Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சிறுகதைத் தொகுப்பு’ Category

சிறிரஞ்சனியின் ”’உதிர்தலில்லை இனி’

உங்கள் கருத்து என்ன? விடயம் இதுதான்.

ஐம்பது வயதான பெண் அவள். கல்வி அறிவுடன் நல்ல தொழிலும் படைப்பிலக்கிய ஆற்றலும் கைவரப்பெற்றவர். வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவளுடன் ஒத்த உணர்வுகள் கொண்ட வேறு ஒரு ஆடவனுடன் அவளுக்கு நட்பு உண்டாகிறது. அவளது பிள்ளைகளும் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். வெறும் நட்பு என்பதற்கு அப்பால் உடலும் சங்கமிக்கும் உறவாக அது பரிமணிக்கிறது.

சிறிரஞ்சனியின் உதிர்தலில்லை இனி தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் உள்ளடக்கம் இது. கலாசார பாரம்பரியங்களுடன் வாழ்ந்த தமிழரான நீங்கள் பரந்த இலக்கித் தேடலும் கொண்டவரும் என்றே கருதுகிறேன். இந்தப் பின்னணியில் இக்கதை உங்களிடையே எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதையே அறிய விரும்பினேன்.

சிறிரஞ்சனியின் பல சிறுகதைகளை உதிரிகளாகப் படித்திருக்கிறேன். ஜீவநதியில் அவர் எழுதிய உள்ளங்கால் புல் அழுகை சிறுகதையை படித்த போது நான் பெற்ற உணர்வுகளை ஒரு சிறு ரசனைக் கட்டுரையாக அதே சஞ்சிகையில் எழுதவும் செய்திருக்கிறேன். ஆயினும் ஒரு தொகுப்பாக படிக்கும் போது அதற்குள் மூழ்கித் திளைப்பது மட்டுமின்றி விசாலமான அனுபவப் பகிர்வு கிட்டுவதை உணரமுடிகிறது.

அவரது நடை வித்தியாசமானது. வேகமாகக் கதையைச் சொல்லிச் செல்வார். சொல்லிக்கொள்ளாமல் பட்டெனக் காட்சிகள் மாறும். நுணுக்கமாக ஒவ்வொரு சொற்களையும் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். மேலோட்டமாகப் படித்தால் சில கதைகளைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும். உதாரணத்திற்கு ‘பேசலன்றின் கிளியொன்று’ என்ற கதையில் ‘அம்மா’ வா அல்லது அம்மா வா என்பதில் உள்ள குறியீட்டைக் கவனத்தில் எடுக்காவிட்டால் வாசிப்பவனுக்கு குழப்பம் ஏற்படும்.

‘மூன்று நாள் லீவில் நின்றபின் திருமதியாக மீண்டும் வேலைக்குப் போன போது என்னில் இனம் தெரியாததொரு மாறலை என்னால் உணரக் கூடியதாக இருந்தது’ இது ‘யதார்த்தம் புரிந்தபோது.’. என்ற கதையின் ஆரம்ப வரிகள். இதில் திருமதியாக என்ற சொல்லைக் கவனத்தில் கொள்ளாவிட்டால் கதையின் ஆழத்திற்குள் நுளைந்து இரசித்திப் படிப்பதற்குள் கதையின் முக்கால் பங்கைக் கடந்துவிடுவோம்.

இந்தத் தொகுப்பில் உள்ள 16 கதைகளில் ஓரிரு கதைகளே தாயகத்தை களமாகக் கொண்டவை. ஏனையவை யாவும் புலம் பெயர் வாழ்வின் கோலங்களாகவே இருக்கின்றன. இந்த நூலின் முக்கியத்துக்கு இதுவும் மற்றொரு காரணமாகும். எமது மக்கள் புலம் பெயரத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிறது. தாய் தகப்பனாகச் சென்றவர்கள் பாட்டன் பாட்டீ ஆகிவிட்டார்கள், குழந்தைகளாகச் சென்றவர்கள் பெற்றோர்கள் ஆகிவிட்டார்கள்.

புதிய கலை கலாசார சூழலுக்குள் இளம் வயதினர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். பெரியவர்கள் இணைந்து கொள்ளச் சங்கடப்படுகிறார்கள். புதிய சட்டதிட்டங்களுக்கு ஆட்படுகிறார்கள். முக்கிமாக பிள்ளைகளை சுதந்திரமாக வளர்ப்பது, தண்டனையாக அடிப்பது தவறு போன்றவை பழையவர்களுக்கு புதினமான முறையாகிறது. அதைக் கடைப்பிடிக்க முடியாமையால் குற்றக் கூண்டில் ஏறவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இவை யாவும் சிறிரஞ்சனியின் அவதானிப்புள்ளாகி படைப்புகளாக அவதாரம் எடுக்கின்றன.

கணவனும் மனைவியும் வேலைக்கு செல்வதால் சந்திப்புகள் குறைகின்றன. கணவன் மனைவிக்கு இடையேயான நெருக்கம் குறையக் கூடிய சாத்தியங்கள் ஏற்படுகின்றன. உளநெருக்கீடுகள் ஏற்படுகின்றன. திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் தொடங்கக் கூடிய சூழல் நிலுவுகிறது. இதைத் தவிர மாறுபட்ட இரசனைகளும் ஈடுபாடுகளும் கூட காரணமாகிறது.

‘ஒரு கலைஞனுக்கு, படைப்பாளிக்கு இலக்கிய நாட்டமுள்ள ரசிகன் வாழ்க்கைத் துணையாக அமையாவிட்டால் இலக்கிய தாபத்திற்கு வழிதேடுவது கடினமே..’ என ஒரு பாத்திரம் பேசுவது குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுதற்கான மற்றொரு காரணத்தை கூறிநிற்கிறது. ஆம்! நெருக்கடி மிக்கசூழலின் வெளிப்படுகளாக இத் தொகுப்பின் கதைகள் அமைந்திருப்பதாக கருத முடிகிறது.

‘ஆயுதங்களிலிருந்தும் ஆயுததாரிகளிடமிருந்தும் தப்பி ஓடிய நாங்கள் இன்னொரு அகழியில் அமிழ்ந்திருகிறோம். … அதன் பின்விளைவாக உடல்நோய்களையும் மனநோய்களையும்தான் பெற்றிருக்கிறோம்..’ (பக்கம் 86) என ஒரு பாத்திரம் பேசுகிறது.

‘இப்போதில்லை’ என்ற கதையில் தலைமுறை இடைவெளியால் பிள்ளைகளின் உணர்வுகளை பெற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாததால் மகள் தனது கையை வெட்டிக் காயப்படுத்திக் கொள்கிறாள். அப்போது தாயின் மனம் அவ்வாறு எண்ணுவதைப் பதிவு செய்கிறார்.

இப் படைப்புகளின் மற்றொரு முக்கிய அம்சம் மனித மனங்களின் உள்ளுணர்வுகளைப் பேசுவதாக இருப்பதேயாகும். முக்கியமாக சிறுவர்களினதும் பெண்களினதும் உணர்வுகள் அழுத்தமாகச் சித்தரிக்கப்படுகின்றன. சிறுவர்கள் குழந்தைகள் பற்றிய தடம் மாறும் தாற்பரியங்கள், உள்ளங்கால் புல் அழுகை ஆகியவை குழந்தை உளவியலைப் பேசும் அருமையான படைப்புகளாகும். அன்பான தாயாகவும் மொழிபெயர்பாளராகவும் இருப்பதால் சிறுவர்களின் உள்ளுணர்வுகளைப் புரிந்து எழுதுகிறார். இதனால் உளவியல் ரீதியான படைப்புகளாக அமைகின்றன.

பிறழ் நடத்தையை அதுவும் பெண்களின் கதைகளைப் பேசும் முதல் எழுத்தாளர் இவர் அல்ல. தி.ஜா, ஜெயகாந்தன் முதல் இற்றைவரை பல எழுத்தாளர்கள் எழுதியலற்றைப் படித்திருக்கிறோம். சில பெண் எழுத்தாளர்களும் எழுதவே செய்திருக்கிறார்கள். ஆனால் அவை யாவும் காலாசார தற்காப்புக் கூண்டுக்குள் நிற்கும் ஆண் பார்வைகளாகவே இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றை உடைத்துக் கொண்டு படைப்பவராக இவர் இருக்கிறார்.

‘நான் வாழ்ந்து காட்ட வேண்டும். என்னை நான் மாற்றியாக வேண்டும் எனத் திடீரென என்ரை மனசுக்குள் ஒரு வேகம் வர…. குசினி அலுமாரியில் இருந்த கண்ணாடியில் முகத்தை சரி செய்து கொள்கிறேன்.’ (பக்43)

‘வலிய வலிய இனியும் போய்க் காயப்படப் போவதில்லை என்ற ஆக்கிரோஸமே இப்பொழுது அவள் மனதில் துளிவிட்டதுளது (பக்77)

அவை ஏமாற்றப்பட்டு துயரில் மூழ்கிக் கிடந்த பெண்; பாத்திரங்களின் உணர்வுகளைப் பேசும் சில உதாரணங்கள் மட்டுமே.

இனி கட்டுரையின் ஆரம்ப வரிகளுக்கு வருவோம். ‘உங்கள் கருத்து என்ன?’

‘ஒரு மாதமாக சாப்பாடு தண்ணியில்லாமல் அழுதழுது கிடந்தன். ஏனென்று கேட்க யாருமில்லை. பாவம் எண்டு பார்க்க வந்த ஓண்டு இரண்டு பேரும் நல்ல காலம் தப்பியிட்டாய். அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனதாலை நீ தப்பினாய். இல்லையெண்டால் ஊர்உலகத்திலை உன்ரை பேர் நாறியிருக்கும்’ என்றார்கள்.

இவளுக்கு வயது 52. பிள்ளைகள் கட்டி வெளிநாட்டிலை. மனுசன் ஆமி சுட்டு அந்தக் காலத்திலையே செத்துப் போச்சு. தனிய வாழ்ந்த இவளுக்கும் ஊரிலை உள்ள பெண்டாட்டியை இழந்த மனுசனுக்கு தொடர்பு ஏற்பட்டது. கூடி வாழ்ந்தார்கள். கலியாணம் கட்டி இருப்பம் என்று இவள் கேட்டாள் மறு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டான்.

இது என்னிடம் சென்றவாரம் மனவிரக்தியோடு வந்த ஒரு பெண்ணின் கதை. உள்ளுர்க் கதை. நாகரீகம் முற்றிய மேலைநாட்டில் நடந்தது அல்ல.

அன்புக்கான யாசனை எங்கும் ஒன்றுதான். அன்பு ஆதரவின் வறுமைப் பிடியில் கிடந்தவர்களுக்குதான் அன்பு செலுத்தும் ஒருவரைக் கண்டதும் ஒட்டுதல் ஏற்படுகிறது. அது காதலாகவும் மலரலாம். உடலுறவுக்கும் போகலாம். ஆனால் அடிப்படையில்; அது அன்பு ஆதரவுக்கான ஏக்கம்தான்.

அன்பிற்கான தேடல் கலாசார பண்பாட்டு விழுமியங்களைக் கணக்கில் கொள்வதில்லை. அதனால்தான் நான் ஆரம்பத்தில் குறிப்பட்ட கதையில் வரும் பெண் ‘உங்களின் காதல் என்னை பதின்மவயதுப் பெண்ணாகவே மாற்றியிருந்தது. வாழ்வின் பிற்பகுதியில் ஒருவர் இவ்வளவு ஆழமான காதல் உறவில் விழலாம் என்பதை நான் அறிந்திருக்கவில்லை’ (பக் 93) எனக் கூறுகிறாள்.

உண்மையில் சிறிரஞ்சனி பல சிறப்புகளை இத்தொகுப்பில் படித்து இரசிக்க முடிகிறதாயினும் மிக முக்கியமாகப் பேசப்பட வேண்டியது இதிலுள்ள பெண் மொழிதான். 1984 ல் எழுதி தொகுப்பின் முதற்கதையாக இருக்கும் ‘மனக்கோலம்’ முதல் தொகுப்பின் இறுதிக்கதையாக 2017ல் எழுதிய ‘சில்வண்டு’ வரை இந்தப் பண்பைக் காண முடிகிறது. அம்பையின் படைப்புகளில் கண்டு இரசித்த அந்தப் பண்புகள் இவரது படைப்புகளிலும் வெளிப்படுகிறது.

திருமண உறவில் உரசல்களும் விரிசல்களும் பெண் பார்வையாக மட்டுமின்றி ஆண் பார்வையாகவும் சொல்லப்படுவது கதாசிரியரின் விரிந்த மனப்பான்மைக்கும் ஆழ்நத அவதானிப்பிற்கும் சான்றாக அமைகிறது. ‘கனவுகள் கற்பனைகள’; என்ற சிறுகதையில் மருத்துவரான மனைவி தனது தொழிலில் காட்டும் அக்கறையை கணவன் மனைவி உறவில் காட்டுவதில்லை. வீடு வந்தாலும் தனது நோயாளிகளைப் பற்றியே பேச்சு.

‘இது என்ன சாதரண ஆட்கள் மாதிரி சின்னச் சின்ன ஆசையெல்லாம்….’ என இருவாரகாலமாக கூடிப் போவதற்குத் திட்டமிட்டிருந்த திருவிழாப் பயணத்தை இரத்து செய்துவிட்டு மருத்து செமினாருக்கு போகும் போது அவள் அவனுக்கு சொன்னது.

‘ஆகாயத்தில் பஞ்சுப் பொதி போல் மிதந்து செல்லும் மேகத்தைரசிப்பது, இரவில் நிலவொளியில் அமர்ந்து நட்சந்திரங்களை எண்ணுவது, புற்தரையில் படுத்து உருள்வது …. யாவுமே சின்னச் சின்ன ஆசைகள்தான் ஆனால் அவற்றை மனைவியுடன் பகிர்ந்து கொள் நினைப்பதுதான் பெரிய ஆசையா, எனக்கு ஏன் அவை கிடைக்க மாட்டேன் என்கிறது’ ஆதங்கப்படுகிறான்..

ஆம். உள்ளத்தின் அரவணைப்புக்காக ஏங்குகிறது அவன் மனம்.

படித்து முடித்ததும் மூடி வைக்க முடியவில்லை தொகுப்பை. அவரது பாத்திரங்களின் உணர்வுகளோடு உரையாடிக் கொண்டிருக்கிறது எமது மனசு.

‘உதிர்தில்லை இனி’ தொகுப்பானது ஒன்றோடு மற்றொன்று போல பேசப்படாது இரசிக்கப்படாது உதிர்ந்து போகப் போகும் சிறுகதைத் தொகுப்பு இல்லை. நிச்சயமாக நிறைய வாசிக்கப்படும் பேசப்படும் விமர்சிக்கப்படும் நூலாக அமையும் என நம்புகிறேன்.

உதிர்தலில்லை அதற்கு.

எம்.கே.முருகானந்தன்.

0.00.0

Read Full Post »

தமிழ்நதியின் ‘மாயக் குதிரை’

அண்மைய திருவிழாவின் போது ஆலயத்தில் அலை மோதிய தன் பக்தர்களுக்கு, நல்லூர் கந்தன் தங்குதடையின்றி அருள்பாலித்தார். கோயிலுக்குள் கால் வைக்காது வீதியோடு நின்றுவிட்ட எனக்கும் அந்த அருள்பாலிப்பின் மிச்சமீதி எச்சங்கள் சிந்தவே செய்தன. பல நூல்களை வாசித்துய்யும் படி கடைக்கண் அனுக்கிரகம் செய்தார்.

மாயக்குதிரையில் பயணம் செய்யும் சுவார்ஸமான அனுபவம் அதன் பயனாகக் கிட்டியது. பயணம் செய்தது என்று பட்டும் படாமலும் சொல்லிவிட முடியாது. மாயக்குதிரையின் காற்றளையும் சிறகுகளால் வாரி அள்ளப்பட்டு, கணகணப்பான அதன் அணைப்பில் இருநாட்காளகப் பயணித்தமை முன்னெப்போதும் சித்திக்காத சுகானுபவமாகும்.

பத்தே பத்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்புத்தான் தமிழ்நதியின் மாயக்குதிரை. சுமார் 170 பக்கங்களைக் கொண்ட தொகுப்பு. தமிழ்நாடு டிஸ்கவரி புக்பலஸ் வெளியீடு.

ஓவ்வொரு சிறுகதையும் வாழ்வின் சுழல் நீரில் சிக்கித் தவிக்கும் நிஜ மாந்தரின் உள்ளங்களில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை ஆழ்ந்து அனுபவித்துபோல சித்தரித்து எம் அனுபவங்களாகவும் நீட்சி கொள்ள வைக்கின்றன. அடர்த்தி நிறைந்ததும் சந்றே அம்மலுமான கருமுகில்கள் மாறுபட்ட சித்திரங்களாக உருக்கொள்வது போல துயர் செறிந்த பிரச்சனைகளில் மூச்சடங்கத் திணறும் மாந்தர்களின் வாழ்வின் கோலங்களை அள்ளித் தெளிக்கின்றன. ஒவ்வொரு கதையும் எங்களை வித்தியாசமான அனுபவங்களுக்குள் மூழ்க வைக்கின்றன.

தமிழ்நதி திருகோணமலை மாவட்டத்தைச் சார்ந்தவர் என்று நினைக்கிறேன். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்கிறார். பொதுவாக புலம்பெயர் எழுத்தாளர்கள் என்றாலே நினைவிடை தோய்தலில் திளைப்பவர்கள் என்ற எண்ணமே பெரும்பாலான தாயக வாசகர்களின் எண்ணம். தாம் மகிழ்ந்து வாழ்ந்ததும், போரின் அகோரத்தினால் ஏற்பட்ட பாதிப்பும், யதார்தத்திற்கு அப்பாலான அரசியல் சிந்தனைகளுமே மேலோங்கி நிற்கும். தப்பியோடியவர்களின் ஒப்பாரிகள் என சில விமர்சகர்களின் எள்ளலுக்கு ஆளாவதுமுண்டு. ஆனால் சமகாலத்தின் மிக அற்புதமான படைப்பாளிகள் புலம்பெயர்ந்தவர்களாகவே இருப்பதை மறுப்பதற்கில்லை.

20180929_1141211

தமிழ்நதியின் கதைகளிலும் தாயகத்தில் வாழ்ந்த வாழ்வின் இனிய நினைவுகளும் போரின் அவலங்களும் இடப்பெயர்வும், புலம் பெயர் வாழ்வின் போலி முகங்களும் பேசப்பட்ட போதும் அவை படைப்புகளில் முனைப்புப் படாமைக்கு காரணம் அவரது எழத்தின் வசீகரமாகும். பிரச்சாரத்தன்மை இடையூறு செய்யாத சொல்லாடலும் கவித்துவமான நடையும் ஏனைய பல புலம் எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து வேறுபட்டு தனித்துவமாக நின்று சுகமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றன.

ஒவ்வொரு படைப்புமே பேசப்பட வேண்டியவையே. ஆனால் அவ்வாறு செய்வது சிறிய அறிமுகக் கட்டுரையில் முடியாததாகும்.

தாழம்பூவின் காதல் ஒரு வித்தியாசமான படைப்பு. இதுவே இத்தொகுப்பின் முதற்கதையும் கூட. நூற்றாண்டு காலத்திற்கு முன்பு வாழ்ந்த பெண்ணை, நவயுகப் பெண் ஒருத்தி எதிர்பாரத கணத்தில் முகங்கொண்ட யுகசந்திப்பில் விலகும் திரையின் பின்னே காட்சிகளாக விரிகிறது. இருவருமே காதலில் வீழ்ந்த பெண்கள் என்பதைக் காண்கிறோம். திகிலும் மர்மங்களும் ஆச்சரியமூட்டும் கணங்களுமான மாய உலகிற்குள் சஞ்சரிக்க வைக்கும் உணர்வைக் கொடுக்கிறது.

மேலோட்ட வாசிப்பில் அந்தப் படைப்பானது அமானுசத்தன்மையும் புதிர் சூழ்ந்ததாகவும் தென்பட்டாலும் அது பேசாமல் பேசும் கருத்தானது பேசப்பட வேண்டியது. பெண்கள் மீது ஆண்வர்க்கம் கொண்டிருக்கும் மேலாதிக்க உணர்வையும் காதலின் பெயரால் பெண்கள் ஏமாற்றி வஞ்சிக்கப்படுவதையும் உணரும்போது எமது சமூகக் கட்டமைப்பின் போலிமுகங்கள் கிழிந்து சிதிலமடைந்து அம்பலமாகின்றன.

இச்சிறுகதையை படித்த பின்னர் யதேட்சையாகப் ‘பியர் பிரேம் காதல்’ திரைப்படத்தில் இதன் கரு மற்றொரு முகமாக வெளிப்படுவது கண்டு ஆச்சரியப்பட்டேன். உண்மைதான் காதல் கற்பு கலாசாரம் போன்ற பெயர்களால் பெண்களை மட்டும் கட்டிவைக்கும் கைங்கரியத்தை எமது சமூகம் நரித்தனமாக இறுகத்துடன் கட்டியமைத்திருப்பதை அப்படம் தெரியாத்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நதியின் கதையில் அது தீர்க்கமாக ஆனால் குறியீட்டு ரீதியாக சொல்லப்படுகிறது.

போதை என்பது மதுவும் போதைப் பொருட்களுமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அரசியல் வாதிகளுக்கு அதிகாரம் ஒரு போதை, ரசிகனுக்கு திரைப்படம் ஒரு போதை, பல பெண்களுக்கு அழகுசாதனப் பொருட்கள் ஒரு போதை. நித்திலாவுக்கும் ஒரு போதை உண்டு. உங்களுக்கும் எனக்கும் கூட சற்றே இருக்கலாம் என்ற அபாயச் சங்காகவும் ஒலித்தது நித்திலாவின் புத்தகங்கள் என்ற சிறுகதை.

