Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘டெங்கு காய்ச்சல்’ Category

மழையின் பின் மீண்டும் டெங்கு

தேவதைகளின் வழமையான இயல்புக்கு மாறாக சீறிச் சினந்து அடம் பிடித்துக் கொண்டிருந்தது இந்தத் தேவதை. படுக்கச் சொன்னபோது மாட்டன் என்றாள். காய்ச்சல் பார்க்க வாயைத் திற என்றபோது உதடுகளை இறுக மூடிக் கொண்டாள். தொட்டபோதுதான் காரணம் புரிந்தது. அனலாகக் காய்ந்து கொண்டிருந்தது.

 

Scientists_Make4088

காய்ச்சல் இரண்டு நாட்களாக. சாப்பிடுகிறாள் இல்லை. சினந்து கொண்டிருக்கிறாள். ஓங்காளம் இருக்கிறது. இரவு முழவதும் நல்ல தூக்கம் இல்லை. டெங்குக் காய்சலாக இருக்குமோ என்ற பயத்தில் வந்திருந்தார்கள்.

இரத்தப் பரிசோதனை செய்தோம். வைரஸ் காய்ச்சல்தான் என்பது உறுதியாயிற்று. மொத்த வெண்கல எண்ணிக்கை(Full blood count- FBC) குறைவாக இருந்தது. பிளேட்லெட் (Platelet வெண்குருதி சிறுதுணிக்கை) எண்ணிக்கை சரியாக இருந்தாலும் சாதாரண அளவின் கீழ் மட்டத்தில் இருந்தது. இது எல்லா வைரஸ் காய்ச்சலுகளுக்கும் பொதுவானதுதான்.

ஆயினும் அவளது கடுமையான காய்ச்சலும், உடல் மற்றும் கண் வலிகளும் இது டெங்குவாக இருக்கும் என்ற சந்தேகத்தையே எழுப்பியது. எனவே உறுதி செய்வதற்காக இரத்தப் பரிசோதனை செய்வதற்கு மறுநாளும் வரச்சொன்னோம்.

இரண்டாம் நாள் பார்த்தபோது காய்ச்சல் சற்று குறைந்திருந்தது. உடல் வலிகளும் குறைந்து குழந்தை அமைதியாக இருந்தாள். ஆயினும் இரத்தப் பரிசோதனையில் பிளேட்லெட் (Platelet)  எண்ணிக்கை மேலும் குறைந்திருந்தது. ஆயினும் ஆபத்தான எண்ணிக்கை எல்லையை எட்டவில்லை.

இருந்தபோதும் ஆபத்து எல்லையை அவள்  இன்னமும் தாண்டவில்லை.

investigation-in-dengue-3-638

மூன்றாம் நாளும் அந்தச் சின்ன அழகிக்கு இரத்தம் குத்தி எடுத்துப் பரிசோதனை செய்து வேதனைப்படுத்த மனம் விரும்பாத போதும் வேறு தேர்வு இருக்கவில்லை. மூன்றாம் நாள் அவள் வரும்போது அவளுக்கு காய்ச்சல் ஆரம்பித்து 5 நாட்கள் ஆகிவிட்டது. மான்குட்டி போல துள்ளிக் குதித்து வந்தாள். ‘காலையில் வழமைபோலச் சாப்பிட்டாள். விளையாடுகிறாள்’ என்று தகப்பன் கூறினார்.

சாதாரண டெங்கு காய்ச்சல்

இருந்தபோதும் அவள் உள்ளங் கைகளைக் கசக்கிக் கொண்டிருந்தது என் கண்களில் பட்டது. ஒரு சிலரில் டெங்கு குணமாகி வரும்போது இத்தகைய உள்ளங்கை நமைச்சல் எடுப்பது பற்றி அண்மைய மருத்துவ சஞ்சிகைகளில் தகவல் வந்திருந்தமை நினைவில் வந்து மனதை அல்லற்படுத்தியது. மீண்டும் இரத்தப் பரிசோதனையை தவிர்க்க முடியாது செய்தோம். இம்முறை மூன்று பரிசோதனைகள். முன்பு இருதடவைகள் செய்த அதே முழு இரத்த எண்ணிக்கையுடன், ஈரல் செயற்பாட்டிற்கான பரிசோதனைகள் (SGPT,SGOT), மற்றும் டெங்கு அன்ரிபொடி டெஸ்ட்(Dengue Antibody) ஆகியவையும் செய்தோம்.

முதல் இரண்டு பரிசோதனைகளிலும் எந்த வித்தியாசமும் இல்லை. அவள் ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டின. ஆயினும் டெங்கு அன்ரிபொடி டெஸ்ட் பொஸிடிவ் ஆக இருந்தது. அதாவது அவளுக்கு வந்தது டெங்குக் காய்ச்சல்தான் என்பது உறுதியாகிறது. ஆயினும் இது சாதாரண டெங்கு காய்ச்சல்

முடிவைக் கூறியதும் தந்தை பரபரத்தார். விளக்கம் அளித்தேன்.

சாதாரண டெங்குக் காய்ச்சலானது சாதாரண வைரஸ் காய்ச்சல் போல எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறிவிடும். 50 சதவிகிதமானவர்களுக்கு இப்படித்தான் நடக்கும். எந்தவித சிகிச்சைகளும் தேவைப்படாது. மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். இது சாதாரண சிகிச்சைகளுடன் குணமாகும். இந்தப் பிள்ளைக்கும் அவ்வாறே குணமாகிவிட்டது.

டெங்கு குருதி இரத்தப் பெருக்கு காய்ச்சல்

மற்றொருவர் இளம்தாரி. நான்கு நாட்களாக காய்ச்சல். வேறு மருத்துவம் செய்தும் குணமாகாததால் என்னிடம் வந்திருந்தார். தலைச் சுற்று, நிலை குலைவு ஏதும் இல்லை என்றார். ‘எனக்கு ஒன்றும் இல்லை இவர்கள் நட்டுப் பிடித்து கொண்டு வந்தார்கள்’ என்றார். பரிசோதித்ததில் சூடு 100 அளவில் காய்ந்தது. ஈரல் வீங்கியிருக்கவில்லை. இரத்த அழுத்தம் நாடித் துடிப்பு எல்லாம் நன்றாக இருந்தது. பொதுவாக உடல்நிலை நன்றாக இருந்தது. ஆயினும் சரும நிறம் சந்தேகம் அளிப்பதாக இருந்தது. உடனடியாக இரத்தப் பரிசோதனைகள் செய்தபோதும் திடமான முடிவுகளைக் கொடுக்கவில்லை.

மறுநாள் மீண்டும் பரிசோதித்தபோது குருதியில் சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. மூக்கால் சற்று இரத்தம் வந்ததாகவும் சொன்னார். ‘டெங்கு குருதி இரத்தப் பெருக்கு காய்ச்சல்’ என்பது நிரூபணமானது. உடனடியாக அனுமதித்தோம்.

அடுத்த வாரம் வேறு ஒருவரை இதே நபர் கூட்டி வந்திருந்தார். ‘சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு போனதால் எனக்குப் பிரச்சனை ஏற்படவில்லை’ என்றார் தப்பிவிட்ட மகிழ்ச்சியில்.

கண்களில் இரத்தக் கசிவு, மூக்கால் இரத்தம் வடிதல், வாந்தியுடன் இரத்தம் போன்ற பயங்கரமான அறிகுறிகள் இருந்தாலும் இவர்களில் 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள். தப்பிவிடுவார்கள். ஒரு சிலர் மட்டும் அடுத்த நிலைக்குப் போகக் கூடும்.

டெங்கு அதிர்ச்சி நிலை

மிக ஆபத்தானது ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ ஆகும். இவர்கள் மிகக் குறைந்த 2 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இது வரும். இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துமனைகளிலேயே முடியும்.

டெங்கு அதிர்ச்சி நிலைகான நவீன சிகிச்சையில் உடலின் திரவ நிலையை சரியான அளவில் பேணுவதே முக்கியமானது. வெளியேறும் சிறுநீரின் அளவைக் கண்காணித்து அதற்கேற்பவே நீராகாரம் முதல் நாளம் ஊடான திரவம் கொடுப்பது வரை கொடுப்பார்கள்.

இந்த அதிர்ச்சி நிலையானது காய்ச்சல் தணியும் நிலையிலேயே வெளிவரும். எனவே காய்ச்சல் தணிந்த போதும் நோயாளியின் பொதுவான உடல் நிலை திருப்தியாக இல்லாவிடின் மருத்துவரைக் காண வேண்டும்.

கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை, கடுமையான வயிற்று வலி, வாந்தி, கடுமையான சோர்வு, உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல், சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் காய்ச்சல் தணிந்த பின்னரும் இருந்தால் அது ஆபத்தாகலாம்.

