Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சிறிரஞ்சனி’ Category

சிறிரஞ்சனியின் ”’உதிர்தலில்லை இனி’

உங்கள் கருத்து என்ன? விடயம் இதுதான்.

ஐம்பது வயதான பெண் அவள். கல்வி அறிவுடன் நல்ல தொழிலும் படைப்பிலக்கிய ஆற்றலும் கைவரப்பெற்றவர். வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவளுடன் ஒத்த உணர்வுகள் கொண்ட வேறு ஒரு ஆடவனுடன் அவளுக்கு நட்பு உண்டாகிறது. அவளது பிள்ளைகளும் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். வெறும் நட்பு என்பதற்கு அப்பால் உடலும் சங்கமிக்கும் உறவாக அது பரிமணிக்கிறது.

சிறிரஞ்சனியின் உதிர்தலில்லை இனி தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் உள்ளடக்கம் இது. கலாசார பாரம்பரியங்களுடன் வாழ்ந்த தமிழரான நீங்கள் பரந்த இலக்கித் தேடலும் கொண்டவரும் என்றே கருதுகிறேன். இந்தப் பின்னணியில் இக்கதை உங்களிடையே எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதையே அறிய விரும்பினேன்.

சிறிரஞ்சனியின் பல சிறுகதைகளை உதிரிகளாகப் படித்திருக்கிறேன். ஜீவநதியில் அவர் எழுதிய உள்ளங்கால் புல் அழுகை சிறுகதையை படித்த போது நான் பெற்ற உணர்வுகளை ஒரு சிறு ரசனைக் கட்டுரையாக அதே சஞ்சிகையில் எழுதவும் செய்திருக்கிறேன். ஆயினும் ஒரு தொகுப்பாக படிக்கும் போது அதற்குள் மூழ்கித் திளைப்பது மட்டுமின்றி விசாலமான அனுபவப் பகிர்வு கிட்டுவதை உணரமுடிகிறது.

அவரது நடை வித்தியாசமானது. வேகமாகக் கதையைச் சொல்லிச் செல்வார். சொல்லிக்கொள்ளாமல் பட்டெனக் காட்சிகள் மாறும். நுணுக்கமாக ஒவ்வொரு சொற்களையும் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். மேலோட்டமாகப் படித்தால் சில கதைகளைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும். உதாரணத்திற்கு ‘பேசலன்றின் கிளியொன்று’ என்ற கதையில் ‘அம்மா’ வா அல்லது அம்மா வா என்பதில் உள்ள குறியீட்டைக் கவனத்தில் எடுக்காவிட்டால் வாசிப்பவனுக்கு குழப்பம் ஏற்படும்.

‘மூன்று நாள் லீவில் நின்றபின் திருமதியாக மீண்டும் வேலைக்குப் போன போது என்னில் இனம் தெரியாததொரு மாறலை என்னால் உணரக் கூடியதாக இருந்தது’ இது ‘யதார்த்தம் புரிந்தபோது.’. என்ற கதையின் ஆரம்ப வரிகள். இதில் திருமதியாக என்ற சொல்லைக் கவனத்தில் கொள்ளாவிட்டால் கதையின் ஆழத்திற்குள் நுளைந்து இரசித்திப் படிப்பதற்குள் கதையின் முக்கால் பங்கைக் கடந்துவிடுவோம்.

இந்தத் தொகுப்பில் உள்ள 16 கதைகளில் ஓரிரு கதைகளே தாயகத்தை களமாகக் கொண்டவை. ஏனையவை யாவும் புலம் பெயர் வாழ்வின் கோலங்களாகவே இருக்கின்றன. இந்த நூலின் முக்கியத்துக்கு இதுவும் மற்றொரு காரணமாகும். எமது மக்கள் புலம் பெயரத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிறது. தாய் தகப்பனாகச் சென்றவர்கள் பாட்டன் பாட்டீ ஆகிவிட்டார்கள், குழந்தைகளாகச் சென்றவர்கள் பெற்றோர்கள் ஆகிவிட்டார்கள்.

புதிய கலை கலாசார சூழலுக்குள் இளம் வயதினர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். பெரியவர்கள் இணைந்து கொள்ளச் சங்கடப்படுகிறார்கள். புதிய சட்டதிட்டங்களுக்கு ஆட்படுகிறார்கள். முக்கிமாக பிள்ளைகளை சுதந்திரமாக வளர்ப்பது, தண்டனையாக அடிப்பது தவறு போன்றவை பழையவர்களுக்கு புதினமான முறையாகிறது. அதைக் கடைப்பிடிக்க முடியாமையால் குற்றக் கூண்டில் ஏறவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இவை யாவும் சிறிரஞ்சனியின் அவதானிப்புள்ளாகி படைப்புகளாக அவதாரம் எடுக்கின்றன.

கணவனும் மனைவியும் வேலைக்கு செல்வதால் சந்திப்புகள் குறைகின்றன. கணவன் மனைவிக்கு இடையேயான நெருக்கம் குறையக் கூடிய சாத்தியங்கள் ஏற்படுகின்றன. உளநெருக்கீடுகள் ஏற்படுகின்றன. திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் தொடங்கக் கூடிய சூழல் நிலுவுகிறது. இதைத் தவிர மாறுபட்ட இரசனைகளும் ஈடுபாடுகளும் கூட காரணமாகிறது.