நித்திலாவின் புத்தகங்களில் ஆழ்ந்திருந்த போது ‘கடதாசியின் மட்கிய மணமும் தூசியும் இருட்டும் குடியிருந்த’ நித்திலாவின் அறையில் நானும் கூடவே இருந்து புத்தகங்களின் ஸ்பரிசத்தில் சுயம் இழந்திருந்தேன்.

‘மழைகாலத்திற்கென எறும்புகள் தானியங்களைச் சேமிப்பதைப்போல, விவசாயி விதைநெல்லைச் சேமிப்பதைப்போல குழந்தைகள் பிரியமான தின்பண்டங்களப் பொதிந்து வைத்திருப்பதைப் போல புத்கங்களைச் சேகரித்தாள்’

மிக அற்புதமான கதை. அதை வாசிக்கும் போது ஆங்காங்கே என்னையும் இனங்கண்டேன். சில தருணங்களில் எட்டி நிற்கும் பார்வையாளனாகவும்; உணர்ந்தேன். நூல்களிலும் வாசிப்பிலும் ஆர்வம் உள்ளவர்கள் தப்பாமல் படிக்க வேண்டிய படைப்பு அது. அதில் நாம் வாசித்து கண்டுணரும் போதனைக்கு அப்பால் அழகாக வார்க்கப்பட்ட சித்திரமாக மனதை நிறைக்கிறது.

மாயக்குதிரை யும் அதே போல மற்றொரு போதையைப் பேசும் சிறுகதை. தொகுப்பின் சிறப்பான படைப்புகளில் இதுவும் ஒன்று. படிக்கும் போது தமிழ்நதியின் படைப்புகளில் போதை அடைந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் படும் துயர் ஆற்றமுடியாதது. காத்திருப்பு கதையில் பாடசாலையால் வந்த பையனை விசாரணைக்காக இராணுவத்தினர் அழைத்துச் செல்கிறார்கள். தனது மகனுக்காக 32 ஆண்டுகளாக காத்திருக்கிறாள். ஞானம்மாவின் காலத்தால் வற்றாத காத்திருப்பின் தாய்பாசம் அவளுக்கானது மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான தாய்மாரின் துயர்ச் சாகரமாக அலை வீசுகிறது. தன் மகன் தன்னைக் கட்டாயம் வந்து தன்னைப் பார்ப்பான் என்ற நம்பிக்கையோடு காலதேவனை உதைத்துத்தள்ளிக் காத்திருக்கிறாள். எனது மகன் எங்கே என்ற அட்டையுடன் ஆர்பாட்டங்களில் கலந்து கொள்கிறாள். முடிவு ஆச்சரியமளிக்கிறது. அவன் வீரமரணம் அடைந்தான் என்ற பழைய செய்தித்தாள் கைக்கெட்டுகிறது.

அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய படைப்பு இது. அரசின் பொய்பிரசாரத்திற்கு துணை நிற்கிறது என இனப்பற்றாளர்கள் கூக்குரல் இடவும் கூடும். ஆயினும் காணமல் போனவர்கள் பற்றிய பிரச்சனையில் எம்மத்தியில் அதிகம் பேசப்பாத ஒரு உண்மையை வெளிப்படுத்திய துணிவிற்காக படைப்பாளியைப் பாராட்டலாம். அது சொன்ன விடயத்திற்கு அப்பால் தாயின் காத்திருப்பை அற்புதமாகப் பேசும் கதை. மிக அழகாகப் பின்னப்பட்டது.

மலைகள் இடம் பெயர்வதில்லை கதையின் சிதம்பரம் ஆச்சி மறக்க முடியாத பாத்திரம். சிங்கள மக்கள் சுற்றி வாழும் பன்குளம் பகுதி மக்கள் இனக் கலவரத்தில் பட்ட துன்பம் சொல்ல முடியாதது. ஓவ்வொரு இரவும் தங்கள் உயிர்களைக் காப்பாற்ற குழந்தை குட்டிகளுடன் காட்டிற்குள் ஒளிந்து மறைந்து கொள்ளும் அந்த மக்களின் அனுபவங்கள் யாழ்மக்களாகிய நாம் கனவிலும் அனுபவிக்காதவை.

‘வெட்டுறதெண்டா வெட்டட்டும். அவங்களுக்குபு; பயந்து என்ரை வீடான வீட்டை விட்டிட்டு காடு கரம்பையில் போய்ச் சாகோணுமோ’ இது சிதம்பரம் ஆச்சியின் குரல். நுணுக்கமான களச் சித்தரிப்புடன் அழகாகச் சொல்லப்பட்ட படைப்பு.

தோற்றப்பிழை என்ற சிறுகதை ஆரம்பத்தில் சொல்லப்பட்ட தாளம்பூ வைப் போலவே பெண்களுக்கு எதிரான அநீதிகளை சரித்திர பின்னணியுடன் நிகழ் வாழ்வைக் கலந்து புனையப்பட்ட படைப்பு. அதன் ஆயி மறக்க முடியாத பாத்திரம்.

இவருடைய படைப்புகள் வெறும் கதைகள் அல்ல. போரும் அகதி வாழ்வும் புலம்பெயர் அந்நிய கோலங்களுமாக சமகால வரலாற்றின் கதைகளாக அல்லாமல் வர்ண ஓவியங்களாக மனதை நிறைத்து நிற்கின்றன. தர்க்க ரீதியான சில முரண்களை ஓரிரு கதைகளில் காண முடிகிறது. படைப்பாளுமை அவற்றை மூடி நிரவிவிடுகிறது.

கவிதை கட்டுரை சிறுகதை என பலதளங்களில் இவர் இயங்குவதை அறிய முடிகிறது. நூல்களாகவும் வந்துள்ளன. ஆனால் அவற்றோடு உறவாட இன்னமும் வாய்ப்பு கனியவில்லை.

இவருடைய ஒரிரு படைப்புகளை ஏற்கனவே உதிரியாகப் படித்திருக்கிறேன். ஆயினும் இந்தப் பத்துக் கதைகளையும் ஒன்று சேர்த்து படிக்கும் போதுதான் தமிழ்நதியின் மனதை ஒன்ற வைக்கும் பாத்திரப் படைப்புகளும் களச் சித்தரிப்புகளும் கவித்துவ நடையும் என்னை ஈர்த்துக் கொண்டன. தேடிப் படிக்க வேண்டிய படைப்பாளி என்பதை சொல்ல வேண்டியதில்லை.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

மிகுந்த வெக்கமாயிற்று. இலக்கிய வனாந்திரத்தில் ஒதுங்கிக் கிடக்கிறேனோ என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

20180707_162212இதுவரை இந்த சிறுகதைத் தொகுதியை படிக்காதது மட்டுமின்றி அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் இல்லையே என்று மனம் ஆதங்கப்பட்டது.

பிரண்டையாறு ஒரு சிறுகதைத் தொகுதி. 12 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தீவகத்தில் பிறந்த ஒருவன் போரின் வலிய அலைகளால் தூக்கி வீசப்பட்டு நிரக்கதியாகி சொந்த வீட்டை இழந்து சொந்த மண்ணிலிருந்து நீங்கி அகதி முத்திரை குத்தப்பட்டு காற்றின் திசைகளில் அள்ளுண்டு தன் தலைசாய்த்து கண்மூடி ஆறுதல்தேட இடம் ஏதும் கிடைக்கிறதா எனத் தேடி அலைந்த நினைவுகளை பதிவு செய்யும் தொகுதி இது என்று சொல்லலாம்.

‘அவனது பயணங்கள் எல்லாம் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் முடிந்தவையாகிப் போயின. தான் பயணிப்பதாகவே பிறந்ததாகவும் தனது பயணத்திற்கு தரிப்பிடங்கள் போதுமானவையாக இல்லை எனவும் நினைத்துக் கொள்கிறான்’ இதை அவரது வாக்குமூலமாகவும் கொள்ளலாம்.

கடந்த காலத்தில் யாழ் மண்ணிலும் வன்னியிலும் கிழக்கு இலங்கையிலும் இவ்வாறு சிதறாதவர்கள் யாரும் உண்டா?. எங்கள் ஒவ்வொருவருக்கும் கூட அத்தகைய அனுபவங்களுக்கு குறைவில்லை. இடப்பெயர்வுகள் பற்றி எத்தனையோ இலக்கியப் படைப்புகள் வந்துள்ளன. அவ்வாறு இருக்கும்போது மெலிஞ்சிமுத்தனின் சிறுகதைகள் பேசப்பட வேண்டி இருப்பது ஏன்?

அது கதையின் உள்ளடக்கத்தில் அல்ல. அது சொல்லப்பட்ட முறையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது. பேசப்பட வேண்டியதாக போற்றப்பட வேண்டியதாக என்று கூட சொல்லலாம். மொழியை சாணை தீட்டி உணர்வுகளுக்குள் முக்குளிக்க வைக்கும் அற்புதமான படைப்பாளிகளான கதை சொல்லிகள் எம்மிடையே இருக்கிறார்கள். ஆ.முத்துலிங்கம், ஆ.சி.கந்தராஜா, மு.பொ, உமா வரதரதராஜன் என அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இவர் கதை சொல்லி அல்ல. மேம்போக்காக படிப்பவர்களுக்கு அவற்றிற்குள் கதை இருப்பதை கண்டு கொள்ளவது கூட சிரமமாக இருக்கலாம். காரணம் அவரது படைப்புகளிலுள்ள கதை அம்சம் பெரும்பாலும் குறியீடாகவே சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு முதற்கதை ‘புலம்பெயரும் சாமங்களின் கதைளூ’ இவ்வாறு முடிகிறது. ‘பகல் நாய் வீணியூற்றியபடியே சுருண்டு படுத்துக் கிடக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் காத்திருக்கிறது ‘மறுகரை’.’. மேலோட்டமாகப் பாரக்கும்போது. வெறும் காட்சிப் பதிவு போல தென்படுகிறது.

ஆனால் தொண்ணுறுகளின் முற்கூறுகளில் யாழ் மண்ணிலிருந்து பெருநிலப்பரப்பிற்கு போவதானால் கிளாலி கடற்பரப்பை கடக்க வேண்டும் அந்த திகிலூட்டும் பயணங்களின் பின்னணியை நினைகூரும்போது ஆயிரம் ஆயிரம் கதைகள் சொல்லாமல் சொல்லப்படுகின்றன. மெலிஞ்சி முத்தனும் சொல்கிறார். இரவில் படகுகளில் மக்கள் முண்டியடித்து பயணப்படுவதும், படகுகள் ஒன்றை விட்டு மற்றது பிரிந்து செல்லாது இருக்க கயிறுகளால் பிணைக்கப்படுவதும், கடற்படைக்கு தெரியாதிருக்க வெளிச்சமின்றி படகுகுள் பயணிப்பதும், எப்படியோ மோம்பம் பிடித்த கடற்படை சுட்டுத்தள்ளுவதும், சனங்கள் மரணிப்பதும், பிணங்கள் மிதப்பதும், இவற்றெயெல்லாம் அறிந்திருந்தும் மற்றவர்கள் இறப்புக்களை மறந்து மரணதேவதை கிளாளிக் கடலில் காத்திருக்கிறான் என்பதை மனதில் ஆழப் புதைத்துவிட்டு அடுத்த நாளும் மக்கள் பிரயாணத்திற்கு முண்டியடிப்பதும்…..

கதையை வாசித்துவிட்டு கண்ணை மூடிப்படுத்துக்கிடந்தால் கதைகதையாக விரியும். நானும் அவ்வாறு பயணப்பட்டிருந்ததால் அணுவணுவாக கதையை அர்த்தப்படுத்திப் படிக்க முடிந்தது.

அவரது படைப்பாக்க முறையின் மற்றொரு முக்கிய அம்சம், தன் ஆழ்மனத்து எண்ணங்களை, தாவித் தாவிச் செல்லும் சிந்தனை ஓட்டங்களை சொல்லோவியமாக்குவதே ஆகும். தன ஆழ் மனத்தில் எழும் நினைவுகளை எண்ணங்களை சிந்தனைகளை ஒரு வரையறைக்குள் ஒழுங்குபடுத்தி சிறுகதையாகப் படைக்கிறார். அந்த எண்ண ஓட்டங்களுடன் இணைந்து பயணிக்கும் வாசகனுக்கு தன்னையும் அங்கு இனங்காண முடியும். புதிய சாளரங்களை வாசகனுக்கு திறக்க வைக்கும். தன்னைப் பற்றி மட்டுமின்றி இந்தச் சமூகம் பற்றி, இந்த தேசம் பற்றி தன்னைச் சுற்றி நடப்பவற்றின் உள்ளரசியல் பற்றி பல உண்மைகள் வெளிச்சமாகும்.

இந்த மாற்றுப் பாதையே மெலிஞ்சிமுத்தனது படைப்புகளின் ஆணிவேராக இருப்பதாகப் படுகிறது. கதை எங்கோ தொடங்கி வேறெங்கோ இழுபட்டு நகர்வதாகத் தோன்றினாலும் பூடகமாக தன் கருத்தை வெளியடவே செய்கிறது.

உதாரணமாக கொழுக்கட்டை கள்வர்கள் கதையைச் சொல்லலாம். சவீனா ரீச்சர் வீட்டில் ஒவ்வொரு பெரிய வெள்ளியும் ருசியான கொழுக்கட்டைகள் களவு போவது பற்றி சுவாரஸ்மான கதை சொல்லப்படுகிறது. கதை இப்படி முடிகிறது. ‘கொழுக்கட்டை கள்வர்களின் சடலங்களை ஓலைப் பாய்களாலும் சாக்குகளாலும் சுற்றிப் புதைத்தார்கள். டக்ளஸ் மட்டும் ‘உயிர்தெழுந்த ஞாயிறைக்’ கொண்டாடிக்கொண்டு கொழும்பில் இருந்தான்’; (பக் 16) எவ்வளவு அழகாக முடித்திருக்கிறார். சொல்லமால் சொல்லப்பட்டவை ஏராளம் தொக்கி நிற்கிறது இந்த ஒரு வசனத்தில்.

போரினதும் அதன் அவலங்களதும் பார்வையாளனாகவும் பாதிப்புக்கு ஆளானவனாகவும் இருக்கும் இந்தப் படைப்பாளி வீர வசனங்கள் பேசவோ இலட்சியங்கள் முழங்கவோ இல்லை. அரசாங்கத்தையும் மாற்று இயக்கங்களையும் வார்த்தைகளால் வறுத்தெடுக்கவும் இல்லை. நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி சொல்கிறார். அதனை அர்த்தப்படுத்தும் பணியை வாசகனிடமே விட்டுச் செல்கிறார்.

இல்ஹாம் ஒரு அற்புதமான கதை. முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதின் பின்னணியில் பேசப்படுகிறது. அற்புதமான முடிவு. முழு தமிழ் சமூகமுமே குற்ற உணர்வு கொள்ள வேண்டியதை சொல்லாமல் சொல்கிறது.
மீனவக் கிராமம் அவர் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது. அவர்கள் வாழ்வை மொழியை அவர்களது பாடுகளை படைப்புகளில் விரித்துச் செல்கிறார். அங்கு சமூக ஒடுக்குமுறை எவ்வாறு இருந்தது என்பதை சில வரிகளில் அவரால் சொல்லிவிட முடிகிறது.

‘அவருக்கு (தந்தைக்கு) எப்போதுமே தன் முதுகில் மீன் செதில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணர்வே இருந்தது.’

‘நான் பள்ளிக் கூடம்போனபோது என்னில் மீன் வெடுக்கு மணக்கிறதென்று பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சொன்னார்கள். நான் அழுதபோது கூட என் கண்ணீரிர் வெடுக்கு மணத்தபடியே இருந்தது. பின்னர் நான் பள்ளிக்கூடத்தையே மறந்து போனேன்’; மனதை நொருங்க வைக்கும் வரிகள்.

ரசித்ததில் மற்றொன்று. சமாதான காலம் ஒன்று பற்றியது ….. ‘கொழும்பில் இருந்து வந்த பெண்கள் கல்லு வீதிகளில் குதிக்கால் உணர்ந்த பாதணிகளோடு நொடுக்கு நொடுக்கு என்று இந்தரப்பட்டு நடந்தார்கள். வுன்னியில் இருந்து வந்தவர்கள் போர்த்து மூடீக்கொண்டு திரிந்தார்கள். யுhழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களோ ஏதோ மாய முடிச்சுகளை சோட்டித் துண்டுகளில் முடிந்து திரிந்தார்கள்.

20180707_1622291

‘யாராவது என்னைத் தேடலாம். ‘நாடு கடந்த அரசு பற்றி’ பேச நண்பர்கள் என்னையும் அழைக்கலாம். ஏன் பிரியமான வாசகர்களே, உங்களிடமிருந்து இப்பொழுது பிரிந்து செல்கிறேன். ஏனக்கு வேண்டியது தனிமை. பிணங்களையும் புணரும் மனநிலை கொண்ட மனிதர்களை இந்த நூற்றாண்டு கொண்டிருக்கிறது என்றால்…’ (பக்கம் 64) இதுதான் அவரது படைப்புகளின் அடிநாதமாக வீசிககொண்டிருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது.

வித்தியாசமான பேச்சுத் தமிழ். தீவகத்திற்கே உரியது. அழகாகக் கையாண்டிருக்கிறார். கவிதை மொழியும் ஆங்காங்கே சிலிர்க்க வைக்கிறது.

இறுதியில் வரும் இரு கதைகள் தப்பிப் பிறந்த வேர்கள் போல இந்த தொகுப்பில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றை வாசிக்கும் கட்டுரைகளை வாசிக்கும் உணர்வே ஏற்படுகிறது. துன் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அவசரத்தில் எழுதியதாகவே படுகிறது.

அவரது இரு கவிதைத் தொகுதிகளும் அத்தாங்கு என்ற நாவலும் வெளிவந்ததாக அறிகிறேன். ஆனால் அவை கைக்கெட்டவில்லை.

கருப்புப் பிரதிகள் வெளியீடாக 2011 மார்களியில் வெளிவந்த அருமையான நூல். இதுவரை படிக்காதது கவலை அளித்தது. நீங்களும் அதே தவற்றைச் செய்யாதீர்கள்.

இந்த நூலின் பிரதியை மட்டக்களப்பு நண்பர் திலீப்குமார் கணேசன் மூலம் பெற்றேன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எம்.கே.முருகானந்தன்

ஜீவநதி சஞ்சிகையில் வெளியான கட்டுரை

0.00.0

Read Full Post »

பரணீதரனின் சிறுகதைத் தொகுதியை அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

மீண்டும் துளிர்ப்போம். இது பதின்மூன்று சிறுகதைகளை உள்ளடக்கிய அழகான நூல். இதழ் விரித்து நிற்கும் மலரொன்று அழகிய அட்டைப்படமாக சிலிர்த்து நிற்கியது. வடிவமைத்த மேமன் கவியின் கவிநயம் துலங்குகிறது.

தொகுப்பிலுள்ள ‘யதார்த்தம’; என்ற சிறுகதை என்னை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. இதற்குக் காரணம் அதிலுள்ள சமூகப் பெறுமானம்தான். எமது சமூகத்தில் முதுமை வாழ்வு பற்றி இன்னும் தளாராமல் இருக்கும் ஒரு கருத்தை இக்கதை மறுபரிசீலனை செய்கிறது. நோகாமல் தவறெனச் சுட்டிக் காட்டுகிறது. இது என்னுள் பல சிந்தனை ஊற்றுக்களை திறந்து விட்டது. அதனைப் பகிர்ந்து கொள்வதுடன் நூலில் உங்களையும் அழைத்துச் செல்லலாம் என எண்ணுகிறேன்.

தனது சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கும் வரை முதுமை வாழ்வு என்பது துன்பமானது அல்ல. சொந்தக் கால் என்பது பொருளாதார ரீதியானதைக் குறிக்கவில்லை. நடமாடித் திரிந்து தனது சொந்த அலுவல்களை தானே செய்யக் கூடியதாக இருக்கும் வரை அது தொல்லை கொடுப்பதாக இருக்கமாட்டாது.

வயதிற்கு மதிப்பிருக்கிறது இங்கு. வயது முதிர்ந்தவர்களைக் கௌரவிக்கும், அவர்களது அனுபவபூர்வமான ஆலோசனைககளுக்கு காது கொடுக்கும் சமூகப் பாரம்பரியமும் எம்முடையது. அத்தகைய பண்பாட்டுச் சூழல் இன்னமும் ஒழிந்து விடவில்லை. அதன் காரணமாகவே முதுமை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது எனக் கூறினேன்.

ஆனால் படுக்கையில் வீழ்ந்துவிட்டால்….? அறளை பெயர்ந்து விட்டால் என்ன நடக்கும்?

வயது முதிர்ந்த நேரத்தில் அதிலும் முக்கியமாக நோயும் இயலாமையும் துன்புறுத்தும்போது தமது தாய் தகப்பனை அல்லது பாட்டன் பாட்டியை தமது வீட்டில் வைத்துப் பராமரிக்க வேண்டியது தமது கடமை என்பதாகவே இன்னமும் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முற்றிலும் தொலைந்து விடாத சமூகமாக இருப்பதன் பலன் அது.
ஆனால் படுக்கையில் வீழ்ந்து விட்டபின் ஒரு புதிய பிரச்சனை தலை தூக்குகிறது. ஆழமான அன்பு, பொருளாதார வசதி ஆகியன இருந்தாலும் இப்பிரச்சனையை எதிர்கொள்வது சிரமம்.

