Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சிறுகதை’ Category

>அண்மையில் ஜீவநதி ஆண்டு மலர் படிக்கக் கிடைத்தது. அருமையான பல கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என நிரவிக் கிடந்தது.

அதில் ஸ்ரீரஞ்சனி என்ற ஒரு எழுத்தாளரின் படைப்பான சிறுகதையைப் பற்றி சில கருத்துக்களைக் கூறலாம் என நினைக்கிறேன். மிக வித்தியாசமான சூழலில் அமைந்த கதைதான் ‘உள்ளங்கால் புல் அழுகை’.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் எமக்கு அந்நியமான ஒரு பிரச்சனை பற்றிப் பேசுகிறது. களம் புதிது, காரியம்; புதிது. ஆனால் அதிலுள்ள அடிப்படைப் பிரச்சனை அனைவருக்கும் பொதுவானது.

ஓரு பெண் குழந்தையின் பார்வையாக சிறுகதை சொல்லப்படுகிறது. சொல்லப்படும் விதத்தைப் பொறுத்த வரையில், நிகழ் காலத்தில் ஆரம்பித்து, கடந்த காலத்தில் நனைவது எமக்கு ஒன்றும் புதினமானது அல்ல. ஆனால் எதிர்காலத்தில் கால் பதித்து நிறைவுறுவது சற்று தாக்கத்திற்குரிய மாற்றமாகத் தென்படுகிறது.

ஒரு குழந்தையின் பண்புகளை, நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் சமூகத்தின் பங்கு எவ்வளவு ஆழமானது என்பதை முகத்தில் ஓங்கி அறைவது போலச் சொல்லி முடிகிறது. ஆனால் ஆசிரியர் கூற்றாக அல்ல. எமது சிந்தனையை விரிவிப்பதன் மூலம் நாமாக புரிந்து கொள்ள வைப்பதே அதன் சிறப்பு.

குற்றம் செய்த தகப்பனைத் தண்டித்து, நோயுள்ள தாயை பிள்ளைகளிடமிருந்து பிரித்து மருத்துவம் செய்யப்படும்போது, இவை எவற்றிலும் சம்பந்தப்படாத குழந்தை மனிதாபமின்றித் தண்டிப்புக்கு ஆளாவதையே இச் சிறுகதை பேசுகிறது.

புதிர் போல ஆர்ம்பிக்கிறது கதை. “மை நேம் இஸ் ரோசி.வட்ஸ் யுவர் நேம்” குழந்தை பேசாமல் நிற்கிறது.

“சோ யு ஆர் நொட் ரெடி ரு ரோக் ரு மீ”

நன்றாக ஆங்கிலம் பேசக் கூடிய தமிழ்க் குழந்தை இது. இவளைப் பராமரிப்பதற்கான இடத்திலுள்ள பெண் அவ்வாறு பேசுகிறாள். அவளைப் பாரத்ததும் தனது ஸ்கூலில் ரீச்சர் வராத நாட்களில் வரும் சப்பிளை ரீச்சர்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஏனெனில் இவளது வழமையான ரீச்சரைப்போல அல்லது அம்மா போல பிள்ளையில் அன்பும் கரிசனை உள்ளவர்களாக இல்லை.

சம்பளம் வாங்கிப் பணி புரியும் பெண்தான் ரோசி. அவள் அம்மா போல இருக்க முடியாது. தாயைப் பிரிந்து தனியே புது இடத்திற்கு வந்திருக்கும் குழந்தையின் சோகத்தை, ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாத வெறும் ஊழியர் அவர். சாப்பிட மாட்டேன் என மறுக்கும் குழந்தைக்கு ஆறுதல் வார்த்தை கூறத் தெரியாதவள்.
“அபர்ணா வில் டேக் கெயர் ஒவ் யூ” எனச் சொல்லித் குழந்தையின் பாலான தன் கடமையை முடித்துக் கொண்டு பைல் லுக்குள் மூழ்கமட்டும் தெரிந்த கடமையுணர்ச்சியுள்ள பெண் அவள்.

ஏன் அவள் பெற்றோரைப் பிரிந்தாள் என்பது நினைவோட்டமாக வருகிறது. வழமையாக தாய் தகப்பனுக்கு இடையேயான முறுகல் அன்று சற்று தீவிரமாகிவிட்டது. தகப்பன் தாயின் தலை முடியைப் பிடித்து அடிக்க அவள் குளற, பக்கத்து வீட்டுக்காரன் பொலீசுக்கு போன் பண்ண பொலீஸ் அவனைப் பிடித்துக் கொண்டு போய்விட்டது. தாயையும் மனநிலை பிறந்தவள் என அழைத்துப் போய்விடுகிறது.