‘ஒரு கலைஞனுக்கு, படைப்பாளிக்கு இலக்கிய நாட்டமுள்ள ரசிகன் வாழ்க்கைத் துணையாக அமையாவிட்டால் இலக்கிய தாபத்திற்கு வழிதேடுவது கடினமே..’ என ஒரு பாத்திரம் பேசுவது குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுதற்கான மற்றொரு காரணத்தை கூறிநிற்கிறது. ஆம்! நெருக்கடி மிக்கசூழலின் வெளிப்படுகளாக இத் தொகுப்பின் கதைகள் அமைந்திருப்பதாக கருத முடிகிறது.

‘ஆயுதங்களிலிருந்தும் ஆயுததாரிகளிடமிருந்தும் தப்பி ஓடிய நாங்கள் இன்னொரு அகழியில் அமிழ்ந்திருகிறோம். … அதன் பின்விளைவாக உடல்நோய்களையும் மனநோய்களையும்தான் பெற்றிருக்கிறோம்..’ (பக்கம் 86) என ஒரு பாத்திரம் பேசுகிறது.

‘இப்போதில்லை’ என்ற கதையில் தலைமுறை இடைவெளியால் பிள்ளைகளின் உணர்வுகளை பெற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாததால் மகள் தனது கையை வெட்டிக் காயப்படுத்திக் கொள்கிறாள். அப்போது தாயின் மனம் அவ்வாறு எண்ணுவதைப் பதிவு செய்கிறார்.

இப் படைப்புகளின் மற்றொரு முக்கிய அம்சம் மனித மனங்களின் உள்ளுணர்வுகளைப் பேசுவதாக இருப்பதேயாகும். முக்கியமாக சிறுவர்களினதும் பெண்களினதும் உணர்வுகள் அழுத்தமாகச் சித்தரிக்கப்படுகின்றன. சிறுவர்கள் குழந்தைகள் பற்றிய தடம் மாறும் தாற்பரியங்கள், உள்ளங்கால் புல் அழுகை ஆகியவை குழந்தை உளவியலைப் பேசும் அருமையான படைப்புகளாகும். அன்பான தாயாகவும் மொழிபெயர்பாளராகவும் இருப்பதால் சிறுவர்களின் உள்ளுணர்வுகளைப் புரிந்து எழுதுகிறார். இதனால் உளவியல் ரீதியான படைப்புகளாக அமைகின்றன.

பிறழ் நடத்தையை அதுவும் பெண்களின் கதைகளைப் பேசும் முதல் எழுத்தாளர் இவர் அல்ல. தி.ஜா, ஜெயகாந்தன் முதல் இற்றைவரை பல எழுத்தாளர்கள் எழுதியலற்றைப் படித்திருக்கிறோம். சில பெண் எழுத்தாளர்களும் எழுதவே செய்திருக்கிறார்கள். ஆனால் அவை யாவும் காலாசார தற்காப்புக் கூண்டுக்குள் நிற்கும் ஆண் பார்வைகளாகவே இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றை உடைத்துக் கொண்டு படைப்பவராக இவர் இருக்கிறார்.

‘நான் வாழ்ந்து காட்ட வேண்டும். என்னை நான் மாற்றியாக வேண்டும் எனத் திடீரென என்ரை மனசுக்குள் ஒரு வேகம் வர…. குசினி அலுமாரியில் இருந்த கண்ணாடியில் முகத்தை சரி செய்து கொள்கிறேன்.’ (பக்43)

‘வலிய வலிய இனியும் போய்க் காயப்படப் போவதில்லை என்ற ஆக்கிரோஸமே இப்பொழுது அவள் மனதில் துளிவிட்டதுளது (பக்77)

அவை ஏமாற்றப்பட்டு துயரில் மூழ்கிக் கிடந்த பெண்; பாத்திரங்களின் உணர்வுகளைப் பேசும் சில உதாரணங்கள் மட்டுமே.

இனி கட்டுரையின் ஆரம்ப வரிகளுக்கு வருவோம். ‘உங்கள் கருத்து என்ன?’

‘ஒரு மாதமாக சாப்பாடு தண்ணியில்லாமல் அழுதழுது கிடந்தன். ஏனென்று கேட்க யாருமில்லை. பாவம் எண்டு பார்க்க வந்த ஓண்டு இரண்டு பேரும் நல்ல காலம் தப்பியிட்டாய். அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனதாலை நீ தப்பினாய். இல்லையெண்டால் ஊர்உலகத்திலை உன்ரை பேர் நாறியிருக்கும்’ என்றார்கள்.

இவளுக்கு வயது 52. பிள்ளைகள் கட்டி வெளிநாட்டிலை. மனுசன் ஆமி சுட்டு அந்தக் காலத்திலையே செத்துப் போச்சு. தனிய வாழ்ந்த இவளுக்கும் ஊரிலை உள்ள பெண்டாட்டியை இழந்த மனுசனுக்கு தொடர்பு ஏற்பட்டது. கூடி வாழ்ந்தார்கள். கலியாணம் கட்டி இருப்பம் என்று இவள் கேட்டாள் மறு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டான்.