மலையகத்தைக் களமாகக் கொண்ட கதை. மண்வாசனைக் கதையல்ல.
கைக் குழந்தையாக இவன் இருந்தபோதே மலைச்சரிவு இவனது தந்தையைக் காவு கொண்டுவிட்டது. அதன் பின்னர் இவனைப் பிள்ளை மடுவத்தில் விட்டு விட்டு, கொழுந்து பறித்து அவனை வளர்தெடுத்தது அந்த அன்னைதான். பல்கலைக்கழகம் வரை படிக்க வைத்து ஆசிரியன் ஆக்குகிறாள். தான் உழைக்கத் தொடங்கியதும் தாயை வேலை செய்வதை நிறுத்தி வீட்டில் ஆறுதலாக இருக்கச் செய்கிறான். தாய் பேரக் குழந்தைகளைப் பராமரிப்பதில் மகிழ்ச்சியடைகிறாள். பாசம் நிறைந்த குடும்பம்.

இந்நிலையில் திடீரெனப் பக்கவாதம் வந்து படுக்கையில் தாயை விழுத்திவிடுகிறது. எவ்வளவுதான் தான் பாசம் இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டியிருப்பதால் தாயைப் பராமரிப்பது பெரும் சுமையாகிறது. இந்த நிலையில் அவர்கள் என்ன செய்ய முடியும். முதியோர் இல்லத்தில் விடுவதுதான் வழி. ஆனால் தாய் மீதான பாசம், பாரமரிப்பு நிலையில் விடுவது பற்றிய குற்ற உணர்வு, ஊர்ப்பழி, போன்ற குடும்ப ரீதியானதும் சமூக ரீதியானதும் காரணங்கள் தடையாக இருக்கின்றன.

இவை பற்றி அலசும் சமூக விழிப்புணர்வுக் கதையாக இருக்கிறது. மகன் சரியாக முடிவெடுக்கிறான். பாராட்டத்தக்கது. ஆனாலும் கதையின் முடிவோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. தாயின் இயற்கை மரணத்தில் முடிப்பதைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஆனால் பரணீதரன் ஏனைய படைப்புகள் பலவும் இதற்கு மாறாக தீர்க்கமாக கருத்துக்களைத் முன் வைக்கிறன. சமூக முன்னேற்றதில் அக்கறையுள்ள படைப்பாளியால்தான் தெளிவான கருத்துக்களை முன்வைக்க முடியும். அழகியலுக்குள் தன்னை மறைத்துக் கொண்டு பேடித்தனமான படைப்புகளை வழங்கும் சிறுமை இவரிடம் காணப்படவில்லை.

கருத்து ரீதியாக ‘யதார்த்தம்’ என்னைக் கவர்ந்த கதையாக இருந்தபோதும் நூலின் முகப்புச் சிறுகதையான ‘உயிரினும் மேலானது’ நல்லதொரு படைப்பு எனலாம். இக்கதையில் படைப்பாளியின் ஆளுமை சிறப்பாக வெளிப்படுகிறது. காதல், போரின் அவலம், விடுதலைப் போராட்டதின் மறுபக்கம், அதிகாரிகளின் சுயநலம் என எமது நிகழ்கால வாழ்வின் பல பக்கங்களைத் தொட்டு சுவார்ஸயமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதிர்வு தருவதாக இருப்பது சதீயத்திற்கும் குடும்ப கௌரத்திற்கு எதிராக மனிதாபிமானத்தின பக்கம் நிற்கும் இளைஞனின் உறுதிதான்.

பாலியல் பிறழ்வுகளும் வக்கிரங்களும் கொண்ட ஒருவனின் மனைவியாக வாழ்வதின் துன்பத்தை ‘விடுதலையாகி நிற்பாய்’ பேசுகிறது. பெண்ணியம் இழையோடுகிறது. அவனது செயற்பாடுகள் உளவியல் பிரச்சனையின் வெளிப்பாடு என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், உள ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து மீள உதவும் என்கிறது.

‘எனக்கு விசர் எண்டு சொல்லுறியோ’

இது தனது தன்மானம் பாதிக்கப்பட்ட அந்த ஒற்றைக் கணவனின் எதிர்வினைத் தனிக்குரல் என்று மட்டும் என்னால் கொள்ள முடியவில்லை. மனநோய்கள், உள ஆற்றுப்படுத்தல் போன்றவை பற்றி இன்னும் தவறானக் எண்ணக் கருக் கொண்ட எமது சமூக பண்பாட்டுத் தளத்தின் குரலாகவே ஒலிக்கிறது.
உளவியில் கல்வியறிவு கொண்ட இவரையொத்த இளம் படைப்பாளிகள் தமது எழுத்தாண்மையால் அதை மாற்ற வேண்டிய கடமை உள்ளது.

இத்தொகுதியில் உளவியிலை நேரடியாகப் பேசும் குறைந்து மூன்று கதைகளாவது இருப்பதானது பரணீதரன் செய்வார் என்பதை உறுதிப்படுத்துகிறது. ‘மாறுதல்;, ‘பகிடி வதை’, ‘விடுதலையாகி நிற்பாய்’ என்பன அவை.

இன்றைய இளைய சமூதாயத்தின் போக்கில் விரக்தியுற்றவர்களாக பல பழைய தலைமுறையினர் இருக்கிறார்கள். சிந்தனைகளிலுள்ள வேறுபாடுகளுக்கு தலைமுறை இடைவெளிதான் காரணம். இதனால் மனதில் தாக்கம் ஏற்பட்டு விரக்தியடையும் ஓரு முதியவரை ‘மாறுதல்’ சிறுகதையில் காண்கிறோம். தனது வீட்டிலேயே தமிழ் பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் அவரை நிலை குலைய வைக்கிறது. உள ஆற்றுப்படுத்தலை (கவுன்சிலிங் ) நாடி வருகிறார்.

‘உங்கடை நண்பர்கள் ஆறு ஏழு பேர் வீட்டைபோய் அவர்களோடை, பிள்ளைகளோடை கதைச்சுப் போட்டு நாளைக்கு வாங்கோ… தொடர்ந்து கதைப்போம்.’

பிரச்சனையை விளக்கி ஆறுதல் கொடுக்கும் கவுன்சிலிங் செய்வதற்குப் பதிலாக இந்த விடை கிடைக்கிறது. ஆனால் உண்மையான கவுன்சிலிங் இதுதான். தானே மற்றவர் அனுபவங்களுடன்  கலந்துணர்ந்து சமூகத்திலிருந்தே கற்றுக் கொள்ள வழிசெய்கிறது. கதையோடு கதையாக உள ஆற்றுப்படுத்தல் பற்றிய பல விபரங்கள் வாசகனுக்குச் சொல்லப்படுவது இக்கதையை மேலும் முக்கியப்படுத்துகிறது.

‘விடுதலையாகி நிற்பாய்’ சிறுகதையில் பிறழ்வு நடத்தையின் அறிகுறிகள் பட்டியலிடுவது போலச் சொல்லப்பட்டதற்குப் பதிலாக சம்பவங்களின் ஊடாக நகர்த்தியிருந்தால் வாசகனிடத்தில் கூடியளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. நூலாசிரியரின் வேறு பல படைப்புகளையும் சேர்த்து நோக்கும்போது, ஆசிரியர் கூற்றாக நேரடியாக கதையைச் சொல்லிச் செல்லும் பண்பு இவரிடத்தில் அதிகம் இருப்பதாக என் மனதில் பட்டது. இது தன் கருத்தை ஆணித்தரமாகப் பதிப்பதற்கு அவசியமான போதும் ரசனையான வாசிப்பிற்கு துணைபுரியும் எனத் தோன்றவில்லை.

ஆயினும் கட்டுடைத்துப் புதிய இலக்கிய வடிவங்களை தேடிப் பயணிக்கும் இன்றைய இலக்கியச் சூழலில் கதை, கட்டுரை, கவிதை, நாடகம் போன்ற வழமையான வடிவங்களை மீறியும், ஒன்றுக்குள் ஒன்று சங்கமிப்பதுமான மாறுபட்ட வடிவங்கள் ஏற்புடையனவே.

இவரது படைப்புகளில் காணும் மற்றொரு பண்பு வாழ்வில் பற்றுதலை ஊட்டுவதாகும்.

  • சலிப்பு, எதிர்காலம் மீதான நம்பிக்கை வரட்சி ஆகியவற்றை விடுத்து
  • நல்மனத்தோடு விடாமுயற்சி செய்து முன்னேறும் பாத்திரங்களைப் பல படைப்புகளில் காண்கிறோம்.
  • தகப்பனை அல்லது தாயை இழந்த மகன், மகள் குடும்பத்திற்காக உழைத்து, முன்னேற்றுவதான குறிக்கோளுடன் இயங்குகிறார்கள்.
  • குடி, புகைத்தல், பகிடிவதை போன்றவற்றிலிருந்து தப்பித்த
  • இலட்சிய வாழ்வுப் பாத்திரங்கள் சமூக விடிவிற்கான உதாரணங்களாக நிற்கிறார்கள்.

பொதுவாக இலட்சிய இளைய சமூதாயம் நோக்கிய இளைஞனின் புனைவுகளாக இருக்கின்றன.

  • தெணியானின் ‘உளவியல் பார்வை இழையோடும் படைப்புகள்’ என்ற விரிவான அணிந்துரையும்,
  • பேராசிரியர். சபா.ஜெயராசாவின் நுணுக்கமான ‘முன்வாயில்’ ம் நூலுக்கு அணி செய்கின்றன.
  • பின் அட்டையில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா பரணீதரனை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

சஞ்சிகை வெளியீட்டில் தனது தனித்துவத்தைப் பதித்த ஜீவநதி சஞ்சிகையின் மற்றொரு வளர்ச்சியான ஜீவநதி வெளியீடு வந்துள்ளது. இரண்டிலும் தனது தகமையை வெளிக் கொணர்ந்த பரணீதரனைப் பாராட்டுகிறேன்.

ஞானம் சஞ்சிகையில் வெளியான எனது விமர்சனக் கட்டுரை.

எனது மறந்து போகாத சில புளக்கில் 2011 ல் வெளியான கட்டுரை

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

‘அம்மாவின் உலகம்’ இது கலாமணி அவர்களின் மூன்றாவது சிறுகதைத் தொகுதியாகும். எட்டுச் சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

Book covers_Kalamani

அம்மாவின் உலகம் எனப் பெயரிடப்பட்ட போதும் இது கலாமணியின் உலகமும் ஆக இருக்கிறது. இவற்றில் அவரது மூன்று வெவ்வேறு உலகங்களை இனங் காணக் கூடியதாக இருக்கிறது.

  • ஓன்று அவரது அக உலகம்.
  • இரண்டாவது இவரது குடும்ப உலகம்.
  • மூன்றாவது அவரது சமூகம் சார்ந்த உலகம்.

படைப்பாளியான கலாமணியின்; அக உணர்வுகள் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையிலும் தெறித்து நிற்கிறது. பாடசாலை மாணவனாக இருந்த காலம் முதல் மணிவிழாக் காலம் வரையான பல தளங்களிலும் ஊடாடுகிறது.

‘நிழல்’ கதையில் எல்லா மணவர்களும் “மழையே மழையே வா வா” என அதை வரவேற்றுப் பாடுகிறார்கள். ஆசிரியரும் அதனையே ஆமோதிக்கிறார். ஆனால் இவன் பாடுவதில்லை. வாளாதிருப்பான். இதனை அவதானித்த ஆசிரியர் இவனையும் சேர்ந்து பாடும்படி உற்சாகப்படுத்துகிறார்.

ஆனால் இவன் “மழை போ வெயில் வா. மழை போ வெயில் வா” எனப் பாடி ஆசிரியரிடம் அடி வாங்கிக் கட்டுகிறான்.

‘எங்களின் வலி எங்களோடு. இவர்களுக்கு எங்கே அது புரியும்.’ ஆழமாகத் தைக்கும் சுருக்கமான வரியானது மாணவனின் உள்ளம் படும் பாட்டை வெளிப்படுத்துகிறது. குடை வாங்க வழியில்லாத ஏழை மாணவனின் உணர்வு அது.

ஒரு பெண்ணின் அருகாமை ஒருவனை உற்சாகப்படுத்துகிறது. மறுதலையான அவளது இல்லாமை ஓயவைக்கும். இவனுக்கு அருகில் நின்று வேலை செய்யும் கேரன் இரண்டு வாரங்களாக வரவில்லை. அதனால் தான் கவலையடையவில்லை என்றே நினைத்தான். அவள் வேலைக்கு வராததால் ஏற்பட்ட வெறுமை இவரது வேலையின் வினைத் திறனைப் பாதித்திருக்கிறது. நண்பர்கள் வேலையின் மந்தநிலையை கவனித்து, கேட்கவும் செய்தார்கள்.

“என் வேலை ஓடவில்லைத்தான்” என அவன் பதிவு செய்யும்போது நாலு பக்க ‘எங்கெங்கு காணினும்’ கதையில் பொதிந்துள்ள அவனது அகவணர்வு ஒரேயொரு வரியில் வெளிப்படுகிறது.

தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தவன் ஓய்வு பெற்று வீட்டில் ஓய்வாக இருக்கும் நிலையில் ஒருவனுக்கு ஏற்படும் மனநிலை எவ்வாறு மாற்றமடையும் என்பதையும், மனைவி பிள்ளைகளுக்கு இவன் மீதான மதிப்பு மரியாதைகளில் ஏற்படும் தொய்வும் இவனது உணர்வுளைச் சோரச் செய்வதையும் ‘நிழல்’ சிறுகதையில் சிறப்பாக காணமுடிகிறது.

அகவுணர்வு வெளிப்படுவதுபோலவே இப்படைப்புகளில் குடும்ப உறவில் மகிழ்ச்சியும் தளர்ச்சியும் ஏமாற்றமுமான உணர்வுகள் பல படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுகின்றன. தந்தையாக மகனாக சகோதரனாக கணவனாக பல பாத்திரங்களை காதாசிரியர் வகிக்கிறார்.

மிக அற்புதமாக வெளிப்படுவது மகனின் உணர்வுகள்தான். அம்மாவின் உலகம் மற்றும் நிழல் ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம். இத்தொகுப்பின் உச்ச வார்ப்புகளும் அவையாகவே இருக்கின்றன. இவன் அம்மாவில் கொண்டிருந்த பற்று அக்கதைகளின் ஒவ்வொரு வரிகளிலும் அழுத்தமாக வெளிப்படுகிறது. இவனது கனவுகளிலும், வீட்டில் பாதுகாத்து வைத்திருக்கும் அவளது குடையிலும் கூட அது உயிர்த்தெழுகிறது.

குறைவாகவே பேசப்பட்போதும் தந்தை பற்றிய பெருமிதத்தை ‘அம்மாவின் உலகு’ல் கதையோடு கதையாக சொல்லாமல் விடவில்லை.

தனது பிள்ளைகளுக்காக வேலை வேலைக்கு மேல் வேலை, ஓவர்டைம் என ஓடி ஓடி உழைத்துக் கொடுத்தாலும் அவனது பிறந்த தினத்தில் கேக் வெட்டும் நேரத்தில் அருகில் இருக்க முடியாத ஏக்கத்தை ‘தந்தையரும் தனயரும் சிறுகதை அற்புதமாக வெளிப்படுத்துகிறது.

பஸ்சில் காணும் கறுப்பு இனப் பெண்ணிற்கும் வெள்ளையனுக்கும் பிறந்த குழந்தையின் தந்தை மீதான பாசத்தையும் அதே வேளை தந்தை பிள்ளையை கண்டுகொள்ளாத தன்மையையும் அவதானிக்கும் இவனுக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. ஊற்றெடுக்கும் பாசத்தை வெளிப்படுத்த முடியாத சூழலில் இருக்கும் தந்தையின் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் படைப்பு இது.

மனைவி பற்றிய உணர்வுகள் மிகையின்றி யதார்த்தமாக உள்ளன. படைப்புகளில் பல விதமாக வெளிப்படவும் செய்கின்றன.

  • மகனின் பேர்த்டே அன்று தான் கூட இருக்க முடியாததால் மறுகும் உள்ளத்தை மனைவி தேற்றும்போது ஏற்படும் நெகிழ்வுணர்வு,
  • தன்னையும் குழந்தைகளையும் விட அம்மாவிலும் அவளது குடையிலும் மூழ்கிக் கிடக்கும் இவனை ‘உது ஒரு சென்ரிமென்ரல் ரைப்படா’ என எள்ளலாக சுட்டிக் காட்டும்போது மறுகும் மனம்,
  • பிள்ளைகளின் மீதான அவளது அதீத அக்கறையையும், பாசத்தை காணநோர்கையில் ‘அங்கு அம்மா இல்லை. குடையுடன் புவனம் தெரிந்தாள்’ எனத் தாயாகவே காணும் உணர்வு எனப் பல.

படைப்புகளில் அக உணர்வும், குடும்ப உறவுகளின் உன்னதங்களும் நெரிசல்களும் அற்புதமாக வெளிப்படுகின்ற போதும், இவரது ஆழமான சமூக உணர்வை ‘அக்கினிக் குஞ்சு’, ‘அவலம்’ சிறுகதைகளில் காண முடிகிறது.

‘எனது சிறுகதைகளில் அநேகமானவற்றில் நானும் ஒரு பாத்திரமாகவே உள்ளேன்’ என நூலாசிரியர் தனது உரையில் கூறுவதானது இது கலாமணியின் உலகம் என்ற எனது கருத்திற்கு வலுச் சேர்ப்பதாகவே உள்ளது.

‘இருந்தபோதும் அம்மாவின் உலகம் என்ற தலைப்பு மற்றொருவிதத்தில் மிகச் சரியானதாகவே படுகிறது. ஏனெனில் இத் தொகுப்பின் உன்னத கதைகள் அம்மா, தாய்மை, பெற்றோரியம், போன்ற உணர்வுகளையே பேசுகிறன்றன.

மிக முக்கியமான கதை அம்மாவின் உலகுதான். அது இடுப்பு எலும்பு உடைந்து படுக்கையில் வீழ்ந்துவிட்ட அம்மாவின் வாழ்க்கையையும் அவளைச் சுற்றிய உலகையும், பிள்ளைகள் மீதான பாச உணர்வையும் சொல்கிறது. அதிலும் தனது ஒரே மகன் மீதான அவளது பாசத்தையும், அவனது உணர்வுகளையும் மிக அழகாகப் பேசுகிறது.

மிகவும் நோய் வாய்ப்பட்டு நினைவு தழும்பிய நிலையிலும் தனது மகனது குரலை மட்டும் அவளால் உணர முடிகிறது. அந்தக் கடைசி இரவில் ‘நான் உங்களுடன் இரவு கூட நிற்கட்டுமா’ மகன் கேட்கிறான். ‘வேண்டாம் போ’ என்பதாக அவளது முகக் குறிப்பு காட்டுகிறது. மரணப் படுக்கைத் தரிசனத்தில் இதுவும் சேர்த்தியா என என் மனம் யோசித்தது.

மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவரது மன உணர்வுகளை நாம் கேட்டறிய முடியாது. சைகைகள் மற்றும் குறிப்புகளால்தான் ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும். இது பற்றி உலகளாவிய ரீதியில் பல ஆய்வுகளும் விவாதங்களும் நடந்திருக்கின்றன.

Book covers_Kalamani back

மரண வாயிலில் தான் நிற்பதை உணர்ந்திருக்கிறாள். தன் இறுதி மூச்சைப் பார்க்கும் மனோதிடம் அவனுக்கு இல்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். எனவேதான் இறுதிக் கணத்தில் அங்கு நிற்காதவாறு அவனை அவனது வீட்டிற்கு போகுமாறு சைகை காட்டியிருக்கிறாள் என எண்ணத் தோன்றுகிறது. ஆம் காலனின் பாசக் கயிற்றையும் விட உறுதியானது தாய்ப் பாசம் என்பதை இக் கதை உணர்த்துகிறது.

மருத்துவனான என்னை கவர்ந்த ஒரு விடயம் இதே கதையில் உண்டு.

  • ‘ஒன்றுக்கும் யோசியாதை. படுக்கைப் புண் வராமல் பார்த்துக்கொள்’ என்பதான உறவினர் ஆலோசனை, தாய்க்கும் வந்திவிடுமா என்ற பயம்,
  • பராமரிப்பவர்களுக்கு ஏற்படும் மன உழைச்சல்கள். அதைத் தடுக்க தங்களுக்குத் தெரிந்த வழி முறைகளைக் கையாள்வது.

இவை ‘அம்மாவின் உலகில்’ சிறுகதையில்  சில சித்தரிப்புகள். நோயாளிக்கு அவர்களது செயற்பாடுகள் துன்பமாகவும் மாறுகிறது. கதை கால் முறிந்து பல வருடங்களாகப் படுக்கையில் கிடக்கும் அம்மாவும் இதைப் புரிந்து தானாகவே தன்னை நிமிர்ந்தி வளைத்து பயிற்சிகள் செய்ய முயல்கிறாள்.

ஆனாலும் புண் வந்துவிடுகிறது. ஏன் வருகிறது? ‘அம்மா படுக்கையிலிருந்து நிமிராமல் இருந்த ஒரு கிழமைக்குள் புண் வந்துவிடுமா?’ மகன் ஆச்சரியப்படுகிறான்.

படுக்கையில் கிடப்பதால் மட்டும் புண் வந்துவிடுவதில்லை. திரும்பவும் உட்காரவும் முடியாத நிலை வரும்போதுதான் படுக்கைப் புண் தேடி வரும். அந்த நேரத்தில்தான் சுற்றத்தவர்கள் நோயாளியின் பராமரிப்பில் மேலும் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். பூசும் மருந்துகளும், விசுறும் மருந்துகளும் பெரும் பலன் தராது. நிபுணத்துவத்துடன் கூடிய பராமரிப்பு வேண்டிய தருணம் அது. படிப்பினை ஊட்டும் கதை இது.

