான தண்டனையைப் பொறுத்தவரை நீ பத்துத் தடவைகள் ஜெபம் செய்வாயாக” என நிறைவு செய்கிறார்.

அவள் செய்த பாவத்திற்குத் தண்டனை ஜபம். அதன் மூலம் நிலமை மாறிவிடும் என்று சொல்கிறார் என்றே நாம் புரிந்த கொள்ள வேண்டியிருக்கிறது.

பெண்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு ஆண்தானே  அந்தப் பாதிரியாரும்.
அவருக்கும் தேர்வு இல்லை.
தான் கற்றதை, தனக்குப் போதிக்கப்பட்டதை, புத்தகத்தில் உள்ளதைச் சொல்லிப் போகிறார்.

ஆனால் அவள் செய்த பாவம் என்ன என்று அவளுக்கும் புரியவில்லை. எங்களுக்கும் தெளிவில்லை.

அதன் பின் அவள் மனதைத் திடமாக்கிக் கொள்கிறாள். இயலாமை மேவ, அந்த வாழ்வுக்குள் சங்கமிக்க முயல்கிறாள். தான், தனது உணர்வு, தன்மானம் இவற்றையெல்லாம் மூட்டையாகக் கட்டி முதுகில் போட்டுவிடுகிறாள்.

எலிசாவாக என்றுமே அவள் வாழ முடியாது.
அவளுக்கு மட்டுமல்ல!

அப்படி வாழ்வதற்கான சாத்தியம் எந்த ஒரு பெண்ணுக்கும் அந்தச் சமூகத்தில் கிடையாது.
அவள் எலிசா அல்ல.
அவளுக்கென்று எந்தவொரு தனி அடையாளமும் கிடையாது.
அவள் கில்லீசின் மனைவி.
அவ்வளவுதான்.

அதைத்தானே படத்தின் பெயரான Gille’s Wife சொல்கிறது.

முடிவு இன்னும் சோகமானது. அதைச் சொல்வதற்கான வார்த்தைகளைக் கோர்க்க முடியாது மனது சோர்ந்து தவிக்கிறது. படம் முடிந்த பின்னும் BMICH  இன் தியேட்டரிலிருந்து எழ முடியவில்லை. கனத்த மனது கதிரைக்குள் முடங்கிக் கிடந்து சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருக்கவே தூண்டியது.

பிரஞ்சுத் தூதுவராலயம் சார்பில் நடந்த Bonjour Cinema திரைப்பட விழாவில் பார்த்த படம். நல்ல படத்தைக் காட்சிப்படுத்திய அவர்களுக்கு நன்றி.

அந்த முடிவுக் காட்சி துயரம் மிகுந்ததாக இருந்தபோதும் கலைநேர்த்தியில் மிகவும் அற்புதமாக இருந்தது.
மிக வித்தியாசமான கோணத்தில் படமாக்கியுள்ளார்.

தோய்த்த துணிகள் உலருவதற்காக மாடிவீட்டில் கட்டப்பட்ட கொடிகள். கள்ளம் கபடமற்ற வெள்ளை மனம் போன்று அதில் அவள் விரித்த துணிகள். தேவதைகளின் சிறகுகள் போல காற்றில் அவை அசைந்தாடும் லாவண்யம். திறந்து கிடக்கும் ஜன்னல்.
அதற்கு அப்பால் எல்லையற்று விரிந்து கிடக்கும் நீலவானம்.
தேவ லோகத்திற்கான பயணத்திற்கு வா வா என அழைப்பது போலிருந்தது.

துயர் சுமந்த அந்தப் பெண்ணின் மௌன மொழியிலான மர்மப் புன்னகையின் புதிர் எங்களையும் சூழ்ந்து கொள்கிறது.

இலங்கையில் திடையிடப்பட்டதாகத் தெரியவில்லை. டிவிடியில் கிடைத்தால் உங்களுக்கும் பார்க்கக் கிடைக்கும்.

எம்.கே.முருகானந்தன்.

நான் எழுதி வீரகேசரி வாரவெளியீடு 18.04.2010 லும் பதிவுகள் இணைய இதழிலும் வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்.
0.0.0.0.0.0

Read Full Post »

>பாரதி எமது மொழியின் முக்கிய கவிஞன். தேசவிடுதலைதை அவாவிய அவன் பெண் விடுதலை பற்றியும் பாட ஆரம்பித்தான். 

அவனது பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளை பாய்ச்சியவர் சகோதரி நிவேதிகா.

புத்துணர்வு பெற்ற பாரதியின் செயற்பாட்டை ‘பாரதி’ திரைப்படத்தில் இருந்து எடுத்துத் தந்திருக்கிறார்கள். இப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை தேவயானி பெற்றதாக ஞாபகம்.

பாரதியும் பெரியாரும் இன்னும் எத்தனை மனிதர்கள் வந்து பேசினாலும் பாடினாலும் பெரும்பாலான ஆண்களிடையே பெண்கள் பற்றிய பார்வை மாறவில்லை.

பல பெண்களும் கூட தங்களுக்கு இழைக்கப்படும் பொதுவான பாலியல் ரீதியான  அநீதிகளையும், குடுப்பத்தில் தங்களுக்கு காட்டப்படும் பாரபட்சங்களையும் எதிர்க் கேள்வி எழுப்பாது ஏற்றுக் கொள்வது கவலைக்குரியது.


Read Full Post »

புகைப்படக் கண்காட்சி போன்றதொரு திரைப்படம்

அண்மையில் வந்து அதிகம் பேசப்படாமலே போன ஒரு படம். போர்க்களம். அற்புதமான படம் அல்லாவிட்டாலும் சொல்லப்பட வேண்டிய விடயங்கள் பல உண்டு. சில காரணங்களுக்காகப் பாராட்டப்பட வேண்டியதும் கூட.

இரண்டு விடயங்களை முக்கியமாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. முக்கியமாக அதன் மிக வித்தியாசமான காட்சிப்படுத்தல் எனலாம். எந்தத் திரைப்படத்திலும் மிக முக்கியமான அம்சம் இதுவேயான போதும் மிகப் பெரும்பாலானவை வழமையாக போர்முலா வடிவை மீறுவதே இல்லை. இது மீறியிருக்கிறது.

இரண்டாவது கண்பார்வையற்றவன் பற்றிய மறுபக்கப் பார்வை எனலாம்.

போர்க்களம் இப்படத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் அற்புதமான படப்பிடிப்புத்தான். ஒவ்வொரு பிரேமும் மிகவும் அக்கறையோடு கலையம்சத்தோடு எடுக்கப்பட்டுள்ளன. ஒளிச் சேர்க்கை, வண்ணக்கோலம், வித்தியாசமான கமராக் கோணம் என அசத்தலாக இருக்கின்றன. புகைப்படப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கக் கூடிய படமாகும். புகைப்படக் கண்காட்சிகளில் மட்டுமே காணக் கூடிய கமாராக் கோணங்கள் திரைப்படம் முழுவதும் நிறைந்திருக்கிறது. இது தமிழ் திரைப்பட இரசிகர்களுக்கு முதல் அனுபவமாகவே இருக்கும்.

இரண்டாவது முக்கிய அம்சம் கண் தெரியாத ஒருவன் எவ்வாறு தனக்குள்ள புலக் குறைபாட்டை மேவுவதற்கு செவிப் புலனை எவ்வாறு அதிகபட்சம் பயன்படுத்துகிறான் என்பதாகும். உயிர் பிழைப்பதற்காக தாறுமாறாக ஓடுகிற ஒருவனை துப்பாக்கியால் சுடுமளவிற்கு அவன் தனது செவிப்புலனைத் தீட்டி வைத்திருக்கிறான்.

அந்தப் படத்தின் பிரதான பாத்திரம் கர்ணன். ஆனால் அவன் பார்வையிழந்தவன் என்பது படம் நீண்ட நேரம் பயணித்த பிறகே தெரிகிறது. அதுவரை அவனது பாத்திரம் சற்றுப் புதிராக இருந்தமை எதிர்பார்க்கக் கூடியதே. அவன் பிறவிக் குருடன் அல்ல. பள்ளி செல்லும் காலத்தில் ஒரு விபத்தில் அவனது கண்பார்வை பறிபோய்விடுகிறது. ஆனால் தனக்குள்ள குறையால் சோர்ந்து மனவிரக்திக்கு ஆளாகவில்லை. சவாலாக ஏற்றுக்கொள்கிறான். கேட்கும் திறனை முழுமையாகப் பயனப் படுத்திக் கொள்கிறான். ஓலியை கருவியாக்கி சூழலை தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்கிறான்.