சிறுகுழந்தையான இவளது தங்கையுடன் இவளையும் வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாது என்பதால்தான் இவள் காப்பகத்திற்கு வர வேண்டியதாயிற்று. தாய் இல்லை. தந்தையில்லை. கூட விளையாடும் தங்கையும் இல்லை. கடல் மீனைக் கரையில் தூக்கிப் போட்டது போலாயிற்று அக் குழந்தையின் நிலை.

எவ்வளவு சமூக அக்கறை அற்ற மனிதர்களாக மாறிவிட்டது உலகம். தனது அமைதியான வாழ்வில் அடுத்த வீட்டுச் சத்தம் கூட குறுக்கிடக் கூடாது என நினைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. பாரம்பரிய சமூகமாக இருந்தால் அடுத்த வீட்டுப் பிரச்சனையில் தலையிட்டுத் தீர்த்து வைத்திருக்கும் அல்லது பிரச்சனை வரும்போது ஒத்தாசையாக நின்று உதவியிருக்கும். ஆனால் இவர்களுக்கு பொலீசைக் கூப்பிட்டு பிரச்சனையைப் பெருப்பிக்கவே தெரிகிறது.

குடும்பம் சிதைகிறது. குழந்தைகள் நிர்க்கதியாகின்றனர். ஆனால் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் சட்டப்படியே நடக்கின்றனர்.

ஆனால் குழந்தையின் மனநிலையைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. குழந்தையின் ஏக்கம் தனது அம்மாவுடன், அவளது அன்பில் தோய்ந்து, அரவணைப்பில் கட்டுண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தனது முன்னைய வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்பதே. அதற்கு என்ன செய்ய வேணடும் எனச் சிந்திக்கிறது.

அந்தப் பிள்ளை எடுக்கும் முடிவுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. வன்முறையின் மூலமே தனது தேவையைப் பூர்த்தி செய்ய முடியும், அதன் மூலமே பொற்காலமான பழைய வாழ்வு கிடைக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

“நான் பிரளி பண்ண வேண்டும், சாமான்களைப் போட்டு உடைக்க வேண்டும். அப்பொழுதுதான் ரோசியால் என்னைச் சமாளிக்க முடியாது போய்விடும். என்னை அம்மாவிடம் கொண்டு போய் விட்டுவிடுவாள்” என அந்தப் பிஞ்சு மனம் சிந்திக்கிறது.

வன்முறை தவிர்த்த சரியான வழியில் குழந்தைகளைச் சிந்திக்க வைக்க எமது சமூகம் சரியான வழி காட்டுமா?

அல்லது பழைய குருடி கதவைத் திறவடி கதைதானா?

நல்ல சிறுகதையைத் தந்த எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனிக்கும் ஜீவநதி சஞ்சிகைக்கும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

உள்ளங்கால் புல் அழுகை’ சிறுகதையைப் படிக்க
தேவையான பகுதிமேல் கிளக் பண்ணிப் பெரிதாக்கிப் படிக்கவும்.

  இரண்டாம் பகுதி

 மூன்றாம் பகுதி

நாலாம் பகுதி

ஐந்தாம் பகுதி

நன்றி ஜீவநதி

Read Full Post »

>
“இவன்ரை பேர் நோட்டிஸ் போட்டிலை இல்லை” ரின்பால் மாமா பிரகடனப்படுத்தினான்.

நந்தனுக்குக் களிசான் நழுவி விழ அம்மணமாக நின்றது போலாயிற்று.

கண்கள் தாழ்ந்தன. முகம் சோர்ந்தது. பேச்சு எழவில்லை.

டக்கெனத் திரும்பிப் பார்த்தான். ஏதோ பேசிக் கொண்டிருந்த அம்மாவும் சின்னக்காவும் இவனையே பார்ப்பது தெரிந்ததும் ஏமாற்றத்தின் சாயல் முகத்தில் படிய ஏக்கம் வலிவு கொண்டது.

சரியான வெக்கம்!

ஆனால் வெறும் வெக்கம்தான்.

களிசான் கீழே விழுந்தால் மானம் போகும் என்றெல்லாம் சிந்திக்க முடியாத பருவம் அது.

மேலும் படிக்க கிளிக் பண்ணவும்

Read Full Post »

>
“இவன்ரை பேர் நோட்டிஸ் போட்டிலை இல்லை” ரின்பால் மாமா பிரகடனப்படுத்தினான்.

நந்தனுக்குக் களிசான் நழுவி விழ அம்மணமாக நின்றது போலாயிற்று.

கண்கள் தாழ்ந்தன. முகம் சோர்ந்தது. பேச்சு எழவில்லை.

டக்கெனத் திரும்பிப் பார்த்தான். ஏதோ பேசிக் கொண்டிருந்த அம்மாவும் சின்னக்காவும் இவனையே பார்ப்பது தெரிந்ததும் ஏமாற்றத்தின் சாயல் முகத்தில் படிய ஏக்கம் வலிவு கொண்டது.