இக் கதைகளல் பெரும்பாலானவை எமது நாட்டின் கிராமத்து அனுபவங்களாக இருக்கின்றன. கரைந்து நீர்த்துப் போகும் வாழ்வின் இனிய கணங்களை மீளவும் துளிர்க்கச் செய்கின்றன. மற்றொரு புறம் செல்வம் கொழிக்கும் அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்த வாழ்வின் பதிவுகளாக மேலும் இரு கதைகள். இவை மாறுபட்ட அனுபங்களைத் தருகின்றன.

இவற்றை எல்லாம் கடந்து வேற்றுலகம் பற்றிய கற்பனைக் கதை ஒன்றும் உள்ளது. ‘எங்கெங்கும் காணினும்’ மிக வித்தியாசமான கற்பனை. அவர் சித்தரிக்கும் அந்த உலகில் எல்லாமே உள்ளன. அதுவும் விரல் சொடுக்கும் நேரத்திற்குள் கைக்கு எட்டிவிடும்.

ஆனால் ஒன்றே ஒன்று இல்லை. அவர்களைப் பார்த்து இவன் கேட்கும் வார்த்தைகளில் அது என்ன என்பது புரிகிறது. ‘உங்கள் உலக மக்களுக்கு ஆசாபாசங்கள் இல்லையா?’

‘நாங்கள் ஆசாபாசங்களில் திளைக்கும் மனிதர்கள்’ ஆம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். அன்பும், ஆசையும், கோபமும், விரோதமும், காதலும் காமமும் என எல்லா உணர்வுகளிலும் ஊறித் திளைப்பதால்தானே நாம் மனிதர்களாக இருக்கிறோம். நாம் கணனிகளாகவோ இயந்தரங்களாகவோ இல்லை என்பதால் மகிழலாம்.

நாம் நிஜ உலகில் வாழ்கின்ற போதும் இன்றைய அவசர வாழ்வில் இயந்திரங்களாகவே மாறிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு விஞ்ஞானக் கதையாக இருந்தாலும் கூட அதற்கு ஊடாக நவீன வாழ்வில் ஏற்படக் கூடிய அவலங்கள் பற்றிய சிந்தனைகளை எழுப்புகிறது.

kalamani5

அடிப்படையில் கலாமணி ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. பௌதீகவியல் ஆசிரியராக மாணவர்களால் மிகவும் வேண்டப்பட்டவர். இன்று அவர் ஒரு கல்வியில் விரிவுரையாளர். அத்துடன் கூத்துக் கலையின் நுணுக்கங்களை தனது தந்தையின் ஊடாகப் முதிசமாகப் பெற்ற அற்புத கலைஞன். வேறுபட்ட துறைகளில் பெற்ற இத்தகைய பட்டறிவு அனுபவங்களை அவரது படைப்புகளில் தரிசிக்க முடிகிறது.

அவற்றை நேர்த்தியான சிறுகதைப் படைப்புளாகத் தந்த கலாமணிக்கும், நூலாக வெளியிட்ட கலாமணி பரணீதரனுக்கும் எனது பாராட்டுக்கள்.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

 

Read Full Post »

அண்மையில் நான் படித்த சிறுகதைத் தொகுதிகளில் மிகவும் ஆர்வத்தோடு படித்த தொகுதி ‘ உறையும் பனிப்பெண்கள்’. என்ற சுமதி ரூபனின் நூல்.

Book Covers_0004-001

இலங்கையில் உள்ள வாசகர்கனாகிய எங்களுக்கு ஒரு பெரும் துன்பம் உண்டு. மிக மோசமான, அல்லது சராசரியான நூல்களை அடிக்கடி வாசிக்க வேண்டியிருக்கிறது. இது நாம் விழும்பிச் செய்வது அல்ல. நிர்பந்தத்தினால் செய்ய வேண்டிய நிலை. நண்பர்களும் தெரிந்தவர்களுமான எழுத்தாளர்கள் தலையில் கட்டுவதை வாசிக்க வேண்டும். வாசித்தோம் என்று பொய் சொல்ல முடியாது. இவை பற்றிய கருத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டிய நிலை.

இது விரும்பிப் படித்த நூல். மிகவும் சுவார்ஸமாக இருந்தது. சொல்லும் மொழி அற்புதமானது. அழகான நேர்த்தியான வசனங்கள்.

இந்த நூலின் மிக முக்கியத்துவமான அம்சம் இது புலம்பெயர்வு வாழ்வு பற்றிய ஒரு பதிவாக இருப்பதுதான். அவர்களது இயந்திரமான வாழ்வு, போலித்தனங்கள், தங்கள் தாயகம் பற்றியும் அங்குள் உணர்வுகள் பற்றியதுமான குற்ற உணர்வின் வெளிப்பாடுகள், பெண்ணியம், ஆண்கள் பற்றிய பார்வைகள்.

ஆண்கள் அனுபவ ரீதியாகச் சொல்ல முடியாத பெண்கள் மட்டமே சொல்லக் கூடிய விடயங்கள். பெண் மொழி என்கிறார்கள். இவை சுமதியின் படைப்புகளிலும் இருக்கின்றன

இதிலும் இரண்டு வகைகள்

  1. வழiமாயன விடயங்கள் ஆயினும் அதிலும் வித்தியாசமான பார்வை தாய்மை திருமணம் போன்ற விடயங்களில்
  2. மற்றைய பெண் எழுத்தாளர்கள் சொல்லத் தயங்கும் விடயங்கள். பெண் எழுத்தளார்கள் மட்டுமின்றி ஆண்கள் எழுதத் தயங்கும் விடயங்கள் இவரால் வெளிப்படையாக ஆனால் ஆபாசம் தொனிக்காது, அழகுணர்வுடன் படைக்கப்படுகின்றன.

உதாரணமாக சுயஇன்பம். இரண்டு கதைகளில் வருகிறது. ‘அமானுஸ்ய சாட்சியங்கள்’ மற்றும் 4010.

பெண்களின் விடயங்களைப் பற்றி மட்டுமல்ல ஆண்களின் உணர்வுகள் உணர்ச்சிப் பெருக்குகள் பற்றியும் மிகச் சிறப்பாக வெளியிட இவரால் முடிகிறது.

அமானுஸ்ய சாட்சியங்கள், 40 பிளஸ், ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி, நட்டஈடு, சூட் வாங்கப் போறன் போன்றவை ஆண்கள் பற்றின. ஆவர்களது உணர்வுகளை மட்டுமின்றி அவர்களின் ஆணவப் போக்கு போலித்தனங்களைப் பேசுகின்றன.

மாறாக இருள்களால் ஆன கதவு, மூளி, எனக்கும் ஒரு வரம் கொடு உறையும் பனிப் பெண்,  ஆகியன பெண்களின் உணர்வுகளைப் பேசுபவை.

சுரீரென வெளிப்படும் விடயங்கள்

“ஆண்களின் உடல்களில் அந்தப் பகுதியில் கண்கள் நிலைத்து நின்றது.”

ஆண்களின் சில்லு முல்லுத்தனங்கள்.

யன்னல் சாத்திய முழங்கை நளாவின் மார்போடு தேய்த்துச் சென்றது’, ‘அத்தானின் பார்வைகள் நிறம் மாறிப்போயிருந்தன’,

‘ஸ்டியரிங்கை மாற்றும்போது அத்தானின் செய்கைகள் – நளாவின் துடையை விரல்கள் உரிசிச் செல்லுதல்,

‘சாரத்தைத் தளர்த்தி மறுகையால் புடைத்து நிற்கும்..’

ஒரே விடயம் பற்றி முற்றிலும் எதிர்மiறாயன பார்வை ‘அமானுஸ்ய சாட்சியங்கள்’, ‘இருள்களால் ஆன கதவு’

கணவன் மனைவி என கனடாவில் வசிக்கும் வீட்டில் விதவையான அக்கா வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் இரு கதைகளிலும் வருகிறது. ஆனால் இரண்டும் முற்றிலும் மாறான பார்வைகள். ஒரே விடயத்தை இருண்டு கோணங்களில் பார்ப்து சன்றாக இருக்கிறது

“உறையும்; பனிப் பெண்” கன்னி கழியாத பெண்கள் என்று ஊரில் பெசுகின்ற விடயம் பற்றி

தாய்மை மகத்துவமானது. அது கிட்டாத ஏக்கம் சொல்ல முடியாதது. இதைப பற்றிச் சொல்லாத எழுத்தார்களே கிடையாது எனலாம். எழுதியும் வாசித்தும் அலுத்துவிட்ட கரு.  ‘எனக்கும் ஒரு வரம் கொடு’ மிகவும் அற்புதமான கதை. அதன் உள்ளடக்கம் பற்றியதல்ல. அது சொல்லப்பட்ட விதத்தால்

இவரது படைப்புகளின் வெற்றிக்குக் காரணம் என்ன? அவர் எடுத்துக் கொள்கிற கருவா, அவை சொல்லப்படும் விதமா. நிச்சமாக இவரது எழுத்து நடைதான் என்பேன். நல்ல பல எழுத்தாளர்களின் கதைகளில் அது சொல்லும் கதைக்கு மேலாக அந்தப் பாத்திரங்களின் மன உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுப்பiவாயக இருக்கும். உளமன யாத்திரை எனலாமா? உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கும் மொழி ஆட்சி அவர்களிடம் இருக்கும்

சுமதி ரூபனின் கதைகளும் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த முயல்பவைதான். ஆனால் இவற்றை எண்ணற்ற சிறு சுவார்ஸமான சம்பங்களின் ஊடாக கட்டியமைக்கிறார். இவற்றில பல நுணக்கமான அவதானிப்பின அடிப்படையில் வந்தவை. இது உண்மையில் காட்சிப்படுத்தல் போன்றது.  ஒரு திரைப்படத்தில் காண்பது போலிருக்கிறது. இறுக்கமாகச் சொல்லப்படுவதால் குறும்படத்தை உவமை கூறலாம். சம்பவங்களின் தொகுப்பு போல இருப்பதால் இலகுவாக எங்களால் படைப்புக்குள் புக முடிகிறது. கீழை வைக்க முடியாமல் படிக்க முடிகிறது.

அதற்கு வலு சேர்ப்பது அவரது படைக்கும் அற்புதமான வசனங்கள். இவை கவிதை போல ஒருபுறம் மனத்தோடு இணங்கி வருகின்றன. மற்றொரு புறம் அவை படக் கூடாத இடத்தில் விழுகின்ற அடி போல அதிர்ச்சியளிக்கின்றன.

பாத்திரப் படைப்பில் மிகுந்த அவதானம் கொண்ட கதைகள். ஓவ்வொரு பாத்திரமும் கதை முடிந்த பின்னரும் எம்மோடு உலா வருக்னிறன.

“மூளி” கதையின் முடிவு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்தது. கணவனை இழந்த துயரில் இருக்கும் பெண் பற்றியது. ‘சும்மா மரக்கட்டை மாதிரி மூலையில் கிடந்தார் எண்டா நாய் கோயிலக்கு  பூவும் பொட்டோடையும் போய் மூசையில் கலந்துவிடுவேன். இனி ஐயா என்னைத் தட்டுத் தூக்க விடமாட்டார்’

இது அந்தப் பெண்ணின் போல உணர்வை வெளிப்டுத்துகிறதா அல்லது சடங்கு சம்பிரதாயங்கள் ஊடாக மறைமுகமாக ஆண்கள் பெண்களை அடக்க முயல்வதைக் காட்ட வருகிறது என்பதைக் காட்டுகிறதா?

பெண்களின் வாழ்வின் அர்த்தம் என்ன? கல்யாணம் குழந்தை பெறுதல் குடும்மபமாக வாழத்தல் இவை மட்டுடா?

“ஏன் கலியாணம் கட்டினனீ பிளளைகளைப் பொத்தனி எண்டு எப்பவாவது உன்னட்டைக் கேட்டனானா?”

“ஒரு நீண்ட நேர  இறப்பு” கதைக்குள் என்னால் புக முடியவில்லை. அரைவாசியில் நிறுத்pவிட்டேன். மீண்டும் வாசிக்க எண்ணினேன். முடியவில்லை. என்னால் இலகுவாக வாசிக்க முடியாத ஒரே ஒரு படைப்பு இதுதான்.

எங்கள் பிரச்சனைகள் வேறானவே அவர்களது நாளந்த பிரச்சனைகள் வேறானவே. ஆனால் அவற்றிகுள் இருக்கும் அடிப்படை உணர்வுகள் ஒன்றுதான். ஆகதி அந்தஸ்து கோருதல், சிறிய வீடுகளுக்குள் இருக்கும் இடப்பிரச்சனை. முக்கியமாக விருந்தினர்கள் வரும்போது. இப்பொழுது நாங்களும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம். ‘வெளிநாட்டு ஆக்கள வந்து நிக்கினம். நுpலத்தில் படுத்ததால் நார் விலி, சமையல் Nலை தூக்கம் இல்லலை என ஆண்கள்.

இவை வெறும் புனைவுகள் கதைகள் அல்ல. வாழ்வின் நிதர்சனங்கள். நாளந்தப் பிரச்சனைகள். ஏற்கனவே சொல்லப்பட்டது போல வெளிப்iடாயகப் பேசப்படாத பிரச்சனைகள் உள்ளன. ஆயினும் அவற்றில் அதீதங்களும் இல்லை. போலிதனங்களும் இல்லை. தான் கண்டதே கேட்டதை மிகுந்து அழகுணர்வுடன் தருகின்ற சிறுகதைகள் இவை.

சுமதி ரூபனின் நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு வெள்ளவத்தை பெண்கள் ஆய்வு மையத்தில்  நடைபெற்றபோது நான் முன்வைத்த சில கருத்துக்கள். 

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.

Read Full Post »

இது தேவமுகுந்தன் அவர்களது சிறுகதைத் தொகுதி. இவர் சுமார் 20 வருடங்களாக சிறுகதைத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ளவராக இருக்கிறார். இவரது முதலாவது சிறுகதை 1992ல் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. மரநாய்கள் என்பதே அந்தச் சிறுகதையாகும். அதன் பின்னர் நீண்ட அஞ்ஞாதவாசத்தின் பின்னர் 2008 முதல் மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளார்.


இத் தொகுப்பில் அவரது 10 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் முற்கூறிய மரநாய்கள் உடன் ஏனைய 9 சிறுகதைகள் அடங்குகின்றன. இவை 2008 முதல் 2011 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்டவை.
அண்மைக் காலமாக கடந்த அதாவது 4 வருடங்களாகத் தீவிரமாக எழுதி வருகிறார். அத்தோடு பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறார். தகவம் பரிசை இருமறை பெற்றிருக்கிறார்.

இருந்த போதும் பரவலான வாசகர்களைக் கொண்டவர் என்று சொல்ல முடியாது. காரணம் இவரது படைப்புகள் ஜனரஞ்கமான பத்திரிகைளிலும் சஞ்சிகைகளிலும் வருபவை அல்ல. குறிப்பிட்ட தரமான சில ஊடகங்களில் மட்டுமே வருபவை. எனவே காத்திமான வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஆனால் மேம்போக்கான கிளுகிப்பு வாசிப்பில் உள்ளவர்கள் இவரை அறிந்திருப்பது சாத்தியமில்லை.

இந் நூலில் உள்ள இவரது படைப்புகள் ‘கலைமுகம் (3), ‘காலம்'(3), ‘யுகமாயினி'(1), ‘ஞானம்'(1), ‘ஜீவநதி'(1), ஆகிய சஞ்சிகைகளில் வெளி வந்திருக்கின்றன.
மாணவப் பருவத்தில் இவர் எழுதிய சிறுகதையான மரநாய்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அந்நேரத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஈழநாதம் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. நூலின் முகப்புக் கதையும் நூலின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றான ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’ தினக்குரல் ஞாயிறு பதிப்பில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைகளில் வெளிவரும் சிறுகதைகள் பொதுவாக தீவிர வாசகர்களைக் கவர்வதில்லை. அத்துடன் என்போன்ற சோம்பேறி வாசகர்கள் பார்வைக்கும் கிட்டுவதில்லை. காரணம் வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தும் வாசிக்க ஆரம்பிப்பதற்கிடையில் பழைய பேப்பர்காரனது தள்ளுவண்டியில் பத்திரிகை ஏறியிருக்கும். ஆயினும் தினக்குரல், வீரகேசரி ஆகியவற்றில் நல்ல பல கதைகள் வெளிவந்துள்ளன.

நல்ல படைப்பாளி

இவர் ஒரு நல்ல படைப்பாளி. குறுகிய காலத்திற்குள் இவரால் எவ்வாறு இவ்வளவு நன்றாகக் கதை எழுத முடிந்திருக்கிறது என யோசித்தால், இவரிடமுள்ள தார்மீகக் கோபமும் ரசனையுர்வும் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு கதையும் மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. அதற்குக் காரணங்கள் பல இருக்கும். பரந்த வாசிப்பு, தேடல், தனது படைப்பில் எளிதில் திருப்தியடையாமல் சீர்திருத்தல் போன்ற பல.
ஆனால் இவற்றிக்கு மேலே வேறு ஒரு ரகசியமும் இருக்கிறது. அதை முகுந்தன் தனது முன்னுரையில் வெளிப்படுத்தியுள்ளார். “முதல் வாசகனாக இருந்து வாசித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்தவர்” திரு.அ.யேசுராசா என்கிறார்.

யேசுராசா இலை இதழின் ஆசிரியாராக இருந்தவர். ஈழத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் சிலரது மிகச் சிறந்த கதைகள் அலையில் வெளி வந்திருக்கின்றன. முதல் வாசகனாகவும் ஆலோசகராகவும் நண்பர் யேசுராசா இருந்ததால்தான் அவ்வாறான சிறுகதைகள் வெளிவந்தன என்பது நினைவிற்கு வருகிறது.

சிறுகதையை புனைகதை என்பார்கள். ஆனால் இவை வெற்றுப் புனைவுகளாக இருப்பது சாத்தியம் அல்ல. பெரும்பாலும் யதார்த்தமானவை. எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்கள். படைப்பாளியின் மனத்தில் ஆழ்மனத்தில் பதிந்தவையாக இருக்கும்.

தார்மீகக் கோபம்

ஒரு உதாரணம் சொல்லலாம். அண்மையில் ஒரு மருத்துவக் கருந்தரங்கு நடைபெற இருந்தது.; உணவு முறைகள் பற்றியது. நோய்களுக்குக் காரணமான உணவு முறைகள், மற்றும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்க, எவ்வாறு சில வகை உணவுகள் உதவ முடியும் என்பது பற்றியது. எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். நோய்களைத் தணிக்க மருந்துகளுக்கு அப்பால் உணவு முறை உட்பட்ட வாழ்க்கை முறைகள் உதவும் என நம்பும் எந்த மருத்துவனுக்கும் பிடித்தமான விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அது ஒரு வேலை நாள். கருத்தரங்கிற்கு நான் சென்றால் தேடிவரும் நோயாளிகள் ஏமாற நேரிடும். ஆனாலும் அங்கு நான் பெறும் அனுபவங்களை பத்திரிகைகளில் பகிர்வதன் மூலம் பல நோயாளர்கள் பயனடைவார்கள் என்பதால் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. மருத்துவர்களுக்காக மருத்துவர்களால் நடாத்தப்படும் கருத்தரங்கு. ஆனால் அங்கு பெருந்தொகையான தாதியர்கள் மற்றும் உணவு லிகிதர்கள் வந்திருந்தார்கள். ஆங்கிலத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கு முற்றுமுழுதாக சிங்கள மொழியில் நடைபெற்றது. இடையிடையே புரஜெக்டரில் காட்டப்பட ஆங்கில சிலைட்டுகளைப் பார்த்து ஆறுதலடைய வேண்டியிருந்தது.

முகுந்தனும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். அது கற்கைச் செயற்பாட்டில் வழிகாட்டிகள் பற்றியது. அது பங்குபற்றுபவர்களுக்கு அரசு பணம் கொடுத்து செய்த கருத்தரங்கு ஆனால் நாங்கள் பணம் கொடுத்து அந்தக் கருத்தரங்கு சென்றிருந்தோம். இருந்தபோதும் நாம் எழுதவில்லை, உரத்துப் பேசவில்லை, மௌமாக இருந்தோம். ஆனால் தார்மீகக் கோபமுள்ள படைப்பாளியான முகுந்தனை அது ஆழமாகப் பாதித்திருந்தது. அவரால் மௌமாக இருக்க முடியவில்லை. அதுவே ‘வழிகாட்டிகள்’ என்ற சிறுகதையாகப் பரிணமித்;தது.

நம்பகத்தன்மை

சிறுகதை என்பது பொதுவாக ஒரு சிறிய படைப்பு. அது அளவில் சிறியது என்பது மட்டுமின்றி மனத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு சிறிய உணர்வை, அல்லது ஒரு சிக்கலை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். அது தனிப்பட்ட ஒரு மனிதர் பற்றியதாகவோ அல்லது ஒரு நிகழ்வு பற்றியதாகவே கூட இருக்க வாய்ப்புண்டு.

சிறுகதையில் இறுக்கமான கட்டுமானத்திற்கு இதுவே காரணமாக அமைகிறது. முகுந்தனின் படைப்புகளில் இந்த இறுக்கத்தைக் காண்கிறோம். தனது படைப்பிற்கு அவசியமானதற்கு அப்பால் எதையும் அவர் எதையும் வளவளவென்று சொல்வதில்லை. தனது மனதை அருட்டுவதைப் பற்றி மட்டும் எழுதும் எந்த எழுத்தாளனும் அவ்வாறே எழுதுவான்.
ஆனால் இங்குள்ள பல படைப்பாளிகளும் வலிந்து கதை கட்டுவதில்தான் வல்லவர்களாக இருக்கிறார்கள். கதைக்குத் தேவையானதா தேவையற்றதா எனச் சீர்தூக்கிப் பார்க்கமல் தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அதில் சொல்லிவிட முனைகிறார்கள்.