மேலே கூறிய உதாரணங்களைக் கொண்டு டெங்கு காய்ச்சலின் மூன்று பிரிவுகளையும் புரிந்து கொள்ள முடியும்.

பீதிக் காய்ச்சல்

‘கைகால் உளையுது மேல் நோகுது. துலையிடிக்குது தும்முது’ என மிகுந்த ஆர்ப்பாட்டத்தோடு வந்தார் மூன்றாமவர் மனைவியுடன். ‘ நான் வேலை செய்யிற இடத்திலை இரண்டு பேருக்கு டெங்கு வந்தது. எனக்கும் டெங்குவோ’ எனப் பயந்தார். கடுமையான காய்ச்சல் இல்லை. உடல் மற்றும் இரத்தப் பரிசோதனைகளும் சரியாக இருந்தது. ‘இரண்டு நாள் பொறுத்து மீண்டும் இரத்தப் பரிசோதனை செய்வோம்’ என்றேன்.

‘இல்லை பயமாக்கிடக்கு. நான் வாட்டிலை நிக்கப் போறன்’ என்று கூறிச் சென்றார். மறுநாள் காலை மீண்டும் வந்தார். ஆஸ்பத்திரியிலை நிப்பாட்ட மாட்டன் என்றிட்டாங்கள். வாட்டிலை சரியான சனமாhம்.’

அடுத்து இரண்டு நாட்கள் பரிசோதித்துப் பார்த்தும் அவருக்கு எதுவும் இல்லை. இவருக்கு டெங்கு வரவேயில்லை. வெறும் பீதிக் காய்ச்சல்.

நீங்கள் செய்யக் கூடியவை எவை?

சாதாரண காய்ச்சல்கள் தடிமன், மூக்கடைப்பு, தும்மல் தலையிடி, தொண்டை வலி, சலக்கடுப்பு, வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகளுடன் வரும். வந்த உடனேயே மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை. ஓரிரு நாட்கள் பரசிற்றமோலை அளவுடன் கொடுத்துப் பாரக்கலாம்.

ஆனால் டெங்கு காய்ச்;சலானது ஆரம்பத்திலேயே மிகக் கடுமையாக இருக்கும். 104 – 105 எனக் கடுமையாக இருக்கும். பொறுக்க முடியாத உடல் மற்றும் மூட்டு வலிகள் இருக்கும். கண்ணுக்குப் பின் குத்துவது போன்ற தலையிடியும் இருக்கும். வயிற்று வலி வாந்தி பின்னர் வரக் கூடும். மேற் கூறிய கடுமையான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைக் காணுங்கள்.

காய்ச்சல் மற்றும் உடல் வலியைத் தணிக்க பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது. அளவிற்கு மீறிய பரசிற்றமோல் ஈரலைப் பாதிக்கும்.

பரசிற்றமோல் மருந்தைச் சரியான அளவில் கொடுத்தும் காய்ச்சல் தணியவில்லை எனில் னுநபெரந யவெபைநn  பரிசோதனை செய்வது உதவக் கூடும். ஆனால் இப் பரிசோதனையானது காய்ச்சல் ஆரம்பித்த முதல் 24 மணிநேரத்திற்குள் மட்டுமே சரியான முடிவைக் கொடுக்கும் என்பதால் பெரும்பாலும் உதவுவதில்லை.

புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.காய்ச்சல் கடுமையாக இருந்தால் இளம் சூட்டு நீரால் ஸ்பொன்ஞ் பண்ணுவது குழந்தைக்கு இதமாக இருக்கும்.

ஓய்வு மிக முக்கியமானது. பரீட்சை வருகிறது, டான்ஸ் பயிற்சி, வெளியூர்ப் பயணம் என்றெல்லாம் சொல்லி கடுமையான மருந்துகளைக் கொடுத்து வேலைக்கோ பாடசாலைக்கோ அனுப்ப முயற்சிக்க வேண்டாம்.

போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.

சிறுநீர் வழமைபோலப் போகிறதா என்பதை அவதானிக்க வேண்டும். மிகக் குறைவாக வெளியேறுவதுடன் கடுமையான தாகம் இருந்தால் அதை மருத்துவருக்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள்.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் FBC இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். முதல் நாளிலிலேயே செய்ய வேண்டியது ஏன், எப்போது என்பது பற்றி ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படுமாயின் தினமும் ஒரு தடவையோ இரு தடவைகளோ செய்ய வேண்டி நேரலாம்.

டெங்கு ஏற்படுத்தும் வைரஸ் கிருமியானது நோயளியின் உடலில் சுமார் 5 நாட்களுக்கு. ஆனால் கடுமையான தாக்கம் 4வது அல்லது 5வது நாளிலேயே உச்ச நிலையில் இருப்பதால் அந்நேரத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். அந்நேரத்தில் நோயாளியின் இரத்தக் குழாய்கள் பாதிப்புற்று இரத்தம் அல்லது இரத்தப் பாயம் (plasma) குழாய்களை விட்டு வெளியேறுவதாலேயே ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ ஏற்படுகிறது.

சிவத்த நிறமுடைய பானங்களையோ உணவுகளையோ கொடுப்பதைத் தவிருங்கள்.

இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் அதாவது இந்த ஜீன் வரை சுமார் 14152 பேர் டெங்கு எனச் சந்தேகிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 59 சதவிகிதமானவர்கள் சனநெருக்கடி மிக்க மேல் மாகாணத்திலேயே இனங் காண்பட்டுள்ளனர்.

எமது வீட்டை, எமது சுற்றுச் சூழலை, எமது பாடசாலைகளை, எமது தொழிலகங்களை நுளம்பு இல்லாத இடங்களாக மாற்றுவதால்தான் டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுக்க முடியும். இதில் ஒவ்வொரு குடிமகனதும் பங்களிப்பு அவசியம் என்பதை மறக்க வேண்டாம். அதில் நீங்களும் நானும் ஒவ்வொருவரும் அடங்குகிறோம்.

அவ்வாறு நுளம்பு பெருகுவதைத் தடுத்தால் டெங்கு தனது கோர முகத்தைக் காட்ட முடியாது முடங்கி அடங்கிவிடும்.

இக் கட்டுரையை ஒக்டோபரில் பிரசுரிக்கிறேன்.

அண்மையில் நவராத்திரியை ஒட்டிப் பெய்த மழையின் பின்னர் மீண்டும் டெங்கு காய்சலை கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் காண முடிகிறது

அவதானமாக இருங்கள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

 

0.0.0.0.0

 

Read Full Post »

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் சென்ற 7ம் திகதி, ஒட்டோபர் 2013 முதல் எதிர்வரும் 13ம் திகதி வரை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் சொல்கின்றன.

டெங்கு மீண்டும் தலைவிரித்து ஆடும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை. நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்ற வருடங்களை விட அது பரவும் வேகம் சற்றுக் குறைவாக இருக்கக் கூடும் என நம்புகிறேன். சில காலங்களுக்கு முன் எழுதிய தற்போது பரவும் தொற்று நோய்கள் என்ற கட்டுரையில் டெங்கு பற்றி சுருக்கமாக சொல்லியிருந்தேன். இது சற்று விரிவான கட்டுரையாகும்.

dengue-page-upload (1)

டெங்குப் பரவல்

இவ்வருட தை மாசி மாதங்களில் பல உயிர்களைப் பலி கொண்ட டெங்கு அதன் பின் சற்றுத் தணிந்திருந்தது. ஆயினும் மறையவில்லை. கடும் மழை கொட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் டெங்கு சற்றுக் குறையும். நுளம்புக் கூம்பிகள் ஓடும் நீரில் அள்ளுப்பட்டுச் சென்றுவிடும். மழை சற்றுக் குறைந்து வெயிலும் சேரும்போது தேங்கி நிற்றும் நீர்நிலைகளில் நுளம்பு பெருகும். அப்போதுதான் டெங்கு தன் கோர முகத்தைக் காட்டும்.

இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் டெங்கு எனச் சந்தேகிக்கப்பட்ட 16526 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பகுதி சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.

usual_breeding_grounds

தரவுகளை ஆயும்போது கொழும்பு மாவட்டத்தில்தான் மிக அதிகமான அளவில் (மொத்தத்தில் சுமார் 25 சதவிகிதம்) நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அடுத்து குருநாகல் மாவட்டம், மூன்றாவது இடத்தை கம்பஹா மாவட்டம் பிடித்தது.

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 400 ற்று மேற்பட்டிருக்க, கிளிநொச்சியில் மிகக் குறைந்த எண்ணிக்கையான 32 மட்டும் இனங் காணப்பட்டனர். வவுனியா 47, மன்னார் 56, முல்லைத்தீவு 83, திருகோணமலை 149. கிளிநொச்சி டெங்கு நோயாளர் மாவட்டத்தில் குறைவாக இருப்பதற்கு சன அடர்த்தி குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஏனெனில் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) நுளம்பினால் நீண்ட தூரம் பறக்க முடியாது. மொத்த டெங்கு நோயாளர்களில் 43.4 சதவிகிதம் மேல் மாகாணத்தில் இருப்பதற்கு சன நெருக்கடியே காரணமாகிறது.