சரியான வெக்கம்!

ஆனால் வெறும் வெக்கம்தான்.

களிசான் கீழே விழுந்தால் மானம் போகும் என்றெல்லாம் சிந்திக்க முடியாத பருவம் அது.

கண்ணாடி அப்பா வீட்டிற்கு வந்திருந்த ‘ரின்பால்’ பக்கத்திலுள்ள சின்னக்கா வீட்டு ஆட்டுக் கொட்டிலடியில் வைத்துதான் இந்தச் செய்தியை அவிட்டு விட்டான். கண்ணாடி அப்பா நந்தனின் பீட்டனும் ரின்பால் மாமாவின் பேரனுமாவார். சின்னக்கா கண்ணாடி அப்பாவின் இளைய மகள்.

“ஹாட்லிக்கு போக முடியாத நீ எங்கை படிச்சு டொக்டரா வாரது. மருந்துப் போத்திலுகளை எடுத்து எறிஞ்சு போட்டு போய் ஒழுங்காப் படி” என்ற புத்திமதியையும் சேர்த்து வழங்கினான். நந்தனின் குட்டிக் கண்களுக்குள் முத்துப்போல கண்ணீர் அரும்பியது.

“நீ படிச்சு டொக்டரா வந்து நான் சாகாமல் காப்பாற்ற வேண்டும்” அலமாரிக்குள் இருந்த போத்தலில் இருந்து பல்லி முட்டாஸ் எடுத்துத் தரும்போது கண்ணாடி அப்பா சொன்னது அந்த நேரம் பார்த்து ஞாபகத்திற்கு வந்தது.

டொக்டர் ஆகத்தான் வேணும். ஆனால் ஹாட்லிக்கு போகாவிட்டால் எப்படி படிச்சு டொக்டரா வாறது. நந்தனின் மனம் ஏக்கத்தில் சூம்பியது.

சின்னக்கா, பெரியம்மா, கண்ணாடி அப்பா வீடுகளில் உள்ள வெற்று மின்சாரப் போத்தில்களையும் உள்ளிக் குளிசைப் போத்தில்களையும் சேர்த்து வைத்துக் கொள்வான். அவற்றுள் பச்சை, சிவப்புச் சாயங்களைக் கரைத்து, கலர் நீரினால் நிரப்பி மருந்தாகப் பாவனை பண்ணி அம்மா, அம்மம்மாவுக்கு கொடுப்பது தான் இவனுக்குப் பிடித்தமான விளையாட்டு.

“நாங்கள் கிழமாப் போனாப் பிறகு நீதானே எங்களுக்கு மருந்து தந்து உசிரோடை வச்சிருக்கோணும்” என அவர்களும் பேச்சுக்குச் சொல்லி வைப்பார்கள்.

இவன் பெருமையோடு தலை நிமிர்வான்.

அவற்றை எறியச் சொல்கிறானே. ஏமாற்றமும் கவலையும் ஆட்கொண்டன.
குருமனாயிருக்கும் போதே ஹாட்லி பற்றிய ஆசைகளும் டொக்டராக வேணும் என்ற ஆவலும் அவனில் ஆழமாக விதைக்கப்பட்டு விட்டது.

அவனது அப்பா ஹாட்லி, சித்தப்பா ஹாட்லி. டொக்டர் சண்முகத்தார் ஹாட்லி, ஊரிலுள்ள படிப்பாளிகள் எல்லாம் ஹாட்லிதானாம். இவனும் அங்கே படிக்க வேண்டும் என்பதே அவனது அப்பாவின் கனவு. அம்மாவும் அப்படித்தான் நினைத்திருப்பா.

ஆனால் ஹாட்லிக்குப் போவது லேசான காரியம் இல்லை. சோதனை வைப்பினம். பாஸ் பண்ணினால்தான் இடம் கிடைக்கும்.

கனவுகள் எல்லோருக்கும் தொற்றிவிடவே, நாவலர் பெருமான் ஸ்தாபித்த ஊர்ப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தவன் கிருஸ்தவப் பள்ளியான ஹாட்லிப் புகுமுகப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியதாயிற்று.

“சீ! வேதப்பள்ளிக் கூடத்திற்கா?” சைவப் பழமான பண்டிதர் சின்னையா முகம் சுளித்தார்.

ரின்பால் மாமா ஹாட்லியில்தான் படித்துக் கொண்டிருந்தான். அவனும் படிப்பில் கெட்டிக்காரன் எண்டு பெயர்.

மூக்கால் எந்த நேரமும் வடிந்து கொண்டிருக்கும்.

மஞ்சளாக, ஒட்டுவது போல தடிப்பாக. எனவே ரின்பால் மாமாவானான்.