பரபரப்பாகப் பேசப்படும் விடயங்கள் பற்றி ரெடிமேட் தாயாரிப்புகள் சுடச்சுட வெளிவரும். சாதீயம், இனப்பிரச்சனை, போர்,பெண்ணியம் என எதைப் பற்றியும் அது பற்றி எந்தப் பட்டறிவு இல்லாதவர்களும் எழுதிவிடுவார்கள்.

அதற்கும் அப்பால் உபாசகர்களாக, போதகர்களாக மாறி நீட்டி முழங்கிப் போதனைகள் செய்ய முனைகிறார்கள். சிறுகதை என்ற வடிவத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் சிறுகதைப் படைப்பாளிகளாக  பத்திரிகைகளையும் மேடைகளையும் நிறைக்கிறார்கள்.
ஆனால் முகுந்தனின் படைப்புகளைப் படிக்கும்போது அவற்றில் நம்பகத்தன்மை நிறைந்து கிடக்கிறது. எதுவும் போலியாக இல்லை.

மாணவனாக, வேலையற்ற பட்டதாரியாக, கொழும்பில் அறையில் வாடகைக்கு தங்கியிருக்கும் வாலிபனாக, அரச ஊழியனாக, வெளிநாட்டிற்கு புலமைக் கல்விக்காகச் செல்பவனாக, நூலகத்தில் ஈயோட்டும் வாலிபனாக, புகழ் பெற்ற எழுத்தாளனின் போலி முகத்தை வெளிப்படுத்தும் உறவினனாக அவரது பாத்திரங்கள் அனைத்தும் உயிரோவியமாக அமைந்துள்ளன. அந்தப் பாத்திரங்களோடு எங்களையும் நெருக்கமாக உலவ விட்டிருக்கிறார்.

முகுந்தன் படைப்புலகில் அதிகம் எழுதியது போர் முனைப்புப் பெற்ற காலமாகும். எனவே இவற்றில் போர் மற்றும் இன முரண்பாடு பற்றியதாகவே இருப்பதில் வியப்பில்லை. கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் குண்டு வீச்சு, செல் அடி என போர் பற்றிய நேரடியான அனுபவங்கள் பற்றிய கதைகள் கிடையாது. மரநாய்கள் விதிவிலக்கு.

யதார்த்தம்

இவரது படைப்புகள் பெரும்பாலும், மாற்று மொழிபேசும் நண்பர்களுடன், சகஊழியர்களோடு பழகும்போது ஏற்படும் அவமானங்களைப், இனப் பாகுபாடுகளை, உதாசீனங்களை, அவற்றால் ஏற்படும் மனப் பாதிப்புகளைப் பேசுகின்றவையாக இருப்பதைக் காண்கிறோம். இருந்தபோதும் மாற்று இனம் மீதான வன்மம் இவரது படைப்புகளில் இல்லை என்பது நம்பிக்கை ஊட்டுகிறது.

தாய் மொழி, தன் கலை கலாசாரம் பண்பாடு மீதான அதீத பற்றும், ஏனைய இனங்கள் மீதான வெறுப்பும் இளக்காரமும் இன முரண்பாட்டை வளர்க்கவே செய்யும். பல இனங்கள் சேர்ந்து வாழும், தொடர்ந்தும் வாழ வேண்டிய சூழலில் பேனா பிடித்தவர்கள் சற்று நிதானமாக பொறுப்புணர்வோடு எழுதுவது அவசியம். புண்ணை ஆறவிடாது நோண்டிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அல்ல எழுத்தாளன். அதே நேரம் வாக்கு வங்கியை பிடித்து வைப்பதற்காக பிரச்சைனைகளை பூதகாரமாக்கும் அரசியல்வாதி போலவும் இருப்பது நல்லதல்ல.
முகுந்தன் மலினமான புகழுக்காக அதீத இனப் பற்றாளனாக தன்னைக் காட்ட முற்படவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வகையில் பார்க்கையில் ‘இரட்டைக் கோபுரம்’ கதையின் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இவனோடு ஒன்றாக வேலை செய்து, உண்டு குடித்து உலாவித் திரிந்த சிங்கள நண்பர்களில் ஒருவன் தனக்கு பாரிய துன்பம் ஏற்பட்ட வேளையில் ‘பற தெமிளு’ என்ற வார்த்தையை உதிர்த்துவிடுகிறான்.

இவனது மனம் நோகிறது. ஏமாற்றம் அடைகிறது. அருகே நின்ற சிங்கள மொழி தெரியாத மற்றொரு நண்பன் அவன் என்ன சொன்னான் என இவனை வினவுகிறான். ‘எல்லாச் சிங்களச் சொற்களுக்கும் எனக்குக் கருத்துத் தெரியாது’ என இவன் பதிலளிக்கிறான். நல்ல பதிலாக எனக்குத் தோன்றியது. முரண்பாட்டை மேலும் தீவிரமாக்காமல் உறவுகளை பேண முயலும் ஒருவன் அவ்வாறுதான் பேச வேண்டும். முகுந்தன் தனது பாத்திரத்தை அவ்வாறு பேச வைத்தமை மகிழ்வளிக்கிறது.

இன முரண்பாட்டுக் கதைகளைப் பொதுவாகப் பார்க்கும்போது, வன்னியில் வாழ்ந்தவர்களது பார்வை அதி தீவிரமாகவும், யாழில் வாழ்பவர்களது படைப்புகள் அதில் சற்று காரம் குறைந்து மறைபொருளாகவும், வெளிநாட்டில் வாழ்பவர்கள் அதீத கற்பனைவாதிகளாகவும் படைப்பார்கள். கொழும்பில் வாழ்பவர்களது பார்வை வாழும் சூழலுக்கு ஏற்ப சற்று நீர்த்தலாகவே இருக்கும்.
எவ்வாறாக இருந்தபோதும் இனமுரண்பாட்டை முன்நிலைப்படுத்தும் மற்றும் ஏனைய இனத்தவர்களை விரோதிகளாகச் சித்திரிக்கும் படைப்புகள், எமது தாழ்வுமனப்பாட்டின் வெளிப்பாடா என நான் சிந்திப்பதுண்டு.

அல்லது இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகைச் செய்திகளும் படைப்புகளும்தான் எங்களை மீளமுடியாத தாழ்வுச் சிக்கலில் ஆழ்த்துகின்றனவா என்பதையிட்டு சமூகவியலாளர்கள் சிந்திக்க வேண்டும்.

முகுந்தனின் படைப்புகளில் இனப் பிரச்சனைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் அதிதீவிர உணர்வு இருக்கவில்லை. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாக தொடர்ந்து இருக்காது யதார்த்தத்தை உணர்ந்த படைப்பாளியாக முகுந்தனை அவ்விடத்தில் கண்டேன்.
தொடர்ந்தும் இனமுரண்பாட்டுப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது எமது வாழ்வின் நாளாந்தப் பிரச்சனைகள் பலவற்றையும் முகுந்தன் எழுதுவார் என நம்புகிறேன். இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சில கதைகள் உள்ளன. சின்ன மாமா, கூட்டத்தில் ஒருவன் போன்றைவை வேறு விடயங்களை முன்னிலைப்படுத்துகின்றன.

இந்தத் தொகுப்பில் உள்ள எந்த ஒரு சிறுகதையும் சீ என ஒதுக்கக் கூடியவை அல்ல. எல்லாக் கதைகளும் நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளன. 10ல் அரைவாசிக்கு மேற்பட்டவை மிக நல்ல படைப்புகளாக உள்ளன. படித்து முடித்த பின்னரும் அவற்றில் பல கதைகள் எம்மோடு நெடுநேரம் உரையாடுகின்றன. அடுத்த படைப்புக்குள் புகவிடாது தொல்லைப்படுத்துகின்றன. இதனால் என்னால் இத்தொகுப்பை ஓரு மூச்சில் படித்து முடிக்க முடியாது போயிற்று.

இன்றைய விழா தனிச்சிறப்பு வாய்ந்தது. வழமையாக இவரது படைப்புகளை வாசிக்காத ஒருவர் கூட இன்றைய இவரது வெளியீட்டு விழா அழைப்பிதழைக் கண்டால் இக் கூட்டத்திற்கு வரவும், இவரது கதைகளை வாசிக்க விரும்பவும் கூடும். ஏனெனில்

  • இது ஒரு காலச்சுவடு வெளியீடு.
  • இதற்கு பின்னுரை எழுதியிருப்பவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள்
  • இங்கு கருத்துரை வழங்க வந்திருப்பவர்கள் திரு.அ.யேசுராசா மற்றும் உமா வரதராஜன்

இந்த மூன்று பேரும் காலச்சுவடு பதிப்பகத்தினரும் ஒரு விதத்தில்…. ஒருமைப்பாட்டைக் கொண்டவரகள். படைப்பிலக்கியத்தில் செழுமையை அவாவுபவர்கள். இலக்கியப் படைப்பின் தரத்தில் எந்தவித சமரசங்கங்களுக்கும் இடம் கொடாதவர்கள். முகத்திற்கான இது நல்ல படைப்பு என்ற அங்கீகாரத்தை எவருக்காகவும் கொடுக்க மறுப்பவர்கள்.

இவர்கள் அனைவரும் தாங்கள் இந்த முயற்சியில் பங்கு கொள்வதன் மூலம் முகுந்தனின் படைப்புகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் படைப்பு இலக்கியம் பற்றி லியோ டால்ஸ்டாய் கூறிய ஒரு கருத்ததை நினைவில் கொள்ளலாம்.

“.. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று. கடைசியாக ‘டெக்னிக்’. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் ‘டெக்னிக்’ என்பது தானாக வந்துவிடும்…”
முகுந்தனின் முதல் இரண்டும் இருக்கின்றன.

அதாவது சொல்வதற்கு ஏதோ ஒரு விடயமும், அதில் நெகிழ்ச்சியான பற்றும் நிறையவே இருக்கின்றன. அத்துடன் நல்ல கதை சொல்லிக்கான டெக்னிக் அவருக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. இதனால் இலக்கிய உலகில் அவருக்கு வளமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. மேலும் பல சிறப்புகள் அவரை வந்தடைய வாழ்த்துகிறேன்.
இத்தகைய அருமையான கூட்டத்தில் தலைமை தாங்க அழைத்தமைக்கு முகுந்தனுக்கு நன்றிகள்

எனமு மறந்து போகாத சில புளக்கில் வெளியான கட்டுரை ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’ தேவமுகுந்தன் சிறுகதைகள்

எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0

Read Full Post »

>

கார்த்திகாயினி சுபேஸ் அவர்களின் ‘தாய் மடி தேடி..’வெளியீட்டு விழா சென்ற ஞாயிறு (06.03.2011) மாலை 5 மணிக்கு  வெளியீட்டு விழா நடைபெற்றது.

வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற அவ் விழாவில் நான் கலந்துகொண்டு ஆற்றிய தலைமையுரையை இங்கு முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

விழா நிகழ்வில் எடுக்ப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றையும் காணலாம்.

தலைமையுரை :- டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

 திருமதி கார்த்திகாயினி சுபேஸ் எழுதிய தாய்மடி தேடி.. என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டிற்காக இங்கு கூடியிருக்கிறோம்.

தினக்குரல் நிறுவுநர்.திரு.எஸ்.பி.சாமி அவர்களிமிருந்து முதற் பிரதி பெறும் பிரசித்த நொத்தரிஸ், சட்ட உதவியாளர் திரு.எம்.கே.தர்மராஜா

 தாய்மடி மீது அமர்ந்திருப்பதின் சுகத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
நாம் இன்று வளர்ந்த மனிதர்கள். உங்களில் பலரும் சிறிய பிள்ளைகளின் தாய் தகப்பனகவோ அல்லது பேரன் பேத்தியாகவோ இருப்பீர்கள். அவர்களை அணைத்து பாதுகாப்பும், ஆறுதலும் தரும் நிலையில் இருப்பீர்கள். ஆனால் பின்நோக்கிப் பார்க்கும் எமக்கு ஆறதல் தந்த, ஆசுவாசம் காட்டிய, தேறுதல் கூறிய அம்மாவின் மடியில் கிடக்க வேண்டும் என்ற தாபம் எழுவதை மறுக்க முடியாது. தாயின் அன்பு அத்தனை விசாலமானது.

கார்த்திகாயினியின் கதைகள் பல விடயங்கள் பற்றிப் பேசுகின்றன. சாதீயம், பெண்ணியம், மானிட நேயம், ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்கள், குழந்தையின்மை, சுனாமிப் பாதிப்பு. மிருகங்கள் மீதான பிரியம், இவ்வாறு பலவற்றைப் பேசினாலும், அடிப்படையாக இருப்பது போரினால் சிதைந்த எமது வாழ்வுதான்.

விழாத் தலைவர் எம்.கே.முருகானந்தனிடமிருந்து சிறப்புப் பிரதி பெறும் தினக்குரல் நிறுவுநர்.திரு.எஸ்.பி.சாமி அவர்கள்

போர் சார்ந்த இந்தப் படைப்புவெளி கார்த்திகாயினிக்கு மட்டும் பிரத்தியேகமானது அல்ல. எழுபதின் பிற்கூறுகளில் கவிதையில் வெளிப்படத்த தொடங்கிய இந்த அம்சம் பிற்பாடு சிறுகதை, நாவல், கட்டுரைகள் என எமது படைப்பிலக்கியம் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

தாய்மை

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர்

 வெளிப்படையாகப் பார்க்கும்போது கார்த்திகாயினியின் படைப்புகள் போரினால் தமிழ் சமூகம் சந்தித்த துன்ப துயரங்களை, அவர்கள் எதிர் கொண்ட அவமானங்களை, உயிர் இழப்புகளை, அங்கயீனங்களை, சமூக அவலங்களைப் பற்றியே பேசுகின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் இணைத்துக் கோர்க்கும் நார்போல அமைந்திருப்பது அன்புதான். அவற்றின் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருப்பது, அளப்பற்ற அன்பு, அள்ள அள்ள வற்றாமல் சுரந்துகொண்டே இருக்கும் அன்பு, கைமாறு எதிர்பார்க்காது வழங்கிக்கொண்டே இருக்கும் அன்பு.

மூத்த எழுத்தாளர்.திரு.தெளிவத்தை ஜோசப் வெளியீட்டுரை வழங்குகிறார்

அதிலும் சிறப்பாக அவரது படைப்புகளில் வெளிப்படும் அன்பானது, தாயன்பு என்றே எனது மனத்திற்குப் படுகிறது. அத்துடன் போரினால் தாயை மாத்திரமின்றி தனது குடும்பத்தை இழந்து தனிமரமாகிவிட்டதுடன், அங்கங்களையும் இழந்து வேதனைப்படும் ஒரு குழந்தை தாயன்பிற்காக ஏங்குவதும் மற்றொரு படைப்பாக அமைந்துள்ளது.

திரு டொமினிக் ஜீவா (ஆசிரியர் மல்லிகை) வாழ்த்துரை வழங்குகிறார்

எந்த ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாக இருந்தாலும், அது வாசகனது உள்ளத்தில் கள்ளமாகப் புகுந்து கொள்ள வேண்டும், குறுணல்களாக இருக்கும் சீனியைத் தேநீரில் கலந்தால் அது எவ்வாறு தனது உருவத்தை இழந்துவிடுகிறதோ அவ்வாறு தனது வெளிப்படை உருவை முற்றாக மறைந்துவிட வேண்டும். ஆனால் எவ்வாறு தேநீரின் ஒவ்வொரு துளியிலும் அதன் சுவை செறிந்துள்ளதோ அவ்வாறே எழுத்தாளனின் படைப்புகளும் வாசகனின் உள்ளமெங்கும் படர வேண்டும். அதற்கு மேலாக அவனது மூளையின் நரம்புகளை இதமாகச் சுண்டிவிட வேணடும்.

  ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன் வாழ்த்துரை வழங்குகிறார்

தேநீரில் சினி மறைந்து இனிப்புச் சுவை கலந்திருப்பது போல, கார்த்திகாயினியின் படைப்புகளைப் படித்தபோது எனது உள்ளத்தில் கலந்துவிட்ட சுவை அந்த அன்புதான், அதிலும் முக்கியமாக தாயன்பு என்பதாகவே உணருகிறேன்.

வெளியே சென்ற கணவனின் வருகையைக் காத்திருக்கிறாள் மனைவி என்பதை நாம் எமது பழம்தமிழ் இலக்கியங்களில் படித்திருக்கிறோம். “அந்தி சாயும் வேளை அத்தான் வருவான்..” என எமது நாயகிகள் காத்திருந்ததையும் நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். இவை அன்புக்கு ஏங்கி, அரவைணைப்பின் சுகத்திற்கான காத்திருத்தல்கள் ஆகும்.

திருமதி தேவகெளரி சுரேந்திரன், திருமதி கார்த்திகாயினி சுபேஸ், திருமதி ராணி ஸ்ரீதரன்

ஆனால் பயத்தினால் காத்திருப்பு நிகழ்கிறது. இலங்கைவாழ் தமிழ்ச் சமூகம்தான் பீதி கலந்த காத்திருப்பை நன்கு அறிந்திருக்கிறது. வெளியே சென்ற கணவன் திரும்பி வருவானா? பள்ளிக்கும் போன மகன் திரும்பி வருவானா?, ரியூசனுக்குப் போன மகள் திரும்பி வருவாளா என தெருமேல் விழி வைத்துக் காத்திருந்தது எமது சமூகம் பல வருடங்களாக.

வெளியிலிருந்து ஆவேசமாக வந்த வல்லுறுகளும், உள்ளிருந்து நசுக்கிடாமல் ஓசையின்றி நகர்ந்த அரவங்களும் எமது பிள்ளைகளைக் கவர்ந்து சென்ற கதைகளைச் சொல்லி அழுதவர்கள் பல பேர். சொல்லவும் முடியாது, கண்ணீர் சிந்தவும் முடியாது மனதிற்கள் மறுகிப் பித்துப் பிடித்தவர்கள் ஏராளம்.

பிரபல விமர்சகர் திரு.கே.எஸ்.சிவகுமாரன் சிறப்புப் பிரதி பெறுகிறார்.

தன் வீட்டில் இல்லாவிட்டாலும் கூட பக்கத்துவீட்டில், உறவுகளில் இவை நடப்பதைப் பார்த்து கையறு நிலையில் நாம் இருந்திருக்கிறோம்.
இத்தகைய ஒரு சூழலில் தாய் படும் மன உளைச்சலை கார்த்திகாயினி தனது சிறுகதைகளில் அழகாகக் கொண்டு வந்துள்ளார்.

தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம் வாழ்த்துரை வழங்குகிறார்

“போனவளைக்காணேல… வாசலுக்கும், வீட்டுக்குமாக மாறிமாறி நடந்தாள். நெருப்பு மேல் நிற்பது போலத் தவித்தாள். அவள் உள்ளம் பிள்ளையாரையும் பலமுறை வேண்டிக் கொண்டது. இது ஒரு கதையில்.

மற்றொரு கதையில்..

“காலம்பிற எட்டு மணிக்கு பள்ளிக்கூடம் போனவள் ஆறுமணி மட்டும் என்ன செய்கிறாளே, ஊருலகம் கெட்டுக் கிடக்குற கேட்டுக்கு இவளும் யோசனை இல்லாமல் நிக்கிறாளே” என்று சலித்தபடி வீட்டு வாசற்படியில் அமர்ந்து கொண்டாள்.

“தாயில்லாப் பிள்ளை எண்டு பொத்திப் பொத்தி வளர்த்தேனே. எந்தப் பாடையிலை போவாரின் கண்பட்டதோ…” என தாயில்லாப் பிள்ளையைத் தாயைப் போல வளர்க்கும் ஆச்சியின் பாசம் தாய்ப்பாசமாக மற்றொரு இடத்தில் வெளிப்படுகிறது.

திருமதி.புஸ்பராணி நவரட்ணம் (ஆசிரியர்) வாழ்த்துரை வழங்குகிறார்

குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்ல கணவன் முயன்றபோது, “சத்தியமாக நீ இந்தப் பிள்ளைக்கு அப்பன் இல்லை.. உன்னாலை நல்ல அப்பனாக இருக்கவும் முடியாது” என்று முழக்கமிட்டு, தாலி கட்டிய கணவனையே உதறித் தள்ளிவிட்டு கெட்டவள் என்ற அவப் பேரையையும் பொறுக்கத் தயங்காத தாயாக மற்றறொரு கதையில்..

கோழி குஞ்சைப் பாதுகாப்பது போல மற்றொருதாய். வானத்திலிருந்து குண்டு பொழியும் நேரத்தில் பாதுகாப்புக்காக பதுங்கு குழி, மறைவிடம் எதுவும் இல்லாத சூழல். தன் உயிர் போனாலும் பரவாயில்லை, தன் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்,  குழந்தையைக் கீழே கிடத்திவிட்டு அதன் மேல் தனது உடலைப் போர்வை போலப் போர்த்திப் பாதுகாக்கும் தாய் என தாயன்பு நூல் முழவதும் பரவிக்கிடக்கிறது.

தாயன்பு போன்ற உணர்வு ஆண்களிடமும் வெளிப்படலாம் என்பதை தெருநாய்கள் மீது ஒருவர் கொண்ட பாசத்தின் ஊடாக எடுத்துக்காட்டுகிறார்.