கண்பார்வை அற்ற ஒருவனால் எப்படி இவ்வளவு வல்லமையோடு இருக்க முடிகிறது என்பதும், தனி ஒருவனாகப் பலரை வெட்டி வீழ்த்த முடிகிறது என்பதும் பலருக்கு மிகைப்படுத்தபட்ட காட்சிகளாகத் தோன்றாம். ஆனால் தமிழ்ப்படத்தின் சூப்பர் ஸ்டார் கதாநாயகர்கள் வழமையாக பலருடன் ஒரே நேரத்தில் மோதி வெல்வதை எமது ரசிகர்கள் எவ்வித ஆட்சேபமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். அது அதிமானுடச் செய்கையாகத் தெரியவில்லை. பலருக்கு அதுவே உவப்பானதாகவும் இருக்கிறது.

அப்படிப்பட்டவர்களுக்கு பார்வையற்ற இவனின் சண்டைக் காட்சிகள் ஆச்சரியமானதாக இருக்க வேண்டியதில்லை. இத்தகைய விதண்டா வாதத்திற்கு மேலாக, பார்வையற்ற ஒருவன் தன் முழுச் செவிப் புலனையும் செம்மையாகச் செதுக்கிப் பயன்படுத்தி; பார்வையுள்ளவர்கள் செய்யும் பல செயற்பாடுகளையும் அதே பூரணத்துவத்துடன் செய்ய முடியும் என்பது உண்மை.

மனிதர்கள் தங்கள் கண் பார்வையை, கேட்கும் ஆற்றலைவிட மிக முக்கியமானது என எண்ணுகிறார்கள்.

ஆனால் ஒரு குழந்தை பிறந்ததும் முதலில் ஒலிகளையே முதலில் உணர்கிறது. அத்திசையில் தலையைத் திருப்புகிறது. பார்வையால் சூழலை உணர நீண்ட காலம் அதற்குப் பிடிக்கிறது.

குழந்தையை விடுங்கள் உங்களை எண்ணிப் பாருங்கள். ஐந்து நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டிருந்து பாருங்கள். உண்மை புரியும். எவ்வளவு ஓசைகளை உங்களால் கேட்க முடிகிறது. காற்றின் சலசலப்பு, எங்கோ கூவும் குருவியின் குரல், காலடி ஓசைகள். எத்தனை எத்தனையோ.

இவை யாவும் நீங்கள் கண் திறந்திருக்கும் போதும் நிகழ்திருக்கவே செய்யும். ஆயினும் உங்கள் புலன் பார்வையிலேயே பெருமளவு தங்கி இருப்பதால் இவற்றைக் கேட்க ரசிக்க முடியவில்லை.

ஒரு ஓசை என்ன ஓசை என்பது மட்டுமின்றி அது எத் திசையிலிருந்து வருகிறது. அது நகரும் ஓசையா அல்லது ஒரே இடத்தில் நிலையான நிற்கும்  பொருளிலிருந்து பிறக்கிறதா என்பதையும் எம்மால் அனுமானிக்க முடிகிறது.

மேலே கூறிய காலடி ஓசையை அல்லது ஒரு ஓடும் வாகனத்தின் ஓசையை எண்ணிப் பாருங்கள். அது எந்தத் திசையிலிருந்து எழுகிறது. அது எம்மை நோக்கி வருகிறதா அல்லது எம்மை விட்டு அகல்கிறதா என்பதை எம்மால் கண் மூடியிருக்கும் போது ஒலியை மாத்திரம் கொண்டு அனுமானிக்க முடியும். நகரும் ஒலி எவ்வளவு வேகத்தில் எம்மை நோக்கி வருகிறது அல்லது பிரிந்து செல்கிறது என்பதையும் எம்மால் துல்லியமாகக் கூற முடியும்.

இதற்குக் காரணம் எமக்கு இரண்டு காதுகள் இருப்பதும், அவை சுமார்  அரை அடி தூர வித்தியாசத்தில் இருப்பதும், இரண்டும் வௌ;வேறு திசைகளை நோக்கி இருப்பதும்தான். இதனால் ஒரே ஒலி எமது வலது காதையும் இடது காதையும் வந்தடையும் நேரத்தில் சில செகனட் வித்தியாசம் இருக்கிறது. இந்த நேர வித்தியாசத்தை எமது மூளையானது கம்பியூட்டர் போல அனலைஸ் பண்ணுகிறது. இதனால் ஒலிகளின் திசையை, வேகத்தை, தீவிரத்தை எம்மால் உணர முடிகிறது.

கண் மூடியதும், காது மேலும் கூர்மையாகிவிடுகிறது. இக் கதாநாயகன் கர்ணன் இவ்வாற்றலை தனது முயற்சியால் மேலும் வளர்த்துக் கொண்டான்.

கதையில் எந்தப் புதுமையும் இல்லை. கிஷோர்(கர்ணன்) சத்யன் உதவியுடன் தனியாக வாழ்கிறான். கார் ஓட்டுவதிலிருந்து உணவு தேநீர், வீடு பாராமரிப்பு எல்லாம் சத்யன் எனும் ஒரே உதவியாளன் மட்டுமே. ஆந்திரா லங்காவின் தனிக்காட்டு ராஜாவான தாதா சம்பத் ஸ்மிதாவை கரம் பிடிக்க ஆசைப்படுகிறான்.

அவனிடமிருந்து தப்பித்து ஓடிவரும் அவள் கிஷோரிடம் தஞ்சம் அடைகிறாள். துரத்தி வரும் ஆந்திர தாதாக்களை துவசம் பண்ணிக் கலைக்கிறான். அரை மனத்தோடு தனது இடத்தில் தஞ்சம் கொடுக்கும் அவனில் அவளுக்கு காதல் வந்துவிடுகிறது. கண் பார்வை இல்லாததால் இதனை ஏற்க விரும்பாத கிஷோர் அவளை போலீசில் கொடுத்து வீட்டாரிடம் ஒப்படைக்கச் சொல்கிறான். அவர்களோ சம்பத்திடமே கையளித்து விடுகிறார்கள்.

மீதி படம் முழுவதும் ஆந்திரா தாதாக்களுக்கும் இவனுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான். இறுதியில் போர்க்களத்தில் அவர்களைத் தனியே சந்திக்கிறான். கண் தெரியாத இவன் எப்படி தனது உடல் பலத்தையும், செவிப் புலனையும், பகுத்தறிவையும் பாவித்து அவளைக் காப்பாற்ற முயல்கிறான் என்பதே கதை.

தாதாக்கள், ரோட்டு ரவுடிகள், சந்தர்ப வசமாக கொலையாளிகளாக மாறும் நல்லவர்கள் என தமிழ் திரையுலகு நிறையவே தந்தவிட்டது. ஆயினும் சுப்ரமணியபுரம் நாடோடிகள், ரேனிகுண்டா, வெண்ணிலா கபடிக்குழு என பல நல்ல படங்கள் அதனுள் கிடைத்திருக்கினறன.

அந்த வரிசையில் சேர்க்கத் தக்கது இது. தேவையற்ற காட்சிகள் கிடையாது. எந்த ஒரு பாத்திரமும் அவசியம் இன்றி படத்தில் இல்லை. படத்தின் ஓட்டம் சற்று மெதுவாக இருக்கிறது. வசனங்கள் மிகக் குறைவு. காட்சிகளால் நகர்கிறது. அதுவே அதன் பலம். சில தருணங்களில் பலவீனமும் கூட. ஏனெனில் கதையின் நகர்வை சில இடங்களில் தெளிவாகப் புரிந்த கொள்ள முடியாதிருக்கிறது.