ரின்பால்தான் மூன்று வீட்டிற்கும் நடுவில் வைத்து பரீட்சை முடிவைச் சொல்லி இவனது மானத்தை வாங்கினான்.


அதுவரை இவன்தான் அந்த மூன்று வீட்டிற்கும் ஹீரோ. அதில் உண்மை இருந்ததோ தெரியாது. இவனும் இவனது அம்மாவும் அப்படி.த்தான் கற்பனை பண்ணியிருந்தார்கள். அதற்கு காரணமும் இருக்கவே செய்தது. வகுப்பில் எப்பொழுதும் நந்தன்தான் முதல். சில வேளை மட்டும் இரண்டாவது. பரிசளிப்பு விழாவின்போது பாட்டு, பேச்சு, நாடகம் எதுவானாலும் மேடையில் ஏறுவது நிச்சயம். கணபதிப்பிள்ளை வாத்தியார் ராசம்மாக்கா, தங்கம்மாக்கா, எல்லோரதும் அபிமான மாணவன்.

தலைமை வாத்தியார் சிவசுப்பிரமணியம். பக்கத்து ஊரிலிருந்து காலையில் பாடசாலை நேரத்திற்கு வெகு நேரம் முன்னதாகவே பொடிநடையில் கம்பீரமாக நடந்து வருவார்.

நாசனல் சேட் அணிந்து நீண்ட சால்வையை மாலையாகச் சுற்றிப் போட்டுக் கொள்வது அவரது வழக்கம். நல்ல உயரம். முகத்தில் அமைதி, பெரிய மனுசக் களை. இவர்களது வீட்டடியால்தான் போவார்.

சிலநேரம் அவருக்கு பின்னாலேயே வால்பிடித்துக் கொண்டு இவனும் பள்ளிக்குப் போவான். வேகமாக நடப்பார். அவற்றை வேகத்திற்கு இவனால் நடக்க முடியாது. ஓடுவதுபோலவே நடக்க வேண்டும். வழியில் அதிகம் ஒண்டும் கதைக்க மாட்டார்.

பள்ளிகூடம் விட்டு விலகியதற்கு அடுத்த வருச பரிசளிப்பு விழாவுக்கு, இவன் நீலக் களிசானும் வெள்ளைச் சேட்டும் போட்டுக் கொண்டு எழுப்பமாகப் போனான். வாசலடியில் இவனைக் கண்ட அவர் முகத்தில் மலர்ச்சி. தூக்கி கொண்டு போய் மேடையில் இருத்தி கொஞ்ச நேரம் செல்லம் கொஞ்சவும் செய்தார்.

கூட்டம் தொடங்க முன்னர்தான்.

“நீ படிச்சு என்னவா வருவாய்” எனக் கேட்டார்.

ஒரு நிமிசம் யோசித்தான்.

இவன்ரை மூக்குக்காலை ஒரு நாள் சளியும் இரத்தமும் வந்தபோது தற்செயலாக வீட்டை வந்த டொக்டர் சண்முகத்தார் ஒரு சின்னக் கரண்டி கொண்டு வரச் சொன்னார்.
இவனை மடியில் கிடத்தி வைச்சு ஒரு சின்னத் துளாவு துளாவ ஒரு நெல்லிக் கொட்டை பக் கென வெளியில் துள்ளி விழுந்தது ஞாபகத்துக்கு வந்தது.

“நல்ல காலம் எடுத்துப் போட்டம். இல்லையென்றால் நீயும் ரின்பால் போலை மூக்காலை சளி வழியத் திரிஞ்சிருப்பாய். இனி ஒரு நாளும் மூக்குக்குள்ளை ஒண்டும் வைச்சுப் போடாதை” என்றது நினைவுக்கு வந்தது.

“டொக்டர் சண்முகத்தாரைப் போலை நானும் டொக்டராத்தான் வருவன்”

“நீ கெட்டிக்காரன் கவனமாகப் படி. கட்டாயம் டொக்டரா வருவாய்” என்றார் தலைமை வாத்தியார்.

கட்டையனான நந்தன் ஒரு முழம் உயர்ந்து
அப்பவே டொக்டரானதாக பெருமை கொண்டான்.

அவருக்கும் தன்னிலை விருப்பம் என்பது தெரியவர தலைக்கனம் ஏறியது.

கட்டையனான நந்தன் ஒரு முழம் உயர்ந்ததாக உணர்ந்தான். அப்பதான் அவருக்கும் தன்னிலை விருப்பம் என்பது தெரியவர தலைக்கனம் ஏறியது. அந்த வருஷமும் இவனுக்கு நிறையப் பரிசுகள் கிடைத்தன.