மருத்துவன் என்ற ரீதியில்

மருத்துவன் என்ற ரீதியில் இத் தொகுப்பில் சொல்லப்பட்ட கதைகளில் இரு சம்பவங்கள் என்னைக்; கவர்ந்தன.

ஊடகவியல் கல்லூரி விரிவுரையாளர் திருமதி தேவகெளரி சுரேந்திரன் ஆய்வுரை நிகழ்த்துகிறார்

சுட்டெரிக்கும் நெருப்பின் மீது நடப்பது போலிருந்தது என ஒரு கதையை ஆரம்பிக்கிறார். மணல் நிறைந்த  ஒழுங்கையில் அவ்வாறு நடக்கிறார். ராணுவ நடவடிக்கைகளால் மரங்கள் அழிந்து, மரநிழல்கள் இல்லாத ஒழுங்கையில் வெய்யில் தகிக்கும் வேளையில் அவர் நடக்கிறார். 70 வயதான அந்த முதிர்ந்த மனிதன். வெறுங்காலோடு நடக்கிறார்.

ஏன் அவ்வாறு நடக்கிறார். செருப்பு அணிய வசதி அற்றவரா? இல்லை. வசதியுள்ளவர்தான். வழியில் தொலைத்துவிட்டாரா அதுவும் இல்லை. அப்படியாயின் ஏன் அவ்வாறு நடக்கிறார்.
காரணம் அடுத்த வரியில் வருகிறது.

திருமதி கார்த்திகாயினி சுபேஸ் அவர்களது ஏற்புரை

கால்கள் கல்லைப் போல விறைத்திருந்தன. சரி கால் விறைத்தால் ஏன் செருப்பு அணியாமல் இருக்க வேண்டும்? பாதங்களில் விறைப்பு ஏற்பட்டதால் காலிலிருந்து செருப்புக் கழன்றுவிடுவது அவருக்குத் தெரிவதில்லை. காலிலிருந்து விடுபட்டு அவை தெருவில் கிடப்பதற்கு அடம் பிடித்ததால் செருப்பிற்கு பிரியாவிடை கொடுத்துவிட்டார் எனச் நகைச்சுவையாகச் சொல்கிறார்.

நகைச்சுவையாகச் சொன்னாலும் மருத்துவ ரீதியில் உண்மையானது. பாதங்கள் விறைத்து உணர்வு தெரியாமல் இருப்பதை மருத்துவத்தில் Peripheral Neuropathy என்போம். வயதான காலத்தில் பலருக்கும் இது ஏற்படுவதுண்டு. இவ்வாறு விறைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் நீரிழிவு நோய்தான். ஆனால் இவருக்கு நீரிழிவு இருந்ததாக எவ்விடத்திலும் ஆசிரியர் கூறவில்லை.

திரு.மு.தயாபரன் ஆய்வுரை நிகழ்த்துகிறார்

மூட்டு வாதம், மது அதீத பாவனை, போதைப் பொருள் போன்றவையும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. எனவே அவரது கால் விறைப்பிற்குக் காரணம் என்ன என்று மருத்துவனான எனது மூளை ஆராயத் தொடங்கியது.

இராணுவ வடவடிக்கைகளால் அப்பகுதியில் உள்ள தாவரங்கள் அழிந்ததாக ஓரிடத்தில் சொல்லியிருந்தார். எனவே போசாக்கான காய்கறி, கீரை வகைகள் அவருக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அத்துடன் மனைவி இறந்து இரண்ட வருடங்களாகிவிட்டது. எனவே வாய்க்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியதுமான உணவு கிட்டியிருக்காது. எனவே விட்டமின் குறைபாட்டால்தான் அவரது காலில் விறைப்பு ஏற்பட்டது என்ற முடியவுக்கு வந்தேன்.

இரண்டாவது விடயம் கை வைத்தியம், வீட்டு வைத்தியம் பற்றியது. பொதுவாக எல்லோருக்கும் மேலைத் தேய மருத்துவ முறைகளில் பிடிக்காத விடயம் அந்த மருந்துகளின் பக்க விளைவுகள்தான். தாவரங்களிலிருந்து அதாவது மூலிகைகளிலிருந்து பெறப்படும் கை மருத்துவம் மற்றும் சுதேசிய மருந்துகள் ஆபத்தற்றவை, பக்கவிளைவுகள் அற்றவை என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இது உண்மையானதா?

இக் கதையில் இராணுவத்தினாரால் ஒரு பெண் கெடுக்கப்படுகிறாள். அவளுக்கு கர்ப்பம் தங்கிவிடக் கூடாது என்பதற்றகாக மூலிகைகளிலிருந்து காசாயம் செய்து கொடுக்கிறாள் ஆச்சி. ஆனால் அதையும் மீறி கரு தங்கிவிடுகிறது. குழந்தை ஊனமாகப் பிறக்கிறது.

வரவேற்புரையை நிகழ்த்தியதுடன் விழாவிற்கு முழுப்பொறுப்பா க இருந்து நடாத்திய காரத்திகாயினியின் கணவர் திரு.அ.சுபேஸ் ( ஆர்த்திகன்- ஆசிரியர்)

கருத் தங்கியிருக்கும்போது தேவையற்ற மருந்துகளை உபயோகிக்கக் கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும். அவற்றின் பக்கவிளைவுகளால் கரு அழிந்துவிடவோ ஊனமாகப் பிறக்கவோ வாய்ப்பிருக்கிறது என்பதும் தெரியும். இங்கு ஆச்சி அவளுக்குக் கொடுத்திருப்பது மூலிகைகள் மட்டும்தான். ஆனால் குழந்தை ஊனமாகிவிடுகிறது.

மூலிகைகளாலும் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதை இது காட்டுகிறது. மேலைத்தேய மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகளை மருத்துவர்கள் நன்கு அறிவர். இவை பற்றி ஒவ்வொரு மருந்துப் பெட்டியிலும் தெளிவாகப் பிரசுரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவை பற்றிய விழிப்புணர்வு பொது மக்களிடமும் இருக்கிறது. ஆயினும் மூலிகை மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. அவை பற்றிய ஆய்வுகள் கிடையாது.

ஆயினும் கதாசிரியர் இந்த கருத்தை வலியுறத்த கதையை எழுதவில்லை. கருத்தைத் திசை திருப்புவது நான்தான். ஆக்கிரமிப்பு இராணுவத்தால் ஏற்படுகிற தாக்கங்களை சொல்ல வருகிறது அக்கதை. ஆனால் மூலிகை மருந்துகளினாலும் ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என்ற விளக்கம் என்னுடையது.

கார்த்திகாயினி இயற்கை வளம் கொளிக்கும் கிராமத்ததைப் பிறப்படமாகக் கொண்டவர். உசன் என்பது அழகான கிராமம். பண்புள்ள மக்கள். எனது மருத்தவ படிப்புக்கால நண்பன் டொக்டர் செல்வராசா என்பவர் அவ்வூரைச் சேர்ந்தவர். 70களில் அவ்வூருக்குச் சென்றிருக்கிறேன். பின்பு ஒரு கருத்தரங்கில் பங்குகொள்ளவும் சென்றுள்ளேன்.

அந்த ஊர். வயல்கள். ஊரை அண்மத்திருக்கும் சிறு காடு. அங்கு பெண்கள் விறகு பொறுக்கப் போதல் என ஒரு அழகான சித்திரத்தை நூலாசிரியர் தந்திருக்கிறார். சூதுவாதற்ற அந்த மக்களின் வாழ்வு எவ்வாறு ஆக்கிரமிப்பினால் சிதைவுறுகிறது என்பதை அழகாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

கார்த்திகாயினியின் படைப்பாற்றல் பற்றி

சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழில் வந்து சுமார் 150ஆண்டுகள் ஆகின்றன. உலகில் எப்பொழுது தோன்றியது? ஆயிரத்து ஒரு இரவுகள் சிறுகதை வடிவின் முன்னனோடி எனக் கருதலாம். ஆயினும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவில்தான் முதல் முதாலாக சிறுகதை என்று இலக்கிய வடிவம் கொடிகட்ட ஆரம்பித்தது. தமிழில் சுமார் 150 வருடகால சரித்திரம் இருக்கும்.

சிறுகதையின் வடிவமும், சொல்லும் முறைகளிலும் பாரிய மாற்றங்களைக் கண்டுவிட்டோம். ஆரம்பம், மத்திய பகுதி, முடிவு என ஒழுங்கான அமைப்பில் கதை சொல்வதைக் கடந்து பல வருடங்களாகிவிட்டது. ஆயினும் இன்றும் எமது பல எழுத்தாளார்கள் பழைய குட்டைக்குள்ளேயே குடைந்து சேறு பூசிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

திடீரென கதையின் மையப்பகுதியிலிருந்து கதையை ஆரம்பிப்பது, பின்னோக்கிச் சொல்வது, சம்பவங்களை விட உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுத்தல், சிறுகதையை முடிக்கும்போது இன்னமும் ஏதோ மறைந்திருப்பது போல எண்ண வைத்து வாசகனை படைப்பிலிருந்து விடுபட முடியாமல் மேலும் ஆழச் சிந்திக்க வைத்தல் போன்ற சிறந்த அம்சங்களின் கீற்றுகளை கார்த்திகாயினியின் படைப்புகளில் காணக் கடைக்கிறது.

கார்த்திகாயினி தனது படைப்புகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் எழுதுகிறார். வெறும் பொழுதுபோக்கிற்கான அவர் எழுதவில்லை. ஆழ்ந்த சமூக நோக்கோடு எழுதுகிறார். தனது மண்ணைப் பற்றி எழுதுகிறார். அந்த மக்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்துகிறார். அந்த மக்களின் பேச்சு மொழியை அழகாகக் கையாண்டு மண்ணின் மணம் பாரெங்கும் பரவும் வகையில் எழுதுகிறார்.

இவை பற்றி நிறைய உதாரணங்களைக் கூறலாம். நான் கூறுவதை விட நூல் வெளியீட்டுரையை நடாத்த இருக்கும் நண்பர் தெளிவத்தை ஜோசப் அவர்களும், ஆய்வுரை நடாத்த இருக்கும் தேவமனோகரியும், தயாபரனும் தெளிவாகவும் நுணக்கமாகவும் சொல்லுவார்கள்.

ஆயினும் மூத்த எழுத்தாளரான நீர்வை பொன்னையன் இவரது படைப்புலகம் பற்றிக் தனது முன்னுரையில் எழுதியதை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

“பாத்திரப் படைப்பு, கதை நகர்த்தல், மொழிவளம், கதை சொல்லும் எத்திகள், கற்பனை வளம், பிரதேச மண்வாசனை, சித்தரிப்பு, உள்ளடக்கமும் உருவகமும் சங்கமிப்பு, கதை;துவம் போன்ற அம்சங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. மேலும் உவமான உவமேயங்கள், குறியீடுகள் பொருத்தமான முறையில் கையாளப்பட்டுள்ளன” என்கிறார்.

அவரது கருத்தோடு நானு; உடன்படுகிறேன். நூலைப் படித்து முடித்ததும் நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்கிறேன்.

நூலாசிரியர் பற்றி

தனது சொந்தக் கிராமத்து ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர், 9ம் ஆண்டுக்குப் பின்னர் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்று பல்கலைக் கழகத்திற்கும் தேர்வானார். ஆயினும் நாட்டு நிலைமை காரணமாக பொற்Nhறாரைப் பிரிந்து தனியே சென்று படிக்கக் கூடிய சூழல் இல்லததால் பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியாது போயிற்று.

கார்த்திகாயினிக்கு இளவயதிலேயே இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ஏ.எல் படிக்கும் காலத்திலேயே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். ளுடுடீஊ யில் இசையும் கதையும் எனத் தொடர்ந்தது இவரது இலக்கியப் பயணம். இது இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்ற போதும் சிறுவர்களுக்கான இரண்டு கதை நூல்களை ஏற்கனவே வெளியிட்டு உள்ளார்.

மாணவப் பருவத்தில் தனது படைப்பாற்றலை வளர்க்க உதவியாக இருந்தது தனது சித்தப்பா எனப் பெருமை கொள்கிறார். இப்பொழுது எழுத்துப் பணிக்கு உற்சாகம் ஊட்டி உதவி வருவது இவரது கணவன்தான்.

பல இலங்கைத் தமிழ் பெண் எழுத்தாளர்களுக்கு இவ்வாறாக கணவன்மார் ஒத்தாசையாக இருப்பதை எனது நட்பு வட்டத்தில் கண்டிருக்கிறேன். பத்மா சோமகாந்தன், கோகிலா மகேந்திரன், தமிழ்ச்செல்வி, பவானி சிவகுமாரன், ராணி சீதரன், சந்திரகாந்தா முருகானந்தன் எனப் பலருக்கு இலக்கிய உணர்வு உள்ள கணவன்மார் கிடைத்தது அதிஸ்டம் என்றே சொல்லத் தோன்றுகிறது

தினக்குரல் பற்றி

தமிழ் தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இதனால் மக்களின் மனத்தில் இடம் பெற்றுவிட்டது. இக்கட்டான சூழலில் இத்தகைய ஒரு பத்திரிகையை முக்கியமாக தமிழில் ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவதற்கு அசாத்திய துணிச்சல் தேவை. ஆதைனைச் செய்து காட்டிய எஸ்.பி.சாமி சாமி ஐயா அவர்கள் பாராட்டுக்கு உரியவராவார். தினக்குரல் விரைவில் கட்டிளம் பருவமான 15 வயதில் நுழைய இருக்கிறது. அதற்கு எமது வாழ்த்துக்களை இப்பொழுதே சொல்லி வைப்போம்.

தினக்குரல் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தினமும் நான் அதன் வாசகனாக இருக்கிறேன். அதன் ஆரம்பகால ஆசிரியர் மறைந்த ராஜகோபால், பின்பு சிவநேசச்செல்வன், இப்பொழுது தனபாலசிங்கம், ஞாயிறு ஆசிரியர் பாரதி அனைவரும் எனது நண்பர்களாக இருக்கிறார்கள்.

கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து ஹாய் நலமா மருத்துப் பத்தியை தினக்குரலில் எழுதிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. மருத்தவத்தில் பத்தி எழுத்து பற்றிய முதல் அனுபவம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகையுடாகக் கிட்டியது. மருத்துவக் கலசம் என்ற தலைப்பில் 90களில் சுமார் இரண்டு வருடங்கள்  எழுதியுள்ளேன். அது பின்னர் நூலாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக இவ்வளவு நீண்டகாலம் எழுதுவதற்கு நண்பர் தனபாலசிங்கம்தான் காரணம். தலையீடுகளும் இடையூறுகளும் செய்யாத நல்ல மனிதர். கட்டுரைகளை நான் நேரத்திற்குக் கொடுக்கத் தவறும்போதும் கரைச்சல் கொடுக்காதவர்.

மீரா பதிப்பகம் பற்றி

இந்த நூலை மீரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அழகான அட்டைப்படத்துடன் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்ததுடன் மீரா பதிப்பகம் சார்பாக நுர்லை வெளியிட்ட புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்.

மீரா பதிப்பகம் நண்பர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அவர்களது சொந்த முயற்சி. அவரது அயராத முயற்சியின் அறுவடையாகும். தினக்குரலில் விளம்பர உதவியாளாரக இணைந்த அவர் தனது கடும் உழைப்பின் மூலம் இன்று வணிக ஊக்குவிப்பு முகாமையாளராக உயர்ந்துள்ளார். தினக்குரலில் எவ்வாறு உயர்நிலைக்கு வந்தாரோ, அதே போல தனது ஓய்வு நேரத்தையும் உழைப்பு நேரமாக்கி, துயில் தொலைத்து உடல்வலி நோக்காது செய்த முயற்சி காரணமாகவே மீரா பதிப்பகம் இன்று இலங்கைப் பதிப்பத்துறையில் முன்னோடியாக நிற்கிறது.

புலோலியூர் இரத்தினவேலோன் ஒரு எழுத்தாளர். அருமையான சிறுகதை ஆசிரியர். சுpறந்த நூல் விமர்சனங்களைத் தருபவர். இளைஞனாக எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து எனது நண்பராக இருக்கிறார். எழுத்தாளன், பத்திரிகை உயர் அதிகாரி இவற்றிறக்கு மேலான மற்றொரு பர்மாணம்தான் பதிப்பாளர் என்பது ஆகும்.

96ல் புதிய பயணங்களுடன் ஆரம்பித்த இப் பதிப்பகம்  கடந்த 15 வருட காலவெளயில் 9 நூல்களை வெளியிட்டுள்ளது. இது அவர்களின் 91வது வெளியீடு.

பல் துறை சார்ந்த நூல்களை வெளியிட்டு மிகச் சிறப்பாக இயங்கிவருகிறது. திறனாய்வு, சிறுகதை, திரைப்படச் சுவடி, திரைப்படக் கலை, நலவியல், மனோவியல், அழகியல், நாட்டார் இலக்கியம், விஞ்ஞானம், தலவரலாறு, குழந்தைப் பாடல்கள் என பல்துறை நூல்களை வெளியிட்டு, தணியாத தாகத்துடன் ஈழத்துப் பதிப்பகத்துறையில் புதிய எல்லைகளை எட்ட முயல்கிறது. விரைவில் 100வது வெளியீட்டை எட்டிவிடும். இன்னும் பல நூறு நூல்களை வெளியிட்டு எமது எழுத்தாளர்களது திறமைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

எனது பல நூல்களும் மீரா பதிப்பகம் ஏடாகவே வெளிவந்துள்ளன. நீங்கள் நலமாக, உடையைக் காத்து நலத்தைக் காப்போம், மறந்து போகாத சில ஆகியவையே அவை. இதில் நீங்கள் நலமாக 4 பதிப்புகளைக் கண்டதும், சாகித்தியப பரிசையும் பெற்றது. அதற்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

தலைமையுரை நீண்ட உரையாகிவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த விழாவில் தலைமைப் பொறுப்பை எனக்கு அளித்த காரத்திகாயினி, அவரது கணவன் சுபேஸ் மற்றும் விழாக் குழவினருக்கு நன்றிகள்

வணக்கம்.
0.0.0.0.0.0.0

Read Full Post »

>

எனது (எம்.கே.முருகானந்தன்) தலைமையுரை


வணக்கம்
மாலை வந்தனம்

தமிழ்பிரியாவின் ‘காம்பு ஒடிந்த மலர்’.
இது ஒரு சிறுகதை நூல்.

ஈழத்துச் சிறுகதைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அதன் வரலாற்றைப் பலவாறு வகுத்தனர்

ஆனால் இன்றைய நிலையில் நின்று நோக்கும்போது அதவது எமது சமகால சிறுகதை பரப்பை அவதானித்தால் அதை இன்னொரு வகையில் வகுகக்கலாம் போலத் தோன்றுகிறது

1. போருக்கு முந்திய காலச் சிறுகதைகள்
2. போர்க் காலச் சிறுகதைகள்
3. போருக்கு பிந்திய காலச் சிறுகதைகள்

போருக்கு முந்திய காலச் சிறுகதைகள்

அமைதியான வாழ்க்கை, ஊர்புறங்களில் சாதிப் பிரச்சனை, படித்தவர் மத்தியில் வேலையில்லாப் பிரச்சனை, மொழிப்பிரச்சனை, சீதனப் பிரச்சனை

போர்க் காலச் சிறுகதைகள்

இனப் பிரச்சனையின் பாதிப்பு, இனப்பாகுபாடு, போர், இயக்கங்கள் பற்றிய துதிபாடல், புலிகளின் தீரம் இவை பற்றி மட்டுமே பேசப்பட்டது. போருக்கு எதிராகப் பேசியவர்கள் இனத் துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள்

போருக்கு பிந்திய காலச் சிறுகதைகள்

உண்மையில் இதை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உண்டு.

போரைப் பற்றிய விமர்சனங்கள்,
போரினால் தமிழ் மக்ககளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்,
அல்லது அதனால் கிட்டிய நன்மைகள்,
இனி எமது இனம் செல்ல வேண்டிய பாதை,
இவற்றைத் தவிர ஏனைய மொழிகளில் வரும் படைப்புகள் போல மக்களின் நாளந்த வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள்,
தனிமனிதப் பிரச்னைகள்
தனிமனிதர்களின் பிரச்சனைகள்,
சாதிப்பிரச்சனை,
குடும்பப் பிரச்சனை போன்றவற்றைப் பேசுவது போன்ற மக்களின் அன்றாட மற்றம் சமூகப் பிரச்சனைகள் பற்றிப் பேச வேண்டும்.

ஆனால் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவை இன்னமும் பேசவில்லை.


முன்பிருந்த பயமும் தயக்கமும் இன்னும் தீரவில்லை. பலர் இன்னமும் நடந்த இழப்புகள் பற்றி மட்டுமே பேசுகிறாரகள். போருக்குப் பின்னான எமது மக்களின் வாழ்வுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையான, புதிய மகிழ்சியான வாழ்வை பெறுவதன் அவசியம் பற்றிப் பேசும் படைப்புகள் இன்னமும் வெளிவரத் தொடங்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்பிரியாவின் ‘காம்பு ஒடிந்த மலர்’ நூல் வெளிவந்திருக்கிறது.

இந்த நூல் இன்றைய சூழலில் எப்படிப் பொருந்துகிறது? எதைப் பேசுகிறது? அல்லது எதைப் பேசவில்லை?

மிக முக்கியமான விடயம் இது இனப் பிரச்சனை பற்றிப் பேசவில்லை.
போரைப் பற்றிப் பேசவில்லை.
தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அடக்கு முறைகள் பற்றிப் பேசவில்லை. அடக்கு முறையால் தமிழ் மக்கள் படும் துயரங்கள் பற்றியும் பேசவில்லை.

ஆனால் தமிழ் மக்களது அதிலும் முக்கியமாக யாழ் பிரதேச மக்கள் தமது நாளாந்த வாழ்வில் சந்திக்கும் சம்பவங்களையும் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டவை.