இது என்னிடம் சென்றவாரம் மனவிரக்தியோடு வந்த ஒரு பெண்ணின் கதை. உள்ளுர்க் கதை. நாகரீகம் முற்றிய மேலைநாட்டில் நடந்தது அல்ல.

அன்புக்கான யாசனை எங்கும் ஒன்றுதான். அன்பு ஆதரவின் வறுமைப் பிடியில் கிடந்தவர்களுக்குதான் அன்பு செலுத்தும் ஒருவரைக் கண்டதும் ஒட்டுதல் ஏற்படுகிறது. அது காதலாகவும் மலரலாம். உடலுறவுக்கும் போகலாம். ஆனால் அடிப்படையில்; அது அன்பு ஆதரவுக்கான ஏக்கம்தான்.

அன்பிற்கான தேடல் கலாசார பண்பாட்டு விழுமியங்களைக் கணக்கில் கொள்வதில்லை. அதனால்தான் நான் ஆரம்பத்தில் குறிப்பட்ட கதையில் வரும் பெண் ‘உங்களின் காதல் என்னை பதின்மவயதுப் பெண்ணாகவே மாற்றியிருந்தது. வாழ்வின் பிற்பகுதியில் ஒருவர் இவ்வளவு ஆழமான காதல் உறவில் விழலாம் என்பதை நான் அறிந்திருக்கவில்லை’ (பக் 93) எனக் கூறுகிறாள்.

உண்மையில் சிறிரஞ்சனி பல சிறப்புகளை இத்தொகுப்பில் படித்து இரசிக்க முடிகிறதாயினும் மிக முக்கியமாகப் பேசப்பட வேண்டியது இதிலுள்ள பெண் மொழிதான். 1984 ல் எழுதி தொகுப்பின் முதற்கதையாக இருக்கும் ‘மனக்கோலம்’ முதல் தொகுப்பின் இறுதிக்கதையாக 2017ல் எழுதிய ‘சில்வண்டு’ வரை இந்தப் பண்பைக் காண முடிகிறது. அம்பையின் படைப்புகளில் கண்டு இரசித்த அந்தப் பண்புகள் இவரது படைப்புகளிலும் வெளிப்படுகிறது.

திருமண உறவில் உரசல்களும் விரிசல்களும் பெண் பார்வையாக மட்டுமின்றி ஆண் பார்வையாகவும் சொல்லப்படுவது கதாசிரியரின் விரிந்த மனப்பான்மைக்கும் ஆழ்நத அவதானிப்பிற்கும் சான்றாக அமைகிறது. ‘கனவுகள் கற்பனைகள’; என்ற சிறுகதையில் மருத்துவரான மனைவி தனது தொழிலில் காட்டும் அக்கறையை கணவன் மனைவி உறவில் காட்டுவதில்லை. வீடு வந்தாலும் தனது நோயாளிகளைப் பற்றியே பேச்சு.

‘இது என்ன சாதரண ஆட்கள் மாதிரி சின்னச் சின்ன ஆசையெல்லாம்….’ என இருவாரகாலமாக கூடிப் போவதற்குத் திட்டமிட்டிருந்த திருவிழாப் பயணத்தை இரத்து செய்துவிட்டு மருத்து செமினாருக்கு போகும் போது அவள் அவனுக்கு சொன்னது.

‘ஆகாயத்தில் பஞ்சுப் பொதி போல் மிதந்து செல்லும் மேகத்தைரசிப்பது, இரவில் நிலவொளியில் அமர்ந்து நட்சந்திரங்களை எண்ணுவது, புற்தரையில் படுத்து உருள்வது …. யாவுமே சின்னச் சின்ன ஆசைகள்தான் ஆனால் அவற்றை மனைவியுடன் பகிர்ந்து கொள் நினைப்பதுதான் பெரிய ஆசையா, எனக்கு ஏன் அவை கிடைக்க மாட்டேன் என்கிறது’ ஆதங்கப்படுகிறான்..

ஆம். உள்ளத்தின் அரவணைப்புக்காக ஏங்குகிறது அவன் மனம்.

படித்து முடித்ததும் மூடி வைக்க முடியவில்லை தொகுப்பை. அவரது பாத்திரங்களின் உணர்வுகளோடு உரையாடிக் கொண்டிருக்கிறது எமது மனசு.

‘உதிர்தில்லை இனி’ தொகுப்பானது ஒன்றோடு மற்றொன்று போல பேசப்படாது இரசிக்கப்படாது உதிர்ந்து போகப் போகும் சிறுகதைத் தொகுப்பு இல்லை. நிச்சயமாக நிறைய வாசிக்கப்படும் பேசப்படும் விமர்சிக்கப்படும் நூலாக அமையும் என நம்புகிறேன்.

உதிர்தலில்லை அதற்கு.

எம்.கே.முருகானந்தன்.

0.00.0

Read Full Post »