757px-Aedes_aegypti_biting_human

டெங்கு அறிகுறிகள்

பிள்ளைகளுக்கு காய்ச்சல் என்று கண்டவுடன் பெற்றோர்கள் பயந்தடித்துக் கொண்டு மருத்துவர்களை நாடி ஓடுகிறார்கள். அவர்களது பயம் அர்த்தம் அற்றது அல்ல. பத்திரிகைகளில் வரும் செய்திகளும் பாடசாலை மாணவர்களில் ஏற்படும் மரணங்களும் பீதியை ஏற்படுத்தவே செய்யும். ஆயினும் பல வருடங்களாக டெங்குவுடன் வாழ்ந்த நாம் இது டெங்குவா இல்லையா என அனுமானிக்கப் பழக வேண்டும்.

dengue-fever

பெரும்பாலான ஏனைய காய்ச்சல்கள் தடிமன், மூக்கடைப்பு, தும்மல் தலையிடி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வரும். காய்சலும் 100 – 101 றைப் பெரும்பாலும் தாண்டாது. வேறு சில வாந்தி வயிற்றோட்டத்துடன் வரும். இன்னும் சில சிறுநீர் கழிக்கும்போது எரிவைக் கொடுக்கும். இத்தகைய அறிகுறிகள் கடுமையாக இல்லாவிட்டால் உடனடியாக மருத்துவரிடம் ஓட வேண்டியதில்லை

ஆனாலும் டெங்கு காய்ச்;சலில் முற்கூறிய அறிகுறிகள் பெரும்பாலும் இருக்காது. ஆனால் ஆரம்பத்திலேயே காய்ச்சல் மிகக் கடுமை 104 – 105 எனக் கடுமையாக இருக்கும். பொறுக்க முடியாத உடல் மற்றும் மூட்டு வலிகள் இருக்கும். கண்ணுக்குப் பின் குத்துவது போன்ற தலையிடியும் இருக்கும்.

babyBlanket

உங்கள் குழந்தை இவ்வாறு கடுமையான காய்ச்சலுடன் துடியாட்டம் இன்றிப் சோர்ந்து படுத்துவிட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். மருத்துவரைக் காண்பது அவசியம்.

குழந்தைகள் உள்ளவர்கள் வீட்டில் ஒரு டிஜிட்டல் தேர்மாமீற்றர் வைத்திருப்பது நல்லது. மேர்கியூரி தேர்மோமீற்றர் போல இது விரைவில் உடையாது. மேர்கியூரியின் நச்சுத் தன்மையும் கிடையாது. எனவே விலை சற்று அதிகமானாலும் குழந்தைகள் உள்ளவர்கள் இதை வைத்திருப்பது உசிதமானது.

மருத்துவர் வேறு அறிகுறிகளும் இருக்கிறதா என பார்ப்பார். கண்கள் சிவந்திருக்கிறதா, தோல் செம்மை பூத்திருக்கிறதா, நாடித் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் எவ்வாறு இருக்கிறது போன்றவற்றை அவதானிப்பார்.

டெங்குவாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால் Full blood count, Dengue antigen ஆகிய பரிசோதனைகளையும் மருத்துவர் மேற் கொள்ளக் கூடும். இருந்தபோதும் Dengue antigen பரிசோதனை விலை கூடியதும் எல்லா இடங்களிலும் செய்வது இயலாததும் ஆகும்.

எவ்வாறாயினும் 3ம் நாள் Full blood count (FBC) பரிசோதனையை செய்வது அவசியம். இவை குருதியில் வெண் கலங்களின் எண்ணிக்கை அளவு, வெண்குருதி சிறுதுணிக்கை அளவு மற்றும் Pஊஏ போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஊடாக நோயின் நிலையைக் கணிக்க அவசியமாகும்.

டெங்கு அன்ரிஜென் பொசிட்டிவாக இருந்தால் அது டெங்குக் காய்ச்சல் என்பது உறுதிதான். ஆனாலும் அது ஆபத்தாகுமா. நிச்சயம் சொல்ல முடியாது.

டெங்குவின் வகைகள்

ஏனெனில் டெங்கு காய்சலில் பல வகைகள் உள்ள.
சாதாரண டெங்குக் காய்ச்சலானது சாதாரண வைரஸ் காய்ச்சல் போல எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறிவிடும். 50 சதவிகிதமானவர்களுக்கு இப்படித்தான் நடக்கும். எந்தவித சிகிச்சைகளும் தேவைப்படாது.

மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். இது சாதாரண சிகிச்சைகளுடன் குணமாகும். பரசிட்டமோல், கொத்தமல்லி, பப்பாசிச் சாறு போன்ற எதைக் கொடு;த்தாலும் மாறிவிடும். கொடுக்காவி;ட்டாலும் மாறும். ஏனெனில் அது மாறுவது மருந்தால் அல்ல. அந்த நோயின் இயல்பாக தன்மையால்தான்.

மிகவும் ஆபத்தானது போன்று பயமுறுத்தும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சலானது அவர்களில் சுமார் 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே வரும். கண்களில் இரத்தக் கசிவு, மூக்கால் இரத்தம் வடிதல், வாந்தியுடன் இரத்தம் போன்ற பயங்கரமான அறிகுறிகள் இருந்தாலும் இவர்களில் 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள். தப்பிவிடுவார்கள்

மிக ஆபத்தானது டெங்கு அதிர்ச்சி நிலையாகும். இவர்கள் மிகக் குறைந்த 2 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வரும். இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.

நவீன சிகிச்சையில் உடலின் திரவ நிலையை சரியான அளவில் பேணுவதே முக்கியமானது. வெளியேறும் சிறுநீரின் அளவைக் கண்காணித்து அதற்கேற்பவே நீராகாரம் முதல் நாளம் ஊடான திரவம் கொடுப்பது வரை கொடுப்பார்கள்.

இந்த அதிர்ச்சி நிலையானது காய்ச்சல் தணியும் நிலையிலேயே வெளிவரும். எனவே காய்ச்சல் தணிந்த போதும் நோயாளியின் பொதுவான உடல் நிலை திருப்தியாக இல்லாவிடின் மருத்துவரைக் காண வேண்டும்.

கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை, கடுமையான வயிற்று வலி, வாந்தி, கடுமையான சோர்வு, உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல், சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் காய்ச்சல் தணிந்த பின்னரும் இருந்தால் அது ஆபத்தாகலாம்.

நீங்கள் செய்யக் கூடியவை எவை?

சாதாரண காய்ச்சல் வந்த உடனேயே மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை. மேலே கூறிய அறிகுறிகளை வைத்து இது டெங்குவாக இருக்குமோ எனச் சந்தேகித்தால் மட்டும் மருத்துவரைக் காணுங்கள்.

காய்ச்சல் மற்றும் உடல் வலியைத் தணிக்க பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது. அளவிற்கு மீறிய பரசிற்றமோல் ஈரலைப் பாதிக்கும்.

Piaron_susp_eng(1)

பரசிற்றமோல் மருந்தைச் சரியான அளவில் கொடுத்தும் காய்ச்சல் தணியவில்லை எனில் Dengue antigen   பரிசோதனை செய்வது உதவக் கூடும். இப் பரிசோதனையானது காய்ச்சல் ஆரம்பித்த முதல் 24 மணிநேரத்திற்குள் மட்டுமே சரியான முடிவைக் கொடுக்கும்.

புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.காய்ச்சல் கடுமையாக இருந்தால் இளம் சூட்டு நீரால் ஸ்பொன்ஞ் பண்ணுவது குழந்தைக்கு இதமாக இருக்கும்.

ஓய்வு மிக முக்கியமானது. பரீட்சை வருகிறது, டான்ஸ் பயிற்சி, வெளியூர்ப் பயணம் என்றெல்லாம் சொல்லி கடுமையான மருந்துகளைக் கொடுத்து வேலைக்கோ பாடசாலைக்கோ அனுப்ப முயற்சிக்க வேண்டாம்.

போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.

சிறுநீர் வழமைபோலப் போகிறதா என்பதை அவதானிக்க வேண்டும். மிகக் குறைவாக வெளியேறுவதுடன் கடுமையான தாகம் இருந்தால் அதை மருத்துவருக்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள்.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் FBC இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். முதல் நாளிலிலேயே செய்ய வேண்டியது ஏன், எப்போது என்பது பற்றி ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படுமாயின் தினமும் ஒரு தடவையோ இரு தடவைகளோ செய்ய வேண்டி நேரலாம்.