இவரது சிறுகதைகளில் போர் அல்லது இனப்பிரச்சனை சார்ந்த கரு இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன? இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

1. எமது இனப்பிரச்சனை தீவிரமடைந்த 1983 ற்கு முற்பட்ட காலத்துக் கதைகளே பெரும்பாலனவை. இந் நூலில் உள்ள 14 சிறுகதைகளில் இரண்டே இரண்டு கதைகள் 1983க்குப் பின்னர் எழுதப்பட்டுள்ளன. ‘மாற்றங்கள்’ என்ற கதை 1986ல் அமிர்தகங்கையில் வெளியாகியுள்ளது. அடுத்தது ‘நாங்கள் மனிதர்கள் என்ற சிறுகதை 1987ல் மல்லிகையில் வந்திருக்கிறது

2. அப்படியானால் அக்காலத்தில் தமிழ் மக்களுக்கு இனரீதியான பிரச்சனைகள் இருக்கவில்லையா? அடக்குமுறைகளால் துன்பப்படவில்லையா?

இருந்ததுதான்.

ஆயினும் அன்றைய சூழ்நிலையில் ஒரு அரசாங்க ஊழியரான தமிழ்பிரியாவினால் அவை பற்றி வெளிப்படையாக எழுத முடியாதது இருந்திருக்கலாம். அல்லது மணமாகாத இளம் பெண்ணாக இருந்த அவரைப் பாதித்தவை வேறு விடயங்களாக இருந்திருக்கலாம்.

காரணங்கள் எவையாக இருந்த போதும் தமிழ்பிரியாவின் சிறுகதைகள் எம்மை ஒரு புது உலகிற்குள் இழுத்துச் செல்கின்றன.
நாம் மறந்துவிட்ட ஒரு உவப்பாக காலத்திற்குள் எம்மைப் பயணிக்க வைக்கின்றன.

அதாவது போருக்கு முந்திய காலச் சிறுகதைகளைக் கொண்ட தொகுதி எனலாம்.

உண்மையில் இந்த நூலின் சிறப்பே அதுதான்.

குருதியையும், போரையும் பற்றிப் பேசியதைக் கேட்டே அலுத்துவிட்ட, அல்லது மீண்டும் மீண்டும் பேசியதால் உணர்வுகள் மரத்துவிட்ட நிலையில் உள்ள எமது மக்களுக்கு இத் தொகுதி ஒரு மாற்று அனுபவத்தை தருகிறது.

வாழ்க்கை என்பது ஒரு மலர்த் தோட்டத்தைப் போன்றது.
அங்கு அழகிய மரங்கள் இருக்கும்.
வாசமுறு மலர்களைக் கொண்டவையும் இருக்கும்.
பாறைபோல உறுதியான மரங்களும் இருக்கும்.
காற்றின் திசைக்கு ஏற்ப வளைந்து கொடுப்பவையும் இருக்கும்.

அதேபோல கதம்பமாக இருக்கும் இலக்கியங்களைப் படிக்கும்போது எமக்கு வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்க வேண்டும்.

போர்க்கால இலக்கியங்கள் எமது வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் அந்த உணர்வைத் தொய்யவிடாது காப்பாற்ற வேண்டிய கடமை எமது இலக்கியகர்த்தாக்களுக்கு இருந்தது. அதனை எமது இலக்கியகர்த்தாக்கள் செவ்வனே செய்தார்கள்.

இன்று போர் ஓய்ந்துவிட்டது.
இடைக்காலத்தில் நாம் பட்ட பல இடைஞ்சல்களும், தொல்லைகளும் தீரந்துவிட்டன.

ஆனால் அடிப்படைப் பிரச்சனையான அரசியல் பிரச்சனை தீரவில்லை.
அதைப் பற்றிப் பேசுவார் எவரும் இல்லை.
அதற்கு மேலாக எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சனைகள் ஏராளம். அவை பற்றியும் எமது இலக்கியங்கள் பேச வேண்டும். ஆனால் அவை காலப் போக்கில்தான் கிடைக்க முடியும்.

இப்பொழுது ஒரு இடைக்காலத் தீர்வாக இரத்தினவேலோன் இந்த நூலைத் தந்துள்ளார்.
போர்க்காலத்தைப் பற்றி ஒரு வசனம் கூட இல்லாத நூலாக இது வந்திருக்கிறது. கடைசிக் கதையில் மட்டும் பொடியள் வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் கூட அரசியல் பற்றிப் பேசவில்லை.
போரைப் பற்றியும் பேசவில்லை.
ஒரு கிராமத்தில் ஏற்படுகின்ற ஒரு சிறு பிரச்சனைக்கு அவர்கள் எவ்வாறு தீர்வு தருகிறார்கள் என்பதைப் பற்றிச் சொல்கிறது.

துப்பாக்கி, குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல் எதுவும் அற்ற ஒரு சமூகத்தின் நாளாந்த வாழ்வில் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளை இந்த நூல் பேசுகிறது.

அதனாலேயே வித்தியாசமான இந் நூல் பலரையும் கவரும் என நம்பலாம்.

ஒரு பெண்ணின் பார்வையாகப் பேசுகிறது. அவளின் குரல் நூல் முழவதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது

அதுவும் கல்யாணம் ஆகாத வேலைக்குப் போகும் ஒரு பெண்ணின் பார்வையாக இந்த கதைகள் அமைந்துள்ளன.
தனது சமூகத்தில், தனது சுற்றாடலில் நடக்கும் சம்பவங்களை உற்று நோக்குகிறாள்.
அங்கு நடக்கும் அக்கிரமங்கள், அநியாயங்கள் அவள் மனத்தைத் தாக்குகிறது. தனக்குள் தானே தவிக்கிறாள்

அவள் ஒரு துணிச்சல் மிக்க பெண் என்று சொல்ல முடியாது.
அவள் பொது இடத்தில் அநீதி நடக்கும் போது தட்டிக் கேட்க மாட்டாள். ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்ணும் அல்ல.
நேரடியாகச் சண்டைக்கும் போக மாட்டாள். வெளிப்படையாகப் பேசத் தயங்கும் சாதாரண பெண்.
மனதிற்குளாக துடிக்கத்தான் முடியும்.

ஆனால் அவற்றை கதையாக எழுதுவாள்.

பெரும்பாலன சிறுகதைகள் தானே பாத்திரமாக நின்று சொல்லும் கதைகளாக இருக்கின்றன.

மற்றைய கதைகளில் பிரதான பாத்திரம் வேறு பெயர் பெற்றிருந்தாலும், இன்னும் சில ஆண் பாத்திரமாக இருந்தாலும் அவை யாவற்றிற்குள்ளும் அவளின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஆம் புஸ்பராணி என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழ்ப்பிரியா என்ற புனைப் பெயரில் எழுதும்போது தமிழினி என்ற பாத்திரமாக பல இடங்களில் வருகிறார்.

சொந்த அனுபவங்களாக வருவதால் கதைகளின் நம்பகத்தன்மை உச்சமாக இருக்கிறது. கற்பனையில் எழுதுகிறார் என்ற சந்தேகம் இவரது கதைகளில் ஏற்படாது இருப்பதற்கு இது ஒரு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

இவரது கதைகளில் நான் இரசித்த விடயங்கள் பல

1. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கும், மீண்டும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் தினமும் ரயிலில் பிரயாணம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள். இங்குள்ள சில வயதானவர்கள் பிரயாணித்து இருப்பார்கள். எனக்கு அந்த வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால் கொழும்பு கொடிகாமம் பிரயாணத்தில் கிளிநொச்சி இரயில் நிலையத்தை 80களின் முற்பகுதியில் கண்டிருக்கிறேன். இன்றைய பல இளைஞர்களுக்கு இத்தகைய பிரயாணம் ராஜா ராணி காலத்துக் கதைபோல இருக்கும்.

கிளிநொச்சி ஸ்டேசனை, அங்குள்ள லேடீஸ் ரூமை, அதன் பிளற்பாரத்தை, அங்கு தமிழில் அறிவிப்புகள் ஒலிபரப்பப்படுவதை வாசிக்கும்போது எவ்வளவு இன்பமாக இருக்கிறது. நாம் இழந்தவிட்ட வசந்த காலங்களை மீண்டும் சுவாசிக்கக் தமிழ்பிரியாவின் எழுத்துக்கள் உதவுகின்றன.

அதே போல சுமார் 25 வருடங்களுக்கு முன்னான யாழ்ப்பாண பஸ் மற்றும் மினிபஸ் பிரயாண அனுபவங்களை மிகவம் யதார்த்மாகவும் விரிவாகவும் சொல்லியுள்ளதை இவரின் கதைகளில் சுவைத்து ரசிக்க முடிகிறது.

அந்த கொண்டக்கர்மாரின் அடாவடித்தனங்கள், அதில் பிரயாணம் செய்ய முனையும் வயோதிபர்களும் பிச்சைக்காரர்களும் படும்; அவமதிப்பு போன்றிவையும்

2. எதிர் மறையான கருத்துடன் சொல்லப்படுவது போல ஆரம்பித்து, எங்களை ஆர்வத்துடன் வாசிக்க வைப்பது. தகப்பனுக்கு கடுமை என்று தந்தி வந்த போதும், பதற்றமடையாது வீடு சென்ற போது அவர் இறந்து கிடப்பதைக் கண்டும் அலட்டிக் கொள்ளாது இருக்கும் பாத்திரத்துடன் ஆரம்பிக்கும் கதை ‘நெஞ்சில் நிலைக்காத உறவு’

அதேபோல மாற்றங்கள் என்ற கதையில் இவளை கணவனின் பெயர் சொல்லி மிஸஸ் பாலசிங்கம் என்று கூறியவுடன் நெஞ்சிற்குள் உதை வாங்கித் துடிப்பதும், அவருக்கு கடுமையான வருத்தம் என்று சொன்னவுடன் ‘அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என எடுத்தெறிந்தாற்போலப் பேசுவதும் எங்களை என்ன சொல்ல வருகிறார் என யோசிக்க வைக்கின்றன.

ஏனெனில் தகப்பன், மற்றும் கணவனை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் எமது சமூதாயப் பார்வைக்கு அடி போடுவது போல எதிர்மறையாக ஆரம்பிக்கின்றன கதைகள் அவை.

3. பெண்களின் உணர்வுகள் பற்றிய இவரது சிந்தனைகளும் வரிகளும் மிகவும் உயிரோட்டமாகவும் மனதில் நிற்குமாற் போலுவவும் பல இடங்களில் அமைந்துள்ளன.

‘கருவிகள்’ என்ற சிறுகதையில் இளவயதிலேயே கணவனை இழந்த பெண்ணை (பக்கம் 88)

“5 வருடம் என்றாலும் அவனுடன் சந்தோசமாக வாழ்ந்து 2 பிள்ளைகளுக்கு தாயானவள் இன்னொருவருடன் வாழச் சம்மதிப்பாளா? அவளுக்கு அப்படி ஒரு ஆசையே கிடையாது. ஆந்த நினைவுகளுடனேயே பிள்ளைகள வளர்த்துக் கொண்டு வருகிறாள் என்று அவளைப் பெருடைப்படுத்திப் மற்றவர்கள் கதைதத்தபோதுதான் அகல்யா வெந்து போனாள். குணவன் இறந்ததும் பெண் மனத்தின் ஆசாபாசங்கள் எல்லாம் அச்தமித்துப் போய்விடும் என்று என அவர்கள் எல்லாம் முடிவு செய்கிறார்கள்.”

பெண்பார்க்கும் படலம்- ‘பார்வைகள் கோணலாகும் போது’ தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.
அதிசமாய் விழிகளில் ஒரு மலர்ச்சி.

அழகு இன்று ஒரு படி உயர்ந்து நிற்பது போன்ற பிரமை…. அவனுக்கு அவளைப் பிடிக்காமா போகும்.
அந்த முகம் தெரியாதா அவனைப் பற்றி மனதிற்கள்ளேயே எண்ணிப் பார்த்தாள். அவள் மனதிற்கள் வரைந்து லைத்திருக்கிற அதே முகம் மாதிரி…. பார்த்தவுடனேயே சம்மதித்துவிடக் கூடிய கம்பீரத் தோற்றத்தோடு, அவளின் அழகோடு போட்டி போடுகிறவனாக… விதம் விதமான கற்பனைகள்…

இவ்வாறு பல சிறப்பகளைக் கொண்ட இச்சிறுகதைத் தொகுதி இன்று வெளியாவதில் மிகுந்த மகிழ்ச்சி.
அதன் ஆசிரியரான தமிழ்பிரியாவிற்கு எனது வாழ்த்துக்கள்.
அவரது ஏனைய படைப்புகளையும் நூலாக்குவது அவசியம்.
நன்றி.

கூட்டத்திற்கு வந்திருந்த சிலர்

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>மூத்த முற்போக்கு எழுத்தாளரான நீர்வை பொன்னையனின் புதிய தொகுப்புத்தான் “நிமிர்வு”. அதன் வெளீயீட்டு விழா பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன். அதில் குறிப்பிட்ட எனது முன்னுரை இதுதான்.

முன்னுரை

‘நிமிர்வு’ இது நீர்வை பொன்னையனின் புதிய சிறுகதைத் தொகுப்பு.

‘மேடும் பள்ளமும்’ முதல் ‘நீர்வை பொன்னையன் சிறுகதைகள்’ வரையான ஆறு தொகுதிகளை வாசகர்களுக்கு அளித்தவரின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. இதில் அடங்கியிருக்கும் அனைத்தும் கடந்த ஓரிரு வருடங்களுக்குள் எழுதிய புத்தம் புதிய படைப்புகள், முன்னைய தொகுப்புகளில் எவற்றிலும் இடம் பெறாதவை. ஒரே படைப்பை வெவ்வேறு தெர்குப்புகளில் சேர்த்து வாசகர்களின் தலையில் கட்டும் கயமை இல்லாதவர் நீர்வை.

உங்கள் கையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இருப்பதனை இன்றைய காலகட்டத்தின் வெளிப்பாடு எனலாம். நீங்கள் இன்றைய நவீன உலகின் ஒரு உதாரணப் புள்ளி. செயலூக்கம் கொண்ட ஒரு பாத்திரம். அதன் அவசர ஓட்டத்தின் பங்குதாரி. எதனையும் சுருக்கமாகவும், செறிவாகவும் செய்ய வேண்டியது காலத்தின் நியதி. இணைந்து ஓடாதவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்.

ஆம்! காலத்தை வீணடிக்காது, சுருக்கமாகவும் செறிவாகவும் பேசி மனமகிழ்வு அளிப்பதுடன் நின்றுவிடாது, உள்ளத்துள் ஊடுருவவும் வைப்பது என்பதால் இன்றைய காலகட்டத்திற்கான இலக்கிய வடிவமாக சிறுகதை ஆகிவிட்டது. எனவே மக்களிடையே தமது கருத்துக்ளைப் பரப்புவதற்கான ஆயுதமாகவும் பயன்படுகிறது. கவிதை மேலும் சுருக்கமானதும் செறிவானதும் என்ற போதும் சற்று அதிக பிரயாசை தேவைப்படுவது. எனவேதான் சிறுகதையே இன்று அதிகம் வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாக இருக்கிறது.

நீர்வை ஒரு படைப்பாளி. பிரதானமாக சிறுகதை எழுத்தாளர். சமூக முன்னேற்றத்தின் ஊடாக புத்துலகைக் காண்பதை நோக்கமாகக் கொண்டு எழுதுபவர். ஈழத்து இலக்கிய உலகில் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து இலட்சிய வேட்கையுடன் செயற்பட்டு வரும் ஒரு மூத்த படைப்பாளி. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக படைப்பாளுமையிலும், அதன் தொடர்ச்சியை பேணுவதிலும் தேக்கமுறாது பயணிக்கிறார். ஆயினும் எழுதிக் குவிப்பவர் அல்ல. இதுவரை சுமார் 60-70 சிறுகதைகளையே தந்திருக்கிறார். மேலெழுந்த வாரியாக அவசரப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. மிகுந்த சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட அவை யாவுமே பெறுமதி மிக்கவை. வயதின் காரணமாக தனது கையெழுத்தின் நேர்த்தியில் தளர்வு ஏற்பட்டுவிட்ட போதும் கலை ஊக்கத்தில் இளைஞனின் உற்சாகத்தோடு செயற்படுபவர்.

சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு புதியது அல்ல. வ.வே.சு ஐயர், புதுமைப்பித்தன், மௌனி போன்ற ஆளுமைகளால் ஊன்றப்பட்ட பதி இன்று ஆலமரம் போல வளர்ந்து விட்டது. மக்கள் மயப்பட்ட ஏனைய ஒரு இலக்கிய வடிவங்கள் போலவே இன்றும் வளர்சியுறுகிறது. அது தேங்கிய குட்டை அல்ல. கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை நிதம் நிதம் புத்தாக்கம் செய்து பொலிவுறுகிறது. அதன் அசைவியக்கதைப் புரிந்து கொண்ட படைப்பாளி தன்னையும் இற்றைப்படுத்தி, தனது ஒவ்வொரு படைப்பிலும் ஏதாவது புதுமையை, தனித்தன்மையை கொண்டு வரவே முயற்சிப்பார்கள்.

நீர்வையும் அத்தகைய ஒரு படைப்பாளியே. எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த காலம் முதல் சிறுகதை இலக்கியம் படைத்து வருகிறார். சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் சூட்சுமங்களைப் புரிந்து அதனைத் தனது படைப்புகளில் லாவகமாகப் பயன்படுத்தும் நல்ல படைப்பாளி. அனுபவம் தந்த பாடங்களால் மட்டுமே அவரது படைப்புகள் மெருகூட்டப் படவில்லை. அவரது ஆரம்பத் தொகுப்பான ‘மேடும் பள்ளமும்’ நூலில் உள்ள படைப்புகளை மீள்நோக்கும் போது கலைநேர்த்தி, சொற்தேர்வு பரீட்சார்த்த வடிவங்களில் படைத்தல் போன்ற தேடலுறும் பண்புகளைக் அவரது கன்னிப் படைப்புகளிலேயே காண முடிகிறது. சொற் சிக்கனமும், பொருள் அடர்த்தியும், சின்னஞ் சிறியதான வாக்கியங்களும் அவரது படைப்புகளின் சிறப்பு அம்சங்களாகும்.

இந்தத் தொகுதியிலும் அவர் ஒரு வித்தியாசமான புது முயற்சி செய்துள்ளார். சிறுகதையின் வடிவம் சார்ந்த ஒரு பரீட்சார்த்த முயற்சி எனக் கொள்ளலாம். நான்கு கதைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். இப் படைப்புகள் பந்திகளாகப் பிரிக்கக்படவோ, பகுதிகளாக வேறுபடுத்தப்படவோ இல்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே மூச்சில் தொடர்ச்சியாகச் சொல்லி முடிக்கப்படுகின்றன. ஒரு சில வார்த்தைகளையே கொண்ட மிகச் சிறிய வாக்கியங்கள், அவையும் வரிகள் எனும் கட்டுக்குள் அடங்காது பிரிந்து நிற்பது அழகு சேர்க்கிறது. புதுக் கவிதையோ என மயங்க வைக்கும் நடை. ஆனால் நெடுங் கவிதையாகவும் இல்லை. வாசிக்கும் போது கண்களுக்கு இதமாகவும், மனசுக்கு நெருக்கமாகவும் இருப்பதே அதன் சிறப்பு எனலாம். இதில் அடங்குகின்ற நிமிர்வு, மீட்பு, மீறல், கர்வம் ஆகிய நான்கும் இந்த வகையைச் சார்ந்தவையாக எனக்குப் படுகிறது.

ஆயினும் புதியன செய்ய வேண்டும் என்பதற்காக எழுதுவதில்லை. பேரும் புகழும் பெறுவதற்காகப் படைப்பதில்லை. பாறை போன்ற உறுதியான கொள்கைப் பிடிப்பும், பூப் போன்ற மென்மையான உள்ளமும் கொண்டவர். லட்சிய வேட்கை கொண்டவராக இருப்பதனால் அவரது படைப்புகள் அடக்கப்பட்ட அல்லலுறும் மக்களையும், தொழிலாளர்களையும், அவர் தம் போராட்டங்களையும் வீறுகொண்டு சித்தரிக்கும். சமூகக் கொடுமைகளையும், சாதீயம் போன்ற ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும். அதே நேரம் மிருதுவான மனம் கொண்டவராதலால் தனிமனித உணர்வுகளையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. நட்பையும் காதலையும், குடும்ப உறவுகளையும் கவனத்தில் கொள்ளவே செய்யும்.

மனித உணர்வுகளைப் பேசும் நீர்வையின் கதைகளில் கூட நிச்சயம் சமூக நோக்கு இருந்தே தீரும். ‘மீறல்’ காலத்தை மீறிய உறுதியான காதலைப் பேசும் கதை. ஆயினும் சாதிப் பிரச்சனையும் சேர்ந்தே வருகிறது. சாதீயத்தின் கொடுங் கரங்களை ஒதுக்கி துணிவோடு காதலித்தவளை கைப்பிடிக்கும் கதை.

முற்போக்கு அரசியலில் நேரடியாக ஈடுபட்டவராதலால் பல அரசியல் கதைகளும் அவரது படைப்பில் அடங்கும். இந்த நூலில் அவ்வாறான நேரடி கட்சி அரசியல் கதைகள் இல்லாதபோதும், தமிழ் அரசியலில் ஆயுதப் போராட்டம் முனைப்புக் கொண்ட காலத்தில் எழுதப்பட்டவையாதலால் அதனை உள்ளடக்கத் தவறவில்லை. தமிழ் அரசியலில் முக்கிய அங்கமாகிவிட்ட ஆயுதப் போராட்டத்தின் மறு பக்கத்தையும் நேர்மையுடன் பதிவு செய்கிறது. அவ்வாறு எழுதிய ஓரிருவரில் நீர்வையும் இடம் பெறுகிறார்.