காட்சி அமைப்பு மிக வித்தியாசமாக இருக்கிறது. பளீரென கண்ணைக் குத்துவது போலன்றி சற்றுக் கருமை படர்ந்த ஒளிஅமைப்பு. படப்பிடிப்பு ஒவ்வொரு பிரேமிலும் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொன்றாக பிரித்தெடுத்து அல்பத்தில் சேர்க்கலாம் போலிருக்கிறது. வண்ணங்கள் இயற்கையானவை அல்ல. இரண்டு கலர் டோன் மட்டுமே பயன்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மைதான் போலிருக்கிறது. பல எதிர்பாராத திருப்பங்களும், திகிலும் இருக்கிறது. மனதைச் சூழும் திகிலைத் தீவிரமாக்கத் பின்னணி இசையும் துணையாக இருக்கிறது.

விழிப்புலன் அற்றவர்களை நையாண்டி செய்யாது  உயரத்தில் நிறுத்தி வைத்த பெருமை மேஜர் சுந்தரராஜனுக்கு உண்டு. அக்காலத்தில் இரசித்த படம் அது – மேஜர் சந்திரகாந்.

இப்பொழுது விழிப்புலனற்றவனை மற்றொரு பரிமாணத்திற்கு உயர்த்தி வைத்த பெருமை  போர்க்களம் படத்திற்கு உண்டு.

வெண்ணிலா கபடி குழு சினிமாவில் கபடி கோச் ஆக வந்து மனதில் நின்ற கிஷோர் இத் திரைப்படம் மூலம் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமா உலகில் பெற்றிருக்கிறார். பொல்லாதவன், ஜெயம்கொண்டான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்ததாக அறிகிறேன். ஆனால் எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.

குளொஸ் அப் சொட்கள் இல்லை. இதனால் முகத் தசைகள் பேச வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆயினும் கிஷோரின் உடல் மொழி அற்புதமாகக் இருக்கிறது.

ரகுவரன், பிரகாஷ்ராஜ் வரிசையில் பிரகாசிப்பார் எனத் தோன்றுகிறது. பாத்திரத்திற்கு ஏற்ப அவரது குரலின் அடர்த்தியும் உதவுகிறது.
தன்னைச் சுற்றித் திரியும் காற்றின் மொழியை, அதன் ஒவ்வொரு அசைவையும் மிக நுட்பமாகக் கிரகித்து சூழலை தனது கணனி போன்ற மூளையில் பிரித்தறிந்து எதிர்வினை புரிவது அட்டகாசமாக உள்ளது.

எதிரியைத் தாக்கும்போது அவனது அசைவை நிதானமாக காது கொடுத்துக் கிரகித்து அவன் தன் கைக்கு அகப்படும் எல்லைக்குள் வந்ததும், எதிரி எதிர்பாராப் பிரகாரம் மரண அடி கெடுப்பதும் அசத்தலாக இருக்கின்றன.

ஆயினும் தனிமனிதன் இவ்வாறெல்லாம் செய்ய முடியுமா என்ற ஆராச்சிகளுக்குள் நாம் புகக் கூடாது.
இவை எமக்கு பரிச்சியமான ஒவ்வொரு தமிழ் ஹீரோக்களின் அதிமானுட நாயகர்களின் அடையாளங்களும்தான்.
அதையே புதுமை செய்யப் புகுந்த இயக்குனரும் பின்பற்றுவது ஏமாற்றம் தரவே செய்கிறது.

சண்டைக் காட்சிகளின் போது ஒவ்வொரு மரண அடி கொடுத்த பின் ஒரிரு கணங்கள் அசையாமல் நிற்பது அவனது ஸ்டைலான போஸாக இருக்குமோ என எண்ணினேன்.

ஆனால் மருத்துவனாக நின்று யோசிக்கும்போது கண் பார்வையின்றி ஒலியின் சலசலப்பில் மட்டுமே சூழலை அளக்கும் ஒருவனால் அப்படித்தான் இயங்க முடியும் எனப் புரிகிறது.
திடீரெனப் கொடுத்த அடியினால் பிறந்த ஓசையும், அடி வாங்கியவனது வேதனை ஒலியும் மேலோங்கி நின்று அவனது கவனத்தைத் திருப்பியிருக்கும்.
சற்று நிதானித்தே மீண்டும் சூழலுக்குள் அவனால் வரமுடியும். அதனால்தான் அப்படிச் சித்திரித்துள்ளார்கள்.

இவற்றை நடிகன் மாத்திரம் செய்ய முடியாது. இயக்குபவனின் பங்கு மிக அதிகம். பாண்டி சரோஜ்குமார் தனது முதல்படத்திலேயே பல புதுமைகளைச் செய்துள்ளார். பாங்காக் திரைப்படக் கல்லூரியில் இயக்குனராகப் பயின்றவர். மிக வித்தியாசமான இயக்குனர். திரைக் கதையில் இன்னும் சற்றுக் கவனம் செலுத்தி, படத்தின் வேகத்தையும் – முக்கியமாக பிற்பாதியில் சற்று அதிகப்படுத்தி இருந்தால் அற்புதமான படமாக இருந்திருக்கும்.

சத்யன்தான் கிஷோரின் உதவியாளன். அப்பாவித்தன நடிப்பினால் சிரிக்க வைக்கிறார். சற்று நேரம் மட்டுமே தோன்றினாலும் பிஜு மேனன் தனது நடிப்பாலும் துப்பாக்கி சாகசங்களாலும் மனதில் நிற்கிறார். ஸ்மிதா நாயகி பெரிதாக வேலையில்லை.

ஆனந்தனின் கலை இயக்கம் படத்தின் சிறப்பிற்கு மிகவும் உதவியிருக்கிறது.

பாடல்கள் சாதாரணம். ஆயினும் பின்னணி இசை பல இடங்களில் அருமையாக இருக்கிறது.
சில நேரங்களில் திகிலூட்டவும் செய்கிறது. இந்தி இசை அமைப்பாளரான ரோஹித் குல்கர்னிதான் இசையமைத்திருக்கிறார். நான்கு பாடல்கள். நா. முத்துகுமாரின் ஆக்கங்கள். மனதில் நிற்கிற மாதிரி இல்லை.

ஆயினும் படத்தின் சிறப்பாக மனதில் கடைசிவரை ஒட்டிக் கொண்டிருப்பது ஒளிப்பதிவுதான்.
ஒளியும் இருளும் காட்சிக்குக் அற்புதமான விகிதாசாரத்தில் கலந்து மந்திரஜாலமாக அசத்துகிறது. ஒவ்வொரு ஷாட்டும் கண்ணில் ஒற்றக் கூடியன.

முற்றிலும் எதிர்பார்க்காத, வித்தியாசமான கோணங்களில் அவரது கலையுணர்வை மோகிக்கும் வண்ணம்; பதிந்த மகேந்திரன் பாராட்டப்பட வேண்டியவர்.
ஆயினும் தேவராஜ், மற்றும் தேவா ஆகியோரும் பங்களித்திருப்பதாகத் தெரிகிறது. எழுத்து, காட்சியமைப்பு, இயக்கம் பண்டி சரோஜ்குமார் என்றே போடப்படுகிறது. எனவே இவற்றில் இயக்குனரின் பங்களிப்பும் கணிசமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

கோடரியும் வாளும் இணைந்தது போன்ற வித்தியாசமான ஆயுதங்கள்,
இறந்த மாட்டின் முள்ளந்தண்டு எலும்பு,
மண்டை ஓடு போன்ற பின்னணிகள் பயங்கரமாக இருந்தாலும் பகுத்தறிவுக்கு ஒத்துவரவில்லை.

இறுதியாகச் சொல்வதாயின்
மிகச் சாதாரணமான ஒரு கதையை சொல்லபட்ட விதத்திலும்,
வழமைக்கு மாறான காட்சி அமைப்புகளாலும்,
கமராக் கோணங்களினாலும் பேச வைத்திருக்கிறார்கள்.

வழமையான போர்முலா படம் அல்ல.
மிகுந்த ஆர்வத்தோடு செய்திருக்கிறார்கள்.
கதை ஓட்டம் பிற்பாதியில் தொய்ந்தாலும் கடைசிச் சண்டைக் காட்சி அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டள்ளது.

இறுதி வழமையான சுபம்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- வீரகேசரி

Read Full Post »

சென்ற வருடம் எழுதி மல்லிகை சஞசிகையில் வெளிவந்த இக்கட்டுரை எங்கோ கிடப்பில் கிடந்தது. அதை வலைப் பதிவு செய்வது என் திருப்திக்காக.