கணபதிப்பிள்ளை வாத்தியார் காலையில் தேவாரம் சொல்லி முடித்து,
பாடம் தொடங்க முன்னர்,
ஒவ்வொரு மாணவனாக பின் பக்கமாத்
தடவிப் பார்த்துக் கொண்டு வருவார். கோவணம் கட்டாதவர்களுக்கு நொச்சிக் கம்பால் விழாசு விழும்.

ஒழுக்கம், சுத்தம், சுகாதாரம், நற்பண்பு ஆகியவற்றைப் பேணுவதற்கான வித்து அவரிடம் இருந்தே மாணவர்களுக்குப் பிறந்தது. ஆயினும் பாவம் அவரது வித்து அவருக்கு வேலை செய்யவில்லை. தனக்கு குழந்தைகள் இல்லாதபோதும் பள்ளிப் பிள்ளைகளிடம் கண்டிப்போடு சேர்ந்த அன்பைக் காட்டுவதில் அவருக்கு நிகரில்லை.

சிதம்பரப்பிள்ளை வாத்தியாருக்கு இவன்மேல் கடும் கோபம். ‘முருகுப்பிள்ளை பேய்’ என மட்டம் தட்டிப் பேசுவார்.

அவரை ‘ஆலங்கொட்டை வாத்தியார்’ என்றே இவர்கள் அழைப்பார்கள். முதுக்குப் பின்னால்தான். அதுவும் ரகசியமாக. காதில் விழுந்தால் முறிச்சுப் போட்டிடுவார்.

நெற்றியில் மோதகம் போல ஒரு கட்டி இருந்தது. மோதகம் போல இருக்க ஆலங்கொட்டை எனப் பெயர் வந்தது ஏன் என்பதை அப்பொழுது இவர்கள் ஆராச்சி பண்ணிப் பார்த்ததில்லை. நந்தன் மீதான அவரது கோபத்திற்குக் காரணம் அவரிடம் பாடம் படிக்கப் போகாததுதான்.

பாடம் படிப்பது என்பதற்கு இன்றைய பெயர் ரியூசன்.

ஒரு நாள் இவன் வீட்டு முன்முற்றதில் நின்று கெந்தி விளையாடிக் கொண்டிருந்தான்.

“ஆலங்கொட்டை, ஆலங்கொட்டை”
என ஆரோ ஒழுங்கையின்ரை வடக்கு மூலையில் நின்று பகிடியாகக் கத்தும் சத்தம் கேட்டது.

“யாராக இருக்கும்?”

ஆவலில் பாய்ந்து ஓடிப் போய் படலையைத் திறந்து, ஒழுங்கைக்குள் தலையை நீட்டினான். ராசனின் நீண்ட மெல்லிய கால் அலம்பல் வேலிக்கு அப்பால் சாடைமாடையாகத் தெரிந்தது.

“ராசண்ணை ..” இவன் கூப்பிட வாய் திறக்கவும், இடி போன்ற ஓசை ஒழுங்கையின் பின்புறமிருந்து எழுந்தது.

“டேய் .. ஆரடா அது?” திரும்பிப் பார்த்தான்.

பார்த்த வேகத்தில் தலை தானே பின்னுக்கு இழுத்தது. கால்கள் தளர்ந்து சோர்ந்தன.

கறுத்த ஆஜானுவான உடம்பு, வேட்டியைச் சண்டிக்கட்டாக கட்டிய உருவம். ஓடுவது போன்ற வேகத்தில் பாய்ந்து வந்து கொண்டிருந்தார்.

ஆலங்கொட்டை!


அகப்பட்டால் அவ்வளவுதான்.

களிசானோடை மூத்திரம் போய்விட்டது.

வேகமாகப் படலையை அடித்துச் சாத்திக் கொண்டு உள்ளே வந்து நெல்லிமரப் பக்கமாக மறைந்து கொண்டான்.

கை, கால் நடுங்கியது.

ஏதோ சத்தமாக ஏசிக் கொண்டு வேகமாக ஒழுங்கையில் வந்து கொண்டிருந்தார். சொல்வது எதுவும் புரியாது அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு நிண்டான்.

“பண்டி போலை ஈண்டு போட்டு தெரு மேய விட்டிருக்குதுகள்” வாத்தியாரின் குரல் படலையடியில் ஆக்கிரோசமாக ஒலித்தது.

சத்தம் கேட்ட அம்மா மண்டபத்துக்கு உள்ளிருந்து, முற்றத்துக்கு வந்து பார்த்தா. அவவின் முகம் துவண்டது.

“ஏவ் ….” என ஏப்பச் சத்தம் எட்டுத் திக்கெங்கும் வியாபித்துப் பரவியது. கள்ளு முட்டி போன்ற வாத்தியாரின் வயிற்றிலிருந்துதான் பிறந்தது.
குடிப்பாரோ தெரியாது.

ஏவ் சத்தத்தைத் தொடர்ந்து, இன்னும் ஏதேதோ திட்டல்கள் தொடர்ந்தன.