டெங்கு ஏற்படுத்தும் வைரஸ் கிருமியானது நோயளியின் உடலில் சுமார் 5 நாட்களுக்கு. ஆனால் கடுமையான தாக்கம் 4வது அல்லது 5வது நாளிலேயே உச்ச நிலையில் இருப்பதால் அந்நேரத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். அந்நேரத்தில் நோயாளியின் இரத்தக் குழாய்கள் பாதிப்புற்று இரத்தம் அல்லது இரத்தப் பாயம் (plasma) குழாய்களை விட்டு வெளியேறுவதாலேயே ஆபத்து ஏற்படுகிறது.

சிவத்த நிறமுடைய பானங்களையோ உணவுகளையோ கொடுப்பதைத் தவிருங்கள்.

ஆபத்தும் தடுப்பும்

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்கள், கொழுப்பான உடல் வாகை உடையவர்கள், கர்ப்பணிகள் ஆகியோரில் இது ஆபத்தாக மாறும் சாத்தியம் அதிகம். அவர்களது காய்ச்சலானது டெங்குவாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால் சற்றும் தாமதப்படுத்தாது தீவிர கவனிப்பிற்கும் சிகிச்சைக்கும் உட்படுத்த வேண்டும்.

dengue-kills

டெங்கு பரவாது இருக்க நுளம்பு பரவுவதைத் தடுக்க வேண்டும். அரசு செய்யும், மாநகரசபை செய்யும் என நாம் வாளாதிருக்க முடியாது. எமது வீட்டை, எமது சுற்றுச் சூழலை, எமது பாடசாலைகளை, எமது தொழிலகங்களை நுளம்பு இல்லாத இடங்களாக மாற்றுவதில் எமது பங்கு பெரிது என்பதை மறக்க வேண்டாம்.

அவ்வாறு நுளம்பு பெருகுவதைத் தடுத்தால் டெங்கு தனது கோர முகத்தைக் காட்ட முடியாது முடங்கி அடங்கிவிடும்.

எனது ஹாய்நலமா புளக்கில் இவ்வருட ஜீலை மாதம் வெளியான கட்டுரை டெங்கு மீண்டும் கோர முகத்தைக் காட்டுமா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0.0

Read Full Post »

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. யாரைப் பார்த்தாலும் வருத்தம் என்கிறார்கள். திடீரென ஏற்பட்ட சீதோசன மாற்றங்கள் காரணம் என்பதில் ஐயமில்லை. கடலோடு மீனவர்கள் காணமல் போவது மட்டுமின்றி தரையிலும் பலரையும் படுக்கையில் கிடத்துகிறது. ஒரு சிலர் பாடையில் போகவும் நேராமலிருக்க அவதானமாக இருப்போம்.

images215412_crowded-hospital

இந்த காலநிலை மாற்றங்களால் தற்போது கொழு்ம்பு மற்றும் தென்பகுதிகளில் பரவும் நோய்கள் பல வகைப்படும்

  • தினமும் ஒரு சில மாணவர்களாவது பாடசாலையிலிருந்து வாந்தி காய்ச்சலுடன் நேரடியாக வருகிறார்கள். வயதானவர்களையும் விட்டு வைக்கவில்லை.
  •  வேறு சிலர் கடுமையான காய்ச்சலுடன் தடிமன், இருமல் என வருகிறார்கள்.
  •  103-104 எனக் கடுமையாக ஏறிக் காயும் காய்ச்சலுடன் தாங்க முடியாத உடல் வலியுடன் இன்னமும் சிலர் வருகிறார்கள்.

வாந்தி பேதி போன்றது முதலாவது, சாதாரண தடிமன் காய்ச்சலுடன் இன்புளுவன்சா வகையானது இரண்டாவது. மூன்றாவது மிகவும் கலங்க வைக்கும் டெங்கு.

வாந்தி காய்ச்சல் வயிற்றோட்டம்

திடீரென ஏற்படும் வயிற்றுக் குமைச்சலுடன் வாந்தி பலரையும் அல்லலுற வைக்கிறது. ஒரு சில மணி நேரத்திற்குள் பல தடவைகள் வாந்தி எடுத்துவிடுவார்கள். காய்ச்சல் வரும். வயிற்றோட்டமும் தொடரும். கடும் நாற்றத்துடன் வெறும் நீர்போலப் பீச்சியடிக்கும். வேகமாகத் தொற்றும். ஒரே குடும்பத்தில் ஐந்து பேரும் தொடர்ந்து பாதிக்கப்படட்தை காணக் கூடியதாக இருந்தது.

Vomiting child

வயிற்றோட்டமும் வாந்தியும் கடுமையாக இருந்தால் நாக்கு உலரந்து வரட்சியும் தாகமும் ஏற்படும். ஆயினும் வாந்தியும் ஓங்காளமும் நீராகாரம் அருந்துவதை வேண்டாமென வெறுக்க வைக்;கும். இது தொடர்ந்து நீரிழப்பு நிலை ஏற்பட்டால் நாளம் ஊடாக சேலைன் போன்ற திரவங்களை ஏற்றவும் நேரலாம்.

இக் காச்சலில் முக்கியமாக அவதானிக்க வேண்டியது நோயாளியின் உடலில் நீர்த்தன்மை குறைந்து நீரிழப்பு நிலை ஏற்படுவதைத் தடுப்பதும் போசாக்கு நலிவுறாமல் காப்பதும்தான். வெளியேறும் நீரை மீளக் கொடுக்க வேண்டும்.

எனவே வாந்தியை நிறுத்துவது அவசியம். மாத்திரைகளும் வாந்தியுடன் வெளியேறிவிடலாம் என்பதால் மலவாசலூடாக உட்செலுத்தும் மாத்திரைகளை (Suppository) வைப்பதுண்டு. வாந்தி கடுமையாக இல்லாதவிடத்து மாத்திரைகளாகவும் உட்கொள்ளலாம்.

காய்ச்சலுக்கு பரசிற்றமோல் மருந்தை வயதுக்கு ஏற்ப கொடுக்க வேண்டும். பொதுவாக இது வைரஸ் கிருமிகளால் ஏற்படுவதால் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics) தேவைப்படாது. ஆயினும் ஒரு சிலரில் பக்றீரியா தொற்றினால் ஏற்பட்டதென மருத்துவர் கருதினால் அதற்கேற்ற அன்ரிபயோடிக் தரக் கூடும்.

மீளநீருட்டும் பானம் பக்கற்றுகளில் பவுடராக ORS- Oral rehydration solutuin) கிடைக்கிறது. இலங்கையில் ஜீவனி என்பது பெயர் போனது. வேறு வர்த்தகப் பெயர்களிலும் கிடைக்கிறது. அவற்றை வாங்கிக் கரைத்துக் குடிப்பது நல்லது. இளநீர், தோடம்பழச் சாறு, எலுமிச்சைப் பழச் சாறு, கஞ்சி போன்றவற்றையும் அருந்தலாம்.

ORS-Pack

தயிர் அல்லது யோகர்ட் சாப்பிடுவது ஒரு விதத்தில் இது மருந்தாகவும் அமையும். ஏனெனில் இவற்றில் Lactobacillus acidophilus  மற்றும்

Bifidobacterium bifidum ஆகிய கிருமிகள் உள்ளன. இவை வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளை அழித்து உணவுக் கால்வாயின் இயற்கையான நுண்ணுயிர் சூழலை மீள ஏற்படுத்த உதவும். பொதுவாக வயிற்றோட்டத்தின் போது பால் சிபார்சு செய்யப்படுவதில்லை.

CIC Curd

வாழைப்பழம் நல்ல உணவு. இதற்குக் காரணம் அதிலுள்ள பொட்டாசியச் செறிவும், பெக்டின் மற்றும் இனியுலின் ஆகிய கரையக் கூடிய நார்ப்பொருட்களுமாகும். வயிற்றோட்டத்தின் போது நீர் மட்டுமின்றி பல தாதுப்பொருட்களும் வெளியேறுகின்றன. பொட்டாசியம் உட்பட பல மின் அயனிகள் (electrolytes) வெளியேறுகின்றன.

banana

வாழைப்பழம் சாப்பிடுவதால் இழக்கப்படும் பொட்டாசியம் சத்தை மீளப் பெறலாம். பெக்டின் (pectin) ஆனது கரையக் கூடிய நார்ப்பொருள் ஆதலால் மலத்துடன் வெளியேறும் நீரை உறிஞ்சும். இதனால் மலம் வெறும் நீராக அன்றி சற்று தடிப்பாகவும் சுமுகமாகவும் வெளியேற உதவும்.