வாழக் கூடாத வழியில் வாழ்ந்தழிந்த ‘மிருகம்’

காமம், காமம், காமம் இதனைத் தவிர வேறு எதிலும் அக்கறையற்ற ஒருவன்.

ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாதோ, அப்படியாக வாழ்ந்தவன் அவன். அத்தகைய ஒருவனின் கதையை அண்மையில் திரைப்படமாகப் பார்க்கக் கிடைத்தது. கண்ணில் காணும் பெண்களையெல்லாம் அந்த இடத்திலேயே கிடத்தி ருசித்துவிட்டு வீசி எறிந்து போகும் குரூர குணம் படைத்தவன்.

விபசாரிகள் முதல், இளம் பெண்கள், மற்றவன் பெண்டாட்டி, பிச்சைக்காரி வரை எங்கு கவர்ச்சி கண்டாலும் குறி வைப்பான். அத்தோடு கோபமும் முரட்டுத்தனமும் கைகோத்துவர நியாய அநியாயங்களை மதிக்காதவன். சொந்தப் பெண்டாட்டியோடும் வெறியோடு கூடிய காமந்தான். காதலோடு கூடிய கூடல் அவன் அறியாதது.

காமமும், வெறியும் இணைந்த பாலியல்; பற்றிய திரைப்படம் பற்றி ஏன் எழுத வருகிறேன் என எண்ணத் தோன்றுகிறதா? அதிலும் அதிகம் விமர்சகர்கள் கண்ணில் படாத திரைப்படம் பற்றி ஏன் எழுதுகிறேன்.

காரணத்தோடுதான். கிளுகிளுப்புகளையும் ஆபாசங்களையும் அள்ளிக் கொட்டி பணப்பையை நிரப்பும் நோக்கோடு எடுக்கப்பட்ட அர்த்தமற்ற படம் இல்லை. மாறாக ஒரு முக்கிய செய்தியைச் சொல்ல வருகிறது. அதிலும் மருத்துவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அக்கறை கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்பதுதான் காரணம்.

காதல் புனிதமானது என்கிறார்கள். ஆனால் பெரும்பாலான காதல்கள் காமத்திற்கான ஆசாரப் பூச்சுக்கள் மட்டுமே. ஆனால் காமம் புனிதமானது என்றோ, எதிர்மாறாக கேவலமானது என்றோ சொல்ல முடியாது.

எல்லா உயிரினங்களுக்குமே இயற்றையான உணர்வு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மற்றட்ட காமம், எல்லை மீறிய காமம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இவை அவர் இருவர் உணர்வு சார்ந்தவை இல்லையா? காமம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறைக்குள் நின்றாலும் சரி அந்த எல்லையை மீறியாலும் சரி அது இயற்கையான உணர்வு, விஞ்ஞான பூர்வமான செயல்.

இருந்தபோதும் முறை தவறிய காமம் எமது சமூக, நாகரீக விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் விஞ்ஞான ரீதியாகப் பார்ககும்போது பாதுகாப்பற்ற காமம் மட்டுமே தப்பானது. அதனால் பல ஆபத்துக்கள் காத்திருக்கும். இதைத்தான் இப்படம் சொல்ல முனைகிறது.

இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதி கிடையர்து. காமம் அதிலும் சமூகக் கட்டுகளை மீறிய காமம் மட்டுமின்றி வன்புணர்ச்சி, பாதுகாப்பற்ற புணர்ச்சி இவை எல்லாவற்றையும் தனது வாடிக்கையாகக் கொண்டவன். அதனையே தனது ஆண்மைக்கு அழகு என்று கொள்பவன்.

பொலிகாளையை பசுவிற்கு விடும் தொழில் அய்யனாருக்கு. பொலிகாளை போலவே தானும் பெண்களின் வேட்கையைத் தணிவிப்பவன் என்ற திமிர் வேறு. இதனால் விலைமாதோடு கூடினால் கூட அவளுக்கு பணம் கொடுக்க மறுத்து, தான் கொடுத்த சுகத்திற்காக அவள்தான் தனக்கு கூலி தரவேண்டும் என அடாவடித்தனம் பண்ணுகிறான். வெளி உறவுக்கு முன்னர் ஆணுறை (கொண்டோம்) அணிய மறுக்கிறான். தன் வைரம் பாய்ந்த உடம்பை நோய், நொடி அணுகாது என வீரம் பேசுகிறான்.

கிராமத்துச் சண்டியனான இவனுக்கு அழகும் துடுக்குத்தனமும் நிறைந்த அழகம்மா மீது ஆசை வருகிறது. பணிய மறுக்கும் அவளைத் திருமணம் செய்து வழிக்குக் கொண்டு வர முயல்கிறான்.,

புகைப்படம் நன்றி:- http://www.thiraipadam.com/images/movies/2007/Mirugam1.jpeg

முதலிரவில் அவள் மறுக, மனைவியையே வன்புணர்ச்சி செய்கிறான். அழகுவாக பத்மப்ரியா வருகிறார். அனாசயமாக பனை மரத்தில் விறுக்கென ஏறும் போதும், நுங்கு சீவும்போதும், சீண்டுபவனை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டும் போதும், தோழிகளோடு ஆட்டம் போடும்போதும் பாத்திரமாகவே மாறுகிறார். அதுபோலவே பின்னர் புருஷனுக்காகக் கண்ணீர் வடிக்கும் போதும், கோட்டுவரை சென்று போராடும் போதும், பிணத்தை தான் ஒருத்தியாக தோளில் சுமக்கும் போதும் மனத்தில் இடம் பிடித்துக் கொள்கிறார். தான் பெற்ற பிள்ளையை தூக்கி எறிந்து கொல்ல முயலும் கணவனான அய்யனாரை, ஆவேசம் கொப்பளிக்க ஓங்கி உதைக்கும் காட்சியில் சுடருகிறார்.

அய்யனாராக வரும் ஆதி ஒரு புதுமுகம். கருங்கல் போல திடமான மேனி, பனைபோல திடமான நீட்டி நிமிர்ந்த நெடும் தோற்றம். நிமிர்ந்த நடை. ஆவேசமும், வன்மமும், குரூரமும் தெறிக்கும் கண்கள். கதைக்கேற்ற தேர்வு.

பிற்பாதியில் நோயால் துவண்டு வாடும்போதும், தன் செய்கைகளுக்காக வருந்தும் போதும் நன்கு தேறுகிறார்.

உபகதையான தண்ணீர் பிரச்சனை படத்தோடு நன்கு பொருந்துகிறது. ஊருக்கு குடிப்பதற்கு உகந்த தண்ணீர் இல்லாதபோது கிணறு வெட்ட ஊர் முடிவெடுக்கிறது. இவனது நிலத்தில்தான் நல்ல தண்ணீர் இருக்கிறது என அறிந்து கிணறு கிண்ட அனுமதி கேட்கும்போது அலட்சியமாக விட்டெறிந்து பேசி மறுக்கிறான்.

ஆனால் பின் நோயுற்று மனம் திருந்திய நிலையில் தண்ணீர் பஞ்சத்தை போக்கத் தன் நிலத்தில் இடம் தருகிறான். ஆயினும் நோயுற்றவன் நிலத்துத் தண்ணீரை குடித்தால் தங்களுக்கும் நோய் வருமோ என ஊர் மக்கள் தயங்குகிறார்கள். அந்த தண்ணீரை ஊரார் குடிக்கிறார்களா என்று ஆவல் பொங்க மகனைக் கேட்கும் காட்சியில் அற்புதமாக நடித்துக் கலங்க வைக்கிறார்.

உணவு போட்டுக் கொடுக்கும் போது கூட மகனிடம் அடியும் உதையும் வாங்கும் அம்மாவாக வருபவர், பேர் தெரியாத போதும் மனத்தில் நிற்கிறார்.

அய்யனார் ஒரு பிரச்சனையில் அகப்பட்டு சிறை செல்ல நேர்ந்தபோதும் திருந்தவில்லை. மாறாக கஞ்சா, ஓரினப் பாலுறவு ஆகியனவும் பழக்கமாகின்றன. ஊசியால் போதை மருந்து ஏற்றுவதும் தொடர்கிறது. இறுதியில் ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் நோய்க்கு ஆளாகி உடல் மெலிந்து, காய்ந்து கருகிச் சருகாகி சிறிது சிறிதாக உதிர்கிறான்.