ஊரெழுப்பும் சத்தம் கேட்ட அம்மாவின் துவண்ட முகத்தில் மாற்றம். பயமா, சிரிப்பா? புரியவில்லை.

ஏன் திட்டுகிறார் என்பது அம்மாவுக்கும் புரியவில்லை. அங்கும் இங்கும் பார்த்தா.

நெல்லிக்குப் பின்னால் மண்டிக் கொண்டிருந்து தலை நீட்டியவனைக் கண்டு கொண்டா.

“என்ன?” என்பது போல கண்சாடையால் கேட்டா.

வலது கையைப் பொத்தி, சுட்டுவிரலை மட்டும் நீட்டி, மூடிய வாயின் மீது குறுக்காக வைத்து எச்சரித்தான்.

ராசம்மாக்கா அப்படித்தான செய்யிறவ. ஒரு கையால் பொத்திக் கொண்டு மற்றக் கையால் மேசை மேல் சத்தமாக பூவரசம் தடியால் அடிப்பா. எவ்வளவு சத்தம் போட்டுக் கொண்டிருந்தாலும் உடனடியாக மாணவர்கள் கப்சிப் என அடங்கிவிடுவார்கள்.

வாத்தியாரின தூற்றல் சத்தம் தூரமாக ஒடுங்கவும், நந்தன் பாம்புபோல மெல்ல நழுவி வந்தான். அம்மாவுக்கு விசயத்தைச் சொன்னான்.

“நான் கண்ணுக்கு கண்ணா இரண்டுதான் பெத்து வைச்சிருக்கிறன். இந்த மனிசன் இப்படி தூத்தரிச்சுப் போட்டு போகுது” அம்மாவின் மனம் நொந்தது.

“அதென்னமா பண்டி போலை ஈணுறது” இவனுடைய ஊரில் பண்டியே இல்லை.

இவனும் சீவியத்தில கண்டதேயில்லை. சிவபெருமான் பண்டிக்குட்டிக்கு பால் குடுத்த கதையைத்தான் சைவபாடத்திலை படித்திருக்கிறான்.

“பண்டி ஒருமுறையிலை பதினாறு குட்டி போடுமாம்.” அம்மா விளக்கினா.

அப்போ இவனும் ராணியும்தான்.
பிறகுதான் மீனா, செல்வன், சுந்து என இன்னும் மூண்டு.
என்றாலும் பன்றித் தாயாகும் வாய்ப்பு அம்மாவிற்கு ஒரு நாளும் கிட்டவே இல்லை.

முருகுப்பிள்ளை வாத்தியார் வீட்டை வந்து பாடம் சொல்லித் தருவதில்லை. தவம் அக்கா வீட்டை போய்த்தான் படிக்க வேண்டும். தவமக்கா ஆசையம்மாவோடை மகள்.

இவன், ராசன். துரையன், பாமா எல்லோரும் அங்கைதான் பாடம் படிக்க வாறவை.

முருகுப்பிள்ளை வாத்தியார் வயதான மனிதர். தலை நரைத்து முதுகும் வளைந்தவர். மென்மையாகச் சொல்லித் தருவார். அடிக்கமாட்டார். கோபம் வராது.

நந்தன் நல்ல பிள்ளை.

ஆனால் துரையன் வலு பிரளி. பக்கத்தில் இருக்கறவைக்கு அடிப்பான். படிக்கவும் மாட்டான்.

ஒரு நாள் நந்தனின் கணிதக் கொப்பியைக் கிழித்துப் போட்டான்.

“வாத்தியார் வாத்தியார் துரையன் என்ரை கொப்பியைக் கிழிச்சுப் போட்டான்.”

“உனக்குத்தான் படிப்பு வராது. படிக்கிறவங்களின்ரை கொப்பியையும் கிழிக்கிறியோ”

சட்டெனக் கோபம் கொண்ட வாத்தியார் துரையனைக் கிட்ட வரச் சொல்லி ஓங்கிக் குட்டினார்.

குட்டும்போது வாத்தியாருக்கு புறு புறு வென வாய்வு பறிந்தது.

எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் அடக்கிக் கொண்டார்கள்.

துரையன் மட்டும் சிரித்தான்.
அடி வாங்கியதற்காக அவன் அழவே இல்லை.
வாத்தியார் முறைச்சுப் பார்த்தார்.

“வாத்தியார் தந்த குட்டு வாங்கிக் கொள். முருகுப்பிள்ளை பேய்”

பின்னால் வந்த துரையன் குட்டிவிட்டு ஓடிவிட்டான். நந்தன் அழுது கொண்டே வீட்டை வந்தான்.

முருகுப்பிள்ளை வாத்தியாரட்டை பிறகு நந்தன் படிக்கப் போகவில்லை.
ஆனால் ‘முருகுப்பிள்ளை பேய்’ என்ற பட்டம் மட்டும் இவனோடை அட்டைபோல ஒட்டிக் கொண்டு விட்டது.