தமிழ் அரசியலில் ஆயுத போராட்டம் அரும்பத் தொடங்கும் காலக் கதைகள் இரண்டு இடம் பெறுகின்றன.

‘நிமிர்வு’ என்பது கறுப்புக் கோட்டுகாரர்கள் தமிழ் அரசியலில் கோலாச்சிய காலக் கதை. அறம் பிழைக்கின் அரசியலும் பிழைக்கும். அவ்வாறே அங்கு பிழைத்தது. இன்று தெற்கிலும் கறுப்புக் கோட்டுக்காரர்களுடன் கழுத்தில் மாலைக்காரர்கள், ஸ்டெதஸ்கோப்காரர்கள், முனைவர்கள், தெருச்சண்டியர்கள் என எல்லோருமே குட்டை குழப்பி அரசியலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இக்கதை தமிழ் அரசியல் போலிகளின் சரிவையே எடுத்துக் கூறுகிறது. குறுகிய வசனங்களுடன் 15 பக்கங்கள் நீளுகிறது. புதிர் போன்ற சிறப்பான முடிவு. மிக வித்தியாசமான ஒழுங்கில் சொல்லப்படுகிறது. நொன் லீனியர் பாணியில் சொல்லும் சாயல் தெரிகிறது.

‘வீழ்ச்சி’ தேசிய அரசியலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. அரசுசார் நிறுவனங்களின் உயர் பதவிகள் அரசியல் மயப்படுவதும், அந்த நியமனங்களுக்கான குத்துவெட்டுகளும், தில்லு முல்லுகளும் இவ்வளவு அப்பட்டமாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் பதியப்பட்டதாக ஞாபகம் இல்லை. ஒரு சிறு பாத்திரமாக வரும் பாலா மனத்தில் உயர்ந்து நிற்கிறான்.

நீர்வையின் கதைகளின் உள்ளடக்கம் இவ்வாறு இருக்க அவற்றில் உள்ள கலையம்சங்களை நோக்குவதும் அவசியமாகும். சிறுகதை இலக்கியத்தின் பண்புகளை நீர்வை எவ்வாறு தனது படைப்புகளில் உள்வாங்கியிருக்கிறார் என நோக்குவது சுவார்ஸமாக இருக்கக் கூடும்.

சிறுகதை ஒரு படைப்பிலக்கியம். ஆனாலும் நாவல், குறுநாவல், கவிதை, நாடகம், கட்டுரை போன்ற ஏனையவற்றை விட பல விதத்திலும் மாறுபட்டது. நாவல், குறுநாவல் போன்று கதையைச் சொல்லிச் செல்லும் ஒரு இலக்கியமே இதுவென்ற போதும் இதற்கான பல தனித்துவங்கள் உள்ளன.

சிறுகதை, நாவல் போன்ற எந்தப் படைப்பிலக்கியமாக இருந்தாலும் அதற்கு ஒரு கரு இருக்க வேண்டும். அதாவது அதனுடைய மையக் கருத்து. நாவல் போன்றவற்றில் அந்த மையக் கருவை தீர்க்கமாக வெளிக்கொண்டு வருவதற்காகவே கதை முழுவதும் சொல்லப்படுகிறது. அந்த மையத்தை வலியுறுத்துவதற்காகவே கதையில் சம்பவங்களைக் கோர்த்தும் தொகுத்தும் செல்வார்கள். அல்லது அக் கருவைச் சுற்றியே கதை படர்ந்து செல்லும். இதனால் கதையை அக்கறையோடு படிக்கும் வாசகனுக்கு அப் படைப்பின் கருவை சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறே எந்த ஒரு படைப்பிலக்கியத்தையும் வாசிக்கும் போது அது ஒரு விடயத்தைச் சொல்லிக் கொண்டு செல்வதாக வாசகன் உணர்வான். அதற்கேற்ப அவனும் தன்னுள் அதனை எழுதிக் கொண்டே செல்வான். இதுவே வாசகப் பங்கேற்பு. நவீன இலக்கிய வடிவங்கள் அனைத்துமே அவனது பங்களிப்பை வரவேற்கின்றன. ஊக்குவிக்கின்றன. வாசகப் பங்களிப்பு இல்லையேல் இன்றைய சூழலில் எந்தப் படைப்புமே வெற்றி பெற முடியாது.

சிறுகதையிலும் அவ்வாறே. ஆனால் சிறுகதையின் வார்ப்பு முறை நாவலை விட முற்றிலும் எதிர்மாறானது. சிறுகதையின் முக்கியம் அது தரும் எதிர்பாராத திருப்பத்தில் மட்டுமே தங்கியுள்ளது. வாசகன் கதையின் முடிவைப் பற்றி என்ன நினைக்கிறோனோ, எதனைத் தன்னுள் எழுதிச் செல்கிறானோ அதற்கு நேர் எதிராக அல்லது வாசகன் நினைத்தே இருக்க முடியாத புதிய கோணத்தில் கதாசிரியர் கதையை திருப்புவார். வாசகன் மலைத்து நிற்பான். அவ்வாறானதே சிறந்த சிறுகதையாகத் தேறும்.

உண்மையில் சிறுகதையின் முடிவே அந்த திடீர்த் திருப்பத்தில்தான் உள்ளது. திருப்பம் வெளிப்பட்டதும் கதை முடிவதே சாலச் சிறந்தது. அதற்கு மேலும் விளக்கம் கூறி கதையை வளர்த்துச் செல்வது வாசகனை சோர்வடையச் செய்யும். தெரிந்த பாடத்தை மீண்டும் கேட்கும் மாணவன் போலச் சலிப்படைய வைக்கும்.

அந்த முடிவானது மிகக்குறைவான சொற்செட்டுடன் கருத்துச் செறிவான வார்த்தைகளாக வெளிப்பட வேண்டும். அப்பொழுதுதான் வாசகன் தனது கற்பனையைச் சிறகடித்துப் பறக்க விட்டு மிகுதியை தனது உள்ளத்துள் புனைந்து செல்ல முடியும். அதனால் வாசகன் பங்கேற்பு மிகவும் பலமாகிறது. படைப்பாளியே அதிகம் சொல்வது வாசகனுக்கு பாரம்.

‘வெறி’ என்ற சிறுகதையின் முடிவானது திடீர்த் திருப்பமாக வருகிறது. சரியாகச் சொன்னால் அக் கதையின் கடைசி வசனமாக வருகிறது. நீண்ட வசனம் கூட அல்ல. மூன்றே மூன்று சின்னஞ் சிறிய சொற்களைக் கொண்ட சிறிய வசனம். அந்த குறுகிய வசனத்தினதும் கடைசி வார்த்தையாகவே இந்தக் கதையின் திருப்பம், முடிவு இரண்டும் இணைந்தே வருகின்றன. சிறுகதை என்ற படைப்பிலக்கியத்தின் பண்புகளை நன்கு புரிந்து கொண்டதால்தான் நீர்வை பொன்னையனால் இவ்வாறு இப்படைப்பை நிறைவு செய்ய முடிந்திருக்கிறது.

குடி ஏறுவதால் மட்டும் வருவது வெறி அல்ல. பணம், பொருள், சொத்து போன்றவையும் சேரச்சேர அவற்றின் மீதான வெறியும் ஏறிக்கொண்டே செல்லும். ஆனால் சொத்து ஆசைக்காக தனது மகளின் வாழ்வையே பணயம் வைக்கும் அளவிற்கு கூட வெறி ஏறுவதை இக்கதையில் படிக்க மனம்நோகிறது. முக்கிய பிரச்சனையாக மனைவியை அவளது பெற்றோர்கள் முன்னிலையிலேயே துன்பப்படுத்துவதும், அவளைச் சோரம் போனவள் எனக் குற்றம் சாட்டுவதுமாக இருக்கிறது. இருந்தபோதும் இந்த சிறுகதையின் மிகச் சிறந்த அம்சம் அதன் முடிவுதான். எந்த ஒரு சிறந்த சிறுகதையின் முடிவும் அதன் திடீர்த் திருப்பத்தில்தான் இருக்க முடியும். ஆண்மைக் குறைபாட்டால் வரும் மனப்பாதிப்பை, அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமலே மிக சிறப்பாகச் சொல்லியுள்ளார்.

சிறுகதையின் முடிவு பற்றிப் பேசும் இந்த இடத்தில் ‘உடைப்பு’ சிறுகதையும் நினைவு வருகிறது. கீரை விற்கும் ஏழைத் தமிழ் தம்பதிகளுக்கும் சிங்கள நிலவுடைமைக் காரிக்கும் இடையேயான உரசலை மீறிய உறவைப் பேசிச் செல்கிறது. கதையின் கருவானது இனவேறுபாடுகளை மீறிய மனிதநேயமாக இருந்த போதும், பொருளாதார நன்மைகளுக்காக இனமத உணர்வுளைத் தூண்டிவிடும் சூழ்ச்சி பற்றியும் சொல்கிறது. தமிழர்களை பொருளாதார ரீதியாக சுரண்ட முடியும் சுரண்ட வேண்டும் என்ற உணர்வு உயர் அரசியலில் மட்டுமின்றி சாதாரண சிங்கள மக்களிலும் ஊறியுள்ளதை வெளிக் கொண்டு வரும் பதச்சோற்றுப் படைப்பாகவும் கொள்ளக் கூடிய கதை.

ஆனால் அந்தக் கதையின் முடிவு மிக அற்புதமாக அமைந்துள்ளது. ‘பாப்பாத்தி எண்டைக்கும் என்னுடையவள் தான்.’ என ஒரு வசனத்தில் நிறைவுறும் கதையின் முடிவானது திடீர்த் திருப்பத்துடன் வெளிப்படுவது மட்டுமின்றி அதன் கடைசி வரிகள் கவித்துவமாகவும் அமைந்துள்ளதைக் குறிப்பிடலாம். பல நல்ல சிறுகதையாசிரியர்கள் தமது உன்னத படைப்புகளை கவித்துவமான வரிகளால் நிறைவு செய்து அற்புதமாக மனத்தில் விதைத்துச் சென்றுள்ளார்கள்.

சிறுகதை ஆக்கத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் இருக்க வேண்டிய இடைவெளியாகும். தானாகத் தேர்ந்தெடுத்துப் படைப்பில் விட்டு செல்லும் மௌனம் ஆகும். தௌ்ளத் தெளிவாகச் சொல்வது சிறுகதையின் பண்பு அல்ல. கட்டுரைகள் தான் சந்தேகம் ஏற்படாதவாறு முழுமையாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டியவை. படைப்பாளி சொல்வதற்கும் வாசகன் உணர்வதற்கும் இடையில் உள்ள மௌனம்தான் வாசகனைச் சிந்திக்க வைக்கும். அதுதான் படைப்பாளி விட்டுச் சென்ற இடைவெளிகளை தனது கற்பனைகள் மூலம் நிரப்ப வைக்கும். வாசகனையும் படைப்பில் பங்காளி ஆக்கும்.

‘கர்வம்’ சிறுகதையில், தம்பித்துரையின் நாய் ஏழு பேரைக் கடித்து விட்டது. அதை விசாரிக்க ஏரியா பொறுப்பாளர் வருகிறார். விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவில் தம்பித்துரையின் நாயைக் கொண்டு வரும்படி பொறுப்பாளர் கூறுகிறார். அப்பொழுது கூட வந்த போராளி ‘எங்கடை காம்பிலை சமைக்கிற தம்பித்துரையின் நாய் இது’ எனப் பிரஸ்தாபிக்கிறான். இதன்போது எழுகின்ற இடைவெளி எம்மை கற்பனைக்குள் ஆழ்த்துகிறது எம்முள் புனைந்து செல்கிறோம். இதுபோல பல இடங்களில் தனது படைப்பு வெளியில் இடைவெளிகளை விட்டு வாசகனை நிரப்பத் தூண்டுகிறார்.

எந்த ஒரு சிறுகதையும் நினைந்தூற வைத்து மனத்தில் நிலைத்து நிற்க செய்வது அதன் முடிவு என்ற போதும் அதன் ஆரம்பம் சுவார்ஸமாக இல்லையேல் வாசகன் அதனுள் நுழையவே மறுத்து ஒதுக்கி விடுவான். ‘ஒரு ஊரில் தொழிலாளி ஒருவன் இருந்தான்’ என ஆரம்பித்தால் இன்று எவனாவது அப் படைப்பை வாசிக்க முன் வருவானா?

இன்று படைப்பாளிகள் தமது படைப்புகளை பல்வேறு முறைகளில் ஆரம்பிக்கிறார்கள். பலர் தமது படைப்பின் சுவார்ஸமான சம்பவத்துடன் ஆரம்பிப்பார்கள். வேறு சிலர் பீடிகையாக ஆரம்பிப்பார்கள். ‘அவன் பித்தனா? இல்லை. அவன் சித்தனா?’ என்ற பீடிகையுடன் இந் நூலின் முதற் கதையான ‘நிமிர்வு’ ஆரம்பிக்கிறது. இவ்வாறு ஆரம்பிப்பது வாசகனின் ஆவலைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆயினும் வாசகனை நேரடியாகவே அப்படைப்பினுள் ஆழ்த்துவதற்கு மிகச் சிறந்த வழி மையக் கருவிலிருந்தே படைப்பை ஆரம்பிப்பதேயாகும்.
‘துரோகி! ஏமாத்திப் போட்டியேடி? பொன்னம்மா பாட்டி கோபாவேசமாயக் கத்துகிறாள்’ என ‘மாயை’ என்ற படைப்பை ஆரம்பிக்கிறார். கதையின் மையக் கருவிலிருந்து, அதனை ஆவேசமாக வெளிப்படுத்தும் உரையாடலுடன் கதை தொடங்குகிறது. 20 பக்கங்கள் வரை நீளும் மிக நீண்ட வித்தியாசமான கதை. ஆயுதப் போராட்டதின் மறுபக்கம், குடும்ப கௌரவம், பெண்களின் மனம் எனப் பலவற்றைப் பேசுகிறது. ஆயினும் அக் கதையின் மையப் பாத்திரமான பெண், தான் சிறுவயது முதல் விரும்பி இருந்தவனை சொத்துக்கு ஆசைப்பட்டு கை விட்டு விட்டுவிட்டாளா என்பதே மையக் கரு. அதனையே முதல் வசனமாகக் கொண்டு நீர்வை கதையை ஆரம்பித்ததில் வாசகனை ஆர்வத்தோடு கதைக்குள்; நுழைய வைக்க முடிகிறது.

இதே சிறந்த படைப்பாக்க முறையை ‘புதிர்’ கதையிலும் காண முடிகிறது. ‘என்ரை அவரை இன்னும் காணேல்லையே’ என ஆரம்பிக்கும் போதே கணைவனைக் காணது ஏங்கும் பெண்ணின் உணர்வை முனைப்படுத்தி படைப்பின் மையத்திற்குள் எம்மை ஆழ்த்திவிடுகிறார்.

இவ்வாறு படைப்பை மையத்திலிருந்து கதையை ஆரம்பிக்கும் போது அதன் முன்கதையை பின்நோக்கு உத்தியில் சொல்லுதல் அவசியமாகிறது. நீர்வையின் பல படைப்புகளில் பின்நோக்கு உத்தி சிறப்பாக பயன்பட்டிருப்பதைக் காண முடிகிறது. பின்நோக்கு உத்தியையும் பல் வேறு முறைகளில் எடுத்தாள முடியும். ஆசிரியர் தானே சொல்லிச் செல்ல முடியும். கதையை கதாபாத்திரங்களின் வாயிலாக ஆங்காங்கே சிதறவிட்டு சொல்லுதல் மற்றொரு முறையாகும்.

நீர்வை பெரும்பாலும் கதா பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்திச் செல்வது வழக்கம். அவரது உரையாடல்கள் இயல்பாக அமைந்திருக்கும். அத்துடன் கதை ஓட்டத்தின் ஒழுங்கு சிதையாது கவனமாக அமைக்கப்பட்டு வாசகனை என்ன நடந்தது எனச் சிந்திக்கவும் வைக்கும். இருந்த போதும் உணர்ச்சிச் சிக்கல்களை வெளிப்படுத்துவதற்கு உரையாடல்களை விட கதாசிரியரின் சித்தரிப்பு முறைமை உதவ முடியும்.

பாத்திர வார்ப்பில் கூடிய கவனம் செலுத்துபவர் நீர்வை. ஓவ்வொரு படைப்பிற்கும் அவசியமான பாத்திரங்களே உலவுகின்றன. தேவையற்ற பாத்திரங்கள் கிடையாது. மையப் பாத்திரங்களைப் பொறுத்த வரையில் பாப்பாத்தியும், சுந்தரமும், வெண் மாதவனும் மறக்க முடியாதவர்கள்.

ஒரு கதையின் களமும் நிச்சயமாக படைப்பினைப் புரிந்து கொள்ள அவசியமே. ‘கொழும்பு மாநகரம் மாலை நேர மழையில் சிலிர்த்து நின்றது’ என ஆரம்பித்தால் களம், நேரம் எல்லாம் தெளிவாத் தெரியும். ஆனால் இது சுவார்ஸம் கெட்ட முறை. வாசகனை கதையில் உள்வாங்காது அலுப்படைய வைக்கும்.

மாறாக களத்தை கதையோடு கதையாக சொல்லி ஆர்வம் கூட்டும் விதத்தில் வாசகனுக்கு அறிமுகப்படுத் முடியும் என்பதற்கு ‘மீட்பு’ கதையை உதாரணமாகக் கூற முடியும். கதை ஆரம்பித்து ஒரு பக்கம் கடந்த பின்னர் ‘எமது ஒன்றித் தலைவன் அணிஷ் றாய் சௌத்ரி’ என்கிறார் நீர்வை. எமது புருவம் உயரக்கிறது. இன்னும் சற்று கடந்து செல்ல ‘ கங்கை நதிக்கிளை ஹில்ஸா மீன்வளையும் ஹீகிளி நதி’ எனும் போது ஆச்சிரியத்தில் மிதக்கும் எமக்கு ‘வங்க … சரம்பூர் கல்லூரி’ எனும் போது களம் பற்றிய தெளிவு கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே படைப்புக்குள் முழுமையாக இணைந்து விடுகிறோம்.

சிறுகதையைப் பொறுத்தவரையில் அதன் தலைப்பு என்பது ஒரு அடையாளம் மட்டுமே. சில தலைப்புகள் வாசகனைக் கவர்ந்து வாசிக்கத் தூண்டும். ஆயினும் நல்ல தலைப்பானது கதையை வாசித்து முடிந்த பின்னரும் படைப்போடு இணைத்து அசைபோட வைக்கும். நல்ல கதையோடு மட்டுமே சேர்ந்திருப்பதால் மட்டுமே தலைப்பு பேசப்படக் கூடியது என்பதுடன் அதனை நினைவில் வைத்திருக்கவும் உதவும். நீர்வையின் சிறுகதைத் தலைப்புகள் சுருக்கமானவை, ஒரு சொல்லிற்கு மேற்படாதவை. பொருள் புதைந்தவை. நிமிர்வு, மாயை, பலிஆடு, போன்ற பல தலைப்புகள் நினைவில் நிற்கின்றன. இவை எதுவுமே கதையின் மையக் கருத்தையோ, சாராம்சம் முழுவதையுமோ புட்டுக்காட்டுவது போல வெளிப்படையாக இருந்து வாசகனின் கற்பனைக்கு தடையாக இருக்கவில்லை.

சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழுக்கு அறிமுகமான ஆரம்ப கட்டத்துப் படைப்புகள் வாசகனுக்கு ஆர்வத்தையும் கிளர்ச்சியை ஊட்டி இறுதியில் மகிழ்வூட்டும் பணியை மட்டுமே செய்து வந்தன. இன்றும் கூட பல சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகள் அத்தகையனவாகவே இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு ஒரு சமூக நோக்கு இருப்பது அத்தியாவசியமானதே.

நீர்வை தனது படைப்புகளை சமூகத்தை முன்நிறுத்தியே எழுதுகிறார். சமூக ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் உன்னத நிலை ஏற்பட வேண்டும் என்பதே அவரது இலட்சியம். இதற்காக சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களையும், மூட நம்பிக்கைகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். சமூகப் படிநிலைகளாலும், பாரபட்சங்களாலும், சமூக அநீதிகளாலும் மனிதனை மனிதன் ஒடுக்க முனைவதை எதிர்க்கிறார்.

தனது படைப்புகள் ஊடாக புதிய பார்வையை, புதிய கோணத்தை மக்கள் முன் வைக்க முனைகிறார். அதன் மூலம் சமூக மாற்றம் ஏற்படும் என உறுதியாக நம்பியே படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபடுகிறார். யோசித்துப் பார்க்கையில் அவரது படைப்பாக்க முயற்சிகள் முழுவதுமே, சமூக மேம்பாட்டை நோக்கிய அவரது போராட்டத்தின் ஓர் அங்கமே எனலாம்.

அறத்தோடு கூடிய வாழ்க்கை முறை கொண்ட நீர்வையின் படைப்புகள் இவை. சாதி, இன, மத, தேசிய, பொருளாதார அடக்கு முறைகள் நீங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவும், சமூக மேம்பாடும், வாழ்வில் அறமும் நிலவ அவாவும் படைப்புகளைக் கொண்ட நூல் இது. இத்தகைய சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்க கிடைத்தமை மகிழ்வளிக்கிறது.

எம்.கே.முருகானந்தன்.
27.11.2008

Read Full Post »

Older Posts »