இப் பகுதி மிகச் சிறப்பாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இயக்குனர், ஒப்பனையாளர், படப்பிடிப்பாளர் அனைவரும் அர்ப்பணிப்போடு செய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் படத்தின் பிரதான அம்சமே இதுதான்.

அந்த மிருகத்தின் அழிவு முழுப்படத்தின் மூன்றில் ஒரு பகுதிவரையே ஓடுகிறது என்ற போதும் செய்திப் படம் போல சலிக்க வைக்கவில்லை. கதையோடும் காட்சிகளோடும் எம்மைப் பிணைத்து வைப்பதில் இயக்குனர் சாமி வெற்றி பெறுகிறார். பாராட்டுக்குரியவர்.

புகைப்படம் நன்றி http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Mirugam01.jpg

இவரது முதல் திரைப்படம் உயிர் என்பதையும் சொல்லி வைக்கலாம்.

இதற்கு மாறாக முன் பகுதி முழுவதும் குரூரமும், வன்மமுமே நிறைந்திருந்தன. மிருகமாக வாழ்ந்த ஒரு பாத்திரத்தின் அழிவைச் சொல்வதற்கு அதன் பின்புலமான அடாவடித்தனங்களை பதிவு செய்வது அவசியமானதுதான். அதன் மூலமே அப்பாத்திரத்தின் குணாம்சத்தை அழுத்தமாகச் சொல்ல முடியும். ஆயினும் பலதருணங்களில் நிறையவே முகம் சுளிக்கச் செய்கிறது. பல காட்சிகள் குடும்பத்தோடு இருந்து பார்க்க அசூசையளிக்கக் கூடியவை. ஆயினும் அந்தக் குரூரமான மிருகத்தின் செய்கைகளும், அதன் விளைவான அழிவும் மனத்தில் பதிந்து விடுவதை மறுக்க முடியாதுள்ளது.

இது விடயமாக இயக்குனர் சாமி ஒரு நேர்காணலில் கூறிய கருத்தைப் பதிவு செய்வதும் அவசியம் என நினைக்கிறேன். ‘நான் எடுத்துக் கொண்ட கதைக்கு – சொல்ல வந்த விஷயத்துக்கு தேவையான அளவில்தான் காட்சிகளை வைத்திருக்கிறேன். நான் நினைத்ததை சொல்லியிருக்கிறேன். சொல்ல வந்த கருத்துக்கு வலு சேர்க்கும் காட்சிகளையே வைத்திருக்கிறேன். இந்த விஷயத்தில் நான் சினிமாவுக்கான நேர்மையுடன் நூறு சதவிகிதம் சரியாகவே நடந்து கொண்டு கதையைக் கையாண்டு இருக்கிறேன்.’ என்கிறார். மேலும் ‘இது குடும்பத்தினருடன் பார்க்க எடுக்கப்பட்டது அல்ல என்றே வைத்துக் கொள்ளுங்களேன். வயது வந்த இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட படம்தான். அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை எச்சரிக்கை செய்யவே இப்படம்.’ எனவும் தெளிவுபடுத்துகிறார்.

எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீருக்கு பின்னர் பிரதான பாத்திரத்தின் அழிவை மிகச் சிறப்பாகச் சித்தரித்த திரைப்படம் இது என மதன் தன் பார்வையில் சொல்லியது உண்மையாக இருக்கும் என்றே சொல்லத் தோன்றுகிறது. ரத்தக்கண்ணீர்; நான் சிறுவயதில் பார்க்காத படம். பின்னர் பார்த்த சில காட்சிகள் அதை ஏற்க வைக்கின்றன. இதைப் படத்தின் சிறப்பு என்று கொள்ளலாம்.

மறுபுறத்தில் இப்படத்தின் கதையின் சில பகுதிகளும், வார்ப்பும் பல தருணங்களில் அண்மையில் வந்த பருத்திவீரன் திரைப்படத்தை அப்பட்டமாக ஞாபகப்படுத்துவது முக்கிய குறையாகப் படுகிறது. ‘குத்த வெச்ச குமரிப் பொண்ணு …’ பாடல் அச்சொட்டாக பருத்திவீரன் காட்சி போலவே இருக்கிறது

பம்புசெட் பம்புசெட் எனப் பட்டப் பெயர் சூட்டப்படும் அழகுவிற்கு அந்தப் பட்டம் ஏன் வந்ததென்பதை இறுதிவரை ஆவலைத் தூண்டிச் செல்கிறார் நெறியாளர். இறுதியில் அதை அறியும் போது இவ்வளவுதானா என எண்ண வைத்தாலும் மென்சிரிப்போடு ரசிக்கவும் முடிகிறது.

இன்று உலகளாவிய ரீதியிலும், முக்கியமாக இந்திய உபகண்டப் பகுதியிலும் ஆபத்தான மருத்துவப் பிரச்சனையாக உருவெடுத்து சமூகரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நோய் எயிட்ஸ். இது பற்றிய திரைப்படத்தை எடுக்கத் துணிந்த இயக்குனர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். நோய் பற்றிய பல செய்திகளைத் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த வந்தாலும் அதையும் ஓரளவு கலாபூர்வமாக, சலிக்க வைக்காமல் பார்க்க வைத்ததற்கு சபாஸ் கொடுத்தே ஆக வேண்டும். நோய் தொற்றுவது எப்படி, அது தொற்றாமல் இருக்க ஆணுறை அணிதல் போன்ற பல விடயங்கள் செய்தியாக உறுத்தாமல் கதையோடு நகர்கினறன.

மிக முக்கிய விடயமாகச் சொல்லப்படும் செய்தி எயிட்ஸ் நோயாளியை எப்படி சமூகமும் வீடும் எதிர் கொள்ள வேண்டியது என்பது பற்றியதாகும்.

இதையே இத்திரைப்படம் தெளிவாகச் சொல்ல முனைகிறது என்பேன். ஒருவருடன் நெருங்கிப் பழகுவதாலோ,
தொட்டுப் பேசுவதாலோ அது தொற்றுவதில்லை.
உடலுறவால் மட்டுமே தொற்றும் நோய் இது.

நோயாளியை ஒதுக்கி வைக்கக் கூடாது.
வீட்டில் வைத்தே பராமரிக்க வேண்டும் என்பதை நோயாளியின் டொக்டர், அவனது மனைவி போன்ற பாத்திரங்கள் ஊடாகக் காட்சிப்படுத்துகிறது.

கிராம மக்கள் அவனை ஒதுக்கி வைப்பதையும் அவனது வீட்டை நெருப்பு வைத்து அழிப்பதையும் தவறு என்று சுட்டுகிறது,
அவனது வீட்டு குழாயில் நீர் எடுப்பதால் நோய் தொற்றாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

இறந்து மடியும் அவனது உடலைத் தூக்கிச் செல்லக் கூட ஊர் மக்கள் தயங்குவதை அவளது ஆவேச வார்த்தைகள் ஊடாக கண்டிக்கிறது. இறுதியில் அவள் ஒருத்தியாகவே அவனது உடலைச் சுமந்து செல்வதும் பதிவாகிறது. மொத்தத்தில் நோய் பற்றிய வீண் பீதிகளை நீக்க முயல்கிறது.

இவை எல்லாம் எயிட்ஸ் பற்றிய தெரிந்த தகவல்கள் தானே எனச் சலிக்கிறீர்களா.

உண்மைதான் படித்த உங்களுக்கும் எனக்கும் தெரிந்த பழைய தகவல்கள்தான்.

ஆனால் இவை கூடத் தெரியாத மெத்தப் படித்த மனிதர்களை இன்றும் கூட காணக் கிடைக்கிறது என்பது நேரிடையாக அறிந்த உண்மை. இந்நிலையில் காட்சிப் புலனூடாக விழிப்புணர்பு ஏற்பட முயற்சித்தது கூடிய பலனளிக்கும் என நம்பலாம். முக்கியமாக பாமர மக்களுக்கும் எட்டும் ஊடகம் அல்லவா திரைப்படம்.