பிறகு ராசதுரை மாஸ்டர் வீட்டை வந்து சொல்லிக் கொடுத்தார்.

முதல் நாள் அவர் வந்தபோது இவனுக்கு அவரை அறவே பிடிக்கவில்லை.

அட்டைக் கரி போல இருந்தார். அடர்த்தியான முடி. தலைக்கும் உடம்புக்கும் வித்தியாசம் தெரியாத நிறம். பொடியன் போலை ‘பம்ஸ்’ வைச்சு முடியை உயர்த்தி இழுத்திருப்பார். மெல்லிய உடம்பு. பளீரென வெள்ளைச் சேட்டும் வேட்டியும் கட்டியிருப்பார்.

இவர்களது பழைய வாத்திமார் போல இருக்கவில்லை.

பழகப் பழக நந்தனுக்கு அவரை நல்லாப் பிடிச்சுப் போச்சு. சிரிச்சு கதைப்பார். சிரிக்கும்போது அவரது பல்லும் சேட்டைப் போலவே வெள்ளை வெளீரெனப் பளிச்சிடும்.
முகத்தையே ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்பான்.
பகிடியளும் விடுவார்.
கோபப்படாமல் சொல்லித் தருவார்.
படம் கீறவும் விடுவார்.
இவனுக்கு சைக்கிள் ஓடப் பழக்கிவிட்டதும் அவர்தான்.

ராசதுரை மாஸ்டர் கொஞ்ச நாள்தான் பாடம் சொல்லிக் கொடுத்தார். ஏனோ திடீரென வராமல் விட்டிற்றார்.

அவருக்கு சுகமில்லை என்று சொன்னார்கள்.

நந்தனுக்கு கவலையாகிவிட்டது. போய்ப் பார்க்க வேணும் போல இருந்தது. அம்மாவும் ஓமெண்டிட்டா.

அவற்றை வீட்டை போன போது முன் மாலுக்கை எழும்பேலாமல் படுகையாகக் கிடந்தார். வாங்கில் கூட இல்லை. நிலத்தில்தான் பாய் போட்டுக் கிடந்தார்.


நோயின் வேதனை படிந்து முகம் வற்றிக் கிடந்தது.
இவனைக் கண்டதும் உள்ளார்ந்த சந்தோஷம்.
சிரிக்கத் தெண்டித்தார்.
ஆனால் சோர்வுதான் வழிந்தது.
பக்கத்தில் வந்து இருக்கச் சொல்லி கை காட்டினார்.

அருகே சென்றதும் மெதுவாக இவனது கைகளை பிடித்துத் தடவினார். பிழிந்தெடுத்த தோடம்பழமாக தோல் சுருங்கி தசைகள் கரைந்திருந்தன.

ஆயினும் கண்களில் ஒரு மின்னல். குழிவிழுந்து காய்ந்து கறுத்துக் கிடந்த கண்களில் பரவியது பாசமா, ஏக்கமா?

“‘நந்தன் நல்லாப் படிச்சு டொக்டரா வரவேணும்…” என்றார்.
ரகசியம் பேசுவதுபோல மெதுமையாகத்தான் அவரால் பேசமுடிந்தது.
மிகவும் தளரந்திருந்தது குரல்.
தடவும்போது அவரது கையில் வழமையான உறுதி இருக்கவில்லை.
நடுங்கியது போல நந்தனுக்கு தெரிந்தது.

“வருத்தமாக இருக்கிற ஆக்களை நீ படிச்சு வந்து காப்பாற்ற வேண்டும். டொக்டரென்டால் கடவுளைப் போலை… காப்பாற்ற வேண்டும்…நீ படிச்சு வந்து…நல்லாப் படிக்க வேணும்.” குரல் தழுதழுத்தது.

அதற்கு மேல் பேச முடியவில்லை. கண்ணயர்ந்தார்.

இவனுள் மீண்டும் டொக்டர் தாகம் பரவியது.

ஆனால் எப்படி டொக்டராகிறது. ஹாட்லிக்கே எடுபடவில்லை. மனம் தளர்ந்தது.

அம்மாவுக்கு ரின்பால் சொன்னதில் நம்பிக்கை வரயில்லை.

“இவன் சரியாப் பாத்திருக்க மாட்டான். அவசரக் குடுக்கை. நீ ஆனந்தி மாமாவோடை போய்ப் பார்த்துக் கொண்டு வா” என்றாள்.

அவ சொன்னது உண்மைதான். ஹாட்லி நோட்டிஸ் போட்டில் இவனது பெயரும் இருந்தது.