இனியுலின் என்பது மற்றொரு கரையக் கூடிய நார்ப்பொருளாகும். அத்துடன் அது ஒரு பிரிபயோடிக் (Prebiotic) ஆகும். அதாவது முன்நிலை நுண்ணுயிர் கொல்லி எனலாம். இதுவும் நோயை ஏற்படுத்தும் கிருமியை மேவி வளர்ந்து உணவுக் கால்வாயில் நல்ல கிருமிகள் வளர உதவுவதன் மூலம் வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

அப்பிளிலும் இதே பெக்டின் உள்ளது. ஆயினும் வயிற்றோட்டத்தின் போது முழுமையான பழமாக ஆப்பிளை சாப்பிடும்போது சமிபாடு அடைவதில் சற்று சிரமம் ஏற்படலாம் என்பதால் அவித்துக் கொடுப்பது நல்லது.

வயிற்றோட்டம் இருந்த போதும் சாப்பிட முடிந்தால் வழமைபோல உண்பது நல்லது. கடுமையான எண்ணெய் கலந்த உணவுகளைத் தவிர்த்து வழமைபோல உண்ணலாம். ‘வயிறோட்டம் வந்தால் சாப்பிடக் கூடாது வயிற்றைக் காயப் போட வேண்டும்’ எனப்படும் பாட்டி வைத்தியங்கள் இன்றைய அறிவியல் யுகத்தில் அர்த்தமற்ற செயலாகும்.

ஒரு சிலரில் எந்தவித மருத்துவமும் இன்றித் தானாகவே குறைந்துவிடுவதும் உண்டு.

இன்புளுவன்சா வகைக் காய்ச்சல் (Influenza like Illness- ILI)

சாதாரண தடிமன் காய்ச்சல் பெருமளவு அண்மையில் காணப்படுகிறது. அது ஆபத்தற்றது.

sf_05sneeze

ஆனால் தடிமன் தும்மல் மூக்கால் வடிவது, இருமல் போன்ற அறிகுறிகளுடன் கடும் காய்ச்சல் வரும் மற்றொரு தொற்றுநோய் காணப்படுகிறது. இது ஒரு வகை சுவாசத் தொகுதி தொற்று நோய். இதன் கடுமையான வடிவம் ஒரு சில உயிர்களை முக்கியமாக கர்ப்பணித் தாய்மாரை பலி கொண்டதாக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

sf_07sick

இன்புளுவன்சா ஏ. பீ வகை கிருமிகளால் (influenza A and B)   பரவிய நோய் மே மாதம் அளவில் ஆரம்பித்து, சில மரணங்கள் காரணமாக மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. கடுமையான காச்சலைத் தொடரும் விடாத இருமல் இதன் முக்கிய அறிகுறியாகும். தலைப்பாரம், தொண்டை வலி, உடலுழைவும் இருக்கும். ஓங்காளம், வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவையும் இருக்கலாம்.

கர்ப்பணிப் பெண்களில் ஆபத்தைக் கொண்டு வந்தது. கர்பணிகளில் மட்டுமின்றி 65 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள், இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், நோயெதிர்புச் சக்தி குறைந்தவர்களில் ஆபத்தானது. ஆயினும் ஏனைய ஆரோக்கியமானவர்களில் மரணம் போன்ற ஆபத்தான விளைவுகளைக் கொண்டு வருவதில்லை. சென்ற வருடம் பரவிய பன்றிக் காய்ச்சலும்  (H1N1) இதே போன்றது, ஆயினும் அது சற்று ஆபத்தானது.

காய்ச்சல் சளி அறிகுறிகளைக் கண்ட உடனேயே மருத்துமனைகளை நோக்கிப் படையெடுக்க வேண்டியதில்லை. நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் அல்லது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரைக் காண்பது அவசியம்.

Doctor holding inhaler mask for kid girl breathing

இருந்தபோதும் மூச்சுத் திணறல், இளைப்பு, நெஞ்சு இறுக்கம்,  தலைச் சுற்று, மயக்கம் போன்ற கடுமையான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனே காண வேண்டும்.

இருமும்போதும் தும்மும் போதும் காற்றில் பறக்கும் எச்சில் துகள்கள் மூலமே மற்றவர்களுக்கு பரவும். தும்மும்போதும், இருமும் போதும் கைக்குட்டை அல்லது ரிசூவினால் மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்ளுவது அவசியம். உபயோகித்த ரிசூவை உடனடியாகவே குப்பை கூடையில் இட்டு அகற்றவும். கைக் குட்டையை துவைக்கவும்.

மூக்குச் சிந்தினால் அதைத் தொட்ட கையை உடனடியாகக் கழுவ வேண்டும். இல்லையேல் அதே கையால் மேசை, கதிரை, கதவுக் கைபிடி போன்ற எதைத்  தொட்டாலும் அதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவும்.

சனநெருக்கடியுள்ள இடங்களான பஸ், புகையிரதம், வகுப்பறை, தொழில்கூடம், கடைகள் போன்றவற்றில் நடமாடும் போது அவதானமாக இருங்கள். ஏனெனில் நோயுள்ள ஒருவர் தும்மினால் அந்தக் குறுகிய இடத்தில் உள்ள பலருக்கும் நோய் தொற்றலாம்.

பெரும் ஆபத்தற்றது என்ற போதும், அதிக தாக்கத்திற்கு ஆட்படக் கூடியவர்களான கரப்பணிகள், இரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் மற்றும் நோயெதிர்புச் சக்தி குறைந்தவர்கள் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களை அணுகுவது அவசியம்.

டெங்கு

எந்தக் காய்ச்சல் வந்தாலும் பிள்ளைக்கு டெங்குவாக இருக்குமோ என பயந்தடித்து ஓடி வரும் பெற்றோர் அதிகம். அதில் எந்தத் தவறும் இல்லை.

ஏனெனில் எத்தனையோ பிஞ்சுகளை உதிர வைத்துவிட்ட ஆபத்தான நோய்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன எனப் பலரும் கேட்பதுண்டு. ஏனைய காய்சலைப் போன்றதே. 103-105 எனக் கடுமையாக ஏறிக் காயும் காய்ச்சல் பொறுக்க முடியாத உடல் மற்றும் மூட்டு வலிகளுடன் வந்தால் டெங்கு எனச் சந்தேகப்படலாம். பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கு தடிமன், இருமல் தும்மல் வயிற்றோட்டம் போன்ற வேறு அறிகுறிகள் சேர்ந்திருப்பதில்லை.

Dengue_Fever_symptoms

ஆயினும் இத்தகைய காய்ச்சல்கள் அனைத்தும் டெங்கு இல்லை. முதல் நாளில் டெங்கு அன்ரிஜென் பரிசோதனை செய்தால் அது பொசிட்டிவாக இருக்கும். ஆனால் அதற்கான வசதி எல்லா இடங்களிலும் இருக்காது.

ஒரு வேளை டெங்கு அன்ரிஜென் பொசிட்டிவாக இருந்தால் கூட அது ஆபத்தாக இருக்க வேண்டும் என்றில்லை.

ஏனெனில் டெங்கு காய்சலில் பல வகைகள் உள்ள.

  • டெங்கு கிருமி தொற்றி காய்ச்சல் வருபவர்களில் 50 சதவிகிதமானவர்களுக்கு அது ஏனைய சாதாரண வைரஸ் காய்ச்சல் போல வந்து எந்தவித சிகிச்சைகளும் இன்றி தானாகவே மாறிவிடும்.
  • மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும்.
  • 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் வருவதாக தரவுகள் கூறுகின்றன.
  • குருதிப் பெருக்குக் காய்ச்சல் வந்த 10 சதவிகிதமானவர்களில் கூட 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள்.  குணமாகிவிடுவார்கள்.
  • மிகுதி 2 சதவிகிதமானவர்கள் மட்டுமே மிக ஆபத்தான அதிர்ச்சி நிலையை அடைவர்.

மிகக் குறைவான இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.

வழமைக்கு மாறான கடுமையான காய்ச்சலாக இருந்தால் முதல் நாளே மருத்துவரிடம் காட்டுங்கள். அவர் சில வேளை இரத்தப் பரிசோதனை செய்யக் கூடும். அயினும் மீண்டும் 4ம் நாள் அளவில் மீண்டும் செய்யக் கூடும்.

டெங்குவாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் பரசிட்டமோல் தவிர வேறு எந்த மருந்தையும் கொடுக்காதீர்கள்.

இப்பொழுது மழை பெய்கிறது. மழை குறையும் போது தேங்கி நிற்கும் நீர்களிலிருந்து நுளம்பு பெருகி டெங்கு வேகமாகப் பரவக் கூடும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய நலமா புளக்கில் ஜீலை 2, 2013ல் வெளியான கட்டுரை

0..0..0

Read Full Post »

>

சென்ற 7ம் திகதி பெப்ருவரி 2011 ல் ஒரே நாளில் இரு சிறுவர்களை கடுமையான டெங்கு நோயென இனங்கண்டு விசேட சிகிச்சைகளுக்காக சிறுவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. கடுமையான மழையின் பின்னான வெயில் பல இடங்களில் டெங்கு நோய் அதிகரித்திருக்கிறது.