ஒளிப்பதிவு ராம்நாத் ஷெட்டி. அவரது கமராவின் கண்கள் எமது கண்களை நயக்க வைக்கின்றது. ஆயினும் நோயாளியின் உடலில் நோய் பரவுகிறது என்பதைப் காட்சிப்படுததும்; கம்பியூட்டர் தொழில் நுட்பம் சோபிக்கவில்லை. சற்றே அபத்தம் போலவும் தோன்றியது. கலைநயத்துடன மெருகூட்டியிருக்கலாம்.

இசை சபேஷ்-முரளி. பாடல்கள் மனத்துள்ளும் இசைந்து மகிழ்விக்கின்றன. பின்னணி இசையும் நன்றாக உள்ளன. பாடல் வரிகள் நா. முத்துக்குமார். அவை வெற்று வரிகள் அல்ல. கருவோடு இணைந்தவை.

இந்தப் படம் பற்றிய எனது அக்கறைக்கு இன்னுமொரு காரணம், இது தமிழ் நாட்டின் முதல் எயிட்ஸ் நோயாளி பற்றிய படமாகும். திருவாரூர் மாவட்டம் களப்பால் அருகிலுள்ள குலமாணிக்கம் என்கிற ஊரில் வாழ்ந்த உண்மைப் பாத்திரம் அது என்பது போலவே,

இன்னொரு வகையில் தமிழ் கூறும் உலகில் மற்றொரு எயிட்ஸ் தொடர்பில் முதல் நபர் நானாவேன்.
அதாவது தமிழில் முதலாவது எயிட்ஸ் பற்றிய நூலை எழுதியவன் என்றவகையில். இலங்கையில் இரண்டு பதிப்புகளைக் கண்ட எனது ‘எயிட்ஸ்’ நூல் தமிழகத்தில் என்.சீ.பீ.எச். வெளியீடாக மூன்று பதிப்புகளாக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி மல்லிகை

Read Full Post »

>பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற பெரு நிலப்பரப்பு. அதன் இக்கரையில் ஒரு பெரும்பாதை. அதிலிருந்து கிளைத்தெழுந்த இன்னுமொரு பாதை பசுமையை ஊடறுத்து நேரே செல்கிறது.
பச்சைக் கம்பளத்திற்கு செம்மஞ்சள் போர்டர் இட்டாற் போல பாதைகள் எல்லாமே கிராமப் புறத்திற்கேயுரிய செம் மண் ரோடுகள்.

பாதைகள் சந்திக்கும் முச்சந்தியின் நட்ட நடுவே ஒரு சிறு மரம். மெல்லுடல் கன்னியொருத்தி தன் இளம் பச்சை நிற முந்தானையை காற்றில் சிறகடிக்க விட்டதுபோல் உற்சாகமாக கிளை விரித்து அசைந்தாடுகிறது.

நகரச் சந்தடிகளைக் கனவிலும் காண்டறியாத, சன நடமாட்டம் ஒறுத்துப்போன தொலைதூரக் கிராமம். மெல்லென வீசும் காற்று இசைக்கும் கீதம். அது தவிர்ந்த வேறு எந்த செயற்கைச் சப்தங்களும் காதைக் குடையாத, மனதைக் குழப்பாத பேரமைதி.
தொடர்ந்து படிக்க கிளிக் பண்ணவும்

Read Full Post »

>பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற பெரு நிலப்பரப்பு. அதன் இக்கரையில் ஒரு பெரும்பாதை. அதிலிருந்து கிளைத்தெழுந்த இன்னுமொரு பாதை பசுமையை ஊடறுத்து நேரே செல்கிறது.

பச்சைக் கம்பளத்திற்கு செம்மஞ்சள் போர்டர் இட்டாற் போல பாதைகள் எல்லாமே கிராமப் புறத்திற்கேயுரிய செம் மண் ரோடுகள்.

பாதைகள் சந்திக்கும் முச்சந்தியின் நட்ட நடுவே ஒரு சிறு மரம். மெல்லுடல் கன்னியொருத்தி தன் இளம் பச்சை நிற முந்தானையை காற்றில் சிறகடிக்க விட்டதுபோல் உற்சாகமாக கிளை விரித்து அசைந்தாடுகிறது.

நகரச் சந்தடிகளைக் கனவிலும் காண்டறியாத, சன நடமாட்டம் ஒறுத்துப்போன தொலைதூரக் கிராமம். மெல்லென வீசும் காற்று இசைக்கும் கீதம். அது தவிர்ந்த வேறு எந்த செயற்கைச் சப்தங்களும் காதைக் குடையாத, மனதைக் குழப்பாத பேரமைதி.

திடீரென அந்த அமைதியைக் குலைப்பது போன்றதொரு சிறு இரைச்சல், கேட்டும் கேட்காததுபோல!

காது கொடுத்துக் கேட்கிறோம்.

வாகன இரைச்சலா?

வாகன இரைச்சல் தான் எனத் தெளிவாகும் தருணத்தில் தெருவின் இடப்பக்கமாக ஒரு வாகனம் வருவது தொலைதூரக் காட்சியாக தெரிகிறது. வானா, பஸ்சா, லொரியா? தெளிவாகத் தெரியாதளவிற்கு எடுக்கப்பட்ட தூரக்காட்சி.

வாகனம் முச்சந்தியில் நின்று புறப்படுகிறது.

வாகனத்திலிருந்து இறங்கிய இருவர் பசுமையை ஊடறுத்து நீண்டு செல்லும் பாதையில் நடந்து செல்ல ஆரம்பிக்கின்றனர் ஒருவர் காவிநிற அங்கிக்காரர். மற்றவர் சாதாரண உடை அணிந்தவர். ஒருவர் பின் மற்றவராக நடக்கின்றனர் பேச்சில்லை கதை காரியம் இல்லை. ஒருவரோடு ஒருவர் தொடர்பற்றவர்கள் போல அமைதியாக நடக்கின்றனர்.

ஒளியுருபதி கருவி (Video Camera) அண்மைக் காட்சியாக குறுக பசுமையைக் கொடுக்கும் கரும்புத் தோட்டத்தை பாதை ஊடறுத்துச் செல்வது புரிகிறது. தொடர்ந்து நடக்கிறார்கள் சீரான இடைவெளிவிட்டு ஒருவர்பின் மற்றவராக. மனிதனதும் அவனது நிழலினதும் யாத்திரையா?

மனதை அங்குமிங்கும் அலையவிடாது தன்னுள் மூழ்கடிக்கும் இனிய கவிதையாக அந்தக் காட்சியும் அங்கு இசைக்கும் மௌனத்தின் பேரொலியும் எம்மை புதியதோர் உலகிற்குள் இழுத்துச் செல்கின்றன.

பிரஸன்ன ஜெயக்கொடியின் புதிய திரைப்படமான ‘சங்காரா’ வின் ஆரம்பமே எம்மை இவ்வாறு அசர வைக்கிறது.



சவோய் சினிமாவில் 2006 நவம்பர் 3ம் திகதி முதல் 7ம் திகதிவரை நடந்த திரைப்பட விழாவின் கடைசி நாளன்று தற்செயலாகக் காணக்கிடைத்தது. எனக்குக் கிடைத்தது அரிய, அற்புத அனுபவந்தான் அது.

‘சங்காரா’ திரைப்படத்தின் பிரதான பாத்திரம் ஒரு இளம் பௌத்த துறவி பிக்கு ஆவார். ஆனந்த தேர வங்கீசா என்பது அவர் பெயர். களனி பல்கலைக்கழக பட்டதாரி. பௌத்த ஜாதகக் கதைகளை சுவரோவியங்களாகக் கொண்ட ஒரு புராதன விகாரைக்கு ஆனந்த தேரர் வருவதுடன் கதை ஆரம்பமாகிறது.

சற்று மேடான பாறைக் குன்றில் அப் பழைய பௌத்த ஆலயம் அமைந்துள்ளது வாயிலில் கோயில் மணி. அருகிலேயே பிக்குகளின் விடுதி. பாதையிலிருந்து கோயிலுக்குச் செல்வதற்காக 20 – 30 படிகளைக் கொண்ட குறுகலான படிக்கட்டு. எதிர்ப்புறத்தில் கண்பார்வைக்குள் விழக்கூடிய தூரத்தில் கிராமத்தவர் ஒருவரின் வீடு. அழகிய மரம். அருகிலேயே சலசலத்தோடும் சிற்றாறு. மனதிற்கு இதமான ரம்மியமான சூழல்.