“போடா டின்பால்.. ‘மருந்துப் போத்திலுகளை எடுத்து எறிஞ்சு போட்டு போய் ஒழுங்காப் படி’ எண்டோ சொன்னனீர். பார் படிச்சு டொக்டரா வாறனோ இல்லையோ எண்டு” மனதிற்குள் கெறுவிக் கொண்டான்.

ரிஸல்ட் பாத்துக் கொண்டு திரும்பி வரக்கை மாஸ்டர் வீட்டு வாசலிலை ஆக்கள் கனபேர் கூட்டமா நிண்டினம். உள்ளையிருந்து அழுகுரல் கேட்டது.

“இறங்கிப் பாப்பமே! இவன் கேட்டான்.”

“செத்துப் போட்டார் போலை. கான்சராம் எண்டு சொன்னவை. இப்ப வேண்டாம்”

ஆனந்தி மாமா சைக்கிளை நிறுத்தாமல் மேலும் வேகமாக உளக்கினார்

நந்தனுக்கு வலு கவலையாப் போயிற்று. அழுதேவிட்டான்.

அவனால் அவரை மறக்கவே முடியவில்லை. அவர் கடைசியாகப் படுத்துக் கிடந்த கோலமும், அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளும் கனவுகளில் அடிக்கடி வந்து அருட்டிக் கொண்டே இருந்தது.

‘ஆக்களைக் காப்பாற்ற வேண்டும்.’ .. ‘காப்பாற்ற வேண்டும்… நீ படிச்சு வந்து’

இந்த வார்த்தைகள் இவனோடு வேப்பம் பிசினாக ஒட்டிக்கொண்டுவிட்டன.

மாஸ்டர் இவனை முந்திக் கொண்டார்

காப்பாற்றுவது டாக்டரா, இல்லை கடவுளா அல்லது வெறுமனே இயற்கையின் நியதியா?

புரியும் வயதில்லை நந்தனுக்கு.

0.0.0.0.0.0.0

மருத்துவ மாணவர்கள் புடை சூழ,
பெரிய டொக்டர் வோர்ட் ரவுண்ட் வருகிறார்.
உதவி டொக்டர்கள் நோயாளிகளின் விபரங்களைச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.


ஓவ்வொரு கட்டிலாக பார்த்துப் பரிசோதித்து பின், மேற் கொண்டு செய்ய வேண்டிய சிகிச்சைகள் பற்றி அவர் கூறுவதை மற்றவர்கள் பெட் ரிக்கற்றில் குறித்துக் கொண்டு வருகிறார்கள்.

அடுத்த கட்டிலிலுக்கு நகர்கிறார்கள்.

அதைத்து பழுத்த பூசணி போல வெம்பிக் கிடக்கிறது அதில் உள்ளவனது முகம், கால்கள் வீங்கி, வெடித்து நீர் கசிகிறது. வயிறு பானைபோல மினுமினுத்து உப்பிக் கிடக்கிறது. புஸ் புஸ் என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அனுங்கிக் கொண்டிருக்கிறான்.

மிதமிஞ்சிய குடியால் ஈரல் பூராவும் சிதைந்து, இருதயமும் இயங்கத் தயங்கிக் கொண்டிருப்பதாக டொக்டர் ஆங்கிலத்தில் விளக்குகிறார்.

நோயாளியின் வயிற்றைப் பரிசோதித்துப் பார்க்கவென குனிகிறார் பெரிய டொக்டர்.

நோயின் உபாதையால் அசந்து கிடந்த நோயாளியின் கண்கள் மெல்லத் திறக்கின்றன. குனிந்து தன்னைப் பரிசோதிக்க வந்தவரின் முகம் மங்கலாக, கலங்கலான நீரில் அசைந்தாடுவது போல தெரிகிறது.

பட்டென மூளையுள் மின்னணுக்கள் உற்பத்தியாகின்றன.

சோர்ந்து கிடந்த மூளை நரப்பணுக்கள் உயிர்ப்படைகின்றன.

ஏதேதோ நினைவுகள் எழுகின்றன.

சற்று உற்றுப் பார்க்கிறான். மரணத்தின் வாசலை எட்டிப் பார்த்தவன் முகத்தில் சிறு மலர்ச்சி.

” நீ .. நீ.. நீங்கள் துரையன்… இல்லை.. இல்லை.. தம்பித்துரை தானே” கட்டிலில் கிடந்தவன் இயலாமையோடு முனங்குகிறான்.

ஒரு கணம் தயங்கி, ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்த பெரிய டொக்டர், தன்னைச் சற்று சுதாகரித்துக் கொள்கிறார்.

‘ஓம் … நீ…ஆர்.?’ எனக் கேட்கிறார் டொக்டர் தம்பித்துரை.

‘நான்… நான்தான் நந்தன்,,, முருகுப்பிள்ளைப் பேய்’

0.0.0.0.0

Read Full Post »