டெங்கு நோயின் அறிகுறிகள்

இப்பொழுது புதிய அணுகுமுறையில் சிகிச்சை அளிப்பதால் பலரையும் காப்பாற்ற முடிகிறது.

மேற் கூறிய இரு சிறுவர்களும் நலமாக வீட திரும்பிய செய்தியை இன்று (11.02.2011)பெற்றோர்கள் எனக்குத் தெரிவித்தனர்.

நோயை நேர காலத்துடன் நிர்ணயம் செய்வதும், அவசியம் ஏற்படுமிடத்து தாமதிக்காது அதற்கான மருத்துவ வசதிகள் உள்ள மருத்துவ மனைகள் உள்ள வைத்தியசாலையில் அனுமதிப்பதும் அவசியமாகும்.

டெங்கு நோய்க்கு பப்பாசி இலைச் சாறு சிறந்த பலன் அளிக்கும் என்ற செய்தி அண்மைக் காலமாக பத்திரிகை ரீவீ ஆகியவற்றில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது தவறான செய்தி என அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

தவறான செய்திகளால் பயனற்ற மருத்து முறைகளில் காலத்தைக் கடத்தாது சரியான மருத்துவம் செய்வது அவசியம்.

வெண்குருதி சிறுதுணிக்கை (Platelet)

டெங்கு நோயினால் ஏற்படும் மரணங்களுக்கு வெண்குருதி சிறுதுணிக்கை எனப்படும் (Platelet) குறைதலும் அதனால் ஏற்படும் குருதி பெருக்கமுமே காரணம் என இதுவரை நம்பப்பட்டது.

புதிய சிகிச்சை முறையின் அடிப்படை

இதன் காரணமாக அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதே மருத்துவ சிகிச்சையின் நோக்கமாக முன்னர் கொள்ளப்பட்டது. மருத்துவமனைகளில் வெண்குருதி சிறுதுணிக்கை எனப்படும் (Platlet) மாற்றீடு செய்யப்படுவது உயிர்காக்கும் மருத்துவம் என எண்ணப்பட்டது.

டெங்குவின் அறிகுறிகள் இருக்கும் போது வெண்குருதி சிறுதுணிக்கை (Platlet)அளவு 100,000 லுக்குக் கீழ் குறைந்தால்  உடனடியாக மருத்துவ கனையில் அனுமதிப்பது அவசியம்.

ஆயினும் நவீன சிகிச்சை முறையில் இதனை மாற்றீடு செய்யப்படுவதில்லை. உள்ளெடுக்கும் நீரின் அளவையும் வெளியேறும் நீரின் அளவையும் நுணுக்கமாகக் கணித்து அதற்கேற்ற அளவில் கொடுப்பதன் மூலம் ஆபத்தான விளைவுகளைத் தடுப்பதே இன்றைய சிகிச்சையின் அடிப்படையாகும்.

இலங்கையில் இறப்பு விகிதம் மிக அதிகம்

ஆயினும் இத்தகைய சிகிச்சையால் போதிய பலன் கிடைக்கவில்லை.

உதாரணமாக டெங்கு நோயாளிகளின் இறப்பு வீதம்

  • மலேசியாவில் 0.34 சதவிகிதமாகவும், 
  • தாய்லாந்தில் 0.1 சதவிகிதமாகவும் இருக்கும்போது, 
  • இலங்கையில் இது 1 சதவிகிதமாக மிக அதிகமாக இருக்கிறது. 

டெங்கு நோயைப் பொறுத்தவரையில் இலங்கையானது டெங்குவின் தாக்கம் அதிகமுள்ள A வகை நாடுகளில் ஒன்றாக பகுக்கப்பட்டது.
இது ஏன்? இதை நிவர்த்திப்பது எப்படி என்பது ஆராயப்பட்டு எமது மருத்துவ நிபுணர்கள் சிலர் தாய்லாந்து நாட்டிற்கு பயிற்ச்சிக்காக அனுபப்பட்டபோதே எமது சிகிச்சை முறையின் போதாமை உணரப்பட்டதாகத் தெரிகிறது.

இறப்புகளுக்கான காரணங்கள்

  • உண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட மரணங்களுக்குக் காரணம் வெளித் தெரியாமல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் குருதிப் பெருக்கைக் (Concealed bleeding) கண்டறிவதில் ஏற்பட்ட தாமதமும்,
  • உடற் திரவங்களின் (Body Fluids) அளவை சரியான முறையில் பராமரிக்காமையும் ஆகும்.

எமது நாட்டில் நோயாளியின் வெண்குருதி சிறுதுணிக்கை குறையும்போது அவசரப்பட்டு அதனை மாற்றீடு செய்ததால் உடல் திரவங்களின் நிலையில் தேவையற்ற அதிகரிப்பு ஏற்பட்டு அதனாலும் மரணங்கள் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.

பப்பாசிச்சாறு நோயைக் குணமாக்கவில்லை

பப்பாசி இலைச் சாறு பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் யாவும் அதனை சிகிச்சைக்காக கொடுத்ததன் பலனாக நோயாளியின் குருதியில் வெண்குருதி சிறுதுணிக்கை அதிகரித்ததாகக் கூறின.

இது பப்பாசிச் சாறினால் நோய் குணமானதற்கான அடையாளமல்ல.

எந்தவித சிகிச்சையும் கொடுக்காவிட்டால் கூட நோய் சுயமாகக் குணமாகும்போது அந்த எண்ணிக்கையும் தானாகவே அதிகரிக்கச் செய்யும்.

அத்துடன் டெங்கு நோயின் மிக ஆபத்தான கட்டமான டெங்கு அதிர்ச்சி நிலையை பப்பாசிச் சாறு (Dengue Shock Syndrome) குணமாக்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அல்லாது நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைத்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

சருமத்தில் செம்மை பூத்தது போல புள்ளி புள்ளியாக இரத்தக் கசிவு

டெங்குவின் வகைகள்

சாதாரண டெங்குக் காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சற்றுக் கடுமையானதான டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் ஆபத்தானது என்ற போதும் உயிரிழப்புகளுக்குக் காரணம் அதுவல்ல. ஆனால் அது மோசமாகி அதிர்ச்சி நிலைக்குப் போனால் மிக மிக ஆபத்தானது. 

டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

  • அது தொற்றிய பலருக்கும் வெளிப்படையான எந்த அறிகுறியும் இருக்காது. 
  • டெங்கு கிருமி தொற்றி காய்ச்சல் வருபவர்களில் 50 சதவிகிதமானவர்களுக்கு அது ஏனைய சாதாரண வைரஸ் காய்ச்சல் போல வந்து தானாகவே மாறிவிடும். 
  • மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். 
  • 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் வருவதாக தரவுகள் கூறுகின்றன.
டெங்கு  குருதிப் பெருக்குக் காய்ச்சலில் கண்ணில் குருதிக் கசிவு

குருதிப் பெருக்குக் காய்ச்சல் வந்த 10 சதவிகிதமானவர்களில் கூட

  • 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள்.  குணமாகிவிடுவார்கள். 
  • மிகுதி 2 சதவிகிதமானவர்கள் மட்டுமே மிக ஆபத்தான அதிர்ச்சி நிலையை அடைவர்.

 மிகக் குறைவான இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.

நீங்கள் செய்யக் கூடியது

காய்ச்சல் வந்த உடனேயே இது டெங்குவாக இருக்குமோ எனப் பயந்து மற்றவர்களையும் கலங்கியழ வைத்து உடனடியாக மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை.

முதல் மூன்று நாட்களுக்கு பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது.

புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.

போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

கீழ்க் கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை தாமதிக்காது நாடுங்கள்

  • கடுமையான தலையிடி
  • கடுமையான வயிற்று வலி
  • வயிற்றுப் புரட்டும் சத்தியும். இவை அதிகமாகி நீராகாரம் எதனையும் உட்கொள்ள முடியாதிருத்தல்
  • கடுமையான தாகம்
  • தோல் செந்நிறம் பூத்தது போல இருத்தல் அல்லது சிவத்தப் புள்ளிகள்
  • கடுமையான உடல் உழைவு, மூட்டு வலிகள்
  • உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல்
  • கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை
  • சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல். உதாரணமாக 6மணிநேரம் சிறுநீர் கழியாதிருத்தல்

இவற்றில் சில அறிகுறிகள் வேறு சாதாரண காய்சல்களின் போதும் ஏற்படக் கூடும். ஆயினும் டெங்கு பரவி வரும் காலங்களில் அவற்றை உசாதீனம் செய்யக் கூடாது.