வயதான மூத்த பிக்கு ஒருவரே அக் கோயிலுக்கு எல்லாமாக இருக்கிறார். வாயிலில் ஒரு அகண்ட பெரிய நீர்ப்பாத்திரம். துறவி மற்றும் கோயில் தேவைகளுக்காக அப் பாத்திரத்துக்கு நீர் கொண்டு நிரப்புவது அயலில் உள்ள பெண்கள்தான்.

கிராமத்தவர் வேறு, கோயில் வேறல்ல இது அவர்களது கோயில்.

அவர்களது சுகதுக்கங்களில் கோயிலுக்குப் பங்குண்டு.

அதே போல கோயிலின் தேவைகளை பூர்த்திசெய்வதும் அவர்கள்தான.

அதுதான் பணத்திற்கும் நேரத்திற்கும் பின் ஓட்டப்பந்தயம் பிடிக்காத கிராமியத்தின் உயர் பண்பு ஆகும். கால ஓட்டத்தினால் அச் சுவரோவியங்கள் பல உடைந்தும், சிதைந்தும், நிறம் மங்கியும் உருக்குலைந்து வருகின்றன.

அவற்றைச் செப்பனிட்டு, திருத்தி, நிறம் ஊட்டி புனருத்தாரணம் செய்வதே இவ் இளம் பிக்குவின் பணியாகும். அமைதியாக, நிதானமாக ஒரு பிக்குவிற்கு ஏற்ப, தன் சிந்தனை முழுவதையும் ஒருமைப்படுத்தி தனிமையில் பணியைத் தொடங்குகின்றார். சாந்தும், சாந்தகப்பையும், வர்ணக் குழைவுகளும் தூரிகைகளும் தனியொருவனாகப் பணியாற்றும் அவர் கைகளில் கலை நுணுக்கத்துடன் இயங்கி அவ் ஓவியங்களுக்கு புத்துயிர் கொடுக்க ஆரம்பிக்கின்றன.

சுவரொவியத்திலுள்ள பெண்ணொருத்தியின் ஒரு பக்க மார்புப் பகுதி உடைந்து சிதிலமடைந்திருக்கிறது ஆனந்த தேரர் சேதமடைந்துள்ள அப்பெண்ணின் மார்புப் பகுதியில் கைவைத்து திருத்த வேலை செய்துகொண்டிருக்கும் போது சிரிப்புச் சத்தம் பின்புறத்திலிருந்து கலகலக்கின்றது திரும்பிப் பார்க்கிறார் இரு யுவதிகள் பெண் (சிலை) ணின் மார்பில் தேரர் கைவைத்திருப்பது அவர்களுக்கு அடக்கமுடியாத சிரிப்பை ஏற்படுத்தியிருந்தது இவர் பார்வை திரும்பவும், யன்னலை விட்டு அகல்கிறார்கள் அவர்களில் ஒருத்தி எதிர்ப்புற வீட்டுக்காரரின் மகள் உபமாலி.

தற்செலாக கீழே விழுந்த அவளது ஹெயர் பின்னை கண்டெடுக்கிறார். அதனைத் திருப்பிக் கொடுப்பதற்கு எடுக்கும் முயற்சியின் போது அவரது ஆழ்மனத்தில் புதைந்துள்ள அதன் கெட்ட எண்ணெம் கொண்ட கரிய மறுபக்கம் தெரிய வருகிறது.

அமைதியான நிர்மலமான நீரில் கல்விழுந்தது போல சலனம் அலைஅலையாக எழுகிறது. பல சம்பவங்கள் தொடர்கின்றன. மற்றவர்கள் பார்வையிலும் சமூகத்தின் நோக்கிலும் ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பது ஒருவர் பற்றிய பூரணமான தரிசனம் என்று கொள்ள முடியாது.

வாழ்க்கை பூராவும் ஒருவனின் மன ஆழத்தில் ஒளிந்து கிடக்கிற ரகசியங்களை தனக்குத்தானே தோண்டியெடுத்துப் பார்ப்பது தான் உள்ளொளி பெருக்குவதாகும். இது மற்றெல்லோரையும் விட துறவிகளுக்குக் கூடுதலாகப் பொருந்தும். இதனை இத்திரைப்படம் உணர்த்துகிறது.

‘மனித மனத்தில் கொழுந்து விட்டெரியும் ஆசையும், உறவுகளால் ஏற்படும் பிணைப்பும், அவனை எல்லையில்லாத துயரத்திற்கு இட்டுச் செல்லும் என்ற பௌத்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே இப்படத்தின் உட்கருத்து’ என பிரசன்ன ஜெயக்கொடி ஓரு செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

‘மேலும் மனிதனானவன் தனது உடல், உள்ளம், இதயம் ஆகியவற்றுக்கு ஆட்பட்டு இயங்குவதையும் அதனால் அவனுக்கு ஏற்படும் உணர்வுகளையும், பலாபலன்களையும் இத் திரைப்படத்தில் ஆழமாக ஆய்வு செய்ய முயன்றிருக்கிறேன்’ என்கிறார்.

அவரது கருத்துப்படி கணந்தோரும் மாற்றமுறும் மனிதமனம் பற்றிய சித்தரிப்பே இப்படமாகும்.

இருந்த போதும் இப்படம் தத்துவவிசாரம் செய்து பார்வையாளனைப் பயமுறுத்தவும் இல்லை. ஓட்டமின்றித் தேங்கி நகராது போரடிக்கவும் இல்லை. மாறாக புதுமைப் பித்தனை, ஜெயகாந்தனை, சு.ராவை, ராமகிருஸ்ணனை, ஜெயமோகனைப் படிக்கும் போது கிட்டும் உயர் இலக்கிய அனுபவம் போன்ற நிறையுணர்வை இத் திரைப்படத்தில் பெறுகிறோம்.

ஒரு காட்சி. ஆனந்த தேரர் தன் பணியிடையே யன்னலூடாகப் வெளியே பார்க்கிறார். தூரத்தே தனது வீட்டில் உபமாலி நாயோடு விளையாடிக்கொண்டிருப்பது தெரிகிறது. தற்செயலாக அவள் தடக்கி விழப் பார்க்கிறாள.

தேரர் தன்னையறியாது திடுக்கிட்டெழுந்ததில் அருகில் இருந்த வண்ணக்கலவைகள் கொண்ட தட்டுக்கள் தட்டுப்பட்டு விழுந்து உடைகின்றன.

சத்தங் கேட்டு உள்ளே வந்த பக்தர்கள் என்ன நடந்ததென வினவ, கண்ணுக்குள் வண்ணத் துளி தவறி விழுந்து விட்டதெனக் கூறுகிறார். அவர்களில் ஒருவர் தேரரின் கண்ணைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு ‘பயப்படவேண்டியதில்லை முலைப்பால் விட்டால் சரியாகிவிடும்’ என்கிறார்.

அங்கிருந்த தாயொருத்தி தேரருக்கு உதவுவதற்காக முலைப்பால் எடுக்க மறைவிடம் நோக்கிச் செல்கிறாள். மனிதனுள் மறைந்திருக்கும் துர்மனமானது, ஆபத்திற்கு உதவ வந்த அவளைப் பின் தொடர்ந்து அவள் செய்வதைக் கள்ளமாகப் பார்க்க முயல்கிறது.



மனித மனம்தான் எத்தனை வித்தியாசமானது. சாதாரண மனிதனாயினும், துறவியாயினும், தனது கேடு கெட்ட எண்ணங்களை மூடி மறைத்து ஆசாரசீல வேடத்தில் தன்னை வெளிப்படுத்தி காப்பாற்ற முயல்கிறது. முலைப்பால் விட்டதும் சற்றுச் சுகமானதுபோல் வெளிக்காட்டிய தேரர் தன்னை ஆசுவாசப் படுத்துகிறார்.

தாயிடமிருந்த கள்ளங்கபடமற்ற குழந்தை கலகலத்துச் சிரிக்கிறது!

இவை யாவும் வசனங்களை கொண்டிராத காட்சிப் பிம்பங்கள். வார்த்தைகளுக்கு அகப்படாத உணர்வுகளை கிளறிச் சிந்திக்க வைக்கும் நெறியாளரின் கலையுணர்வின் வெளிப்பாடுகள்.

தமிழ், ஹிந்திப் படங்களில் எமக்குப் பரிச்சயமான பாட்டு, டான்ஸ், சண்டை எதுவுமில்லை அதீத உணர்வுகளைக் கொட்டிக் கண்ணீர் சிந்தவைக்கும் காட்சிகளோ, கோமாளித்தனமான நகைச்சுவைக் காட்சிகளோ கிடையாது,

உரையாடல்கள் கூட மிகச் செற்பமே 1 ½ மணிநேரம் வரை ஓடும் இத்திரைப்படத்தின் மொத்த உரையாடல்களும் 15 நிமிடத்தைத் தாண்டுமோ என்பது சந்தேகமே. உரையாடல்களில் தங்கியிராமல் ஒழுங்காகவும் திறமையாகவும் ஆழ்ந்த கலையுணர்வுடன் அமைக்கப்பட்ட காட்சிப் படிமங்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணி ஒலிகளாலும் திரைப்படத்தை நகர்த்துகிறார் நெறியாளர்.

காற்றின் அசைவும், மழைநீரின் தெறிப்பும், ஆற்றுநீரின் சலசலப்பும், உதிர்ந்த இலைகள் நிலத்தில் அராத்தும் சரசரப்பும், கதவு மூடும் சத்தமும், காலடி ஓசையும் கூடப் பேசுகின்றன.

ஒரு காட்சி நடக்கும் போது அங்கு இயல்பாக எழும் சத்தங்கள் கூட பின்னணியில் கவிதையாக வந்து விழுகின்றன.

இசையாகப் பிரமிக்கவைக்கின்றன.

இசையின் மொழியால் திரைப்படத்தை எம்மோடு பேச வைத்த இசையமைப்பாளர் நட்டிகா குருகே பாராட்டுக்குரியவராகிறார். ஆயினும் சில இயல்பான சத்தங்கள் (உதா – காலடி ஓசை) இயற்கையாக எழும் சப்தத்ங்களைவிட கூடிய தொனியில் ஒலிப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

இத்திரைப்படத்தின் வெற்றிக்கு கலை இயக்குனர் சுனில் விஜயரட்ணவின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.

பழைய பௌத்த கோயில், கம்பீரமான புத்தர் சிலை, அவரைக் குனிந்து தொழும் நிர்வாணப் பொண்ணின் சிலை, சுவரோவியங்கள், பிக்குகள் விடுதி, விகாரையின் கூரை ஓரத்தில் அமைந்திருக்கும் பழைய ஆனால் வேலைப்பாடு நிறைந்த பீடிங் என பழமையும், புனிதமும் நிரம்பிய சூழலுக்குள் எம்மை அழைத்துப் பரவசப்படுத்துகிறார்.

தனது ஒளியுருபதி கருவியை முனைப்படுத்தாமல் இயக்குனரின் உள்ளம் அறிந்து அழுத்தமாகப் படமாக்கியுள்ளார் பாலித பெரேரா. கரும்புத் தோட்டம், சிற்றாறு, பாதைகள் போன்ற வெளிப்புறக் காட்சிகளிலும் சரி, விகாரையின் உட்புறக்காட்சிகளிலும் சரி அவரது திறமை பளிச்சிடுகிறது.

முழுப்படமும் தனமன்விலாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் 35 நாட்களில் படமாக்கப்பட்டதாம.; படப்பிடிப்பிற்குப் பின்னான தொழில்நுட்ப வேலைகள் மட்டுமே இந்தியாவில் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுளது.



டைரக்டர் பிரசன்ன ஜெயக்கொடியின் முதல் திரைப்படம் இதுவென்ற போதும் சின்னத்திரையில் ஏற்கனவே அபாரதிறமை காட்டியுள்ளார். ( Sanda Amawakai, Nisala Wila, Iam Diyaman Kada, Hand Wila) ஆகியவை அவரது விருது பெற்ற டெலி டிராமாக்கள் ஆகும். இவற்றை நான் பார்க்கவில்லை. கேள்வி ஞானம்தான்.

புதுமுக இளம் நடிகர் துமின்து டொடென்தனா (Thumindhu Dodantenne) ஆனந்த தேரர் ஆக வருகிறார். ஏனைய முக்கிய பாத்திரங்களில் வரும் சச்சினி அயேன்ரா (Sachini Ayendra Stanley), நிலுபா ஹின்கென்த ஆராச்சி ஆகியோரும் திரைக்குப் புதியவர்களே. ஆயினும் இயல்பான நடிப்பால் மனதில் நிற்கிறார்கள்.

முதிய துறவியாக K.A. Milton Perera பண்பட்ட நடிப்பைத் தருகிறார்.

கெய்ரோ உலகத் திரைப்பட விழாவில் பங்கு பற்றி இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ள சங்காரா பலத்த பாராட்டைப் பெற்றதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. சிறந்த நெறியாள்கைக்கான பரிசையும் தட்டிக் கொண்டதாக ஞாபகம்.

கிட்டத்தட்ட 3 தசாப்தங்களுக்கு முன் (1978) வெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் Ahasin Polowata என்ற திரைப்படம் இதே திரைப்பட விழாவில் பங்குபற்றி அவ்வாண்டுக்கான சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது ஞாபகம் இருக்கலாம்.

அதற்குப்பின் இப் படத்திற்கே அதன் இறுதிச் சுற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமைக்குரிய நெறியாளர் பிரசன்ன ஜெயக்கொடிக்கு வயது 37 மட்டுமே.

ஒரு புத்த பிக்குவின் மனத்தின் மறுபக்கத்தை திரைப்படமாக எடுத்த பிரசன்ன ஜயக்கொடியின் துணிவு பாராட்டுக்குரியது. ஆயினும் பிக்குவின் மறுபக்கத்தை காட்டுவதற்குஅதே நடிகரைப் பயன்படுத்தாது வேறு ஒருவரை பயன்படுத்தியமை கவனிக்க வேண்டிய விடயமாகும். இறுக்கமான பெளத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையுள்ள சமூகத்தில் வெளிப்படையாக பெளத்த துறவியை விமர்சனம் செய்வது சிக்கலாக இருக்கக் கூடும் என எண்ணத் தூண்டுகிறது.

எனது சிங்கள மொழி அறிவு மிகவும் குறுகியது. ஆங்கில உபதலைப்புக்கள் போடப்படவில்லை. எனவே புரிதலிலும், கருத்துக்களிலும் மயக்கங்கள் இருக்கலாம் என்பது உண்மையே ஆயினும் மொழியானது பட ஓட்டத்தை புரிவதிலும் ரசனையுடன் நுகர்வதற்கும் தடையாக இருக்கவில்லை என்பதை உறுதியுடன் கூறுவேன்.

படத்தின் இறுதிக் காட்சி. அமைதியா ஓடும் நீர். அதற்குள் ஒரு மரக்குற்றி. அதன் மேல் ஒரு நீர்த்துளி விழுகிறது. மரக்குத்தி அசையாமல் இருக்கிறது. நீரில் அலையெழுந்து பரந்து பரவி நிதானமாக ஓய்கிறது. மீண்டும் நீர்த்துளி விழுகிறது. மரம் அசையாமல் இருக்க நீரில் மீண்டும் அலையெழுந்து ஓய்கிறது. மீண்டும்……… மீண்டும்….

திரையரங்கில் ஒளிபரவ இருக்கையை விட்டு எழுகிறோம். வீடு திரும்பியும் சிந்தனை ஓயவில்லை. திரையில் பார்த்த காட்சிகளுக்கு அப்ப புதிய புதிய காட்சிகளும் வௌ;வேறு சாத்தியங்களும் எம்முள் உயிர்த்தெழுந்தன. நுகர்வோரின் சிந்தனையை முடக்காமல் சுய சிந்தனைக்கு இடம் அளிப்பதுதான் எந்தவொரு உயர் கலைப்படைப்பின் பண்பாகும் சங்காராவும் அத்தகைய ஒரு கலைப் படைப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- வீரகேசரி (ஞாயிறு), காலம் (கனடா சஞ்சிகை)


Read Full Post »

Older Posts »