அதிக கவனம் எடுக்க வேண்டியவர்கள்

மேற் கூறிய அறிகுறிகள் யாருக்கு இருந்தாலும் உதாசீனம் செய்யக் கூடாது. ஆயினும் கீழ்க் கண்டவர்கள் டெங்குக் காச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் கூடிய கவனம் எடுப்பது அவசியம்

  • ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள்
  • வயதானவர்கள் – 65 வயதிற்கு மேல்
  • கொழுப்பான உடல் வாகை உடையவர்கள்
  • கர்ப்பணிகள்

எனவே பப்பாசி இலை, வீட்டு மருத்துவம் போன்றவற்றில் காலத்தைக் கடத்தாது டெங்கு நோயெனச் சந்தேகத்துக்கு உரியவர்கள் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

உலகளாவிய ரீதியில் டெங்கு நோயும் அதனைப் பரப்பும் நுளம்பும் காணப்படும் பிரதேசங்கள்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் அடைப்படை உண்மைகள் பற்றி அறிய எனது முன்னைய பதிவைப் பார்க்கவும்

டெங்கு காய்ச்சலா? எப்படி அறிவது?

 டெங்குநோயைப் பரப்பும் Aedes aegyptiநுளம்பின் வாழ்க்கை முறை அதனை அழிக்கும் வழிமுறைகள் பற்றி அறிய எனது முன்னைய பதிவைப் பாருங்கள்.

டெங்கு நுளம்பார் பெருகின் வீட்டார் அழிவர்

அழுக்கு, கழிப்பறை, குப்பை கூளங்கள் யாவும் நுளம்மைபைப் பெருக்கும் இடங்களாகும். ஆனால் பொதுக் கழிப்பறையில் நடந்த இந்த சம்பவம்சுவார்ஸமானது.

கலங்கவைக்கும் டெங்கு பற்றிய தொடரைப் படித்த உங்களை மறந்து சிரிக்க வைக்கும் பதிவு இது.

கழிப்பறையில் அழைப்பு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>
டெங்கு நுளம்பார் பெருகின் வீடுகளில் உள்ளோர் அழிவர்.

உங்கள் வீட்டில் அல்லது அயலில் ஒருவருக்கு டெங்கு நோய் வந்திருக்கிறது என வைத்துக் கொள்வோம்.
அவரில் பசியாறுகிறார் ஒரு நுளம்பர்.
நோயாளி மருத்துவமனை சென்றுவிடுகிறார்.

மறுநாள் மீண்டும் பசியெடுத்த அதே நுளம்பர் உங்களுக்கு கடிக்கிறார்.

உங்களுக்கும் டெங்கு தொற்றுமா?

நிச்சயம் தொற்றாது!

தொற்றுவது எப்படி?

டெங்கு இரத்தத்தைக் குடித்திருந்தாலும் 7 நாட்கள் வரை டெங்கு கிருமியை அவரால் பரப்ப முடியாது.
காரணம் என்னவென்றால் நோயாளியிடம் குடித்த இரத்தத்தில் உள்ள அதே கிருமி நேரடியாக மற்றவர்களுக்குப் பரவுவதில்லை.
அதன் உடலில் பெருகி மீண்டும் மனிதர்களுக்கு தொற்றக் கூடிய நிலை ஏற்பட சுமார் 7 நாட்கள் செல்லும்.

ஆனால் அதற்கிடையில் உங்களையோ வேறு ஒருவரையோ கடிக்க முயலும் போது அடிப்பட்டுச் சாகும் சாத்தியம் நிறையவே உண்டு.

பதற்ற ஆசாமி

இந்த டெங்கு நுளம்பர் ஒரு பதற்ற ஆசாமி. அவர் ஒருவரிலிருந்து இரத்தம் உறிஞ்சிக் கொண்டிருக்கையில், கடிபடுபவரின் உடலில் ஒரு சிறு அசைவு ஏற்பட்டாலும் தாங்க மாட்டார். பக்கெனப் பறந்து விடுவார். ஆனால் ஒரு சிறு வட்டம் அடித்துவிட்டு மீண்டும் பசியாற வருவார்.

நீங்கள் அவதானமாக இருந்து அடிக்க முற்பட்டால் தப்பிச் சிறகடிப்பார்.

ஆனால் பசியடங்கும் வரை சோம்பி இருக்கமாட்டார். வீட்டில் உள்ள மற்றொருவரையாவது பதம் பார்ப்பார்.

அதற்கிடையில் உங்கள் கை அவரது இரத்தத்தால் அசுத்தமானால் அதிஸ்டம் உங்கள் பக்கம்.

இவ்வாறு சுற்றிச் சுற்றிக் கடிக்கும் அந்த நுளம்பர் டெங்குவைப் பரப்பக் கூடிய நிலையில் இருந்தால் அதிஸ்டம் அவர்; பக்கம். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆபத்துதான்.

ஆனால் ஒரு முறை வயிறு நிறையக் குடித்து விட்டால் ஆறுதல் எடுப்பார். தளபாடங்கள், திரைச்சீலை, விரித்திருக்கும் உடைகள், போட்டோ பிரேம் என எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஹாயாக மறைந்திருப்பார்.

தூசி தட்டுவது, நுளம்பு ரக்கறை விசிறுவது போன்ற சிறு அசைவுகளும் அவரை பதற்றமுற்றுப் பறக்க வைக்கும். பக்கென அடித்துக் கொன்றுவிடுங்கள். சிறிய நுளம்பர் என்றபடியால் தெளிவாகத் தெரியாது. கவனமாக அவதானிக்க வேண்டும்.

நுளம்புப் பண்ணை

ஓரிரு நுளம்பென்றால் இவ்வாறு தொலைத்துவிடலாம். ஆனால் உங்கள் வீட்டிலேயே நுளம்புப் பண்ணை எனில் இது சாத்தியப்படாது.

கொழும்பில் குப்பை கூளங்களை அகற்றாததால்தான் நுளம்பு பெருகுகிறது என்று சொன்னார்கள். இப்பொழுது ஓரளவு இது சீரடைந்துவிட்டாலும் நுளம்பிற்கு குறைவில்லை. அது மட்டுமின்றி டெங்கு காய்ச்சலுக்கும் குறைவில்லை.

காரணம் என்ன? டெங்குவைப் பரப்பும் நுளம்பான Aedes aegypti இன்னும் தாரளாமாக உலவுகிறது என்பதுதானே?

காரணம் இவர் வீதியை விட வீட்டிலும் அதிகம் பெருகுபவர். சிரட்டை, பிளாஸ்டிக் டப்பிகள் ஆகியவற்றில் தங்கக் கூடிய சிறிதளவு நன்னீரில் இது உற்பத்தியாகிறது என்பது யாவரும் அறிந்த ரகசியம்.


ஆயினும் இது அசுத்தமான நீரிலும், சற்று உப்பு கரிக்கும் நீரிலும் கூட பெருகக் கூடும் என இப்பொழுது தெரிகிறது. முட்டைகளிலிருந்து பொரித்து நுளம்புகளாக மாறுவதற்கு 7 முதல் 9 நாட்கள் செல்லும்.


மலேரியாவைப் பரப்பும் Aanophleles மற்றும் யானைக் காச்சலைப் பரப்பும் Culicines நுளம்புகளோடு ஒப்பிடும் போது இது மிகவும் சிறிய நுளம்பாகும். இயற்கையான பாதுகாப்பான சூழலில் 60 நாட்கள் வரை வாழக் கூடியதாகும்.

குடும்பக் கட்டுப்பாடு அறியாதவர்

இந்த நுளம்பர் ஒரு தடவையில் 30 முதல் 100 முட்டைகள் வரை இடுவார். இவர் நீரில் முட்டை இடுவதில்லை. நீர் நிலைக்கு சற்று மேலாக ஈரலிப்பான இடத்தில்தான் இடுவர்.


நீர் பட்டதும் அதில் முட்டை மிதந்து 2-3 நாட்களில் குடும்பியாக (Larva) ஆக மாறும். வளர்ந்து பறக்கும் நுளம்பாக மாற மேலும் 5-9 நாட்களாகும். அதற்கிடையில் நீரை மாற்றிவிட்டால் நுளம்பாக கோலம் கொள்ளும் முன்னரே அழிந்துவிடும்.

அழிப்பது எப்படி?

முட்டையானது வளர்வதற்கான நீர் கிடைக்காவிட்டால் பல மாதங்கள் வரை அழியாமல் சீவிக்கும் வல்லமை கொண்டது. எனவே நீர் இருக்கும் நிலைகளான பூச்சாடிகள், டிரம், வீட்டு நீர்த் தொட்டிகள், நீர்த்தாவர வளர்ப்பிடங்கள் போன்றவற்றின் நீரை அடிக்கடி புதிதாக மாற்றுவது மட்டுமின்றி, பக்கங்களை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வதன் மூலம் அவற்றின் முட்டைகளை நீங்கள் அழிக்கலாம்.

நீங்கள் எதிர்பார்காத இடங்களிலும் இவர் முட்டையிட்டுப் பெருகுவார்.

பிளாஸ்டிக் கப், வெற்றுப் போத்தல்கள், மரப் பொந்துகள், எறும்பு ஏறாதிருக்க மேசை அடியில் வைக்கும் சிறு பாத்திர நீர், வாழை போன்றவற்றின் இலைகளிலுள்ள பள்ளங்களில் கூட முட்டையிடலாம் என்பதால் நீங்கள் தப்புவது அரிது!

ஆனால் முடியாததல்ல.

கள்வர் ஏறாதிருக்க சுவர்களில் பதித்திருக்கும் கண்ணாடிகள், கூரை நீர் இறங்கப் பதித்திருக்கும் பீலி என எங்கெல்லாம் நீர் ஏழு நாட்களுக்கு மேல் தேங்கி நிற்குமோ அங்கெல்லாம் பெருகுவார்.

எப்ப கடிப்பார்?

இது பொதுவாக காலையில் சூரிய உதயத்திற்கு பின்னரான 2 மணிநேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக 2 மணிநேரத்திலும் இரத்தம் குடிக்கும் பழக்கம் உள்ள நுளம்பாகும்.

ஆயினும் பசியிருந்தால் ஏனைய நேரங்களில் இரத்தம் குடிக்கக் கூடாது என்ற சுயகட்டுப்பாடோ, கட்டளையோ எதுவும் நுளம்பிற்குக் கிடையாது.

பசித்தால் புசிக்கும் எந்நேரத்திலும்.

எனவே தொடர்ச்சியாக அவதானமாக இருக்க வேண்டியது எமது பொறுப்பாகும். டெங்கு நுளம்பானது மிருக இரத்தத்தையம் உறிஞ்சக் கூடும் ஆயினும் அதன் அபிமான உணவு மனித இரத்தம்தான்.

நுளம்பார் பெருகின் வீட்டார் அழிவர் எனத் தலையங்கமிட்டதற்காக திருமூலர் என்னை மன்னிப்பாராக.


வீட்டார் விழிப்பின் நுளம்பார் அழிவர் எனத் தொடர்ந்து சொல்லலாமா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- இருக்கிறம் 15.100.2009

Read Full Post »

>அன்றுதான் ஆரம்பித்த காய்ச்சல் 103- 104 எனக் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தது. பத்து வயது மதிக்கத்தக்க அந்தப் பையனின் கண்கள் சற்று சிவந்திருந்தன. கடுமையான உடல் உழைவினால் அமைதியாக இருக்க முடியாது அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான். சற்றுத் தொண்டை நோவும் இருந்தது. ஆயினும் தடிமன், மூக்கடைப்பு இருமல் போன்ற அறிகுறிகள் எதுவுமே இல்லை. இத்தகைய காய்ச்சல் இப்பொழுது பரவலாகக் காணப்படுகிறது.

‘இது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ’ என கூட்டி வந்த தாய் கேட்டாள். எந்த வைத்தியனாலும் நூறு சதவிகிதம் நிச்சமாகச் சொல்ல முடியாது. காரணம் ஏனைய வைரஸ் காய்ச்சல்கள் போலவே இதுவும் ஆரம்பத்தில் இருக்கும். இது டெங்குதான் என உறுதியாகச் சொல்லக் கூடிய அறிகுறிகள் ஏதும் முதல் மூன்று நாட்களிலும் இருக்காது.

‘இரத்தம் சோதித்துப் பார்ப்பமோ’ என்று தாய் கேட்டாள். முதல் நாளிலிலேயே இரத்தம் சோதித்துப் பார்ப்பதிலும் எந்தவித பலனும் இருக்கப் போவதில்லை.

டெங்கு என்பதை நிச்சயமாகக் காட்டும் Dengue antibody டெஸ்ட் செய்வதற்கு காய்ச்சல் தொடங்கி ஒரு வாரம் வரை செல்ல வேண்டும். பெரும்பாலும் அதற்கிடையில் காய்ச்சல் குணமாகிவிடும்.

டெங்குவாக இருக்குமோ என ஐமிச்சம் என்றால், காய்ச்சல் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பின்னர் FBC என்று சொல்லப்படும் Full blood Count செய்து பார்க்கலாம். அதில் முக்கியமாக Platelet count மற்றும் PCV ஆகியவற்றையே மருத்துவர்கள் கவனத்தில் எடுத்துப் பார்ப்பார்கள். இந்தப் பரிசோதனைகளில் மாற்றம் இருந்தால் அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்கு இப்பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து நோயின் நிலையைத் தொடர்ந்து கணிக்க நேரிடும்.

ஆனால் அதுவரை ஏனைய கடும் காய்ச்சல்காரர்களைப் பராமரிப்பது போல பாராமரித்தால் போதுமானது. காய்ச்சலுக்கு பரசிற்றமோல் கொடுக்க வேண்டும். ஆறு மணிநேரத்திற்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும். வளர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு தடவையும் இரண்டு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கும், இளவயதினருக்கும் அவர்களது எடைக்கு ஏற்ப அல்லது வயதிற்கு ஏற்ப மாத்திரையின் அளவு மாறுபடும்.

புரூபன், பொன்ஸ்டன், டைகுளோபெனிக் போன்ற வலிநிவாரணி மருந்துகளை டெங்கு என்ற சந்தேகம் இருந்தால் காய்சலுக்கோ உடல்வலிக்கோ கொடுக்கக் கூடாது. போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். உண்ண முடிந்தால் வழமைபோலச் சாப்பிடலாம். ஆயினும் கோக், நெக்ரோ போன்ற செந்நிறப் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல சிவப்பு நிறமுடைய ஏனைய உணவுகளையும், பீற்ரூட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

சாதாரண டெங்கு காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சிலநாட்களில் எந்தவித பின்வளைவுகளும் இன்றி தானாகவே குணமாகிவிடும்.

ஆயினும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever- DHF) மிகவும் ஆபத்தானது. இதன்போதும் கடுமையான காய்ச்சல் இருக்கும். முகம் சிவத்தல், கடுமையான தலையிடி, கண்வலி, தசைவலி, மூட்டுவலி ஆகியன சேர்ந்திருக்கும். இவை 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம்.



அத்துடன் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள் ஏதும் தோன்றலாம். உதாரணமாக மூக்கால் இரத்தம் வடிதல், முரசிலிருந்து இரத்தம் கசிதல், தோலில் ஆங்காங்கே சிவப்பான புள்ளிகள் தோன்றல், ஊசி ஏற்றிய இடத்தில் அல்லது குளுக்கோஸ் ஏற்றிய இடத்தில் இரத்தம் கசிந்து கண்டல் போலத் தோன்றுதல், வாந்தியோடு இரத்தம் வருதல், மலம் கருமையாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.

அத்துடன் இந்நோயின் போது ஈரல் வீக்கமடைவதால் பசியின்மை, வயிற்றுநோ, வாந்தி, போன்றவை தோன்றும். சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படுவதுண்டு. அத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.



டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் எந்த வயதினரையும் பாதிக்கலாம் ஆயினும் குழந்தைகளைப் பாதிப்பது அதிகமாகும். அதிலும் ஒரு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைத் தாக்கும் போது ஆபத்து அதிகமாகும். நோஞ்சான் பிள்ளைகளைவிட ஆரோக்கியமான பிள்ளைகளையே அதிகம் பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான காரணம் தெளிவாகவில்லை.

டெங்கு கிருமியில் பல உபபிரிவுகள் இருப்பதால் ஒரு முறை டெங்கு வந்தால் மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. திரும்ப வரக் கூடிய சாத்தியம் உண்டு. உண்மையில் முதல் தடவை வரும்போது பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. சாதாரண காய்ச்சல் போல குணமாகிவிடும். ஆயினும் அடுத்த முறை வரும்போதே கடுமையாக இருக்கும். டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் போன்றவை அப்பொழுதே வருகின்றன.

பலருக்கு காய்ச்சல் விட்ட பின்னரும் கடுமையான களைப்பு, தலைச்சுற்று, கிறுதி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவை உடலின் உள்ளே குருதிக் கசிவு ஏற்பட்டதால் அல்லது நீர்இழப்பு ஏற்பட்டதால் தோன்றியிருக்கலாம். எனவே அலட்சியப்படுத்தக் கூடாததாகும்.



டெங்கு காய்ச்சல் உலகளாவிய ரீதியில் பரவியுள்ளது. சிகப்பாக காட்டிய பகுதியில் கடுமையான பரிப்புகளை ஏற்படுத்துகிறது.

இது எயிடிஸ் எஜிப்பாய் (Aedes aegypti) என்ற வகை நுளம்பினால் பரவுகிறது. நோயாளியின் இரத்தம் குடித்து வயிறு பருத்திருக்கும் நுளம்பனைப் படத்தில் காணுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »